Wed. Jun 4th, 2025

தொலைந்த எனை மீட்க வா…!- 34

(34)

இதோ திருமண நாள் எதிர்பார்ப்பின்றியே விடிந்தது. ஆயிரம் முறையாக அவள் செய்வது சரியா தவறா என்று குழம்பிப் போயிருந்தவள் கடைசியாக காலம் விட்ட வழியே பயணிப்பது தான் புத்திசாலித்தனம் என்பதைப் புரிந்து கொண்டவளாக, இயந்திர பொம்மை போலத் தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.

அலங்காரம் என்றால் அரிதாரம் பூசியெல்லாம் இல்லை. அவள் இருந்த மனநிலைக்கு அது முடியவும் முடியாது. வாங்கிக் கொடுத்த பட்டுச் சேலையை அணிந்திருந்தாள். அவன் கொடுத்த நகைகளையும் போடவேண்டுமே என்பதற்காகப் போட்டிருந்தாள். அழுது சிவந்துபோயிருந்த விழிகளை மறைக்கக் கண்மை போட்டிருந்தாள். அவ்வளவே.

ஆனால் மனதோ படபடவென்று அடித்துக் கொண்டே இருந்தது. கூடவே பயத்தில் உடல் வேறு நடுங்கியது. ஏதோ ஒரு தைரியத்தில் அவனை மணக்க முடிவெடுத்திருந்தாலும், கடைசி நொடியில் ஒரு தவிப்பு இருக்குமல்லவா. அந்தத் தவிப்பில் சிக்கியிருந்தாள் திகழ்வஞ்சி.

திருமணத்தைப் பதிவு செய்பவர் வந்து விட்டதும், ஈஷ்வரி இவளை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.

எளிமையான அலங்காரத்தில் தேவலோகத்து அழகிகளைச் சவாலுக்கு அழைத்து நிற்கும் திகழ்வஞ்சியின் அழகைக் கண்டு ஒரு கணம் வியந்துதான் போனார் ஈஷ்வரி. கூடவே இந்த அழகுதானே அவருடைய தம்பியை மயக்கியது. இந்த அழகுதானே அவனைத் தப்பான வழியில் போக வைத்தது. இந்த அழகுதானே அவனுடைய மணவாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கியது. இப்போது இந்த அழகுதானே அவருடைய இளைய தம்பியையும் மயக்கிப் போட்டு வைக்கிறது. இல்லை என்றால், இவளைத் தப்பாக ஒரு வார்த்தை பேசினாலும், கோபமாகத் தடுக்கிறானே.

நெஞ்சம் முழுக்கக் கசப்பு வழிந்து செல்ல,

“வா…! திருமணமப் பதிவர் வந்துவிட்டார்.” என்றதும், நிமிர்ந்து ஈஷ்வரியைப் பார்த்தாள். அவர் முகத்திலிருந்த வெறுப்பைக் கண்டதும், என்ன நினைத்தாளோ,

“அம்மா…!” என்றாள். அவளுடைய அந்த அம்மாவில், ஒரு கணம் அதிர்ந்து போனார் ஈஷ்வரி. கூடவே அந்த அழைப்பில் வெறுப்பும் வர,

“என்னை அம்மா என்று சொல்லும் தகுதி உனக்கு இல்லை…! ஏதோ என் கணவரைக் காப்பாற்றியவள் என்பதற்காக, உன் மீது நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதை உனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளாதே.” வெறுப்பாகச் சொல்ல, வேதனையோடு தன் வலியை மென்று விழுங்கினாள் திகழ்வஞ்சி.

“உ…உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது. ஆனால் உங்களிடம் ஒன்று நான் சொல்லியே ஆகவேண்டும். இந்தத் திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஆராவுக்காகத்தான் உங்கள் தம்பியை மணம் முடிக்கச் சம்மதித்தேன்.” அவள் சொல்ல, நிமிர்ந்து அவளை வெறுப்போடு பார்த்தார் ஈஷ்வரி.

“நாங்களும் ஆராவுக்காகத்தான் உன்னை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தோம்.” என்றவர் என்ன நினைத்தாரோ, திரும்பி திகழ்வஞ்சியை அழுத்தமாகப் பார்த்தார்.

“இதோ பார்…! முன்னர் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இனி நீ அபராசிதனின் மனைவியாகப் போகிறாய். உன்னிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.” என்றவர் சட்டென்று தன் கரங்களை எடுத்துக் கூப்பியவாறு அவளைப் பார்க்கப் பதறிப்போனாள் திகழ்வஞ்சி.

