(32)
மறு நாள் அவளை மருத்துவமனை அழைத்து வந்தான் அபராசிதன். நேராக அவளைத் தன் அறைக்கு அழைத்து வந்தவன்,
“ஷேர்ட்டைக் கழற்று திகழ்…” என்றவாறு கையுறை அணிந்தவாறு கத்தரிக்கோல் போன்ற ஒன்றைக் கரங்களில் எடுக்க. எதற்காக ஷேர்ட்டைக் கழற்றச் சொல்கிறான் என்று புரிந்து போனது திகழ்வஞ்சிக்கு. மறுக்காமல் அணிந்திருந்த ஷேர்ட்டின் பொத்தான்களைக் கழற்றியவளிடம்,
“படு…” என்றான்.
அவன் அறையில் கிடந்த மருத்துவக் கட்டிலில் படுக்க, அவளை நெருங்கியவன்,
“கொஞ்சம் அசவுகரியமாக இருக்கும்… பொறுத்துக்கொள்…” என்றவன், ஒவ்வொரு ஸ்டேப்பிளர்களாக இழுத்து எடுக்க, கொஞ்சம் வலித்தது திகழ்வஞ்சிக்கு. விழிகளை அழுந்த மூடி, வலியைப் பொறுத்திருக்க, அவள் ஒவ்வொரு முறையும் விழிகளை அழுந்த மூடித்திறக்க, இவன் வாய்கள் அவனையும் மீறி,
“சாரி…” என்று உதிர்த்துக்கொண்டே இருந்தன.
எட்டு ஸ்டேப்பிளர்கள். கழற்றி முடித்தவன், கூடவே காய்ந்திருந்த காயத்தினைச் சுத்தமாகத் தொற்று நீக்கியால் துடைத்துவிட்டு, விலகும் போதே, திறந்திருந்த அவளுடைய ஷேர்ட்டை இழுத்துச் சரியாகப் போட்டுவிட்டு,
“ஷேர்ட்டை சரியாகப் போடு…” என்றவன் தாதி ஒருவரை அழைக்க, உடனே வந்தார் அவர்.
அவரிடம் திகழ்வஞ்சியை ஒப்படைத்து, என்ன செய்யவேண்டும் என்று அறிவுறுத்தி விட்டு, அவனுக்காகக் காத்திருந்த நோயாளரைப் பார்க்கச் சென்றுவிட, திகழ்வஞ்சியைத் தன்னோடு அழைத்துச் சென்ற அந்தத் தாதி, அவளுடைய இரத்தம் முதல் சிறுநீரகம் வரை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டார்.
ஏன் திடீர் என்று இந்தப் பரிசோதனைகள்? வியந்து நின்றவளை மீண்டும், அழைத்து வந்து அபராசிதனின் அறைக்குள் விட்டுவிட்டுக் கையோடு எடுத்துக்கொண்ட இரத்தப்பரிசோதனை மாதிரிகளோடு மறுபக்கம் சென்றார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அபராசிதனின் அறையில் மொட்டு மொட்டென்று திகழ்வஞ்சி அமர்ந்திருக்க, அறையைத் திறந்துகொண்டு இன்னொரு தாதி உள்ளே வந்தார்.
வந்தவர் தன் கரத்திலிருந்த மருத்துவ அறிக்கையை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுச் செல்ல, பொழுது போகாமல் அமர்ந்திருந்தவள், அது என்ன அறிக்கை என்று எட்டிப் பார்த்தாள்.
அதில் அவளுடைய முதல் பெயர் எழுதப் பட்டிருப்பதைக் கண்டதும், புருவங்கள் சுருங்கியவள், அதை எடுத்துப் பார்த்தாள். எடுத்துப் பார்த்தவளின் முகம் அடுத்த கணமே ஆத்திரத்தில் சிவந்து போனது.
