(29)
விஜயராகவனின் அறையை நெருங்கியதும், மெதுவாகக் கதவைத் தட்டிப் பார்த்தாள் திகழ்வஞ்சி. பதில் எதுவும் வராது போக, கதவைத் திறந்து உள்ளே வர, அங்கும் இங்குமாக ஒரு சில வயர்கள் பூட்டப்பட்டு, வெளிறிய முகத்துடன் படுத்திருந்தார் விஜயராகவன். அதைக் கண்டதும் அவளுடைய விழிகளில் சட்டென்று குளம் கட்டியது.
இதைத்தான் இரத்த பந்தம் என்பார்களோ. என்னதான் அவர் மீது தீராத வெறுப்பு இருந்தாலும், அவர் கிடந்த அந்த நிலையைக் கண்டவளுக்கு நெஞ்சம் பதைபதைத்தது மட்டும் உண்மை.
தன்னை மறந்து,
“அப்பா…!” தன் குரலே அவருக்கு வலிக்கச் செய்யுமோ என்பது போல மென்மையாக அழைக்க, அவளுடைய அந்த மென் குரல் அவரின் காதிற்கு எட்டிய மாத்திரத்திலேயே, மெதுவாக விழிகளைத் திறந்தார் விஜயராகவன்.
அங்கே நின்றிருந்தவளைக் கண்டதும், முதலில் குழம்பியவர், பின் நம்பமுடியாதவராக விழிகளை விரித்து மகிழ்ச்சியோடு அவளை ஏறிட்டார். கூடவே சட்டென்று அவர் விழிகளின் ஓரம் கண்ணீர் வடிய, தன்னையும் மீறித் துடித்துப் போனாள் திகழ்வஞ்சி.
என்னதான் அவர் தாய்க்கும் தங்களுக்கும் துரோகம் செய்திருந்தாலும், அவருடைய அந்த இயலாத நிலையில் தன்னுடைய ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் காட்ட முடியாது உதடுகள் கடித்தவாறு அவரையே பார்த்திருக்க,
“கண்ணம்மா… என்னைத் தேடி வந்து விட்டாயா?” என்றார் குரல் கமற.
“ஷ்… அப்பா… பிளீஸ்…” என்று அவர் கலங்குவது பிடிக்காமல் சொன்னாலும் இவளுடைய கண்களும் அவளை மீறிக் கலங்கவே செய்தன.
“எங்கே… உன்கூடப் பேசாமலே போய்ச் சேர்ந்துவிடுவேனோ என்று பயந்து போனேன் கண்ணம்மா… உன்னிடமிருந்து மன்னிப்பு வேண்டாமல் மரணத்தைத் தழுவி விடுவேனோ என்று…”
“அப்பா பிளீஸ்… வேண்டாம்பா… நடந்து முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். அப்படியே விட்டுவிடலாம்…” என்ற மகளின் கரத்தைப் பற்றுவதற்காகத் தன் கரத்தைத் தூக்க, அதை உணர்ந்தவளாகத் தன் தந்தையின் இடது கரத்தைச் சட்டென்று பற்றிக்கொண்டாள் திகழ்வஞ்சி. தன் மகளின் கரத்தை அழுந்தப் பிடித்தவர், அதைத் தூக்கித் தன் உதட்டில் பதித்து, பின் மார்பின் மீது வைத்து
“நீ.. மூத்தவளா… இளையவளா?” சந்தேகம் கேட்டவருக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலானது. பெற்ற குழந்தைகளின் வேற்றுமை அறியாது இருப்பது எத்தனை பெரிய கொடுமை…? தவிக்க,
“இ.. இளையவள்…” என்றாள் திக்கித் திணறி.
“அக்காவுக்கு என்னாச்சு? அவள் எங்கே இப்போது?” ஆவலுடன் கேட்க, பதில் சொல்லாமல் சற்று அமைதி காத்தாள் திகழ்வஞ்சி.
“அ… அக்கா… இப்போது என் கூட இல்லைப்பா. அவள் தன் வாழ்க்கையை வாழத் தனியாகச் சென்று விட்டாள்…” அவள் சொல்லக் கலங்கினார் தந்தை.
“எ… எங்கே போனாள். இப்போது அவள் எங்கே இருக்கிறாள்…?”
“தெரியாது…” அவள் சொல்ல, சற்று நேரம் அழுதார் விஜயராகவன்.
“ஆனால் கண்ணம்மா… நீங்கள் இருவரும் பிறந்த போது, உன் அக்காவுக்கு அங்கவை என்று வைத்தேன். உனக்கு சங்கவை என்று பெயர் வைத்தேன். இப்போது அந்தப் பெயருக்கு என்னாயிற்று. உன்னைத் திகழ்வஞ்சி என்கிறார்களே? ஏன்? உனக்குத் திகழ்வஞ்சி என்றால், மற்றவளுக்கு என்ன பெயர்?” குழப்பமாகக் கேட்க மெல்லியதாகச் சிரித்தாள் திகழ்வஞ்சி.
“அந்தப் பெயரை வைத்ததே நீங்கள்தானே. அதனால், விவாகரத்து முடிந்ததும், உங்கள் சார்ந்த எந்த நினைவும் இருக்கக் கூடாது என்று எங்கள் பெயரையும் அம்மா மாற்றி விட்டார்கள். திடீர் என்று ஒரு நாள் எங்களை அழைத்துச் சொன்னார்கள். இனி உங்கள் பெயர் திகழ்வல்லபை, திகழ்வஞ்சி என்றார்கள். பிறப்பத்தாட்சி பத்திரம் அனைத்திலும் எங்களின் பெயரை மாற்றிவிட்டார்கள். இறுதிப் பெயராக (Last name) உங்கள் பெயரை நீக்கிவிட்டு அம்மப்பாவின் பெயரை வைத்தார்கள். ஆனால், தன் பெயருக்குப் பின்னால் இருந்த உங்கள் பெயரை மட்டும் மாற்றவேயில்லை. கூடவே உங்களை மறக்கவும் இல்லை…” அவள் சொல்ல வேதனைப் புன்னகை ஒன்றைச் சிந்தினார் விஜயராகவன்.
“உன் அம்மாவோடு சேர்ந்து வாழ நான் முயற்சியே செய்யவில்லை என்று நினைக்கிறாயா தங்கம்…?” என்று அவர் கேட்க இவள் முகமும் வேதனையில் கசங்கியது.
