மேலும் ஒரு கிழமை எந்த மாற்றமுமில்லாமல் கடந்துவிட்டிருந்தது. இந்த ஏழு நாட்களிலும், ஆதியதுலனும் சரி, நேரிழையும் சரி பெரிதாக எந்த நெருக்கமும் காட்டிக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் இருவருக்கும் அதிகம் பேசிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனை நாட்களும் வீட்டிலிருந்து வேலை செய்த ஆதியதலன், ஏதோ தொழிற்சாலையில் பிரச்சனை என்று, வேலைக்குப் போய்வர வேண்டிய நிலை. அதனால் காலையில் போனால், இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்கே வருவான். இதில் எங்கே பார்த்து பேசிக் கொள்வது? அப்படியே அவன் தரிசனம் கிடைத்தாலும், எப்போதும் மகிழோடு நேரத்தைக் கடத்தும் நேயநறுமைக்கும் அவனைப் பார்த்துப் பேச முடிவதில்ல. ஆனால், இரவில் தந்தை வந்ததும் இவளை உதறிவிட்டு அவன் பின்னே ஓடிவிடுவாள் மகிழ். அதன் பிறகு மகளை உறங்க வைப்பது எல்லாம் ஆதியதலன்தான்.
மறு நாள் குழந்தை எழுந்ததும், அதற்குக் காலை உணவு ஊட்டுவதிலிருந்து, அதன் இதர வேலைகளைச் செய்வதெல்லாம் ஆதியதுலன்தான். எப்போதும் நேயநறுமை சற்றுத் தாமதமாகத்தான் எழுவாள் என்பதால், அறையை விட்டு வெளியே வரும்போது, பெரும்பாலும் ஆதியதுலன் குழந்தைக்கு உணவூட்டிக்கொண்டிருப்பான்.
ஆக அவனைப் பார்ப்பது காலையும், இரவும்தான். இரவு என்றால் ஆதியதுலன் வேலையிலிருந்து எட்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவான். வருபவன் குழந்தையோடு விளையாடிவிட்டு இரவுணவை முடித்துக்கொண்டு குழந்தையைத் தன்னோடு எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் புகுந்துவிடுவான்.
இவளும், அவன் வீடு வரும் வரைக்கும் குழந்தையோடு முன்னறையில் விளையாடிக்கொண்டு ஆதியதுலனின் வரவுக்காகக் காத்திருப்பாள். கேட்டால் குழந்தை உறங்கவில்லை, தந்தைக்காகக் காத்திருக்கிறது என்று சப்பைக்கட்டுக் கட்டுவாள். ஆனாலும் இரவில் அவன் திருமுகத்தைப் பார்ப்பதற்காகவே அவள் குழந்தையைச் சாக்காக வைத்துக் காத்திருக்கிறாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
அன்று காலையில் நேயநறுமை எழுந்த போதே என்றுமில்லத திருநாளாகக் குழந்தை அவளுடைய அணைப்பில் பதமாய் உறங்கிக்கொண்டிருந்தது. அதைக் கண்டு வியந்துபோனாள் நேயநறுமை.
எப்போதும் நேயநறுமை எழுவதற்குள் குழந்தை காலைச் சாப்பாட்டை சாப்பிடத் தொடங்கியிருக்கும். இல்லையா அவளுடைய அறையில், தொட்டிலில் உறங்கிக்கொண்டிருப்பாள். இப்படி அவளருகே வந்து உறங்குவதெல்லாம் நடந்ததில்லை. இன்று என்ன புதிதாக? வியந்தவள், குனிந்து குழந்தைக்கு ஆசையாக முத்தமிட்டு விட்டு,
“குட் மார்னிங் நேருமாமா…” என்று முனங்கிவிட்டு, குழந்தையின் அழகில் சற்று நேரம் இலயித்துவிட்டு, விலகிக் கழிவறை சென்றவள், குளித்துவிட்டு, எப்போதும் போல பாகி பான்டும் ஷேர்ட்டும் அணிந்துகொண்டு அறைக்கு வந்தாள்.
இப்போது குழந்தை உறக்கம் கலைந்து எழுந்துவிட்டிருந்தாள்.
குழந்தையை அள்ளித் தூக்கிக்கொண்டு வெளியே வர, பாஸ்கரன் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவர், இருவரையும் கண்டு முகத்தில் மலர்ச்சி பொங்க,
“அடடே… இருவரும் எழுந்துவிட்டீர்களா…” கேட்டவர், எழுந்து,
“இருமா.. தேநீர் எடுத்து வருகிறேன் என்று உள்ளே செல்ல, நேயநறுமையோ தன்னையும் மறந்து அங்கும் இங்குமாகப் பார்த்தாள்.
எங்கே… ஆளைக் காணோம்? தன்னையும் மீறிக் கேட்டவாறு பாஸ்கரன் பின்னே சென்றவளுக்கு விழிகள் ஒரு நிலையில் இருப்பதாயில்லை.