திகழ்வஞ்சிக்குத் தன் கண்களையே நம்பமுடிய வில்லை. அவள் சரியாகத்தான் பார்க்கிறாளா, இல்லை கற்பனையில் எதையாவது பார்த்துத் தொலைக்கிறாளா? அதிர்வுடன் மேலும் உற்றுப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
அவள் ஒன்றும் கற்பனை செய்யவில்லை. அவளுடைய அறிக்கைதான். அதுவும், அவளுக்கு ஏதாவது பால்வினை நோய் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து, அப்படியில்லை என்று வந்திருந்த அறிக்கை. அப்படியென்றால், சற்று முன் எடுத்த இரத்தப்பரிசோதனையும், சிறுநீரகப் பரிசோதனையும், அவளுக்குப் பாலியல் தொற்று நோய் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய எடுக்கப்பட்ட பரிசோதனையா?
திகழ்வஞ்சிக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது. யாரைக்கேட்டு இந்தப் பரிசோதனைகளை எடுத்தான்? உள்ளம் எரிமலையாகி வெடிக்கும் போதே உள்ளே வந்தான் அபராசிதன். அவன் கதவைத் திறந்து வருவதைக் கண்டதும், திகழ்வஞ்சி கடும் சீற்றத்துடன் அவனைப் பார்க்க, அவனோ, எதுவும் நடக்காதது போல உள்ளே வந்து தன் மேசையில் எதையோ தேடினான்.
“இங்கே யாராவது ஏதாவது மருத்துவ அறிக்கையைக் கொண்டுவந்து வைத்தார்களா?” அவன் கேட்க, இவளோ கொதி நிலையில் அவனை வெறித்துப் பார்த்தாள்.
“உன்னைத்தான் கேட்கிறேன் திகழ்… ஏதாவது அறிக்கை வந்ததா?” மீண்டும் கேட்க, தன் கரத்திலிருந்த அந்த அறிக்கையைத் தூக்கிக் காட்டினாள் திகழ்வஞ்சி. முகமோ அதீத கோபத்தில் சிவந்து போயிருக்க,
“என்ன இது?” என்றாள் அடக்கி வைத்த சினத்தோடு. ஆனால் அவளுடைய கோபம் அவனைத் தாக்கியதாகவே தெரியவில்லை. மாறாக அவளை நெருங்கியவன்,
“என்ன என்று தெரிந்தும் இந்தக் கேள்வி அவசியமற்றது…” அலட்சியமாகச் சொல்லி விட்டு அவளுடைய கரத்திலிருந்த அந்த அறிக்கையை வாங்கி மேலோட்டமாகப் பார்க்க, இவளுக்குக் கோபத்தில் உடலே நடுங்கியது.
“யாரைக் கேட்டு இந்தப் பரிசோதனையை எடுத்தீர்கள்…” சீற்றமாக அவள் கேட்க, அவனோ அந்த அறிக்கையைப் படித்துவிட்டுத் திருப்தி கொண்டவனாக அதைத் தூக்கி ஓரமாகப் போட்டவன், இப்போது அவளை நேராகப் பார்த்தான்.
“எதற்காக இத்தனை கோபம் உனக்கு? நாம் இருவரும் திருமணம் செய்வதாக முடிவெடுத்த பின், இந்தப் பரிசோதனை செய்வது உனக்கு மட்டுமில்லை, எனக்கும் நல்லது. நீ என் அண்ணாவோடு மட்டும்தான் உடலைப் பகிர்ந்து கொண்டாய் என்று என்ன நிச்சயம். அதனால்தான் ஒரு பாதுகாப்புக்கு இந்தப் பரிசோதனையைச் செய்தேன்…” அவன் சொல்ல திகழ்வஞ்சிக்கு எப்படி அதை உணர்வது என்றுகூடத் தெரியவில்லை.
ஏமாற்றம், வேதனை, வலி, கோபம், தவிப்பு என்று பல்வேறு பட்ட உணர்வில் தவித்தவள்,
“இதையே நானும் சந்தேகப் படலாம் இல்லையா?” கேட்டவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்தான் அபராசிதன்.
