(39)
இரண்டு மாதங்களுக்குப் பிறகு,
“ஷ்… விக்டோரியா… டோன்ட் க்ரை… மை லிட்டில் பேபி பம்கின்…” என்று கீழே விழுந்து அழுத குழந்தையை இழுத்து அணைத்துச் சமாதானம் செய்து கொண்டிருக்க, கையில் இன்னொரு குழந்தையோடு வந்தாள் ஈவா.
“என்னாச்சு திகழ்…?” கேட்ட ஈவாவிடம், “ஓடிவந்ததில், விளையாட்டுப் பொருள் தடுக்கி விழுந்துவிட்டாள்…” சொன்னவாறு குழந்தையின் தலையை அழுந்த தேய்த்துவிட,
“காயம் ஏதாவது இருக்கிறதா?” என்றாள் ஈவா பதட்டத்தோடு.
“இல்லை ஈவா… சின்ன அடிதான்…” சொன்னவள், குழந்தையைச் சமாதானம் செய்து, தரையில் விட்டு விட்டு ஓரமாக அமர்ந்து விளையாடும் குழந்தைகளையே ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினாள் திகழ்வல்லபை.
அவள், அபராசிதனின் வீட்டை விட்டு வெளியேறியதும் முதலில் எங்கே போவது என்று தெரியாமல் விழிக்க, சட்டென்று மனதில் தோன்றியவள்தான் ஈவா. தற்போதைக்கு அவளை விட்டால் வேறு போக்கிடம் எதுவுமில்லை என்பதால் வினிப்பெக்கிற்கு வந்து சேர்ந்தாள்.
வாசலில் உயிரையே தொலைத்துவிட்டவள் போல வந்து நின்றவளைக் கண்டதும் ஈவா அதிர்ந்து போனாள்.
“திகழ்… உனக்கு என்னாச்சு…? ஆரா எங்கே” கேட்டவாறு அவளுடைய இரண்டு கரங்களையும் பற்றி வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, சென்றவள், இருக்கையில் அமர்த்திவிட்டு,
“உட்கார் இதோ வருகிறேன்…” என்று சமையலறைக்குள் நுழைந்து, கையோடு அவளுக்குக் காப்பி வார்த்துக்கொண்டு வந்து கொடுக்க, நடுங்கும் கரங்களால் அதை வாங்கியவளுக்குக் குடிக்கவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை.
“திகழ்… என்னாச்சு…? என்னிடம் சொல்லக் கூடியது என்றால் சொல்… குழந்தை எங்கே?” தவிப்புடன் கேட்க அதற்கு மேல் அடக்க முடியாமல் விசும்பிவிட்டாள் திகழ்வல்லபை.
பாய்ந்து வந்து அணைத்துக்கொண்ட ஈவா,
“ஈசி… ஈசி ஹனி…” என்று தட்டிக் கொடுக்க, அவள் தோள் சாய்ந்து கரைந்தவள், பின் தன்னை ஆசுவாசப் படுத்திவிட்டு விலகி அமர்ந்து கொண்டாள். சற்று நேரம் அங்கும் இங்கும் ஓடித் திரிந்த குழந்தைகளை ஏக்கமாகப் பார்த்தவள், நிமிர்ந்து ஈவாவைப் பார்த்தாள்.
“ஆரா… ஆரா இனி எனக்குச் சொந்தமில்லை ஈவா…” என்றாள் விரக்தியாக.
“வட்… என்ன சொல்கிறாய்… அது எப்படிச் சாத்தியம்…? அவன் உன்னுடைய மகன்… அவன் உனக்கு எப்படிச் சொந்தமில்லாதவனாவான்…?” கோபமாகக் கேட்க, விரக்திப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள் திகழ்வல்லபை.
“ஏன் என்றால்… அவன் என் உண்மையான குழந்தை இல்லை… அவன் என் சகோதரியின் குழந்தை…” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஈவா.
“திகழ்… என்ன சொல்கிறாய்?” கேட்க, அதற்கு மேல் எதையும் மறைக்க முடியாமல், மனதிற்கு ஆறுதல் வேண்டி அனைத்தையும் சொல்லி முடிக்க அவளையே பரிதாபமாகப் பார்த்திருந்தாள் ஈவா.
அவளுக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. குழந்தையின் நன்மைக்காக அவள் அவனுடைய அன்னையாக மாறியதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால் அபராசிதனின் பக்கத்திலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. அதனால் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல், கலங்கி நிற்க, அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜார்ஜிட்குக் கோபம் வந்தது.
“அது எப்படி அவர்கள் குழந்தையைப் பறித்து வைத்துக்கொண்டு உன்னை விரட்டுவார்கள்? இத்தனை நாட்களாக நீதானே அவனைப் பார்த்துக் கொண்டாய்…? அவன் உனக்குத்தான் சொந்தம்…! நீ வா திகழ்… உனக்காக நான் பேசுகிறேன். இப்போதே போய் குழந்தையை அழைத்து வந்து விடலாம்…” என்று சொல்ல, தன் கணவனைக் கோபமாகப் பார்த்தாள் ஈவா.
“பைத்தியம் போல உளறாதே ஜார்ஜ்… இவள் செய்தது ஆள் மாறாட்டம். அது காவல்துறைக்குத் தெரிந்தால் என்னாகும் என்று தெரியுமா? தவிர இவள் திகழ்வஞ்சியின் பெயரில் அவளுடைய உடைமைகளைப் பயன்படுத்தியிருக்கிறாள். அவள் தனக்குப் பயன்படுத்தினாளா, இல்லையா என்பது கேள்வியல்ல. அவள் வங்கி தொடக்கம், அரசாங்க வேலைகள் வரை திகழ்வஞ்சியின் பெயரில் செய்திருக்கிறாள். குற்றம் இவள் பக்கம் இருக்கிறது…” என்று கூற ஜார்ஜுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
“சரி ஈவா! இவள் திகழ்வஞ்சியாக மாறவில்லை என்றால், குழந்தையை அரசாங்கம் எடுத்திருக்கும். இவளுடைய வயதுக்குக் குழந்தையை கடைசி வரை கொடுத்திருக்க மாட்டார்கள். அவளும்தான் என்ன செய்வது?” என்றார் திகழ்வல்லபைக்குச் சாதகமாக.
“நானும் இவள் செய்தது தவறு என்று சொல்லவில்லை. எங்களுக்கு அவள் பக்கத்து நியாயம் புரிகிறது. ஆனால் சட்டம் அதையா பார்க்கப் போகிறது?” என்று கூற, இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் திகழ்வல்லபை.
சட்டத்தின் படி அவள் செய்தது தவறாக இருக்கலாம். ஆனால் அவளுடைய மனசாட்சியின் படி அவள் செய்தது சரி. திகழ்வஞ்சிக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காக்கவும், கடவுளின் அருளால் கிடைத்த அந்தப் பிஞ்சு உறவைப் பாதுகாக்க வேண்டியும் தன் பெயரை மாற்றியதில் எந்த விதத் தவறும் இல்லை. அவனுக்காக மட்டும் தான் அவள் தன் அடையாளத்தைத் தொலைத்தாள். இப்போது அவளை விடச் சிறந்த பாதுகாப்பு குழந்தைக்குக் கிடைத்துவிட்டது. இனி அவள் தேவை இல்லை. குழந்தையின் வாழ்க்கையில் அவளுடைய அதிகாரம் முடிந்து விட்டது. இனி இருக்கும் காலம் வரைக்கும், ஆராவை நினைத்து வாழ்ந்துவிட வேண்டியதுதான். ஆனால் அது அவளால் முடியுமா? அதை நினைக்கும் போதே நெஞ்சம் அடைத்துக் கொண்டு வந்தது திகழ்வல்லபைக்கு.
