Thu. Sep 19th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16

இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன். மெல்ல மெல்லச் சுயநினைவு பிறக்க அங்கமெல்லாம் தோன்றிய சொல்லொணா வலியை விட, அவனைத் தாக்கியது இதயத்தின் வலி.

கண்முன்னால் படமாய் ஆகாயத்தில் மிதந்த சமர்த்தியின் வாகனம் நினைவுக்கு வரத் துடித்துப் பதைத்து எழுந்தவனுக்கு அப்போதுதான் தெரிந்தது தான் மருத்துவமனையில் இருப்பது.

அவனுடைய சதிக்கு என்னவானது. நெஞ்சமெல்லாம் தீயாய்த் தகிக்கத் தன் கரங்களில் ஏறியிருந்த ட்ரிப்பை அறுத்தெறிந்துவிட்டுத் தரையில் கால் பதித்தவனுக்கு உலகம் தட்டாமாலையாகச் சுழன்றது. அந்த நேரம், உத்தியுக்தனின் அறையை நோக்கி வந்துகொண்டிருந்த அவ்வியக்தன்,

“ஹே ப்ரோ… வட் த ஹெல் ஆர் யு டூயிங்…” என்று பதறியவாறு நெருங்கித் தன் அண்ணனைப் பற்றிக்கொள்ள,

“சதி… சதிக்கு என்னவாயிற்று… அவளுக்கு… எப்படி… எப்படி இருக்கிறது? அவள் வாகனம் வி… விப… விபத்துக்குள்ளானதைக் கண்டேன்.. அவளுக்கு… அவளுக்கு ஒன்றுமில்லை தானே…” என்று தன் உயிரைக் கையில் பிடித்தவாறு கேட்டவன், தன்தம்பியிடமிருந்து திமிற, தன் சக்தி அனைத்தையும் சேர்த்து அண்ணனை இறுகப் பற்றிய அவ்வியக்தன்,

“ப்ரோ… லிசின்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்றான் தன் அண்ணனை சமாதானப்படுத்த வேண்டி.

“ஜ்ஜ்ஜ்ஜ் ஜ்ஜ்ஜ்ஜ் ஃபரம் மீ அவ்வி… நான் சதியிடம் போகவேண்டும்… நான் அருகே இல்லையென்றால் பயந்து போவாள்…” என்று மேலும் நடக்க முயன்றவனுக்கு உடலில் அங்கும் இங்குமாக எரியத் தொடங்கியது. வலது தோள் பட்டையிலும் கழுத்திலும் யாரோ தீயை வைத்ததுபோலத் தகிக்கத் தன்னை மறந்து ஒற்றைக் கரத்தால் கழுத்தைத் தொட்டுப் பார்த்தான். பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது.

“வட் இஸ் தட்… வட் ஹப்பன் டு மி…” என்று எரிச்சலுடன் தன் தம்பியைப் பார்த்துக் கேட்க,

“நீ மோதுப்பட்ட வேகத்தில் உன் வாகனம் எரியத் தொடங்கிவிட்டது… உன்னை மீட்பதற்குள்… சில இடங்களில் தீக்காயங்கள் பட்டுவிட்டன…” என்று மெல்லிய வலியோடு கூற,

“எவ்வளவு நேரமாகச் சுயநினைவின்றி இருந்து இருக்கிறேன்…” என்று கேட்டான் உத்தியுக்தன்.

“எட்டு மணி நேரம்…” என்றதும் பற்களைக் கடித்தவாறு அமைதி காத்தான் உத்தியுக்தன்.

இத்தனை மணி நேரம் அவன் மனைவியின் அருகே இல்லாமல் இருந்திருக்கிறான்… நினைக்கும் போதே ஆத்திரம் வந்தது. மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தவாறு,

“சமர்த்தி எங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்..” என்றான் அடுத்து.

“ப்ரோ… லிசின்… உனக்கும் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது… இந்த நிலையில் நீ வெளியேற முடியாது… சொல்வதைக் கேள்…” என்று தடுக்க முயல, இவனோ திரும்பித் தன் தம்பியை அழுத்தமாகப் பார்த்தான்.

“சமர்த்தி எங்கே…” என்றான். அவன் விழிகளில் தெரிந்த சீற்றத்தையும், வலியையும், இயலாமையையும், அதை வெளிக்காட்டாதிருக்க அவன் படும் முயற்சியையும் கண்ட அவ்வியக்தன்,

“சரி நான் அழைத்துச் செல்கிறேன்.. இங்கேயே இரு.. இதோ வருகிறேன்.” என்றுவிட்டுச் சென்றவன், எங்கிருந்தோ ஒரு சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு வருவதற்குள் உத்தியுக்தன் நின்றிருந்த இடம் காலியாக இருந்தது.

அதைக் கண்டதும், ஆத்திரத்துடன் எதையோ முணுமுணுத்தவன், சக்கர நாற்காலி அங்கேயே விட்டுவிட்டு எலிவேட்டரை நோக்கிப் பாய்ந்தான்.

அதற்கிடையில் சமர்த்தி அனுமதிக்கப்பட்ட அறையை விசாரித்தவாறு வந்த உத்தியுக்தனை யாரும் உள்ளே விட அனுமதிக்கவில்லை.

“நோ யு கான்ட் கோ இன் சைட்…” என்று ஒரு தாதி மறிக்க, இவனோ அடக்கிய சீற்றத்துடன் அவரைப் பார்த்து,

“ஐ ஆம் ஹேர் ஹஸ்பன்ட்… ஐ நீட் டு சீ ஹர்…” என்றான். தாதியோ சற்றும் இரங்காதவராக,

“அவர் உங்கள் மனைவியாக இருக்கலாம்…. ஆனால் இப்போது அவர் எங்களுடைய நோயாளி… எங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் உள்ளே போக முடியாது…” என்று மறுக்க,

“ஸ்டாப் மி இஃப் யு டேர்…” என்றவன் ஆவேசத்துடன் கதவைத் திறந்து உள்ளே நுழைய, அங்கே தன் மனைவியின் நிலை கண்ட உத்தியுக்தன் மீண்டும் ஒரு முறை மயங்கும் நிலைக்கே சென்றுவிட்டான்.

“இல்லை… இல்லை… இது அவனுடைய மனைவியில்லை… நிச்சயமாக இல்லை… இப்படி முகம் கண்டி வீங்கி, முகம் தெரியாத அளவுக்குக் கழுத்தைச் சுற்றி, பாதுகாப்புப் பட்டிபோட்டு, தெரியும் இடங்கெல்லாம் குழாய்களைப் பொருத்தி, எஞ்சிய இடங்கள் முழுவதும் பிளாஸ்தர் என்று அடையாளம் தெரியாதிருந்த தன் மனைவியைக் கண்டு, மொத்தமாய் நடுங்கிப்போனான் உத்தியுக்தன்.