“ஜனிபருக்கு பிறகு நான் எந்தப் பெண்ணையும் தொட்டதில்லை… தவிர நான் அடிக்கடி இரத்த தானம் செய்வேன். அதனால்… எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை உறுதியாகவே சொல்ல முடியும்.” என்றவாறு அவளைக் கிண்டலுடன் பார்க்க, வலியோடு அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“நான் திருமணம் முடிப்பது ஆராவுக்காகத் தானே தவிர உங்களோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அல்ல…” சொன்னவளை அழுத்தமாகப் பார்த்தான் அபராசிதன்.
“எதற்காக இத்தனை உணர்ச்சிவசப் படுகிறாய்? இந்தப் பரிசோதனை இருவரின் பாதுகாப்பிற்காகவும் தான்… அவசியமான பரிசோதனையும் கூட… இப்போது பார், உன் மீது எனக்கு ஒரு தெளிவு வந்துவிட்டது. நாளைக்கு உன்னைத் தொடும் போது மனது உறுத்தாது பார்…” சொன்னவனை வெறுப்போடு பார்த்தவள்,
“இதனால் என்னை நீங்கள் அவமானப் படுத்தியிருக்கிறீர்கள் என்று புரிகிறதா இல்லையா?” கேட்கும் போதே அவளுடைய குரல் தழுதழுக்க அவனோ பொறுமையிழந்த மூச்சோடு அவளைப் பார்த்தான்.
“இதில் உன்னை அவமானப்படுத்த என்ன இருக்கிறது? ஒருத்தர் அவமானப் படுவதும், அவமானப் படாமல் இருப்பதும் அவர் அவர் செயலில் இருக்கிறது. நீ ஒன்றும் உத்தமி இல்லையே, உன்னை நம்புவதற்கு… அப்படியிருக்கிறபோது, நீ ஆரோக்கியமாகத்தான் இருக்கிறாய் என்பதை எப்படிக் கண்டுகொள்வது?…”
“ஒரு வேளை எனக்கு ஏதாவது பிரச்சனை இருந்திருந்தால் என்ன செய்வீர்கள்? இந்தத் திருமணத்தை நிறுத்திவிடுவீர்களா?”
“உனக்கு நோய் இருப்பதற்கும் திருமணத்தை நிறுத்துவதற்கும் என்ன சம்பந்தம்? திருமணம் ஆராவுக்காக. நாம் ஒன்றாக இருக்க முடிவு செய்தது நம் மகிழ்ச்சிக்காக. ஒரு வேளை உனக்கு ஏதாவது நோய் இருந்தால், உடனேயே உன்னைச் சிகிச்சைக்கு உட்படுத்தியிருப்பேன். உறவு கொள்ளும்போது அதற்கான பாதுகாப்போடு செய்வேன்… தட்ஸ் ஆல்…” சொன்னவனை வெறுப்போடு பார்த்தாள் திகழ்வஞ்சி.
இப்போது கூட அவள் இடத்தில் நின்று பார்க்கிறானில்லையே… வேதனை அரித்தாலும், திகழ்வஞ்சி செய்த காரியம் ஒன்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்லவே நம்புவதற்கு.
அவளுக்கு மட்டும் சக்தியிருந்தால், அந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு ஆராவோடு எங்காவது கண்காணாத இடத்திற்கே ஓடிவிடுவாள். ஆனால்… அவளுடைய நிலை அவளுடைய கரங்களையும் வாயையும் அல்லவா கட்டிப் போட்டு விட்டது. அவளால் இனி எதுவும் பேச முடியாது. பேசவும் கூடாது. பேசினால் ஆபத்து அவளுக்கு மட்டும்தான்.
நிதர்சனம் புரிய, எந்த பதிலும் சொல்ல முடியாதவளாக, எதுவும் பேசாமல், அல்லது பேசத் தோன்றாமல் முகம் கசங்க நின்றிருந்தாள் திகழ்வஞ்சி.