அவள் கனடாவிலிருந்து ஈழம் வந்த இந்த ஒரு மாதமாக, ஆதியதுலன் ஒரு சில நாட்கள் தவிர, அதிகம் வீட்டில்தான் தங்கியிருந்தான். வேலைகளையும் வீட்டிலிருந்துதான் பார்த்தான். அதனால் அவனுடைய தரிசனம் எப்படியாவது நேயநறுமைக்குக் கிடைத்துவிடும். அதுவும் காலையில் அவள் எழுந்து வரும் போது நிச்சயமாக முன்னறையில் நீளிருக்கையில் அமர்ந்து எதையாவது வாசித்துக்கொண்டிருப்பான். இல்லையென்றால் மடிக்கணினியில் எதையாவது தட்டிக்கொண்டிருப்பான். கடந்த ஒரு வாரமாகத்தான் அவன் வீட்டிலிருப்பது குறைந்துபோனது. ஆனாலும் காலையும் மாலையும் அவன் தரிசனம் தடையின்றிக் கிடைத்துவிடும். அந்த எதிர்பார்ப்போடு வெளியே வந்தவளுக்கு, முன்னறையில் அவன் இல்லை என்றதும் ஒரு மாதிரியானது அவளுக்கு.
யோசனையோடு குழந்தையை இடையில் ஏந்திக்கொண்டு சமையலறைக்குள் நுழைய, பாஸ்கரன், ஏற்கெனவே வார்த்து வைத்திருந்த தேநீரை ஒரு குவளையில் ஊற்றி அவளிடம் நீட்டினார்.
இடுப்பிலிருந்து குழந்தையை மேசையில் அமர்த்திவிட்டு, பாஸ்கரன் நீட்டிய தேநீரை வாங்கிக் குடிக்கத் தொடங்க, பாஸ்கரன் குழந்தைக்கு உணவு தயாரிக்கத் தொடங்கினார்.
“சாரிமா… பொதுவாக மகிழினி காலையில் எழுந்தால், ஆதிகூடச் சென்று படுத்துவிடுவாள். இன்று அவன் விடியற்காலையே வெளியே கிளம்பிவிட்டதால், உன்னோடு வந்து படுத்துக்கொண்டாள் போல. அவள் ஒன்றும் உன்னைத் தொந்தரவு செய்யவில்லையே?” அக்கறையாகக் கேட்க, ஆதியதுலன் வீட்டிலில்லை என்பதை அறிந்து கொண்டவளுக்கு முகம் வாடிப் போனது. அதனால்தான் வீடு வெறுமையாக இருப்பது போலத் தோன்றியதா?
தனக்குள் நினைத்தவள், பாஸ்கரன் குழந்தையின் உணவோடு வர, தானே கொடுப்பதாக வாங்கிக்கொண்டாள் நேயநறுமை.
இப்போது ஓரளவு குழந்தைக்குச் சரியாக ஊட்டக் கற்றுக்கொண்டாள் அவள். அதனால் குழந்தைக்கு உணவை ஊட்டி முடித்து அதன் வாயைக் கழுவி, விளையாட விட்டவளுக்கு அன்றையப் பொழுதை நெட்டித் தள்ளுவதே பெரும் பாடாக இருந்தது.
அவனைக் காணாத இதயம் தாகத்தில் தவிப்பது போலத் தவித்து. அவனை விழிகளால் கண்டு பருகி இதயத்திற்கு நிரப்பாமல் அவை தாகசாந்தி அடையாது. நினைத்தவளுக்கு அவள் தன்னிடம் சொல்லாமல் சென்றது உறுத்தியது. அந்த நேரம் பந்து ஒன்றை எடுத்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அவள்மீது மோத, நினைவு கலைந்து குழந்தையை அள்ளி எடுத்து மடியில் அமர்த்தியவள், குழந்தையை அணைத்தவாறே அதன் உச்சந்தலையில் முகத்தைப் புதைத்து,
“ஏன் நேருமாமா… உன் அப்பாவுக்குப் போகும்போது சொல்லிவிட்டுப் போகும் பழக்கம் எதுவும் இல்லையா? அலைபேசியில் அழைத்து ‘வெளியே இருக்கிறேன், என்ன செய்கிறாய் என்று ஒரு வார்த்தை கேட்கக் கூடாதா? இது எல்லாம் என்ன பழக்கம்?” என்று எரிச்சலோடு கேட்க, குழந்தையோ கீழே விழுந்த பந்தை எடுப்பதற்காக அவள் பிடியிலிருந்த நெளிந்து இறங்க முயற்சித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் குழந்தையை இறுக அணைத்திருந்தவள், அவளைக் கை விடாமல், அதன் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்து அவன் நினைவில் வாடிக் கிடக்க, நேரமோ தன் பாட்டிற்கு நகரத் தொடங்கியது.
