Sat. Jun 7th, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 4

(4)

 

எல்லா நாட்களும் ஒரே நாள்தான். ஆனால் திருமண நாள் என்பது… அது ஒவ்வொரு இளம் பெண்களின் வாழ்விலும் வரக்கூடிய வசந்த நாள் அல்லவா… புதிதாக ஒரு உறவை மனதாலும், புத்தியாலும், உடலாலும் ஏற்றுக்கொள்ளும் மங்கள நாள் அல்லவா அது. புரியாத புதிர்களுக்கும், தெரியாத கேள்விகளுக்கும், அறியாத இனிமைக்கும், விடை தெரியும் நாள் அல்லவா அந்நாள். செல்வியாகப் பெற்றவளுக்கு மகளாக இருந்தவள், இப்போது திருமதியாகி, ஒரு மனைவியாக இன்னொருவனுக்கு உரியவளாகி மனதாலும், உடலாலும் இரண்டறக் கலந்து, உலகம் காக்கக் குற்றமற்ற நல்ல சந்ததிகளைப் படைப்பதற்கு அடியெடுத்து வைக்கும் அற்புத நாள் அல்லவா அந்நாள். அவளுக்கே அவளுக்காய் ஒரு குடும்பம்… அவள் அங்கே மகாராணி. அவளே மந்திரி. அங்கே அவள் இட்டதே சட்டம்… அத்தகைய திருநாளை ஆவலுடன் எதிர்பார்ப்பது இயற்கைதானே.

அதுவும் மனதிற்கு இனிய மணாளன் கிடைத்துpவிட்டால்… வேறு இன்பம் ஏது.

அதனால் அவள் எதிர்பார்த்த அந்த வெள்ளிக்கிழமை அவளுக்காகவே மிக மிக அழகாக விடிந்தது. மனம் மகிழ்ந்தால் காட்சிகள் அழகாக இருக்குமோ… அவள் மனதைப் போலவே, அன்றைய விடியலும் புதுவிதக் கவிதையாய் மலர்ந்தது.

உள்ளமெல்லாம் குதூகலிக்க ஒருவித மோன நிலையில் தன்னைத் தயார்ப்படுத்த தொடங்கினாள் மளிர்ம்ருதை.

திருமணம் அதிகாலையிலேயே என்பதால் உறவினர்கள் எல்லோரும் வீட்டிலேயே தங்கிவிட்டனர். உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து அவளை வானத்திலிருந்து வழிதப்பி வந்த தேவதையாக உரு மாற்றியிருந்தனர்.

தன் ஒரே மகள். அவளுடைய திருமணத்தை ஏனோ தானோ என்று நடத்திவைத்துவிடுவாரா விக்னேஷ்வரன். கொழும்பில் உள்ள அத்தனை நகைக்கடையிருந்தும் பெறுமதி மிக்க நகைகளைத் தன் மகளுக்காக வாங்கிக் குவித்திருந்தார்.

கருஞ்சிவப்புப் பட்டில், தலை நிறையச் சூடிய மல்லிகைப் பூக்களின் மத்தியில் மிதமான ஒப்பனையும், அந்த ஒப்பனைக்கு ஏற்ற அழகிய வைர நகைகளுக்கும் மத்தியில் அவள் தேவதையாகவே மிளிர்ந்தாள். அவள் அழகைக் கண்டு வானோரும், விண்ணோரும் ஏக்கப் பெருமூச்சு விட்டிருப்பர் என்பது உறுதி.

தன் முன்னே மணக் கோலத்தில் வந்து நின்ற மகளைக் கண்டதும், விக்னேஷ்வருக்குக் கண்கள் குளமானது. ‘என் மகள்… என் தேவதை, இன்றோடு வேறு ஒருவனுக்குச் சொந்தமாகிறாள்… இது வரை என் உலகமாக இருந்தவள், இன்னொருவனின் உலகமாகப் போகிறாள்… இனி எப்போது பார்ப்போமோ… வருடத்திற்கு ஒரு முறை, இல்லை இரு வருடங்களுக்கு ஒரு முறை…’ பெரும் வலியுடன் தன் மகளின் முகத்தை இரு கரங்களாலும், பற்றியவரின் கண்களிலிருந்து கண்ணீர் பொங்க,