“முயற்சி செய்திருந்தால் இந்தப் பிரிவே வந்திருக்காதே…? உங்கள் இருவரின் பிரச்சனையிலும் சிக்கித் தவித்தது நாங்கள்தானே…? அதைச் சொன்னாலும் உங்களால் புரிந்து கொள்ள முடியாதுப்பா…!” என்றவளின் முகத்தில் கசப்பு அப்படியே தெரிந்தது. கூடவே, “உங்கள் முகத்தில் விழிக்கவே கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால்…! ஏன்பா…? ஏன் இப்படிச் செய்தீர்கள்? ஏன் எங்களை விட்டுப் போனீர்கள்…? எங்களை விட உங்கள் காதல் உங்களுக்கு முக்கியமாகப் போனதா… எப்படிப்பா உங்களால் முடிந்தது…? அதுவும் எங்களை விட்டுப் பிரிந்து செல்லும் அளவுக்கு?” தன்னை மறந்து கேட்டவள், அப்போது தான் அவர் நிலை உறைக்க, அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு,
“சா… சாரி… நான் உங்களை வருத்துவதற்காகக் கேட்கவில்லை… இத்தனை நாளும் மனதிற்குள் அடைத்துக் கிடந்த கேள்விகள் என்னை மீறி வந்துவிட்டன…” என்றவள், சட்டென்று எழுந்தாள்.
“நா… நான் கிளம்புகிறேன்… இங்கே இருந்தால் என்னை மீறி ஏதாவது கேட்டு உங்கள் மனதை சங்கடப்படுத்திவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நீங்கள் ஓய்வெடுங்கள்…” என்றவள் அவசரமாக அங்கிருந்து வெளியேற முயல, சட்டென்று தன் கரங்களுக்குள் இருந்த அவளுடைய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டார் விஜயராகவன்.
“பிளீஸ்மா… உட்கார்… உன் கூடக் கொஞ்சம் பேசவேண்டும்… இல்லை என்றால் என் இதயத்தில் இருந்த பாரம் இறங்காது…” என்று பெரும் தவிப்புடன் சொன்னவரிடம் தன் கோபத்தையோ, ஆதங்கதத்தையோ வெளிப்படுத்த முடியவில்லை இவளால்.
அதுவும் இப்படிப் படுக்கையில் கிடக்கும் ஒருவரிடம் எப்படிக் காட்ட முடியும்.
“ஷ்… நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசி என்ன பயன்…? செய்த தவற்றை மாற்றியமைக்க முடியுமா என்ன?” விரக்தியாகக் கேட்டவளை வலியோடு பார்த்தார் விஜயராகவன்.
“உண்மைதான்… ஆனால்… இப்போது நான் சொல்லவந்ததைச் சொல்லாமல் விட்டு விட்டால், பிறகு அதைக் கூறும் சந்தர்ப்பம் கிடைக்குமோ, கிடைக்காதோ…!” அவர் சொல்ல, பதறிப்போனாள் திகழ்வஞ்சி.
“அப்பா..! ப்ளீஸ்..! ஏன் இப்படியெல்லாம்…?”
“இல்லைமா… என்னைத் தடுக்காதே… நான் கூறிமுடிக்கிறேன்… அப்போதுதான் இந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து என்னால் வெளியே வர முடியும். இத்தனை காலமும் மனத்தை அழுத்திய பாரம் விலகும்.” என்றவள் எதையோ யோசித்தார். பின் கலக்கமாக திகழ்வஞ்சியை ஏறிட்டு,
“சத்தியமாக என் பக்கமும் நியாயம் இருக்கிறது என்று நான் பேச வரவில்லை. என் நிலையை உனக்குப் புரிய வைக்கவேண்டும்… இந்த மூன்று நாட்களாக இதுதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதோ இப்போது கூட என்னைப் பரிசோதித்த போது இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. மருந்து கொடுத்தும் குறையவில்லையே என்று குழம்பினார்கள். அதற்கான காரணம் எனக்கு மட்டும்தான் தெரியும். நெஞ்சம் முழுக்க வலி இருக்கிற போது, அந்த வலியைக் குறைக்காமல் எப்படி இரத்த அழுத்தம் குறையும்? கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு அப்படியே மாரை அடைத்துக் கிடக்கிறதே. அதை உன்னிடம் சொன்னால் தான் அந்தப் பாரம் முழுக்க இறங்கும். கொஞ்சம் நான் சொல்வதைக் காது கொடுத்து கேளடா…” கெஞ்ச, அழுகையில் முகம் சிவந்தாள் அவள்.
அவர் சொல்லும் கதை எந்தளவுக்கு அவளுடைய இறந்த கால வாழ்க்கையில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுக்கும் என்று தெரிய வில்லை. ஆனால் அவர் பேசுவதால் அவருடைய மனதுக்கும் உடலுக்கும் பாரம் குறையும் என்றால், பேசட்டும்’ நினைத்தவள், மீண்டும் இருக்கையில் அமர, மகிழ்ச்சியோடு மகளைப் பார்த்தார் விஜயராகவன்.
“நன்றிமா… ஆனால் நான் சொன்னதற்குப் பிறகும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை… ஆனால்… வெறுத்து ஒதுக்கி விடாதே கண்ணம்மா. அதைத் தாங்கும் சக்தி என்னிடமில்லை…” கெஞ்சியவரின் கண்ணீரை இமைக்காமல் பார்த்தவள்,
“சொல்லுங்கள்பா…” என்றாள் மென் குரலில். அதில் திருப்தி கொண்டவராக ஒரு சில நிமிடங்கள் அமைதி காத்தார் விஜயராகவன். அவருக்கு எதிலிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை போல.
“உன் அம்மாவைத் திருமணம் முடிப்பதற்கு முன்பாகவே, எனக்கு ஈஷ்வரியைத் தெரியும்…” அவர் சொல்ல அது தெரிந்த கதைதானே என்று அமைதியாக இருந்தாள் அவள். அவளுடைய கேள்வியெல்லாம் காதலித்தவரைக் கைவிட்டு எதற்குத் தாயின் வாழ்க்கையை அவர் பாழாக்க வேண்டும் என்பதுதான்.
“எனக்கு ஈஷ் என்றால் உயிர் கண்ணம்மா. என் பாதி அவள்… அவளுக்கு ஒன்று என்றால், என்னால் தாங்கவே முடியாது. இருவருமே படிக்கும் காலத்தில் ஈருடல், ஓருயிராகப் பழகினோம். எனக்கு ஈஷ்வரியிடத்தே இருந்த ஈர்ப்பு எந்தப் பெண்ணிடமும் வந்ததில்லை.. நான் படித்து முடித்துச் சொந்தமாக வியாபாரம் தொடங்கிய நேரத்தில்தான் உன் அத்தை, என் தங்கை சந்திராவிற்கு கனடாவிலிருந்து நல்ல இடத்தில் திருமணம் கூடிவந்தது. அப்போதெல்லாம் எங்களிடம் பெரிய வசதி கிடையாது. என்னுடைய வியாபாரமே வங்கியில் கடன் எடுத்துத்தான் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உன் அத்தையின் திருமணத்தை ஆடம்பரமாகச் செய்து வைப்பதொன்றும் அத்தனை சுலபமில்லை.
