Thu. Sep 19th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா 27/28

(27)

 

சிவார்ப்பணாவிற்கு மெதுவாக விழிப்பு வரத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக விழித்தவளுக்கு, முதலில் எதுவும் புலப்படவில்லை. மயான அமைதி, இருட்டுடன் அந்த அறையை மூழ்கடித்துக்கொண்டிருந்தது.

 

சோர்வுடன் தன் உடம்பைத் திருப்பிச் சோம்பல் முறித்தவளுக்கு அப்போதுதான், முன் தினம் நடந்தது நினைவுக்கு வந்தது.

 

சரக் என்று எழுந்தமர்ந்தவள் அச்சத்துடன் அந்த அறையை விழிகளால் துழாவிப் பார்த்தாள்.

 

வெளியே இருந்து வந்த வெளிச்சத்தில் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. அத்தோடு மழை இன்னும் விடவில்லை என்பதை மெல்லியதாகக் கேட்ட இடி ஓசையின் மூலம் உணர்ந்து கொண்டாள் சிவார்ப்பணா.

 

குரல் நடுங்க, த்… தீ…ரன்…” என்றாள் மெதுவாக. அந்தச் சத்தமே, ஏதோ கோவில் ஒலிபெருக்கியில் போட்ட பாடல் போல அவளுடைய காதுக்குள் பலமாகக் கேட்க, இவளுக்கு விழிகள் பிதுங்கின. மீண்டும் தைரியத்தைக் கூட்டி,

 

“தீ…ரர…ன்…” என்றாள்.

 

அவன் இருந்ததற்கான எந்த அறி குறியும் இருக்கவில்லை. ஒரு வேளை என்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டானோ… எங்கே சென்றிருப்பான்… அப்போ நான் என்ன செய்வது? எங்கே போவது? மீண்டும் என் வீட்டுக்குப் போகவேண்டுமா… ஐயோ… இந்த ஜென்மத்தில் அந்த வீட்டுப் பக்கம் தனியாகப் போக முடியுமா? இதயம் நின்று விடாது?’ தடுமாற்றத்துடன் எழுந்தவள், மீண்டும் அழைத்துப் பார்த்தாள்.

 

“தீரன்… எங்கே இரு…க்கிறீர்கள்…” என்றவளுக்குக் குரல் கமறியது… எங்கே உடைந்து அழத் தொடங்கிவிடுவோமோ என்று கூடப் பயமாக இருந்தது.

 

முதலில் அவள் எங்கே இருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லை. மருந்துக்கும் வெளிச்சமில்லை. இப்போது என்ன செய்வது? எதுவும் புரியாமல் மலைத்துப்போய் நின்றவள், அதற்கு மேல் முன்னேற முடியாமல், பயத்துடன் பின்னே பின்னே செல்ல, இறுதியில் ஒரு சுவரோடு முட்டி நின்றாள்.

 

அதற்கு மேல் அசையவும் பயந்தவளாகக் கூனிக் குறுகி அப்படியே தரையில் அமர்ந்தாள் சிவார்ப்பணா.

 

அச்சத்துடன் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்த போதே, அநபாயதீரன் முன் கதவைத் திறந்தவாறு உள்ளே வந்தான்.

 

அநபாயதீரன்தான் வருகிறான் என்பதை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு அவள் மூளை வேலை செய்யவில்லை.

 

மேலும் மேலும் அஞ்சியவளாக, யாரோ தன்னைத் தாக்க வருகிறார்கள் என்கிற உறுதியுடன், கத்துவதற்குக் கூட சக்தியில்லாதவளாக, உயிரைக் கையில் பிடித்தவாறு,

 

‘தீரன்… எங்கே இருக்கிறீர்கள்… ப்ளீஸ்… விரைந்து வாருங்கள்…’ என்று மனதிற்குள் மன்றாடத் தொடங்க, அவளுடைய அறைக் கதவு மெதுவாகத் திறந்தது.

 

இதோ சாகப்போகிறாள்… அவளை நோக்கித் துப்பாக்கி நீளப்போகிறது… ஒரே ஒரு தோட்டா… அவள் அகராதி தொலையப் போகிறது…’ என்று நிச்சயமாக எண்ணியவள், தன்னுடைய விழிகளை இறுக மூடியவாறு, தன் ஜாக்கட்டை அழுந்தப் பற்றி, எதிரியிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியாத சிறிய நாய்க் குட்டி போல, ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள் அவள்.

 

இருண்ட அறையைக் கூர்மையாக அளவிட்ட அநபாயதீரனின் விழிகளுக்குச் சுவர் ஓரமாக ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்த சிவார்ப்பணாவைக் கண்டதும், இவன் இரும்பு இதயம் முதன் முதலாக உருகிக் கரையத் தொடங்கியது.

 

“அர்ப்பணா.. ஆர் யு ஓக்கே…?” என்று பதட்டமாகக் கேட்டவாறு அவளை நெருங்கத் தொடங்க, ஏற்கெனவே அதீத பயத்தில், தன்னிலை கெட்டுப் புத்தி பேதலித்திருந்தவளுக்கு, அப்போது, அது தீரன்தான் என்பதை ஏற்கப் புத்தி மறுத்தது. புத்தி ஒழுங்காக வேலை செய்யும் நிலையிலா அவளுடைய சூழ்நிலை கடந்த சில நாட்களாக இருந்தன.

 

உடல் அளவில் அவள் சரியாக இருந்தாலும், உள்ளத்தின் அளவிலும், புத்தியின் அளவிலும், பெரிதும் குழம்பிப்போயிருந்தாள். புத்தி தனியாக இயங்க மாட்டாது தவித்துக்கொண்டிருந்தது. இந்த ஒரு கிழமையாக அவள் பட்ட சித்திரவதை நினைக்கும் போதே ஐம்புலன்களும் பதறின.

 

ரகுவின் மறைவு. இனம் தெரியாதவர்களின் மிரட்டல். துப்பாக்கிச் சூடு. அநபாயதீரனின் அருகாமை. சாவின் விளிம்புவரை சென்று வந்தது. எல்லாமே அவள் மனக்கண்ணில் ஓடிக்கொண்டேயிருந்ததால், அவளால், எதையும் தெளிவாகப் பேசவோ, யோசிக்கவோ முடியவில்லை.

 

அவளுடைய வெறித்த பார்வையை உணர்ந்து கொண்ட அநபாயதீரன், அவளுடைய நிலையை முற்று முழுதாக உணர்ந்து கொண்டவனாக, விரைந்து அவளை நெருங்கி, அவளுடைய தோள்களில் தன் கரங்களைப் போட்டு,

 

“அர்ப்பணா…” என்றான் மென்மையான குரலில்.