“என் குல தெய்வமே நீதான் கண்ணம்மா! நீ நீண்ட காலம், எல்லாச் செல்வமும் பெற்று நீடூழி வாழவேண்டும்…!” என்றவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டு விலக, தாங்க முடியா வேதனையில் உடல் குலுங்க, தன் தந்தையை இறுக அணைத்துக்கொண்டாள் மிளிர்ம்ருதை. கூடவே அவரைத் தேற்றும் முகமாக,

“அப்பா…! அவரை மணப்பதால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றுதானே, அவரை எனக்கு மாப்பிள்ளையாகப் பார்த்தீர்கள்… நீங்களே கலங்கலாமா…?” என்றாள் அவளும் குரல் கம்ம.

“மகிழ்ச்சியாக இருப்பாயாம்மா?” என்றார் தந்தை ஏக்கமாக.

“நிச்சயமாக அப்பா…! நீங்கள் அம்மாவோடு இருந்தது போல… நானும் அவரும் மிக மகிழ்ச்சியாக இருப்போம் அப்பா…!” என்றபோது விக்னேஷ்வரன் ஒரு கணம் அமைதி காத்தார். பின்,

“இல்லை கண்ணம்மா…! நாங்கள் இருந்ததை விட மகிழ்ச்சியாக நீ இருப்பாய். இருக்க வேண்டும்…” என்று கூறியபோது அவருடைய முகம் கலக்கத்தையே காட்டியது. அது ஒற்றை மகளைத் தனியாக அனுப்புகிறோமே என்கிற கலக்கம்தான். அதைப் புரிந்துகொண்ட மிளிர்ருதை, தன் தந்தையின் கன்னத்தைப் பற்றி,

“அப்பா… இது நீங்கள் பார்த்த மாப்பிள்ளை. மகளுக்குத் தப்பாகப் பார்த்திருப்பீர்களா என்ன?” என்று மென்மையாகக் கேட்டாள்.

“என்னம்மா அப்படிச் சொல்கிறாய்? ஒரு முறைக்குப் பல முறை பலபேரிடம் விசாரித்துவிட்டுத்தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் கூறினேன்டா…! கனடாவில் கூட உறவினர்கள் மூலம் விசாரித்தேன்… குறை சொல்ல எதுவும் இல்லை என்றார்கள் கண்ணம்மா…!” என்று அவர் கூற,

“பிறகு எதற்காகப்பா வருந்துகிறீர்கள்… அவர் எப்படியும் என்னை நன்றாக வைத்திருப்பார்… எனக்கந்த நம்பிக்கை நிறையவே இருக்கிறது… ப்ளீஸ்… வருந்தாதீர்கள்…!” என்று தந்தையிடம் கூற சற்றுத் தெளிந்தாலும், ஏனோ மனது சந்தோஷப் பட மறுத்தது.

‘எனது மகள் இனி வேறொருவன் உடைமை…’ என்கிற ஒருவித பொறாமையாகக் கூட இருக்கலாம். ஆனாலும் அவளுடைய வாழ்வையும் பார்க்க வேண்டுமே. மீண்டும் உள்ளம் வலிக்க, தன் மகளை அணைத்து விடுவித்தவர், இனி அவளுடைய வாழ்வு அழகானதாக இருக்கவேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்,

“வாம்மா… நேரமாயிற்று…!” என்று கலங்கிய கண்களைத் துடைத்தவாறு வெளியேற, இப்போது மகிழ்ச்சியிருந்த இடத்தில் பெரிய வெடிகுண்டை வைத்த உணர்வில் தவித்துப் போனாள் மிளர்ம்ருதை.

பதினெட்டு வருடங்களாகக் கண்ணுக்குள் வைத்துத் தாங்கிக்கொண்டவர் அவர். ஒரு கணத்தில் அவரை விட்டு விலக மனம் தயாராகிவிட்டதே… இது எப்படிச் சாத்தியம். அத்தனை சுயநலவாதியா நான்?’ வலியுடன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே பெண்கள் கூட்டம் அவளை அழைத்துச் செல்ல வந்தனர்.

