Sun. Jun 15th, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 8/9

(8)

 

மிளிர்ம்ருதையும், விக்னேஷ்வரனும் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. இருவரும் பல்வேறு பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் சிக்கியிருந்ததால், ஏதாவது பேசவேண்டும் என்று கூட இருவருக்கும் தோன்றவில்லை.

வீடு வந்தது, காரை விட்டு இறங்கிய விக்னேஷ்வரன் எதுவும் பேசாமல் அமைதியாகத் தன்னுடைய அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொள்ள, மிளிர்ம்ருதையோ, எதுவும் பேசத் தோன்றாது தன் அறைக்குள் நுழைந்தாள்.

அவளுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோலத் தோன்றியது. அடுத்து என்ன செய்வது என்று எதுவுமே புரியில்லை. அவளுடைய எதிர்காலம் இனி என்ன? எல்லாமே வெறும் கும்மிருட்டாகத் தெரிந்தது. தள்ளாட்டத்துடன் நடந்த சென்றவள் படுக்கையில் தொப்பென்று அமர்ந்தவளுக்கு இன்னும் தன் வாழ்க்கை போன திசையை நம்ப முடியவில்லை.

இவ்வளவுதானா அவளுடைய வாழ்க்கை… மெட்டு மலருமுன்னே அது வீழ்ந்துவிட்டதா? மெல்லியதாக மலரவேண்டிய வாழ்க்கை, மலரும் முன்னே, பறித்துக் கசக்கி எறிந்தாகிவிட்டது… இதற்கு யாரை நோவது? தாளமுடியா வலியுடன் தொடைகளில் தன் முழங்கைகளைப் பதித்துக் கரங்களால் தன் முகத்தை மூடிக்கொண்டவளுக்கு, அதுவரை விட்டுச் சென்ற கண்ணீர் மீண்டும் கரைபுரண்டு வெளியேறியது.

அழக்கூடாது என்று எவ்வளவோ மனதை அடக்க முயன்றும் அவளால் அது முடிந்திருக்கவில்லை. ஆனாலும் தன் மீது ஆத்திரம் வந்தது. தன்னை வேண்டாம் என்றவன், தன் பெண்மையை அவமானப் படுத்தியவனுக்காக ஏன் உள்ளம் கலங்கவேண்டும்? எதற்காக வதங்கவேண்டும்… அவனுக்கு அவள் வேண்டாம் என்றால், அவளுக்கும் அவன் வேண்டியதில்லை…

திடமாக எண்ணியவள், வலியுடன் தன் விழிகளை அழுந்த துடைத்தபோது, அவள் கரங்களிலிருந்த அந்த மோதிரம் அவள் கவனத்தைத் திசை திரும்பியது. அதுவரையிருந்த உறுதி மாயமாக மறைந்து போக, உதடுகள் நடுங்கத் தன் கரத்தைத் தூக்கிப் பார்த்தாள்.

அவன் கரத்தில் அணிந்தபோது, எத்தனை கற்பனைகளோடு, அதை ஏற்றுக்கொண்டாள். ஆனால் அத்தனையும் ஒரு கணத்தில் இல்லாததென்றாகிவிட்டதே…

எல்லையில்லா வலியுடன், அவசரமாக அந்த மேதிரத்தைக் கழற்றி எடுத்தவள், தன் உள்ளங்கைகளில் வைத்துப் பார்த்தாள். மூச்சை அடைத்துக்கொண்டு வந்தது. அவளையும் மீறிக் கேவல் வர, மோதிரத்தை உள்ளங்கையில் சுருட்டிவைத்தவாறு மார்போடு இறுக அணைத்து மீண்டும் ஒரு முறை அழுது கரைந்தாள். கரங்களில் அவன் கட்டிய தாலி உறுத்த, அழுதவாறே அதைத் தூக்கிப் பார்தாள். அவன் கட்டியபோது துள்ளிய மனதை நினைத்துத் துடித்தாள்.

அவளுடைய வாழ்க்கையையே அழித்தவனின் தாலியை எதற்குச் சுமக்கவேண்டும். எல்லையில்லா வெறுப்புடன் அதைக் கழற்றுவதற்காகத் தாலி மீது கரத்தை வைத்துக் கழற்ற முயல, ஏனோ முடியாது கரங்கள் நடுங்கின.

அவன் என்ன காரனத்திற்காக அவள் கழுத்தில் தாலியைக் கட்டினானோ அவள் அறியாள். ஆனால், அவன் கட்டும் போது, நிறைவோடு முழு மனத்தோடு அதுவும் விருப்பத்துடன்… எல்லையில்லாக் காதலுடனும்தான் ஏற்றுக்கொண்டாள். அதை இல்லையென்று உதறிவிட முடியுமா… இது பார்பபதற்கு வேண்டுமானால் மணமானவள் என்கிற சின்னமாக இருக்கலாம். ஆனால் அவளுக்கு அது அடையாளமாயிற்றே. மணமாணவள் என்கிற அறிமுகமாயிற்றே. அதை எப்படித் தூக்கியெறிவாள். தூக்கியெறிந்தால் மட்டும், அவள் மணமானவள் என்கிற உண்மை மறைந்துவிடப்போகிறதா, இல்லை அவள் பழையபடியே செல்வியாகிவிடப் போகிறாளா… இல்லையே…

உருகிக் கரைந்தவளுக்கு மெது மெதுவாக உணர்ச்சிகள் மீளத் தொடங்கின.

