அனுமதி 23
****************
அன்று…
படைக் குடிலை அடைந்த கொடை நாட்டின் இளவல் இராஜ ஜெய சிம்மவர்மன் கண்டது… படை வீரர்களின் பரபரப்பையே..
சற்று முன் மிக அழகாக காட்சியளித்த தடாகமானது நிலை குலைந்து போயிருந்தது. தடாகத்தில் இருந்த மலர்களும் இலைகளும் பெரும் புயலில் சிக்கியவை போல அலமலந்து மூழ்கிக் கிடக்க..
அதன் கரையில் இளவரசியின் தேரில் பூட்டப் பெற்று இருந்த இரு புரவிகளின் உயிரற்ற உடல்களும், இளவரசன் ஆனை மலை மேல் இளவரசியைக் காக்க விரைந்து வந்த போது உதவியிருந்த போர்ப் புரவியானது, அரை உயிராய் கிடப்பதும் கண்களில் பட்டது. அதற்கு வேங்கையர் மேற்பார்வையில் மருத்துவம் நடந்து கொண்டிருந்தது.
புரவிகளின் குளம்பொலி ஓசை கேட்டு, விரைந்து வந்தார் மருதத்தின் மேல் திசைக் காவல் நாயகரும், சோலையூரின் தலையாரியுமான வேங்கையர்..
இளவவலுடன் ஒரே புரவியில் வந்து இறங்கிய தங்களின் இளவரசியைக் கண்டு திகைத்தாலும், அவளின் கைகளில் இருந்த கட்டைக் கண்டு பதறி, முன்னிலும் வேகமாக சந்திராம்பிகையின் அருகில் சென்றார்.
அவருடன் பேசியவாறு வந்த இளவரசியின் விழிகளோ உயிரற்ற சடலங்களாய் இருந்த தன் அன்பிற்குரிய புரவிகளின் மீது இருந்தது..
இறங்கிய வேகத்தில் கொடை நாட்டின் இளவரசன் தன் புரவி அருகில் விரைந்து சென்றிருந்தான்.
சோலையூரின் மருத்துவர் அதன் காயங்களுக்கு மருந்திட்டுக் கட்டிக் கொண்டு இருக்க முன்னங்கால்கள் இரண்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இந்நிலையில் இருக்கும் புரவி உயிர் பிழைப்பது கடினம்.
தங்களின் இளவலின் இறுகிய தோற்றம் கண்ட வீரன் ஒருவன் முன்வந்து,
“ இளவரசியின் தேர் மீது விழுந்ததால் அதன் கால்கள் முறிந்துவிட்டன.. எனினும் கயிறு கட்டி வெளியே இழுத்து விட்டோம். மருத இளவரசியாரின் குதிரைகள் தான்.. தேருடன் பிணைக்கப்பட்டிருந்த காரணத்தால் உள்ளிழுக்கப்பட்டு விட்டன. தடாகத்தில் நிறைந்துள்ள தண்டுகளும் கொடிகளும் அவற்றின் கால்களில் சுற்றி, மீட்க சென்றவர்களும் மாட்டிக் கொண்டு, பின் வாள் கொண்டு அறுத்து.. வேழங்கள் கொண்டு இழுத்துக் காப்பாற்றினோம். எனினும் சற்று முன்பு துடிப்படங்கி விட்டன. ஏதோ கொடிய நஞ்சின் தாக்கம் போல் தெரிகிறது என்று மருத்துவர் சொன்னார் இளவலே..” எனவும்,
ஆத்திரமும் துன்பமும் ஒருங்கே அழுத்த, சிவந்த கண்களுடன் தன் புரவியைப் பார்த்தான். தன் கட்டளைக்கு கட்டுப்பட்டு மலை மீதிருந்து அது பாய்ந்ததால் தான், இளவரசியை தக்க சமயத்தில் காக்க முடிந்தது.இல்லையெனில்… நினைத்த போதே உள்ளம் துடிதுடிக்க.. திரும்பி இளவரசி சந்திர வதனாம்பிகையைப் பார்த்தான்.
அவளும் அவனின் புரவி அருகில் தான் இருந்தாள்.. தன் மென் கரங்களால் அதன் கழுத்தை வருடிக் கொடுத்தவாறு.. எதற்கும் கலங்காத அவளின் கண்களின் ஓரத்தில் ஒரு துளி நீர் திரண்டு இருந்தது. மருத்துவரிடம்,
“எப்படியாவது இதன் உயிரைக் காப்பாற்றுங்கள்..” என்றாள்.
“இனி அதனால் ஓட இயலாது இளவரசி. அக்குதிரை இருந்தென்ன..”என்று சொல்ல ஆரம்பித்த அருகிலிருந்த வீரன்.. இளவரசியின் நேரிட்ட விழி வீச்சில் வாயடைத்துப் போனான்.
அப்போது மூத்த வீரர் ஒருவர் விரைந்து வந்தார். இளவல் சேனையின் வழிகாட்டியான, பெரும்புலிவாணர் எனும் பெயர் கொண்ட அவர்.. சிம்மவர்மனின் ஆசானும் கூட.. வந்த வேகத்தில்,
“இளவலே.. என்ன காரியம் செய்யத் துணிந்தீர்.. ஏதேனும் தவறாக நடந்திருந்தால்.. கொடை நாட்டின் எதிர் காலம் என்ன ஆகும்? மாமன்னரிடம் நாங்கள் என்ன மறு மொழி உரைப்பது?” என சற்றே கோபத்துடன் மொழிய..
“தங்கள் மாணவன் தவறு செய்வானா ஆசானே..? கொடைநாட்டின் எதிர்காலம் காக்கவே.. அங்ஙனம் துணிந்தேன்.” என்றவனின் பார்வை சந்திராம்பிகையை ஒரு முறை தொட்டு மீள, ஆசானின் முகத்தில் தன் பார்வையை அழுந்தப் பதித்து, “அனைவரையும் அமைதிப் படுத்துங்கள். எற்பாடு பொழுது முடிந்து மாலை ஆரம்பமாகிவிட்டது. உணவு ஏற்பாடுகள், ஒளியேற்றம், பூச்சிகள், விலங்குகள் அண்டாமல் இருக்க வேலியமைத்தல் போன்ற பணிகளை செய்ய கவனப்படுத்த வேண்டும்.” என்று எழுந்தவன் வேங்கையரை ஒரு பார்வை பார்த்து விட்டு நடக்க, புரிந்தவராய் அவரும் அவனோடு நடந்தார்.
மெதுவான குரலில், “இளவரசியார் மலைக்குடி கிளர்ச்சியாளர்களை மருதப் படையில் சேரச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களை உங்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பயிற்சிக்கு உட்படுத்துங்கள். அவர்கள் மீது ஒரு பார்வை இருக்கட்டும்.. மருதகோட்டைக்குள்ளோ.. இளவரசி அருகிலோ அவர்கள் நெருங்காமல் இருப்பது நலம்..” என்றவன் அவரை நேராகப் பார்த்து, “தாங்கள் அறியாததல்ல.”எனவும்..
வேங்கையர் சிறு பெருமிதத்துடன், “இளவரசியாரும் அதை அறிவார்கள் இளவலே. சற்று முன்பு அவர்களும் இதையே தான் வேறு வார்த்தைகளில் கூறினார்கள்.. தெற்கு எல்லைக் காவலர் படையில் சேர்க்கச் சொன்னார்கள்.
அவர்களின் தலைவனையும் மருத்துவம் செய்வித்து, போர் முடியும் வரை, இங்கேயே காவலில் வைத்திருக்க சொன்னார்கள்..” எனவும், திரும்பி இளவரசியைப் பார்க்க, அவளோ புரவியின் கழுத்தை தடவியவாறு இருந்தாள்.
அதைக் கண்டவனின் இதழ்களின் கோடியில் ஒரு வருத்த முறுவல்.. பெருமூச்சுடன், ‘இப்புரவி பெற்ற பேறு கூட புரவலன் யான் பெறவில்லை..’ என மெல்லிய குரலில் அவன் மனம் முணுமுணுக்க, அக்கணம் சந்திரவதனாம்பிகை விழிகள் உயர்ந்து சிம்மவர்மனை நோக்கின.
பின் அவ்விடம் விட்டு எழுந்து வேங்கையரின் அருகில் வந்தவள், “ நான் விடை பெற்றுக் கொள்கிறேன் வேங்கையரே! கொடை நாட்டு சேனையோடு, இங்கு பயிற்சி பெற்ற வீரர்களை இணைத்து அனுப்பி விடுங்கள். தாங்கள் எல்லைக் காவலை வலிமை படுத்துவதோடு ஆனைமலைக் குடியினருக்கு ஆவன செய்து, நெறிப் படுத்துங்கள். தேவையான பொருளுதவி நாளையே கோட்டையிலிருந்து வந்து சேரும்.” என்றவள் கரம் குவிக்க,
வேங்கையர், “இன்று ஒருநாள் தங்கி விட்டு செல்லலாமே.. இங்கு மருத்துவரிடம் ஒரு முறை பரிசோதித்து மருந்து வைத்துக் கட்டிக் கொள்.. குழந்தாய்.” எனவும் வருத்த முறுவலுடன், “தேவையில்லை வேங்கையரே.. எனக்கு ஒன்றும் இல்லை. அப்புரவியின் உயிரைக் காக்கும் முயற்சியை நிறுத்த வேண்டாம். ”என்று விட்டு..
சிம்மனை நோக்கி, “இளவலே… இன்னும் நான்கு நாட்களில் இந்திர விழா நிறைவுறும்.. மருதத்தின் நால்வகைப் படைகளும் வட எல்லைக்கு நகர்த்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றன. சாளுவத்தின் மன்னரிடம் மருதத்தின் நட்பு நிலையை அறிவிக்கும் செய்தி மடல் அனுப்பியதற்கு, அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார். எனவே இன்றிலிருந்து ஐந்தாம் நாள் எனது தலைமையிலான படை சாளுவ எல்லையில் முகாமிட்டிருக்கும் களவப் படையை தாக்கப் போகிறோம். தங்களின் நிலைப்பாடு பற்றி தகவல் அனுப்புங்கள்.” என்றவள், கரம் குவித்து, “இந்திர விழா நிறைவு நாளன்று மருதபுரி வந்தால் நான்… மன்னர் மிகவும் மகிழ்வார்.”எனவும்,
பதிலாக கரம் குவித்தவனின் பார்வை அவள் முகத்தில் நிலைக்க, மறுமொழி ஏதும் கூறவில்லை.
இடையிட்ட வேங்கையர்,
“பல்லாக்கு தயாராக இருக்கிறது குழந்தாய்..” என,
“நான் பின் மாலைப் பொழுதிற்குள் கோட்டையை அடைய வேண்டும். அதற்கு புரவிப் பயணம் தான் சரியாக இருக்கும்.” எனவும்,
“வேங்கையரே….” எனும் சிம்மவர்மனின் உறுமலில் திடுக்கிட்டு திரும்பினார் அவர்.
“உங்களின் குழந்தையை ஒன்று.. வேறு தேர், தேரோட்டியுடன் செல்லச் சொல்லுங்கள். அல்லது பல்லக்கில் பயணம் செய்யச் சொல்லுங்கள் இல்லையென்றால்…” என்றவனின் குரலை… கோபத்தை நிறுத்தியது, இளவரசியின் அமைதியான குரலும் அவனின் முகத்தில் நிலைத்த பார்வையும்..
“ அப்படியே ஆகட்டும். தேரிலேயே செல்கிறேன். வேங்கையரே… ஏற்பாடு செய்யுங்கள்.” என்றவள், அவர் சிறு வியப்புடன் இருவரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு நகர்ந்ததும்.. மெதுவாக தன் கைக்கட்டை அகற்றினாள்.
இளவலின் முன்பு கரங்களை நீட்டி, “உண்மையாகவே, சிறிய காயங்கள் தாம்.. வலியும் இல்லை… தங்களின் நண்பரைப் போலவே தாங்களும்.. ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்…” எனவும் புரியாமல் பார்த்தவன், விழிகளை அவளின் உள்ளங்கைகளின் மீது ஓட்டினான். கண்களில் நிம்மதி படர்ந்தாலும்.. உறுதியான குரலில்,
“இரு நாட்களுக்கு ஓய்வு கொடு வதனா.. இன்றிலிருந்து இரண்டாம் நாள் கிளம்பி உறையலூர் சென்று அங்கு படைகளை நிறுத்தி விடுகிறேன். இந்திர விழா நிறைவு நாளன்றுக்கு முன் தினம், மருதபுரி வருகிறேன். எனக்கும் மருத புரியின் மன்னரிடமும்… மாசேனைநாயகர் மருதநாயத்திடமும்.. ஒரு வேண்டுகோள் இருக்கிறது..” என்றவனின் பார்வை அவளின் முகத்தில் நிலைத்து, பார்வையில் எதையோ தேடியது.
அவனின் பார்வை தாங்கி விழிகள் கலக்க நின்றவள், தேர்ச் சக்கரங்களின் ஓசை கேட்டு திரும்பினாள். மீண்டும் சிம்மனை பார்த்தவள் சற்று தயங்கி, “ தங்கள்… கரங்களில், உடலில் காயம்.. வலி ஏதும் இல்லையே?” என வினவ,
‘இல்லை’ என்பதாய் தலையசைத்தவன்… பின் ‘ஆம்’ என்பது போல் தலை அசைக்க..
குழப்பமாய் பார்த்தவளிடம்.. பதிலாக தன் வலது கரத்தினை, இடப் பக்க மார்பில் வைத்து, அவளை ஆழ்ந்து பார்க்க, விழிகளைத் தாழ்த்தி விலக்கிக் கொண்டவள்…
சிறு மூச்சுடன்,
“விடை பெறுகிறேன் இளவரசே…” எனவும், சம்மதமாய் தலையசைத்தவன், நகர முயன்ற அவளின் கரங்களைப் பற்றியதும் அதிர்ந்தாள்.
அவள் கையிலிருந்த துணிகளை திரும்பவும் கட்டி விட்டவன்,
“மருதபுரி சென்றபின் அவிழ்த்து விடு.” என்றவன், கரங்களை விட மனமில்லாதவனாய் பற்றிய படியே இருக்க, வேங்கையர் தொலைவில் வருவது கண்டு, மனமின்றி மெதுவாக விலக்கிக் கொண்டான்.
ரதமேறி, வேங்கையரிடம் விடை பெற்றுச் செல்லும் அவளையே பார்த்தவன்,
‘உயிர் வாதை தரும் இவ்வுணர்வைப் போய் அனைவரும் சுகமென்று பிதற்றுகிறார்களே!!’ என்று பெருமூச்சு விட்டவனாய் தன் தங்கும் குடில் நோக்கி நடந்தான்.
*****************************
மூன்று நாழிகைப் பொழுதில் வரவேற்பு பறையொலி முழக்கத்துடன் மருதபுரிக் கோட்டைக்குள் நுழைந்தது, மெய்க்காவலர்களின் புடைசூழ, இளவரசி இருந்த தேர்.
வாயிலில் நின்றிருந்த மன்னர் பெருமான் பெருவளத்தான் நன்மாறன், விரைந்து வந்து தன் பெண்ணரசியை விழிகளால் வருடி, மனம் நிம்மதியடைய,
கைகளில் இருந்த கட்டுக்கள் கண்டு கலங்கிய கண்களால் வரவேற்றார்.
“என்னம்மா.. ஒவ்வொரு முறையும் தென்திசை சென்றால், காயம் செய்து கொண்டு வருகிறாய்.. நமது குடும்பத்திற்கே, அவ்விடம் இராசி இல்லை போலும்..” என வருத்தத்துடன் உரைக்க,
நிமிர்ந்து நோக்கி, “இல்லை தந்தையே.. வருந்த வேண்டாம். இது நீங்கள் அஞ்சும் அளவு காயமே அல்ல. மேலும் இம்முறை… நான் சென்ற காரியம் வெற்றியே. என் தந்தை நீதி வழுவவில்லை என்ற செய்தியை உரக்க அறிவித்து வந்திருக்கிறேன் வேந்தே.
மலைக்குடி மக்களின் ஆதரவை பெற்று, நெடுநாள் உள்நாட்டுப் பகையையும் முடித்து வந்திருக்கிறேன்…” எனவும்,
பெருமிதத்துடன் அவளின் தலையை வருடியவர், “ உன் உயிருக்கு… ஏதேனும் என்றால் அதன் பின் அவற்றால் என்ன நன்மை மகளே..” என வருத்தத்துடன் கூற..
தீர்க்கமான குரலில், “ அறம் காப்பவருக்கு அதுவே காப்பாகும்.” என்றவள் பெருமிதக் குரலில், “ தக்க தருணத்தில் அதுவே மனித உருவெடுத்து வந்து காக்கும்… காத்தது… தந்தையே..” எனவும், புரியாமல் நோக்கியவரிடம், நடந்ததை விவரித்தாள் இளவரசி சந்திராம்பிகை.
“கொடை நாட்டின் இளவலா..! அவரா தன் உயிரை பணயம் வைத்து மருதத்தின் உயிரைக் காத்தது…” என வியந்து கேட்கும் நேரத்தில் விரைந்து வந்தனர்.. மா சேனை நாயகர் மருதநாயகமும் அமைச்சர் ஆலவாய் பெருமொழியாரும்..
அதற்குள் மருதபுரி முழுவதும்.. இளவரசியின் பகை முடித்த அறிவும் வீரமும் அவளை காத்த கொடைநாட்டின் இளவலின் தீரமும் பெருமையும்
பரவியிருந்தன.
