Fri. Sep 20th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா 11/12

(11)

 

அநபாயதீரன் கதவைத் திறக்கத் திறக்க, மேகம் விலகியதும் தெரியும் சூரியன் போல, மெல்ல மெல்லமாக வெளிப்பட்டது, கபேர்டில் வைக்கப்பட்டிருந்த சிவார்ப்பணாவின் பெரிய படம்.

 

அதை சிவார்ப்பணாவே எதிர்பார்க்கவில்லை என்பதை அவளுடைய வியந்த அதிர்ந்த விழிகள் காட்டினாலும், திரும்பி அதிர்ச்சியுடன் அநபாயதீரனைப் பார்த்துவிட்டுத் தன் படத்தையே வெறித்தாள். தொண்டைக்குள் எதுவோ அடைத்துக்கொண்ட உணர்வு.

 

சும்மாவே அவள் மீது சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கும் இவனுக்கு, இப்போது, தீனி கிடைத்துவிட்டதே… கடவுளே இவனுடைய சந்தேகப் பார்வைக்கு என்ன பதிலைக் கூறுவது என்று புரியாமல் மலைத்தாள்.

 

கூடவே ரகு எதற்காக அவளுடைய படத்தை மாட்டி வைக்க வேண்டும்…’ என்கிற சிந்தனையுடன், கபேர்ட்டை நெருங்கியவள், கதவிலிருந்த அநபாயதீரனின் கரத்தைப் பற்றி விலக்கிவிட்டு பெரும் ஆங்காரத்துடன், அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவனைப் பொருட்படுத்தாது உள்ளே விழிகளால்  அலசினாள்.

 

பொறுமையற்றவளாக அங்கிருந்த பொருட்களைக் குடைந்தாள். ஏதேதோ கோப்புகளில், ‘கொன்ஃபிடன்ளஷல்’ என்று எழுதப்பட்டிருக்க, ஒவ்வொன்றையும் பிரித்துப் பார்த்தாள். ஒன்றுமே புரியவில்லை. ஏதேதோ கிறுக்கி, கீறியிருந்தன.

 

எரிச்சலுடன், அவற்றை அங்கேயே ஓரமாகப் போட்டுவிட்டுத் திரும்பியவளின் கண்ணில் பட்டது, அந்த  ஆல்பம். உடனே அதை வெளியே எடுத்து விரித்துப் பார்த்தவள் அதிர்ச்சியில் சிலையானாள். நம்ப முடியாமல் உற்றுப் பார்த்தாள்… ஒன்றுமே புரியாமல் நிமிர்ந்து தன் பின்னால் நின்றிருந்தவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ, பாறையென இறுகிப்போன முகத்துடன் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். ஏனோ அவனுடைய அந்த விழிப் பார்வை, இவளுக்குக் குளிர் பரப்பியது. தன்னையும் மறந்து,

 

“நான்… எனக்கு… இது எப்படி…” என்று திணறியவாறு கூறியவளுக்கு அப்போதுதான், அவன் கைப்பிடிக்குள் சிக்கியவாறே குடைந்திருக்கிறோம் என்பது புரிந்தது.

 

பதட்டத்துடன் அவனிடமிருந்து விலகலாம் என்றால் அந்த கிங்காங் அசைந்தால் அல்லவோ.  அவனோ ஏளனத்துடன் விலகி அவள் கரத்திலிருந்து அந்த ஆல்பத்தைப் பறித்தெடுத்து முதல் பக்கத்தை விரித்தான். அங்கே உயிருக்கு என் அன்புப் பரிசு என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

 

அடுத்த அட்டைகள் ஒவ்வொன்றிலும் சிவார்ப்பணாவே நிறைந்திருந்தாள். ஒவ்வொரு படத்துக்குக் கீழேயும் அவளைப் பற்றிய கவிதைகள் எழுதப்பட்டிருந்தன.

 

அவற்றை வாசிக்கும் போது அநபாயதீரனின் முகத்தில் கடுமை ஏறிக்கொண்டு போனதே தவிரச் சற்றும் குறையவேயில்லை.

 

அனைத்தையும் பார்த்து முடித்தவன், சினம் குறையாமலே சிவார்ப்பணாவை ஏறிட்டான்.

 

“இதற்கு என்ன அர்த்தம்?” என்றான் அழுத்தமாக. ஒரு கணம் பதில் சொல்ல முடியாமல் தவித்தவள்,

 

“எ… என்ன அர்த்தம் என்றால், எ… எனக்கென்ன தெரியும்? நானும் இப்போதுதான் உங்களுடன் சேர்ந்து  இதைப் பார்க்கிறேன்…” என்று தவிப்புடன் கூறினாலும் மனமோ,

 

‘ரகு… உன்னை ஒரு நல்ல நண்பனாக நினைத்திருந்தேன்… இப்படி ஆப்பு வைத்துவிட்டாயே… நீ… நீ மட்டும் என் கரத்தில் சிக்கினாய்… அவ்வளவுதான்… நீ எந்த லோகத்திலிருந்தாலும், உன்னைத் தேடி வந்து, நான்…நான்… டேய் என் கையால்தான்டா உனக்குச் சாவு…’ என்று மனதிற்குள் கர்ஜித்துக்கொண்டு இருந்தவளின் சிந்தனையை, அநபாயதீரனின் குரல் கலைத்தது.

 

“வாவ்… செம லவ்வா… ரோமியோ ஜீலியட்… லைலா மஜ்னு… சாஜகான் மும்தாஜ்… ஆனால் பார்… எல்லோருடைய காதலும் இறுதியில் சோகத்தோடுதான் முடிந்திருக்கிறது… உன்னுடைய அமரத்துவமான காதல் எப்படி?” என்று அவன் ஏளனத்துடன் கேட்க இவளோ பதறியவாறு,

 

“நோ… சத்தியமாக இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது… நம்புங்கள்… கடவுளே…. ரகு இப்படி என்மீது விருப்பம் வைத்திருப்பான் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. எனக்கே இது புதுசு. புதுசு மட்டுமல்ல, பெரும் அதிர்ச்சியான செய்தியும் கூட…” என்றவளின் தவிப்பினை அவன் சிறிதும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

 

கோபத்துடன் அந்த ஆல்பத்தை விட்டெறிந்தவன், அதற்குள்ளிருந்த கோப்பினை எடுத்துப் படிக்கத் தொடங்கியவாறு,

 

“இதை நம்புவதற்கு நான் என்ன முட்டாளா? அன்று கூட, அவனுடைய கேர்ள் ஃப்ரன்ட் என்று என்னிடமே கூறியிருந்தாய்… அல்லவா?” என்றான் அவன் கடுமையாக.

 

“ஐயோ…” என்று தன் தலையில் கைவைத்து சிறிது நேரம் அமைதி காத்தவள்,

 

“அன்று என் வாயில் எந்தச் சாத்தான் நுழைந்ததோ தெரியவில்லை… உங்களுக்குக் கோபம் ஏற்றுவதற்காகத்தான் அப்படி உளறினேன். சத்தியமாக ரகு என்னுடைய நல்ல நண்பன் மட்டுமே. மற்றும்படி நீங்கள் நினைப்பதுபோல வேறு எந்த தவறான எண்ணமும் எனக்கு அன்றுமிருக்கிவில்லை, இன்றும் இருக்கவில்லை… ஒருபோதும் இருக்கப்போவதுமில்லை” என்று பதட்டத்துடன் கூற, இவனுடைய இதழ்கள் கிண்டலுடன் வளைந்தன.

