Fri. Jun 6th, 2025

தொலைந்த எனை மீட்க வா…!- 36/37

36)

அன்று இரவு திகழ்வஞ்சி சாப்பிட்டுவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டுப் படுக்கை அறைக்கு வந்தபோது, அபராசிதன் ஆராவமுதனை அணைத்தவாறு நல்ல உறக்கத்தில் இருந்தான்.

அந்தக் காட்சியை நிறைந்த மனதோடு பார்த்தவள், அவனுடைய அணைப்பிலிருந்த குழந்தையை, அவனுடைய தூக்கம் கலையாதவாறு, அள்ளி எடுத்து, அவனுடைய தொட்டிலில் கிடத்தி விட்டு, தன் பக்கமாக வந்து படுத்தாள் திகழ்வஞ்சி.

இரண்டு வாரமாகத் தவித்த மனது இப்போது பேருவகையிலும் நிம்மதியிலும் மலர்ந்து கிடக்கத் திரும்பி அவனைப் பார்த்தாள். நெஞ்சம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தது.

அடர்ந்த புருவங்களும், மூடியிருந்த விழிகளும், நீள் சதுர முகமும், அடர்ந்த கேசமும் என்று அணு அணுவாக ரசித்துப் பார்த்தவள், அன்று அவனும் அவளும் அணைத்தவாறு விழுந்ததை ஒரு கணம் இரைமீட்டுப் பார்த்தாள். குப்பென்று முகம் சிவந்து போனது அவளுக்கு.

மீண்டும் அவளை அணைத்து அவன் தீண்ட மாட்டானா என்கிற ஏக்கமும், ஆசையும் கொழுந்து விட்டெரிய, அதற்குத் தோதாக இளமையும் அதற்குத் தீனி போட, அந்த சுக நினைவுடனே விழிகளை மூடிக்கொள்ள, இரண்டு கிழமைகளாகத் தேடியும் கிடைக்காத தூக்கம் சுகமாக அவளை வந்து அணைத்துக் கொண்டது.

இதமான போர்வைக்குள் தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தாள் திகழ்வஞ்சி. அந்தப் போர்வையின் வாசம் இதமாய் அவளைக் குளிப்பாட்ட, மேலும் அப்போர்வைக்குள் தன்னைத் திணிக்க முயன்றவளாகத் தன் முகத்தைப் புதைக்க, அவளுடைய மெல்லிய கூர் நாசியில் மெல்லிய சொரசொரப்பு. கூடவே இதமான ஆண்மை நிறைந்த வாசனையில் தன்னைத் தொலைத்தவளாக ஆழ மூச்செடுக்க, அந்த வாசனை அதுவரை அலைப்புற்றிருந்த இதயத்தை மெதுவாகத் தட்டித் தாளாட்டிக் கொடுக்க மேலும் அந்த வாசனைக்குள்ளும், கதகதப்பிற்குள்ளும் புதைந்து கொள்ளும் நோக்கில் தன் உடலைச் சுருட்டிக்கொண்டாள் திகழ்வஞ்சி.

அதிகாலை இரண்டு மணியளவில், மார்பின் ஓரம் ஒரு பூம்பந்து வந்து மோத, கொஞ்சமாய்த் தூக்கம் கலைந்தான் அபராசிதன். அதுவும் அந்தப் பூம்பந்து மோதியதால் உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் ஒரு விநாடி ஸ்தம்பித்து, மறு கணம் பல மடங்கு வேகமாக இயங்கத் தொடங்க, அது கொடுத்த சுகத்தில் சிரமப்பட்டு விழிகளைத் திறந்தான் அபராசிதன். சோர்வோடு, மீண்டும் இழுத்து மூட முயன்ற விழிகளைக் கசக்கி விடுவதற்காக இடது கரத்தைத் தூக்க முயன்றவன், அதில் கனம் தெரிய, இது என்னது? என்கிற குழப்பத்தோடு திறக்க மறுத்த விழிகளைத் திறந்து குனிந்து பார்த்தான் அபராசிதன்.

அங்கே அவனுடைய இடது மார்பில் தன் முகத்தைப் புதைத்தவாறு சுருண்டு படுத்துக் கிடந்தாள் திகழ்வஞ்சி..

மறு கணம் இரத்தத்தின் ஓட்டம் பல மடங்கு அதிகரிக்க, தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்த மெல்லிடையாளின் கனத்தையும், அந்த உடல் கொடுத்த தென்றல் சூட்டையும் உணர்ந்து கொண்ட மறு நொடி, சிலிர்த்துக் கொண்டது ஆண்மை. பெண் தேகம் உணர்ச்சியைத் தூண்டும் என்பது தெரிந்ததுதான். ஆனால் இப்படிச் சிலிர்க்க வைக்கும் என்பதை அன்றுதான் புரிந்துகொண்டான் அபராசிதன்.

சற்று நேரம், தன் தேகம் தாங்கி நின்ற அவள் உடலைத் தன்னை மறந்து இரசித்துக் கிடந்தவன், உறக்கத்தில் கிடப்பவளை அப்படி இரசிப்பது தவறு என்று புரியத் தன்னை அடக்கியவனாக, அவளை விட்டு விலக எத்தனித்தான். ஆனால், அதுவரை சுகமாக அரவணைத்த அந்தப் பாதுகாப்பு அரண், விலகுவதை உணர்ந்துகொண்ட திகழ்வஞ்சி தூக்கத்திலும் அந்த அரணைத் தன் கைக்குள் கொண்டுவர முயன்றவளாகக் கரங்களை அலையவிட்டு, அந்த அரண் அணிந்திருந்த பைஜாமா ஷேர்ட்டைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, அவள் இழுத்த வேகத்தில், அந்தப் பெண்ணுடல் சரிந்தான் அபராசிதன்.