வந்தவர்கள் தம் இளவரசியின் நலம் விசாரித்து நிம்மதி அடைய, அமைச்சரை அருகில் அழைத்த மன்னர் மெல்லிய குரலில், “நாளை நமது மதிப்பிற்குரிய கம்பளத்தாரை, தலைமை ஜோதிட வல்லுனரை வரவழையுங்கள்.. என் மனது ஏனோ தவிக்கிறது..”என,
“அப்படியே மன்னா..” என்றார் பெருமொழியார்..
********************
அரையாடைகளில் இருந்த இரு அழகிய பெண்களின் நடுவே இருந்து அழைப்பு மணியோசை கேட்டு எழுந்தவன்… சேடிப் பெண் கொண்டு வந்து கொடுத்த தகவலை வாங்கினான். பார்த்தவனின் கண்கள் சிவந்திருந்தது உள்ளே சென்றிருந்த பானத்தினாலா.. களியாட்டத்தினாலா..
எழுந்து அமர்ந்தவன், எதிரே இருந்த ஓவியத்தை உற்று நோக்கி, சட்டென்று இடையிலிருந்த சூரிக்கத்தியை எடுத்து எறிய… ஓவியப் பாவையின் நெற்றியில் குத்திட்டு நின்றது அது..
அதைப் பார்த்து இடி போல் சிரித்தவனின் அருகிலிருந்த பெண்கள் அஞ்சி, தம் ஆடைகளால் மானம் மறைத்து விலக முயற்சிக்க, தடுத்து… ஓவியத்தை பார்த்தவாறு அவர்களை தன்னை நோக்கி இழுத்தவன் கண்களில் இருந்தது…
காமமா…
குரோதமா…
*************************
இன்று..
இரவீந்திரா டவர்ஸ் முக்கிய அலுவலகமான ஆதித் க்ரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்..
தனது அறையில் கோப்புக்களில் மூழ்கியிருந்த ஆதித் வர்மனின் முன் வந்து அமர்ந்தார் தந்தையான இராஜா இரவீந்திர வர்மன்.
“ஆதித்.. சிங்கப்பூர்க்கு அனுப்பியிருந்த கன்ஸைன்மெண்ட்ஸ்.. கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் ஆகிடுச்சு.. இந்த முறை மட்டும் தான்.. இனி உதவி பண்ண மாட்டேன்னு மினிஸ்டர் சொல்லிட்டார்..” எனவும்,
வழக்கமான புன்னகையுடன், “இதே தான் போன முறையும் சொன்னார்.. லீவ் இட். அவர எங்க அடிக்கனும் னு எனக்கு தெரியும்.” என்றவன்.. தன்கையில் இருந்த முத்திரைத் தாள் பிரதிகளை அவர் முன் தூக்கிப் போட்டான்.
“தாத்தா மஹாராஜா இராஜசேகரவர்மன்.. ம்.. ம் வெரி ஸ்மார்ட். அரண்மனைய எவ்ளோ சாமர்த்தியமா அவன் பேருக்கு எழுதிருக்கார்! யாரோ பங்காளிட்ட இருந்து விலை கொடுத்து வாங்கிய மாதிரி.. அடுத்து அவனுக்கு மாற்றி.. கிட்டத்தட்ட ஏழு வருஷமா ப்ளான் பண்ணி பண்ணிருக்கார்..
அவனும்.. இவ்வளவு நாளா சீண்டினா கூட சட்டை பண்ணாம போயிட்டு இருந்தவன்.. இப்போ பரம்பரை சொத்துக்களிலேயும் தன்னால உரிமை கோர முடியும்னு அனுப்பிருக்கான்.. அட்லாஸ்ட்.. த கேட் கம்ஸ் அவுட்.” என்றான் ஏளன முறுவலுடன்.
“ஆதித்.. அவனை அப்படி செய்ய வச்சது நீதான். அவன் அம்மாவை குறி வச்ச.. அரண்மனைய கைப்பற்ற நினைச்ச.. அவன் விரும்புற பொண்ண கொல்ல நினைச்ச. அதற்கு அப்புறம் தான் அவன் நம்ம ப்ராஜெக்ட்ஸ் கைப்பற்ற ஆரம்பிச்சான்.. பதிலுக்கு ஸ்மார்ட் ப்ளே பண்ண ஆரம்பிச்சான். ”
“ம்ஹூம்.. அவனை பற்றி உங்களுக்கு தெரியல.. அவன் மஹாராஜா இறந்ததும் துபய்ல இருந்து வந்ததுமே.. என் சிம்மாசனத்திற்கு கீழே பள்ளம் தோண்ட ஆரம்பிச்சுட்டான். இரண்டு வருஷத்துல.. அவனுக்குன்னு.. ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டான்.. இது நாள் வரை பதுங்கியிருந்த புலி பாய ஆரம்பிச்சுருச்சு.. பரம்பரை சொத்துலையே உரிமை கேட்கிறான்.. இப்போ.. தெரியுமா உங்களுக்கு?” என்றான் கோணலான புன்னகையுடன்..
“ அதற்கு நீ கொடுத்த ப்ரஷர் தான் காரணம்.. அவன் அம்மா நடத்தைய.. அவன் பிறப்பை தவறானதா காட்டற பத்திரங்களில் கையெழுத்துப் போட சொல்லி மிரட்டின. எந்த மானமுள்ள மகன் அதை செய்வான்? அதற்கு அப்புறம் தான் அவன் இங்கேயே இருக்குற முடிவுக்கு வந்தான்.. ஆனாலும்.. அவன் இப்போ இந்த நிமிஷம் வரை.. மஹாராஜா கொடுத்த சொத்துக்களையே உரிமை கோரலை.. பரம்பரை சொத்தை.. அனுபவிக்கவும் இல்லை. தெரியுமா உனக்கு?”
“அது நேத்து வரை கதை….இன்று அவன் இராஜ வாரிசுன்னு பிரகடனம் பண்ணாத குறையா.. அரண்மனையில வச்சு கல்யாண வரவேற்பு நடத்திட்டான். நம்மகிட்ட கூழைக் கும்பிடு போடுற பலர்.. பல வருஷங்களா தொழில் செய்யுற பலரும் கூட அங்கே போயிருக்காங்க.. இன்க்ளூடிங் யுவர் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ். ”, என்ற மகனை நிதானமாக ஏறிட்டவர்,
“வரவேற்பை அங்கே நடத்தியது.. ப்ச்…. இதிலெல்லாம் ஏன் கவனம் செலுத்துற ஆதித்? சீனியர் லாயரை இந்த உளவு வேலை பார்க்கத்தான் அங்கே அனுப்பினியா.. ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோ.. தொழில் செய்யறவனும்.. அரசியல்வாதியும்.. எல்லோரும் தான் வேணும்னு நினைப்பான். ஒரு துரும்ப எடுத்துப் போட்டாலும்.. அவனுக்கு… அதுனால் என்ன ஆதாயம்னு தான் பார்க்க நினைப்பான்.. இது தான் இயல்பு… இதையெல்லாம் தள்ளிட்டு.. உன் வேலைய சரியா பாரு..”
“என் வேலைய தான் பார்க்கறேன்.. எனக்கு எதிரியாவோ.. இணையாவோ யாரும் இருக்கக் கூடாது. அவங்களை பூண்டோட ஒழிப்பேன். அதற்கான வேலை சரியா செய்றேன்.” எனவும்,
எரிச்சல் மிக.. இரவீந்திரர்,
“மூவாயிரம் கோடி கவர்ன்மென்ட் ப்ராஜக்ட்.. தேன்மலை.. எக்கோ பார்க்… ஈக்கோ ஃபரண்ட்லி பவர் ப்ளாண்ட் அமைக்குறத.. RJV கன்ஸ்ட்ரக்ஷன்ஸுக்கு தூக்கி கொடுத்துட்டாங்க. முப்பது வருஷமா நான் கட்டி காப்பாத்திட்டு வந்த பேரை அவன் இரண்டே வருஷத்தில் எடுத்துட்டான். அவன்.. அவனின் பாதைல போகட்டும். நீ.. உனக்கு கிடைச்சத.. உனக்கான பாதையப் பாரு.. முன்னேறு.. அதன் மூலமா அவனை ஜெயிச்சுக் காட்டு. அது ஆரோக்கியமான வெற்றி ஆதித்.. அவன் வழில குறுக்கிட்டு.. இடறி விழச் செய்துன்னு நீ பண்ற வேலைகள்.. கடைசியில்.. அவனுக்குத் தான் சாதகமா முடியுது..” என,
“ஓட விட்டு.. வேட்டையாடிய மானுக்குத் தான் சுவை அதிகம்.. எதிரி இருந்தாத் தான் என் ஆட்டம் சுவாரஸ்யமா இருக்கும். அவன ஜெயிக்க விட்டு தான் மொத்தமா முடிக்கப் போறேன். அந்த அரண்மனை கட்டிய ராஜாவுக்கு நேர்ந்தது தான்.. அதுல வாழத் தொடங்கி இருக்குற அவனுக்கும்.. காத்திருந்து பாருங்க..” என்றவனின் சிரிப்பு அழகாக.. இருந்தலும்.. கண்களில் தெரிந்த கொடூரம் கண்டு.. இராஜா இரவீந்திரர் உறைந்தே போனார்.
***********
மூடியிருந்த கண்களுக்குள் ஆரஞ்சு ஒளி பளீரென்று வந்து தாக்கியதில், கண்களைத் திறந்த இராஜா ஜெயவர்மனுக்கு.. சில நொடிகள் ஒன்றுமே புரியவில்லை… ஏதோ இனிய கனவு உலகில் இருந்து வெளி வந்தது போல் தோன்ற, எழுந்து அமர்ந்தான்.
அவனின் நிலையும், மஞ்சத்தின் நிலையும், எதுவும் கனவல்ல.. நனவு தான் என்று கட்டியம் கூற, கடின இதழ்களில் அரிதாய் பூக்கும் புன்னகை மலர்ந்தது.
அப்போது மிக மெலிதாய் கேட்ட, கதவு திறக்கும் ஒலியில் திரும்பிப் பார்த்தவன்.. இளமஞ்சள் உடலும் சிவப்பு பார்டரும் வைத்த சேலையில், தலையில் கூந்தலை சுற்றிய துண்டுடன் வந்த பெண்ணழகைக் கண்டு கண்கள் மின்ன, விழிகளை மலர்த்திப் பார்த்தான்.
அந்தி சூரியனையே… ஆடையென அணிந்த நிலவென தண்ணொளியில் மின்னும் முகமும் உடலுமாய் பட்டாடையில் வந்தவள், அவனின் பார்வை கண்டு, நெற்றியில் இட்டிருந்த குங்குமத்தின் தீற்றலாய் கன்னங்களில் செம்மை பரவ அருகில் வந்து, கையிலிருந்த கோப்பையை நீட்டினாள்..
எழுந்து கட்டிலின் அலங்கார தலைப்பகுதி வளைவில் சாய்ந்து அமர்ந்தவன் கன்னத்தில் கை வைத்து அவளையே பார்க்கவும்..
‘என்ன பார்வை இது.. கண்களால் சுருட்டி தனை நோக்கி இழுக்கும் பார்வை..’ என வெட்கியவள் முகம் கனிந்து சிவக்க, ஏதோ எதிர்பார்ப்பில் கண்கள் மயங்க, நெருங்கத் துணிவற்று அங்கேயே நிற்க, அவளை வெட்கத்திலிருந்து வெளியே இழுப்பவனாய்,
“பெட்காஃபி குடிக்கிற பழக்கம் இல்லையே.. வது..” என்றான் இயல்பாக பேசுவது போல..
“ம் தெரியும்.. வெஜ் க்ளியர் சூப் தான்.. அத்தை.. இதான் குடிப்பீங்கன்னு சொன்னாங்க.” எனவும் பார்வை தீவிரமடைய,
இரு நாட்களுக்கு முன்பு குடித்த சூப் நினைவில்.. முகம் விகசிக்க, அன்று தோன்றியதை, இன்று செய்ய விழைந்தவனாய், எழுந்து அவளருகில் சென்றவன்,
ஒரு கையால் கோப்பையை வாங்கி அருகிலிருந்த சிறு மேஜையில் வைத்து விட்டு, மறு கையால் அவளின் கை பற்றி இழுத்து மடி மேல் அமர்த்திக் கொண்டான்.
பெண்ணவளின் இயற்கை மணத்துடன், கூந்தலில் இருந்த நறுமலரின் மணமும் ஆணின் மனதை மயக்க, கழுத்து வளைவில் இதழ் பதித்தவன், கன்னம் தொட்டு… இதழமுதம் அருந்த முற்பட, பின்னோக்கி நகர்ந்து, இடையில் கையதனை அணையாக்கி தடுத்தவள்..
“ஷ்.. வரு. ப்ளீஸ்.. எழுந்து ப்ரஷ் பண்ணிட்டு சூப் குடிங்க. குளிச்சுட்டு வாங்க. கீழே எல்லோரும் காத்திருக்காங்க. கோவில் போனும்னு அப்பா சொன்னாங்க..” எனவும்..
“கோவிலா.. ம்.. நான் கோவில் போறதில்ல.. வது..” என்றவன்.. தன் வேலையைத் தொடர்ந்தவனாய், அவளின் கன்னத்தில் இதழ் பதிக்க, அருகினில் இருந்த அழகு முகம் பற்றி, நெற்றியில் இதழொற்றியவள்.. அவனின் கருத்தடர்ந்த சிகையை அளந்து, விலக்கி நெற்றியில் மறைந்து கிடந்த வடுவை வருடினாள்.
வருடிய அவளின் கரம் பற்றிக் கொண்டவன்,
“ஐந்து நாள் ஜோலி காத்திருக்கு வது.. அவர்கள் எல்லோரும் போகட்டும்..நீ கொறச்சு தினம் வெளியே போகாமல் இருக்கறது நல்லது…” குரலில் குறும்பு சேர, “அப்புறம்.. அதை விட முக்ய ஜோலி வீட்டில் இருக்கு.. பாடமெல்லாம் வேற பாதில இருக்கு..” என்றவன், கண்கள் சுருக்கி முறுவலிக்க, கன்னத்தில் ஆழமாய் விழுந்த குழியைக் கண்டவள், மலர்ந்த அவன் முகத்தைக் மகிழ்வோடு கண்டு, தனை மயக்கும் அக்குழிக்கு ஒரு இதழொற்றலை சமர்ப்பித்தாள்.
“அப்….ப்பா.. இவ்ளோ அழகா இருக்கும்னு தான் இவ்ளோ நாள் சிரிக்காமலே இருந்தீங்களா….” என்றவளின் ரசிப்பு கண்டு.. சிரிப்புடன் நெற்றியில் முட்டியவன்..
“ சிரிப்பா.. சிரிப்பு, சந்தோஷம், நேசம், பாசம், ஆசைன்னு… எதுவும் தெரியாமலே தான் இருந்தேன் வதூ.. நான் தொலைத்த எல்லாமே இப்போ உன் உருவில திரும்ப கிடைத்த மாதிரி இருக்கு .. நான் மிகவும் வெறுத்த இந்த அரண்மனை கூட, உன்னோடு இருக்கும் போது ப்ரியமானதா மாறிடுச்சு.. ஏதோ பல நூறு வருஷங்களா தவமிருந்து.. சில நூறு வருஷங்களா இங்கே உன் கூட இங்கே வாழ்ந்துட்டு இருக்குற ஒரு உணர்வு தருது…” என நெகிழ்ந்த குரலில் சொல்லிக் கொண்டே போக, தன்னவனின் நெகிழ்வில் குழைந்து அவனை மார்புடன் அணைத்து விழி மூடிக் கொண்டாள்…
மெல்லிய குரலில்,
“வரு! நேற்று அத்தை அவங்க அறைல இருந்த ஒரு பொக்கிஷ அறைய காட்டினாங்க.. அதில ஒரு பழங்கால பெட்டில பரம்பரை நகைகள் இருக்கிறதா சொன்னாங்க.. அந்த அறைல இருந்த பெயிண்டிங்ஸ்ல இந்த அரண்மனை கட்டிய ராஜா இருந்தார்.. அவர் உங்களைப் போலவே இருந்தார். அவரின் அருகில் இருந்த ராணி…”
“உன்னைப் போலவே இருந்தாங்களா..” எனவும்.. விலகி… ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“நீங்களும் அதைப் பார்த்தீங்களா..” என ஆர்வமுடன் வினவவும் இல்லை என்பதாய் தலையசைத்தவன்..
“உங்க குல தெய்வக் கோவில்ல பாறை சுவர்ல இருந்த ஒரு சித்திரத்துல அப்படி இருந்தது.. அதே போல ஓவியம் இங்கேயுமா… அப்போ அந்த பூசாரி சொன்ன கதை..!!!” எனவும்..
பரபரப்புடன்..
“வரு, இங்கே அரண்மனைக்கு உள்ளேயே இருக்குற கோவில்ல ஒரு அம்மன் சிலை இருக்குல்ல, அது கூட பாண்டி மாதேவின்னு அத்தை பெயர் சொன்னாங்க. அது ஊர்ல இருக்குற எங்க குலதெய்வம் சந்திராம்மா சிலை மாதிரியே இருந்தது..” எனவும்.. திகைத்து,
“ இங்கே… கோவில்லயா… நான் அங்கன போனது நேற்று தான்.. சரியா பார்க்கலை…”, விரலால் அவளின் மார்பில் தவழ்ந்த தாலியை எடுத்துப் பார்த்தவன், “நம்ம விவாஹத்தின போது உன் குலதெய்வத்தின் தாலினு உங்க தாத்தா சொல்லி நான் உன் கழுத்தில் கட்டின போது என் அம்மாவின் தாலி மாதிரியே இருக்குதுன்னு பார்த்து ஸ்தம்பித்து போனேன்.. இந்த இராஜ வம்சத்தின் சின்னங்களோட… என் அம்மா தாலிய நான் பார்த்திருக்கேன்.. அப்போ…..”, என்றவன் உணர்வு வயப்பட்டு அவளின் முகம் தாங்கி,
“அப்போ… நாம திரும்ப பிறந்திருக்கோமா.. வது… ஜென்ம ஜென்மமா… தொடரும் உறவு… இதுன்னு நான் உணருறது…
உனக்கு ஏதாவதுன்னா என் உயிர் வரை துடிப்பது… இதனால் தானா.. உனைச் சேர்ந்ததும்… என் மனம் தித்திப்பதும்.. நிறஞ்சு போன மாதிரி இருப்பதும்.. என் வாழ்விற்கு அர்த்தமுள்ளதா மாறிட்டதா தோனுவதும்.. அதனால் தானோ…” என பேசிக் கொண்டே செல்ல.. விழி விரித்து அவனையே பார்த்தவாறு இருந்தாள்… மதிவதனா..