 

“அடேங்கப்பா… என்னமாக நீ நடிக்கிறாய்?” என்று ஆச்சரியம் போலக் கேட்டவன், மீண்டும் அந்தக் கப்பேர்டைக் குடையத் தொடங்கினான். ஒவ்வொரு கோப்புக்காகப் பிரித்துப் பிரித்துப் பார்த்தான். ஏனோ சிவார்ப்பணாவிற்கு அவன் தன்னைத் தவறாக நினைப்பது பிடிக்கவேயில்லை. ஏதோ குற்றம் செய்தவள் போல,

 

“இதோ பாருங்கள்… எனக்கும் ரகுவுக்குமிடையில் எதுவும்… எதுவுமே இல்லை. அவன் என்னுடைய நல்ல தோழன்… அதைக் கருத்தில் கொண்டுதான் பாய்ஃப்ரென்ட் என்றேன்… மற்றும் படி நீங்கள் நினைப்பது போலத் தவறாக…அந்த காதல் கத்தரிக்காய் எதுவும் இல்லை… நீங்கள் தப்பர்த்தத்தில் கேட்டதும், கோபத்தில் பொய் சொன்னேன்… தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள்” என்றாள் பெரும் கலக்கத்துடன்.

 

அவனோ தான் படித்துக்கொண்டிருந்த ஃபைலில் இருந்து பார்வையைச் சற்று விலக்கி, அவளை ஏறிட்டுவிட்டு, மீண்டும் அந்த ஃபைலின் மீது தன் கவனத்தைச் செலுத்தி,

 

‘இதை நம்பச் சொல்கிறாயா?’ என்பதுபோலப் பார்க்க,

 

“கடவுளே… ரகு என்னுடைய காதலன் இல்லை என்றால் அது உங்கள் மண்டைக்குள் ஏறவில்லையா? அவன் எனக்கு ஒரு நல்ல நண்பன் மட்டுமே. அதைச் சொன்னால் ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்… நீங்கள் நம்பவேண்டுமானால் நான் என்ன செய்யவேண்டும்? சொல்லித் தொலையுங்கள்,” என்று சலிப்புடன் கூறியவளுக்கு ஏனோ இயலாமையால் விழிகள் கலங்கின.

 

“ஐ நீட் எவிடன்ஸ்… எனக்கு ஆதாரங்கள் வேண்டும்… உன்னிடம் இருக்கின்றனவா?” என்றவனின் பார்வை, மாட்டியிருந்த அந்த பெரிய படத்திலும், அந்த ஆல்பத்திலும் நிலைத்துப் பின் அவள் முகத்தில் மையமிட்டு நின்றன.

 

அவளுக்கு அவனை வெறிக்கத்தான் முடிந்தது. அவளிடம் ஆதாரம் என்று கேட்டால் எங்கேயென்று போவாள்… அதுதான் ரகு இவனுக்குச் சாதகமாக எல்லாவற்றையும் மாட்டவைத்ததுமட்டுமல்லாமல் இவளையும் சிக்க வைத்துவிட்டானே… இதை மீறி அவள் என்ன சொன்னாலும் நம்பவா போகிறான்…? சோர்வுற்றவளாக, இவனுடன் பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டவளாக, அந்த ஆல்பத்தை எடுப்பதற்காகத் தன் கரத்தை நீட்ட, உடனே   அவளுடைய நோக்கம் புரிந்து, அவனும் அந்த ஆல்பத்தின் மீது தன் கரத்தை வைக்க, அவன் கரத்தின் மீது இவளின் வெண்கரம் நச் என்று விழுந்தது.

 

அந்த மாநிறம் கொண்ட, பெரிய கரங்களின் மீது, இவளுடைய சிறிய வெண் கரம் பதிந்திருக்க, அதைப் பார்க்கும் போது, அகன்ற பாறைமீது பூத்த பனி மலர் போலப் பாந்தமாக இருந்தது.  கூடவே அவனுடைய கரத்தின் வெம்மையில் இவள் உள்ளம் சொல்ல முடியாத ஒரு அவஸ்தையில் சிலிர்த்துத்தான் போனாள்.

 

பிறகுதான் உணர்வு வர, வேகமாகத் தன் கரத்தை பட் என்று விலக்கி,

 

“எனக்கு அந்த ஆல்பம் வேண்டும்…” என்றாள் மெல்லிய குரலில்.

 

“அடேங்கப்பா… உன் காதலன் உன்னை எப்படி ரசித்திருக்கிறான் என்பதைப் பார்க்க, அவ்வளவு ஆவலாக இருக்கிறதா என்ன?” என்றவனின் குரலில், மெல்ல மெல்ல அவளுடைய பொறுமை கரையத் தொடங்கியது.

 

“மாரித்தவக்கை போலக் கத்தி, உண்மையைக் கூறியாகிவிட்டது. இனியும் நம்பமாட்டேன் என்று அடம்பிடிப்பவனிடம் என்னத்தைக் கூறிப் புரியவைக்க முடியும்? சலிப்புடன் அவனை ஏறிட்டவள்,

 

“காதல் ஒன்றும் தவறான விடயமில்லை மிஸ்டர் அநபாயதீரன். அதே வேளை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றி உங்களுடன் விவாதிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை…” என்றவள் அவன் முன்னால் தன் கரத்தை நீட்டி,

 

“தயவு செய்து அந்த ஆல்பத்தைக் கொடுங்கள்…” என்றாள் அதிகாரமாக.

 

“எதற்கு? இது எனக்குக் கிடைத்த ஆதாரம்… இதை எப்படி உன்னிடம் கொடுப்பேன்…” என்றான் அவன் பெரும் அலட்சியமாக.

 

“வட் டிட் யு மீன்…?” என்று இவள் புரியாமல் கேட்க,

 

“மீனும் இல்லை சிக்கனும் இல்லை… ரகுவைப் பற்றிய விசாரணை வருகிறபோது இந்த ஆல்பம் ஒரு தடயமாகக் கூட இருக்கலாம். அதை நான் உன்னிடம் கொடுத்தேன் என்றால், ரகு எப்படிக் கிடைப்பான். சாரி… இதை உன்னிடம் கொடுப்பதாக இல்லை…” என்றதும், சிவார்ப்பணாவின் முகம் வெளிறிப்போனது. கூடவே கோபத்தில் செந்நிறம் கொண்டது.

 

“மிஸ்டர்… என்ன உளறுகிறீர்கள்… மரியாதையாக அந்த ஆல்பத்தை என்னிடம் கொடுங்கள்…” என்றாள் அடக்க முடியாத ஆத்திரத்துடன்.

 

“ஐயோ பயமாக இருக்கிறதே…!” என்று கிண்டலடித்தவன்,  பின் தன் உயரத்திற்கு ஏற்ப நிமிர்ந்து நின்றவனாக,

 

“கொடுக்கிறேன்… பட்… ரகு எங்கே என்று சொல்லு…” என்றான்.