இதோ இரவு பத்துமணியையும் தாண்டி விட்டது. குழந்தை வேறு தந்தை வராமல், அப்பா அப்பா என்று அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தது.
இன்னும் ஏன் அவன் வரவில்லை? மனதில் கேள்வி குடைய, குழந்தையைப் படுக்கையில் கிடத்திவிட்டு, ஈழத்தின் வெப்ப நிலையில் வியர்த்துக் கொட்ட, எப்போதும் போல, ஒரு குளியலைப் போட்டவள், மார்புக்குக் குறுக்காகத் துவாய் ஒன்றைக் கட்டியவாறு அறைக்குள் வந்தாள்.
கட்டிலில் அமர்ந்திருந்த குழந்தை, உறக்கம் கொடுத்த அழுத்தத்தினாலும், அன்று முழுக்கத் தந்தையைக் காணாததால் ஏற்பட்ட ஏக்கத்தாலும் சிணுங்கலை அதிகமாக்கியிருந்தது.
பதறியவள், அவசரமாகக் கைக்குக் கிடைத்த இரவாடையை இழுத்து அணிந்துகொண்டு குழந்தையைத் தூக்கிக் கொள்ள, குழந்தை கண்களைக் கசக்கிக்கொண்டு உதடுகளைப் பிதுக்கி அழத் தொடங்கியது. நெஞ்சம் உருகிக் கரைந்து போக, உடனே குழந்தையை அள்ளி எடுத்துக் கொள்ள, உடனே குழந்தை அவளை இறுக அணைத்து அவள் தோளில் முகத்தைப் புதைத்தது.
நேரிழையும் அப்படித்தான். வளர்ந்த பிறகும் தூக்கம் வந்தால் கண்களைக் கசக்குவாள். அதையே குழந்தையும் செய்ய உருகிப் போனாள் நேயநறுமை.
சிறியவளின் முதுகை வருடியும் தட்டியும் கொடுத்து சமாதானம் செய்ய முயன்றவள், பின் குழந்தையை ஏந்தியவாறு அங்கிருந்த ஆடுகதிரையை நோக்கி நகர்ந்தாள்.
இந்த ஒரு மாதத்தில், ஆதியதுலன் குழந்தையை மார்பில் கிடத்தி ஆடுகதிரையில் ஆடியவாறு குழந்தையைத் தூங்க வைப்பதைக் கண்டிருக்கிறாள். அதே போல, அவளும் அமர்ந்து குழந்தையைத் தன் மார்பில் கிடத்தியவள், மெதுவாக ஆடியவாறு குழந்தையைத் தட்டிக் கொடுக்க, குழந்தை உடனே அவள் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டது.
மீண்டும் மனதில் பேரலையாகக் குற்ற உணர்ச்சி எழுந்தது.
“சாரி நேருமாமா… கடைசிவரை உன்னைப் பார்க்காமலிருந்து விட்டேன். சாகும்வரைக்கும் இந்தக் குற்ற உணர்ச்சி என்னை விட்டு நீங்குமா தெரியவில்லை.. ஆனால் சத்தியம் செய்கிறேன், உன் மகளை என் மகளாக நான் பார்த்துக் கொள்கிறேன்.’ மனதில் ஏதேதோ நினைத்தவாறு குழந்தையின் முதுகில் தட்டிக் கொடுத்து மென்மையாக, ஆங்கிலத்தில் தாலாட்டுப் பாடல் ஒன்றை அவள் முணுமுணுக்க அந்த இசையில் இலயித்தவாறு குழந்தை உறங்கத் தொடங்கியது.
மெதுவாகக் குழந்தையின் தலைமுடியை வருடிக் கொடுத்தவள், குனிந்து அதன் உச்சியில் முத்தமிட்டு விலகித் தானும் விழிகளை மூடிக்கொண்டாள். ஆனாலும் காதுகள் மட்டும் கூர்மையாக வாசல் கதவில் ஏதாவது சத்தம் கேட்கிறதா என்பதை அறிவதில் மட்டும் கவனமாக இருந்தது.
நீண்ட நேரமாக வாசல் கதவு திறப்பதற்காகக் காத்திருந்தவள், ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி உறங்கிப்போனாள் நேயநறுமை.
அன்று ஆதியதுலனுக்கு வேலையெல்லாம் முடிந்து வீட்டிற்கு வர நேரம் பதினொரு மணியையும் கடந்து விட்டிருந்தது. அன்று புதிய ஒப்பந்தம் சார்பாகக் கண்டிக்குப் போகவேண்டிய நிலை. எல்லாம் முடிந்து மூச்சுவிடும் போதுமதன’ நேயநறுமைக்குச் சொல்லாமல் புறப்பட்டது நினைவுக்கு வந்தது.