*******************
அனுமதி 24
****************
அன்று…
தன் இல்லத்தில், வெற்றி வேந்தன் இரு கைகளையும் பின்னால் கட்டியவாறு, கூண்டுப் புலி போல நடை பயின்று கொண்டிருந்தான்.
வீட்டினுள் நுழைந்த அவனின் தந்தையும்.. மாசேனை நாயகருமான மருதநாயகம், மகனின் நடை கண்டு, நெற்றி சுருங்க, அவனைப் பார்த்தவாறே அங்கிருந்த குறுங்கட்டிலில் அமர்ந்தார்.
அவரின் எதிரே வந்து நின்றவன் மின்னும் கண்களுடன், “என்ன சொன்னார் அந்த கம்பளத்தார்..? திருமணம் பற்றி ஏதும் சொன்னாரா..?” என்று வேகமாய் கேட்க..
அவனின் ஆவல் புரிந்தாலும்… ஏன் இவ்வளவு படபடப்பு என்று நினைத்தவராய் உறுத்து விழித்தார். குரல் கேட்டு உள் அறையில் இருந்து வெளி வந்த வசந்த மாலை அமைதியாக
இருந்த தந்தையின் முகத்தில் இருந்த குழப்பம், கோபம், வாட்டம்.. எதனால் என்று யூகிக்க முயன்று முடியாமல், வாய் விட்டே கேட்டாள்.
“ ஏன் தங்களின் முகம் வாட்டமுற்று இருக்கிறது தந்தையே?”
பெருமூச்செறிந்து, “ உன் அத்தையார் தகவல் அனுப்பியிருக்கிறாள். கார்குழலி மணந்தால் வெற்றி வேந்தனைத் தான் மணப்பேன்.. இல்லாவிடில் உயிரை துறப்பேன் என்கிறாளாம்.. அச்சிறு பெண்ணின் மனதில்… இந்த அளவு… பெரியவர்களின் பேச்சு உரமேற்றியிருக்கும் என்று நான் எண்ணிக் கூட பார்க்கவில்லை..” என வருத்தத்துடன் மொழிய,
வசந்த மாலையோ சிறிதும் அதிர்வின்றி தன்
தமையனை பார்த்தவாறு, “ அந்த அளவு அவள் மனதில் ஆசைகளை வளர்த்து விட்டு, இப்போது வருந்தி என்ன ஆகப் போகிறது…” என்றவள் திரும்பி மருதநாயகத்தைப் பார்த்து, “தந்தையாரே.. தாங்கள் என்ன முடிவு செய்யப் போகிறீர்கள்?” என கவனத்துடன் கேட்க,
“உடன் பிறந்தவளா… உயிரான நட்பா.. யாரிடம் என் நிலை பற்றிய விளக்கம் கூற…” எனவும்,
சட்டென்று இடை மறித்தான் வெற்றி வேந்தன், “எனில்… எனக்கென்று மனம்.. அதில் ஆசைகள் இருக்கக் கூடாதா? தங்களின் முடிவுகளை என் ஆசைகளை உத்தேசித்து எடுங்கள். ” எனவும்,
“ஆசைகள்..!! இருக்கலாம் வேந்தா… அதற்கு முன்பு அதற்கான சாத்தியங்கள் இருக்க வேண்டுமே.” எனவும்,
கோபமாய் மறு மொழி புகன்றான் வெற்றி வேந்தன், “திருமணத்திற்கு கேட்டது மன்னர்… மௌனமாய் நின்று அதை ஆமோதித்தது இளவரசி.. நாள் குறிக்க பேசியது இளவரசியின் பாட்டனார்.. முல்லை வனத்தின் வேந்தர்.. கொண்டல் வண்ணர். இதில் என்ன சாத்தியக் குறைவு வந்து விட்டது..?”
மருதநாயகம் தனயனை வெறித்து நோக்கி, “ஏனிந்த பதற்றம் குமாரா..! கொடுத்த வாக்கு.. நீடிக்கும் சொந்தம்.. அனைத்தையும் கருத்திலேற்றிப் பேச வேண்டும். இவ்வளவு அவசரம் ஆகாது. ” என எச்சரிக்க,
உறுதியான குரலில்,
” எனக்கு சந்திராம்பிகையை மண முடிக்க வேண்டும்..
போருக்கு முன் திருமணம் நடத்தி விடலாம் என்று நீங்களும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.. என்னையும் அரசரிடம் கேட்க அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள்..”
“இப்போது நமது குடும்ப சூழல் சரியில்லையே.. என் உடன் பிறந்தவள் கண்ணீரின் மேல் உனக்கான மணமேடை எப்படி அமைப்பேன்.?!” என வருத்தத்துடன் உரைக்க..
“அவ்வளவு வேண்டுமெனில் இளவரசியோடு திருமணத்திற்கு பின் கார்குழலியையும் மணந்து கொள்கிறேன்..” என்றான் அலட்சியமாக..
“என்ன சொன்னாய்…?” எதிர்ப்புக் குரல் பலமாக வசந்த மாலையிடமிருந்து வந்தது.
“இளவரசியினுடனான திருமணத்தை என்ன நினைத்தாய்? இவ்வளவு பேச துணிவு வந்து விட்டதா உனக்கு!! உனை அறிந்தவள் நான். உன் மனதில் கார்குழலியை வைத்துக் கொண்டு சந்திராம்பிகையை நெருங்க நினைக்காதே…” என சீற்றத்துடன் கூற..
திகைத்துப் போய் பார்த்தார் மருதநாயகம், “அப்படி உன் மனதில் கார் குழலி இருந்தால் அவளையே மணமுடித்து வைக்கிறேன் குமாரா..” என்ற அவரின் முகம் பாராமல் திரும்பி நின்று ,
” மருதத்தின் மன்னன் ஆவதே என் மனதில் தற்போது இருப்பது. திருமணம் பற்றி இன்று என்ன பேசினீர்கள்? ” என மீண்டும் கேட்க,
மருதநாயகம் கடுமையாய், “போர் முடிந்த பின் தான் அது பற்றிய பேச்சு என்றுவிட்டார்கள் இளவரசியார். ” எனவும்..
“ம்… சை.. ஹூம்… ” என்று உறுமி… கைகளை குத்தி பிசைந்தவன், “அதற்குள் என்னென்ன நேருமோ.. இந்த கொடை நாட்டு இளவல் வேறு.. குறுக்கில் வருகிறான். ஆனால்… என் மனத் தேரின் வழியில் யார்… எவர் குறுக்கிட்டாலும்.. சின்ன பின்னம் தான்..” என்றவன் தன் வாளினை எடுத்து உறையில் சொருகி இடையோடு கட்டி விட்டு.. விரைந்து வெளியேறினான். செல்லும் அவனையே வெறித்துப் பார்த்த வசந்த மாலையின் முகத்தில் வெறுப்பு..
இந்திர விழா நிகழ்ச்சிகள் நடப்பதன் அறிகுறியாய்.. யாழிசையும் கொட்டும் முழக்கப் படுவது கேட்டு, இன்று இசையும் பாடலுமே நிகழ்வாக இருக்கும் என்று எண்ணியவளின் மனம்.. அங்கு தான் வீரசேனன் இருப்பான்.. என சொல்ல.. ஏனோ இப்போதே அவனைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் எழ, தந்தையின் நிலை பார்த்தாள்.
அவர் தீவிர சிந்தனையில் இருப்பது கண்டு அருகில் சென்று, மெல்லிய குரலில் அனுமதி கேட்டு விட்டு ஊரின் மத்தியில் இருந்த சதுக்கம் செல்லும் வழி நடந்தாள்.
யாழினை மீட்டியபடி பாணினி ஒருத்தி பாடிக் கொண்டே நடனமாட.. அவளுடன் தோழி போன்ற தோற்றத்தில் இருந்த ஒருத்தி சிறுபறையை முழக்கி அவளிசைக்கும் அசைவிற்கும் தாளமிசைத்தாள்.
“பரியுடை நல் மான் பொங்குஉளை அன்ன
அடைகரை வேழம் வெண் பூப் பகரும்
தண் துறை ஊரன் பெண்டிர்,
துஞ்சு ஊர் யாமத்தும், துயில் அறியலரே…”
எனப் பாட,
தோழியானவள் அப்பாடலின் பொருளை பறை முழக்கியவாறே சொன்னாள்..
“பாய்ந்தோடும் குதிரையின் பிடரி மயிர் போன்று பூப்பூக்கும் துறையை உடையவன் ஊரன். அவன் காமப் பெண்டிர் நள்ளிரவில் தூங்காமல் கிடப்பார்களே! – அவன் மனைவி சொல்கிறாள்…”
என நிறுத்த..
பாணினி அடுத்த பாடலைப் பாடித் தொடங்கினாள்.
மருத நாட்டின் புகழ் பெற்ற பாணினியவளின் குரல்..
யாழினை விட இனிமையாய் பரவி அங்கிருந்தவரை வசியம் செய்ய.. அலைப்புற்ற வசந்த மாலையின் விழிகளில் பார்வையாளர்கள் கூட்டத்தில் தனியாய், நடுநாயகமாய் அமர்ந்து இருந்த இளவரசி சந்திர வதனாம்பிகையும், அவளருகில் மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டியவாறு சிற்ப மனிதன் போல நின்ற வீர வேழசேனனும் பட.. அங்கிருந்தவாறே தன்னவனின கம்பீர அழகைக் கொண்டு கண்களை நிறைக்க முயன்றாள்.
இசை கலந்து மிதந்து வந்த பாடலானது செவி வழி சென்று பொருளுணர்த்தி தன் வயம் இழுத்தது..
“கொடிப் பூ வேழம் தீண்டி, அயல
வடிக்கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித் துறை ஊரன் மார்பே
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே…”
பாடலின் பொருளை உரைத்தாள் துணைப் பாணினி.
“கொடியில் பூக்கும் பூக்கள் படர்வதற்காக வேழத்தைத் தொடும். பின்னர் அங்கிருந்து வடிவழகு கொண்ட மாந்தளிரைப் பற்றி அதனை வளைக்கும். இப்படிப்பட்ட துறையை உடையவன் ஊரன். அவன் மார்பு பனிக்காலத்தில் இன்பமாகச் சாய்ந்து உறங்க ஏந்தாக இருக்கும்..”
“என்னே பாடல்.. என்னே அதன் பொருள்..’ என நினைத்த வசந்த மாலையின் உள்ளம் வெட்கம் கொள்ள.. கண்களோ வெட்கமின்றி தன் மனம் கவர்ந்தவனின் பரந்து விரிந்த மார்பில் நிலைத்தது…
மாலை மயங்கி இருள் சூழத் துவங்கிய பொழுதில் எங்கும்… தீப்பந்தத்தின் ஒளி நிறைந்திருக்க.. பொன் மஞ்சள் ஒளியினூடே சிலை போன்று நின்று கொண்டிருந்தவனின் விழிகள் இவள் இருப்பை உணர்ந்தார் போல.. உயர்ந்து தேடி அலைந்து பின் இவள் முகத்தில் நிலைத்து நின்றன.
முன்னேறியவளின் பார்வையில் முறுவலுடன் அமர்ந்து இருந்த இளவரசி சந்திரவதனாம்பிகை பட… அவளின் முகத்தில் இருந்த ரசிப்புப் புன்னகை கண்டு வியப்பு தோன்ற.. அவளின் முகத்தை உற்று நோக்கியவளாய்.. முன்னேறினாள்.
எப்போதும் வீரமும் தீர்க்கமும் மிளிரும் தோழியின் விழிகளில்… கனிவும் கனவும் மின்ன… அவளின் முறுவலில் கூட ஏதோ குழைவு இருப்பதாகத் தோன்றியது வசந்த மாலைக்கு. அது பாணினியின் பாடலினாலா… அதன் பொருளினாலா… வேறு ஏதுமா..?!
****************
இன்று….
எப்போதும் அமைதியும் அழுத்தமுமாய் இருக்கும் தன்னவன், நெகிழ்வதையும் மகிழ்வதையும் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள், மதிவதனா…
அவனுக்கு தன் மேலான காதலை… காதலா!! அவனின் உயிரை விட பெரிதாக எண்ணும் தன் மீதான அவனது அளப்பரிய அன்பை..
அனுபவிக்கிறவளிற்கு,
அளவற்ற ஆசையை காட்டிய செயல்களில்… இரவு முழுவதும் மூழ்கித் திளைத்து மயங்கி முக்குளித்திருந்தவளிற்கு,
அவனின் உணர்வுகள் புரிவதாய்…
அப்போது கதவு தட்டும் மெல்லிய ஒலியும், அத்தை எனும் அழைப்பும் கேட்க, தன்னவனை இழுத்து, இறுக்கி அணைத்து, பின் விலகி, மெல்லிய முத்தமொன்றை அவனின் இதழ்களில் விதைத்தவள், மெதுவாக அவன் மடியிலிருந்து இறங்கி, விழிகளை அவன் மீது பதித்தவாறே, “வரேன் விக்கி…” என்று சற்று உரத்து சொன்னவள்,
குனிந்து, தன்னையே தாபத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தவனிடம், “சூப் குடிச்சுட்டு… குளிங்க.. சீக்கிரமே கீழே வாங்க..”.என்று முறுவலுடன் கூறி விட்டு வெளியேறினாள்.
கதவின் பின் நின்று கொண்டிருந்த விக்கியை தூக்கிக் கொண்டு கீழே இறங்க, சிவேஷ் தவிர அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
மாலாவிடமிருந்து உணவூட்டலுக்கு தப்பித்து வந்திருந்தவனை, அவளருகில் அமர்த்தி, தான் ஊட்ட ஆரம்பித்தாள் மதிவதனா.
நிமிர்ந்து கேள்வியாய் பார்த்த தந்தையிடம் , “அவருக்கு வேலை இருக்காம்… கோவில் இன்னொரு நாள் போலாம்னு சொன்னார் பா.” எனவும்,
ஒரு நொடி யோசித்தவர், “சரிடா.. மாப்பிள்ளைக்கு எப்போ தோது படுமோ அப்போ போங்க..” என ஈஸ்வர பிரபு சொல்லி விட்டு யோசனையோடு உணவு அருந்துவதைத் தொடர,
காஞ்சனா, ‘கோவில் னா அவன் எப்பவும் வரமாட்டானே..’ என்று வருந்தியவர்.. சிவேஷ் தனியே அலைபேசியில் ஏதோ பேசி விட்டு, அமைதியாய் அமர்ந்து இருப்பதைப் பார்த்து.. “நீ சாப்பிட வா மோனே…”என அழைத்தார்.
திடுக்கிட்டு திரும்பியவன், “ஜெய் வரட்டும் அத்தை..” என்று விட,
மதிவதனா, “நீங்களும் பார்வதி அத்தையும் உட்காருங்க.. அவர் வந்ததும், நான் பரிமாறுறேன்..” என தமிழில் உரைக்க.. அவளின் மொழி புரியவில்லை எனினும் பாவனையில், புரிந்தவராய் தலையசைத்து , தன் தங்கையை அழைத்து வரச் செய்து அமர்ந்தார்.
சில நிமிடங்களில் சாம்பல் வண்ண உயர் ரக பருத்தி சட்டையும், கறுப்பு பேண்ட்டும் அணிந்து வந்த ஜெயவர்மனை பார்த்தவள், அவனின் வெளுப்பான நிறத்திற்கு அந்நிறம் மிகுந்த பொருத்தமாய், அதே நேரத்தில் மரியாதை தூண்டுவதாய் இருப்பதை பார்த்தபடியே நிற்கவும், வேகமாக வந்தவன், அனைவரிடமும் பொதுவாக மெலிதான புன்னகை சிந்திவிட்டு, மனையாளின் பார்வை கண்டு, சிரிப்பு குமிழிட… அடக்கியவனாய், அவள் அருகில் சென்று… அவளை உரசியவாறு, அவளருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“ஷிவ்.. அப்பா அம்மா.. எல்லோரும் சாப்பிட்டாச்சா..?” என கேட்க..
அவனின் உரசலில் சிவந்த முகத்தைத் தாழ்த்தி, இரு தட்டுக்களை வைத்தவாறே, “அண்ணே மட்டும் உங்களோட சாப்பிடப் போறேன்னுட்டாங்க..” எனவும்..
அவனைத் தேடியவன்.. சற்றுத் தள்ளி நடந்தவாறு
அலை பேசி உரையாடலில் இருந்தவனை எட்டிப் பார்க்க, ஒரு நிமிஷம் என கை காட்டி விட்டு உரையாடலை முடித்து விட்டு வந்து நண்பனின் அருகில் வந்தான் சிவேஷ்..
