Mon. Jun 2nd, 2025

தாமரையின் ‘உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்’ இறுதி அத்தியாயங்கள்

அனுமதி 28

************

 

அன்று…

 

அமைச்சர்களுடன் விழா ஏற்பாடுகள் பற்றி பேசி முடித்த இளவரசி சந்திர வதனாம்பிகை, காவல் தலைவர்கள் மற்றும் திசைக் காப்பாளர்களிடம் படைகளின் எண்ணிக்கை, பயிற்சி நிலவரங்கள் பற்றி விசாரித்து அறிந்து கொண்டாள். அவர்கள் விடை பெற்றுச் சென்ற பின்பு, மன்னரிடமும் அமைச்சர் ஆலவாய் பெருமொழியாரிடம் படைகள் நகர்வு, ஒருங்கிணைப்பு, போருக்கான ஆயத்தங்கள் பற்றிய தகவல்களைப் பற்றி கலந்து உரையாட.. இப்பேச்சுக்களில் ஒரு நாழிகைப் பொழுது (இருபத்தி நான்கு நிமிடங்கள்) கடந்து சென்றிருந்தது.

 

விருந்து மண்டபத்தை சுற்றிப் பார்த்த போது, விருந்தினர் அனைவரும் விடை பெற்றுச் சென்று இருந்தனர்.. பணியாளர்கள் சுத்தம் செய்வதில் ஈடுபட்டு இருக்க.. அவளின் பார்வை இளவல் அமர்ந்திருந்த இடத்தில் சில கை நொடிப் பொழுதுகள் நிலைத்தது. அடுத்தடுத்து இருந்த அலுவல்கள் கவனம் வர, தந்தையிடமும் அமைச்சர் பெருமானிடமும் விடை பெற்று வெளியே செல்லும் வழி நோக்கி செல்லலானாள்.

 

இந்திர விழா தொடக்க நாளன்று விருந்துக்கு இளவல் வந்திருந்த போது, தனது பேச்சினால் சினம் கொண்டு செல்ல… தான் மறித்து பேசிய இடம் வந்ததும்.. அவளின் கால்களின் வேகம் தடை பட்டது. அவளின் உள்ளுணர்வு பொய்க்கா வண்ணம், ஆளை மறைக்கும் அளவு பெரியதாய் இருந்த தூணிற்குப் பின்னால் இருந்த, விருந்தினர் அறையின் மறு வாசலில், தன் வலிய இடது தோளை சாய்த்து வலக்கரத்தை இடையின் மீது வைத்தவாறு நின்று கொண்டிருந்தான்

இளவரசன் சிம்மவர்மன்.

 

அவனின் மேல் விழிகளை பதித்தபடி நெருங்கியவளை, உணராதவனாய்

ஆழமான யோசனையில் மூழ்கியது போல் இருந்த இளவலின் தோற்றம், நிற்கவா, கடக்கவா எனும் குழப்பம் ஏற்படுத்த.. சந்திர வதனாம்பிகையின்

மென்னடையில் ஒரு தயக்கம் வந்தது.

 

அப்போது, சட்டென்று நிமிர்ந்தவன் விழிகளில் தெறித்த கூர்மை, அவளின் கண் வழி புகுந்து இதயம் வரை செல்ல, அவனின் ஊடுருவும் பார்வையை தாங்க இயலாமல் தவிப்புடன் விழிகளைத் தாழ்த்தியவள், அவனைக் கடந்து செல்லத் தலைப்பட்டாள்.

 

அப்போது “வதனா…” எனும் அவனின் ஆழ்ந்த குரலின் அழைப்பில், மனம் அதிர அப்படியே நின்றாள்.

 

“உன்னிடம் பேசத் தான் காத்திருக்கிறேன்.. உன்னிடம் திருமணம் பற்றி சிலவற்றைப் பேசித் தெளிவு படுத்த வேண்டும்.” என்றவனின் முகத்தை திரும்பியும் பாராமல் சிறு மூச்சுடன், “திருமணம் பற்றி எனது நிலை.. அனைவரும் அறியத் தெரியப் படுத்தி விட்டேனே.. அது பற்றிப் பேச… உங்களிடம் தெளிவு படுத்த என்று தனியே ஏதும் இல்லை இளவலே…” என,

 

சிம்மனோ நிதானமாய், “ தெளிவு தேவைப் படுவது எனக்கல்ல.. உனக்குத் தான் வதனா…

உனது பேச்சு.. பயன்படுத்திய வார்த்தைகள்… அதன் மறை பொருளாய் உள்ள உன் ஆழ்மனக்கிடக்கை.. அதில் உள்ள… என் மீதான உனது.. காதல்.. பற்றிப் பேச வேண்டும்…” எனவும்,

 

திடுக்கிட்டு திரும்பி நிமிர்ந்து பார்த்தவள், “இல்லை…” எனவும், கரம் உயர்த்தித் தடுத்தவன், “வாக்குவாதம் செய்ய இது இடம் அல்ல.. நம் குரல் யாரையும் எட்டாத தனிமையான இடத்தில் பேசுவோம்.. பேசியே தீர வேண்டும்.” என்றவன் குரலில் தென்பட்ட உறுதி கண்டு…

 

“இப்போது தனிமையில் தானே நிற்கிறோம்.” என மெதுவாக மொழிய.. இல்லையென தலையசைத்தவனின் கண்கள் ஒரு கயிறு தொலைவில் இருந்த வாயிலின் காவலர்களையும், தம் அலுவலை செய்தவாறு சுற்றிலும் நடமாடிக் கொண்டிருந்த பணிப் பெண்களையும் வலம் வந்து திரும்ப,

 

சந்திராம்பிகை சிறு மூச்சுடன், “இப்போது நான் போர்ப் பயிற்சி செய்யும் இடம் செல்லப் போகிறேன். ஆசான் மற்றும் மாசேனை நாயகர், வெற்றி வேந்தன் விழா ஏற்பாடுகளை கவனிக்க சென்றிருப்பார்கள். எனவே பயிற்சிக் கூடம் சென்று மேற்பார்வையிட்டு விட்டு ஆயுதக் காப்பாளரிடம் சில உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.” என்றவளை இடைமறித்தது இளவலின் குரல்.

 

“இந்த உடை… அலங்காரத்திலா போர்ப் பயிற்சி செய்யும் இடத்திற்கு போகப் போகிறாய்!! அந்தோ பரிதாபம்! எதிர் நிற்பவர் நிலை..” எனவும்,

 

புரியாமல்.. திரும்பிய சந்திராம்பிகை அவன் விழிகளை சந்திக்க, உச்சி முதல் பாதம் வரை நிதானமாக வழுக்கி சென்ற பார்வையும், அவற்றில் தெரிந்த ஆழ்ந்த ரசனையையும், இதழ்களின் இடப்புறம் வளைந்த சிறு முறுவலையும்.. கன்னத்தில் ஆழமாய் விழுந்த குழியையும்.. கண்டவளிற்கு வயிறு குழைய.. உடலெங்கும் அலையடிப்பது போன்ற உணர்வு..

 

புதுப்புது உணர்வுகளை

தனக்கு அறிமுகம் செய்யும் இளவலின் கண்களையும்… அவனின் அருகாமையையும்.. தவிர்ப்பவளாய் அவசரமாக திரும்பியவள் விடை பெறாமலேயே அவ்விடம் விட்டு வெளியேறி, தனது பகுதி நோக்கிச் சென்றாள்.

 

ஒரு நாழிகை கடந்தபின் ஆயுதப் பயிற்சி நடக்கும் இடத்திற்கு… அவளது வழக்கமான பயிற்சி உடையில், புரவியினை வேகமாக செலுத்தியவாறு, உள்ளே நுழைந்தாள் சந்திராம்பிகை.

 

இந்திர விழா நிறைவு விழா காரணமாக ஆளரவமின்றி இருந்த திடலை நோக்கியவள், தன் புரவியை அங்கிருந்த காவல் வீரனிடம் ஒப்படைத்தது விட்டு, கொடை நாட்டின்

இளவல் வந்தால் உள்ளே ஆயுதப் பயிற்சி செய்யும் இடம் நோக்கி அனுப்புமாறு பணித்து விட்டு, உள்ளே நுழைந்தாள்.

 

தன்னைக் கண்டு வணங்கிய தலைமை இரும்பு கொல்லர் மற்றும் ஆயுதக் காப்பாளரின் மரியாதையை ஏற்றவள்.. குவிந்து கிடந்த ஆயுதங்களைப் பார்வையிட்டாள். கொல்லரின் உதவியாளர்களும், சில காவல் வீரர்களும், ஆயுதங்களுக்கு நெய், எண்ணையிட்டுக் கொண்டும் கூர்மையேற்றிக் கொண்டும் இருந்ததைக் கண்டு, ஆர்வம் மிக அங்கிருந்த ஒரு புதிய வாளினைக் கையில் ஏந்தி சுழற்றிப் பார்த்தவள், அதன் கூர்மையையும் சோதித்து விட்டு.. திருப்தியுடன் திரும்பி எடுத்த இடத்திலேயே வைத்தாள்.

 

ஆயிரக் கணக்கான அம்புகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்க, அவற்றில் சிலவற்றை அங்கிருந்த அம்பறாத் துணியில் சுற்றி முதுகில் கட்டிக் கொண்டவள், தனது தனிப் பயிற்சி இடம் நோக்கிச் சென்றாள்.

 

அங்கிருந்த தனது வில்லைக் கையில் எடுத்தவள், மூன்று சரங்களை எடுத்து… இலக்கு நோக்கி செலுத்த… அனைத்தும் சரியாக இலக்கைத் தாக்கி, குத்தி நின்றன. அம்பின் வடிவமைப்பையும் கூர்மையையும் கண்டு மகிழ்ந்தவளாய், ஆர்வத்துடன் நான்கு சரங்களை எடுத்து வில்லில் பூட்டி நாணை இழுத்தவளை…

 

“ நான்கு சரங்கள் தொடுக்க வேண்டுமெனில்… நாண் இன்னும் வலிமையானதாக இருக்க வேண்டும் வதனா…” எனும் கம்பீரக் குரல் கவனம் திருப்பியது..

 

கரத்தைக் கீழே இறக்கி திரும்பிப் பார்க்க, அவள் மீது பார்வை பதித்தபடி உள்ளே வந்தான் இளவரசன் இராஜ ஜெய சிம்மவர்மன். அங்கிருந்த விற்களை சோதித்து, வலுவாய் நாண் பூட்டப் பெற்று இருந்த ஒரு வில்லை எடுத்துக் கொண்டு அவளருகில் வந்தான்.

 

அவள் புறமாய் நீட்டியதும், வாங்கியவள், நான்கு சரங்களைப் பூட்டி நாணினை இழுக்க, இளவலின் இடக்கரமானது வில்லைப் பற்றி இருந்த இடத்தைப் பற்றி, சரங்களை விரல்களால் விலக்கி பிரிக்க, அவனின் அருகாமையில் தடுமாறினாலும், மனதை ஒரு நிலைப் படுத்தி நாணை வலிமையுடன் இழுத்து விட.. சரங்கள் கண்ணிமைப் பொழுது இடைவெளிகளில்.. இலக்கின் மையத்திலேயே நான்கு நிலைகளை சரியாக தாக்கி நின்றன.

 

“இதே போல பயிற்சி எடுத்தால், கை நொடிப் பொழுதில் எட்டு சரங்கள் தொடுக்க முடியும்..” என மெதுவாய் உரைத்த அவனின் மூச்சும் உடலின் வெப்பமும் தன் மீது கடத்தப் படுவதை உணர்த்தவளின் உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைய, மெதுவாய் விலக முயன்றவள், அவனின் இரு கைகளின் சிறைக்குள் நின்றதால், அசையவும் முடியாமல் போக.. வில்லினை மெதுவாகத் தாழ்த்தினாள்.

 

விழி மூடித் திறந்தவள், கழுத்தை திருப்பி அவனின் முகம் பார்க்க, அவனும் தன் கூரிய விழிகளால் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

அவனின் கண்களால் கட்டுண்டவள் போல அசைவின்றி நின்றாள் சந்திராம்பிகை.. அவளின் அருகாமையிலும் அவள் நயனங்கள் பேசிய மொழியாலும் கட்டுண்டவனாய் நின்றான் இளவல்.

 

தூக்கி கட்டப்பட்டிருந்த கருங் கூந்தலின் நடுவே குளிர் நிலவாய், மிளிர்ந்த முகமும், எந்த ஒப்பனையுமின்றி வீரத்திலகம் மட்டுமே தரித்திருந்த பிறை நுதலும், வீரம் மின்னும் விழிகளும்.. நுனி கூர்ந்த அழகிய நாசியும்.. என பயணித்தவாறே வந்த சிம்மவர்மனின் விழிகள்.. சந்திராம்பிகையின் சிவந்து கனிந்த அதரங்களில் நிலைக் கொண்டு நிற்க, சற்று முன் ருசித்த தேனிலூறிய பழத் துண்டங்களை அவை நினைவூட்ட, இளவலின் வலக்கரமானது தானே உயர்ந்து அவளின் குளிர்ந்து சிவந்த கன்னத்தை பற்றியது.

 

விழிகளின் வருடலிலேயே திகைத்து நின்றவள், கரம் பட்டதும் திடுக்கிட்டவளாய், உணர்வு நிலையடைந்து.. சட்டென்று அவனை விட்டு விலகி, இரு முழ தூரம் தாண்டிச் சென்றாள். ஆணின் அருகாமை அறியாதவளல்ல.. போர்ப் பயிற்சிகளின் போது ஆயுதப் பயிற்றுவிப்புகளின் போது, குதிரையேற்றம், தேர் செலுத்துதல் போன்ற அனைத்தும், ஆண் ஆசான்கள் மூலமாகவே கற்பிக்கப் பட்டாள்.

 

சில நாட்கள் முன்பு விற்பயிற்சியின் போது வீரசேனனின் அருகில் இதே போன்றதொரு நிலையில் நின்ற போது.. அவளின் கவனம் முழுவதும் கற்றலிலும் இலக்கிலுமே இருந்தது.

 

ஆனால்… இந்த ஆணின் பார்வையும் அருகாமையும் தொடுகையும் தன்னுள் நிகழ்த்தும் மாற்றங்களை அறிந்து கொண்டவளாய்.. விழி மூடித் திறந்தவளின் மனம் கனத்து, முகம் இறுகியது.

 

தன் மேல் வந்த கோபத்தை அவன் மீது திருப்பி, “ ஓ.. இதைத் தான் தனித்து வந்து… விளங்க வைக்க எண்ணினீர்களா!! நன்று.. புரிந்து கொண்டேன்.. என் மீதான.. என் உணர்வு மீதான தங்களின் ஆளுமையை அறிய வைத்து விட்டீர்கள்.. இளவரசே.. ஆனால்.. ஆனால்.. என் மனம், குணமறிய மாட்டேன் என்கிறீர்களே..

 

கொடை நாட்டின் வழமை வேறு, மருத நாட்டின் வழமை வேறு. ஒரு இல்.. ஒரு சொல்.. என்பதே எமது வழக்கம். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதே எமது பண்பாடு..

 

என் தாயார் இறந்த பின்பும் கூட… தன்னினைவற்று இருந்த போதும் கூட… வேறு பெண்ணை மனதாலும் தொடாதவர் எனது தந்தை.. அவரின் வித்து நான்… என் மணாளனும் எனக்கு மட்டுமே உரியவராய் இருக்க வேண்டும் என்பதே என் மனம்.. இது உரிமையுணர்வினால் அன்று.. மற்றவரின் வாழ்வை.. மறந்தும்… தவறியும் கெடுத்து விடக் கூடாது.. எனும் பண்பு தந்த உணர்வு… ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?!

 

உங்களுக்கு நிச்சயிக்கப் பட்ட அந்த இரு நாட்டு இளவரசிகளும், தங்களை மணாளனாகவே எண்ணியிருப்பார்கள்.. அவர்கள் கனவில்.. வாழ்வில் நான் குறுக்கிட மாட்டேன்.

 

பல கோட்டைகள் பெண்ணால்… பெண்களுக்காக சரிந்தது என்பது வரலாறு.. ஆனால்… என்னால்… மருத்திற்கோ.. கொடை நாட்டிற்கோ தீது வர அனுமதியேன்..

 

தந்தை சொல் மீறிய தனயன் என்ற அவப் பெயர் தங்களுக்கு வரவும் நான் காரணமாக இருக்க மாட்டேன்..

 

எனவே என் மீதான உங்களின் அன்பை விடுத்து.. உங்களின் மனைவியாய் வரப் போகும் பெண்களின் மேல் வையுங்கள்.. இத்துடன் இதை.. என்னை சந்தித்ததை… நம்முள் நிகழ்ந்தவற்றை மறந்து விடுங்கள்….”

என மூச்சு வாங்க, மடமடவென மொழிந்தவள், வெளியேறத் திரும்பி, இரு அடிகள் எடுத்து வைக்க,

 

“நில்….” எனும் சிம்மனின் ஒற்றை சொல் கர்ஜனையாய் ஒலித்து தடுத்து நிறுத்தியது.

 

“ எனக்கு நல்.. வழி காட்டியவள்.. நீ என்ன செய்யப் போகிறாய்.. என்பதையும் சொல்லி விட்டுப் போ..” என எள்ளலாய் குரலுயர்த்தியவனை,

 

சந்திராம்பிகை வரவழைத்த

அமைதியுடன், உணர்வற்ற முகமாய் திரும்பிப் பார்க்க..

அளவற்ற சினத்தில்… உறுமலாய் ஒலித்தது அவனின் குரல்,

“ நான் எதை செய்ய வேண்டும்.. யாரை நினைக்க வேண்டும்.. மறக்க வேண்டும் என்றெல்லாம்.. ஆணையிடத் தெரிந்தவளிற்கு, தான் என்ன செய்கிறோம்… செய்யப் போகிறோம்.. என்று தெரிந்திருக்க வேண்டும்..

 

என்ன!! விருந்து மண்டபத்தில் அறிவித்தது போல.. என்னை.. உன் மனதால் வரித்து.. மணாளனாக

எண்ணி… தனித்து வாழப் போகிறாயா..?” எனவும், அதிர்ந்தவள், வேகமாகத்

திரும்பி வெளியே செல்ல முயல, புயல் போல விரைந்து சென்று அவள் முன்பு வழிமறித்து நின்றான் இளவல்.

 

“திருமணம் இரு மனதின் இணைவாக எண்ணாமல், அரசியலுக்கான ஒப்பந்தமாக எண்ணியது மட்டுமே எனது தவறு… அதுவும் காலத்தின் கட்டாயம்… உன் கூற்றுப் படி.. நாட்டு நலன் கருதும் இளவரசனாய்.. தந்தை சொல் கேட்ட தனயனாய் இருந்ததால் வந்த தவறு..

 

ஆனால் என்று உனைக் கண்டேனோ.. உன் உயர்வு அறிந்தேனோ.. அன்றிலிருந்து உன்னை… உன் நலன் தவிர ஏதும் எண்ணமில்லை.. நீயின்றி எனது வாழ்வுமில்லை என்பதை நீ மலைச்சரிவில் வீழ்ந்ததும் நான் உணர்ந்தேன்.. வதனா…

 

உன் மனதிலும் நானென்பதை… உன் வாழ்வும் என்னோடு தான் என்பதை… என் கரம் பற்றிய உன் தொடுகையிலும் , என்னுடன் புரவியில் இணைந்து வந்த போது உன் உடலின் மொழியிலும் உணர்ந்தேன். சற்று முன்பு விருந்து மண்டபத்தில் உன் பேச்சில் இருந்த மறைபொருளில், இப்போது உன் நயனங்கள் பேசும் மொழியிலும் ஐயமின்றி தெளிந்து கொண்டேன்.. நீ ஏற்றுக் கொள்ள மறுப்பதும்.. சினம் கொள்வதும்.. ஏனோ…” என்றவன்,

 

கண்களை மூடி சில நொடிகள் நின்று விட்டு, விழிகளைத் திறந்தவன், இரும்பின் உறுதியேறிய குரலில்,

“என்னால் நிகழ்ந்த தவறுகளை நானே சீர் செய்வேன். செய்து விட்டு வந்து.. உனைச் சிறையெடுப்பேன்.. வாழ்நாள் முழுவதும்.. என் காதல் தளை கொண்டு உனைக் கட்டி வைப்பேன்..

 

என் உடல்… உயிர் தொடும் உரிமை உனக்கு மட்டுமே வதனா… எனை ஆளும் உரிமையும் உனக்கே..

 

வருவேன்.. உன் தடைகளை உடைத்து.. வருவேன்… உன் அருகில்… நீ விலக முடியாத அளவு நெருக்கத்தில்…” என்றவன்.. ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு.. விழிகளை திருப்பிக் கொண்டு… அழுத்தமான காலடிகளுடன் விரைந்து வெளியேறினான்.

 

தனை விட்டு விலகிச் செல்லும் அவனை.. சூறைக் காற்றாய் சேதம் தந்த மொழிகள் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலிக்க.. வெறித்தவாறே நின்றவள், ஆர்ப்பரித்த மனதை அடக்கி, கலங்கிய மனதையும் விழிகளையும் கட்டுக்குள் கொணர்ந்தவளாய் தானும் வெளியேறி அரண்மனை திரும்பியவள்..

 

அங்கே போர்க் கோலம் பூண்டு… சினத்துடன் நின்ற தனது தந்தையாரைக் கண்டு திகைத்தாள்…

 

*****************

 

இன்று…

 

ஒரு மணிநேரம் கழித்து கண்விழித்த இராணி கௌரிம்மா பேரனை அருகில் கண்டதும் லேசான முறுவல் தோன்ற, “எப்போ வந்த..?” என்றார்.

 

தலையசைத்தவன், “நீங்க எப்படி இருக்கீங்க? ஃபீலிங் பெட்டர்..? அப்படினா வீட்டுக்கு போயிடலாம்.. தேவைப்பட்டா அரண்மனை டாக்டர் வீட்டுக்கு வரவழைச்சுடலாம்.” என,

 

மெதுவான குரலில், “தலைவலி சரியாகிடுச்சு.. அரண்மனைக்குப் போயிடலாம்.. எங்கள காப்பாத்தினவன் கூடவே வழித் துணையா நல்ல ஆளயும் அனுப்பிச்சான்.. அதான் சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடல் வந்திட்டோம். அவன்… என்ன தைரியமா யானைய அடக்கிட்டான்!! அந்த பெண் அதற்கு மேல.. அச்சமேயில்லாம யானைய தாண்டி வந்து.. கதவு லாக் ஜாமாகியிருந்தது, எப்படியோ சரி பண்ணி கதவு திறந்திட்டா.

 

அவங்க யார் என்னனு விசாரி.. அரண்மனைக்கு வரவழைச்சு.. விருந்தோட.. ஏதாவது பரிசு கொடுக்கனும்..” எனவும் உணர்வற்று இருந்த ஆதித் வர்மன் முகத்தில் சிறு முறுவல் , “பரிசு தானே… கொடுத்துருவோம்.” என்றவனின் முகம் பார்த்த நிரஞ்சனா.. அவனின் பாவனையில் குழம்பி.. ‘என்னமோ பண்ணு’ என்பது போல் திரும்பி, சிணுங்கும் தன் மகனை கவனித்தாள்.

 

“யார் அவுங்கனு தெரியல… என் கூட வந்த ஆள், அவங்க பாதுகாப்புக்கு வந்தவங்க போல.. ஆனா அவர் யாருன்னு கேட்டதிற்கு அந்த ஆள் பதிலே சொல்லல.. அந்த பொண்ணு.. நிரஞ்சனாட்ட பேசினாளே.. நீ பேரு, நம்பர், அட்ரஸ் ஏதாவது

வாங்கினியா?” எனவும் நிரஞ்சனா திரும்பி பாட்டியையும் பேரனையும் மாறி மாறி பார்த்தவள், கணவனின் கண்களில் வந்த கூர்மையைப் புரிந்தவளாய்,

 

“ பெயர் மட்டும் சொன்னாங்க.. அதற்குள் ப்ரபு அழுததால் நானும் வேறு ஏதும் கேட்கலை… அவுங்க செய்ற உதவிய சொல்லிக் காட்டி பெருமை பேசாத ஆட்கள் போல.. ஏதோ முக்ய வேலையா போக வேண்டியதால.. அவசரமா கிளம்பிட்டாங்க.” என்றவளின் குரலில் இருந்த தொனியில் ஆதித் வர்மனின் தலை உயர்ந்து கண்கள் கடுமையானது.

 

ப்ரபஞ்ச வர்மனைத் தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தவள், அதை கவனிக்கவுமில்லை.. அக்கறைப் படவும் இல்லை..

 

சற்று நேரத்தில் வந்து சோதனை செய்த மருத்துவர்.. வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று சொல்ல.. மருத்துவமனை நடைமுறைகள் முடித்துச் செல்ல

மாலைப் பொழுது ஆகி விட்டது..

 

வீட்டினுள் நுழைந்தவர்களை வாயிலில் எதிர் கொண்டார் இராஜா ரவீந்திரர். அவரும் சற்று முன்பு தான் சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருந்தார். சிங்கபூரில் இவர்களது பொருட்களை இறக்குமதி செய்து டிஸ்ட்ரிப்யூஷன் செய்யும் நிறுவனத்தினருடனான சந்திப்பை முடித்து விட்டு வந்தவர்.. அவர்களின் புதுப் புது ஒப்பந்த விதிகளை பரிசீலனை செய்து தெரிவிப்பதாகக் கூறி விட்டு வந்திருந்தார்.

 

தரத்தில் உயர்வாய், விலையில் குறைவாய் இருக்கும்.. பல புதிய நிறுவனத் தயாரிப்புகளை பற்றிய ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, முக்கியமாய் டப்ளின் க்ரீன் அவார்ட்ஸ்க்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கும் ஆர்ஜேவீ ப்ராடக்ட்ஸ் பற்றி கூறி, இனி தாங்களும் இயற்கையோடு இணைந்த சுற்றுச்சூழலிற்கு கேடு விளைவிக்காத பொருட்களை இறக்குமதி செய்ய ஆவலுடன் இருப்பதாகக் கூறவும்… இது தெரிந்தால் ஆதித்தின் பதில், கோபம் எவ்வாறு இருக்கும் என்று புரிந்தவராய், நல்லவேளை இந்த சந்திப்பிற்கு அவன் வரவில்லை என்று ஆசுவாசம் அடைந்திருந்தார்.

இதனை வேறு விதமாக தான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தவர்.. ஆதித் வர்மனிடம் இதைப் பற்றி பேசக் கூட இயலாத அளவு அவன் ஏதோ முக்கிய வேலையில் இருப்பதாக காலையில் அவனின் உதவியாளர் கூறவும்.. நேரில் பேசிக் கொள்ளளலாம் என்ற எண்ணத்தில் கிளம்பிக் கொண்டிருந்தவருக்கு, யானை தாக்கிய சம்பவம் தெரிவிக்கப் பட்டதும் பதறிப் போனார்.

 

ஏதோ.. அந்த கடவுளருளால் அவரின் குடும்பம் தப்பியது என்று எண்ணியவர், சோர்ந்து இருந்த பேரன் ப்ரபஞ்சவர்மனை மருமகளிடமிருந்து வாங்க முற்பட, உடல் நிலை சரியில்லாத அவனோ அவரிடம் வரவில்லை..

 

அவனின் வளர்ப்பு செவிலியான, பணிப்பெண்ணிடம் தாவிச் சென்றவனைப் பார்த்தவர் சிரித்துக் கொண்டார். தாயாரை அவரின் அறையில் விட்டு விட்டு வந்த ரவீந்திரர், தனக்காக காத்து நின்ற மருமகளைக் கண்டு, ஏதோ சொல்லத் தான் நிற்கிறாள் என்று புரிந்து கொண்டவராய், ஆதித் வர்மனின் அறையை கண்ணால் சுட்டி, வரவேற்பு அறைக்கு நடந்தார்.

 

பின்னேயே வந்த நிரஞ்சனா நடந்தவற்றை விவரமாக சொல்லி, “எங்களைக் காப்பாற்றியது, இராஜா ஜெயவர்மனும் அவர் மனைவியும்.. ஆனால் ஆதித் அதற்கு சிறு நன்றி கூட தெரிவிக்க விரும்பவில்லை…” என வருத்தப்பட..

 

வருத்த முறுவல் காட்டியவர், “நன்றி எப்படி சொல்லுவான்!! அவன் தனக்கு இருகண்களும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று நினைக்கிறவன்.. ஜெயவர்மன் அழிய வேண்டும் என்று நினைப்பவன் அந்த வன்மத்தை விட்டொழித்தாலே போதும்.. இப்போதும்… என் அம்மா செய்வது.. அவன் செய்வதெல்லாம்.. கடைசியில் நம் குடும்பத்திற்கு தொழிலுக்கு தான் கேடாய் முடிகிறது..

என்னால் முடிந்த அளவு நான் புத்தி கூறிவிட்டேன். இனி நீதான் அவனின் மனம் மாறச் செய்யவேண்டும் நிரஞ்சனா…” என…

 

“மாமா! நான் உங்களிடம் உதவி கேட்க வந்தால் நீங்கள் பெரிய மலையைப் புரட்டும் காரியத்தை என்னிடம் சொல்லுகிறீர்களே.. அவர் ஏன் ஜெயவர்மனை இவ்வளவு வெறுக்கிறார்? தொழிலில் நமக்குப் போட்டியாக இருக்கிறாரா? ஏதாவது.. நம்மைத் தொந்தரவு செய்கிறாரா?” எனவும்,

 

 

வருத்த முறுவலுடன், “அவனா.. அவன் நம் குடும்பம் இருக்கும் வழி கூட திரும்பிப் பார்க்க மாட்டான். நம்மால் அவனுக்கு நிறைய அவமானங்கள்.. தொல்லைகள்.. லாஸஸ். அனைத்தையும் கண்டு கொள்ளாதது போல் கடந்து விடுவான்.. அதற்காக குட்டக் குட்ட குனிந்து போவான்.. என்று அர்த்தமில்லை.. திருப்பி அவன் செய்வது.. புத்திசாலியின் பதிலடி. இங்கு இவனிற்கு நஷ்டமாகி விடுகிறது. அவன் இப்போதும் தன் வழியில் தனித்துப் போகிறான். ஆதித் தான் அவனின் தொழிலிற்கு, வாழ்விற்கு இடைஞ்சல் செய்து கொண்டே இருக்கிறான். அவனின் மனைவி அந்தப் பெண்ணைக் கூட….” என்று சொல்ல வந்தவர் சட்டென்று நிறுத்தி…

 

“அவனின் இந்த குணத்தை மாற்றிக் கொண்டால் நலம்..” என்றவர் பெருமூச்சு விட்டு, “நானும் அவனிடம் சொல்கிறேன் நிரஞ்சனா. ஆனால்.. பலன்? ஒரு வேளை என் அம்மா.. அவனின் பாட்டி சொன்னால் அவன் மாறலாம்..” என்றார் யோசனையுடன்.

 

“ அவர்.. அந்த ஜெயவர்மன் காப்பாற்றியதைக் கூட பாட்டியிடம் சொல்வதைத் தடுத்து விட்டார் மாமா..”

 

“ம்.. அம்மா குணம் புரிந்தவன்.. அவன் தான் காப்பாற்றினான் என்றால்.. அப்படிப் பட்ட உயிரே தேவையில்லை என்று பேசக் கூடும் என்று நினைத்திருப்பான். இரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில் இதை மறைக்கத் தான் வேண்டும்..” எனவும்,

அமைதியானாள் நிரஞ்சனா தேவி.

 

சிந்தனையில் இருந்த இரவீந்திரரை பார்த்து, “பெரிய மஹாராஜா மேல காட்ட முடியாத வன்மத்தை… இவர் மேல் காட்டுறது தவறு இல்லியா…” என மெதுவாய் கேட்க,

 

“தவறா… ஜெயவர்மன்.. இரண்டாவது இராணியின் பெண் சுமனா தேவி எல்லாம்.. அம்மாவைப் பொறுத்த வரை மஹாராஜா அவர்களுக்கு செய்த… துரோகத்தின் அடையாளங்கள்.. அவர்களுடனான திருமணத்தினை அவமானப் படுத்தியதற்கு ஆதாரங்கள்.. அவுங்க எண்ணத்தை மாத்துறது சிரமம்…” சிறு அமைதிக்குப் பின், “ஜெயவர்மனின் அம்மா என்னை விட வயதில் இளையவர்கள். ஜெயவர்மன் ஆதித்தை விட சில மாதங்கள் தான் பெரியவன்.. அவர்களின் மன நிலையில் நின்று யோசித்தால்.. கடினமாகத் தான் இருக்கிறது.. ம்.. நீயும் ஓய்வெடு நிரஞ்சனா.. ப்ரபஞ்சனை கவனித்துப் பார்த்துக் கொள்.. மிகவும் சோர்ந்து தெரிகிறான்.. ஏதோ இரத்த பரிசோதனை பண்ண சொன்னாங்கன்னு சொன்னியே… நாளைக்கே செய்து விடு…” என்றவரிடம், மிகுந்த யோசனையுடன், ‘ ஆம்..’ என்பது போல தலை அசைத்தவள்..

 

“சரி மாமா..” என்று விட்டு தனது அறைக்கு சென்றாள்.

 

********************

 

வழக்கம் போல உணர்வுகளை அதிகம் வெளிக் காட்டாத முகமாய் தனது வாகனத்தை ஜெயவர்மன் செலுத்திக் கொண்டு இருந்தாலும்.. அவனின் முகத்தில் மின்னிய சந்தோஷம்… மதிவதனாவின் கண்களில் படவில்லை. அவள் தான் புல்லில் உறங்கும் பனித்துளி போல நூற்றி எழுபது டிகிரி அளவு சாய்க்கப்பட்ட இருக்கையில் சயனித்து… உறங்கிக் கொண்டு இருந்தாளே…

 

அவளின் துயில் கலையா வண்ணம் அலுங்காமல் செலுத்திக் கொண்டு இருந்தவன்… மாலை முடிந்து, இருள் சூழ்வதற்குள் அங்கே சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தவனாய்…. ஒன்றே கால் மணி நேர பயண தூரத்தை ஐம்பது நிமிடங்களில் கடந்திருந்தான்.

 

தனைத் தொடர்ந்து வந்த பாதுகாவலர்களின் வாகனத்துடன் இணைந்து, வாகனங்களை ஏற்றும் பெரிய வல்லம் (படகு) மீது ஏற்றினான்.

 

மாலை முடியப் போகும் நேரமானதால் பறவைகளின் ஒலி அதிகமாகக் கேட்க.. தண்ணீரின் நடுவே…. குளிர் அதிகமாக.. அதை உணர்ந்தவளாய் விழித்த மதிவதனா கண்டது ஆரஞ்சுப் பந்து போல் மாறி… தென்னை மரங்களுக்குள் மறைந்தும் பளீரிட்டும் மாயம் செய்து கொண்டிருந்த ஆதவனைத் தான்..

 

ஏதோ கனவுலகில் மிதந்து கொண்டிருப்பது போன்ற உணர்வில் நிமிர்ந்து அமர்ந்தவள்.. மிதக்கும் வல்லத்தில், காருக்குள் அமர்ந்து பயணித்துக் கொண்டிருப்பது கண்டு வியப்பில் விழிகள் விரிய, ஆச்சரியத்தில் ஆவென திறந்த வாயை இரு கரங்கள் கொண்டு மூடிக் கொண்டவள், சுற்றிச் சுற்றி பார்க்க, ஜெயவர்மனோ ஒளிரும் ஆதவன் காட்டிய அழகை விட… மிளிரும் தன் மதி முகத்தவள் காட்டும் வண்ண ஜாலங்களை ஸ்டியரிங் வீல் மீது கை முட்டியை வைத்து, நான்கு விரல்களால் வாயை மறைத்தவாறு இரசித்துக் கொண்டிருந்தான்.

 

“எங்கே இருக்கிறோம்? கிளிமனூர் போகலையா! இது என்ன இடம்?” என்றவள் திரும்பி விளையாட்டாய் முறைத்து..

 

“ என்ன ஜெயவர்மரே… பாண்டிய நாட்டு இளவரசியை கடத்திச் செல்கிறீர்களா.. என்ன? உமக்கு என்ன துணிச்சல்?” எனவும்,

 

சிரிப்பு பீறிட, “ தூக்கத்தில் ஏதும் சொப்பனம் கண்டியா என்ன? செந்தமிழ்ல சண்டைக்கு வர்ற… ஏதோ செரிய குட்டி.. சிறு படகு கண்டு சந்தோஷப்பட்டதேன்னு… வல்லம் பார்க்க கூட்டிக் கொண்டு வந்தா… இப்படியா?! கடத்திக் கொண்டு போறதுன்னுட்ட…” என்றவன்…

 

அவளையே பின் பற்றியவனாய் , “ஆம்.. பாண்டிநாடு இளவரசிய இந்த சேரநாடு இளவரசன் கடத்திக் கொண்டு தான் போறேன்… அக்கம் பக்கம் ஆளில்லா தேசத்திற்கு… தீவிற்கு…”

என கண் சிமிட்டிக் கூறவும்..

 

“அச்சோ தீவா? நிஜமா.. வரு.. இன்று.. இங்கேயா இருக்கப் போறோம்?” என வியப்பாய் கேட்கவும்,

 

முறுவலுடன், “இங்கே டின்னர் சாப்பிடப் போறோம்.. உனக்குப் பிடிச்சா தங்கலாம்.. இல்லாட்டி.. திரும்ப வர்க்கலா போய்டலாம்…” என அவன் சொல்லவும்..

 

சுற்றிப் பார்த்தாள்.. இருள் சூழத் தொடங்கியிருந்தாலும், அந்த இடம் மிரட்சியைத் தராமல், ரசிப்பையே தருவதை உணர்ந்தவள், அது இடத்தினாலா.. அருகிலிருப்பவனினாலா.. என எண்ணியவள், “உங்களுக்கு பிடிச்சுருக்குனா, இங்கேயே தங்கலாம் வரு..” என்றாள் புன்னகையுடன்.

 

அவளின் புன்னகையைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் மென்னகையில் மலர்ந்து போனது..

 

“இன்று இரு வெற்றிகள் நமக்கு கிடைத்திருக்கு.. அதைக் கொண்டாட தான் இங்கே உன்னை கூட்டிட்டு வந்தேன்…”

எனவும், அவள் கேள்வியும்… மகிழ்வுமாய் பார்க்க, “தீவு வந்துருச்சு..” என்று முன்னால் காட்டியவன், “என்னனு டின்னர் அப்போ சொல்றேன்.” என,

 

சில நிமிடங்களில் வல்லமானது

மிகச் சிறிய தீவை அடைந்தது. இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்படும்,

 

மன்றோ தீவை அடைந்திருந்தனர்.. உப்பங்கழிகளாலும் கல்லாடா நதியாலும் சூழப்பட்ட அந்தத் தீவு எட்டு தீவுக் கூட்டங்களை உள்ளடக்கியது..

 

தன் வாகனத்தை கிளப்பி அந்தத் தீவிற்குள் சென்றவன், அதன் மறு கரையில் இருந்த அழகிய அலங்காரத்துடனிருந்த படகு வீடு நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந்திருந்தான்..