ஆரா இல்லாமல், அபராசிதனைப் பார்க்காமல் வாழ்ந்து விட முடியுமா? நினைக்கும் போதே நெஞ்சம் நொறுங்கிப் போனது அவளுக்கு. அதுவும் அபராசிதனைக் காணாமல் அவளால் முடியுமா? அந்த இரண்டு வாரம் அபராசிதனைப் பார்க்காமல் எப்படியெல்லாம் துடித்தாள். இனி காலம் முழுவதும் அவனைப் பார்க்க முடியாது என்றால்…? ஐயோ… இந்தக் காதல் இந்தளவு வலியைக் கொடுக்கும் என்று தெரியாமல் போயிற்றே? காதல் தெரியாத வரை நன்றாகத்தானே இருந்தாள். அதை உணர்ந்த பிறகு ஏன் உயிர்வதை ஆகிறது.
தன் நினைவில் அவள் கலங்கித் தவித்திருக்கையில், அவளுடைய தோளில் கரத்தைப் பதித்தாள் ஈவா.
“திகழ்… என்னாச்சு?” கேட்க, அதுவரை வலி நிறைந்த உலகத்தில் எரிந்து கொண்டிருந்தவள், நிமிர்ந்து ஈவாவைப் பார்த்தாள். கண்ணீரோ வழிந்து கொட்டி அவள் இதயத்தின் வலியை ஆற்ற முயன்றது. எங்கே கண்ணீர் வழிய வழிய வலி தானே அதிகரிக்கிறது!
“திகழ்… ஆர் யு ஓகே…?” ஈவா கேட்க, சுயத்திற்கு வந்தவளாகத் தன் கண்ணீரைத் துடைத்தவள்,
“சா… சாரி… நான்… என் நினைவு…” என்று தவித்தவளின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தான் ஜார்ஜ்.
“ஹே… எதற்கும் யோசிக்காதே. உனக்கு ஒரு நண்பனா நான் இருக்கிறேன். வா… டொரன்டோ போய் பேசிப் பார்க்கலாம். பேசினால் முடியாதது என்று ஒன்றுமில்லை…” சொல்ல, வேதனைப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள் திகழ்வல்லபை. பின் மறுப்பாகத் தலையசைத்து,
“வேண்டாம் ஜார்ஜ்… அவனுக்கு நான் தேவையாக இருந்திருந்தால், அவர்கள் நிச்சயமாக என்னைத் தேடி வருவார்கள். அதுவரை நான் காத்திருக்கிறேன்..” விரக்தியாகச் சொன்னவளைக் கோபமாகப் பார்த்தாள் ஈவா.
“பைத்தியம் போலப் பேசாதே திகழ்… ஒரு வயது குழந்தைக்கு என்ன தெரியும்? அப்படியே அவன் உன்னைத் தேடவில்லை என்றாலும், அவனுக்குத் தாய் நீதான்…” என்று அதட்ட, நம்பிக்கையில்லாமல் ஒரு புன்னகையைச் சிந்தியவள், சற்று நேரம் வெறுமையாகத் தன் கையிலிருந்த குவளையையே பார்த்து நின்றாள். அவளுடைய வாழ்க்கையும் இப்போது அப்படித்தான் இருக்கிறது. எதுவும் இல்லாமல் வெறுமையாக, எதற்கும் உதவாததாக… மீண்டும் நெஞ்சம் அடைத்துக் கொண்டு வர, சிரமப்பட்டுத் தன் வலியை அடக்கியவள், நிமிர்ந்து ஈவாவையும், ஜார்ஜையும் பார்த்தாள்.
“எனக்குத் தங்க ஒரு இடம் வேண்டும். கூடவே வேலையும் வேண்டும். அதுவரை உங்கள் வீட்டில் தங்க இடம் கிடைக்குமா?” பரிதாபமாகக் கேட்டவளைக் கோபமாகப் பார்த்தாள் ஈவா.
“என்ன பேசுகிறாய் திகழ்…? உனக்கில்லாத இடமா? நிலக்கீழ் வீடு சும்மா தானே இருக்கிறது. அங்கேயே தங்கிக் கொள். உனக்கு வேலை கிடைக்கும் வரைக்கும் இங்கே குழந்தைகளைப் பார்க்க உதவியாக இரு…” சொல்லப் பெரும் நிம்மதியோடு ஈவாவின் கரங்களைத் தன் கரங்களில் எடுத்து நெற்றியில் ஒற்றிக்கொண்டாள் திகழ்வல்லபை. பின் நிமிர்ந்து அவளைப் பார்த்து,
“வெளியேறவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் வந்தபோது, என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி இருந்தேன். ஆனால் சட்டென்று என் மனதில் தோன்றிய உருவம் உன்னதுதான். நம்பிக்கையோடு வந்துவிட்டேன்… ஆனால் நீ என்னை ஏமாற்றவில்லை…” தவிப்போடு சொன்னவள்,
“என்னைத் தப்பாக நினைக்காதே ஈவா. என்னால் நிரந்தரமாக இங்கே தங்க முடியாது. நான் தனியே இருக்க வேண்டும். இங்கே எங்காவது பக்கத்தில் ஒரு இடம் கிடைத்தால் சொல்லு… போதும்…” என்றாள் தயக்கமாக.
ஈவாவின் வீடும், அவள் முன்னர் இருந்தது போலச் சிறிய வீடுதான். இரண்டறைகள் கொண்ட குட்டி வீடு. அதில் ஒரு அறை குழந்தைகளுக்கானது. அடுத்தது அவர்களின் அறை. நிலக்கீழ் வீட்டில் அத்தனை தட்டு முட்டு சாமான்களையும் போட்டு வைத்திருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும். அந்த நிலையில் அவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பது இயலாத காரியம். தவிர அவளுக்குத் தனிமை வேண்டும். அவள் சுதந்திரமாக அழ வேண்டும். கலங்க வேண்டும். துடிக்க வேண்டும். இங்கே என்றால் அது சாத்தியப்படாது. இவள் அழுதாலே சமாதானம் செய்ய ஈவா வந்துவிடுவாள். வேண்டாம்… அழுவதற்கும், கலங்குவதற்கும், தவிப்பதற்கும் கூடச் சுதந்திரமில்லை என்றால், அது என்ன வாழ்க்கை? அவள் நினைத்திருக்கையில் மறுப்பாகத் தலையசைத்தாள் ஈவா.
“உன்னைத் தனியாக எல்லாம் விட முடியாது திகழ்… நம் மூவருக்கும் இந்த இடம் தாராளமாகப் போதும்…” ஜார்ஜ் சொல்ல வலியோடு சிரித்தாள் அவள்.. அவர்களின் பயம் புரிந்தது.
“என்ன… ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விடுவேன் என்று பயப்படுகிறீர்களா? அந்தளவுக்கு நான் கோழையில்லை… ஒரு வருடமாக திகழ்வஞ்சியாக வாழ்ந்து என்னைத் தொலைத்து விட்டேன். இனி என்னை நான் மீள எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு வாழ வேண்டும்…” அவள் சொல்ல,
“ஹனி… அதற்கு நாங்கள் உதவி செய்கிறோம். உன்னைத் தனியாக விட்டுவிட்டு… இங்கே நிம்மதியாக இருக்க முடியாது திகழ்… எங்களோடு தங்கிக் கொள்…” ஈவா கேட்க, மறுப்பாக அவளைப் பார்த்தாள் திகழ்வல்லபை.
“விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன் ஈவா. எனக்குப் புதிதாக இடம் கிடைக்கும் வரைக்கும் உங்கள் கூட இருக்கிறேன். அதற்குப் பிறகு தனியே போய் விடுகிறேன். என்னைத் தப்பாக நினைக்காதே…” சொல்ல வேறு வழியில்லாமல் அதற்கு மதிப்புக் கொடுத்துச் சரி என்றாள் ஈவா.
ஜார்ஜின் துணையோடு, மூன்று நாட்களிலேயே, இதோ நடந்து வரும் தூரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒற்றை அறை கொண்ட வீடொன்று வாடகைக்குக் கிடைத்தது. ஒரு வருட ஒப்பந்தத்தோடு, முதல் மற்றும் கடைசி மாதங்களுக்கான வாடகையைக் கொடுக்கச் சொல்ல, தன் கடன் அட்டையிலிருந்து அந்தப் பணத்தை வழித்துத் துடைத்துக் கொடுத்தாள் திகழ்வல்லபை.