“எத்தனை நேரமாக இப்படியே இருப்பதாக உத்தேசம்…?” கேட்க, வலி மாறாமல் அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“ஒவ்வொரு முறையும் நீங்கள் என்னை வலிக்கச் செய்கிற போது, மனது நொறுங்கிப் போகிறது அபராசிதன்! உங்களை விட்டு, நீங்கள் இருக்கும் திசைவிட்டுத் தொலைதூரம் ஓடிப்போக மனது எண்ணுகிறது…” என்றாள் கசந்து வழிந்த குரலில். அவளுடைய அந்த நிலை அவனைப் பாதித்ததாகவே தெரியவில்லை. மாறாகத் தன் தோள்களைக் குலுக்கியவன்,
“அது உன் கையில் இல்லை திகழ்வஞ்சி…” என்றவன்,
“சரி… கிளம்பு…” என்றான். இவளோ புரியாமல் பார்த்து,
“எ… எங்கே…?”
“அக்கா வீட்டிற்கு… அவர்களிடம் இன்னும் நாம் திருமணம் செய்யப்போவதைச் சொல்லவில்லை…” சொன்னவன் முன்னேறிச் செல்ல, இவளோ ஒரு விநாடி தயங்கி நின்றாள்.
ஈஷ்வரிக்குத்தான் அவளைப் பிடிக்காதே. விஜயராகவனைக் காப்பாற்றியதற்காக நன்றி எல்லாம் சொன்னார்தான். ஆனால், இவளை மனதார மன்னித்து ஏற்றுக்கொள்வாரா என்று கேட்டால் பதில் கேள்விக்குறி தானே? ஆனாலும் போகாமல் இருக்க முடியாதே.
பலியாடு போல வேறு வழியில்லாதவளாக, அபராசிதனைப் பின் தொடர்ந்தாள் திகழ்வஞ்சி.
(33)
ஆனால் அவள் நினைத்தது போல முகத்தை எல்லாம் திருப்பிக்கொள்ளவில்லை ஈஷ்வரி. அதற்காக மனம் விட்டுப் பேசினார் என்றுமில்லை. தன் கணவரைக் காப்பாற்றியவள் என்கிற நன்றியோடு வந்தவளை வா என்றார்.
வெள்ளிக்கிழமை திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அபராசிதன் சொல்லக் கோபப்பட்டார் ஈஷ்வரி.
“டேய் என்னடா சொல்கிறாய்..?. இது என்ன சுள்ளி பொறுக்கும் வேலையா? நினைத்த நேரத்தில் செய்வதற்கு. திருமணம்டா…! அதற்கு நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டாமா…” கேட்கப் பொறுமையிழந்து சகோதரியைப் பார்த்தான் அபராசிதன்.
“நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து நடக்கிற திருமணங்களில் மட்டும் அத்தனை பேரும் சந்தோஷமாகவா இருக்கிறார்கள்? அமலனுக்கும் நல்லநாள் பார்த்துத்தானே திருமணம் செய்து வைத்தீர்கள்? அவன் தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போடவில்லையா?” எரிச்சலுடன் சொல்ல, திகழ்வஞ்சியோ எதுவும் சொல்லாமல் எங்கோ பார்த்தவாறு இருந்தாள்.
“அது சரிடா…! திருமணத்திற்கு இடம் பார்க்கவேண்டுமே. குறைந்தது மண்டபம் பிடிக்க வேண்டாமா?”
“அக்கா பிளீஸ்…! என் திருமணம் மிக எளிமையாகத்தான் நடக்கப் போகிறது. வீட்டில் வைத்து சட்டப்படி பதிவுத் திருமணம். கூடவே அராவை என் பிள்ளையாகத் தத்தெடுக்கும் வேலை. அதோடு முடிந்தது. அது மட்டுமில்லை, திருமணத்திற்கு யாரும் வேண்டாம். நாங்கள் மட்டும் போதும்…” அவன் முடிவாகச் சொல்ல, மறுத்தார் ஈஷ்வரி.
“அபரா…! தாலி கட்டாமல் ஒரு திருமணமா? அதற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்…” கோபமாக மறுக்க, எரிச்சலுடன் தன் சகோதரியைப் பார்த்தான் அபராசிதன்.
“இந்தத் தாலி சென்டிமென்டை எல்லாம் எப்போது விட்டுத் தொலைக்கப் போகிறீர்கள். அதுதான் சட்டப்படி திருமணம் செய்கிறேனே. இது போதாதா?” என்றவனைக் கோபமாகப் பார்த்தார் ஈஷ்வரி.