 

அதுவரை அச்சத்தில், எதையும் கருத்தில் கொள்ளாது, நடுங்கிக்கொண்டிருந்த சிவார்ப்பணா, பலம் முழுவதையும் கூட்டி அவனைத் தள்ளிவிட்டு, அமர்ந்த நிலையிலேயே மறுபக்கமாகச் செல்லத் தொடங்க, அவளுடைய அடிபட்ட பாவனையைக் கண்டவனுக்கு, அவளுடைய நிலை புரிய.

 

“ஷ்… ஷ்… இட்ஸ் ஓக்கே… இட்ஸ் ஓக்கே…” என்றவாறு மீண்டும் அவளை நோக்கிச் செல்ல, மீண்டும் யாரோ தன்னைத் தாக்கவருபவரிடமிருந்து தன்னைப் பாதுகாக்க முயலும், மிருகம் போல, அவள் சிலிர்த்துக் கொள்ள,

 

“கண்ணம்மா… இட்ஸ் மீ… தீரன்… எவ்ரிதிங் இஸ் அவர் கன்ட்ரோல்… டூ யு ஹியர்… மி… எல்லாமே நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது… ப்ளீஸ்… ஸ்டெடி யுவர் செல்ஃப்…” என்றவாறு அவளை நோக்கிச் சென்றான். அவளின் பயந்த பார்வை இன்னும் அப்படியே இருக்க,

 

“அர்ப்பணா… டேக் எ டீப் ப்ரீத்… யு வில் பி ஆல் ரைட்… டோன்ட் பானிக்… ஜெஸ்ட் டேக் எ டீப் ப்ரீத்…” என்றவாறு மேலும் நெருங்க, ஏனோ அவனுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்று உள்ளம் சொல்ல, புத்தி மறுக்க, இரண்டுக்கும் நடந்த போராட்டத்தில், ஒரு வித ஒலியோடு, அவள் மூச்சு எடுக்க முயன்ற தோற்று, முயன்று தோற்று, இறுதியில், பாதை தொலைந்த குழந்தையாக சிவார்ப்பணா குமுறிக் குமுறி அழத் தொடங்க, விரைந்து சென்று அவள் புறமாக மண்டியிட்டு அமர்ந்தான் அநபாயத தீரன்.

 

“கண்ணம்மா…” என்றவனின் குரல் ஆழ் கடலின் அதீத அமைதியுடன் அவளுடைய செவிகளைத் தீண்டிச் செல்ல, அந்தக் குரலில் ஓரளவு சுயநினைவு பெற்றவள், மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். இருட்டில் முகம் தெரியாவிட்டாலும், அவளுடைய கிங்காங்கின் உருவம் வரிவடிவமாகத் தெரிய,

 

“கிங்காங்…” என்றாள் தன்னை மறந்து.

 

“அர்ப்பணா… இட்ஸ் மீ… தீரன்… ப்ளீஸ்… பி யுவர் செல்ஃப்…” என்று அவளை மெதுவாக உலுப்ப, இப்போது முழுதாகச் சுயநினைவு பெற்றவள்,

 

“தீரன்…” என்று அலறியவாறு அவனைப் பாய்ந்து கட்டிப்பிடிக்க, அவளுடைய பாய்ச்சலை எதிர்பார்க்காத அநபாயதீரன், அவளுடன் சேர்ந்து பின் புறமாகச் சரிய, அவன் கீழும், அவள் மேலுமாகக் கொஞ்ச நேரம் கிடந்தனர்.

 

தொலைந்து போன தீரன் மீளக் கிடைத்த மகிழ்ச்சியில் அவனை இறுக அணைத்தவள், தன்னை இப்படி வருத்திவிட்டானே என்கிற கோபத்தில், அவனை விடுவித்து, அவன் மேல் ஏறி அமர்ந்தவாறு, அவனுடைய மார்பு வயிறு முகம், கரங்கள் என்று எங்கெங்கெல்லாமோ வசதியாகப் பட்டதோ, அங்கெல்லாம் வேகமாகக் குத்தத் தொடங்கினாள்.

 

“எங்கே… எங்கே… போ… போ… போனீர்கள்… நான்… எப்படி… எப்படிப் பயந்தேன்… தெரி….யுமா… நான்… நினைத்தேன்… நீங்களும்… என்னைத் தனி…யாக விட்டு… விட்டு…ப் போய் வ்ட்டீர்களோ என்று… நான்… நான் பயந்து போனேன்… யாராவது… என்னைக் கொல்ல.. வந்தால்… நான் என்ன… செய்வது… எப்படி… என்னைக் கா…ப்பாற்று…வது… அறிவு… வேண்டாம்… அப்படி… வெளி…யே போ..க வேண்டி..ய அவசி…யம் என்ன?” என்று கேவிக் கேவி அழுதவள் மேலும் அவனைத் தாறுமாறாக அடிக்கத் தொடங்கினாள்.

 

அவனோ அவளுடைய கரங்களைப் பற்றி நிறுத்த முயன்றவாறு,

 

“ஹேய்… லிசின் டு மீ அர்ப்பணா… ஸ்டாப் அர்ப்பணா… ஐ டோல்ட் யு ஸ்டாப்… டாமிட்… அர்ப்பணா… நான்… ஹே… பேபி…. நான் உன்னை விட்டு எங்கே போகப்போகிறேன்… ப்ளீஸ்… லிசின்… நான் தான் உனக்குப் பக்கத்திலேயே ஸ்டாப் ஹிட்டிங் மீ… டாமிட்… இருக்கிறேனே பிறகு என்ன? பிலீவ் மி… உனக்கு எதுவும் நடக்க விடமாட்டேன் அர்ப்பணா… ஏய்… உன் கை வலிக்கப்போகிறது… விடுமா… ஐ பிராமிஸ் யு….” என்று அவளுடைய அடிகளை வாங்கியவாறு, அவளைத் தடுக்க முயன்றான்.

 

அவளுடைய கோபம், ஆத்திரம், எரிச்சல், வெறி அனைத்துக்கும் வடிகாலாக அநபாயதீரன் கிடைக்க அந்த வாய்ப்பை இழக்க சிவார்ப்பணா தயாராக இல்லை.

