இதோ, ஆதியதுலனின் மனைவியாக, ஒரு கரத்தில் மகிழினியை ஏந்தியவாறு, பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுச் சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் அவன் மனைவியாக மாறியிருந்தாள் நேயநறுமை. கழுத்திலே புத்தம் புதிய தாலிக்கொடி தொங்கிக்கொண்டிருக்க, அவளுடைய கரத்திலிருந்த குழந்தை, அந்தக் கொடியை இழுத்து விளையாடிக்கொண்டிருந்தது.
இது எதையும் கவனத்தில் கொள்ளாத நேயநறுமை, ஒரு பொம்மைபோல நின்றிருந்தாள்.
அவளுக்குத் தன் விதியை நினைத்துச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் இவன் என் கணவன் என்று மனதில் கற்பனை வளர்த்துக் காத்திருந்தாள். அவனோ தங்கையைத்தான் பிடிக்கும் என்று அவளை மணந்து அவள் மூலம் குழந்தையையும் பெற்றான். இனி கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் அவனைப் பார்க்கக் கூடாது, அவன் நிழலைக் கூடத் தீண்டக் கூடாது என்கிற முடிவோடு எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடந்தாள். ஆனால் இப்போது? அவன் மனைவியாக, அவன் குழந்தைக்குத் தாயாக அவன் தேகம் உரச அருகே நிற்கிறாள்.
இந்த விதிதான் எத்தனை கொடியது? அவள் ஆசைப்பட்டதைக் கொடுக்க மூன்று உயிரைக் காவு வாங்கியல்லவா கொடுத்திருக்கிறது. அவளுக்கு உயிரான ஒன்றைக் கொடுப்பதற்கு, அவளுடைய உயிரினும் மேலான மூன்று உயிர்களை எடுத்து விட்டது. தொலைத்த அந்த உயிர்களின் மத்தியில்தான் அவன்கூட வாழவேண்டும் என்றால் அவளால் எப்படி முடியும்? அது சாத்தியமா என்ன? ம்கூம்… அவனை மணந்தது மகிழினிக்காக. கடைசிவரை அது மட்டும்தான். அவன் கூட வாழ்வதெல்லாம் சாத்திய படாது.
அது மட்டும் உறுதியாகத் தெரிந்தது அவளுக்கு.
அன்று திருமணத்திற்காக வந்திருந்த ஒரு சில உறவுகளும், சாப்பாட்டை முடித்துக்கொண்டு கிளம்பி விட, கடைசியில் மகிழினியை ஏந்திக்கொண்டு தன் அறைக்குச் செல்ல முயன்றாள் நேயநறுமை.
அவள் செல்வதைக் கண்ட பாஸ்கரன்,
“எங்கேமா போகிறாய்?” வியந்து கேட்க,
“நான்… நான் என் அறைக்குப் போகிறேன் மாமா…” என்றாள் தயக்கமாக. அதைக் கேட்டுச் சிரித்தவர்,
“உன்னுடைய அறைக்கா… இனி உன்னுடைய அறை, ஆதியதுலனின் அறைதான் நேயா… அங்கே போ…” அவர் சொல்ல அதிர்ந்தாள் அவள்.
தாலி கட்டிவிட்டால் அவனுடைய அறையில்தான் தங்க வேண்டுமா? இது என்ன சட்டம்? சற்று எரிச்சலோடு நினைத்தவள்,
“இ… இல்லை மாமா.. எனக்கு என் அறைதான் வசதி…” சிரமப்பட்டுத் தன் எரிச்சலை அடக்கியவாறு சொல்ல, அவளை நெருங்கியவர், அவள் கரத்திலிருந்த மகிழினியைத் தன் கரத்தில் வாங்கி,
“இதோ பாருமா… உடனே நீ அவன் கூட வாழவேண்டும் என்பதற்காக அவன் அறைக்குப் போகச் சொல்லவில்லை. அது இயலாத காரியம் என்று எனக்குத் தெரியும். ஆனால், உங்கள் இருவருக்கும் தனிமை வேண்டும். நீங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசவேண்டும். உங்கள் தவிப்பை ஒருத்தருக்கு ஒருத்தர் பகிரவேண்டும். வலிகளையும் வேதனைகளையும் மூடி மறைக்காமல் வெளிப்படுத்தவேண்டும். அப்போதுதான், எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியும். அவன் மீதான வெறுப்பும் உனக்குக் குறையும். உங்கள் இறுக்கங்களைத் தளர்த்த முடியும். அவன் தன் அறையிலும், நீ உன் அறையிலும் இருந்தால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விடும்…” அவர் சொல்ல, மறுப்பாகத் தலையை அசைத்தாள் நேயநறுமை.
“தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள். மனதளவில் இதற்கு நான் தயாராகவேண்டும். நிச்சயமாக இப்போது என்னால் முடியாது… ஏற்கெனவே மூச்சு முட்டிப்போயிருக்கிறேன். நான் செய்தது சரியா தவறா என்கிற குழப்பமே இன்னும் என்னை விட்டுப் போகவில்லை. இதற்கு மேல் அழுத்தினால் மூச்சு முட்டிப்போவேன்…” என்றவள் அவர் கரத்திலிருந்த மகிழினியைத் தன் கரத்திற்கு எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்ற, பாஸ்கரனோ ஏமாற்றத்தோட ஆதியதுலனைத் தேடி, அவன் தங்கியிருந்த அறைக்குச் சென்றார்.
அவனோ, சாய்வாக ஒரு இருக்கையில் அமர்ந்தவாறு ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். தந்தை வருவது உணர்ந்ததும், புத்தகத்தை மடித்து வைத்துவிட்டு, நிமிர்ந்து பார்த்தான்.
“என்னப்பா…?”
“ப்ச்… நேயாவை உன் அறைக்கு வரச்சொன்னேன். அவள், மறுத்துவிட்டாள்…” என்றார் சோர்வோடு. அதைக் கேட்டுச் சிரித்தவன்,
“அவள் இருப்பதே என் அறையில்தானேபா…” என்றான் ஆதியதுலன். அதைக் கேட்டு பளிச் என்று சிரித்த பாஸ்கரன்,
“அட… ஆமா…” என்றவர், உடனே தன் மகனைப் பார்த்து,
“அப்போ நீ அந்த அறைக்குப் போடா… இங்கே இருந்து என்ன செய்கிறாய்?” என்றார் பரபரப்பாக. அதைக் கேட்டு மேலும் சிரித்தவன்,
“அப்பா… எதற்கும் அழுத்தம் கொடுத்தால் அது நொறுங்கிப்போகும் என்று நீங்கள்தான் சொல்வீர்கள். இப்போது நீங்களே அவளுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னால், என்ன செய்வது? அவளை அவள் போக்கில் விடுங்கள்… அடுக்கடுக்காக நடந்த சம்பவங்கள் எதுவும் அவளுடைய எல்லைக்கு உட்பட்டதில்லை. முதலில் அதை எல்லாம் ஜீரணிக்கட்டும்… அதிலிருந்து வெளி வரட்டும். எதார்த்தம் புரியட்டும். அதற்குப் பிறகு அவள் கூடப் பேசுகிறேன்பா… தவிர எப்போதும் இப்படியே தள்ளியிருக்கப் போவதில்லை. காலம் கனிய, எல்லாம் நல்லதே நடக்கும். யோசிக்காதீர்கள்.” சொன்ன மகனைப் பரிதாபமாகப் பார்த்தார் பாஸ்கரன்.
“அவள் மாறுவாளா தம்பி. உன்னைப் புரிந்துகொள்வாளா?” கேட்கத் தோள்களைக் குலுக்கியவன்,
“தெரியவில்லை… ஆனால், என்னை மணக்கமாட்டேன் என்று பிடிவாதமாகச் சொன்னவள், இப்போது மனைவியாக இருக்கிறாள். அப்படி அவளுடைய மனது என்றைக்காவது ஒரு நாள் மாறும்… காத்திருக்கலாம்…” என்றவனை வலியோடு பார்த்த பாஸ்கரன்,
“ஏன்பா இப்படி அவதிப்பட வேண்டும்… நீ வேண்டுமானால் அவளிடம்…”
“அப்பா…!” அவன் அழைத்த விதத்தில் வாயை மூடிக்கொண்ட பாஸ்கரன்,
“சரிப்பா… ஏதோ உன் வாழ்க்கை நன்றாக இருந்தால் எனக்கு அதுவே போதும். அதைத்தான் நான் வேண்டுவதும்.” என்று வருத்தமாகக் கூறிய தந்தையை இரக்கத்தோடு பார்த்தான் ஆதியதுலன்.
“எல்லாம் கண்ணிமைக்கும் நொடியில் சரியாகிவிடும் என்றால், வாழ்க்கையில் யாருக்கும் கஷ்டமே வராது. கொஞ்சம் விட்டுப் பிடிக்கவேண்டும். சரியாகும்பா… நீங்கள் கவலைப்படாமல் போய்த் தூங்குங்கள்…” தந்தையை அனுப்பிவைத்தவன், ஒரு பெருமூச்சோடு மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு மென்னிருக்கையில் தலையைச் சாய்த்து விழிகளை மூட, சட்டென்று கண்களைச் சிமிட்டி நின்றாள் அவன் தேவதை.