“அது உனக்கு முக்கியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு மிக முக்கியம். தாலி கட்டாமல் அதைத் திருமணம் என்று என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது..” மறுக்க, பெருமூச்சொன்றை விட்டவன்,
“சரி… அன்றைக்கே தாலியைக் கட்டித் தொலைக்கிறேன் போதுமா?” என்றான் பொறுமை இழந்து. உடனே முகம் மலர்ந்த ஈஷ்வரி,
“அப்படியே உறவினர்கள் கொஞ்சப்பேரை அழைப்போமா தம்பி..?” ஆசையாகக் கேட்க, உடனே மறுத்தான் அபராசிதன்.
“அக்கா… சொந்த பந்தங்கள் என்று வந்தால், ஆயிரம் தேவையில்லாத பேச்சுக்கள் எழும். ஆராவின் பிறப்பில் சந்தேகம் வரும்..” என்றவன் திகழ்வஞ்சியைக் காட்டி,
“இதோ இவள் யார் என்று அறிய அடி முதல் அந்தம் வரை குடைந்தெடுப்பார்கள். ஆரா என் குழந்தையா என்று சந்தேகப்படுவார்கள். தேவையில்லாமல் அண்ணனின் இறப்பு, அவன் மனைவியை விட்டுப் பிரிந்தது என்று வம்புப் பேச்சுக்கள் எழும். இது எதுவும் வேண்டாம்…” அவன் முடிவாகச் சொல்ல, விஜயராகவனும் அதை உடனே ஆமோதித்தார்.
“எனக்கும் அபரன் சொல்வதுதான் சரி என்று படுகிறது ஈஷ்…! உறவுகளுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளலாம். வீண் பேச்சினால் தேவையில்லாத குழப்பங்கள்தான் வரும்..” அவரும் சொல்ல, கணவன் சொன்னதற்காகத் தலையை ஆட்டியவர்,
“சரிடா…! திருமணத்திற்குப் புதுச் சேலை தாலி எதுவும் எடுக்கவில்லையே…?”
“வீட்டிற்குப் போகும்போதே தேவையானதை வாங்கிக்கொண்டு போகிறோம்…” என்றதும் தம்பியைக் கோபமாக முறைத்தார் ஈஷ்வரி.
“இருடா…! நானும் வருகிறேன். தாலி பற்றி உனக்கு என்ன தெரியும்?” கடிந்தவர் திரும்பி விஜயராகவனைப் பார்த்தார்.
“ராகவ்…! ஒரு மணி நேரம் தனியாக இருப்பீர்கள்தானே…?” என்றார் கவலையுடன்.
“ப்ச்.. திகழ்வஞ்சி நம் மகள் போல ஈஷ்… நீ போய்விட்டு வா… நான் பத்திரமாக இருக்கிறேன்…” அவர் சொன்னாலும் ஈஷ்வரியின் முகம் தெளிய வில்லை.
அவருடைய கைக்கு எட்டும் வகையில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தார். இல்லை என்றதும் ஒரு போத்தல் தண்ணீரை நிரப்பி வந்து அவருக்கு மிக அருகே வைத்தார். ஓடிப்போய் விஜயராகவன் விரும்பிப் படிக்கும் புத்தகத்தையும், கண்ணாடியையும் எடுத்துவந்து கட்டிலில் வைத்தார். வேறு என்ன அவருக்குத் தேவை என்பதை நோட்டமிட்டு திருப்தி கொண்டவராக,
“நீங்கள் சமாளிப்பீர்கள்தானே.? ஒரே ஒரு மணி நேரம்தான். நான் வந்துவிடுவேன்…” கலங்கியவாறு கேட்க,
“ஈஷ்… நான் என்ன குழந்தையா. நீ போய்விட்டு வாமா…” என்று அவர் அனுப்பி வைக்கவும்தான் ஈஷ்வரி புறப்பட்டார். இந்தக் காட்சியைக் கண்ட திகழ்வஞ்சியின் முகத்தில் பெரும் ஆச்சரியம்..
