Mon. Sep 16th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-5

5

 

காலங்கள் பறப்பதற்குப் பறவையிடம்தான் கற்றுக்கொண்டனவோ? இரண்டு வருடங்கள் எப்படிக் கடந்து சென்றது என்று கேட்டால் அதற்குப் பதில் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் சமர்த்திப் பல்கலைக் கழகத்தை முடித்துக்கொண்டு பிரைட்டன் பத்திரிகையிலேயே முழுநேர நிருபராகப் பணியாற்றத் தொடங்கினாள்.

அப்படியிருக்கையில் இவளுக்குத் திருமணத்திற்கு வரன் வந்திருப்பதாகத் தயாளன் வந்து கூற, இப்போதே திருமணமா என்று சற்றுத் தயங்கினாள் சமர்த்தி.

“காலாகாலத்திற்குச் செய்ய வேண்டியவற்றையும் செய்துவிட வேண்டுமே… அதுதான்… நல்ல சம்பந்தமாக வந்திருக்கிறது. அதைக் கைகழுவுவது அத்தனை புத்திசாலித்தனமில்லை சத்தி…” என்று கடமை தவறாத அண்ணனாகக் கூற இவள்தான் குழம்பிப் போனாள்.

திருமணமா… அதற்குள்ளாகவா? இப்போது தானே இருபத்திரண்டு நடக்கிறது. பல்கலைக் கழகம் முடித்து இப்போதுதான் வேலையில் அமர்ந்திருக்கிறாள். அதற்குள் குடும்பப் பாரத்தைச் சுமக்கவேண்டுமா? தயக்கத்துடன் அண்ணனைப் பார்த்து,

“ஆனால்… அண்ணா… இப்போதுதானே வாழவே கற்றுக்கொள்கிறேன்… அதற்குள் ஒரு சுமை தேவையா என்ன…” என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தவர்,

“இந்த வயதில் சுமையைத் தூக்க அஞ்சினால் காலம் செல்லச் செல்ல அந்த அச்சம் அதிகரிக்குமே அன்றிக் குறையாது சத்தி. ஐந்தில் வளையாதது ஐம்பதிலா வளையப் போகிறது…? அந்த அந்த நேரத்தில் செய்வது சுமையென்று எண்ணித் தள்ளிப்போட்டால், பின்னால் வரும் சுமையைச் சுமப்பது மிகக் கடினம் தங்கம்… தவிர மூத்தவள் உனக்கு ஒரு நல்ல வரன் கிடைத்தால்தானே, விதற்பரைக்கும் நல்லதாக அமையும்…” என்று கனிவோடு கூறியவரிடம் இவளால் மறுக்கவும் முடியவில்லை.

எத்தனை சிக்கல்கள் வந்தபோதும் அவளைக் கைவிடாதவர். தன் முதல் குழந்தைபோல பொத்திப் பொத்திப் பாதுகாத்தவர். இதுவரை தாய் தந்தை இல்லையே என்கிற வலியை உணர வைக்காதவர். அவளுடைய ஒவ்வொரு அடியையும் சரியான பாதையில் எடுத்து வைக்க உறுதுணையாக இருப்பவர். இதுவரை அவளிடம் எதையுமே வேண்டிக் கேட்காதவர். முதன் முறையாக அவளிடம் வேண்டி நிற்க, இவளாலும் மறுக்க முடியவில்லை. தன்னையும் மீறித் தலையைச் சம்மதம் போல அசைத்தவள்,

“சரி அண்ணா…! என் திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றால், உங்கள் விருப்பத்திற்குச் சம்மதிக்கிறேன்.” என்று உறுதியாகக் கூற, தயாளன் கண் கலங்கிவிட்டார். அவளை நெருங்கி, அவள் முகத்தில் தன் கரங்களைப் பதித்து,

“என் மீது அந்தளவு நம்பிக்கை இருக்கிறதா தங்கம்…?” என்றார்.