பாய்ந்து அவளை நெருங்கியவன், விழிகளில் கண்ணீர் பொங்கத் தலை முதல் கால்வரை பார்த்தான். அவன் கட்டுப்பாட்டையும் மீறித் தேகம் நடுங்கியது. தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. உடலிலிருந்து இரத்தம் வழிந்து செல்ல, நெஞ்சமோ சொல்லொணா வலியில் கிடந்து அடித்தது.

சிரமப்பட்டுத் தன்னைச் சமப்படுத்தியவனாக, தீப்பட்ட கரம் கொண்டு அவள் தலையை வருடிக் கொடுத்தவனின் உதடுகள் நடுங்கின.

“நோ… நோ… நோ பேபி… ப்ளீஸ்… சே திஸ் இஸ் ஜெஸ்ட் எ ட்ரீம்… ப்ளீஸ் சே திஸ் இஸ் நத்திங்… ஓ காட்… சதி… உன்னை இப்படி என்னால் பார்க்க முடியவில்லையே… ப்ளீஸ் ஸ்டே வித்மி… பம்கின்… ஐ பெக் யு ப்ளீஸ்… ஸ்டே வித் மி…” என்று உடலோடு குரலும் நடுங்க கண்களில் கண்ணீர் பொங்கி வழிய, அவளைப் பார்த்து வேண்டினான்.

அவனுடைய குரலைக் கேட்டதும் அவளுடைய விழிகள் மட்டும் திறக்க முயல்வன போல அசைந்தன. மெல்லியதாக விரிந்து பின் மூடின…

அதைக் கண்டதும் பெரும் பரபரப்புத் தோன்ற, பாய்ந்து தன் மனைவியின் முகம் நோக்கிக் குனிந்தவன், அவளுக்குப் பக்கமாக மண்டியிட்டு அமர்ந்து,

“லிசின் டு மி கெயர்ஃபுளி பேபி… உனக்கு ஒன்றுமில்லை… ஒன்றுமேயில்லை… புரிகிறதா… நீ நலமாகி வீடு வந்துவிடுவாய்… நான் சொல்வது கேட்கிறதா… பம்பின்… வித்தவுட் யு ஐ ஆம் நத்திங்… ரியலி நத்திங்… நான் சொல்வதைக் கேட்கிறாய் தானே… ப்ளீஸ்… சதி… ப்ளீஸ்… டோன்ட் பணிஷ் மி லைக் தட்… ப்ளீஸ்… ப்ளீஸ்… இதோ பார் நீ நினைத்தது போல எதுவுமே தப்பாக நடக்கவில்லை… நம்புமா… சத்தியமாக எதுவும் நடக்கவில்லை… உன்னைத் தவிர வேறு எவளையும் இந்த ஜென்மத்தில் காதலியாய் மனைவியாய் யோசிக்கவே மாட்டேன்… இதோ பார்…” என்றவன் பரபரப்புடன் எழுந்து கண்ணீரைத் துடைத்து,

“என் வாழ்வில் நான் அழுதது கிடையாது சதி… இந்த அளவு கலங்கியது கிடையாது… ஏன் என்னுடைய வியாபார சாம்ராஜ்யம் உடைந்த போது கூட நான் உடைந்து போகவில்லை. ஜூலியட் என்னை விட்டு விலகியபோது கூடத் துடித்ததில்லை… ஆனால் இப்போது, உன் முன்பாக நான் அழுகிறேன்… துடிக்கிறேன்… தவிக்கிறேன்… அச்சம் கொள்கிறேன்…” என்றவன் நடுங்கும் கரம் கொண்டு அவளுடைய கரத்தைப் பற்றித் தன் இடது மார்பில் பதித்து,

“என் இதயத்தின் துடிப்பு உனக்குத் தெரிகிறதா சதி… இப்படி அச்சத்தில் ஒருபோதும் என் இதயம் துடித்ததில்லை தெரியுமா… அதுவும் கண்முன்னால் உன் நிலையைக் கண்ட நொடியிலிருந்து வேகமாகத் துடிக்கும் இந்த இதயம் இந்த விநாடிவரை குறைய வில்லை… இந்த நொடி வரை உனக்காக இது துடித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வேளை உன்னதும் நின்றால், என்னதும் நின்றுவிடுமோ என்று பயமாக இருக்கிறது…” என்றவன் பேரலையாக எழுந்த வலியுடன் மெல்லியதாகச் சிரித்து,

“சாரி… எனக்கு எப்படி மன்னிப்புக் கேட்பது என்று தெரியாது… எப்படி யாசிப்பது என்றும் தெரியாது… இதுவரை இத்தகைய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டதில்லை… பம்கின்… இதுவரை நான் தவறு செய்ததாக நினைக்கவில்லை. அப்படியே நான் தவறு செய்ததாக நீ நினைத்தால்… என்னை நீ… மன்னிப்பாயா…? எதையும் என்னால் இழக்க முடியும் போலத் தோன்றுகிறது… ஆனால் உன்னை… உன்னை இழப்பது…” என்றவன் அவளுடைய கரத்தில் முத்தமிட்டுக் கண்ணீர் மல்கக் குலுங்கினான். வழிந்த கண்ணீரோ அவளுடைய கரத்தில் விழுந்து வழிந்து சென்றதன்றி அவளைக் கொஞ்சம் கூட அசைத்து எழுப்பவில்லை.

“அழுகிறேன்… முதன் முறையாக நிறைய அழுகிறேன் உனக்காய்… கண்ணம்மா… நீ எழுந்து வரவில்லை என்றால்… நானும் எழமாட்டேன் சதி… உன்னோடு என் உலகமே அழிந்து போகும்… ப்ளீஸ்… ஐ பெக் யு… வேக் அப் பேபி… ஐ கான்ட் லொஸ்ட் யு… நான் சொல்வது உண்மை… சத்தியம்… நீ மட்டும் திரும்ப வந்துவிடு சதி… நீ என்ன வேண்டினாலும் நான் செய்கிறேன்…” என்றவன் மீண்டும் அவள் விரல்களை அழுத்திக் கொடுத்து,

“பம்கின்… இதை எப்படியாவது உன்னிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்… ஆனால்… சொல்ல முடியவில்லை… இப்போது சொல்லத் தோன்றுகிறது… ஆனால் அதைக் கேட்கும் நிலையில் நீ இருக்கிறாயா தெரியவில்லை… பட் ஐ ஹாவ் டு சே திஸ்… ஐ லவ் யு பம்கின்… ஐ லவ் யு சோ மச்… இந்த உலகை விட, என் உயிரை விட, எனக்கு உன்னை… உன்னை மட்டும்தான் பிடிக்கும் சதி… ஐ லவ் யு… எனக்கிருக்கும் குடும்பம் நீ மட்டும்தான்… நீயும் என்னை அனாதையாக்கிவிட எண்ணாதே… ப்ளீஸ் கம் பக் டு மி…” என்று தன்னை மறந்து வாய்விட்டழத் தொடங்க, அறைக் கதவு திறந்தது. இவனோ கதவு திறந்ததைப் பற்றி அக்கறை கொண்டதாகவே தெரியவில்லை. அவன் போக்கில் தன்னவளிடம் மன்றாடிக்கொண்டிருக்க,

“மிஸ்டர் இங்கே என்ன செய்கிறீர்கள்…” என்கிற கடினமான குரல் வந்தது. அவசரமாகத் தன் விழிகளைத் துடைத்தவன் சிரமப்பட்டு எழுந்து திரும்பி அங்கே நின்றிருந்த வைத்தியரைப் பார்த்தான்.