அந்த நினைவு கொடுத்த இதத்தில், அவன் உதடுகள் அழகான புன்னகை ஒன்றைச் சிந்த,
“கொல்றேடி…” முனங்கியவன் இப்போது எழுந்து சென்ற தன் கட்டிலில் விழுந்து விழிகளை மூட, மனக்கண்ணில் தோன்றிய தேவதை கனவாய் அவனோடு கூடிக் குலாவ, கொஞ்சமாகத் தூக்கம் அவனை அரவணைத்துக் கொண்டது.
அதே நேரம் இங்கே அவனுடைய அறையில் மகிழினியைப் படுக்கையில் கிடத்தித் தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தாள் நேயநறுமை.
பழக்கமற்ற தாலி, கழுத்தில் பாரமாகத் தொங்கிக்கொண்டிருக்க. அதை ஒற்றைக் கரத்தால் தூக்கிப் பார்த்தாள். இன்னும் நம்பமுடியவில்லை அவன் தன் கணவன் என்று. ஒரு காலத்தில் இதற்காக வெறித்தனமாக ஆசைப்பட்டாள். இப்போது காலதாமதமாகத் தொங்குவதாலோ என்னவோ இரசிக்க முடியவில்லை. இவன் என்னவன் என்கிற உரிமை வர மறுக்கிறது. உள்ளே பெரும் தவிப்பும், வலியும் கனமாய் ஏறியிருக்கிறது. தங்கையின் வாழ்க்கையைப் பறித்துக்கொண்டோமோ என்கிற குற்ற உணர்வு எழுகிறது.
அன்று அவளும் நேரிழையும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து பேசியது வேளை கெட்ட நேரத்தில் நினைவுக்கு வந்தது.
“அக்கா… உமக்குத் திருமணம் ஆனாலும், இப்போது போலவே நாம் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டிலிருக்கலாம்…”
“ஆனால் உனக்கும் திருமணம் செய்து அனுப்பிவிடுவார்களே நேரு… அதற்குப் பிறகு?”
“அது… நானும் என் புருஷனும் உம் கூடவே இருந்து கொள்கிறோம் அக்கா…”
“பேசாமல் ஒன்று செய்யலாமா?”
“என்னக்கா…? திருமணம் செய்யாமல் இப்படியே இருக்கலாம் என்கிறீரா…? அதற்கு அம்மா அப்பா விடவேண்டுமே…”
“அதுதான்டி என் நேரு மாமா… நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், பேசாமல் நாம் இருவரும் ஒருத்தனையே திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி என்றால் ஒரே வீட்டிலிருந்து விடலாம்…”
“எதே…” என்கிற அதிர்ச்சியோடு பேந்தப் பேந்த முழித்த தங்கை நினைவுக்கு வர, சட்டென்று கண்ணீர் பொங்கியது அவளுக்கு.
அன்று பேசும்போது அவளுடைய வாயில் எந்தச் சனி இருந்ததோ. இன்று சொன்னது போல, ஒரே ஆணைத்தான் இருவரும் திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒருத்தி செத்துப் போய் மற்றவளுக்கு அந்த இடம் கிடைத்திருக்கிறது. நெஞ்சம் வெடிக்க அழுகை வந்தது.
சே… இது ஒன்று. என்று அவள் தன்னை மறந்து அழுதாளோ, அன்றிலிருந்து தொற்று வியாதி போல, எப்போது மனம் அலைபாய்ந்தாலும் முணுக்கென்று வந்து தொலைக்கிறது’ கண்ணீர் மீது ஆத்திரம் கொண்டவளாக விழிகளை அழுந்த துடைத்தவளின் உதடுகள் ஒன்றோடு ஒன்று இறுகிக் கொண்டன.
அந்த இறுக்கத்தின் இடையே. அவன் மீது கொண்ட காதல் வேறு மெல்லியதாய் எட்டிப் பார்த்து சிரித்தது. ஒரு பக்க இதயம் அவனை ஏற்க முடியாமல் தவித்து எரிந்து கருக, மறு பக்கத்து இதயம் அவன் மீது கொண்ட காதலில் பூத்துக் குலுங்குகிறது. அவன் கிடைத்துவிட்டான் என்கிற மகிழ்ச்சியில் குளிர்ந்து போகிறது. இரண்டுக்கும் நடுவில் சிக்கி வதைபட்டவளுக்குத் தூக்கம் என்னவோ எட்டாத் தொலைவில் நின்று கொண்டது.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கடைசிவரை அவன் மீதிருக்கும் காதல் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதை மட்டும் அவனுக்குக் காட்ட மாட்டாள்…’ முடிவாக எண்ணும்போதே அவளுடைய மனதோ எள்ளி நகையாடியது.
