Thu. Jun 5th, 2025

தொலைந்த எனை மீட்க வா…!- 35

(35)

இதோ ஒரு மாதம் மின்னாமல் முழங்காமல் கடந்து சென்றுவிட்டிருந்தது.

இந்த ஒரு மாதமும் எப்படிக் கடந்து சென்றது என்று கேட்டால் திகழ்வஞ்சிக்குச் சத்தியமாகத் தெரியாது. ஆனாலும் அவளுடைய மனநிலையிலும், அவளுடைய வாழ்க்கையிலும் மிகப் பெரும் மாற்றம் நிகழத் தொடங்கியிருந்தது. அந்த மாற்றத்திற்கு முழுமுதற் காரணம் அபராசிதன்.

இத்தனைக்கும் அபராசிதன் விட்டிலிருந்த நாட்கள் மிகக் குறைவு.

இரண்டு நாட்கள் மருத்துவ வாசம், மிச்ச நாட்களில் மாலை பத்து மணிக்குப் பிறகுதான் வீட்டிற்கே வருவான்.

வீட்டிற்கு வந்ததும், மேல் கழுவிவிட்டு, சமைத்ததைச் சுவையறியாமல் வாயில் போட்டு விட்டு, உறங்கும் ஆராவமுதனின் நெற்றியில் முத்தமிட்டுப் படுக்கையில் விழுபவன், மறுநாள் ஐந்து மணிக்கு எழுந்து குளித்துவிட்டு ஆறு மணிக்குச் சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கெல்லாம் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவான்.

சென்றால் மாலை ஒன்பது மணி இல்லை என்றால் பத்து மணிக்குப் பிறகுதான் வருவான். ஏதாவது அவசரம் என்றால் மருத்துவமனையில் தங்கிவிடுவான்.

முதல் ஒரு கிழமை அவளுக்கு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் நாள் போகப் போக, அவன் வீட்டில் இருக்கும் காலத்தைப் பெரிதும் விரும்பத் தொடங்கிவிட்டாள் திகழ்வஞ்சி. அவன் அன்று வீட்டில் தங்குகிறான் என்றால், அவளையும் மீறி உள்ளம் பூரித்தது. கண்கள் தேன்மிட்டாயை மொய்க்கும் ஈயாக அவன் எங்கு சென்றாலும் அலைந்து திரிந்து அவனிடமே நிலைத்து நிற்கும்.

இப்போதெல்லாம் அவனருகே படுப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. பயமின்றி உறங்க முடிந்தது. முதல் ஒரு சில நாட்கள் ஒரு வித தயக்கத்தோடுதான் அவன் பக்கத்தில் உறங்க வருவாள். ஆனால் ஒரு வாரம் கழிய, அவன் அருகே படுப்பது சாப்பாடு உண்பது போல, அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிப் போனது.

இதில் அபராசிதன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரத் தாமதமானால் போச்சு. உறக்கம் வராமல் படுக்கையில் சாய்ந்து கிடப்பவள், மொட்டு மொட்டென்று விழித்திருப்பாள். அவனுடைய வண்டிச் சத்தம் கேட்ட பிறகுதான் தன் விழிகளையே மூடுவாள். ஆனாலும் உறங்க மாட்டாள்.

வருபவன் சத்தமிடாமல் அறைக்குள் நுழைந்து குளித்துவிட்டு, படுக்கையில் சாயும்போதுதான் அதுவரை தத்தளிக்கும் மனம் ஓரளவு சமாதானம் ஆகும். உறங்கியும் போவாள். மறுநாள் அவள் கண்களை விழிக்கும்போது அனேகமாக அவன் இருக்க மாட்டான்.

அவன் முகத்தில் விழிக்காது எழும் நாளில் ஏதோ சரியில்லை என்று மனது அடித்துக் கொள்ளும். எதிலும் பிடிப்பில்லாதது போல உள்ளம் சோர்ந்து போகும். அன்று எழும்போது அவன் முகத்தில் விழித்து விட்டால் அன்று முழுக்க அவள் முகம் மலர்ந்திருக்கும். அதிர்ஷ்டச் சீட்டில் வெற்றி பெற்றவள் போல மனது குதுகலிக்கும்.

இதில் அவன் வீட்டில் தங்கினால் போதும். அன்றைய நாள் முழுக்க உலகமே தன் வசப்பட்டது போலத் தோன்றும். அவன் மருத்துவமனையில் தங்க நேரிட்டால், பாலைவனத்தில் தண்ணீருக்கு ஏங்குவது போலத் தவித்துக் கிடப்பாள். இத்தனைக்கும் இருவருக்குமே ஒழுங்கான பேச்சுவார்த்தை இல்லை, சுமுகமான உறவும் இல்லை. ஆனாலும் அவனைத் தேடும் மனத்தை நினைத்து இவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