தன் தங்கை அருகில் ஒளி வீசும் கண்களோடு, மலர்ந்த முகத்தோடு அமர்ந்து இருந்த நண்பனைக் கண்டவனின் மனம் நிறைந்து விட்டது. முறுவலோடு வந்து அவனருகில் அமர்ந்தவன், தங்கை புட்டு எடுத்து வர உள்ளே செல்வதை பார்வையாலே தொடரும் நண்பனைக் கண்டு… கன்னத்தில் செல்லமாகக் குத்தியவன்,
“எடுத்துட்டு இங்கே தான் வருவா…” என மெல்லிய குரலில் கேலி செய்யவும், சிறு சிரிப்புடன் முறைத்தவனைக் கண்டு, “உன் மனசுல இவ்ளோ லவ் வச்சுட்டு.. வேணாம் வேணாம்னியேடா..” என மெல்லிய குரலில் ஆதங்கப்பட..
சிரிப்பு வாடாமலேயே சிறுமூச்சுடன், “அவ எனக்கு வேணாம்னு எப்ப சொன்னேன்… ஞான் அவளுக்கு வேண்டாம்ன்னு தான் சொன்னேன். என்னோட வாழ்வா சாவா போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கை அவளுக்கு வேணாம்னு நினைச்சேன்…” என்றவன், அவள் பாத்திரத்துடன் வருவது கண்டு அமைதியாக..
சிவேஷ், ” இன்னிக்கு ஊருக்கு கிளம்புறோம்டா… மதியமா கிளம்பிட்டா சரியா இருக்கும். நீ அடுத்த வாரம் மதுர வர முடியுமா? ஒரு வரவேற்பு நடத்தனும்…” என,
யோசனையில் ஆழ்ந்த ஜெயவர்மன், ” ஒரு பெரிய ப்ராஜக்ட் கிடைச்சுருக்கு.. அது சம்பந்தமாயிட்டு தேன்மலை போகனும்… ம்.. கேட்க நினைச்சேன்.. மால் வேலை என்ன ஆச்சு?” எனவும்,
தங்கையைப் பார்த்தவன், “ஒரு வாரத்தில திரும்ப ஆரம்பிச்சுடலாம்… ஆர்க்கியாலஜில இருந்து கிளியரன்ஸ் லெட்டர் கொடுத்துட்டாங்க..” என்றான்.
ஜெயவர்மன், “அப்போ இன்னும் இரண்டொரு நாள் இருந்துட்டு போலாமே.. வர்க்கலா, கொல்லம், திருவனந்தபுரம் சுத்தி பார்த்துட்டு…”
“ம்..இல்ல… நீயும் எங்கயும் வரமாட்ட… மதியும் வராம நல்லா இருக்காது. அடுத்து இதுக்காகவே ப்ளான் பண்ணிவரோம்.. இப்போ.. கிளம்புறோம்..” எனவும்..
முறைத்த கணவனின் தோள் பற்றியவள், “முதல்ல சாப்பிடுங்க.” என்றாள்.
திரும்பி பார்த்து, “நீ சாப்டியா…” என.. அவள் மூக்கை சுருக்கி முறுவலிக்கவும், கை பற்றி அருகில் அமர வைத்தவன்,
“நீயும் சாப்பிடு… வர்க்கலா போறேன். நீயும் கூட வர்ற… உன் சகோதரனையும் எல்லோரையும் வரச் சொல்லு….” எனவும் நிமிர்ந்து சிவேஷைப் பார்த்தவள்.. அவனின் யோசனை எங்கோ இருப்பது கண்டு.. கண்களால் அவனைச் சுட்டியவள் தமையனின் முன் கையசைத்து, “அண்ணே சாப்பிடுங்க. அப்புறம் யோசிக்கலாம்.” எனவும் கலைந்து வேகமாக சாப்பிட்டான்.
ஏதோ யோசனையில் இருக்கும் நண்பனின் முகத்தைக் கண்ட ஜெயவர்மன்.. சாப்பிட்டு முடித்து விட்டு சிறிது நேரம் மதிவதனாவின் அன்னை, தந்தையிடம் பேசி விட்டு, வரவேற்பை பத்து நாட்கள் கழித்து வைக்குமாறு சொல்லியவன்… அவர்களை இரு நாட்கள் தங்கி செல்ல சொல்ல… வேலைகளை காரணம் சொல்லி மறுத்தவுடன்.. நண்பனைப் பார்க்க அவனின் முகத்தில் எதைக் கண்டானோ… எழுந்தவன் மனைவியை தயாராகச் செல்லி விட்டு அவனை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றான்.
“என்னடா.. பலத்த யோசனை? வாட் இஸ் ஈட்டிங் யூ?” என கேட்க,
நண்பனின் முகத்தில் கண் பதித்து, “திருமலை ஜெயில்ல கைதிகள் கலவரத்தில் அடிபட்டு இப்போ ஹாஸ்பிடல் ல இருக்கான்.. உயிருக்கு ஆபத்தான நிலைல…” எனவும்,
முறுவலுடன், “ஹாஸ்பிடல்ல தானே.. மார்ச்சுவரில இல்லியே..” எனக் கேட்க..
அதிர்ந்து பார்த்தான் சிவேஷ்… “நீயாடா!!!” என கேட்க..
நிதானமாய் நிமிர்ந்து பார்த்தவன், “நானா… நான் அடிச்சிருந்தா அவன் மார்ச்சுவரில தான் இருந்திருப்பான்.. இது ஆதித்… அவனை… வாயத் திறக்கக் கூடாதுன்னு மிரட்டுறதுக்கு.”
“ஆதித்.. ஆ…”
” ம்.. அவன் தான்.. அன்று வதுவ..” கண்களை ஒரு முறை மூடித் திறந்து, “கொல்ல சொல்லி ஆட்கள் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தது… ஆனா இவன்.. வதுவ கொண்டு போய் தன் இச்சை தீர்க்க.. நினைச்சுருக்கான்.. உன் குடும்பத்தை மிரட்டி.. விவாஹம் பண்ணவும் கூட.. செக்யூரிட்டி தலைவர் அச்சுதனண்ட கவனிப்புல எல்லாம் சொல்லிட்டான்.. ஆதித் பேர் உட்பட… அதற்கு வீடியோ ஆதாரம் நம்மட்ட இருக்கு… அது ஆதித்க்கு தெரிஞ்சுருக்கும்… அதான் அவன் அடக்கி வாசிக்கறான்.. திருமலை போலீஸ்ல ஏதும் சொல்லிறக் கூடாதுன்னு மிரட்ட இது மாதிரி பண்ணிருக்கான்.. இந்நேரம் அவனுக்கு மிரட்டலும் போயிருக்கும்.” என்றான் ஆதித்தை சரியாக கணித்தவனாய்…
” நீ அந்த ஆதாரத்தை போலீஸ்ல கொடுத்துருக்கலாம்லடா.. ஆதித் தூக்கி உள்ளே வச்சுறலாம்.…”
“ம்.. அவன் பலத்திற்கு இதெல்லாம் அவனுக்கு ஒன்னுமேயில்ல.. ஈஸியா வெளியே வந்துருவான்.. இப்போ கூட திருமலைய சாகடிச்சுருப்பான்… திருமலையால அவனுக்கு உபயோகம் இல்ல… நம் வீடியோ ஆதாரம் ஸ்ட்ராங்கா ஆயிடும்னு தான் திருமலைய மிரட்டுற மாதிரி இந்த தாக்குதல்…”
எனவும்,
அயர்ந்து, “இவன் இப்படியே தான் பண்ணிட்டு இருப்பானா.. முடிவு தான் என்ன..?” என எரிச்சலுடன் கேட்க,
ஜெயவர்மன் சிரிப்புடன், “புலி வால் பிடிச்சண்ட நாயர் கத கேள்விப்பட்டுருக்கியா.. அதான்.. ஆரு புலி ஆரு நாயர்னு தான் தெரியல…
இப்போ அவன் திட்டங்கள் தோல்வியாயிட்டே போகுது.. என் விவாஹம்.. தேன் மலை ப்ராஜக்ட்.. இதெல்லாம் இன்னும் அவனுக்கு வெறியேத்தும்… அதான் கொறச்சு தினம் ரொம்ப கவனமா இருக்கனும்.. வதுவ எங்கும் வெளியிடங்கள் போகவேணாம்னு சொன்னது…
சிறு பெண்.. கூண்டிலகப்பட்ட மாதிரியான வாழ்வு… என்னோட..” என அப்போதும் அவளை நினைத்து கவலைப் பட…
சிவேஷ் மனம் நெகிழ்ந்தாலும்.. தெளிவாய் சொன்னான், “கூண்டிலா… கூட்டில தானே அடைஞ்சுருக்கா..”
ஜெயவர்மன் புரியாமல் பார்க்க..
“உன் அன்பு.. குடும்பம் எனும் கூட்டில.. இனி அவ ரொம்ப பாதுகாப்பா இருப்பா.. சந்தோஷமாவும்..” என்றவனின் குரல் கனிய,
“உன்னை அவ்ளோ விரும்புறாடா…” எனவும்.. ஜெயவர்மன் முகம் விகசிக்க.. நண்பனைப் பார்க்க, அவனின் பார்வையில் மகிழ்ந்து, “அதான் விலாங்கு மீன் மாதிரி நழுவுற நீ.. அசந்த நேரத்தில கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்..” என்றான் விளையாட்டாய்…
குனிந்து சிரித்தவன், “இந்த விலாங்குமீன் வது கைக்கு மட்டும் தான் அகப்படும்..” எனவும்,
பெருமையுடன் சிரித்து,
“அது தான் தெரிஞ்சதாச்சே.. ம்.. அப்புறம் அந்த ஆதித்.. தொழில் கவலை… எல்லாத்தையும் ஓரமா வச்சுட்டு.. புது மாப்பிள்ளையா லட்சணமா.. சந்தோஷமா இரு.. இனி எதுனாலும்… நான்… சிவப்பிரகாசம் குடும்பமே உனக்கு துணையா இருக்கோம்.. அவனா… நாமா.. பார்த்திடலாம்.. ” எனவும்…
தன் அழகிய முறுவலுடன் ஜெயவர்மன் நண்பனின் கழுத்தில் கரம் கோர்த்து இழுத்து கட்டிக் கொள்ள.. அவனைத் தழுவி இறுக்கிக் கொண்ட சிவேஷின் முகத்தில் அவ்வளவு மகிழ்வு..
**************
அனுமதி 25
****************
அன்று…
வசந்த மாலையின் விழிகளைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த வீர வேழ சேனன் அவளின் பார்வை இளவரசியை கூர்வது கண்டு.. மெல்லிய முறுவல் துலங்க அவளையே நாடும்.. தன் விழிகளை கட்டுப்படுத்தி சுற்றிலும் பார்வையை செலுத்தினான்.
நெருங்கி வந்த வசந்த மாலை, இளவரசியின் வலது புறம் நெருங்கி தோளைத் தொட… திரும்பி அவளைப் பார்த்த வான்மதியுடன் போட்டியிட்டு வெல்லும் வெண்ணிற ஒளியுடன் கூடிய இளவரசி சந்திர வதனாம்பிகையின் வதனமானது, இன்று செம்மை பூசிக் கொண்டு இன்னமும் அழகாக மிளிர்வதாகத் தோன்றியது.. வசந்த மாலைக்கு.
பாணினியின் தேமதுரக் குரல், அடுத்த பாடலை பாடத் தொடங்கியிருக்க, தலைவன் தலைவியின் அக வாழ்வை, பற்றிய பல பாடல்களை, கணீரென்று எழும்பும் யாழிசையுடன் அவள் பாட, தொடர்ந்த நிகழ்ச்சியானது இடையாமப் பொழுது (இரவு 10 மணி) துவங்குவதற்கு ஒரு ஓரை முன்பு நிறைவடைய, ஆகார ஒலிகளும் வாழ்த்தொலிகளுமாக நிறைந்த அவ்விடத்தை விட்டு, இளவரசியின் பரிசுகளுடன் மகிழ்வுடன் பாணினியின் குழுவினர் கிளம்பினர்.
மருதபுரியின் சேனை பயிற்றுவிப்பாளனின் காவலில், மெய்க் காவலர் புடை சூழ.. தோழியின் துணை கொண்டு அரண்மனை அடைந்த இளவரசியின் பின்னே, கண்களால் தன்னவனிடம் விடை பெற்று வசந்த மாலையும் நடக்க முற்பட, பிரிவுத் துயர் காட்டிய அவனின் முகம் கண்டு அவளின் கால்கள் தடை பெற்றன.
அரண்மனையின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டே சந்திராம்பிகை, ”நாளை வைகறையில் சந்திப்போம் மாலா..” என்றவள், மயிலின் அழகிய கம்பீரத்துடன் தலை திருப்பி, வீரசேனனைக் கண்டு, “ஆசிரியரே, அவளை இல்லம் சேர்த்து விடுங்கள்…” என்று விட்டு.. பளிச்சென்று மின்னிய அவனின் கண்களையும், மலர்ந்த முகத்தையும் கண்டு கொண்டு, நகைப்புடன், “தங்களின் இல்லம் அல்ல.. மருதநாயகரின் இல்லத்தில்.. மணவோலை எழுதப்படும் வரை..” என்றவள், தன் மிடுக்கான நடையைத் தொடர, அவளைச் செல்லமாக முறைத்தவளாய் வசந்த மாலை, தன்னவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், தன் இல்லம் நோக்கி நடந்தாள்.
தன் குட்டு வெளிப்பட்டதில் சிறிதாய் மலர்ந்த முறுவலுடன், செல்லும் இளவரசியினைப் பார்த்தவன், தன்னவளின் நகர்தலை உணர்ந்து திரும்பினான். விரையும் அவளின் வேகம் கண்டு நகைப்புடன், சற்றே உரத்து, “ மா சேனை நாயகரின் வீரப் புதல்விக்கு எனது வழித் துணை தேவையில்லை என்பதை நான் அறிவேன், எனினும் வாழ்வுத் துணை எனும் எண்ணத்தில் என்னுடன் இணைந்து நடக்கலாமே..” எனவும்,
அப்படியே நின்றவள், அவன் நடந்து அருகில் வருவது உணர்ந்து, “உங்களிடம் சில நிகழ்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள வந்தேன். உங்களின் விழி வீச்சில்.. வழியும் உணர்வில்.. அவை ஏதும் சொல்ல முடியா நிலை அடைவதால் தான்.. நாளை பேசிக் கொள்ளலாம் என்று விரைந்து நடந்தேன்.. இந்த சந்திரா வேறு கேலி செய்கிறாள்…” என ஒலித்த குரலில்,
சிறு தவிப்பினை உணர்ந்து, இரண்டெட்டில் அவளை நெருங்கியவன், அவள் நாணத்தில் இருப்பதாக எண்ணி, “இது அரச வீதி. காவல் வீரர்கள் நடமாடும் இடம்.. இங்கு விழிகளால் மட்டுமே தீண்ட முடியும்.. ம்ஹும்..” என்று அலுத்துக் கொள்ளும் குரலில் ஆரம்பித்தவன், அவளின் முகத்தில் இருந்த ஆழ்ந்த யோசனை கண்டு, சிறுமூச்சை வெளியேற்றி, “சொல் வசந்தமே, என்ன நிகழ்வு! நடு இரவானாலும் பகிர வேண்டிய அளவு.. உன் மனதை துன்புறுத்துவது..” எனவும்..
நிமிர்ந்தவள், “ஆம்.. துன்பமே தான். என் உடன் பிறந்தவன் பற்றி தான்.. இன்று தந்தையாரை எதிர்த்து பேசுமளவு அவன் துணிந்து விட்டான்.. அவனின் உள்ளத்தில் மன்னனாகும் பேராசை நிறைந்து விட்டது.. இளவரசியின் மீது காதல் என்றெல்லாம் பிதற்றியவன்..” குரலினைத் தாழ்த்தி, ” இப்போது அத்தை மகளையும் மணம் செய்யப் போகிறேன் என்கிறான்.” எனவும்,
அவளை தலை திருப்பி ஒரு முறை பார்த்தவன், அமைதியாய் நடக்க, “இவனுக்கு கொடை நாட்டின் இளவல் மீது பொறாமை வேறு வருகிறது.” என வசந்தா சொல்லவும், கேலியான முறுவல் வந்தது வீர சேனன் இதழ்களில்.
“இவனின் அவசரமும் பேராசையும் களவத்தினை எதிர்க்கும் சாளுவ போரில் ஏதேனும் குழப்பத்தை விளைவிக்குமோ என்று அச்சமாக இருக்கிறது.. அண்டை நாடுகள் ஓரணியாக நின்று அரக்கனை ஒத்த எதிரியுடன் போரிட வேண்டிய நேரத்தில், இம்மாதிரியான மனநிலை, ஒருங்கிணைந்த செயலாற்றலைக் குறைத்து விடும்…” என மிகுந்த கவலையுடன் கூற,
வியப்படைந்த வீர சேனன், “உனக்கு ஏனிந்த அச்சம் வசந்தமே.. இளவரசியாரின் அறிவாற்றல் பற்றி அவன் தான் குறைத்து எடை போடுகிறான் என்றால் நீயுமா?! திருமணம் இரு மனதின் இணைவு என்றவர்கள், அவன் மனதை உணராமல் இருப்பார்களா? வெற்றி வேந்தனை போர் ஆயத்தங்கள் தவிர ஏதும் பேசக் கூட அனுமதிப்பதில்லை.. நான், இளவல், உன் தந்தையார், மருதத்தின் மாபெரும் வீரர்கள் இருக்கும் வரையில் போரைப் பற்றி எந்த கவலையும் அச்சமும் தேவையில்லை. எதிரி வலுத்தவனாக இருந்தால் என்ன?! நாம் அவனுக்கு சளைத்தவர்கள் அல்லரே.. அமைதி கொள் என் அழகே..” என்றவன், அவளின் பூங்கரங்களை பற்றி அழுத்தினான்.