அவனைக் காணவில்லை என்று தேடியிருப்பாளா? மனது அவசரமாகக் கேட்டது. உடனே கைப்பேசியை எடுத்தவன், தன்னை யாராவது அழைத்திருக்கிறார்களா என்று பார்த்தான்.
அன்றைய முக்கியமான பேச்சுவார்த்தை இருந்ததால், கைப்பேசியை அணைத்து வைத்திருந்ததாான்.
உடனே உயிர்ப்பித்துப் பார்க்க, தந்தைதான் இரண்டு முறை அழைத்திருந்தார். நேயநறுமையிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை. உடனே இவன் முகம் வாடிப்போனது. அவள் ஏன் இவனை அழைக்கப் போகிறாள்? மொத்தமாக அவனை வெறுத்து ஒதுக்குகிறாளே. அவனை மணந்தது கூடக் குழந்தைக்காகத்தானே. சோர்வுடன் நினைத்தவன் வாகனத்தில் ஏறி, வீடு வந்து சேர்ந்தபோது நேரம் பன்னிரண்டு மணியைத் தொட்டிருந்தது.
நீண்ட தூரப் பயணத்தாலும், அதீத வேலையாலும் அலுத்துக் களைத்து வந்தவன், தன் அறைக்குள் நுழைந்து ஒரு குளியலை போட்டு, பிஜாமா, ஷேர்ட் அணிந்துகொண்டு தந்தையின் அறைக்கதவை மெதுவாகத் திறந்து பார்த்தான். அவர் நல்ல உறக்கத்திலிருந்தார். கதவை மூடிவிட்டுக் குழந்தையின் அறைக்குள் நுழைந்தான். அங்கே அதன் தொட்டிலில் குழந்தை இல்லை. புருவங்கள் சுருங்க, நேயநறுமையின் அறைக்கு வந்தவன், கதவைத் திறப்பதற்காக அதன் குமிழில் கை வைத்தான்.
மெல்லிய தயக்கம் அவனுக்குள். திறப்பதா விடுவதா? தயங்கியவன், அவளையும் குழந்தையையும் அன்றைய நாள் முழுவதும் பார்க்கவில்லை. அவர்களைப் பார்க்காததால் மனதிற்குள் ஒரு தவிப்பு. எதையோ இழந்த உணர்வு. படுக்க முதல், ஒரு முறையாவது இருவரின் தரிசனத்தைப் பெற்றுவிடவேண்டும் என்கிற முடிவோடு, மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே பார்த்தான். பார்த்தவனின் விழிகள், இமைக்க மறந்தன.
உடலை மறைத்த ஆனால் கையில்லாத இரவாடையில், பளிச்சென்ற பளிங்குக் கரங்கள் கண்களுக்கு விருந்தாக, அவிழ்த்து விடப்பட்ட கூந்தல் கார்கால மேகமாக அலைபாய, சிப்பி இமைகள் மூடிய நிலையில் நல்ல உறக்கத்திலிருந்தாள் நேயநறுமை. குழந்தையோ நேயநறுமையின் மார்பில் மெத்தென்று படுத்து உறங்கிக்கொண்டிருந்தது. அதன் குட்டிக் கரம், அவளின் கழுத்தில் தொங்கிய தாலிக்கொடியைப் பற்றிக்கொண்டிருந்தது. நேயநறுமையின் ஒற்றைக் கரம் குழந்தையின் முதுகை வளைத்துப் பிடித்திருந்தது. ஜன்னல் திறந்திருந்ததால், மெதுவாக வீசிய காற்றின் துணையோடு அவளுடைய முன் மயிர் கற்றைகள் மெதுவாக அசைந்து அவளுடைய நெற்றியை மென்மையாக வருடிக் கொடுக்க, தாயாக மாறிப்போன கன்னியவளின் அழகில் ஒரு கணம் சொக்கித்தான் போனான் .
அதுவும், உறக்கத்தில் குழந்தை, அசைந்து படுத்ததாலோ என்னவோ, அவளுடைய இரவாடையின் பொத்தான்கள் இரண்டு வேறு அவிழ்ந்து அவள் நெஞ்சத்தின் அழகைச் சித்திரமாய் எடுத்துக் காட்ட, இந்த ஆண்மகன், கொஞ்சமே கொஞ்சமாய்த் தெரிந்த பெண்மையின் அழகைக் கண்டு தன்நிலை கெட்டு நின்றான்.
ஒரு காலத்தில் ஆளை மயக்கும் கவர்ச்சியாக ஆடைகள் அணிந்து இவன் கடுப்பைக் கிளப்பியவள்தான். அருவெறுக்கச் செய்தவள்தான். அப்போது தோன்றாத கவர்ச்சி, இப்போது… உடல் முழுவதும் மறைத்திருந்த ஆடையில் கொஞ்சமே கொஞ்சமாகத் தெரிந்த பெண்மையின்ல் தெரிய, அந்த எழிலைக் கண்டு மொத்தமாகத் தொலைந்து நின்றான் அவன்.