அவன் தேகம் அவளை மோதியதுதான் தாமதம், தூக்கம் சற்றும் விலகாதவளாக மெதுவாக விழிகளைத் திறந்தாள் திகழ்வஞ்சி. அங்கே, தன் முகத்திற்கு நேராகக் கிடந்த கம்பீர ஆண்மகனின் முகம் கண்டு முதலில் திகைத்துப் பின் வியந்து, பின் அதிர்ந்து முழுதாகத் தன் விழிகளைத் திறக்க, அவனோ அவளுடைய மதிமுகத்தை மெல்லியதாக எரிந்துகொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் கள்ளுண்ட வண்டாய் பார்த்து நின்றான்.

இரவுதானே காமத்திற்கு ஏற்ற நேரம். தலைவனையும் தலைவியையும் ஒன்று சேர்க்கும் சக்தி அந்த இரவுக்குத்தானே உண்டு. தன் கடமையிலிருந்து சற்றும் வழுவாத அந்த இரவு, துணைக்கு மன்மதனை அழைத்துக் கொள்ள, இரதியோடு சரசமாடிக் கிடந்த மன்மதனும் கடமை தவறாத காதல் வீரனாகச் சட்டென்று அவர்கள் முன்னால் தோன்றித் தன் மன்பத பானத்தை அவர்களின் மீது செலுத்திவிட்டுத் தன் வேலை முடிந்ததாகத் திரும்பவும் இரதியிடம் சென்றுவிட, அந்த மன்மதபாணத்தில் சிக்குப்பட்ட கலியுக மன்மதனும் இரதியும், இரவு என்னும் போர்வைக்குள் தங்களை முழுதாகத் தொலைக்க ஆயத்தமானார்கள்.

இரண்டு வாரப் பிரிவில் அவளின் அருகாமைக்காக ஏங்கியிருந்த அவனும், அவனைக் காணாது உறக்கம் வராது தவித்துக் கிடந்த அவளும், விழிகளின் சங்கமத்தில் தம்நிலை மறந்து நின்ற வேளை, ஏற்கெனவே அவளுடைய தேகம் கொடுத்த கிளர்ச்சியில், சுயம் தொலைத்திருந்தவன், அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாகத் தன்னை வா என்று அழைத்த அந்தச் சதைப் பற்றுக் கொண்ட அழகிய உதடுகளை நோக்கிக் குனிந்தான்.

முதலில் வலிக்குமோ என்று அஞ்சிப் பட்டும் படாமலும் முட்டி நின்ற உதடுகள், தொட்டுக் கொண்டன. வருடிக்கொண்டன அள்ளிக் கொண்டன. மறு கணம் பலநாள் பசித்துக் கிடந்தவனுக்குக் கிடைத்த அறுசுவை உண்டியென அள்ளி எடுத்துச் சுவைக்கத் தொடங்கின.

ஆஹா…! ஆஹா…! தித்திப்பென்றால் இதுவல்லவா தித்திப்பு. புலவனுக்குக் கிடைத்த தமிழாய், பாவலனுக்குக் கிடைத்த பாட்டாய், இசைக் கலைஞனுக்குக் கிடைத்த இசையாய், கவிஞனுக்குக் கிடைத்த பொய்யாய், புசிக்கக் கிடைத்த முக்கனியாய் என்று அத்தனை தித்திப்பையும் மொத்தமாய் அந்த கொவ்வை இதழ்கள் கொடுக்கின்றனவே.

அம்மாடி… இது என்ன விந்தை? அவள் தேகத்தைத் தொட்டால் இத்தனை மதுரமாய் இருக்கிறது? இவளது தேக அங்கங்கள் யாவும் சொட்டும் தேனது கொண்டு குழைத்து செய்திட்ட மருத்துவக் குளிசையா? இல்லை மதுரசம் கொண்டு செய்வித்த போதை மாத்திரைகளா? தொட்டதும் உடல் நோ அனைத்தும் காணாமல் போகப் போதை மட்டும் சுகமாய், கிறக்கமாய் கிர் என்று தலைக்குள் பாய்கிறதே…

அந்த முத்தத்திலும், அவள் மென் உடல் கொடுத்த சுகத்திலும் அவன் மொத்தமாய்த் தொலைந்து மயங்கிக் கிறங்கி நிற்க, அவளோ தன்னை முத்தமிடும் அந்த ஆண்மகனின் கரங்கள் சொன்ன மொழியில் ஊனும் உயிரும் உருக, மேலும் சுகம் வேண்டி அவனைப் பற்றியிருந்த அவனுடைய சட்டையை மேலும் இழுத்துப் பெண் கனித் தேகம் மோத வைக்க, மெதுவாக அவளுடைய உதடுகளை விடுவித்தவன், அவளை உற்றுப் பார்த்து,

“ஆர் யு ஷூவர்?” என்றான் கிசுகிசுப்பாக. அந்த நிலையிலும் அவள் அனுமதி கேட்டு நிற்பவனிடம் எப்படி மறுப்பாள். அதுவும் அவளே மயங்கிக் கிறங்கிக் கிடக்கும் இந்த வேளையில் எப்படித்தான் மறுக்க முடியும்?

அழகிய புன்னகையைச் சிந்த, அதையே சம்மதமாகப் பெற்றவன், அடுத்து காட்டாற்று வெள்ளமானான்.

வரம்தந்த சாமிக்கு நன்றி சொல்லும் பக்தனாய், அவளை அள்ளி எடுத்திட்டான். அணைத்திட்டான், தனக்குள் புதைத்திட்டான், தன்னையே கொடுத்திட்டான். அவளும் தன் மதி தொலைத்தாள், அவனுள் பாதி ஆயிட்டாள், அவனுக்குள் இரண்டறக் கலந்திட்டாள்.

