Sun. Apr 5th, 2026

வெந்தும் தணியுமோ காதல் – 9B

9B

 

அதைக் கண்ட இரு பெண்களும் கொஞ்சம் திடுக்கிடத்தான் செய்தார்கள். அவர்கள் நின்றிருந்த உப்பரிகை, ஆதியதுலன் தங்கும் அறையோடு ஒட்டியிருந்தது. அவன் அறைக் கதவைத் திறந்தால் இந்த உப்பரிகைக்கு நேராக வர முடியும். ஒரு வேளை இவர்கள் பேசியதை அவன் கேட்டிருப்பானா என்ன? ஒரு விநாடி தயங்கி நின்ற நேரிழை,

“ஆதி… நீங்களும் இன்னும் சாப்பிடவில்லை… வாருங்களேன் ஒன்றாகச் சாப்பிடலாம்…” நேரிழை அழைக்க, மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தியவன், மறுக்காமல் வந்தான். அவனுடைய செயலே அவர்கள் பேசியதை அவன் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று சொல்லாமல் சொல்ல, நிம்மதியுடன் அவனையும் அழைத்துக் கொண்டு சாப்பாட்டு மேசையை நெருங்கினார்கள்.

மேசையில் சாப்பாடு வைக்கப்பட்டிருக்க, அம்பிகா இவர்களுக்காகக் காத்திருந்தார்.

“மாமா சாப்பிடவில்லையா அத்தை?” இவன் அக்கறையாகக் கேட்க,

“எதோ வேலை இருக்கிறது என்று கணினியில் முகத்தைப் புதைத்துக்கொண்டிருக்கிறார். இரு அழைத்து வருகிறேன்…” சொன்னவர் தட்டில் சாப்பாட்டைப் பரிமாறிவிட்டு உள்ளே சென்று தேவசகாயத்தை அழைத்து வர, கண்ணாடியைக் கழற்றியவாறு புன்னகையுடன் அவர்களை நோக்கி வந்தார் தேவசகாயம்.

உடனே எழுந்து தன் இருக்கையை அவருக்குக் கொடுத்த ஆதியதுலன், மறு இருக்கையில் அமர்ந்து கொள்ள, நன்றியோடு அவன் கொடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டவர், தனக்கும் தட்டு எடுத்து வைக்க, அவருக்கும் அம்பிகா பரிமாறத் தொடங்கிய நேரம்,

“அத்தை… நாங்கள் போட்டுச் சாப்பிடுகிறோம். நீங்களும் வந்து உட்காருங்கள்… சேர்ந்தே சாப்பிடலாம்…” என்று அழைத்தான் ஆதியதுலன். மறுத்தார் அம்பிகா.

“இல்லைபா… நீங்கள் எல்லோரும் முதலில் திருப்தியாகச் சாப்பிடுங்கள். அதைப் பார்த்தால்தான் எனக்கு மகிழ்ச்சி…” சொன்னவர் கணவனுக்குப் பரிமாறிவிட்டு விலக,

“அம்பி… அதுதான் தம்பி சொல்கிறாரே… முதலில் உட்கார்ந்து சாப்பிடுங்கள்…” கணவனாய் சொல்ல, அதற்கு மேல் மறுக்காமல் தனக்கும் ஒரு தட்டு எடுத்துக்கொண்டு அமர்ந்தார் அம்பிகா. அதன் பின் அனைவரும் சாப்பிடத் தொடங்க, நேயநறுமையின் விழிகளோ அவளையும் மீறி அவனிடம்தான் சென்று மீண்டன.

அவனைப் பார்க்கக் கூடாது என்று மனதிற்குக் கடிவாளமிட்டாலும், அது சொல் பேச்சைக் கேட்காமல், அவனைப் பார்த்துத்தான் தீருவேன் என்பது போல, அவனிடம் செல்வதும், பின் உணவில் கவனம் செலுத்துவதுமாக இருக்க, ஒரு கட்டத்தில் ஆதியதுலனின் விழிகளும், இவளுடைய விழிகளும் ஒன்றை ஒன்று கவ்வி கொண்டன.