 

கரையில் வாகனத்தை நிறுத்தி விட்டு, அவளை இறங்குமாறு பணித்தவன் தானும் இறங்கி, சிறு ட்ராவல் பேகை எடுத்தவன், தோளில் மாட்டிக் கொண்டு.. அவளின் கை பற்றி சிறு மரப் பாலத்தைக் கடக்க வைத்து, அந்த படகு வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் ஏறியதும் அந்தப் படகு வீடானது நகரத் தொடங்கியது..

 

சிறிய ஆடம்பர வீட்டைப் போலவே இருந்த அந்த வீட்டில் மலர்களால் மற்றும் மெல்லிய திரைத் துணிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த வரவேற்பறையும், அதன் பக்கத்தில் இருந்த உணவு அறையில்…. அப்பம், புட்டு, வாழையிலையில் சமைக்கப்பட்ட மீன், தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்ட கோழி முதலான கேரள உணவு வகைகளுடன் விருந்து சூடாக வைக்கப்பட்டு, தயாராக இருக்க, உணவுண்ணும் மேஜையோ

படகு வீட்டின் திறந்த வெளிப் பகுதியில் இயற்கையை ரசித்தபடி உண்ணும் வண்ணமாக போடப்பட்டு… மஞ்சள் ஒளி தரும் சிறு விளக்குகளின் வெளிச்சத்தில் அழகாய் இருந்தது.

 

மதியம் நடந்த மீட்டிங்கிற்காக ஃபார்மல் ஷர்ட், கோட், டை என இருந்தவன், வண்டியில் ஏறும் போது கோர்ட்டை டையை கழற்றி விட்டு, முழுக்கை சட்டையை முக்கால் கை மடக்கி விட்டவனாய்.. வந்திருந்தான்.. மதிவதனாவோ மெல்லிய ஜரிகையிட்ட உயர் ரக காஷ்மீர் பட்டு அணிந்திருந்தாள்.

 

“அந்த பேக்ல உனக்கு ட்ரஸ் இருக்கு வது.. மாத்துறதுன்னா மாத்திட்டு வா சாப்பிடலாம்.” என்றவன் தனக்கான உடையை எடுத்துக் கொண்டு வரவேற்பு அறை ஒட்டியிருந்த குளியலறைக்குள் சென்றவன், சில நிமிடங்களில், குளித்து விட்டு இளமஞ்சள் போலோ நெக் டீ ஷர்ட்டும் பழுப்பு வண்ண பேக்கீஸ் காட்டன் பேண்ட்டுமாக வந்தான்…

 

நகரும் படகு வீட்டில் மிக மிக அமைதியாக இருந்த சுற்றுப்புறம் கண்டு சற்றும் அஞ்சாமல் அவள் ரசிப்பது கண்டு வியந்தவனாய் அவன் வர.. எளிமையான உடையிலும் மிளிரும் அவனின் அழகும் கம்பீரமும் கண்டு வியந்தவளாய், எழுந்து வந்தவள், ஸ்டாட்டர்ஸ் என்று வைக்கப்பட்டிருந்த சூப்பை எடுத்து வந்து அவன் கையில் தந்து விட்டு தானும் குளியலறைக்குள் சென்றாள்.

 

பிஸ்தா வண்ணத்தில் சிறிய கை வைத்து நீளமான கவுன் போன்றும் இரவு உடை போன்றும் தோற்றமளித்த அந்த வெஸ்டர்ன் ஆடையை அணிந்து, முடியைத் தூக்கி கொண்டையிட்டிருந்ததால் அவளின் உயரமும் நளினமும் அதிகரித்து தெரிய, காற்றிலாடும் கொடி போல அறையிலிருந்து வந்தவளை… சூப்பைப் பருகியபடி இருந்த ஜெயவர்மனின் விழிகள் பருகிக் கொண்டு இருந்தன..

 

இரு தட்டுக்களில் உணவை அவள் எடுத்துக்கொண்டு இருப்பது கண்டு உள்ளே வந்தவன்.. முழுக்க கேரள உணவுகளாய் இருப்பது கண்டு… அவளின் தட்டை வாங்கி அவளின் விருப்பம் கேட்டு அவற்றை மட்டும் எடுத்தவன்,

 

சிறிய கிண்ணங்களில் சக்கைப் பிரதமன் எனப்பபடும் பலாப்பழம் இடப்பட்டு செய்யும் இனிப்பை எடுத்து, அவனை நெருங்கியவளிற்கும் ஊட்டினான்..

 

வாயில் வாங்கி ரசித்து உண்டவள்,

“என்ன அந்த இரு வெற்றிகள் வரு..” எனக் கேட்க,

 

“டப்ளிங்ல க்ரீன் அவார்ட்ஸ்’19 க்கு நம் கம்பெனி நாமினேட் ஆகியிருந்தது.. அதுல அவார்ட் .. வின் பண்ணிருக்கோம்… அவார்ட் கொடுக்க முன்னே நிறைய ஜூடிஸ தாண்டனும்.. அதை எல்லாம்.. அனாலிசஸ்ல ஜெயிச்சு இருக்கோம். அத வச்சு… இங்கே நம்ம கம்பெனி ப்ராடக்ட்ஸ் பற்றி தவறா கம்ப்ளைண்ட் கொடுத்து இருந்தவங்கள ஈஸியா சமாளிக்க முடிந்தது. ஸோ… தேன்மலை ப்ராஜக்ட் நமக்கு வந்துரும்..

 

அப்புறம் புதுசா டைல்ஸ் செய்யுற முறை, நம்ம கண்டுபிடித்து அதை ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கோம்.. இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப் படுற இந்த டைல்ஸ்.. பளிங்குக்கற்கள் அதாவது மார்பிள் போல குளுமை உள்ளடக்கி, அதே நேரத்துல கல் போல உறுதியாவும் இருக்கும்.. அதற்கு பேடண்ட் கூட வாங்கியாச்சு.. ப்ரொட்யூஸ் பண்ண தொழிற்சாலை கட்டப்போறோம்..” என்றவனின் அருகில் வந்தவள் கண்கள் மின்ன.. “நிஜமாவே கொண்டாட வேண்டிய வெற்றிகள் வரு…” எனவும்.. அவளருகில் சென்று இன்னொரு ஸ்பூன் இனிப்பை ஊட்டியவன், அவள் விழுங்கும் முன்பு அவளின் இதழ்களின் அருகில் வர.. முகம் சிவந்தாலும்.. அவன் விரும்பியதைத் தர… இனிப்பானது இருவருக்கும் பொதுவானது..

 

இவ்வாறே ஒருவருக்கு ஒருவர் ஊட்டிய படி தீர்க்கப் பட்ட வயிற்றுப் பசியானது… இளமைப் பசியைத் தூண்ட.. இருவரும் ஒருவருக்கொருவர் விருந்தாகினர்..

 

முன்னிரவில் அரைகுறையாய் படிக்கப்பட்ட பாடங்கள், இன்று ஆவலாய்.. கவனமாய் படிக்கப் பட்டும்.. முழுமை அடையாத தேடலாய்.. தொடர்ந்து கொண்டே போனது…. இரவு முழுவதும்….

 

***************

 

அனுமதி 29

 

அன்று…

 

விலங்கின் தோலை கவச ஆடையாக அணிந்து, வீரக் கழல்கள் மற்றும் காப்புக்களை கால்களிலும் கைகளிலும் பூட்டி, இரும்பாலாகிய தலைக் கவசம் அணிந்து, கரந்தைப் பூச்சூடிய மார்பினனாய், கூர் வேலேந்திய போர்க் கோலத்தில் சினத்துடன் நின்ற மருதநாட்டின் தலைவன் பெருவளத்தான் நன்மாறனின் அருகில் கவலையோடு நின்று கொண்டிருந்தார்.. முல்லை வனத்தின் வேந்தன் கொண்டல் வண்ணன். பெயர்த்தியைக் கண்டதும் ஏதோ சொல்ல வந்தவர், மருமகனைப் பார்த்து விட்டு அமைதியாக நின்றார்…

மருத மன்னர் மிகுந்த சினத்தில் இருப்பதை ஏறியிறங்கிய திட மார்பு உணர்த்த, விரைந்து அருகில் சென்றதும், அவர் சூடி இருந்த கரந்தைப் பூவைக் கண்ட இளவரசி சந்திர வதனாம்பிகையின் உள்ளமோ வீராவேசமுற்றது.

ஆநிரைகளை மீட்க செல்லும் தலைவன் கரந்தைப் பூச்சூடுவது மன்னர்களின் மரபு. போருக்கு அறை கூவல் விடும் வழிகளில் ஒன்று ஆநிரை கவர்தல்.. பசு, ஆடு முதலியன வயல்களும் வேளாளர்களும் நிறைந்திருக்கும் மருதநாட்டின் சொத்துக்களாகும். ‘அத்தகைய ஆநிரைகளை கவர்ந்து விட்டானா!! மருத எல்லைக்குள் நுழைந்து விட்டானா… அவ்வளவு துணிவு வந்துவிட்டதா… அந்த முத்துவடுகனுக்கு.. ’ என்று கொதித்தவள்,

“தந்தையே! ஆநிரை மீட்பதற்கு நானும் வருகிறேன்.” என…

பெரும்பாலும் தன் மகளின் சொற்களை மதிப்புடன் நிறைவேற்றும் பெருவளத்தான் நன்மாறனோ… கை உயர்த்தினார்.. தடுப்பது போல.. மித மிஞ்சிய சினத்தில் குரல் உயர,

 

” மகளே… நான் மட்டுமே கிளம்ப வேண்டிய சூழல்.. எந்த விதமான முன்னறிவிப்புமின்றி, போர் பறை கொட்டாமல், செந்நாய்க் கூட்டம் போல் படையுடன் வட எல்லையோர நமது கிராமங்களில் புகுந்து ஆநிரைகளை மட்டுமல்ல… நம் நாட்டுப் பெண்களையும் கவர்ந்து சென்றிருக்கிறான்.. ஒரு நாழிகைக்கு முன்பு தான் தான் தகவல் வந்தது..” எனவும்.. சீறும் வேங்கையாய் உடல் துடிக்க நிமிர்ந்தாள் சந்திராம்பிகை.

அவளின் முகம் பாராமலே அரசனின் கட்டளைகள் வந்தன, “சந்திரா… மருத நாயகம் இல்ல விழாவில்.. மருதநாடு அரச குடும்ப சார்பில் நாம் கலந்து கொள்ள வேண்டும். வெற்றி வேந்தனின் திடீர் முடிவினால் நமக்கு.. மனத்தாங்கல் ஏதும் இல்லை என்பதை தெரிவிக்க அது ஒன்றே வழி.. அப்போது தான் எனது நண்பனின் மனம் சிறிதுதேனும் அமைதியை பெறும்.

இன்னும் ஒன்று.. விழா முடியும் வரை நான் போருக்காக வடதிசை செல்வது அவனுக்குத் தெரிய வேண்டாம். இல்லவிழாவை விட பகை முடிப்பது தான் பெருங்கடமை என்று அவன் கிளம்பி விடக்கூடும். தாயற்ற பிள்ளைகளுக்கு நடைபெறும் வாழ்வுத் துணை

இணைவு விழா.. தந்தையும் இன்றி நடைபெறுதல்… நலமாகாது.

 

ஏற்கனவே வடதிசைக் காவலன் கரிவென்றான் படை, களவத்தார் உள்புகுந்து வெளி சென்ற வழியில் நுழைந்து.. முறைப்படி போர் பேரிகை முழக்கி, தாக்குதலை ஆரம்பித்து விட்டது. ஆநிரைகள் நமது செல்வம் என்றால்.. நம் நாட்டு பெண்கள் நம் மானம்… உயிர்.. ஆதவன் மறைவதற்குள் அவர்களை மீட்க வேண்டும்… நான் விரைந்து மருத கோட்டையின் குதிரைப் படை, தேர்ப்படையுடன் சென்று கரிவென்றானுடன் இணைந்து கொள்கிறேன்.

நாளை வைகறையில் அனைத்து திசைகளிலிருந்தும் வந்துள்ள அணிகள்… கோட்டை வெளியே பயிற்சியில் இருக்கும் வீரர்கள் மற்றும் படைகளை ஒருங்கிணைத்து தயாராக இரு.. வெற்றி வேந்தனும் வீரசேனரும் திருமணக் காப்பு கழற்றும் வரை மருதபுரி எல்லை தாண்ட கூடாது. எனவே நீயும் பெருமொழியாரும் படைகள் ஒருங்கிணைப்பை கவனித்துக் கொள்ளுங்கள்.. இன்னுமொரு கடமையும் உள்ளது..

இந்திர விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களையும் சரியான முறையில் வழியனுப்ப வேண்டும். எனவே நீ இங்கு இருப்பது தான் நலம் அம்மா..

நான் அங்கிருந்து அடுத்த திட்டம் பற்றித் தகவல் அனுப்புகிறேன். நிலையுணர்ந்து படை நகர்த்திக் கொள்ளளலாம். இங்கே… மருதபுரிக் கோட்டை உன் பொறுப்பு மகளே..” என உரைத்து அவளின் முகம் நோக்க, சில கை நொடிப் பொழுதுகள் சிந்தித்தவள், வேறு வழியின்றி சம்மதமாய் தலையசைத்தாள்.

 

கொண்டல் வண்ணன், “சந்திரா! உன் அம்மான்களும் படைகளோடு நாளை இங்கே வந்து விடுவார்கள்… நீ சாளுவ கோட்டைப் போரில் கலந்து கொள்வது விட, மருதகோட்டைக்கு காவல் நிற்பது மிக அவசியம் குழந்தாய்..” எனக் கூறியதும் அவரை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் சிறு சினம் எட்டிப் பார்க்க.. மனதிலோ.. இதே போல சொன்னவனின் நினைவு அலையடிக்க,

இறுகிய முகத்துடன், “களவத் தாக்குதல் பற்றி, சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பார்த்துக் கொள்ளளலாம் பாட்டனாரே. இன்று தந்தையார் மாசேனைத் தலைவர் மருதநாயகர் துணை கூட இன்றி தனியாக புறப்படுவது தான்.. ஏனோ.. மனம்.. ” என சொல்லியவளை இடைமறித்த கொண்டல் வண்ணன்,

 

” குழந்தாய்! நானும் உன் தந்தையுடன் செல்கிறேன். எப்போதும் கூடவே இருந்து என் உயிர் இருக்கும் வரை காத்து நிற்பேன்.. கவலை வேண்டாம்..” என்று கூற,

சந்திராம்பிகைக்கோ ஏனோ மனம் ஒவ்வாத நிலையாக தோன்றியும் மறுத்து பேச இயலாத சூழல். ஒவ்வொரு கண்ணிமைப் பொழுதும்.. முத்து வடுகனால் கடத்தப் பட்ட பெண்கள் தவித்துக் கொண்டிருக்க கூடும் என்று பதைப்பு தோன்ற.. இடையில் கட்டி இருந்த… தன் வாளை விரைந்து எடுத்தவள், அதன் நுனியில் தன் கட்டை விரலை வைத்து அழுத்த, குருதித்துளி வெளி வந்தது. கோட்டைக் காவல் தெய்வத்தையும்.. மருத நாட்டை காக்கும் தேவியையும் கண் மூடி மனதால் தொழுதவள்… தந்தையை நெருங்கி வீரத்திலகம் இட்டாள்.

சங்க முழக்கமாய் உயர்ந்த குரலில், “ஆதவன் மறையும் முன் அறம் காக்கப்பட வேண்டும். மானம் இழந்தபின் வாழாமை முன்னிது எனும் வழி வந்த மங்கையரை அவர்கள் மனம் கலங்கும் முன் மீட்டுவாருங்கள்…

பகைவனுக்கு மறக்கவியலா பாடம் புகட்டி வாருங்கள்.. நம் பெண்டிரைத் தொட்டவர்களின் கரங்களை வெட்டிக் கொணர்ந்து மாலையாக்கி நம் எல்லைக் கொற்றவைக்கு சூட வேண்டும்….” என வஞ்சினமுரைக்க… நல்நிமித்தமாய் கோட்டைமுரசு ஒலித்தது. இந்திர விழா நிகழ்வுகள் மற்றும் மாசேனைநாயகர் இல்ல விழாவின் தொடக்கம் அறிவிப்பவையாக..

 

அடுத்த ஒரு நாழிகையில் மன்னர் பெருவளத்தான் எல்லை நோக்கி பயணம் செல்ல, இளவரசியோ, விழாவிற்கான ஆடைகள் உடலில் புனைந்து, தனை தாயாய் காத்து நிற்கும் தோழிக்காக, தன் குமுறும் உள்ளத்தினை மறைத்து, வதனத்தில் புன்னகையும் அணிந்து கொண்டவளாய், பரிசுப் பொருள்களோடு மாசேனை நாயகரின் இல்லம் ஏகினாள்.

 

மருத நாயகரின் இல்லத்தின் முன்பு தென்னை ஓலைகளால் மணப்பந்தல் இடப்பட்டு இருக்க.. மண விழாவிற்கான அலங்காரங்களால்.. வீடு விழாக் களை கட்டி இருந்தது. மணப்பந்தலில் புது மணல் பரப்பப்பட்டு இருந்தது. நிறை விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. புத்தாடைகள் உடுத்தி ஆபரணங்கள், மலர் மாலைகள் அணிந்து இருந்த மணமக்கள் அங்கே அமர வைக்கப் பட்டிருக்க, விருந்தினரால் அப்பந்தலும், இல்லமும் நிறைந்து இருந்தன.

 

மணமகன் வீட்டார் நிலை நின்று, கொடை மன்னரின் சார்பில் வைக்கப்பட்ட மணமகன் பரிசில்களாக பொன் ஆபரணங்களும், யானைத் தந்தங்களும் கொடை நாட்டின் சிறப்புக்களான ஏலம், பாக்கு, கிராம்பு, அகில், சந்தனக் கட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன். பரிசில் சேலை மீது மங்கல நாண் வைக்கப்பட்டு இருந்தது.

 

 

விருந்தினர் இருக்கைகளில் கொடை நாட்டின் வேந்தர் குலோத்துங்கர், பதுமன் தேவியார், இளவல் ஜெய சிம்மவர்மன் ஆகியோர் அமர்ந்து இருக்க, உள் நுழைந்தவாறே மக்கள் மன்றத்திற்கு பொதுவாய் வணங்கிய சந்திராம்பிகை, வேந்தர் புறம் திரும்பி சிரம் தாழ்த்தி வணங்கி விட்டு, தனைக் கண்டு மலர்ந்த வசந்த மாலை, வீரவேழசேனன் அருகில் சென்று நின்று கொண்டாள்.

அவளையே வெறித்து நோக்கிய வெற்றி வேந்தன் அருகே சிறிய பதுமை போன்ற உருவத்தில் குழந்தை முகம் கொண்டவளாய் அமர்ந்திருந்த கார்குழலியைக் கண்ட சந்திராம்பிகையின் கண்களில் அன்புடன் முகத்தில் கனிவும் வந்தது

இளவரசி வந்ததிலிருந்து அவளையே பின் தொடர்ந்து கொண்டிருந்த இளவலின் விழிகளில் அவளின் ஒவ்வொரு அசைவும், முகபாவனைகளும் பட்டு, இதயத்தில் சேகரமாகிக் கொண்டு இருந்தன.

 

இளவரசி வந்த தகவல் கேட்டு விரைந்தோடி வந்த மருதநாயகம் குளிர் நிலவாய் இருந்தவளை வணங்கி வரவேற்று, உயரிய ஆசனம் தந்து அமர வைக்க முயல, தன் தோழி அருகிலேயே இருக்கப் போவதாக அவள் சொல்லி விடவும், அவளின் வாடாத புன்னகை கண்டு மனம் தெளிய.. மகிழ்வுடன் இருந்தவரின் கண்கள், மன்னர் பெருவளத்தாரை தேடத் தொடங்கின.

அவரின் தேடல் புரிந்தவளாய், கோட்டை வெளியே அமைக்கப் பட்டிருக்கும் படைக் குடிலில் ஏற்பட்ட சிறு குழப்பம் காரணமாக அவர் சென்றிருப்பதாக மட்டும் தெரிவித்து விட்டு.. தன் தோழியிடம் நகர்ந்து சென்று விட, யோசனையில் ஆழ்ந்தவரை… முதுபெண்டிரின் குலவையொலியும் மணவாழ்த்துப் பாடல்களும் இழுக்க.. விழாவில் கவனம் திருப்பினார்.

பாடல் முடிவுறும் வேளையில் மணவாழ்வை நிச்சயிக்கும் வரைவோலை எழுதப் பெற்று படிக்கப் பட்டது.. மங்கல அணியை மணமகன்களின் கையில் கொடுத்ததும், குலவையோலியாலும் பெரியவர்களின் வாழ்த்தொலியாலும் நிறைந்த நன்பொழுதில், மணமகள்களின் கழுத்தில் நாணை பூட்டி அணிவித்தனர்.

 

களவொழுக்கம் எனப்படும் மனங்களின் இணைப்பால் பிணைக்கப்பட்டு.. கற்பு நிலையால் ஒன்றிணந்த வீரனும் வசந்தமும் பூலோகத்திலேயே சொர்க்கம் அடைந்தவராய் மகிழ்ந்து தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க..

தான் மட்டுமே உலகம் என எண்ணும் கார்குழலியைப் பெற்ற வெற்றியின் முகத்திலோ மென்னகை கூட இல்லாத ஆழ்ந்த அமைதி.. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஈர இதழ்கள் கொண்ட மலர்களையும் புது நெல்லையும் தூவி மணமக்களை வாழ்த்தினர்..

 

அனைவருக்கும் பருப்பும் அரிசியும் கலந்து சமைக்கப்பட்ட உணவும் நறும்சுவை பழங்களும் கொண்ட விருந்து பறிமாறப்பட… விருந்து உண்டவர்கள் விடைபெறத் தொடங்கினர்.

வந்ததிலிருந்து தனை ஏறிட்டும் பார்க்காத தன் மனம் கவர்ந்தவளை ஒருமுறை பார்த்த இளவல் முகத்தில் ஒரு புன்னகை மிளிர்ந்து மறைய… அவளின் முகத்தில் ஏதோ ஒரு கடினமும் யோசனையும் ஒளிந்து இருப்பதை அவனின் காதல் மனம் கண்டு கொண்டது. நெருங்கத் துடித்த கால்களை அடக்கி, சுற்றுப்புறம் கூர்ந்தவனாய், யோசனையுடன், அவ்விடம் விட்டு அகன்றான்.

 

தான் தங்கியிருக்கும் மாளிகை அடைந்தவனுக்காக காத்து நின்ற, கொடை நாட்டுப் படையை சேர்ந்த செய்தி சொல்லுபவன் தெரிவித்த தகவல் கேட்ட இளவலின் முகத்தில் இறுக்கம் மற்றும் சிந்தனையானது பரவ அமர்ந்து இருந்தான்.

அப்போது மருதநாட்டின் வீரனொருவன் அமைச்சர் ஆலவாய்ப் பெருமொழியார் கொடை நாட்டின் வேந்தரையும் இளவலையும் சந்திக்க விரும்புவதாக தகவல் சொல்ல, அவரை தந்தையார் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகை வர சொன்னவன் தானும் அங்கே விரைந்தான். அவன் நுழையும் போதே அங்கிருந்த அமைதியையும் வேந்தரின் முகத்தில் இருந்த யோசனையைக் கண்டதுமே அவருக்கும் தகவல் தெரிந்து விட்டது.. என்று புரிந்து விட்டது.

மைந்தனைக் கண்டதும் குலோத்துங்கர், “வா ஜெயசிம்மா! களவ நாட்டான், தன் தாக்கும் முறையை மாற்றி விட்டான். தன் படையை இரண்டாக பிரித்து மருதத்தின் மீதும், சாளுவத்தின் மீதும் ஒரே சமயத்தில் போரைத் துவக்கி விட்டான்.

 

“ இல்லை தந்தையாரே.. அவனின் நகர்வில் ஏதோ உள்நோக்கம் உள்ளது.. எனக்கு அவன் மும்முனைத் தாக்குதல் செய்யப் போகிறான் என்று தோன்றுகிறது தந்தையே… மருத எல்லை கடப்பதும் மருதத்தை போருக்கு அழைப்பதும் திசை திருப்பும் வேலையாகத் தோன்றுகிறது.. நம் கவனத்தை திசை திருப்பி விட்டு அவன் ஏதோ குள்ள நரித்தனம் செய்யப் போகிறான் என்று தோன்றுகிறது…” என,

 

ஆழ்ந்த யோசனை செய்பவரும், பின்னால் நடக்கப் போவதை முன்பே கணிக்கும் ஆற்றல் கொண்டவருமான குலோத்துங்கர், “அவனின் இலக்கு மருதமும் சாளுவமும் ஒரே நேரத்தில் அவன் ஆளுகைக்குள் வரவேண்டும் என்பது தான் போலும்… ” என்றார் முகவாயை வருடியபடி,

 

“இருக்கலாம்…” என்றான் இளவலும் யோசனையாய்.

 

“எனில், நீ உன் படையை எங்கு நோக்கி செலுத்தப் போகிறாய்? நாளை மறுநாள் கொடை நாட்டின் படையும் வந்து விடும்.” எனவும், ஆனந்த வியப்படைந்து தந்தையைப் பார்த்தான் இளவல்.

அப்போது தனது பெருத்த உடல் அனுமதித்த அளவு விரைவாக அங்கே வந்தார் ஆலவாய்ப் பெருமொழியார்.. “மன்னிக்கவும்.. தலைமை விருந்தினராக வந்த வேந்தரிடம் கூட, விடை பெறாமல் கிளம்புமாறு சூழல் எம்மன்னர் பெருமானிற்கு..

வட எல்லையோரத்தில் ஆநிரையோடு வேளாளர் கிராம மகளிரையும் கவர்ந்து சென்று விட்டான் முத்துவடுகன். எனவே இன்று மாலைப் பொழுது முடிந்து இடையாமம் (இரவு பத்து மணி) துவங்கு முன் அவர்களை மீட்டு இல்லம் சேர்ப்பேன் என வஞ்சினமுரைத்து அவர் சில நாழிகைகளுக்கு முன்பே விரைந்து கிளம்பி விட்டார். தங்களிடம், தன்னிலை விளக்க சொல்லி என்னைப் பணித்தார்..” எனவும்..

 

கொடை வேந்தர் குலோத்துங்கர், “அதனால் என்ன? காலநேரம் அப்படி அமைந்து விட்டது.” என,

 

சிம்மவர்மன்,

“எனில்.. தந்தையே.. நம் படையை மருத்தின் வட எல்லைக்கு வரவழைப்போம். மருத வேந்தர் பெருவளத்தாருக்கும் உதவியாக இருக்கும்.. மேல் திசைக்

கணவாய் வழியாக நுழைந்து.. வட எல்லை அடைய, அரை நாள் பொழுதுக்கும் குறைவாகவே தேவைப்படும்.. நான் என் முழு சேனையோடு களவனின் சாளுவ கோட்டை முற்றுகையை முறியடிக்கப் போகிறேன்.. சாளுவத்தை கொடை நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட கோட்டையாக்கப் போகிறேன்… மருதபுரிக் கோட்டை மற்றும் இளவரசியை காக்க… மருதப்படை இங்கேயே இருக்கட்டும்.” என..

 

அமைச்சர் பெருமான் தயங்கிய குரலில், “அதற்கு இளவரசி சம்மதிக்க வேண்டுமே கொடைநாட்டின் இளவலே… வட எல்லை நோக்கி அவர்கள் கிளம்ப திட்டமிட்டு விட்டார்கள். எங்கள் வேந்தருடன் இணைந்து முத்துவடுகனை எதிர்த்து போரில் இறங்கப் போகிறார்கள். மருதத்தின் குதிரைப் படையை சாளுவக் கோட்டை வெல்ல உதவியாக உங்களுடன் இணைந்து கொள்ள.. சொல்லி ஆணையிட்டு இருக்கிறார்கள். இங்கே வெற்றி வேந்தனுடன் வீரசேனரையும் கோட்டை பாதுகாப்பினை பார்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்..” என்றதும், அவனின் முகத்தில் தோன்றிய கோபம் கண்டு ஆலவாய்ப் பெருமொழியார் அடுத்த மொழி பேச இயலாதவராய் போனார்.

 

கடினமுற்ற குரலில், “கோட்டையை விட்டு… ம்.. இப்போது வதனா எங்கே?”

 

“கோட்டைக்கு வெளியே இருக்கும் படையினரை நாளை வைகறையில் கிளம்ப ஆயத்தப் படுத்த சென்று விட்டார்கள் இளவலே. .”

 

புருவங்கள் நெரிய, “திருமண விழாவிலிருந்து அரண்மனைக்கு தானே போனாள்.. எப்போது யாருடன் ஆலோசித்து இந்தத் திட்டமிடல்கள் எல்லாம் நடந்தன..?” என

சீறும் அவனை ஆலவாய்ப் பெருமொழியார் அசையாத பார்வையாக நோக்கி, ” மருத இளவரசியின் முடிவுகள் அவரே தான் எப்போதும் எடுப்பார் இளவரசே.. இது அவரின் திட்டமிடல்.. எனக்கும் இதுவே சரியென்று பட்டது.. எனவே தடை கூறவில்லை.” என,

 

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கொடைநாட்டின் வேந்தர், “ஆம் குமரா இதுவே சரியான முடிவு.. களவத்தை இரு முனையிலும் தாக்க வேண்டும். .. அவன் முன்னேறி வரும் முன் நாம் முந்திக் கொள்ள வேண்டும்.. என்று சந்திராம்பிகை எடுத்தது சரியான முடிவு.. சாளுவத்தை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நீ எண்ணுவதும் சரியான நகர்வே.. எனவே நீ உன் திட்டப்படி சாளுவ கோட்டையை மருதத்தின் துணை கொண்டு கைப்பற்று.. நாங்களும் நாளை வைகறையில் கிளம்புகிறோம். இயன்றால், வேணாடு மற்றும் வளநாடு படைகளினைக் கூட நமது படையுடன் சேர்த்தே அனுப்ப ஆவண செய்கிறேன்.” என்றதும் இளவலின் முகம் சற்றே கடினமுற்றது.

ஏதோ சொல்லும் முனைப்பில் வாயைத் திறந்தவன், கட்டுப்படுத்திக் கொண்டு தலையசைத்தான். மகனின் மனதில் உதிக்கும் முன்னரே அவனின் எண்ணம் இப்படியாகும் என்று அறிந்தவரான வேந்தர் மாறவர்மன் ஒரு மர்மப் புன்முறுவலுடன் திரும்பி, அமைச்சரிடம் பேசத் தொடங்கினார்.

 

அமைச்சர் சற்று நேரத்தில் விடைபெற்றுக் கிளம்ப, மகனை பார்த்த கொடையின் வேந்தர், தன் முன் இருந்த மேஜையில் ஏதோ கோட்டுச் சித்திரங்கள் வரைந்தவாறு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைக் கண்டு, அவனின் திட்டமிடலில் குறுக்கிட விரும்பாதவராய், உள் அறைக்கு சென்றார். தனித்து அமர்ந்திருந்த சிம்மவர்மனின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று அவரை வருத்த, கணவரைத் தொடராமல் மகனின் அருகில் சென்றார் பதுமன் தேவியார்..

 

“ஏன் குமரா வாட்டம்?”

 

ஏறிட்டு நோக்கிய இளவல் அமைதியாய் மீண்டும் கோட்டுச் சித்திரங்களை வெறிக்கவும், பெருமூச்சுடன், “உன் மனம் புரிகிறது குமரா.. இப்படி அழகும் வீரமும் பண்புமாய் பெண்.. நானும் மிக விரும்பினேன்…என் மகனின் வாழ்வரசியாக கொடை நாட்டின் அரச மாதேவியாக ஆவாள் என்று..” என,

 

அவரின் முகம் பார்த்த இளவல்.. அழுத்தமாய் சொன்னான்..

“தாயே… நமது வழக்கப்படி தாலி, பொன்னிழைகளால் ஆகிய பரிசில் சேலை அத்துடன் அவளின் முகப்பொலிவை இணை கூட்டும்.. சந்திர காந்தக் கற்களால் ஆன ஆபரணங்கள் தயார் செய்து வையுங்கள்… அவள் மட்டுமே என் வாழ்வை ஆளப் போகும் தேவி.. அவளே அரச மாதேவி ஆகவேண்டும் என்று இல்லைதானே…” என்றவன், ஒரு கைநொடிப்பொழுது கண்மூடி.. அமைதி ததும்பும் முகத்துடன் எதையோ நினைத்தவன்.. கண் திறந்தான்..

 

புரியாத பாவனையோடு தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த அன்னையை நோக்கி சிறுபுன்னகை சிந்தி.. “சாளுவ கோட்டையை வென்று விட்டு வந்து மீதம் சொல்கிறேன் அன்னையே…” என்றவாறு எழுந்தவன், தன் வேக நடையில் அங்கிருந்து புறப்பட்டான்..

********************************

 

இன்று…

தலையணையை இறுக்கி அணைத்தவாறு உறங்கிக் கொண்டு இருந்தாள் மதிவதனா… சத்தமின்றி கதவைத் திறந்து வந்த ஜெயவர்மன்.. உறங்கும் தன்னவளைக் கண்டு, அவளின் துயில் கலையா வண்ணம் மெதுவாய் அவளின் அருகில் சென்று தானும் படுக்க…. மூடச் சொல்லி கண் இமைகள் கெஞ்ச, நாசியோ, அவளிடமிருந்த வந்த அவளுக்கே உரிய நறுமணத்தை முகரவும், கண்களை திறக்க வைத்து பெண்ணழகை பருகச் சொன்னது மூளை..

கண்களைத் திறந்தவனின், இளமை உணர்வுகள் விழிக்கத் தொடங்க, அசந்து உறங்கும் அவளைக் கண்டவன், சிறுமுறுவலுடன் அவளுக்கு மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டான். அந்த சிறு அசைவிலே அவனை உணர்ந்தவள், நகர்ந்து… தலையணைக்கு வழங்கிய இடத்தை அவனுக்கு வழங்க.. அவனின் நிலையோ பரிதாபமாய்… “வது… வதைக்கிறடி.” என மெலிதாய் புலம்பியவன், தனை சுற்றியிருந்த மலர்க் கரத்தை பற்றி இதழொற்றி, மார்பில் வைத்துக் கொண்டு உறங்க முயற்சித்தான்.

“வரு…” என்ற அவளின் அழைப்பினால், சூடான மூச்சு பிடரியில் பட, லேசான சிலிர்ப்பு உடலெங்கும் ஓடி நிலை தேடி அலைந்தது.

“ஊனு கழிச்சோ….” என்ற அக்கறை மனதை சிலிர்க்க வைத்தது.

கண்களை மூடியவாறே, “ம் ம்..” என்றவனிற்கு சிரிப்பு வந்தது.

அவள் மலையாளம் பழகுவது அவனிடம் மட்டுமே. மற்றபடி வீட்டில் செம்மொழியான தமிழ் மொழி மட்டுமே பேசி சித்தியை, பணியாளர்களை விழிக்க விடுவாள். பணியிடங்களில் அவள் பேசும் தலையாளம் (தமிழ் கலந்த மலையாளம்) கேட்டு அடக்கப்பட்ட சிரிப்புடன் நகர்ந்து விடுவான்.

மெதுவாக அவள் புறமாய் திரும்பியவன், “உறக்கம் கலைஞ்சு போச்சா..” என மென்மையாய் கேட்க.. கண்கள் மூடியவாறே, “இல்லியே.. தூங்கிட்டு தான் இருக்குறேன்..” எனவும்.. முறுவல் கிளம்ப..

“ஈவினிங் வாமிட் பண்ணியாமே.. நைட் சரியா சாப்பிடலயாம். இப்போ பசிக்குதா.. ஜூஸ் ஏதாவது குடிக்கிறியா?”

“வேணாம் வரு.. ஏதும் பிடிக்கலை…” இவ்வளவு பேச்சுக்கும் விழி முத்துக்கள் சிப்பி இமைகளுக்குள் பதுங்கியே கிடந்தன…

ஆசையுடன் அவள் முகம் பார்த்தவன், தன் நெஞ்சில் புதைத்துக் கொள்ள வைக்கக் கிளம்பிய ஆவல் அடக்கி, முகம் மறைத்த கூந்தலை விலக்கி காதோரம் சொருகியவனாய், கன்னத்தில் பார்வை பதிய, “ சரியா சாப்பிடாததாலே ஒல்லியாயிட்ட.. வதூ… மதுரை போறியா? நான் உன் கூடவே வந்து விட்டுட்டு வரேன். உன் அம்மா சமைச்சது ஒருவேளை உனக்கு பிடிக்குமோ எனனவோ..” எனவும்…

சோம்பலாய் உயர்ந்த விழிகள் லேசான கிறக்கத்தில்.. “இன்னும் இரண்டு மாசம் அப்படித் தான் இருக்கும். அதுக்கு… உங்கள விட்டுட்டு… அங்க போய் இருக்க முடியுமா.. என்ன..” என்றவளின் கரங்கள் அவனைத் இறுக்கிக் கொள்ள,

வல்லிய அணைப்பிலும், காதலாய் வந்த வார்த்தைகளிலும், தனது பாடு கவலைக்கிடமாவதை உணர்ந்தவன் மெதுவாக நெளிய,

விழிகளை உயர்த்தி பார்த்தது, அவனின் உணர்வு துடைத்த முகம் கண்டவள்… “என்ன…. வரு போய்…. திரும்ப ரிஷ்யசிருங்கர் எட்டிப் பார்க்கிறார்..” என குறும்புடன் சிரித்தாள்.

“ ம்… நின்னோட நிலைக்கு.. இன்னும் குறைஞ்சதா.. பல மாசம் ஞான் ரிஷ்யசிருங்கனா தான் இருக்கனும்..” என சிறு மூச்சுடன் பாவமாய் சொன்னவனைக் கண்டவளிற்கு சிரிப்பு விரிய,

“அப்படின்னு யார் சொன்னா..”

“ம்.. நான் தெரிஞ்சுகிட்டேன்..”

“டாக்டர்ட்ட கேட்டீங்களா….” என ஆச்சரியமாக கேட்க,

சிறு வெட்க புன்னகையுடன், “இல்ல.. படிச்சு தெரிஞ்சுகிட்டேன்..” எனவும்,

அப்புன்னகையில் தோன்றி வசீகரித்த அவனின் கன்னக் குழியில் முத்தமிட்டவள்.. அவனின் முகத்தை ரசித்தவாறு, “நீங்க வெட்கப்படும் போது அழகா இருக்கு வரு…” எனவும்,

அப்புன்னகை மேலும் விரிய, “ஷ் தூங்கு… இதுக்கு மேல வேணாம்..” எனவும்..

அவன் காதில் மெதுவாக அவள் ஏதோ சொல்ல… சிரிப்புடன், “ஒண்ணும் வேணாம்… தூங்கு… நீ உன் ப்ராஜக்ட் சப்மிஷன் பேப்பர்ஸ் முடிச்சு காலேஜ் கு.. அனுப்பனும்னு சொன்ன…. அத விட்டு… இன்னிக்கு சிஸ்டம்ல என்ன ஜோலி பண்ண.. நான் ரெஸ்ட் எடுன்னு தானே சொல்லிட்டு போனேன்..” என்றவனின் குரலில் இருந்தது சிறு கண்டிப்பு..