மெல்ல மெல்லக் கண்ணீர் சற்று வற்றி, வேதனை ஓரளவு குறைய, இப்போது சிந்திக்கும் மனப்பக்குவம் அவளுக்கு வந்தது. தொடர்ந்து நடந்தவைகள் அனைத்தும்.

அப்போதுதான் ஒன்று அவளுக்கு உரைத்தது. அவன் ஒரு போதும், அவள் தந்தையை முறைவைத்து அழைக்கவில்லை. மிகக் கவனமாகத் தவிர்த்திருக்கிறான். உன்னுடைய அப்பா என்று அவன் விழித்தபோது, அவள் கூட ஏன் என் மாமனார் என்று சொல்லக்கூடாதா என்று எண்ணினாளே… அப்படியானால், இவளுடைய தந்தைக்கும், அவனுக்கும் இடையில் ஏதாவது கசப்பான சம்பவங்கள் நடந்திருக்குமோ?

இருவரின் பேச்சிலிருந்தும் தந்தை ஏதோ பெரும் தவறு செய்திருப்பது மட்டும் நன்கு புரிந்தது. அது மட்டுமல்ல அவனைப் பொருத்தவரைக்கும் அவரைப் பழிவாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வெறும் பொருள்தான் அவள். ஜெஸ்ட் யூஸ் அன்ட் த்ரோ… பாவிக்கப்பட்ட பொருள்… இனி தேவையில்லை… குப்பையில் எறியப்பட்டு விட்டது…

நினைக்க நினைக்கத் தாள முடியவில்லை. அப்படியே கட்டிலில் சரிந்து படுத்தவளுக்கு, மீண்டும் அன்னையின் கருவறையில் போய் முடங்கிவிட மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது. தாயை நினைத்ததும், மீண்டும் கண்ணீர் வடியத் தொடங்கியது. கூடவே வெளுறிப்போன தந்தையின் முகமும் நினைவுக்கு வந்தது.

அப்படித் தன் தந்தை என்ன பெரும் தவறு செய்திருப்பார். அவனுடைய வியாபாரத்தை முறியடிக்க முயன்றிருப்பாரோ.

இல்லை அதற்கு எந்தச் சந்தர்ப்பமும் கிடையாது. அவனுடைய வியாபாரம் கனடாவில். இங்கே இலங்கையில் முறியடிக்க என்ன இருக்கிறது… ஏதோ காந்திமதி என்று கூறினானே…! யார் அந்தக் காந்திமதி. அந்தக் காந்திமதிக்கும் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?” எதுவுமே புரியாமல் தலையைப் பற்றிக்கொண்டாள் மிளிர்ம்ருதை.

எத்தனை நேரமாக அவள் அப்படியே கிடந்தாளோ தெரியாது. அவளுடைய அறைக் கதவு தட்டுப்பட, அவசரமாக எழுந்தமர்ந்தாள் மிளிர்மிருதை.

கட்டிலை விட்டு இறங்கவே பிடிக்காதவள் போல, கால்களைத் தரையில் பதித்து அமர்ந்தவள்,

“யெஸ் கம் இன்…” என்றாள் சோர்வுடன். அடுத்துக் கதவு திறக்க, வெளியே நின்றிருந்தான் வேலையாள். இவள் என்ன என்பது போலப் பார்க்க,

“அம்மா… உங்களை ஐயா வரச் சொல்லி அழைத்தார்…” என்று கூற, படுக்கையில் தன் கரங்களை ஊண்டியவாறு சற்று முன்புறம் குனிந்து அமர்ந்திருந்தவள், மெதுவாகத் தன் தலையை உயர்த்தி வேலையாளைப் பார்த்து,

“ நான் வருகிறேன்… நீ போ…” என்று விட்டு, சற்று நேரம் அப்படியே இருந்தாள்.

எத்தனை நேரம்தான் இப்படியே இருக்க முடியும். அப்படியே இருந்தாலும் பிரச்சனை அவளை விட்டு விலகிவிடப் போகிறதா என்ன? சோர்வு மாறாமலே, இருக்கையை விட்டு எழுந்தாள். ஏனோ இதயம் படபடவென்று வேகமாக அடித்துக்கொண்டது. ஏதோ கேட்கக் கூடாத ஒரு செய்தியை கேட்கப்போவது போன்ற ஒரு உணர்வில் கதிகலங்கிப்போனாள் மிளிர்ம்ருதை. ஆள மூச்சுக்களை எடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவள், தடுமாறிய நடையை நிலைப்படுத்த முயலாமலே தன் தந்தையின் அறையை நோக்கிச் சென்றாள்.