இதில் அவன் எதைச் செய்தாலும் இரசிக்கத் தோன்றியது. யோசனையோடு விரல்களால் தலை மயிரைக் கோதினால் விழிகளை எடுக்காமல் பார்க்கத் தோன்றுகிறது. அவன் தன் உயரத்திற்கு ஏற்ப வேக நடை நடக்கும் பொது இரசிக்கத் தோன்றுகிறது. கோபப் படும் போதும் முகம் இறுகும் போதும் அதைக் கண்ணிமைக்காமல் பார்க்கத் தோன்றுகிறது. தன் ஆழமான அழுத்தமான ஆண்மை மிகுந்த குரலால் பேசும்போதோ உள்ளம் கொள்ளை போகிறது. எதுவும் பிடிக்கவில்லை என்றால், விழிகளைச் சுருக்கித் தலையை ஒரு இழுவை இழுத்து எரிச்சலாகப் பார்ப்பான். அந்த நேரம் கோபம் வருவதற்குப் பதில், உதடுகள் புன்னகையில் விரியவே செய்கிறது. ஆராவோடு அவன் குழைந்து பேசும் போது இதயம் கொள்ளை போகிறது. ஏதாவது யோசனையிலிருந்தால் என்ன யோசனை என்று கேட்கத் தோன்றுகிறது. அவன் வயிற்றைத் தொட்டால் பசிக்கிறதா? ஏதாவது செய்து கொடுக்கவா? என்று கேட்க ஆசைவருகிறது. அவனுடைய முடி சற்றுக் கலைந்திருந்தாலும், கரங்களால் கலைந்த மயிர்க்கற்றைகளைக் கோதி சரியாக்கும் ஆசை வருகிறது. அவன் வீட்டிற்கு வரத் தாமதமானால், என்ன ஆளையே காணோம் என்று உள்ளம் பதறச் செய்கிறது. ஒரு நாள் அவன் வாசனையை நுகரவில்லை என்றால், மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. நீளிரிக்கையில் தன்னை மறந்து உறங்கிப் போனால், அவனை இழுத்து மார்பில் போட்டு தட்டிக் கொடுக்கும் ஆசை வருகிறது.

இதற்கெல்லாம் காரணம்தான் என்ன? ஏன் அவனையே சதா நினைத்திருக்கிறாள். அதுவும் நெஞ்சம் முழுக்க கசப்பை மட்டும் அள்ளிக் கொடுத்தவனை ஏன் தேடுகிறாள்? குழம்பிப் போனவளுக்கு அதற்கான விடை மிக விரைவிலேயே கிடைத்தது.

ஒரு மாதம் கழிய, அபராசிதன் மருத்துவ மாநாட்டிற்காக இங்கிலாந்து செல்லவேண்டி இருந்தது. அதுவும் இரண்டு கிழமைகளுக்கு. அதை அறிந்து கொண்ட திகழ்வஞ்சியின் முகம் உடனே வாடிப்போனது.

இரண்டு கிழமைகளா? இரண்டு நாட்கள் தொடர்ந்து வீட்டிற்கு அவன் வரவில்லை என்றால் இவளால் சுத்தமாக உறங்க முடிவதில்லை. இதில் இரண்டு கிழமைகள் என்றால், ஐயோ…! பதினான்கு நாட்கள். அவளால் முடியுமா? கதிகலங்கிப் போனாள் திகழ்வஞ்சி. ஆனாலும் அதை அவன் முன் காட்டினானில்லை. அவன் ஒன்றும் அவளிடம் அனுமதியெல்லாம் கேட்டு நிற்கவில்லையே.

ஒரு நாள் வந்தான், ‘அடுத்த வாரம் இங்கிலாந்து போகவேண்டும்… திரும்பி வர இரண்டு கிழமைகள் எடுக்கும்…’ என்றான். இதோ போயும் விட்டான்.

ஆனால் அவன் போன பின்புதான், எந்தளவுக்கு அவன் தன்னை பாதித்திருக்கிறான் என்பதே திகழ்வஞ்சிக்குப் புரிந்தது.

அவன் வீட்டிலிருந்தாலும், இல்லை மருத்துவ மனையிலிருந்தாலும், அவன் இருக்கிறான் என்கிற தைரியம், அவளை நிம்மதியாக நடமாட வைக்கும். ஆனால் அவன் இங்கிலாந்து போனதன் பின்பு அவன் பக்கத்தில் இல்லை என்கிற உணர்வு அவளின் மனதில் ஆழப் பதிந்ததாலோ என்னவோ, அவனைக் காண்பதற்கு முன்பு எந்தளவு மன அமைதியற்று இருந்தாளோ, அதே போல இப்போதும் அமைதியற்றுத் தவித்துப் போனாள். அவன் இருந்த போது பாதுகாப்பாகத் தெரிந்த இடம், இப்போது பாதுகாப்பற்றதாகத் தோன்றிப் பெரிதும் வதைத்தது.

இத்தனைக்கும் விஜயராகவன் ஈஷ்வரி அறியாமல் அவளோடு பேசினார். சிரித்தார். எல்லாம் செய்தார்தான். ஆனால் இவளால் தந்தையின் பேச்சில்கூட ஒட்ட முடியாமல் அபராசிதனையே நினைத்து வதங்கிக் கிடந்தாள்.