“ஹூம்.. ரொம்பத் தான்… அது.. அந்த தேன் மலை ப்ராஜெக்ட்ல.. வைக்கப் போற பவர் ப்ளாண்ட்ஸ் மாடல்ஸ் பத்தி சில டீடெயில்ஸ் கேட்ருந்தேன் அது மெயில் வந்திருந்தது.. பெஸ்ட் மினியேச்சர்ஸ் பண்றவங்கள் விவரம் சிலது கலெக்ட் பண்ண வேண்டியதிருந்தது.. அதான்..” என்றவள் விலகிப் படுக்க முயல..

தனை விட்டு விலக அவளை அனுமதிக்காதவனாய் தன் கை வளைவுக்குள் இழுத்து, “ என்னை நோக்கிட்டே.. காதலிச்சுட்டே… இருக்க போறேன்னு சொன்ன வதூ… இப்போ வேற ஏதோ ஜோலியெல்லாம் பண்ற…” எனச் சீண்ட,

“நோக்கிட்டே தான் இருக்கேன்.. உங்க கனவுகளை.. இதெல்லாம் உங்க ட்ரீம் ப்ராஜக்ட் .. ஹிஸ்டரில உங்க பெயர்.. இராஜா ஜெயவர்மனண்ட நேம்.. ரெக்கார்ட் ஆகுற மாதிரியான வொர்க்ஸ்.. அதுல என்னால முடிஞ்ச சின்ன கான்ட்ரிப்யூஷன்ஸ்…. எண்ட வருக்காக.. காதலோட செய்றேன்….” எனவும்..

அடக்கவியலாமல் தன் இதழ்களின் பரிசை அவளின் முகமெங்கும் வழங்கியவன், அவளை லேசாய் ஒருக்களிக்க வைத்து.. தன் வலது உள்ளங்கையை அவளின் அடிவயிற்றில் பதித்து, மென்மையாய் அணைத்துக் கொண்டவன், மிகுந்த நிறைவுடன் கண்களை மூடிக் கொண்டான்.

மெலிதாய் கரகரத்த குரலில், “தூங்கு..” எனவும்… அவனின் கை மேல் தனது கையினை வைத்தவள், புன்முறுவலுடன், விழிகள் மூடிக் கொண்டாள்..

**********************

ரவீந்திரா டவர்ஸ்…

ஆதித் வர்மன் தனது கம்பெனியின் பங்குச்சந்தை நிலவரங்களை பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்.. பல புள்ளிகள் ஏற்றம் காண்பித்து இருப்பதை பார்த்தவன் இதழ்களில் வெற்றி முறுவல்..

வழக்கம் போல போட்டிக் கம்பெனிகளை பார்க்க, ஆர்ஜேவி கம்பெனியின் பங்குகள் இரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட ஐந்து மடங்கு ஏறியிருந்தது..

‘தேன் மலை ப்ராஜெக்ட் ஆரம்பிச்சாச்சு ,டைல்ஸ் மேனுஃபாக்சரிங் கம்பெனி மதுரைல அடிக்கல் நாட்டி, வேலை நடக்குது..

தொழிலில் முன்னேற்றம், வீட்டில் காதலியே மனைவியாக.. இப்போ வாரிசு வேறு வரப் போகுதாமே…’

ஏளன முறுவலைக் காட்டியவன், விழிகளில் கடினம்.. தன் குடும்பத்தை காப்பாற்றினான் தான்.. ஆனா இன்னமும் தொழிலில் போட்டிக்கு தான் நிற்கிறான்.. மனைவியின் துணையோடு…

‘ப்ராஜெக்ட் ஆர்ஜேவி வில்லேஜஸ்’ என்ற பெயரில் இயற்கை அழகு சிந்தும் குடியிருப்புக்கள், அவற்றில் அவனின் சிறப்பான இணைப்புகளான, சூரிய மின்சக்தி உற்பத்தி , மாடித் தோட்டங்கள், மழை நீர் சேகரிப்பு, கழிவுப் பொருட்களில் எரிவாயு, உரங்கள் துளியும் துர்நாற்றமின்றி உருவாக்கும் அமைப்பு என பல திட்டங்கள்..

தேன்மலையில், அவனின் மனைவியின் வரைபட அமைப்பில் கோட்டை போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட தேன் மலை ஈகோ தீம் பார்க், கேரள பாணி அரண்மனை வடிவமைப்பில் இருந்த எக்ஸிபிஷன் கட்டித்திற்குள் மின் உற்பத்தி நிலையங்களின் மாதிரிகள் என வித விதமான ப்ளான்ஸ்.. பார்த்த மத்திய அமைச்சரே வியந்து பாராட்டினாராம்.

இந்த ஐந்து மாதங்களில் அவள் என்ன மாயம் செய்தாளோ.. கம்யூனிசம் பேசித் திரியும் தொழிலாளர் தலைவர்களுக்கும் அவளைக் கண்டால், மரியாதையாம்.. அன்பாம்… ஆச்சரியம் தான்.

புதிதாக பல கோடிகள் மதிப்பிலான நிலங்களை ஆர்ஜேவி விலை பேசுவதாக தெரிகிறது. அனைத்தும் ஆதித் கன்ஸ்ட்ரெக்ஷன், ஆடம்பர குடியிருப்புகள் கட்ட தேர்ந்தெடுத்து வைத்திருந்த, திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதிகளில் இருந்த நிலங்கள்..

அவ்வளவு கோடிகள் எப்படி எங்கிருந்து… அந்த பரம்பரை நகைகளின் மூலமாக திரட்டியிருப்பானோ! என எண்ணிய ஆதித் வர்மனின் மனதில்… வன்மம்.. மீண்டும் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.

அப்போது அவனின் அலை பேசியானது ஒலிக்க, தன் மனைவியின் பெயரைப் பார்த்தவன்.. அவள் மருத்துவமனை செல்லப் போவதாக சொன்னது நினைவில் வர… யோசனையுடன் எடுத்து காதில் வைத்தான்.

 

 

*******************

 

அனுமதி 30

 

அன்று…

 

உடலின் மேல் தோலைக் காக்க… விலங்குத் தோலை பதப்படுத்தி வடிவமைக்கப்பபட்ட காப்பு உடைகளும் பஞ்ச உலோகங்கள் கொண்டு வடிக்கப்பட்ட சிறப்புக் கவசத்தையும் அணிந்திருந்த இளவரசி சந்திர வதனாம்பிகை, இடை தாண்டி வழிந்து கிடக்கும் கூந்தலை சுருட்டி அடக்கி, முடிந்து இருந்தாள். இளவரசி என்பதை அறிவிக்கும் பொன்னால் ஆகிய மகுடம் அணிந்து, தனது வீர வாளை எடுத்து வணங்கி விட்டு, இடையை இறுக்கி நின்ற துணியோடு கட்டப் பட்டிருந்த, புலித்தோலால் ஆன வாள் உறைக்குள் சொருகியவள் , இருபுறமும் கூரிய அலகுகள் பொருத்தப்பட்ட வேல்களைக் கையில் எடுத்தாள்.

 

ஆனைமலைக் குடியினரால் அனுப்பப்பட்டு இருந்த சிறப்பான வலிமையான மூங்கிலால் ஆன வில்லினை எடுத்தவள், அதனின் நேர்த்தியையும் வலிமையினையும் சோதித்து, அம்புகள் நிறைந்த அம்பறாதுணியையும் எடுத்து தோளில் மாட்டியவள், வெளியேறி, தனக்கான தனிப்பட்ட பகுதி தாண்டி வர, இவ்வாறு வெளி வரும் நேரங்களில் தனக்காக காத்து நிற்கும் தந்தை நினைவில் மனம் வாடத் திரும்பியவள்… தந்தை வழக்கமாக அமரும் இருக்கையில் அமர்ந்திருந்தவனைக் கண்டு.. மனம் குலுங்க, விழிகள் விரித்துப் பார்த்தாள்.

 

வைகறையிலேயே சாளுவம் கிளம்பி இருப்பான் என்று எண்ணியவன், தன் அரண்மனையில் இருப்பதைக் கண்டு கண்களை ஒரு முறை மூடித் திறந்தவள், காட்சிப் பிழையல்ல, அவனே தான் என்று புரிந்தவளாய், யாருமே வந்து இவன் வருகையை அறிவிக்கவில்லையே என சிறு கோபமும் முகிழ்க்க, சற்று தயங்கி நின்றாள். அப்போது ஆழ்ந்த சிந்தனையினால் சுளித்த புருவங்களுடன் இருந்தவனின் நீள்கூர் வேலணைய விழிகள் அவள் புறம் திரும்பியது கண்டு, வேரோடியது போல நிலத்தில் பதிந்து… நகர மறுத்த தன் கால்களை, முயற்சித்து அவன் புறம் திருப்பி நடந்தாள்.

 

நாளின் தொடக்கப் பொழுதாம், வைகறையின் இறுதி ஓரை நேரமாதலால், ஆதவன் தலை காட்டும் முன் பரவிய மெல்லிய வெளிச்சம், அவ்வளவு நேரம் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியை விழுங்கி… தன் மென் ஒளியை பாய்ச்சத் தொடங்கியிருந்தது,

சாளரங்களின் வழியே புலப்பட்டது..

 

புள்ளினங்களின் ஓசை காலை வருகைக்கு கட்டியம் கூற, சூரியன் எதிர் நிற்கும் நிலவாய் இருந்தாலும், தன் கண்கவரும் வகையில் ஒளி குன்றாது வரும் அவளை.. தன் விழிகளால் அளந்தான் இளவரசன் இராஜ ஜெயசிம்மவர்மன்.

 

அவளின் போர்க்கோலம் கண்டவன் மனதில் உவகையும், வருத்தமும் ஒருங்கே எழும்ப, பெருமூச்சு விட்டவன், “ மருத மன்னர் கடத்தப்பட்ட பெண்டிரில் பலரையும் ஆநிரைகளையும் மீட்டு விட்டாராம்…” எனவும்

 

ஆமென்பது போல் தலையசைத்தவள், “மூன்று பெண்களை மட்டும் கோட்டைக்குள் கொண்டு போய் விட்டானாம். எல்லைக் காவல் படைத் தலைவர்… தந்தையார் பின்னோடு சென்றும் மீட்க இயலவில்லையாம்.. அவர்களின் நிலை…” என்றவளின் முகம் வருத்தமும்… இறுகிய இதழ்கள் மற்றும் செம்மை படர்ந்த கண்கள்…

கடும் சீற்றத்தையும் மனத்தின் கொந்தளிப்பையும் காட்டின.

 

இல்லையென்பதாய் தலையசைத்தவன் பெருமூச்சுவிட்டு அவளை ஆழ நோக்கி, “அவனின் இலக்கு.. நீ வதனா… உன்னை சினமூட்டி கோட்டை விட்டு வெளியே வரவழைப்பபது தான் அவன் திட்டம். அங்கு நீ சென்றதும்.. உன்னையும் சிறையெடுக்கக் கூடும்… பின் மருதக் கோட்டையை வெல்வது அவனுக்கு மிக எளிதாகிவிடும்.

இப்போது நீ அங்கு செல்வது ஆபத்தாகக் கூடும். அதை சொல்லவே இங்கு வந்தேன் வதனா…”

 

“கோட்டைக்குள் ஒளிந்து கிடந்தால் அந்த ஆபத்து விலகி விடுமா என்ன…” என்றாள் நிமிர்ந்து.. கோபத்தை உள்ளடக்கிய இறுகிய குரலில்..

 

அதைவிட இறுகிய குரலில்,

“இல்லை தான்.. ஆயினும்.. ஏனோ மனம் தவிக்கிறது வதனா. சாளுவ கோட்டையை களவப் படைகள் தாக்கத் தொடங்கி விட்டன. அதனால்… எனது படைகளில் பாதியை நேற்றே சாளுவம் நோக்கி நகர்த்தி விட்டேன்.. மீதியை மருத கோட்டை நோக்கி களவப்படை வந்தால் எதிர் கொள்ள சொல்லி இருக்கிறேன்.. இல்லையெனில் உன்னுடன் நான் வந்திருப்பேன்.. முத்து வடுகனை வெல்ல வேண்டும்.. அதற்கு.. நீ சமரில் நிற்க வேண்டும். அவ்வளவு தானே.. என்னுடன் வா…

 

இங்கே மருதக்கோட்டையை வேழனும் வெற்றியும் காக்கட்டும். களவத்தை மருதத்தின் படையும் கொடை நாட்டுப் படையும் எதிர்த்து நிற்கும்.. நாம் சாளுவ கோட்டையை கைப்பற்றுவோம்.. முத்துவடுகனின் எல்லை கடந்து வரும் படைகளை அழித்தொழிப்போம்.. நீ சாளுவம் வந்தது அறிந்தால்.. அவனும் அங்கே தான் வருவான்.. நாம் இணைந்து வெல்வோம்..” எனவும்..

‘இது என்ன புதிதாக?’ என்பது போல புருவம் உயர்த்திப் பார்த்தாள்.

 

“வதனா, முத்து வடுகன் ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதல் செய்ய விழைகிறான். திரிசூல வ்யூகம் என்பர் இதனை. இதனை முறியடிக்க நாமும் திரிசூலக் காப்பு இடக்கூடாது.. சுழல் சக்கர வ்யூகம் அமைத்து அவனை முன்னேற விடாமல் தடுத்து சூலத்தின் கூர்மையை முறிக்க வேண்டும். அதற்கு மிகுந்த படை பலம் வேண்டும் நம்மிடம் இருப்பது.. குறைவு.

 

இன்னும் கொடை நாடு, மற்றும் அண்டை நாட்டுப் படைகள் வந்தால் நமக்கு அது சாத்தியப்படலாம். ஆனால் அவன் நேற்றே போரை துவக்கிவிட்டான்..” எனவும்..

 

“இல்லை இளவரசே.. திரிசூலத் தாக்குதலை வெல்ல சக்கர வியூகம் மட்டுமல்ல.. தாங்கியிருக்கும் கையை செயல்பட விடாமல் செய்வதும் ஒரு வழிமுறைதான்… அதைத் தான் நான் செய்யப் போகிறேன்..” என தீர்க்கமான குரலில் சந்திராம்பிகை மொழியவும், வியப்புடன் பார்த்தான் இளவரசன் சிம்மவர்மன்.

 

“முத்து வடுகன், களவக் கோட்டைக்குள்ளா இருக்கிறான் என்று எண்ணுகிறாய்.. அவன் மும்முனைத் தாக்குதலில் ஏதாவது ஒரு முனையில் நிற்கக் கூடும்..” என,

 

மறுப்பாய் தலையசைத்தாள் இளவரசி சந்திர வதனாம்பிகை…

“அவன் தாக்குதலை நடத்தும் தலையாகவே இருப்பான். அதுவும் கடத்திய பெண்டிரில் இருவர் ஊர்க் காவலர்களின் குடும்பத்தினர்.. எனவே மீட்க, நிச்சயமாக நாங்கள் தேடி வருவோம் என்று கணித்து, எங்களுக்குப் பொறி வைத்து கோட்டைக்குள் இருக்கிறான்.. அவன் மருதத்தின் வீரத்தையும் உங்களின் படையையும் எதிர்பார்த்திருக்க மாட்டான்.. அதனால்… அவன்… களத்தினுள் இறங்க மாட்டான்.. குறுக்கு வழிகள் கிடைத்தால் நுழையவும் செய்வான்.. அவன் மேற்கொள்ளுவது அறப்போர் அன்று.. இப்போது அவனின் கவனம் மருத அரசை இல்லாமல் ஆக்குவது.. அதற்கான ஆரம்பம் தான், சாளுவத்தை தன் முற்றுகைக்குள் வைத்த நிலையில், நுழைந்து கையகப் படுத்தாமல்.. மருதத்தை சீண்டும் வேலையில் இறங்கியது. நம் கவனத்தை இங்குமங்குமாய் திசைதிருப்புவது..” எனவும்,

 

அவளின் புத்திக் கூர்மையில் வியப்பின் எல்லையடைந்தவனாய், ” இவ்வளவும் தெரிந்துமா நீ.. அவனின் எல்லைக்குள் போகிறேன் என்கிறாய்..” என்றான் குர‌ல் கம்ம,

 

“ஆட்கொல்லிப் புலியை வேட்டையாட அது இருக்கும் இடம் தான் நாம் தேடிச் செல்ல வேண்டும். அது பசி மிகுதியாகி வந்து மற்றொரு தாக்குதல் நடத்தும் வரை காத்திருக்கத் தேவையில்லை..

 

அவனின் இலக்கு மருதத்தின் அரசகுடும்பம் என்றால் நானும் தந்தையாரும் எங்கு இருக்கிறோமோ அங்கு தான் அவனும் வருவான்..” என இலகுவான குரலில் சொல்லவும்.. உடலில் ஒரு விதிர்ப்பு ஓடி மறைந்தது இளவலின் உடலில்..

 

அவனின் மூச்சானது சில கைநொடிப் பொழுதுகள் தடைப்பட்டு வெளியேற.. அவளின் அருகில் வேகமாய் நெருங்கியவனை.. ஏறிட்டு நோக்கின இளவரசியின் வீர விழிகள்.

 

அவற்றில் துளியும் கலக்கம் இல்லை.. வேட்டையாடக் கிளம்பும் வேங்கைப்புலியின் மின்னும் கண்களை அவை நினைவூட்டின..

 

அவளின் உறுதி புரிந்தவனாய், சிறுமூச்சு ஒன்றை வெளியேற்றியவன்,

தன் இடையில் துணியுடன் சேர்த்துக் கட்டியிருந்த தனது சுருள் வாளை எடுத்தான்.

“வதனா! இது கொடை நாட்டின் சிறப்பான தயாரிப்பு.. மெலிதாகத் தோன்றினாலும், இதன் வேகமும் ஆற்றலும் அளப்பரியது.. இதன் கூர்மை என்றும் மங்காது.. பல போர்களில் என்னை வெற்றியை நோக்கி செலுத்தியது… இதனை உனக்கு பரிசிலாக தர விழைகிறேன்..” என்றவன் உறை விட்டு நீக்கி, அதை அவள் முன் நீட்ட, கண்ணிமைக்கும் பொழுதில் உயர்ந்து தாழ்ந்த அவனின் வலக்கரமானது அவளின் நெற்றியை வருடிக் கீழே இறங்க..

 

வாளை மறுப்பது, போருக்கு கிளம்பும் போது நல்நிமித்தமாகாது என்பதால், மறுக்க வழியின்றி கைகள் நீட்டிப் பெற்றுக்கொண்டவள், விழிகள் உயர்த்தாமல் தலையசைத்து விடை பெற்று விட்டு கொற்றவையின் கோவிலுக்கு கிளம்பினாள்..

 

எதிரில் வந்த சேடிப்பெண் அவளின் முகத்தில் மின்னிய செந்நிற வீரத்திலகம் கண்டு.. கொற்றவையின் திலகம் அதற்குள் அவளின் நெற்றியில் மின்னுவது கண்டு, வியப்புடன் பார்த்தாள்..

 

“அதற்குள் திலகம் எப்படி வந்தது இளவரசி..?” என உற்றுப் பார்த்தவள், கேட்கவும் செய்ய , வருடியவளின் விரல் உணர்ந்த ஈரத்தில், முகத்தில் திகைப்பு மின்னலென வந்து சென்றது. விழி மூடித் திறந்தவள், திரும்பி இளவலைப் பார்க்க, அவனின் பார்வையோ தவிப்புடன்..

 

அதைக் கண்டவளின் உள்ளத்தில் ஒரு வலி எழ குனிந்தவளின் அகக்கண்ணின் முன் தோன்றிய, முடிக்க வேண்டிய கடமைகள் மனதை இறுக்க, சட்டென உணர்வுகள் துடைத்து வீரத்தை கை கொண்டு சடுதியில் அரண்மனை விட்டு வெளியேறினாள்.

 

அவளின் பார்வையில் வந்த குழைவையும் பின் தோன்றிய இறுக்கத்தையும் கண்டவன், அவளின் மன நிலை புரிந்தவனாய், திரும்பி மடமடவென வெளியேறி கோட்டையில் தன் யானையைக் கட்டி வைத்திருந்த இடம் நோக்கிப் போனான்.

 

வேகமாக நடந்த சந்திராம்பிகையின் எண்ணங்களை ஆக்கிரமிப்பு செய்து இருந்தது.. கடத்தப்பட்டு இருந்த பெண்களே… தந்தையின் வஞ்சினம் அரைகுறையான நிலையில் முடிக்கப் படாமல் நின்று கொண்டிருக்க… அதனை எண்ணிய சந்திராம்பிகையின் மனதில் சீற்றத்தின் கனல்.. அக்கினிக் குஞ்செனக் கனன்று எரியத் தொடங்கியது. திரும்பியும் பாராமல்.. காத்து நின்ற தன் வெண் புரவியேறியவள்.. கொற்றவையின் கோவிலை அடைந்து வணங்கி, ஒரு கணப்பொழுதும் தாமதிக்காமல் கோட்டை விட்டு வெளியேறி படைவீரர்கள் அணிவகுத்து நின்ற இடத்தை அடைந்தாள்.

 

கோட்டை மேலே இருந்த போர்ப்பறையானது ஒலிக்கப்பட.. அனைவரின் கவனமும், அங்கிருந்த மேடை போன்ற மணற்குன்றில் துள்ளி ஏறிய வெண்புரவியில் ஆரோகணித்து இருந்த இளவரசியின் மேல் நிலைத்தன.

 

வைகறை முடியும் வேளை வெளி வந்த பகலவனின் சிறு துண்டென தகதகவென ஒளிர்ந்த தங்களின் இளவரசியைக் கண்டு அனைவரும் ஆரவாரம் செய்ய , வணங்கி ஒரு கையை உயர்த்தியவள்.. கணீரென்ற குரலில் பேசத் தொடங்கினாள்.

 

“ மருதத்தின் மானம் காக்க… மண்ணின் பெருமை உரைக்க, தன்னுயிரையும் உடலையும் எல்லைக் காவல் தேவியான கொற்றவைக்கு முன் படையலாக வைக்கக் காத்து நிற்கும் வீரர்களே…

 

மருதத்தின் வீரத்தை சோதிக்கும் வண்ணம்.. நமது மண்ணின் மாண்பை வீழ்த்தும் வண்ணம்.. நம் பெண்டிரை கோட்டைக்குள் மறைத்து வைத்துள்ளான் களவ நாட்டின் முத்துவடுகநாதன்.. அவர்களை மீட்பதற்காக மட்டுமல்ல இப்போர்.. நமது தன்மானத்தை மீட்க.. மண்ணின் பெருமை காக்க… இப்போர்….” கர்ஜித்து சற்றே நிறுத்தியவள்,

 

உரத்த குரலில்,

“இப்போரின் முடிவில் களவநாடு என்ற ஒன்று இருக்கக் கூடாது. அவனின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.

 

அறத்தில் பிழைத்தோர்க்கு அவ்வறமே கூற்றாகும்.. கூற்றின் வடிவாக நாம் அவர்களை நெருங்கப் போகிறோம்.. அறம்சாரா மாக்களின் முடிவானது ஏற்கனவே எழுதப்பட்டது. அதனை நம் மறத்தின் மூலம் நிலை கொள்ளச் செய்ய வேண்டும்.இங்கு கூடி நிற்கும் ஒவ்வொருவரின் அஞ்சா நெஞ்சினிலும்.. தினவெடுத்தத் தோள்களிலும்… தளராத கைப் பிடியிலும்.. அற தேவதை உறைந்து நிற்கிறாள்.

 

அவன் களவாடிச் சென்றது பெண்களை மட்டுமல்ல.. மானத்தையும்.. மீட்பது மட்டும் கடமையல்ல… ஒவ்வொரு நாளும் நம் மக்களை, அண்டை நாடுகளை அச்சுறுத்தும்.. களவனை ஒழிப்பதும் ஒடுக்குவதும் கூட நமது கடமையே.. பகை முடிப்போம்..

மானம் காப்போம்..” என்றவள்,

 

இன்னமும் உரத்து,

கைகளை உறுதி கூறுபவளாய் உயர்த்தி நீட்டி…

“அதற்காக…. குருதி, தசைகள், உறுப்புக்கள்.. உயிர் அனைத்தையும் இழக்க தயங்க மாட்டேன்.

 

பகை முடிக்கும் வரை இக்கோட்டை புக மாட்டேன்.

 

இப்போது எருமையின் இரத்தத்தில் நனைந்து இருக்கும் கோட்டைக் கொற்றவையின் பலிக்களமானது.. பகைவரின்… முத்து வடுகனின் இரத்தத்தால் நனைக்கப்பட வேண்டும்.. இதுவே எனது சூளுரை… வஞ்சினம்..” என்று சொன்னவள்..

**************

 

அனுமதி 30(2)

 

தன் வேலை உயர்த்தி,

“வெற்றி வேல்…….” என பெண் வேங்கைப்புலியென கர்ஜிக்க…

 

“வீர வேல்… வீர வேல்… இளவரசிக்கே வெற்றி.. மருதத்திற்கே வெற்றி…” என அங்கு சூழ்ந்து இருந்த வீரர்கள் ஆர்ப்பரிக்க..

 

அங்கு நின்றிருந்த இருந்த பட்டத்து யானையானது பிளிறி அதை ஆமோதித்தது.

 

அதனருகில் போருக்கு ஆயத்தமான நிலையில் நின்று கொண்டிருந்த மாசேனை நாயகர் மருதநாயகத்தைக் கண்ட சந்திரம்பிகையின் கண்கள் பளிச்சிட.. அவரை வணங்கினாள். அமைச்சர் ஆலவாய்ப் பெருமொழியார், அரண் தாக்கச் செல்லும் தங்களின் தலைவிக்கு உழிஞை மலர் மாலை சூட்டுவது மரபு என்பதால் அதைத் தயாராக வைத்திருக்க.. பட்டத்து யானையானது பொன் தட்டிலிருந்த உழிஞை மலர் மாலையை இளவரசி சந்திர வதனாம்பிகையின் கழுத்தில் சூட்டியது.

 

வீரர்களின் வாழ்த்தொலியும், போரின் சமயம் ஒலிக்கப் பெறும் தடாரி, துடி, திமிலை மற்றும் துந்துபி போன்ற இசைக்கருவிகளின் பேரொலியால் அவ்விடம் நிறைய, அவ்வீரர்களைத் தாங்கி நின்ற நிலமே ஒரு முறை சிலிர்த்து அடங்கியது போல தோன்ற…

 

வானத்தில் பறவைகளின் அரசனான வல்லூறு வட்டமிட்டு.. களவம் நோக்கிப் பறக்க.. கண்ட அனைவர் மனதிலும் நல்நிமித்தத்தினால் பேருவகையும் ஊக்கமும் பொங்க ஆஹாரமிட்டு ஆர்ப்பரித்தனர். இளவரசி தன் கையை உயரத்தி சமிக்ஞை செய்ததும்… அணி வகுத்து நின்ற படைகள் தமக்கிட்ட கட்டளைப்படி நகரத் தொடங்கின..

 

நான்கு வகைப் படைகளும், பல குறும்படைகளாக பிரிக்கப்பட்டு.. தத்தம் தலைவர்களின் கட்டளைப்படி நகரச் செய்யப்பட்டிருக்க, சற்று முன் சந்திராம்பிகையின் உள்ளத்தில் கனன்ற நெருப்பானது… இப்போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் உள்ளங்களிலும்…

 

 

அது இப்போது ஊழித்தீயாய் வடிவெடுத்து களபம் நோக்கி கிளம்பியது…

 

கோட்டையின் மற்றொரு வாயில் வழியாக வெளியேறி மருதத்தின் கரிப்படை, பரிப்படையில் பாதி, பின்தொடர.. தனது யானையின் மீதேறி சாளுவம் நோக்கி சென்று கொண்டிருந்த இளவல் சிம்மவர்மன் திரும்பிப் பார்த்தான்.

 

ஒரு காதத் தொலைவில்… இளவரசியின் தலைமையிலான படைகள் கிளம்பி நகர ஆரம்பித்ததை… அங்கிருந்து கேட்ட போர்க் கருவிகளின் ஓசையிலும் படைகளின் மிடுக்கு நடையால்… கரி.. பரி… தேர்.. போன்றவற்றின் அதிரும் ஓட்டத்தின் ஒலிகளாலும் அறிந்து கொண்டான்.

 

படை கிளப்பியதால் எழும்பிய தூசியானது… காலைப் பனிக்குப் போட்டியாக உயர்ந்து… பரவும் தூரத்தைக் கண்டு… சேனையின் அளவைப் புரிந்து கொண்டவனாய், சிறு முறுவல் மலர, மெல்லிய குரலில் சொன்னான்,

“களபம் வென்று வாகைப் பூ சூடி.. நீ வரும் வேளையில்.. என் கை மணமாலையும் காத்திருக்கும்.. பெண்ணே…

 

அதற்கும் முன்பாகவே.. சாளுவ கோட்டையை வென்றவனாய் உனை நாடி வருவேன்.. என் காதலின் பரிசில்களோடு…

 

எனது வெற்றிக்கு… மனதின் நிறைந்த காதலிற்கு… உன்னையே பரிசிலாகக் கேட்பேன்… எவர் எனைத் தடுப்பது!! உனக்கு மாலை சூட்டி, குருதியால் திலகமிட்ட என்னை…. உன்னால் கூட மறுக்க முடியாது வதனா.. அந்நிலையில் உனை நிறுத்துவேன்…” என்று சொன்னவன் முகத்தில் கம்பீரம் துலங்க, சிறு குறும்புப் புன்னகை…

 

“புயலைக் கை கொண்டு தடுக்க முயலாதே அந்நேரம்.. உன்னால் இயலாது…” கண்களை மூடிக் கொண்டவனின் இதயத் துடிப்பிலும் அவள் பெயர் ஒலிக்க, தன் இதயத்தோடு அவளின் இதயமும் இணைந்து துடிப்பதை உணர்ந்தான்.

சில கை நொடிப்பொழுதுகள் கடக்க இமைக் கதவுகளை திறந்தவனின் கண்களில்… சாளுவ மலை மீது இருந்த கோட்டை கண்ணில் பட… காதல் இருந்த இடத்தை சடுதியில் கடமை வந்து நிரப்பிக் கொண்டது..

 

கோட்டையின் வெளியே களவப்படை தாக்குதலை தொடங்கி விட்டதை ஆங்காங்கே புகை போல் கிளம்பிய தூசி மண்டலங்களின் மூலமாக கண்டு கொண்டவனின்.. கண்களில் ரௌத்திரமேற… அவனின் கையசைவில் வேகமாக ஓடத் தொடங்கியது அவனின் வேழம்…

 

இளவல் சேனை என்று அழைக்கப்படும் அவனின் நால்வகை சேனையானது நேற்றே உறையலூரில் இருந்து கிளம்பி விட்டது. இந்நேரம் சாளுவத்திற்கு ஒரு காதத் தொலைவில் பாசறை அமைத்து போருக்கு ஆயத்தமாகி தன் ஆணைக்காக காத்துக் கொண்டு இருப்பார்கள் என்று எண்ணியவன்… தான் இன்னமும் இரு நாழிகைப் பொழுதில் அப்பாசறையை அடைய வேண்டும் என்று முடிவெடுத்தவனாய் வானின் பரிதியைக் கண்டு பொழுதை அறிய முயன்று, நேரத்தைக் கணித்தவனாய் தனது வேழத்தை துரிதப் படுத்தினான்.

 

****************

வைகறைப் பொழுதில் கிளம்பிய இளவரசியின் மருதப் படையானது செங்கதிரோன் வெங்கதிரோனாக மாறிய நண்பகலில்.. மருத எல்லையில் மன்னர் பெருவளத்தான் அமைத்திருந்த பாசறையை அடைந்தது.

வட எல்லைக் காவல் தலைவர் கரிவென்றானின் தலைமையில் களவ எல்லை தாண்டி போர் புரிய சென்றவர்கள் கோட்டை அகழியைக் கடக்க இயலாமல்.. இரண்டு பனைமர உயரமிருந்த மதிலை தாக்க

இயலாத நிலையில், அங்கேயே மதில் தகர்க்க… கற்களை வீசும் பொறிகள் தயார் செய்து கொண்டிருப்பதை அறிந்தவள், அகழியை ஒரு புறமாக தூர்த்து உயரமாக்கி விட்டால், அதன் வழியே யானைகளை நடத்திச் சென்று மதிலையும் கதவையும் தகர்க்க செய்து விடலாம் என்று கூறியதும், அதற்கான வேலைகளைச் செய்வதாக மாசேனை நாயகரான மருதநாயகம் பொறுப்பேற்றார்.

 

அதற்காக மரங்களை வெட்டுதல், சிறு பாறைகளை பெயர்த்து எடுத்து வந்து போடுதல் போன்ற வேலைகளை யானைகள் மற்றும் காலாட்படையினரை வைத்து செய்ய வைப்பதாக கூறி கிளம்பியவர், தன் நண்பரைக் காணவில்லையே என்று தேட.. வந்ததிலிருந்து தன் தந்தையாரைக் காணவில்லையே என்று எண்ணிக் கொண்டு இருந்த இளவரசியும் அங்கிருந்த குறும்படைத் தலைவரை கேட்க.. அவரின் மௌனத் தயக்கம் கண்ட இளவரசியின் கண்கள் யோசனையில் சுருங்கின.

 

சிறிது தயங்கிய அத்தலைவர், “மன்னர் பெண்டிரை மீட்டு விட்டு வரும் போது.. மூன்று பெண்களை மட்டும் தனியே தேரில் கோட்டைக்கு இட்டுச் செல்வதை உணர்ந்து குதிரையில் துரத்தி சென்றார். அப்போது, அரக்கன் போன்ற உயரமும்.. சதைகள் திரண்ட மார்பும்.. குன்று போல் தோள்களும், கரிய மலை போன்ற தோற்றத்தில் இருந்த ஒருவன்.. இரும்பு பந்தின் மீது கூரிய முட்கள் பொதிந்து இருந்த ஆயுதத்தால் பின்புறமிருந்து தாக்கி விட்டான்..

கோழைப்பயல்… மன்னரின் தலைக்கவசம் தெறித்து விழ… பின்தலையில் காயமாகி மயக்கமடைந்து வீழ்ந்து

விட்டார். மருத்துவர் எவ்வளவோ மருந்துகள் கொடுத்தும் மயக்கம் தெளியவில்லை தேவி..” எனவும்,

 

அடைத்த குரல்வளையை செருமிச் சீர் செய்தவள்,

“இப்போது மன்னர் எங்கே?” என துடிக்கும் குரலில் கேட்க..

 

“பாசறையின்

மருத்துவக் குடிலில் இருக்கிறார தேவி.. இரவில் இருந்து உடல் சூடு வேறு அதிகமாக இருக்கிறது..” என வருத்தமான குரலில் அவன் பதில் உரைக்கவும்.. மனம் கனக்க அக்குடில் நோக்கி நடந்தாள்.

 

அங்கே குடிலின் உள்ளே…. மணலால் அணைவு போல கட்டப்பெற்று.. பூச்சிகள் நெருங்காவண்ணம் மூலிகைச்சாறால் காக்கப்பட்டு… மென்மையான அருகு போன்ற மூலிகைப் புற்களை மஞ்சமாக்கி… துணிகளைக் கொண்டு போர்த்தப்பட்டு உறுத்தா வண்ணம் செய்யப்பட்டு இருந்த படுக்கையில்… உடலெங்கும் விழுப்புண்களும் அவற்றிலிருந்து வெளியேறி கட்டியாகி இருந்த குருதியும் பச்சிலை காப்பும் தலையில் உடற்சூடு தணிக்க மூலிகைகளால் பற்று இடப்பட்டு இருக்க.. கண் மூடி இருந்தார் மருதத்தின் மன்னர்.

 

மகளைக் கண்டதும் மலரும் முகம் உணர்வற்று இருக்க, மின்னும் கண்கள் இமைகளுக்குள் சிறைபட்டுக் கிடக்க, தன் உயிராய் எண்ணும் மகள், தனக்காக கோட்டையைத் தாண்டி, அவர் இட்ட கோட்டைத் தாண்டி வந்தை உணராமல் அசைவற்று இருந்தார் மன்னர் பெருவளத்தான் நன்மாறன்.

 

சூழ்ந்து நின்ற மருத்துவர்களைப் பார்த்தவள், தலைமை மருத்துவரைப் பார்க்க, அவரின் கவலை சூழ் முகம் கண்டு மனம் துடிக்க,

விழிகளை இறுக மூடித் திறந்தவள், அளவற்ற சினத்தாலும் துயரத்தாலும் கனத்த குரலில், படைத் தலைவரைப் பார்த்து,

 

“பின்னிருந்து தாக்கிய அந்த பேடியை சும்மாவா விட்டீர்கள்.. அவன்… யாரென்று தெரியுமா..?” என கோபம் கொந்தளிக்கும் குரலில் கேட்க..

 

“அவனின் முகம் முழுவதும் அம்மை வடுக்கள் இருந்தன தேவி.. அவன் தான் முத்துவடுகன் என்று எண்ணுகிறேன். அவனை சுற்றி வளைக்க முயன்றோம். அப்போது கோட்டை சுவற்றின் உச்சியிலிருந்து பாய்ந்து வந்து பல அம்புகள் சரமழையெனத் தாக்கியதில் பின்தொடர்ந்த அனைவரும் மாண்டு விட்டனர்..” என்ற குறும்படைத் தலைவர், தன் தோளையும் வயிறையும் காட்ட, அவருக்கும் அம்பு தைத்து பல காயங்கள்… பச்சிலை மருந்து இட்டு கட்டியும் குருதியானது கசிந்து வெளியேறிக் கொண்டு இருந்தது.

 

இரக்கம் மிகுந்த விழிகளால் பார்த்தவள்,

சற்று யோசித்து விட்டு, சோலையூர் தலைவர் வேங்கையரை அழைத்து,

“மன்னரை தகுந்த பாதுகாப்புடன்.. மருத கோட்டைக்கு கொண்டு செல்ல வேண்டும்.. கொல்லி மலை, ஆனைமலையின் தலைசிறந்த மருத்துவங்களை தந்து தந்தையாரை மீட்டெடுக்க வேண்டும்..” எனவும்,

 

வேங்கையர், “குழந்தாய், ஆனைமலையின் மருத்துவரான கனிச்சித்தர், கூட்டை விட்டு வெளியேறிய உயிரையும் மீட்டெடுக்க வல்லவர். தன் ஈடுஇணையில்லா மருத்துவ திறத்தால்… உங்களின் உயிர் காத்த கொடை நாட்டுப் புரவியைக் கூட காப்பாற்றி விட்டார், சிறையிடச் சொல்லி நீங்கள் கையளித்த மலைக் குடியினனின் கை, காலைக் கூட சரி செய்தவர், அவனின் ஒற்றை விழியைப் பழுது நீக்கமாட்டேனென்று விட்டார்.. அவனின் தீவினைப்பயன் என்று விட்டார். மூன்று காலமும் உணர்ந்தவர் அவர். ஆனால்… அவர் கோட்டைக்கு வர மாட்டார்.. மன்னரைத் தான்.. ஆனைமலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.. தொலைவை கணக்கிட்டால் இரண்டும் ஒன்றுதான்..” எனவும்,

 

சற்று யோசித்தவள் “அப்படியே செய்வோம். ஆனால் இந்த நிலை யாருக்கும் தெரிய வேண்டாம் வேங்கையரே.. நாக ஜெயந்தன்??” என வினவும் தொனியில் கேட்க,

 

“அந்த மலைக்குடி கிளர்ச்சியாளன் தானே. எனது ஆட்களின் பலத்த காவலில் இருக்கிறான். கை கால்கள் நேர்பட்டு விட்டன. இன்னுமும் மூன்று திங்கள்கள் ஆகுமாம்.. கொம்பின் துணையின்றி நடக்க…”

 

“அவனைக் கவனமாக…” என்றவளை இடைமறித்து, “புரிந்தது குழந்தாய்.. அவனைப் பற்றிய கவலை இனி உங்களுக்கு எப்போதுமே வேண்டாம்.. மன்னரை சோலையூர் அழைத்துக் கொண்டு சென்று கனிசித்தரிடம் மருத்துவம் செய்விக்கிறேன்.. எனது மகன் ஒருவனொடு, சிறந்த காவல் வீரர்களின் துணையோடு அனுப்பி வைக்கிறேன்..” எனவும்,

 

சம்மதமாய் தலையசைத்தாள் இளவரசி சந்திராம்பிகை.

