5 – A
சமர்த்திக்கு எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்று கேட்டால் அவளுக்குப் பதில் கிடையாது. அந்த நேரம், அவனிடமிருந்து தப்பி வந்துவிட வேண்டும் என்பது மட்டும்தான் தோன்றியதே அன்றி, வைத்தியர் சொன்னது எதுவும் அவள் புத்திக்குள் ஏறவில்லை.
மீண்டும் அவனோடு வாழத் தயாரில்லை. அதுவும் அவனைப் போன்ற வறண்ட நிலம் கொண்ட தந்தை அவள் குழந்தைக்கு வேண்டாம். தந்தையென்றால் முன் உதாரணமாக இருக்கவேண்டுமே தவிர, இப்படி வீட்டில் ஒருத்தி வெளியே ஒருத்தி என்று வாழும் தந்தை வேண்டவே வேண்டாம். பெற்ற தந்தையையே தூக்கி எறிந்தவள் அவள். கட்டிய கணவனை எறிவது அத்தனை சிரமமா என்ன?
தயாளனும், புஷ்பாவும் என்னை எப்படி வளர்த்தார்களோ அப்படிக் குழந்தையை வளர்ப்பேன். எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
என்ன இப்போது சற்று வேலைப் பழு, அதனால் கொஞ்சமே கொஞ்சமாய் என்னைக் கவனிக்க முடியவில்லை. அதற்காக முற்று முழுதாகக் கவனிக்காது விட்டுவிடுவேனா என்ன?’ என்று ஏதேதோ எண்ணியவாறு பெட்டியை எடுத்துத் துணிகளை அடுக்கிய போது உத்தியுக்தன் நினைவுக்கு வந்தான்.
இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது…? இவள் எங்கே சென்றாலும் சுலபத்தில் கண்டுபிடித்து விடுவானே. அவன் கரங்கள் நீளாத இடங்கள் எது? நினைக்கும் போதே பயம் வந்தது. கூடவே அண்ணன் அண்ணிக்கு என்ன பதிலைச் சொல்வது என்கிற குழப்பமும் வந்தது. அவர்கள் இல்லாமல் ஏழு மாதங்களைக் கடந்துவிட்டாள்தான். ஆனால் இப்படியே காலம் பூராகவும் இருந்துவிடுவாளா என்ன? இருந்துவிட முடியுமா? தெரியவில்லையே… நினைக்கும் போதே அழுகை வந்தது.
ஆனால் இதற்காகப் பயந்தால், உத்தியுக்தனோடு அவன் வீட்டிற்குச் செல்ல வேண்டியதுதான். ம்கூம்… முடியாது… முடியவே முடியாது. அவன் வர முதல் இங்கிருந்து போய்விட வேண்டும்… ஆனால் எங்கே போவது. குழப்பம் வர, தொப்பென்று படுக்கையில் அமர்ந்தாள் சமர்த்தி. திடீர் என்று குழந்தை அசையத் தொடங்க, பசி என்று புரிந்தது.
அப்படியே தன்னைப் போலவே பசியென்றதும் துடிக்கும் குழந்தையை எண்ணி ஒரு பக்கம் கோபமும் வந்தது, அதே வேளை நகைப்பும் வந்தது. எல்லாவற்றையும் மீறி உத்தியுக்தன் வந்து விடுவானே என்கிற அச்சமும் வந்தது.
இப்போது சாப்பிட நேரமில்லை. முதலில் வீட்டை விட்டுக் கிளம்பலாம். அதன் பிறகு எங்காவது சாப்பாட்டுக் கடையில் நின்று நிதானமாக உணவை வாங்கி உண்டுவிட்டுச் செல்லலாம், முடிவெடுத்தவளாக, பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். மேசையில் கிடந்த கைப்பையையும், வாகனத்தின் திறப்பையும் எடுத்துக்கொண்டு, வெளியே வந்தவள் உறைந்துபோய் நின்றாள்.
அங்கே உத்தியுக்தன் அவளுடைய வீட்டிற்கு முன்பாகக் காலுக்குக் குறுக்காக மறு காலைப் போட்டவாறு பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களைச் செருகிக் கிண்டல் புன்னகையுடன் முன்பக்க சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தான்.