இரவில் படுக்கையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஏதோ நெருஞ்சி முள்ளின் மீது படுத்தது போல, உறக்கம் வராமல் விழித்திருந்தாள். இருவரும் உறங்கும் போது, அவன் அந்தப் பக்கமாகவும், இவள் இந்தப்பக்கமாகவும்தான் உறங்குவார்கள். இருவருக்கும் இடையிலிருக்கும் அந்த நான்கடி ஒரு பெரிய விடையமாகவே தெரியாது. ஏன் எனில் அவனுடைய தேகவாசனை, அவனை மிக நெருக்கத்தில் இருப்பது போலத் தோற்றுவிக்கும். இவளும் அவனுடைய அந்த ஆண்மை நிறைந்த வாசனையை சுவாசித்தவாறே உறங்கியும் போவாள். ஆனால் அவன் இங்கிலாந்து சென்றபின், அவனுடைய வாசனையை நுகராமல் அவளால் சுத்தமாக முடிந்திருக்கவில்லை.

ஏனோ படுக்கையில் தலையணை அவளுடைய கண்ணீரில் நனைந்து போனது. உறங்க முயன்று தோற்று அவன் படுத்திருக்கும் பக்கமாக வந்து அவனுடைய தலையணையில் முகம் புதைக்கும் போது, ஓரளவு ஆறுதலாக இருக்கும். நாசி மிச்சமிருக்கும் அவனுடைய வாசனையை ஆழ மூச்செடுத்து நுரையீரலை நிரப்பும் போது, மனம் சற்று அமைதியடையும்.

அன்றும் அப்படித்தான், அவன் சென்று எட்டு நாட்களாகிவிட்டிருந்தன. மகனைத் தூங்க வைத்து விட்டுப் படுக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு, சுத்தமாக முடிந்திருக்கவில்லை. மனது ஏதோ வெறுமையாகிப் போன உணர்வில் தவித்தது.

படுக்கையில் தன் பக்கத்தில் வந்தமர்ந்தவள், ஏக்கத்தோடு அபராசிதனின் பக்கத்தைப் பார்க்க, வெற்றுத் தலையணைதான் அவளைப் பார்த்துச் சிரித்தது.

ஏன் இப்படித் தவிக்கிறோம், கலங்கி நிற்கிறோம் என்று எண்ணியவள், எட்டி அவனுடைய தலையணையை எடுத்து முகத்தில் அழுத்த, ஏற்கெனவே உறிஞ்சி எடுத்து முடித்துவிட்ட வாசனையின் எச்ச சொச்சம் மிஞ்சியிருக்க, அதை ஆழ்ந்து சுவாசித்தவளின் கண்களிலிருந்து இரு துளிக் கண்ணீர் அந்தத் தலையணையில் விழ, திடுக்கிட்டுப் போனாள் திகழ்வஞ்சி.

இப்போது எதற்காகக் கண்கள் கலங்கினாள்? இப்போது எதற்கு அவன் தலையணையை அணைத்துப் பிடித்திருக்கிறாள்? ஏன் தவிக்கிறாள்? ஏன் அவன் முகம் காணாமல் தவிக்கிறாள்? பல கேள்விகள் அவளுக்குள் உருமாறி வதைக்க, மெல்ல மெல்ல அதற்கான காரணம் புரியத் தொடங்கியது திகழ்வஞ்சிக்கு.

அவன் இகழ்ச்சியாகப் பேசினாலும், நக்கலாக மொழிந்தாலும், கிண்டலாகப் பார்த்தாலும், அவன் பக்கத்திலிருந்தால் போதும் என்று தோற்றுவதற்கான காரணம் அவள் அவனைக் காதலிக்கிறாள். உளமார உயிர் குழையக் காதலிக்கிறாள். அந்தக் காதல் எப்போது தோன்றியது என்று கேட்டால் அவளுக்குத் தெரியாது. ஆனால், அவனின்றி அவள் வாழ்வில் ஓரணுவும் அசையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டவளுக்கு மகிழ்ச்சிக்குப் பதில் பெரும் வேதனைதான் எழுந்தது.

காதல் மலர்ந்தால், அங்கே மகிழ்ச்சியல்லவா வரவேண்டும். தேகம் சிலிர்க்க வேண்டுமே. மகிழ்ச்சி தோகை விரித்து ஆடவேண்டுமே. ஆனால் ஏன் இதயம் வலிக்கிறது. ஏன் தவிக்கிறது. ஏன் கலங்கித் துடிக்கிறது? எண்ணிவளுக்கு உடனே அதற்கான காரணமும் புரிந்து போனது.

அவளை முற்று முழுதாக வெறுப்பவன் அவன். அவளை நினைத்தாலே கசந்து வழிபவன். ஆராவுக்காகவும், உடல் தேவைக்காகவும் இவளை மணந்து கொண்டவன். இவளுடைய காதலை அறிந்தால் என்ன செய்வான்? எள்ளி நகையாடுவான். என் அண்ணனை ஏமாற்றியது போல, காதல் நாடகம் போட்டு என்னையும் ஏமாற்றப் பார்க்கிறாயா என்று முகத்தில் அடித்தாற்போலக் கேட்பான். அவளுடைய காதலைக் கேவலமாகப் பேசிக் கொச்சைப்படுத்துவான். இவள் மனதில் பிறந்த ஒரே காரணத்திற்காகவே அந்தக் காதல் மரண அடி வாங்கும். தேவையா இது?