 

“கடவுளே… ரகு எங்கே என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்த ஆல்பத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனுக்குத் தொலைப்பேசி எடுத்து வாங்கு வாங்கென்று வாங்கியிருப்பேனே… சத்தியமாக அவன் எங்கே என்று எனக்குத் தெரியாது மிஸ்டர் அநபாயதீரன்… என்னை நம்புங்கள். தயவு செய்து இந்த ஆல்பத்தைக் கொடுங்கள்…” என்றவளுக்கு அவனிடம் கெஞ்சக் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் அவனோ,

 

“உன் மீது அன்பில்லாமலா இப்படிக் காதல் காவியம் எல்லாம் எழுதி வைத்திருப்பான்… இதை நான் நம்பவேண்டுமா…” என்று அவன் மறுப்பாகத் தலையாட்ட, சிவார்ப்பணாவிற்கு ஓ வென்று வந்தது.

 

முடிந்தால். அந்த ஆல்பத்தை அப்போதே, அங்கேயே எரித்துச் சாம்பலாக்கித் தன் கோபத்தைத் தணித்துவிடவேண்டும் போலத் தோன்றியது. ஆனால் அதைச் செய்ய முடியாமல், அவள் கோபத்தைப் பெருக்கிவிட்டவாறு முன்னால் நின்றிருந்தான் அந்த வில்லன். ஆமாம்… அவன் வில்லன்தான்… அதுவும் அவளுக்குப் பெரிய வில்லன். மன்னிக்க முடியாத வில்லன். சக்தியிருந்தால், விழிகளாலேயே எரித்துவிடும் அளவிற்குக் கொடுமையான வில்லன்.

 

இவனிடம் கோபத்தைக் காட்டியும் பயனில்லை, இளக்கத்தைக் காட்டியும் பயனில்லை. நமக்கு வேண்டியதை நாம்தான் பெற வேண்டும். மயிலே மயிலே இறகு போடு என்றால் அது போடுமா என்ன? பறிக்கவேண்டியதுதான்…’ என்று சிந்தித்தவள், அதை உடனே செயல்படுத்தத் துணிந்தாள்.

 

“நான் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டீர்களா?” என்றவள், முடிந்த அளவு வேகத்தில், அவன் கரத்திலிருந்த ஆல்பத்தைப் பறிக்க முற்பட்டாள்.

 

அவளுடைய நோக்கம் புரிந்துகொண்ட அநபாயதீரன் வேகமாக ஆல்பத்தை மேலே தூக்க, அதைப் பறிக்க முயல்வதற்காகத் தன் கரத்தை மேலே நீட்டினாள். அந்தோ பரிதாபம். அவன் கரம் சிறிதும் எட்டவில்லை. காலின் பெரு விரலால் நின்றவாறு கையை நீட்டிப் பார்த்தாள்.

 

‘படுபாவி… பனை மரம் போல வளரவில்லையே என்று யார் அழுதார்கள்… இவன் தின்று வளர்ந்தானா, இல்லை வளர்ந்து தின்றானா என்று கூடப் புரியவில்லை… சே…’ என்று மனதிற்குள் திட்டியவாறு, மேலும் எக்கி, அவனுடைய கரத்தைப் பற்ற முயல, அப்போது பரிதாபமாகச் சமநிலை தவறி, அவன் முன் உடலோடு நச் என்று மோதுப்பட்டு நின்றாளே தவிர, அவளுடைய விரல் நகம் கூட, அவனுடைய முழங்கைக்கு மேல் நெருங்கவில்லை.

 

அதே நேரம், தன் மீது மோதுப்பட்டு நின்றவளின் இடையைச் சுற்றித் தன் இடக்கரத்தைப் போட்டுத் தன்னோடு இறுக்கிக்கொண்டவன்,

 

“ஹே பார்த்து…” என்று எச்சரிக்கை செய்தானன்றி, ஆல்பத்தைத் தாங்கிய, அவனுடைய வலது கை, ஒரு இஞ்சி தன்னும் கீழே இறங்கவில்லை.

 

அவன் தன்னை அணைத்தவாறு இருக்கிறான் என்கிற எண்ணமேயில்லாமல், அவன் அணைப்பிலிருந்தவாறே, தன் கரத்தை நீட்டி ஆல்பத்தைப் பறிக்க முயன்றாள். அவளுடைய உச்சந்தலை, அவனுடைய நாடியை மட்டும் உரசியதேயன்றி, வெற்றியெனவோ, பூஜ்யம்தான்.

 

அவன் உயரத்துடன் அவளால் எப்படிப் போட்டியிட முடியும். அவன் ஆலமரம் போலவும், இவள் அந்த ஆலமரத்தில் படர முயன்ற கொடிபோலவும் இருந்தாளேயன்றி, அவனை எட்டித் தொடும் அளவுக்கு அவள் உயரம் இடம் கொடுக்கவில்லை.

 

இயலாமையால் முகம் சுருங்க, விழிகள் நனைய, அவனை அண்ணாந்து பார்த்து,

 

“மிஸ்டர் பிகேவ் யுவர் செல்ஃப். மரியாதையாக அந்த ஆல்பத்தைத் தாருங்கள்…” என்றாள் முடிந்த அளவு தன் அழுகையை மறைத்து கடுமையைக் குரலில் காட்டி.

 

ஒரு கணம் கனிந்த அவன் முகம், அந்த ஆல்பத்தில் கண்ட படங்களும், அதில் எழுதியிருந்த கவிதைகளும் நினைவுக்கு வர, மீண்டும் கடினமானது.

 

தூக்கிய ஆல்பத்தை இறக்கியவன் அவளை ஏளனப் புன்னகையுடன் பார்த்தான்.

 

“என் கரத்தில் கிடைத்த இந்தத் தடயத்தை எப்படி லூஸ் பண்ணுவேன் என்று நினைத்தாய்?” என்றவனை முறைத்தவளுக்கு அப்போதுதான் தான் அவனுடைய அணைப்பில் சிக்குண்டிருப்பது புரிந்தது.

 

அவசரமாக அவனிடமிருந்து பிரிந்தவள், சற்றுத் தடுமாறிப் பின் தன்னை நிலைப்படுத்தியவளாக,

 

“என்ன உளறுகிறீர்கள்… என் படம் நிறைந்த ஆல்பம் உங்களுக்குத் தடயமா… கொடுங்கள் அதை என்னிடம்…” என்று மீண்டும் அவனிடம் பறிக்க முயல வேகமாக அதை மீண்டும் மேலே தூக்க முயன்றபோது, தூக்கிய வேகத்தில் அந்தப் பெரிய ஆல்பத்தின் கூர் முனை சிவார்ப்பணாவின் புருவங்களுக்கு மத்தியில் பலமாகத் தாக்கப் பொறி கலங்கியவளாக, ஒரு விநாடி அதிர்ச்சியில் சிலை போல நின்று விட்டாள்.

 

அதன் பிறகு சுளீர் என்கின்ற வலி அவள் முகம் முழுவதும் பரவ, ஒரு கரத்தால் நெற்றியைப் பற்றிக்கொண்டு மறு கரத்தால் அருகே நின்றிருந்தவனின் சட்டையைப் பற்றித் தன்னை நிலைப் படுத்த முயன்றாள்.