தந்தையை திரும்பி நோக்கியவளின் கண்கள், கண்ணீரோடு சீற்றத்தையும் உமிழ்ந்தன.

 

“போரில் அறத்தை கடைபிடிக்காத அந்த முத்துவடுகனின் நிணநீர் கலந்த சோற்றை கொற்றவைக்கு படையலாக்குவேன்.. எம் நாட்டுப் பெண்களை வஞ்சனையால் கொண்டு சென்ற அவனின் கோட்டையையும்.. அவனுக்கு துணை நிற்கும் அனைவரையும் மண்ணோடு

மண்ணாக்குவேன்..” என்று மற்றுமொரு சூளுரைத்தவள்,வேகத்துடன் கிளம்பி வானளவு உயர்ந்த மதில் சுவர்களை உடைய களவ கோட்டை நோக்கி சென்றாள்.

 

கோட்டையின் நுழைவாயில் எதிரே இருந்த அகழியானது ஆயிரமாயிரம் படை வீரர்களால் தூர்க்கப் பட்டுக் கொண்டு இருந்தது. மாவீரர், அஞ்சாநெஞ்சினர் என்றும் அன்பில் வலியவர் என்றும் போற்றப்படும் மருதநாயகம் கண்ணீரை துடைத்தவராய் உடன் நடந்தார்.

 

சந்திராம்பிகை தன் கண்ணீரை அடக்கி, பகையை விரைந்து நெருங்கும் வண்ணம் வேலை துரிதமாக் நடைபெறுவது கண்டு, அதனையே பார்த்து நிற்க, நீர் கசிந்த கண்களால் திரும்பி அவளைப் பார்த்தவர்..

 

“உன்னுயிர் காக்க என் நண்பன் தன்னுயிரை தர விழைந்து விட்டான் அம்மா..” எனவும் அதிர்வுடன் திரும்பி அவரைப் பார்த்தாள். இளவரசி சந்திரவதனாம்பிகை…

 

*******************

 

இன்று…

 

திருவனந்தபுரத்தின் புகழ் வாய்ந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல். மூன்று மருத்துவர்களின் முன்பு அமர்ந்து இருந்தனர் ஆதித் வர்மனும் நிரஞ்சனா தேவியும்..

 

ஆதித் வர்மன் வழக்கமான இலகு பாவனையில் சற்று இறுக்கம் சேர அமர்ந்து இருக்க, நிரஞ்சனாவின் முகமோ கலக்கத்தில்..

 

தலைமை மருத்துவர், தன் கையில் இருந்த ரிப்போர்ட்களை ஆழ்ந்து நோக்கி விட்டு ஆதித் வர்மனைப் பார்த்து, “மிஸ்டர் இராஜா ஆதித் வர்மன்.. உங்களுக்கு ஒரே நேரத்தில சந்தோஷமும் கவலையும் தரவேண்டிய நிலைல நாங்க இருக்கோம். உங்க மனைவி நிரஞ்சனா தேவி கர்ப்பமா இருக்காங்க. நாற்பத்தி ஐந்து நாட்கள் கரு.. உங்களுக்கு இன்னொரு வாரிசு உருவாகி இருக்கு.. கரு ஆரோக்யமா இருக்கு. இதயத் துடிப்பு கூட உருவாகிடுச்சு…” என்றவர் சற்று நிறுத்தி,

 

“ உங்க மகன், இரண்டரை வயது ப்ரபஞ்ச வர்மனுக்கு லிம்போமானு சொல்லப்படுற நிணநீர் சுரப்பி புற்றுநோய்க்கான அறிகுறி தெரியுது. ஸ்டேஜ் ஒன் நிலைல இருக்கு.. நாலு மாசமா நாங்க உங்க பையனோட உடல்நிலையை உற்று கவனிச்சுட்டு வர்றோம்.. எனவே கவலைப் படாதீங்க , கடவுள் அருளால இது க்யூரபிள் டிஸீஸ். சீக்கிரமே கண்டுபிடித்ததால்.. விரைவில் குணப்படுத்திடலாம். அதுவரை நீங்க எங்க கூட ஒத்துழைக்கனும். அவனின் க்ரூப் இரத்தம் அடிக்கடி தேவைப்படும். அவனின் இரத்தத் தொடர்புள்ள உறவினர்கள் கிட்ட இருந்து கிடைத்த இரத்தம்னா ரொம்பவும் நல்லது.. மருத்துவ உதவி மூலமா மட்டுமே இதை கட்டுப்படுத்தி.. சரி செய்ய முடியும்.” எனவும்,

 

இருவரும் அதிர்வுடன் உறைந்த நிலையில் இருந்தனர். ஆதித் வர்மன் சில நிமிடங்களில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “எதனால இந்த நோய் வந்தது டாக்டர்? ரெண்டு வயசு சின்ன குழந்தைக்கு இந்த மாதிரியான கொடுமையான நோய் எல்லாம் வர முடியுமா? இந்த பெயரை நான் கேள்விப் பட்டதேயில்ல..” என நிதானத்தைக் கைவிடாதவனாய்க் கேட்க..

 

அங்கிருந்த குழந்தை நல மருத்துவர், “லிம்போமா.. இதுல இரண்டு வகை இருக்கு.. உங்க பையனுக்கு வந்திருப்பது முழுமையா குணப்படுத்தக் கூடிய வகை. புற்றுநோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணம்னு ஏதும் கிடையாது. அது மரபியல் காரணமா இருக்கலாம். அதாவது குடும்பத்தில யாருக்காவது இருந்திருக்கலாம்..”என்று சொல்ல ஆரம்பித்தவர்,

லிம்போ நோட்ஸ் எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் உருவாகும் இந்த கேன்சர் பற்றி விளக்கமாக கூறினார்.

 

பின் ஆதரவூட்டும் குரலில்,

“நீங்க கவலை படாதீங்க மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஆதித் வர்மன். இதற்கு இப்போ நிறைய மருத்துவ முறைகள் வந்திருச்சு. அதனால.. ஆறு மாதத்தில முற்றிலும் குணப்படுத்திறலாம். கவனிக்காம விட்டால் தான் ப்ரச்சனை. எனவே.. கெட்டதிலும் நல்லதா நாம உடனே கண்டு பிடிச்சுட்டோம். சிகிச்சை ஆரம்பிக்க போறோம்.

உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை. மனசு தளர விடாதீங்க..” எனவும்..

 

திரும்பி பார்த்தவன், கண்களில் நீர்வடிய அமர்ந்து இருந்த மனைவியைக் கண்டு.. முதல் முறையாக.. அவளின் கைகளை ஆதரவுடன்

பற்றிக் கொண்டான்.

ஆயினும் அழுத்தமான குரலில்.. மனைவியிடம்,

“கவலைப்படாதே. உலகத்தின் எந்த மூலைல இதற்கு ட்ரீட்மெண்ட் இருந்தாலும் கொடுக்க கூடிய.. தேவையானவற்றை இங்கேயே… வரவழைக்கக் கூடிய சக்தி என் கிட்ட இருக்கு. நீ.. நம் இராஜ வம்சத்தின் இரண்டாவது வாரிச சுமந்து கிட்டு இருக்கும் இந்த நேரத்தில கண்ணீரோட இருக்காதே. அது வாரிசின் வளர்ச்சிய பாதிக்கும். பீ போல்ட் லைக் அ க்வீன்..” என்றான்..

 

அப்போதும் அவளின் கண்ணீர் நிற்காததைக் கண்டு.. உறுத்து விழிக்க.. நிரஞ்சனா தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

 

தன் மகனிற்கு வந்திருக்கும் நோயைப் பற்றியும் தீர்க்கும் வழி முறைகள் பற்றியும், கொடுக்கப்படும் கவுன்சிலிங்கை கேட்டுக் கொண்டவன்.. அந்த நோய்க்கான மருத்துவம் சிங்கபூரில் செய்யப்படுவதாக அறிந்து கொண்டு, தற்போது நிரஞ்சனா இருக்கும் உடல்நிலையில், ஃப்ளைட்டில் பயணிக்க கூடாது என அருகிலிருந்த மகப்பேறு மருத்துவர் அறிவுறுத்தவும்,

 

சிங்கபூரின் சிறப்பு மருத்துவரை இங்கே திருவனந்தபுரத்திற்கு வரவழைக்க சொல்ல, சிங்கபூரை சேர்ந்த அவரிடம் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக பேசுவதிற்கே இரு நாட்கள் கழித்து தான் அப்பாயின்மென்ட் கிடைத்தது. அதை உறுதி படுத்துமாறு கூறியவன், அது வரை செய்ய வேண்டியது பற்றி தெளிவாக கேட்டுக் கொண்டான்..

 

அவனின் நடவடிக்கைகள் பேச்சை கவனித்துக் கொண்டு இருந்த நிரஞ்சனாவிற்கு

ஒரு மனிதனாக, கணவனாக அவனின் குணங்கள் வெறுப்பைத் தந்தாலும் ஒரு தந்தையாக அவனின் மாற்றம் சற்றே ஆசுவாசத்தைத் தர அவனையே பார்த்தவாறு இருந்தாள்.

 

***********

 

கேரளாவின் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த காலம்.. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வர்க்கலாவிலிருந்து கிளிமனூர் நோக்கி… க்ரிஸ்லர் 300 வாகனத்தை செலுத்திக் கொண்டு இருந்தான்.. இராஜா ஜெயவர்மன்..

 

அவனின் வதுவிற்கான பரிசாக அவளுக்குப் பிடித்த மின்னும் தங்க நிறம் விளிம்பு கட்டி பளபளக்க.. பாலின் வெண்ணிறமும் இணைந்து அழகூட்டிய வண்ணத்தில் இருந்த அதனை அவன் ஆறு மாதங்கள் முன்பு தருவித்து இருந்தான். அது வந்த போது சில நாட்கள் அவள் தான் அதை ஓட்டினாள். அவன் தான் வேகம் என்றால், அவனையே.. அவள் வாகனம் ஓட்டும் வேகம் சில நேரம் கதி கலங்கச் செய்யும்…

 

இந்த கார் வந்த சில வாரங்களில், அவள் அவர்களின் அன்பின் சின்னத்தை வயிற்றில் தாங்கியிருப்பது தெரிந்து விட, அடுத்து அவள் காரை ஓட்ட அவன் அனுமதிக்கவில்லை எனினும்.. அவளை எங்கேனும் அழைத்துச் செல்ல நேர்ந்தால் அதைத் தான் எடுத்து வருவான்.. மறுநாள் திருவனந்தபுரத்தில் அவளுக்கான மாதாந்திரப் பரிசோதனை இருந்தது..

 

அவள் அமர வேண்டிய இடத்தில் அவனின் பொருட்களோடு.. அவளுக்கான பரிசுகளும் இருக்க.. அவனின் குதூகலத்திற்கு குறையாத வேகத்தில் வாகனம் சென்று கொண்டு இருந்தது..

 

மாலையில் சிவேஷ்வர் அலைபேசியில் அழைத்து சொல்லியதுமே அவனின் மனம் அவளை நாடி ஓடிவிட்டது. அந்த வேகத்தோடு ஒப்பிடுகையில் வாகனத்தின் வேகமானது குறைவு தான்.. என்று சலித்தவனாய் மழையின் அளவு குறைந்து.. பன்னீராய் விழுந்த தூறலை ரசிக்கவும் தோன்றாதவனாய்.. காற்றைக் கிழித்துக் கொண்டு விரைந்து சென்று கொண்டிருந்தான் ஜெயவர்மன்.

 

சிறுவயதிலிருந்தே பிடிக்காத கிளிமனூர் அரண்மனை, இப்போது பிடித்த இடமாக மாறிப் போனது கண்டு அவனுக்கே வியப்பு தான்.

மனதிற்கு இனியவள் இருந்தால்.. பாலை நிலமும் சோலையாக ஆகிவிடும் போலும் என்று எண்ணியவனின் இதழ்களில் சிறு புன்னகை..

 

ஏனோ.. மதிவதனாவிற்கு அந்த அரண்மனை மிகப் பிடித்தம். அவனின் தாயாருக்காக அப்படி இருக்கிறாளா.. அவளுக்கே பிடித்திருக்கிறதா! ஏன் இங்கேயே இருக்க விரும்புகிறாள்…? என்றெல்லாம் அவன் கேட்கவும் இல்லை. அவள் சொல்லவும் இல்லை.

 

காரை வாயிலில் நிறுத்தியவன்.. அவனின் வருகை உணர்ந்தாற் போல அடுத்த சில நொடிகளில் கதவைத் திறந்து வெளி வந்த தன்னவளின் மதிமுகத்தின் மலர்வில் அவனின் முகமும் மலர முறுவலுடன் தனது லேப்டாப்பையும் பரிசுகளையும் எடுத்தவனாய் உள்ளே நுழைந்தான்.

 

அவன் வரும் அரவம் கேட்டு தன்னறை விட்டு வெளியே வந்த அவனின் தாயார் இராணி காஞ்சனா தேவி.. சற்று மறைவாய் நின்று தன் மகனின் முறுவலை ரசித்துப் பார்த்தவர்.. தன்னைக் கண்டால் இப்போதும் தன் மகனின் முகம் மாறி விடுவதை உணர்ந்தே இருந்தார். அத்திப் பூத்தாற்போல புன்னகை மின்னும் முகத்துடன் இருக்கும் அவனின் மகிழ்வான நேரங்களில், இவ்வாறு விலகி, மறைந்து நின்று ரசிப்பது அவரின் வழக்கமாகி இருந்தது.

 

வர்க்கலாவில் தான் இருந்த வீட்டிற்கு, விருந்தினன் போல வருபவன், இன்று தன்னுடனேயே, கணவருடன் இருந்த அரண்மனையில் தங்கி இருப்பதற்கு காரணமான, மருமகளிடம் தான்.. தன் அன்பு, பாசம் அனைத்தையும் காட்டிக் கொள்வார். உள்ளே நுழைந்தவனை கை பிடித்து இழுத்தபடி உணவு அறைக்கு அவள் தள்ளிச் செல்வதைப் பார்த்தவருக்கு சிரிப்பு வர, மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டார்.

 

“ஷ்.. அதான் வரேனில்ல..

ஏன் இழுக்குற வது.. தரை வழுக்கிறாம…” என செல்லமாய் கடிந்தவன், அவளின் இடை வளைத்துப் பற்றி, கூடவே நடத்தியவனாய்..

“நீ சாப்டியா..?” என வினவ,

 

“இல்ல.. அதான் கிளம்பினதும் ஃபோன் பண்ணீங்களே. உங்களோட சேர்ந்து சாப்பிடலாம்னு வெயிட் பண்ணேன்..” எனவும், அவன் பார்வை கடிகாரம் நோக்கி பாய்வது கண்டு அவசரமாய், “இன்னைக்கு நானே.. ஃபிஷ் கறி பண்ணேன் வரு.. அதான் உங்களுக்கு கொடுத்துட்டு.. உங்க ரியாக்ஷன் பார்த்துட்டு சாப்பிடலாம்னு வெயிட்டிங்..” என கண்சிமிட்டவும்..

 

“சாப்பிடறது தள்ளிப் போட இது ஒரு ரீஸன்? பின்னே நம்மோட குட்டி உன்னை, அந்த வேலையெல்லாம் செய்ய விட்டுருச்சா என்ன..! வாமிட் வரல..?” என்றான் அவளுடன் நடந்தபடி…

 

“ ஏழு மாசம் ஆச்சு. இனி வாமிட் இருக்காது..” எனவும்,

 

சிறு புன்னகையுடன்,

“அப்போ போன வாரம் வெனஸ்டே ராவுல நீ.. பண்ணது என்ன..”

 

“ அதூஊஊ எப்பவாவது வரும்.. வரலாம்.. டாக்டர் சொன்னாங்களே.. ஹார்மோன் சேஞ்சஸ்னாலே எப்பவாவது வரலாம். உங்களோட குட்டி சரியா வளருதுன்னு அர்த்தமின்னு..” எனவும்..

 

உணவு மேஜையினை நெருங்கியிருக்க, நாற்காலியில் அவளை தாங்கி அமர்த்தியவன்.. தன் கையில் வைத்திருந்த பையைத் திறந்து நகைப் பெட்டியை வெளியில் எடுத்தான்.

 

“சிவேஷ் பேசினான்.. உன் ரிசல்ட்ஸ் வந்துருச்சாம்.. நீதான் யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்…” என்றவன் நகைப் பெட்டியை கையில் தர அதை வாங்கி அருகில் வைத்தவள்..

 

“ யாருக்கு வேணும் இது… ஸ்வீட் இல்லையா..” என அவனின் முகம் பார்த்துக் கேட்க..

 

புருவம் சுருங்க, “ஸ்வீட்டா.. எந்த இனிப்பும் சாப்பிட உனக்குப் பிடிக்கலைனு சொன்னியே..” என

 

“ சக்கைப் ப்ரதமன் சாப்பிட பிடிக்கும்..” என்றவளின் இதழின் கள்ளச் சிரிப்பைக் கண்டவன் இதழ்கள் மலர்ந்து விரிய, குனிந்து.. அவளின் முகம் நெருங்கி, காதில் கிசுகிசுப்பாய்,

 

“சக்கைப் ப்ரதமன் தானே.. ரூமுக்குள்ள போய் தரணுமா.. இங்கனயேவா..” என்றவனின் கரகரத்த குரலில் மோகம் ஏறி இருந்தது..

 

“ இங்கே… இப்போ கொஞ்சம்.. அப்புறம் ரூமுக்குள்ள.. நிறைய…”

என்றவளின் குரலில் எதிர்பார்ப்பு..

 

சுற்றி ஒருமுறை பார்த்தவன்.. அவளின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக வாரி வழங்கும் வள்ளலாக, பெண்ணவள் தான் அவனின் தாராளத்தில் களைத்துப் போனாள்..

 

அவளின் திணறலில் மெதுவாய் விலகியவன் அவளின் முன்னுச்சியில் அழுத்தமாய் இதழ் பதித்துவிட்டு.. “சாப்பிடு.. முதல்ல.. வர வர தெம்பேயில்ல… அதுக்குள்ள டயர்ட் ஆகுற..” எனக் கேலியாய் மொழிய..

 

சிவந்து கிடந்த உதட்டை சுழித்து, “ ம்… எனக்கா… உங்க செறிய குட்டி மட்டும்.. வெளியே வரட்டும் அப்புறம் உங்களை பார்த்துக்கறேன்..” என்றவள்.. அவனின் குறும்பு வழியும் கண்களைக் கண்டு நாக்கைத் துருத்தியவாறு எழுந்து… சற்றே மூச்சு வாங்க தனக்கும் அவனுக்கும் தட்டுக்கள் எடுக்க முயல, ,அவளை தடுத்து அமர்த்தியவன், தானே அனைத்தும் எடுத்து வைத்தான்.

 

ரசித்து உண்டவன், அவளுக்கு தேவையானதை பார்த்து எடுத்து வைத்து விட்டு.. இருவரும் சாப்பிட்டு முடிக்கவும்.. குங்குமப்பூ இட்ட பாலை அவள் பக்கமாய் நகர்த்தி வைக்க..

 

“வாக்கிங் போயிட்டு வந்து குடிக்கிறேன்..” எனவும்,

 

“வெளியே மழை பெய்யுது.. இந்த வராண்டால வேணா கொஞ்ச நேரம் நடக்கலாம்..” என்றதும், சரியென்றவள், அவனுடன் மெதுவாய் நடந்தாள்..

 

அவனின் முழங்கையை பற்றியவள், பேண்ட் எய்டு ஒட்டியிருப்பதை உணர்ந்து, நிமிர்ந்து பார்த்து விட்டு, அவ்விடத்தை மெதுவாக வருடி, கைவிரல்களை அவனின் விரல்களோடு கோர்த்துக் கொண்டாள். அடிக்கடி திருவனந்தபுரம் மருந்துவமனை சென்று.. அவன் செய்து வரும் தானத்தைப் பற்றி அறிந்தவளிற்கு உள்ளம் விம்ம, தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

இருவருக்குள்ளும் புரிதலுடன் கூடிய மௌனம் ஆட்சி செய்ய, தத்தம் எண்ணங்களில் ஆழ்ந்தவராய் இணைந்து நடந்தனர். நீளமாய் இருந்த வராண்டாவில் ஆங்காங்கே ஒளிர்ந்த மின்விளக்குகளில் புலப்பட்ட மழையை.. ரசித்தவாறு நடந்த ஜெயவர்மன்.. நினைவு வந்தவனாய்,

 

“ஏன் வதூ.. அடுத்த வாரம் வளைகாப்பு வைக்கனும்னு உங்க அப்பா சொன்னாரே… முடித்ததும் உங்க வழக்கப்படி உன்னை ஊருக்கு கூட்டிட்டு போயிடுவாங்களா?” எனவும்..

 

“ஆமா.. அது தானே பழக்கம். என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு சவுண்டு விட்டுட்டு… நீங்க ஜாலியா உங்க வேலைகளப் பார்த்துட்டு இருக்கலாம்..” எனக் குறும்பாய் சொல்ல…

 

சில நொடிகள் கடந்தும் தொடர்ந்த அவனின் அமைதி உணர்ந்து நின்றவள்.. அவனை நோக்கித் திரும்பி அவனின் முகம் பார்க்க..

அரை வெளிச்சத்திலும் தெளிவாய் புலப்பட்ட அவனின் இறுகிய முகம் கண்டு மிரண்டு..

 

“என்ன வரு…?”என,

 

“வது… நீ… நீ… இங்கேயே இருக்கியா? என்னை விட்டு போகாதே…” என்றான் தவிப்பாய்..

 

சட்டென்று அவனை நெருங்கியவள்… தன் வயிறு இடம் கொடுத்த அளவு இறுக்கி அணைத்து.. அவனின் இதயத்தின் வேகத் துடிப்பு உணர்ந்து.. தலையை உயர்த்தியவள்.. அவனின் கண்களுக்குள் உற்று நோக்கிச் சொன்னாள்,

 

“போகலை… உங்கள விட்டு போக மாட்டேன் வரு… எப்பவும்…” என்றவளின் குரலில் எஃகின் உறுதி..

 

***************

 

அனுமதி 31

************

 

அன்று….

 

தனது தந்தையின் உயிர்த்தோழரும்.. மருதநாட்டின் மாவீரருமான மருதநாயகம், மெல்லமாய் வருந்திய குரலில் உரைத்த மொழிகள் கேட்ட இளவரசியின் விழிகள் சுருங்கின…

 

“என்னைக் காக்கவா.. உயிரை பணயம் வைத்துள்ளாரா.. மன்னர்?”

 

“அப்படித்தான் எண்ணுகிறேன் குழந்தாய்.. ஏனெனில் அன்று… உனது பிறந்த நேரம் வைத்து எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கணக்கிட்டு கூறும் கம்பளத்தாரிடம், உன்னைத் தொடரும் ஆபத்துகள் குறித்தும் திருமணம் மற்றும் மண வாழ்வு குறித்தும் கேட்ட போது, அவர் கூறியதாவது…

 

இன்னும் ஒரு திங்கள்(மாதம்) காலம் மருதத்திற்கே போராட்டமான காலமாகும்.. அதுவும் இளவரசியாருக்கு மனப்போராட்டங்கள், எதிரிகள் தொல்லைகள் மிகவும் அலைகழிக்கும் எனினும் எதையும் தாண்டும் வல்லமை இப்பெண்ணரசிக்கு உண்டு என்றவர்.. இவள் மருதத்தை மட்டுமல்ல, இப்புவியையே ஆளும் வல்லமை கொண்டவள்.. தெய்வத்தன்மை கொண்டவள்.. அந்த ஈரேழு புவனங்களை ஆளும் தேவியின் வடிவம் இவள்.. காலங்கள் தாண்டியும் இவளின் புகழ் நீடித்து நிற்கும்.. என்று பலவாறாக சிலாகித்தார் குழந்தாய்…

 

வெற்றிவேந்தனுடன் மணநாள் குறிக்க வேண்டும் எனவும்.. சில கணங்கள் ஆழ்ந்து அவர் வரைந்திருந்த கட்டங்களைப் பார்த்தவர்… தலையசைத்து… ஈசனைப் போல அளப்பரிய ஆற்றல் கொண்டவனே… இவளின் அருகில் மணாளனாக நெருங்க முடியும்.. பேரரசின் பெரும் தலைவனே அவளின் கணவன் ஆக இயலும்..

 

ஆனால்… அதற்கும் முன்பு ஒரு அச்சுறுத்தல் உள்ளது. வானில் கோள்களின் நிலையில் மாற்றம் வந்துள்ளது. வடதிசையில் வாலுள்ள விண்மீன் ஒன்றும் புலப்படுகிறது… இது அரசகுடும்பத்தை கேடு நெருங்குவதற்கு அறிகுறி… அரசர்கள்… வாரிசுகள் சற்று கவனமாக இருக்க வேண்டிய நேரம்.. சில கிழமைகள் (வாரங்கள்) வரை இந்த விண்மீனானது நிலை கொண்டிருக்கலாம்.. அது வரை எந்த பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம்… என்றார் குழந்தாய்.. அதனாலேயே மன்னர், உங்கள் பாட்டனார் எவ்வளவோ வலியுறுத்தியும் கூட திருமணம் பற்றி அமைதி காத்து விட்டார். இப்போதும், அதனாலேயே, போருக்கும் உங்களை அனுமதிக்காமல் தான் முந்திக் கொண்டு வந்திருக்கிறார்..” எனவும்,

 

கலங்கும் கண்களை விரித்து விழித்து.. சிமிட்டி சரி செய்தவளாய், “தந்தையாருக்கு ஏதும் ஆகாது. இந்த களவத்தானின் அழிவை அறிவிக்க அந்த வால் நட்சத்திரம் தோன்றியதாக நாம் செய்து விடுவோம். விதி வலிமையை நம் மதி வலிமையால் வெல்லுவோம்..” என, உறுதி பட உரைத்தாள் சந்திராம்பிகை..

 

அப்போது உயரமான பனை மரங்களின் உச்சியில் நின்று கோட்டையை கண்காணித்துக் கொண்டு இருந்த ஆட்காட்டிகளின் எச்சரிக்கும் சீழ்கை ஒலி சுரீலென்று கிளம்ப, அனைவரும் நிமிர்ந்து பார்த்த பொழுது கோட்டையின் மதிற்சுவற்றிலிருந்து.. அம்புகளானது இவர்கள் நின்றிருக்கும் இடம் நோக்கிப் பாய்ந்து வரத் தொடங்கின.

 

தன் இடுப்பில் சொருகியிருந்த, கொம்பை எடுத்து உரத்து ஊதியவள், “வீரர்களே கேடயத்தையும் வேல்களையும் கை கொள்ளுங்கள்.” என்று கூறியவாறு, அங்கே மரங்களை கொண்டு வந்து போடும் பணிக்காக நின்று கொண்டு இருந்த யானையின் அருகில் சென்று பாய்ந்து ஏறிய அதே விரைவோடு.. தன் வில்லினை எடுத்து அம்புகளை குறி பார்த்து செலுத்த.. இலக்கை அவை சரியாக சென்று அடைந்ததை அவை பட்ட மனிதர்கள் கத்தும் ஒலி கொண்டு அறிய இயன்றது.

 

கீழே நின்றிருந்த நூற்றுக்கணக்கான வில் வீரர்களும் வேல் வீரர்களும்.. கேடயங்களால் தம்மைக் காத்தபடி.. அம்புகள் வரும் இடம் நோக்கி தம் கை வேல்களைக் குறிபார்த்து எறிய, அவற்றால் தாக்கப்பட்ட களவத்தினர் அலறும் ஒலி பெரிதாய்க் கேட்டது.

 

மதில் சுவற்றைத் தாக்கப் பொறி தயாரித்துக் கொண்டிருந்த மற்ற வீரர்கள், தமக்கு குறி சிக்கி விட்டது என்ற குதூகலத்துடன், கல்லினால் செய்யப்பட்ட குண்டுகளை அப்பொறியில் வைத்து மதில் சுவற்றின் மீது குறி வைத்து அடிக்க, அதனால் களவ வீரர்கள் தாக்கப்பட்டதோடு சுவரும் சேதமடையத் தொடங்கியது.

 

பல களங்கள் கண்ட முல்லை வன வேந்தன், மருதநாயகம், கரிவென்றார் மற்றும் பல காவல்தலைவர்கள், குறும்படை நாயகர்கள் வழிகாட்டலில் நூற்றுக்கணக்கான பொறிகளானவை இயக்கப்பட்டு… தம் தாக்குதலை நிறுத்தாது செய்ய, இளவரசியின் ஆணைப்படி குதிரைகள் மீதும் யானைகள் மீதும் ஏறி நின்றவாறு வில்லினாலும் வேல்களினாலும் தாக்குதலைத் தொடர்ந்தனர் மருதப்படை வீரர்கள்.

 

***************

 

இளவல் சிம்மவர்மன் சென்ற வேளையில், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பொங்கி வரும் புது வெள்ளமென ஆர்ப்பரித்த நிலையில் நின்று கொண்டு இருந்தனர் கொடை நாட்டின் இளவல் சேனை வீரர்கள். சாளுவ கோட்டையை களவத்தினர் தாக்குவதைக் கண்ட வீரர்களின் தோள்கள் தினவெடுத்தாலும், நெஞ்சம் அலைகடலென பொங்கினாலும்.. தலைவனான தனது வருகைக்கும் ஆணைக்குமே காத்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டவனாய் நுழைந்த வேகத்திலேயே… போரின் துவக்கத்தை அறிவிக்கும், யானையின் தந்தத்தை வைத்து செய்யப்பட்ட துந்துபி எனும் கொம்பு இசைக்கருவியை முழக்க, அனைவரும் தங்கள் தலைவனைக் கண்டு புது ரத்தம் பாய்ந்தவர்களாய், வெற்றி வாழ்த்து ஒலியெலிப்பினர்.

 

இளவலின் கையசைவில், சடுதியில் அணி சேர்ந்து கொடியேந்திய குதிரை மற்றும் யானை மற்றும் படைத்தலைவர்கள் முன் செல்ல, அவர்களைத் தொடர்ந்த அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வீரர்கள், மருத எல்லை கடந்து சாளுவ எல்லைக்குள் புகுந்து விரைந்து களவத்தினரின் பாசறையை நெருங்க முற்பட்டனர்.

 

அவர்களின் வருகையை எதிர்பார்த்து இருந்த.. களவப்படையினரும், ஆயிரக்கணக்கில் இருந்தனர்.

இரு படைகளும் போர்க்களத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.

 

கொடை நாட்டு யானைகள் அளவிலும் ஆற்றலிலும் பெரியதாக இருந்தால், களவநாட்டு வீரர்கள், உயரத்திலும் பருமனிலும் வலிமையிலும் பெரியதாய் இருந்தனர்.

 

களவத்தினர் உடலால் பலமென்றால், கொடை மற்றும் மருதநாட்டினர், அறிவினால் திட்டமிட்டு குறி வைத்து தாக்குதலில் பலம் பொருந்தியிருந்தனர்.

 

தேவர்களின் தலைவனாம் இந்திரன் போன்று… களிற்றின் மீது நின்று, சூரியன் பல திசைகளிலும் தன் கதிர்களை செலுத்துவது போல வந்த இளவலின் யானையானது களவநாட்டின் காலாட்படையினரை மிதித்தும் நசுக்கியும் கொன்று குவிக்க, மேலிருந்த இளவலின் அடை மழை போன்ற சரத்தாக்குதலில்… கரி மற்றும் பரி மேலிருந்த வீரர்களும் மாண்டு கீழே விழுந்து… படை வேழங்களின் காலில் அரைபட்டனர்.

 

களவப்படையை வழிநடத்திக் கொண்டும், சாளுவக் கோட்டையைத் தாக்கிக் கொண்டும் இருந்த, களவத்தின் சேனைத் தலைவனின் பார்வை இளவலின் மேல் விழ, அனைவரையும் உறுதியூட்டும் வண்ணமாய் சூறாவளியாய் சுற்றிச் சுழலும் தன்மையையும் குதிரை, யானை மீது மாறி மாறி பயணித்து.. அவன் சிதைக்கும் தங்களின் படையினையும் கண்டவனின் கண்கள் வெறியினால் சிவந்தன.

 

அணியென திரண்டு வந்து சுற்றி வளைத்த காலாட்படையினரைக் கண்ட இளவல் இராஜ சிம்மன், யானையின் மீதிருந்த சறுக்கி இறங்கி தன் இரு கைகளிலும்.. உருமிகளை எடுத்து சுழற்றத் தொடங்க, சுற்றி வளைத்த அனைவரும் சுன்னத்துகளென காற்றில் பறக்க ஆரம்பித்தனர். அவர்களின் உடலின் பாகங்கள் வெட்டுப்பட்டு, ஆங்காங்கே விழ, குருதியானது, அந்நிலத்தை சிவப்புச் சேறென மாற்றத் தொடங்கியது.

 

அவனையே உற்று நோக்கியவாறு தனது தேரை செலுத்தியபடி அருகில் நெருங்கி வந்த, களவப் படை தலைவன், இப்படைகளின் தலைவனான கொடைநாட்டின் இளவரசன் அவனென்பதை, அவனின் தீரத்திலும், அணிந்திருந்த பொன் அணிகளிலும் மார்பில் ஊஞ்சலாடிய தார் எனப்படும் மாலை கொண்டும் புரிந்து கொண்டவனாய், அவனை கீழே விழத்தட்டினால், மொத்த சேனையும், உள்ளத்தால் உறுதி குலைவு பட்டு விடும் என்று அறிந்த.. அந்த களவப்படை தலைவன், சற்று நேரம் சிம்மனின் கைவீச்சை, உருமி எனப்படும் சுருள் வாள்களின் வீச்சையும் பார்த்துக் கொண்டே இருந்தான்.

 

நேர் வழியில் சென்றால் அவனின் அருகில் கூட நெருங்க முடியாது என்று புரிந்தவனாய், நஞ்சுகள் பூசப்பட்டிருந்த நாகச்சரங்களை கையில் எடுத்தான்.

 

*****************

 

இளவரசியின் தொடர்ந்த நான்கு சரத்தாக்குதலாலும், மருதத்தின் சார்பில் இருந்த அனைத்து வீரர்களின் வேல் மற்றும் சரத்தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல், மதிலை காக்க வந்த களவத்தினர் அனைவரும் வீழ, சற்று நேரம் எந்த தாக்குதலும் இன்றி அமைதியடைந்து ஆளரவமின்றி ஆனது களவத்தின் மதில்..

 

சற்று நேரம் பொறுத்துப் பார்த்த வீரர்கள், தமது இடையறாத் தாக்குதல் கண்டு அஞ்சி ஒளிந்து கொண்டனர் போலும் என்று நகைத்து மகிழ்ந்தாலும்.. கவனத்தை அங்கே வைத்தபடி…

கண்காணிக்கும் வேலையை தொடர்ந்து செய்தபடி.. அகழியை தூர்க்கும் வேலையில் மீண்டும் இறங்கினர் மருதப் படையினர்.

 

கிட்டத்தட்ட மூன்று கயிறு ஆழம் இருந்த அகழியானது வீரர்கள் மற்றும் யானைகள் உழைப்பில் ஒரு கயிறு அளவு உயரம் , நிரப்பப்பட்டு இருந்தது.. களவத்தினரால் அகழியில் விடப்பட்டிருந்த முதலைகள், வீரர்களின் வேல்களுக்கு இரையாகி, இரவு விருந்துக்கும் உணவாக பக்குவப்படுத்தப் பட்டுக் கொண்டு இருந்தன.

 

இவ்வாறாக, களவக் கோட்டையின் மீதான் அரண் தாக்கும் போரானது மருதமன்னரால் துவங்கப் பெற்று, இரண்டாம் நாள் அவரின் வீரமகளால் வழி நடத்தப் பட்டு,

ஆதவன் தன் ஒளிக்கதிர்களை குறுக்கிக் கொண்டு மேல் திசையில் மறையத் தொடங்கியதால், தற்காலிக நிறுத்தம் பெற்றதால், படைவீரர்கள் தத்தம் படைக்கருவிகளுடன் பாசறைக்குத் திரும்பினர்.

 

அன்றைய போரில் பெரிதாக சேதாரம் ஏதும் இல்லையெனினும், உடலை வருத்தும் காயங்களும், கடின உழைப்பும் இருக்கவே செய்ய, தகுந்த மருத்துவமும் உரமூட்டும் உணவும், வலி மறக்க பானங்களும்… மருதத்தின் தலைமை காவல் தலைவர்களால் தத்தமது வீரர்களுக்கு வழங்கப் பட்டன..

 

களவநாட்டினரின் அறம் சாரா போர்முறையை அறிந்திருந்த இளவரசி சந்திராம்பிகை… ஒற்றர்களை, வேவு பார்ப்பவர்களை கவனமுடன் இருக்குமாறு பணித்து விட்டு, அவளின் தந்தை இருந்த படைக்குடிலுக்குள் சென்றாள். அவரின் உடல்சூடானது இடையறாத மருத்துவத்தினால் , இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்க, இன்னும் இரு நாட்கள் பார்த்துக் கொண்டு மயக்கம் தெளியவில்லை என்றால், சோலையூர் அனுப்பலாம் அதற்கு முன்பாக அவரை பயணத்திற்கு உட்படுத்துவது, புண்களை அதிகம் திறக்க வைத்து, கோளாறை அதிகப்படுத்தி விடலாம் என்று தலைமை மருத்துவர் உரைத்ததை ஏற்றுக் கொண்டவள், தன் கையினாலேயே தந்தையாரின் விழுப்புண்களுக்கு மருந்திட்டு, தனது கவசத்தைத் தாண்டி பட்டிருந்த சிறு காயங்களுக்கும் மருந்திட்டுக் கொண்டாள். பின்னர் அவளுக்கென்று அமைக்கபட்ட தனிக்குடிலை மறுத்து விட்டு, மன்னரின் அருகிலேயே, அமர்ந்தவாறு ஓய்வெடுக்கத் தலைப்பட்டாள்.