 

அதனால், அனைத்துக்கும் சேர்த்து அவனுக்கு அடிகளையும், குத்துக்களையும் தாரை தாரையாக வார்த்துக்கொண்டிருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவனாக, அவளைச் சுழற்றித் தரையில் விழுத்தியவன், இப்போது அவளின் இரு பக்கமும், தன் கால்களைப் போட்டுத் தன்னுடைய உடல் பாரத்தை அவள் தாங்கமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டவனாக, வலது முழங்காலின், பலத்தில், இடக்காலின் பாதம் தரையில் படுமாறு அமர்ந்தவன், அவளுடையை கரங்களைத் தூக்கித் தலைக்கு மேல் கொண்டு சென்று தரையோடு அழுத்தி வைத்து, அவளை நோக்கிக் கோபத்துடன் குனிந்தான்.

 

“அர்பபணா… லிசின் டு மி… யு ஹாவ் டு கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்று அவன் கடினமாகச் சொல்ல, அவன் பிடியிலிருந்து உதறி விலக முயன்றவள் முடியாமல் போக, இப்போது வெறி இருந்த இடத்தில், வேதனையும், துன்பமும் வந்து அமர்ந்து கொள்ள, அவளுடைய விழிகள் கண்ணீரால் நிறைந்தன.

 

அவளுடைய கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் தாங்கிக்கொண்ட அநபாயதீரனால், ஏனோ அவளுடைய கண்ணீரைத் தாங்க முடியவில்லை.

 

“இட்ஸ் ஓக்கே அர்ப்பணா… யு ஆர் ஓக்கே… நீ நினைப்பது போல உனக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதுதான் நான் பக்கத்திலேயே இருக்கிறேனே… பிறகு என்ன… ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்று அவளை அமைதிப் படுத்த முயன்றான் அந்தத் தீரன்.

 

ஒரு கணம் தன் வேதனையை விழுங்கியவள்,

 

“ஏன்… ஏன் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். யாருக்கு நான் என்ன தவறு செய்தேன். என் மனமறிந்து யாருக்கும் எந்தத் துரோகமும் செய்யவில்லையே. ஏன்… ஏன் என்னை இப்படித் துரத்தித் துரத்தித் துன்புறுத்துகிறார்கள்…. அப்படி என்னிடம் என்ன இருக்கிறது…” என்றவள் இப்போது விம்மி விம்மி அழ, தரையில் பதிந்திருந்த அவளுடைய கரங்களை இடது கரத்தால் பற்றித் தூக்க, அவன் தூக்கிய வேகத்தில் மேலே வந்தவளின் பின் தலையில் தன் வலக் கரத்தைப் பதித்து, இழுத்துத் தன் வயிற்றில் பதித்தவன், இடது கரத்தால் அவளுடைய தோள்களை வளைத்து இறுக அணைத்துக்கொண்டவாறு, எதுவும் கூறாமல், மனம் ஆறும் மட்டும் சற்று நேரம் விட்டான்.

 

தற்போது தன்நிலை கெட்டிருப்பவளுக்குச் சிறந்த மருந்து அழுகை மட்டுமே. அழுது ஓய்ந்த பிறகுதான் அவளால் எதையும் தெளிவாகச் சிந்திக்கமுடியும். அதைப் புரிந்துகொண்டவனாக, அவளுடைய முதுகையும், தலையையும் கொஞ்ச நேரம் வருடிக்கொடுத்து, அவளைச் சமாதானப் படுத்த முயன்றான்.

 

அவள் அழுவது நிற்காது நீண்டு செல்வதைக் கண்டு கொண்டவன், இனியும் பொறுக்க முடியாது என்பது போல, மெதுவாக அவளுடைய நாடியில் கைவைத்துத் தூக்கி, அவளுடைய முகத்தில் தன் காந்த விழிகளைப் பதித்தான். இருட்டில் கூட மினுமினுத்த அவளுடைய விழிகளை ஏறிட்டவன்,

 

“ஷ்… இனி அழக் கூடாது… அழவேண்டிய நேரம் முடிந்துவிட்டது…” என்றவாறு அவளுடைய கண்ணீரைத் தன் வலக்கரம் கொண்டு துடைக்க, அந்தக் கரத்தைப் பற்றி, அவனை ஏக்கமாகப் பார்த்தவாறு,

 

“நான்… தப்பானவளா? ஏதோ செய்யக் கூடாத குற்றத்தைச் செய்து விட்டேனா… அதனால்தான் அவர்கள் என்னைத் துரத்துகிறார்களா? ஆனால் என்ன குற்றம் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லையே… உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று தன் அச்சத்தை விழிகளில் தேக்கிக் கேட்க, அநபாயதீரனின் உள்ளத்தில் எங்கோ ஏதோ உடைந்து நொறுங்குவது போல உணர்ந்தான்.

 

கடித்த பற்களுக்கிடையில் எதையோ முணுமுணுத்தவன், பின் அவளுடைய கன்னத்தை வருடிக் கொடுத்தவாறு,

 

“அர்ப்பணா… நீ எந்தக் குற்றமும் செய்யவில்லை…. அதுதான் நீ செய்த பெரும் தவறு…” என்றவாறு அவளை மீண்டும் தன்னோடு அணைத்துக்கொண்டான் அநபாயதீரன்.

 

விழிகள் நிறைந்த வலியுடன், ‘நான் தப்பானவளா…’ என்று கசங்கிய முகத்துடன், கேட்டவளின் நிலையை உணர்ந்தவனுக்கு, இப்போதே எதிரிகளைக் கண்டு துவசம் செய்யவேண்டும் என்கிற வெறி எழுந்தது.

 

‘நீ யாராக இருந்தாலும், இவளுடைய கண்ணீருக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்…’ என்று மனதிற்குள், சீறியவன், குனிந்து சிவார்ப்பணாவை ஏறிட்டான்…

 

அதே நேரம், சிவார்ப்பணாவின் சிந்தனை, அவன் சொன்னதிலேயே உழன்றுகொண்டு நின்றது. ‘அவன் என்ன சொல்கிறான். ஒருத்தன் குற்றம் செய்யாமல் இருந்தாலும் துரத்துவார்களா? ஏன்?’ புரியாமல் குழம்பியவள், மீண்டும் தன் தலையை நிமிர்த்தி அவன் முகத்தைப் பார்த்து,

 

“குற்றம் செய்யாது இருப்பது கூடக் குற்றமா?” என்றாள் குழந்தை போல.

 

உன்மையான சந்தேகத்துடன் விழிகள் விரிய, அவள் கேட்ட விதத்தைக் கண்டதும், அதுவரை கட்டிக்காத்து வந்த கட்டுப்பாடு அவனை விட்டு வேகமாக விலகிச் செல்ல, தன்னிலை மறந்தான் அநபாயதீரன்.