உடனேயே அங்கு இடம்பெயர்ந்தும் விட்டாள். அவளுடைய நல்ல நேரம், அந்த வீட்டு உரிமையாளர், அத்தனை தளபாடங்களையும் எறியாமல் அங்கேயே வைத்திருந்ததால், இவளுக்கும் வசதியாகப் போயிற்று. என்ன கொஞ்சம் பழைய நீளிருக்கை, காலாடும் படுக்கை, திருத்தப்பட்ட தேநீர் மேசை, ஓரளவு பாவிக்கக் கூடிய பாத்திரங்கள். அவளுக்கு இது தாராளமாகவே போதுமானதாக இருந்தது. கூடவே ஜார்ஜின் உதவியோடு ஆடும் கட்டிலின் கால்களை இறுக்கி ஓரளவு பயன்படுத்தும் வகையில் மாற்றியிருந்தாள் திகழ்வல்லபை.
ஒரு வாரம் வீடு தேடுவதிலும், கிடைத்த வீட்டைச் சுத்தம் செய்வதிலும் நேரம் போனது. பின்னால் ஈவாவின் வீட்டிற்குச் சென்று அவளோடு குழந்தைகளை ஆசையோடு பார்த்துக்கொள்வாள். அந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது, ஆராவினால் ஏற்பட்ட மனப்புண்ணுக்கு மருந்து தடவியது போல இதமாக இருக்கும் திகழ்வல்லபைக்கு. ஆனால் ஐந்து மணியோடு குழந்தைகளைப் பெற்றவர்கள், குழந்தைகளை வாங்கிச் சென்ற பின் திரும்பவும் வெறுமை. ஈவாவிடம் விடைபெற்று வீட்டிற்கு நெஞ்சம் முழுக்கப் பாரத்தோடு வருவாள். தேற்றுவார், ஆற்றுவார் இன்றி சுதந்திரமாக அழுவாள். தவிப்பாள். துடிப்பாள். அதுவே தொடர் கதையாகி விட்டது.
இப்படியே இரண்டு மாதங்களும் கடந்து விட்டன. இதோ மறு நாள் ஆங்கிலப் புத்தாண்டு. அத்தனை பேரும் புதுவருடத்தை வரவேற்கத் தயாராகிவிட்டார்கள். ஆனால் இவளுக்கு எதுவுமே தோன்றவில்லை. அனைத்தும் வெறுமையாக இருந்தது, குழந்தைகளை வாங்க வந்த பெற்றவர்கள், அவளிடமும் ஈவாவிடமும் புது வருட வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டுக் குழந்தைகளை அழைத்துச் செல்ல, ஈவா கையில் ஒரு பரிசுப் பொதியோடு வந்தாள்.
வந்தவள் அவளை அணைத்து விடுவித்து,
“ஹப்பி நியூ இயர் திகழ்… இந்த வருஷம், உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்…” சொல்லி அணைத்து விடுவிக்க, அவள் கொடுத்த பரிசை வாங்கியவள், விரக்திப் புன்னகை ஒன்றைச் சிந்தி நன்றி ஈவா…” என்றாள்.
அவளுடைய வலியையும் வேதனையையும் புரிந்து கொண்ட ஈவா,
“நிச்சயமா உனக்குப் புதுவருடம் நல்ல செய்தியைச் சொல்லும்… கலங்காதே…” என்றதும், நம்பாப் புன்னகை ஒன்றைச் சிந்தியவள்,
“நன்றி ஈவா” என்றுவிட்டு, விடைபெற்று வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
முன்தினம் பனிப்பொழிவு நடந்ததால் பூமகள் பரிசுத்தமான வெண்மகளாக மாறியிருக்கக் குளிரோ பூஜ்யத்திற்கும் கீழே பத்தில் இருந்ததால் குளிர் காற்று அணிந்திருந்த தடித்த கம்பளி ஆடையையும் மீறி உள்ளே நுழைந்து சிலிர்க்க வைத்தது.
சில்லிட்ட அந்த வெண் பனியில் தன் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தவளின் கவனம், அங்கே பனியில் பனிமனிதன் செய்து விளையாடும் குழந்தைகளிடம் நிலைக்க, நெஞ்சம் வேதனையில் விம்மியது.
மனது ஆராவமுதனை நினைத்து ஏங்கியது. இதுதான் அவனுக்கு நினைவு தெரிந்து வரும் முதல் பனிப்பொழிவு. அவனைப் பனியில் விளையாட விட்டிருப்பார்களா? பனி மனிதன் செய்து பார்ப்பானா? பனிப்பறவை செய்வானா? நெஞ்சம் தவிக்க எண்ணியவளின் விழிகளில் அங்கும் இங்குமாகத் தெரிந்த அலங்கார விளக்குகள் மேலும் வேதனையைக் கிளப்பின.
அத்தனை பேரும் புதுவருடத்தை வரவேற்கத் தயாராகி விட்டார்கள். ஆனால் இவளுக்கு மகிழ்ச்சி என்கிற ஒன்று இருப்பதே மறந்து போய்விட்டது. வலியோடு எண்ணியவள் வீட்டிற்கு வந்தாள்.
பனிச்சாப்பாத்து, தடித்த மேலாடை அனைத்தையும் கழற்றி அதனுடைய இடங்களில் வைத்தவள், சமையலறைக்குள் வந்தாள்.
குளிருக்கு ஏதுவாக தேநீர் வார்த்தவள், குவளையை எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்து நீளிருக்கையில் அமர்ந்தாள்.
கடந்த இரண்டு மாதங்களாக இதோ இப்படித் தான் நீளிருக்கையில் எந்த உணர்வும் இன்றி வெறுமையாக அமர்ந்திருக்கிறாள். மனதோ இன்னும் ஆராவமுதனை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆராவமுதன் அவளைத் தேடி அழுவான். பிடிவாதம் பிடிப்பான், நிச்சயமாக அவளைத் தேடி அவர்கள் வருவார்கள் என்கிற அவளுடைய கற்பனையில் மண்ணை அள்ளிப் போட்டது நாட்கள். இதோ இரண்டு மாதங்களாகியும் அப்படி ஒரு நிகழ்வு நடக்காது போனது அவளுடைய தாய்மைக்குக் கிடைத்த அடியாகவே அவளுக்குத் தோன்றியது.
அப்படியென்றால், ஆரா அவளை மறந்தே விட்டானா? நினைக்கும் போதே அழுகை முட்டிக் கொண்டு வரும். அது சரி, அவளா வயிற்றில் சுமந்து பெற்றாள், இரத்த பாசம் இழுத்து வர. வளர்த்தவள்தானே. சுலபமாகவே மறந்திருப்பான். அவன் மறக்கவில்லை என்றாலும், அபராசிதன் மறக்க வைத்திருப்பான். அவள் மருத்துவமனையில் இருந்தபோதே, குழந்தை இவளைத் தேடாத வகையில் பார்த்துக் கொண்டவன்தானே.
ஏக்கத்தோடு அமர்ந்திருந்தவள், வார்த்த தேநீரைக் குடிக்காமலே தேநீர் மேசையில் வைத்துவிட்டு எழுந்து சென்று தன் அறைக்குள் படுக்கையில் விழுந்தாள்.
படுக்கை வேறு முள்ளாகக் குத்தியது. கண்களின் ஓரம் கண்ணீர் பொங்கத் திரும்பிப் படுக்கையின் மறுபக்கம் பார்த்தாள்.
பரந்து விரிந்த அந்த முதுகைக் காணோம். அவனுடைய வாசனையைக் காணோம். அவன் பக்கத்தில் இருக்கும் போது பொங்கி எழும் தைரியத்தையும் காணோம்.