சரியான நேரத்திற்கு அனைவரும் முருகன் சன்னிதானத்தை வந்தடைந்தனர். அங்கே அபயவிதுலன் மணமகன் கோலத்தில் பட்டு வேட்டி சால்வையுடன் ஒரு அரச கம்பீரத்துடன், அனைவரையும் குள்ளமாக்கியவாறு நின்றிருந்தான்.

கடைசி நேரத்தில் அவனுடைய சகோதரியால் வரமுடியாமல் போய்விட்டது. அந்தச் சோகம் அவனை மிகவும் வாட்டியதோ! அவனுடைய முகம் இறுகிப்போயிருந்தது.

இருக்காதா? அன்பாக வளர்த்த சகோதரி. இருக்கிற ஒரே ஒரு உறவு. அவர்கள் திருமணத்திற்கு வராவிட்டால், எத்தனை வேதனையாக இருக்கும். இப்போதே அவனை அணைத்து ஆறுதல் படுத்த மனம் பரபரத்தது.

மணமேடையில் அமர்த்தப்பட்டதும், கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் அரங்கேறியிருந்தன. அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து, சுப நேரத்தில் அபயவிதுலனின் பலம் பொருந்திய கடிய கரங்கள், அவளுடைய மென்மையான சங்குக் கழுத்தில் திரு மாங்கல்யத்தைப் புனைந்து இவள் என்னவள் என்று முத்திரை பதித்துக் கொண்டது.

அந்த ஸ்பரிசத்தில் உடல் சிலிர்க்க, முழு மனதாகவே அவனைத் தன் கணவனாக ஏற்றுக்கொண்டாள் மிளிர்ம்ருதை. சற்றும் காதல் குறையா மகிழ்ச்சியுடன் தன் விழிகளைத் திறந்து, மாங்கல்யம் அணிவித்துக்கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அந்த விழிகளில் காதலிருக்கவில்லை. அன்பிருக்கவில்லை… அங்கே ஒரு வித இறுக்கமும், தவிப்புமே இருந்தன.

அவன் முகத்தைக் கண்டதும், மலர்ந்த முகம் மெல்லியதாகக் கூம்பிப் போனது.

அந்த நிலையிலும், இவருக்கு என்னவாகிவிட்டது…? எதற்கு இத்தனை கோபம்?’ என்று எண்ணும் போதே,

“பெரியவர்கள் வந்து அச்சதையைப் போடுங்கள்…!” என்று ஐயர் கூறப், பிறகு எல்லாம் மின்னல் விரைவுதான்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து எல்லாச் சம்பிரதாயங்களும், இரண்டு மணி நேரங்களுக்குள் முடிந்தன. மதியச் சாப்பாடு பெரிய உணவகம் ஒன்றில் அயபவிதுலன் ஏற்பாடு செய்திருந்ததால், அங்கேயே அனைவரும் சென்றனர்.

அன்று காதலும், கனிவும் இணைய அவளுடன் பேசிவிட்டுச் சென்றவன், இப்போது உர்ர்ர்… என்று இருந்தது அவளின் மனத்தை மிகவும் பிசைந்தது.

மருந்திற்குக் கூட அவளைப் பார்த்து அவன் சிரிக்கவில்லை. கனிவாக ஏறிடவில்லை. திருமணம் முடிந்து இந்தக் கணம் வரைக்கும் அவளைப் பார்ப்பதை அவன் தவிர்த்ததுதான் அவளைப் பெரிதும் வாட்டியது.

அக்கினியை வலம்வரும் போது கூட, அவளுடைய கரத்தை எலும்புகள் நொறுங்கும் அளவில் இறுகப் பற்றியிருந்தானேயன்றி, அவளை ஏறிட்டும் பார்க்கவில்லை. இவள்தான் ஆவலாக அவன் முகத்தைப் பார்ப்பதும், அவன் பார்க்கவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் தலையைக் குனிவதுமாகச் சோர்ந்துபோனாள்.

இப்போது உணவகத்துக்கு வந்தும், அவளைப் பார்த்தானில்லை. அவனறியாமல் கடைக் கண்ணால் அவனை ஏறிட்டாள் மிளிர்ம்ருதை.