நீண்டநாட்கள் தண்ணீரைக் காணாது வறண்ட பாலைவனத்தில், சிக்கிக் கிடந்தவளுக்குத் தெளிந்த நீரோடையைக் கண்டதும் குதுகலம் வந்து அள்ளிப் பருகத் தோன்றுமே, அப்படி அவளும், பலநாள் பட்டினி கிடந்தவனின் கண்முன்னால் படைக்கப்பட்ட அறுசுவை விருந்தாய் அவளும் என்று, இருவரும் ஒருவரை ஒருவர் அள்ளி எடுத்துப் பின் கொடுத்து, இரசித்து உருசித்துப் புசித்துக் கொண்டிருக்க, அவனுடைய விரல்களோ வீணைகளின் தந்திகளை இரசனையோடு மீட்டி சுகராகம் எழுப்புவது போல, அவளுடைய மென்னுடலில் அங்கும் இங்கும் கரங்களை எடுத்துச் சென்று, அந்த அழகிய நேரத்தை இன்ப நாதமாய் மீட்டிட, முதன் முறையாகப் பெண்மையை உணர்ந்து திளைத்தாள் அப்பெண்ணவள்.

சொர்க்கம் சொர்க்கம் சொர்க்கம்.

பெண்மைக்குள் இத்தனை அதிசயம் நிகழுமா என்ன? அவளுக்குள் இத்தனை சொர்க்கமா?

அவன் கரங்கள் மீட்டியதில் முதன் முறையாகப் பெண்ணாய் உணர்ந்தவள், அவனுடைய ஆலிங்கனத்தில் தன்னை மறந்து விழிகளை மூட, இன்ப வெள்ளம் சுனாமியாய் அவளை அள்ளி எடுத்துச் சென்றது. கடைசியாக, அனைத்தும் முடிந்த பின், அவளை நோக்கிக் குனிந்தவன்,

“யு ஓக்கே…?” என்று கேட்டபோது, பூரிப்போடு அவள் சொன்னாள்,

“யெஸ் ஐ ஆம்…”

(37)

மெதுவாக விழிகளைத் திறந்தாள் திகழ்வஞ்சி. விழிகளைத் திறக்கும்போதே அன்றைய நாள், மிக அற்புதமான நாளாகத் தோன்றியது அவளுக்கு. ஒவ்வொரு நாளும்தான் விடிகிறதுதான். ஆனால் இன்று மட்டும் ஏன் இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது? எதையோ சாதித்தது போல அத்தனை நிறைவாக இருக்கிறதே. அந்தக் காலைப் பொழுதே அவளுக்காய் பிறந்தது போல அந்தளவு தித்திக்கிறது. வியந்தவாறு உடல் நெளித்துச் சோம்பல் முறித்தவளுக்கு, தன் உடலின் மாற்றம் புரிய தன் அசைவை நிறுத்தி யோசித்தாள். ஆங்காங்கே வலித்தது. ஆனாலும் அந்த வலியிலும் சுகம் தெரிய, அப்போதுதான் முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. அவளை அள்ளி எடுத்த கரங்களின் நினைவில், பதறியடித்து எழுந்தமர்ந்தாள் திகழ்வஞ்சி. சூரிய வெளிச்சம் நன்கு முகத்தில் தெறிக்க, ஒற்றைக் கரத்தைத் தூக்கி அந்த வெளிச்சத்திலிருந்து தன்னைக் காத்தவள் திரும்பி சுவரில் மாட்டியிருந்த அந்தப் பெரிய கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள்.

நேரம் பத்துமணி. ஐயோ, இத்தனை நேரமாகவா உறங்கி இருக்கிறோம்? பதறியவளாக ஆராவமுதனின் தொட்டிலைப் பார்க்க அதில் குழந்தை இல்லை. திரும்பித் தன்னவன் பக்கம் பார்க்க, அவனையும் காணவில்லை.

அவன் தான் குழந்தையை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். நிம்மதியோடு விழிகளை மூடியவளுக்குத் தொடராய் முன்னிரவின் நினைவு முத்தாரமாய் வர, உதடுகளில் அழகிய சிரிப்பொன்று விரிந்தது. அந்த சிரிப்போடே திரும்பியவளின் விழிகளில் பட்டான் அபராசிதன்.

அங்கிருந்த மேசைக்கு முன்பாக இருந்த இருக்கையில் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு, அவளையே பார்த்தவாறு அமர்ந்து இருந்தான் அவன்.

அவனைக் கண்டதும் திகைத்துப் போனாள் திகழ்வஞ்சி.

‘எத்தனை நேரமாக அங்கேயே அமர்ந்து இருக்கிறான்?’ அவன் முகம் பார்க்க முடியாமல் புதிதாய் வெட்கம் வந்து அமர்ந்து கொள்ள, சட்டென்று தலைகவிழ்ந்தாள் திகழ்வஞ்சி.

அட இது என்ன ஆச்சரியம்? அவளுக்கும் வெட்கப்படத் தெரியுமா என்ன? இதுநாள் வரைக்கும் வெட்கம் என்றால் என்ன என்று கூட அறியாதவளுக்குச் சிவந்த முகமும், உடலில் பரவிய சூடும், படபடத்த இதயமும், அவனைப் பார்க்க முடியாமல் தவித்த உணர்வும் காட்டிக் கொடுத்தது அவளுக்கும் வெட்கப்படத் தெரியும் என்று.

ஓரளவு முகச்சூடு தணிய, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனோ இன்னும் அவளைத்தான் இமை வெட்டாது பார்த்திருந்தான்.

“சா… சாரி… கொஞ்சம் கால தாமதமாக எழுந்துவிட்டேன்…” சங்கடத்துடன் கூற, அவனோ,

“போ… போய் உடலைக் கழுவிக்கொண்டு வா…” என்றவனின் குரலில் தெரிந்த அழுத்தத்தைக் கண்டு ஒரு கணம் குழம்பிப் போனாள் திகழ்வஞ்சி.

முன் இரவு அவளை ஆசையாக அணைத்ததும், முத்தமிட்டதும், அவளைப் பெண்ணாக உணர வைத்ததும், சொர்க்கம் வரை அழைத்துச் சென்றதும் பொய்யோ என்பது போல முகம் இறுக நின்றிருந்தவனைக் கண்டு வியந்தாள்.