வைத்தியரும் அவன் முகத்தைக் கண்டதும், என்ன நினைத்தாரோ, கோபத்தைக் குறைத்தவாறு,

“யார் நீங்கள்…” என்று இழுக்க,

“இவளுடைய.. இவளுடைய கணவன்.” என்ற போது மீண்டும் கண்களில் கண்ணீர் உற்பத்தியானது. உடனே தன் கோபத்தை மறந்தவராக,

“ஐ ஆம் சாரி… மிஸ்டர்…” என்று பெயர் தெரியாமல் விழித்தவர், பின் தன் தலையைக் குலுக்கி,

“உங்கள் கூட நான் பேசவேண்டும் வாருங்கள்?” என்றவர் அவனை அழைத்துக்கொண்டு இன்னொரு அறைக்குச் சென்றார். இவனுடைய நிலையற்ற தன்மையைக் கண்டு, வருந்தியவராக, அங்கிருந்த இருக்கையில் அமருமாறு பணிய, அவனிருந்த நிலைக்கு அமரவேண்டித்தான் இருந்தது. இல்லை என்றால் சக்தி அணைத்தும் இழந்த நிலையில் கீழே கூட விழுந்திருப்பான்.

வைத்தியரோ சற்றுநேரம் அவனை இமைக்காது பார்த்தார். பின், “நீங்களும் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டீர்களா?” என்று கேட்க, மறுப்பாகத் தலையசைத்தவன்,

“எ… எனக்கு முன்னால்தான்… வி.. விபத்து நடந்தது…” என்று உடைந்தவனாய் கூறிய உத்தியுக்தனைப் பார்த்த வைத்தியர்,

“உங்கள் மனைவியை இங்கே அழைத்து வந்த போது, கிட்டத்தட்ட அவர்கள் மரணித்த நிலை தான்…” என்றதும் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய வலியுடன் வைத்தியரைப் பார்த்தவனுக்கு, நெஞ்சமே சிதைந்து போனது.

“காற்றுப் பைகள் அவரைக் காப்பாற்றி இருந்தாலும், இருக்கைப் பட்டி போடாததால் கையிலும் மார்பிலும் காலிலும் எலும்புகள் முறிந்திருக்கின்றன. முள்ளந்தண்டு எலும்பிலும் சின்ன பிசகல் வந்திருக்கிறது. கூடவே அடிபட்ட வேகத்தில் ஏற்பட்ட இரத்தபோக்கை எங்களால் நிறுத்த முடியவில்லை. அதனால்தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டியதாயிற்று…” என்றதும் கலங்கிப்போனான் உத்தியுக்தன்.

காலம் வரும்முன்னே மண்ணில் ஜனித்து விட்டதா குழந்தை. துடித்தவனாய்,

“கு… குழந்தைக்கு இப்போது… எ… எப்படி இருக்கிறது…” என்று உயிரைக் கையில் பிடித்தவாறு கேட்க, அவனைப் பரிதாபமாகப் பார்த்த வைத்தியர் சற்று நேரம் அமைதி காத்தார். பின் ஒரு பெருமூச்சுடன்,

“உங்கள் குழந்தையைப் பற்றிக் குழந்தை நல வைத்தியர் கூறுவார்…” என்று கூறியவர் பின், அவன் மனைவிக்கு, எப்படி எப்படி எலும்புகளை இணைக்கப்பட்டிருக்கிறது, இரத்தப் போக்கை நிறுத்த எந்த எந்த மருந்தைக் கொடுக்கவேண்டி இருந்தது, உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட காயத்திற்கு என்ன வைத்தியம் செய்தோம்… என்று அக்குவேறு ஆணிவேறாக அவர் விளங்கப்படுத்த, அவர் சொன்னதைக் கேட்டானா இல்லையா என்பது அந்தக் கடவுளுக்கு மட்டும்தான் வெளிச்சம். அவர் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல் இவனுடைய காதுகள் அடைக்கத் தொடங்கின. புத்தி மந்தமாகிப் போனது. உலகம் சுழற்சியை நிறுத்தியிருந்தது. சுவாசத்திற்கான காற்றை யாரோ கொடுக்க மறுத்ததுபோலச் சுவாசிப்பதற்குச் சிரமப்பட்டவன் போலத் திணறிக் கொண்டிருக்கும்போதே,

“இப்போது அவர்களுக்குச் செயற்கை சுவாசம் கொடுத்திருக்கிறோம்… உங்கள் மனைவி உயிரோடு வருவதற்கு முப்பது விகிதங்கள்தான் வாய்ப்பிருக்கிறது. அப்படியே அவர் பிழைத்தாலும், அவருடைய வாழ்க்கை சக்கர நாற்காலி என்றாகலாம். ஏன் என்றால், லம்பர் ஸ்பைனல் எல் 4 விலகி இருக்கிறது… முடிந்தவரைச் சரியாக்கியிருக்கிறோம். எந்தளவு வெற்றிகரமாக இந்தச் சத்திர சிகிச்சை நடந்திருக்கிறது என்று அவர்கள் எழுந்தபின்தான் தெரியும்;…” என்று வைத்தியர் கூற, இவனோ, பலமாகத் தலையை அசைத்த, எதையோ கூற முயன்றான். வார்த்தைகள்தான் வர மறுத்தன.

மீண்டும் முயன்று வெற்றி கண்டவன் போல,

“ஐ… ஐ டோன்ட் கெயர்… என் மனைவியின் வாழ்க்கை சக்கர நாற்காலியில் என்றாலும் நான் கவலைப்படப்போவதில்லை… எனக்கு அவள் உயிரோடு வேண்டும்… உயிரோடு இருந்தால் மட்டும் போதும்… அவளுக்குக் கால்களாக நான் இருந்து கொள்கிறேன்… புத்தி செயல்படவில்லையா? அந்தப் புத்தியாக நான் இருந்துவிட்டுப் போகிறேன். கரங்கள் வேலை செய்யவில்லை என்றால் அந்தக் கரங்களாக நான் இருந்துவிட்டுப் போகிறேன்…” என்றவன் தன் இரு கரங்களையும் ஏந்தி,

“அவளை என் உள்ளங்கரங்களில் வைத்துத் தாங்கிக் கொள்கிறேன். எனக்கு அவளை உயிரோடு கொடுத்துவிடுங்கள் டாக்டர்… எவ்வளவு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை… என் மனைவியை மட்டும் என்னிடம் திருப்பக் கொடுத்துவிடுங்கள்… ப்ளீஸ்…” என்று குலுங்கி அழுதவாறு கேட்டவனைப் பரிதாபமாகப் பார்த்தார் வைத்தியர்.

