(1)
“அ… அப்பா… என்னப்பா சொல்கிறீர்கள்? திருமணமா? அதுவும் எனக்கா?” என்று அதிர்ச்சி விலகாமல் தன்னுடைய பெரிய நீண்ட விழிகளை விரித்துக் கேட்டாள் மிளிர்ம்ருதை.
“என்ன செய்வது மகளே… இந்த வயசில் நான் திருமணம் செய்ய முடியாதே…” என்று பெரும் அப்பாவியாகக் கூறிய தந்தையைச் சிணுங்கலுடன் பார்த்த மகள்.
“என்னப்பா… விளையாடுகிறீர்கள்? எனக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது? இப்போதுதானே பதினெட்டு… அதற்குள் திருமணமா? அதுவும் நான் படிக்க எவ்வளவோ இருக்கும்போது…” என்று குறையோடு கூறியவளை மலர்ச்சியுடன் பார்த்தார் தந்தை விக்னேஷ்வரன்.
“படிப்பை விடும்மா… கழுதை… எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். ஆனால் வாழ்க்கை? அப்படி அல்லம்மா…! ஒரு முறைதான் கதவைத் தட்டும். அதைப் புறந்தள்ளி விட்டோமானால், வேண்டும் போது அது நம்மைத் தேடி வராது கண்ணம்மா… தவிர, வாழ்க்கை போலத்தான்டா வயதும்… அது ஒரு போதும் நம்மோடு ஒட்டி வரப்போவதில்லை. அந்த அந்த வயதில் செய்வதை யாருக்காகவும் விட்டுவிடக்கூடாது… விட்டுவிட்டோமென்று வை… அதன் பிறகு வேண்டினாலும் கிடைக்காது கெஞ்சினாலும் திரும்ப வராது… அனுபவஸ்தன் சொல்கிறேன் கேள் மகளே…! காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். மனதுக்குப் பிடித்த மணவாளன் வாழ்க்கைத் துணையாக வரும்போது யோசிக்காமல் ஏற்றுக்கொண்டுவிடவேண்டும்..” என்றவரைச் சற்று எரிச்சலுடன் பார்த்தாள் மிளிர்ம்ருதை.
“ஆமாம்… பெரிய மணாளன்… யார் அந்த மணாளன்? என்னுடைய வாழ்கையையே இப்படிக் குழி தோண்டிப் புதைக்க வந்த மகா பிரபு?” என்று கேட்ட மகளைப் புன்னகையுடன் பார்த்த தந்தை,
“அப்படிக் கேள்… சொல்கிறேன்..!. அந்தத் தம்பியுடைய பெயர் அபயவிதுலன்..!. கனடாவில் கட்டடப் பொறியியலில் முதுகலைப் பட்டம் எடுத்திருக்கிறார் சொந்தமாகப் பெரிய நிறுவனம் ஒன்று வைத்திருக்கிறார். எக்கச்சக்க பணம்…” என்றவரை இடை நிறுத்திய மகள்.
“பணத்தை விடுங்களப்பா… நம்மிடம் இல்லாத பணமா? அவருடைய குணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்…” என்றாள் அதுதான் முக்கியம் போல.
“நீ சொல்வது போலப் பணம் முக்கியமில்லைதான்… ஆனால் அந்தத் தம்பியிடம் நம்மிடம் இருக்கும் பணத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது… நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இவ்வளவு பணம் இருந்தும், அந்தத் தம்பி சொக்கத் தங்கமாக இன்று வரை தவறான பாதையில் போகாமல் எந்தத் தப்புத் தண்டாவும் செய்யாமல், பத்தரைமாற்றுத் தங்கமாக இருக்கிறார்… நான் நன்றாக இதைப் பற்றி விசாரித்துவிட்டேன்…” என்று அவர் பெருமையுடன் கூற,
“கனடா என்று சொல்கிறீர்களே அப்பா… உங்களை விட்டுவிட்டு நான் எப்படி…” என்று கலக்கத்துடன் கேட்ட மகளை அன்பாக ஏறிட்ட தந்தை,
“என்னம்மா பேசுகிறாய்… இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கொண்டு இப்படி யோசிக்கலாமா? உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தால், நான் அங்கே வருகிறேன். என்னைப் பார்க்க வேண்டுமானால் நீ இங்கே வா… இதெல்லாம் ஒரு பிரச்சனையா…” என்றவர், தன் மகளை நெருங்கி, அவள் தலையை வருடிக் கொடுத்தவாறு,
“கண்ணம்மா… உனக்கு இந்த உலகில் உள்ள அத்தனை சிறந்தவையும் கிடைக்கவேண்டும் என்று இராப்பகலாகக் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருப்பவன் நான்… உனக்குக் கெட்டது நடக்க விடுவேனா…? இந்தத் தம்பிதான் உனக்குரிய மாப்பிள்ளைம்மா…! இவனைப் போல ஒருவன் இனி கிடைப்பானா என்று எனக்குத் தெரியவில்லை…” என்றவர், அருகேயிருந்த மேசையின் இழுப்பறையைத் திறந்து, அதற்குள் பத்திரமாக வைத்திருந்த ஒரு உறையை வெளியே எடுத்து, அதை அவளிடம் நீட்டியவாறு,
“இதோ அவருடைய படம்… பார்த்துக்கொள்…” என்று கூறியவாறு படத்தை அவள் முன்பாக நீட்ட, இன்னும் திருப்தியடையாதவளாகவே அந்த உறையைத் தன் கரத்தில் பெற்றுக் கொண்டவள் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே, அலட்சியமாக அதை அட்டையிலிருந்த படத்தை இழுத்து எடுத்துப் பார்த்தாள்.