அத்தனை ஆசையாக அணைத்தவன். ஏன் அவளை ஒரு மாதிரிப் பார்க்கிறான். ஏன் உள்ளே தப்பு செய்தவள் போல உணர்கிறாள்? குழம்பியவளாக எழுந்தவளுக்கு அப்போதுதான் இதழ் உதிர்ந்த மலராகத் தான் நிற்பதே புரிந்தது.

அவசரமாகப், போர்வையை இழுத்துத் தன்னைப் போர்த்திக் கொண்டவள், அவனைச் சங்கடத்துடன் பார்த்துவிட்டு, அவசரமாகக் குளியலறைக்குள் நுழைந்து தண்ணீரைத் திறந்து விட்டாள். முன்னிரவின் சுக இரவில் ஏற்பட்ட கண்டல்களையும் காயங்களையும் வெதுவெதுப்பான நீர் இதமாக வருடிச் செல்ல, அந்த நிலையிலும் அவன் அணைத்தது நினைவுக்கு வந்தது. அவள் மேனியைத் தீண்டிச் சென்ற அந்த நீர் அவனுடைய கரங்கள் போல அவளுக்குச் சுகம் கொடுக்க, விழிகளை மூடி அதை இரசித்து இன்பம் கொண்டவளுக்கு, அவன் மீதான பித்தம் அதிகரித்தது.

அந்தக் கணமே ஓடிப்போய் அவனை இறுகத் தழுவி, தன் காதலைச் சொல்லி அவன் உதடுகளில் முத்தமிட ஆசை பிறந்தது. கூடவே இப்படியெல்லாம் நினைக்கிறோமே என்று வெட்கமும் வந்தது. நான் நினைப்பது போல அவனும் நினைப்பானா? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? ஏன் அவனுடைய முகம் ஒரு மாதிரி இருக்கிறது? ஒரு மாதிரி கோபமாக, இறுக்கமாக? நேற்றை இரவு கொடுத்த சுகத்தில் அவன் முகம் மலர்ந்தல்லவா இருக்க வேண்டும்…? நினைத்தவளுக்கு உடனே முகம் வாடிப் போனது.

ஒரு வேளை, அவன் அண்ணனை மயக்கியது போலத் தன்னையும் மயக்கிவிட்டாள் என்று பழைய பல்லவியைப் பாடுவானோ. சுகம் கொடுத்ததற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்பானோ? நினைத்த மாத்திரத்தில் அவளுடைய மகிழ்ச்சி, இன்ப உணர்வு அனைத்தும் துணி கொண்டு துடைத்தாற் போலக் காணாமல் போயிற்று.

அப்படி அவன் கேட்டால், அவளால் தாங்க முடியுமா? நினைக்கும் போதே இதயம் மரண வலியைக் கொடுத்தது.

அதுவரை அவளைத் தீண்டிய சுக எண்ணங்கள் மங்கிப் போக, குளித்துவிட்டு, வேர்ட்ரோப் ஒன்றை அணிந்து கொண்டு வெளியே வந்தாள். அவன் இன்னும் எழுந்து செல்லாமல் அதே இருக்கையில் தான் அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த நிலையைக் கண்டு, ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிய,

“எ… என்னாச்சு? ஆரா… எங்கே…?” திக்கித் திணறிக் கேட்க,

“ஆரா கமலாவுடன் இருக்கிறான்… உன் கூடக் கொஞ்சம் பேசவேண்டும் உட்கார்..” என்றான் அழுத்தமாக.

அதைக் கேட்டதும் நெஞ்சம் பதைத்தது அவளுக்கு. அவள் பயந்தது போலத்தான் பேசப் போகிறானா. பிளீஸ்… அப்படி எதுவும் கேட்டு விடாதீர்கள். நெஞ்சார வேண்டியவள், அவனை ஏறிட்டு,

“பே… பேச என்ன இருக்கிறது?” என்றாள் தடுமாற்றமாக..

“இருக்கிறது..!. நிறையவே இருக்கிறது…! உட்கார்…!” அவன் சொல்ல, அதற்கு மேல் மறுக்காமல் அமர்ந்தாள் திகழ்வஞ்சி. அவளையும் அறியாமல் ஏனோ உடல் நடுங்கியது.

அவள் பக்கமாகச் சூடாக வந்திருந்த தேநீர் குவளையைத் தள்ளி வைத்தவன்,

“குடி” என்றான். மறுக்காமல் வாங்கியவள், அவனைப் பார்ப்பதும் பின் குடிப்பதுமாக இருக்க, அவனோ எதுவும் பேசினானில்லை. கூடவே அவள் மீது பதித்த விழிகளை விலக்கினானும் இல்லை.

அதைக் கண்டவளுக்கு அதற்கு மேல் தேநீர் குடிக்க முடிந்திருக்கவில்லை. ஆழ மூச்செடுத்து அவனைப் பார்த்தவள்.

“ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்… நான்… ஏதாவது தவறு செய்துவிட்டேனா?” என்றாள் தடுமாற்றமாக.

அவனோ, சற்று நேரம் அவளை வெறித்துப் பார்த்துவிட்டு,

“ஹூ… த… ஹெல்… ஆர்… யு?” என்றான் நிதானமாக. அதுவும் அழுத்தமாக.

அதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. தொண்டை வறண்டு போக, நாக்கு உலர, உடலிலிருந்த இரத்தம் முழுவதும் வடிந்து செல்ல, வெள்ளைத் தாளாக மாறியவள், அவனை அச்சத்தோடு பார்த்தாள்.