 

அநபாயதீரனும் இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அதிர்ச்சியுடன், ஏற்கெனவே தன் மீது விழுந்தவளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு, தன்னோடு இறுக்கியவன்,

 

“ஐ ஆம் சாரி… அர்ப்பணா… ரியலி சாரி…” என்றவாறு, கரத்திலிருந்த ஆல்பத்தைத் தட்டில் போட்டுவிட்டு, அவளுடைய நெற்றியில் படிந்திருந்த கரத்தை மெதுவாக விலக்கிப் பார்க்க, அவளுடைய உள்ளங்கையில் படிந்திருந்த இரத்தத்தைக் கண்டதும், தன் பல்லைக் கடித்து, ‘டாமிட்’ என்று முனங்கியவனாக, அவளை அணைத்துச் சென்றவாறே சுழல் நாற்காலியில் அமர்த்தினான்.

 

அந்த அறைக்குள்ளேயே மருந்துப் பெட்டி ஏதாவது இருக்கிறதா என்று தேடினான்.

 

புருவ மத்தியில் தாக்குப் பட்டதால் வலியுடன் சேர்ந்து தலையிடியும் ஆரம்பித்திருக்கத் தலையை அழுந்தப் பற்றியவாறு அமர்ந்திருந்தாள் சிவார்ப்பணா.

 

சொற்ப நேரத்தில் மருந்துப் பெட்டியுடன் சிவார்ப்பணாவை நெருங்கியவன், அதிலிருந்த பஞ்சை எடுத்து, வழிந்து கொண்டிருந்த இரத்தத்தைத் துடைக்க முயன்றான்.

 

அவன் மீது ஏற்கனவே கொலைவெறியில் இருந்தவளுக்குப் புதிதாக ஏற்பட்ட வலியும் சேர்ந்துகொள்ள, வேகமாக அவன் கரத்தைத் தட்டிவிட்டவள்,

 

ஹெள டெயர் யு…” என்றவாறு அவனுடைய மார்பில் தன் இரு கைகளையும் முஷ்டியாக்கி முடிந்த வரைக்கும் பலமாக அவனை அடிக்கத் தொடங்கினாள்.

 

அவள் அடித்த வேகத்தில், கதிரை திரும்ப, அவள் சமநிலை தவறுவது புரிந்தவனாக, சட் என்று கதிரை திரும்பாதவாறு அழுந்தப் பிடித்துக்கொண்டான் அநபாயதீரன். அது எதையும் கருத்தில் கொள்ளாத சிவார்ப்பணா,

 

“ஐ கில் யு… ஐ கில் யு…” என்று மாறி மாறிக் குத்தத் தொடங்கியவளுக்கு, இறுதியில் அவள் கரங்கள்தான் வலித்தனவே தவிர, வாகாக அவள் அடிப்பதற்கு ஏதுவாக நின்றிருந்தவனின், உடலிலிருந்த விறைப்பு எள்ளளவும் குறையவில்லை. கூடவே, அவன் உதட்டில் தோன்றியிருந்த மெல்லிய புன்னகையும் வாடவில்லை.

 

இறுதியில் சோர்ந்து போய், பெரு மூச்சு வாங்க, அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

முடிந்த வரை பலமெல்லாம் சேர்த்து அவனைக் குத்தியாயிற்று. அவனோ, கொசு கடித்த உணர்ச்சியுடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

தன்னை முறைத்துக்கொண்டிருந்தவளின் அழகில் தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தவன், எதிலிருந்தோ  வெளி வந்தவனாகத் தன் தலையைக் குலுக்கி,

 

“யு பிகேவிங் லைக் எ கிட்…” என்று கூறியவன் சற்று நேரம் அவள் தன்னை ஆசுவாசப்படுத்த நேரம் கொடுத்தவனாக, ஆர் யு ஃபீலிங் பெட்டர் நவ்?” என்று கேட்டான். அவள் பதில் கூறாது உதடுகள் நடுங்கத் தரையைப் பார்த்துக்கொண்டிருக்க, தன் கரத்திலிருந்த பஞ்சைத் தூக்கிக் காட்டி, “இப்போது உன்னுடைய காயத்தைத் துடைக்கலாமா… “ என்றவாறு கரத்தைக் காயத்தை நோக்கி எடுத்துச் செல்ல,

 

“நோ… டோன்ட்… டோன்ட்… எவர்… டச் மி… உங்கள் உதவி எனக்குத் தேவையில்லை… கெட் அவுட் ஃப்ரம் ஹியர்… எனக்கு… எனக்கு உங்கள் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை… ஐ ஹேட் யு.. ஐ ஹேட் யு… ஐ ஹேட் யு…” என்றவளின் குரல் பெரிதும் அடைத்துப் போனது. ஓ என்று அழவேண்டும் போலத் தோன்றியது. அதுவும் இந்த வில்லனுக்கு முன்பாக அழவும் பிடிக்கவில்லை.

 

“நான் கொஞ்சம் தனியாக இருக்கவேண்டும்… ப்ளீஸ்… லீவ் மி எலோன்…” என்று கொதிப்புடனும், வேதனையுடனும் கூடவே எழுந்த அழுகையுடனும், கூறியவள், சுள்ளென்று தெறிந்த காயத்தில் கரம் படாதவாறு நெற்றியை அழுத்திக் கொடுக்கத் தொடங்கினாள்.

 

“கமோன் அர்ப்பணா. உன்னுடைய கோபத்தைக் காட்ட இதுவா நேரம். இதோ பார்… இரத்தம் வழிந்துகொண்டிருக்கிறது. இதைத் துடைத்து காயம் எந்த அளவிற்கு ஆழமாக இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இல்லை என்றால்… நல்லதல்ல” என்றவனை எரிச்சலுடன் பார்த்தவள்.

 

“இது வெறும் உடலில் ஏற்பட்ட காயம் மட்டும்தான் மிஸ்டர் அநபாயதீரன். உள்ளத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட யாரும் கிடையாது… அதைப்பற்றி நான் வருந்தவுமில்லை. ப்ளீஸ்… ஐ பெக் யூ… தயவு செய்து என்னுடைய ஆல்பத்தைக் கொடுத்துவிட்டு வெளியே செல்கிறீர்களா?” என்றாள் பெரும் சோர்வுடன்.

 

“ஓக்கே… ஓக்கே… உன்னிடமே தருகிறேன். அதற்கு முன்பாக இந்தக் காயத்தைச் சுத்தமாக்குவதற்கு நீ அனுமதிக்கவேண்டும்…” என்று பேரம் பேசியவனை முறைத்தாள் சிவார்ப்பணா.

 

“ஐ கான்ட் பிலீவ் திஸ்… ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது…” என்று முணுமுணுத்தவள், எதையாவது செய்து தொலை என்பது போல அவன் பக்கமாகத் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

 

அழுத்தமான உதடுகளும், கோபத்தில் சீறிய விழிகளும், நடுவிலே தெரிந்த வலியும் அவனை ஏனோ இம்சித்தன.

 

“குட்…” என்று பாராட்டியவன், அவளுடைய காயத்தை மெதுவாகத் துடைத்துவிட்டான்.

 

அவனுடைய வலிமையான கரங்கள் மென்மையாக அவள் காயத்தைத் துடைத்தபோது, சிவார்ப்பணாவிற்கு சில கணங்கள் மூச்சே எடுக்க முடியவில்லை. அவனுடைய மெல்லிய ஸ்பரிசம் அவளைப் பெரிதும் இம்சித்தன.

 

இப்படித்தானே அன்றும் அவளை எத்தனை மென்மையாகக் கையாண்டான்.