 

*******************

 

தனது கருப்புப் புரவியில் அமர்ந்தவாறு, இரு கைகளாலும் உருமி எனப்படும் சுருள் வாள்களை சுழற்றிக் கொண்டிருந்த, இளவரசன் இராஜ ஜெய சிம்மவர்மன், களவப் படையினரின் கண்களுக்கு, கோடையின் நண்பகலினில் அனலைக் கக்கும் சூரியனாகவே தோன்றினான்.. சூரியன் தன் கதிர்களை எட்டுத் திசைகளிலும், இம்மி விடாமல் பரவச் செய்வது போல, இளவலின் வாள் வீச்சும் பரவிச் சுழன்றபடி, அருகில் நெருங்கா வண்ணம் தடுத்தது.

 

சேனைத்தலைவன் வஞ்சனையாக விடுத்த நஞ்சு பொதிந்த நாகச்சரங்களானது, சுருள் வாட்களின் வீச்சில், சுழற்றப் பெற்று, அவனின் படை வீரர்களையே தாக்கி உயிரிழக்கச் செய்தன.

 

இளவலின் கண்களுக்கு, அக்காட்சி தப்பாது பட்டு, தனை வஞ்சனையால் வீழ்த்த முயலும் எதிரியை உணர்ந்து, அந்த அம்புகளை செலுத்துபவனின் மீது ஒரு கண் வைத்தவாறே தன் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

 

அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த வளைத்தடி எனப்படும் வளரி ஆயுதம், அந்த களவ சேனைத் தலைவனின், வில்லை முறிப்பதைக் கண்டவன், கைநொடிப் பொழுதில், வலக்கை வாளை, சுருட்டி, அடுத்த நொடியில், தன் இடையிலிருந்த மழு எனப்படும் ஆயுதத்தை அவனின் மார்பை குறி வைத்து வீச, சரியாக இலக்கைத் தாக்கிய, அது அவனின் இதயக்குழாய்களை துண்டிக்க, குருதியானது வெட்டுப்பட்ட இடத்திலிருந்தும்.. வாயின் வழியாகவும் வெளியேறி, அவனை தேரிலேயே சுருண்டு வீழச் செய்தது.

 

தங்களின் தலைவன் மாண்டதை அறிந்த, களவத்தினர் ஆக்ரோஷக் கூக்குரல் எழுப்பி, இன்னமும் வெறி கொண்டு தாக்க, மருவத்தினர் மற்றும் கொடையினரின் வாள் வீச்சில் அவர்களின் தாக்குதல் செயலிழக்கப்பட, அவர்களின் துணைத் தலைவர்களின், ஆணை ஒலிகளுக்கு கட்டுப்பட்டு, தாக்கும் நிலை மாறி, உயிர் காப்புப் போராக மாறியது.

 

தொடர்ந்த போரானது கதிரவனின் மேல்திசை இறக்கத்தினால் , தற்காலிக முடிவுக்கு வர, களவத்தினர் பின்வாங்கி கானகத்திற்குள் அமைக்கப்பட்ட பாசறைக்கு திரும்புவதைக் கண்டு.. கொடை நாட்டினரின் போர் நிறுத்தப் பறையானது ஒலிக்கப்பட்டு… அன்றைய நாள் போர் நிறைவுற்றதை அனைவருக்கும் உணர்த்தினர்.

 

சேனைத் தலைவனின் மீது வளைத்தடியை சரியான நேரத்தில், செலுத்தி அவனை நிலைகுலையச் செய்தவனை வரவழைத்த இளவல், அவன் மருதத்தின் ஆனை மலைக்குடியினன் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தான். அவனைப் பாராட்டி.. பரிசில் கொடுக்க விழைந்தபோது.. அதை மறுத்த அவன், அவர்களின் இளவரசியின் உயிர் காத்த இளவலை காப்பது தங்கள் கடமை என்று சொல்லியபடி, இப்போர் முடியும் வரை இளவலை அரணாய் நின்று காவல் காப்பதாக வஞ்சினம் உரைத்துள்ளதாக சொல்லிய போது… இளவலின் இதழ்களில் புன்னகை.. மனதில் தனைக் கவர்ந்த கன்னிகை.. நினைவு..

 

**************

 

களவத்திற்கு எதிரான போரின் ஐந்தாவது நாள்…

 

கடந்த மூன்று நாட்களிலும், போருக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மறைந்திருந்து தாக்குபவர்களாய் , அவ்வப்போது ஏதோ சுரங்கவழியாக வருபவர்கள் போல திடீர் திடீரென வந்து தாக்கியும், இரவு நேரங்களில் தீகக்கும் பந்தங்களை வீசி, களவத்தினர், படைக்குடில்களை அழிக்க முயன்றதை, ஆயுதங்களை களவாட முயன்றதை , தம் எதிர்த்தாக்குதல்களால் முறியடித்தவாறு இருந்தனர் காவலில் விழிப்பாக மருதத்தின் இருந்த வீரர்கள்.

 

மறுநாள் பொழுதுகளில் மீண்டும் பலமடங்கு வேகத்துடன் அகழி தூர்த்தலும், மதிலை, கதவை உடைக்க முயற்சிப்பதும் நடக்க,

 

ஐந்தாம் நாள், அகழி நிறைத்து உண்டாக்கிய பாதை வழி சென்று, உறுதியான மரங்களாலும், இரும்பாலும்.. பலம் காட்டி நின்ற களவக் கோட்டையின் மதில் கதவை பெரிய மரங்களால் இடித்து தகர்க்க யானைகளினை செலுத்திக் கொண்டு இருந்த நேரத்தில், பொழுது மயங்கி மாலை துவங்கும் நேரத்தில், வெற்றி முரசம் ஒலித்தபடி வீரனொருவன் முன்வர, தனது கறுப்பு அழகன் புரவியில் வந்து இறங்கினான், வீர வேழ சேனன்.

 

தலைவர்கள் வெளியேறிய நிலையில், தகுந்த தலைவனின்றி இருக்கும் என்று எண்ணி

மருதகோட்டையை சுற்றி வளைக்க முயன்ற, களவத்தின் குறும் படையை ஓட ஓட விரட்டியதோடு, சிக்கியவர்களை எல்லாம் தம் இளைஞர் சேனைத்தலைவர் வெற்றிவேந்தனும் .. ஆசான் வீரவேழசேனரும் சிதைத்து, கடம்பவனக் காட்டுக்குள் உரமாக்க புதைத்ததை.. வேழனுடன் வந்த கோட்டைப் படை வீரர்கள் சொன்னதைக் கேட்ட மருத வீரர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சிக் கூக்குரலிட்டனர்.

 

தன்னையே கேள்வியாய் நோக்கியவாறு பார்த்துக்கொண்டு இருந்த இளவரசியை, நெருங்கி தலை தாழ்த்தி வணங்கிய வீரசேனனை வாஞ்சையுடன் பார்த்தவள்,

 

“ தாங்கள் காப்பு அவிழ்த்ததும், சாளுவ கோட்டை நோக்கி, நண்பரை நாடி சென்றிருப்பீர்கள் என்று நினைத்தேன். அப்படித் தானே உங்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வந்திருந்தேன்..”

எனவும்,

 

முறுவலித்து வீரசேனன்,

“தாங்கள் தகவல் தான் கொடுத்து இருந்தீர்கள் தேவி… நல்லவேளையாக ஆணையிடவில்லை.. நண்பனிட்ட கட்டளை வேறாக இருந்தது.. கணப்பொழுதும் நீங்காமல் காக்க வேண்டுமாம்…” என்றவன் அத்தோடு நிறுத்திக் கொள்ள…

 

சில கண்ணிமைப் பொழுதுகள் அமைதியில் கழிய, மெதுவாய் கேட்டாள்,

“சாளுவத்தில் நிலை என்ன? தகவல் ஏதும் வந்ததா?”

 

“சற்றே போராட்டம் தான் தேவி. எனினும் தனித்தே சமாளித்து விடுவார் கொடைநாட்டின் இளவல். அப்படித்தான் தகவல் அனுப்பியிருக்கிறார்.. களவப் படையானது சாளுவம் நெருங்க இயலாத படி சுற்றி வளைத்து அரணிட்டு விட்டாராம்.. சமரில் கலந்து கொள்ள.. சாளுவ கோட்டை படையினரும் வந்து விட்டனராம். இளவலின் தாக்குதலில் களவத்தின் மூன்று சேனைத் தலைவர்கள் மடிந்து விட்டனராம்… எனவே விரைவில் களவப்படையினர் அங்கிருந்து பின் வாங்கலாம்.. அல்லது மொத்தமாக அழித்து விடலாம்.. என்று இன்று தகவல் அனுப்பியுள்ளார்..” என,

 

அப்போது கோட்டை வாசலருகே ஏதேதோ அலறலான ஒலிகள் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க… படையினரின் கூக்குரலும், அல்லாட்டமும், அங்குமிங்கும் சிதறி ஓடுவதும் பார்த்து புரியாமல் திகைக்க…

 

அப்போது அங்கே ஓடி வந்த கொடைநாட்டின் வீரனொருவன், “தேவியாரே… கோட்டைக்கதவுகள் நமது யானைகளின் மோதலில் பிளவுற இருந்த நிலையில் படீரென்று திறந்தன…

 

உள்ளே இருந்து வெறியூட்டப்பட்ட காட்டெருதுகள் நம் மீது பாய்ந்து நம் படையினரை முட்டி வீழ்த்துகின்றன. அவற்றின் சீற்றத்தின் முன் களிறுகளும் குதிரைகளும் கூட அஞ்சி அலைபாய்கின்றன..” எனவும்,

 

வீரமுறுவலை தன் இதழ்களில் படர விட்ட இளவரசி சந்திராம்பிகை,

 

“ ஏறு தழுவுதல் மருதத்தினரின் விளையாட்டாயிற்றே.. காலாட்படையின் மற்போர் வீரர்கள் முன் செல்லட்டும்.. அரணிக்கட்டைகள் எடுத்து.. தீப்பந்தங்களை கணப்பொழுதில் கொளுத்துங்கள்.. வேல்கள் அனல்வேல்களாக மாறட்டும்… எருதுகளை வீழ்த்தவும்.. கோட்டைக்குள் புகும் நமது வெற்றியின் ஒளியாகவும் அவை ஒளிரட்டும்…”

 

******************************

 

இன்று…

 

மூன்று மாதங்களுக்கு மேலாக கொடுக்கப் பட்டு வரும்.. புற்றுநோயை எதிர்க்கும் மற்றும் பரவாமல் காக்கும் சிகிச்சைகளால், சிறிது சிறிதாக நோயின் பிடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் மகன் ப்ரபஞ்ச வர்மனின் அருகில் அமர்ந்து இருந்தான் ஆதித் வர்மன்.

 

நிரஞ்சனா தேவியின் உடல்நிலை காரணமாக, இருபத்தி நான்கு மணி நேரமும் உடனிருந்து பார்த்துக் கொள்ள.. மூன்று தாதிகளை வேலைக்கு அமர்த்தியிருந்தான். அதுவும் சிறுவயதிலிருந்து அவனை வளர்த்து வரும் தாதியோடு, மருத்துவம் படித்த செவிலிப்பெண் ஒருவரையும் கூடவே இருக்க வைத்து இருந்தான்..

 

கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபிகளால் அழிந்த புற்றுநோய் செல்களோடு எலும்பு மஜ்ஜையும் அழிவுபட்டு இருக்கும். எனவே அதற்காக வாரம் ஒருமுறை இரத்தக் கொடையாளரின் இரத்தத்தில் இருந்து மற்றும் எலும்பு மஜ்ஜையிலிருந்து (Bone marrow) பிரிக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் அவனுக்கு ஏற்றப்பட்டன. கீமோதெரபி கொடுக்கப்பட்ட முதல் நான்கு வாரங்களில் அடிக்கடி ஸ்டெம் செல் தெரபியும் கொடுக்கப் பட்டது. தன்னார்வ கொடையாளர்களிடமிருந்தும் அவனுக்குத் தேவையான எலும்பு மஜ்ஜையானது பெறப்பட்டது. அது எடுக்கும் முறை கொடையாளருக்கு சற்றே வலியினைத் தரக்கூடியது. அவர்களின் இடுப்பு எலும்பிலிருந்து சிறிய நீண்ட ஊசியால் எடுக்கப்படும்.

 

தனது மகனிற்காக இரத்தம் கொடுத்து விட்டு வந்திருந்த ஆதித் வர்மன், அந்த இரத்தத்தில் இருந்து பிரிக்கப் படும் ஸ்டெம் செல்கள் அவனுக்கு செலுத்தப்படும் நேரம் பற்றி கேட்டு அறிந்து கொண்டான்.

 

இந்தனை சிறிய வயதில் இந்த மருத்துவங்களுக்கும் பொறுமையாக உடன்படும் தன் மகனைக் கண்டு.. பரிவும் பெருமையுமாய், “யூ ஆர் எ வாரியர்.. பார்ன் டூ வின்.. மை சன்..” என்று சொல்லி தோளில் தட்டியவன்.. அவனின் சிறு முறுவலில் மகிழ்ந்து போனான்.

 

தாதிப்பெண் அவனுக்கு பழரசம் கொடுப்பதை பார்த்துக் கொண்டு இருந்தவன், மாதாந்திர பரிசோதனைக்காக மகப்பேறு மருத்துவரை பார்க்க சென்ற தனது மனைவி இன்னமும் வந்திருக்காததைக் கண்டு.. கடிகாரத்தைப் பார்த்தான்.

 

அவளின் அலைபேசிக்கு அழைக்க, அதுவும் எடுக்கப் பட வில்லை. அவளிடம் ப்ரபஞ்சவர்மனுக்கு சிறப்பு மருத்துவமளிக்கும் சிங்கப்பூர் தலைமை மருத்துவர் லிம் ஹாங் லியாங் சற்று முன் வீடியோ கான்ஃபரன்ஸிங் தொடர்பில் சொன்ன சில முக்கிய தகவல்களை தெரிவிக்க வேண்டியதிருந்தது.

 

அவனுக்கு இன்னமும் அரை மணி நேரத்தில் தொழில் தொடர்பான முக்கியமான சந்திப்பு வேறு இருந்தது. பல கோடிகளை லாபமாகத் தரும் மிகப் பெரிய நகர் குடியிருப்பு உருவாக்கம்.. ஒரு சர்வதேசக் கம்பெனியுடன் இணைந்து, இன்று ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். மதியத்திற்கு மேல் புதிய கன்ஸைன்மென்ட்கள் நான்கு கிளம்ப இருக்கின்றன. அது தொடர்பான அலுவல்கள் வேறு இருக்கின்றன.

 

இப்போது சில மாதங்களாக, ஆதித் வர்மனின் இராஜா ரவீந்திரா கன்ஸ்ட்ரெக்க்ஷன்ஸ் மிகுந்த ஏறுமுகத்தில் இருந்தது.. கேரளாவைப் பொறுத்த வரை மீண்டும் முதல் இடத்தை அவர்களின் குழுமம் அடைந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன.

 

போட்டியாக இருந்த ஆர்ஜேவி கன்ஸ்ட்ரெக்ஷன் பல மாதங்களாகவே, இவர்கள் கோரும் எந்த டெண்டர்களிலும் தலையிடுவதில்லை, உள்நுழைவதில்லை. அவர்களை எதிர்த்து வாங்கியிருந்த பல கோடிகள் பெறுமானமுள்ள குடியிருப்பு அனுமதி பெற்ற இடங்களில் கூட எந்த புதிய வேலையும் தற்போது ஆரம்பிக்கவில்லை.

 

ஆனால்.. ஆர்ஜேவி யின் வேலைகள்… இப்போதெல்லாம் தேசீய அளவில் மற்றும் பன்னாட்டு அளவில் விரிந்து கொண்டே சென்று கொண்டிருப்பதாக , அவனைப் பற்றிய ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் ஆட்டுவிக்கும் வித்தையில் அவன் மன்னனாக இருந்தான்.

 

அவன் அமைதியாக வர்க்கலா, கிளிமனூர் என்று வலம் வந்து கொண்டிருக்க, அவனின் கரங்களோ அவனின் உண்மையான திறமையான அலுவலர்கள் மூலமாக… உலகின் எல்லா மூலைகளுக்கும் நீண்டு கொண்டே இருக்கின்றன என்றது, கிடைத்த தகவல்.

 

அவனுடைய கட்டுமானங்களில் இயற்கை சார்ந்த புதிய புதிய திட்டங்களை அவன் செயல்படுத்திக் கொண்டே செல்கிறானாம். எனவே உலகெங்கிலும் அவனின் பெயர் புகழ் பரவிக் கொண்டு இருந்தது. பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறான்.

 

மத்திய அரசுடன் இணைந்த ஒப்பந்தப்படி இராஜஸ்தானின் பாலை நிலத்தில் இயற்கையாய் கிடைக்கும் அபரிதமான சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றும், மிகப் பெரிய பவர் ப்ளாண்ட் நிர்மாணம் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்க இருக்கிறானாம்.

 

மணலுக்கு மாற்றாய்

‘எம் ஸாண்ட்’ என்று மாறி, பெரும் மலையை இவ்வாறு துகளாக்குவது இயற்கைக்கு எதிரானது என்று, அதற்கு மாற்றாக செயற்கை மணல் உருவாக்கம் பற்றிய கண்டுபிடிப்பில் சென்னையில் உள்ள அவனின் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டினைச் சேர்ந்த இளம் பொறியாளர்கள்… எழுபத்தி ஐந்து சதவீதம் வெற்றியடைந்து விட்டனராம்.

 

அனல் மின்நிலைய கழிவுகள், எஃகு தொழிற்சாலை கழிவுகள் மற்றும் பழைய கட்டிடத்தின் இடிக்கப்பட்ட பகுதிகள் போன்றவற்ற தூள் நிலையில் மாற்றி, அவற்றை சரியான விகிதத்தில் கலப்பதன் மூலமாக.. மணலுக்கு மாற்றாக, அதே நேரத்தில் கட்டுமானத்திற்கு உறுதியானதாகவும் தயாரிக்கின்றனராம்.

 

வேலையற்ற வேலை.. என்று தனக்கு தோன்ற, ஜெயவர்மனுக்கோ இதுதான் மிக முக்கியமான வேலையாக தோன்றுகிறது போலும். அதற்கு அவன் செலவழிக்கும் நேரம், பணம் மிக அதிகம்.

 

இராஜா இராஜசேகர வர்மன் அமைத்துக் கொடுத்த தொழில்கள் எல்லாவற்றையும், எட்டு மாதங்கள் முன்பு, அவரின் பெயரில் அமைக்கப்பட்ட ட்ரஸ்டிற்கு மாற்றியவன், அந்த தொழில்களின் வருமானத்தை, அறிவில் சிறந்த ஏழை மாணவர்களின் படிப்பிற்கு, எதிர்காலத்திற்கு தொழில் தொடங்க, ஸ்காலர்ஷிப்பாக கொடுப்பதாகக் கேள்வி…

 

அவனின் தொழில்கள் கண்ணுக்கு புலப்படாவண்ணம் விரிவதும், அதே நேரம் அது பற்றி பெரிதாக விளம்பரமின்றி நகர்வதும் கூட ஜெயவர்மனிற்கு நற்பெயரை உருவாக்குவதாய்..

 

இவனின் தொழில் ரீதியான தொந்தரவுகளை அவன், அமைதியாய் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருந்த நிலை மாறி, தனக்கென்று ஒரு தனி ராஜபாட்டை அமைத்துக் கொண்டு , புதிய சாம்ராஜ்யமே அமைப்பதாக தோன்றுகிறது.. அதே நேரத்தில் இவனின் மறைமுக உள்ளடி வேலைகளுக்கு இடமே கொடுப்பதில்லை. அவனின், குடும்பத்தின் பாதுகாப்பை சற்றும் தளர்த்தினான் இல்லை..

 

மகனின் உடல்நிலை பற்றிய கவலை வந்ததிலிருந்து, பெரிதாக அவனை அச்சுறுத்தவும் இல்லை என்பது வேறு . எனினும்.. அவனின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டு..

அவ்வளவு பயமா என்னைப் பார்த்து.. என்று எண்ணியவன் அறியவில்லை, இராஜா ஜெயவர்மன் உள்ளக்கிடக்கையை..

 

அப்போது ஆதித்வர்மனின் உயர் ரக அலை பேசியானது ஒலிக்க, மனைவியின் எண்ணை அதில் கண்டு, ‘பரிசோதனை முடித்ததும் அறைக்கு வராமல் எதற்கு அழைக்கிறாள்?!’ என்று

எண்ணியவாறு அழைப்பை எடுத்துப் பேசியவனின் முகம் கறுத்து பின் சிவந்தது…

 

******************

 

கிளிமனூரின் அரண்மனை சிவேஷ் குடும்பத்தின் வருகையால் கலகலத்துக் கொண்டு இருந்தது. மதுரையின் மால் வேலை, ஆர்ஜேவி டைல்ஸ் உற்பத்தி தொழிற்சாலை வேலைகளை வெற்றிகரமாக முடித்து இருந்த சிவேஸ்வர குமார், தன் நண்பன் மற்றும் தங்கையின் பல நாட்கள் வேண்டுகோளுக்கு இணங்கி அன்று காலையில் தான் வந்திருந்தான். இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை பிறந்துவிடும் என மருத்துவர் குறித்துக் கொடுத்த நிலையில், விக்கிக்கும் காலாண்டு விடுமுறை சமயமானதலால், தாய்மாமனாய் தன் மருமகனை(ளை) கையில் தாங்க கிளம்பி வந்து விட்டான் தன் மனைவி மாலா மற்றும் விக்னேஷ்வருடன்.

 

ஏழாம் மாதம் வளைகாப்பு போட்டு கூட்டிச் செல்ல வந்த போது, திடீரென, மூன்று நாட்கள் மட்டுமே பிறந்த வீட்டில் இருப்பாள் என்ற ஜெயவர்மன் தனி குட்டி விமானத்தின் மூலம் சிவப்பிரகாசம் குடும்பத்தினரோடு மதுரை அனுப்பி வைத்தான். அவள் வந்து இறங்கிய போது வரவேற்க அவளுக்கு முன் வந்து நின்று கொண்டிருந்தவனைக் கண்டு அனைவரும் அசந்து போயினர்.

 

மதிவதனாவின் பிரசவம் திருவனந்தபுரத்தில் தான் என்று ஜெய் சொன்னதும், அனைவரும் பதில் சொல்ல இயலாமல் திகைக்க, தன் சித்தப்பா, சித்திக்கும் நண்பனுக்கும் இடையில் சிவேஷ் தான் மாட்டிக் கொண்டு விழித்தான்.

 

கணவனும் மனைவியும் இதில் மிகவும் ஒற்றுமையாக இருக்க, ஆனந்திக்கு வழக்கத்தை மாற்றுகிறார்களே என்று வருத்தமாய் இருந்தாலும் மருமகனின் பேச்சை தட்ட மனமின்றி, பிரசவ சமயம் தான் இங்கு, கேரளா வந்து தங்கிக் கொள்வதாய் தானே தன்னை சமாதானப் படுத்திக் கொண்டார்.

 

மதியை அவள் கணவன், மாமியாரை விடவா தான் கவனித்து விட போகிறோம் என்று அவரே சந்தேகிக்கும் வண்ணம் இருந்தது, மகளின் புகுந்த வீட்டினரின் அன்பான கவனிப்பு. மகளை பார்வையாலேயே அடை காக்கும் மருமகனின் எல்லையில்லா அன்பை பல முறை கண்ணாற பார்த்தவர் தானே அவர்.

 

இன்னமும் இரு தினங்களில் ஆனந்தியும் இங்கே வந்து விடுவார் என்று எண்ணியவனாய், மன நிறைவாய் தன் தங்கை வாழும் அரண்மனையை சுற்றி பார்வையை ஓட்டினான் சிவேஷ். இன்றே கிளம்பி மதி வதனாவிற்கான உயர்தர சிறப்பு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலை அடைவதாகத் திட்டம். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தன.

 

நிறை மாத வயிற்றுடன், தன் அண்ணி மாலா கை பற்றிக் கொண்டு பேசியவாறே, தோட்டத்தை சுற்றி ஆர்வமுடன் நடந்து கொண்டிருந்த விக்கியின் பின்னேயே சென்று கொண்டிருந்த தங்கையைக் கண்டவன், அவள் கோவில் மண்டபத்தை காட்டி தன் மனைவியிடம் ஏதோ சொல்லிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு, திரும்பி ஜெயவர்மனைப் பார்க்க,

 

யாருடன் பேசிக் கொண்டு இருந்தாலும், தன் நண்பனின் பார்வை மதிவதனாவின் மீதே இருப்பதைக் கண்டு, புன்முறுவலுடன் அவன் அருகில் சென்றான்.

 

“விட்டா ஆண் கடற்குதிரை போல அவளை உன் பாக்கெட்டில் பொதிந்து வைத்து, நீ பிள்ளை பெற்று விடுவாய் போல… என்ன பார்வைடா!!! ஜெய்.. இப்போ எல்லாம் கூலர்ஸ் வேற போடாததால.. நீ பார்க்கிறது ஊருக்கே தெரியுது..” என மெல்லிய குரலில் கேலி செய்ய,

 

சற்றே முகம் சிவந்தாலும்.. நொடியில் உணர்வு தொலைத்த முகமாய் இறுகிய குரலில் யாருக்கும் கேட்காதவாறு, ஜெயவர்மன், “ப்ச்… நீ வேற ஏண்டா.. கால நேரமில்லாம..” என்றவன், சில நொடிகள் தயங்கிப் பின், “ஷிவ்.. நேற்று கோர்ட்க்கு கூட்டிட்டு போற வழில திருமலை தப்பிச்சுட்டான். அவனோட அப்பாவோட பழைய ஆட்கள் நண்பர்கள் அவனுக்கு உதவி பண்ணிருக்காங்க.. நேற்றே மதுரை போலீஸ் இன்ஃபார்ம் பண்ணிட்டாங்க.. ஒரு தனிப்படை அமைச்சு தேடிட்டும் இருக்குறாங்க.. நீ ட்ராவல்ல இருந்ததால உன்னை கான்டாக்ட் பண்ண முடியல.” என்று சொல்லிக் கொண்டு இருந்த போது,

 

அவனின் அலைபேசி அதிர, ‘Unknown no. calling…’ என்று வருவதைக் கண்டு,

‘ஆதித் வர்மன் ஏன் இந்நேரம் அழைக்கிறான்?’ என்று யோசித்தவனாய், அழைப்பை இணைத்து காதில் வைக்க,

“ஜேவி…உன் பார்யா…” என்று ஆதித் ஏதோ சொல்லிக் கொண்டு இருக்கும் போது படார் என்ற ஒலியும் புகையும் அரண்மனை விட்டு சற்று தள்ளியிருந்த ட்ராஸ்ஃபார்மரில் இருந்து வந்தது.

 

அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த சிலர் அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்று ஆராயத் தலைப்பட்டனர். மழை நேரங்களில் இவ்வாறு ஏற்படுவது இயல்பு.. மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதில், அலைபேசிக் கோபுரமும் மின்சக்தி இழந்ததாலோ என்னவோ பேசிக் கொண்டு இருந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. சிக்னல் அளவு ஒரு கோடு கூட இல்லை.

 

அப்போது ஜெயவர்மனின் பாதுகாப்பு அதிகாரியின் வாக்கி டாக்கி ஒலிக்க எடுத்து பேசியவர், “ஸர் மெயின் கேட்ல இராஜா ஆதித் வர்மனின் மனைவி இராணி நிரஞ்சனா தேவி வந்திருக்கிறாங்களாம்… உள்ளே விடவான்னு செக்யூரிட்டிஸ் கேட்கிறாங்க.” எனவும்.. குழம்பினாலும் உள்ளே அனுமதிக்க சொல்லும் விதமாய் தலையசைத்தான் ஜெயவர்மன்.

 

நேற்று தான்.. பரம்பரை நகைகளை பத்திரப் படுத்தியிருந்த லாக்கரின் சாவியை நம்பிக்கையான ஆளின் மூலமாக இராஜா ரவீந்திரரிடம் ஒப்படைக்குமாறு, அனுப்பியிருந்தான்.

 

ஏனோ மனம் நிலை கொள்ளாமல் இரு தினங்களாய் தவித்துக் கொண்டிருந்ததை அதிகப்படுத்துவது போல, திருமலையின் செய்தி வேறு வந்து கலக்கமூட்ட, மிகுந்த கவனத்துடன் இருந்தவனை, ஏதோ நடக்கக் கூடாது நடக்கப் போகிறது என்று ஆழ்மனது எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.. கண்களில் கவனத்துடன் ஓடுபாதையில் வந்து நின்ற ஆதித்வர்மனின் ஆஸ்டின் காரைப் பார்த்தவாறு நின்றவனின் பார்வையில்,

 

மூன்றுமாத கர்ப்பிணியான இராணி நிரஞ்சனா தேவி மெதுவாக இறங்கி நடந்து வருவது புலப்பட, ‘தனியாக ஏன்.. எதற்காக இங்கே வந்திருக்கிறாள்.. இவள் வந்தது ஆதித் வர்மனுக்கு தெரியுமா.. அவன் ஃபோனில் இதையா சொல்ல வந்தான்…’ என பல கேள்விகள் மனதில் ஒலிக்க… எதையும் கேட்க இயலாதவனாய், அவளையே வெறித்து பார்த்தவாறு இருந்தான்.

 

ஜெயவர்மனின் அருகில் வந்தவள், கரம் குவித்து, “அன்று எங்க எல்லோரோட உயிரையும் நீங்களும் உங்க மனைவியும் காப்பாற்றினீங்க. உங்களுக்கு நன்றி கூட சொல்லல.. இப்போ ப்ரபுவின் கீமோதெரபி அப்போ.. கூப்பிட்ட போதெல்லாம் வந்து போன் மாரோ கொடுத்தீங்களாமே. நீங்க கொடுத்தது யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு வேற சொல்லிருந்தீங்க போல.. தற்செயலா ரிஜெஸ்டர்ல உங்க டீட்டெயில்ஸ் பார்த்துட்டு.. பின்னே அங்கே ஸ்டாஃப்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்..” என்றவள் கரம் குவித்து, குரல் நடுங்க, “மிகுந்த நன்றி.. உங்களுக்கு எப்படி கைமாறு செய்யறது… என்ன சொல்றதுன்னே தெரியலை.. உங்க மனைவி….” என்றவள் சுற்றிப் பார்ப்பதையும், விழிகளால் மதிவதனாவைத் தேடுவதையும் கண்ட சிவேஷ்.. மதியை அழைக்க கோவில் மண்டபத்தின் பக்கமாக நகர்ந்தான்.

 

நிரஞ்சனா, “ ட்ரைவர், அந்த பழக்கூடையை எடுத்துட்டு வாங்க..” எனவும், சீட்டில் இருந்த பழக்கூடையை எடுத்து வெளியே வைத்த ட்ரைவரின் கையில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அலறினாள் நிரஞ்சனா.

ட்ரைவராக வந்திருந்தவன்

மின்னல் விரைவில், ஒரு குண்டை ஜெயவர்மனை நோக்கி அனுப்பி விட்டு அடுத்து குறியை மதிவதனா நோக்கி திருப்புவது கண்டு அலறியவள்… அதைத் தடுக்க அவனின் கையைத் தட்ட முயல.. அவளை இழுத்துத் தரையில் தள்ளியவன் அடுத்த குண்டை மதிவதனா நோக்கி செலுத்தியிருந்தான்.

 

தன்னை நோக்கிப் பாய்ந்த தோட்டாவிலிருந்து விலகி, குனிந்து.. தப்பியிருந்த ஜெயவர்மனின் சிறு கைத்துப்பாக்கி தோட்டாவானது அந்த ட்ரைவர் உருவில் வந்திருந்த திருமலை நெற்றிப் பொட்டை துளைத்த அதே வேளையில், தோட்ட வேலை செய்ய பயன்படும் சிறு குத்துப்பாறை ஒன்று அவனின் மார்பை துளைத்து இருந்தது.

 

தன் நண்பனின் மீது துப்பாக்கியை பயன்படுத்தியவனைத் தாக்க… கையில் கிடைத்ததை எடுத்து வீசியிருந்த சிவேஷ்,

மதி வதனாவை தாக்க சீறிப் பறந்த தோட்டாவை…. பாய்ந்து தன் உடலில் வாங்கியிருந்தவன், அந்த வேகத்தினால்,

அருகிலிருந்த மரத்தில் சரியாய் மோதுபட்டு கீழே விழுந்து கிடக்க, “அண்ணே.. சிவா… ஷிவ்…” எனும் கூக்குரல்கள் அலறலாய் எழுந்தன.

 

கீழே விழுந்து கிடந்தவனின் வயிற்றில் பாய்ந்து இருந்த தோட்டாவானது.. இரத்தச் சிதறலை சிறு குளம் போல நிலத்தில் பரவச் செய்திருக்க, அதைக் கண்டு பதறிய அண்ணியை பார்த்து திரும்பி.. விழிகளால் வருடி, கண்களில் நீர் சொரிய தனது பத்து மாத சூல்வயிறையும் பொருட்படுத்தாது கீழே மண்டியிட்டு அவனை தன் மடியில் தாங்கிய மதிவதனா, “அண்ணே.. அண்ணே…” என கதறலாய் அழைத்ததில்.. மூடியிருந்த விழிகள் திறக்க முயன்றன.

 

மரத்தில் மோதியதில் நெற்றியில் அடிபட்டு இரத்தம் வழிந்தவாறு இருக்க,

மயங்கத் தொடங்கிய கண்களை விழித்துப் பார்த்தவன், கலங்கிய நிலையில் தெரிந்த மதிவதனாவை பார்த்து,

 

“முன்னம் செய்த பிழை.. இன்னம் சரி செய்தேன்… தேவி..” என்று குழறலாய் ஏதோ சொன்னவாறு மயங்கி விட, அவன் கூறுவது விளங்காமல் விழித்த மதிவதனா, இடுப்பு பகுதியில் மின்னல் வெட்டியது போல உணர்ந்தாள்..

*******************

 

 

அனுமதி 32(1)

 

அன்று…

 

மருதமானது வயலும் வயலை சார்ந்த நிலமும்.. அங்கே முதல் தொழில் உழவு. செல்வமாக கருதப் படுவன. ஆநிரைகள் என்று சொல்லப்படும் பசு, எருது, ஆடுகள். உழவு வேலைகளுக்காக எருதுகளை அடக்குதலும் பழக்கப்படுத்துதலும் மருதத்தினருக்கு கைவந்த கலையாகும்.

 

காட்டு எருதுகள் உருவத்திலும் சீற்றத்திலும் பெரியவை. அவற்றை வெறியூட்டும் வண்ணம் ஏதோ பானம் கொடுத்தோ.. மருந்து கொடுத்தோ.. களவத்தினர்.. சினமூட்டி அனுப்பியிருக்க, நான்கு மடங்கு வேகத்துடன் கோட்டை வாசல் வழியாக நூற்றுக்கணக்கான அளவில் சீறிப் பாய்ந்தவற்றை கண்டு வீரர்கள் திகைத்தாலும், சட்டென்று சுதாரித்துக் கொண்டு குதித்து விலகி, தப்ப முயல, அதற்குள் பலர் எருதுகளால் தாக்கப்பட்டு வீழ்ந்து இருந்தனர்.

 

இளவரசியின் வாய்மொழி உத்தரவானது பறையறிவிப்பாளனால் உரத்த குரலில் அறிவிக்கப்படவும் நெறிப்படுத்தப்பட்டவர்களாய், உடல் வலுவில் சிறந்த வீரர்கள், தம்மைத் தாக்க வரும் விலங்குகளின் மீது பாய்ந்து, கொம்புகளை பற்றி அடக்க முற்பட… சீற்றமூட்டப்பட்டிருந்த அவையோ, தன் மேல் அமர்ந்த பூச்சியை உதறுவது போல உதறி.. அவர்களைக் கீழே தள்ளியது.. கீழே விழுந்தவர்களை, தன் கூரிய கொம்புகளால் குத்தி தூக்க சில எருதுகள் விழைய, சில எருதுகள், கால்களால் மிதித்து துவைக்க முயன்றன.

 

வேட்டையில் வல்லவர்களான ஆனை மலைக்குடியினரும், முல்லை வனத்தின் வீரர்களும், தங்களின் வேல் கொண்டு அவற்றை குத்தி, திசை மாற்ற முயல, விலங்கு பலத்திற்கும்… மனித வீரத்திற்குமான போர்… வாழ்வா சாவா போராட்டம் துவங்கியது.

 

தம்மை விட பல மடங்கு பலமுள்ள, எதிரிகளை தீரத்துடன் எதிர் கொண்டனர், இளவரசியின் படையினர்.

 

வீரசேனனும் தன் வேலுடன் களம் புக, அங்கே காளைகள் அடக்கப்படும் வேலையில்லை..

சித்தம் கலங்கிய அவற்றிடமிருந்து.. தம் படையினர் உயிர் காக்கப்பட வேண்டுமெனில், அவை ஒழிக்கப்பட வேண்டியவை என்று அறிந்தவனாய், தன் கூர்வேல் கொண்டு அவற்றின் இதயம் நோக்கிப் பாய்ச்சி.. செயல்படவொட்டாமல் தடுத்தான்.

 

இளவரசியோ, தன் வலக்கையில் கூரிய வீர வாளுடனும், இடக்கையில் சிம்மன் தந்த உருமியுடன் களம் புகுந்து, நெருங்க முயன்ற காளைகளை சுருள் வாளால் தடுத்தும், தன் வீரர்களை முட்டி தூக்கிய எருதுகளின் சிரத்தை தன் வாளால் ஒரே வீச்சில் துண்டித்தும், போர் தெய்வமாம் கொற்றவை போல, எருதுகளின் இரத்தம் கொண்டு குளித்தவளாய் உடல் நிறம் மாற, களத்தில் சுழன்றாடினாள்.

 

தன் நண்பனும் கொடைநாட்டின் இளவலுமான சிம்மனைப் போலவே, இருகரங்களிலும் வாள் சுழற்றும், இளவரசியைக் கண்ட வீரசேனனின் முகத்தில், நிறைவான பெருமிதப் புன்னகை வந்து அமர்ந்து கொள்ள, தானும் தீரத்துடன், தம் வீரர்களைப் பந்தாட முயன்ற எருதுகளை, தன் இடக்கையால் மடக்கி, வலக்கையால் வேல் கொண்டு தாக்கி, அவற்றின் வெறியை முடித்து வைத்தான்.

 

ஒரு கணப்பொழுதில் (ஐந்து நிமிடங்கள்), படையினர் பலர் காயம் பட்டு குடல் சரிந்து கிடக்க, எங்கு நோக்கினும் பிணங்களும், மடங்கிச் சரிந்தவையுமாய், வெட்டுப்பட்டவையுமாய் எருதுகளும்..

 

மிச்சமிருந்த எருதுகள் தம் தலையை ஆட்டிய வண்ணம் சுற்றி வந்து.. கொம்புகளால் நிலம் கீறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த, அவற்றை முற்றிலும் ஒழிக்க அனல் வேல்களும், தீப்பந்தங்களும் ஏந்திய வீரர்கள் களம் புகுந்தனர்.