நீ காட்டாவிட்டால் அவனுக்குத் தெரியாதாக்கும். அதுதான் அன்று பேசும்போது தெள்ளத் தெளிவாக நீ இன்னும் தன்னைக் காதலிப்பதை உறுதியாகச் சொன்னானே… அதற்குப் பிறகும் உன் காதலை மறைத்துத்தான் என்ன மறைக்காமல் விட்டுத்தான் என்ன… இவ்வளவு ஏன் சும்மா அவன் ஆடை உரசினாலே சிலிர்த்துப் போகும் இதயத்திற்குத் தன்மானம் பற்றி ஏதாவது தெரியுமா? அவன் உருகித் தொட்டாலே நீ விழுந்து போவாய். இதில் பந்தா வேறு…’ மனது எள்ளி நகையாட, முகம் சுருங்கினாள் நேயநறுமை.
காதலுக்கு முன்னால் பிடிவாதம் கூட, பிடிமானம் இல்லாமல் போகும் என்பதைத்தான் அவள் கண்டு கொண்டாளே.
இந்தக் காதல்தான் எத்தனை பொல்லாதது. அவர் அவர் தனிப்பட்ட உணர்ச்சிகளையும் சுட்டுப் பொசுக்கிவிட்டுத் தனியாக நின்று பேயாட்டம் ஆடுகிறது
உலகில் மாறாததில் ஒன்று விடிவு. மறு நாள், கதிரவன் யாருக்காகவும் காத்திருக்காமல் மலர்ந்தான். இரவு மிகத் தாமதமாகத் தூங்கிய நேயநறுமை பகலவனின் கரங்களின் தூண்டலில்தான் உறக்கம் கலையவே முற்பட்டாள்.
விழிகளைத் திறக்காமலே, கரத்தால் குழந்தை படுத்திருந்த இடத்தைத் தடவிப் பார்க்க அது வெறுமையாக இருந்தது. பட்டென்ற விழிகளைத் திறந்தவள், திரும்பிப் பார்க்க, குழந்தை அங்கே இல்லை.
எங்கே போனாள்?’ குழம்பியவள், மிச்ச சொச்சமாகக் கண்களை அழுத்திக்கொண்டிருந்த உறக்கத்தை கண்களைக் கசக்கித் துரத்திவிட்டு, எழுந்து அறையை விட்டு வெளியே வர, அங்கே முன்னறையில் குழந்தையை மடியில் வைத்து, அதற்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தான் ஆதியதுலன்.
அந்தக் காட்சியைக் கண்ட நேயநறுமையால் சட்டென்று தன் விழிகளை விலக்க முடிந்திருக்கவில்லை. உணவூட்டும் போது தாய் அழகு. அவள் மென்மை அழகு. அவள் குழைவு அழகு. ஆனால் அதற்கு நிகராக இதோ ஒரு தந்தை உணவூட்டுவதில் தெரியும் ஆண்மையும், கம்பீரமும், அதில் தெரியும் திடமும் பேரழகுதான்.
குழந்தையும் தந்தையின் அரணில் சத்தமில்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அதன் குட்டிக் கையானது, கையில்லாத டீஷேர்ட் அணிந்திருந்தவனின் உருண்டு திரண்ட கைத்தலப் புஜங்களைக் கிள்ளி விளையாடிக்கொண்டிருந்தது.
குழந்தையின் கரங்கள் படர்ந்திருந்த இடத்தைக் கண்ட நேயநறுமைக்கும் இதயம் தாளம் தப்பியது. என்ன செய்வது காதல் கொண்ட மனமாயிற்றே. மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, காதல் கொண்ட மனதிற்கு, தாம் ஆசைப்பட்ட எதிர் பாலினம் செய்யும் அனைத்தும் அழகாகத்தான் தெரியும்.
அதுவும், ஆறடி நான்கங்குல உயரமும், அதற்கேற்ற உடல் கட்டுடனும் அமர்ந்திருந்தவனின் பரந்து விரிந்த உடலுக்கு மத்தியில், சின்னக் குருவியாக அடைக்கலமாகியிருந்த குழந்தையின் உருவமும், அவள் விழுந்துவிடக் கூடாது என்று அதன் உடலைச் சுற்றித் தசைகள் உருண்டு திரண்ட கரத்தால் அணைத்துப் பிடித்து, குழந்தையுடன் இதமான குரலில் பேசியவாறே உணவை ஒரு கரண்டியால் அள்ளி எடுத்து ஊட்டிக்கொண்டிருந்த அந்தக் காட்சி கூட அவளுக்குக் கவிதையாகத்தான் தெரிந்தது.