ஈஷ்வரியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர் விஜயராகவனின் மீது வைத்த அப்பழுக்கற்ற காதல்தான் தெரிந்தது. என்னதான் முயன்றும் அந்த இடத்தில் தாயை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. கடைசிவரை மஞ்சுளா மகிழ்ச்சியாகவே இருக்கவில்லையே. தந்தையோடு வாழ்ந்த காலத்திலும் சரி, பிரிந்த பின்னும் சரி அவரும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் மகிழ்ச்சியாக இருக்கவிட வில்லை. கடைசியாக அவர் எதைச் சாதித்தார் என்று கேட்டால் சத்தியமாக எதுவுமே இல்லை. வாழ்க்கைதான் எத்தனை குறுகியது. அதை ஏன் வேதனை நிறைந்ததாக மாற்ற வேண்டும்? புரியவில்லை அவளுக்கு.
“புறப்படலாமா?” என்கிற சத்தம் பின்னாலிருந்து வரத் திரும்பிப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
அபராசிதன்தான். மிக நெருக்கத்தில் அவள் பின்னால் நின்றிருந்தான். சொல்லப்போனால் அவனுடைய தேகச் சூட்டை அவள் உணரும் நெருக்கத்தில் நின்றிருக்க, அந்தச் சூடு இவளைத் திக்குமுக்காட வைக்க, அதன் தகிப்பு தாங்க முடியாமல் விலக முயன்றவளின் தோளில் கரத்தைப் பதித்துத் தடுத்தவன்,
“இப்போது எதற்குப் பதறி விலகிச் செல்கிறாய்? நாம் இருவரும் திருமணம் முடிக்கப் போகிறோம். அதுவும் நாளை மறுநாள். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கிடைத்திருக்கும் அவகாசம் இன்றும் நாளையும்தான். அதனால் முடிந்தவரை நெருங்கியே வா…!” கடிந்தவன், தன் கரத்தை விலக்காமல் அவளை இழுத்துச் செல்ல, ஈஷ்வரியோ தன் தம்பியையும் திகழ்வஞ்சியையும் ஒரு மாதிரிப் பார்த்தார்.
இன்னும் அவரால், திகழ்வஞ்சியை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆராவின் எதிர்காலம் ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டதால்தான், எதுவும் பேசமுடியாமல் நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
வாகனத் தரிப்பிடம் வந்ததும்,
“தம்பி…! நீங்கள் இருவரும் முன்னால் செல்லுங்கள். நான் என் காரில் வருகிறேன். வேலை முடிந்ததும் என் பாட்டில் வீட்டுக்கு வந்துவிடலாம்…” சொன்னவர், கார் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட, அபராசிதனும் சரி என்றுவிட்டு திகழ்வஞ்சியைத் தன்னோடு அழைத்துச் சென்றான்.
மூவரும் புகழ் பெற்ற ஒரு நகைக்கடைக்குள் நுழைந்தார்கள்.
ஈஷ்வரிதான், அவர்களுக்கு ஏற்ற தாலியைத் தேர்வு செய்தார். சாதகப் பொருத்தம் பார்க்க வில்லை. நாள் நட்சத்திரம் பார்க்கவில்லை. அதனால் குற்றம் பொறுக்கும் தாலியாக அம்மன் தாலியைக் கேட்க அவர்களின் நல்ல காலம் தாலிக்கொடியோடு சேர்ந்து அம்மன் தாலி கோர்க்கப்பட்ட நிலையில் கிடைத்தது. அதுவே நல்ல சகுனமாகத் தெரிந்தது ஈஷ்வரிக்கு. ஆனால் அது சற்றுக் கனமான தாலிக்கொடியாக இருக்க, அபராசிதனை நெருங்கினாள் திகழ்வஞ்சி. அவனோ திகழ்வஞ்சிக்காக வேறு சில நகைகளையும் பார்த்துக் கொண்டிருக்க, மென் தேகம் ஒன்று தன்னை நெருங்குவது அறிந்து திரும்பிப் பார்த்தான்.