அப்போதுதான் அம்மா வழி உறவிலிருந்து உன் அம்மாவுக்கு என்னைக் கேட்டு வந்தார்கள். அவர்களின் வசதி என் அம்மா அப்பாவின் வாயை அடைத்தது. சந்திராவுக்கு முன்பாக, எனக்குத் திருமணம் செய்து வைத்தால், அதிலிருந்து வரும் பணத்தில், சந்திராவின் திருமணத்தை முடித்து விடலாம் என்று அம்மாவும் அப்பாவும் நினைத்தார்கள். என்னுடைய அனுமதியைக் கூட அவர்கள் கேட்கவில்லை. சம்மதம் சொல்லி விட்டார்கள்…” என்றவர் பழைய நினைவை ஒரு கணம் அசைபோட்டார்.
“ஈஷ்வரியைத் தவிர எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத நான், இன்னொருத்தியை திருமணம் செய்வதா? கடுமையாகவே மறுத்தேன். போராடிப் பார்த்தேன். ஆனால் உன் தாத்தா பாட்டி என் பேச்சைக் கேட்கவேயில்லை. வேறு வழியில்லாமல் யாருக்கும் தெரியாமல் நான் உன் அம்மாவைச் சென்று சந்தித்தேன். என் காதலையும் சொன்னேன்…” விஜயராகவன் சொல்ல திகழ்வஞ்சி அதிர்ந்து போய்ப் பார்த்தாள். இந்தச் செய்தி அவளுக்குப் புதிது. அவருடைய காதல் ஆரம்பத்தில் தாய்க்குத் தெரியாது என்றுதானே அவள் நினைத்திருந்தாள். ஆனால் தந்தை சொல்லியிருக்கிறார் என்றால், ஏன் அம்மா இவரை மணக்கச் சம்மதித்தார்கள்? குழப்பத்துடன் பார்க்க,
“அவள் பக்கத்தில் இந்தத் திருமணத்தை நிறுத்த வழி இருக்கிறதா என்று கேட்டேன். அவளோ தன்னைப் பெற்றவர்களிடம் பேசச் சொல்லி விட்டாள். வேறு வழியில்லாமல் அவர்களிடமும் சென்று பேசினேன். ஆனால் அவர்களோ, என் காதலை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. படிக்கிற காலத்தில் காதல் வருவது இயல்புதான் என்று அலட்சியப்படுத்தினார்கள். கூடவே காதலித்தவளையே திருமணம் முடிப்பதாக இருந்தால், உலகத்தில் முக்கால்வாசிப் பேருக்கும் திருமணம் ஆகியிருக்காது என்று தத்துவம் வேறு பேசினார்கள். ஆனால் என் காதல், அப்படிப்பட்ட காதல் இல்லை என்று அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பேன்? அதிலும் திருமணம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற உறுதியில் தங்கள் மகளை எனக்குத் தாரைவார்த்துக் கொடுக்க அவர்களும் தயாராக இருந்தார்கள்.
முடிந்த வரைக்கும் போராடிப் பார்த்தேன். பலன்தான் கிடைக்கவில்லை. நான் ஒரேபிடியாக மறுப்பதைக் கண்டதும், வேறு வழியில்லாமல் என் தந்தையும் சில உறவினர்களுமாக எனக்குத் தெரியாமல், என்னுடைய ஈஷ்வரியைப் போய்ச் சந்தித்திருக்கிறார்கள்.
கூடவே அவளை மிரட்டியும் இருக்கிறார்கள். இளம் வயது. தம்பிகளையும் வைத்துக் கொண்டு, அவள் பட்ட சிரமமே பலமடங்கு. இவர்கள் போய் மிரட்டியதும் பயந்து விட்டாள் ஈஷ்வரி.
இதைத் தெரிந்துகொண்ட எனக்கு என்னைப் பெற்றவர்கள் மீது கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது. என்ன நடந்தாலும் சரிய ஈஷ்வரியை திருமணம் முடிப்பது என்று முடிவு செய்தேன். அதற்குரிய ஆயத்தங்கள் அனைத்தையும் செய்து விட்டு, நாளை திருமணம் என்கிற நிலையில், உன் தாத்தா, நான் ஈஷ்வரியை மணமுடிக்கப்போகும் செய்தியை எப்படியோ தெரிந்துகொண்டார். பிறகு என்ன நடந்திருக்கும் என்று உனக்குச் சொல்லத் தேவையில்லையே? பூகம்பமே வெடித்தது. திரைப் படங்களில் வருவதுபோல அம்மாவும், அப்பாவுமாக விஷம் குடித்து விட்டார்கள்.
அவர்களைக் காப்பாற்றுவதற்குள் எனக்குப் போதும், போதுமென்றாகிவிட்டது. இதில் உங்கள் அத்தை என்னைக் கண்ட மேனிக்கு திட்டி விட்டாள். பெற்றவர்களை விடக் காதலி அத்தனை முக்கியமா என்று என்னை நிற்கவைத்துக் கேள்வி கேட்டாள். என்னால் குற்ற உணர்ச்சியைத் தாங்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் என் காதலைத் தியாகம் செய்து உன் அம்மாவைத் திருமணம் முடித்தேன்.
அந்த நிலையில் பெற்றவர்களைச் சவக் குழிக்குள் இறக்கிவிட்டு என் காதலைப் பூஜிக்க என்னால் முடியவில்லை கண்ணம்மா.
பாவம் என்னுடைய ஈஷ்வரி… என் நிலைமை புரியாமல் இரவாகும்வரை, கோவிலில் மணப்பென் கோலத்தில் காத்திருந்திருக்கிறாள்… பிறகு என் நிலையை அறிந்து தம்பிகளையும் அழைத்துக் கொண்டு எங்கோ சென்றுவிட்டாள் என்கிற செய்தியை அறிந்து நான் துடித்த துடிப்பு. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாதுமா. கொஞ்ச நாட்கள் அவளைக் காணாமல் பைத்தியம்போலத் திரிந்தேன்.
உன் அம்மாவையும் திருமணம் செய்தேன். அவள் என்னை நம்பி வந்திருக்கிறாளே என்பதால், கடமைக்காக உன் அம்மாவோடு வாழ முயன்றேன். ஆனால் ஆரம்பத்தில் அது மிகவும் சிரமமாகவே இருந்தது. என்னதான் அவளுக்குக் கணவனாக வாழ முயன்றாலும், என்னால் ஈஷ்வரியை மறக்க முடியவில்லை. ஆனாலும் முயன்றேன்… உன் அம்மாவுக்காக என் ஈஷை மறக்க முயன்றேன். ஆனால் அசாத்தியம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? என் ஈஷை மறைப்பதும் அத்தனை அசாத்தியமாக இருந்தது.
ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்ற முயன்றேன். உன் அம்மாவையும் ஏற்க முயன்றேன். ஆனாலும் நிம்மதியற்ற தாம்பத்தியம் தான். அதற்கு நான் மட்டும் காரணமில்லைமா… உன் அம்மாவும் காரணம். நான் மாற முயன்றாலும், உன் அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை…” அவர் சொல்ல, அதிர்ந்து போய்ப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
இது என்ன புதுக்கதை. அம்மா அனுமதிக்க வில்லையா? நம்பமுடியாமல் அவரைப் பார்க்க,
“நான் சொல்வது நிஜம்… சத்தியம் கண்ணம்மா…” என்றவர் பழைய நினைவில் முகம் கசங்க நின்றார். கன்னத்தில் கண்ணீர் வழிய, நிமிர்ந்து தன் மகளைப் பார்க்க, இவளோ பதற்றத்தோடு அந்தக் கண்ணீரைத் துடைத்து விட முயன்றாள்.