திகழ்வல்லபைக்குத் தன்னை நினைத்தே வியப்பு எழுந்தது.
அது எப்படி சாத்தியம்? அபராசிதனுக்கும் சரி, அவளுக்கும் சரி ஒரு போதும் சுமுகமான பேச்சுவார்த்தை இருந்ததில்லை. அவர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தது ஒருமாதத்திற்கும் சற்று அதிகம். ஆனாலும் அவனால் எப்படி ஆழமாக அவளுடைய மனதில் ஏறி உட்கார முடிந்தது?இதோ இந்த விநாடியில் கூட அவன் இல்லாத உணர்வை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே…?’ ஏக்கத்தோடு எண்ணியவள் மறுபக்கமிருந்த தலையணையை இழுத்துத் தன்னோடு அணைத்து அதில் தன் முகத்தைப் புதைக்க, மனதோ அவனுடைய அணைப்பை நினைத்துப் பார்த்தது. கூடவே அவன் கற்றுக் கொடுத்த காதல் இரவு வேறு அவளை வதைத்து எடுத்தது. அன்று ஆசையோடுதானே அவளை அள்ளி அணைத்தான். முத்தமிட்டான். சுகமாய் உறவு கொண்டான். வலியில் அவள் தவிக்கையில் நிதானித்தான். அப்போதெல்லாம் அவனுடைய ஒவ்வொரு செயலிலும் வெறுப்புத் தெரிய வில்லையே? கடைசியாக உறவு முடிந்த பின், அவளை ஆழமாகப் பார்த்து,
“யு ஓகே…” என்று கேட்ட போது அத்தனை தித்திப்பாக இருந்ததே. ஆனால் அத்தனையும் மறு நாளில் ஒட்டு மொத்தமாக அழிந்து போயிற்றே. இதை என்னவென்று சொல்வது?
அன்று அப்பா சொன்னாரே, அவனுக்கும் என் மீது பிடிப்பு இருக்கிறது என்று. அதனால் தான் அவளையும் அழைத்து வந்தான் என்றாரே. அப்படி ஒரு பிடிப்பு இருந்திருந்தால், இந்த இரண்டு மாதங்களிலும் அவளைத் தேடாமலா இருந்திருப்பான்? அப்படியொன்றும் அவள் மாயமாக மறைந்துவிடவில்லையே. பழைய இருப்பிடத்திற்குத்தேனே வந்திருக்கிறாள். அவளைத் தேடி அலையவேண்டிய சிரமம் எதுவும் இல்லை. இத்தனைக்கும் ஈவாவைக் கூட அவனுக்குப் பழக்கம் தானே. ஒரு முறையாவது ஈவாவை அழைத்து, என்னைப் பற்றிக் கேட்டிருக்கலாம். ஏன் கேட்க வில்லை?. அப்படி என்றால் முற்றாக அவளை ஒதுக்கி வைத்துவிட்டான் என்றுதானே அர்த்தம்.
அதை நினைத்து ஏங்கித் தவித்துத் துடித்தாள் திகழ்வல்லபை. நிற்காமல் வழிந்த கண்ணீர், தலையணையை நனைத்தது.
மனம் முழுக்க ஆராவும் அவனும்தான் நிறைந்து இருந்தார்கள். ஆரா இப்போது சாப்பிட்டிருப்பான். யார் ஊட்டியிருப்பார்கள்? கமலாவா இல்லை அவனா? அபராசிதன்தான் ஊட்டியிருப்பான். சொல்லப்போனால், அவளை விட அவன்தான் குழந்தைக்கு உணவை அழகாக ஊட்டுவான்.
ஒரு முறை அவன் உணவு ஊட்டியபோது, ஒரு கையால் அவன் உணவை அள்ளி அபராசிதன் மீது எறிந்ததும், அது நச்சென்று அவனுடைய மூக்கில் ஒட்டி நின்றதும் நினைவுக்கு வர, உதட்டோரம் மெல்லிய சிரிப்பு ஒன்று வந்தது அவளுக்கு. கூடவே உதடுகள் நடுங்கி அழுகையும்.
திரும்பவும் ஒரு மூச்சு அழுதவளுக்கு தன் மீதே எரிச்சல் வந்தது. காலம் காயத்தை ஆற்றும் என்பார்களே. இரண்டு மாதங்களாயிற்று. ஏன் இன்னும் அந்தக் காயம் ஆறாமல் மேலும் மேலும் வலிக்கச் செய்கிறது? இவளோ அதை நினைத்து அழுது தொலைக்கிறாள். அதற்குமேல் படுக்கையில் இருக்கப் பிடிக்காமல் எழுந்தவளுக்குக் குளிர்ந்தது.
சால்வை ஒன்றை எடுத்து உடலைச் சுற்றிப் போட்டுக் கொண்டு முன்னறைக்கு வந்தாள்.
வெளியே பனிப்பொழிவு ஆரம்பித்திருந்தது. சற்று நேரம் அதை வெறித்துப் பார்த்தவள், நீளிருக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டாள். திரும்பவும் மனது அபராசிதனிடம் சென்றது.
இப்போது என்ன செய்வான்? மருத்துவ மனையில் நோயாளர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பானா இல்லை வீட்டிற்கு வந்து ஆராவோடு விளையாடிக் கொண்டிருப்பானா. இதோ இவள் இப்போது அவனை நினைப்பது போல, அவனும் இவளை நினைத்திருப்பானா? நினைக்கும் போதே மனது கேலியாக அவளைப் பார்த்துச் சிரித்தது.
‘நீ செய்த வேலைக்கு அவன் உன்னை நினைக்கவேண்டும் என்கிற ஆசை வேறு இருக்கிறதா?’ அவளிடமே கேட்க விரக்தியாகச் சிரித்தாள் திகழ்வல்லபை.
எத்தனை நேரமாக அப்படியே படுத்துக் கிடந்தாளோ, வீட்டு மணி அடிக்கும் சத்தம் கேட்க, நினைவு கலைந்து கடிகாரத்தை ஏறிட்டாள். இரவு எட்டு மணி.
இந்த நேரத்தில் யார் வந்திருக்கிறார்கள்? அவளையும் மீறி மனது கிறிஸ்டீனை நினைக்க, தூக்கி வாரிப் போட்டது உடல்.
திரும்பவும் மணி அடிக்க, நடந்து சென்று கதவின் குமிழ் கண்ணாடியினூடாக யாராக இருக்கும் என்று எட்டிப் பார்த்தாள். முன் வீட்டு மூதாட்டி தெரிந்தார். அவர் தனியாகத்தான் அந்த வீட்டில் இருக்கிறார். எப்போது இவளைக் கண்டாலும் சிரிப்பார். சில வேளைகளில், அவருக்கு உதவி ஏதாவது தேவை என்றால், இவளைத்தான் வந்து அழைப்பார். இவளும் மறுக்காமல் சென்ற உதவுவாள். அதற்கு நன்றியாக, ஏதாவது எடுத்து வந்து இவளுக்கு உண்ணக் கொடுத்துவிட்டுச் செல்வார். நல்ல பெண்மணி.
இவர் எதற்காகக் கதவைத் தட்டுகிறார்? வியந்தவளாகக் கதவைத் திறக்க, புன்னகையுடன் நின்றிருந்தவர், தன் கரத்திலிருந்த அட்டைப் பெட்டியை அவளிடம் நீட்டி,
“நான் என் மகன் வீட்டிற்குப் போகிறேன். அவன் குழந்தைகளுக்காக இந்த ஆப்பிள் பை செய்தேன். கூடவே உனக்கும் செய்தேன்… போக முதல் இதை உனக்குக் கொடுத்து விட்டுப் போகலாம் என்று நினைத்தேன்…” என்றதும், புன்னகைத்தவள்,
“தாங்ஸ் விக்டோரியா…” என்றாள்.
“வெல்க்கம் டார்லிங்… அன்ட் ஐ விஷ் யு த வெரி ஹப்பி நியூ இயர். காட் பிளஸ் யு மை சைல்ட்…” என்றவர் அழகிய புன்னகையுடன் வெளியேற, ஏனோ கண்கள் கரித்தது அவளுக்கு.