 

கலங்கிய விழிகளும், அழுகையால் துடித்த உதடுகளும், அச்சத்தால் நடுங்கிய உடலும், அவனை நிலைமறக்கச் செய்ய, வேகமாக அவளை நோக்கிக் குனியத் தொடங்கியவனின் முன்னால், நாளை என்கிற நினைவு வர, தன் மீதே கோபம் கொண்டவனாக, அவளை விட்டுப் பிரிந்தெழுந்தான்.

 

“அர்ப்பணா… பேசிக்கொண்டிருக்க இது நேரமில்லை… நான் இருக்கும் வரைக்கும் உனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது… ஏற்கெனவே உனக்குச் சத்தியம் செய்திருக்கிறேன்… அந்த நம்பிக்கையுடன் கிளம்பு… நாம் விரைவாக இந்தக் கட்டடத்தை விட்டுச் செல்ல வேண்டும்…” என்றவாறு அவளை நோக்கித் தன் கரத்தை நீட்ட, மீண்டும் அவள் முகம் பயத்தைத் தத்தெடுத்துக்கொண்டது.

 

என்னதான் அநபாயதீரன், விம் போட்டு, பயத்தை விட்டுத் தொலை என்று பாடம் நடத்தினாலும், இயற்கையாக அவளிடமிருந்த பயத்தை அவளால் ஓரம்கட்டவே முடியவில்லை.

 

“மீண்டும் ஜன்னல் பக்கமாகவா போகப்போகிறோம்…” என்று தன் உயிரைக் கையில் பிடித்தவாறு அவள் கேட்க, ஒரு கணம் என்ன செய்வது என்று புரியாமல் அவளை ஏறிட்டான்.

 

“இல்லை இந்த முறை கூரையில் ஏறி நடக்கப்போகிறோம்… கிளம்பு…” என்று அவன் கூற, அதை உண்மையென்று நம்பினவள்,

 

“என்ன… கூரையிலா… நான் மாட்டேன்…” என்று அவள் முகம் வெளிறக் கூற, கொஞ்ச நேரம் ‘இவளை என்ன செய்வது?’ என்பது போலப் பார்த்தான் அநபாயதீரன்.

 

“ஸ்டாப் இட்… அன்ட் கெட் ரெடி…” என்று எரிச்சலுடன் கூறியவன், ஓரளவு பரவத் தொடங்கிய வெளிச்சத்திலிருந்து, தரையில் கிடந்த பொருட்களைச் சேகரித்து அர்ப்பணாவின் பையில் திணிக்கத் தொடங்கினான்.

 

அப்போதுதான் சிவார்ப்பணா கவனித்தாள். அது அவளுடைய லாப்டப் பை. இது எப்படி இங்கே வந்தது? புரியாமல் விழித்தவளுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

 

நேற்று இருவரும் தப்பும்போது, அவன் ஒரு பையை இழுத்துத் தோளில் மாட்டிக்கொண்டானே. அப்போது கூட, அந்த இருட்டில் அது என்ன பை என்று அவளுக்குத் தெரியவில்லை. இப்போதுதான் தன் பை என்பது புரிந்தது. அந்த அவசரத்திலும், அவளுடைய பொருட்களின் மீது அவன் அவதானமாக இருந்திருக்கிறானே…’ என்று நினைக்கும் போது அவளுக்கு வியப்பாக இருந்தது.

 

“இது என்னுடைய பை… எப்படி உங்களிடம் வந்தது?” என்று அவள் வியப்போடு கேட்டவளை, பொறுமையற்றுப் பார்த்தான் அநபாயதீரன்.

 

“ம்… அது தன் பாட்டில் நடந்து வந்தது?…” என்றவனைப் பார்த்து அவள் முறைக்க,

 

“என்ன கேள்வி இது… அன்று உன் அருகில் இது கிடந்தது… ஏதோ முக்கியமான பொருட்கள் உள்ளே இருப்பதால்தானே எடுத்து வந்திருப்பாய்… அதனால் இதை அங்கேயே விட்டுவராமல் எடுத்து வந்தேன்… பின்பு நேற்று அங்கிருந்து வரும் போது, எடுத்து வந்தேன்… எடுத்து வந்ததும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று…” என்று அவன் தன் போக்கில் பொருட்களைத் திணித்தவாறு கூற, அவன் எதைக் கூறுகிறான் என்பதைப் புரிந்துகொண்டவளின் முகம் ஏனோ சிவந்து போனது.

அவள் பேசாமல் சங்கடத்துடன் நெளிவதைக் கண்டவன் வியப்புடன் திரும்பிப் பார்த்தான்.

அப்போது அவனுடைய கரத்திலிருந்தது மிஞ்சியிருந்த ‘ஆல்வேஸ் பாட்’ பாக்கட். அதைக் கண்டதும், அதை வெடுக்கென்று பறித்தவள், அதைத் தன் பையில் வேகமாகத் திணிக்க, அவளைப் புரியாமல் பார்த்தவன்,

 

“இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது… முதன் முதலாக இதைத் தயாரித்ததே இராணுவ வீரர்களுக்காகத்தான். காயப்பட்ட இராணுவ வீரர்களின் இரத்தத்தைத் தடுப்பதற்காகவும், இலகுவாக உரிஞ்சிக்கொள்ளவும் இதைப் பயன்படுத்தினார்கள்… இன்றும் பயன்படுத்துகிறார்கள்… அதைத்தான் நீங்கள் இப்போது உபயோகப் படுத்துகிறீர்கள்… இதில் அவமானப் பட என்ன இருக்கிறது?” என்று அவன் புரியாமல் கேட்க, பதில் சொல்ல முடியாமலும், எப்படி பதில் சொல்வது என்று புரியாமலும், முகம் சிவக்கத் தலை குனிந்தவள், எதுவும் பேசாமல் பையை மூடிவிட்டுத் தன் தோளில் கொளுவிக் கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

‘கிளம்பலாமா?’ என்று அவள் எங்கோ பார்த்தவாறு கேட்க, தோளைக் குலுக்கியவாறு எழுந்தவன் சற்றை நிதானித்தான்.

 

எங்கிருந்தோ சில காலடிகளின் சத்தம், அவனுடைய கவனத்தை ஈர்க்க, வேகமாகத் தன் பின் பான்டில் வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுக்க, அதை அச்சத்துடன் பார்த்தவளிடம்,

 

“அர்ப்பணா… நமக்குக் கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது, நாம் விரைவாக இங்கிருந்து கிளம்ப வேண்டும்” என்றவாறு தன் துப்பாக்கியை இரு கரங்களிலும் ஏந்தியவாறு தரையை நோக்கிப் பிடித்து, எந்த நேரமும் தூக்கிச் சுடுவதற்கு ஆயத்தமாக நிற்க, அடுத்த ஆபத்து தங்களைத் தேடிவந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டவளாக, இனி எந்த ரூபத்தில் வரப்போகிறதோ என்கிற பயத்தில், அவன் பின்னே அவன் ஷேர்ட்டைப் பிடித்தவாறு நின்றிருந்தாள்.