அவராலும் வேறு என்னதான் செய்ய முடியும்… அவருடைய சிகிச்சையையும் மீறி ஒன்றிருக்கிறதே. என்னதான் அவர் முயன்றாலும், விதி என்ன நினைக்கிறது என்று அவருக்கெப்படித் தெரியும். அவருடைய அனுபவத்தில் இத்தகைய விபத்துகளில் சிக்கியவர்கள் உயிர்பிழைத்ததாகச் சரித்திரமில்லை. அதுவும் சமர்த்திக்கு வாய்ப்பேயில்லை என்கிற முடிவில் இருப்பவர் அப்படியிருக்கையில் எப்படிப் பொய்யான நம்பிக்கையை கொடுப்பார்? பரிதாபமாக உத்தியுக்தனைப் பார்த்தவர்,

“மிஸ்டர் உத்தியுக்தன்… வீ ட்ரை அவர் பெஸ்ட்… தயவு செய்து நம்பிக்கையைக் கை விடாதீர்கள்…” என்றவாறு, இருக்கையை விட்டு எழுந்து உத்தியுக்தனை நெருங்கினார்,

“உங்கள் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் மிஸ்டர் உத்தியுக்தன்,” என்று கூற,

அந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தியில்லாமல் நடுக்கத்துடன் எழுந்தான் உத்தியுக்தன்.

அவனுக்கு எங்கே போவது என்ன செய்வது எதுவும் மந்தமாகிப்போன புத்திக்குப் புரிவதாயில்லை. அவன் மட்டும் ஏன் தப்பினான்? அவன் ஏன் இறக்கவில்லை. இத்தனை வலியையும் சுமக்கத்தான் உயிரோடு தங்கினானா? இப்படித் தாங்க முடியாத வலியைச் சந்திப்போம் என்று தெரிந்திருந்தால், மயங்கிய நிலையிலும் பாரதூரமாக எங்காவது மோதி உயிரை விட்டிருப்பானே… ஏன்… ஏன் அவனுக்கு மட்டும் உறவுகளின் பலம் கிடைக்க மாட்டேன் என்கிறது. அவன் அத்தனை அதிர்ஷ்டம் இல்லாதவனா…? எழுந்த வேதனையில் யாரோ இதயத்தை ஊசிகொண்டு குத்துவதுபோல வலிக்க மார்பைப் பிடித்தவாறு வெளியே வந்தவனுக்கு நடையில் பெரும் தள்ளாட்டம்.

அதே நேரம் உத்தியுக்தனின் வருகைக்காக வெளியே நின்றிருந்த அவ்வியக்தனைக் கூடப் பொருட்படுத்தாது, என்ன செய்கிறோம் என்கிற அறிவுமில்லாது, கனவில் நடப்பது போல நடந்து கொண்டிருந்தவனை வழிமறித்த அவ்வியக்தன்,

“ப்ரோ… வைத்தியர் என்ன சொன்னார்?” என்றான் மெல்லிய கலக்கத்துடன்.

அப்போதுதான் சுயம் வந்தவனாய் நிமிர்ந்து தன் தம்பியைப் பார்த்தான்.

இவன்… இவன் மட்டும்தான் இதற்கெல்லாம் காரணம். இவன் மட்டும் சமர்த்தியின் பார்வையில் சிக்காது இருந்திருந்தால், இன்று சமர்த்தி இவன் வாழ்க்கையில் நுழைந்திருக்கமாட்டாள். இப்போது வேர் பிடுங்கப்பட்ட கொடியாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க மாட்டாள். அவனிடம் சிக்கி சின்னாப்பின்னப் பட்டிருக்க மாட்டாள்… இதற்கெல்லாம் மூல காரணம் இவன்.. இவன் மட்டும் தான்… அத்தனை வலியும் தேவனையும் தவிப்பும் ஆத்திரமாய் உருப்பெற, சற்றும் யோசிக்காமல் தன் தம்பியின் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் உத்தியுக்தன்.

அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க, தடுமாறிய அவ்வியக்தன் மூக்கைப் பொத்தியவாறு,

“ப்ரோ… என்ன காரியம் செய்கிறாய்…” என்று சீறினான். இவனோ, ஆவேசத்தோடு தன் தம்பியை நெருங்கி,

“எல்லாவற்றிற்கும் காரணம் நீதான்… நீ மட்டும் தான். அன்று மட்டும் நீ லன்டனில் அந்தக் கூத்து ஆடாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கையில் சமர்த்தி வந்திருக்கமாட்டாள். என்னைப் பற்றி எழுதியிருக்கமாட்டாள். அவளைக் கடிமணம் புரிந்து இப்படிச் சித்திரவதைப் படுத்தியிருக்கமாட்டேன்… அவள் யாரோ ஒருவணை மணந்து மகிழ்ச்சியாக இருந்திருப்பாள். இப்படி மருத்துவமனையில் கிடக்க மாட்டாள். இதற்குக் காரணம்.. நீதான்… நீ மட்டும்தான்…” என்று மேலும் ஓங்கி அவன் வயிற்றில் ஒரு குத்து விட, மடங்கினான் அவ்வியக்தன்.

அண்ணனின் பலம் பொருந்திய குத்தில் குடலே அறுந்துவிட்ட உணர்வில் வலியில் முனங்கியவன்,

“ப்ரோ… ப்ளீஸ் ஸ்டாப்…” என்றானே தவிர அண்ணனுக்கு எதிராகத் தன் கரத்தைத் தூக்கவேயில்லை. அவ்வியக்தனுக்கு உத்தியுக்தனின் நிலை நன்கு புரிந்துபோயிற்று.

எங்கே சமர்த்திக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்கிற அச்சம், பயம், அவனை ஆட்டுவிப்பதையும், தன்னால் அவளைக் காக்க முடியாது போய்விடுமோ என்கிற துடிப்பும், தன்னால்தான் இவளுக்கு இந்த நிலை என்கிற குற்ற உணர்ச்சியும் அவனை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது என்பது புரிய, இப்போதும் உத்தியுக்தனை சமாதானப் படுத்த முயன்றவன், போல,

“ப்ரோ… உன் நிலை எனக்குப் புரிகிறது… நான் சொல்வதைக் கேள்… இதோ பார்…” என்றவாறு நெருங்க முயல,

“அவளுடைய இந்த நிலைக்கு நீ தான் காரணம்.. நீ மட்டும்தான் காரணம்..” என்று திரும்பத் திரும்ப அதையே கூறிக்கொண்டு பைத்தியம் பிடித்தவன் போல, அவ்வியக்தனின் கழுத்தைப் பற்றித் தள்ளியவாறு சுவரில் மோத, அவன் சுவரில் மோதிய வேகத்தில் அவ்வியக்தனுக்குப் பூச்சிகள் பறந்தன. தன்னை மறந்து வலியில் முனங்கியவனுக்கு அடுத்துப் பேச உத்தியுக்தன் வாய்ப்புக் கொடுக்கவேயில்லை.