ஆடை குறைப்பில்தான் கவர்ச்சி இருக்கிறதென்று யார் சொன்னார்கள்? இதோ… இப்போது உடல் தெரியாமல் ஆடை அணிந்திருந்தாலும், மெல்லிய அடையின் விலகலில் தெரிகிற கவர்ச்சி, எதற்கும் உவமையாக முடியாது.
ஆதியதுலன் தன்னை மறந்து அவளையே பார்த்திருக்க, தந்தை வந்துவிட்டான் என்பதைக் குழந்தை எப்படி உணர்ந்து கொண்டதோ, மெதுவாக விழிகளைத் திறந்து தன் தந்தையைப் பார்க்க முயன்றது. அங்கே வெறித்த பார்வையுடன் நின்றிருந்த தந்தையைக் கண்டதும், அந்தத் தூக்க கலக்கத்திலும் பளிச்சென்று புன்னகைத்து அவனிடம் தாவ முயன்றது. பதறிப்போனான் ஆதியதுலன்.
எங்கே, அவளுடைய உறக்கம் குலைந்துவிடுமோ என்று அஞ்சியவனாக, சட்டென்ற தன் உதட்டின் மீது சுட்டுவிரலை வைத்து,
“ஷ்… பேபி…” என்று கிசுகிசுத்தவன், வேக நடையோடு அவர்களை நெருங்கி, நேயநறுமையின் உறக்கம் கலையாதவாறு அவள் கரத்திலிருந்த குழந்தையைத் தன் கரத்தில் எடுத்து மார்போடு அணைத்துக் கொள்ள, குழந்தையோ அவசரமாக அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழகிய சிரிப்போடு அவன் மார்பில் சாய்ந்து, விட்ட உறக்கத்தைத் தொடர முயன்றது.
மென்மையாக அதன் முதுகை வருடிக்கொடுத்தவன், நேயநறுமையைப் பார்த்தான். இன்னும் உறக்கம் கலையவில்லை அவளுக்கு. நிம்மதியோடு குழந்தையின் அறைக்கு வந்தவன். அலுங்காமல் குழந்தையைத் தொட்டிலில் கிடத்த, தந்தையின் சுட்டுவிரலைப் பிடித்தவாறு உறங்கத் தொடங்கியது குழந்தை. உடனே விலகாமல், அதன் சுருள் குழலை வருடிக் கொடுத்தவன், குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்குப் போனதும் தன் கரத்தை விடுவித்து, மெல்லிய விளக்கைப் போட்டுவிட்டு வெளியே வந்தான்.
மீண்டும் நேயநறுமையின் அறைக்குள் நுழைந்தவன், இன்னும் இருக்கையில் தலைசரித்து உறங்கிக்கொண்டிருப்பவளைக் கண்டதும் நெஞ்சம் பிசைய, அவளை நெருங்கியவன், அவள் உறக்கம் குலையா வண்ணம் அந்த தேவதையைத் தன் கரங்களில் அள்ளி ஏந்திக்கொண்டான்.
தன் உயிரானவனின் கரத்திலிருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளின் தலை சரித்து அவன் மார்பில் புதைந்து கொண்டாலும், சற்றுக் கலைந்த தூக்கத்தால், முகத்தை அவன் மார்பில் அப்படியும் இப்படியும் அசைத்துவிட்டுப் பின் சுகமாய் தூங்கிப்போக, அவளுடைய அந்த செயலில் ஒரு விநாடி அசைவற்று நின்றுவிட்டான் ஆதியதுலன். விழிகளோ அவளை விட்டு அங்கும் இங்கும் அசைவதாயில்லை.
சற்று நேரம் தன் கரத்தில் குழந்தையெனக் கிடந்த அந்தக் குமரியை இமைக்காமல் பார்த்தவனின் நெஞ்சம் சொல்லமுடியாத உணர்வில் வீங்கிப் போயிற்று. மகிழினியும் இப்படித்தான். கரங்களில் ஏந்தினால் வாகாக இடம் கிடைக்கும் வரைக்கும் அவன் மார்பில் முகத்தைப் புரட்டி எடுப்பாள். மூக்கால் உரசி அவன் வாசனையை அள்ளி எடுத்த பிறகுதான் உறங்குவாள். அதை நினைத்துக் கொண்டவனின் உதட்டில் மெல்லிய புன்னகை. மகிழினிக்கும், அவளுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பது போலத் தெரியவில்லை. என்ன? மகிழினியை விட இவளுக்குப் பிடிவாதம் அதிகம். அதுதான் பிரச்சனையே.