இத்தனை விரைவாக எப்படி வந்தான்? திகைக்கும்போதே,
“ம்… எவ்வளவு தூரம் ஓடுவதாக உத்தேசம்?” என்றவன், காலை விடுவித்து உள்ளே வர முயல, இவளோ அதிர்ச்சியில் வாய் திறக்க மறந்தவளாக அவனையே வெறித்தாள். நிதானமாக அவளை வாசலிலிருந்து விலக்கியவன், உள்ளே செல்ல, சுயம் பெற்றவளாய், பற்களைக் கடித்து, “ஷிட்…” என்றவாறு கதவை மூடிவிட்டு இவனை நோக்கித் திரும்பி,
“இங்கே என்ன செய்கிறீர்கள்… எதற்காக வந்தீர்கள்…” என்றாள் கடும் எரிச்சலுடன், அவனோ நின்ற வாக்கில் தலையைச் சற்றுக் குனிந்து இவள் பக்கமாகப் பார்த்துப் புன்னகைத்து,
“ம்… சடுகுடு ஆட இடம் தேடி வந்தேன் சதி…” என்றான். அதைக் கேட்டதும், நெற்றிக்கண் திறந்து பார்த்தாள் சமர்த்தி. அவள் சொன்னதை அவளுக்கே திருப்பிப் படிக்கிறானா? பற்களைக் கடித்தவள்,
“அதற்கு நீங்கள் அந்த ஜூலியட்டிடம்தான் போகவேண்டும்” என்றாள் சுள்ளென்று. அதைக் கேட்க இவனுடைய முகம் இறுகிப் போக, இவள் பக்கமாகத் திரும்பி,
“இப்போது நமக்கிடையில் எதற்கு மூன்றாம் நபரை இழுக்கிறாய்?” என்றான் உத்தியுக்தன் அடக்கிய ஆத்திரத்துடன்.
“மூன்றாம் நபரா? யார் அந்த ஜூலியட்டா… அடேங்கப்பா…” என்று வியந்தவள் போலப் புருவங்களைத் தூக்க இவனோ,
“ஆமாம் மூன்றாம் நபர்தான் சமர்த்தி. நான் நீ நம் குழந்தை இதைத்தவிர இடையில் யார் வந்தாலும் அது மூன்றாம் நபர்தான்…” என்றவனை ஆத்திரத்துடன் பார்த்தவள்,
“என்ன சொன்னீர்கள் என்ன சொன்னீர்கள் நம் குழந்தையா… இல்லை இல்லை இல்லை… இது என் குழந்தை… இந்தக் குழந்தையை உங்கள் குழந்தை என்று உரிமை கொண்டாட யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.” என்றவளை ஏறிட்டவன்,
“என் குழந்தையை நான் உரிமை கொண்டாடாமல் வேறு யார் உரிமை கொண்டாடுவார்கள்… அப்படி உரிமை கொண்டாடத்தான் முடியுமா?” என்று இவன் கேட்க, இவளோ ஏளனத்துடன் சிரித்தாள்.
“ஏன் உரிமை கொண்டாட முடியாது? கனடாவில் ஆண்களே அழிந்து போனார்களா என்ன?” என்று வியப்புடன் கேட்டவளை எரிப்பதுபோலப் பார்த்தான் உத்தியுக்தன்.
பின் அவளை நெருங்கியவன் அவள் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுப்பான் என்று எதிர்பாராதவள், அவன் மார்பில் வந்து விழ, முட்டிய வயிற்றோடு அவள் இடை நோக்கிக் கரத்தைக்கொண்டு சென்றவன், அவளைக் குனிந்து பார்த்து,
“என்னை விட வேறு ஒரு ஆணுடைய கரம் உன் மீது பட முடியாது சதி…” என்றவனின் கரத்தின் சூடு பின் முதுகில் ஊடுருவி இதயத்தை வந்தடையத் தட்டுத் தடுமாறியவளாக, அவனிடமிருந்து விடுபட முயன்று தோற்று,
“ஏ… ஏன் முடியாது? உங்களுக்கு ஒரு ஜூலியட் இருப்பது போல எனக்கு ஒரு இடியட் கூடவா கிடைக்க மாட்டான்? இங்கே வந்த ஏழு மாதங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவன் கூட வாழும் தகுதி கூடவா எனக்கில்லை” என்று அவள் வியந்தது போலக் கேட்க, இவனோ மென்மையாகச் சிரித்தான்.
அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து, வலது புறங்கையைத் தூக்கி அவள் கன்னத்தில் பதித்து மெதுவாக வருட, இவளுடைய இதயம் தன் துடிப்பை அதிகரித்தது. அவன் கரம் பட்டதும் கால்கள் துவண்டன. மயிர்க்கால்கள் அனைத்தும் எம்பி நின்றன. உடல் கிறங்கியது. விளைவு உதடுகள் செழித்து ஈரப்பற்றானது.
அதை உணர்ந்தவன் போல, மேலும் புன்னகைத்தவன், கரத்தை அப்படியே கீழே இறக்கிக் கழுத்தில் பதிக்க, சட்டென்று தன் விழிகளை மூடினாள் சமர்த்தி. தேகம் அவளையும் மீறி நடுங்கியது. அவசரமாகப் பூலோகத்திற்கு விடுப்புக் கொடுத்துவிட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றாள்.
அதை அதைப் புரிந்துகொண்டவனின் மேல் பற்கள் கீழ் உதட்டை அழுந்தப்பற்றிக் கொண்டன.
அவளைத் தொட்டாலே இவன் தேகம் வேறு நிலைக்கு மாறி விடுகிறது. தாபத்துடன் அவன் தொடுகையில் நடுங்கிய செவ்விய இதழ்களைத் தன் பெருவிரலால் பட்டும் படாமலும் வருடிக் கொடுத்து,
“இதோ நான் தொடும்போதே இப்படிக் குழைந்துபோகிறாயே… இதே குழைவை உன்னால் எந்த ஆணின் அருகாமையிலும் பெற முடியாது சதி…” என்றவன் அவளை நோக்கி மேலும் குனிந்து,
“இந்தத் தேகம் என்னிடம் மட்டுமே குழைந்து போகும்…” என்றவாறு தன் கரத்தை அவளுடைய மார்பில் வைத்து,
“இந்த இதயம் என் தொடுகையில் மட்டும்தான் குழைந்து துடிக்கும்… உருகும்…! வேண்டுமானால் சோதித்துப் பார்க்கலாமா?” என்றவாறு குனிந்தவன், சட்டென்று அவளுடைய உதடுகளை மிக அழுத்தமாகப் பற்றிக்கொண்டான்.
அதற்குப் பிறகு சமர்த்திக்கு அனைத்தும் மறந்து போனது. அந்த உதட்டு முத்தத்தில் உலகத்தைத் தொலைத்தவளாக அவனுடன் ஒன்றிப்போக முயன்றாள். அவளுடைய கரங்கள் தாமாக எழுந்து அவனுடைய கழுத்தை வளைத்துப் பிடித்துக்கொள்ள, இப்போத அவன் மேலும் அழுத்தமாக அவள் உதட்டுக்குள் தன்னை புதைக்க முயன்றான்.
எத்தனை நாட்களுக்குப் பிறகான முத்தம். அதன் சுவையின் தித்திப்பில் இருவருமே கிறங்கித் தான் போனார்கள்.
ஆனால் அந்த நாசமாய்ப் போன புத்தி இருக்கிறதே. தேவையில்லாத நேரத்தில் தேவை அற்றதை எண்ணிக் குழம்பிக் கொள்ளும். அது தன் சார்ந்ததையும் நிம்மதியாக இருக்க விடாது. சுத்தவர இருப்பவர்களையும் நிம்மதியாக இருக்கவிடாது.
சமர்த்தியும் அந்த நிலையித்தான் இருந்தாள்.
அந்த நாசமாய்ப் போன மனதில் தேவையின்றி ஜூலியட் வந்து சிரித்தாள்.
அப்போதுதான் அவன் முத்தத்தில் தான் மயங்கிக் கிடந்தது உறுத்தப், பதறி அடித்து விலகியவள், அவன் தொடுகையில் சிலிர்த்த உடலைச் சபித்தவாறே, “எத்தனை தைரியமிருந்தால் என்னை முத்தமிடுவீர்கள்…” சீறினாலும் மனது மீண்டும் அந்த உதடுகளின் தீண்டலுக்காக ஏங்கவே செய்தது.
“ம்… உன்னையே உனக்கு தெரியப்படுத்த வேண்டும் இல்லையா… அதற்குத்தான்…” என்றான் உத்தியுக்தன் இளம் புன்னகையுடன்.