ஏனோ விதிர் விதிர்த்துப் போனாள் நேயநறுமை. அவன் விழிகள் அவள் விழிகளை முத்தமிட்டதுதான் தாமதம், உணர்ச்சிப் பெருக்கில் மயிர்க்கால்கள் அனைத்தும் எழுந்து நின்றன. திரும்பவும் நெஞ்சாங்கூட்டில் எதுவோ படபடத்தது. அந்த உணர்விலிருந்து வெளிவருவதற்குள் அவனுடைய பார்வை சட்டென்று திசை திரும்பி நேரிழையிடம் நிலைத்தது.

இருவரும் பேசியவாறு உண்ணத் தொடங்க, சாப்பிட்டவாறே அவனுக்கப் பரிமாறுவதற்காக அம்பிகா முன் வந்தார்.

உடனே மறுத்தவன்,

“அத்தை… இதுவே போதும். இரவு நேரத்தில் நான் அதிகம் சாப்பிடுவதில்லை…” சொன்னவன், தேவசகாயத்தைப் பார்த்து,

“மாமா… என்னுடைய நண்பன் ஒருத்தன் இங்கேதான் இருக்கிறான். நாளையிலிருந்து அவன் கூடத் தங்கலாம் என்று யோசிக்கிறேன்….” அவன் தயக்கமாகச் சொல்ல, வருத்தத்தோடு அவனைப் பார்த்தார் தேவசகாயம்.

“ஆதி… ஏன் திடீர் என்று? இங்கே தங்க உனக்கு அசௌகரியமாக இருக்கிறதா? எது என்றாலும் சொல்லு… நான் உடனே சரிசெய்து விடுகிறேன்” அவர் பதற, நேரிழையும் வருத்தத்தோடு அவனைப் பார்த்தாள்.

ஒரு கணம் ஆதியதுலனின் பார்வை நேய நறுமையின் மீது நிலைக்க, அந்தப் பார்வையைக் கண்டு கொண்டவளுக்கு ஏனோ இதயம் ஒரு விநாடி தடம் புரண்டது.

எதற்காக இப்படிப் பார்க்கிறான்? அவள் குழம்பும் போதே அவன் கவனம் தேவசகாயத்திடம் சென்றது.

“ஐயோ… அப்படி எல்லாம் எதுவும் இல்லை மாமா… என்னால் உங்கள் அனைவருக்கும் சிரமம். அதுதான், கிளம்பலாம் என்று யோசித்தேன்..” அவன் சொல்ல மறுப்பாகத் தலை அசைத்தார் தேவசகாயம்.

“அதெல்லாம் முடியாது தம்பி. உங்கள் வேலை முடியும் மட்டும் இங்கிருந்து போக முடியாது. போகவும் கூடாது. இது என்னுடைய வேண்டுகோள். ஏதாவது பிடிக்கவில்லை என்றால், சொல்லுங்கள், மாற்றிக் கொள்கிறோம். ஆனால் தனியாகப் போக எல்லாம் நாங்கள் விட மாட்டோம்…” சொல்ல, இப்போதும் அவனுடைய பார்வை நேயநறுமையின் மீது நிலைத்தது.

இப்போது அவளுக்குப் புரிந்து போனது. அவர்கள் பேசியதை அவன் கேட்டிருக்கிறான். எனக்கொன்றும் இங்கே தங்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் உன் தாய் தந்தையின் அன்புக்காகவும், அவர்களின் விருப்பத்திற்காகவும்தான் இங்கே தங்கியிருக்கிறேன் என்பதை அவளுக்குப் புரியவைக்கத்தான் இந்தப் பேச்சை எடுத்திருக்கிறான்.

இவளோ சங்கடத்துடன் அவனைப் பார்க்க, நேரிழையோ எட்டி அவனுடைய கரத்தில் தன் கரத்தைப் பதித்து,

“ஆதி… நாங்கள் ஏதாவது தவறு செய்தால் மன்னித்து விடுங்கள். அதற்காக கிளம்புகிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது… பிளீஸ்” கெஞ்சலாய்ச் சொல்ல, ஒரு புன்னகையைச் சிந்தினான் ஆதியதுலன்.

“நான் இங்கே தங்குவதற்குக் காரணம் அத்தையும் மாமாவும்தான். அவர்கள் எனக்கு அத்தை மாமாவாக இருந்தாலும், அப்பாவுக்கும், அம்மா வுக்கும் நிகரானவர்கள். அவர்களின் கட்டளையை என்னால் எப்படி உதாசீனப்படுத்த முடியும்? யாருக்காகவும் அவர்களின் அன்பை நான் முறிக்க முடியாது நேரிழை. யாருக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, அவர்களுக்காகவும் உனக்காகவும் நான் இங்கே தங்குகிறேன் போதுமா?” அவன் சொல்ல அம்பிகாவின் கோப விழிகள் நேயநறுமையிடம் நிலைத்தது.