ஒரு பெருமூச்சோடு அவள் உடலை விழிகளால் வருடினான் ஆதியதுலன். அவளுடைய கனம் சொன்னது, அவளின் உடல் மெலிவை. முன்பு போதை கொள்ளச் செய்யும் தேகத்தின் அங்க வளைவுகளை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை. வேதனையோடு அவளை மெதுவாகப் படுக்கையில் கிடத்திவிட்டு விலகாமல் ஆசையோடு அவள் அழகை விழிகளால் அள்ளிப் பருகி நெஞ்சில் நிரப்பிக் கொண்டான். அவளுடைய முகத்தை மறைத்திருந்த கார் குழலைப் பட்டும் படாமலும் சுட்டுவிரலால் ஒதுக்கிக் காதோரம் தள்ளியவனின் கரம் அத்தனை சுலபத்தில் அவ்விடம் விட்டு விலகுவதாயில்லை. அவள் மென் தோலை உணர்ந்து கொண்ட பெருவிரல், கொஞ்சமே கொஞ்சமாய் அவள் கன்னத்தை வருடிக் கொடுக்க, அந்த உறக்கத்திலும் அவனுடைய தீண்டலை அவள் உணர்ந்து கொண்டாள் போல, உடல் சிலிர்க்க உதட்டில் சுகமாய், பட்டும் படாமலும் ஒரு புன்னகை.
அதைக் கண்டவனின் தேகம் சிலிர்த்துப் போக, சற்று நேரம் அப்படியே அமர்ந்த நிலையில் அவள் கன்னத்தை வருடியவாறே அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதியதுலன்.
அவனால் அவளை விட்டு விலகவே முடியவில்லை. எத்தனை நேரமாக அப்படியே அமர்ந்திருந்தானோ, திடீர் என்று நேயநறுமையிடம் அசைவு. சுயம் வந்தவனாகத் தன் கரத்தை விலக்கியவன், சிறு அச்சத்தோடு அவளைப் பார்க்க. அவளோ மீண்டும் விட்ட உறக்கத்தைத் தொடர, நிம்மதியோடு, அவளை விட்டு விலகியவன், காலடியில் கிடந்த போர்வையை இழுத்து அவள் மீது போர்த்த முயன்றான்.
அப்போதுதான் அதைக் கவனித்தான் ஆதியதலன். விலகியிருந்த ஆடையின் இடது நெஞ்சுப் புறத்தில் ஏதோ ஒரு தழும்பின் ஆரம்பப் பகுதி. குழம்பியவன், அதை உற்றுப் பார்த்தான்.
இது என்ன தழும்பு? முன்பு அங்கே எந்தத் தழும்பும் இருந்ததில்லை. கீழே இறங்கிய கழுத்துப் பகுதியில் பளீர் என்கிற வெண்மையின் நெஞ்சுதான் பார்ப்போரைக் கிறங்கடிக்கும். இப்போது என்ன புதிதாக?
புருவங்கள் சுருங்கியவன், குனிந்து இரண்டு விரல்களால், அவளுடைய நெஞ்சுப்புற ஆடையை விலக்கிப் பார்க்க, அங்கேயிருந்த தழும்பைக் கண்டு ஆடிப்போனான் ஆதியதுலன். அவனுடைய கரங்களோ நடுங்கின. மூச்சோ சீறலாய் வெளி வந்தது. விழிகளோ சிவந்தன. தாள முடியாத வலி கண்ணீராய் கண்ணில் உற்பத்தியானது.
அங்கே பட்டை ஒத்த நெஞ்சிலே, AN என்கிற எழுத்துகள் கிறுக்கலாய் அசிங்கமாய், வடுவாகித் தெரிந்தது.
அந்த வடு ஒன்றும் மேலோட்டமாகக் கீறிய வடுவல்ல. மிக ஆழமாக, சொல்லப்போனால், வலிக்க வலிக்க, ஒன்றன் மீது ஒன்றாய் கிறுக்கப்பட்டு, அதுவும் ஆத்திர ஆவேசத்தோடு கண்மண் தெரியாமல் கிழிக்கப்பட்டுக் காய்ந்து போயிருந்த வடு. அதைக் கண்டவனுக்கு சர்வமும் ஆட்டம் கண்டது. அந்தக் காயத்தை ஏற்படுத்தும்போது அவளுக்கு எப்படி வலித்திருக்கும் என்பதைப் பச்சையாக உணர்ந்தவனுக்கு இதயமே நடுங்கிப் போனது.
அந்த வடு வரக் காரணம் என்ன என்பதை ஊகிக்க பிரமாதமான மூளை ஒன்றும் தேவையில்லையே. அவன் கிடைக்காத விரக்தியில், வேதனையில், வலியில், ஆக்ரோஷத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், அவனுடைய முதல் எழுத்தையும், அவளுடைய முதல் எழுத்தையும் ஒன்றாய் இணைத்து, ஏதோ ஒரு கூரிய பொருளால் கீறியிருக்கிறாள். அவள் கிழிக்கும் போது எப்படி வலித்திருக்கும்? அந்த வலியைத் தான் உணர்ந்தது போல மறுகரத்தால் தன் இடது மார்பை அழுத்திக் கொடுத்தவனின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் பொட் பொட் என்று மூன்று வருடங்களை விழுங்கிக் கொண்ட வடுவின் மீது விழுந்து அவள் ஆற்றாமையைக் கரைக்க முயன்றது.