“இது… இது என்ன கே… கேள்வி…? நான்… திகழ் வஞ்…” அவள் முடிக்கவில்லை, அவள் முன்பாகத் தன் கரத்தை நீட்டி அவளுடைய பேச்சைத் தடுத்தவன்,

“போதும் நிறுத்து… இதற்கு மேலும் பொய் சொல்லி என் கோபத்தைக் கிளறாதே. நான் ஒரு டாக்டர். ஒவ்வொரு மனிதனின் உடல் கூறும் எப்போது எப்படி இருக்கும் என்பதை அக்குவேறு ஆணிவேராகப் படித்துவிட்டு வந்தவன். குழந்தை பெற்றவளுக்கும், குழந்தை பெறாதவளுக்கும் உள்ள வித்தியாசத்தை அறியாத முட்டாள் அல்ல நான். அதுவும் நேற்று இரவு நடந்ததற்குப் பிறகு… நீயோன்றும் மகாபாரதத்தில் வருகின்ற குந்தவையுமல்ல, சத்தியவதியுமல்ல குழந்தை பெற்றதும் கன்னியாவதற்கு… நீ ஆராவமுதனின் தாயாக இருந்திருந்தால் கன்னியாக இருக்க வாய்ப்பில்லை…” என்றவன் அவள் பக்கமாகச் சரிந்து,

“நான் முடிந்தவரை என் கோபத்தை அடக்கிப் பேசிக்கொண்டிருக்கிறேன். தயவு செய்து அதை உசுப்பிவிடாதே… சொல்… யார் நீ. எதற்காக ஆராவமுதனின் தாய் என்று என்னிடம் பொய் சொன்னாய். ஆராவமுதனின் தாய்க்கு என்ன நடந்தது? உன்னுடைய முகம் எப்படித் திகழ்வஞ்சியைப் போலவே இருக்கிறது..” என்று அவன் நிதானமாகக் கேட்டாலும், அவன் விழிகளில் தெரிந்த சீற்றத்தைக் கண்டு வாயடைத்துப் போனாள் அவள்.

ஐயோ..! இதை எப்படி மறந்தாள்? அவளுக்கு இது யோசனையில் வரவேயில்லையே. அவளை அவன் அணைத்ததும் அனைத்தையும் மறந்து போனாளே. அன்றைய உறவில் வலித்ததைக் கூட சுகமாகத்தானே ஏற்றுக்கொண்டாள். அப்போது கூட இந்த அறிவுகெட்ட புத்திக்கு அது எதுவும் உறைக்க வில்லையே. இப்போது என்ன செய்வது? கலங்கித் தவித்தவளாக அவனைப் பார்த்தவளுக்குப் பதில் சொல்ல வாய் வரவேயில்லை.

“நா… நான்.. வந்து…” அவளால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. அந்தளவுக்கு அச்சம் பிடரியைப் பிடித்திருந்தது. மயக்கம் வேறு வரும் போலிருந்தது.

“லிசின்… இப்போது நினைத்தாலும் மரபணு சோதனையில் நீ ஆராவின் தாயில்லை என்பதை என்றால் நிரூபிக்க முடியும். அது வேண்டாம் என்று பார்க்கிறேன். நீ உண்மையை சொன்னால், அடுத்து என்ன செய்வது என்று நான் யோசிப்பேன்… இல்லை என்றால்… ஆள் மாறாட்டம் செய்ததற்காகச் சிறையில் தள்ளவும் தயங்க மாட்டேன்…?”

எப்படி அவனிடம் சொல்வாள். என்னவென்று சொல்வாள். நிஜம் தெரிந்தால் ஆராவமுதன் அவளுக்கு இல்லாமல் போய்விடுவானே. கலங்கித் தவித்தவள்,

“அபராசிதன்… பிளீஸ்… நான் சொல்வதை…” அவள் முடிக்க முதல், தன் கைப்பேசியை எடுத்தவன், அதில் 911 அழுத்த தொடங்கப் பதறிப் போனாள் திகழ்வஞ்சி. பாய்ந்து வந்து அவனுடைய கரங்களைப் பற்றியவள்,

“பிளீஸ்… பிளீஸ்… நான் சொல்கிறேன்… தயவு செய்து காவல்துறையை அழைக்காதீர்கள்” என்றவள் அவன் முன்பாகக் கையெடுத்துக் கும்பிட்டு,

“ஆனால்… என்னை மட்டும் ஆராவிடமிருந்து பிரித்து விடாதீர்கள்… பிளீஸ்…” என்றாள் அழுகையூடே. அபராசிதனுக்கோ ஆத்திரம் கட்டுக் கடங்காமல் வந்தது. இத்தனை நாளும் தன்னை முட்டாளாக்கியிருக்கிறாள் என்பதை சத்தியமாக அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“முதலில் சொல்… அதற்குப் பிறகு என்ன செய்வது என்று யோசிக்கிறேன்…” இரக்கமற்றுச் சொன்னவனை வலியோடு பார்த்தாள் அவள். முதலில் எப்படித் தொடங்குவது எப்படி முடிப்பது என்று சுத்தமாக அவளுக்குப் புரியவில்லை.

கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்,

“நா… நான்… திகழ்வல்லபை… திகழ்வஞ்சியின் இரட்டைச் சகோதரி…” அவள் திக்கித் திணறிச் சொல்ல, அவன் அதை ஊகித்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ அவனுடைய உடல் இறுகியதே தவிர, வேறு எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. ஆனால் கொஞ்சம் கூட இளகாமல் அவளையே வெறித்துப் பார்த்திருக்க, இவளுக்கோ அதற்கு மேல் எப்படித் தொடர்வது என்று புரியவில்லை. திக்கித் திணறியவள், பின் ஆழ மூச்செடுது்து விட்டு,

“நானும் திகழ்வஞ்சியும் இரட்டைச் சகோதரிகள். அம்மா எங்களுடைய பன்னிரண்டாவது வயதில் இறந்து விட்டார்கள். அப்பா… அப்பாவும் இல்லை.” என்றவள், கலக்கத்தோடு அவனைப் பார்க்க, அவனோ எந்த பதிலும் சொல்லாமல் அவளை வெறித்தவாறே இருந்தான்.