“ஏன் தம்பி… இவள் ஏதாவது சொன்னாளா?” பற்களைக் கடித்தவாறு கேட்க, ஆதியதுலன் நேய நறுமையை ஒரு கணம் அழுத்தமாகப் பார்த்தான்.

“ஐயோ…! அப்படியெல்லாம் இல்லை அத்தை. அவள் எதுவும் சொல்லவில்லை… எதற்காக அவளை இதில் இழுத்து விடுகிறீர்கள்?” நேயநறுமையைப் பார்த்தவாறே அவன் கேட்க, திரும்பி ஆதியதுலனை ஏறிட்டவர்,

“இல்லை… உங்களுடைய பட்டியலில் இவள் பெயர் இல்லையே. ஒரு வேளை இவள்தான் ஏதாவது சொல்லி உங்களைக் காயப்படுத்திவிட்டாளா என்று கேட்டேன். அப்படியென்றால் சொல்லுங்கள், இவளை எங்காவது அனுப்பி வைக்கிறேன்…” தாய் சொல்ல திரும்பித் தன் தாயைப் பார்த்து முறைத்தாள் நேயநறுமை.

பெற்ற மகளை விட, இன்று வந்தவன் பெரிதாகப் போயிற்றா? பற்களைக் கடிக்க, ஆதியதுலனின் உதட்டில் இனம் கண்டு கொள்ள முடியாத ஒரு புன்னகை ஒன்று வந்து போனது.

அதைக் கண்டவளுக்கு உதிரம் கொதிக்க, அதற்கு மேல் எதுவும் நடக்காதது போல அங்கேயே அமர்ந்திருக்க முடியாமல் கரங்களை உதறிவிட்டு, எழுந்தாள்.

“சாரிமா… சாரிபா.. தூக்கம் வருகிறது. தூங்கப் போகிறேன்…” என்றவள், தன்னையும் மறந்து விடை பெறுவதற்காக ஆதியதுலனைப் பார்த்தாள்.

அவனோ அவளைத் தவிர்த்து தேவசகாயத்துடன் எதையோ முக்கியமாகப் பேசுவது போலத் திரும்ப, வேண்டுமென்றே தன்னைத் தவிர்ப்பதற்காக அவன் அப்படிச் செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு, கொஞ்சம் மூக்குடைப்புதான்.

அவன் யார் அவளை அலட்சியம் செய்ய? அதே திமிர் தனம் தலைதூக்க, தலையைச் சிலுப்பியவள், சமையலறை சென்று கரங்களையும் கழுவிவிட்டு அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்து விழிகளை மூடினாள்.

விழிகளை மூடினால் தூக்கம் வருவேனா பார் என்றது. கவனம் முழுக்க முன்னறையில்தான் குவிந்திருந்தது. அவளில்லாமல் மற்றவர்கள் அனைவரும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது இவளுடைய மனதிற்குள் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கத் தான் மட்டும் தனியாக இருப்பது போன்ற மாயைத் தோற்றத்தில் தவித்தவள், கோபத்தோடு குப்புறப் படுத்துத் தலையணையில் முகத்தைப் புதைத்தாள்.

மனக்கண்ணில் அவளை அணைத்தவாறு ஆதியதுலன் வந்து நின்றான். அதுவும் அவனுடைய உள்ளங்கை வெற்றிடையில் அழுந்தப் பதிந்தது நினைவுக்கு வர, அந்த நிலையிலும் தேகம் சிலிர்த்துக் கொண்டது அவளுக்கு.

கூடவே இனம்புரியாத அவஸ்தை அவளைப் பாடாய்ப் படுத்தியது. இதுநாள் வரையும் உணராத பெண்மை, மொட்டவிழ்ந்து மணம் வீசியது. அந்த வாசனை கொடுத்த தாக்கத்தைத் தாள முடியாதவளாகத் திரும்பியவள், அருகேயிருந்த மற்றொரு தலையணையை இழுத்து எடுத்து வறிறோடு அழுத்தி அணைத்தவாறு சரிந்து படுத்தாள்.