“மாடம்… என்ன செய்கிறீர்கள்?” திக்கித் திணற,

“என் தம்பியின் மதிப்பு மரியாதையை எக்காலத்திலும் காற்றில் ஏற்றிவிடாதே. அவன் அமலன் போல அல்ல. வேறு இரகம்…! உன்னைக் கொன்று போடக் கூடத் தயங்கமாட்டான்.” என்றவர், அவசரமாக வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு,

“வா…! நேரம் போகிறது.” என்றுவிட்டு வெளியேற, இவளோ அடிபட்ட பாவனையோடு அப்படியே நின்றிருந்தாள். ஆனாலும் திரும்பப் பதிலுக்கு எதுவும் சொன்னாளில்லை. சொல்லவும் அவளால் முடியாது. பொங்க முயன்ற கண்ணீரைத் தனக்குள் அடக்கியவளாக, நெஞ்சம் நிறைந்த வலியோடு ஈஷ்வரியைப் பின் தொடர்ந்தாள் திகழ்வஞ்சி.

அதே நேரம் முன்னறை மேசையின் பக்கமாக இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அபராசிதன் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

பார்த்தவன் படிகளிலிருந்து இறங்கிவரும் திகழ்வஞ்சியைக் கண்டதும், ஒரு நிமிடம் மூச்செடுக்க மறந்து நின்றான் என்றால் அது மிகையில்லை. அத்தனை அழகாக இருந்தாள் அவள்.

யாராவது இவள் ஒரு குழந்தைக்குத் தாய் என்றால் நம்புவார்களா? பார்த்தால் அன்றலர்ந்த தாமரை போல அல்லவா இருக்கிறாள்…! எப்போதும் பகி பான்ட் ஷேர்ட்டில் பார்த்துப் பழக்கப்பட்டவனுக்கு, அவள் அணிந்திருந்த சேலையும், அந்தச் சேலை வெளிப்படுத்திய புற அழகும் அவனைத் திக்குமுக்காட வைத்தது. அதுவும் கோவில் சிற்பமாக, அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அவளுடைய தேன் உடல் கண்டு ஒரு கணம் தன்னை மறந்துதான் போனான் அபராசிதன்! இப்போதுதான் செடியிலிருந்து பறித்து வரப்பட்ட புத்தம்புதுப் பூவாக மிளிர்ந்தவளைக் கண்டு அவனால் தன் விழிகளை விலக்கவே முடியவில்லை.

இந்த அழகு…! இதைக்கண்டுதானே அமலனும் சலனப்பட்டான்…! தன் அண்ணனின் நினைவு வந்த அந்த நொடியே, அவள் மீதிருந்த அந்தப் பிரமிப்புக் காணாமல் போக, இப்போது அங்கே கசப்பு மண்டிக் கொண்டது.

அவள் படிகளில் இறங்கி வந்ததும், என்ன நினைத்தானோ எழுந்தவன் அவளை நோக்கிச் சென்று தன் கரத்தை நீட்ட, என்ன என்பது போலப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

அவனோ தன் கரத்தை விழிகளால் காட்ட, புரிந்து போனது திகழ்வஞ்சிக்கு.

“இல்லை… நானே வருகிறேன்…!” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவள் சொல்ல, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றிக் கொண்டான் அபராசிதன். இவள் அவனை வெறுமையாகப் பார்க்க, பற்றிய கரத்தை விடாது, அழைத்து வந்தவன் அங்கிருந்த இருக்கையில்  அமரவைத்துவிட்டுத் தானும் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, வந்திருந்த திருமணப் பதிவர், இருவரின் பெயரையும் கேட்க, அவரிடம் இவர்களின் பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் நீட்டப்பட்டன.

இருவரும் கொடுத்த சாட்சிப் பத்திரங்களை வைத்து, தன் வேலையைச் செவ்வணவே முடித்த திருமணப் பதிவர், கடைசியாக, மேசையிலிருந்த தாலியை எடுத்து அபராசிதனிடம் நீட்டி,

“தாலியைக் கட்டுங்கள்…” என்றதும், மறுக்காமல் வாங்கி அவளுடைய கழுத்தில் கட்ட, அனைவரும் மலர் தூவி ஆசிர்வதிக்க, தன் மகளின் திருமணத்தைக் கண்ணாரக் கண்ட விஜயராகவனுக்கோ அழுகை உடைப்பெடுத்துக் கொண்டு வந்தது.