படத்தின் பின் புறம் மட்டுமே தெரிய, தன் உதடுகளைச் சுழித்தவாறு திருப்பிப் பார்த்தாள். பார்த்தவளின் கண்மணிகள் தன் அசைவை நிறுத்தின.
படத்திலிருந்தவனைப் பார்த்த அந்தக் கணம், தன்னிலை கெட்டவளுக்கு விழிகளை விலத்தவே முடியவில்லை. ‘இவனா? இவனையா எனக்கு அப்பா பார்த்திருக்கிறார்?” என்றெண்ணியவள் வியப்பு மாறாமல் மீண்டும் அந்தப் படத்தையே பார்த்தாள்.
“சுருண்ட அடர்த்தியான முடி. அறிவைப் பறைசாற்றும் அகன்ற நெற்றி. அதற்குக் கீழ் தடித்த கரிய இமைகள். நீளமும் அல்லாத, அகலமும் இல்லாத இதயத்தைக் குத்திக் கிழிக்கும் கூர்மையான ஊடுருவும் பார்வை. தொட்டால் சுடும் என்பது போன்ற கூரிய நாசி. அழுத்தமான கடின உதடுகள். மெல்லியதாகச் சிரித்துக்கொண்டிருந்ததால், அந்தச் சிரிப்பில் கூட ஒரு வித கர்வம் வழிந்தது. இரட்டை நாடி. அகன்ற மார்பு… மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியிருந்ததால், சட்டையையும் மீறித் திமிறிக்கொண்டிருந்த தசைக் கோளங்கள்… இவனுக்கு அவள் பொருத்தமாக இருப்பாளா? தனக்குள்ளேயே எழுந்த சந்தேகத்துடன் தந்தையைப் பார்த்தாள் மிளிர்ம்ருதை.
“அ… அப்பா… இவருக்கு நான்… பொருத்தமாக இருப்பேனா?” என்று சிரமப் பட்டு ஏக்கம் குரலிலே விழுந்துவிடாத வண்ணம் கேட்டவளை மெல்லிய கிண்டல் கலந்த நகைப்புடன் பார்த்தார் தந்தை.
இதுவரை கீறல் விழுந்த டேப் ரிக்கோர்ட் போல வேண்டாம் வேண்டாம் என்றவள், மாப்பிள்ளையின் முகத்தைக் கண்டதும் சரணாகதி அடைந்துவிட்டது புரிந்தது. எழுந்த நகைப்பை வெளிக்காட்டாமல் சிரமப்பட்டு அடக்கியவர்,
“என்னம்மா…! அப்படிக் கேட்டுவிட்டாய்? உன்னைக் கட்ட அந்தத் தம்பி கொடுத்து வைத்திருக்கவேண்டும். சொல்லப்போனால், உன்னுடைய அழகுக்கும் குணத்துக்கும், ஏற்ற மாப்பிள்ளைதான் இந்தப் பையன். இல்லாவிட்டால், உன்னைக் கடைத்தெருவில் தற்செயலாகச் சந்தித்து, நீ யார் என்று விசாரித்து, உன்னை மணக்க விரும்புவதாகத் தூதனுப்பியிருப்பாரா?” என்றவர் பின் பெரும் சோகம் போல,
“சரி விடம்மா… உன்னைக் கட்ட அந்தத் தம்பிக்குக் கொடுத்து வைக்கவில்லை… இப்போதே சொல்லிவிடுகிறேன்… என் மகளுக்கு இந்தச் சம்பந்தத்தில் இஷ்டமில்லை என்று…” எனப் பெரு மூச்சுடன் சொன்னவரைப் பதட்டத்துடன் பார்த்தாள் மிளிர்ம்ருதை.
‘என்னது… இஷ்டமில்லை என்று சொல்லப்போகிறாரா… அது… அது எப்படி…” என்று எண்ணியவள் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்தாள்.
ஏனோ அந்த விழிகள் அவளைப் பார்த்து வா வா என்று அழைப்பது போல இருக்க, இப்போதே அந்தப் படத்துக்குரியவனைத் தேடிச் சென்றுவிடவேண்டும் என்கிற ஒரு பரபரப்புத் தொற்றிக்கொண்டது.
இவனை வேண்டாம் என்று சொல்ல இனி அவளால் அது முடியுமா? அந்தப் படத்தைப் பார்த்த கணத்திலேயே அவன்… அதுதான் அபயவிதுலன் அவளுடைய விழிகளினூடாகச் சென்று இதயம் என்கிற கற்பக்கிரகத்திலேயே கொலுவேறிவிட்டானே… அவனை எப்படி இஷ்டமில்லை என்று சொல்லி அப்படியே விட முடியும்?’ தன் சிந்தனை போன போக்கை எண்ணி அதிர்ந்துபோனாள் மிளிர்ம்ருதை.
இது எப்படிச் சாத்தியம். இதுவரை யாரென்றே தெரியாத ஒருவன், பார்த்த அந்த நொடியில், அதுவும் படத்தில் பார்த்த அந்தக் கணம், இவன்தான் என்னவன் என்று அறுதியிட்டுக் கூற முடிகிறது. அதுவும், படங்களில் வருவது போலக் கற்பனைச் சிறகுகள் பரந்து விரிந்து, அவனுடன் டூயட்டும் அல்லவா பாடத் தொடங்கிவிட்டன. இப்படி எங்காவது நடக்குமா என்ன? தன்னை மறந்து அவனுடைய ஆளுமை கலந்த கம்பீரத்தில் மயங்கிப் போனவள், தந்தையின் குரலில் திடுக்கிட்டுத் திருத் திரு என்று விழித்தாள்.