“என்னண்ணா இது…? உங்களை நம்பவில்லை என்றால் நான் வேறு யாரை நம்புவேன் சொல்லுங்கள்…?” என்று கடிந்துவிட்டு,

“நீங்கள் எவனைக் கை காட்டுகிறீர்களோ, அவனுடைய முகத்தைப் பார்க்காமலே திருமணம் முடிக்கிறேன்… போதுமா…” என்று முடிக்கவில்லை,

“என்னது… மாப்பிள்ளையைப் பார்க்காமலேயே திருமணம் முடிக்கச் சம்மதிப்பாயா…? உனக்கென்ன பைத்தியமா…? அவனோடு வாழப் போபவள் நீ. அவன் நல்லவனா கெட்டவனா, மனசுக்குப் பிடித்தவனா என்று பார்க்கவேண்டாமா…? தயா, இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!” என்று சற்றுக் கோபத்தோடு கூறியவாறு, சமையலறையிலிருந்து வெளியே வந்த புஷ்பா, சமர்த்தியிடம் தன் கரத்தில் இருந்த தேநீர் கோப்பையை நீட்ட, அதற்காகச் சப்புக்கொட்டியவாறு அண்ணியை நெருங்கிக் குவளையை கிட்டத்தட்டப் பறித்து ஒரு உறுஞ்சு உறிஞ்சிச் சுவைத்தவாறு, “ஹா…” என்கிற பெரிய ஓசை ஒன்றை எழுப்பி, குதூகலத்தில் அவரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு,

“இந்தத் தேநீர் குடிப்பதற்காகவே திருமணம் முடிக்காமல் உங்கள் கூடவே இருந்துவிடுவேன் தெரியுமா…?” என்றாள் ஆசையா.

“அடிப் பாவி… நீ திருமணம் முடிக்கவில்லை என்றால் எங்கள் நிலை என்னாவது? உன்னைத் துரத்தினால்தானே என் பாதை சுத்தமாகும். நீ என்னவென்றால்… உன்னோடு சேர்ந்து என்னையும் சாமியாரினியாக்கப் பார்க்கிறாயே…!” என்றவாறு வந்தாள் அப்போதுதான் இருபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த விதற்பரை.

வந்தவள் சமர்த்தியின் கரத்திலிருந்த தேநீர் குவளையைக் கண்டு, விழிகள் மின்ன அவள் கரத்தைப் பற்றித் தன் உதட்டுக்கு இழுத்து, அவள் தேநீரின் ஒரு பகுதியைத் விழுங்கிவிட்டு,

“அம்மா… எனக்கொரு தேநீர் ப்ளீஸ்…!” என்றவாறு தந்தையின் தோள் சாய, சமர்த்தியோ, தன் கரத்தில் குறைந்திருந்த பாணத்தைக் கண்டு ஆத்திரத்துடன் நிமிர்ந்து தங்கையானவளைப் பார்த்து முறைத்தாள்.

“அண்ணி… என் தேநீர் முழுவதையும் குடித்து விட்டாள் அண்ணி…” என்று அலற, தன் தோளில் சாய்ந்திருந்த மகளை அணைத்துக் கொண்ட தயாளன்,

“எதற்கு அவளுடையதைப் பறித்துக் குடித்தாய்… வேண்டுமானால் வார்த்துக் குடிக்கவேண்டியது தானே…” என்று கடிந்தார்.

சமர்த்தியோ எஞ்சிய தேநீரைக் ஒரு மிடற்றில் குடித்துவிட்டு,

“அண்ணா… பேசாமல் இவளுக்கும் ஒரு மாப்பிள்ளையைப் பாருங்கள்… அப்போதாவது வீட்டு வேலை செய்கிறாளா பார்க்கலாம்…” எனக் கிண்டலுடன் கூற, இவளோ, தன் முகத்தைக் கோணலாக்கியவாறு,

“ஐயே..! இந்த ஆண்களோடு எவள் வாழுவாள்.. ம்கூம்… எனக்கு வேண்டாம்பா…” என்று தோளைக் குலுக்க அதைக் கேட்டு சிரித்தாள் சமர்த்தி. பெரும் கிண்டலுடன் விதற்பரையைப் பார்த்து,

“அவளா நீயி…” என்று குறிப்புக் கொடுக்க, அதைக் கேட்டதும் வாயைப் பிளந்த விதற்பரை,

“ஏய்… உன்னை…” என்றவாறு சமர்த்தியை நோக்கிப் பாய, அவளிடமிருந்து தப்புவதற்காகத் தன் அண்ணியை நோக்கி ஓடியவள், அவர் பின்னால் மறைந்து நின்றவாறு,

“பின்னே… ஆண்களைப் பிடிக்கவில்லை என்றால் அப்படித்தான் சொல்வார்கள்…” என்றாள் கிண்டலாக.