“ப்ரோ… ப்ளீஸ்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்று வேண்டியவனை மதிக்கவுமில்லை.

“உன்னைச் சும்மா விடமாட்டேன் அவ்வி… என் சதி இந்த நிலைக்கு வரக் காரணம் நீ.. நீ தான்.. என்று மேலும் ஒரு குத்து விட, தன் அண்ணனை அடக்க முயன்று தோற்க, உத்தியுக்தன் அவ்வியக்தனை இழுத்தவாறு இன்னொரு சுவரில் மோத முயலத் தன்னைக் காக்க முயன்றவனாய், உத்தியுக்தனை ஒரு தள்ளுத் தள்ளினான் அவ்வியக்தன்.

அவன் தள்ளிய வேகத்தில், அவ்வியக்தனை இழுத்துக்கொண்டு தரையில் பின்பக்கமாக விழுந்தான் உத்தியுக்தன். விழுந்த வேகத்தில் அவ்வியக்தனை கீழே விழுத்தி, சுழன்று எழ, இப்போது உத்தியுக்தன் மேலும் அவ்வியக்தன் கீழுமாகக் கிடந்த அடுத்த விநாடி, அவ்வியக்தன் மேலும், உத்தியுக்தன் கீழுமாகக் கிடந்தனர்.

இப்படி இரண்டு மலைகளும் ஒன்றை ஒன்று அணைத்தவாறு தரையில் புரண்டன. அவர்கள் புரண்ட வேகத்தில் இடையில் சிக்கிய பொருட்கள் அங்கும் இங்குமாகச் சிதறின.

அதே நேரம் இவர்களின் சண்டையைக் கண்டு பதறித் துடித்து வந்த தயாளனும், புஷ்பாவும் விதற்பரையும், அவர்களை நெருங்க முடியாமல் கரங்களைப் பிசைந்து நின்றனர்.

யாரைப் பிடிப்பது, யாரை நிறுத்துவது? உத்தியுக்தனின் ஆவேசத்திற்கும் இடையில் யாராலும் நெருங்கவே முடியவில்லை. அப்படியிருந்தும் தயாளன் உத்தியுக்தனை நெருங்கி அவனுடைய தோளில் கரத்தைப் போட, அவன் உதறிய ஒரு உதறலில் தயாளன் நான்கடி தள்ளிச் சென்று கீழே விழுந்தார்.

விதற்பரையோ, ஒரு வித வலியோடும் பயத்தோடும் இருவரையும் மாறி மாறிப் பார்த்து, அவர்களின் சண்டையை எப்படித் தடுப்பது என்று புரியாமல் கைகளைப் பிசைய, பார்வையாளர்களோ தங்கள் பிரச்சனைகளை மறந்து இவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் உத்தியுக்தனை அடக்கும் வழி தெரியாது பலம் அனைத்தையும் திரட்டி அண்ணனைக் கீழே விழுத்தி முன் உடல் தரையில் படுமாறு புரட்டிப் போட்டவன், இரண்டு கரங்களாலும் அவனுடைய கழுத்தைச் சுற்றி கிடுக்குப் பிடி போட்டு ஒற்றைக் காலால் உத்தியுக்தனின் கால்களைப் பற்றி இறுக்கி அசையவிடாமல் செய்தவன்,

“ஸ்டாப்… ஸ்டாப் இட் ப்ரோ… இட்ஸ் இனஃப்…” என்று சற்றுக் குரலை அழுத்திக் கூற, உத்தியுக்தனோ திணறியவாறு,

“ஜ்ஜ்ஜ்ஜ் ஆஃப் மி…” என்றான். அப்போதும் அவ்வியக்தன் விட்டானில்லை.

“விடுகிறேன்… முதலில் உன்னை நிதானப் படுத்து…” என்று பிடிவாதமாகக் கூற, முடிந்தவரைத் திமிறியவன், ஒரு கட்டத்தில் முடியாதவனாக, அத்தனை ஆத்திரமும் கோபமும் வடிந்தவனாக, உடலைச் சற்று இளக்கக் கண்களோ கண்ணீரைப் பொழியத் தொடங்கியது.

தன் அண்ணன் தளர்ந்துவிட்டான் என்பதைப் புரிந்துகொண்ட அவ்வியக்தன் மெதுவாக அவனை விடுவித்து விலகிய நேரம், உத்தியுக்தனோ எல்லையில்லா வலியில், தலையை நிலத்தில் விழுத்தி விழிகளை மூடி,

“ஐ நீட் ஹேர்… ஐ வோன்ட் ஹேர்… ஐ கான்ட் லொஸ்ட் கேர்… ஐ நீட் ஹேர் அவ்வி…” என்று வாய்விட்டு அழத் தொடங்கினான்.

பாய்ந்து தன் அண்ணனுக்கு அருகே படுத்தவன், அவனைத் தன்னோடு இறுக அணைத்து, அவன் முதுகை வருடிக்கொடுத்து,

“ஷ் ப்ரோ… ப்ளீஸ்… ப்ளீஸ்… அழாதே… சமர்த்திக்கு ஒன்றுமாகாது… அழாதே ப்ரோ…” என்றபோது அண்ணனின் அழுகையைக் கண்டு இவனுடைய கண்களும் கலங்கிப்போயின.

அதேநேரம் இங்கே பெரும் பிரளயமே நடக்கிறது என்பதை அறிந்துகொண்ட, வைத்தியர்களும், தாதிகளும் இவர்களை நோக்கி ஓடி வந்தனர். அதில் ஒரு வைத்தியர் உத்தியுக்தனுக்கு அமைதிப் படுத்தும் ஊசி ஒன்றைப் போட வர, சடார் என்று தன் கரத்தைத் தூக்கி அவருடைய முயற்சியைத் தடுத்தவன்,

“வேண்டாம்… அவனுக்கு ஒன்றுமில்ல… இன்னும் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடுவான்…” என்றுவிட்டுத் திரும்பி உத்தியுக்தனைப் பார்க்க, அவனோ ஒரு பக்கமாகச் சரிந்து, தன்னை மறந்து அழுகையில் குலுங்கிக்கொண்டிருந்தான். அதைக் கண்ட அவ்வியக்தனுக்குத் தாள முடியவில்லை.