எந்தக் கடவுள் அவளுக்கு ஆசீர்வாதம் செய்யப் போகிறது. அத்தனை கடவுள்களும்தான் இவளை வெறுத்து ஒதுக்கிவிட்டனவே.
வேதனையோடு நினைத்தவள், விக்டோரியா விடைபெற, கதவைச் சாற்றி விட்டு கையிலிருந்த பெட்டியை மேசையில் வைத்துவிட்டுத் திரும்பிய நேரம் திரும்பவும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
இப்போது யாராக இருக்கும்? நடந்து சென்று கதவைத் திறக்க. அங்கே நின்றிருந்தவரைக் கண்டு திகைத்துப் பின் அதிர்ந்து போய் பேச்சற்று நின்றாள் திகழ்வல்லபை.
(40)
“இப்படி வாசலிலேயே நின்றிருந்தால், நாங்கள் எப்படி உள்ளே வருவது?” என்று கறாராகக் கேட்ட ஈஷ்வரியைக் கண்டு மலைத்து நின்றவள் பதட்டத்தோடு விலகி நின்று கொள்ள, கிட்டத்தட்ட அவளை இடித்துக்கொண்டு உள்ளே வந்தார் ஈஷ்வரி. அவருக்குப் பின்னால் விஜயராகவன் முகம் இறுக, கோபத்தில் நின்றிருந்தார்.
“அப்பா…” அதிர்ச்சியில் அவள் முணுமுணுக்க,
“தள்ளு…!” என்கிற அதிகாரத்தோடு அவரும் உள்ளே வர இவளோ தான் ஏதும் கனவு காண்கிறோமா? என்கிற குழப்பத்தில் விறைத்து நின்றவள், அவசரமாக வெளியே எட்டி அபராசிதனும் குழந்தையும் வருகிறார்களா என்று பார்த்தாள். யாரையும் காணவில்லை. முகம் வாடிப் போக, உள்ளே வந்தவள், முன்னறையின் நடுவே நாட்டாமையாக நின்றிருந்தவர்களைக் கண்டதும், அச்சத்தில் உமிழ்நீர் கூட்டி விழுங்கினாள்.
இவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள்? இன்னும் திட்டவும் அவமானப் படுத்தவும் மிச்சம் மீதி இருக்கிறதா என்ன?
உள்ளே வந்த ஈஷ்வரியோ, இடையில் கைவைத்தவாறு அந்த வீட்டின் முன்னறையைச் சுத்தவரப் பார்த்தார். அழுக்கேறிப் பிய்யத் தயாராகக் கிடந்த நீளிருக்கையும், சாயம் போன தேநீர் மேசையும், உடைந்து கால் மாற்றப்பட்ட சாப்பாட்டு மேசையையும் கண்டு புருவம் சுருக்கப் பார்த்தவர், திரும்பி திகழ்வல்லபையைப் பார்த்து,
“இந்தப் புறாக் கூட்டுக்கு எவ்வளவு வாடகை கொடுத்தாய்?” என்றார் அதிகாரமாக.
“அது… ஆ.. ஆயிரத்து ஐநூறு…” என்றாள் திக்கித் திணறி.
“எத்தனை படுக்கையறை?” அதுவும் அதிகாரமாகத்தான் வந்தது.
“ஒ.. ஒன்று…”
“இது எப்படி நமக்கெல்லாம் போதும்… சரி சரி… கிளம்பு… இப்போதே நாம் இங்கிருந்து புறப்படுகிறோம்…” சொன்ன ஈஷ்வரியைக் குழப்பமாக ஏறிட்டாள் திகழ்வல்லபை.
புறப்படுவதா? எங்கே புறப்படுவது? குழம்பியவள்,
“மாடம்… சாரி… நான்… ஏன்…” அவள் முடிக்க வில்லை, கோபமாக அவளை முறைத்தார் ஈஷ்வரி.
“மாடமா… யார் யாருக்கு மாடம்…” அவர் சீறத் தடுமாறினாள் இவள். மாடம் என்றும் அழைக்கக் கூடாது என்றால், அவரை எப்படி அழைப்பது? குழம்பிப் போனாள் திகழ்வல்லபை. முன்னர்தான் அம்மா என்றபோது கோபமாக முறைத்தார். இப்போது மாடம் என்பதற்கும் கோபப்பட்டால், என்னதான் செய்வது? தடுமாறியவள்,
“சா… சாரி… நான்…” அவள் முடிக்கவில்லை, அவளைத் தலை சரித்துப் பார்த்த ஈஷ்வரி,
“அம்மா என்று சொல்லு…” என்றார் அதுவரை இருந்த இறுக்கத்தைத் தொலைத்து.
அதைக் கேட்ட திகழ்வல்லபை நம்ப மாட்டாதவளாக அவரைப் பார்த்தாள். அவள் சரியாகத் தான் கேட்டாளா, இல்லை அவர் சொன்னது தவறாக இவள் காதில் வந்து விழுந்ததா? அதிர்ச்சியோடு தன் தந்தையைப் பார்க்க அவரோ மார்புக்குக் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டி, அவளைத்தான் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஏதோ அடி மனதிற்குப் புரிந்தது. கூடவே புரியவும் இல்லை. அவளையும் மீறி கண்களில் கண்ணீர் பொங்க, திரும்பி ஈஷ்வரியைப் பார்த்தார். அதுவரை இறுகியிருந்த ஈஷ்வரியின் முகம் இப்போது கனிந்துவிட்டிருந்தது.
ஓரெட்டில் அவளை நெருங்கியவர் மறுகணம் அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.
இங்கே என்னதான் நடக்கிறது? இது எல்லாம் அவள் எதிர்பாராத சம்பவங்களாக அல்லவா இருக்கிறது.
அவள் திணறி நிற்கையில் மெதுவாக அவளை விடுவித்த ஈஷ்வரி திகழ்வல்லபையின் விழிகளை ஆழ்ந்து நோக்கினார். பின் அவளுடைய கரங்களைப் பற்றித் தன் பெருவிரலால் மேற்புறத்தை வருடிக் கொடுத்தவாறு சற்று நேரம் அமைதியாக இருந்தார். அவர் வார்த்தைகளைத் தேடினார் போல. பின் நிமிர்ந்து அவளைப் பார்த்தவர்,
“சாரிமா… என்னை மன்னித்துவிடு…” அவர் சொல்ல மேலும் திகைத்தாள் திகழ்வல்லபை.
“மாடம்…” தவித்தவளுக்கு அம்மா என்று சொல்ல வாய் வரவில்லை. அதை உணர்ந்து வலியோடு சிரித்தவர் திரும்பவும் தலை குனிந்து நின்றிருந்தார். மீண்டும் அவளைப் பார்த்தார்.
“எனக்கு நீதான் இவர் மகள் என்று தெரியாதுமா… முன்னமே இவர் சொல்லியிருந்தால், நிச்சயமாக இந்தப் பிரிவு வந்திருக்காது… அவரும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை, அபராசிதனும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை…” என்றவர் வலி நிறைந்த புன்னகையுடன்
“நான் எக்காலத்திலும் உன்னுடைய அப்பாவை உங்களிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. அதை நீ நம்ப வேண்டும்…” என்றவர் பழைய நினைவில் கலங்கி நின்றார்.