 

“நன்றாகக் கவனி சிவார்ப்பணா. நீ எந்த சந்தர்ப்பத்திலும், என்னை விட்டு விலகாதே. எனக்குப் பின்னாலேயே நின்று கொள். என்று அழுத்தமாக உத்தரவிட்டவனாக, முன்னேறினான்.

 

எந்த நேரமும் பட்டாசு வெடிக்கும் என்று தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டாலும், அவளையும் மீறி எழுந்த பயப் பந்தை எப்படி அடக்குவது என்றுதான் புரியவில்லை.

 

சிவார்ப்பணாவையும் இழுத்துக்கொண்டு விரைந்து சென்றவன், அவளைச் சுவர் ஓரமாக நிறுத்திவிட்டுக் கதவை முழுதாக மூடாமல், சிறிய இடை வெளி விட்டுச் சாத்தியவன், அவளுடன், சேர்ந்து சுவரோடு சுவர் ஒட்டியவாறு அந்த இடைவெளிக்கூடாக வாசல் கதவைப் பார்க்கத் தொடங்கினான்.

 

இடது கரம் துப்பாக்கியை அழுந்தப் பற்றியிருக்க, வலது கரம், சிவார்ப்பணா அசையாமல் இருப்பதற்காக, அவளின் மார்புக்குக் குறுக்காகத் தன் கரத்தைப் போட்டு, அந்த இடைவெளியில், அவனுடைய கூரிய விழிகள் மட்டும் வெளியே தெரியக் கவனமாக அவதானிக்கத் தொடங்கினான்.

 

வந்தவர்கள் வேறு யாரோ அந்த அப்பார்ட்மன்டில் வேலைசெய்பவர்கள் போலும். அந்தக் கட்டடத்திற்குரிய சீருடை அணிந்திருந்தார். எதையோ எடுப்பதற்காக வந்திருக்கவேண்டும் அதைக் கண்டதும், இறுக்கம் தளர, சிவார்ப்பணாவின் மீதிருந்த தன் கரத்தை விடுவித்துப் பின் தன் துப்பாக்கியை மீண்டும் பான்டின் பின்புறம் செருகிவிட்டு, உன்னிப்பாக அந்த வேலையாளைப் பார்க்கத் தொடங்கினான்.

 

தேவையானதை எடுத்துக்கொண்டு அவர் கிளம்ப, சிவார்ப்பணாவின் கரத்தை அழுந்தப் பற்றியவன், அவளை இழுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

 

அவர்களை விதி அத்தினை சுலபத்தில் விடும் போலிருக்கவில்லை.

 

இந்த முறை, அந்த அப்பார்ட்மன்டின் வாசல் கதவு மிக வேகமாகத் திறக்கத் தொடங்க, அநபாயதீரன் சுதாரிப்பதற்கு முன்பாக, கரிய நிற ஆடைகள் அணிந்து, ஆடைகள் முழுவதும் விதம் விதமான ஆயுதங்கள் பதிந்திருக்க, வாயில் ஒலிவாங்கி தங்கியிருக்க, கைகளில் ஏந்திய ஏகே 47 உடன் அகன்ற மார்பும், திரண்ட புஜத்துடனும், கிட்டத்தட்ட அவனுடைய, உயரத்திற்குப் போட்டியாகப் பார்க்கவே பயங்கரமான ராட்சசர்கள் போல், அவனைக் குறிவைத்தவாறு, இரு வெள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.

 

கூடவே வெளியே மேலும் நான்கைந்து கால்களின் ஓசைகளும் கேட்க, வந்திருப்பது இருவர் அல்ல என்பதும், அதற்கும் மேல் என்பதையும் புரிந்துகொண்டவன், அச்சமின்றி, தன்னை முறைத்த துப்பாக்கியையும், அதைத் தாங்கியிருந்தவர்களையும், தன் கூரிய விழிகளால், துளைக்கத் தொடங்கினான்.

 

முதலில் வந்த வெள்ளையன், தன் ஒலிவாங்கியை உயிர்ப்பித்து, “டார்கட்… இஸ் அவர் கன்ட்ரோல்…” என்றான்.

 

(28)

 

சிவார்ப்பணாவிற்கு இன்னும் எதற்காக உயிரோடு இருக்கவேண்டும் என்று கூடத் தோன்றத் தொடங்கியிருந்தது. அந்த மல்லர்களைப் பார்த்ததும், இவளுக்கு மேலும் உடல் வெடவெடக்க அவனுடைய காயம்பட்ட கரத்தை அழுந்தப் பற்றியவாறு தன் முகத்தை அவனுடைய தோளில் புதைத்துத் தலையை மட்டும் சற்றுத் திருப்பி, ஒற்றை விழியால் தமக்கு முன்னால் நின்றிருந்தவர்களை ஆராயத் தொடங்கினாள்.

 

அந்த இருவரும், கறுத்த ஆடை அணிந்திருந்தனர். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு ஆயுதங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தொடையில் மட்டும், ஒவ்வொரு அளவில் கத்திகள் வைக்கப்பட்டிருந்தன.

 

உள்ளே வந்தவர்களின் உயரத்தையும், பருமனையும், அவர்கள் அணிந்திருந்த ஆடையையும், அவை தாங்கியிருந்த ஆயுதங்களையும் கண்டவளுக்கு, மூச்சு தடைப்பட்டுவிடும் போல அச்சமாக இருந்தது.

 

அந்த இரு மல்லர்களையும் அவன் எப்படிச் சமாளிப்பான்? நினைக்கும் போதே உள்ளும் புறமும் நடுங்கியது,

 

அதே நேரம், துப்பாக்கியை, இவனுக்கு முன்பாக, அந்த மல்லன் பிடிக்க, அநபாயதீரனோ, சிவார்ப்பணாவைத் தன் உடலுக்குப் பின்னால் தள்ளி, முடிந்த அளவு மறைத்துக்கொள்ள, அவளோ, சர்வ அங்கங்களும் நடுங்க, தன்னவனின் பின்னால் மறைந்தவாறு அவனுடைய ஷேர்ட்டைக் கிழித்து விடுபவள் போல, இழுத்து அழுந்தப் பற்றிக்கொண்டாள்.