மனதாரத் தன் மகளை வாழ்த்த, கன்னத்தில் விழுந்த கண்ணீரை அவர் மறந்து போனார். அதைக் கண்ட ஈஷ்வரிதான், பதறியவராக,

“ராகவ்…? என்னாச்சு…? எதற்கு அழுகிறீர்கள்?” பதட்டத்தோடு தன் சேலைத்தலைப்பால் அவருடைய கண்ணீரைத் துடைக்க, அப்போதுதான் அவருக்கும் தான் அழுவதே புரிந்தது.

“அது… அது ஒன்றுமில்லைமா… நம்முடைய அபரன் திருமணம் முடிப்பதைக் கண்டதும், மகிழ்ச்சி தாங்கவில்லை…” என்று கூற அவரை ஒரு மாதிரிப் பார்த்தார் ஈஷ்வரி.

“மகிழ்ச்சியா?” என்றார் வேதனையில்.

“நம் அமரனின் குழந்தைக்காக, இவனுடைய வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவிட்டோம்!” அவர் வெறுப்பும் வேதனையுமாகச் சொல்ல, ஈஷ்வரியைக் கோபமாகப் பார்த்தார் விஜயராகவன்.

“ஈஷ்…! என்ன நேரத்தில் என்ன யோசிக்கிறாய்? இங்கே நடப்பது திருமணம். வாழ்த்தாவிட்டாலும் வெறுக்காதே. அது நம் அபரனைத்தான் பாதிக்கும்…” கடிந்து சொல்ல, கண்கள் கலங்கினார் ஈஷ்வரி.

“என்னால் முடியவில்லையே..? நான் என்ன செய்யட்டும்?” என்றவரின் கண்களும் கலங்கின. ஒரு சகோதரியாய், வளர்த்த அன்னையாய் அவர் கசங்கி நிற்கத் தன் மனைவியின் தோள் தொட்டு அணைத்துக்கொண்டார் விஜயராகவன்.

எது எப்படியோ, அவருடைய மகளின் திருமணம் அவர் எதிர்பார்த்த மாதிரியே நடந்து முடிந்துவிட்டது. அது போதும். மகிழ்ந்தவர், பூரிப்போடு மணமக்களை ஆசிர்வதித்தார்.

திருமணப் பதிவர் சென்றதும், ஒரு சட்டத்தரணி உள்ளே வந்தார். வந்தவர், ஒரு சில விண்ணப்பப் படிவங்களை அவர்களிடம் நீட்ட, என்ன என்று திகழ்வஞ்சி அபராசிதனைப் பார்த்தாள்.

“இது ஆரா என்னுடைய சொந்தக் குழந்தையாகத் தத்தெடுப்பதற்கான விண்ணப்பப் படிவம். இதில் கையெழுத்துப் போடு…” அவன் சொல்ல, ஏனோ இவளுடைய கரங்கள் நடுங்கின. உமிழ் நீர் கூட்டி விழுங்கியவள், சற்றுத் தடுமாற,

“திகழ்… உன்னைத்தான்… கையெழுத்துப் போடு…!” அவன் சொல்ல, நடுங்கும் கரங்கள் கொண்டு திகழ்வஞ்சி என்று கையெழுத்திட்டாள் அவள்.

கடைசியாக, அனைத்து சம்பிரதாயங்களும் முடிய, சட்டத்தரணி விடைபெற்றுச் செல்ல, திகழ்வஞ்சியோ, மனம் முழுக்கப் பாரத்தோடு ஒரு ஓரமாக அமர்ந்து விட்டிருந்தாள்.

திருமணம் முடிந்த அன்று மாலையே தன்னோடு வேலை செய்யும் முக்கிய நட்புகளை மட்டும் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தான் அபராசிதன்.

யாருமே ஏன் இத்தனை எளிமையாகத் திருமணம் செய்தாய் என்று கேட்கவில்லை. ஆனால் மனதார வாழ்த்தினார்கள். அவனுக்கு அருகே நின்றிருந்தவளிடம், புன்னகை முகத்துடன் வாழ்த்துச் சொல்லி மலர்க்கொத்தைக் கொடுத்தார்கள்.

ஆராவமுதனைக் கண்டு வியப்புடன் அவனைத் தங்கள் கரத்தில் எடுத்துக்கொண்டவர்கள், அவன் முகத்தில் அபராசிதனின் சாயலைக் கண்டு வியந்து போனார்கள். அதை அவனிடத்தே கூறவும் தயங்கவில்லை.