“உன் அப்பாவழி உறவினர்கள் எங்களை மிரட்டியபோது, என் தம்பிகளுக்காக ஊர் விட்டு கொழும்பு சென்றேன். என் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையைச் செய்து தம்பிகளைப் படிக்க வைக்க முயன்றேன். அமலனும் என்னோடு உணவு விடுதியில் பாத்திரங்கள் தேய்த்தான். படிக்கவேண்டிய பிள்ளை இப்படிச் சிரமப்படுகிறானே என்று வருந்தாத நாளில்லை வல்லபை… குறைந்தது அபராசிதனையாவது படிக்க வைத்து விடலாம் என்று நானும் அமலனும் சிரமப்பட்டோம். ஆனால் அந்தச் சேரியில், ஒரு குடிசையில்… என் தம்பிகள் பட்ட சிரமங்களைக் கண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருந்தேன். அந்த நிலையில்தான் உங்கள் அப்பாவைத் திரும்பச் சந்தித்தேன். உதவிக் கரம் நீட்டினார். அதை மறுக்கும் நிலையிலும் நான் இருக்கவில்லை. ஆனால் சத்தியமாக சொல்கிறேன்டா… அந்த நேரத்தில் நானும் சரி, ராகவும் சரி, தப்பான நோக்கத்தில் பழகவேயில்லை. நம் காதல் முடிந்துவிட்ட ஒன்று. அது ஒரு போதும் தொடராது என்கிற உறுதியில்தான் இருந்தோம். என் மனதில் அவர் மீதான காதல் அப்படியே இருந்தாலும், அதை ஓரமாகப் போட்டுவிட்டு நல்ல ஒரு தோழியாகத்தான் அவர் கூடச் சென்றேன். அவருடைய வீட்டில் என் தம்பிகளோடு தங்கினேன். இத்தனைக்கும் அதற்கான வாடகையையும் நான் கொடுத்தேன். ஆனால் அதுவே அவர் வாழ்க்கையில் பேரிடியாக வரும் என்று நான் யோசிக்கவில்லை. அந்த நேரத்தில் என் தம்பிகளை வசதியாக வைத்திருக்கவேண்டும் என்று நினைத்தேனே தவிர, அதுவே அவரை உங்களிடமிருந்து பிரிக்கும் என்று நான் நினைக்க வில்லை… நீ கூட ஆராவுக்காக உன்னுடைய அடையாளத்தை இழந்து உன் சகோதரியின் அடையாளத்தோடு வாழ்ந்தது போல, என் தம்பிகளுக்காக உன் அப்பா கூட சென்றேன். அப்போது அது தவறாகத் தெரியவில்லை. ஆனால் அவர் வாழ்க்கை கேள்விக் குறியான பிறகுதான் நான் செய்தது தவறோ என்று நினைத்தேன்” என்றவர் வேதனைப் புன்னகை ஒன்றைச் சிந்தி,
“ஆரம்பத்தில் அவர் தன் மனைவியை விட்டுப் பிரியப்போகிறார் என்பதை அறிந்ததும் முதலில் அதற்கு மறுப்புச் சொன்னது நான்தான். காரணம் நீயும் உன் தங்கையும். குழந்தைகள் இருக்கும் போது பெற்றவர்கள் பிரிவது அந்தக் குழந்தைகளை எந்தளவு பாதிக்கும் என்பது எனக்குத் தெரியும்… அதனால் உங்கள் இருவருக்காகவும் சேர்ந்து வாழச் சொல்லி எவ்வளவோ சொன்னேன். இவரும் முயன்றார்தான். ஆனால் உங்கள் அம்மாதான் அதற்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை…” என்றவர் தன் கரத்திலிருந்த திகழ்வல்லபையின் கரத்தை அழுத்திக் கொடுத்து,
“சத்தியமாக உங்களிடமிருந்து உங்கள் அப்பாவை நான் பிரிக்கவில்லை… அதை நீ நம்புகிறாய் தானே…?” ஏக்கத்துடன் கேட்க, முதன் முறையாகப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள் திகழ்வல்லபை.
“பிளீஸ்… இத்தனை விளக்கம் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்பா அனைத்தையும் என்னிடம் சொல்லிவிட்டார். தவறு உங்கள் இருவரின் மீதும் இல்லை. அம்மா நினைத்திருந்தால் அப்பா கூட மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அவரையும் மகிழ்ச்சியாக இருக்கவிடவில்லை, அப்பாவையும் நிம்மதியாக இருக்கவிடவில்லை… உங்கள் மீதோ அப்பாவின் மீதோ எனக்கு எந்தக் கோபமும் இல்லை மாட…” அவள் சொல்ல வரச் சட்டென்று அவளுடைய வாயில் தன் கரத்தைப் பதித்துப் பேச்சைத் தடுத்தார் ஈஷ்வரி.
“மாடம் என்று சொல்லி என்னைத் தள்ளி வைக்காதேமா… அம்மா என்று சொல்லு. நான் வதனாவுக்கு மட்டும் அம்மா அல்ல… உனக்கும் தான்.” என்றவர் கலக்கத்தோடு திகழ்வல்லபையைப் பார்த்தார்.
“நீ அமலனை ஏமாற்றியவள் என்கிற கோபத்தில் தான் அத்தனை கோபமாக நடந்து கொண்டேன். நீ இவரின் மகள் என்று தெரிந்திருந்தால், சத்தியமாகச் சொல்கிறேன், உன்னை என் மகளாகவே ஏற்றிருப்பேன்… என்னதான் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், அடிக்கடி உன் அப்பா உடைந்து போவார். அதற்குக் காரணம் நீங்கள் இருவரும்தான். உங்கள் அப்பா உங்கள் இருவரையும் எக்காலத்திலும் மறந்ததில்லைமா…” சொல்ல, தலையை ஆம் என்பது போல அசைத்தவள்,
“தெரியும்மா…” என்று திகழ்வல்லபை சொல்ல, இப்போது விஜயராகவன் அவள் முன்னால் வந்து நின்றார்.
“அபராசிதன் உன்னை வெளியே போ என்று சொன்னபோது, உனக்கு என் நினைவு வரவே இல்லையா வல்லபை…?” என்று அவர் ஏக்கத்துடன் கேட்க. அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலை குனிந்தாள் திகழ்வல்லபை.
அவன்தான் அவர் பக்கமே போகக் கூடாது என்றானே. கூடவே இவளால் அவர் வாழ்க்கையில் மேலும் சிக்கல் வரக்கூடாது என்றுதானே விலகியே வந்தாள்.
“சொல்லு வல்லபை… ஏன் என்னிடம் சொல்லவில்லை. நீ வீட்டை விட்டுப் போய்விட்டாய் என்பதை அறிந்த உடன் எப்படித் துடித்தேன் தெரியுமா…? நீ எங்கே போனாயோ, என்ன செய்தாயோ என்று எதுவும் தெரியாமல்… நான் தவித்த தவிப்பு உனக்குத் தெரியுமா…? ஏன்டா இப்படிச் செய்தாய். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே… நான் உனக்குத் துணையாக இருந்திருப்பேனே. இப்படி அநாதை போல… தனியாக…” குரல் கரகரக்கக் கண்களில் கண்ணீர் தேங்க, தவித்துப் பேசிய தந்தையைக் கண்டு தாளமுடியாமல் ஓடிப்போய் அவரை அணைத்துக் கொண்டாள் திகழ்வல்லபை.
“அப்பா.. பிளீஸ்பா… வீட்டை விட்டு வெளியேற முதல், உங்களிடம் ஒரு முறையாவது பேசி விடலாமா என்று நினைத்தேன்பா. ஆனால்… என்னால் உங்கள் குடும்பத்தில் ஏதாவது குழப்பம் வந்துவிடுமோ என்று அஞ்சி…” அவள் முடிக்க முடியாமல் திணறத் தன் மகளைத் தன்னிடமிருந்து பிரித்துக் கோபமாகப் பார்த்தார் விஜயராகவன்.
“உன்னால் என் வாழ்க்கையில் குழப்பமா? அப்படி என்ன குழப்பம் வந்துவிடும் என்று நினைக்கிறாய்? நான் தொலைத்துத் திரும்பக் கிடைத்த சொர்க்கம்டா நீ… உன்னை இழந்துவிட்டு நான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பேன் சொல்?” அவர் கலங்க தன் கணவனின் கலக்கத்தைக் காண முடியாமல் அவர்களை நெருங்கிய ஈஷ்வரி,
“எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள்தான்…” என்றார் குற்றம் சாட்டும் விதமாக. அவரோ தன் மகளை விடுத்து மனைவியைப் பரிதாபமாகப் பார்த்து,
“நான் என்னடி செய்தேன்…?” என்றார்.