எப்போதும் இறுகிப்போய் அசைக்க முடியாத கேடயமாய் இருக்கும் அவனுடைய உடன் பிறந்தவனுக்கு இந்த நிலையா? தாளா தவிப்புடன்,

“ஹே ப்ரோ… எனக்கு உன் நிலை புரிகிறது… இதோ பார்… நீ சமர்த்தியை விரும்புகிறாய் அல்லவா… உன் காதல் உண்மையாக இருந்தால், நீ அவள் மீது வைத்திருக்கும் அன்பு பாசம் உண்மையானது என்றால், எழுந்து வருவாள்… தயவு செய்து இப்படிக் கசங்காதே…” என்று அப்போதும் அவனைச் சமாதானப்படுத்த முயல, தன் விழிகளை அழுந்த மூடிச் சற்று நேரம் அப்படியே கிடந்தான் உத்தியுக்தன்.

சற்று முன் பொங்கியதில் மனமும் புத்தியும் தளர்ந்திருந்தது. எப்படியோ தன்னை நிலைப் படுத்தியவன், தம்பியை விட்டு விலகி எழுந்தான். அவனுக்கு யாரையும் பிடிக்கவில்லை. யாரோடும் பேசத் தோன்றவில்லை.

தள்ளாட்டத்தோடு சமர்த்தியின் அறை நோக்கிச் சென்றான்.

அவ்வியக்தனோ, உதட்டிலும், மூக்கிலும் வழிந்த இரத்தத்தைப் புறங்கையால் துடைத்தவாறு திரும்ப, அதைப் பெரும் வலியோடு பார்த்திருந்த விதற்பரை, அவனுக்கு முன்பாக டிஷூ அடங்கிய பெட்டியை நீட்டினாள். மறுக்காது வாங்கிக் கொண்டவன்,

“எனக்கொன்றுமில்லை பேபி… நான் நன்றாகத் தான் இருக்கிறேன்… கலங்காதே…” என்றுவிட்டு அவள் பதிலையும் கேட்காது, அண்ணனின் பின்னால் சென்று அவனுடைய கரத்தைப் பற்ற, ஏதோ நினைவுகள் தடைப்பட்டவன் போலத் திரும்பிப் பார்த்தான்.

அங்கே சட்டை முழுவதும் இரத்தம் சிதறி இருக்க, மூக்கிலும் உதட்டிலும் துடைத்தும் துடைக்காமலும் இருந்த இரத்தத்தோடு நின்றிருந்த தம்பியைக் கண்டவன், தன் அரக்கக் குணத்தை நினைத்துக் கலங்கியவனாய்,

“அவ்வி… ஐ ஆம்…” என்று மன்னிப்புக் கேட்க முயன்றான். இடையிலேயே அவனைத் தடுத்த அவ்வியக்தன்,

“எதுவும் பேசாமல் என் கூட வா….” என்றவாறு அவனுடைய கரத்தைப் பற்றி இழுத்துச் செல்ல, அதை மறுக்கும் நிலையில் உத்தியுக்தன் இருக்கவில்லை. சொல்லப்போனால் அவனுக்கு மூளையே குழம்பிப் போயிருந்தது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்றும் தோன்றவில்லை. ஆனால் சமர்த்தியின் அருகே, அவளைத் தொட்டுக் கொண்டாவது இருக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் அவனைப் பாடாய்ப் படுத்தியது.

ஒரு கட்டத்தில் உடல் தளர,

“அவ்வி… நான் கொஞ்சம் அமரவேண்டும்… உடல் களைத்தது போலத் தோன்றுகிறது…” என்றான் பெரும் பலவீனமான குரலில். திரும்பித் தளர்வாக நின்ற அண்ணனைக் கண்டவன்,

“ஆறுதலாக ஓய்வெடுக்கலாம்… இப்போது சிரமத்தைப் பார்க்காமல் என் கூட வா…” என்றவாறு ஒரு திருப்பத்தில் திரும்பி, அங்கிருந்த கதவைத் திறந்து, செல்ல அங்கே சுவரில் எழுதியிருந்ததைக் கண்டவனுக்கு மேலும் உடல் நடுங்கத் தொடங்கியது.

என் ஐ சி யு (ழிமிசிஹிழிமீஷீஸீணீtணீறீ மிஸீtமீஸீsவீஸ்மீ சிணீக்ஷீமீ ஹிஸீவீt) அதைக் கண்டதுமே உத்தியுக்தனுக்குப் புரிந்து போனது தன் குழந்தையைப் பார்க்க அழைத்து வந்திருக்கிறான் என்று.

கதவைத் திறந்து நகர மறுத்த கால்களோடு யுத்தம் புரிந்துகொண்டிருந்த உத்தியுக்தனைப் பற்றி இழுத்துக்கொண்டு உள்ளே வந்தான் அவ்வியக்தன். அங்கே இங்கியூபேரட்டரில் உள்ளங்கை அளவேயான குழந்தை ஒன்று உடல் முழுவதும் ஏதேதோ வயர்கள் ஓட அசைவற்றுக் கிடந்தது.

அதைக் கண்டதும் உத்தியுக்தனின் கண்களில் மீண்டும் கண்ணீர் மழை.

அந்தச் சிறிய உருவத்தின் உடல் முழுவதும் ஊசியால் துளைத்திருக்கிறார்களே. அதை எப்படி இந்தக் குழந்தை தாங்கும். ஏதோ தன் உடல் முழுவதும் ஊசிகள் குத்திய வலியில் துடித்துப் போனான் உத்தியுக்தன்.

கடவுளே… ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியைத் தாங்கப்போகிறான். இன்னுமா அவனுடைய இதயம் நிற்கவில்லை?” துடித்தவனாய் கண்ணாடிப் பேழைக்குள் கிடந்த குழந்தையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, குழந்தையின் தந்தை வந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்ட வைத்தியர் அங்கே வந்துவிட்டிருந்தார்.

அங்கே நோயாளிகளுக்குரிய ஆடையை அணிந்தவாறு விறைப்புற்ற நிலையில் நின்றிருந்த உத்தியுக்தனைக் கண்டு, நெருங்கி அவனுடைய தோளில் கரத்தைப் பதிக்க, உணர்வில்லாமல் திரும்பிப் பார்த்தான் உத்தியுக்தன். அவன் விழிகளில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்ட அந்த வைத்தியருக்கும் ஒரு கணம் கண்கள் கலங்கித்தான் போனது.

“ஹாய்…. ஹெள ஆர் யு…” என்று கேட்க, வலியோடு சிரித்தவன்,

“என் குழந்தை எப்படி இருக்கிறது?” என்றான்.

வைத்தியரோ பதில் சொல்லத் தயங்கியவராகக் குழந்தையைப் பரிதாபமாகப் பார்த்தார். அவருடைய பரிதாபமே உத்தியுக்தனின் மிச்ச சொச்ச உயிரையும் கொண்டுபோகத் தயாரானது.