அதைக் கேட்டு சிரித்தவன், தனக்குப் பக்கத்தில் நின்றிருந்தவளின் இடைபற்றித் தன்னோடு இழுத்து,

“பின்னே…! என் குழந்தை என் போலத்தான் இருக்கும்… இல்லையா டார்லிங்…” என்று அவன் இழுத்து அணைத்ததில் அதிர்ந்துபோய் நின்றிருந்த மனையாளிடம் கேட்க, அவளோ பதில் சொல்ல முடியாமல் திக்கித் திணறினாள்.

அதுவும் அவனுடைய விரல்கள் அவளுடைய இடையை அழுத்திக் குறிப்புக் கொடுக்க, சிரமப் பட்டுச் சிரிப்பை வரவழைத்தவள்,

“ஹீ… ஹீ…” என்று சிரித்துச் சமாளித்துவிட்டு அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்றாள். ஆனால் அவனோ பிடித்த பிடியை விடாது அவள் இடைபற்றியே நின்றிருக்க,

“எ… என்ன செய்கிறீர்கள். கரத்தை எடுங்கள்…” திணறினாள் அவள். அவனோ புன்னகை மாறாமலே அவளைப் பார்த்து,

“பின்னே… நாம் ஆசைப்பட்டு மணந்தவர்கள் என்று அவர்களுக்குக் காட்டவேண்டாமா?” என்றான் கிண்டலாக. மாற முயன்ற முகத்தை அவசரமாகத் திருப்பிக்கொண்டவள், யாரும் கவனிக்காத நேரம் சட்டென்று அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கீழே ஓடித்திரிந்த குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ள. இவனோ அதைக் கண்டு தன்னை மறந்து சிரித்தான்.

கடைசியாக அனைவரும் விடைபெற்றுச் சென்ற போது நேரம் இரவு பதினொரு மணியையும் கடந்துவிட்டிருந்தது.

எல்லோரும் சென்ற பின், திகழ்வஞ்சிக்குக் கால்கள் தந்தியடிக்கத் தொடங்கின. பயத்தில் உதடுகள் உலர்ந்தன. அடுத்து என்ன நடக்கும் என்கிற அச்சம் அவளைப் பிறாண்ட, கைகளைப் பிசைந்து கொண்டிருந்த நேரம், தன் அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் அபராசிதன்.

அவள் வெளியே நின்றிருக்கும் கோலம் கண்டு மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவன்,

“எத்தனை நேரமாக வெளியே நிற்பதாக உத்தேசம்…?” கேட்ட விதத்தில் மேலும் நடுக்கம் வந்தது அவளுக்கு.

“இ… இல்லை… நான் என் அறையில்…” அவள் முடிக்க முடியாமல் திணற, அவளைத் தலை சரித்துப் பார்த்தான் அவன்.

“நமக்கு இன்று திருமணம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்…!” அவன் சொன்ன விதத்தில் முகம் வெளிறி நின்றவள்,

“பிளீஸ்… கொஞ்ச அவகாசம் கொடுங்களேன்!” என்றாள் கெஞ்சலாக.

அதைக் கேட்டதும் கிண்டலாகச் சிரித்தவன்,

“எதற்கு?” என்றான்.

“இல்லை… நாம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு… மிகுதியை…” அவள் தடுமாற, அவளை ஒரு மாதிரிப் பார்த்தான் அபராசிதன்.

“நீ… அண்ணாவோடு…” அவன் எதையோ சொல்ல வர, அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை உடனே புரிந்து கொண்டவள், கடகட வென்று அவனுடைய அறைக்குள் நுழைந்து விட்டிருந்தாள் திகழ்வஞ்சி.

‘நீ அண்ணாவோடு உறவு கொள்ளும்போது அவனைப் புரிந்து தெரிந்துதான் உறவு கொண்டாயா என்று கேட்பான். பணத்துக்காகத்தானே அவனோடு இருந்தாய் என்று வெறுப்பை உமிழ்வான். இப்போது மட்டும் என்ன வந்தது என்று கேட்பான். அவன் கேட்டுவிடுவான்தான். ஆனால் அதைத் தாங்கும் சக்திதான் இவளிடம் இல்லையே.