“பின்னே, இவள் உங்கள் மகள் என்பதைத் தெரிந்த உடனே என்னிடம் சொல்லியிருந்தால், இத்தனை பிரச்சனை வந்திருக்காது. அப்போதே இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று யோசித்திருப்பேன்… அபராவுடனும் பேசியிருப்பேன்…” சொல்ல, வியந்து போய் ஈஷ்வரியைப் பார்த்தாள் திகழ்வல்லபை.
“என்னம்மா அப்படிப் பார்க்கிறாய்?”
“இல்லை… வஞ்சி அமலன் சாருக்கு செய்தது மிகப் பெரும் அநீதி. அப்படி இருக்கிறபோது எப்படி என்னை மன்னிப்பீர்கள்…?” கேட்க வேதனைப் புன்னகை ஒன்றைச் சிந்தினார் ஈஷ்வரி.
“ஒரு குழந்தை தவறு செய்கிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் அவர்களைப் பெற்றவர்களும் சுற்றம் இருப்பவர்களும்தான். வஞ்சி தப்பு செய்தாள் என்றால், அதற்குப் பின்னாடி அவள் எத்தனை ஏமாற்றங்களை, ஏங்கங்களைச் சந்தித்திருக்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உன் அம்மாவும் இவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் வஞ்சி நிச்சயமாகத் தடம்புரண்டு போயிருக்க மாட்டாள். அவளுக்கு அடிப்படையாகத் தேவைப்பட்டது பாசம். அன்பு. தந்தையாக அரவணைக்க ஒரு ஆண். அதை அமலனிடம் பார்த்திருக்கிறாள். கூடவே அவனிடமிருந்த பணமும் அவளைக் கவர்ந்திருக்கிறது. பயன்படுத்திக் கொண்டாள். அவள் செய்தது நியாயம் என்று சொல்லவரவில்லை. அதற்குப் பின்னால் இருந்த வலியை நான் புரிந்துகொண்டேன் வல்லபை. தவிர நீதான் வஞ்சியில்லையே. அபரன், உண்மையைச் சொன்னபோது ஆடிப்போனேன். முதலில் நீ ஆள்மாறாட்டம் செய்து வந்தவள் என்று தெரிந்ததும் கோபம் கொண்டது நிஜம். பிறகுதான் நீ யார் என்பதையும் அபரன் சொன்னான். அந்தக் கணமே உன் மீது இருந்த கோபம் அனைத்தும் மறைந்து விட்டது… உன்பக்கத்து நியாயமும் தவிப்பும் புரிந்தது. சட்டத்திற்கு முன்னால் நீ தவறு செய்தவளாக இருக்கலாம். ஆனால், நிதர்சனத்திற்கு முன்னால் நீ செய்தது தவறில்லை” என்ற ஈஷ்வரியைக் கண்ணீர் மல்கப் பார்த்தாள் திகழ்வல்லபை.
“அது எப்படிச் சாத்தியம். எப்படி உங்களால் என்னை ஏற்றுக் கொள்ள முடிந்தது. எப்படிப் பார்த்தாலும் நான் செய்தது தவறுதானே..” தலை குனிந்து சொல்ல, அன்பு நிறைந்த புன்னகை ஒன்றைச் சிந்தினார் ஈஷ்வரி.
“ஏன் என்றால் நீ என் ராகவனின் மகள்மா… உன்னை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நான் ராகவனின் மீது வைத்த காதல் பொய்யாகி விடும்…” என்று கூறப் பாய்ந்து அவரை அணைத்துக் கொண்டாள் திகழ்வல்லபை. அவளாள் தன் மகிழ்ச்சியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எது ஒட்டாது என்று நினைத்தாளோ, அது மெய்யுருக ஒட்டி நிற்கிறது. ஒரு காலத்தில் ஈஷ்வரியின் பெயரைக் கேட்டாலே வெறுத்தவளுக்கு இன்று அவர் மீதிருந்த மரியாதை மலையளவு வளர்ந்து நின்றது. மெதுவாக அவரை விடுவித்தவள்,
“சாரிமா… ரியலி ரியலி சாரி… என்னதான் நியாயம் சொன்னாலும் வஞ்சி செய்தது மன்னிக்க முடியாத தவறு. அவள் அமலனின் வாழ்க்கையில் விளையாடியிருக்கக் கூடாது…” என்றவளுக்கு ஆரவின் நினைவு வந்தது.
“ஆ… ஆரா எப்படி இருக்கிறான்…” கேட்ட போதே குரல் கமறியது திகழ்வல்லபைக்கு.
அவர்கள் அவளை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அபராசிதன் ஏற்றுக்கொள்வானா? ஆராவைப் பார்க்கும் வரம் கொடுப்பானா? தவிப்போடு கேட்டிருக்கையில்,
“மம்மம்ம்ம்மா….” மழலை மொழி கேட்க, உடல் சிலிர்க்கத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
அங்கே ஆறு பற்களும் நன்றாக வெளியே தெரிய, குதுகல ஓட்டத்தோடு தத்தித் தத்தி ஓடி வந்தான் குழந்தை.
அவனைக் கண்டதுதான் தாமதம் சூறாவளி எனக் குழந்தையை நோக்கிப் பாய்ந்தவள், முட்டி நோக மண்டியிட்டமர்ந்து குழந்தையை வாரி மார்போடு அணைத்து,
“என் தங்கமே… ஆரா…” என்று விம்மி வெடித்து அழுது, உச்சி முகர்ந்து முகம் எங்கும் எச்சில் படிய முத்தமிட்டுக் கடைசியாகக் குழந்தையின் மார்பிலேயே முகம் புதைத்து விம்மி வெடித்து அழ, அதைக் கண்ட விஜயராகவனும், ஈஷ்வரியும் தம் கண்ணில் நீர் வடிய அந்தக் காட்சியைப் பார்த்துக் கிடந்தார்கள்.
திகழ்வல்லபைக்கு இன்னும் ஆராவமுதன் தன் கரங்களில் இருக்கிறான் என்பதை நம்பவே முடியவில்லை. குழந்தையை அழுத்திப் பார்ப்பதும் வருடுவதும், பின் முத்தமிடுவதும் அவன் மார்பில் சாய்வதும், பின் விம்முவதுமாக இருக்க, இன்னும் விட்டிருந்தால் நேரம் கூடிக்கொண்டு போயிருக்குமோ என்னவோ,
“இன்னும் எத்தனை நேரம் அவனை மூச்சு முட்ட அணைத்தவாறு நிற்கப் போகிறாய்?” அழுத்தமான காரமான குரல் செவிப்பறையில் வந்து மோத, அந்தக் குரலில் உள்ளமும் உடலும் ஒருங்கே சில்லிட்டுப் போகத் தன் மகனைக் கைவிடாமலே நிமிர்ந்து பார்த்தாள் திகழ்வல்லபை.
அவன்தான், அவள் தூக்கத்தை ஒரேயடியாக விரட்டியடித்த அவளுடைய நாயகன்தான். குளிருக்குத் தோதாகத் தடித்த லதர் ஜாக்கட் அணிந்தவாறு, மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டிச் சுவரில் சாய்ந்தவாறு இவள் அரங்கேற்றிக் கொண்டிருந்த பாசப்பிணைப்பைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.
அவனைக் கண்டதும் மேலும் உடைப்பெடுத்த அழுகையைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாது, அதுவரை குழந்தையை இறுக்கியிருந்த தன் அணைப்பைச் சற்றுத் தளர்த்தியவள் ஓடிச்சென்று அவன் மார்பில் விழுந்து ஒரு மூச்சு அழும் வேகத்தைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சி செய்தவளாக, அவனையே பார்த்திருக்க, அதைக் கண்ட ஈஷ்வரிதான் துணைக்கு வந்தார்.