வேண்டாம்…! அவளுடைய காதல் அவளிடமே இருக்கட்டும். அவனுக்குத் தெரியவே வேண்டாம். அவளைப் பொறுத்தவரை, அவன் மீது அவள் வைத்த காதல் புனிதமானது. உண்மையானது. அதை எள்ளி நகையாடி, பூத்துக் குலுங்க முதலே சவப்பெட்டியில் போட்டு அடைக்க வேண்டாம். அந்தக் காதல் அவளுக்குள் பத்திரமாக உயிரோடு பூத்துக் குலுங்கட்டும். முடிவு செய்துவிட்டாள் திகழ்வஞ்சி.

காதலைத் தூக்கி மனதிற்குள் புதைத்துவிட்டாள். ஆனாலும் அவனைத் தேடும் மனதையும் புத்தியையும் எதில் எடுத்துச் சென்று அடைப்பாள். அது பாட்டிற்கு அவனைத் தேடி அலைகிறதே. ஐயோ…! காதல் இத்தனை கொடியதா என்ன? காதல் என்றால் இன்பம் என்கிறார்களே. அது பெருத்த சுவையைக் கொடுக்கும் என்று சொல்கிறார்களே. ஆனால் இவளுக்கு ஏன் அது கசந்து வழிகிறது. தீராத வலியைக் கொடுக்கிறது. நெஞ்சில் இரத்தம் கசியச் செய்கிறது. இதிலிருந்து எப்படி அவள் வெளியே வருவது? நடுக்காட்டில் சிக்கிக்கொண்ட மான் போல, போகும் வழி தெரியாமல் அவளும் அவளுடைய காதலும் திக்கித் தவிக்க, எப்படியோ நாட்கள் பறந்து விட்டன.

அவன் இங்கிலாந்து போன உடனே வீட்டிற்கு அழைத்து அவன் போய் இறங்கிய செய்தியைத் தெரிவித்திருந்தான். அதற்குப் பிறகு அவன் அழைக்கவில்லை. இவளும் அவன் அழைப்புக்காக தினம் தினம் காத்திருந்து கடைசியில் பெரும் ஏமாற்றத்தைத்தான் சந்தித்தாள்.

அவனை நினைத்து இவள்தான் இத்தனை துடிக்கிறாள் போல. அவன் கொஞ்சம் கூட அவளைப் பற்றி யோசிக்கவில்லையே. பேசாமல், தானாவது அவனை அழைத்துப் பேசலாமா என்றால் அதற்கும் தயக்கமாக இருந்தது.

இவள் அவனை அழைக்கப் போக, எதற்கு என்னை அழைத்தாய், அமலன் போல என்னையும் அக்கறையாக அழைப்பது போல அழைத்து உன் வலையில் விழவைக்கப் போகிறாயா என்று கேட்டு விட்டால்? அதை நினைக்கும் போதே மனதும் உடலும் உதறியது.

அந்தப் பயத்திலேயே அவனை அழைக்காமல் தவிர்த்தாள் திகழ்வஞ்சி. இப்படியே இரண்டு வாரத்தில் வருவதாகச் சொல்லியிருந்தவன் இரண்டு வாரம் கழித்து மேலும் இரண்டு நாட்கள் கடந்த நிலையில், அபராசிதன் வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அப்படியிருந்தும், சற்றுத் தெலைவில் வண்டியின் சத்தம் கேட்கவேண்டியதுதான், அது அவனுடைய வண்டியாக இருக்குமோ என்று ஏக்கத்தோடு ஓடிச்சென்று ஜன்னலோரம் நின்று எட்டிப் பார்ப்பதும், அவன் இல்லை என்றதும், முகம் வாடி வருவதையும் கண்ட கமலா உள்ளுக்குள் நகைத்தார்.

“ஏம்மா…? இப்படி அடிக்கடி வாசலுக்கு ஓடி டாக்டர் வருகிறாரா என்று பார்ப்பதை விட, அவரைத் தொலைபேசியில் அழைத்து எப்போது வருகிறார் என்றாவது கேட்கலாமே?” என்று கேட்க, அசட்டுப் புன்னகையுடன் எதையோ கூறிச் சமாளித்தாள் திகழ்வஞ்சி.

அவர்களுக்குள் நடக்கும் உள்ளூர் போர் பற்றிக் கமலாவுக்குத் தெரிய வாய்ப்பில்லையே.

கடைசியில் மாலை நான்கு மணியளவில், ஆராவை வெளியே கூட்டிச் செல்லலாம் என்கிற நினைப்பில், மேல் கழுவிவிட்டு வரும் வரைக்கும் அவனுடைய அறையில் விளையாடட்டும் என்று அவனை அங்கே விட்டுவிட்டு, கதவோரம் ‘பேபி டோர்’ போட்டுவிட்டு குளியலறைக்குள் சென்றாள் திகழ்வஞ்சி.

அவள் குளித்துக்கொண்டிருக்கும் அரைவாசியில், அபராசிதனின், குரல் இவளுடைய காதுகளை வந்தடைய, முகம் மலர்ந்து போனது அவளுக்கு. ஆனாலும் சந்தேகம் வரப்பெற்றவளாகத் தண்ணீரை நிறுத்திவிட்டு அவனுடைய குரல்தானா, என்று காது கொடுத்துக் கேட்க, சந்தேகமில்லாமல் அவனுடைய குரல்தான் அத்தனை அடைப்புகளையும் மீறி இவளுடைய காதுகளுக்குள் வந்து விழுந்தது.