கல்லுளிமங்கன்… அவள் பக்கம் திரும்பினால் அல்லவோ. அப்போதுதான் அவளுடைய உறவினர்கள் யாருடனோ முக்கியமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

நேரம் வேகமாகச் சென்றது, மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு எல்லோரும் அவளுடைய வீட்டிற்குச் சென்றனர். ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்ல மாலையாகிவிட்டது. அப்படியே முதலிரவை அவன் தான் தங்கியிருக்கும் விடுதியில் வைக்கலாம் என்று கூற, ‘சின்னஞ் சிறிசுகளின் தனிமையில் இருக்க விரும்புவார்கள். அவர்களின் விருப்பத்தை ஏன் கெடுப்பான் என்று விக்னேஷ்வரனும், சந்தோஷமாகவே தலையாட்டிவைத்தார்.

தன்னவனுடன் தனிமையில் போகப்போகிறோம் என்று மனம் குதூகலிக்க, திருமணச் சேலையைக் களைந்து விட்டு, எளிமையான ஆடைகளை அணிந்து செல்லாம் என்று தன்னறைக்குள் நுழைந்தவள், அவசரமாகச் சின்னக் குளியலைப் போட்டுவிட்டு, எளிமையான புதிய பட்டுச் சேலை ஒன்றை எடுத்து உடுத்திக்கொண்டிருந்த நேரம், சாத்தியிருந்த கதவு சடார் என்று திறந்தது.

அப்போதுதான் முந்தானையைப் போட்டு அதற்குப் பின் குத்திவிட்டு, மடிப்பு எடுத்துக்கொண்டிருந்த நேரம், பதறியவாறு நிமிர்ந்து பார்க்க, அங்கே அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அபயவிதுலன். அவனும் இந்தக் காட்சியை எதிர்பார்க்கவில்லை போலும்.

சேலை மடிப்பை செருகுவதற்காகச் சற்று முந்தானை விலகிய நிலையில், அவளுடைய வெண்பட்டு வயிறு அப்பட்டமாக அவனைப் பார்த்து வெட்கமின்றிக் கண்ணடிக்க, அதற்கு மேல் தெரிந்த பெண்மையின் அழகில் ஒரு கணம் தடுமாறித்தான் போனான்.

மிளிர்ம்ருதையும் அவனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது இயங்காமலிருந்த கரத்திலிருந்தும். பெரிதாய் விரிந்து மலர்ந்த விழிகளிலிருந்தும் தெரிய, அபயவிதுலனின் காமப் பார்வையோ அவளுடைய காலிலிருந்து தலை வரை தாபத்துடன் ஏறி இறங்கியது. கூடவே,

“பியூட்டிஃபுள்… யு லுக்ஸ் லைக் எ ஸ்டட்சு…” என்றான் குறுகிய இடையில் தன் விழிகளைப் பதித்தவாறு.

அப்போதுதான் சுயநினைவு பெற்றவளாகப் பதற்றத்துடன் மடிப்பைச் செருகாது, கரத்தில் பற்றியவாறே, திரும்பி நின்று முந்தானையை இழுத்து விட்டவளுக்கு, ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது.

மனதிற்குள் புகுந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன்தான். சற்றிற்கு முன்பு கணவனாக உரிமை பெற்றவன்தான். ஆனாலும் அவளுடைய அனுமதியில்லாமல் அறைக்குள் நுழைந்ததும், அவள் உடல் அழகை அவன் பார்த்த விதமும் ஏனோ அவளுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் அவளுடைய அனுமதியில்லாமல் எப்படி அப்படிப் பார்க்கலாம்…

ஒரு கண்ணியமானவனாக, தன்னைக் கண்ட உடன் திரும்பி நிற்கவில்லை அது கட்டிய மனைவியே ஆனாலும், அவன் குறைந்தது மன்னிப்பு வேண்டியிருக்க வேண்டும். ஆனால் அவன் அதைக் கருத்தில் கொள்ளவேயில்லை. கூடவே அன்று முழுவதும் தன்னிடம் சிறு பார்வை வீச்சு கூட இல்லாமல், பாரா முகமாக அவன் நடந்து கொண்டது வேறு எரிகிற நெருப்புக்கு எண்ணை வார்த்தது போலானது. தாங்க முடியாத கோபத்தில்,

“என்ன இது… ஒருவரின் அறைக்குள் போகும் போது தட்டிவிட்டுச் செல்லவேண்டும் என்கிற நாகரீகம் இல்லை?” என்று சுள் என்று கேட்க மறு பக்கம் எந்தச் சத்தமும் வராது அமைதியாக இருந்தது.