 

அவளுடைய முகம், அவனுடைய முதுகில் அச்சத்துடன் தஞ்சம் புகுந்திருந்தது.

 

ஒரு அடியில் அவர்களை விழுத்துவதற்குத் தன் காலைத் தூக்க முயல, உடனே அவனுடைய புத்தி அவனைத் தடுத்தது.

 

‘முட்டாள் தனமாக எதையும் செய்யாதே அனபாயா… இவர்கள் மட்டுமல்ல, வெளியேயும் ஆட்கள் நிற்கிறார்கள். அவர்கள் எத்தனை பேர் என்பதை நீ அறிய வேண்டும். முக்கியமாக நீ தனியால் அல்ல. உன்னை நம்பி ஒருத்தி உன் பின்னேயிருக்கிறாள்… அவளை யோசி. நீ செய்யும் ஒவ்வொரு செயலும், அர்ப்பணாவைத் தாக்கும். அவர்களின் துப்பாக்கியிலிருந்து வருகின்ற ஒரு குண்டு போதும்… சிவார்ப்பணாவைப் பதம் பார்க்க… உனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை… உன் அர்ப்பணாவைக் காப்பாற்றுவதுதான் முக்கிய வேலை… பி ப்ரேவ்… டோன்ட் டு எனிதிங் ஸ்டுபிட்…’ என்று அவனுடைய புத்தி எச்சரிக்க, தூக்க முயன்ற காலைத் தரையில் அழுந்த வைத்துவிட்டு, இரண்டு கரங்களையும் தூக்கித் தன் தலைக்குப் பின்னால் வைத்தவாறு நிமிர்ந்து நின்றான் அநபாயதீரன்.

 

அதைக் கண்டதும், அந்த வெள்ளையனின் முகத்தில் கர்வம் தெறிக்க, அருகேயிருந்தவனைப் பார்த்துக் கண்ணசைக்க, அநபாயதீரனை நெருங்கியவன், அவனைக் கவனமாகப் பரிசோதித்தான்.

மார்பு, இடுப்பு… அங்கே வர, பின்னால் செருகியிருந்த துப்பாக்கியை எடுத்து, மற்றவனிடம் நீட்டிவிட்டு, அவனுடைய காலைப் பரிசோதித்தான்.

 

“க்ளியர்…” என்று கூறியதும்,

 

“கைவிலங்கை மாட்டு…” என்று கூற, அடுத்து அவனுடைய கரம்  பின்னுக்கு வளைக்கப்பட்டு  விலக்கு போடப்பட்டது.

 

இப்போது  அவனால் தன் கரத்தை இயக்க முடியாது என்பதை உறுதிசெய்துகொண்ட அந்த வெள்ளையன், ஓங்கி அவனுடைய முகத்தில் ஒரு குத்து விட, பல் உதட்டில் பட்டு, உதட்டோரம் கிழிந்து இரத்தம் கசிந்தது.

 

இதை சிவார்ப்பணா எதிர்பார்க்கவேயில்லை. தீரனை ஒருவன் அடிப்பதா? அதுவும் அவளுடைய கண்களுக்கு முன்னால்…’ சினத்துடன் அவர்களைப் பார்த்தவளுக்கு அவளையும் அறியாமல் வாய் மூடிக்கொண்டது.

 

அந்த இரண்டு மல்லர்களுடனும் அவளால், போட்டிப்போட முடியுமா என்ன? அதுவும் அவர்கள் கரங்களில் இருக்கும் துப்பாக்கி, அதைக் கண்டதும், பொங்கிய எழுந்த கோபத்தை, நீர் ஊற்றி அணைக்க முயன்றாள் சிவார்ப்பணா.

 

அதே நேரம், தன்னை அடித்தவனை அநபாயதீரன் வெறித்துப் பார்த்தானே அன்றி, அவனைத் தாக்குவதற்கு வேறு எந்த முயற்சியும் செய்யவில்லை.

 

சிவார்ப்பணாவிற்கு ஒரு பக்கம் கோபம் வந்தது. அன்று சர்வசாதாரணமாக ஐவரைப் பிளந்து கட்டியவன், இன்று இவர்களிடம் அமைதி காக்கிறானே… ஏன்? அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியைக் கண்டதும் பயந்துவிட்டானா?’ என்ற எண்ணியவள், மேலும் அவனோடு ஒட்டிக்கொண்டாள்.

 

அவனுடைய அமைதியைக் கண்ட அந்த வெள்ளையன்,

 

“நாட் பாட்… யு ஹாவ் எ ப்ரெயின்…” என்றவாறு அநபாயதீரனை நெருங்க,

 

‘அஃப் கோர்ஸ்… ஐ ஆம் யூசிங் மை ஆன் ப்ரெயின்…” என்று கிண்டலாக இவன் கூறியதும்

 

“அப்படியானால் எங்களுக்குச் சொந்த மூளையில்லை என்கிறாயா?” என்று முன்னால் நின்றவன் கர்ஜித்தான்.

 

“அதில் சந்தேகமா?” என்று நறுக்கென்று அநபாயதீருன் கூறி முடிக்கவில்லை, ஆத்திரமடைந்த  வெள்ளையன், ஓங்கி அவனுடைய வயிற்றில் குத்திவிட்டு,

 

“நீ இருக்கும் நிலை புரியாமல் இன்னும் திமிராகவே பேசுகிறாயே… உன்னை…” என்று சீறியவாறு இடுப்புப் பக்கமாக இன்னொரு குத்தைவிட்டான்.

 

“என்ன செய்வது? தமிழனாகப் பிறந்துவிட்டேன்… இறக்கும் நிலையிலும் என் திமிர் அழியாது… வேண்டுமானால் முயன்று பார்…” என்று அநபாயதீரன் மேலும் எகத்தாளமாகக் கூற, மீண்டும் அவனுடைய  இடது கன்னம் பலமான குத்தொன்றை வாங்கியது.

 

அதற்கு மேல் அவன் அடிவாங்குவதைப் பார்க்க முடியாது, “தீரா…” என்று கதறியவாறு அவர்களுக்கு இடையில் அவனை மறைத்தாற்போல் வந்து நின்ற சிவார்ப்பணா,

 

பெரும் வலியில் குனிந்திருந்தவனின் கன்னத்தை வருடி,

 

“தீரன்… ஆர் யு ஓக்கே… ஆர் யு ஓக்கே…” என்றவாறு இரத்தம் வடிந்த அவனுடைய உதடுகளை அவள் வருடிக் கொடுக்க, வாய்க்குள் வழிந்த இரத்தத்தைக் கூட்டித் தலையைச் சற்றுத் திருப்பி, அருகாமையிலேயே துப்பியவன், தோள் கொண்டு உதட்டைத் துடைத்துவிட்டவாறு, தன் எதிரியை முறைத்துப் பார்த்தவாறே, சிவார்ப்பணாவின் தோள் மீது தன் கரத்தைப் பதித்து எழுந்து நின்றான்.