அகமும் முகமும் மலர்ந்து போனது அவளுக்கு. அவசரமாகத் தண்ணீரை நிறுத்திவிட்டு வெளியே வந்தவள், தலையைத் துவட்டாமல் போகிற போக்கில் உடலைத் துடைத்துவிட்டு, மின்னல் விரைவில் ஆடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்க்க, அபராசிதன், தன் பெட்டியை எடுத்துக்கொண்டு படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தான். கையிலோ கைப்பேசி. அதில் முக்கியமான எதையோ தட்டிக்கொண்டு மேலேறியவனின் நாசியை, இதமான லவன்டர் வாசனை தாக்கத் தன் கவனம் சிதறி நிமிர்ந்து பார்த்தான்.

அங்கே அணிந்திருந்த ஆடையில் ஈரம் ஒட்டி இருக்க, சுருண்ட முடியிலிருந்து பனித்துளியாய் தண்ணீர் கொட்ட, விரிந்த விழிகளும், செழித்து மலர்ந்த உதடுகளுமாக அவனுடைய வரவைக் கண்டு அகமகிழ்ந்து நின்றிருந்தவளைக் கண்டவனுக்கு ஒரு கணம் மூச்சுத் தடைப்பட்டுப் போனது.

அவன் கூட இந்த இரண்டு வாரங்களாக அவளுடைய முகம் பார்க்காமல் நிறையவே சிரமப் பட்டான் என்றுதான் சொல்லவோண்டும். அவன் அவளோடு இருக்கும் நேரங்கள் சொற்பம்தான். ஆனாலும் அவளுடைய அருகாமை, அவளுடைய சுகந்தமான வாசனை அனைத்திற்கும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகிவிட்டதை அந்த இரண்டுவாரப் பிரிவு நன்றாகவே அவனுக்குப் புரியவைத்திருந்தது.

அவன் அவளைப் பார்க்காது இருந்தால் கூட, அவளுடைய ஆடையின் மெல்லிய ஓசையை வைத்தே அவள் என்ன செய்கிறாள் என்பதைக் கண்டுகொள்வான் அபராசிதன். இப்போதெல்லாம் அவன் வேலையின்றி ஓய்வாக இருக்கையில் அமர்ந்தால் போதும், சட்டென்று அவன் மனதில் வந்து ஏதேதோ கதைகள் பேசுகிறாள். அப்போதெல்லாம் உலகமே மறந்து போகிறது அவனுக்கு.

இதில் கடந்த இரண்டு வாரமும், அவளுடைய முகம் பார்க்காமல், அவளுடைய பேச்சுச் சத்தம் கேட்காமல், அவளுடைய வாசனையை நுகராமல் மிகவும் சிரமப்பட்டுத்தான் போனான். அதுவும் இரவில் அவன் படுக்கையில் சாயும் போது அவனையும் மீறி அவனுடைய விழிகள் படுக்கையின் மறுபக்கத்தைப் பார்க்கும். அங்கு வெறுமையாக இருக்க, அதற்கு மேல் அவனுக்கு உறக்கம் சுத்தமாக வராது.

குடிப்பழக்கம் இருந்தாலாவது எதையாவது குடித்துவிட்டுச் சுருண்டு படுத்துவிடலாம். அதற்கும் வழியில்லாமல் மிகவும் திணறிப்போனான் அந்த வைத்தியன். எப்படியோ இரண்டு நாட்கள் சமாளித்தவன், அதற்கு மேல் முடியாத நிலையில், இரவில் தூக்க மாத்திரையைப் போட்டு உறங்கி விடுவான்.

ஆனால் விடிந்ததும் அவனையும் மீறி விழிகள் தனக்கு அருகாமையைப் பார்க்கும். அனேகமாக அவன் விழிக்கும் போது அவள் பக்கத்தில் உறங்கியிருப்பாள். அப்போது அது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் இப்போது, உறங்கும் போதும், உறங்கி எழும்போதும் அவனுடைய விழிகள் தேடியது என்னவோ அவளைத்தான்.

ஒரு கட்டத்தில் எப்போதடா அந்த மாநாடு முடியும், எப்போது டொரன்டோ வரலாம் என்று காத்திருந்தவன், மாநாடு முடிந்த கையோடு கிளம்பிவிட்டிருந்தான். ஆனால் அவனுடைய கஷ்டகாலம், அதிக மழை காரணமாக, அவன் வரவேண்டிய விமானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மழை விட்டு ஓரளவு வானம் தெளித்ததற்குப் பிறகுதான், இவனால் புறப்படவே முடிந்தது.

வீட்டிற்கு வந்ததும், அவனுடைய விழிகள் ஆவலாகத் தேடியது என்னவோ அவளைத்தான். இத்தனைக்கும் அவன் கதவைத் திறந்ததும், அங்கே முன்னறை நீளிருக்கையில் ஆராவுடன் அமர்ந்து கதைபேசிக்கொண்டிருப்பாள் என்கிற எதிர்பார்ப்போடுதான் உள்ளே வந்தான். ஆனால், அங்கே வெறுமையாக இருக்க, எரிச்சல்தான் வந்தது அவனுக்கு.

கடைசியாக இவனைக் கண்டு ஓடிவந்தது என்னவோ கமலாதான்.