அவசரமாக மடிப்பை வயிற்றில் செருகிவிட்டு, மீண்டும் முந்தானையைச் சரிப்படுத்தியவாறு திரும்பிப் பார்க்க, அவனோ மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் நின்றிருந்த நிலையைக் கண்டதும், ஏனோ இவள் உள்ளம் படபடத்தது.

அதுவரையிருந்த கோபம் காணாமல் போக, அங்கே அவளை விட்டுச் சென்றிருந்த நாணம் மேலும் வந்து அவளோடு ஒட்டிக்கொண்டது. அதை அடக்கும் வகைத் தெரியாது, தளிர் தேகம் மெல்லியதாக நடுங்க, இதழ் கடித்து நின்றவளை உற்றுப் பார்த்தான் அபயவிதுலன்.

“என் மனைவியின் அறைக்குள் போவதற்கு நான் யாரிடம் அனுமதிகேட்கவேண்டும்…” என்றான் தன் ஆழ்ந்த அழுத்தமான குரலில்.

அந்தக் குரலில் என்ன இருந்தது. ஆணவம், ஆங்காரம், அதிகாரம். என்னைத் தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை என்கிற கோபம்… கூடவே அந்தப் பார்வை… அந்தப் பார்வை… அது என்னமாதிரியான பார்வை…? மானை வேட்டையாட எண்ணும் புலியின் பார்வை போல அல்லவா இருக்கிறது… இல்லை திருமணமான எல்லா ஆண்களுக்கும் அந்தப் பார்வை இருக்குமா?

விதிர் விதிர்த்துப் போனாள் மிளிர்ம்ருதை. ஏனோ முதன் முதலாகப் பார்த்த இவனுக்கும், இப்போது பார்ப்பவனுக்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கிறன என்பதை மட்டும் அவளால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

“எ… என்ன வேண்டும்… எ… எதற்காக இங்கே வந்தீர்கள்…” என்று அவள் திக்கித் திணறிக் கேட்க, ஒரு கணம் ஆழமாக அவளை ஏறிட்டவன்,

“வி ஹாவ் டு மூவ்… கெட் ரெடி… இன்னும் ஐந்து நிமிடங்களில் நீ கீழே வரவேண்டும்… அதைச் சொல்லத்தான் வந்தேன்…” என்றவன் பின் சற்று நிதானித்து, மீண்டும் அவள் உடலின் மிது தன் விழிகளை ஊர்வலம் நடத்தியவன், கிண்டலுடன் தன் ஒற்றைப் புருவத்தை மேலேற்றி,

“தேவையற்ற மறைப்பும் பதற்றமும்… அதுவும் என்னிடம்… இன்று இரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்…” என்று விட்டு வெளியேற விக்கித்துப் போனாள் மிளிர்ம்ருதை.

இந்த நகைப்புக்கு என்ன விளக்கம்.. தன்னிடம் என் உடலை மறைத்துப் பயனில்லை என்கிறானா? இரவுக்காகக் காத்திருக்கிறேன் என்றால்…’ அப்போதுதான் அவளுக்கு நடக்க இருக்கும் நிகழ்வின் தாற்பரியம் புரிந்தது.