அதே நேரம், தழும்பில் ஈரம் பட்டதும், நேயநறுமை மெதுவாக அசைய முயல, பதறியவன், அவசரமாகக் கரத்தை விலக்க முயன்ற வேளை, அவளுடைய தளிர் கரம் சட்டென்று விலக முயன்ற அவன் கரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டது.
இவனோ அவள் கரம் பட்டதும் அழுந்த விழிகளை மூடித் தன் வலியை விழுங்க முயன்றான். விழுங்கினாலும் ஆறும் காயத்தையா அவள் கொடுத்திருக்கிறாள்? ஏன்டி…? ஏன் இப்படிச் செய்தாய்? காலம் முழுக்க இதை எண்ணித் துடிக்க வைக்கவா இப்படி ஒரு முட்டாள்தனத்தைச் செய்தாய்? இனி அந்த வடுவைப் பார்க்கும்போதெல்லாம் என் உயிர் ஊசலாடுமே. முட்டாள்… முட்டாள்…?
துடித்தவனுக்கு, அந்த வடு ஆறிப்போனாலும், இன்னும் பச்சை இரணமாய் இருப்பது போல அவனைத் தவிக்கச் செய்ய, எல்லையில்லா வலியோடு அவளிடம் சிக்கிய கரத்தை இழுத்து எடுத்தான்.
“ஐ ஆம் சாரி… ரியலி ரியலி சாரி…” முனங்கியவன், மறு கணம் ஆத்திரத்தோடு தன் அறைக்குள் நுழைந்தான் ஆதியதுலன்.
அவனால் தன் வேதனையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கோபமும் ஆத்திரமும் இயலாமையும் அவனைக் கொன்று புதைக்க, ஒரு வித சீற்றத்தோடு சுவரை நெருங்கியவன், எல்லையில்லா வலியோடும் ஆத்திரத்தோடும் சுவரில் தன் கரத்தைப் பலமுறை ஓங்கி அடித்தான். சீமந்துக் கற்களால் கட்டப்பட்ட சுவர் அவன் கரத்தைப் பலமாகத் தாக்கியபோதும் அவன் நிறுத்தவில்லை.
மனதோ ஆற்றமுடியாத வேதனையுடன் அவளுடனான நினைவுகளை அள்ளி எடுத்து இரைமீட்டது. அவளை முதன் முதலாகச் சந்தித்ததும், நடந்த வாக்குவாதங்களும், வெறுப்பும்… என்று அடுக்கடுக்காய் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவில் வந்து அவனைக் கொன்றது. கடைசியாக காதலை யாசித்து நின்றதும், அந்தக் காதலை ஏற்க முடியாமல் மறுத்ததும் நினைவுக்கு வர, அப்படியே சுவரில் நெற்றி முட்டி நின்றவன், அந்த வலியின் பாரத்தைத் தாங்க முடியாதவனாகத் தரையில் சரிந்து விழுந்து நெஞ்சம் வெடித்துச் சிதறும் வகையில் வெடித்து அழுதான் ஆதியதுலன்.
“ஏன்டி… ஏன் இப்படிச் செய்தாய்? ஏற்கெனவே பெரும் குற்ற உணர்வில் தவிக்கிறேனே…? இன்னும் என்னைத் தவிக்க வைக்கிறாயே…? ஏன்…?” முணுமுணுத்தவனுக்கு மீண்டும் அந்த வடு கண்முன்னால் வந்து வதைத்தது. உடல் இறுகியது. அழுகை நின்றது.
அடுத்து என்ன நினைத்தானோ சட்டென்று எழுந்தமர்ந்தான் ஆதியதுலன். சற்று நேரம் எதையோ யோசித்தான். மறு கணம் வில்லிலிருந்து விடுபட்ட அம்பாக எழுந்தவன், விரைந்து சென்று தன் மேசையின் இழுப்பறையைத் திறந்து அதிலிருந்த பொருட்களை அள்ளி மேசையில் போட, ஒரு மெழுகுதிரி உருண்டு வந்தது.
அதைக் கண்டவனின் விழிகள் மின்ன, அதைக் கையில் எடுத்தான். கூடவே அங்கிருந்த தீப்பெட்டியையும் எடுத்தவன், தான் எதிர்பார்த்தது இருக்கிறதா என்று தேடினான். இல்லை என்றதும் மறு இழுப்பறையைத் திறந்து அதிலிருந்த பொருட்களையும் அள்ளி எடுத்த மேசையில் எறிந்தான். அவன் எதிர்பார்த்தது போலக் கையில் இரும்புக் கம்பி ஒன்று சிக்க அதைக் கரத்தில் எடுத்துப் பார்த்தான் ஆதியதுலன்.