 

தீ கண்டதும் மிரண்ட அவை வேகமாகி கால்களால் உதைத்து வீரர்களை தாக்கத் தலைப்பட… அவர்களோ விலகி ஓடி, போக்கு காட்டி, தம்மைத் துரத்தி வர வைத்து, அகழிக்குள் சரித்தனர்.

 

வீரர்களை தாக்கப் பாயும் அவற்றை, தீப்பந்தங்களையே அம்புகளாக்கி, சந்திராம்பிகையும், வீரசேனனும் தாக்க… நிலை குலைந்த விலங்குகள் இங்குமங்கும் ஓடத்தொடங்கின.

 

ஒரு நாழிகைப் பொழுது (24நிமிடங்கள்) தொடர்ந்த போரட்டத்தில் சில நூறு கொல்லப்பட்டிருக்க பல நூற்றுக்கணக்கான எருதுகள் அகழிக்குள் இறக்கி விடப்பட்டு இருந்தன..

 

அவ்விடமே பெரும் சமர் முடிந்ததன் அடையாளமாய், குருதியால் செக்கச்சிவந்த மண் சேறாய், கூற்றனின் கோரத்தாண்டவம் நடந்த இடமாய், இரத்த வாடையுடன் காட்சியளித்தது.

 

மாலைப்பொழுது ஆரம்பமானதை, கதிரவனின் நிலை சொல்ல, இன்னமும் நான்கு நாழிகையில் இருள் சூழத் தொடங்கி விடும் என்று எண்ணிய இளவரசி சந்திராம்பிகை, வேழங்களால் பிளக்கப்பட்ட.. களவ நாட்டின் கோட்டைக் கதவை முற்றிலும் தூளாக்க உத்தரவிட்டாள்.

 

எருதுகள் வெளியேறியதும் அடைக்கப்பட்டிருந்த, ஒரு பனை மர உயரமிருந்த கதவுகள், யானைகளின் மத்தகங்களினாலும், பெரும் மரங்களைக் கொண்டும், தாக்கப்பட்டு விரிசல் விட்ட நிலையில் இருந்த காரணத்தால், சில கணப்பொழுதில் உடைக்கப்பட…

பெரும் ஆரவாரத்துடன்… கைகளில் ஏந்திய தீப்பந்தங்களுடன், இளவரசியின் தலைமையிலான படையினர் உள்புகுந்தனர்.

 

களவத்தின் ஆண்களும் பெண்களும் கூட ஆயுதமேந்தி தாக்குவதற்கு தயாராக நிற்க, தன் வெண்புரவியின் மீதேறி, தனது சேனை நாயகர்கள் மற்றும் ஆசான் வீர வேழ சேனன் பின்தொடர… கோட்டையின் உள்ளே.. காற்றின் வேகத்தில் வந்த இளவரசி சந்திர வதனாம்பிகையின் விழிகள்… கூட்டமாய் இருந்த களவத்தினரின் நடுவே, பணயக் கைதிகளாய்… மரம் வெட்டும் ஆயுதம் போன்ற தோற்றத்தில்… ஆனால் அதை விட மூன்று மடங்கு பெரிதாய் இருந்த ஒரு வகையான ஆயுதங்கள் தாங்கிய இரு களவத்தினர் நடுவே.. கை கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில், குருதியால் நனைந்து, திரிகளாய் கிழிக்கப்பட்ட அரைகுறை ஆடையில்.. மானம் மறைக்க கூனிக் குறுகி அமர்ந்திருந்த மருதத்தின் பெண்கள் பட்டதும், மனம் பதைக்க, புரவியை நிறுத்தியவள், தன் இடுப்பில் இருந்த கொம்பை எடுத்து ஊதி அனைவரையும் நிற்க சொல்லும் எச்சரிக்கை ஒலி எழுப்பினாள்.

 

சந்திராம்பிகையின் கண்களில் ரௌத்திரம் ஏற… அவர்களையே பார்த்தவாறு நிற்க, வீரர்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றனர். தங்களின் தேவியைக் கண்ட ஆனந்தமும், தங்களின் நிலை பற்றிய கழிவிரக்கமும் ஒருங்கே தோன்ற, அப்பெண்கள், கண்களில் நீர் சொரிய அமர்ந்திருக்க,

 

ஒரு பெண் மட்டும் தலை உயர்த்தி, உரத்த குரலில், “சந்திராம்மா… எங்களுக்காகப் பார்த்து நிற்காதீர்கள்… இந்த அரக்கர் கூட்டத்தில் ஒருவரையும் விடாதீர்கள்.. இவர்கள் மனிதர்களே அல்லர்.. மனிதர்களின் சதையை உண்ணும் பிடாரிகள்.. இவ்வளவு தூரம் உள்ளே வந்து விட்டு… எங்கள் மூவரின் உயிருக்காக, திரும்பி விடாதீர்கள்.. தாக்க சொல்லுங்கள்.. வீரப்போரில் நாங்களும் வீழ்ந்தோமென்று ஆகட்டும். தாக்குங்கள் தேவி.. ஆணையிடுங்கள்..” என கதற… உடலெங்கும் இரத்தம் பூசி நின்றவள், தம்மக்களின் இரத்தம் சிந்தக் காணப் பொறாதவளாய் உறைந்து நின்றாள்.

 

இளவரசியின் அமைதி கண்ட களவத்தினர் சிலர், சிரித்து கேலி செய்வது போல் கை கால்களை தூக்கி உயர்த்தி ஆட, சிலரோ பற்களை கடித்து பயமுறுத்துவது போல் விழித்து, தம் ஆயுதங்களை அசைத்து போ போ எனும் சைகை செய்ய… இளவரசி அமைதியாக நிற்பது கண்டு தாமும் ஏதும் செய்ய இயலாதவராய வஞ்சினம் மிக அவர்களின் ஆட்டங்களை பார்த்தவாறு நின்றனர் மருதப் படையினர்..

 

வீரசேனன் தன் வாளினை இறுகப் பற்றியவனாய் சினம் மிக அனைவரையும் உறுத்து விழித்தவாறு, இளவரசியின் ஒரு கண்ணசைவுக்கு காத்திருப்பவனாய் அவளையே பார்த்தவாறு இருந்தான். அப்போது குதிரை கனைக்கும் ஓசை கேட்க, களவத்தினர் அனைவரும் அமைதியாகி திரும்பிப் பார்த்தனர்.

 

கபில நிறக்(ப்ரௌன்) குதிரையின் மீது வந்தவனைக் கண்ட களவத்தினர், கூக்குரலுடன் ஆர்ப்பரிக்க, கருநிற யானையும் பழிக்கும் நிறத்தில், போதை தரும் பானங்களால் சிவந்த கண்களும், முறையற்ற உணவால் கருப்பும் பழுப்புமாய் இருந்த பற்களுமாய், முகம் முழுவதும் அம்மை வடுக்களால் கோரமடைந்து இருக்க, புரவியின் கடிவாளம் பற்றி, அலட்சியமான தோரணையுடன் அமர்ந்திருந்தான் களவத்தின் தலைவன், முத்து வடுகநாதன்.

 

தன் கூட்டத்தினரை பிளந்தவாறு முன்னே வந்தவன், தன் சிவப்பேறிய கண்களால் இளவரசியை உற்றுப் பார்க்க… அவன் பார்வை செல்லும் இடம் கண்ட வீரசேனன் கொதிப்புடன் முன்வந்து இளவரசியை மறைத்து நின்று கனலேறிய விழிகளால் முறைத்து எச்சரிக்க…

 

அதைக் கண்டு இடிஇடியென நகைத்தவன் களவ மொழியில் ஏதோ சொல்வதைக் கேட்டு விளங்காமல் பார்த்த இளவரசி, களவ மொழி அறிந்த தன் படை ஒற்றனை திரும்பிப் பார்த்து, என்ன சொல்கிறான் எனப் பார்வையாலேயே வினவ, அவனோ நடுங்கித் தலை குனிந்து கொண்டான்.

 

எரிச்சலடைந்த இளவரசி அவனை பெயரிட்டு அழைத்து, “ என்ன கூறுகிறான் இவன்.. எதுவாய் இருந்தாலும் அப்படியே மொழி பெயர்த்து வார்த்தை மாற்றாமல் சொல்லுங்கள்..” என கடுமையான குரலில் கேட்க,

 

எச்சில் விழுங்கிய அவன், “ஓவியங்கள் ஏதும் உன்.. உங்கள் அழகில் பாதியைக் கூட வடிக்கவில்லை.. உ..னக்காக என் படை, கோட்டை இவ்வளவு சேதம் அடைந்தது தகும் தான்… ஆனால் இனி உன்னை என் பஞ்சணைப் பாவையாக்கி முகரும் வேளை வந்துவிட்டது. உனது படையில் பாதி அழிந்து விட்டது. நீங்கள் நூற்றுக்கணக்கானவர்கள். நாங்கள் ஆயிரக்கணக்கானவர்கள். கூண்டிலகப்பட்ட எலி.. அல்ல.. அல்ல.. கிளி போல வந்து சிக்கி விட்டாய்.. மருத இளவரசி. உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். என் பள்ளியறைக்கு நீயாகவே வந்து விட்டால், உனது படையினரை விட்டு விடுகிறேன். இல்லையென்றால் ஒருவன் கூட பிழைக்க மாட்டான். அவர்களின் பிணங்களின் மேல் நமக்கான பஞ்சு மெத்தை இடுகிறேன்… என்றான் தேவி.” என… தகாத வார்த்தைகளை தம் வாயிலிருந்து சொல்ல வைத்த விதியை நொந்தபடியே… நடுங்கிய குரலில் சொல்ல…

 

சினத்தின் உச்சமடைந்த வீரசேனன், “அவனின் நாவை அறுத்து எறிகிறேன்…” என கர்ஜிக்க.. வயதால் பண்பட்டு இருந்த மருதநாயகமும் கொண்டல் வண்ணனும் தம் வாளின் பிடியை இறுக்கி, தம்மை கட்டுப்படுத்தியவராய் நின்றனர்.

 

ஆனால் சூழ இருந்த மருத மற்றும் கொடையின் இளவல் படையினரோ கொந்தளித்து, “கொல்வோம் அவனை… கண்ட துண்டமாக்குவோம் அவனை..” என கூக்குரலிட,

 

தன வீரவாளிருந்த கையை உயர்த்தி அவர்களை அடக்கியவள், முத்துவடுகனின் முகம் பார்த்து ஏளன நகை சிந்தி..

 

“ கோழை போல்… ஒன்றுமறியா விலங்குகளையும்.. அப்பாவிப் பெண்களையும் கேடயமாக பயன்படுத்தும் நீ… பேடி போல மறைந்து மறைந்து தாக்கும் நீ… பஞ்சு மெத்தை இடப்போகிறாயா… இப்போரின் முடிவில் தெரியும்.. நீ இடப்போவது பஞ்சுமெத்தையா.. உனக்கான சிதைக்கான.. விறகு மெத்தையா என.. நெடுநேரம் பேசாமல் வா… நேருக்கு நேர் மோதலாம்.. உன் முடிவு என் கையில்.. நான் கிளியல்லடா.. வேங்கை… இரத்தம் குடிக்கும் வேங்கை.. உனக்குத் துணிவிருந்தால்… உன் ஆயுதமேந்தி களத்தில் இறங்கு.. நான் யாரென்று உனக்குப் புரிய வைக்கிறேன்.” என்றவள், திரும்பி தன் ஒற்றனைப் பார்க்க, அவன் வார்த்தை மாறாமல் அதை மொழி பெயர்த்ததும்..

 

“ஹூம்ம்ம்..” என்று உறுமிய முத்து வடுகநாதன், தனது பட்டையான, கதிர் அரிவாள் போல வளைந்து பெரிதாக இருந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு கீழே குதித்தான். இளவரசியின் வாளை விட நான்கு மடங்கு அகலத்திலும் உயரத்திலும் பெரிதாக இருந்த அதைக் கண்டு மருதப் படையினர் அனைவரும் கூச்சலிட,

 

துளியும் கலங்காதவளாய் தன் மெல்லிய நீண்ட வாளை உயர்த்திப் பிடித்தவாறு, குதித்து இறங்கினாள் இளவரசி சந்திராம்பிகை.

 

வீரசேனன் தன் வேலுடன் வேகமாக புரவி விட்டு இறங்குவதைக் கண்டவள், அவனின் கண்களை உற்று நோக்கி, விழிகளைச் சுழற்றி ஏதோ கட்டைளையிடவும், பெருமூச்சுடன் முகம் இறுக நின்றவன், விழி மூடித் திறந்து, தன் சம்மதத்தை தெரிவித்தான்.

 

இளவரசியின் அழகிய தேகத்தை வேட்கையுடன் பார்த்த முத்துவடுகனின் கண்கள் அவளின் மெல்லிய வாளைக் கண்டதும் நகைத்தவாறே… கருத்த உதடுகளை விரித்து இளித்தவாறு அருகில் வந்தவன், அவளின் வாளைக் குறி வைத்து தனது ஆயுதத்தை வீசினான்..

 

மிகுந்த அலட்சியமாக அவன் வீசியதை, தன் உறுதியான வாள் மற்றும் கரங்களின் பலத்தால் தடுத்தவள், தன் கையை ஒரு சுழற்று சுழற்ற, அவனின் ஆயுதம் இரு துண்டுகளாகி கீழே வீழ்ந்தது. அது கண்டு களவத்தினர் வியப்பு ஒலி எழுப்பியபடி அவர்களின் மொழியில், ஏதோ கத்தினர்.

 

அவர்களின் முகத்தில் மின்னிய வெறியும் உடல்மொழியும் அவளைத் தாக்கு கொல் என்பதாய் மருதத்தினருக்குத் தோன்ற, தமது ஆயுதங்களை இறுகப் பற்றியபடி, தம் தலைவர் எவரேனும் ஆணையிட்டால் முன்னேறி அவர்களின் கழுத்தை அறுக்கத் துடித்தவர்களாய், தோளும் கரங்களும் துடிக்க நின்றனர்.

 

இவ்வளவு கடினமான தனது ஆயுதத்தை மெல்லிய வாள் இரு துண்டாக்கியதை நம்ப இயலாதவனாய், முத்து வடுகநாதன்.. இளவரசியினை உற்றுப் பார்க்க அவளின் வாளானது தனிப்பட்ட நிறத்தில் மஞ்சளாய் ஒளிர்வதைக் கண்டு, வியப்படைந்தான். ஏதோ இரும்பினும் கடின உலோகத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெளிந்தவன், அவளின் மெல்லிய கரங்களின் வலுவைப் புரிந்தவனாய் வியப்படைந்தாலும், அவளின் அடுத்த வீச்சிலிருந்து தன்னை காத்துக் கொண்டு, சுழன்று திரும்பி ஓடியவன், தனது ஆளின் கையிலிருந்து கனத்த உருண்டைத்தடியில் இரும்பு முட்கள் பதிக்கப்பட்ட ஆயுதத்தை பறித்து எடுத்து ஓடி வந்து இளவரசியின் மீது தாக்கத் தலைப்பட்டான்.. சிறிய மரம் போல தடித்திருந்த அந்த ஆயுதத்தையும் தன் வாளினால் தடுத்தவள், இடக்கையால் தன் இடையில் சொருகி வைத்திருந்த சிம்மன் தந்த சுருள் வாள் எனப்படும் உருமியை எடுத்து சொடுக்க, அது முத்து வடுகனின் உடலைப் பதம் பார்த்து குருதி வெளி வரச்செய்ய… வெகுண்டவனாய், தன் இடக் கையால் அவளிள் வலக்கர மணிக்கட்டைப் பற்ற வர, தடுத்து இருந்த வாளுடன் சுழன்று அவன் கரம் தன் மேல் படாமல் தள்ளிச் சென்றவள், மற்றொரு சுழற்றலில் அவனின் அந்த உருட்டு ஆயுதத்தை, சுற்றி, அதைத் தாங்கி இருந்த முத்து வடுகனின் கரத்தைத் தாக்க, அந்த ஆயுதம் தெறித்துக் கீழே விழுந்தது.

 

அதைக் கண்டு இளவரசியின் படையினர் வெற்றி ஆரவாரம் செய்ய, களவத்தினர், கொந்தளித்து தம் தலைவனுக்கு ஊக்கமூட்டும் ஒலி எழுப்பியபடி நெருங்கி வரத் தலைப்படுவது கண்ட மருத்தத்தினர் நகர்ந்து சர சரவென தம் ஆயுதங்கள் கொண்டு அவர்களை நெருங்கா வண்ணம் தடுத்து அரணிட்டு நின்றனர்.

 

இந்த களேபரத்தில் வீரசேனன் கூட்டத்திற்குள் புகுந்து மண்டியிட்டு இருந்த மருதத்தின் பெண்களை நெருங்கி… கவனத்தை போரில் வைத்தவாறு நின்றிருந்த இரு களவத்தினரை தன் இரு கை விரல்களால் குரல் வளையிலேயே தாக்கி… குரல் வெளிவராமல் நிறுத்தி , வர்மக்கலை தாக்குதலில் அசையவொட்டாமல் செய்து… கீழே தள்ளியவன், சுற்றிப் பார்த்தவாறே, அமர்ந்த நிலையிலிருந்த பெண்களை, தவழ்ந்த நிலையில் நகரப் பணித்து,

அப்பெண்களை அருகில் தெரிந்த சிறு வீட்டிற்குள் தள்ளிப் பூட்டினான்.

 

மருதத்தினரின் குதூகலமான ஆரவாரம் கேட்டு வெறி கொண்டவனாய் முத்துவடுகன், தன் சிறு யானை ஒத்த உடலை அசைத்து, இரு தும்பிக்கை போன்ற கரங்களால் இளவரசியை வளைத்துப் பற்ற முயல, அவளின் இடது கையில் சுழன்ற சுருள்வாளானது அவனை நெருங்கவே விடாமல் செய்தபடி.. அவனின் தடித்த உடலைப் பதம் பார்க்க, வலது கையின் வீர வாள் தன் மார்பைக் குறி வைத்து வருவதைக் கண்டவன், சடாரென்று சாய்ந்து கீழே உருண்டு தன்னை காத்துக் கொண்டு, கையில் கிடைத்த மணலை இளவரசியின் முகம் நோக்கி அடித்து விட்டு, அவர்களின் மொழியில் அலற,

 

சூழ்ந்து இருந்த மொத்த கூட்டமும் ஏதோ கத்தியபடி தம் ஆயுதங்களுடன் இளவரசியை நோக்கி முன்னேறி வருவது கண்ட வீரசேனன் தன் வாளை உயர்த்தி , “தாக்குங்கள்..” என்று ஆணையிட, இவ்வளவு நேரமாக அந்த ஒற்றை வார்த்தைக்கு காத்திருந்த படையினர் ஆக்ரோஷமாய் திரும்பி களவத்தினரை தாக்கத் தொடங்கினர்.

 

தங்களின் இளவரசியின் தீரம் கண்டு பூரித்து இருந்த மருவத்தினர் மிகுந்த ஆற்றலுடன் தாக்க, களவத்தினர் தம் தலைவனை கீழே தள்ளிய ஆக்ரோஷத்துடன் தாக்க, மிகப் பெரும் போர் அங்கே துவங்கியது.

 

இளவரசியின் அருகில் விரைந்து சென்ற வீரசேனன், கண்ணில் மண்ணுடன் இருந்த, அவள் அதற்குள் சமாளித்து வலக்கையில் சுருள் வாளை மட்டும் பற்றி சுழற்றியவாறு யாரும் நெருங்காமல் காத்துக்கொண்டு இடக்கையால் மணலை நீக்கிக் கொள்வதைக் கண்டு, நிம்மதி பெருமூச்சுடன், தனது வாளை சுழற்றி அவளருகே யாரும் நெருங்கா வண்ணம் காத்து நின்றவன், விழிகளால் முத்து வடுகனைத் தேட, எழுந்த அவன்,மதம் கொண்ட யானை போல் கைகளால், படையினரை தாக்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு சினம் மிக.. தன்னையும் இளவரசியையும் சுற்றி வளைத்த , இருபதுக்கும் மேற்பட்ட களவத்தினரை… சிதைக்கத் தொடங்கினான்.

 

இளவரசியும் முழு ஆற்றலுடன் தாக்கத் தொடங்கியதும்.. சில கை நொடிப்பொழுதுகளில், அவர்களை நெருங்கிய அனைவரும் கை, கால், சிரசு வெட்டுப்பட்டு… வேரற்ற மரங்கள் போல வீழ்ந்தனர்.

 

மூன்று நாழிகைப்பொழுதுகள் நீடித்த போரானது, பகலவன் ஒளி குன்றத் தொடங்கியதும், இன்னும் வேகம் பெற்று… மொத்த களவத்தாரும் தரையில் வீழும் வரை தொடர்ந்து.. மாலைப் பொழுது முடிந்து இரவு துவங்கும் நேரத்தில் முடிவுக்கு வந்தது.

 

உடல் முழுவதும் விழுப்புண்கள் பெற்று இருந்தாலும்.. இளவரசியின் தலைமையிலான படையினரே எஞ்சியிருக்க.. களவத்தின் அனைவரும் வீழ்ந்து கிடப்பது கண்ட மகிழ்வுடன் மருத நாயகம், தன் இடுப்பில் இருந்த கொம்பெடுத்து ஊத, அங்கே வைத்திருந்த களவத்தின் பேரிகையை, மருவத்தினர் தமது வேல்கம்புகளால் ஓங்கித் தட்டி வெற்றியடைந்ததை அறிவித்தனர்.

 

சூரியன் மறையும் முன் தான் பகை முடித்ததை அறிவிக்கத் தலைபட்ட இளவரசி, கை உயர்த்தி ஆணையிட, அங்கே திடலின் மத்தியில் இருந்த களவக்கொடியானது வெட்டி சாய்க்கப் பட…

 

சரசரவென்று மதில் மேல் ஏறிய படையினர், மருதம் மற்றும் கொடைநாட்டின் கொடிகளை ஆங்கே தமது வீர வேல்களுடன் பிணைத்து பறக்கச் செய்தனர். அதைக் கண்ட படையினர் உடல் முழுதும் இருந்த புண்களின் வலி மரத்துப் போக… வெற்றி ஒலி எழுப்பினர்.

 

“மருதம் வென்றது… கொடை வென்றது.. பெருவளத்தாருக்கு வெற்றி… இளவரசியின் வீரம் வென்றது.. ஆசானின் தீரம் வென்றது.. மாசேனை நாயகருக்கு வெற்றி..” என்று பலவாறு வாழ்த்தொலி எழுப்ப,

 

இளவரசி மெதுவாய் தன் தலைகவசத்தைக் கழற்றி, அதனையும் தன் வீரவாளையும் உயர்த்திப் பிடித்து, தமது வெற்றியை அறிவித்தாள்.

 

 

வீரசேனன் சென்று, தான் மறைத்து வைத்திருந்த மருவத்தின் பெண்களை தகுந்த ஆடை அணிவித்து அங்கு அழைத்து வந்தததும்.. அனைவரும் மகிழ்ச்சி மிக ஆரவாரம் செய்தனர்.

 

கண்கள் பனிக்க பார்த்தக் கொண்டிருந்த இளவரசி சந்திர வதனாம்பிகையின் பாட்டனாரான கொண்டல்வண்ணன், தனது காலில் பட்ட விழுப்புண்ணால் தள்ளாடியபடி பெயர்த்தியின் அருகில் வர, அவரைத் தாங்கிக் கொண்டவளின் உச்சந்தலையில் கை வைத்து ஆசிகள் வழங்கியவர்..

 

“என் மகள் பெற்ற மாணிக்கமே.. பெருவளத்தார் பெற்ற பெரும் கொடையே.. இந்த வெற்றி உன் வீரத்திற்கும் விவேகத்திற்கும் கிடைத்தது..” என்றவாறு மீட்கப் பெற்ற மருதத்தின் பெண்களைப் பார்த்தவர்,

 

நெஞ்சம் விம்ம, “எம்குலத்தோன்றல் நீ என்பதில்.. எனது உள்ளமும் உடலும் பூரிக்கிறது அம்மா.. நீ இந்த மருதத்தின் இராணி என்பதைவிட.. தாய் என்பதே பொருத்தம்..”எனவும், கூடியிருந்தோர் ஆஹார ஒலியெழுப்பி அவர் கூற்றை ஆமோதித்தனர்

 

 

இளவரசி கொம்பை ஊதி, அனைவரின் கவனத்தை தன் வசம் திருப்பி, உரத்தக் குரலில், “நமது வெஞ்சினத்தில் வென்றுவிட்டோம்.. நாமுரைத்த சூளுரையை செயல்படுத்த ஆவண செய்யுங்கள்.. நம் பெண்களின் மீது பட்ட கரங்களை வெட்டி மாலையாக்குங்கள். மருதத்தின் கொற்றவைக்கு சூட்ட வேண்டும்.

முத்து வடுகனின் சிரமும், குருதியும் அவளுக்குப் படையலிட வேண்டும்.. தேடுங்கள் அவனின் பிணத்தை..

 

 

உயிருடன் இருப்பவர்கள் எந்த நாட்டவராய் இருந்தாலும் மருத்துவ உதவி அளியுங்கள்.. தப்பிப் பிழைத்த களவத்தினரை சிறையிலடைத்தாலும், மருந்தும்.. உணவும்.. நீரும் கொடுங்கள். வீரசேனரே! அவற்றை பார்த்துக் கொள்ளுங்கள்.

 

தோற்றவர்களின் ஆயுதங்களைக் கொண்டு படைக்குடில் அமைப்பதும்.. இன்று அதில் தங்குவதும் நமது மரபு.. அதற்கான வேலைகள் நடக்கட்டும்.. போரில் வென்றாலும் சமூகநீதி காக்கப்படட்டும்.. களவத்தின் சொத்துக்கள், அனைத்தும் தக்க சமயத்தில் உதவிய, நமது அண்டை நாட்டினருக்கும், போரில் வீரமரணம் அடைந்தவரின் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.. கரி வென்றாரே.. தாங்கள் அவற்றைப் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். நாளை நாம் நமது நாடு திரும்புவோம்…” எனக்கூற..

 

அப்போது கொடைநாட்டின் படை வீரனொருவன்.. தனது புரவியில் வேகமாக வந்து.. தன்வசமிருந்த தகவல் ஓலையை இளவரசியின் கரங்களில் ஒப்படைத்தான்..

 

அதைக்கண்ட இளவரசியின் முகம் மேலும் மலர, “களவத்தினரை முறியடித்து சாளுவ கோட்டையை கொடை நாட்டின் இளவல் வென்று விட்டாராம்.. சாளுவ மன்னர் அவருடன் நட்புக்கரம் நீட்டியதால்,

 

சாளுவம் இனி மருவத்திற்கும் கொடை நாட்டிற்கும் கட்டுப்பட்டதாய் இருக்கும் சிற்றரசு.. என்ற ஒப்பந்தத்தை இளவலுடன் செய்து கொண்டவர், தனது மணிமகுடத்தை இளவலின் காலடியில் சமர்பித்து விட்டாராம். இளவல் தனது படையுடன் கிளம்பி உறையலூரை நெருங்கி விட்டாராம். வீரசேனரே! நமது வெற்றி செய்தியை உடனே அவருக்கு அனுப்புங்கள்.

 

அவர்கள் நமக்கு உதவுவதற்காக அவசரமாக வந்து கொண்டே இருக்கிறார்கள் போலும்.. மருதபுரிக்கு.. நாளை வெற்றி விழாவில் கலந்து கொள்ள வர சொல்லி தகவல் அனுப்புங்கள்..” எனவும்..

 

மும்மடங்கான மகிழ்ச்சியாக தலையசைத்த வீரசேனன், “இதோ.. உடனடியாக புறாவின் காலில் செய்தி கட்டி அனுப்புகிறேன் தேவி..” என்றவாறு விரைந்தான்.

 

அப்போது அங்கே விரைந்து வந்த வீரர்கள், “தேவி நமது மாசேனை நாயகர், மருதநாயகம் அவர்கள் மிகுந்த காயம்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள்.

அப்புறம் எங்கு தேடியும்… முத்துவடுகனின் உடல் அகப்படவில்லை.. கதிரவனின் ஒளி வேறு குறைந்து கொண்டே வருகிறது.” எனவும்..

 

ஆழ்ந்த யோசனைக்குள் சென்றவள், “மருதநாயகம் அவர்களுக்கு சிறப்பு மருத்துவம் அளிக்கச் சொல்லுங்கள்.. அவரையும் தந்தையாருக்கு மருத்துவம் அளிக்கும் ஆனை மலை கனிசித்தரிடம் அழைத்துக் கொண்டு செல்ல இயலுமா என மருத்துவரிடம் கேளுங்கள்.” என்றவள்..

 

சுற்றிலும் பார்த்து,

“இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்து சிதை வளர்த்து எரியுங்கள்.. கோட்டை முழுவதும் தீப்பந்தங்கள் எரிய வைக்கப் படட்டும்.. களவ மன்னன் பதுங்கு குழி, மறைவிடத்தில்.. என்று எங்கேனும் பதுங்கி இருக்கிறானா என்று தீவிரமாகத் தேடுங்கள்…” என கூறவும், சம்மதமாய் தலை வணங்கி, அவ்விடம் விட்டு நகர்ந்தனர் அவ்வீரர்கள்.

 

காவல்தலைவர்கள் அனைவருக்கும், போருக்குப் பின் ஆற்ற வேண்டிய கடமைகளை பகிர்ந்து கொடுத்தவள், இரத்தத்தில் குளித்திருந்த தனது மேனியை, களவ அரண்மனையின் உள்ளிருந்த வாவியில் நீராட்டிக் கழுவி, வேறு ஆடை புனைந்து திரும்ப களத்திற்கு வந்தவள் உடல்முழுதுமிருந்த காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டாள்.

 

காயங்களினால் விளைந்த வலியை சிறிதும் வெளிக்காட்டாமல்,

தனது மக்களை, நாட்டை சூழ்ந்த பகை வென்ற பூரிப்பில், முழு நிலவையும் மிஞ்சும் ஒளியுடன் மிளிர்ந்த தம் தலைவியைக் கண்ட படையினர் வாழ்த்தொலி எழுப்பினர்.

 

அப்போது கரிவென்றார் அங்கே வந்து, “முத்துவடுகன் எங்கும் அகப்படவில்லை.. ஒருவேளை சுரங்கவழியாக

தப்பியிருக்கக் கூடும் இளவரசி..” எனவும்..

 

ஏளனமான முறுவலுடன், “அவனின் போர் ஒழுக்கம் நாம் அறிந்தது தானே.. அவனைத் தேடி நாலாபுறமும் வீரர்களை அனுப்புங்கள்.. காயங்கள் பட்ட நிலையில், புரவியின்றி அதிக தூரம் சென்றிருக்க இயலாது..

 

நான் வைகறையில் தந்தையாரைக் காண ஆனை மலை செல்கிறேன். தாங்கள் வீரசேனர், பாட்டனார் துணையுடன் இங்கு அலுவல்கள் முடித்து, படையினருடன், மருத கோட்டை செல்லுங்கள். வீரர்களுக்கு தகுந்த பரிசில்கள் வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு அமைச்சர் ஆலவாய்ப் பெருமொழியார் அவர்களுக்கு நான் முத்திரை ஓலை ஒன்று தருகிறேன்..” எனவும்..

 

“அவ்வாறே ஆகட்டும் தேவி..” என்றவர் அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

 

தம்வசமான கோட்டையினுள் தனக்கென அமைக்கப்பட்ட படைக்குடில் புகுந்தவள், பல நாட்கள் கழித்து உறங்கத் தலைப்பட, அவளையும் மீறி…

 

மூடிய கண்களுக்குள் வந்து நின்று கன்னம் குழி விழ முறுவலித்தான்.. இராஜ ஜெய சிம்ம வர்மன்.

 

***************

 

வைகறையில் துயில் களைந்தவள், எழுந்து தயாராகி, தன் தந்தையை காணச் செல்வதாகக் கிளம்ப, அவளிடம் விரைந்து வந்தான் வீர வேழசேனன்.

 

“தேவி, இளவல் பதில் அனுப்பியிருக்கிறார்..

தங்களுக்கு வாழ்த்துக்களோடு, தமது பரிசில்களையும் தர விழைவதாகவும், எனவே கொடைநாடு சென்று விட்டு, நேரே தங்களை சந்திக்க வருவதாகவும்

செய்தி அனுப்பியிருக்கிறார்..” எனவும்..

 

திகைத்தவள்,

“அதற்குள்ளாகவா!! அவரை மருதபுரியில் சகல மரியாதைகளோடு தங்க வையுங்கள்.. நான் தந்தையாரை பார்த்து விட்டு.. நண்பகலிற்குள் மருதபுரி வந்து விடுகிறேன்..” எனவும்,

 

 

சிறுமுறுவலுடன் வீரசேனன், “அவருக்கு என்ன அவசரமோ! நேற்றே இரவோடு இரவாக.. தனது தேரில், பாதுகாவலர்கள் உடன்வர தீப்பந்த ஒளி உதவியுடன் பயணப்பட்டு விட்டாராம்.. இந்நேரம் கொடை நாட்டிலிருந்தும் கிளம்பியிருக்கக் கூடும்.. படையினர் இப்போது கிளம்பி கொடை நாட்டிற்கு செல்லும்படி உத்தரவு போலும்.. எனவே அனேகமாக தாங்கள் ஆனைமலையிலேயே அவரை சந்திக்க நேரலாம்..”எனவும்,

 

மனம் திடுக்கிட்டு,

“ஏன் இந்த அவசரம்..?” என வினவ,

 

“யாருக்குத் தெரியும் தேவி.. உங்களிடம் ஒரு விண்ணப்பம்.. தங்களுடன் நானும் ஆனைமலை வருகிறேன்.. இளவல் வரும் வரை

தங்களை ஒரு கணமும் பிரியக்கூடாது என்பது எனக்கிடப்பட்ட உத்தரவு..” எனவும்,

 

சந்திராம்பிகையின் முகம் சிவக்க… அதை மறைத்தவளாய் வேறுபுறம் திரும்பியவள், “ இங்கு அலுவல்கள்???”

 

“இரவிலேயே அனைத்தையும் முடித்தாயிற்று தேவி.. மாமா அவர்களை இங்கேயே மருத்துவம் செய்விக்க வேண்டுமாம்.. இப்போது இரத்தப்போக்கு குறைந்து இருக்கிறது.. மூன்று நாட்கள் கழித்து வேண்டுமானால் இடம் மாற்றிக் கொள்ளலாம்.. என்றார் தலைமை மருத்துவர்..”

 

“மிக நல்லது.. முத்துவடுகனை தேடிச்சென்ற ஆட்களிடமிருந்து ஏதேனும் தகவல் வந்ததா…?”

 

“இல்லை தேவி.. அதனால் தான் தங்களை தனியே அனுப்ப எனக்கும் துணிவில்லை.. நாம் உங்களுக்கு மெய்க்காவல் வீரர்கள் ஐம்பது பேருடன் தான் கிளம்ப வேண்டும்..” எனவும்,

 

சிரித்தவள், “ தாங்கள் நூறு பேருக்கு சமம்.. இங்கு நம்பிக்கையான ஆட்கள் அவசியம் தேவை. அவர்கள் இங்கே இருக்கட்டும். நாம் அலுவல்களை ஒழுங்கு படுத்தி விட்டு நண்பகல் துவங்கு முன்பு கிளம்பிவிடுவோம்.. வீரசேனரே..”எனவும்.. அங்கே மின்னல் விரைவுடன் வேலைகள் நடந்தன.

 

மொத்தக் களவ நாட்டையும் தமது மேற்பார்வையின் கீழ் கொண்டு வர, மருதத்தின் ஆளுகைக்குள் கொண்டு வர தேவையானவற்றை செய்தாள் இளவரசி..

 

நண்பகலில் கிளம்பியவர்கள் புரவியில் பயணித்து, ஆனை மலையினை நோக்கி செல்ல, அதன் அடிவாரத்தில் பேசியவாறு நின்று கொண்டிருந்த இருவர், இவர்களைக் கண்டதும், திரும்பி வணங்கினர்.

 

வெற்றிவேந்தனும், சோலையூர் காவல்தலைவர் வேங்கையரின் மகனும் தான் அந்த இருவர் என்பது அறிந்த, இளவரசி புன்னகையுடன் அவர்களின் வணக்கத்தை தலையசைத்து ஏற்றுக்கொள்ள, வீரசேனன் இறங்கி தன் மைத்துனனை தழுவிக் கொண்டான்..

 

அரசரை பார்க்க வந்ததாகவும், மருதநாயகம் அவர்களையும் களவ கோட்டையிலிருந்து இங்கேயே அழைத்து வர எண்ணியிருப்பதாகவும், கனிசித்தரிடம் அனுமதி கேட்க வந்ததாக வெற்றி கூற, வேங்கையரின் மகனோ.. கொடை நாட்டின் இளவல் வருவதாக தகவல் வந்ததாகவும், அவரை விருந்துக்கு அழைத்து செல்ல காத்து நிற்பதாகவும்.. கூறவும்… இளவரசியின் மனம் படபடக்க தொடங்கியது.

 

 

 

கீழே நின்று கொண்டிருந்த வீரசேனனின் செவிகளோ தெலைவில் கேட்ட ஏதோ ஓசையை உள்வாங்கி.. முகம் புன்னகையில் மலர்ந்தது.

 

அவனது மலர்ச்சியிலேயே வருவது யாரென்று சந்திராம்பிகைக்கு புரிந்து விட… அவனின் சூளுரை நினைவில் முகம் கனிந்து சிவக்க.. இதயமோ இது வரை அறியாத வேகத்தில் துடிக்க, அவனை எதிர்கொள்ள இயலாதவளாய், “வீரசேனரே.. நான் தந்தையை காண செல்கிறேன்.. தாங்கள் நண்பரை கவனித்து உணவருந்த வைத்து அழைத்துவாருங்கள்..” எனவும்,

 

சில நொடிகள் யோசித்தவன், அவளின் நிலை புரிந்து.. “தேவி தாங்கள் வெற்றி வேந்தனுடன் செல்லுங்கள்.. நான் இளவலை மன்னரை பார்க்க அழைத்துக் கொண்டு வருகிறேன்..” எனவும் சம்மதமாய் தலை அசைத்தவள்.. தனது புரவியை, கனிசித்தரின் இருப்பிடமான, ஆனைமலை குகை நோக்கி விரைந்து செலுத்தினாள்..

 

இளவரசி சென்ற சில கணப்பொழுதுகளில், தனது பொற்தேரில் விரைந்து அவ்விடம் வந்த கொடை நாட்டின் இளவல், அங்கு தனக்காக காத்து நின்ற வீரசேனனைக் கண்டு வியந்து, கடிவாளம் பற்றி இழுத்து, தேரை நிறுத்தினான்.

 

இறங்கி வந்து மார்புறத் தழுவிக் கொண்டவன், “வேழா.. நீ களவ கோட்டையில் இருப்பதாக தானே தகவல் அனுப்பியிருந்தாய்..” என்றவன்.. எதையோ உணர்ந்தவன் போல சுற்றிப் பார்வையை செலுத்தி, “வதனா எங்கே..?” எனவும்..