தன்னை மறந்து அவனையே பார்த்திருக்க, தன் குழந்தைக்கு உணவூட்டிக் கொண்டிருந்த ஆதியதுலன், எதுவோ உந்த, விழிகளை நிமிர்த்திப் பார்த்தான். அங்கே, அறை வாசலில் நின்றிருந்தவளைக் கண்டதும் நெஞ்சில் ஊற்றாய் புதுவித உணர்வு.
கலைந்த தலைமுடி. ஈழத்தின் காலநிலைக்குக் கொஞ்சம்கூடப் பொருந்தாத வகையில் , உடலின் பாகம் எதுவும் தெரியாத வகையில் பாகி பான்ட் ஷேர்ட். சுத்தமாக முகத்தில் எந்தப் பூச்சும் இல்லாமல் மிக எளிமையாக நின்றிருந்தவளைக் கண்டவனுக்கு நெஞ்சம் பிசைந்தது. அன்று அந்தக் குளிர் காலத்திலும், கவர்ச்சியாக ஆடையணிந்து, முகம் முழுக்க அரிதாரம் மூசித் தன் அழகைப் பன்மடங்கா வெளியே காட்டியவாறு நடமாடிய நேயநறுமை நினைவுக்கு வந்து தவிக்கச் செய்தாள். அவளுடைய அந்த இளமைத் துள்ளலையும், பொங்கியெழும் மகிழ்ச்சியையும் ஒட்டு மொத்தமாகத் துடைத்து எடுத்தவன் அவன்தானே.
உள்ளே பெரும் குற்ற உணர்ச்சி எழ, தலையைக் குலுக்கியவன்,
“ஹே… குட் மார்ணிங்…” என்றான் இதமாக.
இதமாகப் பேசுபவனிடம் முகத்தைத் திருப்பவா முடியும்.
“ம்… மார்ணிங்…” என்றவன், அவர்களை நோக்கி வர, மீண்டும் குழந்தைக்கு உணவை ஊட்டியவாறு,
“நன்றாகத் தூங்கினாயா?” கேட்டான் எந்த உணர்ச்சியையும் குரலில் காட்டாது.
‘இல்லை உன் நினைவில் உறங்காமல் கிடந்தேன் என்று சொல்லவா முடியும்?’
“ம்…” என்கிற பதிலைச் சொன்னவள், அவன் மார்பில் அடங்கிக் கிடந்து இவளைக் கண்டதும் கை கால்களை அசைத்து மலர்ந்த முகத்துடன், “அம்மா” என்ற அந்தச் சின்னச் சிட்டின் அன்பில் நெகிழ்ந்து போனவளாக, அவன் மார்பில் படிந்து கிடந்த குழந்தையின் சுருள் குழலை வருடிக் கொடுத்தவாறு,
“மகிழுக்கு நான் உணவு கொடுக்கிறேனே…” என்றாள் ஆர்வமாக.
மகிழின் மென் குழலை வருடிக் கொடுக்கும் அவசரத்தில் அவனை நெருங்கி நிற்பதைக் கூட உணராது அன்பு பெருக்கெடுத்திட நின்றிருந்தவளின் நெருக்கம் இவனை வதைக்க, அவளை நிமிர்ந்து பார்த்தான் ஆதியதுலன். அதுவும் அவளுக்கே உரித்தான வாசனையும், அவளுடைய உடல் சூட்டின் அளவையும் உணர்ந்து கொண்டவனுக்குத் தேகம் மயங்கிக் கிறங்கியது. அந்த நெருக்கம், சோர்ந்திருந்த அத்தனை உயிரணுக்களையும் உயிர்ப்பித்து விட, உட்சுரப்பிகள் அவனுக்குள் வேகமாக இயங்கத் தொடங்கின. விளைவு, இரத்தம் பயங்கரமாக அவனுக்குள் ஓடத் தொடங்கியது. காமம் சட்டென்ற விழித்தது. விழிகளோ, நெருக்கமாய் நின்றிருந்தவளின் வாசனைத் தேகத்தை அளவிட முடிந்தது. உடல் மறைத்த ஆடையிலும், அவளுடைய எழில் அழகைக் கண்டு பித்தம் கொண்டவனாக அவன் எச்சில் கூட்டி விழுங்க,
“நான் கொடுக்கிறேனே…” கெஞ்சிப் பழக்கமில்லாதவள், கொஞ்சமாய் கெஞ்ச, அவள் குரலில் சுயநினைவுக்கு வந்தான் ஆதியதுலன்.