தொடர்ந்தவனாய், “ நாளை இந்திர விழா நிறைவு பெறுகிறது. இளவல் படைகளை இன்று உறையலூர் நகர்த்தி விட்டாராம்.. நாளை விழாவிற்கு வருவதாக தகவல் அனுப்பியிருக்கிறார்.” என மகிழ்வுடன் சொன்னான்.
அமைதியாய் தலையசைத்தவள், தன் இல்லத்தின் உள்ளே செல்ல முற்பட, வேழனோ கை பற்றி இழுக்கவும், “தந்தையார் இருக்கிறார்..” என்று எச்சரிக்கும் மெல்லிய குரலில் கூறியவளுக்கு, அவன் கரங்களை தானாக விலக்க மனம் வரவில்லை.
அவனோ சிரித்தவாறே மீண்டும் கரங்களை ஒரு முறை அழுத்தி, ‘நானிருக்கிறேன்’, என்பது போல் விழிகளை ஒருமுறை மூடித் திறந்து தீரம் தந்தவன், விலகினான்..
அவனை பார்த்தவாறே சில கை நொடிப் பொழுதுகள் நின்ற வசந்தமாலை, ஆழ்மனதில்
கலக்கம் விலகாதவளாய், தன் இல்லத்தினுள் புகுந்தாள்.
*****************
இந்திரவிழா நிறைவுறும் நாள்.
மருதபுரிக் கோட்டைக்குள் இருந்த அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, சிறப்பு விருந்தினர்கள் வருகை காரணமாக பறைகள் முழங்கிக் கொண்டே இருந்தன.
வீடுகள் தோறும் வாழை மரங்கள் கட்டப் பெற்று, தென்னம் ஓலைகளால் முகப்பு அமைத்து, வீதி முழுவதும் வாழைக் கன்றுகள், சவுக்கு மரக்கிளைகள், மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
தெற்கு வாயிலில் இருந்த கோட்டைக் காவல் தெய்வத்தின் கோவிலின் முன்பு மக்கள் ஒன்று கூடி, தை மாதம் தொட்டு அறுவடை செய்திருந்த புத்தம்புது அரிசியுடன் கருப்பஞ்சாறு இட்டு பொங்கி, கனிகளுடன் தேவிக்கு படையல் வைத்து மங்கலக் குலவையொலி எழுப்பிய படி இருந்தனர்.
மருதபுரியின் மத்தியில் இருந்த தேவியின் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொள்ள மருதபுரி வேந்தன் பெருவளத்தான், அமைச்சர் பெருமக்கள், எண்பேராயத்தினர், மா சேனைத்தலைவர், சேனை நாயகர்கள், அரசவைக் கலைஞர்கள், ஒன்று கூடி இருக்க.. அனைவரும் இளவரசியாரின் வருகைக்காக காத்து நின்றனர்.
குறித்த நேரத்திற்கு முன்பே, பூக்களால் நெய்த சிலை போன்ற வசந்த மாலையுடன், அலங்காரம் செய்து வைத்த பொன்னால் ஆகிய தேர் போல, பொன்னகைகளை மிஞ்சிய புன்னகையும், ஒளிரும் கண்களுமாய் நடந்து வந்த இளவரசி சந்திரவதனாம்பிகை கண்டு அனைவரும் விழி விரித்துப் பார்த்தனர்.
எப்போதுமே தெய்வாம்சம் மின்னும் தங்கள் தேவியின் அழகு, இன்று மேலும் பொலிவாய் இருப்பது கண்டு அனைவரும் அவளின் அருள் சுரக்கும் முகத்தை விட்டு பார்வை விலக்க இயலாதவராய், பரவசத்துடன்… மருதத்திற்கும்… மன்னருக்கும்.. இளவரசிக்கும்.. வாழ்த்தொலி எழுப்பினர்.
இளவரசியின் நிமிர்ந்த விழிகளின் கனிந்த பார்வை அனைவரையும் வலம் வர, கரங்கள் செந்தாமரை மொட்டென குவிந்து வணங்கின. வசந்த மாலையின் விழிகளானது தன்னவனைத் தேடி, அங்கு அவன் இல்லாததை உணர்ந்து… ஊடல் கொண்டு சோர்ந்து நின்றன.
மன்னர் பெருமான் கண்ணசைவில்.. மருதபுரியில் உறைந்த இறைவியின் புகழ் கூறும் பாடல்கள், ஒலிக்கத் துவங்க,மங்கல வாத்தியங்களும் கோவிலின் காண்டா மணியும் அதிர, வழிபாடு ஆரம்பமாயிற்று.
தீபங்களின் ஆராதனை செய்யும் வேளையில், அரசர்களுக்கான வரவேற்பு கோட்டை வாசலில் முழங்கப் பெற்றதும் அனைவரின விழிகளும் ஆவலுடன் திரும்ப, ஆறு குதிரைகள் பூட்டிய பொற்தேரில் வந்து இறங்கினர்..
கொடை நாட்டின் வேந்தர் இராஜ குலோத்துங்க மாறவர்மனும், பட்டத்தரசியார் பதுமன்தேவியும்…
தீப ஆராதனைக்காக முழங்கப் பெற்ற தாள வாத்தியங்களும், குழல் இசையும், வரவேற்பாய் ஒலித்த பறையிசையுடன் இணைந்து முழங்க.. கம்பீரமாய் வந்த மாறவர்மர் வரவேற்பாய் கரம் குவித்த பெருவளத்தாரின் அருகில் வந்து நின்று வழிபாட்டில் கலந்து கொள்ள, மருதத்தை ஆளும் அங்கயர்க் கண்ணி தேவியை துதித்து திரும்பிய பதுமன் தேவி அரசியாரின் விழிகளோ… மன்னரின் அருகில் புன்முறுவலுடன் கரம் குவித்த இளவரசியின் முகத்தில் நிலைத்து பின் மலர்ந்தது.
தீப ஆராதனை முடிந்து வெளியே வந்த ஆச்சாரியார் அதனை மன்னர் முதலானோருக்கு காட்டி ஆசி வழங்கி விட்டு தலைமை விருந்தினருக்கு வழங்கப்படும்.. மருதபுரி அம்பிகையின் மாலை அணிவித்து பட்டுத் துணி கொண்டு பட்டம் கட்டும் மரியாதையை கொடை நாட்டின் வேந்தருக்கு செய்ய மங்கள வாத்தியங்கள், கூடியிருந்தோரின் வாழ்த்தொலிகளால் அவ்விடம் அதிர்ந்தது.
வழிபாடு முடிந்ததும் கொடையின் மாமன்னர் மாறவர்மரை விருந்துண்ண மருதபுரி மன்னர் பெருவளத்தார் அழைப்பு விடுத்ததும்.. தம் குமாரன் உறையலூரில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும்… ஓரிரு நாழிகைகளில் அவன் வந்தவுடன்.. இணைந்து உணவருந்த விழைவதாக கொடை நாட்டு வேந்தர் உரைக்கவும், சதுக்கத்தில் காலையிலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருந்த வீர விளையாட்டுக்களை காண அழைப்பு விடுத்தார் மருதபுரியின் மன்னர்.
கம்ப விளையாட்டு, வாள் வீச்சு, மருதபுரியின் சிறப்பு ஆயுதமான செண்டு ஆயுதப் போர், சிலம்பம் சுழற்றுதல் என ஒவ்வொன்றாக மருதபுரியின் வீரர்களால்
திடலில் நடத்தப் பெற, அனைவரும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
இருபது தண்டம் உயரமிருந்த சவுக்குத் தடியின் உச்சியில் கட்டித் தொங்க விடப்பட்டு இருந்த பொற்காசுகள் மற்றும் மலர்களும் இருந்த சிறு துணி முடிச்சை அம்பு கொண்டு தாக்கும் விளையாட்டு நடத்தப் பெற, வானில் ஏறி நின்ற கதிரவன் நேராக இருந்தததால் ஒளி பட்டு கண்கள் கூச வில் வீரர்கள் அம்பானது மூட்டையை தொட்டு தொட்டு செல்ல… சிறு பதட்டம் உருவானது.
அப்போது தொலைவில் இருந்து சீறி வந்த நான்கு சரங்களில் ஒன்று.. முடிச்சை வெட்ட… அடுத்த சரம் அதை நகர்த்திப் பறக்க வைக்க… அடுத்த இரு சரங்களும் மூட்டையை கிழிக்க….
அதைச் சுற்றியிருந்த மலர் மாலையானது வீழ்ந்து சரியாக இளவரசியின் கழுத்தில் தஞ்சமடைந்து… மூட்டையின் உள்ளிருந்த மலர்களும் சிறு பொற்காசுகளும்.. அதன் பின்னேயே மாரியென அவளின் மேல் மங்கலமாய் பொழிந்தன…
**************************
இன்று….
கிளிமனூரில் இருந்து வர்க்கலா செல்லும் பாதையில் நூறு கிலோ மீட்டரையும் தாண்டிய வேகத்தில் விரைந்து கொண்டிருந்தது இராஜா ஜெயவர்மனின் வாகனம்.. அவ்வளவு வேகத்தில் செல்வது வேகமானியைப் பார்த்தால் தான் தெரியும்.. அமர்ந்து இருந்த மதிவதனாவிற்கு காற்றில் மிதந்து செல்வது போண்ற உணர்வு.. பாதையினாலா, ஓட்டுபவனின் திறமையா, வெளிநாட்டு உயர் ரக வாகனத்தின் நேர்த்தியாலா என்று வியந்தவள், எங்கு நோக்கினும் பசுமையாய் இருந்த பாதையை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டு வந்தாள்.
திடீரென்று குறுக்கிடும் பாலங்களும்.. பச்சை நிறத்தில் இருந்த.. நீர் வழிகளும், அவற்றில் மிதந்து கொண்டிருந்த படகுகளும் கவனத்தை ஈர்க்க, சிறுபிள்ளை போல், “ஹை.. போட்..” என்று கத்தியவளை இரசித்தவனின் விழிகள் கூலர்ஸ்குள் இருந்ததால் புலப்படவில்லை எனினும் உதட்டோரம் சிரிப்பில் லேசாக விரிய, குதூகலமாய் அவனை நோக்கித் திரும்பியவள் சிரிக்கிறான் என்பதை உணர்ந்து உற்றுப் பார்க்க..
அவனின் கைகள் கியரை மாற்றி வேகம் குறைத்தது புரிந்து, நேசப் புன்னகை சிந்தியவள், இயற்கையழகை.. புதிய மனிதர்களை ரசித்தாள். சாலையின் பாலத்தின் கீழே காயல் நீரில் சிறு படகில் இருந்த சிறுவன் கையசைக்க தானும் குதூகலமாய் கையசைத்தவள், கண்ணாடியை இறக்க முயல, சென்டர் லாக் செய்யப்பட்டு இருந்ததால், இயலவில்லை. கேள்வியாய் அவனைப் பார்க்க,
திரும்பாமலேயே, “வது, கண்ணாடி இறக்க வேணாம்.”என சிறு குரலில் ஜெயவர்மன் சொல்லவும், “ம்.. ம்..” என்று விட்டு சாய்ந்து அமர்ந்தாள்.
அப்போது தான் கவனித்தாள் கண்ணாடியின் நிறம், திடம் வித்யாசமாக இருப்பதை… தொட்டுப் பார்க்க, அவளின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருந்தவன் மெதுவாக சொன்னான், “புல்லட் ப்ரூஃப்..”
கீழ் உதடு பிதுங்க, தோளை உயர்த்தி, “வரு.. வர்க்கலால உங்க தொழில் இருக்கு சொன்னீங்க.. என்னை எதுக்கு கூட்டிப் போறீங்க..” எனவும்,
பாதையில் கவனமாக ஓட்டியவாறே, “பின்னே.. வீட்டில் என்ன ஜோலி பார்க்க போற… உன் குடும்பத்து ஆட்களும் கிளம்பிட்டாங்க.” எனக் கேட்கவும்,
விழி விரித்து, “ அத்தை கூட இருப்பேன்.. உங்க ஹிஸ்டரி.. ஜாக்கிரஃபி எல்லாம் கேட்டுட்டு..” என்றவள் கூறிய தொனியில் அவனின் இதழ்களில் சிறுமுறுவல் எட்டிப் பார்த்து விட்டு செல்ல, “ இன்னும் சின்ன அத்தைட்ட உங்களை பற்றி கேக்கலை..” என்றவள், நினைவு வந்தவளாய், “அந்த பொக்கிஷ அறை, பெயிண்டிங்ஸ் பார்த்ததா சொன்னேன்ல.. அதுல ஒரு பெரிய பழங்காலப் பெட்டி இருந்தது.. அதுல பரம்பரை நகைகள் எல்லாம் இருக்குறதா சொன்னாங்க.. அதோட சாவி ஒரு செயின்ல இருந்தது.. அத்தை.. அதை பட்டுன்னு என் கழுத்துல போட்டுட்டாங்க..” என சொல்லி திரும்பியவள், அவனின் முகம் இறுகுவது கண்டு பேச்சை நிறுத்தி, “என்ன ஆச்சு..” என கேட்க,
“இப்போ அந்த சாவி எங்கே?” எனவும்,
“அது அத்தைட்ட தான் இருக்கு. அது சாவி மாதிரி இல்லை. செயின் டாலர் மாதிரி இருந்தது வச்சு திறந்தாங்க.. நான் உங்கிட்டேயே இருக்கட்டும்னு திருப்பி அவுங்க கிட்ட கொடுத்துட்டேன்.” எனவும், சிறு மூச்சை வெளியிட்டவன், அடுத்து எதுவும் பேசவில்லை..
மக்கள் நடமாட்டம் உள்ள சிறு ஊருக்குள் நுழையத் தொடங்கியிருந்ததால் வேகத்தைக் குறைத்து பாதையில் கவனத்தை செலுத்தினான்.
அட்டங்கால் என்ற பெயரைத் தாங்கி இருந்த அச்சிறிய ஊர்.. ஏதோ திருவிழா நடப்பது போல பரபரப்பாக இருந்தது..
எதிரே நெற்றிப் பட்டம் கட்டிய யானைகள் பல ஊர்வலமாய் வருவது கண்டு, வேகத்தைக் குறைத்த ஜெயவர்மன் சாலை ஓரமாக ஒதுக்கி நிறுத்தினான்.
சாமி பட்டத்தை தாங்கிய படி ஒரு யானை முன்னே வர அதனைப் பின் தொடர்ந்து வந்த யானைகள் நெற்றிப் பட்டத்துடனும் அலங்கரிக்கப்பட்ட குடைகள் தாங்கி இருந்தன.
குறைந்தது பத்து யானைகள் இருந்த அந்த ஊர்வலம் கண்டு மதிவதனா விழி விரித்து ஆர்வத்துடன், “ வரு.. இது சாமி ஊர்வலமா.. என்ன திருவிழா..” என ஆர்வத்துடன் கேள்வி எழுப்ப,
சற்று யோசித்தவன், “இந்த ஊர்ல ஒரு ஃபேமஸ் பகவதி கோவில் இருக்கு.. பேரு… ம்.. ம்.. சர்க்கரா தேவி.. அதுல ஏதோ திருவிழான்னு நினைக்கிறேன்.” என்றவன் அலை பேசி எடுத்து பின்னால் பாதுகாப்பிற்கு வந்து கொண்டிருந்த வாகனத்தை தொடர்பு கொண்டு பேசி விட்டு , “இன்னும் பத்து நிமிஷத்துல ரோட் க்ளியர் ஆகிடும்..” என்றவன், அவள் பார்வை ஆர்வத்துடன் யானைகளின் மீது இருப்பது கண்டு தானும் அமைதியாக, அவற்றை வேடிக்கை பார்க்கலானான்.
பெரிய கூட்டம் என்று இல்லாவிடிலும் மக்கள் ஆங்காங்கே திரண்டு நின்று பக்தியுடன் கும்பிட்டவாறு பார்த்துக் கொண்டிருந்தனர்..
ஜெயவர்மனின் வாகனத்திற்கு முன்பு பல வாகனங்கள் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருக்க, அவர்களை தாண்டி ஒன்றன் பின் ஒன்றாக சென்ற யானைகள் அவர்களின் பின்னால் இருந்த ஒரு வீதிக்குள் திரும்பின. அந்த வீதியில் செண்டை மேளமும் வாக்கு எனும் இசைக்கருவியும் முழங்கும் ஒலி கேட்க ஆரம்பித்தது.
யானைகள் அனைத்தும் கடந்து சென்றதும்.. மக்கள் அனைவரும் பின்னேயே செல்வதைப் பாரத்தவன், காரைக் கிளப்ப எண்ணி ரியர்வ்யூ கண்ணாடியைப் பார்க்க, திடீரென்று மக்கள் அந்த வீதியிலிருந்து விரைந்து ஓடி வருவது கண்டு திரும்பிப் பார்த்தான்.
ஏதோ கத்தியபடி மக்கள் ஓடி வருவது கண்டு ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டவன் காரை நகர்த்த முடியாமல் மக்கள் சிதறி ஓடத் தொடங்கி இருந்தனர்.
என்னவென்று அறிய கண்ணாடியை சிறிது இறக்கிய போது, “ ஆன.. வெறி கொண்டுன்னு..”, என்று கத்தியபடி, ஆட்கள் ஓடுவதைக் கண்டவன், எதிரே பார்க்க, ஒரு சிறிய தெருவிலிருந்து வெளி வந்த உயர் ரக கார், இம்மக்கள் கூட்டத்தால் நடுவழியில் நிற்பதைப் பார்த்தான்.