அவளுடைய பாசப் பிடியில் திணறிக் கொண்டிருந்த குழந்தையை மெதுவாகப் பிரித்து எடுக்க முயலப் பதட்டத்தோடு திரும்பவும் குழந்தையைத் தன்னோடு அணைத்துத் தூக்கிக் கொண்டு எழுந்தாள் திகழ்வல்லபை.
அதைக் கண்டு அழகான புன்னகை ஒன்றைச் சிந்திய ஈஷ்வரி,
“குழந்தையை என்னிடம் கொடு வல்லபை…” என்ற ஈஷ்வரியிடம் மறுப்பாகத் தலையசைத்தாள் திகழ்வல்லபை.
“நா… நானே வைத்திருக்கிறேன்…” என்றவளுக்கு எங்கே ஆசைகாட்டி மோசம் செய்வது போலத் திரும்பவும் குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்று விடுவார்களோ என்கிற பயம் வந்தது.
அவள் நிலைமை உணர்ந்தவனாக, இப்போது அவளை நெருங்கி வந்தான் அபராசிதன். அவன் நெருங்க நெருங்க அவளுடைய இதயம் பயங்கரமாகத் துடித்தது. ஒரு பக்கம் குழந்தையை எடுத்துக்கொள்வானோ என்கிற பயம். மறுபக்கம் அவன் நெருக்கத்தால் காதல் கொண்ட மனதின் தவிப்பு. இரண்டும் சேர்ந்து அவளை நிலை குலையச் செய்ய, அவனைப் பரிதாபமாகப் பார்த்து நின்றாள் அவள்.
வந்தவனோ, அவள் கரத்திலிருந்த குழந்தையைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, குழந்தையோ தாயின் கழுத்தை இறுக அணைத்தவாறு, “மமம்ம்ம்மமம்ம்மா…” என்று வர மறுத்துச் சத்தியாகிரகம் செய்தது.
அதைக் கண்டு நெக்குருகிப் போனாள் திகழ்வல்லபை. அவளுடைய மகன் அவளை மறக்கவில்லை. வெறுக்கவில்லை. இதோ அதற்குச் சாட்சியாக, பலநாள் காணாத தாயை அணைத்தவாறு கிடக்கும் நிலையே சாட்சி.
“ஆரா…! அத்தையிடம் போங்கள்… உன் அப்பா உன் அம்மாவோடு கொஞ்சம் பேசவேண்டிக் கிடக்கிறது…” அவன் சொல்ல, அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் திகழ்வல்லபை
அப்பா அம்மாவா…? அப்படி என்றால்? அந்தச் சொல்லில் தன் பிடியை அவள் சற்றுத் தளர்த்தக் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்தியவன் ஈஷ்வரியிடம் கொடுக்க அதுவரை தாயின் பிடியில் இருந்த குழந்தை பிரித்து எடுத்ததில் இரு கரங்களையும் நீட்டி அவளிடம் பாய முயன்று,
“மம்மம்ம்ம்மா…” என்றது.
ஆனால் ஈஷ்வரியோ தன் மருமகனை அள்ளி எடுத்து அணைக்க முயல அவரிடம் நிற்க மறுத்து மீண்டும் தாயிடம் பாய்ந்தது குழந்தை. ஆனால் அபராசிதனோ, தன் சகோதரியைப் பார்த்து,
“இவனையும் அத்தானையும் அழைத்துக் கொண்டு கொஞ்சம் காலாற நடந்துவிட்டு வாருங்கள் அக்கா… நான் இவள் கூடக் கொஞ்சம் பேசவேண்டும்…” சொல்ல, உடனே தன் கரத்தில் இருந்த மருமகனை ஏந்தியவாறு திகழ்வல்லபையை நெருங்கி அவளுடைய கன்னத்தில் கரம் பதித்து,
“எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசும்மா… எல்லாம் சரியாகிவிடும்…” என்றுவிட்டு விஜயராகவனையும் அழைத்துக் கொண்டு வெளியேறக் குழந்தையோ, தாயிடம் போகக் கரங்களை நீட்டியவாறு,
“மம்ம்ம்ம்மா…” என்றது.
“டேய்…! உன் அம்மா உன் கூடவே நிரந்தரமாக இருக்க வேண்டுமா இல்லையா? வாடா என் கூட…” செல்ல அதட்டலோடு அவர் வெளியேற, விஜயராகனோ கதவைச் சாற்றிவிட்டு, முகம் இறுகத் தன் மனைவியைப் பார்த்து,
“எல்லாம் சரியாகுமா ஈஷ்… திகழ் நம் கூட வருவாளா?” என்றார் கவலையாக. அவரோ முகம் மலர்ந்து சிரித்து,
“எனக்கு அபராசிதன் மீது நிறையவே நம்பிக்கை இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக அவன் படும் சித்திரவதையைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். இனி அவள் இல்லாமல் நிச்சயமாக அவனால் முடியாது. அதனால் பயப்படவே தேவையில்லை…” என்று உறுதியோடு சொன்னவர், நம்பிக்கையோடு நடக்கத் தொடங்க, இங்கே, உள்ளே அபராசிதன் திகழ்வல்லபையைத்தான் இமைக்காமல் பார்த்திருந்தான்.
அவளோ அவன் பார்வையைத் தாங்கும் சக்தியற்றுத் தலைகவிழ்ந்து நின்றிருந்தாள்.
thappiche da mavane…unnai nalla nalla ketkanum nu tonikitte irunthucu…nalla velai inthe epi le nee thappiche..innum ethacum sothapi vacu avale nogadicu paru settha da nee….nayani ma unge story le ye nan heroine ku support panre story na athu inthe story um, alaranthiri and niranthari ku mattum tan…
அப்ப எனக்கு ஹீரோ ஆர்மிக்கு ஆட்கள் குறைஞ்சிடுச்சா கோபால். ஐயகோ…
apadi illai…ella story kum hero ku tan support..especially anthe utthiyukthan…ana ulaga athisayama nan heroine ku support panre story na athu alaranthiri,thigal and niranthari ku mattum tan..maranthum kuda samartthi ku lam support pannave maten..samartthi,ithamiya,ithanganai,sivarpana ellam utter waste 🙂
ஹா ஹா ஹா அப்படிலாம் சொல்லப்படாது. அப்ப உங்கை ஹீரோ ஆர்மின்னு நினைச்சதெல்லாம் தப்பா கோபால். ஐயகோ… இப்படி ஏமாத்தி பூட்டியளே. இதில உங்க ஆளு ஆள்மாறாட்டம் பண்ணினது கண்ணுக்கு தெரியலையாக்கும்.
Wow wonderful
நன்றி நன்றி
அருமையான பதிவு 😍😍😍.
பார்ரா இந்த ஹல்க்ப்பய எந்த போதி மரத்தடில உக்காந்தானாம் ஞானம் வந்திருச்சு 🫤🫤🫤🫤🫤🫤🫤🫤
என்றாளை தேடி வந்துட்டான் 😬😬😬😬😬.
யம்மா ஈஸூ உனக்காவது புரிதல் வந்துச்சே சந்தோசம்🙎♀️🙎♀️🙎♀️🙎♀️.
இவனைய சும்மா வுடக்கூடாது திகழ் இரண்டு மாசமா உன்னைய வெளியே தொரத்தி அழவச்சதுக்கு ஏதாவது பண்ணனும்.
மண்டைலயே நங்குநங்கு ன்னு நாலு கொட்டு வை.
ம்கும். கொட்டி வச்சிட்டாலும். அவளே அவன் மேல பைத்தியமா இருக்கா. இதில என்னத்த கொட்டுறது. அவளே தன் தலையில கொட்டினாதான் உண்டு.
இந்த கதைல நான் வல்லபை பக்கம் தான்… தான் அடையாளத்தை அழிச்சு தனக்காக வாழாம குழந்தைக்காக வாழுறது பெரிய விசயம்
அதனால போனா போகிறதுன்னு மன்னிச்சு விடலாம்யா.
superb
நன்றி நன்றி நன்றி