அதற்கு மேல் அங்கிருந்தால், முட்டாள்தனமாக எதையாவது செய்து தொலைத்து விடுவோமோ என்று அஞ்சியவனாகச் சட்டென்று குழந்தையைத் தூக்கி அவளிடம் நீட்ட, அவன் உடலில் கரங்கள் தீண்டுவதைக் கூட அவதானிக்காது, அவனுடைய கையோடு சேர்த்துக் குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள் நேயநறுமை.
ஒரு காலத்தில், ஒரு குழந்தைக்காக இப்படிப் பைத்தியமாக மாறுவாள் என்று யாராவது சொல்லியிருந்தால், சத்தியமாகச் சிரித்திருப்பாள்.
இவனோ குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டுக் கரங்களை விலக்காது அவளையே பார்த்திருந்தான். அதுவும் அவளுடைய அணைப்பில் சிக்கியிருந்த கரம், அவளுடைய மென் தேகத்தைத் தொட்டு நிற்க, அந்த மென்மையை உணர்ந்து கொண்டவனுக்குத் தன் கரத்தை இழுத்தெடுக்கத் தோன்றவேயில்லை.
கொஞ்சம் விட்டால் நிச்சயமாகப் பைத்தியமாவான் என்கிற நிலையில் தவித்து நிற்க, இவளோ அவன் கரத்தையும் சேர்த்து அணைத்திருக்கிறோம் என்கிற எண்ணமேயில்லாமல், குழந்தையை இழுத்து எடுத்தவாறு அமர்வதற்கு இடம் தேட, அவளிடம் சிக்கியிருந்த கரத்தை அவசரமாக இழுத்து எடுத்தவன், தன் இடத்தை அவளுக்கு விட்டுக் கொடுத்து விலக, அவனிருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டாள் நேயநறுமை. அவன் அமர்ந்திருந்ததால், பரவியிருந்த இதமான சூடு அவளையும் அணைத்துக் கொள்ள, குழந்தையை மடியில் வைத்தவாறு, மிச்ச சொச்ச உணவை அதற்குப் புகட்டிவிட்டாள்.
கடைசியாகக் குழந்தையின் கிண்ணம் வெறுமையானதும், பெரும் சாகசம் செய்துவிட்ட உணர்வில் முகம் மலர்ந்து போனது.
தன்னையே பாராட்டியவள், குழந்தையோடு பெருமையாக எழுந்த போதுதான், அரைவாசி உணவைக் குழந்தை சாப்பிடவில்லை, அது அணிந்திருந்த ஆடையும், தான் அணிந்திருந்த ஆடையும் சாப்பிட்டிருப்பதைக் கண்டாள்.
இதுவரைக்கும் குழந்தைக்கு அவள் உணவு ஊட்டியதில்லை. இதுதான் முதன் முறை. இவள் குழந்தையை வைத்திருந்தாலும், உணவு ஊட்டுவது வேலையாட்கள்தான். இல்லையென்றால் ஆதியதுலன். முதன் முறை என்பதால் பழக்கமில்லாமல் அசையும் குழந்தைக்குச் சரியாக ஊட்டத் தெரியாமல் எல்லா இடங்களிலும் பூசிவைத்திருந்தாள் நேயநறுமை.
அவன் எத்தனை அழகாக உணவை ஊட்டினான். அப்போது ஒரு துளி கூடக் குழந்தையின் உடையில் சிந்தவில்லையே. தன்னையே கடிந்தவள், யாராவது தான் செய்த முட்டாள்தனத்தைப் பார்க்கிறார்களா என்று அங்கும் இங்கும் பார்த்தாள். நல்லவேளை யாருமில்லை. நிம்மதி கொண்டவளாக, குழந்தையை ஏந்திக்கொண்டு அதன் அறைக்குள் நுழைய, உள்ளே மறைவாய் நின்றிருந்த ஆதியதுலனின் உதட்டில் மெல்லிய புன்னகை.
குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு, அவள் கண்ணுக்குப் படாத இடத்தில் மறைவாக நின்றவாறு அவள் குழந்தைக்கு உணவூட்டும் அழகைத்தான் இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கடைசியாக அவள் உணவைக் குழந்தைக்கு ஊட்டாமல் நாலாபக்கமும் சிந்திவைப்பதையும், அதைக் கண்டு கொண்டு அசடு வழிவதும், யாராவது தன் முட்டாள் தனத்தைப் பார்க்கிறார்களா என்று அங்கும் இங்கும் பார்த்தவாறு நழுவிச் செல்வதையும் கண்டவனுக்கு சிரிப்பு தடையின்றி வெளி வந்திருந்தது.