திரும்பிப் பார்க்க, யானை ஒன்று மதம் பிடித்தது போல, அலைப்புறுதலுடன் வருவதையும், அதன் மேல் அமர்ந்திருந்த இரண்டு யானைப் பாகன்கள், அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதையும் கண்டு முகம் இறுக புருவம் நெறிபட, ஓடும் மக்களைக் கண்டவன், அலைபேசி எடுத்து யாரிடமோ பேசியவாறே, வேகமாக தன் சிறு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிப் பார்க்க,
யானை மீதிருந்த இரு பாகன்களும், கீழே யானையால் சரித்து தள்ளப் படுவதையும் , தன் வழியில் குறுக்கில் உள்ள பொருட்களை அது தள்ளியவாறே வருவது கண்டு.. கண்களில் கூர்மையுடன் அதை உற்று நோக்கினான்.
அந்த யானைக்கு மதம் பிடிக்கவில்லை.. அது பிடிக்காத சத்தத்தினாலோ, உடல்ரீதியாய் துன்புறுத்தப் பட்டதினாலோ கோபம் அடைந்திருக்கிறது என்று அவனின் உள்மனது கூறியது.
முன்னேறிய யானையானது, ஓடும் மக்களை கண்டு கொள்ளவில்லை, அலைப்புறுதலுடன் இடவலமாக, போய் போய் வந்தது.. தன் பாதையை மறித்து நின்ற காரை நெருங்கி துதிக்கையால் முன்புறக் கண்ணாடியில் ஓங்கி அடிக்க, அது விரிசல் விட்டது. முன்காலை வைத்து பானட்டை மிதிக்க அவ்வுயர் ரக வாகனம் அபாய விளக்குகள் மின்ன, அலாரம் ஒலி எழுப்பத் தொடங்கியது.
உள்ளே இருப்பவர்கள் அலறும் ஒலி கேட்டவன் துப்பாக்கியை இடையில் சொருகிக் கொண்டு விரைந்தான். யானையின் கவனம்.. அணைந்து எரியும் காரின் விளக்குகள் மீதும் அலாரம் ஒலியின் மேலும் செல்ல, மீண்டும் மீண்டும் அது காரைத் தாக்கியது..
விரைந்து சென்ற ஜெயவர்மன், தன் பின்னேயே இறங்கி வந்த மதிவதனாவை கவனிக்க வில்லை. அவனின் கவனம் காருக்குள் இருந்து அலறுபவர்கள் மீது இருக்க, வேகமாக சென்றவனின் பார்வையில் கரும்பு ரசம் பிழியும் இயந்திரமும் அருகில் இருந்த கரும்புகளும் பட, அவற்றில் நான்கை உருவியவன் காரைத் தாக்கிக் கொண்டிருந்த யானையின் அருகில் சென்று வாலைப் பற்றி இழுத்து, அதன் கவனத்தை ஈர்த்தான். கோபத்துடன் திரும்பிய யானை, பிளிறியபடி அவனைக் கண்டு துதிக்கையை சுழற்ற, இடக்கையில் பற்றியிருந்த, கரும்பை நீட்டியதும் தாக்க வந்த அந்த யானையானது நிதானித்து, கரும்பை பற்றிக் கொண்டது.
பற்றி இழுத்த கரும்புகளை, வாயிலிட்டு அது உண்ணத் தொடங்க, அதன் ஆக்ரோஷம் குறைந்ததை உணர்ந்தவன், யானையின் கண்களுக்கு அருகில் இருந்த மதநீர் சுரப்பிகளை உற்று நோக்கினான்.
அதில் மதநீர் ஏதும் வழியாததை கண்டவன், தன் அனுமானம் சரிதான் என்று எண்ணியவாறு, அதன் அருகில் மிக மெதுவாக கவனமாக நெருங்கி கழுத்தைத் தடவி, மெல்லிய குரலில் “வலது காலை உயர்த்து..” என்று கட்டளையிட அதிசயமாய் அதுவும் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டது.
அவனின் பின்னேயே இறங்கிருந்த மதிவதனா.. அவனின் மேல் விழிகளைப் பதித்தபடி, காரை நெருங்கி கதவைத் திறக்க முயல, மயங்கியிருந்த ஓட்டுனர், சென்டர் லாக் செய்து இருந்தததால் திறக்க இயலவில்லை. பின் இருக்கையில் இருந்த பெண் அதை கவனித்து அவசரமாக எம்பி முன் வந்து லாக்கை எடுத்து விட்டு, கதவைத் திறக்க முயல, மதி வதனாவின் சிறு போராட்டத்திற்கு பின் கதவு திறந்தது.
மதயானை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் கத்திக் கதறிக் கொண்டு இருந்த சிறு பையனை வைத்து இருந்த பெண்ணும், எழுபதுகளில் இருந்த முதிய பெண்ணும் அவசரமாக வெளியேற, ஜெயவர்மனின் பாதுகாப்பு ஆட்களும் சென்று அவர்கள் வெளியேற உதவி செய்து ஓட்டுனரை வெளியே தூக்கி வந்து மயக்கம் தெளிவித்தனர்.
யானை ஆக்ரோஷம் குறைந்ததை உணர்ந்தாலும், அனைவரும் ஒரு பயத்துடனேயே அதைப் பார்த்திருக்க, அதன் மேல் பழக்கப்பட்டவன் போல், கழுத்துக் கயிற்றைப் பற்றி ஏறிய ஜெயவர்மனை ஆச்சரியத்துடன் பாரத்தனர்.
அதனை திரும்பச் சொல்லி கட்டளையிட்டவன் கோவிலை நோக்கி திருப்பி, அதன் காதுகளை தொட்டுப் பார்த்து, உடல் சூடு அதிகரித்து பசியுடன் வைத்திருந்ததால் தான் இவ்வாறு ஆர்பாட்டம் செய்திருக்கிறது என்பதை உணர்ந்து, கரும்புகள் இருக்கும் இடத்திற்கு செலுத்தி உண்ண வைத்தான். தப்பிதோம் பிழைத்தோம் என்று ஓடியிருந்த பாகன்கள், அந்த யானையை சிறு வயதில் இருந்து பழக்கிய மற்றொரு பாகனை அழைத்துக் கொண்டு வந்தனர்.
வருடிக் கொடுத்தவாறு யானையை கட்டுப்படுத்தி அதனை அமைதிப் படுத்திய ஜெயவர்மன், மெதுவாக அதன் கழுத்துக் கயிறை பற்றி இறங்க முற்பட, அதுவோ தன் காலை மடித்து அவன் இறங்க வசதி செய்து கொடுத்தது.. அங்கே இருந்த நீரை எடுத்து அருந்த வைக்குமாறு பாகனிடம் சொன்னவன், கடுமையுடன்.. “விழாவுக்கு கூட்டி வந்தவன் அதன் உணவு, தாகம், உடல் மாற்றத்தை கவனிக்க வேண்டும்.. இதையெல்லாம் அலட்சியப்படுத்தி எத்தனை பேரை பலி வாங்க இருந்த…” என்று கடிந்து விட்டு திரும்பினான்.
அரைமயக்கத்தில் இருந்த மூதாட்டியை அமர வைத்து குளிர் பானம் கொடுத்து ஒருவர் ஆசுவாசப் படுத்திக் கொண்டு இருக்க, இளம் பெண், அவரின் கைப்பையில் இருந்து மாத்திரை தேடி எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். இரண்டு வயது சிறுவன் மதிவதனாவின் கைகளில், அவள் தோளை சுற்றிய கரங்களுடன் இருப்பது கண்டு சிறு முறுவலுடன் அருகில் செல்லப் போனவனின் பார்வை, கண்களைத் திறந்து பார்த்து மாத்திரையை வாங்கி வாயிலிட்டுக் கொண்டிருந்த முதியவளின் முகத்தில் நிலைத்ததும், பாதங்கள் நகராமல் அப்படியே நின்றன..
முறுவலானது… உறைந்து.. இருந்த சுவடே இன்றி காணாமல் போக சட்டென்று எதிர்புறமாக திரும்பியவன், கண்களை மூடி ஒரு நொடி நின்றான்.. ஓட்டுனரை பார்த்துக் கொண்டிருந்த, பாதுகாப்பு ஆட்களில் ஒருவரை தலையசைத்து அருகில் அழைத்தவன், அவரிடம் மெல்லிய குரலில் சில கட்டளைகளை இட்டு விட்டு, “ வதூ…” என்று ஒரு குரல் கொடுத்து விட்டு தன் வாகனம் நோக்கி விரைந்து சென்றான்.
அவனின் குரலில் திரும்பியவள்… அவனின் வேகம் கண்டு திகைத்துப் பார்க்க, பாதுகாப்பு வீரர் விரைந்து சென்று,
“மேம், ஸர் உங்களை உடனே வரச் சொன்னார்..” என்று விட்டு..
அந்த இளம்பெண்ணிடம், “உங்களுக்கு இங்கே இருந்து கார் ஏற்பாடு செய்து தரச் சொன்னாங்க, உங்க கார் ரிப்பேர் ஆன மாதிரி இருக்கு.. சரி செய்ய…… ” என்று பேசிக் கொண்டு இருக்கையிலேயே,
விரையும் கணவனைப் பார்த்தவாறே மதிவதனா சிறுவனை தாயிடம் கொடுத்து விட்டு, ஆங்கிலத்தில், “ இவர் செக்யூரிட்டி சிஸ்டம் சேர்ந்தவர்.. உங்களுக்கு துணையிருப்பார்… பாதுகாப்புடன் அனுப்பி வைப்பார்.. வருகிறேன்..” என்றவாறு நகர முற்பட,
அவளின் கரம் பற்றிய அப்பெண்,
“தேங்க்யூ சோ மச்.. நீங்கள்…?” என அவளைப் பற்றி அறியும் ஆவலில் கேட்க,
“நான்.. மதிவதனா… மதிவதனா இராஜா ஜெயவர்மன்..” எனவும்,
அதிர்ந்து.. பற்றிய கரத்தை விட்டு விட்டு திகைத்துப் பார்த்தாள் அவள்….
நிரஞ்சனா தேவி…
இராணி நிரஞ்சனா தேவி இராஜா ஆதித் வர்மன்.
*************************
அனுமதி 26
****************
அன்று…
இளவரசி சந்திர வதனாம்பிகை தன் தோளில் விழுந்து மார்பில் ஊஞ்சலாடிய மணம் கமழும் மலர் மாலையை பற்றியவாறு நிமிர்ந்து பார்க்க, மருதத்தின் மல்லிகை, குவளை முதலான பல நறுமலர்களும், பொற்காசுகளும், தலை முதல் பாதம் வரை தஞ்சமடைந்து மேனி மின்ன நின்றிருந்த தோற்றம் கண்டு அனைவரும் ஆச்சரியக் குரல் எழுப்பினர்.
அனைவரின் கவனமும் அம்புகள் வந்த திசை நோக்கித் திரும்ப, அப்புறமும் திரும்பாமலே மீசையை வருடியவாறு சிரித்துக் கொண்டார் கொடை நாட்டின் வேந்தர் இராஜ குலோத்துங்க மாறவர்மர்.
ஒரே நேரத்தில், நான்கு சரங்களை தொடுக்கும் வல்லமை, அவனியில் அவரின் குமாரனன்றி யாருக்கும் இல்லை என்ற பெருமிதத்துடன், தன் பட்டத்து அரசியைப் பார்க்க, அவரின் பார்வையோ, மருத இளவரசியின் மங்கலத் தோற்றத்தில் நிலைத்து நின்றது.
யானை பிளிறும் ஒலி கேட்டு நிமிர்ந்த இளவரசியின் கண்கள், வீரசேனன் பாகனாய் அமர்ந்திருக்க, வில்லை ஏந்தியவாறு.. அம்பாரியில் அமர்ந்திருந்த சிம்ம வர்மனின் மீது இரு வேல்களெனப் பாய்ந்தன.
தனது பார்வையை அவள் மீது பதித்திருந்த இளவலுக்கு, அவளின் விழியில் கண்ணிமைப் பொழுதில் வந்து மறைந்த மின்னலும், சிறு உதட்டுச் சுழிப்பும்… ஓவியமெனப் பதிய, அவளின் கரங்கள் பற்றியிருந்த மலர் மாலையை பெருமிதத்துடன் நோக்கியவன், புன்முறுவலுடன், வில் அதனை வைத்து விட்டு எழுந்து, வீரசேனனின் தோள் பற்றி, அம்பாரியினின்று இறங்கத் தலைப்பட்டான்.
தன் தலைவனின் நோக்கம் புரிந்து, தன் முன்னங்கால் மடக்கி உயர்த்திய தன் யானையின் மத்தகத்தை தடவிக் கொடுத்து தன் பாராட்டை தெரிவித்து விட்டு, கழுத்தை சுற்றியிருந்த கயிற்றை பற்றி, வழுக்கியவாறு இறங்கினான் இளவல் சிம்மவர்மன்.
அவன் பின்னேயே, இறங்கிய வீரசேனனுடன் இணைந்து வீர விளையாட்டு சதுக்கம் வந்தவனின் முரட்டு விழிகளின் பார்வை இம்மியளவும் இளவரசியை விட்டு நகரவில்லை.
சற்று முன் சுட்டெரித்த பகலவனின் கோபத்தைக் குறைப்பது போல, கிழக்கிலிருந்து
வேகமாக காற்று வீசத் தொடங்கியது.
இளவலைக் கண்டு சளசளத்த மக்கள் கூட்டமானது, விருந்தினர் வருகை அறிவிக்கும் கட்டியக்காரன் உரத்து பேசத் தொடங்கியதும் அமைதியானது..
கொடைநாட்டின் இளவலின் பெயரை, அவன் அடைந்த வெற்றிகளை… பெற்ற பட்டங்களோடு, அவனின் வீரத்தை, தீரத்தை உரக்க சொல்லவும்… அனைவரும் வாழ்த்தொலி எழுப்ப.. இராஜா ஜெய சிம்மவர்மன் அழகிய முறுவலுடன், ஏறு போல் நடையுடன், மருத மன்னர் பெருவளத்தான் இருக்கும் இடம் வந்தவன், தன் பார்வை சிறையினின்று இளவரசியை தற்காலிகமாக விடுவித்தவனாய், மருத மன்னரின் நீட்டிய கரங்களைப்பற்றி அவரின் அன்புத் தழுவலுக்குள் அடங்கினான்.
தன் உயிரான குமாரத்தியின் உயிர் காத்த இளவலின் புகழ் பாடி.. அவர் நன்றியுரைக்க, அவருக்கு தக்க மறுமொழி கூறியவனின் விழிகள், மீண்டும், மீண்டும் இளவரசியின் முகமலர் நாடுவது கண்டு, அங்கிருந்த வெற்றிவேந்தனின் உள்ளம் தீப்பிடித்தது போல் எரியத் தொடங்கியது. தனது உரிமை நிலை நாட்டுபவனாய், அவள் பக்கமாய் நகர்ந்து.. சிம்ம வர்மனின் பார்வையிலிருந்து அவளை மறைத்தார் போல நின்றான்.
“இளவலே… நான் மட்டும் அன்று ஆனைமலைக்கு உடன் சென்றிருந்தால் இளவரசியை ஆபத்து நெருங்கியே இருக்காது. இனி மன்னரின் ஆசைப்படி, காவலனாக எப்போதும் சந்திராம்பிகை உடனிருப்பேன்..” என அவன் அழுத்தம் கூடிய குரலில் மொழிய, இளவலின் முகம் முறுவலை இதழ் கோடிக்கு நகர்த்தி, எள்ளலாக மாற்றி, புருவங்கள் உயர்ந்தன..
வெற்றி வேந்தனைக் கடந்து முன்னே வந்த சந்திராம்பிகை, “தந்தையாரே! பொழுது கடந்து கொண்டே செல்கிறது… வானம் வேறு நிறம் மாறுகிறது. அனைவரும் விருந்துண்ண செல்லலாமே…” எனவும்,
கொடை நாட்டின் இளவல், “செல்வதற்கு முன்பு, இந்த மக்கள் அவையில் கொடை நாட்டின் சார்பில் கோரிக்கை ஒன்று உளது வேந்தே..” எனவும், அவனை நிமிர்ந்தும் பாராமல் சந்திராம்பிகை, மெதுவாக தன் கழுத்தில் இருந்த மாலையை கழற்றியவள், எதிர்புறமாக திரும்பி நின்றாள்..
காதல் சமரில் புறமுதுகு காட்டும் மனம் கவர்ந்தவளை ரசித்த சிம்ம வர்மனோ, கேட்க நினைத்தது நினைவு வந்தவனாக, தன் தந்தையான கொடை நாட்டின் மாமன்னர் மாறவர்மரை நோக்கினான்.
அவர் தம் கம்பீரக் குரலில், “எனது தோழன் வேணாடு மலைய மாறன் குமாரனும், கொடை நாட்டின் இளவல் சேனை தலைமை நாயகனுமான வீர வேழசேனனுக்கு.. மருத நாட்டின் மாசேனை நாயகர் மருத நாயகத்தாரின் குமாரத்தி வசந்த மாலையை, மாப்பிள்ளை வீட்டாராக நின்று நாங்கள் பெண் கேட்கிறோம்.
வீர வேழ சேனனுக்கு தந்தையும் தாயுமாக, யானும் என் பட்டத்து அரசியும் பொறுப்பேற்று இருக்கிறோம். பெண் வீட்டார் சம்மதித்தால், இந்திர விழா நிறைவு நாளான இன்றே நிச்சயம் செய்து மணவோலை எழுதி விடலாம்.” எனவும், மருதநாயகமும் வெற்றி வேந்தனும் அதிர்வுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
இந்த பெண் கேட்பு முடிவை, இது வரை அறியா வீரசேனனே, மிகுந்த அதிர்விற்கு ஆட்பட்டு இளவலை திரும்பி பார்க்க.. தொடர்ந்து பேசிய கொடை நாட்டின் வேந்தர்,
” தங்களுக்கு விருப்பம் என்றால், இப்போதே தங்களின இல்லம் வந்து முறைப்படி எல்லாம் செய்ய தயாராக இருக்கிறோம்..” என்று கூற..