இப்போது ஆதியதுலனின் கம்பீர ஓசை இவள் காதுகளில் வந்து விழ, இதயம் மீண்டும் தடம் புரண்டது. எத்தனை ஆழமான அழுத்தமான கம்பீரமான குரல். இந்தக் குரலைக் கேட்டாலே உள்ளே என்னவோ செய்கிறதே.

அந்த நினைவே அவளுக்கு வெறுப்பைக் கொடுக்க, சட்டென்று எழுந்தமர்ந்தாள் நேயநறுமை. நெஞ்சம் காரணமின்றித் தவித்தது. எதுவோ ஆசைப்பட்டது மிக மிகத் தூரத்தில், கைக்கு எட்டாத தொலைவிலிருப்பது போன்ற நினைவில் அலமலந்து போய் நின்றாள் அவள்.

‘நான் ஏன் இப்படி உணர்கிறேன்? குழம்பித் தவிக்கிறேன்? அவனுடைய பாராமுகம் என்னை ஏன் வதைக்கவேண்டும்? சொல்லப்போனால் நானும் தான் அவனை வெறுக்கிறேன். அவனைத் திட்டினேன். அப்படிப் பார்க்கப்போனால் அவனுடைய அந்த அலட்சியம் எனக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அல்லவா கொடுக்க வேண்டும். ஆனால் எனக்கு அந்த நிம்மதி ஏன் வரமாட்டேன் என்கிறது? கடவுளே அவனைப் பார்த்து முழுதாக இருபத்து நான்கு மணிநேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவனை மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கிறேனே எனக்குப் பைத்தியமா என்ன?’ தன்னைத் தானே கேட்க, அவளுடைய மனசாட்சியே சொன்னது ‘ஆமாம் நீ பைத்தியம் தான் என்று’

பின்னே மனதிற்குத் தெரியாதா உண்மை எதுவென்று? அவள் பல்கலைக்கழகத்தில் படித்த போது அவள் பின்னால் சுற்றாத ஆண் நண்பர்களா? ஏன் அவள் கூட படித்த வின்சன்டாட் கூட நேரடியாகத் தன் காதலைச் சொன்னபோது, அந்தக் காதலை அலட்சியம் செய்து விலகியவள் அவள். இத்தனைக்கும் வின்சன் அவள் கூட உயர்தர வகுப்பில் படித்துத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திலும் அவள் கூடப் படித்துக் கொண்டிருப்பவன். கிட்டத்தட்ட ஐந்து வருடப் பழக்கம். இன்றுவரை அவனை மனதால் கூட நினையாதவள், பார்த்து இருபத்து நான்கு மணி நேரம் கூட ஆகாத ஒருத்தனையே நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றால், அவளுக்குப் பைத்தியம் இல்லாமல் வேறு என்ன?

அப்படியென்றால், அந்த வளர்ந்து கெட்டவனை மனது ஆசைப்படுகிறதா என்ன? நினைத்தவள் விதிர் விதிர்த்துப் போனாள்.

‘சீ.. சீ… இது என்ன முட்டாள்தனமான சிந்தனை. அவளாவது அந்த வளர்ந்து கெட்டவன் மீது ஆசைப்படுவதாவது. வாய்ப்பேயில்லை.’ தனக்குத் தானே பலமுறை உருப்போட்டுக் கொண்டிருக்க, கதவு திறந்தது.

நிமிர்ந்து பார்க்க நேரிழைதான் வந்துகொண்டு இருந்தாள். வந்தவள். இன்னும் உறங்காமல் விழித்து இருக்கும் சகோதரியைக் கண்டு வியந்தவளாக,

“அக்கா…? இன்னுமா தூங்காமல் விழித்து இருக்கிறீர்? இங்கே சும்மா படுத்துக் கிடந்த நேரத்திற்கு, எங்களோடு வந்து சற்று நேரம் பேசிக் கொண்டாவது இருந்திருக்கலாம். நேரம் போனதே தெரியவில்லை… எத்தனை நாளாயிற்று இப்படி மனம் விட்டுப் பேசிச் சிரித்து. அதுவும் ஆதி… சொல்ல வார்த்தைகளே இல்லை. அவரோடு பேசினால், அவர் பேசுவது தவிர வேறு எதுவுமே கருத்தில் பதியமாட்டேன் என்கிறது…” அவன் புராணம் பாட, இவளுக்குத்தான் கசந்து வழிந்தது.