தன்னை மறந்து ‘சிலி கேர்ள்..’ முனங்கியவன், அங்கிருந்து வெளியேற, நேயநறுமை, தன் அறைக்குள் நுழைந்து குழந்தையின் அழுக்கான ஆடைகளைக் களைந்து அதைத் துவைக்கும் கூடையில் போட்டாள். குழந்தையைக் குளிப்பாட்டி, துவைத்த ஆடைகளை அணிவித்து, சிரித்த குழந்தையை அள்ளி அணைத்து இஷ்டம் போல முத்தம் கொடுத்தவாறு வெளியே வந்தாள் நேயநறுமை.
அங்கே தயாராக நின்றிருந்த ஆதியதுலனைக் கண்டதும் தன் புன்னகையைத் தொலைக்க, அவனுடைய பார்வையோ அழுக்காகியிருந்த அவளுடைய ஆடையில் நிலைத்தது.
சங்கடம் கொண்டவளாக,
“அது… உணவூட்டும் போது… கொஞ்சமாய்… என் ஆடையில் சிந்திவிட்டது…” அவள் தடுமாற, அவனுடைய புருவங்கள் மேலெழுந்து பின் தன்நிலைக்கு வந்தன.
“எது…? கொஞ்சமாக…” அவன் கிண்டலாகக் கேட்க, அசடு வழிந்தவள்,
“அது வந்து… நான்… முதன் முறையாக…” சொல்ல முடியாமல் தவிக்க, இப்போது வெளிப்படையாகவே சிரித்தவாறு அவள் கரத்திலிருந்த குழந்தையைத் தன் கரத்திற்கு வாங்கிக்கொண்டவன்,
“போ… போய் ஆடையை மாற்று…” என்றான் மென்மையாக.
அவன் தனக்கு எதுவும் தெரியாது என்று குறையாக நினைப்பானோ? தயக்கமும் சங்கடமும் எழ, அவசரமாகக் குழந்தையை அவனிடம் ஒப்படைத்து விட்டு அறைக்குள் நுழைந்த நேயநறுமைக்கு ஏனோ மூச்சு பெரிதாக வாங்கிக் கொண்டது.
ஐயோ… இப்போது ஏன் மூச்சு வாங்குகிறது? குழம்பியவள், மார்பில் கை வைத்துத் தன் பதட்டத்தைக் குறைக்க முயன்றாள். ஆனால் எங்கே…! அவன் பக்கத்திலிருந்தால் தானாக இந்தப் பதட்டமும், தடுமாற்றமும் வந்துவிடுகிறதே.
சற்று நேரம் பெரிய மூச்சுகளாக எடுத்துத் தன்னை நிலைப்படுத்தியவள், நடந்து சென்று தன் ஆடைகள் அடங்கிய பெட்டியைத் தூக்கிக் கட்டிலில் வைத்துத் திறந்தாள்.
பெட்டியிலிருந்து தேவையான ஆடைகளை எடுக்கும்போதுதான் அவளுக்குத் தான் கனடா போகவேண்டியதன் அவசியம் புரிந்தது.
அவள் ஒரு மாதம் தங்குவதற்கு ஏதுவாகத்தான் ஆடைகளை எடுத்து வந்தாள். இனி நிரந்தரமாக ஈழத்தில் தங்குவதாக இருந்தால், அவளுடைய பொருட்கள் அனைத்தையும் எடுத்து வரவேண்டும். கூடவே வங்கியிலிருக்கும் அவளுடைய கணக்கை முடிக்கவேண்டும். அதை இங்கேயிருந்து செய்ய முடியாது. அது மட்டுமின்றி, தாய் தந்தை வாழ்ந்த வீட்டைப் போய் பார்க்க வேண்டும். அதற்கு ஒரு வழி செய்யவேண்டும்… அதை நினைக்கும் போதே நெஞ்சம் கசங்கியது. எது எப்படியாக இருந்தாலும், அவள் கனடா போய்வர வேண்டியது அவசியமே. யோசித்தவள், தன் கைப்பேசியை எடுத்து, கனடா போவதற்கு விமானச் சீட்டு ஏதாவது உடனே கிடைக்குமா என்று பார்த்தாள். தற்போதைக்கு எந்த சீட்டும் கிடைக்கவில்லை. எரிச்சலோடு வேறு வழியில் தேட முயல, அறைக் கதவு திறந்தது. நிமிர்ந்து பார்க்க, பாஸ்கரன்தான் அவளைத் தேடி வந்தார். அவருடைய கையில் தேநீர் குவளை இருந்தது.