 

சிரித்த வீரசேனன்,

“இளவல் அவர்கள்.. இங்கு இருக்கும்போது அவர்களும் அங்கேயே வர எண்ணுவதுதானே இலக்கணம்.. இளவரசியார்… மன்னருக்கு மருத்துவம் செய்யும் கனிச் சித்தரின் குகையில் இருப்பார்கள்.. தங்களை இங்கே உணவருந்த வைத்து அழைத்து வரச் சொல்லி எனக்கு உத்தரவு..” எனவும்..

 

யோசனையில் புருவம் நெரிய,” தனியாகவா குகையில் இருக்கிறாள்?”

 

“இல்லை இளவலே.. நாங்களும் இப்போது தான் வந்தோம்.. நீங்கள் வரும் தகவல் அறிந்ததும்.. வெற்றிவேந்தனுடன் குகைக்கு கிளம்பி விட்டார்கள்..”

 

“வெற்றியுடனா….” என்று அதிர்ந்தவன்..

 

“உன்னை அவளுடனேயே இருக்க சொன்னேனே..” என லேசான சினத்துடன் உரைக்க..

 

“உங்கள் இருவருக்கும் இடையில் நான் படும் பாடு” என சலித்தவன், “வாருங்கள்.. நாம் உணவருந்தி விட்டு விரைந்து செல்வோம்.. அங்கே மன்னரின் மெய்க்காவல் படையினர் உள்ளனர்.. அவர்கள் பாதுகாவலில் வெற்றியின் துணையோடு இருப்பவர்களை எதுவும், யாரும் நெருங்க இயலாது.” எனவும்..

 

மறுப்பாய் தலையசைத்தவன், “கிளம்பு.. குகைக்கு விரைந்து செல்வோம்..” எனவும்.. இளவலின் கோபமுகம் கண்ட வீரசேனன், ஏதும் பேசாமல் ஓடிச்சென்று தன் புரவியில் ஏறினான்.

 

இளவலும் வேகமாய் தன் தேரில் ஏறி கடிவாளம் பற்றி, சாட்டையை சொடுக்க, புரவிகள் துள்ளிக்கொண்டு அங்கிருந்து புறப்பட, புரியாமல் பார்த்த வேங்கையரின் மகன் உறைந்து அங்கேயே நின்றான்.

 

சில கணங்கள் பயணிக்க வேண்டிய தொலைவை இரு கணங்களில் (10 நிமிடங்கள்) அடைந்த இளவல், தன்வசமிருந்த சந்தனமரத்தில் தந்தப் பிசிறுகள் பதித்து அலங்கரிக்கப்பட்ட சிறு பேழையை எடுத்தவனாய் விரைந்து இறங்கினான். அவனின் வேகத்திற்கு வீரசேனன் ஓடத் தான் வேண்டியிருந்தது.

 

 

வனக்காளி அம்மனின் சிலை கண்டவர்கள், ஒரு நொடி நின்று வணங்கி விட்டு வேகமாக நடக்க, குகையை நெருங்கும் வழியில் உயிரற்ற சடலங்களாய் இருந்த மெய்க்காவல் படையினரைக் கண்டதும் திடுக்கிட்டு, விரைந்து வாயில் வழியே குகை உள்ளே புக, கண்ட காட்சியில்… இளவலின் இதயமானது துடிக்க மறந்தது..

 

மேடையில் மன்னர் கண்மூடிப் படுத்து இருக்க, கீழே சிரம் அறுபட்டுக் கிடந்தான் முத்து வடுகன்.. அவனின் குருதி தோய்ந்த வாளுடன், மன்னர் இருந்த மேடை அருகே விழி மூடி சாய்ந்து இருந்த இளவரசியைக் கண்டவன் விரைந்து அருகில் செல்ல, அவளின் வயிற்றிலிருந்தும் மார்பிலிருந்தும் வழிந்த குருதியானது அவளருகில் தேங்கி இருப்பது கண்டு அதிர்ந்து, தன் கரத்திலிருந்த பேழையை கீழே போட்டவன், “வதனாஆஆஆஆஆஆஆஆ..” என்று அலறி அவளை தன் மடியில் ஏந்தினான்.

 

அவள் மெதுவாக விழி திறந்து பார்த்ததும் சிறிது ஆசுவாசம் அடைந்து, அவளின் மேல்வயிற்றில் சொருகியிருந்த குறு வாளை கை நடுங்க உருவியவன், தன் இடைத்துணியால் அவளின் வயிற்றை சுற்றி இறுக்கி கட்ட, அதற்கெல்லாம் கட்டுப்படாமல் குருதியானது… வழிந்தவாறே இருந்தது.

 

வீரசேனன் அந்த வாளின் அமைப்பைக் கண்டு அதிர்ந்து உற்றுப் பார்க்க, இளவரசி அவனின் கண்களை உற்று நோக்கி.. மறுப்பாய் தலையசைத்து, ‘மருத நாயகத்திற்காக..’ என மெலிதாய் வாயசைத்தவள்,ஒற்றை விரலை வாயில் வைத்து சொல்லாதே என்பது போல் சைகை செய்ய,

 

‘வெற்றி வேந்தா.. குடி கெடுத்து விட்டாயே?’ என மனதிற்குள் ஓலமிட்டு சினம் மிக எழுந்தான் வீரசேனன்..

 

தன்னவளின் குருதியை நிறுத்தும் முயற்சியில் இருந்த சிம்மன்,

கண்களில் நீர் வழிய..

“என்ன இது… ஏனடி.. இவ்வளவு நாட்களும் என்னை கொல்லாமல் கொன்றாய்.. இப்போது மொத்த உயிரையும் உருவி விட்டாயே.. வேழா.. நான் வரும் வரை… இவளுடனேயே இரு என்று சொல்லியிருந்தேனே… சில கணங்கள் நாம் விலகியதால் வந்த நிலை கண்டாயா.. அவர் யாரோ மருத்துவராமே.. கனிச்சித்தராமே அவரை உடனே அழைத்து வா..” எனவும்.. விரைந்து நகரப்போனவனை.. கையசைத்து தடுத்தவள், மூச்சு விட திணறியபடி, முத்து வடுகனை கை காட்டி, “கொன்று விட்டான்.” என்றவள் தன்னை மடி தாங்கி இருந்த சிம்மனின் கண்ணீர் முகத்தில் பட்டதும், விழி உயர்த்தி பார்த்து, கலங்கி, கையை மெதுவாய் உயர்த்தி, அவனின் கண்ணீரை துடைத்தாள்..

 

அவளின் கரம் பற்றி முகம் புதைத்தவன், “ உனக்கான தாலி, பரிசில் சேலையோடு வந்திருக்கிறேன் வதனா.. உன்னை மட்டுமே எனது வாழ்வரசியாய் கொள்ள வேண்டும் என்று, பட்டத்து இளவரசு பட்டம் துறந்து வந்திருக்கிறேன்.. எனது சிறிய தாயாரின் மகனை எனது சிம்மாசனத்தில் அமர வைத்து விட்டு, உன்னைத் தேடி ஓடி வந்தேனே… அத்தனையும் பலனின்றி ஆக்கி விடாதே.. திடம் கொள்.. எப்படியாகினும் உன்னைக் காத்து விடுவேன்..” என்று கதற..

 

அவனின் தலை பற்றி அருகில் இழுத்தவள் மெல்லிய குரலில், “இப்பிறப்பில் மட்டுமில்லை… எத்தனை பிறவி எடுக்கினும் நீங்களே என் வாழ்வு…. உயிர்… நானே…. உங்களை…. தேடி…. நாடி வருவேன்… உடல் பிரிந்தாலும் உயிராய் உங்களுடன் உறைவேன்.. நான்கு நாடுகள்… உங்களை நம்பி..

காதலுக்காக கடமையை விடாதீ…ர்கள்……கா……த்திருங்….கள்.. எனக்….காக…” என்றவளின் கையும் தலையும் சரிய…

 

சிம்மனின் கதறல் குகையை கிடுகிடுக்க வைத்தது..

 

******************

 