புஷ்பாவும் அதைக் கேட்டு நகைத்தவாறு,

“அவளை ஏன்டி துரத்துகிறாய்… அவள் கேட்டதில் என்ன தவறு, ஆம்பளைகளைப் பிடிக்கவில்லை என்றால், மற்றது போலத்தான் யோசிப்பார்கள்… அதுவும் இந்த நாட்டில் முடிவே செய்துவிடுவார்கள் தெரியுமா…” என்று தன் நாத்தனாருக்காக வக்காலத்து வாங்க, அதைக் கேட்டதும் காலைத் தரையில் உதைத்தவள்,

“எப்போதும் அவள் பக்கம் நின்று மட்டும் தான் பேசுவீர்கள்… எனக்காகப் பேசமாட்டீர்கள். பாருங்கள் அப்பா அம்மாவை…” என்று தந்தையிடம் முறைப்பாடு வைக்கத் தந்தையோ,

“என்ன புஷ் நீ…? குழந்தையிடம் போய் இப்படி பேசலாமா? நீ கவலைப்படாதே தங்கம், அதுதான் அப்பா இருக்கிறேன் அல்லவா… ஆமாம்… உன்னுடைய புதுப் பெண் தோழியின் பெயர் என்ன…” என்று கிண்டலாய்க் காலை வார, இவளோ தந்தையைப் பார்த்து முறைத்தாள்.

“ர்ர்ர்… ஐயோ…! பைத்தியக்காரக் குடும்பத்திற்கு மகளாக வாழ்க்கைப்பட்டு நான் படும் அவஸ்தை இருக்கிறதே… ஐயையையையோ… மாரியாத்தா… என்னைக் காத்துக்கொள்..” என்று தரையில் அமர்ந்த ஒப்பாரி வைக்க. அதைக் கண்டு மூவரும் சிரிக்க அந்த இடமே கலகலப்பானது.

“சரி சரி… ஜோக் அபார்ட்… நீ சொல்லு தங்கம்… பையனைப் பார்க்க ஏற்பாடு செய்யவா?” என்ற தயாளனிடம்,

“அதெல்லாம் தேவையில்லை அண்ணா… உங்களுக்குப் பிடித்தால் போதும்…?” என்றவளைத் தரையில் அமர்ந்தவாறே அண்ணாந்து பார்த்து முறைத்த விதற்பரை,

“ஏய்… லூசா நீ… மாப்பிள்ளையைப் பார்க்காமல் எப்படித் திருமணத்திற்குச் சம்மதிப்பாய். அதெல்லாம் முடியாது. முதலில் மாப்பிள்ளையை நான்தான் பார்க்கவேண்டும். எனக்குப் பிடித்தால் தான் சத்தி அவனைப் பார்க்கலாம்” என்று திட்டவட்டமாகக் கூற,

“அப்படியே செய்யலாம் என் மருமகளே! அண்ணி! முதல் விது பார்க்கட்டும். அவளுக்குப் பிடித்திருந்தால், எனக்கும் ஓகேதான…” என்று முடிக்கவில்லை, தன் மகளையும், நாத்தனாரையும் பார்த்து முறைத்தார் புஷ்பா.

“அவள்தான் சின்னப்பிள்ளை, பைத்தியம் போல ஏதோ உளறுகிறாள்.. நீயுமா சத்தி… திருமணம் உனக்கா அவளுக்கா…” என்றவர், திரும்பிக் கணவரைப் பார்த்து,

“விரைவாகச் சத்தி சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் தயா… அவளுக்குப் பிடித்தால்தான் மிச்சம்…” என்று உறுதியாகக் கூற, தயாளனும் அதற்கு உடனே சரி என்றார்.