மருதநாயகம் யோசனையோடு தன் குமாரத்தியின் முகம் பார்க்க, வெட்கப் புன்னகையுடன் அவளின் பார்வை வீரசேனனைத் தொட்டு விட்டு, நிலம் நோக்கியதையும், மகிழ்வால் பூரித்த உடலுடன் அவள் நிற்பதையும், கண்டவரால் மகளின் உள்ளம் உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஆயினும், சற்றே சிந்தனை வயப்பட்டவராய், “திருமணத்திற்கு சம்மதம் தான் கொடையின் வேந்தே.. இன்றே அனைத்தும் செய்ய என்ன அவசரம்?” என மெதுவாக கேட்க,
வேந்தர் மாறவர்மரோ, “தங்களின் நிலை புரிகிறது மாசேனை நாயகரே.. அவர்கள் இருவரும் கருத்தொருமித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன.. அது மட்டுமன்று… வேழனின் பிறந்த நேரக் குறிப்பின் படி நிமித்தம் பார்த்த போது, இந்தத் திங்களுக்குள் திருமணம் நடந்தேற வேண்டுமாம்.. அதுவும்.. போருக்கு செல்லும் முன் அது நிகழ்வது, அவனது ஆயுள் பலத்திற்கு நன்று.. என்று அவனின் தாய் மாமன் திரும்ப திரும்ப வலியுறுத்தியுள்ளான். சற்றே யோசனை செய்து நல்ல பதிலாக கூறுங்கள்.” என்று விட்டு தன் பொறுப்பு முடிந்தாற்போல அமைதியாக..
மருத நாட்டு மன்னனான பெருவளத்தான், வானில் குவியும் கார்மேகங்களையும், குளிர்ந்த காற்று சுழலுவதும், இருள் சூழ்வதும் கண்டு, “இந்திரவிழா நிறைவு நாளன்று மழை பொழியும் என்பது நமது நம்பிக்கை. அது தொன்று தொட்டு இன்று வரை நிகழ்வதும் கூட.. இன்னும் சற்று நேரத்தில் அது நிகழலாம்..” மருதநாயகத்தை நோக்கி, “இப்பேச்சு தொடங்கியதும் இப்படி வானம் மாறியது மிக நல்ல நிகழ்வு மருதா… தேவர்களின் ஆசி இந்நிகழ்விற்கு உள்ளது என்று பொருள். சரியென்று சொல்லு..” என சொல்லவும்,
சம்மதமாய் அவர் தலையசைத்த கை நொடிப் பொழுதில் சடசடவென மழைத் துளிகள் மண்ணில் வந்து விழுந்தன..
அனைவரும் ஆனந்தத்துடன் மழையை ரசிக்க, மருத நாட்டின் தென்னை மற்றும் பனை ஓலைகளால் ஆன குடைகளை எடுத்துக் கொண்டு அரண்மனை பணியாளர்கள் விரைந்து வந்தனர்.
சிறு துளிகள் பெருந் துளிகளென மாற, நனைந்தவாறே அனைவரும் வேகமாக நகர, கூட்டமாக நகர்ந்ததில், தன்னருகில் நகர்ந்து வந்த இளவரசியின் இடையை வளைத்துக் கொண்டன இளவலின் முரட்டுக் கரங்கள்.. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவள், அச்சமின்றி அவளின் முகத்தில் நிலைத்த அவனின் ஆழமான பார்வை கண்டதும், எதற்கும் அஞ்சாத சந்திராம்பிகையின் உடலில் ஒரு நடுக்கம் பரவியது..
அது குளிரினாலா.. அவன் கரங்கள் தந்த உணர்வினாலா.. என திகைத்தவள், மெதுவாக அவன் கரத்தின் மேல் தன் விரல்களால் பற்றி விலக்க முற்பட, அவையோ இடையோடு பசையிட்டு ஒட்டிக் கொண்டது போல அழுத்தம் கூடுவது கண்டு திணறியவள் சுற்றிலும் பார்க்க, அவனின் இழுப்பில், சதுக்கத்தை ஒட்டியிருந்த சிறு மண்டபத்தை அடைந்திருந்ததை அப்போது தான் உணர்ந்தாள்.
தனது அருகிலேயே தந்தையார் நிற்பதைப் பார்த்தவள், அவர் புறமாக நகர முயல, இவனின் பிடியில் அது முடியாமல் போவது உணர்ந்தவளிற்கு, சிறு சினம் தலை தூக்க, நிமிர்ந்து இளவலின் கண்ணோடு கண் நோக்கி உறுத்து விழிக்கவும், அவனின் விழிகள் மட்டுமன்றி இதழ்களும் அவளைக் கண்டு நகைத்தன.
அடர்ந்து பெய்த மழை வெளியே பூமியைக் குளிர வைக்க, மண்டபத்தின் உள்ளே, பூவுடலின் நெருக்கத்தினால் இளவலின் உடலோ வெப்பம் கூட… பளீரென்ற மின்னல் ஒளியில் பாவையவளின் முகம் கண்டவன், தன்னையும் மீறி உணர்வு வயப்பட, வெளியே முழங்கிய கோடையிடியின் ஒலியை விட உரத்து ஒலித்தது.. அவனின் நெஞ்சு துடிக்கும் ஒலி..
“வதூ….” எனும் அவனின் கரகரத்த குரலை தன் செவியருகே சீறலாய் கேட்டு விதிர்த்தவள்.. மயங்கத் தொடங்கிய தம் புலன்களின் நிலை கண்டு அஞ்சி.. நீருக்குள் மூழ்குபவளின் கடைசி பலம் கொண்டவளாய் சட்டென்று நகர்ந்து.. தன் தந்தையை தாண்டிச் சென்று நின்று கொண்டாள்… தலை நிமிர்ந்து வெறித்து நின்றவளின் விழிகளின் செவ்வரியோட்டம் கண்ட சிம்மனின் கண்கள் சுருங்க, மீண்டும் மீண்டும் தனை மறுக்கும் அவளை, அவள் மட்டுமே வேண்டும் என துடிக்கும் தனது மனதை, உயிர் வரை சென்று உருக்கும் இவ்வுணர்வை என்ன செய்வது என எண்ணிய இளவலின் முகம் கடுமையை பூசிக் கொண்டது.
**********************
தன் முன்னே விரிந்த துணியில், வரையப் பட்டிருந்த, தென் பாரதத்தின் படத்தில், மருதநாட்டின் வரை படத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தன, சோம பானத்தால் சிவந்திருந்த விழிகள்.
அதன் வட எல்லையில் படைகள் குவிக்கப் பட்டிருந்த இடங்களை சரியாக, ஒரு விரலால் சுட்டியவாறே தொடர்ந்து வந்து, மருதபுரிக் கோட்டை போல் வரைந்த இடத்தைக் குத்தி, பின் குதித்தோடி சாளவ கோட்டையை சுண்டுவது போல் செய்தவனின் கருமலை போன்ற உடலானது பூகம்பம் வந்தது போல குலுங்க, இடிஇடியென நகைத்தான்… அவன்… அவன்….?
*****************
இன்று…
ஜெயவர்மனின் வாகனம் இப்போது எண்பதில் நிதானமாக சென்று கொண்டு இருந்தது.. அவனின் இறுகிய முகத்தில் இருந்து எதையும் கணிக்க இயலாதவளாய், அமைதியாய் இருந்தாள் மதிவதனா…
“இப்படித் தான் மதம் பிடித்த யானைக்கு பக்கத்தில்.. உயிரை பணயம் வைத்து போவாங்களா!!” என வாகனத்தில் ஏறி சில நிமிடங்களில்… சிறு கண்டிக்கும் குரலில் அவள் சொல்ல.. அவன் அவளின் புறமாக திரும்பினால் தானே…
அதற்கு மேல் அவனிடம் ஏதும் கேட்க இயலாமல் அவனின் உடல் மொழியும், பாதையில் கவனமாக இருப்பது போன்ற நடவடிக்கைகளும் தடுக்க, அமைதியாக அவனையும் பாதையையும் பார்த்தவாறு வந்தாள்.
கடல் புறம் நெருங்கி விட்டதை வேகமாக வீசும் காற்றும், வித்தியாசமான பறவைகளும் சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்தில் ‘வர்க்கலா’ என ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இருந்த போர்டைத் தாண்டி வேகமாக சென்ற ஜெயவர்மனின் வாகனம், கறுப்பும் தங்க நிறமுமாய் மினுமினுத்த RJV ரிசார்ட்ஸ் & ரெஸ்டாரண்ட் என்ற பெரிய பெயர் பலகையைத் தாங்கி நின்ற அலங்கார வளைவின் உள்ளே நுழைந்தது.
பல வித மரங்களும் பூக்கள் தாங்கிய செடிகளும் கொண்டு இயற்கையோடு இணைந்து மிளிர்ந்த, அந்த இடத்தின் அழகிலும், அமைப்பிலும் கவரப் பட்டவளாக பார்த்தவள், “வாவ்! இதுக்கு லேண்ட் ஸ்கேப்பிங் யார் ஐடியா!! சூப்பரா இருக்கு..” என்றாள் ரசனை மின்னும் விழிகளோடு..
அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் குறைந்தது போல, திரும்பி அவளைப் பாரத்தவன், “ நம் கன்ஸ்ட்ரெக்ஷன் ஸ்பெஷாலிட்டி அதான்.. இயற்கையான அழகு.. உயிரோட்டமுள்ள டெக்கார்ஸ் ப்ளஸ் ஈக்கோ ஃப்ரண்ட்லி…”
“ஓ….” என்றவளின் விழிகள் அவ்விடத்தின் அழகை உள்வாங்கிக் கொள்வதில் ஆர்வமாக இருக்க, பசுமை கரை கொண்ட ஓடுபாதையானது இரண்டாக பிரிய, ரிசார்ட்ஸ் பக்கமாக திரும்பி,
பெரிய இரும்பு வேலி மற்றும் கதவுகள் கொண்ட ஒரு தனிப்பட்ட பகுதியில் நுழைவது கண்டு திரும்பிப் பார்த்தாள்.
அவளின் பார்வை புரிந்தவனாய், “ரெண்டு வருஷமா எனக்கு இது தான் ஆஃபீஸ் கம் வீடு.. இங்கே தான் இன்று வோர்க். ” என்றவன் லாக் ரிலீஸ் செய்து கீழே இறங்கினான்.
வரவேற்கும் விதமாக வாசலுக்கு விரைந்து வந்தார் அவனின் உதவியாளரான வர்கீஸ். தனது வழக்கமான வேக நடையில் நுழையப் போனவன், நிதானித்து திரும்பி பார்த்து அவள் இறங்கி, அருகில் வரும் வரை காத்திருந்தான்.
பாதுகாவலர்கள் வழக்கம் போல் சுற்றி நிற்பதை ஒரு பார்வையால் அளந்த படி,
“இன்று லஞ்ச்… கம்பெனி சார்பில கொடுக்க சொல்லிருந்தேனே.. அது முடிஞ்சதும், மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க.. RJV கம்பெனீஸ் ஜாயிண்ட் எம்டி ய எல்லோருக்கும் அறிமுகம் செய்யனும்.. அதுக்கு பேப்பர்ஸ் வந்துருச்சா லாயர்ட்ட இருந்து..?” எனவும்,
“ஆமா இராஜா சர்..” என அவர் பதிலுரைக்க, வினோதமாக பார்த்து, “என்ன அழைப்பு புதுசா இருக்கு..!” என,
“இராணி வந்துட்டா.. ‘இராஜா..’ ன்னு அழைக்குறது தான் சமஸ்தான வழக்கம்..” எனவும்..
“ஓ.. பிடிக்காதுன்னு தெரிஞ்சும் கூப்பிடுவீங்களா?!” என நிதானமாக கேட்க, அவசரமாக வாய் பொத்திக் கொண்டார் அவர். அழுத்தமேற்றிய குரலில், “வேணாம்.. இந்த பட்டம் எல்லாம்.. வழக்கம் போல கூப்பிடுங்க.. சீக்கிரம் பெண்டிங் ஃபைல்ஸ் எடுத்துட்டு வாங்க..” என்றவன் தன் அறை நோக்கி நடந்தான்.
அவனின் மளமளவென்ற மலையாள பேச்சில் பாதி புரிந்தும் புரியாதவளாய் உடன் நடந்த மதிவதனா, வர்கீஸ் நகர்ந்ததும், “நான் முதல்ல மலையாளம் கத்துக்கணும்… வரு..” எனவும்,
கூலர்ஸ் ஐ கழற்றி விட்டு அவளைப் பார்த்தவன், “எங்க வரணும் வது…” என நிதானமாய்க் கேட்க..
திகைத்து விழித்தவளின் விரிந்த ஆழ்ந்த அழகிய நயனங்களைக் கண்டவனின் பார்வை மாறியது கண்டு.. அவசரமாக சுற்றி முற்றிப் பார்த்தாள். தன் அருகில் நடந்து கொண்டிருந்தவளின் மெல்லிடையை தன் நீண்ட கரத்தினால் வளைத்து இழுத்து தன் பிடிக்குள் அடக்கியவாறு தன் அறைக்குள் நுழைந்தவன்.. கதவை மூடி விட்டு அதில் அவளை சாய்த்து, இன்னொரு கையை கதவின் மேல் பதித்து அவளை நகர விடாமல் செய்தவன், தன்னைப் பார்க்குமாறு முகவாய் பற்றி உயர்த்தினான்.
அவனின் அதிரடியில் மிரண்டு விழித்தவளின் விழிகளின் அருகில் தன் இதழ்களை கொண்டு சென்றவன், இன்னமும் குனிந்து காதில், உதடுகளை உரசும் நெருக்கத்தில் வைத்து.. ரகசியக் குரலில்,
“வரு….. ன்னு கூப்பிட்டியே.. அதுக்கு வா ன்னு தானே அர்த்தமாகுது.. அதான் தனியா வா..ன்னு கூப்பிடுறியோன்னு கேட்டேன்.. வதூ..” எனவும், கிசுகிசுப்பான குரலும் சுடு மூச்சும் அவளின் காதையும் கன்னத்தையும் அனலேற்ற, அவளின் முகம் குழைய கண்களோ அவனின் முகத்தில் ஆவலுடன் ஊர்ந்தன.
அவளின் காதல் விழிகளில் தனைத் தொலைத்தவனாய், இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மாறி, மனதில் தென்றல் வருடிய சுகம் அடைந்தவன், தன்னவளின் கன்னத்தின் வெப்பத்தை உணர்ந்து… தன் இதழ்கள் கொண்டு குளிர்விக்க முயல,
தன் பூங்கரங்களால் அவனின் திண்ணிய நெஞ்சைத் தொட்டு, “ஹய்யோ.. இவ்ளோ நாள் இப்படி அர்த்தமாகும்னு நீங்க சொல்லவேயில்ல… நா வேற… எல்லார் முன்னாடியும் உங்களை அப்படி கூப்பிட்டுட்டு இருந்துருக்கேன்..” என்று லேசான பதட்டத்துடன்… செல்ல சிணுங்கலாய் கூற,
அவனின் நிலையோ பதில் சொல்லும் வகையில் இல்லை.. கன்னத்திலிருந்து கழுத்து, தோள் வளைவு என பயணம் செய்யத் தொடங்கி இருந்தான். அவனின் நெடிதுயர்ந்த உருவம், இது வரை மறைத்திருந்த அந்த அறையின் உள் தோற்றத்தைப் புலப்படுத்த.. அங்கே மிகப் பெரிய அலுவலக மேஜை மற்றும் நவீன கணிப்பொறி போன்றவற்றைக் கண்டவள்… அவனின் இடை பற்றித் தள்ள முயன்றபடி, “இது உங்க ஆஃபீஸ் ரூமா… உங்க மேனேஜர் இப்போ வரப் போறார்.. விடுங்க வரு..” எனவும்…
தனது பயணத்தை நிறுத்தாதவனாய்,
முனகலான குரலில்,
“ என்னுடைய ரூமிற்குள் என் அனுமதியில்லாம வரும் உரிமை.. எண்ட வதனாக்கு மட்டுமே… பின்னே… காற்று கூட வரமுடியாது…” என்றவன், அவளின் உடலின் விதிர்ப்பையும், இணக்கமில்லா நிலையும் உணர்ந்து, தன்னவளின் சங்கடம் புரிந்து கொண்டவனாய், அப்படியே நின்றான்.
விலக மனமின்றி மெதுவாக விலகியவன், தலை கோதி, சிறுமூச்சுடன் தன்னை நிலைப் படுத்திக் கொண்டு, இரு கரங்களால் இடையை பற்றி இழுத்து தன்னோடு பிணைத்தவன்,
“இது எனக்குன்னு நான் ப்ளான் பண்ணி கட்டினது.. உன் பாஷைல இந்த ரிஸ்ய ஸ்ருங்கனின் தபோவனம்… ஆக்கும்..” என்று சிரிக்க,
அவளை மயக்கும் கன்னக்குழி தோன்றவும், அவளின் பார்வை அங்கேயே நிலைக்கவும், பற்கள் மின்ன நகைத்தவன், “இப்படி… ப்ரேமிச்சு நோக்கிட்டு பக்கத்தில வந்தா.. நெளியுற…” என்றவன் அவளை நடத்திக் கொண்டு போய்.. தன் நாற்காலியில் அவளை அமர வைக்கவும்.. தலையசைத்து மறுத்தவள் எழுந்து, அவனை அதில் அமர வைத்து விட்டு, புன்னகையுடன் இருப்பவனை கண் நிறைத்துக் கொண்டவள்,
ஞாபகம் வந்தவளாய்,
“வரு…” என மெதுவாக அழைத்து, “ஏன் அங்கே.. இருந்து சட்டுன்னு கிளம்பிட்டீங்க..? ”
எனவும்…
அவளின் முகத்தில் விழி பதித்து இருந்தவன், புன்னகை அப்படியே தொடர, “இப்போ ஜோலி நிறைய இருக்கு.. முடிச்சுட்டு சொல்லலாமா வது?” என வலி தோன்றிய கண்களுடன் கேட்க..