எரிச்சலுடன் அவனை முறைத்தவள், “நீங்கள் எதற்குப் உணர்த்தவேண்டும்…? நானாக ஒருவனைத் தேடிப் பரிசோதிக்கிறேன்…” என்று சிரமப்பட்டுத் தன் கொந்தளித்த உணர்ச்சிகளை அடக்கியவாறு கூற, அவளை மெல்லிய கிண்டல் புன்னகையுடன் பார்த்தான் உத்தியுக்தன்.
“ரியலி..” என்றான். பின் முகம் இறுகிக் கறுக்க,
“முடிந்தால் போய்ப் பார்…” என்றான்.
“என்ன முடியாது என்று நினைத்தீர்களா…” சீறி வந்தது குரல்.
மறுப்பாகத் தலை அசைத்தவன்,
“நோப்… நீ நெருங்கிப் போ… ஆனால், எவனாவது உன்னை நெருங்கினால்… ஐ வில் கில் ஹிம்…” என்று கூற அவனுடைய அந்த அமைதியான அழுத்தமான நிதானமான குரலில் ஒரு கணம் ஆடித்தான் போனாள் சமர்த்தி.
அந்தக் குரல் சொன்னதைச் செய்துவிடும் குரல். உள்ளம் அவளையும் மீறி நடுங்கியது. ஆனாலும் ஆத்திரமும் வந்தது. இவனோ,
“இந்த உலகத்தில், நீ மரணத்தைத் தழுவும் வரையில் உனக்கு நான் மட்டும்தான் சதி… பேச்சுக்காக சொன்னாலும், உன்னால் என்னைத் தவிர வேறு ஒருத்தனை சிந்தையில் கூடத் தீண்ட முடியாது” என்றான் உறுதி போல.
அதைக் கேட்டதும் நெஞ்சம் ஆத்திரத்தில் துடித்தது. எத்தனை தைரியம் இவனுக்கு. இவன் மட்டும் இவளை மணந்த பின், அங்கே ஒருத்தியோடு கூத்தடிப்பான், இவள் மட்டும் ஏகபத்தினி விரதம் காக்கவேண்டுமோ? எரிச்சலுடன்
“ரியலி… அந்தளவு உறுதியோ?”
“ஆமாம்… உறுதிதான் சதி… ஏன் என்றால்…” என்றவன் அவளுடைய கரத்தைப் பற்றித் தன் உதடுகளில் பொருத்தி விடுவித்து,
“ஏன் என்றால்… நீ என்னை மட்டும்தான் காதலிக்கிறாய்…” என்றான் மென்மையாய். அதைக் கேட்டதும், ஆவேசத்துடன் அவனுடைய கரத்தை உதறி,
“என்னது… காதலா… அதுவும் உங்கள் மீதா… ஹா ஹா ஹா இதுதான் பெரிய பகிடியே… (பகிடி என்றால் நகைச்சுவை நையாண்டி என்று பொருள்)” என்றவள் அவனை எரிப்பது போலப் பார்த்து,
“ஒருத்தியைக் காதலித்து, அவள் உருவத்தையே பச்சையாக மார்பில் குத்தி, ஊருக்குக் காட்டுவதற்காக என்னை மணந்து, படுக்கை சுகத்திற்காக என்னைப் பகிர்ந்து, என்னை ஒரு மனுஷியாகக் கூட மதிக்காது, வெறும் உயிரற்ற ஜடப்பொருளோடு ஒப்பிட்ட உங்கள் மீது எனக்குக் காதலா? அடேங்கப்பா… கற்பனைவளம் மிகச் சிறப்பாகத்தான் இருக்கிறது மிஸ்டர் உத்தியுக்தன்…” என்று எகிற, இவனோ ஒரு கணம் அமைதியாக இருந்தான்.