அவள் முகத்தை வைத்தே, அவள் எதையோ கூறவருகிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன்,
“என்ன?” என்றவாறு கடைக்காரர் எடுத்து வைத்த காப்பு அடங்கிய தட்டிலிருந்து ஒரு சில காப்புகளைப் பார்த்தவாறு அவன் கேட்க,
“இல்லை… உங்கள் அக்கா… தாலி எடுக்கிறார்கள்…”
“ம்… அதற்காகத்தானே அவர்கள் வந்து இருக்கிறார்கள்…”
“அதில்லை… அது அதிகக் கனமாக இருக்கும் போலவே…”
‘அதனால் என்ன…?” என்றவன் அதில் ஒரு சோடிக் காப்பைத் தேர்ந்தெடுத்து அவள் பக்கமாகத் திரும்ப,
“இல்லை அபராசிதன்… எனக்குக் கனமானதாக எதுவும் வேண்டாம்…” அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளுடைய கரத்தைப் பற்றித் தூக்க, அவளோ தான் பேசுவதில் கவனமாக இருந்தவாறே,
“கனமானதாக வேண்டாம் என்று உங்கள் அக்காவிடம் சொல்லிவிடுகிறீர்களா. எளிமையாக ஒரு சங்கிலியாக இருந்தாலும் எனக்குச் சம்மதம் தான்…” அவள் முடிக்க முதல், அவளுடைய கரங்களில் ஒரு சோடி தங்க வளையல்கள் வந்து விழுந்தன.
அப்போதுதான் அவளுக்கு அவன் காப்புப் போட்டதே உறைத்தது. பதறியவள் அவன் இன்னும் ஒரு சோடிக் காப்பைப் போட முயல்வதைக் கண்டு, மறு கரத்தால் அவனுடைய கரத்தைப் பற்றித் தடுத்து,
“என்ன செய்கிறீர்கள் அபராசிதன்…” என்றாள் குழப்பமாக.
“பார்த்தால் தெரியவில்லை…? உன் கை வெறுமையாக இருக்கிறது… அதுதான் போட்டுப் பார்த்தேன்… அளவாக இருப்பதால் இன்னும் இரண்டு சோடி வாங்கிக் கொள்ளலாம்…” அவன் சொல்ல உடனே மறுத்தாள் திகழ்வஞ்சி.
“நோ..! பிளீஸ்…! கையை விடுங்கள். எனக்கு இது எதுவும் வேண்டாம். ஆசையும் இல்லை. ஏற்கெனவே உங்கள் அக்கா கனமானதாக எடுக்கிறார்களே என்று உங்களிடம் சொல்ல வந்தால், நீங்கள் வேறு…! பிளீஸ்…” என்றவள் அவன் போட்ட காப்பை கழற்றுவதற்காக அவன் பிடியிலிருந்த கரத்தை இழுக்க முயல, அவனோ பலமாக அக் கரத்தைப் பற்றிக் கொண்டான்.
விழிகளோ கூர்மையாக அவளை அளவிட்டன. தலை சரித்து அவனைப் பார்த்தவன்,
“ரியலி?” என்றான் கிண்டலாக.
“என் அண்ணா வாங்கிக் கொடுத்த போது மட்டும் பல்லை இளித்துக் கொண்டு வாங்கினாயே. பல ஆயிரம் பெறுமானமுள்ள நகைகளை அவனிடமிருந்து வாங்கியிருக்கிறாய். இப்போது நான் வாங்கித் தருகிறேன். வேண்டாம் என்று மறுக்கிறாயே? ஏன் என் அண்ணா வாங்கிக் கொடுத்தால் மட்டும்தான் நீ வாங்கிக் கொள்வாயா?” அவன் கேட்க, அசைவற்று நின்றாள் திகழ்வஞ்சி. அவளையும் மீறிச் சட்டென்று விழிகள் கலங்கிப் போயின. அப்படியிருந்தும் கோபத்தோடு அவனை முறைத்தவள், விருக்கென்று தன் கரத்தை இழுத்துக் கொண்டாள்.