மறுப்பாகத் தலையைசைத்தவர்,
“அதுவாவது சுதந்திரமா வழியட்டும் விடுமா…” என்றவர் ஆழ மூச்செடுத்து விட்டதிலிருந்து தொடர்ந்தார்.
“கொஞ்சம் உன் அம்மாவோடு இணக்கமாகப் பேச முயன்றால், உடனே ஈஷ்வரியைக் கொண்டு வருவாள். இப்படித்தான் ஈஷ்வரியோடும் கொஞ்சினாயா என்பாள்… இதில் எப்போதுமே ஈஷ்வரியைத் தாழ்த்திப் பேசுவாளா, எனக்குக் கோபம் வந்து விடும். அதிலிருந்து வார்த்தைகள் தடித்துப் பெரிய சண்டையே நடக்கும். இரண்டு மூன்று நாட்கள் என்னிடம் முகம் கொடுத்துப் பேசவே மாட்டாள்…” என்றவர் முகம் கசங்க ஒரு நிமிடம் கிடந்தார்.
“ஒரு வேளை உன் அம்மா என் மனநிலையைப் புரிந்து, அதற்கேற்ப நடந்திருந்தால், நான் ஈஷ்வரியை மறந்திருப்பேனோ என்னவோ… ஆனால் அதற்கு உன் அம்மா வாய்ப்பே கொடுக்க வில்லை. கூடவே உன் அம்மாவின் வீட்டாரும் விடவில்லை. தினம் தினம் ஈஷ்வரியைப் பற்றிப் பேசிப் பேசியே என்னைத் தொலைதூரத்தில் நிறுத்தி வைத்தார்கள். அவர்கள் ஈஷ்வரி என்கிற பேச்சை எடுக்காமலிருந்திருந்தால், சத்தியமாகச் சொல்கிறேன், நான் ஓரளவு என்னைத் தேற்றி இதுதான் என் வாழ்க்கை என்று வாழ ஆரம்பித்து இருப்பேன். உன் அம்மாவை ஏற்று வாழத் தொடங்கி இருப்பேன். ஆனால்…” என்றவர் மேலும் முகம் கசங்கத் தன் மகளைப் பார்த்து,
“உன்னிடம் இது சொல்வது சரியா தவறா என்று கூடத் தெரியவில்லை. ஆனாலும் சொல்கிறேன், உன் அம்மாவோடு உறவு கொண்ட பின், ஈஷ்வரியை நினைத்து உறவு கொண்டாயா என்று அந்த அழகான நேரத்தை அசிங்கப் படுத்தும் போதெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா? வெறுத்துப் போவேன்” என்றவர் பழைய நினைவில் மனம் கசங்கி நின்றார்.
“அப்போதுதான் நீங்கள் இருவரும் பிறந்தீர்கள்… அன்பு பாசம் காதல் அனைத்தும் வற்றிய பிறகு பிறந்த நீரூற்று நீங்கள் இருவரும். உங்கள் இருவரையும் பார்க்கும்போதெல்லாம், என்னை மறந்தேன்… ஆனால்… உங்கள் அம்மா உங்கள் இருவரையும் என்னோடு பழக அனுமதிக்காது முட்டுக்கட்டை போட்டாள். ஒருவித பொஸஸிவ்னஸ் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் என்னிடம் ஓடிவந்தால், என் கெட்ட குணம் உங்களிடமும் ஒட்டிக்கொள்ளும் என்பாள். காதலிப்பது அத்தனை பெரிய குற்றமா? சத்தியமாக எனக்குத் தெரியவில்லை.
வாழ்க்கையே வெறுத்துப்போனது எனக்கு. தினம் தினம் சண்டை என்றால் எப்படித்தான் வாழ்வது? உன் அம்மாவை விட்டுத் தொலைவுக்கு ஓடிவிடவேண்டும் என்றெல்லாம் தோன்றும். ஆனால் தாலிகட்டிவிட்டேனே. குழந்தைகளை வேறு பெற்றுவிட்டேன். எதுவாக இருந்தாலும் சகித்து வாழத் தானே வேண்டும். ஆனாலும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வியாபாரத்தில் முழுமூச்சாக இறங்கினேன். மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு தொழிலும் செழித்தது. அந்த நேரம்தான் என் வியாபாரத்துக்கு வேண்டிய பொருட்கள் வாங்க கொழும்புக்கு வரவேண்டியிருந்தது. அங்கே… அங்கே என்… ஈஷ்வரியை மீண்டும் சந்தித்தேன்…” சொன்னவர் விழிகளை அழுந்த மூடித் தன் வலியை விழுங்க முயன்றார்.
“அப்பா…!” என்றாள் தவிப்போடு. அவரோ பழைய நினைவிலிருந்து வெளிவராமல்,
“அவளைப் பார்த்தேன்… ஒரு விடுதியில் சமயல்க்காரியாக… அவளை அங்கே அப்படிப் பார்த்தபோது… செத்தே போனேன்டா… என் ஈஷ்வரிக்கா இந்த நிலை என்று துடித்துப் போனேன். அதுவும் அவள் எங்கே தங்கியிருந்தாள் தெரியுமா? நாங்கள் பார்த்தாலே முகத்தைச் சுழிக்கும் வகையில் ஒரு சேரியில். சின்னக் குடிசையில் தம்பிகளோடு யாரும் அற்ற அநாதையாக இருந்தாள். நன்கு படித்தவள். என்னைக் காதலித்த ஒரே குற்றத்திற்காக இத்தனை சிரமப் படவேண்டுமா? வலியைச் சுமக்க வேண்டுமா?…” அவர் கேட்க,
“ஏன்பா… அவர்களுக்கு பெற்றவர்கள் என்று யாருமில்லையா? உறவினர்கள்…?” அவள் தயக்கமாகக் கேட்க மறுப்பாகத் தலையசைத்தார் விஜயராகவன்.
“இல்லைமா…! அந்தக் காலத்தில் ஈஷ்வரியின் அம்மா அப்பா காதலித்து மணந்து கொண்டார்களாம். இருவரும் வேறு வேறு ஜாதி. அதனால் உறவுகள் அவர்களைக் கைவிட்டு விட்டது. அப்போது நடந்த போரில் இருவரும் இறந்துவிட்டார்கள். ஈஷ் மட்டும்தான் தன் தம்பிகளைப் பார்த்துக் கொண்டாள். ஈழத்தில் கல்வி இலவசம் என்பதால், எந்தச் சிக்கலும் இன்றிப் படித்தாள். பல்கலைக் கழகத்தில் முதலாமாண்டு படிக்கும்போதுதான் என்னைச் சந்தித்தாள். நாங்கள் காதலிக்கவும் ஆரம்பித்தோம்…” என்றவரின் முகம் பழைய நினைவில் மலர்ந்தது.