எரிச்சல் மாறாமலே கமலாவைப் பார்த்தவன்,

“திகழ் எங்கே…?” என்றான்.

“அவர்கள் இத்தனை நேரமாக இங்கேதான் இருந்தார்கள். இதோ கொஞ்சத்திற்கு முன்னாடி தான் தம்பியை மேலே தூக்கிச் சென்றார்கள்…” என்றதும், எதிர்பார்த்தது கிடைக்காத அதிருப்தியோடு தன் அறை நோக்கி நடக்கத் தொடங்கினான் அபராசிதன்.

அதற்கிடையில் அவன் வந்து இறங்கிவிட்ட செய்தியைச் சகோதரிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்க, உடனே அவனை அழைத்திருந்தார் ஈஷ்வரி. அவரிடம் இதர சுகதுக்கம் பற்றிக் கூறி விடைபெற்றவன், தனக்கு ஏதாவது முக்கிய குறுஞ்செய்திகள் வந்திருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொண்டு படிகளில் ஏறிய வேளை, அவன் இதயத்தை இதமாக்கும் வகையில், தென்றல் காற்றோடு சேர்ந்து வந்தது அவளுக்கே உரித்தான இதமான வாசனை.

நிமிர்ந்து பார்க்க அங்கே முகம் முழுக்க பூரிப்போடு விழிகளில் மகிழ்ச்சி மின்ன, மலர்ந்து சிரித்தவாறு நின்றிருந்தாள் திகழ்வஞ்சி.

அவளைக் கண்டதுதான் தாமதம், அதுவரை இருந்த சலிப்பும் களைப்பும் மொத்தமாக விடை பெற்றுச் செல்ல, அங்கே, மலர்ச்சி வந்து உட்கார்ந்து கொண்டது.

தன்னை மறந்து உதடுகள் விரித்துச் சிரித்தவன்,

“ஹே… எப்படி இருக்கிறாய்?” கேட்க அந்த ஒற்றை விசாரிப்பில் ஊனும் உயிரும் உருகிப் போனாள் அவள்.

“ம்… குட்… நீங்கள்…?”

“ஐ ஆம் ஓக்கே… ஆரா எங்கே…”

“அவனுடைய அறையில் விளையாடிக்கொண்டு இருக்கிறான்… எடுத்து வரவா?” கேட்டவள் பரபரப்போடு திரும்ப, அந்த நேரம் பார்த்துத் தரையில் கொட்டியிருந்த தண்ணீர் அவளுடைய காலை வழுக்கிவிட, சமநிலை தவறி விழப் போனவளைக் கண்டு பதறியவனாகத் தன் கரத்திலிருந்த பெட்டியை ஒரு பக்கமாக எறிந்து விட்டு அவளை நோக்கிப் பாய்ந்து வர, இவளோ தன்னை நிலை நிறுத்த முயன்று தோற்றுப் பொனவளாகப் பாய்ந்து வந்தவனின் சட்டையை இறுகப் பற்றி இழுக்க, அதை எதிர்பாராதவனின் காலும் தடம் புரள, எவ்வளவுதான் முயன்றும் அவளையும் தன்னையும் நிலைநிறுத்த முடியாமல் தரையில் சரிந்தான் அபராசிதன்.

அவன் கீழும் அவள் மேலுமாக விழுந்த கிடந்தவர்களுக்கு சற்று நேரம் என்ன நடந்தது என்று எதுவும் புரியவில்லை. ஆனால் சரியாகத் துடைக்காது விட்ட கூந்தலில் இருந்து வடிந்த நீர்த் துளிகள் சரியாக அபராசிதனின் கன்னத்திலும் உதட்டிலும் பொட்டுப் பொட்டாய் விழுந்து வடிந்து செல்ல, ஈரத்தால் நனைந்திட்ட கூந்தலோ அவளுடைய அழகிய வதனத்தைத் திரையாய் மறைத்து அவன் முகத்திலும் படர்ந்து சதிராட, அந்தக் கற்றைக் கூந்தல் அவன் கன்னத்தை உரசி முத்தமிட்டதில் சிலிர்த்துப் போனவனாகத் தன் மேனியில் விழுந்து கிடந்தவளை ஒரு வித பரவசத்தொடு பார்க்க முயன்றான் அபராசிதன்.

இது என்ன நியாயம். உரியவன் பார்க்க விரும்பினால் அதற்கு அனுமதி கொடுப்பதற்கு என்ன கேடு வந்தது அந்த முடிக் கற்றைகளுக்கு? ஏன் அவள் முகத்தை மறைத்து அவனைப் பார்க்க விடாது தடுக்கின்றது? எரிச்சல் கொண்டவனாகத் தன் கரத்தைத் தூக்கி விரல்களால், தரிசனம் பெற விடாது தடுக்கும் ஈரமான அந்தக் கற்றைக் கூந்தலை ஒதுக்கி காதுகளுக்குள் செருகியவாறு அவளுடைய விழிகளைப் பார்க்க, அவளும் அவனைத்தான் விரிந்த விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இரும்பும் காந்தமும் பக்கம் பக்கமாக இருந்தால் என்னாகும் என்று சொல்லவும் வேண்டுமா? இதில் எது இரும்பு எது காந்தம்? யாருக்குத் தெரியும். ஆனாலும் நான்கு விழிகளும் ஒன்றை ஒன்றுக் கவ்விப் பிடித்து அணைத்து இருவிழிகளாகி ஒருவிழியாகி மயங்கிக் கிடந்த நேரம்தான் எத்தனையோ?