எத்தனை சுலபமாக மனத்தைக் கிழித்துக் கூறுபோடுகிறான். நெஞ்சம் கசங்கிப் போக,
“உங்கள் அண்ணா கொடுத்த பணத்தில் வாங்கிய நகைகளே இந்த ஜென்மத்திற்குப் போதும்… இதற்கு மேலும் வேண்டாம்…” வெறுப்புடன் சொன்னவள், அவசரமாக அவன் போட்டுவிட்ட காப்பைக் கழற்றி அவன் கையிலேயே திணித்துவிட்டு, அதற்கு மேல் அவன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காதவளாக, முகம் இறுகக் கடைக்கு வெளியே சென்றுவிட, அதைக் கண்ட ஈஷ்வரி, தன் தம்பியின் அருகே வந்தார்.
“என்னாச்சு. ஏன் வஞ்சி கோபமாக வெளியே செல்கிறாள்?” கேட்க, அதுவரை புருவங்கள் சுருங்க வெளியே சென்றிருந்தவளையே இமைக்காது பார்த்திருந்தவன், பின் திரும்பித் தன் சசோதரியை ஏறிட்டு,
“அவளுக்குப் பெரிய நகைகள் எதுவும் வெண்டாமாம். எளிமையாக எடுக்கச் சொல்கிறாள்.” அவன் சொல்ல வியந்தார் ஈஷ்வரி.
“எளிமையானதாக எடுக்கச் சொன்னாளா? இவளா? ஆனால் எப்படி? எங்களைப் பார்த்தால் அவளுக்கு முட்டாளாகத் தெரிகிறதாமா?” தன்னை மறந்து கோபத்தில் கேட்க, உடனே முகம் இறுகினான் அபராசிதன்.
“அக்கா… பிளீஸ்…!” அவன் அழுத்தமாகச் சொல்ல, முகத்தை நொடிந்தார் ஈஷ்வரி.
‘அப்படி என்ன மாயம் மந்திரத்தைக் கற்று வைத்திருக்கிறாளோ. சுலபமாகவே ஆண்களை வளைத்துப் போட்டு விடுகிறாள்…’ என்று மனதிற்குள் எண்ணாமல் இருக்க முடியவில்லை ஈஷ்வரியால்.
கடைசியாக அவர்கள் இருவருமே அவளுக்கு வேண்டிய நகைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். ஈஷ்வரி நகைகள் பத்திரம் என்று எச்சரித்துவிட்டுத் தன் வீட்டுக்குக் கிளம்ப, அபராசிதன் திகழ்வஞ்சியையும் அழைத்துக் கொண்டு தன் காருக்கு வந்தான்.
அவள் அமர்வதற்காக முன் கதவைத் திறந்து நிற்க அமைதியாகவே ஏறி அமர்ந்தாள் திகழ்வஞ்சி. அவளுடைய அமைதியை அவன் கருத்தில் எடுக்கவேயில்லை.
இருவரும் திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் கூட எதுவும் பேசாமல் வந்தவளைக் கண்டு,
“அமலன் வாங்கிக் கொடுத்த நகைகளை என்ன செய்தாய்?” என்றான் வீதியில் கவனமாக இருந்தவாறு.
அவளோ பதில் சொல்லாமல் மேலும் அமைதி காக்க,
“உன்னைத்தான் கேட்கிறேன். அந்த நகைகளுக்கு என்னாச்சு…?”
“விற்று அதிலிருந்து வந்த பணத்தில் குடியும் கூத்துமாக இருந்து விட்டேன் போதுமா…” என்றள் இறுக்கமான குரலில்.
“நினைத்தேன்…!” ஏளனமாகச் சொன்னவன், வண்டியைக் கிளப்ப, இவளோ மனதில் சூறாவளியாகச் சுழன்றடிக்கும் வலியையும், வேதனையையும் எவரிடமும் கொட்ட முடியாமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.
Wow awesome
Thank you so much
பாவம் வஞ்சி
லைட்டா பாவம் தான். என்ன பண்ணுறது