அந்த இனிமையான இரவுக்காகக் காத்திருந்தாள்தான். எப்போதும் யோசனையில் வராத அந்த இரவை, அவனுடன் திருமணம் முற்றான நாளிலிருந்து, எப்படியிருக்கும் என்று யோசித்தாள்தான். புதிய பாடம் கற்கப்போகும் அந்த இனிய இரவிற்காக ஏங்கினாள்தான். அவனுடைய கனிவு தரும் விழிகளுக்காகவும், அவனுடைய மெல்லிய சுடும் உடலின் அரவணைப்பிற்காகவும் அவள் தவித்தாள்தான். ஆனால், இப்போது அந்த உணர்வு மறைந்து போய் அவ்விடத்தில், ஒரு வித பயம் அவளை ஆட்கொண்டது. முன்பு இனிமையாய்த் தெரிந்தது, இப்போது மெல்லிய கலக்கமாக மாறியது.

புரியாத தவிப்புடன் உடல் இறுக, அது வரை திடமாக இருந்த உடல் மெல்லியதாக நடுங்க, ஏதோ ஒரு வித அச்சம் அவளைக் குடி கொள்ளத் தயாராகிக் கீழே வந்தாள். அவளுக்காக அவன் வாசலிலேயே காத்திருந்தான்.

விக்னேஷ்வரனுக்கு அபயவிதுலனின் அவசரம் புரிய ஒரு பக்கம் சங்கடமாக இருந்தாலும், மறு பக்கம் உள்ளம் மகிழ்ச்சியில் தத்தளித்தது. தன் மகளின் மீதிருந்த அன்பினால் வந்த அவசரம்தானே இது.

தானே அவர்களை அழைத்துச் சென்று விடுதியில் விட்டுவிடுவதாகக் கூற,

“நோ தாங்க்யூ… நானே என் மனைவியை அழைத்துச் செல்கிறேன்…” என்று பட்டென்று கத்தரித்தால் போல அபயவிதுலன் கூறிவிட, ஏனோ அந்தக் குரல் விக்னேஷ்வரனுக்கு மட்டுமல்ல, மிளிர்ம்ருதைக்கும் ஒரு வித குளிரைப் பரப்பியது.

இவள் முகத்தில் தெரிந்த அச்சத்தைக் கண்டதும், அதைப் புரிந்துகொண்ட விக்னேஷ்வரன்,

“ஒன்றுமில்லைம்மா… நம்ம மாப்பிள்ளைக்கு, உன்னோடு நேரம் செலவழிக்க ஆவலாக இருக்கிறது போல… நான் வந்தால், அது தடங்கல்தானே…! உன்னுடைய அம்மா இருந்திருந்தால் சொல்லியிருப்பார்கள்… ஆனால் அதற்குத்தான் நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே…! எதுவாக இருந்தாலும் மாப்பிள்ளையின் விருப்பம் போல நடந்துகொள்ளுமா… எந்தச் சந்தர்ப்பத்திலும் அவருடைய மனம் வருந்தும் படி நடந்துகொள்ளாதே…!” என்று அவளுடைய தலையை வருடியவாறு கூறியவர், குனிந்து அவள் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு விடை கொடுக்க, எட்டு மணிக்குத் தனிமையில் இனிமை காணத் தம்பதிகள், அவனுடைய விடுதிக்குச் சென்றனர்.

அந்த விடுதியைக் கண்டதும் மிளிர்ம்ருதை திகைத்துப்போனாள். அவளே வசதியானவள்தான். அப்படி இருந்தும் இப்படிப்பட்ட விடுதிக்கு வரச் சற்று யோசிக்கவேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் அந்த விடுதிக்கு முப்பதினாயிரம் ரூபாய்கள் என்று எப்போதோ கேள்விப்பட்டிருக்கிறாள். அப்படியானால்… இவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருக்கவேண்டும்.

இவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, மின்தூக்கியின் கதவு திறக்கப்பட, உள்ளத்தில் எழுந்த வியப்பைச் சிரமப்பட்டு முகத்தில் காட்டாத வண்ணம், அவனுடன் மின்தூக்கியினுள் நுழைந்தாள். அன்றைக்கென்று ஒரு மின்தூக்கி மட்டுமே வேலைசெய்கிறது போலும். மின்தூக்கிக்காகக் காத்திருந்த அனைவரும், கிடைத்ததில் ஏறிக்கொள்ள, உள்ளே, பெரும் நெருக்கடியாக இருந்தது. அதில் ஏறியவர்கள் வேறு பல பொதிகளைக் கரங்களில் வைத்திருந்ததால், நிற்பதற்கே இடம் போதாது என்கிற நிலைமை.