அந்த விழிகளுக்குள் மது அருந்திப் போதை கொண்டு மயங்கியவனாகச் சற்றுத் தன் விழிகளைக் கீழ் இறக்க, அந்தப் பட்டுக் கன்னத்தில் இருந்த ஈரத்தின் பளபளப்பு என்னையும் கொஞ்சம் கவனியேன் என்றது.

அதுவரை அவளுடைய செவிகளுக்குள் முடிக் கற்றையைச் சொருகியிருந்த அவனுடைய விரல்கள், தம் வசத்தைத் தொலைத்தனவாக மெதுவாக நகர்ந்து அந்த அழகிய செழித்த கன்னத்தில் ஒட்டிக் கிடந்த ஈரத்தைப் பெருவிரலால் துடைத்துவிட முயல,

அப்பப்பா…? இவை கன்னங்களா? இல்லை சீனதேசத்து மாசற்ற பட்டுத் துணியால் நெய் திட்ட பஞ்சணையா? இத்தனை மென்மையாக இருக்கிறதே…! ஏனோ அபராசிதனுக்கு அந்தக் கன்னத்தைக் கிள்ளிவிட ஆசை வந்தது.

அவனுடைய உடமை. மறுக்க யாருக்கு தைரியம் இருக்கிறது? ஆசை கொண்ட உடனே அவளுக்கு வலிக்காமல் பெருவிரலாலும் சுட்டுவிரலாலும், கொஞ்சமாய் அக்கன்னத்தைக் கிள்ளி விடுவிக்க, அதற்கே சிவந்து போயின அக்கன்னங்கள். வியந்தவனாகச் சிவந்து போன அக் கன்னத்தை மென்மையாக மேலும் கீழும் வருட, அவனுடைய விரல்களின் தீண்டலில் தேகம் எங்கும் தித்திக்க, விழிகளை மூடி இரசித்தாள் திகழ்வஞ்சி.

இது என்ன அதிசயம்? அவனுடைய விரல்கள் மாயாஜால வித்தை எதையாவது கற்று வைத்திருக்கிறதா என்ன? தொட்டதும் அவள் உயிரே உருகிப் போய்க் கிடக்கிதே. முக்காலமும் தொலைந்து புதிய காலம் ஒன்றில் பூவாய் மலர்ந்து நிற்கிறாளே. இது என்ன அதிசயம்?

அந்த ஆண்மையின் ஆலிங்கனத்தால், பெண்மை விழித்துக் கொள்ள, உடலின் மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்க, சொர்க்கத்தின் வாசற்படியில் அவள் கால் பதித்து உள்ளே நுழைய முயன்ற விநாடி, ஆராவின் அறையிலிருந்து பெரிய சத்தம் ஒன்று கேட்டது.

அதுவரை எங்கோ ஒரு உலகத்தில் சஞ்சரித்து இருந்த இருவரும் திடுக்கிட்டு சுயம் பெற்று ஒருவரை ஒருவர் பார்த்துப் பதறியடித்து விலக முயன்றனர்.

பதட்டத்தில் எப்போதுதான் ஒரு காரியம் சரியாகச் செய்யப்பட்டிருக்கிறது? திகழ்வஞ்சி எழுந்த வேகத்திலேயே மீண்டும் அவன் மீது தொப்பென்று விழ, அவள் விழுந்த வேகத்தில் மீண்டும் தன்னிலை இழந்தான் அபராசிதன்.

“சா… சாரி…” பதறியவளாகத் திரும்பவும் அவள் எழ முயன்றவளுக்கு அப்போதுதான் அபராசிதனின் ஒரு கரம் தன்னுடைய இடையை அழுத்தமாகச் சுற்றி வளைத்திருப்பது தெரிந்தது. இப்போது சங்கடத்துடன் அவன் முகம் பார்க்க, அவனோ அவளுடைய முகத்தைத்தான் இமைக்காது பார்த்திருந்தான்.

“அ… அபராசிதன்… உங்கள்… கை…” அவள் திக்கித் திணறியவாறு அவனுடைய கரத்தை விலக்க முயல, அவளுடைய அந்த அசைவில் சுயம் பெற்றான் அபராசிதன்.

அப்போதுதான் தன் தவறைப் புரிந்து கொண்டவனாக உடனே தன் கரத்தை விலக்கிக் கொள்ள, வேகமாக எழுந்த நின்றுகொண்டாள் திகழ்வஞ்சி. ஏனோ அவளுக்கு அவனை ஏறிட்டுப் பார்கவே முடியவில்லை. முகம் வேறு கண்டிச் சிவந்திருந்தது. அவனுக்கும்தான். ஆனாலும் தன்னை சமாளித்துக் கொண்டவனாக,

“யு… யு ஓகே…?” என்றான் மெல்லிய தயக்கத்தோடு.

“ம்… தாங்ஸ்…” என்றவள் ஆராவின் அறையை நோக்கிப் போக முயல, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தான் அபராசிதன்.