மூன்று நாட்களின் பின், அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை சித்தார்த்தைச் சந்திக்க, உணவகம் ஒன்றிக்குச் சென்றிருந்தாள் சமர்த்தி.

ஏற்கெனவே அவளுக்காகக் காத்திருந்த சித்தார்த் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். கொஞ்சம் நடிகர் கரனை நினைவு படுத்தினான். அவளை விட ஒரு இரண்டு அங்குலங்கள் உயரமாக இருந்தான். ஏதேதோ பேசினான். அவன் பேச்சில் அதிகம் அடிபட்டது அவனுடைய வேலை, தொழில் பணம் சம்பாத்தியம் இத்யாதி இவையே. அதைத் தவிரச் சுவாரசியமாக அவன் வாயிலிருந்து எதுவும் வரவில்லை. ஒரு கட்டத்தில் இவளுக்கே சற்று அலுப்புத் தட்டத் தொடங்கியிருந்தது.

ஆரம்பத்தில் அவன் பேசும்போது இவ்வளவு சம்பாதிக்கிறானா? அப்படியானால், கடன் வட்டி என்று யோசிக்காது இலகுவாக வாழ்க்கை பயணிக்கும்.. இயந்திரத்தனமாக வேலை வீடு குழந்தை என்று சிரமப்படவேண்டியதில்லை. அளவாக இரண்டு குழந்தைகள். அக்காடா என்று வீட்டிலிருந்து சுகமாகவே வாழ்க்கையை ஓட்டிவிடலாம். தேவைப்பட்டால் வேலையில் அவனுக்குக் கொஞ்சமாக உதவலாம். மற்றும்படி எந்த அழுத்தமும் இல்லாது வாழ்க்கை நகர்ந்துவிடும். அப்படித்தான் நினைத்தாள். ஆனால் போகப் போக அதையே பெருமையாகப் பேச இவளுக்குச் சலிப்பு ஏற்படத் தொடங்கியது. கூடவே இவள் வாயசைக்கவேண்டிய சிரமத்தையே அவன் கொடுக்கவில்லை. இவளுக்கும் சேர்த்து அவனே பேசினான்.

ம்… வீட்டிற்கு வானொலி கூடத் தேவையில்லை. இவனைப் பேசவிட்டே பொழுதை ஓட்டலாம். என்ன ஒன்றையே திரும்பத் திரும்பப் பேசுவதால் சற்று எரிச்சல் வரும்.. அதுவும் போகப் போகப் பழகிவிடும். முடிவு செய்தவளாக அவன் பேசியவற்றை ஒரு காதால் வாங்கி மறு காதால் வெளியேற்றியவாறு பராக்குப் பார்த்துக்கொண்டிருக்கத் திடீர் என்று யாரோ பின்னால் நின்றவாறு இவளையே உற்றுப் பார்ப்பதுபோலத் தோன்றியது.

அந்த உணர்வு தோன்றியதும் இவளுடைய இதயம் படு வேகமாகத் துடிக்கத் தொடங்க, தன்னை மறந்து திரும்பிப் பார்த்தாள். எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்க,

“ஏதாவது பிரச்சனையா?” என்று ஆங்கிலத்தில் கேட்டவாறு அவள் பார்த்த திசைக்குத் தானும் பார்த்தான் சித்தார்த். உடனே சமாளித்தவள்,

“ஒ… ஒன்றுமில்லை… யாரோ தெரிந்தவர் போலத் தோன்றியது… சரி நீங்கள் சொல்லுங்கள்… அப்புறம்…” என்று ஏதோ ஆர்வமாகக் கேட்பது போலப் பாசாங்கு செய்ய, அவனும் குதுகலமாகவே விட்டதைத் தொட்டதைப் பேசத் தொடங்கினான்.

ஒரு கட்டத்தில். பேசி முடித்தது போதும் என்று அவன் நினைத்தானோ,

“சோ.. உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா சமர்த்தி?” என்று கேட்டான்.

அவளோ சற்றுத் தள்ளி யாரோ உண்டு கொண்டிருந்த உணவு வகையறா என்ன வகை என்று நாவில் நீர் ஊறப் பெரும் ஆராய்ச்சியில் இருந்தாள்.