“பாவம் என் ஈஷ்… எனக்காக நிறைய வலிகளைச் சந்தித்துவிட்டாள். சந்தோஷமாக நான் வாழவில்லை என்றாலும், பணம் வசதி என்று நன்றாகத்தானே இருக்கிறேன். ஆனால் அவள்…! அந்தக் கணமே முடிவு செய்தேன். அவள் தொலைத்த வாழ்க்கையைத் திருப்பி அமைத்துக் கொடுப்பதென்று. அவளுக்கு நல்லதாக ஒரு பையனைப் பார்த்து மணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானித்தேன். என்னோடு வர மறுத்தவளை பிடிவாதமாக அழைத்துச் சென்று என் வீட்டில் தங்க வைத்தேன். அவளுடைய படிப்புத் தகுதிக்கு என் நண்பனின் வேலைத்தளத்தில் ஒரு வேலையும் எடுத்துக் கொடுத்தேன்…” என்றவர் எதையோ யோசித்துத் தன் மகளை ஏறிட்டு,
“அவள் என்னோடு தங்கினாள் என்பதால் தவறாக எதையும் நினைத்துவிடாதேமா… நாம் இருந்தது ஒரே வீடாக இருந்தாலும், என் விரல் நுணி கூட அவள் மேல் படவில்லை. இது சத்தியம்மா…” அவர் சொல்லப் பதறினாள் திகழ்வஞ்சி.
“ஐயோ… அப்பா…! எதற்கு இந்த சத்தியம்.. நான் உங்களை நம்புகிறேன்…” அவள் சொல்ல நிம்மதியுடன் ஒரு புன்னகையைச் சிந்தினார் விஜயராகவன்.
“இந்தச் செய்தி உன் அம்மாவின் காதுக்குப் போனது. அடுத்தென்ன பூகம்பம் வெடித்தது. நான் எவ்வளவோ சொல்லியும் அவள் என்னை நம்பவில்லை. அவள் குடும்பமும், தூபம் போடத் தயாராக இருந்தால், சிறிய பிரச்சனையாக இருக்க வேண்டியது, பெரிய பிரச்சனையானது. என் நிலையை யாருமே புரிந்துகொள்ளத் தயாராக இல்லை. நான் சொன்னதையும் நம்பத் தயாராக இல்லை.
அடுத்த படியாக உன் அம்மா என்னை வேண்டாம் என்றாள். விவாகரத்துக் கொடு என்றாள். அந்த வாழ்க்கையில் மூச்சு முட்டிப்போயிருந்தேன் கண்ணம்மா. பிடிக்காத வாழ்க்கையில் சேர்ந்திருந்து என்ன சாதிக்கப் போகிறோம். யாருக்கு என்ன இலாபம் இருந்துவிடப் போகிறது? இனியாவது இருவருக்கும் விடிவு கிடைக்கட்டும் என்று விவாகரத்துக் கொடுக்கச் சம்மதித்தேன். அதற்கும் ஈஷ்வரியோடு சேர்ந்து வாழத்தான் விவாகரத்துக் கொடுக்கச் சம்மதித்தேன் என்று சண்டைக்கு வந்தாள் உன் அம்மா. எது எப்படியோ விவாகரத்துப் பெற்றோம். ஆனால் வஞ்சிம்மா… உன் அம்மாவைப் பிரிந்து நான் வெளியே வந்த போது எனக்குப் பெரும் நிம்மதியாகத்தான் இருந்தது. விருப்பமில்லாத மணவாழ்க்கையில் இனி ஈடுபடத் தேவையில்லை என்கிற திருப்திதான் தோன்றியது.
என்னுடைய விவாகரத்திற்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது யார் தெரியுமா? ஈஷ்வரிதான். குழந்தைகள் இல்லை என்றாலாவது பரவாயில்லை. இப்படி குழந்தைகள் இருக்கும் போது பிரிவது மகா பாவம். குழந்தைகளுக்காகவாவது சேர்ந்து வாழுங்கள் என்று வற்புறுத்தினாள். உடைந்த கண்ணாடி ஒரு போதும் ஒட்டாது என்று அவளுக்குப் புரியவைப்பதற்குள் விவாகரத்துப் பெற்றே விட்டேன்.
அதற்குப் பிறகும் ஈஷ்வரி உடனே என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு வருடங்கள் சென்றது திரும்பவும் அவள் என்னை ஏற்றுக் கொள்ள. இதற்கிடையில் நான் உங்களைப் பார்ப்பதற்காகப் பல முறை முயன்றேன். ஆனால் உன் அம்மா என்னை நெருங்கக் கூட விட வில்லை…” என்றவர் நீண்ட பேச்சில் களைத்தவராகப் பெரிய மூச்செடுத்து விட்டார். அவர் பேச்சிலேயே ஒன்றிப்போய் கலங்கியிருந்தவளுக்கு அவர் எடுத்த பெருமூச்சுப் பயத்தைக் கொடுக்க,
“அப்பா… அப்பா… என்னப்பா…” என்று பதறினாள்.
“எனக்கொன்றுமிலலையம்மா… இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இருபது வருடங்களாகச் சுமந்திருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல அத்தனை சுகமாக இருக்கிறது…” என்று கண் கலங்கியவாறு கூறியவர் தொடர்ந்து,
“இப்போது சொல்லுமா. என் நிலையிலிருந்து கொஞ்சம் யோசித்துப் பாரேன். அந்த நிலையில் என்னால் என்னதான் செய்ய முடியும்?” என்றவர் ஏக்கத்துடன் திகழ்வஞ்சியைப் பார்த்தார்.
“கடைசிவரை உன் அம்மா அவளை நெருங்க வாய்ப்பும் கொடுக்கவில்லை, என்னை நெருங்க அவள் முயலவும் இல்லை. கடைசியில் எங்கள் இருவரின் வாழ்க்கையும் பாழாய்ப் போனதுதான் மிச்சம்…” என்றவர் திகழ்வஞ்சியை ஏறிட்டார்.
“வஞ்சிமா… உன் அம்மா என்னைப் பற்றி உங்களிடம் என்னவெல்லாம் சொன்னாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், விவாகரத்திற்கு மனுப்போட்ட பின்பு உங்கள் இருவரையும் பார்க்கப் பல முறை முயற்சி செய்தேன். அப்போது அவள் என்னிடம் ஒன்று சொன்னாள். ஆடிப்போய் விட்டேன். குழந்தைகளை என் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி செய்தால், உங்கள் இருவரையும் கொன்று தானும் தற்கொலை செய்துவிடுவேன் என்றாள். மஞ்சுளாவைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். சொன்னதைச் செய்வாள். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். பார்ப்பதற்குக் கூட வரக்கூடாது என்றுவிட்டாள். அப்படியிருந்தும் திருட்டுத் தனமாக உங்களை வந்து பார்த்துவிட்டுச் செல்வேன். அதையும் உங்கள் அம்மா கண்டுகொண்டாள். ஈழத்திலிருந்தால்தானே குழந்தையைப் பார்க்க வருவாய், என்று உங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்து சேர்ந்தாள்.