எப்போதும் போலத் தன்தையின் அறைக்கதவைத் தட்டுவதற்குத் தன் வலக்கரத்தைத் தூக்கியவளுக்கே, அப்போதுதான் தன் கரம் நடுங்குவது உறைத்தது. அதிலிருந்தே எந்தளவு பயப்படுகிறோம் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

எவ்வளவு முயன்றும் தன்னை நிதானப்படுத்த முடியவில்லை மிளிர்ம்ருதைக்கு. எப்படியோ கதவைத் தட்டிவிட்டு, கதவைத் திறக்க, தன் இரு கரங்களையும் பின்புறம் கட்டியவாறு ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த விக்னேஷ்வரன், தன் மகளின் சத்தம் கேட்டதும் மெதுவாகத் திரும்பிப் பார்த்தார்.

தன் மகளின் முகத்தைக் கண்டதும், அவளுடைய நிலைய நன்கு உணர்ந்தவராகப் பெரும் வேதனையில் ஆட்பட்டவராக, அங்கிருந்த இருக்கையைக் காட்டி,

“உட்காரம்மா…” என்றார் மெலிந்து விட்ட குரலில்.

மிளிரம்மிருதையோ எதுவுமே பேசாமல் தந்தையை வெறித்துப் பார்த்தாள்.

“அம்மா… நான்…” என்று அவர் எதையோ சொல்லி முடிக்கும் முன்பாக அவரைத் தடுத்தாள் மிளிர்ம்ருதை.

“அப்பா… என்ன நடக்குது இங்கே… எதற்காக அவர் எங்களைப் பழி வாங்குவதாகச் சொன்னார். அதுவும் கட்டிய மனைவியைக் கற்பழிக்கும் அளவுக்கு…” என்றதும் துடித்துப் பதைத்து மகளைப் பார்த்தார் விக்னேஷ்வரன்.

“அம்மா… நான் எப்படி உன்னிடம் இதைப் பற்றிச் சொல்வேன்…” என்று கலங்கியவரை, வியப்போடு பார்த்தாள் மகள். தந்தையின் முகத்தைப் பார்க்கும் போதே, அவர் செய்த தவறின் தார்ப்பரியம் புரிந்தது.

“சொல்லுங்களப்பா… என்ன நடந்தது?” என்றாள் இறுக்கமாக.

ஆழ்ந்த யோசனையில் கொஞ்ச நேரம் நின்றவர், மகளின் முகத்தை ஏறிட்டார். அதில் அடிபட்ட வலி தெரிய மிளிர்ம்ருதை திகைத்துப் போனாள்.

“அ… அப்பா…” என்றாள் தந்தையின் வேதனை பொறுக்க முடியாதவளாக.

“சொல்கிறேன்… ஆனால் நீ என்னை வெறுத்து விட மாட்டாயே…” என்றார் பெரும் கலக்கத்துடன்.

“சொல்லுங்களப்பா…” என்றாள் அழுத்தமாக.

“இது… ஒரு பதினாறு வருடங்களுக்கு முன்பு நடந்ததம்மா… அப்போது உனக்கு இரண்டு வயதுதான்… நான் வியாபார விஷயமாக இந்தியா போயிருந்தேன்… அங்கேதான் காந்திமதி என்ற பெண்ணைச் சந்தித்தேன்…

 

(9)

காந்திமதி… அழகாக இருந்தாள். கவர்ச்சியாக இருந்தாள். அப்போதுதான் பச்சையப்பாக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த பதினாறு வயது பேதை. அவளுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, தம்பி அபயன் பிறந்தான்.

அவன் பிறந்த பின், உடலில் ஏற்பட்ட கோளாற்றினால் தாய் இறந்துவிட, தன் தம்பிக்குத் தாயுமானவளாக மாறிப்போன இளம் கன்னித்தாய் அவள். நிறம் சற்றுக் குறைவாக இருந்தாலும் அவளுடைய அழகும் வனப்பும் பார்ப்பவர்களைக் கொள்ளைகொள்ளச் செய்தது.

அவளுடைய தம்பி அபயனுக்கு, அவன் சகோதரிதான் உலகம். அவனுக்குத் தாயை நினைவில் இல்லை. நினைவிலிருந்த அன்னையென்றால், அது அவன் சகோதரிதான். அதனாலேயே எப்போதும் தன் சகோதரியின் நிழலாகத் திரிவான் சிறுவன்.

பள்ளிக்கூடம் முடிந்ததும், நேராக அவன் வரும் இடம் அவன் சகோதரியின் பள்ளிக்கூடம். காந்திமதியின் கல்லூரியும், தந்தை வேலை செய்யும் இடமும் மிக அருகாமையிலிருந்ததால் இருவரும் தந்தைக்காகக் காத்திருந்து ஒன்றாகவே வீட்டிற்குச் செல்வார்கள். அன்றும் அப்படித்தான். தந்தைக்காக இருவரும் காத்திருந்த நேரம், அவளுடைய தந்தை, தான் மட்டும் இல்லாமல் ஒரு புதியவனையும் அழைத்து வந்திருந்தார்.