அதில் ஒருவன் சுவரோடு நின்ற மிளிர்ம்ருதையை முட்டியவாறு நிற்க, அதைக் கண்ட அபயவிதுலனின் முகம் இறுகிக் கறுத்தது. அந்த இடத்தில் தன் நாகரீகத்தைத் தொலைத்தவனாகத் தன் மனையாளின் அருகே நின்றிருந்தவனுக்கும், அவளுக்கும் இடையே சென்று அவளைச் சிறைபிடித்தாற் போல, இருபக்கமும் கரங்களைப் போட்டவாறு ஒரு அரணாக நின்று கொள்ள, அது வரை அவளை அழுத்தியிருந்த கலக்கம் மாயமாக மறைந்து போனது.

தனக்கே தனக்காக யோசித்துச் செய்யும் இவன் எப்படித் தனக்குத் தீமை செய்வான்? பிறரிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும் இவன், நிச்சயமாகக் காலம் முழுவதும் என்னைத் தாங்கிக்கொள்வான்…’ என்கிற நம்பிக்கை அவளை முற்று முழுதாக ஆட்கொள்ள, தன் விழிகளுக்கு முன்பாகத் தெரிந்த அவனுடைய பரந்து விரிந்த மார்பில் அப்போதே தன் தலைசாய்த்துப் படுக்கவேண்டும் என்கிற உந்துதல் எழ, நிமிர்ந்து தன்னவனைப் பார்த்தான்.

அவனும் குனிந்த நிலையில் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். நீண்ட அவள் விழிகளுடன், கூரிய அவன் விழிகள் கலந்து கொண்டன. அவனாலும் தன் விழிகளை விலக்க முடியவில்லை. அவளாலும் முடிந்திருக்கவில்லை. மறு தளத்தில், இன்னும் ஓரிருவர் ஏற, அது வரை அரணாக இருந்தவனை அம்மக்கள் கூட்டம் தள்ளிவிட, முழுதாக அவள் மீது மோதி நின்றான் அபய விதுலன். மோதிய வேகத்தில் எங்கே விழுந்துவிடுவாளோ என்று அஞ்சியவன் போல, சுவரில் பதிந்திருந்த வலது கரத்தை விலக்கி அக்கரம் கொண்டு, அவளைத் தன்னோடு சேர்த்து இழுத்து அணைக்க, அவன் கரங்கள் சென்று அடைக்கலமான இடம், அவளுடைய முதுகின் கீழ் முள்ளந்தண்டின் வளைவுப் பகுதி.

இவளோ அவன் மோதியதும், பயத்துடன் பற்றிக்கொண்டது, அவனுடைய மார்புப் பகுதியின் சட்டையை. கரம் பட்ட இடத்தை வருடிக் கொடுத்தவாறு,

“ஆர் யு ஓக்கே…” என்றான் மெல்லிய கிசுகிசுப்புடன். அவனுடைய விரல்களின் வருடலில் சிவந்து போனவளாய்த் தலையைக் குனிந்து, ஆம் என்று தலையை ஆட்ட, இப்போது அவனுடைய கரம் இடம் பெயர்ந்து, அவளுடைய வெற்றிடையில் தன் இளஞ்சூட்டைப் பரப்ப, புல்லரித்துப் போனாள் இவள். அவன் ஸ்பரிசத்தில் உள்ளம் தடுமாறத் தன் உதடுகளைக் கடித்தவாறு தலை குனிந்திருந்தவளை விழுங்குவது போலப் பார்த்தான் அபயவிதுலன்.

“யு ஆர் சோ சாஃப்ட்…” என்றவனின் வலது கரத்தின் பெருவிரல், பட்டையும் விஞ்சிய இடையில் மெல்லிய கோலம் போட இவள் அவஸ்தையுடன் விழிகளை மூடினாள்.