இரண்டு முறை அழைத்தும் இவள் கவனம் உணவு வகைகளிடம் இருக்க, அவளை நோக்கிக் குனிந்து அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்தி,

“சமர்த்தி… உன்னைத்தான்…” என்றான்.

திடுக்கிட்டு இவனைப் பார்த்தவள், சற்று அசடு வழிந்துவிட்டு, அதைச் சமாளிக்கும் முகமாக,

“அப்படியா… பிறகு என்ன நடந்தது?” என்றாள்.

அவன் பேச்சு சுத்தமாக மூளைக்கு இறங்க வில்லை. ஆனாலும் காட்ட முடியாதே. உதடுகளைப் பிளந்து ஈ என்று பற்களைக் காட்ட, குழம்பினான் அவன்.

“நான் பேசி முடிந்து அரை மணி நேரமாகி விட்டது சமர்த்தி… இப்போது நான் கேட்டது உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்று…!” என்றவனின் முகத்தில் மெல்லிய கோபம்.

“ஹீ… ஹீ… அதைத்தான் நானும் கேட்டேன்… நீங்கள்… என்ன நினைக்கிறீர்கள்… அப்படி என்று தான் கேட்க வந்தேன்… ஆனால்… வாய் தடுமாறி… ஹீ… ஹீ…” என்று பெரிதாக அசடு வழிய, அவனுடைய முகம் மலர்ந்தது.

“எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது சமர்த்தி.. ஆனால், உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரிந்தால் அடுத்த கட்டத்திற்கு நகரலாம்…” என்றான் ஆவலாய்.

முதலில் என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல் திருத் திரு என்று விழித்தவள், எப்படியோ சமாளித்து,

“வீட்டிற்குப் போய் என் முடிவை அண்ணன் அண்ணியிடம் சொல்லவா?” என்றாள்.

“நோ ப்ராப்ளம் சமர்த்தி…” என்றவன் தன் கரத்தை நீட்ட, அந்தக் கரத்தில் தன் கரத்தைப் பதிக்க, இறுகப் பற்றி ஒரு குலுக்குக் குலுக்கி விடுவித்தவன்,

“கான் ஐ ட்ராப் யு…” என்றான். உடனே மறுத்தவள்,

“ஓ… நோ… தாங்க் யு… எனக்கு வெளியே சின்ன வேலை இருக்கிறது… முடித்துவிட்டுத்தான் போகவேண்டும்… தவிர என் வாகனத்தில்தான் வந்தேன்…. அதனால் நீங்கள் கிளம்புங்கள்…” என்று அவனை அனுப்பிவிட்டுப் பெருமூச்சுடன் மீண்டும் இருக்கையில் அமர்ந்தவளுக்கு என்ன முடிவை எடுப்பதென்று தெரியவில்லை. குழப்பம் ஏற்பட இருக்கையில் தலையைச் சரித்தவாறு விழிகளை மூடிக் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தாள்.

அந்தச் சித்தார்த்தை நினைக்கும் போது உள்ளத்திலே எந்தப் பட்டாம் பூச்சிகளும் சுற்ற வில்லை. படபடக்கவில்லை. கரத்தைப் பற்றியபோது கூட எதுவும் தோன்றவில்லையே. ஒரு வேளை எல்லோருக்கும் ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்குமோ? எனோ வேளை கெட்ட நேரத்தில் அவளையும் அறியாமல் உத்தியுக்தன் மனதில் வந்து நின்றான்.

அன்று அவளுடைய கைத்தலம் பற்றியபோது இவள் உடலில்தான் எத்தனை இரசாயன மாற்றம். எத்தனை பெரிய படபடப்பு. ஆனால் இவனிடம் ஒரு துளி கூட அப்படித் தோன்றவில்லையே…? ஏன்…? புரியாத புதிருக்கு விடை கண்டு பிடிக்க முடியாமல் புருவ முடிச்சை அழுத்திக் கொடுத்தவளுக்குப் பசித்தது.

பசி வந்தால் பத்தும் பறக்குமே. அது சமர்த்திக்குச் சாலப் பொருந்தும். உடனே வேண்டிய உணவைத் தருவித்துச் சாப்பிடத் தொடங்க, மீண்டும் உள்ளே ஒரு வித குறுகுறுப்பு.