அப் புதியவனைக் கண்டதும், பெண்களுக்கே உரிய ஒதுக்கத்துடனும், நாணத்துடன் பதினொரு வயதேயானாலும், தன்னளவு உயரத்திற்கு வளர்ந்திருந்த தன் தம்பிக்குப் பின்னால் மறைய முயற்சிக்க, அதைக் கண்ட அந்தப் புதியவனின் விழிகள் வியப்பில் மலர்ந்தன. கூடவே, வெட்கத்தில் சிவந்த அந்த முகத்தைக் கண்டவனால், தன் விழிகளை விலக்கவே முடியவில்லை.

“என்னம்மா அதிக நேரம் காத்திருக்கிறாய் போலிருக்கிறதே…” என்ற தந்தை, மகளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு,

“தம்பி… இவள்தான் என் மகள் காந்திமதி. இது என் மகன் அபயன்… அம்மா… தம்பி பெயர் விக்னேஷ்வரன். நம்முடைய தொழிற்சாலையிலிருந்து சில பொருட்களை நேராகவே கொள்முதல் செய்ய வந்திருக்கிறார். தம்பி இலங்கைத் தமிழர்.” என்று ராமேஷ்வரம் கூற, நிமிர்ந்து அந்தப் புதியவனைப் பார்த்து,“ஹலோ” என்றாள்.

“வணக்கம்…” என்றான் அந்தப் புதியவன். ஏனோ அந்தக் கணம், அந்தப் புதியவனின் கம்பீரத்தில் நிலைகுலைந்து போனாள் அந்தப் பதினாறு வயது சிட்டு.

அதன் பின்பு, அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கிடைத்தது என்பதை விட உருவாக்கினான் விக்னேஷ்வரன் என்பதுதான் உன்மை.

காந்திமதியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நன்கு அவதானித்து அதன்படியே தன் காயையும் நகர்த்தத் தொடங்கினான்.

ஆனால் எப்போதும் அவள் நிழலாக ஒட்டித் திரியும் அவள் தம்பியை ஏனோ விக்னேஷ்வரனுக்குப் பிடிக்கவேயில்லை. எப்படியாவது அவனைக் கழற்றிவிட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் அவனிடம் ஏதாவது வேலை கொடுத்து அங்கிருந்து அனுப்பி விட்டு, காந்திமதியுடன் தன் நேரத்தைப் போக்க முயல்வான் விக்னேஷ்வரன்.

தன் மீது ஏற்பட்ட அளப்பரிய அன்பால்தான், தன்னுடன் தனித்துப் பேச விரும்புகிறான் என்று தவறாக நினைத்த காந்திமதியும், முடிந்த வரைக்கும் தன் தம்பியை தன்னோடு அழைத்துச் செல்வதைத் தவிர்த்தாள்.

என்ன செய்வது கள்ளம் புகுந்துவிட்டால், குற்றமும் சேர்ந்துகொள்கிறது, புத்தியும் மழுங்கி விடுகிறது.

இரண்டு மாதங்களின் பின்பு, விக்னேஷ்வரன், தன் காதலை அவளிடம் கூற. காந்திமதியும் உடனே அந்தக் காதலை ஏற்றுக்கொண்டாள். அந்த அப்பழுக்கில்லா அவளுடைய உள்ளத்தில், எந்த வித சிக்கலுமில்லாமல் விக்னேஷ்வரன் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டான்.

ஆனால் காந்திமதி விக்னேஷ்வரனின் உள்ளத்தை விரும்ப, விக்னேஷ்வரனோ, அவளுடைய உடலைத்தான் விரும்பினான்.

எங்கே தனக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிற செய்தியைக் கூறினால், அவள் விலகிவிடுவாளோ என்று அஞ்சி அந்த உண்மையைக் கூறாமல் மறைத்துவிட்டான்.

நாட்கள் போகப் போக எப்படியாவது காந்திமதியை முழுமையாக அடைந்துவிட வேண்டும் என்கிற வெறி விக்னேஷ்வரனை உலுப்பி எடுத்தது. அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

கிடைத்தது. அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அவன் காலடியிலேயே கிடைத்தது.

ஏதோ வேலையாகப் போன காந்திமதியின் தந்தை, அதிக மழை பெய்ததால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு இறந்து போன செய்தி அவனுக்கு எட்டப் பதறி அடித்துக்கொண்டு காந்திமதியைப் பார்க்கப் போனான்.

அங்கே காந்திமதி தனக்கு எஞ்சிய ஒரே ஒரு சொந்தமான தன் தம்பியை அணைத்தவாறு கதறி அழுது கரைந்துகொண்டிருந்தாள்.