இப்போது அவர்களின் தளம் வரக் கதவு திறந்தது. தன்னவளின் அணைப்பைச் சற்றும் விலக்காது, பிறருடன் மோதாத வகையில், அவள் தோள் மீது கரத்தைப் பதித்துத் தன் மார்போடு அழுத்தி,

“எக்ஸ்கியூஸ் அஸ்…” என்றவாறு வெளியே வந்தவனின் முகம் இப்போது முற்று முழுதாக மாறியிருந்தது. அது வரை இருந்த காமம் மறைந்து இப்போது கடுமை அம்முகத்தில் ஏறியிருந்தது.

ஆனாலும் அது அவளுக்கு உரைக்கவில்லை. இப்போது உள்ளம் முழுவதும் அவன் மீதான நம்பிக்கை பரந்து விரிந்திருந்தது. இடையில் தோன்றிய பயம் இப்போது தொலைந்து போனது. இனி அடுத்து எடுத்து வைக்க இருக்கும் இனிய சம்பவத்திற்காக அவள் தன்னை மனதளவில் ஓரளவு தயார்ப்படுத்த தொடங்கினாள்.

அவளை அணைத்தவாறே தனக்குரிய அறையின் அருகே வந்தவன், குனிந்து அவளைப் பார்த்து,

“ஷால் வி…” என்றவாறு கதவைத் திறந்தான்.

நாணமும், அச்சமும் போட்டிப்போட மெதுவாக அவனுடன் உள்ளே நுழைந்தாள் மிளிர்ம்ருதை. யாருமற்ற தனிமை. விரும்பிக் கைப்பிடித்த கணவன்… இனிமைக்குச் சொல்ல வேண்டுமா? அன்பாக அணைப்பான் என்று எதிர்பார்த்தவாறு, நாணத்துடன் தன்னை அணைத்தவாறு நின்றிருந்த கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

என்ன நினைத்தானோ, அவளை விடுத்து, விரைந்து சென்று அங்கிருந்த கபேர்ட் ஒன்றைத் திறந்து பார்க்க, அங்கே அவன் எதிர்பார்த்தது இருக்கவில்லை போலும். அலமாரியைத் திறந்த வாக்கில் பிடித்துக்கொண்டே, தலையை மட்டும் திருப்பி, தன் மனைவியை ஏறிட்டவன்,

“நீ தனியாக இங்கே இருப்பாய் அல்லவா…? சின்ன வேலை இருக்கிறது… வெளியே சென்று விட்டு வருகிறேன்… ஜெஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்தான்… வந்துவிடுகிறேன்…” என்று எங்கோ பார்த்துக் கூறிவிட்டு, அவள் பதிலையும் எதிர்பார்க்காது வெளியேறினான்.

அவன் போனதும், ஏனோ அவளுக்கு மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. அதுவும் அவன் கூறிய விதம், ஒரு வித குளிரைப் பரப்ப, ஒரு கணம் தடுமாறி நின்றாள். எல்லாமே புதுமையாக இருப்பதால் அந்தத் தடுமாற்றமாக இருக்கலாம் என்று எண்ணித் தன்னைச் சமாதானப் படுத்தியவளாகக் குளியல் அறைக்குள் சென்று வந்தாள்.

ஐந்து நிமிடங்களில் வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவன், அரை மணி நேரம் சென்றும் வந்தானில்லை. சோர்வுடன் கட்டிலில் அமர்ந்தவள், இரு கரங்களையும் கட்டிலில் பதித்து விழிகளை மூடித் தலையைப் பின்னால் சரித்து, அபயவிதுலனைப் பற்றி எண்ணத் தொடங்கினாள்.

அவனுடைய அருகாமை கொடுத்த போதையை எண்ணி நெகிழ்ந்தவளுக்கு, எப்போது அவன் வருவான் என்றிருந்தது. கூடவே அவன் வருடலை எண்ணிப் பெரும் நாணம் உதித்தது. அவனுடைய நீண்ட பெரிய கரங்கள், அவள் பொன்னுடலை மென்மையாய் கையாளும் நிமிடத்திற்காக, ஒரு இளம் மனைவியாக, அவனை முற்று முழுதாகக் கணவனாக வரிந்துகட்டிய உரிமையில் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், அறைக் கதவு மீண்டும் திறந்தது.

 

 

What’s your Reaction?
+1
14
+1
4
+1
2
+1
0
+1
2
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!