பின்கதை சுருக்கம்

~~~~~~~~~~~~~~~~~

 

சில நாழிகைகள் கழித்து மருதத்தின் நால்வகைச் சேனை நாயகன் வெற்றி வேந்தன், ஆனை மலைக் காட்டினுள் பிணமாக கண்டெடுக்கப்பட்டான். இளவரசியைக் காக்கும் முயற்சியில் களவத்தினரால் கொல்லப்பட்டான் எனத் தகவல் பரவியது.

 

இளவரசி சந்திரவதனாம்பிகை மருதநாட்டின் தெய்வமானாள்..

 

வீர வேழ சேனனுக்கோ… உயிர்விடும் பொழுதிலும்.. தான் மதிக்கும் மருத நாயகத்தின் மகன் வெற்றி வேந்தனை மன்னித்து, அவனின் குடும்ப மானம் காக்கத் தலைப்பட்டவள்.. தன் குலமரியாதை காத்த தெய்வமாகவே தோன்றினாள்.

 

தமது இளவல் கொணர்ந்த தாலி, சேலை மற்றும் இராணி சந்திர வதனாம்பிகையின் வீர வாளை தன் இல்லத்தில் வைத்து வழிபட்டான்.. அவள் உயிர் நீத்த குகையில் அவளின் உருவச் சிலை வைத்து வணங்கி… மருதத்தின் நலனுக்காவே வாழ்ந்த வீர வேழ சேனன்.. மருதம் காக்க நடந்த போரில், தீரமாய் போராடி உயிர் துறந்து கடவுளானான். மருதத்தினரால் அவனின் தாயாய் சொல்லப்பட்ட சந்திராம்பிகை குகையிலேயே நடுகல் வைக்கப்பட்டு தெய்வமாக தொழப்பட்டான்.

 

கொடை நாட்டின் இளவரசன் இராஜ ஜெய சிம்மவர்மன், நான்கு நாடுகளையும் இணைத்து மிகப்பெரும் பேரரசை உருவாக்கினான்.. எனினும் அரியணையில் அவன் அமரவில்லை. தனது மாற்றாந்தாயின் மகனை அதில் அமர வைத்து, தந்தையாரின் வாக்குப்படி வேணாடு, வளநாட்டு இளவரசிகளை தனது தம்பிக்கு மணமுடிக்கச் செய்து இராணிகளாக்கியவன்,

 

கிளிமனூர் அரண்மனையை தன் இருப்பிடமாக கொண்டு, தன்னை மாசேனைத் தலைவனாக நிலைப்படுத்திக் கொண்டான். வாழ்நாள் முழுவதும்.. தன்னவளின் ஆணைப்படி கடமையைக் கை கொண்டு.. தன் நாட்டு மக்களின் நலத்திற்கும் வளத்திற்கும் காவலனாய் இருந்தவன்,

 

தன் உயிர் தனைத் தேடி வரும் நாளுக்காக காத்திருந்தான்…

 

(அன்று பகுதி…

முற்றியது…)

அனுமதி 32(2)

 

இன்று..

 

 

சில மணி நேரம் முன்பு..

 

திருவனந்தபுரத்தின் மருத்துவமனை வாயில் கண்காணிப்புக் கேமரா புறம் திரும்பாமல் முகத்தை சாமர்த்தியமாக மறைத்தவாறு உள்நுழைந்தவனின் கண்கள், வாகன நிறுத்துமிடத்தில் இருந்த ஆதித் வர்மனின் ஆஸ்டின் விண்டேஜ் காரைக் கண்டு கொண்டன.. அதன் அருகில் நின்று பேப்பர் படித்துக் கொண்டிருந்தவனின் வெண்ணிற ஆடை, தொப்பி, தோரணை கண்டு அவனருகில் சென்றான்.

 

அங்கே ஏற்கனவே மற்றொரு கார் அருகில் நின்று கொண்டிருந்த தன் ஆளைக் கண்டு கண் காட்ட, கண்காணிப்பு கருவி ஏதும் இல்லை என்று உறுதி படுத்திக் கொண்டான். அந்த ட்ரைவரிடம் சென்று ஏதோ பேச்சுக் கொடுப்பதை கவனித்தவாறு அருகில் சென்று சுற்றி பார்த்தவன், யாரும் இங்கு கவனிக்க வில்லை என உணர்ந்து மயக்க மருந்தினை அவன் முகத்தில் அடித்து மயங்கச் செய்தான்.

 

அவனை காரின் பின் இருக்கைக்கு கொண்டு சென்றவன், அவனது சீருடையை கழற்றச் செய்து தான் அணிந்து கொண்டான். தனது ஆளைக் கொண்டு அந்த டிரைவரை அவன் வந்திருந்த காரில் ஏற்றியவன், ஆதித்வர்மனின் வருகைக்காக வன்மத்துடன் காத்திருந்தான் அவன்.. திருமலை…

 

இரு மாதங்கள் முன்பு, சிறையில் பார்த்த நாளிதழில்… RJV eco tiles & ceramics தொழிற்சாலை திறப்பு விழா புகைப்படத்தில்… மேடிட்ட வயிறுடன் இருந்த மதிவதனாவையும், கம்பீரமாய் அவளருகில் நின்ற ஜெயவர்மனையும் கண்டதும், அடிமனதில் தீப்பிடித்தாற் போன்ற உணர்வு..

 

தந்தையான அழகுமலை முழு நேர நோயாளியாய் அரசு மருத்துவ மனையில் இருக்க… தான் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்க, இவர்கள் மட்டும் இளித்துக் கொண்டு வாழ வேண்டுமா.. அதும் மதிவதனாவின் கர்ப்ப வயிறு அவனுக்கு மிகுந்த காந்தலை உண்டு பண்ணியது என்றால் ஜெயவர்மனின் புன்னகை அவனின் உடலைப் பற்றி எரிய வைத்தது.. அழிக்க வேண்டும்.. இருவரையும்… என்ற பழியுணர்வு பொங்க, வெளியே செல்ல வேண்டும்… தப்பிக்க வேண்டும் என தீவிரமாக சிந்தித்து காய் நகர்த்தினான்.. சிறையில் வந்து சந்திக்கும் தன் அடிபொடிகள் உதவியுடன்.. திறமையாக திட்டமிட்டான்.

 

கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் வழியில், ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, தனது நைனாவின் நண்பரின் ஆட்களின் உதவியால் வெளி வந்தவனுக்கு தோள் கொடுக்க, அவன் போட்ட கறியுடன் கூடிய எலும்புத் துண்டுகள் தின்ற பல நன்றியுள்ள ஆட்கள் காத்திருந்தனர்.. அவர்களின் உதவியோடு மதுரை விட்டு வெளியேறி, ஒரு சிறு கிராமத்தில் ஒளிந்து பதுங்கியவன், தனது முடி, மீசை, புருவம், தாடி அனைத்தையும் திருத்தி, முகத்தின் தோற்றத்தையே மாற்றி மாலை அணிந்து அய்யப்ப பக்தன் போல தனை மாற்றிக்கொண்டு..

 

தன்னுடன் இருந்தவர்களையும் அதேபோல் வேஷமிட வைத்து… கோவிலுக்கு போவது போன்ற தோற்றத்தில் அன்று இரவே செங்கோட்டை வழியாக தேன்மலையை அடைந்தவன், ஜெயவர்மனின் கிளிமனூருக்குள் நுழைய முயல.. எல்லையிலேயே தெரிந்து போனது, ஜெயவர்மனின் பாதுகாப்பு எவ்வளவு பலமாக இருக்கிறது என்று..

 

பழங்கால அரண்மனை அப்பகுதில் இருப்பதை காரணம் காட்டி.. வழிகளில் வரிசையாக செக் போஸ்ட்ஸ் வைக்கப்பட்டிருக்க, போலிஸ் சோதனை செய்ததோடு.. சஃபாரி உடையில் இருந்த இருவரும் லேசர் கண்களால் பார்வையிட்டு

திகில் கிளப்பினர்.. அவர்களின் கையில் இருந்த துப்பாக்கி கண்டதுமே தெரிந்துவிட்டது அவர்கள் ஜெயவர்மனின் ஆட்கள் என.. கண்ணை மூடி சீட்டில் கவிழ்ந்து படுத்து தூங்குவது போல பாசாங்கு செய்து தப்பி உள்ளே சென்றால்…

அந்த ஜெயவர்மனும் மதிவதனாவும் வாழும் அரண்மனையின் அருகில் கூட செல்ல இயலவில்லை… இரு கிலோமீட்டர் தொலைவிலேயே… தனியார் வழி பாதை என்ற அறிவிப்புடன்.. பலத்த காவல்..

 

நின்றால் கூட சந்தேகம் வந்து விடும் என்று பயந்து… தாங்கள் இருந்த வாகனத்தை, அங்கே இருந்த ஒரு தோப்புக்குள் விடச் செய்தவன், இரவு முழுவதும் யோசித்தவாறு இருந்தவனின்..

நினைவில் வந்தான் ஆதித்வர்மன்… தன்னை பல நாள் ஆஸ்பத்திரியில் படுக்க வைத்த அவனையும் பதற விட வேண்டுமே.. என்ன செய்யலாம் என்று யோசித்தவன்.. அவனை

பற்றி விசாரிக்க சொன்ன போது… மொத்த குறிப்புகளும் கிடைத்து விட்டது.. அவனின் மகனின் உடல்நலக் குறைவு, மனைவி கர்ப்பம்.. சிகிச்சை எடுக்கும் மருத்துவமனை வரை..

 

வழி கிட்டிய மகிழ்வில், திட்டமிட்டவன், அதை தன் ஆட்களிடம் செயல்படுத்தும் வழிமுறைகளை விளக்கி விட்டு.. மலையாளம் தெரிந்த ஒருவனை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு வேறு வாகனத்தில் கிளம்பி இங்கு வந்து இருந்தான்.

 

இப்போது ஆதித்வர்மனின் கார் அவன் வசமாகி இருக்க, ஆதித் வர்மனுக்காக காத்திருந்த பொழுதில், ட்ரைவரின் அலைபேசி ஒலித்தது.. ‘இராணி மேடம்’ என்று ஒளித்திரை அறிவிக்க.. அழைப்பை இணைத்து.. ஸ்பீக்கரை ஆன் செய்தவன் உற்றுக் கேட்க, அவள் ஏதோ மலையாளத்தில சொல்லி முடித்தும் என்ன என்று மலையாளம் தெரிந்த தன் ஆளிடம் கேட்டான்.

 

“டிக்கில ஏதோ பை இருக்காம் உள்ளே கொண்டு வர சொல்றாங்க.. அங்க ஸ்கேன் பண்ற இடத்தில இருக்காங்களாம்…” எனவும்..

 

சற்று யோசித்தவன், “நீ இங்கேயே இரு.. நான் உள்ளே போயிட்டு வந்துருறேன்.. ஆதித் வந்தா.. யோசிக்கவே யோசிக்காத… ஸ்ப்ரே அடிச்சுரு..” எனவும்.. அவன் சரி என.. பையை எடுத்துக்கொண்டு ஸ்கேன் பார்க்கும் இடம் விசாரித்து சென்றவனின் மனதில் வேறொரு திட்டம் உதயமானது..

 

எப்படியாவது ஆதித்வர்மன் மனைவியை கடத்தி விட்டால், அவளை வைத்தே ஆதித் மூலமாக, ஜெயவர்மன், மதிவதனா அனைவரையும் முடித்து விடலாம், என்று சிந்தித்தவாறே வந்தவன்… அவள் மேல் மயக்க மருந்து ஸ்ப்ரே அடிக்கலாமா.. வேறு ஏதாவது மிரட்டலாமா என எதற்கும் தயாராக துப்பாக்கியையும் தயார் நிலையில் வைத்திருந்தான்.

 

அவனின் ட்ரைவர் உடையையும், தொப்பியும் அவன் அடையாளத்தை பெரிதும் மறைத்து இருக்க, இராணி நிரஞ்சனா தேவி ஸ்கேன் அறை முன்பு காத்திருந்தவள், அவனின் முகத்தைக்கூட நிமிர்ந்து பாராமல் அவசரமாக தன் பையை வாங்கிக்கொண்டு, தன் கையிலிருந்த மற்றொரு பையை அவனிடம் தந்து விட்டு உள்ளே விரைந்தாள்..

 

ஸ்கேனிங்கிற்காக, சிறுநீர்ப்பை நிறைந்த நிலையில் இருந்த அவள், கழிவறை நாடி அவனை நிமிர்ந்தும் பாராமல் சென்றது, திருமலைக்கு வசதியாகி விட, அவள் தன் வசம் தந்து சென்ற பையில் அவளின் மொபைல் இருந்தது கண்டு, ‘அட என்ன? குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம் அடிக்குது!!.’ என்று எண்ணியவனாய், சற்று மறைவாய் நகர்ந்து, அதை இயக்கினான்.

 

ஆதித்வர்மன் இரு முறை அழைத்து இருந்தது அதில் பதிவாகி இருக்க, வெற்றிப் புன்னகையுடன் அவனை அழைத்தான்.

 

“ நிரஞ்சனா… எவ்விட இருக்குன்னு?” என அவனின் அழுத்தக் குரல் கேட்டதும்,

 

 

“இப்போ பாத்ரூம்ல இருக்கா உன் பொண்டாட்டி… அவள பரலோகம் அனுப்பறதும் அனுப்பாததும் உன் பேச்சில், நீங்க நடந்துக்கறதில் தான் இருக்கு.” எனவும்..

 

எதிர்முனையில் எந்த சத்தமும் இல்லை..

 

“ஆதித்.. நான்.. உன் பழைய நண்பன்.. அதான் உன் பங்காளிய போட்டுத் தள்ள கூட்டணி போட்டியே.. அடுத்து.. எங்க என்னால ஆபத்து வந்துருமோன்னு என்ன போட்டுத் தள்ள பாத்தியே.. அதே திருமலை.. துப்பாக்கி.. மயக்க மருந்தோட உன் பொண்டாட்டி கிட்ட இருக்கேன்.

 

என்ன கம்முன்னு இருக்க.. உன் செக்யூரிட்டிஸ்.. போலீஸ்ல யாரை கூப்பிடலாம்னு யோசிக்கிறியா?

 

நா உனக்கு சகாயம் பண்ணத்தா வந்திருக்கே… உன் பங்காளி ஜெயவர்மன்… அவன் வாரிச சுமந்துட்டு இருக்க மதிவதனாவ போடத் தான்… வந்துருக்கேன்.. ஆனா… வ**** அவன் இருக்குற இடம் பக்கத்துல கூட நெருங்க முடில.

 

நீ என்ன பண்ற… எப்படியாவது என்னை அவன் அரண்மனைக்குள்ள நுழைய வச்சுரு.. அதுக்கப்புறம்.. நா பார்த்துக்கறேன்… அது வரை உன் பொண்டாட்டி.. என் கஸ்டடில தான் இருப்பா.. அவ பாத்ரூம்ல இருந்து இப்போ தான் ஸ்கேன் ரூமுக்குள்ள போறா… இன்னும் கொஞ்சம் நேரத்தில வெளிய வந்துருவா.. நீ நா சொன்ன மாதிரி பண்ணுனா அவ ஸேஃப்…” எனவும்,

 

மிக அழுத்தமாய் ஒலித்தது ஆதித்வர்மனின் குரல்… மலையாள மணம் வீசும் தமிழில்..

“வேணா திருமலை. நீ யார் கூட மோதுறன்னு தெரியாம மோதுற. இது…” திடமான குரலில் சொல்லிச் சென்றவனை இடைமறித்தவன்,

 

“ இங்கன பாரு ஆதித்து, நீ என் எதிரி இல்ல… சும்மா சலம்பாத.. என் முடிவத் தான் கண்ணுல காமிச்சுட்டானே உன் சித்தப்பன். இனி என்ன!” என்று பற்களை கடித்தவன்,

 

“நான் போறதுக்கு மின்ன.. அவன.. அவள, போட்டு தள்ளனும்.. அவுங்க ரெண்டு பேரையும்.. உயிரோட விட மாட்டேன். அதுக்கு நீ தான்… நான் சொல்றது செய்யனும்.. உன் பொண்டாட்டி உனக்கு வேணும்னா நீ செஞ்சுதா ஆகனும்.” எனவும்,

 

“என்ன செய்யனும்..?” என மெதுவாய் ஒலித்தது ஆதித்தின் குரல்.

 

தனது திட்டத்தை சொன்னவன், “உள்ளே போயிட்டா.. நா வேலை முடிச்சு, உடனே எஸ்கேப் ஆகிடுவேன்.. அங்கே கிளிமனூர்ல என் ஆளுங்க சுத்தி நிறுத்தி வச்சுருக்கேன். அவன் இன்னைக்கு தப்பவே கூடாது.. ஆனா நா காரியம் முடிக்கறவரை.. உன் ராணி என் துப்பாக்கி முனைல தான்.” எனவும்,

 

சில நொடிகள் அமைதியாக இருந்தவன் , “அவ வந்ததும் போனை அவட்ட கொடு.”

 

“சரி… ஆனா.. நீ அவட்ட நான் சொன்ன மாதிரி சொல்லு.. ஏதாவது சின்ன மாற்றம் செய்தாலும் உன் பொண்டாட்டி, அவ வயித்தில இருக்கிற பிள்ள உனக்கில்ல… ஜாக்கிரதை..” எனவும்.. அமைதியாய் இருந்தான்.. ஆதித்வர்மன்..

 

நிரஞ்சனா தேவி தன் ஸ்கேன் ரிப்போர்ட் உடன் வெளி வருவதைக் கண்டவன்.. அழைப்பைத் துண்டித்து விட்டு சற்றே திரும்பி குனிந்து நின்றான்.

 

வெளியே வந்தவள் தன் கையிலிருந்த பையை அவனிடம் நீட்டிய படி நிமிர்ந்து பார்க்க, புதிதான முகம் கண்டு குழம்பி…

 

“ஆரானு நிங்கள்?” என..

 

“புது ட்ரைவர் மேம்..” என்றான் நிதானமாக…

 

அவனின் உச்சரிப்பிலும், முக அமைப்பிலும்…

புருவங்கள் முடிச்சிட,

 

“தமிளோ..?” என்றவாறு அவனை கூர்ந்து பார்க்க..

 

சரியாக அந்நேரத்தில் அவளின் அலைபேசி அடித்தது..

 

கணவன் அழைப்பதைக் கண்டு… பார்வையை புதிய ட்ரைவரின் மேல் வைத்தவளாய் அழைப்பை இணைத்தவள், கணவனிடம் ட்ரைவர் பற்றி விசாரிக்க.. அவனின் பதில் கேட்டு திருப்தியுற்றவள், அடுத்து அவன் சொன்னதைக் கண்டு இனிய அதிர்ச்சி அடைந்தாள்..

 

“நிஜமா.. சொல்றீங்க.. ஆதித்… ஆமா.. நாம அவருக்கு நன்றி சொல்லனும்.. அன்னைக்கு காப்பாத்துனது மட்டுமல்ல.. நம்ம ப்ரபுக்காக அடிக்கடி வந்து போன் மாரோவும் கொடுத்துருக்கார்.. கூப்பிட்ட போதெல்லாம் வந்திருக்கார்.

நீங்க கூட இரத்தம் தான் கொடுத்தீங்க.. இடுப்பில இருந்து போன்மாரோ எடுத்தா ரொம்ப வலிக்குதுன்னு.. ஆனா அவர்.. இரண்டு நாளுக்கு ஒரு முறை வந்து… போன்மாரோவே கொடுத்துருக்கார்..

அதனாலதான் ப்ரபு வேகமா குணமடைஞ்சுருக்கான்… இப்போ அவர் மனைவிய கூட, இங்கே ஹாஸ்பிடல்க்கு டெலிவரிக்கு கூட்டிட்டு வராராம்.. அவுங்க பேபி தொப்புள் கொடி இரத்தம்… ஸ்டெம் ஸெல்ஸ் ஸ்டோர் பண்ண ரிஜெஸ்டர் பண்ணிருக்குறாராம்… எடுத்து.. அதுவும்.. நம்ம ப்ரபுக்கு மேட்ச் ஆச்சுன்னா.. அந்த ஸ்டெம்செல்ஸ் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்ல… நம்ப ப்ரபு முழுசா சரியாகிடுவானாம்.. நாம் எப்படி அவருக்கு நன்றி சொல்லப் போறோம்னு நினைச்சேன்.”

என நெகிழ்ந்த குரலில் சொல்ல, சில நொடிகள் அமைதியில் கழிய..

 

ஆதித், “ம்.. அதான்.. நீ இப்போவே போய் நன்றி சொல்லிட்டு வா… பாட்டி ஈவினிங் கொச்சின்ல இருந்து வந்திருவாங்க… அதற்கு முன் போய்வந்துரு. நீ நம்ம கார்ல போ…” என்றவன் அழைப்பைத் துண்டித்து இருந்தான்.

 

மடமடவென்ற மெல்லிய குரலில் அவள் பேசிய மலையாளம் புரியாதவாறு பார்த்த திருமலை.. தனக்கு எதிராய் அவளின் உடல்மொழிகள் இல்லாததால் துப்பாக்கியால் குறி பார்த்தவாறு பான்ட் பாக்கெட்டில் இருந்த கையை அசைக்காமல்.. அமைதியாக அவளைக் கூர்ந்தவாறு இருந்தான்.

 

‘பாட்டி வரும் முன் போய் வந்து விடு…’ எனும் குரல் உந்த… உற்சாகமாக.. பல வகைப் பழங்கள் வாங்கிக் கொண்டு… கிளிமனூர் பயணப்பட்டிருந்தாள்.. நிரஞ்சனா.

 

நன்றி சொல்ல வந்தவள்… நாசக்காரனையும்… கூடவே அழைத்து வந்திருந்ததை எண்ணி நொந்தவாறே.. தன்னை கீழே வீழ்ந்து விடாது தாங்கி நிறுத்திய ஜெயவர்மனின் கைகளைப் பற்றியவள்.. கண்ணீருடன் நிமிர, அவளை நிலைப்படுத்தி இருந்தவன், விலகி..

விழிகளில் தவிப்புடன் விரைவது கண்டு திரும்பிப் பார்க்க… அங்கே மதிவதனா மண்டியிட்டு கதறிக்கொண்டு இருப்பது கண்டு… அதிர்ந்து தானும் அங்கே சென்றாள்.

 

சிவேஷ் இரத்தம் கொட்ட மயங்கி இருக்க, மடி தாங்கி இருந்த மதிவதனா முகம், எதையோ சகித்துக் கொண்டு இருப்பதுபோல் கண்கள் மூடி இருப்பது கண்டு.. அவளை உற்றுப் பார்க்க..

 

 

ஜெயவர்மனின் கவனமோ மயங்கிக் கிடந்த சிவேஷிடம் இருந்தது.

 

அப்போது பல பாதுகாப்பு வீரர்கள் அங்கே ஓடி வந்தனர். நெற்றியில், மார்பில் இரத்தம் கொட்ட வீழ்ந்து கிடந்த திருமலையின் உடல் கண்ட பாதுகாப்பு தலைவர், விரைந்து வந்து, குத்துப்பாறையில் இருந்த கை ரேகையை அழித்து… ஜெயவர்மனின் துப்பாக்கியை தன் வசம் எடுத்துக் கொண்டு, “ஸர் நீங்க ஆஸ்பிடல் கிளம்புஙக.. இங்கே நாங்க பார்த்துக்கறோம்.. செக்யூரிட்டிஸ் பத்து பேர் ஏற்கனவே தயாரா இருந்தாங்க. அவங்களை கூட்டிட்டு கிளம்புங்க..” என..

 

தயாராக இருந்த வாகனம் ஒன்றை நோக்கி… அருகில் எடுத்து வரச் சொன்னவன், ஏதோ உறுத்த, திரும்பித் தன் மனைவியைப் பார்த்தான்.

 

மண்டியிட்டு இருந்தவள் அதே நிலையில் கண் மூடி இருப்பதையும், அந்த குளிரில் அவளுக்கு வேர்த்துக் கொட்டுவது கண்டு.. ஏதோ உணர்ந்தவனாய்..

 

“வதூ… என்ன செய்யுது..?” என்றான் அலறலாய்

 

‘ஒன்றுமில்லை..’ என்பது போல தலையசைத்தவள் நிலை கண்டு புரிந்து கொண்டவனாய்,

 

“சொல்லு… வது.. வலிக்கிதா..” எனவும் ஆமோதிப்பாய் தலையசைத்தவளைக் கண்டு.. அவனின்.. இதயம் மும்மடங்கு வேகத்தில் துடிக்கத் தொடங்கியது..

 

சிவேஷை பாதுகாவலர்கள் இருவர் தூக்கி சென்று காரின் பின்சீட்டில் படுக்க வைத்தது கண்டவன், மதிவதனா அருகில் சென்று மெதுவாக எழுப்பி, இரு கைகளிலும் ஏந்திக் கொண்டான். மற்றொரு காரை தனது அருகில் கொண்டு வரச் செய்தவன், அதில் அவளை மெதுவாகப் படுக்க வைத்தான்.

 

சிவேஷ் இருந்த வாகனத்தை முதலில் கிளம்புமாறு சொன்னவன், கிளிமனூரின் டாக்டரிடம் முதலுதவி கொடுத்து விட்டு, திருவனந்தபுரம் ஹாஸ்பிடல் வருமாறு பணித்தவன், இன்னோரு பெரிய வாகனத்தில் தன் தாயார், மாலா, நிரஞ்சனாவை ஏறச் சொல்லி,

 

அதை செலுத்த வந்த பாதுகாவலரிடம், “கர்ப்ப ஸ்த்ரீ இருக்காங்க நிதானம்…” என்றவன்,

திருவனந்தபுரம் செல்லுமாறு பணித்து விட்டு.. விரைந்து தனது வாகனத்தில் ஏறிக் கிளப்பினான்.

 

“வரு… ” எனும் மெலிந்த குரலின் அழைப்பில் அவசரமாய் திரும்பியவனிடம், “இப்போ வலி இல்லை.. பதட்டப்படாம ஓட்டுங்க… இது லேபர் பெயினா இருந்தாக் கூட பதட்டப்பட ஏதுமில்ல…” என்றவள்… வயிற்றில் கை வைத்து.. “இது உங்க வித்து.. என்னை கஷ்டப்படுத்தாது.. அழகா வெளிய வரும்..” எனவும்..

 

தான் அமர்ந்திருந்த சீட்டைப் பற்றி இருந்த அவளின் பூங்கரத்தில் முத்தமிட்டவனிற்கு, ஏனோ கண்கள் கலங்க.. சமாளித்து.. வாகனத்தை செலுத்தத் தொடங்கினான்.

 

மழையானது.. சாரலாகப் பெய்யத் தொடங்க.. இருட்டி இருக்கும் வானத்தை ஒரு முறை பார்த்தவன், வேகத்துடனும் அதே நேரம் கவனத்துடனும் ஓட்ட… ஐந்து நிமிட பயணத்தில், சிவேஷ் சென்ற வாகனம் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருப்பது கண்டு மனம் குலுங்க.. வண்டியை நிறுத்தினான்.

 

சாலையை மறித்து வீழ்ந்து கிடந்த பெரிய மரத்தின் காரணத்தால், அது நகர முடியாமல் நிற்பது கண்டவன், அவ்வளவு பலமான காற்று கூட இன்று இல்லையே… என்று யோசித்து கூர்மையுடன் சுற்றுப்புறம் ஆராய்ந்தவன், தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க அது சிக்னல் இன்றி இருந்தது..

 

வாக்கி டாக்கி எடுத்தவன், தன் முன் இருந்த வாகன ஓட்டுனரை அழைத்து, ” யாரும் கீழே இறங்க வேண்டாம்.. வேறு பாதையில் போகலாம்.” என..

 

“ஸார் … அது….” என அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது சாலை இரு மருங்கிலும் இருந்து ஓடி வந்த சிலரை பார்த்து.. திருமலையின் ஆட்கள் எனப் புரிந்து கொண்டவன்…

 

முகம் இறுக..”ஷூட் தெம்…” என்றான் கட்டளையாய்..

 

ஜெய வர்மனின் காரைப் பார்த்து துப்பாக்கிகளுடன் ஓடி வந்தவர்கள்.. தம்மை நோக்கி பல துப்பாக்கிகள் குறி வைப்பது கண்டு அதிர்ந்து திரும்பி தாம் பதுங்கி இருந்த இடத்திற்கே ஓட முயல, காலில் குண்டுகள் வாங்கி கீழே வீழ்ந்தனர்.

 

அப்போது.. சாலையின் எதிர்புறமாக.. பல வாகனங்கள் வருவது கண்டு, மெல்லமாய் உதிர்ந்து கொண்டிருந்த சாரல் மழையினூடே கவனத்துடன் உற்றுப் பார்க்க, முதலில் வந்த ஆடிக் காரிலிருந்து இறங்கினான் ஆதித் வர்மன்.

 

அதே நேரத்தில் நிரஞ்சனா, காஞ்சனை, மாலா இருந்த வாகனமும், ஜெயவர்மனின் கார் அருகில் வந்து நின்றது..

 

பாதுகாவலர் ஒருவர் இறங்கி சென்று பார்த்து விட்டு வந்து ஜெயவர்மன் காரின் அருகில் வர, மெதுவாய் சிறு அளவில் கண்ணாடியை இறக்கினான் ஜெயவர்மன்.

 

“ஸர்.. அவர்… இராஜா ஆதித் வர்மன், நம்மை எல்லோரையும் அவரோட வண்டிகளுக்கு மாற சொல்றார்… மஃப்டி போலீஸும் கூட இருக்காங்களாம்.. இங்கே இந்த ரௌடிங்களை அவுங்க பார்த்துப்பாங்களாம்.” எனவும்.. ஜெயவர்மன் இறுக்கமாக அமர்ந்திருக்க..

 

ஆதித்வர்மன்…மெதுவாக மரத்தை சுற்றிக் கொண்டு, சாலையோர பள்ளத்தில் இறங்கி ஏறி.. ஜெயவர்மனின் கார் அருகே வந்தான். இன்னொரு வாகனத்திலிருந்து இறங்கிய… நிரஞ்சனாவை கண்டு ஆசுவாசம் அடைந்தவன்..

 

வருத்தமான முறுவலுடன், குனிந்து ஜெயவர்மனிடம், “ஜேவி… நீ என்னை நம்ப மாட்டே.. எனக்குத் தெரியும்.. நான் ஒரு மணி நேரமா உனக்கு பேச முயற்சி செஞ்சேன்.. எந்த காலும் உனக்கு ரீச் ஆகலை… நெட் ஃபோன் மட்டும் கனெக்ட் ஆன மாதிரி இருந்தது.. அதும் ஃபைவ் செகண்ட்ஸ்ல கட் ஆகிடுச்சு.. புரிஞ்சுக்கோ.. நானும் சூழ்நிலைக் கைதி ஆகிட்டேன்… திருமலை கிட்ட என் மனைவிய பணயம் வச்சு இருந்தாலும்.. உன்னை.. உன் மனைவி காப்பாற்றத் தான் ஓடி வந்தேன்.. நீ என் பையனை.. என் குடும்பத்திற்கு செய்த உதவிக்கு பிரதி உபகாரமாத்தான்…

 

உன் மனைவி.. வலி அடக்கி தாங்குறாங்க.. இறங்கி வா… என் வண்டில கூட ஏற வேணாம்.. பின்னாடி.. டாக்டர் ஒரு ஆம்புலன்ஸ்ல இருக்கிறாங்க.. அதுல ஏறு.. உன் ஃப்ரெண்ட முதல்ல பார்க்க சொல்லிடலாம்.. தேவையான மருந்துகள் அதில இருக்கு. ” என…

 

எதிரே வெறித்தவாறு இருந்தவன், திரும்பி மனைவியின் முகம் பார்த்து, பிரசவ வேதனையில் இருந்தாலும்.. தனக்காக திடமாய் காட்டிக் கொள்ளும்.. அவளின் வலி அவனால் உணர முடிய… ஒரு நொடி சிந்தித்தவன்,

அமைதியாய் இறங்கினான்..

 

அவளைப் பூங்கொத்து போல தன் கைகளில் ஏந்திக் கொண்டவன்… ஆம்புலன்ஸிற்கு சிவேஷை ஏற்ற சொல்லி விட்டு.. அதிலேயே மாலாவையும் ஏற்றுமாறு சொன்னவன்…. வேறு ஒரு வாகனத்தில் மனைவியை ஏற்றி விட்டு, தாயாரையும் விக்கியையும் தன் வாகனத்தில் ஏற வைத்து, ஓட்டும் பொறுப்பை தனதாக்கியவன்… அடுத்த வலி வந்து விட்டதை தன் மனைவியின் முகம் கண்டு உணர்ந்து.. விரைந்து வாகனத்தைக் கிளப்பினான்.

 

செல்லும் அவ்வாகனத்தை பார்த்துக்கொண்டு இருந்த ஆதித்வர்மன், நிரஞ்சனா புறம் திரும்ப, கோபத்துடன் உறுத்து விழித்த அவளைக் கண்டு இரு கரங்களை மேலே தூக்கி..

 

“ ஐயாம் ஹெல்ப்லெஸ்.. பேப்.. எனக்கு அப்போ வேற வழியில்ல.. அண்டர்ஸ்டேண்ட்.. எல்லாமே சரியா முடிஞ்சுருச்சு… இனி.. ஆர்ஜேவி… அவன் வழிக்கே நான் போகலை.. சரி தானே… இராணி… வா போகலாம்.” எனவும்,

 

கடுத்த முகத்துடனேயே அவள் சிரமப்பட்டு மரத்தை சுற்றிச் செல்ல முயல, தடுத்து.. சட்டென்று அவளை தன் இருகரங்களிலும் ஏந்தித் தூக்கியவன்… தனது வாகனம் நோக்கி சென்றான்.

 

**************

 

சில மணி நேரம் கழித்து..

 

வெண்ணிற துவாலை சுற்றப்பட்டு இருந்த மகனைக் கையில் ஏந்தியிருந்த ஜெயவர்மன், அயர்வுடன் இருந்தாலும் மலர்ந்து இருந்த , மதிவதனாவின் அருகில் சென்றான்.

 

தன் உயிரில் விளைந்த கனியைக் கண்டவள், அதை தன்னுள் மலர வைத்து… நெஞ்சில் சுமந்திருந்தவனின் முகத்தை வாஞ்சையுடன் நோக்கித் தலையசைக்க, மகனை தாழ்த்தி பிடித்து அவளுக்குத் தெரியுமாறு இன்னும் அருகில் கொண்டு செல்ல, போர்வையிலிருந்து வெளி வந்த கரமானது அவனின் சட்டையைப் பற்றி இழுத்தது.. அருகில் வந்த அவனின் கன்னத்தில் மெலிதாய் முத்தமிட்டாள்.

 

அவளின் செய்கையில், அவ்வளவு நேரமிருந்த இறுக்கம் வடிந்து ஓட.. விரிந்த இதழ்களினால், கன்னத்தில் குழி விழ, மீண்டும் ஒரு இதழொற்றுதல் பரிசு கிடைத்தது… அதற்கு..

 

அவனின் முறுவல் கண்ட பின்பே தன் மகவை நோக்கி பார்வையை திருப்பியவள்.. முறுவலித்து, “உங்களைப் போலவே இருக்கான் வரு…” என..

 

மறுப்பாய் தலையசைத்தவன்,

“உன்னைப் போல..” என

 

“இல்ல.. இல்ல.. உங்கள மாதிரி தான்.. பாருங்க பாருங்க.. உதடு பிதுக்குனாலே… கன்னம் குழி விழுது.” என குதூகலிக்க..

 

“ஷ்.. உதடு உன்னைப் போல..” என்றவனின் பார்வை.. அவளின் இதழுக்கு செல்ல… சிரித்தவள்.. செல்லமாய் உதட்டைச் சுழித்தாள்.

 

அப்போது கதவு தட்டும் ஒலி கேட்டு திரும்பினர்.. உள்ளே வந்த மாலாவைக் கண்டு மலர்ந்த மதி வதனா, “அண்ணே எப்படி இருக்காங்க அண்ணி..?”

 

“ஒன்னும் பயமில்லை மதி. புல்லட் வயிற்று தசைல தான் இருந்தது.. உள்ளுறுப்புகள்ல ஏதும் பாதிப்பில்லை.. இரத்தம் தான் நிறைய வெளியேறிருக்கு.. அதனால டல்லா இருக்கார். இரண்டு நாள்ல சரியாகிடுமாம். அடிபட்டு மயக்கம் வந்ததால.. எம் ஆர் ஐ கூட எடுத்தாச்சு.. ஒரு பிரச்சனையும் இல்லை.. உன் மகனைக் கூட காட்டியாச்சு.. உன்னை தான் பார்க்க முடியலைல.. கேட்டுட்டே இருக்கார்.. இரண்டே நாள்ல எந்திரிச்சு, இங்கேயே வந்துருவார் போல..” என்று முறுவலித்தவள் தொடர்ந்து,

 

“மதி.. நம்ம குடும்பம் எல்லோரும் கிளம்பி வந்துட்டு இருக்காங்க.. அவங்க பேரனுக்கு சீரா மதுரைல பாதி பேர்த்து எடுத்துட்டு வரதா.. தகவல்…” என்றவள்,

 

புன்னகையுடன் நின்ற ஜெயவர்மனைக் கண்டு, “அண்ணே… விக்கி தான் கோபமா இருக்கான். அவன் கேர்ள் பேபி தான் கேட்டானாம்.. நீங்க பாய் கொடுத்துட்டீங்களாம்..” எனவும், வெட்கத்துடன் குனிந்து சிரித்தவன்.. திரும்பித் தன் வதனாவைப் பார்க்க… “நான் ரெடி..” என குறும்பான முறுவலுடன் உதடசைத்தாள்.. அவள்.

 

அப்போது வாயிலில் யாரோ வருவது உணர்ந்து திரும்பிய ஜெயவர்மனின் புன்னகை உறைந்து மறைய, உள்ளே வந்தவரைக் கண்ட வதனாவிற்கு எங்கேயோ பார்த்த ஞாபகம் வர.. மெதுவாக எழுந்து அமர முயன்றாள்.

 

கையசைத்து அவளைத் தடுத்தவர் சிறுமூச்சை வெளியிட்டு தலை குனிந்தவராய்,

“ உன்னை இரத்தம் சிந்த வச்சவ நான்.. ஆனா உன் இரத்தம் கொடுத்து என் பேரன் மகனை.. என் குலக்கொழுந்த காப்பாத்திருக்க. உன் இரத்தமான உன் மகனும் அவனுக்கு தன் தொப்புள் கொடி இரத்தம் கொடுத்து நோயில இருந்து மீட்டெடுக்க உதவிட்டான்.

 

உன்னை… ஓட ஓட விரட்டின என் பேரனுக்கும் நீ தொழில்ல நிறைய கண்ணுக்கு தெரியா உதவிகள் செய்திருக்க..ன்னு என் பையன் சொன்னான்..

 

உன்னை உன் அம்மாவை.. எவ்வளவோ கீழ்த்தரமா பேசிருக்கேன்.. என் உயிரையும் யானை கிட்ட இருந்து நீதான் காப்பாத்தினாயாமே..

 

மஹாராஜா.. உனக்கு கொடுத்த எல்லா சொத்தையும்.. உனக்குன்னு ஏதும் எடுக்காம… நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துறியாமே…

தொழில்லயும்… பணத்தை பெரிசா நினைக்காம.. பூமியக் காக்குறதா… இயற்கை வளத்த காக்குறதா தான் எடுத்து செய்றியாம்..”

 

இவ்வளவு பேசியதில் மூச்சு வாங்க சற்றே நிறுத்தி..

 

“இராஜ பரம்பரைன்னு நிரூபிச்சுட்ட..” என்றவர்,

 

மெதுவாய் மதி வதனாவின் அருகில் சென்று, ” என்னை காரில் இருந்து வெளிக் கொண்டு வந்தது நீதானே.. அவனுக்கு எல்லா விதத்திலேயும் பக்க பலமா இருக்கேன்னு கேள்வி பட்டேன்.. இது உன்னை.. உன் வழித் தோன்றல்களை சேர வேண்டியது..” என்றவாறு அவள் கரம் பற்றி திருப்பி, நகைகள் வைக்கப்பட்ட லாக்கர் சாவியை வைத்தார்.

 

ஆசீர்வதிப்பது போல ஒரு கையை விரித்து உயர்த்தியவர்..

 

“பல நூறு வருஷம் பெருகும் புகழும் வளமுமா நல்லாயிருங்க.. இரண்டு பேரும்..” என்றவர்,

 

இறுகி இருந்த ஜெயவர்மனை நிமிர்ந்து பார்த்து கரம் குவித்து, “நான்… என் பேரன் செய்த தப்புக்கள மன்னிச்சுடு.” என்றவர், திரும்பி அங்கிருந்து வெளியேறினார்.

 

அவரின் வார்த்தைகளில் ஜெயவர்மனின் உடல் ஒரு முறை தூக்கிப் போட.. மெதுவாய் கையிலிருந்த மகனை தொட்டிலில் கிடத்தியவன், தளர்ந்த நடையுடன் செல்லும் அவரைத் திரும்பி பார்த்தான்.

 

‘காலமும் சூழலும் எப்படி எல்லாம் மாற்றம் ஏற்படுத்துது..’ என்று எண்ணியவன் இதழ்களில் புன்னகை.. மனதில் அடர்த்தியான ஒரு நிறைவு.

 

திரும்பித் தன்னவளைப் பார்க்க, அவளின் முகத்தில் இருந்த பெருமித உணர்வில், கண்களின் காதலில்.. தனை மீண்டும் தொலைத்தவனாய், நெருங்கியவன், அவளின் தோளில் முகம் புதைத்துக் கொண்டான்.

 

வந்த பெண்மணி யார், என்ன பேசினார் என்று புரியாமல் பார்த்து கொண்டு இருந்த மாலா.. திரும்பி பார்க்க, அங்கே ஜெயவர்மன், மதிவதனாவின் நிலை கண்டு…

 

அவர்களின் இனிமையான இணைவை கண் நிறைய பார்த்தவள், கண்கள் ஏனோ சந்தோஷக் கண்ணீரால் நிறைய.. விலகி… வெளியேறி… கதவை சாற்றி விட்டு நடந்தாள்.

 

******************

 

 

(இன்று பகுதி முற்றியது….)

 

 

 

 

இன்று பகுதி முற்றியது.. என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாமல்,

“குட்டியோட பெயர் என்ன? ” ” சில வருடங்களுக்கு பிறகு.. எப்படி.. இருப்பாங்க… எங்களின் வரு, வது..??” ன்னு கேட்ட வாசக உள்ளங்களின் அன்பிற்காக.. கொடுக்கப்பட்ட

 

எபிலாக்…

*************

கிளிமனூரின் அரண்மனை..

 

ஜெயவர்மன் உள்ளே நுழைவது கண்டு.. சோஃபாவில் இருந்து எழுந்த அவனின் அன்னையான காஞ்சனை, வரவேற்கும் விதமாய் புன்னகை சிந்தி.. சாப்பாட்டு மேஜை நோக்கித் திரும்ப,

 

“ நான் சாப்பிட்டேன்.. இவ்வளவு நேரமாயிட்டா சாப்பிட்டு தானே வருவேன். ஏன் காத்திருந்தீங்க?” என்றவன், தன் அறை நோக்கிச் செல்ல திரும்பி விட்டு, நினைவு வந்தவனாய்.. தன் கையிலிருந்த லேப்டாப் பையின் சிறிய அறைக்குள் பத்திரப் படுத்தியிருந்த, லாக்கர் சாவியை அவரிடம் கொடுத்தான்.

 

“இது.. மஹாராஜா உங்களுக்கு கொடுத்த நகைகள்.. திரும்ப உங்ககிட்டேயே வந்துருச்சு… பாதுகாப்புக்காக பேங்க்ல இருக்கட்டும்னா சரி.. ஆனா சாவி உங்களிடமே இருக்கட்டும்…” எனவும்,

 

காஞ்சனையோ, வாங்குவதற்கு கையை கூட நீட்ட முயற்சிக்காதவராய்.. மகனை கூர்ந்து பார்த்தவர்..

 

“அப்பவும் சரி, இப்பவும் சரி.. எனக்கு இது பொருட்டில்லைன்னு சொன்னா நம்புவியா மோனே.. அதுதான் நீ பெரிய ராணிட்ட கொடுக்க போறேன்னு சொன்னதும் உடனே கொடுத்தேன்.”

தலை குனிந்து, ” உன் அப்பா மேல வைத்த காதல்.. தப்பு, சரி யோசிக்காத வயது.. அவரின் வாழ்வில் நுழைஞ்சுட்டேன்… இது நகைகள்… நீயே ஏதாவது செய்துக்கோ.. இதையும் கூட அவர் பேர்ல இருக்குற ட்ரஸ்ட்க்கு கொடுத்துடு.. எனக்கு ஒன்னு மட்டும் செய்வியா.. மோனே..?” எனவும்,

 

கேள்வியாய் அவரைப் பார்க்க, மெதுவான குரலில், “என்னை… மன்னித்து… அம்மானு ஒரு முறை கூப்பிடுவியா…” எனவும்,

 

அழுத்தமாய் பார்த்தவாறு இருந்தவனின் கண்களில் கசிவு… கண்களை அவரின் முகம் விட்டு திருப்பிக் கொண்டவன்.. பெருமூச்சுடன், “உங்களை மன்னிக்க வேண்டியது நானில்ல.. மன்னிப்புங்குறது.. அது ஒரு சாதாரண வார்த்தை இல்லை.. ஒருத்தரோட வாழ்வில், மனதில் வலி விளைவித்த தவறுக்கான அங்கீகாரம் கொடுக்கறதா அது ஆகிடாது.. ஆனா, மன்னிக்க வேண்டியவங்க மன்னிச்சுட்டாங்க.. நீங்க.. பின்னே… மனதை போட்டு குழப்பிக்காதீங்க.. நான்.. என்னை பற்றி, நான் பட்ட அவமானங்களை முக்கியமா நினைத்து இருந்தா.. துபைலயே இருந்திருப்பேன்.. நீங்க.. முக்கியம்னு நினைத்தால தான்.. இவ்வளவு போராட்டமும்.. உங்க மரியாதை காப்பாற்ற தான்.. இவ்வளவும்.. நான்.. இருக்கேன்.. உங்க மகனா..” என்று அழுத்திச் சொன்னவன்,

 

“போய் தூங்குங்க…” என்று விட்டு மெதுவாய், அறைக் கதவை திறக்கக் கை வைக்க,

 

அவன் இவ்வளவு தூரம் நின்று பேசியதில், அவனின் கண்களின் பளபளப்பில், தன் மீதான அன்பினை காலங்கள் கடந்தேனும் அறிந்தவராய், மகிழ்ந்து புன்னகையோடு,

“மோனே.. நாளை பேரனுக்கு புண்ணியாஜனம் பண்ணனும்.. ஏற்பாடுகள் ஆச்சோ?” என்றவர், அவன் ஆமென்பது போல தலையசைக்கவும், நிறைவுடன் திரும்பி தன் அறைக்குள் சென்றார்.

 

சாற்றியிருந்த கதவை சத்தமின்றி திறந்தவன், எதிர்புறமாக திரும்பி நாற்காலியில் அமர்ந்தவாறு பாலூட்டிக் கொண்டிருந்தவளைக் கண்டு, அரவமின்றி திரும்பி, தன் பகுதிக்குள் போக எத்தனிக்க…

 

“வரு..” எனும் மிக மிக மெல்லிய அழைப்பில் மலர்ந்து திரும்பி, அவளருகில் சென்றான்.

 

துயிலில் ஆழ்ந்து இருந்த மகனை நகர்த்தி, மடியில் கிடத்தி, அவள் உடைகளை சரி செய்வதைக் கண்டவன், மெதுவாக சென்று மலர்க் குவியலை அள்ளுபவன் போல மகனை எடுத்து, தோளில் அலுங்காமல் சாற்றிக் கொண்டான். வதனாவின் அன்னை இருந்த போதும்.. அவன் வீட்டிலிருக்கும் நேரங்களில்.. அவனும்.. குழந்தையைக் கவனிக்க தயங்கியதில்லை..

 

மகனின் முதுகில் மெதுவாக தட்டியவாறு தன்னவளைக் கண்டவன், அவளின் விழிகள் தன்னைத் துளைப்பது கண்டு புரியாமல் பார்த்து… மகன் விட்ட சிறு ஏப்பத்தை உணர்ந்து, மெதுவாய் நகர்ந்து அவனுக்கான தொட்டிலில் துயில் கலைக்காமல் இட்டான்.

 

தன்னையே பார்த்திருந்தவளைக் கண்டு, நெருங்கியவன், “ஏதாவது குடிக்கிறியா..?” என்றவாறு அங்கிருந்த மேஜையைப் பார்க்க, மறுப்பாய் தலையசைத்து, அவனின் கை பற்றி அருகில் இழுத்து கட்டிலில் அமர வைத்தாள்..

 

கண்களை உற்று நோக்கியவாறு, “அத்தை அவ்ளோ சொல்றாங்கள்ல… அம்மான்னு கூப்பிட்டா என்ன.. வரு..”

எனவும்,

 

சில நொடிகள் அமைதியாய் இருந்தவன், “பல வருஷமா பழக்கத்தில இல்லாதது… சட்டுனு வரலை.. கம்பெல் பண்ணாதே.. தானா வரும்.. நீ இதெல்லாம் தலைல போட்டு குழப்பாதே…” என்றவன், மணியைப் பார்த்து பன்னிரெண்டை நிமிட முள் நெருங்குவது கண்டு எழுந்து, தன் பையிலிருந்து இரு பெட்டிகளை எடுத்தவன், அவளிடம் நீட்டி, முறுவலுடன்,

 

“ஹேப்பி பர்த்டே வது..” எனவும்,

 

விழி விரித்து பார்த்தவள்.. சிறு விளக்கின் ஒளியிலும் ஜொலித்த, புடவையையும் நகையையும் பார்த்து வியந்தாள்..

 

“என்ன இது வித்யாசமா இருக்கு..”

 

“இது மாதிரியே அந்த பரம்பரை நகைகள் பெட்டில இருந்தது.. இது முழுக்க சொர்ண இழை வச்சு நெய்த பட்டுப்புடவை.. இது மூன் ஸ்டோன் அண்ட் டைமண்ட் செட்.. ஏனோ.. அது போலவே உனக்கு கொடுக்கனும்னு தோணுச்சு… ஆர்டர் பண்ணி அதே மாடல்ல செய்ய வச்சேன்..

 

நாளைக்கு புண்ணியாஜனம் ஃபங்க்ஷனுக்கு… இது போடு.. அப்புறம்.. உனக்கு எங்காவது வெளிய போகனும்னா சொல்லு போகலாம்… கோவில் கூட ஓகே.. நாளைக்கு முழுக்க உன் கூட தான்..

 

என்ட வது… என் வாழ்வுக்குள்ள நுழைஞ்ச நாள்… கொண்டாடுவோம்…” எனவும் சிரித்தவள்..

 

“ம்… ம்.. அப்போ… அன்னிக்கு நீங்க ஒரு ஹேப்பி பர்த்டே கூட சொல்லல… பக்கத்துல அமைதியா உக்கார்ந்து காபி குடிச்சுட்டு இருந்தீங்க.. திரும்பி கூட பார்க்காம… அதுக்கு உங்களுக்கு பனிஷ்மெண்ட் குடுக்கனும்.. முதல்ல..” என்றாள் மிரட்டல் தொனிக்கும் குரலில்..

 

கரம் பற்றி, அருகில் சென்றவன்,

“ஓ…. பனிஷ்மெண்ட்.. நீ …. எனக்கு… ” என்றவன்.. சிரித்து…

 

“எதானாலும்… யோசிச்சுக் கொடு.. அப்புறம்.. அது எனக்கு என்டர்டெயின்மெண்ட்.. உனக்கு பனிஷ்மெண்ட் ஆகிடப் போது….” என்றவனின்.. மின்னும்… பார்வை கண்டு… மிக லேட்டாக… அம்மா மற்றும் டாக்டர் அறிவுரை நினைவில் வர…. சற்றே முகம் சிவக்க… உதடு கடித்தவளைக் கண்டு.. மேலும் சத்தமின்றி நகைத்தவன், அருகில் நகர்ந்து வந்து, அவளின் வலது கன்னம் பற்றிக் குனிந்து, இடது கன்னத்தில் இதழொற்றி,

 

மிருதுவாக ஒலித்த குரலில், “அதான் லைஃப் டைம் ப்ரிஸன்மென்ட் கொடுத்து உன் காதலால கட்டிப் போட்டு வச்சுருக்கியே… உன்னை விட்டு அங்கே, இங்கே நகர முடியாம… நான் தவிக்கிறதே.. ஸ்வீட் பனிஷ்மெண்ட் தான்.. ஸோ புதுசா யோசிக்காம.. உடம்பைத் தேத்து… அடுத்து..” என்று அவளின் காதுகளில் அவன் சொன்னவை கேட்டு… அவளின் முகம் மேலும் சிவக்க.. நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவள்..

 

“போய் தூங்குங்க… உங்களை… அப்புறமா.. இரண்டு மாசம் கழிச்சு கவனிச்சுக்கிறேன்…” என சொல்லி உதட்டை சுழித்து அழகு காட்ட…

 

சிரித்து.. பெருமூச்சுடன், “கவனின்னு தான் சொல்றேன்… அதிக நாள் ஆனது போல இருக்கு. ” என்றவன்,

 

அவளின் வெட்கமும் தவிப்புமான முகம் கண்டு விளையாட்டை விடுத்து… நெற்றியில் இதழொற்றி… “நீயும்.. தூங்கு… குட்டி இன்னும் இரண்டு மணி நேரத்தில் முழிச்சுடுவான்.. திரும்ப நீ முழிக்கனும்..” என வாஞ்சையுடன் கூற..

 

“இன்னும் என்ன குட்டி குட்டினு..பேர் சொல்லுங்க..”

 

“பேர்தானே… இதோ… நம்ம இப்படி சந்தோஷமா இருக்கனும்னு எப்பவும் நினைக்கிற.. நம் குடும்பத்தினர் எல்லோரும்… நம்மட சிங்கக்குட்டிக்கு.. அழகா பெயர் தேர்ந்தெடுத்து கொடுப்பாங்க.. அதே வச்சுடலாம்.. சரி தன்னே…” என்றவன், அந்த அறையோடு ஒட்டியிருந்த தான் படுக்கும் அறைக்குள் சென்றான்.

 

********************

 

சில வருடங்களுக்குப் பின்…

 

 

“நான்தான் எடுத்தேன்…”

 

“இல்ல.. நான் தான் எடுத்தேன்..”

 

“கள்ளம் பறையுன்னு.”

 

“நீதான் கள்ளம் பறையுற…”

 

“வித்யுத்.. தத்தா.. என்ன ஆர்பாட்டம்..” என்றவாறு அங்கே வந்தாள் இராணி மதி வதனா தேவி.

 

அழகிய தாழம்பூவின் வர்ணத்தில் இருந்த மென்பட்டின் உடலில் ஆழ்ந்த ரோஜாவின் வண்ண பார்டரும் அதே வண்ணத்தில் ரவிக்கையும் அவளின் உடலை பாந்தமாய் தழுவியிருக்க… பட்டு ரோஜாக்கள் புடவையின் உடலெங்கும் சிதறி இருந்தன…

 

மாணிக்கக்கல் சிறு நகைகளும் அவற்றை மங்கச்செய்யும் முத்துப் புன்னகையும், அளவான அலங்காரமுமாய்… காலம் அவளின் பொலிவை, அழகைக் கூட்டியே இருந்தது..

 

ஏழுவயது வித்யுத் வர்மனும் விஜய சந்திர தத்தாவும் ஏதோ ஒன்றை வைத்து டக் ஆஃப் வார் நடத்திக்கொண்டு இருக்க…

 

அன்னையைக்கண்டதும் வித்யுத்,

“மா! பாட்டியோட ரூம் பக்கத்தில் இருக்கிற பெரிய ரூம்ல ஷெல்ப்ல மணி தாத்தா திங்க்ஸ் வைக்க திறந்தாங்க.. அதுல, இது இருந்துச்சு.. நான்தான் எடுத்தேன்… இவ பிடுங்கிட்டு எனக்கு தரமாட்டேங்குறா…” என,

 

“இல்லம்மா.. அது எடுத்துக்கலாமான்னு பாட்டிட்ட நான் தான் பெர்மிஷன் கேட்டுட்டு இருந்தேன்.. இவன் எடுத்துட்டு ஓடி வந்துட்டான்..” என சந்திர தத்தா குற்றப் பத்திரிகை வாசிக்க,

 

“என்ன அது… கொடுங்க.” என்று வாங்கிவள்..

 

சிறு வட்டு போன்று இருந்த அதனை உறை விட்டு வெளியே எடுத்துப் பார்த்து விட்டு உதற, உலோகமானது கருப்பு இரும்பு நாடாக்களென நீளமாய் விரிவது கண்டு இரு குழந்தைகளும் விழிகளை விரித்தனர்..

 

ஆச்சரியமாய் அதைப் பார்த்தவள்.. சொடுக்கவும்… பாம்பென நீண்டு.. சட்டென சுருண்ட அதைக் கண்டு.. ஆர்வம் மிக.. மீண்டும் அதை நீட்டும் முயற்சியில் சுழற்ற, இடமும் வலமுமாய பாய்ந்த அதன் சுருள்களில் இருந்த வந்த, உய்ங்.. உய்ங் எனும் ஒலி கேட்டு குழந்தைகள் கை தட்டி.. குதித்து விலகினாலும், ஆர்வம் மிக..

 

“அம்மா…நான்.. நான் பண்றேன்..”என வந்தாள் விஜய சந்திரதத்தா.

“நானும்..” என போட்டிக்கு வந்தான் வித்யுத் ..

 

ஷ் என்றவள்.. திடீரென தோன்றிய ஆர்வத்தில் பிள்ளைகளை தள்ளி நிறுத்தி விட்டு மீண்டும் வாளை இடவலமாய் சுழற்றி திரும்ப.. ஏதோ பழக்கப்பட்ட வித்தையாய் அவ் வாள் சுருள்கள் அவளை சுற்றி வந்து, காற்றையும் நெருங்கவொட்டாமல் செய்தன.

 

அவ்வாறு சுழற்றியவாறே நிமிர்ந்தவள், மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி.. தூணில் சாய்ந்தவாறு நின்று முகமும் இதழ்களும் கடுமையாக இருப்பது போன்ற பாவனையில் இருந்த ஜெயவர்மனை கண்டு… சுழன்ற கைகள் அந்தரத்தில் நிற்க, சுருள்களும் ஓய்ந்து நின்றன. சில நொடிகள் அப்படியே நின்றவள், சுதாரித்து, கையைக் கீழே இறக்கினாள்..

 

தந்தையை கண்ட குழந்தைகள், குதூகலித்து அவனருகில் ஓட… சிறு முறுவலுடன் இருவரையும் இரு கைகளில் அள்ளி எடுத்தவன்..

 

“என்ன பண்றீங்க.. மூனுபேரும்…” என்று வாய் கேட்க.. கண்கள் என்னவோ தனது மதியை மயக்கும் வதனம் கொண்ட அழகியின் மீது..

 

” அச்சன்.. அது.. ஒரு டிஸ்க் இருந்தது .. அம்மா.. தொட்டதும்.. அது ஏதோ வேற மாதிரி ஆகிடுச்சு.. அம்மா அது வச்சு விளாட்டு காட்டினாங்க… அது பாட்டி எனக்குத் தான் எடுத்துக்க பெர்மிஷன் கொடுத்தாங்க..” என தன் இரட்டை சகோதரனை முந்திக்கொண்டு பதிலளித்தாள்.. விஜய சந்திர தத்தா..

 

அவளின் வேகம் கண்டு சிரிப்புடன் ஜெயவர்மன்,

” ஓ… அது ஒரு வெப்பன்.. அதெல்லாம் வச்சு விளையாடக் கூடாது… கையில பட்டா காயமாகிடும்… நீங்க அங்கன யார் வந்திருக்கா பாருங்க.” எனக் காட்ட..

 

எட்டிப் பார்த்தவர்கள், அங்கே வந்து கொண்டு இருந்த மாமனைக் கண்டு… ஹே என்று ஆர்ப்பரித்தவாறு வழுக்கி இறங்கி, சிவேஷ்வரின் அருகில் செல்ல, பொங்கும் சிரிப்புடன் மருமகள் சந்திர தத்தாவை தூக்கிக் கொண்டான் அவன்.

 

வித்யுத் வர்மனோ அவனை விட ஒரு வயது மூத்த, மாமன் மகனான அதிரூப குமரனை பாய்ந்து அணைத்து இருந்தான்..

 

ஜெய வர்மன், மதி வதனாவின் தலை மகன்.. எட்டு வயது ஆருத்ரா வர்மனும் கடைக் குட்டியுமான ஐந்து வயது விதுர வர்மனும் இருபுறமும் பற்றியிருக்க, சிவேஷின் பின் வந்து கொண்டிருந்தான்.. சிவேஷ் மாலா தம்பதியினரின்… மூத்த மகனான விக்கி… விக்னேஸ்வர்.

 

விரிந்த கண்களை அவர்கள் மேல் பதித்தவாறே வாளைச் சுருட்டிய தன்னவளின் செய்கை கண்ட ஜெயவர்மனோ செல்ல முறைப்புடன்.. அவளை நெருங்கி, அவள் கையிலிருந்த பொருளை வாங்கி சுருட்டி உறையில் வைத்து.. ” அது வாள்.. டாய் இல்ல.. அதை வச்சு என்ன பண்ற நீ?” எனக் கடிய,

 

அவளோ அதைக் கண்டு கொள்ளாதவளாய், அவனின் விலாவில் இடித்து, “அண்ணே வராங்கனு சொல்லவேயில்ல.. நல்ல ஃப்ரெண்ட்ஸ்.. எல்லாம் கமுக்கமா செய்யறது…” என்றவள், சற்றே முன் சென்று… தன் தோளைத் தாண்டி வளர்ந்து இருந்த விக்கியின் கன்னம் கிள்ளியவள், “ விக்கி செல்லம்..” எனவும் பதின்பருவத் தொடக்கத்தில் இருந்த அவன், வெட்கமாய் முறுவலித்தான்.

 

அவனின் தலை கலைத்தவள், பின்னே வந்த அண்ணி மாலாவைக் கண்டு கண்கள் மின்ன.. “அண்ணி…” என்றவாறு கை கோர்த்துக் கொண்டாள்.

 

கண்களால் நலம் விசாரித்த தமையனைக் கண்டு விரிய புன்னகைத்தவள், “இரண்டு பேரும்… ஏதோ.. கூட்டு சேர்ந்து இருக்கீங்க போலையே.. சிங்கப்பூர் போக வேண்டிதிருக்கும்ன்னு சொன்னவர்.. அமைதியா இருக்கார்னு பார்த்தா.. உங்களை வரவழைச்சுருக்கார்… என்ன ப்ளான் போடுறீங்க ரெண்டுபேரும்.?” என இருவரையும் மாறி மாறி பார்த்தவாறு கேட்க..

 

சிவேஷ் சிரித்தவாறு, “இப்போ வெக்கேஷன் தானே மதி மா… அதனால பசங்களையும் கூட்டிட்டு எல்லோரும் போறோம்… நாங்க மால் தீவ்ஸ் போயிட்டு அங்கே வந்து ஜாயின் பண்ணிக்குறோம்… நீயும் ஜெய்யும் மீட்டிங் கான்பரன்ஸ் வோர்க் முடிச்சதும் நாங்க வந்து சேர்ந்துப்போம்…” எனவும்,

 

திரும்பி தன்னவனைப் பார்த்தவள், கண்களில் அவனை அறிந்து கொண்ட குறும்பு, “ஓ… நாங்க.. மட்டும்…. மீட்டிங்கிற்கு போகனுமா… நீங்க மால்தீவ்ஸ்.. நல்ல ப்ளான் தான்..” என

 

“ஆமா… அம்மா… நாங்க ஷிப்ல போறோம்.. தனி க்ரூஸ் ஏற்பாடு பண்ணிருக்காங்களாம் அச்சன்…” என்று ஆர்ப்பரித்தான் ஆருத்ரா வர்மன்.

 

“சுத்தி நாலு போட்ல செக்யூரிட்டீஸ்.. இருப்பாங்களே..”

 

“அவுங்களும் தான்..” என்றான் சிவேஷ் விரிந்த சிரிப்புடன்.

 

கணவனைப் பார்த்தவள், திரும்பி மகனைப் பார்த்து, “சரி நான் போய் உங்களுக்கு ட்ரஸ் பேக் பண்றேன்..”

 

“அதெல்லாம் அப்போவே பண்ணியாச்சு மா.. நீங்க உங்களுக்கும் டேடிக்கும் தான் பண்ணணும்..” என ஆருத்ரா வர்மன் சொல்லவும்,

 

கணவனை செல்லமாய் முறைத்தவள், “அதும் அவரே பண்ணி வச்சுருப்பாரா இருக்கும்.. சரி.. வாங்க.. டின்னர் சாப்பிடலாம்..” எனவும்… அனைவரும் சாப்பிடும் அறை நோக்கி நகர்ந்தனர்.

 

……………

 

பனி பொழியும் இரவில் , முழுமதியை ரசித்தவாறு தனது அறையினை ஒட்டிய உப்பரிகையில் நின்று கொண்டு இருந்த ஜெயவர்மன், கீழே குழந்தைகளின் ஆர்ப்பரிப்பு கேட்டு குனிந்து பார்க்க.. தோட்டத்தில்… சிவேஷ் பிள்ளைகள் விக்னேஷ்வர், அதிரூபன் உடன் ஜெய் மதியின் பிள்ளைகள் ஆருத்ரா வர்மன், விதுர வர்மன், வித்யுத் வர்மன் , விஜய சந்திர தத்தா தேவி இணைந்து… ஒளிரும் கலர் பந்துகளை எறிந்து விளையாடிக் கொண்டு இருந்தனர். அங்கே இருந்த அல்லிக் குளத்தின் அருகே இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த சிவேஷ், மாலா அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

ஏதோ பேசியவாறே சிவேஷின் தோளில் மாலா சாய்வது கண்டு சிறு முறுவலுடன் பார்வை விலக்கியவன், குழந்தைகளின் ஒற்றுமையும் சந்தோஷமுமான விளையாட்டைக் கண்டு…

 

‘ஆயிரம் வெற்றிகள் அடைந்தாலும் தம் மக்களின் சந்தோஷம் காண்பது போல மகிழ்வூட்டுவது ஏது!’ என்று எண்ணியவன் முகத்தில் நிறைந்த புன்னகை..

 

அப்போது சிறு குளிர்த் தென்றல் வந்து மனம் வருடிய உணர்வு தோன்ற… திரும்பிவனின் உணர்வு பொய்க்காமல் அறைக்குள் கதவு திறந்து நுழைந்து கொண்டு இருந்தாள் அவனின் மதிவதனா..

 

அவன் உப்பரிகையில் நிற்பது கண்டு அங்கே வந்தவள்… அவனின் முகத்தின் நிறைவுப் புன்னகை கண்டு முகம் மலர.. அவனருகில் வந்து, எட்டிப் பார்த்து குழந்தைகளின் குதூகலமான ஆட்டம் கண்டு சிரித்து,

 

“யாருக்கும் படுக்கற மாதிரி ஐடியா இல்லை.. போல..” என,

 

அவளின் முகத்தில் பார்வை பதித்து இருந்தவன்,

“எனக்கு இருக்கு..” என்ற படி.. அவளின் இடை வளைத்து தன் புறமாய் இழுத்தான்.

 

அவனின் கையை.. விலக்க முயன்றபடி,

“ஷ்… வெளில வச்சு என்ன இது வரு.. உள்ளே வாங்க…” என..

 

வழக்கம் போல அவனின் கரங்களை அவளால் இம்மியளவு கூட நகர்த்த இயலவில்லை…

 

“ம்.. கொஞ்ச நேரம் இங்கே இருந்துட்டு போகலாம் னு நினச்சேன்… அதற்குள்… அவசரமோ தேவி…” என்றவனின் கேள்வியும்.. காதுக்குள் மோதிய சூடான மூச்சும்.. அவளை சிலிர்க்க, சிவக்க வைக்க… அதை மறைத்தபடி,

 

“ச்சு.. வரு… நம்ம இன்ஸ்ட்டியூட் சோலார் எனர்ஜி கார் மாடல்ஸ் ஃபைனலைஸ் பண்ணி அனுப்பனும்.. வந்து அதை முதல்ல பாருங்க.. காலைல அவசரத்தில ஒண்ணும் முடியாது.” என்றாள்.

 

சில வருடங்களாக கட்டுமானத் துறை மட்டுமல்லாமல் ஆட்டோ மொபைல்ஸிலும் அவர்களின் நிறுவனம் கால் பதித்து, கவன ஈர்ப்பு வெற்றிகள் அடைந்து கொண்டிருக்கிறது… அதில் அவர்களின் புதிய முயற்சியே இந்த சூரிய மின்சக்தி கார்.

 

அவளை இறுகப் பற்றியிருந்தவன், அவளின் தோளில் முத்தமிட்டு,

“அது நீ இன்ட்ரெஸ்ட் எடுத்து பண்ணியது… நான் பார்க்க ஏதும் இருக்காது… அத விட முக்யமான ஜோலி… இதான்..” என்றவன்,

 

அவள் அசந்த பொழுதில் தன் கைகளில் அள்ளியிருந்தான்.

 

காலங்காலமாய் பல காதலர்களின் சாட்சியாய் இருக்கும் நிலவு… காலத்தையும் வென்று ஒளிரும் இவர்களின் காதலைக் கண்டு… தானும் மகிழ்வடைந்து, அதிகரித்த தண்ணொளியுடன் வானவீதியில் நகர்ந்து கொண்டிருந்தது..

 

******************************

முற்றும்.

 

(வரு,வது.. சிவேஷ், மாலா குழந்தைகளின் பெயர்கள் வாசகர்களால் முன்மொழியப் பட்டு, தெரிவு செய்யப்பட்டது..) படித்து, மகிழ்ந்து… என்னையும் மகிழ்வித்த வாசகத் தோழமைகளுக்கு மனமார்ந்த நன்றி..

 

— என்றும் அன்புடன்,

தாமரை..

(Contact thamarainovels@gmail.com)

 

 

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!