இதோ இத்தனை நேரமாக அவனை நினைத்துத் தான் தவித்துக் கிடந்தாள். இப்போது இவள் வேறு வந்து தணிய மறுத்த மனத்தை மேலும் தூண்டி விடுகிறாள். எரிச்சலுடன் நினைத்தவள்,

“அது வந்து… இத்தனை நேரம் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன். திடீர் என்று சிரிப்பு சத்தம் கேட்டதா, விழிப்பு வந்துவிட்டது…” உங்களால்தான் என் தூக்கம் போச்சு என்பது போல அவள் சொல்ல, சகோதரியின் அருகே தொப்பென்று விழுந்து,

“சாரி அக்கா…! பேசிக்கொண்டிருக்கும்போது ஆதி ஒரு நகைச்சுவை துணுக்கு சொன்னாரா? என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை… அது தான்… பலமாகச் சிரித்து விட்டேன்..” சின்னவள் சொல்லி மீண்டும் அந்த நகைச்சுவையை நினைத்து சிரிக்க இவளுக்குப் பொறாமை மேலும் பொங்கி எழுந்தது.

“ஓ… அப்படிப் பொங்கிச் சிரிக்கும் அளவுக்கு என்ன நகைச்சுவை சொன்னார் அந்த வளர்ந்த கெட்டவன்…” எரிச்சலுடன் கேட்டாலும், அந்த நகைச்சுவை என்னவென்று அறிந்துவிடும் ஆவல் தொக்கி நின்றது.

சகோதரி கேட்டதும் பரபரப்புடன் சகோதரி பக்கம் சரிந்து படுத்த நேரிழை, நிறையச் சொன்னார், அதில் ஒன்று,

ஒரு நண்பர் தெரு ஓரமா சட்டையெல்லாம் கிழிந்திருக்க நடந்து போய்க்கொண்டிருந்தாராம்.

“ம்”

“அப்போ அவருக்குத் தெரிந்த ஒருத்தர், அண்ணே… என்னாச்சுன்னு கேட்டிருக்கிறார்…”

“ம்…”

“அதற்கு அந்த நண்பர், இன்றைக்கு என்னுடைய பொண்டாட்டியுடைய பிறந்த நாள்… பரிசு எங்கேயென்று கேட்டாள்… அதற்கு அவளிடம், உன்னுடைய பரிசே நான்தான் என்று சொன்னேன் அப்படி என்று அந்த நண்பர் சொல்லியிருக்கிறார்…”

“ம்…”

“சரி அண்ணே… அதற்கு எதற்கு உங்களின் சட்டை இப்படி கிழிஞ்சிருக்கு? அப்படியென்று கேட்க அதற்கு அந்த நபர் சொன்னாராம், “அவ பரிசு நானென்று சொன்னதால், என்னை பிரிச்சுட்டா என்று சொல்லி அழுதாராம்…” தங்கை அதைப் பாவனையுடன் சொல்ல, சட்டென்று சிரிப்பு வரத் தான் செய்தது. ஆனாலும் தன்னை அடக்கிக் கொண்டவளாக,

“ப்ச்… சிரிக்கும் அளவுக்கெல்லாம் அந்தளவு பெரிய நகைச்சுவையாக இல்லை.” உதடுகளைச் சுளிக்க, சகோதரியைக் கோபமாகப் பார்த்தவள்.

“இன்னொரு நகைச்சுவை சொல்லவா?”

“என்னது?”

“ம்… கணவன் வேலையில் இருந்து மனைவியை அலைபேசியில் கூப்பிட்டு, இரவு சாப்பாடு என்ன என்று கேட்டாராம். அதற்கு அந்த மனைவி கடுப்பில் ஒரு டம்ளர் விஷம் இருக்குன்னு சொல்லியிருக்கிறா. உடனே அவ புருஷன், அப்படியோ… அப்படின்னா இப்பவே நீ குடிச்சிட்டு தூங்கு, நான் காலையில் வர்ரேன்னு சொன்னாராம்…” அதை சிரித்துக் கொண்டே இளையவள் சொல்ல, இப்போது நேயநறுமையின் உதடுகள் அவளையும் மீறிப் புன்னகையைச் சிந்தின.