“உறவு என்று எனக்கு அவள், அவளுக்கு நான்… வேறு யாருமில்லை” என்றவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அவனை ஏறிட்டுப் பார்க்கும் சக்தியின்றித் தரையை வெறித்தவாறே,

“ஒரு நாள், தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று வந்து சொன்னாள். அந்த நேரம் எனக்கு என்ன செய்வதென்று எதுவும் தெரியவில்லை. வெறும் பத்தொன்பது வயதில் குழந்தையைச் சுமப்பது என்றால், அது அத்தனை சுலபமில்லையே. அதுவும் யாருடைய உதவியும் இல்லாமல் இருக்கும் எங்களால் குழந்தையை எப்படிப் பார்த்துக்கொள்ள முடியும். நா… நான் குழந்தையை அழித்துவிடச் சொன்னேன். ஆனால் வஞ்சி வேறு… வேறு திட்டம் வைத்திருந்தாள்…” அவள் சொல்ல, அவனுடைய உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தன.

“எது… பணம் பறிப்பதுதானே…?” அவன் இகழ்ச்சியாகச் சொல்ல, பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள் திகழ்வல்லபை. கூடவே அவளையும் மீறி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு,

“அது தப்பு என்று அவளிடம் சொன்னேன். ஆனால் அவள் கேட்கவில்லை…” அவள் சொல்ல, அவளைக் கோபமாகப் பார்த்தவன்,

“உனக்கு அவள் செய்வது தப்பு என்று தெரிந்தால், அமலனை நீ ஏன் எச்சரிக்கவில்லை… உன் தங்கை உன்னிடமிருந்து பணம் பறிக்க முயல்கிறாள் என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே…?” அடக்கி வைத்த ஆத்திரத்துடன் கேட்க, வலி நிறைந்த புன்னகை ஒன்றைச் சிந்தினாள் திகழ்வல்லபை.

“நான் இப்படி ஏதாவது செய்வேன் என்று தெரிந்துதானோ என்னவோ, கடைசிவரை தன் குழந்தைக்குத் தந்தை யார் என்று என்னிடம் சொல்லவில்லை… இதில் திகழ்வஞ்சி கர்ப்பமாக இருக்கிறேன் என்று என்னிடம் சொல்லும் வரைக்கும், அவள் ஒருத்தரோடு பழகியிருக்கிறாள் என்றே எனக்குத் தெரியாது. அவள் வேலைக்குப் போவதாக என்னிடம் சொல்லிவிட்டு, அந்த நபரோடு இருந்திருக்கிறாள் என்று பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. இதில் அவள் என்னைத் தன் வாழ்க்கையில் தலையிடவும் அனுமதிக்கவில்லை. எனக்கும் வயது பத்தொன்பது. என்ன செய்ய வேண்டும், ஏது செய்யவேண்டும் என்று எதுவும் சுத்தமாகப் புரியவில்லை. அவளுக்குரிய சரியான அறிவுரை கூட எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நான் என்னதான் செய்யமுடியும் சொல்லுங்கள்? அதுவும் அவள் எதற்காகக் குழந்தையைச் சுமக்கிறாள் என்கிற உண்மை தெரிந்த போது, அதற்கு மேல் அவள் கூட என்னால் ஒரே கூரையின் கீழ் இருக்க முடியவில்லை. அவள் கூட இருந்தால், என் தனித்துவத்தை இழக்கவேண்டி வரும் என்று அஞ்சி, அந்த அமலன் கொடுக்கும் பணத்தில் வாழப் பிடிக்காமல், தனியாக விடுதியில் சென்று தங்கிவிட்டேன். ஆனால் அது எதுவும் வஞ்சியைப் பாதிக்கவில்லை. உங்கள் அண்ணா அனுப்பிய பணத்தைக் கொண்டு அவள் ஆசைப்பட்டது போல வசதியாக, திருப்தியாகவே இருந்தாள்… என்னுடனான தொடர்பை முற்றாக முறித்துக் கொண்டாள்.” என்றவளுக்கு அதற்கு மேல் தொடர முடியவில்லை. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. விம்மல் வெடித்தது. அவனை நெஞ்சம் நிறைந்த வலியோடு பார்த்தவள்,

”நான் அவளை விட்டு விலகி நான்கு மாதங்கள் இருக்கும். திடீர் என்று ஒரு நாள் என்னை அழைத்தாள். இப்போது தன் காதலனோடு அமெரிக்காவில் இருப்பதாகவும், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொன்னாள். தன்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றாள். தன்னைப் போலவே வசதியாக ஒருத்தனைப் பார்த்து அவன் கூட மகிழ்ச்சியாக இருக்கச் சொன்னாள். அங்கே என்னுடைய அறிவுரை எதற்கும் மதிப்பில்லாமல் போகிற போது, நான் என்ன செய்யட்டும்?” கேட்டவள் தொடர்ந்து வழிந்த கண்ணீரைக் கன்னங்கள் சிவக்கத் துடைத்தாள்.

அதற்குப் பிறகு நான் வஞ்சியோடு பேச வில்லை. ஆனால், ஒரு நாள் மெக்சிகோவில் இருக்கிற ஒரு மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது” என்றவளுக்கு அந்தப் பழைய நினைவில் முகம் கசங்கிப் போனது.

“அங்கே நடந்த ஒரு பேருந்து விபத்தில், திகழ்வஞ்சி சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கிறாள் என்றும், உடனே வரும்படியும் செய்தி வர, அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் மீதிருந்த கோபத்தை எல்லாம் மறந்து உயிரையே கையில் பிடித்துக் கொண்டு ஓடினேன். அங்கே என் வஞ்சி முகம் எல்லாம் சிதைந்த நிலையில், தன் கடைசி மூச்சை எனக்காகப் பிடித்து வைத்திருந்தாள்…” என்றவள் அதற்கு மேல் தாள முடியாத வலியில் முகத்தைக் கரங்களால் மூடி, விம்மிக் கதறிவிட்டாள்.

அபராசிதனோ நெஞ்சம் வெடிக்கக் கதறுபவளை கொஞ்சம் கூட மனம் இரங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஓரளவு தன்னை ஆசுவாசப் படுத்தியவள், தன் இரண்டு கரங்களையும் தூக்கிக் காட்டி,

“இந்தக் கரங்களில் ஆராவைக் கொடுத்து சத்தியம் வாங்கினாள் அபராசிதன். அவனை என் குழந்தையாகப் பார்த்துக் கொள் என்று வேண்டினாள்.