 

மீண்டும் மனம் ஆறுமாதங்களுக்கு முன்பு சென்று அதிலே சஞ்சரிக்க முயல, இறுகியிருந்த முகம் சிறியதாக இளகியது. தன் காயத்தின் மீது அதீத கவனத்துடன் துடைத்துக் கொண்டிருந்தவனை, தன் விழிகளை மேல் தூக்கி இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தப் பேதை.

 

கொஞ்ச நேரத்தில் காயத்தை முழுதாகத் துடைத்தவன்,

 

“நொட் பாட்… தையல் போடும் அளவிற்குப் பெரிதாகத் தெரியவில்லை. இருந்தாலும் பராமரிப்பு அவசியம்…” என்றவன் அந்தப் பெட்டிக்குள் இருந்த அன்டிசெப்டிக் க்ரீமைக் காயத்தில் மெதுவாகத் தடவிக் பிளாஸ்டர் போட்டான்.

 

“இப்போ எப்படி இருக்கு… ஆர் யு ஃபீலிங் குட்?” என்று கேட்டவன் கடை பரப்பியிருந்த பொருட்களை மீண்டும் அந்த மருந்துப் பெட்டியில் இட்டு மூடி வைத்துவிட்டு இரத்தம் தோய்ந்த பஞ்சினை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு திரும்ப, தன்னுடைய வலது கரத்தை அவன் முன்னால் நீட்டினாள் சிவார்ப்பணா.

 

ஏன் நீட்டுகிறாள் என்பதைப் புரிந்துகொள்ளாதவன் போன்று, அந்தக் கரத்தில் தன்னுடைய பலம் பொருந்திய வலது கரத்தை வைக்க, சிவார்ப்பணாக வேகமாக அதைத் தட்டிவிட்டு அவனை முறைத்தாள். அவன் மீது இளகியிருந்த மனம் மீண்டும், கடுமையைத் தத்தெடுத்துக்கொண்டது.

 

“உங்களுடன் விளையாட எனக்கு நேரமில்லை மிஸ்டர்… மரியாதையாக ஆல்பத்தைக் கொடுங்கள்…” என்றாள் கடுமையாக.

 

“ஆல்பமா… எந்த ஆல்பம்…” என்றான் அவன் புரியாதவன் போன்று.

 

(12)

 

அதைக் கேட்டதும் வாயடைத்துப் போனாள் சிவார்ப்பணா. “மிஸ்டர்… டூ யூ திங்க் தட் ஐ ஆம் எ ஃபூல்… ஸ்டாப் ப்ளேயிங் வித் மி… மரியாதையாகச் சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள்… இப்போது அல்பத்தைத் தரப் போகிறீர்களா… இல்லை…”  என்று பொறுமையிழந்தவளாகக் கேட்க, அவனோ, பக்கத்தில் இருக்கும் யாருடனோ, இவள் கோபமாகப் பேசுகிறாள் என்பது போலத் தன் முகத்தை வைத்துக்கொண்டானேயன்றி, அவளுடைய கோபம் அவனைக் கடுகளவும் பாதித்ததாகத் தெரியவில்லை.

 

கொஞ்சம் கூட, சொன்னதை மதிக்கவில்லை என்கிற குற்ற உணர்ச்சியோ, இல்லை பயமோ, எதுவும் அவனிடத்தே தெரியவில்லை. மாறாக எழுந்து நின்றவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி,

 

“தராவிட்டால் என்ன செய்வாய்?” என்று கேட்க, அவன் தன்னைக் கண்டு நகைக்கிறான் என்பதைக் கண்டுகொண்டவள், அதற்கு மேல் பொறுமை காக்க முடியாது எழுந்து விரைந்து சென்று, தன் கைப்பையிலிருந்து கைப்பேசியை வெளியே எடுத்து அதில் ஏதோ பல இலக்கங்களை அழுத்தத் தொடங்கினாள்.

 

இவனோ தன் நிலையிலிருந்து சற்றும் மாறாமல், அப்படியே நின்றவாறு,

 

“உன்னை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை அர்ப்பணா…” என்றான் சற்றுக் கிண்டலுடன். அவளோ அவனை வெறித்துப் பார்க்க,

 

“லிசின்… நான் சிரிக்காமல் இருக்கக் கடுமையாக முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன்… இப்படி முறைக்காதே… இப்போது என்ன செய்கிறாய்? காவல் துறையை அழைக்கிறாயா? நீ அதிக புத்திசாலியோ என்று நினைத்தேன்… ஆனால், இல்லை என்று நிரூபிக்கிறாயே… ம்..” என்றான் கிண்டலை மறைக்காத குரலில்.

 

அந்த நிலைமையில் அவனுடைய கிண்டலைத் தாங்கும் சக்தி சத்தியமாக அவளுக்கு இருக்கவில்லை. ஏதாவது கைக்குக் கிடைத்தால், அதைக் கொண்டு அவன் மண்டையில் ஒன்று போடவேண்டும் என்று மனம் பரபரக்க, அதை அவன் புரிந்துகொண்டவனாகத் தன் கரங்களை விலக்கி, சற்றிற்கு முன்பாக, அவன் வைத்து விளையாடிக்கொண்டிருந்த, பேப்பர் வெய்ட்டரை எடுத்து,

 

“காச்.. இட்…” என்றவாறு அவளை நோக்கி மெதுவாக எறிய, தன்னையும் மறந்து அதைப் பிடித்தவள் புரியாமல், அநபாயதீரனை ஏறிட்டுப், பார்த்தாள்.

 

“நீதான் என் மீது எதையாவது எறியவேண்டுமே என்று ஆசைப்படுகிறாயே…” என்றான் அவன்.

 

ஒரு கணம் திகைத்துப்போனாள் சிவார்ப்பணா. மறு கணம், தன் கரத்திலிருந்த பேப்பர் வெய்ட்டரை அவனை நோக்கி எறியவேண்டும் என்கிற வெறி வந்தாலும், அவன் எதிர்பார்ப்பதும் அதைத்தானே…’ சினத்துடன், தன்னைக் கட்டுப்படுத்தியவள், தன் கோபத்தைத் தணிக்க, தன்  கரத்திலிருந்த அந்தக் கல்லை அழுந்தப் பற்றினாள். ஆனால் கோபம் மட்டுப்பட மறுத்தது.

 

எதையோ சுடச் சுடச் சொல்வதற்காகத் தன் வாயைத் திறக்க வர, அவளை நோக்கித் தன் வலக்கரத்தை நீட்டி, அவள் பேச்சைத் தடுத்தவன்,

 

“காவல்துறைக்குப் போவதற்கு முன்பு, கொஞ்சம் யோசிக்கமாட்டாயா?” என்றான் அழுத்தமாக.  இப்போது அவனுடைய குரலில் அதீத இளக்காரம் தெரிய,

 

“என்ன உளறுகிறாய்? காவல்துறையை அழைக்க நான் ஏன் யோசிக்கவேண்டும்?” என்ற போது, கோபத்தில் அவளுக்குப் பெரு மூச்சு வேகமாக வெளிப்பட்டது.

 

அவளுடைய நிலையைக் கண்டு, தனக்குள் நகைத்தவன்.