தன்னைத் தேடித் தன்னவன் வந்துவிட்டான் என்று எண்ணிய அந்தப் பேதை, தன் தம்பியை விடுத்து, பாய்ந்து சென்று விக்னேஷ்வரனை அணைத்து அவன் மார்பில் விழுந்து கதற, அந்தச் சந்தர்ப்பத்திலும், அதிகமாகத் தழுவி தன் காமத்தைத் தணிக்க முயன்றான். ஆனால் தன் தந்தையை இழந்த துக்கத்திலிருந்தவளுக்கு, தன் காதலனின் அன்புத் தழுவலாகத்தான் தெரிந்ததன்றி, அதில் எந்தக் குற்றத்தையும் அவள் கண்டாளில்லை.

அவனுக்குத் தேவை காந்திமதி. அந்த நிலையில், அவள் கிடைப்பதற்காக அவர் எதையும் செய்யத் தயாராக இருந்தார். அதனால், அவள் தந்தையின் இறுதிக்காரியங்களைத் தன் கரத்தில் எடுத்துக்கொண்டான் விக்னேஷ்வரன்.

காரியங்கள் முடிந்த பின், யாருமற்ற அனாதையாக இருந்தவர்களை முன்னின்று ஏற்க யாருமே முன் வராத நிலையில், விக்னேஷ்வரனுக்கு அது பெரும் வாய்ப்பாகவே போனது.

ஆனாலும் நாள் தவறாமல் விக்னேஷ்வரன், காந்திமதியைப் பார்க்க வருவதையும், ஏதோ சாக்கிட்டு இளையவனை வெளியே அனுப்புவதையும் கண்ட அயலவர்களுக்கு அது சரியாகப் படவில்லை.

ஒரு அழகான இளைஞன் எதற்காக எதற்காக அடிக்கடி அங்கே வரவேண்டும். அதுவும் ஆண்கள் துணையில்லாத வீட்டிற்கு.. இதில் ஏதோ இருக்கிறது…’ என்பது போல ஊரார்கள் ஒரு மாதிரி பேசத் தொடங்க, உடனேயே விக்னேஷ்வரன் காந்திமதியை அழைத்துக்கொண்டு இன்னொரு வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

அதுவரை வாழ்ந்த அந்த வீடும் வாடகை வீடு என்பதால் அதை விட்டுச் செல்வது ஒன்றும் அவர்களுக்குச் சிரமமாக இருக்கவில்லை.

கிடைத்த சந்தர்ப்பத்தில் காந்திமதியோடு நெருங்கிவிட விக்னேஷ்வரன் துடிக்க, அந்த நிலையிலும் திருமணம் என்றால் மட்டுமே அவனோடு சேர்ந்து வாழ முடியும் என்று அவள் கட்டாயமாகக் கூறிவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் விக்னேஷ்வரன்.

அவருக்கு வேண்டியது அவள் உடல். அவளுக்கு வேண்டியது வெறும் மஞ்சள்கயிறு… சட்டப்படியா அவளை மணக்கப் போகிறார். இல்லையே… நான்கு பேர் அறியாமல் அவள் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டிவிட்டால் வேலை முடிந்தது என்று அவர் வக்கிர மனம் முடிவு செய்ய, உடல் முழுவதும் விஷமாகிப் போன விக்னேஷ்வரனுக்கு அதொன்றும் சிரமமாகவே தெரியவில்லை.

தனக்காக ஒருத்தி ஈழத்தில் காத்திருக்கிறாள் என்றோ, அவளுக்கு உன்மை தெரிந்தால் அவர் நிலை என்னவாகும் என்கிற எண்ணமோ அவனுக்குச் சிறிதும் தோன்றவில்லை. மாறாக, இரண்டு நாட்டிலும் பெண்கள் இருப்பது வசதிதான் என்கிற மகிழ்ச்சியில் அவளை மணக்கச் சம்மதித்தான்.

அதற்காக ஒரு நாளையும் பார்த்து, அவளுடைய தம்பி சாட்சிக்கு நிற்க, ஒரு கோவிலில் வைத்துக் காந்திமதியின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

தான் நினைத்தது விரைவிலேயே நடைபெறப் போகிறது என்று அகமகிழ்ந்திருந்த விக்னேஷ்வரன் தமது முதலிரவுக்காக, மன்னிக்கவும், அவளுடைய முதலிரவுக்காக, பூவும் பழமும் வாங்கிவருவதாகக் கூறிக் கடைக்குச் சென்றுவிட, அன்றைய இரவின் தனிமையை எப்படிக் கையாளப்போகிறோம் என்கிற நாணமும், பயமும் போட்டிபோட, தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தாள் பதினேழு வயதைக் கூட எட்டாத காந்திமதி.

மனம் விரும்பியவனே மணாளனாக வந்துவிட்டான் என்றால் மகிழ்ச்சிக்கு ஏது குறைவு. பெரும் குதூகலத்துடன் உள்ளே நுழைந்தவளின் பார்வையில் முதலில் தட்டுப்பட்டது, விக்னேஷ்வரனின் கைப்பெட்டிதான்.