நானும் ஈஷோடு அவளுடைய தம்பிகளையும் கூட்டிக்கொண்டு கனடா வந்தேன். நீங்கள் கனடாவில் இருப்பது தெரியும். ஆனால் எங்கே என்று தெரியாமல் பல இடங்களில் தேடினேன். என் தங்கை சந்திராவிடமும் கேட்டேன். அவளோ என் முகத்தைப் பார்த்துக் கூடப் பேசத் தயாராக இல்லை.
அதற்கு மேல் என்னால் போராட முடியவில்லை. விலகிவிட்டேன். சத்தியமாக உன்னைக் காணும் நாள் வரை உங்கள் இருவரையும் நினைக்காத நாளே இல்லை. நான் சொல்வது சத்தியம்… நீ… என்னை நம்புகிறாய் தானே…?” அவர் கேட்க, அத்தனை காலமும் தந்தையின் பக்கத்து நியாயம் எதுவும் தெரியாமல், அவர் மீது தவற்றைப் போட்டு மொத்தமாக வெறுத்திருந்தவளுக்கு, அவர் பக்கத்து நியாயமும் தெரிந்தபின், சூரியனைக் கண்டதும் விலகும் பனியாக, அவளுடைய கோபம் மொத்தமாக விலகிப் போயிற்று.
இதில் தந்தையின் தவறு என்ன இருக்கிறது? அவர் திருமணத்திற்கு முன்பே அன்னையிடம் எச்சரிக்கை செய்திருந்தார்தானே. இந்தத் திருமணம் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் தன்னைக் கட்டிக்கொள்ளப் போகிறவனுக்கு ஏற்கெனவே காதலி இருக்கிறாள் என்று தெரிந்தும் திருமணத்தைத் தடுக்காதது அன்னையின் தவறு. தன் மகன் ஒருத்தியைக் காதலிக்கிறான் என்று தெரிந்தும், பெற்ற மகளின் மகிழ்ச்சியான வாழ்வுக்காகப் பெற்ற மகனையே பலிகடாவாக்கியது தாத்தா பாட்டியின் குற்றம். நல்ல சம்பந்தம் என்பதற்காக மகளைப் பலி கொடுத்தது அம்மாவின் உறவுகளின் தவறு. இதில் ஈஷ்வரியும், விஜயராகவனும் எதற்குச் சிலுவை சுமக்க வேண்டும்? அதுவரை காலமும் அவர்களின் மீதிருந்த வெறுப்புச் சுத்தமாக மறைந்து போக, கன்னத்தில் கண்ணீர் வடிய.
“அப்பா… சாரிப்பா… அம்மா எப்போதுமே உங்களைத் தவறாகவே பேசியதால், நானும் உங்களைத் தவறாக நினைத்துவிட்டேன். ஆனால் இப்போது உங்கள் பக்கத்து நியாயத்தைக் கேட்கிறபோதுதான் உண்மை புரிகிறது…” என்று புன்னகையுடன் கூறியவள்,
“ஏன்பா உங்கள் காதலை தாத்தாபாட்டி ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்?” அறியும் ஆவலுடன் கேட்க, வேதனை நிறைந்த புன்னகையைச் சிந்தினார் விஜயராகவன்.
“சொன்னேனே, ஈஷ்வரியின் தாய் தந்தை கலப்புத் திருமணம் என்று. அவர்கள் எங்கள் தகுதிக்குக் கீழானவர்கள் என்கிற எண்ணம், வெறுப்பு… எளியாரைக் கண்டால் நிறையப் பேருக்கு இளப்பம் தானே… அதில் என் குடும்பமும் அடக்கம். அவர்கள் ஈஷ்வரியின் நல்ல குணத்தைப் பார்க்கவில்லை. அவளுடைய பின் புலத்தைத் தான் பார்த்தார்கள்.” வலியோடு சொல்லத் தன் கரத்திலிருந்த அவருடைய கரத்தை அழுத்திக் கொடுத்து,
“உங்களுடனான நினைவு எங்கள் நான்கு வயது வரைக்கும் தான்பா. அதற்குப் பிறகு நீங்கள் வருவதை நிறுத்திக் கொண்டீர்கள். அது ஏன் என்று எதுவும் தெரியாமல், நாங்கள் நிறையவே அழுதிருக்கிறோம். ஆனால் கடைசிவரை அம்மா அதற்கான தகுந்த பதிலைச் சொன்னதில்லை. நாங்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு, அம்மா சொன்னது ஒன்றே ஒன்றுதான். உங்கள் அப்பா பழைய காதலியைத் தேடிப் போய்விட்டார் என்று. எப்படி இருந்தது தெரியுமா? அதற்குப் பிறகு எங்கள் பன்னிரண்டாவது வயதில், அம்மா அழுத்தம் காரணமாக மூளையில் நரம்பு வெடித்து ஒரேயடியாக எங்களை விட்டுப் போன பிறகு, அத்தை கூடத்தான் இருந்தோம்பா…”
“எனக்கு மஞ்சுளா இறந்தது எதுவும் தெரியாதுடா… தெரிந்திருந்தால் நிச்சயமாக உங்களைத் தேடி வந்திருப்பேன்…”
“நம்புகிறேன்…” என்றவள் தந்தையை ஏறிட்டு, “ஏன்பா, நான்தான் உங்கள் மகள் என்று எப்படிக் கண்டுகொண்டீர்கள்? நீங்கள் எங்களை விட்டுப் போன போது எங்களுக்கு நான்கு வயது… என்னுடைய பெயர் கூட வேறு… ஆனால் சரியாக அடையாளம் கண்டது எப்படி?” கேட்க மெல்லியதாகச் சிரித்தார் விஜயராகவன்.
“அதுதான் அப்படியே உங்கள் அம்மாவைப் போல இருக்கிறாயே… தவிர நீ என்னைப் பார்த்ததும் அதிர்ந்தாய். திகைத்தாய். இது போதாதா நீ யாராக இருக்கும் என்று கண்டுகொள்ள… தவிர நீ என் மகள்மா… எங்கிருந்தாலும் உணர்வு காட்டிக்கொடுத்து விடும்..” என்றவரை ஏறிட்டவள்,
“ஏன்பா… அமலனின் காதலி நான் என்று தெரிந்த போதும் கூட என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?”
“இல்லைமா… புகைப்படம்தான் பார்த்தேன். அதில் நீ வேறுமாதிரி இருந்தாய். நீ போட்டிருந்த முகப்பூச்சு உன்னை வேறு ஆளாகக் காட்டியது. உன் பெயர் கூடத் திகழ்வஞ்சி என்று சொன்னார்கள்… உன் தந்தையின் பெயராக பரமகுரு இருந்தது. சந்தேகம் வரவேயில்லை” சொன்னவர், தன் மகளை அழுத்தமாகப் பார்த்தார். அவருடைய மகத்தில் ஆயிரம் உணர்ச்சிகள் கொந்தளித்தது.