ஆனாலும் அதை மறைத்தவள்,

“இதைக் கேட்டுத்தான் கெக்கே பிக்கே என்று சிரித்தீர்களாக்கும்…” எரிச்சலுடன் கேட்டவள், “சரி சரி… விளக்கை அணைத்துவிட்டுப் படு நேருமாமா… நானும் தூங்கப் போகிறேன்…” சொல்லிவிட்டுப் படுக்கையில் சரிந்து படுத்தாலும் தூக்கம் சுத்தமாக வருவதாயில்லை. பின்னே மனம் முழுக்க கள்ளம் புகுந்த பின் தூக்கமாவது மண்ணாவது.

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வராமல் போக, சட்டென்ற படுக்கையை விட்டு எழுந்தாள் நேயநறுமை. அதே நேரம், சகோதரி படுக்கையை விட்டு எழுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள் நேரிழை. தன் தங்கை உறங்காதிருப்பதைக் கண்டு,

“நீர் இன்னும் தூங்கவில்லையா?” என்று கேட்க, பெரியவளை எரிச்சலோடு பார்த்தாள் இளையவள்.

“தூங்குவதா? அதற்கு நீர் விடவேண்டுமே? யானைக் குட்டி போல அங்கும் இங்கும் புரண்டு படுத்தால் எப்படி உறங்குவதாம்?” எரிச்சலுடன் கேட்க அசடு வழிந்தாள் இவள்.

“சாரி நேரு மாமா… தூக்கம் வரமாட்டேன் என்கிறது…” என்றவள் படுக்கையை விட்டு எழுந்து வெளியே போக முயல,

“எங்கே போகிறீர் அக்கா?” என்றாள் இளையவள்.

“பால் குடித்துவிட்டு வருகிறேன். பால் குடித்து, ஏதாவது கதைப் புத்தகம் வாசித்தால் மனது அமைதியடைந்து தூக்கம் வரும்…” என்றவள் திரும்ப,

“அக்கா நில்லும்…” என்றாள் நேரிழை அவசரமாக.

“என்ன…?” எரிச்சலுடன் பெரியவள் கேட்க,

“இல்லை… மேலே ஏதாவது போட்டுக்கொண்டு போமேன்… பிளீஸ்…” தங்கை சொல்லக் குனிந்து பார்த்தாள் நேயநறுமை. எப்போதும் உறங்கப்போகும் போது அணியும் தொடைக்கும் மேலே ஏறிய தொளதொள டீஷேர்ட்தான் அணிந்திருந்தாள்.

“ஏன்… இதற்கு என்ன குறை…?”

“பிளீஸ்கா… முன்னம் என்றால் நாங்கள்தான். இப்போது ஒருத்தர் புதிதாக நம் வீட்டில் தங்கி இருக்கிறார். அதற்காகவாவது கொஞ்சம்…” கெஞ்சலாகக் கேட்க, தங்கையை முறைத்தவள்,

“இதோ, இதற்காகத்தான் யாரும் நம் வீட்டில் புதிதாக வேண்டாம் என்றேன். கொஞ்சமாவது சுதந்திரமாக இருக்க முடிகிறதா இந்த வீட்டில்..?” கோபத்துடன் எரிந்து விழுந்தவள், தங்கைக்காக வேர்ட்ராப் ஒன்றை இழுத்து அணிந்து கொண்டு கையில் கிடைத்த நாவல் ஒன்றை இழுத்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அங்கே சமையலறையில் விளக்கெரிவது தெரிய, ‘அம்மா விளக்கை அணைக்க மறந்துவிட்டார்களா என்ன?’ யோசனையோடு வேர்ட்ரோபின் இடைவாரை இறுகக் கட்டியவாறு, நடந்தவள் ஆதியதுலனின் அறையை நெருங்கியதும் தயங்கி நின்றாள்.

“உறங்கியிருப்பானா?” கேள்வி எழ, ஒரு விநாடி கதவோரம் தயங்கி நின்றவள், மறு கணம், சமையலறையை நோக்கிச் சென்றாள்.

சமையலறைக்குள் நுழைய முயன்ற நேரம் சமையலறைக்குள் நின்றிருந்த ஆதியதுலன், இவள் பக்கமாகத் திரும்ப, கண்ணிமைக்கும் நொடியில் மோதுப்பட இருந்த விபத்தை இருவருமே தவிர்த்தவர்களாக வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்து

What’s your Reaction?
+1
8
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!