சட்டென்ற இதயத்தின் வேகம் அதிகரித்தது. யாரோ உற்றுப் பார்ப்பதுபோலத் தோன்றச் சடார் என்று தலையை நிமிர்த்திச் சுத்தவரப் பார்த்தாள். இப்போதும் சந்தேகப்படும்படி யாரும் தென்பட வில்லை. ஆனாலும் யாரோ தன்னைக் கவனிப்பது போன்ற உணர்வு மட்டும் மட்டுப்படவில்லை.

சரிதான், ஏதோ மனப் பிராந்தி… என்று எண்ணியவள் உண்டு முடித்துவிட்டு எழுந்து கை கழுவிவிட்டு வெளியே வந்தாள்.

அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டிற்குப் போனால் முடிவைக் கேட்பார்கள். என்ன முடிவைச் சொல்வதென்று தெரியவில்லை.

எது எப்படியாக இருந்தாலும், ஏதாவது ஒரு கழுதையைக் கட்டிதானே ஆகவேண்டும். இப்போது வந்து பார்த்துவிட்டுப் போன மாப்பிள்ளையை மறுக்கவும் ஒன்றுமில்லை. சம்மதத்தைச் சொல்லி விடவேண்டியதுதான். முடிவு செய்தவளாகத் தன் வாகனம் நோக்கி நடந்தபோதுதான் அது நடந்தது.

வாகனத்தை நெருங்குவதற்குள்ளாக அவளுக்கு முன்பாக ஒரு வாகனம் வந்து நிற்க என்ன ஏது என்பதை அவள் உணர்ந்து கொள்வதற்கு முன்பாக அந்த வாகனத்தின் கதவு திறக்கப்பட்ட, மறு கணம் அவள் உள்ளே இழுக்கப்பட்டாள்.

அவள் சுதாரிப்பதற்குள் அந்த வாகனத்திற்குள் பலமாக இழுக்கப்பட்டாள்.

நெஞ்சம் பதற, உடலில் உள்ள இரத்தம் வடிந்து செல்ல, கடத்தியவன் யார் என்று பார்ப்பதற்குள்ளாக முகத்தில் எதுவோ அழுத்தப்பட மறு கணம் சுயநினைவிழந்தவாறே மருந்தை அழுத்தியவன்மீது சரிய, அவனோ அவளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு அணைத்தவாறு,

“வண்டியை எடு…” என்றான் உத்தரவாய்.

 

What’s your Reaction?
+1
20
+1
8
+1
4
+1
3
+1
1
+1
2

Related Post

10 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-5”
  1. அருமையான பதிவு 😍😍😍😍.
    ஸ்ஸ்ஸ்ப்பஆ பெருமை பீத்தல் தாங்கமுடியலையே.பேரு சித்தார்த் தாம். ஆனா பேசுனதுக்கு அப்பறந்தான் தெரியுது சொத்தை தார்த்துன்னு🤪🤪🤪🤪🤪
    டேய் எவன்டா அது காருல வந்து கடத்திகிட்டு போறது😬😬😬😬😬 .
    🙄🙄🙄🙄ஒரு வேளை அவனா இருப்பானோ?
    என்ன சத்து யாரோ உத்துப் பாக்கறமாதிரி ஃபீல் ஆச்சு தானே அப்ப உசாரா இருக்கோணும் தானே. பாரு மயக்க மருந்து வச்சுட்டானுங்க மூக்குல.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  2. @Nirmala senthilkumar பங்கு என்னால மெசேஜ்ஜை பதிய முடியலை ப்பா.
    நாலு எபிக்கு ம் ரிஜக்ட்டு தான் வந்துச்சு.
    இந்த எபி தான் ஓகே ஆச்சு பங்கு.

    1. ஏன்பா? தெரியலையே. இருங்க செக் பண்ணி பாக்கிறேன். என்னாச்சு???

    2. வச்சு செய்வான் பாருங்க உங்க ஆளை. இவளுக்கும் மறக்காம முட்டு கொடுக்கணும் ஆத்தா. மறந்திராதீங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!