“ஏன்மா இப்படிச் செய்தாய்? சத்தியமாக என்னால் நம்பவே முடியவில்லை. பணத்துக்காக நீ அமலனை… இது தப்புமா… என்னதான் பணத் தேவை இருந்தாலும், அதை ஈட்ட இதுவா வழி? எப்படி நீ இப்படி ஒரு வேலை செய்யலாம்? அதுவும் என் மகள் இப்படி என்று தெரிந்த போது…? இரவு முழுக்கத் தூங்கவேயில்லை” குரல் கம்மச் சொன்ன தந்தையைச் சற்று நேரம் இமைக்காமல் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள். தாயின் அன்பும், தந்தையின் அன்பும் கிடைக்காத பிள்ளைகளின் நிலை இதுதானேப்பா. வீட்டில் கிடைக்காத அன்பை வெளியே தேடவேண்டிய நிர்ப்பந்தம்.” அவள் விரக்தியாகச் சொல்ல, முகம் வாடினார் விஜயராகவன்.
பெரியவர்கள் செய்யும் தவறு, இளையவர்களை எந்தளவு பாதிக்கிறது என்று புரிந்த போது அவரால் தாள முடியவில்லை. என்ன சொன்னாலும், அவர் குழந்தைகளை விட்டு விலகியிருக்கக் கூடாது. மஞ்சுளாவோடு போராடியிருக்கவேண்டும் என்று காலம் கடந்து யோசித்தவருக்கு அதை எப்படியாவது சரிப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற வேகம் வந்தது.
ஒரு தந்தையாக அவருக்கும் கடமை இருக்கிறது. அவர் ஈஷ்வரியிடமும், அபராசிதனிடமும் இந்தத் திருமணத்தைப் பற்றிச் சொன்னதற்குப் பின்னால் இருந்த காரணமே தன் மகளின் வாழ்க்கையை எண்ணித்தான்.
திகழ்வஞ்சியைக் கண்ட நொடியே அவள் தன் மகள் என்பதைப் புரிந்து கொண்டவருக்கு, எப்படியாவது அவளுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்தியே ஆகவேண்டும் என்று தோன்றி விட்டிருந்தது. இத்தனை காலமாகப் பெற்ற தந்தையாக எந்தக் கடமையும் செய்யாதவருக்கு, அந்த இடத்தில் அவருக்குத் தெரிந்த ஒரே தீர்வு, அவளை அபராசிதனுக்குக் கட்டிக் கொடுப்பது தான். அது சுலபமல்ல என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும் முயன்றுபார்த்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் திருமணப் பேச்சையே எடுத்தார். அவருடைய நல்லகாலமோ என்னவோ அவர் எறிந்த பந்து சரியாகக் கூடையில் சென்று விழுந்துவிட்டிருந்தது. அபராசிதன் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. அபராசிதன் மட்டும் சம்மதம் சொன்னால் போதுமா. முக்கியமாகத் திகழ்வஞ்சி சம்மதம் சொன்னதாகத் தெரியவில்லையே. தன் மகளைப் பார்த்தவர்,
“அம்மா… நான் ஒன்று சொன்னால் கேட்பாயா?” தவிப்போடு கேட்டார் விஜயராகவன்.
“சொல்லுங்கள்…”
“நீ அபராசிதனை மணந்து கொள்ள வேண்டும்…” அவர் சொல்ல உடனே மறுப்பாகத் தலையசைத்தாள் திகழ்வஞ்சி.
அன்று காலையில் அவன் கூட ஏற்பட்ட வாக்குவாதம் நினைவுக்கு வந்தது. அவளுடைய அம்மா தந்தையைக் கொடுக்கால் குத்தி வலிக்கச் செய்தது போல, இவள் இறந்தகாலத்தை அவன் சுட்டிக்காட்டிக் கொன்றே புதைத்துவிடுவான். அப்படியிருக்கிற போது எப்படி அவன் கூட ஒரே கூரையின் கீழ் வாழ்வது.
“இல்லைபா… இந்தத் திருமணம் சரி வராது… நானும் அபராசிதனும் மணம் முடித்தால், நீங்களும் அம்மாவும் வாழ்ந்த வாழ்க்கை போலத்தான் நம்முடையதும் இருக்கும்…” என்றாள் திகழ்வஞ்சி.
“நிச்சயமாக இருக்காதுடா…” என்றார் விஜய ராகவன் அழுத்தமாக. இவள் புரியாமல் பார்க்க,
“எனக்கு அபராசிதனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் கடமை என்று வந்து விட்டால், கடைசிவரை அதிலிருந்து பின்வாங்க மாட்டான். தவிர, அவன் ஈஷ்வரியின் வளர்ப்பு.” என்றார் பெருமையாக.
“அதில் என்ன வித்தியாசம்?” அவள் திகைக்க,
“ஈஷ் நேர்மையானவள்டா… அவள் கோபமாகப் பேசினாலும் திட்டினாலும் அதில் உண்மையிருக்கும். அபராசிதனிடமும் அப்படியே. அவன் என்னைப் போலக் கோழையில்லை. அவனுக்குப் பிடிக்காததை யாராலும் செய்யவைக்க முடியாது. உன்னை மணந்து கொள் என்று நான் சொன்னபோது, அவன் மனதில் வேறு யாராவது இருந்திருந்தால், நிச்சயமாக நான் சொன்னதை ஏற்றிருக்க மாட்டான். ஆனால் உடனே சரி என்றான். அப்படியென்றால், அவன் மனதில் யாருமில்லை என்றுதான் அர்த்தம்… நீ அவனுடைய மனைவியானால், கடைசிவரை கைவிட மாட்டான். தவிர ஆராவைப் பற்றியும் நீ கவலைப்பட வேண்டியதில்லை..” அவர் சொல்ல, ஆரா என்கிற வார்த்தை அவளைக் கட்டிப் போட்டது.
அதைப் புரிந்து கொண்டவராக,
“இங்கே பார்மா… நீ அபராசிதனை மணந்தால், ஆராவுக்கு நல்ல ஒரு எதிர்காலம் கிடைக்கும். தவிர உனக்கும் ஒரு பாதுகாப்புக் கிடைக்கும். நிச்சயமாக அபரன் உன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வான்…” அவர் சொல்ல அதைக் கேட்டு மெல்லியதாகப் புன்னகைத்தாள் திகழ்வஞ்சி.
“அப்பா நான் உங்கள் மகள் என்று தெரிந்தால் என்னாகும் என்று யோசித்தீர்களா?”
“தெரிந்தால்தானே?” அவர் சொல்ல அதிர்ந்தாள் திகழ்வஞ்சி.
“அப்பா…! என்னப்பா சொல்கிறீர்கள்…?”