அவள் விறைப்போடு நின்றிருக்க, உள்ளே வந்தவன், அவளுடைய அழகைத் தலை முதல் கால்வரை ஒவ்வொரு அங்குலமாக இரசித்தவாறு கடைசியில் அவளுடைய முகத்திற்கு வந்தடைந்தான். முகம் இறுக ஒரு வித தவிப்போடு நின்றிருந்தவளை வேடிக்கை பார்த்தான்.

“ஆடை மாற்றவில்லை?”

“மா… மாற்றவேண்டும்…!”

“சரி… ஆடையை மாற்றிக்கொண்டு வா…!” அவன் அனுமதி கொடுக்க, உடனே அந்த அறையை விட்டு வெளியே போக முயன்றாள் திகழ்வஞ்சி.

“எங்கே போகிறாய்?”

“ஆ.. ஆடை மாற்ற?”

“உன்னுடைய ஆடைகளை எல்லாம் என் அறைக்கு மாற்றச் சொல்லி கமலாவிடம் சொல்லி இருந்தேன். அதோ அந்தக் கபேர்டில் இருக்கும். எடுத்துக் கொள்…” என்றதும், இது எப்போது நடந்தது என்று குழம்பிப் போனாள் திகழ்வஞ்சி.

வரவேற்பு நடந்த நேரம் மாற்றப்பட்டிருக்கலாம். நடந்து சென்றவள், கபேர்டைத் திறக்க, அங்கே அவளுடைய ஆடைகளோடு வேறு புதிய ஆடைகளும் நிறைய அடுக்கப்பட்டிருந்தன.

அதைக் கண்டவளின் உதடுகள் ஏளனமாக வளைய, எப்போதும் அணியும் பகிபான்டும், குளிருக்குத் தோதாகத் தடித்த மேல் ஆடையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். திரும்பி வந்த போது, இப்போது மெல்லிய இடையும் பித்தம் கொள்ளச் செய்யும் தேக அழகையும் காணோம்.

தயக்கத்தோடு வந்தவளைக் கண்டு,

“அதற்குள் இரவாடை இருக்குமே.. அணிந்து கொள்ள வேண்டியதுதானே…”

“இல்லை… இதுவே எனக்குப் போதும்…” சொன்னவளை ஏறிட்டவன்,

“சரி… வந்து படு…” என்றான். அதைக் கேட்டதும் கலங்கிப்போனாள் திகழ்வஞ்சி. ஆனாலும் மறுக்கவில்லை. அவனுக்கு மறுபக்கமாக வந்து கட்டிலில் படுக்க, விளக்கை அணைத்தவன், திரும்பி திகழ்வஞ்சியைப் பார்த்து,

“தூங்கு…!” என்றுவிட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொள்ள, கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் திகழ்வஞ்சி.

இப்போது என்ன சொன்னான்? தூங்கு என்றா? அப்படி என்றால் அவள் நினைத்தது போல எதுவும் நடக்கப்போவதில்லையா? ஒரு பக்கம் நிம்மதியும், மறுபக்கம் சந்தேகமும் எழ சட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி.

அவனோ திரும்பி என்ன என்பது போலப் பார்க்க,

“நீ… நீங்கள்… என்னைத் தூ… தூங்கத்தானே சொன்னீர்கள்…?” என்றாள் சந்தேகமாக.. அதைக் கேட்டவன் எழுந்தமர்ந்து,

“ஏன்? வேண்டாமா…? அப்படி என்றால் இப்போதே உன்னை அணைக்கவா…?” என்று கேட்டவாறு அவளை நெருங்க முயல, சட்டென்று எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி.

“இ… இல்லை…! அப்படியில்லை…!” அவள் பதற, முதன் முறையாக எந்தவித ஏளனமும், கிண்டலும் இல்லாமல் சிரித்தான் அபராசிதன். பின் கட்டிலில் விழுந்தவன்,

“உன் காயம் முழுதாக ஆறும் வரைக்கும் உன்னைத் துன்புறுத்துவதாக இல்லை. குறைந்தது ஒரு மாதத்திற்கு உன்னைத் தொல்லை செய்ய மாட்டேன்… உறங்கு..” என்றவன் மறுபக்கம் திரும்பிப் படுக்கத் திகழ்வஞ்சியால் அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை.

எங்கே காய்ந்த மாடு கம்பிலே விழுந்த கதையாக, அறைக்குள் நுழைந்த உடனே அவள்மீது பாய்ந்துவிடுவானோ என்று பயந்திருந்தவளுக்கு, அப்படியல்லாமல், அவளுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விலகிப்படுத்தவனைக் கண்டு மேலும் அவன் மீது மதிப்பு வந்தது அவளுக்கு.