“என்னம்மா… இந்தச் சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிடவா?”
‘என்ன… வேண்டாம் என்று சொல்வதா? இவனையா…? இவன் இல்லையென்றால், இனி யாருமே தன் வாழ்வில் வர முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டவள், வேகமாகத் தன் தலையை மறுப்பாக ஆட்டி,
“ஐயையோ…! வே… வேண்டாம் அப்பா… உங்களுக்கு விருப்பமில்லாத எதையும் நான் செய்ததில்லை… செய்யப் போவதுமில்லை. உங்களுக்குப் பிடித்திருந்தால் நான் மறுக்கப்போவதில்லை…” என்று அவசரமாகக் கூறியவளைக் குறும்புடன் பார்த்தார் தந்தை.
“இல்லை மகளே… நீயோ வேண்டாம் என்கிறாய்… அதற்குப் பிறகும் நான் எப்படி வற்புறுத்துவேன்… எனக்காக நீ மணம் முடித்துப் பின் வருந்தக் கூடாது அல்லவா… எனக்கென்னவோ நீ யோசிப்பது போல இருக்கிறது… அதனால் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்…! உனக்குப் படிப்பு முக்கியம்… முதலில் அதைக் கவனித்துக் கொள்…” என்று பெரிதாக யோசிப்பதுபோலச் சொன்னவரை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மகள்.
“அ… அப்பா…!”
“என்னம்மா?”
“நீ… நீங்கள் தானே சொன்னீர்கள்… படிப்பு எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்று…” என்றாள் மகள் சுண்டிப்போன முகத்துடன்.
“இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன் கண்ணம்மா… ஆனால் நீ தானே வேண்டாம் என்கிறாய்… பிடிக்காத திருமணத்தைக் கட்டாயப்படுத்தக் கூடாது! அதனால்… இந்தச் சம்பந்தத்தை வேண்டாம் என்று மறுத்து விடுகிறேன்…” என்றார் அவரும் தலையை உருட்டி உருட்டி.
தந்தை சொன்னதைக் கேட்டதும், வலதுகரத்துப் பெருவிரலை வாய்க்குள் கொண்டுசென்று நகத்தைக் கடிக்கத் தொடங்கியவள் தந்தையை மேல் கண்ணால் பார்க்க, அதைக் கண்ட விக்னேஸ்வரனுக்குச் சிரிப்பில் உதடுகள் விரிய முயன்றன.
மனதுக்குப் பிடிக்கதவை நிகழ்ந்தால், இப்படித்தான் பெருவிரல் நகத்தை மென்று துப்புவாள். எத்தனையோ முறை திருத்த முயன்று தோற்று அப்படியே விட்டுவிட்டார் விக்னேஸ்வரன். இப்போதும் அவன் தனக்கு கிடைக்காமல் போய்விடுவானோ என்கிற அச்சத்தில் நகத்தைப் பற்களால் நன்னத் தொடங்க, அதைக் கண்டும் காணாதவருமாக,
“இப்போதே அழைத்துச் சொல்லிவிடுகிறேன்… யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ…” என்று முனங்கியவராகக் கைபேசியை எடுக்க முயல, அதுவரை பற்களுக்குள் சிகிச் சின்னாபின்னப் பட்டுக்கொண்டிருந்த விரல்களை அவசரமாக விலக்கி, இயலாமையுடன் தன் தத்தையைப் பார்த்த மிளிர்ம்ருதை,
“வே… வேண்டாம்…” என்று அவசரமாகக் கூறியவள், அடுத்து என்ன சொல்வது என்று புரியாமல் திருத்திரு என்று விழிக்க, விக்னேஷ்வரனோ,
“இந்தக் கல்யாணம் தானே வேண்டாம்… சரி சொல்லிவிடுகிறேன். எங்களுக்குக் கொடுப்பினை இல்லை. வேறு யாரும் நல்ல பெண்ணாகப் பார்க்கும்படி கூறிவிடுகிறேன்…” என்றதும், என்ன சொல்லித் தடுப்பது என்று புரியாமல் நின்றாள் அப் பேதை.
ஒருவாறு தன்னைத் திடப்படுத்தியவளாக,
“இல்லையப்பா… எனக்கு… வந்து… எனக்கு இவரைப் பிடித்திருக்கிறது…” என்றாள் மெல்லிய குரலில். முகமோ வெட்கத்தால் சிவந்து போகக் கயல்விழிகளோ நாணத்தால் தரையைப் பார்த்தன. செங்காந்தள் இதழ்களோ மிதமிஞ்சிய சங்கோஜத்தில் பற்களுக்குள் சிறைப்பட்டிருந்தன. அதைக் கண்ட தந்தைக்கு மேலும் உற்சாகம் பீரிட்டுக்கொண்டு வர, அதை அடக்க முடியாமல் தவித்தவராக,
என்னம்மா சொல்கிறாய்? இப்போதுதான் வேண்டாம் என்றாயே… பிறகு என்ன?” என்றார் தந்தை.
“ஐயோ…! அப்பா…! அது… அது அப்போது… அவருடைய படத்தைப் பார்ப்பதற்கு முன்பு… இப்போது… அவரைப் பிடித்திருக்கிறது… அவரை மட்டும்தான் பிடித்திருக்கிறது… ப்ளீஸ்ப்பா…” என்று கூறியவளை மேலும் சோதிக்க விரும்பாதவராக நகைத்தவர் விழிகள் பணிக்க மகளின் அருகே வந்தார்.
தாயில்லாத பிள்ளை… துக்கமோ மகிழ்ச்சியோ அவருடன்தான் பகிர்ந்துகொள்ளுவாள். கண்ணின் மணியாக வளர்த்த மகளின் சுவை என்னவென்று அவருக்குத் தெரியாதா என்ன? தன் மகளின் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தவர்,
“தெரியும் கண்ணம்மா… உனது விருப்பம் அறிந்துதான், இந்த மாப்பிள்ளையுடைய படத்தைப் பார்த்ததும், உடனேயே சம்மதம் தெரிவித்து விட்டேன்…” என்று கூற, தன் தந்தையை இறுக அணைத்துக்கொண்டாள் மகள்.
“தாங்ஸ்பா…” என்றவளை அரவணைத்துத் தன் அன்பைத் தெரிவித்துவிட்டு விலகிய விக்னேஷ்வருக்குக் கால் தரையில் பதியவில்லை. உள்ளமும் உடலும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன.
“சரிம்மா… நான் மிச்ச ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்… மாப்பிள்ளையை நேராக உன்னை வந்து பார்க்குமாறு கேட்கவேண்டும்…” என்றவாறு அவர் உள்ளே செல்ல, தன் தந்தையைப் பெருமையில் மார்பு விம்மப் பார்த்துக்கொண்டிருந்தாள் அன்பு மகள்.
மிளிர்ம்ருதைக்கும் தன் தந்தையை நினைத்த மாத்திரத்தில் பெருமையால் மார்பு விம்மித் துடித்தது. அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வார். அவளுக்கு வலித்தால், தனக்கு வலித்ததுபோலத் துடித்துப் போவார்.
அவளுடைய எட்டாவது வயதில் தாய் தயாமதி இறைவனடி எய்திய போது, தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருந்து அவளை வழி நடத்தியவரல்லவா. தாய் இறந்த பின்பு மறு மணம் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாகத் தனித்து நின்று அவளை வளர்த்து ஆளாக்கியவர் அவர்.
அவள் பெரிய பெண் ஆனாள் என்பதை முதலில் அறிந்தவரும் அவர்தான். உடனே தாயுமானவராகிப் போனார் விக்னேஷ்வர். அப்படிப்பட்ட ஒரு தந்தை கிடைப்பது கூட, முற்பிறப்பில் கிடைத்த பாக்கியம்தானே.
இப்போது கூட அவளுடைய விருப்பத்திற்கு ஏற்றாட் போல வாழ்க்கைத் துணையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாரே.
கட்டுக்கடங்கா மகிழ்ச்சியில் உள்ளம் குதியாட்டம் போட தன் கரத்திலிருந்த படத்தையே தூக்கிப் பார்த்தாள் மிளிர்ம்ருதை. மீண்டும் அந்தக் கூரிய பார்வை உயிர்த்தெழுந்து அவளை உள்ளே இழுப்பது போன்ற மாய வலையில் சிக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் நினைவில் கரையத் தொடங்கினாள் அப் பேதைப் பெண்.
(2)
தொலைப்பேசியிலேயே திருமணம் முற்றாகியது. அதற்கு முதல் பெண்பார்க்கும் படலம் வைக்கலாம் என்று ஆலோசித்தபோது, அதற்கு அபயவிதுலன் ஆரம்பத்திலேயே தடைவிதித்து விட்டான்.
அவனைப் பொறுத்தவரையில் இது தேவையற்ற நேர விரயம். பெண்ணை அழைத்துவருவதிலும் அவளைக் கொலு பொம்மையைப் பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டுப் போவதிலும் அவனுக்கு உடன்பாடில்லை. அதுதான் அவளை ஏற்கெனவே பார்த்து, மணமுடிப்பதாக முடிவு செய்தாகிவிட்டதே, இனி பார்ப்பதற்கு என்ன இருக்கிறது… என்று மறுத்துவிட, மிளிர்ம்ருதைக்குத்தான் அது பெரும் ஏமாற்றமாகிப்போனது.
அவன் அவளைப் பார்த்துவிட்டான்தான்… ஆனால் அவள்… புகைப்படத்தில் மட்டுமே கண்டு ரசிக்கப்பட்டவன், நேரடியாகக் கண்டு உவகைக் கொள்ள முடியாமல் தடுத்துவிட்டானே… ‘சே பெண் பார்க்கும் படலத்தைச் சாக்காக வைத்து நேராகவே அபயவிதுலனைப் பார்க்கலாம் என்று நினைத்தால், அது புஸ் வானமாகிவிட்டதே… ‘டே விதுலா… ஏன்டா அப்படிச் செய்தாய்…’ என்று மனதோடு அவனுடன் செல்லச் சண்டை போட்டவளுக்கு எப்படி அவனை நேரடியாகப் பார்ப்பது என்று தெரியவேயில்லை.
எப்படியாவது அவன் வாயால் தன்னைப் பிடித்திருக்கிறதா? என்கிற கேள்வியைக் கேட்கவேண்டும் என்கிற ஆவல் உந்தித்தள்ளியது. கூடவே, அவன் சம்மதத்தையும் காதுகுளிரக் கேட்கவேண்டும் என்கிற பேரவா எழுந்தது. அதே போல, அவனுடைய படத்தைக் கண்டதுமே, அவன் மீது காதலில் விழுந்துவிட்டேன் என்பதையும், அவனைக் கண்ட நொடி, தன் மனதில் எழுந்த மகிழ்ச்சியையும், உள்ளத்தில் பதாகையாகப் பதிந்து போனான் என்கிற உண்மையையும் அவனிடம் சொல்லிவிடவேண்டும் என்று உள்ளம் பரபரத்தது. ஆனால் அவளுடைய விருப்பம் மண்ணோடு மண்ணாகப் போனதோடு, எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று எண்ணியவளுக்கு அது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது.
சரி திருமணம் நிச்சயிக்கப் பட்ட பிறகு, எப்படியும் திருமணம் நடக்க இரண்டு மூன்று மாதங்களாவது எடுக்கும் அதற்கிடையில் அவனைத் தனியாகச் சந்திக்கமாட்டோமா. என்று தன்னைத் திடப்படுத்தியவளுக்கு, அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனது.
வெளியே சென்ற தந்தை பெரும் குதூகலத்துடன் திரும்பி வந்தார்.
“அம்மா… மாப்பிள்ளை உடனடியாகக் கனடா போக வேண்டுமாம். அதனால் வருகிற வெள்ளிக்கிழமை நாள் நன்றாக இருப்பதால் அன்றைக்கே திருமணத்தை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்கிறார்…” என்றார் அவர்.
“எ… என்னப்பா… வருகிற வெள்ளிக் கிழமையா? அது எப்படியப்பா… அதற்கு இன்னும் நான்கு நாட்கள் தானே இருக்கின்றன… அதற்குள் எப்படித் திருமண வேலைகளைச் செய்ய முடியும்?” என்று புரியாமல் கேட்டவளை ஏறிட்டார் தந்தை.
“நானும் அதைத்தான் கேட்டேன்… அதற்கு மாப்பிள்ளை, திருமணத்தை எளிமையாகவே வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். அவரைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் திருமணத்தை வைத்துப் பணத்தை விரயமாக்குவதை விட, அந்தப் பணத்தை ஏழை எளியவர்களுக்குக் கொடுத்தால் அவர்களின் வாழ்த்தே நமக்கு ஜென்ம ஜென்மத்திற்கும் போதும் என்கிறார்… மாப்பிள்ளை சொல்வதிலும் தவறில்லையே… நீ என்னம்மா நினைக்கிறாய்? உனக்குப் பெரிய அளவில் திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால், தயங்காமல் சொல்லிவிடு… நான் மாப்பிள்ளையோடு பேசிப் பார்க்கிறேன்…” என்று யோசனையுடன் கூறியவரைப் புன்னகையுடன் ஏறிட்டாள் மிளிர்ம்ருதை.
பொதுவாக அவளுக்கும் ஆடம்பரமாக விழாக்கள் கொண்டாடுவதில் அத்தனை விருப்பமிருந்ததில்லை. அவள் கூட அந்தப் பணத்தை வேறு ஏதாவது நல்ல காரியத்திற்குப் பயன் படுத்தினால், எல்லோருக்குமே நல்லது என்று எண்ணுவாள். தன் சிந்தனையும், அபயவிதுலனின் சிந்தனையும் ஒத்துப் போவதை ஒரு இனிய உணர்வுடன் ஏற்றுக் கொண்டவள்,
“இல்லையப்பா… எனக்குமே பொதுவாக ஆடம்பரமாக எது செய்வது என்றாலும் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியும்தானே. அவரும் என்னைப் போலவே யோசிக்கிறார்… எளிமையாகவே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்பா… எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது…” என்றவளின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தாலும், கூடவே மெல்லிய யோசனையின் சாயல் வந்தமர, அதைக் கண்ட விக்னேஷ்வர்,
“என்னம்மா… உன் முகம் தாமரை போலக் கூம்பிப் போய்விட்டதே…” என்றார் வாஞ்சையாக.
“ஒன்றுமில்லை அப்பா… எப்படியாவது திருமணத்திற்கு நாள் இருக்கும், அந்தச் சந்தர்ப்பத்தில் அவருடன் பழகிப் பார்த்து அவரைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளலாமே என்று எண்ணியிருந்தேன்…” என்றாள் வருத்தத்துடன்.
அவளுடைய குரலில் அவனை நேராகப் பார்க்க முடியவில்லையே என்கிற வேதனை அப்பட்டமாகத் தெரிய,
“கவலைப் படாதேம்மா… நான் மாப்பிள்ளையிடம் பேசிப் பார்க்கிறேன்…” என்றதும் வேகமாகத் தடுத்தாள் மகள்.
“ஐயையோ…! வேண்டாம்… அவரிடம் போய் இதைப் பற்றிக் கூறினால் நம்மைப் பற்றித் தவறாக நினைத்தாலும் நினைப்பார்…” என்று அவள் மறுக்க அவளுடைய தலையை வருடிக் கொடுத்த தந்தையை நிமிர்ந்து பார்த்து,
“அப்பா அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதே… அவருடைய அம்மா அப்பா யாரைப் பற்றியும் எனக்குத் தெரியாது… இப்படித் திடீர் என்று திருமணம் வைத்தால், நான் எப்படி அவர்களைப் புரிந்துகொள்வேன்… அதுதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது…” என்ற மகளின் கன்னத்தை வருடிக் கொடுத்த தந்தை,
“மாப்பிள்ளைக்கு ஒரே ஒரு சகோதரிதானாம்… மாப்பிள்ளையுடைய தாய் தந்தை அவர் சிறுபிள்ளையாக இருந்தபோதே விபத்தொன்றில் இறந்துவிட்டார்களாம். அதன் பிறகு அவர் சகோதரிதான் தம்பியை வளர்த்தாராம். அவர்களும் திருமணத்திற்கு வருவதற்கு முயற்சி செய்கிறார்களாம்… மற்றும்படி சொல்லிக்கொள்ளும்படி பெரிய உறவினர்கள் என்று இல்லையாம். அதனால் தம்பியின் பக்கத்திலிருந்து அதிகமான உறவினர் வர வாய்ப்பில்லை மிளிர்…”
“ஏனப்பா… அவருடைய சகோதரிக்கு குடும்பமில்லையா?” என்று கேட்டாள் மிளிர்ம்ருதை.
“இல்லையம்மா… தம்பிக்காகவே அந்தப் பெண்மணி திருமணம் முடிக்கவில்லையாம்… இப்படி ஒரு சகோதரி கிடைக்கக் குடுத்தல்லவா வைத்திருக்கவேண்டும்…” என்றார் விக்னேஷ்வரன்.
அந்தக் கணமே மிளிர்ம்ருதைவிற்கு அபயவிதுலனின் சகோதரியைப் பார்க்காமலே பிடித்துப்போனது. அவளுக்காகவே ஒரு அரும் பொக்கிஷத்தை நன்றாக வளர்த்து வைத்திருக்கிறாரே. அதற்காகத்தன்னும் அந்தப் பெண்மணியைப் பார்க்க வேண்டும் என்று அவளுடைய உள்ளம் பரபரத்தது.
திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருந்ததால், வேலை தலைக்கு மேல் இருந்தது. அவளுக்குத் திருமணம் என்ற செய்தி நெருங்கிய உறவுகளுக்கும், நெருங்கிய தோழிகளுக்கும் அன்றே அறிவிக்கப் பட்டது.
செய்தி அறிந்து அவளுடைய தோழிகள் மறு நாளே அவளுடைய வீட்டிற்குப் படை எடுத்தனர்.
“என்னடி… திடீர் திடீர் என்று அதிர்ச்சி கொடுக்கிறாய்? அப்படி என்ன உனக்கு அவசரம். இன்னும் இரண்டு வருடம் கழித்துத் திருமணத்தை முடித்திருக்கலாமே. உனக்கு இப்போதுதானே பதினெட்டு…” என்று ஆர்ப்பரித்தனர் பெண்கள்.
“குழந்தைகளா… இப்போது வருகிற நல்ல சம்பந்தத்தை விட்டால், பிறகு இதே மாதிரி வரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கேட்க,
“ஆனாலும் இது டூ ஏர்ளி அங்கிள்… பதினெட்டு… சின்னப் பெண் அங்கிள் எங்கள் மிளிர்…” என்று அவர்கள் குற்றப்பத்திரிக்கை வாசிக்க,
“பொண்ணுங்களா… சிறிசு பெரிசு என்பதெல்லாம் அவர் அவர் பார்வையில் இருக்கிறது. நான் ஒருவனாக இருந்து உங்கள் தோழியை வளர்த்திருக்கிறேன்… எனக்கு உடம்பில் வலுவிருக்கும் போதே அவளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்திட வேண்டும் இல்லையா? தவிரத் திருமணம் என்கிறதுக்கும் ஒரு கால வரையறை இருக்கிறது கண்ணுகளா… கல்வி எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்… ஆனால் வாழ்க்கை… அது அந்த அந்த நேரத்தில் நடந்தால்தான் ஆரோக்கியமான சந்ததிகளை இந்த உலகம் பார்க்கும். என்ன நான் சொல்வது புரிகிறதா?” என்று அவர் கேட்கப் பெண்கள் சற்று அமைதியாகினர்.
“இருந்தாலும் எங்கள் க்ளோஸ்ட் ஃபிரன்டை எங்களிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறீர்களே… அங்கிள்…” என்று குறைபட,
“அதனால் என்னம்மா? அடிக்கடி உங்கள் தோழியை இங்கே வரச்சொன்னால் போகிறது… என்னம்மா… நீ இந்த அப்பாவைப் பார்க்க அடிக்கடி வருவாய் தானே…” என்று இளநகையுடன் தந்தை கேட்க, மிளிர்ம்ருதையின் விழிகள் கண்ணீரால் நிறைந்தன.
“அப்பா… ஏனப்பா இப்படியெல்லாம் கூறுகிறீர்கள். நான் அங்குச் சென்ற பிறகு நீங்கள் இங்கேயிருந்த என்ன செய்யப்போகிறீர்கள்… நீங்களும் எங்களுடன்தான் வரப்போகிறீர்கள்…” என்று அவள் உறுதியுடன் கூற,
“அது சரி… அதற்கு உன் மாப்பிள்ளை சம்மதிக்க வேண்டுமே…” என்றார் தந்தை கிண்டலுடன்.
“அதெல்லாம் சம்மதிப்பார். சம்மதிக்காமல் எங்கே போவார்… நாமெல்லாம் யார்… சம்மதிக்க வைப்பது என் கையில் இருக்கிறது… இல்லையென்றால்… கைப்பிள்ளை… என் கையில் கைமாதான்…” என்று நெஞ்சை நிமிர்த்தியவாறு கூற அங்கிருந்தவர்கள் எல்லோரும் நகைத்தனர்.
அப்படியே எல்லோரும் பேசிக்கொண்டிருந்துவிட்டு, சீக்கிரமாகத் தங்களை விட்டுப் பிரிய இருக்கம் தோழியை விட்டுப் போக மனமில்லாமல், கடைசித்தடவையாக ஏதாவது ஒரு படத்திற்குப் போய் வந்தால் என்ன என்கிற எண்ணம் அனைவருக்கும் தோன்றியது. ஆனால் அதற்கு விக்னேஷ்வரன் சம்மதிக்கவேண்டுமே. தயக்கத்துடன் பெரியவரை ஏறிட்டனர் பெண்கள்.
“அங்கிள்… இன்னும் மூன்று நாட்களில் மிளிர்ம்ருதையைப் பிரியப் போகிறோம்… அதனால் நாங்கள் எல்லோரும் படம் பார்த்துவிட்டு வரலாமா? உங்கள் மகளை… காகம் தூக்கிக்கொண்டு போகாது அங்கிள்… அதற்க்கு நாங்கள் காரன்டி… ப்ளீஸ் அங்கிள்…” என்று கெஞ்ச, ஏனோ விக்னேஷ்வரனால் அதை மறுக்க முடியவில்லை.
தன் மகள் குடும்பம் என்று நுழைந்தால், இத்தகைய சந்தர்ப்பங்கள் கிடைக்குமோ இல்லையோ. கிடைத்த சந்தர்ப்பத்தை அனுபவித்துவிட்டுப் போகட்டுமே… மறுக்க முடியாமல் சம்மதித்தார் விக்னேஷ்வரன்.
“உடனேயே பட்டாளம் துள்ளிக் குதித்துக்கொண்டு படம் பார்க்கக் கிளம்பியது.
அன்று திரையரங்கத்தில் அதிகக் கூட்டம் இருக்கவில்லை. அதனால் பெண்கள் எல்லோருமாக வசதியான இடம் பார்த்து அமர்ந்துகொண்டனர். ஒரே கும்மாளத்துடன் படம் தொடங்கியது.
முதல் இருக்கையில் தேவகி அமர்ந்திருக்க இரண்டாம் இருக்கையில் மிளிர்ம்ருதையும், மூன்றாம் இருக்கையில் வனிதா, கலா என்று வரிசையாக அமர்ந்து படம் பார்க்கத் தொடங்கினர்.
“ஏன்டி… ஏதாவது நொறுக்குத் தீனி சாப்பிட்டால் நன்றாக இருக்குமே…” என்று தேவகி கேட்க,
“நான் நினைத்தேன் நீ சொல்லிவிட்டாய்… போம்மா… போய் வாங்கி வா…” என்று தேவகியைப் பார்த்து வனிதா அலட்சியமாகச் சொல்ல,
“என்னடி… கிண்டலா? நான் எல்லாம் போகமாட்டேன். வேண்டுமானால் நீ வாங்கி வா…” என்று தேவகி பிகுபண்ண,
“இப்போது நொறுக்குத் தீனியைப் பற்றி யார் பேசியது… நீ தானே… சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது நீ தான்… மரியாதையாகப் போய் வாங்கி வா…” என்றாள் வனிதா படத்திலேயே கவனமாக இருந்தவாறு.
“ஆமாமடி… எனக்குத் தேவைதான். எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்… சரி… நீயும் வா… போய் வரலாம்…” என்றாள் தேவகி.
“இவள் ஒருத்தி… நிம்மதியாகப் படத்தைப் பார்க்கவிடுகிறாளா பார்…” என்று சலித்தவாறு எழுந்தாள் வனிதா.
இருவரும் கன்டீனிற்குச் செல்ல, மற்றவர்கள் படத்தில் ஒன்றிப்போய் நின்றனர்.
படத்திலேயே கவனம் செலுத்திக்கொண்டிருந்த மிளிர்ம்ருதையின் பக்கத்துக் கதிரையில் யாரோ அமர்வது தெரிய, சரி… தேவகிதான் வந்துவிட்டாளாக்கும் என்று எண்ணியவளுக்கு, அங்கிருந்த வந்த புதிய ஆண்மை நிரம்பிய சுகந்தம், யாரிடமும் உணராத ஒரு இனம்புரியாத இன்ப உணர்வு உள்ளம் முழுவதும் வியாபிக்க, அவளையும் மீறி உள்ளம் ஒரு வித அவஸ்தையில் படபடக்க, என்ன இது திடீர் என்று இப்படித் தோன்றுகிறதே என்கிற குழப்பத்துடன், தன் புருவத்தைச் சுருக்கியவாறு திரும்பிப் பார்த்தவளுக்கு, கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. நாக்கு அண்ணாக்குடன் ஒட்டிக்கொண்டது. அவளால் தன் விழிகளையே நம்பமுடியவில்லை.
திரையரங்கினுள் தெரிந்த அந்த மங்கிய வெளிச்சத்திலும், அருகே இருந்தது யார் என்பதை அவள் உடனேயே இனம்கண்டாள். உள்ளம் ஒரு இனிய படபடப்புடன் வேகமாகத் துடிக்கத் தொடங்கினாலும், அவளையும் மீறி நடுங்கிய கரங்களை அடக்கும் வழி தெரியாது, தன் தோழியைச் சுரண்டுவதாக நினைத்து, அவள் எழுந்து சென்ற வெற்றுக் கதிரையைச் சுரண்டிக்கொண்டிருந்தாள் மிளிர்ம்ருதை.
“அறிவு கெட்டவளே… இந்த நேரம் பார்த்து திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே… என் உலகமே சுற்றுதே… இங்கே பார்டி…” என்று பற்களுக்கிடையேயாக வார்த்தைகளைத் துப்பியவாறு, திரும்பிப் பார்க்க, தன் அருகேயிருந்த இருக்கை காலியாக இருந்தது அப்போதுதான் உறைத்தது. ஒரு அசட்டுச் சிரிப்புடன், திரும்பி, தன் அருகே அமர்ந்திருந்த, அந்த ஆண்மகனைத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே அவளுக்கருகே, கதிரையின் இடது சட்டத்தின் மீது இலகுவாகத் தன் இடது கரத்தை மடித்து வைத்தவாறு, சுட்டு விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் தன் உதடுகளைப் பொறுத்தவாறு, இடது காலின் மீது வலது காலைப் போட்டு, வலது கரத்தை மடித்துவைத்த வல முழங்காலின் மீது பதித்தவாறு திரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அபயவிதுலன்.
அவன் இருந்த தோற்றமோ, இல்லை, அவனுடைய அசாத்திய உயரமோ, இல்லை அதற்கேற்ற உடற்கட்டோ கண்ணிமைக்கும் நொடியில் அந்த அரங்கையே சிறிதாக்கியிருந்தது.
வெறும் படத்தைப் பார்த்து மயங்கிப்போனவளுக்கு, முதன் முதலாக இப்படித் திரையிருட்டில் மிக அருகே கண்டதும், அவளுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது. பேசுவதற்கு வாயெடுத்தவளால் எதுவும் பேச முடியாது, வெற்றுக் காற்று மட்டுமே வெளியேறியது.
அது வரை திரையையே வெறித்துக்கொண்டிருந்தவன், இவளிடம் அசைவு தெரிய, தான் அமர்ந்த நிலையை மாற்றி, முழங்காலில் பதித்திருந்த தன் வலக்கரத்தை, அவளுக்கு அருகாமையில் பதித்து, சற்றுத் தன் முகத்தைத் திருப்பித், தலையைத் தாங்கியிருந்த இடது கரத்தை விலக்கி, சுட்டுவிரலை மட்டும் மேலுயர்த்தி,, தன் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி”ஹய்…” என்றான் இனிய புன்னகையுடன்.
மீண்டும் மிளிர்ம்ருதைக்கு இதயத்தின் தாளம் தப்பியது. படத்திலேயே கம்பீரமாக இருந்தவன், நேரில் பார்க்கும் போது, மிக மிகக் கம்பீரமாக இருந்தான் அவன். அதுவும் சிரிக்கும் போது, அந்த வரிசைப் பற்கள், அடேங்கப்பா… அது இன்னும் கூடுதல் கம்பீரத்தை அவனுக்குக் கொடுத்தது. அதே சுருண்ட குழல். அடர்ந்த தடித்த புருவங்களுக்குக் கீழே, அவளைத் துளைத்து ஊடுருவும் பார்வை. தொட்டால் சுடும் கூரான நாசியும். என்னை இலகில் சிரிக்க வைக்க முடியாது என்பது போல அழுந்த ஒன்றோடொன்று மூடிய உதடுகளும், சற்று சதுர முகமும். அகன்ற கழுத்தும் அகன்ற தோள்களுக்கு இணையாய், கவலை மறந்து தூங்கச் சொல்லும் பரந்து விரிந்த மார்பும் என்று கன்னியர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையிலிருந்தான் அந்த மன்மதன்.
அது மட்டுமா? அன்றைக்கென்று அரைக்கை டீஷேர்ட் அணிந்திருந்தான். அது வேறு அவனுடைய கட்டுடலை மேலும் கண்காட்சிபோல வெட்டவெளிச்சமாகக் காட்டிக்கொண்டிருந்தது. இரண்டு சிங்கங்கள் நீட்டிப் படுத்தது போல அவனுடைய இருதலைப்புஜத் தசைகளும், கீழ் தசைகளையும் பிடிக்க நிச்சயம் அவளுடைய இரண்டு கரங்களும் போதாது. குறைந்தது நான்கு கரங்கள் வேண்டும். இவன் குத்துச் சண்டைக்குப் போகிறானா என்ன? இப்படி உடம்பை வளர்த்து வைத்திருக்கிறான். அவன் அமர்ந்திருந்தான்தான். ஆனாலும், அவளை விட ஒரு அடிக்கும் மேல் அவன் தலை உயர்ந்திருந்தது. அவனுடைய உருவத்திற்கு அவள் வெறும் மான்குட்டிதான்.
அவளுடைய இடக்கரத்திற்குப் பக்கத்தில்தான் அவன் தன் வலக்கரத்தைப் பதித்திருந்தான். ஆனால் அந்தக் கரங்களின் பலமும், அதன் நீளமும் அந்த மங்கிய வெளிசத்திலும் தெட்டத் தெளிவாகத் தெரிய ஒரு வித சிலிர்ப்பை உணர்ந்துகொண்டாள் மிளிர்ம்ருதை. கூடவே அக் கரத்தின் மெல்லிய உரசலில் கூடப் பெரும் பாதுகாப்பை உணர்ந்துகொண்டாள் அக்காரிகை.
ஏதோ அவன் அருகேயிருக்கும் போது, எந்த வேதனையும் அவளை அண்டாது என்பது போன்ற ஒரு மாயையில் அவள் தன்னிலை கெட்டுப்போய் நின்றாள்.
Nice start
நன்றி நன்றி