அவர் பதில் கூறாமலே நிலைமையைப் புரிந்து கொண்டவனுக்கு இதயமே கசங்கி, இதயத்திலிருந்து பீறிட்ட இரத்தம் விழிகளின் வழியாகக் கன்னத்தில் வழியத் தொடங்க,

“எங்களால் முடிந்த வரைக்கும் முயற்சி செய்து பார்த்தோம்… எங்களால் முடியவில்லை. இன்றும் கொஞ்ச நேரம்தான் அவள் உயிரோடு இருப்பாள்…” என்றதும் ஒரு முறை தள்ளாடினான் உத்தியுக்தன். தள்ளாடியவனைப் பற்றிக்கொண்ட அவ்வியக்தன் பரிதாபமாகக் குழந்தையைப் பார்க்க, உத்தியுக்தனுக்கோ அழுகை மேலும் வெடித்துக் கொண்டு வந்தது.

இதைச் சமர்த்தி எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள். அதை இவன் எப்படிக் கையாளப் போகிறான்? தாங்க முடியாத அவல நிலையில் வைத்தியரைப் பார்த்தவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏனோ இதயம் அந்தக் கணமே நின்றுவிடாதோ என்று தோன்ற, எல்லையில்லா வலியுடன் நிமிர்ந்து தன் தம்பியைப் பார்த்தவன்,

“நான் குழந்தையைத் தூக்க வேண்டும்…” என்றான் அடைபட்ட குரலில்.

“பட் ப்ரோ… இந்த நிலையில்…” என்று தயங்க,

“ப்ளீஸ் அவ்வி… நான் அவளைத் தூக்க வேண்டும்… ஒரு வேளை இதுவே கடைசி முறையாகவும் இருக்கலாம்?” என்றபோது உத்தியுக்தன் மட்டுமல்ல அவ்வியக்தனும் உடைந்து போனான்.

வைத்தியரைப் பார்த்த அவ்வியக்தன்,

“ஒரு முறை குழந்தையைத் தூக்குவதற்கு அனுமதியுங்கள்.” என்று அண்ணனுக்காய் வேண்ட, மறுக்காது சம்மதித்தார் வைத்தியர்.

அடுத்து அந்தப் பேழை திறக்கப்பட, சற்றுத் தள்ளி நின்றிருந்த தாதி, குழந்தையை அலுங்காமல், குலுங்காமல் தூக்கி உத்தியுக்தனிடம் நீட்டினார்.

உத்தியுக்தனுக்கோ உடல் முதல் இதயம் வரை உதறத் தொடங்கியது. அது கரங்களில் கூட அப்பட்டமாகத் தெரிந்தது. எங்கே குழந்தையைச் சுமந்தவாறே மயங்கி விழுந்துவிடுவோமோ என்கிற அச்சம் வேறு பிறந்தது. ஆனாலும் அந்த சிசுவைத் தூக்கி மார்போடு அணைக்க வேண்டும் என்கிற வேகமும் எழுந்தது.

சிரமப்பட்டு, வெறும் உள்ளங்கை அளவேயிருந்த தன் மகளைத் தூக்கிப் பக்குவமாய்த் தன் மார்போடு அணைத்துக் கொள்ள, அவனுடைய உடல் மட்டுமல்ல, அந்தக் குழந்தையின் உடலிலும் மெல்லிய சிலிர்ப்புடனான ஒரு அசைவு.

அது புரியாதவனுடைய கண்களோ தாரை தாரையாகக் கண்ணீரைச் சிந்தின. எங்கே இறுக அணைத்தால் குழந்தை நசிந்துபோகுமோ என்று அஞ்சியவன் போலக் கரங்களால் பொத்திப் பிடித்துக் கொண்டவன், குனிந்து பார்த்தான். அவனுடைய இரண்டு உள்ளங்கைகளுக்குள்ளும் குழந்தை மறைந்துபோயிருந்தது.

குழந்தையைச் சுற்றி அதிக வயர்கள் பூட்டி இருந்ததால் மெதுவாக அங்கிருந்த இருக்கையில் அமர, தந்தைக்கும், குழந்தைக்கும் சற்றுத் தனிமை கொடுத்துவிட்டு அனைவரும் விலகிச் சென்றனர். இவனோ மார்போடு அணைத்த தன் குழந்தையின் முதுகைப் பெருவிரலால் மென்மையாக வருடிக் கொடுத்தவாறு,

“ஹே… மை லிட்டில் ஏஞ்சல்… இட்ஸ் மீ… யுவர் டாட்… வெல்கம் அவர் வேர்ள்ட்… ஹெள ஆர் யு…” என்று மென்மையாகக் கேட்க, இன்னும் குழந்தையின் விழிகள் மூடித்தான் இருந்தன.

“கண்ணம்மா… வைத்தியர்கள் என்னன்னவோ எல்லாம் சொல்கிறார்கள்… அவர்கள் கிடக்கட்டும்… எனக்கு உன்னைப் பற்றித் தெரியும்… பெண் என்றாலே மகா சக்தி… அது எதையும் ஆக்கும் அழிக்கும் ஜெயிக்கும்… நீ சாதிக்கப் பிறந்தவள்… ஜெயிக்கப் பிறந்தவள்… அத்தனை கோடி அணுக்களில் வென்று குழந்தையாய் ஜனித்தவள்… இந்தப் போராட்டம் ஒன்றும் உனக்குப் புதிதல்ல… இப்போது இந்தப் பயங்கர நிலைமையைத் தகர்த்து ஜெயித்தால் நீ உலகையே ஜெயிப்பாய்… கண்ணம்மா… உன் திடத்தையும் தைரியத்தையும் கைவிடாதே… உன் அப்பா நான் இருக்கிறேன். இம்மைக்கும் மறுமைக்கும் உனக்குத் துணையாய் உன் கூடக் கைகோர்த்து வருவேன்… உன்னுடைய நம்பிக்கையை விடாதே…” என்று குழந்தையோடு ஏதேதோ பேச, அவன் கூறியது அந்தக் குழந்தைக்குக் கேட்டதா இல்லையா என்றுகூடத் தெரியவில்லை.

குழந்தையை முத்தமிடுவதா நினைத்துத் தன் விரல்களுக்கு முத்தமிட்டவன்,

“ஏஞ்சல்… உனக்குச் சத்தியம் செய்கிறேன், எந்தக் காலத்திலும் உனக்குச் சலிப்பேற்படும் வகையில் பேச மாட்டேன்… உன்னிடம் எந்தக் குற்றப் பத்திரிகையும் வாசிக்கமாட்டேன்… குறிப்பாக உனக்கு அலுப்புத் தட்டும் வகையில் அதிகம் பேசமாட்டேன்… அது உனக்குப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும்… தயவுசெய்து எழுந்து கொள்…” என்று கலங்கிய குரலில் கூற, அதுவரை அடங்கிப் போய்க்கொண்டிருந்த குழந்தையின் இதயத் துடிப்பு சற்று வேகம் எடுக்கத் தொடங்கியது.

“உனக்கு ஒன்று தெரியுமா… எனக்கு அம்மா பாசம் என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் அந்தப் பாசத்தை உன்னிடம் உணரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் கண்ணம்மா… அந்த அன்பை எனக்குக் கொடுக்கவாவது எழுந்து வா… எனக்காக… வா… காதலைக் கொடுக்க உன் அம்மா, பாசத்தைக் கொடுக்க நீ… நீங்கள் இருவரும் எனக்கு வேண்டும்.. தயவுசெய்து எழுந்து வா கண்ணம்மா…” என்றவனுக்கு இப்போது அழுகையில் குரல் விம்மியது.