“இதற்கெல்லாம் ஆரம்பச் சுழி போட்டது யார் சமர்த்தி…? தெரியாமல்தான் கேட்கிறேன் முன்னம் எனக்கும் உனக்கும் ஏதாவது பழக்கம் இருந்ததா? உன் குடியை நான் கெடுத்தேனா? ஏதோ ஒரு வேலையாக இங்கிலாந்து சென்றவனின் வாழ்க்கையில் கபடி ஆடுகிறோம் என்கிற அறிவே இல்லாமல் என் வாழ்க்கையில் உள்ளே நுழைந்தது யார்? உன்னோட சுயநலத்துக்காக, நீ பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, நீ பணம் சம்பாதிக்க என்னுடைய தனி அறைக்குள் நுழைந்தது மட்டும் இல்லாமல், என்னையே காயப்படுத்தி விட்டு ஓடினாயே… இது எதுவும் உனக்கு உறுத்த வில்லையே. செய்யக் கூடாத தப்பையும் செய்து விட்டுக் கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சியில்லாமல் உன் அண்ணன் அண்ணியின் மகிழ்ச்சிக்காக பணத்தை வாங்கி என் வாழ்க்கையை நாசம் ஆக்கினாயே… இதில் என்ன நேர்மையை நீ கண்டு விட்டாய்? சரி அதை விடு, உண்மை தெரிந்த பின்பும் உன்னோட மானம் மரியாதையை காப்பாற்ற இன்னொருத்தனின் வாழ்க்கையை புதைகுழிக்குள் தள்ளி விட்டு நீ குளிர் காய்ந்தாயே… இதெல்லாம் எந்த நியாயத்தின் சேர்த்தி. இதையெல்லாம் ஒட்டு மொத்தமாகச் செய்தது நீ. பிறகு என்னையே தப்புச் சொல்கிறாயே…? உன்னால் நான் இழந்தது ஏராளம் சதி… என்னுடைய பெயர், புகழ், செல்வாக்கு, தொழில் எல்லாவற்றையும் உன்னுடைய முட்டாள் தனத்தால், சுயநலத்தால் தொலைத்தேன். ஆனால் என்னாலி நீ என்னத்தை தொலைத்தாய்? எதை இழந்தாய்? சொல் சமர்த்தி… என்னால் நீ எதைத்தான் இழந்தாய்?” என்றான் கடும் ஆத்திரத்தில்.
சமர்த்தியோ பேச முடியாது வாயடைத்து நிற்க, அவளை வெறுப்போடு பார்த்தான் உத்தியுக்தன்.
“என் உள்ளே கணன்று விட்டெரியும் ஆத்திரத்திற்கு முழுக்க முழுக்கக் காரணம் நீ… ஆனால் நெஞ்சு நிறைய அத்தனை கோபத்தையும் வைத்துக்கொண்டு உன்னிடம் ஒரு துளி கூடக் காட்டமுடியாமல் உன்னைக் காக்க முயல்கிறேன் பார்… ஐ ஆம் த வேர்ல்ட் ஸ்டுபிட் மான் இன் த வேர்ள்ட் சமர்த்தி…” என்றான் பொறுமையதை தொலைத்த குரலில்.
“இதோ இப்போது இந்தக் கணம் கூட நீ வேண்டும் என்று உள்ளே தவிக்கிற என்னுடைய முட்டாள் தனத்தை என்னவென்று சொல்ல?” என்றவன், அவன் சொன்னதைக் கேட்டு வெளிறிய அவள் முகத்தைக் கண்டதும் சற்று நிதானித்தான். தன் தலையைக் குலுக்கியவன்,
“இட்ஸ் இனஃப் சதி.. தேவையற்ற பேச்சுக்களில் நேரத்தைச் செலவிடுவதில் பயனில்லை… நடந்து முடிந்ததைப் பற்றிக் கவலைப்பட்டும் பயனில்லை… அதனால், அடுத்து நம் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்யலாமா?” என்றதும் இவளோ, சடார் என்று தலையை நிமிர்த்தி அவனை வெறுப்போடு பார்த்தாள்.
எதை மறந்தாலும் மன்னித்தாலும், அந்த ஜூலியட்டுக்கும் இவனுக்குமான தொடர்பை இணைப்பை மறக்க முடியாதே. வெறுப்போடு தலையை ஆட்டியவள்,
“ஓ… முடிவு செய்யலாமே. முதல் கட்டமாக எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்…” என்றாள். அதைக் கேட்டதும், ஒரு கணம், ஒரே கணம் இவனுடைய முகம் செந்தணலைக் கடன் வாங்கிப் பின் அடங்கியது. உடல் இறுக அவளைக் கொல்லும் வெறியுடன் பார்த்தான் உத்தியுக்தன்.


Saliamah