 

“இந்த ஆல்பத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்று நினைக்கிறாய்? ரகுவைக் காணவில்லை. எங்கே போனான் என்ன செய்கிறான் என்கின்ற தகவல் எதுவும் யாருக்கும் தெரியவில்லை. இந்த நேரத்தில் இந்த ஆல்பத்தையும், அது இருந்த இடத்தையும் பார்த்தால், உனக்கும் ரகுவிற்கும் நிறையத் தொடர்பிருக்கிறது என்பது புரியும். உன்னைக் கைது செய்து விசாரிப்பார்கள். வார்த்தைகளாலேயே உன்னை குடைந்தெடுப்பார்கள்… தவிர இந்த கபேர்ட்டில் வேறு என்ன என்ன தடயங்கள் இருக்கிறதோ… சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்கப் போகிறாய் என்றால், தாராளமாக ஊதிக்கொள்… ஐ மீன்… பொலிசுக்கு கால் பண்ணு… வேண்டுமானால் என்னுடைய நண்பன் ஒருவன் ஆர்.சி.எம்.பி (RCMP – Royal Canadian Mounted Police) சீஃப் ஆஃபிசரைத் தெரியும்… வேண்டுமானால் அவருடைய இலக்கத்தைத் தருகிறேன்.. முயற்சித்துப் பார்க்கிறாயா? ” என்றவன் அந்தக் கபேர்டின் அருகே சென்றான்.

 

ஒவ்வொரு பொருட்களாக விலக்கி கவனமாக ஆராய்ந்தான். அவளிடமிருந்து எந்த அசைவும் வரவில்லை என்றதும், மெதுவாகத் தன் தலையைத் திருப்பி,

 

“என்ன யோசிக்கிறாய்? பயமாக இருக்கிறதா?” என்று விட்டுத் திரும்பி தன் தேடும் வேலையைத் தொடங்க, அவனை வெறுப்புடன் பார்த்தாள் சிவார்ப்பணா.

 

இவனை இரண்டாம் முறையாகச் சந்தித்து முழுதாக இருபத்துநான்கு மணி நேரம் ஆகியிருக்குமா? இந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒருத்தரின் மீது இத்தனை வெறுப்புத் தோன்ற முடியுமா? யெஸ்… தோன்றியிருக்கிறதே… இவன் மீது தோன்றியிருக்கிறதே… எல்லாம் அந்த ரகுவைச் சொல்ல வேண்டும்.

 

என்று அவனைச் சந்திக்க அவள் வீட்டிற்கு இவனை அழைத்தானோ, அன்றைக்குத் தொடங்கிய சனி… இன்னும் விடாமல் துரத்துகிறது… கடவுளே… கொஞ்சம் நிம்மதியாக இருக்க அருள் செய்யமாட்டாயா? இவனை எப்படியாவது என் கண்முன்னால் கொண்டு வந்து காட்டு என்று வேண்டினேன்தான்… மாபாதகம் செய்துவிட்டேன்… இப்போது கேட்கிறேன்… இவனை என் கண்ணுக்கு எட்டாத தொலைவில், எங்காவது தண்ணியில்லா காட்டுக்குத் தூக்கிச்சென்று போட்டு விடமாட்டாயா… ப்ளீஸ்… வேண்டுமானால், வரசித்தியில் உன்கு 108 தேங்காய் உடைக்கிறேன்… ஐ ப்ராமிஸ்…” என்று தனக்குள் கடவுளுடன் பேரம் பேசி வேண்டிக் கொண்டு, அங்கிருந்த, சுழல் நாற்காலியில், தொப் என்று அமர்ந்தவள், வலித்த நெற்றியைத் தடவி விட்டவாறு, கரத்திலிருந்த கல்லை உருட்டத் தொடங்கினாள்.

 

திடீர் என்று அவனிடமிருந்து ஒரு விசில் சப்தம் வர, சிவார்ப்பணா தலையைக் கையிலிருந்து எடுக்காமலே, திரும்பி எரிச்சலுடன் அவனைப் பார்த்தாள்.

 

அவனோ உள்ளே கைவிட்டு எதையோ குடைய, புரியாமல் எழுந்த சிவார்ப்பணாவிற்குத் தலை விண் விண் என்று தெறித்தது. வேகமாக அவனை நெருங்கியவளுக்கு அவனுடைய பரந்த முதுகு மறைக்க, ‘நந்தி’ என்று மனதிற்குள் வைதவாறு, அவனோடு ஒட்டியவாறு எட்டிப் பார்த்தாள். முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அதில் மாட்டியிருந்த அவளுடைய படத்தைக் கழற்றி ஓரமாக வைத்துக்கொண்டிருந்தான். அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை.

 

அவனுடைய அசாத்திய உயரம், அவளுடைய முயற்சியைத் தடுக்க, வேறு எதுவும், சிந்திக்காமல், என்ன செய்கிறோம் என்பது கூடப் புரியாமல், அவனுடைய தோள்மூட்டுக்குக் கீழாகக் கோழி தன் தலையைச் செருகுவது போலச் செருகி,

 

“ஒன்றும் தெரியவில்லையே… எதற்காக சீட்டியடித்தீர்கள்?” என்றாள் வியப்புடன்.

 

அவளுடைய செயலால், ஒரு கணம் அநபாயதீரனிடமிருந்து அசைவு நின்று போனது.

 

அவனுடைய அழுத்தமான கீழ்ப்பார்வை, அவளுடைய உச்சந்தலையை முறைத்துப் பார்த்ததை நல்லவேளை அவள் அறியவில்லை.

 

அவளோ, அடக்க முடியாத ஆர்வத்துடன் எப்படியோ குனிந்து நுழைந்து, அவனுக்கு முன்பாக வந்து நின்று, அவன் மேனியில் தன் உடல் உரசுவது கூடப் புரியாமல் எதைத் தேடுகிறோம் என்பது புரியாமலே அவளும் தேடினாள். ஆனாலும் எதுவும் தட்டுப்படவில்லை.

 

“தீரன்… என்ன இது? ஒன்றுமேயில்லையே… சும்மாவா சீட்டியடித்தீர்கள்” என்று எரிச்சலுடன் கேட்க, அவனிடமிருந்து பதில் வராது போகத் திருப்பிப் பார்த்தாள்.

 

அப்போதுதான் அவளுக்குத் தான் நிற்கும் நிலையே உறைத்தது. ஒரு கணம் அவளும் ஆடிப்போனாள். அவனுடைய வலுமிக்க கரங்களுக்குள் தானாகவே சிறைப்பட்டிருந்தாள் அந்தப் பேதை. அவனுடைய விழிகளோ அக்குவேறு ஆணிவேராக அவளை ஊடுருவிக்கொண்டிருந்தன.

 

அவனுடைய அருகாமையைக் கண்டதும், பதட்டத்துடன் தடுமாறிய விழிகளும், அச்சத்தில் சற்று விடைத்த நாசியும், துடித்த மெல்லிய சிவந்த இதழ்களும் சங்குக் கழுத்தை அரவணைத்த மெல்லிய சங்கிலியும், அதற்குக் கீழே படபடப்பால் மேலும் கீழுமாக ஏறி இறங்கிய மார்புகளும், நடுவே மின்னிய சங்கிலிப் பென்டனும்… என்று அவனுடைய கவனத்தில் பதிய, மீண்டும் அவனுடைய பார்வை, சிவார்ப்பணாவின் விழிகளும் ஐக்கியமாகிச் சங்கமிக்க முயன்றன.