இவள் என்ன என்று பார்க்க,

“அவனை நான் போய்ப் பார்க்கிறேன். முதலில் தலையைத் துவட்டு. ஈரம் இன்னும் காயவில்லை.” என்றவன் உடனே ஆராவின் அறையை நோக்கி விரைந்தான்.

அங்கே ஆராவமுதன், தாய் போட்டுவிட்டுப் போன பேபிடோரின் மீது ஏற முயன்று தோற்று அதை இழுத்திருக்கிறான் போல. அது கழன்று விழுந்திருக்கிறது. அதுதான் அந்தச் சத்தம்.

வாயில் கரம் வைத்து அந்தக் கதவு எப்படி விழுந்தது என்கிற ஆராய்ச்சியிலிருந்த குழந்தை, யாரோ வருவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தது. அங்கே அபராசிதனைக் கண்டதும் கிறீச் என்கிற சத்தத்தோடு துள்ளிக் குதித்து அவனை நோக்கி வர முயல,

“ஹே படி… ஹவ் ஆர்யூ?” கேட்டவன் விழுந்திருந்த அந்தக் கதவை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு குழந்தையைத் தூக்கி மேலே போட்டுப் பிடித்து மார்போடு அணைத்து உச்சியில் முத்தமிட, குழந்தையோ அவனுடைய கழுத்தைக் கட்டி அவனுடைய தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கால்களை உதைத்துத் தன் மகிழ்ச்சியைச் சொல்ல, பின்னால் வந்து நின்று அந்தக் காட்சியைப் பார்த்த திகழ்வஞ்சிக்கு இதயம் நிறைந்து போனது.

அபராசிதனுடையதும், ஆராவமுதனுடையதுமான பிணைப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. சொல்லப்போனால், ஆரா மகிழ்ச்சிகரமான குழந்தைதான். ஆனால் சட்டென்று எல்லோரையும் நம்பிவிடமாட்டான். சுலபத்தில் யாருடைய கைகளுக்கும் போகமாட்டான். ஆனால் முதன் முறையாக அபராசிதனைக் கண்டதும், எந்த விதமான சிணுங்கலும் இன்றி, குதுகலமாகவே அவனிடம் சென்றிருந்தான். அது இவளுக்குமே பெரும் வியப்புதான். அன்றிலிருந்து இன்றுவரை, இருவரும் சேர்ந்திருக்கும் காட்சி மனதிற்குப் பெரும் நிறைவைக் கொடுக்கிறது. அவர்கள் இருவரின் பாசத்தையும் பார்க்கும் போது, அவள் எடுத்த முடிவு தப்பில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆசையோடு அவர்கள் இருவரையும் தள்ளி நின்று பார்த்து இரசித்திருக்க, அவனோ குழந்தையை அணைத்தவாறே திரும்பி திகழ்வஞ்சியைப் பார்த்தான். இன்னும் அவளுடைய முடியிலிருந்து ஈரம் சொட்டுவதைக் கண்டவன்,

“என்ன திரும்பவும் காய்ச்சலை வாங்கிக் கொள்ளும் ஆசையா உனக்கு? போ… போய் தலையைத் துவட்டு…?” அவன் உத்தரவாகச் சொல்ல,

“இதோ… போ… போகிறேன்…” என்றாள் இன்னும் அவனையே பார்த்தவாறு. பலநாள் தண்ணீர் கிடைக்காதிருந்தவளுக்கு இப்போது தண்ணீர் குளமே கைக்குக் கிடைத்தால் எப்படித் தான் விட்டுப் போவது?

ஏனோ அவனை விட்டுத் தள்ளிப் போகவே முடியவில்லை. அவனுடைய உடல் வாசனை அவளைப் போதை கொள்ளச் செய்ய, குட்டிபோட்ட பூனையாக அவனையே சுற்றிவரும் ஆசை வந்தது.

இன்னும் போகாமல் அங்கேயே நின்று இருந்தவளைக் கண்டு வியந்தவன்,

“என்ன? என்னிடம் ஏதாவது கேட்கவேண்டுமா?” அவன் கேட்ட பிறகுதான் அவனைத் தான் இன்னும் ஆவென்று பார்த்திருப்பதே புரிந்தது.

ஒரு விநாடி அசடு வழிந்தவள்,

“இல்லை… நீங்கள் ஏதாவது சாப்பிடுகிறீர்களா என்று கேட்கலாம் என்று…” அவள் திணற,

“விமானத்தில் சாப்பிட்டதே போதும் திகழ்… நீ சாப்பிட்டாயா…?” என்றான் அக்கறையாக.

“இ… இல்லை… இனித்தான்…” அவள் தயங்க, இப்போது அவளைக் கோபமாகப் பார்த்தான் அபராசிதன்.

“இன்னும் சாப்பிடாமல் என்ன செய்கிறாய்? போ… போய் சாப்பிடு. அதற்கு முதல் தலையைத் துவட்டு…” உத்தரவாகச் சொன்னவன், ஆராமுதனோடு விளையாடத் தொடங்க அந்தக் காட்சியைத் திரும்பவும் விழிகள் நிறைய அள்ளி எடுத்துப் பருகிக் கொண்டே தலை துவட்டச் சென்றாள் திகழ்வஞ்சி.

What’s your Reaction?
+1
53
+1
18
+1
4
+1
4
+1
0
+1
0

Related Post

4 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!- 35”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!