விரைந்து சென்று எல்லையில்லாக் காதலுடன், அந்தப் பெட்டியை வருடிக் கொடுத்த காந்திமதி, ஆவலுடன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அதற்குள் நிறையக் காகிதங்களும், கோப்புகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அவற்றையும் வருடிக் கொடுத்தவள், மீண்டும் பெட்டியை மூட முயல, அதில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படம் இவள் கவனத்தைக் கலைத்தது.

என்ன படம்? என்று வியந்தவளாக, அதை இழுத்துப் பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்துபோய் அந்தப் படத்தையே வெறித்துப் பார்த்தாள். அந்தப் படத்தைக் கண்டவளின் உடல், அவளையும் மீறி நடுங்கத் தொடங்கியது. ஒரு வேளை தான் காண்பது பிரேமையோ என்று எண்ணியவளாகத் தன் விழிகளை அழுந்த துடைத்துவிட்டு மீண்டும் பார்த்தாள்.

அந்தப் படத்தில் தெரிந்த காட்சி சற்றும் மாறவில்லை.

“நோ… நோ… இதில் ஏதோ இருக்கிறது… நான் நம்பமாட்டேன்…” என்று உறுப்போட்டதுபோலத் தனக்குள் பலமுறை சொன்னவள், விக்னேஷ்வரன் வரவிற்காகக் காத்திருந்தாள். என்னதான் முயன்றும் கலங்கிய மனத்தை அவளால் சற்றும் கட்டுப்படுத்த முடியவில்லை.

விக்னேஷ்வரன் பெரும் குதூகலத்துடன் வந்தான். கைகளிலே பூவும் பழமும் வீற்றிருந்தன.

மகிழ்ச்சியுடன் உள்ளே வந்தவன், படுக்கையில் சிலையாக அமர்ந்திருந்தவளைக் கண்டதும், இன்னும் உற்சாகம் பொங்க,

“சாரிம்மா… கொஞ்சம் தாமதமாகிவிட்டது… இன்றைய இரவு நம் இருவருக்கும் இனிமையானதாக இருக்கவேண்டுமல்லவா… அதுதான்… மாசற்ற பூ பழம் வாங்கிவந்தேன்…” என்றவன் அவளருகே சென்ற படுக்கையில் அமர, விருக்கென்று எழுந்த காந்திமதி தன் அருகே நின்றிருந்தவனை வெறுப்புடன் ஏறிட்டாள்.

இவளுக்கு என்னவாகிவிட்டது? என்று குழம்பிய விக்னேஷ்வரன்,

“என்னம்மா… எதுக்கு எழுந்துவிட்டாய்… வா… ஆடைகளைக் களைந்துவிட்டு வந்து படு…” என்றான்.

காந்திமதியோ, அருவெறுப்புடன் அந்தப் படுக்கையைப் பார்க்க, யோசனையுடன் எழுந்த விக்னேஷ்வரன், திகைப்புடன் அவளை நெருங்கி தோள்களிலே கைபோட முயல, பலங்கொண்ட மட்டும் அவன் கரத்தைத் தள்ளிவிட்டு நான்கடி தள்ளி நின்றவள், தன் கரத்திலிருந்த படத்தை அவன் முன்பாக நீட்டி,

“என்ன இது…” என்றாள் அழுத்தமாக.

அந்தப் படத்தை விக்னேஷ்வரன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்டிக் கறுத்த முகத்துடன், அவளை வெறித்துப் பார்த்தவன்,

“உனக்கிது எப்படிக் கிடைத்தது, எங்கிருந்த இதை எடுத்தாய்…” என்றான் கறாராக.

அந்தப் படத்தைக் கண்டதும், அவன் முகம் போன போக்கையும், அவன் கோபத்தையும் கண்டுகொண்ட காந்திமதிக்கு உடலுடன் சேர்ந்து உயிரும் ஆடிப்போனது. அவனுடைய அந்தச் செயலே, அவன் தப்பானவன் என்பதை அப்பட்டமாகக் காட்டிக் கொடுக்க,

“எங்கே எடுத்தேன் என்பது முக்கியமில்லை… இந்தப் படத்தில் இருக்கும் செய்திதான் முக்கியம்… சொல்லுங்கள்… யார் இவர்கள்… இவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு… உங்களுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதா?” என்றாள் தன் நடுங்கிய குரலை மறைக்க முயன்று தோற்றவளாகக் கேட்க, மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்தார் விக்னேஷ்வரன்.

அந்தப் படத்தில், விக்னேஷ்வரன், தன்னுடைய இரண்டு வயது குழந்தை மிளிர்ம்ருதையைத் தூக்கியிருக்க, முகம் முழுவதும் பூரிப்புடன் அவர் மனைவி தமயந்தி தன் கணவன் மீது கொண்ட காதலைப் பறைசாற்றும்படி அவனுடைய வலக்கரத்தைப் பற்றியவாறு மிக நெருக்கமாக நின்றிருந்தாள்.

அதைக் கண்டு சற்றுத் தடுமாறியவாறே,

“காந்திமதி… அது…” என்று தடுமாற, அவன் முன்பாகத் தன் கரத்தைத் தூக்கி அவர் பேச்சைத் தடுத்து,

“உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதற்குரிய பதிலை மட்டும் சொல்லுங்கள் போதும்…” என்றாள் காந்திமதி கடுமையாக.