“ஆரா என் வயிற்றில் பிறக்கவில்லை அபராசிதன்… ஆனால் வஞ்சி அவனை என் கரத்தில் கொடுத்த அந்த நிமிடமே அவனை என் மனதில் சுமந்தேன்… அவன் என் பிள்ளைதான்… யாருமில்லாமல் அநாதையாக இருந்த எனக்குக் கடைசியாக வஞ்சி கொடுத்த உன்னதமான பரிசே அவன்தான்..” விம்மியவளை அழுத்தமாகப் பார்த்தான் அபராசிதன்..

“அந்த விபத்தில்தான் அமலனும் இறந்தான்…” அவன் சொல்ல, தலையை அசைத்தவள்.

“தெரியும்…” என்றாள். கலக்கத்தோடு அவனைப் பார்த்து,

திகழ்வஞ்சியும், உங்கள் அண்ணாவும் ஒன்றாகத்தான் மெக்சிகோ சென்றிருந்தார்கள். ஊர் சுற்றிப் பார்க்கப் பேருந்தில் சென்ற இடத்தில்தான் அந்த விபத்து நடந்தது. அத்தனை பேரையும் பக்கத்திலிருந்த ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். கொஞ்சம் சுயநினைவோடு இருந்த திகழ்வஞ்சி என்னை அழைக்கச் சொல்லி இருக்கிறாள். அவர்களும் அழைத்திருக்கிறார்கள்.

அங்கே போனபோது திகழ்வஞ்சி இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள் என்று தெரிந்த போது… என் உலகமே சுக்குநூறாக உடைந்து விட்டது… எப்படியாவது அவளைக் காப்பாற்றிவிட முடியும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவள் திரும்ப எழுந்து கொள்ளவே இல்லை.

இருபது வருடங்கள் என்னோடு ஒன்றாக இருந்தவள், ஒரு நாள் மொத்தமாக என்னை விட்டுப் போனாள்…” என்றவள் இப்போது அடக்க முடியாத வேதனையில் விம்ம, அபராசிதனோ பதில் ஏதும் சொல்லாமல் வெறுமையாகப் பார்த்திருந்தான்.

ஆரம்பத்திலிருந்தே அவன் சந்தேகப்பட்டான் தான். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்த புதிர்கள் இப்போது ஒன்றோடு ஒன்று இணைந்து முழுப் படமாக அவனுக்குக் காட்சி கொடுத்தது. அமலனால் வர்ணிக்கப் பட்டவளுக்கும் இவளுக்கும் நிறைய வேற்றுமைகள் இருந்தபோதே அவன் யோசித்திருக்கவேண்டும். அவளுடைய உடலில் குத்தப்பட்ட பச்சை அங்கில்லாதபோதே அவன் புரிந்திருக்க வேண்டும். குழந்தை சுமந்ததற்கான வரைகள் எதுவும் வயிற்றில் இல்லாத போது அதை எதுவும் அவன் பெரிதாக நினைக்க வில்லை. இப்போதெல்லாம் அதை இல்லாமல் செய்வதற்கு நவீன வசதிகள் வந்துவிட்டன. கவர்ச்சியாக ஆடைகள் போட ஆசைப்படும் திகழ்வஞ்சி நிச்சயமாக அந்த வரைகளை விட்டுவைத்திருக்க மாட்டாள் என்று அப்போது நினைத்திருந்தான். ஆனால் இப்போது தான் அது குழந்தையைச் சுமக்காத வயிறு என்பதே அவனுக்குப் புரிகிறது. அது மட்டுமா? அவன் பணம் கொடுப்பதாகச் சொன்னபோது, அதை மறுத்த போதே சந்தேகப்பட்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அத்தனை தாய்ப் பாசத்தோடு குழந்தையைப் பார்த்துக் கொள்பவள், தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றபோதே தெரிந்திருக்கவேண்டும். ஆனால், ஒருத்தி இந்தளவு பொய்யாக நடிப்பாள் என்று அவனுக்கு யோசிக்கத் தோன்றவில்லை. யோசிக்கத் தோன்றவில்லை என்பதை விட, யோசிக்க நேரம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. அவனை எப்படியெல்லாம் முட்டாளாக்கி இருக்கிறாள்.

“திகழ்வஞ்சி எப்படித் திகழ்வல்லபை ஆனாள்…?” அழுத்தமாகக் கேட்க, அவனை வலியுடன் பார்த்தாள் திகழ்வல்லபை.

“திகழ்வல்லபையாக இருந்தால் குழந்தை என்னதல்ல என்று தெரிந்து போகும். கனடிய அரச சட்டத்துக்கு அமைய அவனை என் குழந்தையாகத் தத்தெடுப்பது சாத்தியமல்ல. தவிர…” என்றவள் முகம் கசங்க அவனைப் பார்த்து, அவனுடைய தந்தையின் உறவினர்கள் உரிமை கோரி வந்தால், எனக்கு ஒரு பிடிமானம் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் என் அடையாளங்களை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தேன். மெக்சிகோ மருத்துவமனைக்கு கொஞ்சம் பணம் கொடுத்தேன். இறந்தது திகழ்வல்லபை என்று மாற்றினேன். நான் திகழ்வஞ்சியாகக் குழந்தையின் தாயாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்தேன்…” அவள் சொல்ல,

“அது மட்டுமா காரணம்…? அவள் அமலனிடம் இருந்து பறித்த பணத்தை, நீ அபகரிப்பதற்காகவும் திகழ்வஞ்சியின் பெயரில் நீ மாறியிருக்கலாம் தானே…” அவன் கேட்க வலியோடு சிரித்தாள் அவள்.