சொல்லப்போனால் அவன் தீ சொற்களைக் கக்கா விட்டால் மிகவும் நல்லவன்தான். அவளைப் பிடிக்கவில்லை என்றாலும் கூட, அவளுக்குச் செய்யவேண்டியதைக் குறைவின்றிச் செய்து கொண்டுதான் இருக்கிறான்.

இவனை மட்டும் நல்ல நிலையில் சந்தித்து இருந்தால், நிச்சயமாகத் தன் மனத்தை அவனிடம் பறிகொடுத்திருப்பாள்..’ இப்படி நினைத்தவள் திடுக்கிட்டுப் போனாள். உடலோ வியர்த்துக் கொட்டியது.

‘சீ… என்ன பைத்தியக்காரத் தனம்? என்ன முட்டாள் தனமான சிந்தனை…? நானாவது அவனை விரும்புவதாவது?’ மறுப்பாகத் தலையசைத்தாலும், அதையும் தாண்டி அவளுடைய மனது அவளைப் பார்த்து எள்ளி நகையாடியது. கூடவே அவனோடு இருந்த ஒவ்வொரு விநாடியையும் மனது எண்ணிப் பார்த்து அவளுடைய சிந்தனைக்குத் தூபம் போட்டது.

முதன் முறையாக அவனை அந்தக் கடையில் வைத்துப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அந்தக் கிறிஸ்டீனிடமிருந்து இவளைக் காத்தபோது அவளை அணைத்துக் கொண்டானே. அந்த நேரத்தில் அவனுடைய வெம்மையான தேகத்தில் முகம் புதைத்தாளே… அப்போது அவள் எத்தனை பாதுகாப்பாக உணர்ந்தாள். அவனுடைய வாசனை நாசியினூடாகச் சென்று இதயத்தில் நுழைந்த போது சிலிர்த்தாளே… அது ஏன்? இதோ இப்போது அவன் அருகே படுத்திருக்கிறான். கைக்கு எட்டிய தூரத்தில்தான் இருக்கிறான். ஆனால் எந்த விதமான வெறுப்பும் தோன்றவில்லை. அது ஏன்? குழம்பி நிற்க, அவள் உறங்காமல் எழுந்து நிற்பது அவனுக்குப் புரிந்து போகத் தலையை மட்டும் தூக்கி அவள் பக்கமாகப் பார்த்தான்.

“என்னாச்சு? தூக்கவில்லையா?” அவன் கேட்க,

“உ… உறக்கம் வரவில்லை…” என்றாள் தயக்கமாக.

“புதிய சூழ்நிலை… உன் மூளைக்கு அதிக வேலையைக் கொடுக்கும். அதனால்தான் உறக்கம் வர மறுக்கிறது. படுத்துக் கண்களை மூடி ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணு. தூக்கம் தானாக வந்துவிடும்…” சொல்லிவிட்டு இவளுக்கு முதுகுகாட்டி அவன் படுத்துக் கொள்ள. மறுக்காமல் படுக்கையில் சரிந்தவள், அவன் பக்கமாகத் திரும்பிப் படுத்தாள். அவனுடைய பரந்த விரிந்த முதுகு அவளுக்கு அரண் போலத் தோன்ற, அவனையே பார்த்தவாறு விழிகளை மூடி ஒன்றிலிருந்து நூறுவரை எண்ண ஆரம்பிக்க, அப்படியே உறங்கியும் போனாள்.

 

What’s your Reaction?
+1
49
+1
9
+1
6
+1
1
+1
2
+1
0

Related Post

4 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!- 34”
  1. அருமையான பதிவு 😍😍😍😍.கண்ணாலம் மூச்சிக்கிட்டானா!!!! ஜூப்பரு.
    மாட்டுனான் டா பம்பரக்கட்டை மண்டையன்😆😆😆😆😆😆 இத்தனை நாளு பேசுனியே பேச்சு அதுக்கெல்லாம் ரிட்டர்ன் வாங்கப் போறேடா😎😎😎😎.
    ராகவ் உங்களோட இறந்த கால உண்மையை ஈஸூகிட்ட சொல்லிடுங்க.

    1. என்னத்த சொல்றது. பயதில பம்மி கிட்டு இருப்பாரு. யாரு சிக்கினாலும் என்ற ஆளு சிக்காது தெரியுமல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!