அந்தக் கடுமையில், விக்னேஷ்வரனுக்குச் சீற்றம் அதிகமாக, ‘இவள் யார் என்னைக் கேட்பதற்கு. நான் இவள் அடிமையா என்ன? பெட்டைக் கழுதை… யாருமில்லாத அனாதை… நான் இல்லையென்றால், இவள் நிலை என்ன? அதைக் கூட யோசிக்காமல் என்மீதே காய்கிறாளே… அதுவும் அவனுடைய கையை எதிர்பார்க்கும் ஒருத்திக்கு இத்தனை திமிர் இருக்கலாமா?’’ தவறு செய்தவன்தானே நிதானம் இழப்பான். விக்னேஷ்வரன் நிதானம் இழந்தான். அதுவரையிருந்த கொஞ்ச மனசாட்சியும் அவரை விட்டு விடை பெற்றுச் செல்ல,

“என்னடி… விட்டா… அதிகம் பேசிக்கொண்டு செல்கிறாய்… ஆமாம்… எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு வயதில் மகளும் இருக்கிறாள். அதற்கு நீ என்ன செய்யப்போகிறாய்… இதோ பார்… எனக்கு நீ வேண்டும்… முழுதாக. சரி அதற்குத் திருமணம்தான் தீர்வென்றால், அதற்குத் தயங்காமல் தாலியும் கட்டிவிட்டேன். அதற்குப் பிறகு எதற்கு இந்த நாடகம்… ம்… உனக்கு வேண்டியது தாலி, எனக்கு வேண்டியது நீ… வா..! ஆடைகளைக் களைந்துவிட்டு வந்து படு…!” என்று ஆங்காரமாகச் சொன்னவனை அகோரத்துடன் பார்த்தாள் காந்திமதி.

“சீ… வாயை மூடு… நீ எல்லாம் ஒரு மனுஷன் தூ…! வெட்கமாக இல்லை…? பதினாறு வயதுதானே, சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தாயா? சிறு வயதிலிருந்து வலியை மட்டும் பார்த்து வளர்ந்தவள்… எனக்கிருக்கும் பக்குவத்திற்கும் அறிவிற்கும் தரங்கெட்ட நீ கூடக் கிட்டே நிற்கமுடியாது… !மரியாதையாக வெளியே போ…!” என்று அவள் சீற,

“என்னையே வெளியே போகச் சொல்கிறாயா? எத்தனை தைரியம் உனக்கு…? யாரும் இல்லாத அநாதைக் கழுதை நீ… என் கையையே எதிர்பார்க்கும் உனக்கு இவ்வளவு திமிரா…! சத்தம் போடாமல் ஆடைகளை அவிழ்த்து விட்டு வந்து படுடி…” என்று விக்னேஷ்வரனும் சீற,

“சீ… காமுகனே…! இது திமிரில்லை… மிருகமே… இது திமிரில்லை…! இது தன்மாணம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிற தற்பாதுகாப்பு… சின்னவள்தானே, எதுவும் செய்யலாம், வேலியில்லாதவள்தானே, பயிரை மேயலாம் என்று நினைத்தாயா… ஒட்ட நறுக்கிவிடுவென்…” என்று ஆங்காரமாகச் சீற்றத்துடன் காந்திமதி கத்த,

“யாரைப் பார்த்து மிருகம் என்றாய்… என்னையா…? உன்னை என்ன செய்கிறேன் பார்…!” என்று அவளை நோக்கி வர முயல, இவளோ,

“வேண்டாம் அங்கேயே நில்…! உன்னை மாதிரி என்னால் ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாட முடியாது… உனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது தெரிந்திருந்தால், நிச்சயமாக உன்னை நிமிர்ந்துகூடப் பார்த்திருக்க மாட்டேன். இதோ பார்..!. உனக்கு இன்னும் ஐந்து நிமிடம் அவகாசம் தருகிறேன்… மரியாதையாக வெளியே போ… இல்லை…” என்று மூச்சிரைக்கச் சொன்னவளைக் கேலியாகப் பார்த்தான் விக்னேஷ்வரன்.

“இல்லை என்றால் என்ன செய்வாய்?” என்று கிண்டலுடன் கூறியவன் காந்திமதியை மேலும் நெருங்கினான்.

அவனால் அவனைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை. உடலில் எந்தப் பேய் வந்து அமர்ந்ததோ. நிராகரிக்கப்பட்ட கோபம், ஒரு பெண் தன்னை ஏளனமாகப் பேசுவதா என்கிற அகங்காரம், அவள் உடலின் அழகு கொடுத்த தாபம், எல்லாமாக அவனுடைய அறிவை மறைத்தது.

“கிட்டே வராதே…! அங்கேயே நில்…!” என்று அவனை எச்சரிக்கை செய்தவளை அவன் லட்சியமே செய்யவில்லை. அவளை நெருங்கினான்.