 

அவனுடைய விழிகளின் மாற்றங்களை நொடியில் உணர்ந்துகொண்ட சிவார்ப்பணாவிற்கு ஐந்தும் கெட்டது.

 

‘ஐயையோ… ஏய் சிவார்ப்பணா… உன் ஆர்வக்கோளாருக்கு ஒரு அளவேயில்லையா? என்ன செய்கிறோம் என்பது கூடப் புரியாமல், இப்படி நீயாக வந்து சிக்கிக்கொண்டாயே… மக்கு ’ என்று தன்னையே கடிந்தவள், ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிந்தியவாறு,

 

“சா… சரி.. நான்… வந்து…” என்று திக்கித் திணறிக் கூறியவாறு அவன் கரங்களை விலக்கி வெளியேற முயன்றவளுக்கு, அந்தப் பலம் பொருந்திய இரு தூண்களையும் அணு அளவு தன்னும் விலக்கமுடியவில்லை.

 

அவசரமாகக் குனிந்து வெளியேற முயன்றவளை, மேலும் நெரித்தவாறு நிற்கப் பதறிப்போனாள் சிவார்ப்பணா. பயத்தில் முகம் வெளிற, வியர்த்துக் கொட்ட,

 

“எ… என்ன இது… வி… விடுங்கள்…” என்று அவள் குரல் தந்தியடிக்கக், அவனோ அவள் முகத்திலிருந்து தன் பார்வையைச் சிறிதும் விலக்கினானில்லை.

 

“உன்னை என்னுள் சிறைபடச் சொல்லி நானா சொன்னேன்… இல்லை… உன்னைப் பலவந்தமாகப் பிடித்து இப்படி நிறுத்தினேனா? ம்…” என்று கேட்டவனின் கூரிய விழிகள் இப்போது சிவந்து துடித்த அவள் இதழ்களில் நிலைத்து நின்றன.

 

“என் பாட்டில் சும்மா தானே இருந்தேன்… உன்னையார் வந்து உசுப்பேற்றச் சொன்னது?” என்றவனின் இதழ்களில் கிண்டல் புன்னகை மலர, அவளை நோக்கிக் குனியத் தொடங்கினான்.

 

“இ… இல்லை… எ.. என்ன இது… ஒரு… அ… அன்னியப் பெண்ணிடம்… இப்படித்தான்…” என்றவள் அதற்கு மேல் கூற முடியாமல், அவனுடைய முகம் அவளை நோக்கி மேலும் குனிந்திருக்க, அவசரமாகத் தன் வலக் கரத்தைத் தன் இதழ்களின் மீது வைத்தவள் தலையை மட்டும் மறுப்பாக ஆட்ட, இவனுடைய கிண்டல் சிரிப்பு மேலும் விரிந்தது.

 

“யாருமற்ற தனிமை… நீ பெண் நான் ஆண்… சூழ்நிலை கூட நமக்குச் சாதகமாக இருக்கின்றது… ஒரு அழகிய பெண்ணைக் கரங்களுக்குள் வைத்தவாறு விரதம் காக்க நான் முனிவனும் அல்ல… இயலாதவனும் அல்ல” என்று அவன் கூற, அவள் விழிகள் பயத்தில் மேலும் விரிந்துகொண்டே சென்றன.

 

கால்கள் பலமிழந்துவிடுவன போல நடுங்கின. வேகமாக அவன் மார்பில் இரு கரங்களையும் பதித்து, அழுத்தித் தள்ளிவிட முயல, அதுவரை அவளுக்கு அணையாகப் பதித்திருந்த தன்னுடைய வலக்கரத்தை விலக்கித் தன்னைத் தள்ளிவிட முயன்ற கரங்களைப் பற்றியவாறு அவளை ஏறிட, அவளோ கிடைத்த இடைவெளியில் பாய்ந்து வெளியேற முயன்றாள். அவனோ அவளுடைய முயற்சியைச் சுலபமாகத் தடுத்துத் தன்னை நோக்கி இழுக்க, இப்போது மீண்டும் வேகமாக அவன் உடலுடன் முட்டி நின்றாள் சிவார்ப்பணா.

 

அவனுடைய வேகத்தைக் கண்டதும், அவளுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது. தெரியாமல் வந்து சிக்குப்பட்டுவிட்டோம் என்பது காலம் கடந்து புரிய, தன் பயத்தை மறைக்காமலே, அவனை ஏறிட்டாள் அந்த மெல்லிடையாள்.

 

இப்போது அவன் முகத்தில் தீவிரம் குடிகொண்டிருந்தது. அவளை அழுத்தமாக ஏறிட்டவன்,

 

“இப்போது… என்னுடைய உணர்வுகளுடன் விளையாடியது போல, பிற ஆண்களுடைய உணர்வுகளுடன் விளையாடாதே… எல்லோரும் என்னைப்போல நல்லவர்களாக, இருக்கமாட்டார்கள்… என்ன புரிந்ததா?” என்று அவன் கடுமையாகக் கூற, அந்தக் குரலில் அதிர்ந்தவளாக, வேறு எதுவும் பேச முடியாதவளாக, கோவில் மாடு போலப் பலமாக, ஆம் என்று மேலும் கீழுமாக ஆட்டினாள்.

 

அவளுடைய பாவனையில் ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும், ரகுவின் நினைவு வர, ஏதோ எண்ணியவனாக அவனுடைய உடல் இறுகியது.

 

“இப்படி… என் கூட நின்றது போல, ரகுவுடனும் நின்றிருக்கிறாயா?” என்று அடுத்த கேள்வியைக் கடுமையாகக் கேட்க, சிவார்ப்பணா முதலில் அதிர்ந்து, பின் முகத்தில் தீப்பொறி பறக்க, அவனைப் பார்த்து விழிகளால் எரித்தாள்.

 

அவளைப் பற்றி அவன் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான். எல்லா ஆண்களுடனும் உரசிக்கொண்டு திரியும் அந்தமாதிரிப் பெண் என்றா? சினம் தலைக்கேற, அவமானமும், வேதனையும் போட்டிப்போட, அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றவள் முடியாமல்,

 

“விடுங்கள் என்னை…” என்று குரல் கம்மக் கூறியவளை இரக்கமற்றுப் பார்த்தான் அவன்.

 

“நான் கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை அர்ப்பணா… ரகுவுடன் என் கூட நின்றது போல நின்றிருக்கிறாயா?” என்றான் சற்றும் தன் கடினத்தைக் குறைக்காமல்.

 

அதைக் கேட்க இவன் யார்? கோபம் கொப்பளிக்க,

 

“அதுதான் சொன்னேனே, நான் அவனுடைய கேர்ள்ஃப்ரன்ட் என்று… மறந்துவிட்டீர்களா?” என்று அவள் பதிலாகக் கசப்புடன் கூற, ஒரு கணம் விறைத்தவன், பின் இயல்பு நிலைக்கு வந்தவனாக, அவளைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான்.

 

“இது நான் கேட்ட கேள்விக்குப் பதிலில்லையே…” என்றான்.

 

“பதிலை அதிலிருந்து தேடிக்கொள்ளுங்கள்…” என்றாள் இவள் பதிலுக்கு.