“நீ எழுந்துவிட்டதாக ஆதி சொன்னான். அதுதான் தேநீர் எடுத்து வந்தேன்… குடி…” என்றவர், அதை மேசையில் வைத்துவிட்டு, கட்டிலிலிருந்த அவளுடைய பெட்டியைக் கண்டு வியந்து,
“என்னம்மா… உன் ஆடைகளை இன்னும் பெட்டியில்தான் வைத்திருக்கிறாயா?” கேட்க, மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தியவள்,
“ம்… இவற்றை அடுக்க இடம் பார்க்க வேண்டும்…” என்றாள் தயக்கத்தோடு.
“ப்ச்… இதற்கெல்லாமா அனுமதி கேட்டு நிற்பார்கள்?” என்றவர் விரைந்து சென்று ஆதியதுலனின் ஆடைகள் இருந்த அலமாரியின் ஒரு பக்கத்தைத் திறந்து,
“இங்கே உன் ஆடைகளை வைமா…” என்றார் அன்பாக.
“சரி மாமா.. பிறகு அடுக்கி வைக்கிறேன்…” என்றவள், தயக்கத்தோடு பாஸ்கரனைப் பார்த்தாள்.
“மாமா…”
“சொல்லுமா…”
“நான்… கனடா போகவேண்டும்…” அவள் சொல்ல, புருவங்கள் சுருங்க அவளைப் பார்த்தார் பாஸ்கரன். அவள் சொன்னதும் ஒரு கணம் நெஞ்சம் திக்கென்றானது நிஜம். பழைய குருடி கதவைத் திறவடி கணக்காக, திரும்ப ஊருக்குப் போகிறேன் என்று சொல்லிவிடுவாளோ என்கிற அச்சம் அவரைப் பயமுறுத்த, அவசரமாக உமிழ்நீர் கூட்டி விழுங்கியவர்,
“அ… அப்படியாமா… அது… வந்து நீ… இதைப் பற்றி ஆதியுடனே பேசிக்கொள்ளேன்…” என்றவர் அவசரமாக அங்கிருந்து நழுவிவிட, இவளோ குழப்பத்துடன் அவர் சென்ற திசையையே வெறித்தாள்.
இப்போது எதற்கு இந்த ஓட்டம் ஓடுகிறார். நான் கனடா போகிறேன் என்றுதானே சொன்னேன்? குழம்பியவளின் பார்வை அவர் எடுத்து வந்து கொடுத்த தேநீர் குவளையில் நிலைத்தது.
என்னதான் வேலையாட்கள் இருந்தாலும், அதிகாலையில் அவர்தான் தேநீர் வார்த்து ஆதியதுலனுக்கும், நேரிழைக்கும் கொடுப்பார் என்று அம்பிகா சொல்லிக் கேட்டிருக்கிறாள். பெண் இல்லாத வீடு என்பதால், பாஸ்கரன்தான் அவனுக்குத் தாய்க்குத் தாயாகத் தந்தைக்குத் தந்தையாக இருந்ததாகவும், நேரிழையைத் தான் பெற்ற மகளாகப் பார்த்துக்கொள்வதாகவும், தாய் பூரிப்புடன் சொன்னபோது பல முறை வலியில் கசங்கியிருக்கிறாள். அந்த அன்பெல்லாம் தனக்கு வரவேண்டியது என்று பொறுமியிருக்கிறாள். இன்று, அவள் ஆசைப்பட்டது போல அவருடைய அன்பு கிடைத்திருக்கிறதுதான். ஆனால்… அதை முற்றாக அனுபவிக்க முடியாமல், தங்கையின் இழப்பு அவளை வதைக்கிறது.
அவளையும் மீறிக் கண்ணீர் கோர்த்துக் கொள்ள முயல, பற்களைக் கடித்து அந்த வலியை விழுங்கியவள், வேகமாகக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
(16) என்னதான் நடந்தாலும் ஊருக்குப் போவது என்கிற முடிவில் அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கிய நேயநறுமையின் முடிவையும் ஆட்டம் காண வைத்தாள் மகிழினி. ஆம், மறு நாள் நேயநறுமை எழுந்து மகிழினியைத் தேட, அவளைக் காணோம். பதறியவளாக…
-14- “மரி மீ...” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது. பின்…
13- எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று…
12- இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது. ‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி…
-11- அதே நேரம் வெளியே வந்த ஆதியதுலனின் முகம் இறுகிப்போயிருந்தது. நேராக நடந்து சென்றவன், தோட்டத்திற்கு வந்து நின்றான். ஏனோ…
-9- சூரிய வெளிச்சம், அந்த அறையை நிரப்ப, மெதுவாக விழிகளைத் திறக்க முயன்ற ஆதியாதுலனுக்கு தன் கைவளைவுக்குள் ஒரு பூம்பந்து…