“அப்படிப் பணத்துக்கு ஆசைப்பட்டு அவள் பெயரில் நான் மாறியிருந்தால், நான் வசதியாக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் அபராசிதன். நான் கனடா வந்த பிறகு, அவள் வாழ்ந்த வீட்டில், வாங்கிப் போட்ட அத்தனை ஆடம்பரப் பொருட்களையும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்தேன். வஞ்சி விபத்திற்குள்ளானது, இறந்தது எல்லாம் மெக்சிகோவில். இதில் இறந்த திகழ்வஞ்சியை திகழ்வல்லபையாக மாற்றவேண்டும். எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதை எல்லாம், அவள் வங்கியிலிருந்த பணத்தில் தான் எடுத்துக் கொடுத்தேன். தவிர, ஆராவமுதன் எந்தவித சட்ட சிக்கலும் இல்லாமல் எனக்குத் தேவைப்பட்டான். அதற்கும் பணம் செலவு செய்ய வேண்டியிருந்தது… இது எல்லாம் போக, எஞ்சியதை ஆராவின் பெயரில் வங்கியில் போட்டு இருக்கிறேன். சத்தியமாக அமலன்சார் வஞ்சிக்குக் கொடுத்த பணத்திலிருந்து ஒரு டாலர் கூட எனக்காக நான் செலவு செய்யவில்லை…” அவள் சொல்ல, ஏளனத்துடன் அவளைப் பார்த்தான் அபராசிதன்.

“அவ்வளவு நல்லவளா நீ…?” எகத்தாளமாகக் கேட்க மறுப்பாகத் தலையசைத்தவள்,

“நான் நல்லவளில்லைதான் அபரன்… ஆனால்… ஏமாற்றுக்காரியில்லை.” என்றாள் வேதனையோடு. அதைக் கேட்டதும் இகழ்ச்சியாகச் சிரித்தவன்,

“உன் பெயருக்கு அர்த்தம் குன்றாத வல்லமை அல்லது திறமை கொண்டவள் என்பதுதானே. நாட் பாட். பெயருக்கு ஏற்றது போல, மிகத் திறமையாகத் தான் செயற்பட்டிருக்கிறாய். அது சரி, உனக்குக் குழந்தையின் தந்தை அமலன்தான் என்று எப்போது தெரியும்?” அவன் கேட்க, தலை குனிந்தவள்,

அன்றைய விபத்தில், அவரும் விபத்தில் சிக்கியதாகத் திகழ்வஞ்சி சொன்னாள். அந்த நிலையில் அவருக்கு என்னானதோ என்று அவரைப் பற்றியும் விசாரிக்கச் சென்றேன். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், அவருடைய உறவினர்கள் உடலை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் மருத்துவ மனையில் கூறினார்கள்… கூடவே அவளுக்கும் அமலனுக்கும் இடையில் இருந்த உறவைப் பற்றி அவளும் தன் குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தாள். அப்போதுதான் அவளுக்கும் அமலனுக்கும் இடையில் இருந்த வயது வித்தியாசமே எனக்குத் தெரிந்தது.”

“அது உனக்கு எப்படிக் கிடைத்தது?”

“நான் திகழ்வஞ்சியின் சகோதரி என்பதால், அவளுடைய பொருட்கள் அனைத்தையும் காவல் துறை என்னிடம் ஒப்படைத்தது… அதில் இந்தக் குறிப்பேடும் இருந்தது…”

“அதை நான் பார்க்கவேண்டும்…” என்றான் அபராசிதன். மறுக்கவில்லை திகழ்வல்லபை.

எழுந்து சென்று எடுத்து வந்தவள், தயக்கத்தோடு அவனிடம் நீட்ட, அதைக் கிட்டத்தட்டப் பறித்தவன் புரட்டிப் பார்த்தவாறு,

“இந்தப் பெரிய உண்மையை எப்போது சொல்வதாக உத்தேசம்?” அவன் கேட்கப் பதில் சொல்லாமல் தலையைக் கவிழ்த்தாள் திகழ்வஞ்சி.

“உன்னைத்தான் கேட்கிறேன்… எப்போது சொல்வதாக உத்தேசம்?” ஆத்திரத்தோடு கேட்க, அந்தக் குரலில் துள்ளியவள்,

“எ… எப்போதும் சொல்வதாக இல்லை…” என்றாள் அழுகையோடு.

அதைக் கேட்டவன் வெறுப்போடு தன் கரத்தில் இருந்த குறிப்பேட்டை ஓங்கித் தரையில் எறிய, அதிலிருந்து ஒரு சில புகைப்படங்கள் சிதறித் தெறித்தன. பதறிப்போனாள் திகழ்வஞ்சி.

ஐயோ இதை எப்படி மறந்தோம்? நடுங்கியவளாக அபராசிதனை ஏறிட்டவள், பாய்ந்து அந்தப் புகைப்படங்களைப் பொறுக்கி எடுப்பதற்குள், அபராசிதன் ஒரு புகைப்படத்தைத் தன் கரத்தில் எடுத்திருந்தான்.

 

What’s your Reaction?
+1
42
+1
13
+1
5
+1
1
+1
9
+1
3

Related Post

8 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!- 36/37”
  1. அருமையான பதிவு 😍😍😍😍.‌
    அடக்கடவுளே 😮😮😮😮😮 அப்ப வஞ்சி இல்லை வல்லபை‌.
    ஏற்கனவே ஒரு சிஸ் கமண்ட்ஸ் பொட்டில சொல்லி இருந்தாங்க.
    அச்சோ இவனென்ன ஏகத்துக்கும் குதிக்கிறானே.
    என்றாளை வெளியே தொரத்திடுவானோ?😱😱😱😱😱 போட்டோவ வேற எடுத்து பாக்கறானே. அதுக்கும் ஏதாவது கேள்வி கேட்டு குதிப்பானோ? ஏன் உண்மையை சொல்லலை ன்னு.
    திகழு எல்லா வேலையும் ஆராகூட இருக்க செஞ்சியே இந்த லகுடபாண்டி டாக்டர் ங்கிறதை மண்டைமேல இருக்கற கொண்டை மாதிரி மறந்துட்டியே🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    1. எல்லாம் தலை விதி வைஷூ என்ன பண்றது. ஏழரை உச்சில ஏறி உக்காந்தா இப்படித்தான் ஆகும் . தெரியும்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!