“இப்போதைக்கு நீ என் மகள் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். குறைந்தது உனக்குத் திருமணம் ஆகும் வரைக்கும்…” அவர் சொல்லப் பலமாக மறுத்தாள் திகழ்வஞ்சி.
“நோ… இது தப்பு… தப்பில்லை துரோகம்…” அவள் எதையோ சொல்லவர, மறுப்பாகத் தலையை அசைத்தார் விஜயராகவன்.
“எதுடா தப்பு…? எது துரோகம்…? நங்கள் ஒன்றும் அவனை ஏமாற்றப் போவதில்லையே. வாய்ப்பை பயன்படுத்தப் போகிறோம். அவ்வளவுதான். உனக்கு ஏற்றவன் அபராசிதன்தான்மா. அவன் உன் வாழ்க்கையில் வந்தால், நிச்சயமாக உன்னைச் சந்தோஷமாக வைத்திருப்பான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தவிர அவனுக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது…” தந்தை சொல்லத் திகைத்தாள் திகழ்வஞ்சி.
“என்னைப் பிடித்திருக்கிறதா? என்னப்பா சொல்கிறீர்கள்?”
“ஆமாம் அபராசிதனுக்கு உன் மீது விருப்பம் இருக்கிறது. இல்லை என்றால், உன்னை அவன் தன்னோடு இங்கே அழைத்து வந்திருக்கவே மாட்டான். அப்படியே அழைத்து வந்திருந்தாலும் தன் வீட்டில் உன்னைத் தங்க வைத்திருக்க மாட்டான். எனக்கு அவனைப் பற்றி நன்றாகவே தெரியும். பிடிக்காத ஒன்றை எக்காலத்தில் செய்யவும் மாட்டான் சிந்திக்கவும் மாட்டான். உன் செய்தியறிந்து ஆராவமுதனை அவன் தேடிவந்த போது, அவனிடமிருந்த கோபத்தின் அளவு எத்தகையது என்று எனக்கு நன்றாகவே தெரியும். எப்படியாவது உன்னிடமிருந்து குழந்தையை அழைத்து வந்துவிடும் நோக்கத்தில்தான் வந்தான். ஆனால் உன்னையும் அவன் தன்னோடு அழைத்து வந்திருக்கிறான் என்றால், அதற்குப் பின்னால், உன் மீது ஏதோ ஒரு அபிப்பிராயம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்… இதை எல்லாம் யோசித்துத்தான், உன்னை மணந்து கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தையே அவனிடம் சொன்னேன்…” அவர் சொல்லத் திகைத்தவளாக அவரை ஏறிட்டவள்.
“அபராசிதன் என்னைத் திருமணம் முடிக்கக் கேட்டதற்குப் பின்னால் இருந்த காரணம் நீங்களா?” அவளால் தந்தை சொன்னதை நம்பவே முடியவில்லை.
“ஆமாம்.. நானேதான். தெரிந்தோ தெரியாமலோ உன்னுடைய வாழ்க்கை சீரழிய நானும் ஒரு காரணம். ஒரு தந்தையாக உன்னுடைய வாழ்க்கையை சீர்படுத்தும் தலையாய கடமை எனக்கும் இருக்கிறது. உனக்கு மட்டுமில்லை, என் பேரனுக்கும் சேர்த்துத்தான். இருவருக்குமே ஏற்ற துணை அபராசிதன் மட்டும்தான். அபராசிதனுக்குத் தன் அண்ணா மீதிருக்கும் பற்று எத்தகையது என்று எனக்குத் தெரியும். அதே அன்பையும் பாசத்தையும் ஆராமீது நிச்சயமாகக் காட்டுவான். கூடவே அவன் தாயான உன்னையும் அவன் பார்த்துக் கொள்வான். ஆரம்பத்தில் கொஞ்சக் கசப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் காலப்போக்கில் அது சரியாகிவிடும்…” அவர் உறுதியாகச் சொல்ல, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றாள் திகழ்வஞ்சி.
“எனக்கு என்ன முடிவெடுப்பது என்று சத்தியமாகத் தெரியவில்லை…” அவள் கலங்க,
“கண்ணம்மா… நீ என்னை மன்னித்துவிட்டாய் என்றால் அபராசிதனை மணம் முடிக்கச் சம்மதித்து விடு… இல்லையேல்… நான்… நான்…” என்றவருக்குத் திடீர் என்று மூச்சுத் தடைப்பட்டது. எதுவோ சரியில்லை என்று அவர் உணர்வதற்குள், திகழ்வஞ்சியும் தந்தையின் நிலை கண்டு பதறிப் போனாள்.
“அப்பா… என்னப்பா… என்ன செய்கிறது…”
“கண்ணம்மா… டாக்டரை… டாக்டரை கூப்பி…” முடிப்பதற்குள்ளாக அவர் சுயநினைவை இழக்கப் பதறிப் போனாள் திகழ்வஞ்சி. மின்னல் விரைவுடன் அறையை விட்டு வெளியேறியவள், அங்கே வந்து கொண்டிருந்த தாதியிடம் ஓடி விபரத்தைச் சொல்ல, விரைந்து செயற்பட்டார் அந்தத் தாதி.
“உடனே அவர் நிலை அறிந்து அபராசிதனுக்குப் பேஜ் பண்ணிவிட்டு, இறக்கி வைக்கப்பட்டிருந்த பிராணவாயுக் குழாயை அவருடைய மூக்கில் வைத்துவிட்டு நிமிரும் போதே அபராசிதன் உள்ளே வந்துவிட்டிருந்தான்.
“என்னாச்சு…?” அவன் பதட்டமாகக் கேட்டவாறு அவரைப் பரிசோதிக்கத் தொடங்க,
“திடீர் என்று பிராணவாயுவின் அளவு குறைந்திருக்கிறது டாக்டர்…” என்றார் தாதி.
அடுத்தப் பத்து நிமிடங்கள் உயிரைக் கையில் பிடித்தவாறு அங்கே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் திகழ்வஞ்சி.
அருமையான பதிவு 😍😍😍😍.
அடக்கடவுளே 😱😱😱😱😱
இவரோட இறந்த காலம் இவ்வளவு தூரம் சிரமமா இருந்திருக்கே.
காதலிக்கிற உண்மையை சொல்லியும் அதைய சட்டை பண்ணாம வற்புறுத்தி கண்ணாலம் பண்ணி வச்சதோட விளைவு எதிர் கால சந்ததி வரைக்கும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு. சுயநலம் புடிச்சவிகளால வந்த விளைவு.
அச்சோ இவுருக்கு திடீர்னு என்னாச்சு? மூச்சு திணறல் ஆகியிருக்கு திகழை சம்மதிக்க வக்க டியூப்பை குறைச்சு வச்சிருப்பாரோ?🙄🙄
ஆமா நிறையப் பேரோட வாழ்க்கை இப்படித்தான் நாசமா போவுது. என்னத்தை சொல்றது.
பாவம் ராகவ்
ரொம்ப பாவம்பா
Wow awesome
நன்றி நன்றி நன்றி