முகத்தில் திருப்தி தோன்ற, அடுத்து, மெழுகுதிரியை உயிர்ப்பித்து மேசையில் வைத்தவன், தன் ஷேர்ட்டைக் கழட்டி எறிந்தான்.
தொடர்ந்து ஒளியேற்றிய மெழுகுதிரியின் நெருப்பில் அந்த இரும்புக் கம்பியைப் பிடித்தவாறு சற்று நேரம் நிற்க, அந்தக் கம்பி செந்தணலானது. அதை இரசித்துப் பார்த்தவன், மறு கணம் அந்தக் கம்பியை இடது மார்பில் அழுத்தமாக வைக்க, அது அவனுடைய கடியத் தோலை எரித்துப் பொசுக்கியது. தான் செய்வது மிகப்பெரும் முட்டாள்தனம் என்று அவனுக்குப் புரியவே செய்தது. ஆனாலும் அந்த முட்டாள்தனம் பிடித்திருந்தது. முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். அது போல அவள் பட்ட வலியை அவன் பட்டால்தான் உணர முடியும். அவளால் ஏற்பட்ட வலிக்கு இதுதான் மருந்தாகத் தெரிந்தது ஆதியதுலனுக்கு.
திரும்பத் திரும்ப சூடேறிய கம்பி அவனுடைய இடது மார்பின் தோலைப் பலமுறை பதம்பார்த்தது. கடைசியாகப் போதும் என்று நினைத்துக் கம்பியைத் தூக்கிப் போட்டவன், அந்த மேசையில் கரங்களை ஊண்டியவாறு நெஞ்சின் வலியை உணர்ந்தவாறு, எரிந்தவாறு உருக்கும் மெழுகுதிரியை வெறித்தான்.
வெந்தும் தணியாத வலியை எதைக் கொண்டு அணைப்பான்? புரியவில்லை அவனுக்கு.
“சாரிமா… எத்தனை முறை உன்னிடம் மன்னிப்புக் கேட்டாலும், போதாது… ஆனால் என் பிரிவு உன்னை இந்தளவு காயப்படுத்தும் என்று சத்தியமாக நான் யோசிக்கவில்லை. நீ திடமானவள், போகப் போக என்னை மறந்துவிடுவாய் என்று நினைத்தேன். ஆனால், அதில் கூட பிடிவாதமாக இருப்பாய் என்று நான் நினைத்திருக்கவில்லை… உன்னைப் பல முறை வார்த்தைகளால் நோகடித்திருக்கிறேன். எல்லாமே நீ என்னை விட்டு விலகிச் செல்லவேண்டும் என்பதால்தான். விலகிச் செல்வாய் என்றும் நினைத்தேன். ஆனால் நீ, நான் நினைத்ததற்கு எதிர்மாறாக, மேலும் மேலும் உன்னை வதைத்திருக்கிறாய். உன் காயத்தை, வடுவை, தவிப்பை எப்படி ஆற்றப்போகிறேன். தெரியவில்லையே…” கலக்கத்தோடு சொன்னவன், பெரும் வேதனையோடு விழிகளை மூட கண்களின் ஓரம் கண்ணீர் நிற்காமல் அவளைப் போலவே பிடிவாதமாக வடிந்து சென்றது.
(20) மறு நாள் நேயநறுமை எழுந்த போது, தான் படுக்கையில் கிடப்பதைக் கண்டு குழம்பிப்போனாள். முன்னிரவு ஆதியதுலனின் வருகைக்காகக் காத்திருந்து கடைசியாக மகிழினியை ஆடுகதிரையில் வைத்துக்கொண்டு உறங்கிப்போனது நினைவுக்கு வந்தது. ஐயோ…
(17) இதோ, ஆதியதுலனின் மனைவியாக, ஒரு கரத்தில் மகிழினியை ஏந்தியவாறு, பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுச் சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் அவன் மனைவியாக மாறியிருந்தாள் நேயநறுமை. கழுத்திலே புத்தம் புதிய தாலிக்கொடி தொங்கிக்கொண்டிருக்க, அவளுடைய கரத்திலிருந்த குழந்தை, அந்தக்…
(16) என்னதான் நடந்தாலும் ஊருக்குப் போவது என்கிற முடிவில் அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கிய நேயநறுமையின் முடிவையும் ஆட்டம் காண வைத்தாள் மகிழினி. ஆம், மறு நாள் நேயநறுமை எழுந்து மகிழினியைத் தேட, அவளைக் காணோம். பதறியவளாக…
-14- “மரி மீ...” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது. பின்…
13- எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று…
12- இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது. ‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி…