Wed. May 20th, 2026

வெந்தும் தணியுமோ காதல் – 9/10

-9-

சூரிய வெளிச்சம், அந்த அறையை நிரப்ப, மெதுவாக விழிகளைத் திறக்க முயன்ற ஆதியாதுலனுக்கு தன் கைவளைவுக்குள் ஒரு பூம்பந்து மார்போடு ஒட்டியிருப்பது தெரிய, அந்தப் பூம்பந்தை மேலும் தன்னோடு இறுக அணைத்தவாறு அதனோடு ஒட்டிப் படுக்க, அந்தப் பூம்பந்தின் தொடுகையில், அவனையும் மீறி தேகம் சிலிர்த்துக் கொண்டது. அந்த சிலிர்ப்போடு தன் முகத்தை அந்தப் பூவின் உச்சியில் புதைக்க, அது கொடுத்த வாசனையில் கிறங்கிப் போனவனாக மெதுவாக விழிகளைத் திறந்தான் அவன்.

விழிகளில் மினுமினுப்பாய் பட்டையொத்த கரிய முடி தெரிய, மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தான்.

அவள்தான், அவனுடைய கைவளைவில் பாந்தமாகப் பொருந்தி, பற்றிய அவன் கரத்தை விடாது, தாயின் கருவறையில் வீற்றிருக்கும் குழந்தையாகச் சுருண்டு இவள் பின்னுடல் அவன் முன்னுடலோடு பசைபோல ஒட்டியிருக்க, அவனுடைய வெம்மையான கதகதப்பு உடல் கொடுத்த பாதுகாப்போடு உறங்கிக்கொண்டிருந்தாள். இவனும் அந்தக் கர்ப்பத்தைக் காக்கும் கர்ப்பப் பை போலவே, அவள் உடல் சுருண்டிருந்ததற்கு ஏதுவாகத் தன் உடலைச் சுருக்கி அவளை முழுதாகத் தன் உடலால் பொத்திக் காத்துக்கொண்டிருந்தான்.

சிப்பியும் முத்துமாக இருவரும் படுத்துக் கிடந்த நிலையைக் கண்டவனுக்கு ஏனோ உடனே அவளை விட்டு விலகவேண்டும் போலத் தோன்றவில்லை. விலகினால் இப்படியான ஒரு வாய்ப்பு ஒரு போதும் கிடைக்காது என்று நினைத்தானோ??

தன்னையும் மீறி எழுந்த தாபத்தில், அணைப்பை விடாமலே அவளை ஒட்டி எழுந்து, அவள் முகம் பார்க்க விளைந்தான். கூந்தலுக்குள் மறைந்திருந்த முகத்தைக் கண்டு, அவள் கையில் சிக்காத மறு கரத்தால், அவளது முகத்தை மறைத்திருந்த கூந்தலை விலக்கி அந்தப் பால் நிலாவைத் தரிசித்தான். உறக்கத்தில் இளகியிருந்த அந்த முகத்தைக் கண்டவனுக்கு நெஞ்சம் பிசைந்தது. சட்டென்ற விழிகள் கலங்கின.

கட்டிய மனைவி இறந்த போது கூட நெஞ்சில் உதிராத இரத்தம் இவளின் இந்த நிலை கண்டு உதிர, எல்லையில்லா வலியோடு அவளை ஏறிட்டவன், தன்னை மறந்து குனிந்து சரிந்து படுத்திருந்தவளின் கன்னத்தின் ஓரம் தன் உதடுகளைப் பதிக்க, நேயநறுமையிடம் மெல்லிய அசைவு.

பதறிவிட்டான் ஆதியதுலன்.

என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறான். அவன் மனைவியின் சிதை கூட ஆறியிருக்காது. உயிரான அத்தை, மாமாவின் ஆத்மா கூட வேகியிருக்காது. ஆனால் இவன்…? பதட்டத்தோடு அவள் கரத்திலிருந்து தன் கரத்தை உருவி எடுத்தவன், மறு கணம் அவளை விட்டு விலகிப் படுக்கையை விட்டு எழுந்து அங்கிருந்து வெளியேறி விட, அதுவரை பாதுகாப்பாகக் கிடைத்த அரண் திடீர் என்று காணாமல் போனதும் நேயநறுமையின் உறக்கம் முற்றாகக் கலைந்தது.

எழுந்தவள் சுத்த வரப் பார்த்தாள். சந்தேகப் படும்படி எதுவும் தெரியவில்லை. யாரோ அவளைப் பொத்திப் பாதுகாத்திருப்பது போலத் தோன்றியதே. யார் அது? குழப்பத்துடன் எழுந்தமர்ந்தவளுக்கு, இரவில் கிடைத்த அமைதி, வெளிச்சத்தைக் கண்டதும் காணாமல் போனது. பெற்றவர்கள் அவளை நிர்க்கதியாக விட்டுவிட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது. அதுவரை மரத்துப்போயிருந்த வலி, திரும்பவும் இதயத்தைப் பிளக்கும் வகையில் வந்து உட்கார்ந்து கொண்டது.

இவளால் எப்படி இன்னும் உயிரோடிருக்க முடிகிறது? தாய் தந்தை, உற்ற சகோதரி என்று அத்தனை பேரையும் மொத்தமாகத் தொலைத்து விட்டு, இன்னும் திடகாத்திரமாக உயிரோடிருக்கிறாள் என்றால் அவள் என்ன மனுஷியா இல்லை இயந்திர மனிதனா? அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருந்தால், அவர்கள் மரணித்த செய்தியைக் கேட்ட மறுகணமே இவளும் உயிரை விட்டிருக்க வேண்டுமே. ஆனால் அப்படி விடாமல் திடமாக இருக்கிறாளே. அப்படியென்றால் அவர்களின் மீது எனக்கு அன்பில்லையா?

ஒரு வேளை இப்படியாகும் என்று தெரிந்துதான் அவளைப் பக்குவப்படுத்துவதற்காக விதி அவளை அவர்களிடமிருந்து தள்ளி வைத்ததோ. எப்படியோ தனியாகத்தான் வாழப்போகிறாய், இப்போதே அதற்குப் பயிற்சி எடுத்துக்கொள் என்றுதான், அவர்களை விட்டுத் தொலைதூரம் செல்ல வைத்ததோ. மனது கிடந்து தவிக்க, மீண்டும் அழுகை வரும்போலத் தோன்றியது.

அவளுக்குத் தாய் தந்தை, தங்கையை இழந்த வலியை விடக் குற்ற உணர்ச்சிதான் அதிகம் வாட்டி வதைத்தது. திரும்பத் திரும்ப அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டிக் கொன்று புதைத்தது. எக்காலத்திலும் இந்த வலியிலிருந்து அவளால் மீள முடியுமா தெரியவில்லை. தனக்குள் வதங்கித் தவித்திருக்கத், தொலைவில் குழந்தை ஒன்று வீறிட்டழும் சத்தம் கேட்டது. மின்னல் விரைவுடன் எழுந்துவிட்டாள் நேயநறுமை.

நேரு…’ தன்னை மறந்து முனங்கியவள், தன் வலி வேதனையை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, வெளியே வந்தாள். அங்கே ஆதியதுலன் தன் குழந்தையை மார்போடு அணைத்துத் தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.

“நேருமாமாவுக்கு என்னாச்சு…?” பதறியவாறு ஓடி வந்தவள், அவனுடைய சம்மதத்தையும் பெறாமல் குழந்தையைப் பறித்துத் தன் மார்போடு அணைத்துக் கொள்ள, அவள் பறித்த வேகத்தில் அதிர்ந்தவன்,

“ஹே… பார்த்து… ஓடி வந்ததில் கால்தடுக்கி விழுந்துவிட்டாள்.” என்றவன் கொஞ்சமாகப் புடைத்த நெற்றியைத் தேய்த்துக் கொடுக்க, சட்டென்று அவன் கரத்தைத் தட்டிவிட்டவள், தானே அந்த இடத்தைத் தேய்த்துக் கொடுத்து சுத்தவரப் பார்த்தாள். அங்கே குளிர்சாதனப் பெட்டி இருக்க, அதை நோக்கிச் சென்றவள், அதைத் திறந்து ஐஸ்கியூப் எடுத்து குழந்தையின் நெற்றியில் வைக்க, பாஸ்கரனும் விரைந்து வந்துவிட்டிருந்தார்.

“என்னப்பா ஆச்சு…?” பரிதவிப்போடு கேட்க,

“ஒன்றுமில்ல… கீழே விழுந்துவிட்டாள்…” அவன் சொல்ல, தன் பேத்தியை வேதனையோடு பார்த்து விட்டு நடந்து சென்றவர் சட்டென்று நின்றார். நின்று திரும்பிப் பார்த்தார். குழந்தையை மார்போடு அணைத்து அவள் அழுகையைப் போக்க முயலும் நேயநறுமையையும், அவளுக்கருகே நின்று உதவ முயலும் தன் மகனையும் பார்த்தார்.

ஒரு விநாடி புருவங்கள் சுருங்க நின்றவரின் முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி. கண்ணிமைக்கும் நொடியில் பல கணக்கு அவருக்குள். அந்தக் கணக்குக்கான விடை, அத்தனை வேதனையிலும் உள்ளத்தில் சிறு இன்பத்தைக் கொடுக்க, இழந்த புன்னகை அவர் உதட்டில் வந்து ஒட்டிக் கொண்டது.

-10-

இதோ நேயநறுமை ஈழம் வந்து மூன்று கிழமைகளாயிற்று. இத்தனை நாட்களிலும் குழந்தை உறங்கும் நேரம் தவிர, மற்றைய நேரம் முழுவதும் மகிழினியுடன்தான் செலவழித்தாள். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், குழந்தையின் அருகாமையில் அவளுடைய வேதனை ஓரளவு குறைந்தது என்றே சொல்லலாம். வேதனை என்பதை விட அவளுடைய குற்ற உணர்ச்சி ஓரளவு மட்டுப்பட்டது.

தன் தாய் தந்தையையும், கூடப்பிறந்தவளையும் அலட்சியம் செய்து, தன் நிலை ஒன்று மட்டுமே முக்கியம் என்பது போல ஒதுங்கிக் கொண்டதற்குத் தண்டனையாகக் கடவுள் அத்தனை பேரையும் மொத்தமாக எடுத்துக்கொண்டு, போனால் போகிறது என்று, அந்தக் குழந்தையை மட்டும் அவளுக்காகக் விட்டுவைத்திருக்கிறான் போல. இப்போது அவளுக்கு இருக்கும் ஒரே உறவு, ஒரே ஆறுதல் அந்தக் குழந்தை மட்டும்தான். அந்தக் குழந்தை வேறு அப்படியே நேரிழையை அச்சொட்டாகக் கொண்டு பிறந்திருக்கத் தன் தங்கையே தன் கரங்களுக்குள் நிரந்தரமாக வந்துவிட்ட உணர்வு அவளுக்கு. குழந்தையைக் கூட நேரு, நேரு மாமா என்றுதான் அழைத்துத் திருப்திப் பட்டுக்கொண்டாள்.

குழந்தை எழுந்திருக்கும் நேரமெல்லாம் அதன் பின்னே சுற்றித் திரிபவள், குழந்தை உறங்கிவிட்டால் போதும். நத்தை தன் கூட்டுக்குள் ஒடுங்குவது போல, தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் ஒதுங்கித் தான் செய்த தவற்றை நினைத்து வருந்தித் துடிப்பாள். உயிரில்லாத அவர்களின் தேகம் மனக்கண்ணில் வந்து அவளை வதைத்தது. சாகும் வரைக்கும் அந்தக் காட்சி அழியாதோ?

அன்று மதியம் உணவின் பின், மகிழினி உறங்கியதும், எப்போதும் போலத் தன் அறைக்குள் முடங்கியவளுக்குப் பெற்றவர்களின் நினைவு அரித்தது. பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து மார்போடு அணைத்து அதில் முகத்தைப் புதைக்க, பரிட்சயமான அந்த வாசனை அவளுடைய வலியை கொஞ்சம் மட்டுப்படுத்தச் சற்று நேரம் புதைத்த முகத்தை விலக்காமல் அப்படியே கிடந்தாள் நேய நறுமை. கண்ணீர் கதவைத் தட்டி வரவா என்று கேட்க அவசரமாக விழிகளை அழுந்த மூடி, வெளியே வர முயன்ற கண்ணீருக்குத் தடைபோட்டாலும், அந்த வாசனைக்குரியவன் உள்ளே நின்று அவளை அணைக்க முயன்றான்.

அன்று அவள் துடித்தபோது அவளை இழுத்து அணைத்தானே. வாழ்வில் முதன் முறையாகத் தந்தைக்குப் பிறகு ஒரு ஆணின் அணைப்பில் கிடந்தாள் என்றால், அது அவனிடம் மட்டும்தான். அந்த அணைப்புக் கொடுத்த இதத்தை நினைக்கும் போது, அந்த வலியிலும் மதி மயங்கிப் போனது அவளுக்கு. அவனால் மட்டும்தானே அவளுடைய பெண்மையை உணரவைக்க முடியும். அவளுக்குள்ளும் மலர்கள் பூக்கச் செய்ய முடியும் அவனால் மட்டும்தானே அவளைப் புதிதாகப் பிறக்கச் செய்ய முடியும்.

இதோ இந்த நிலையிலும் கூட இந்த மனது அவனிடம்தானே தஞ்சம் புக முயல்கிறது. இப்போது கூட அவனுடைய மார்பில் விழுந்து ஒரு மூச்சு அழுதால் அனைத்தும் சரியாகிவிடும் என்று தோன்றுகிறது. இதோ இந்தத் தலையணையில் கூட அவனுடைய வாசனை இருப்பது போலப் புத்தி சொல்கிறது. இது என்ன விந்தை? வியந்தவள் மீண்டும் ஆழ மூச்செடுத்து விட, இல்லை அவனுடைய வாசனைதான் என்று உறுதியாகச் சொன்னது அந்தத் தலையணை.

இது எப்படிச் சாத்தியம்? குழம்பியவளாக, தலையணையை விலக்கிப் பார்த்தாள். இரண்டு நாட்களுக்கு முன்புதான் படுக்கை விரிப்பை எல்லாம் மாற்றினார்கள். ஆனாலும் அவனுடைய வாசனை எப்படி இந்தத் தலையணையில்? குழம்பியவள் அந்த அறையைச் சுத்தவரப் பார்த்தாள்.

ஆமாம் இது யாருடைய அறை? இத்தனை நாட்களாக அந்த அறையில்தான் தங்குகிறாள். ஆனால் இதைப்பற்றி அவள் யோசித்ததில்லை. யோசிக்கத் தோன்றவுமில்லை. ஆனால் இப்போது யோசி என்றது புத்தி.

அதிக ஆடம்பரமில்லாமல் எளிமையான அறை.

நான்கு பேர் தாராளமாகப் புரளக் கூடிய அழகிய உருவங்கள் செதுக்கப்பட்ட கருங்காலி மரத்தினாலான கட்டில். அதற்குப் பக்கத்தில் அலமாரி. அதிலும் அதே போல உருவங்கள் செதுக்கப் பட்டிருந்தன. கட்டிலுக்கு முன்னால் உட்கார்ந்து படிப்பதற்கென்று மேசை கதிரை. கட்டிலுக்கு மறு பக்கத்தில் விளக்கு மேசை. சாளரத்திற்குப் பொருத்தமாகத் திரைச்சீலை. பக்கத்தே கண்ணாடி மேசை. அதைத் தவிர வேறு எந்தத் தளபாடங்களும் இல்லாமல் மிக விஸ்தாரமாக இருந்தது அந்த அறை. ஆனால் அத்தனை தளபாடங்களும் கருங்காலி மரங்களால் செதுக்கப்பட்டவை என்பதால், உறுதியாகவும், ஒருவித அரசதோரணையையும் கொடுத்தது.

இப்போது அவளின் கவனம் கண்ணாடி மேசையில் நிலைத்தது. புருவங்கள் சுருங்க எழுந்தவள், அந்தக் கண்ணாடி மேசையை நோக்கிச் சென்றாள். உயர்தர ஆஃப்டர் ஷேவ், ஒரு சில வாசனைத் திரவியங்களை உள்ளடக்கிய போத்தல்கள். அனைத்தும் ஆண்களுக்குரியது. பக்கத்தில்

ஒரு சீப்பு. அதில் தப்பிப் பிழைத்த குட்டி மயிர்த் துண்டு. அந்த சீப்பை எடுத்தவள் அதைத் தூக்கிப் பார்த்தாள். அதில் ஒட்டிக்கிடந்த அந்த சுருண்ட குழலை எடுத்துப் பார்க்க, அது ஒரு ஆணுடையது என்பது பார்த்ததும் புரிந்தது. யோசனையோடு அந்த வாசனைத் திரவியயங்கள் அடங்கிய போத்தல்களையும் எடுத்துப் பார்த்தாள். எல்லாம் உயர்தரமான ஆண்களுக்குரிய சென்ட் போத்தல்கள். அதை முகர்ந்து பார்க்க, முதன் முறையா அவளுடைய வீட்டில் வைத்துக் கடந்து சென்ற ஆதியதலன் நினைவுக்கு வந்தான். அந்த வாசனையில் நெஞ்சம் தடுமாற, யோசனையோடு அந்த அறையை விழிகளால் துழாவினாள். சற்றுத் தள்ளியிருந்த மேசையில் சின்னதாய் ஒரு புகைப் படச் சட்டம் இருக்க, கையிலிருந்த வாசனைத் திரவியத்தை அந்த இடத்தில் வைத்துவிட்டு மேசையை நோக்கி நகர்ந்தாள்.

மேசையை நெருங்கியதும், அதிலிருந்த அந்தக் குட்டிப் புகைப்படச் சட்டத்தை எடுத்துப் பார்த்தாள். பத்து வருடங்களுக்கும் முன்னைய புகைப்படம். அதில் அழகிய பல்வரிசை தெரிய, யமஹா மோட்டார் வண்டி ஒன்றின் மீது சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் ஆதியதுலன்.

அந்தப் புகைப்படத்தைப் பார்த்து வியந்தவள் தன்னை மறந்து அந்தப் படத்தைக் கரங்களால் வருடிக் கொடுத்தவாறு, இதயம் படபடக்க மீண்டும் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். அப்போது தான் அந்தச் சுவரில் புறப்பக்கமாக மாட்டியிருந்த புகைப்படங்கள் அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது.

வீட்டிலிருப்பவர்கள் யாராவது இறந்தால், அந்த வீட்டுச் சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களைக் கழட்டி வைப்பார்கள். இல்லையென்றால் புறப் பக்கமாக மாட்டிவைப்பார்கள். இது ஒருவித சம்பிரதாயம். இங்கே புகைப்படங்கள் புறப்பக்கமாக மாட்டிவைத்திருந்ததால், இதுவரை அந்தச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் யாருடையது என்று தெரியாமலிருந்தது. இப்போது அது யாருடையது என்று பார்க்கும் ஆவல் உந்த, நடந்து சென்று, தொங்கிக்கொண்டிருந்த சட்டத்தைத் திருப்பிப் பார்த்தாள்.

அதில் பாஸ்கரன், இந்திரா இருக்கையொன்றில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு நடுவே தரையில் புன்னகையுடன் அமர்ந்திருந்தான் அதே பதினெட்டு வயது ஆதியதுலன். ஒடிசலாக, அதே நேரம் கவர்ந்திழுக்கும் வகையில்தான் இருந்தான் அவன். அதை அப்படியே விட்டுவிட்டு மறு சட்டத்தையும் திருப்பிப் பார்த்தான். அதில் இருபத்தைந்து வயது ஆதியதுலன் அழகிய பல்வரிசை தெரிய ஒரு இருக்கையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து இருந்தான். மேலும் வியந்தவள், நடந்து சென்று அடுத்தச் சட்டத்தையும் திருப்பிப் பார்த்தாள். அது பட்டமளிப்பு விழாவில் எடுத்தது. கறுத்த அங்கி போட்டு, அதற்கேற்ப பட்டமளிப்புத் தொப்பியும் போட்டுக் கையில் சான்றிதழ் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் நின்றிருந்தான்.

அனைத்தும் அவன் சார்ந்த புகைப்படங்கள் தான். அப்படியென்றால் இது அவனுடைய அறையா? இத்தனை நாட்களும் அவனுடைய அறையில்தான் தங்கியிருந்தாளா? எப்படிக் கவனிக்காமல் விட்டாள்? நம்ப முடியாதவளாக அங்கிருந்த அலமாரியை நோக்கி விரைந்து சென்று திறந்து பார்த்தாள். முழுக்க முழுக்க ஆணுடைய வாசனையைத் தாங்கி இருந்த ஆடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. இது அவனுடைய அறை என்பது உறுதியானது.

இத்தனை நாட்களும் அவனுடைய அறையில் தங்கியிருப்பது கூடத் தெரியாமல் வேதனையில் உழன்றிருக்கிறேனே…’ தவிப்போடு நினைத்தவள், தன்னை மறந்து நேர்த்தியாக மடித்து வைக்கப் பட்டிருந்த அவனுடைய ஆடைகளைக் கரங்களால் வருடிப் பார்த்தாள் நேயநறுமை. வெறும் உயிரற்ற ஆடைகளைத் தொடும்போதே சிலிர்த்தது அவளுக்கு.

அந்த சிலிர்ப்பை உணர்ந்தவாறு வருடிக் கொண்டு வந்தவளின் கரங்களில் தட்டுப்பட்டது சிவந்த நிறத்தில் ஒரு கோப்பு. அது அவனுடைய ஆடைகளுக்கு அடியே வைக்கப்பட்டிருந்ததால், கொஞ்சமாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அது வைக்கப்பட்டிருந்த நிலையைப் பார்க்கும் போதே மிகப் பத்திரமாக அந்தக் கோப்பு வைக்கப் பட்டிருக்கிறது என்பது புரிந்தது.

தன்னையும் மீறிய ஆர்வத்தோடு அதை இழுத்து எடுத்துப் பார்த்தாள்.

அது ஒரு மருத்துவ அறிக்கை. யாருடைய மருத்துவ அறிக்கை இது? எதற்காக இங்கே வைக்கப்பட்டிருக்கிறது?” வியந்தவளாக, அந்தக் கோப்பைத் திறந்து பார்த்தாள். நேரிழை ஆதியதுலன் என்றிருக்க, சட்டென்ற கண்கள் கலங்கியது அவளுக்கு.

பெயரில் கூடத் தங்கையின் பெயர், அவன் பெயருக்கு அருகே இருப்பதைத் தாங்க முடியாதவளாக, அந்தக் கோப்பை அடித்து மூடிப் பழைய இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பியவளுக்கு எதுவோ உறுத்தச் சட்டென்று நின்றாள்.

குழப்பத்தோடு திரும்பவும் பழைய நிலைக்கு வந்தவள், அவனுடைய ஆடைகளின் மத்தியில் உற்றுப் பார்த்தாள். பின் கையை விட்டு அதை இழுத்துப் பார்த்தவளின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. பின் மலர்ந்தன. குழம்பின. அதிர்ந்தன.

நம்ப முடியாதவளாக அதை முற்றாக இழுத்து எடுத்துப் பார்த்தாள். அது ஒரு ஸ்கார்ஃப். அதுவும் அவளுடையது. அன்று நயகராவிற்குச் சென்றபோது தொலைத்தது. இது எப்படி இங்கே? குழப்பத்துடன் அதையே பார்த்தவளுக்கு எதுவும் புரியவில்லை.

அவளால் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிட முடியவில்லை. குழப்பத்தோடு நின்று இருக்கக் கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவன்தான், கையில் உணவுத் தட்டோடு நின்றிருந்தான். உள்ளே வந்தவனின் பார்வை அவளுடைய கரத்திலிருக்கும் ஸ்கார்ஃபில் நிலைக்க ஒரு கணம் அவன் முகம் அதிர்ந்து பின் தளர்ந்தது.

அவளோ தன் கையிலிருந்த ஸ்கார்ஃபையும் அவனையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு,

“இது… இது என்னுடைய ஸ்கார்ஃப்… இது எப்படி இங்கே…?” குழப்பமும், திணறலுமாகக் கேட்க, அவனோ நிதானமாகத் தன் கரத்திலிருந்த உணவுத் தட்டை அங்கே வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்.

“உங்களைத்தான் கேட்கிறேன். இது எப்படி இங்கே?” அவள் கேட்க, அவனோ தன் தோள்களைக் குலுக்கி,

“உன்னுடையதா? இது நேரிழையோடது..” என்றான் உறுதியான குரலில்.

“நோ… இது என்னுடையது… என்னுடைய முதலாவது சம்பளத்தில் வாங்கியது. அன்று நயகராவில் தொலைத்தது. நான் தொலைத்து விட்டேன் என்று வருந்திய போது, நீங்கள் கூட எனக்கு இதே போல ஒன்று வாங்கிக் கொடுத்தீர்கள். அங்கே நயகராவில் தொலைத்தது இங்கே எப்படி? அதுவும் உங்களுடைய அலமாரியில்…” அவள் தடுமாறியவாறு கேட்க, அவனோ பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், பான்ட் பாக்கட்டிற்குள் தன் கரங்களை நுழைத்தவாறு,

“லிசின்… இது என்னுடைய அலமாரியென்று… யார் சொன்னது? நீ தங்கியிருப்பது நானும் நேரிழையும் பயன்படுத்திய பொது அறை… இந்த ஸ்கார்ஃப் நேரிழையுடையதாக இருக்கலாம்…” அவன் சொல்ல அந்த அறையை சுத்திப் பார்த்தாள் நேயநறுமை.

முழுக்க முழுக்க ஆணுடைய உபயோகத்தில் இருக்கும் அறை என்பதைச் சின்னக் குழந்தை கூடத் தடையின்றிச் சொல்லிவிடும்.

“இங்கே ஆணுடைய ஆடைகளைத் தவிர, பெண்ணுடைய ஆடைகள் எதுவுமே இல்லை. இவ்வளவு ஏன், உங்கள் இருவரின் திருமணத்தில் எடுத்த புகைப்படம் கூட இங்கேயில்லை… இது உங்களுடைய அறை… உங்களுக்கு மட்டுமே உரித்தான அறை… இங்கே என் ஸ்கார்ஃப் எப்படி வந்தது?” கேட்டவளுக்கு மேலும் குழப்பம் தோன்ற,

“நீங்களும் நேருவும் தனித் தனியாகவா படுத்து உறங்குவீர்கள்? நேருவுடைய ஆடைகள் எதுவும் இங்கே இல்லையே…? ஏன்..?” அவனிடமே கேட்க அவனோ பற்களைக் கடித்து விழிகளை இறுக்கமாக மூடித் தன் கோபத்தை அடக்க முயன்றான். பின் விழிகளைத் திறந்து அவளை வெறித்துப் பார்த்து,

“நீ அதிகமாக யோசிக்கிறாய் நேயநறுமை… தவிர எனக்கும், நேரிழைக்கும் இடையில் நுழையப் பார்க்கிறாய்… இது நாகரிகமில்லை… தவிர… நீ கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை… முதலில் வந்து சாப்பிடு..” அவன் கறாராகச் சொல்ல, இவளோ பற்களைக் கடித்துக் கோபத்தை அடக்கியவளாக,

“இல்லை… எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும். நீங்கள் நேரிழையைக் காதலித்துத்தானே மணந்தீர்கள். பிறகு ஏன் நேரிழையின் ஆடைகள் எதுவுமே இங்கேயில்லை. ஆனால் இந்த ஸ்கார்ஃப் மட்டும் இங்கே இருக்கிறது… அது எப்படி?” என்றவள் அந்த அறையைச் சுத்தவரப் பார்த்து, “இங்கே உங்களின் வாசனை மட்டும்தான் நிறைந்திருக்கிறது. நேரிழை தங்கியதற்கான எந்த அடையாளமும் இல்லை. சொல்லுங்கள்… இங்கே என்ன நடக்கிறது…” அவள் கேட்க, பதில் சொல்லாமல் அவளையே வெறித்துப் பார்த்தான் ஆதியதுலன்.

“உங்களைத்தான் கேட்கிறேன்… என்னை ஏன் உங்கள் அறையில் தங்க வைத்தீர்கள்? என் ஸ்கார்ஃபை ஏன் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்… அப்படியென்றால் நீங்கள் என்னை…” அவள் முடிக்கவில்லை,

“ஸ்டாப் இட்… ஜெஸ்ட் ஸ்டாப் இட்… நறுமை…” என்றான் ஆதியதுலன் சீற்றமாக. பின் என்ன நினைத்தானோ,

“ஆமாம் இது என்னுடைய அறைதான். ஆனால் பெரிதாகப் பாவனையில் இல்லாத அறை. உன் தங்கை கர்ப்பமாக இருந்த போது, அவளுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காகத் தற்காலிகமாகத் தங்குவதற்காக ஏற்பாடு செய்த அறைதான் இது. சில வேளைகளில் வேலைக்குப் போய்விட்டு வரும்போது தாமதமாகும். குழந்தையோடு களைத்துக் கிடப்பவளைத் தொல்லை செய்யக் கூடாது என்று, அந்த நாட்களில் இங்கே வந்து படுத்துக்கொள்வேன். போதுமா…?” என்றவன் அவளை நெருங்கி, அவள் கரத்திலிருந்த ஸ்கார்ஃபைப் பறித்துக் கரங்களில் வைத்துக் கசக்கியவாறு அவளைப் பார்த்து,

“இந்த ஸ்கார்ஃப் எப்படி என்னிடம் வந்தது என்று எனக்குத் தெரியாது. இது உன்னுடைய தங்கையின் ஸ்கார்ஃப் என்றுதான் பத்திரமாக இங்கே வைத்திருந்தேன். இதற்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாத பட்சத்தில், இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை…?” என்றவன், கசக்கிய ஸ்கார்ஃபைக் கட்டிலில் எறிந்துவிட்டு வெளியேற முயல, சட்டென்று அவனுடைய கரத்தைப் பற்றினாள் நேயநறுமை.

இவன் என்ன என்று அவளைப் பார்க்க, பற்றிய அவன் கரத்தைத் திருப்பிப் பார்த்தாள் நேயநறுமை. அங்கே அவனுடைய திருமண மோதிரத்திற்குப் பதிலாக, அன்று திருமணத்தில் பரிசாக அவள் அணிவித்த மோதிரம்தான் வீற்றிருந்தது. அதைக் கண்டு வியந்து புருவங்களை மேலேற்றி அவனைப் பார்க்க, உடனே தன் கரத்தை இழுத்து எடுத்தவன்,

“அம்மா தாயே… இதற்கும் ஏதாவது கற்பனையை வளர்த்துவிடாதே. திருமண மோதிரம் இறுக்கமாக இருக்கிறது என்று கழட்டி வைத்திருக்கிறேன். இதையும் கழட்டத்தான் முயன்றேன். உன் தங்கை தான் இதையாவது போட்டுக்கொள்ளுங்கள் என்றாள். அவள் சொன்னதற்காகக் கழற்றாமல் அணிந்திருக்கிறேன். இந்த விளக்கம் உனக்குப் போதுமா? கேட்டவன், சட்டென்று அங்கிருந்து வெளியேற, மீண்டும் இவள் நெஞ்சில் பாரம் ஏறி உட்கார்ந்து கொண்டது.

ஒரு விநாடியே என்றாலும், அவனுக்கு அவள் மீது ஆர்வம் இருக்கிறதோ என்கிற அற்ப ஆசை நெஞ்சில் எழுந்து பூப் பூக்கச் செய்துவிட்டது. அது இல்லை என்று தெரிந்ததும் விரக்திப் புன்னகை ஒன்று அவளுடைய உதடுகளில் மலர்ந்து வடிந்து சென்றது.

அந்தளவுக்கு அதிர்ஷ்டமுள்ளவளாக இருந்து இருந்தால், இன்று ஏன் இத்தனை வலியைச் சந்திக்கப் போகிறாள். ஏக்கத்தோடு நடந்து சென்றவள், படுக்கையில் தொப்பென்று அமர்ந்து, அவன் எறிந்துவிட்டுப் போன ஸ்கார்ஃபை எடுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள விழிகளோ கலங்கின. பெரும் வேதனையோடு அந்தத் துண்டை பெருவிரலால் வருடிக் கொடுத்தவளுக்கு, ஏதோ அதற்காகவாவது அதன் ஆடைகளோடு இருக்கும் வாய்ப்புக் கிடைத்ததே, என்கிற எண்ணம் தோன்ற உதடுகள் விரக்தியில் விரிந்தன. கூடவே குழப்பமும்.

உண்மையாகவே அது நேரிழையுடையது என்று நினைத்துத்தான் பத்திரமாக வைத்திருந்தானா? ஆனால் நயகராவில் தொலைந்தது எப்படி இங்கே வந்தது? ஒரு வேளை அவளுடைய தாய் எடுத்து வைத்திருந்திருப்பாரோ? அதை அவளிடம் சொல்ல மறந்தாரா…? எப்படியோ நேரிழையிடம் சென்றி இருக்கும். ஆனால்… நேரிழையின் பொருட்களில் இதை மட்டும் ஏன் பதிரமாக வைதிருக்கிறான்? இதில் அவனுடைய முரண்பட்ட பேச்சு வேறு அவளைக் குழப்பி அடித்தது. முதலில் இருவருக்குமான பொது அறை என்றான். பிறகு தனக்கான அறை என்றான். அதற்கு காரணம் சொன்னாலும் அந்தக் காரணத்தை ஏனோ அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக இதில் ஏதோ இருக்கிறது என்று அவளுடைய உள்மனது எச்சரிக்க, அது என்ன என்று ஆராய முயன்றது மனது. ஆனால் அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் அவளின் கைபேசி சத்தமிட, குழப்பம் மாறாமல் நடந்து சென்று கைபேசியை எடுத்துப் பார்த்தாள் நேயநறுமை.

ஆல்ஃபிரெட் என்கிற பெயரைக் கண்டதும், அதை எடுப்பதா விடுவதா என்று சற்று தயங்கியவள், கடைசியாக அதை உயிர்ப்பித்துக் காதில் வைத்து,

“சொல்லு ஆல்ஃபிரெட் என்றாள் உயிர்ப்பில்லாத குரலில்.

 

 

What’s your Reaction?
+1
12
+1
2
+1
6
+1
0
+1
2
+1
0

Related Post

2 thoughts on “வெந்தும் தணியுமோ காதல் – 9/10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!