“மரியாதையாக வெளியே போ..!.”

“மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது காந்திமதி… நாமாகப் பிடுங்கினால்தான் உண்டு…” என்றவாறு அவளுடைய தோளில் கரத்தை வைத்த மறு நொடி ஆவேசம் கொண்டவளாகக் காந்திமதி அவனுடைய கன்னத்தில் அறைந்தாள்.

அவள் மறுத்த கோபம், அவள் அறைந்த ஆத்திரம், தன் பொய் முகம் தெரிந்துவிட்டதே என்கிற சீற்றம், இத்தனை நாளாக அவளுக்குத் தண்டமாகச் செலவழித்த எரிச்சல், என்று எல்லாமாகச் சேர்ந்து அவனை மிருகத்திற்கும் மேலாக ராட்சசன் ஆக்கியது. அவனிடத்தில் இருந்த மனிதமும், மிருகமும் தொலைந்து போக, அதையும் தாண்டி அகோரமான வரையறுக்க முடியாத ஐந்து அவனுள் புகுந்து கொண்டது.

அதற்குப் பிறகு விக்னேஷ்வரன் மிருகமானான். அவள் திமிறத் திமிற, கதறக் கதற, அவளைக் கசக்கிப் பிழிந்தான். என்னதான் போராடியும், அந்த இளஞ்சிட்டால், அந்த ராட்சசனின் பிடியிலிருந்து சிறிதும் விலக முடியவில்லை. இறுதி வரை போராடினாள்… ஆனால் அவளால் தன் பெண்மையைக் காப்பாற்ற முடியவில்லை. அவனோ அவளைப் பலவந்தமாக அனுபவித்தான். ஒரு முறையில்லை, பல முறை அவளைக் கசக்கிப் பிழிந்தான்.

மறு நாள் நசுக்கப்பட்ட கொடியாக எழ கூடத் திரணியற்று, வலியில் முனங்கியவாறு இரத்தவெள்ளத்தில் கிடந்தவளை வெற்றிப் புன்னகையுடன் அலட்சியமாகப் பார்த்தான் விக்னேஷ்வரன். அவன் உள்ளம் சற்றும் இரங்கவில்லை.

எழவே முடியாத வலியில் படுக்கையில் கிடந்தவளுக்கு, அந்த நிலையிலும் விக்னேஷ்வரனைப் பார்க்க அருவெறுக்கத் தன் தலையைத் திருப்பிக்கொண்டாள். அவனோ,

“இனி என்னுடைய சிரமம் உனக்கிருக்காது காந்திமதி. நான் இன்று இலங்கை போகிறேன்… குட் பாய்…” என்றவனை அந்த வலியிலும் ஆத்திரத்துடன் திரும்பிக் கலங்கிய விழிகளுடன் பார்த்தாள் காந்திமதி.

“போய் வா… விக்னேஷ்வரன்… போய் வா…!. ஆனால் நீ இதற்குப் பதில் சொல்ல வேண்டும்… அப்போது நான் அனுபவித்த வலியை விட அதிகமாக நீ அனுபவிப்பாய்… உனக்கும் ஒரு மகள் இருக்கிறாள் அல்லவா… மறந்து விடாதே… அப்போது நீ வாங்கும் அடியிலிருந்து உன்னால் நிச்சயமாக எழுந்திருக்க முடியாது… பெண் பாவம் பொல்லாதது… என்னை மட்டுமல்ல, உன் மனைவிக்கும் துரோகமிழைத்த நீ… நன்றாகவே இருக்கமாட்டாய்… நிச்சயம் நன்றாக இருக்க மாட்டாய்… என்றாவது ஒரு நாள்… நீ செய்த இந்த மாபாதகத்தை நினைத்துத் துடிப்பாய்… இறைவன் இருப்பது உன்மையானால்… அவன் உன்னைத் துடிக்க வைப்பான்…” என்றாள் அவள் பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்பியவாறு.

அதைக் கேட்டுக் கடகடவென்று சிரித்த விக்னேஷ்வரன்,

“சரிதான்… போடி…! பெரிய பத்தினி… சாபமிட வந்துவிட்டாள்…” என்று ஏளனமாகக் கூறிவிட்டு பெட்டியுடன் வெளியே வர, அங்கே அந்தப் பதினொருவயது அபயன், மார்புக்குக் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டியவாறு, ஒருவிதமான சில்லிடும் பார்வையுடன் விக்னேஷ்வரனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஏனோ அந்தப் பார்வையில் ஒரு கணம் ஆடிப்போன விக்னேஷ்வரன், பின் எப்போதும் போல, அலட்சியத்துடன்.

“சரிதான் போடா… இவன் என்ன என்னைப் பார்ப்பது? பொடிப்பயல்…” என்கின்ற கிண்டலுடன், வெளியேறினான் அந்த மனித உருக்கொண்ட ஜந்து.

 

 

What’s your Reaction?
+1
9
+1
0
+1
0
+1
0
+1
14
+1
4

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!