இப்போது அந்தக் குழந்தையின் விரல்களில் மெல்லிய அசைவு. அது தெரியாமல் குழந்தையை அணைத்தவாறு நீண்ட நேரமாக அப்படியே அமர்ந்திருக்க, நேரம் கடந்துவிட்டதென்று எண்ணி வந்த தாதி, பரிதாபமாக அவனையும் குழந்தையையும் பார்த்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே நின்றிருந்தார்.

இறுகித் தினவெடுத்த அந்த உயர்ந்த மனிதனின் மார்பில் சிறிய பாவப்பிள்ளையாக உள்ளங்கை அளவில் அடங்கிப்போயிருந்த அந்தச் சிசுவிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த உத்தியுக்தனைக் கண்டு பெரும் கவலை கொண்டவராக மெதுவாக அவர்களை நெருங்கினார்.

அவருக்குத் தெரியும், அந்தக் குழந்தை நிச்சயமாக அன்றைய இரவைத் தாண்டாதென்று. அதனுடைய இருதயத்தின் பலம், கர்ப்பத்தை விட்டு வெளியே வந்தபின் இயங்குவதற்குப் போதுமான அளவு சக்தியோடு இருக்கவில்லை. அதன் காரணத்தால், இரத்த அழுத்தம், இருக்கவேண்டிய அளவுக்கு மிகக் கீழாக இருந்தது. தவிரப் பிராணவாயுவின் விகிதம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான நிலையிலிருந்தது. இந்நிலையில் மருந்துகள் மாத்திரையோடு குழந்தையை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்றாலும், அதனுடைய இருதயத்தின் பலவீனம் அத்தனையையும் ஓரம் கட்டிவிட்டு அந்த உலகத்தை விட்டுச் செல்கிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் மகிழ்ச்சியான செய்தியைக் கூறுவது என்பது இயலாத காரியம்தான்.

வேதனையோடு உத்தியுக்தனை நெருங்கியவர்,

“குழந்தையைத் தொட்டிலில் போடலாமா?” என்றவாறு நெருங்க, இவனோ மறுப்பாகத் தலையை ஆட்டியவாறு மேலும் குழந்தையைப் பாதுகாப்பது போல இறுகப் பொத்திக் கொள்ள. அந்தத் தாதியின் கண்களும் கலங்கிப் போயின.

ஆனாலும் அதிக நேரமாக அவனை அங்கே விட முடியாதே. மீண்டும் குழந்தையை வாங்குவதற்காகக் கரங்களை நீட்ட, குனிந்து அதன் தலையில் முத்தமிட்டவன், குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து எடுக்க, அந்தக் கணம் தன் தந்தையை விட்டுப் பிரிய மனமில்லாத குழந்தை, தன் சிறிய குரலெடுத்துக் கைகால்களை உதைத்து வீறிட்டு அழ முயற்சித்தது. அந்தத் தாதி மட்டுமல்ல உத்தியுக்தனும் அதிர்ந்துதான் போனான்.

எத்தனை போராட்டம் அந்தச் சிசுவை உயிர்ப்போடு வைத்திருக்க…

அத்தனை போராட்டங்களையும் தகர்த்தெறிந்து தந்தையின் அரவணைப்பில், அவன் கொடுத்த பலத்தின் உறுதியில் மீண்டெழுந்து விட்டதே.

தந்தையாய் மீண்டும் குழந்தையை வாரி அணைத்துக் குழந்தைக்கு மேலாக இவன் சிரித்தவாறு அழத் தொடங்க, தாதியோ அவசரமாக வெளியே ஓடினார். மறுகணம் சற்று முன் இவனோடு பேசிய வைத்தியர் உள்ளே வந்தார். இப்போது குழந்தையின் அழுகை நின்றிருந்தது. ஆனால் தந்தையின் அழுகைதான் சற்றும் நிற்பதாயில்லை.

“டாட்… வீ நீட் டு செக் அப் யுவர் ஏஞ்சல்…” என்று தாதி குதூகலமாய்க் கூற, இப்போது மறுக்காது குழந்தையைத் தாதியிடம் நீட்ட, மீண்டும் குழந்தை உதடுகளைப் பிதுக்கத் தொடங்கியது.

மெல்லிய நீண்ட கால்களை உதைத்தது. பொத்திய குட்டிக் கரங்களால், தந்தையிடமிருந்து தன்னைப் பிரித்த தாதியை அடிக்க முயன்றது. தாதியோ, குழந்தையை இங்கியூபெட்டரில் வைக்க, வைத்தியர் உடனேயே பல பரிசோதனைகளைச் செய்து ஒரு சில மருந்துகள் ஏற்றப்பட்டன. அடுத்த ஒரு மணி நேரத்தில் முகத்தில் நிம்மதி பரவ உத்தியுக்தனைத் நோக்கித் திரும்ப, வெளியே செல்லாமல் அங்கேயே நின்றிருந்தவன் அந்த ஒரு மணி நேரத்தில் பலமுறை செத்துப் பிழைத்தான்.

உத்தியுக்தனை நெருங்கிய வைத்தியர், அவன் தோள்களில் கரங்களைப் போட்டு, அழுத்திக் கொடுத்து,

“தாங் காட் மிஸ்டர் உத்தியுக்தன்… உங்கள் குழந்தைக்கு இனி எந்த ஆபத்துமில்லை. அன்னையின் பாசத்திற்கு நிகரானது தந்தையின் பாசம் என்று நிருபித்திருக்கிறீர்கள்… உங்கள் குழந்தைக்கு இரண்டாம் முறையாக உயிர் கொடுத்திருக்கிறீர்கள்…” என்று தட்டிக் கொடுத்தவர்,

“நான் உங்களுக்கு அனுமதி தருகிறேன். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குழந்தையை அணைத்துக்கொண்டு அமருங்கள்… எங்களால் முடியாததை உங்கள் பாசம் மீட்டெடுத்துக் கொடுக்கிறது. ஒத்துக் கொள்கிறேன்… நம்பிக்கைக்கு முன்னால், அன்புக்கு முன்னால் மருத்துவம் வெறும் காகிதங்கள்தான்…” என்று விட்டுச் செல்ல, இனியும் அங்கே தங்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டவனாய், வெளியேறியவனைத் தேடிப் பரபரப்புடன் ஓடிவந்தாள் விதற்பரை.

“மாமா… அத்தை கண் முழித்துவிட்டார்கள்…”

What’s your Reaction?
+1
27
+1
11
+1
1
+1
0
+1
8
+1
0

Related Post

2 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16”
    1. என்னங்கடா இது அதிசயமா இருக்கு. அவனுக்குசப்போர்ட் பண்ணுது பயபுள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!