 

இப்போது அவளை விட்டுத் தள்ளி நின்றுகொண்டு தன் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவன், கால்களைச் சற்று அகட்டி நின்று,

 

“அப்படியா…? சற்றிற்கு முன், காதலி அல்ல என்று மறுத்தாய்… இப்போது ஒத்துக்கொள்கிறாய் என்று எடுத்துக் கொள்ளவா” என்று அவன் கேட்கத்தான், அவன் எங்கே சுற்றி எங்கே வளைத்துக்கொண்டு வந்திருக்கிறான் என்பது புரிந்தது.

 

“கேர்ள் ஃப்ரன்ட் என்றுதான் சொன்னேனே காதலி என்று சொல்லவில்லை…” என்றாள் இவள் பதிலுக்கு.

 

“இரண்டும் ஒன்றுதான்…” என்று அலட்சியமாகச் சொன்னவனை, பொறுமையற்ற மூச்சுடன் பார்த்தாள் சிவார்ப்பணா.

 

அவளை வைத்தே அவளுடைய வாயைப் பிடுங்க முயல்கிறான். இல்லை இல்லை பிடுங்கியே விட்டான். வீம்பிற்காகச் சொன்ன பொய், அவளையே மாட்டிவிடப்போகிறது. இப்போது இதிலிருந்து எப்படித் தப்புவது? தான் மெது மெதுவாக ஒரு மீளமுடியாத ஒரு சுழிக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பது புரிந்தது. சாதாரணமாகத் தெரிந்த குழி இப்போது பெரும் ஆபத்து நிறைந்த புதை குழி என்பது காலம் கடந்து புரிந்தது. அதிலிருந்து அவளுக்கு மீட்சி இருக்கிறதா, இல்லையா என்று கூடத் தெரியவில்லை. ஆனாலும் தப்பியே ஆகவேண்டும். எப்படி? ஒன்றுமே புரியாமல் குழம்பினாள் சிவார்ப்பணா.

 

மனம் வலிக்க, வேகமாக விலகிச் செல்ல முயன்றவளின் கரத்தை ஒரு எட்டலில் சென்று பற்றியவன்,

 

“இன்னும் நான் முடிக்கவில்லை…  இதோ இந்த ரகசிய அறையின் திறப்பு எங்கே?” என்று கேட்க, ஒரு கணம் திகைத்தவள், பின் குழப்பத்துடன்,

 

“திறப்பா? அதுவும் ரகசிய அறையின்? ஏந்த ரகசிய அறை? என்றாள் புரியாமல்.

 

“அடேங்கப்பா… என்னமாக நடிக்கிறாய்?” என்று வியந்தவன், அந்த கப்பேர்ட்டில் அவளுடைய படத்திற்குப் பின்னாலிருந்த குறிப்பிட்ட சிறிய புள்ளி துளையைக் காட்டி, அதனுடைய திறப்பு…” என்றான்.

 

முதலில் சிவார்ப்பணாவிற்கு எதுவும் புரியவில்லை. அந்த சிறிய துளைக்கும், திறப்புக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பிக்கொண்டிருக்கும் போதே அவனுடைய பார்வை அவளுடைய மார்புகளுக்கு இடையில் தஞ்சம் புகுந்தது.

 

அவனுடைய பார்வை போன திசையைக் கண்டு, விதிர் விதிர்த்தவள், கழன்றிருந்த மேல் சட்டையின் இரு பொத்தான்களையும், நடுங்கும் விரல் கொண்டு மூடினாள்.

கூடவே, அவனை முறைத்துப் பார்க்க, அவனோ, அவளுடைய அதிர்ச்சியைச் சற்றும் கருத்தில் கொள்ளாது,

 

“கிவ் மி யுவர் செய்ன்..?” என்றவாறு அவள் முன்னால் தன் கரத்தை நீட்ட,

 

“வட்… என்னுடைய சங்கிலியா? “ என்றாள் குழப்பத்துடன்.

 

“இங்கே உன்னைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா என்ன? இல்லையல்லவா… அப்படியானால் உன்னுடைய சங்கிலியைத்தான் கேட்கிறேன்…” என்று கரத்தை இறக்காமல் கேட்க, இவளோ சங்கிலியைத் தன் வலக் கரத்தால் இறுகப் பற்றியவாறு,

 

“எதற்கு என் சங்கிலியைக் கேட்கிறீர்கள்?’ என்றாள் ஒரு வித கவனத்துடன்.

 

“சொல்கிறேன்… கொடு…” என்றதும்,

 

“நோ… நான் தரமாட்டேன்…” என்று உறுதியாகச் சொன்னவள், கொடுக்க முடியாது என்பது போலக் கால்களை இரண்டடி பின்னுக்கு வைத்தாள்.

 

எதற்காக அவளுடைய சங்கிலியைக் கேட்கிறான். ஒரு வேளை அதையும் வைத்துக்கொண்டு, எனக்கெதிரான சாட்சி என்று கூறி மிரட்டுவானோ…! யாரை நம்பினாலும் இவனை நம்பக் கூடாது…  இவனோடு இருந்தால்தானே இந்தப் பிரச்சனை… அதை விட…’ என்று முடிவு செய்தவள்,

 

“போதும் மிஸ்டர் அநபாயதீரன். ஐ ஆம் டன் வித் யூ… இனியும் உங்களுடன் மல்லுக்கட்ட நான் தயாரில்லை… குட் பாய்…” என்று வேகமாகத் திரும்பியவளின்  தோளில் கரத்தைப் பதித்து, தன் புறமாகத் திருப்பியவன், அவள் என்ன என்று எதிர் பார்ப்பதற்குள்ளாகவே, அவள் கழுத்திலிருந்து தொங்கிய சங்கிலியைப் பலமாக இழுத்தான்.

 

அதுவரை அவள் கழுத்தில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்த அந்த மெல்லிய சங்கிலி,

 

“எ… என்ன இது…” என்று அவள் தடுப்பதற்குள்ளாகவே, அவனுடைய கரத்தில் சத்தமில்லாது வந்து சேர்ந்தது.

 

அவன் வேறு அழுத்தமாக இழுத்ததால், கழுத்து வளைவில் சங்கிலி வெட்டி விட, அந்த எரிச்சல் அவளுடைய கோபத்தைப் பன் மடங்காக்கியது.

 

கொஞ்ச நேரத்திற்கு சிவார்ப்பணாவால் எதையும் நம்பமுடியவில்லை. இப்படி அந்த அநபாயததீரன் நடந்துகொள்வான் என்று அவள் சத்தியமாக நினைத்திருக்கவில்லை.

 

“யூ… ஸ்கௌன்ரல்… எத்தனை தைரியம்…” என்று அவள் சீறிக்கொண்டு, அவனை நோக்கி அறைவதற்காகத் தன் வலக்கரத்தை உயர்த்திய நேரம், அந்தக் கரத்தைத் தன் வலக்கரத்தால் பற்றி, ஒரு சுழற்று சுழற்ற, அவளும் சுழன்று அவன் முன்புறத்தோடு, மோதி நிற்க, பற்றிய அவளுடைய கரத்தை விடாமலே, தன் உடலோடு, அவளை இறுக்கியவாறு, புரியாத ஒரு வித ஏளனச் சிரிப்பைச் சிந்தியவாறு, மறு கரத்தில் வீற்றிருந்த அந்த சங்கிலியில் தொங்கிக்கொண்டிருந்த கீ டாலரைப் பிடித்து, கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருந்த அந்த சிறிய துவாரத்திற்குள் நுழைத்தான்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!