 

இரண்டு தரம், யாரும் கவனிக்கா வண்ணம், கமறியவன், தன் கை வளைவில் இருந்தவளைத் தனக்குப் பின்னால், அனுப்பிவிட்டு, நிமிர்ந்து, எதிரியைப் பார்த்தான்.

 

பெரும் சீற்றத்துடன் ஓங்கி எதிரியின் கீழ் புறத்தில் குத்த, நினைத்தவன், தன் ஆத்திரம் ஆபத்தில் முடியும் என்பதைப் புரிந்துகொண்டவனாக, ஒரு வினாடி தன் விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.

 

இப்போது அவனுடைய கண்களில் பட்டது, அந்த எதிரியின் தொடையில் பதிந்திருந்த குறுங்கத்திகள். அதை விழிகளால், பார்த்தவாறே, முஷ்டிகள் இறுக விறைப்புடன் நின்றான்.

 

அதைக் கண்ட எதிரியின் முகத்தில் ஏளனப் புன்னகை மேலும் விரிய,

 

“உன் கோபத்தைப் பார்த்ததும் பயமாக இருக்கிறது…” என்று கிண்டலாகக் கூறி நகைக்க,

 

“மீ டூ…” என்றான் அநபாயதீரன்.

 

இப்போது, அவனுடைய இடைப் பகுதியில் அடுத்த குத்து விழ, இப்போது மடங்கி விழ அதைக்கண்ட சிவார்ப்பணாவினால், அதற்குமேல், அவன் அடிவாங்குவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

 

“நோ… டோன்ட் ஹிட் ஹிம்…” என்று கதறியவாறு, அவனுக்கு முன்பாக வந்து நின்றவள், வலியில் கூட சுருங்காமல், எதிரியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த தன்னவனின் முகத்தைப் பற்றித் தன் மார்பில் அழுத்தியவாறு, தன் தளிர் கரத்தால், அவனுடைய தோள், முதுகு கன்னம் என்று முடிந்த வரைக்கும், எட்டிய பிரதேசங்களில் வருடிக் கொடுத்தவளுக்கு, அவளையும் அறியாமல் கண்ணீர் தாரை தாரையாகப் பொங்கியது.

 

ஏதோ தானே தாக்குப்பட்ட உணர்வில் பெரிதும் தவித்துப்போனவள்,

 

“ஐ ஆம் சாரி… தீரன்… ஐ ஆம் சோ சாரி…” என்றவாறு அவனுடைய உச்சந்தலையில் தன் முகத்தைப் பதித்தவளுக்கு அதற்கு மேல் எப்படி ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.

 

அவளுடைய கரங்கள், மார்பில் பதிந்திருந்த அவனுடைய தலையின் முடியை அழுந்தப் பற்றி, சமாதானப்படுத்த முயன்றது. அது போதாது என்பது போல, அவனுடைய கழுத்தையும் வருடிப் பின் அவனுடைய முதுகைத் தடவிக்கொடுத்தன. அவனுடைய முகத்தைப் பற்றித் தூக்கியவள், அடித்ததால் சற்றை வீங்கியிருந்த உதட்டையும், கண்டியிருந்த கன்னத்தையும் கண்டவளுக்குத் தாங்க முடியாத வேதனை தோன்றியது. அவன் கன்னத்தை வருடிக்கொடுத்தவாறே,,

 

“என்னமாதிரி உங்களை அடித்திருக்கிறார்கள்… ராட்சஷர்கள்… அவர்களை… அவர்களை…” என்று கூற முடியாது திணறியவள், மீண்டும் அவனுடைய தலையில் தன் உதட்டைப் பொருத்தி எடுத்து,

 

“தீரன்… தீரன்… ஆர் யு ஓக்கே…” என்ற கேட்டவாறு அந்த இரு மல்லர்களையும், கொலை வெறியுடன் பார்த்தாள் சிவார்ப்பணா.

 

“ஹெள டெயர் யு… ஹெள டெயர் யு ஹிட் ஹிம்… லைக் தட்… இஃப் யு ஹிட் ஹிம் எகெய்ன்… ஐ வில் கில் யு…” என்று தன் பயம் மறந்து, தன் பதட்டம் மறந்து சீறியவளை ஒருகணம் அநபாயதீரன் கூட தன் சீற்றத்தை மறந்து வியப்புடன் பார்த்தான்.

அதே நேரம், அந்த எதிரிகள், தன் முன்னால் பூனைக்குட்டிபோல நின்றவாறு சிலிர்த்து சீறிக்கொண்டிருக்கும் சிவார்ப்பணாவைக் கண்டதும், அவர்களின் ரசனை விரிந்தது.

 

“ஹே… கிட்டின்… கோபத்தில் கூட அழகாக இருக்கிறாயே…” என்றவாறு இடக் கரத்தால் துப்பாக்கியைப் பற்றியவாறு வலக்கரம், கொண்டு அவளை நெருங்க வர,

 

“டோன்ட்… டோன்ட் டச் ஹேர்… அன்ட் டோன்ட் கம் நியர் ஹேர்… ஒர்… எல்ஸ்… ” என்று அநபாயதீரன் வேகமாக சிவார்ப்பணாவை இழுத்துத் தன் பின்னால் விட்டவாறு எச்சரிக்க, இப்போது அந்த இருவரின் முகத்தில் மேலும் ரசனையும் சுவாரசியமும் தெரிந்தன.

 

“ஓர் எல்ஸ் வட்…” என்றவன் மேலும் சிவார்ப்பணாவை நெருங்கி,

 

“இவளை நான் பரிசோதிக்கவேண்டும்… என்ன என்ன மறைத்திருக்கிறாள் என்பதை நான் பார்க்கவேண்டும்…” என்று இரண்டு அர்த்தங்கள் பொதியக் கூற, அவனோ நெருங்கினால் கொன்றுவிடுவேன் என்பது போல தன் கரத்தை நீட்டி அவளைத் தனக்குப் பின்னால் தள்ள முயல,

 

அதையும் பார்க்கலாம் என்பது போல, சிவார்ப்பணாவை நெருங்கத் தொடங்க, அவனுடைய கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தான். அவனுடைய மேலிடம். உடனே உயிர்ப்பித்துக் காதில் வைக்க, மறு பக்கம் என்ன சொன்னதோ, உடனே நிமிர்ந்து நின்று,

 

“ஷூர் சேர்…” என்றவறு தன் நண்பனைப் பார்த்து,

 

“வி ஹாவ் டு கோ…” என்று கூற, மறு பேச்சுப் பேசாமல் அவன் தயாரானான்.

 

“லெட்ஸ் கோ…” என்றவாறு தன் அருகேயிருந்த சகாக்களைப் பார்த்துத் தலையசைத்துவிட்டு, கீழே மடிந்து கிடந்தவனை எழுப்பி, முன்னே  தள்ள, அதைக் கண்டதும் சிவார்ப்பணா பதறினாள்.

 

“ப்ளீஸ்… லெட் ஹிம்…” என்று எதையோ சொல்லத் தொடங்க, சடார் என்று திரும்பியவனின்  விழிகள் கூர்மையுடன் சிவார்ப்பணாவை உற்றுப் பார்த்தது. அந்த விழிகள் பேசும் மொழியைப் புரிந்துகொண்டவள், தன் வாயை கப் என்று மூடி, விழிகள் நிறைந்த வலியுடன் அவனைப் பார்த்தாள்.

 

அவனோ அவளைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைத்துத் தன் ஒற்றைக் கண்ணை அடித்து ‘ஐ ஆம் ஓக்கே…’ என்பது போல விழிகளால் கூறிய நேரம், அந்த ராட்சசன், அநபாயதீரனை மேலும் முன்னுக்குத் தள்ள, இரண்டடி முன்னேறியவன் எதிரிகளுக்குச் சிரமம் கொடுக்காது, அமைதியாக அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான்.

 

அவன் நினைத்தது போல, வெளியே ஆறு பேர் நின்றிருந்தனர். கவனமாக வேறு யாரும் மறைந்திருக்கிறார்களா என்பதை அவதானித்தான். இல்லை. மெல்லிய கிண்டல் புன்னகையுடன், அவன் கைவிலங்கோடு, முன்னே நடக்க, சிவார்ப்பணாவிற்கு விலங்கு மாட்டாமலே, அவளுடைய மேல் கையைப் பற்றியவாறு இழுத்துக்கொண்டு மற்றவன் வெளியே வர, இருவருக்கும் பாதுகாப்புப் போல, ஆறுபேரும் அவர்களைச் சூழ்ந்தவாறு, அந்தக் கட்டிடத்தின் மின்தூக்கியினருகே வந்தனர்.

 

ஒருவன் மின்தூக்கியின் கட்டுப்பாட்டைத் தன் கையில் எடுத்துக்கொள்ள, அநபாயதீரனுக்குப் பின்னால் நின்றிருந்த, அந்த மல்லன், அவனுடைய முதுகில் ஓங்கிய உதைய, அவன் உதைத்த வேகத்தில், சமநிலை தவறி மின்தூக்கியின் உள்ளே சென்று அதன் சுவரில் வேகமாக மோதி நின்றான்  அநபாயதீரன்.

 

பல்லைக் கடித்து உருத்திர தாண்டவன் ஆட முயன்ற மனத்தைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு திரும்பிய அநபாயதீரன் கால்களை ஒடுக்கி நிமிர்ந்து நின்றுகொண்டான். அவனுடைய உதட்டிலிருந்து, இரத்தம் இப்போது ஓரளவு காய்ந்திருக்க, அடுத்து சிவார்ப்பணாவைத் தள்ளிக்கொண்டு, உள்ளே நுழைந்தான் அந்த மல்லன். தொடர்ந்து, மற்றைய நால்வரும் உள்ளே நுழைய, இப்போது. இடம் இட்டு முட்டாக இருந்தது.

 

அனைவரும் தங்கள் துப்பாக்கியை ஒரு கரத்தில் பற்றிக் கீழே பிடித்தவாறு நின்றிருக்க, அந்த மல்லனோ சிவார்ப்பணாவைத் தன் கை வளைவில் வைத்திருந்தான். கூடவே கிண்டலுடன், அநபாயதீரனைப் பார்க்க, அந்த மல்லனின் வளைத்திருந்த கரத்தையும் சிவார்ப்பணாவையும் மாறிப் பார்த்தவனின் சினம் தலைக்கேறியது. அதைக் கண்டதும், அந்த மல்லனின் முகம் மலர,

 

“இவளைத் தொட்டால் உனக்குப் பிடிக்கவில்லையா?” என்றவாறு அவளை மேலும் அணைக்க, அநபாயதீரனின் நரம்புகள் புடைத்தன.

 

“நீ பெரும் தவறு செய்ய முயல்கிறாய்… லெட் ஹேர் கோ…” என்று கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்ப, அந்த மல்லன் மட்டுமல்ல, மற்றைய நால்வரும் நகைத்தனர்.

 

“டூ யு நோ வட்… உன்னையும், இந்தப் பெண்ணையும் பிடித்து வரும்படி எங்களுக்குக் கட்டளையிட்டபோது, உன்னைப் பற்றி, ஏதோ பிதற்றினார்கள்… உன்னைத் தொடவே முடியாது என்றெல்லாம் எச்சரித்தார்கள்…. ஆனால்…” என்று நகைத்தவன், அநபாயதீரனைத் தலை முதல் பாதம்வரை ஏறிட்டுக் கிண்டலுடன்,

 

“உன்னை அசைய முடியாமல் செய்துவிட்டேன் பார்த்தாயா? அப்படியிருந்தும் என்னை மிரட்டப்பார்க்கிறாயே… அவ்வளவு பெரிய முட்டாளா நீ…” என்று நக்கலாகக் கேட்டவனின் வலக்கரம், சிவார்ப்பணாவின், இடையில் அழுந்தப் படர்ந்து, அப்படியே சற்று மேல் எழ, பெரிதும் தவித்துக் கூனிக் குறுகிப்போனாள்.

 

அவனிடமிருந்து திமிற முயன்றும் முடியாமல் போக, அநபாயதீரனை அச்சத்துடன் ஏறிட்டாள் சிவார்ப்பணா.

 

“லெட் ஹர் கோ…” என்றான் மறுமுறை.

 

இம்முறை, அவனுடைய குரல் சற்று உயர்ந்திருக்க, அந்தக் குரலின் வீச்சில் பெரும் கடினமும் நிறைந்திருந்தது.

 

“இஸ் இட்… என்றவன், அநபாய தீரனுக்கு முன்பாகவே அவளுடைய தடித்த ஜாக்கட்டின் முன் புறத்தைக் கழற்றத் தொடங்கினான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!