அவனின் கண்களைப் படித்தவளாய், “உங்களுக்கு வருத்தம் தர்றத பற்றி… சொல்லவே வேணாம்… எப்பவும்..” என்று விட்டு நகர முற்பட, அவளின் கை பற்றி இழுத்தவன்..
அவள் முகத்தை உற்று நோக்கி.. அதில் புரிதலுடன் கூடிய அன்பு மட்டுமே இருந்தது கண்டு மகிழ்ந்தவனாய்,
“ ம்.. சொல்லனும் நிச்சயமா சொல்றேன்.. அந்த கார்ல இருந்தது எண்ட அச்சனோட முதல் பார்யா இராணி கௌரியம்மா.. கூட இருந்தது… ஆதித் வர்மன் வொய்ஃப் அண்ட் சன் னு நினைக்கிறேன்…” என்றவன்..
அவளின் திகைப்பை கண்டு கொள்ளாமல், ஒரு ஃபைலை அவளின் கையில் கொடுத்து, “ஓகே, இதற்கு மேல விவரம் அப்புறமாயிட்டு பேசலாம்.. நீ இதுல சைன் பண்ணனும். உன்னை ஆர்ஜேவி கம்பெனிஸ் ஜாயிண்ட் எம்டி யா அப்பாயிண்ட் பண்ணிருக்கு..” எனவும்.. முறைத்தவள்..
அதை மேஜை மீது வைத்தவளாய், ” அம்மாவும் பையனும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.. ஆளாளுக்கு ஒரு பொறுப்பை எடுத்து நீட்றீங்க.. எனக்கு நிறைய வேலை இருக்கு… இந்த பொறுப்பெல்லாம் வேணாம்..” என கோபமாக சொல்ல,
ஆச்சரியமாக பார்த்து, “அப்படி என்ன வேலையோ..?” என முகிழ்த்த முறுவலுடன் கேட்க…
கையை அவன் புறமாய் நீட்டி, “ம் ம் இந்த ஜெயவர்மன நிறைய்ய்ய்ய்ய லவ் பண்ணனும்… லவ் பண்ணிட்டே இருக்கனும்.. என்னை.. என் மனசை திருடுன மல்லுவுட் மாக்கான் மனச… நான் மிச்சம்.. சொச்சம்.. வைக்காம கொள்ளையடிக்கனும்..
நிறைய குழந்தைங்களப் பெத்துகிட்டு.. ரிஷ்ய சிருங்கனை அங்கே இங்கே திரும்ப விடாம.. என் பின்னாடி… என் பசங்க பின்னாடியே சுத்தவிடனும்…” என சிரிப்புடன் சொல்ல,
அவள் பேசப் பேச.. கண்கள் மின்ன, வலக்கை விரல்களால் வாயை மறைத்தவாறு கேட்டுக் கொண்டு இருந்தவன்.. விரிந்த முறுவலுடன் எழுந்து அருகே வந்து, அவளின் தோள்களில் கைகளை வைத்துக் குனிந்து, “ ஓ… நல்ல ஜோலிதான்.. எப்படி பண்ணலாம்னு உள்ளே போய் ப்ளான் பண்ணு.. நான் வொர்க் முடிச்சுட்டு வரேன்.. ட்ரை யுவர் பெஸ்ட்..” என சொன்னவன், ஒரு கதவை சுட்டிக் காட்டி, கண்ணடிக்க,
‘அட..’ என்பது போல் பார்த்தவள்,
மோகனப் புன்னகை சிந்தியவாறு அவன் காட்டிய கதவினைத் திறந்து.. அவன் வீடாக பயன்படுத்தும் பகுதிக்குள் சென்றாள்.
****************
திருவனந்தபுரத்தில் தன் அலுவலகத்தில் இருந்த ஆதித் வர்மன், தன் முன்னே இருந்த கணிப் பொறித் திரையை உற்று நோக்கி.. திருப்தியாக புன்னகைத்தான்.
RJV கன்ஸ்ட்ரெக்ஷன் மீது பல வாடிக்கையாளர்கள் தந்த புகார்கள்.. இயற்கையோடு இணைந்து கட்டுமானம் என்ற முறையில் ஏமாற்றி பணம் அதிகம் பெறுவதாகவும், வலுவற்ற கட்டுமானங்கள் அமைப்பதாக பொறியியல் வல்லுனர்கள் குற்றம் சாட்டியிருப்பது போலவும், பல தரவுகள் இணைத்த புகார் ஒன்றை கேரள அரசின் பசுமை காப்பக மேலாண்மையகத்திற்கு மற்றும் உள் துறை செயலகத்திற்கு அனுப்பி இருந்தான்.
அதை மேற்கோள் காட்டி, அரசின் தேன்மலை ப்ராஜக்டை அந்த கம்பெனிக்கு கொடுத்தை ரத்து செய்யக் கோரி, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட மனுவானது விசாரணையில் இருப்பதைக் காட்டும் மின்னஞ்சல் அது..
பல நாட்களாக திட்டமிட்டுச் செய்த வேலை அது. இப்போது தான் பலனளிக்கத் தொடங்கியிருந்தது.. இதை மட்டும் நிரூபித்து விட்டால்.. அடுத்து அவன் கம்பெனிக்கு மிகப் பெரிய கறுப்புப் புள்ளி விழுந்து விடும். அரசாங்கம் அவனுக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்ய வைத்து விட்டால்… அடுத்து அதையே பெரிது படுத்தி.. ஊடகங்களின் மூலமாக அவனின் கம்பெனி பற்றிய நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி… அவனின் கட்டுமானம் தொடர்பான அனைத்து தொழில்களையும்
முடக்கி விடலாம்.
அடுத்து.. அதற்கான வேலைகளையும் தொய்வின்றி செய்ய வேண்டும் என்று எண்ணியவன், காலை நாளிதழில் வந்திருந்த இராஜா ஜெயவர்மன் மதிவதனாவின் வரவேற்பு படத்தை உற்றுப் பார்த்து..
“RJV.. நீ எப்படி.. என்னை தாண்டி ஜெயிக்கிறேன்னு பார்க்கறேன்.. தொழில்னு இல்ல… குடும்பம்னு ஒண்ணும் இந்த ஜென்மத்தில் உனக்கு கிடையாது… அந்த அரண்மனை ராசி அப்படி.. அங்கேயே உன் வாழ்க்கை ஆரம்பிச்சுருக்கே…
ஆரம்பிச்ச வேகத்தில நான் முடிச்சு வைக்கிறேன்…” என மெல்லிய குரலில் சொல்ல, அலை பேசி இன்னிசை எழுப்பியது. எடுத்தவன் அந்தப் பக்கம் ஒலித்த மனைவியின் குரல் கேட்டு புருவங்கள் முடிச்சிட அமைதியாய் நின்றான்.
“ இப்போ நீங்க ஸேஃப்.. ரைட்?! திரும்பி வந்துட்டு இருக்கீங்களா? ஹாஸ்பிடல்லயா.. ப்ரபஞ்சன் என்ன பண்றான்?? அவன் பயப்பட மாட்டான். யானையைப் படையாக வைத்திருந்த இராஜ பரம்பரையின் இளவரசன் அவன்..
ம்.. ம்… யார் காப்பாற்றினா….”
முகம் இறுக, “பாட்டிக்கு இது தெரியுமா… ஓகே. நீ அங்கேயே இரு நான் வரேன்…” என்றவன் அலைபேசியை நிறுத்தி விட்டு, ஜன்னலின் ஓரம் சென்று வெறித்தான்..அவன் மனதில் ஓடுவது என்ன?
*****************
அனுமதி 27
****************
அன்று…
கோடை மழையினால் கழுவப்பட்டு மருதபுரிக் கோட்டையானது தகதகவென மின்ன, முன்னிலும் அதிக உற்சாகமாய் இந்திர விழா களை கட்டி இருந்தது.
மழை ஓய்ந்ததும் தந்தையாருடன் அரண்மனை திரும்பிருந்த இளவரசி தன் ஈர உடையை மாற்றி விட்டு, இடை தாண்டி தோகையென நீண்ட கூந்தலை விரித்து, மஞ்சத்தில் சாய்ந்து அமர, சேடிப் பெண்கள் அனல் கக்கும் கங்குகளை எடுத்து வந்து அகில், சந்தனம் முதலான பொடிகளை இட்டு கூந்தலின் ஈரம் ஆற்றிக் கொண்டு இருந்தனர்.
தீவிர சிந்தனையில் இருந்தவளை மணியோசை அழைக்க, நிமிர்ந்தாள். பணி மகள் ஒருத்தி பணிவுடன் வந்து வணங்கி, “ கொடை நாட்டின் பட்டத்தரசி பதுமன் தேவியார் பரிசுகள்.. கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் தேவி..” என்றவுடன், இரு பெண்கள், இரு பெரிய தட்டுக்களை கொணர்ந்து வைத்தனர்.
புதிய பட்டாடைகளும், கொடை நாட்டின் சிறப்பு மிக்க யானைத் தந்தத்தினால் செய்யப் பட்ட அணிகளும் பொன்னாபரணங்களும் அவரின் பரிசாக வழங்கப்பட்டிருந்தன.
அவள், “விருந்திற்கு இளவரசியார் இவற்றை அணிந்து வர வேண்டும் என்பது மஹாராணியாரின் ஆவல் என்று சொல்லச் சொன்னார்களாம்..” எனவும், ஒரு கைநொடிப் பொழுது யோசித்தவள், சம்மதமாய் தலையசைத்து அமைதியாய் அமர்ந்து தன் சேடிப் பெண்களின் அலங்காரங்களுக்கு உடன்பட்டாள்.
வெண்ணிறத்தில் பொன் கம்பிகள் ஓடிய பட்டாடை அணிவித்து, தந்தத்தினால் செய்த ஆபரணங்களை பொன் நகைகளுடன் பொருந்துமாறு அணிவித்ததும்.. வானத்து நிலவு தான் மண் மீது இறங்கி வந்து விட்டதோ என ஐயுறும் வண்ணம் ஒளிர்ந்த தங்களின் இளவரசியின் அழகைக் கண்ட தோழியர், பெருகிய ஆவலுடன் மருதத்தின் சிறப்பான மல்லிகை மற்றும் தாழம் மடல்கள் கொண்டு கூந்தலைப் பின்னி, அணி செய்தனர்.
பொன்மலர் நாற்றமுடைத்து எனும் கூற்றிற்கு புதுப் பொருளாக.. பொன்னென மின்னும் மேனியள், மலர்களையும் மிஞ்சும் நறுமணத்துடன் நின்றிருக்க, அவளின் வதனமோ தன் அழகை உணராததாய் சிந்தனை வயப்பட்டு, உணர்வற்று இருந்தது..
அதே நிலையில் பனிப் பாவை போல், விருந்து மண்டபத்தை அடைந்து அனைவருக்கும் பொதுவாய் கரம் குவித்தவளைக் கண்ட இந்திர விழா நிறைவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும், தம்மைத் தாக்கிய தண்ணொளிப் பேரழகில் உறைந்தவராய்.. பேச்சற்றுப் போயினர்.
முதலில் உணர்வு நிலை அடைந்தது பதுமன் தேவியார் தான். தனது பரிசுகளை இளவரசியார் ஏற்றுக் கொண்ட பாங்கில் மனம் மகிழ்ந்தவர், கைத்தலம் அதனை பாசமுடன் பற்றிக் கொண்டவர், அவளின் அழகைப் புகழ்ந்து பாராட்ட, மெல்லிய முறுவல் சூடிய முகமானது.. மறந்தும் இளவல் பக்கம் திரும்பி விடக் கூடாது என்பது போல மஹாராணியாரின் முகத்திலே விழிகளை நிலைக்க வைத்தவாறு இருக்க… அரசியாரை அடுத்து தந்தை மற்றும் வீரசேனன் நடுவில் நின்றவாறு பனைநீரை அருந்திக் கொண்டிருந்த இளவலின் நிலையோ, சொல்லில் வடிக்க இயலாததாய்…
சந்திராம்பிகை அழகென்று தெரியும்..இவ்வளவு அழகா!!!!
தனக்கான மின்னலை அவளின் கண்களில் கண்டதிலிருந்து.. தன்னவளாகவே எண்ணத் தொடங்கியிருந்தவனின் கண்களும் இதயமும் துடிக்க மறந்தவை போல் இருக்க, தடையற்று அவளின் உச்சி முதல் பாதம் வரை வருடியவாறு சுற்றுப்புறம் பற்றிய கவனமின்றி வெறித்து நிற்பதைக் கண்ட வீரசேனன்… லேசான முறுவலுடன் அவனின் விலாவில் இடித்ததும், உணர்வு பெற்றவனாய், இளவரசன் சிம்மவர்மன் கண்களைச் சிமிட்டி.. தன் இடக் கையால் விழிகளைத் தேய்த்து விட்டுக் கொண்டான்..
நிலவு ஒளிரும் அறிவான்… பெண்ணின் முகமும் ஒளிர்வதை இன்று தான் பார்க்கிறான் அவன். ஒளியினால் கண்கள் கூசுவது போன்ற உணர்வு..
கையிலிருந்த கோப்பையைக் கீழே வைத்தவன்.. அவளின் விழிகளோடு தன் விழிகளைக் இணைக்க முயன்று, அது நிகழவில்லை எனவும், சில நாழிகைகள் முன்பு, மண்டபத்தில் அவள் தன் பிடி விலக்கிச் சென்றதை நினைவு கூர்ந்தவனிற்கு மறந்து இருந்த சினம் மீண்டும் வந்து சூழ… திருப்பிய பார்வையில், மருத மன்னர் அருகில் நின்று கொண்டிருந்த வெற்றி வேந்தனைக் கண்டான்.. அவனின் முகத்தில் தெரிந்த இறுமாப்பில், மாய வலை அறுபட்டது . சற்று முன் உணர்ந்த மயக்கம் மறைய.. அவ்வளவு நேரம் இனிமையாய் இருந்த பனைநீர்ப் பானம், கசப்பது போன்ற உணர்வில் கீழே வைத்தான்.
என்ன மாதிரியான ஒரு நிலை!! இந்த வெற்றி வேந்தனை எல்லாம் ஒரு எதிரியாக பொருட்படுத்தும் நிலைக்கு தனை இறக்கிய சூழல்.. தன் மன உணர்வுகள் மீது தான் கோபம் வந்தது இளவலுக்கு. .
மிகச் சுவை படத் தயாரிக்கப் பட்டிருந்த மருதபுரியின் விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட, இளவரசி சந்திராம்பிகை அனைவரையும் தனிப்பட்ட முறையில் அருகில் சென்று விசாரித்து, உபசரித்தவாறு வந்தாள்.
பணியாள் ஒருவர் தேனிலிட்ட முக்கனிகளை வைத்தவாறு வர, இளவரசியை பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்த சிம்மவர்மன், தனது அருகில் வந்ததும் நிமிராமல் கடந்து செல்லும் அவளைக் கண்டவாறே, கனிகள் பரிமாற வந்த பணியாளின் கரங்களைத் தடுத்தவன்..
சிறு குரலில், “வேண்டாம்.. இனிப்பு உண்ணும் மனநிலை இல்லை..” எனவும்,
அவனின் குரலில்.. நடை மறந்து நின்றிருந்தவளின் ஓர விழிப் பார்வை அவன் மேல் பட்டதோ.. சிறு மூச்சுடன் திரும்பி அவனருகில் வந்து, பணியாளிடமிருந்து பாத்திரத்தை வாங்கியவள், தன் கரங்களால் பழக் கலவையை எடுத்து, அவனின் சம்மதத்திற்காக நிமிர்ந்து முகம் பார்க்க, இளவலின் உதடுகளில் இடப்புறமாய் நீண்டு விரிந்த முறுவலைக் கண்டவள், குனிந்து கனிகளைப் பறிமாறினாள்.
‘போதுமா?!’ என்பது போல் நிமிர்ந்து பார்க்க இளவலின் கண்கள், தன் முகத்தில் நிலைத்து இருப்பதையும்.. கரங்கள் நீண்டு மாம்பழத் துண்டை எடுத்து வாயிலிடுவதையும், வழிந்த கனிச் சாற்றுடன் கலந்த தேனை நாவால் உள் தள்ளுவதையும்
கண்டவளின் முகம் ஏனோ சிவக்க, அவசரமாய் தலை திருப்பி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
அனைவரும் பேசிக் கொண்டே உண்ணுவதில் கவனமாயிருக்க, இந்த சில நொடிகளின் நிகழ்வு இளவலின் அருகிலிருந்த வீரசேனனின் கண்களிலும்.. எதிரில் அமர்ந்திருந்த வெற்றி வேந்தனின் கண்களிலும் மட்டுமே பட.. ஒருவனின் மனமோ குதூகலத்தில் கும்மாளமிட.. மற்றவனின் மனமோ வெஞ்சினத்தில் துடிக்கத் தொடங்கியது.
விருந்து முடிந்து அனைவரும் தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்த வேளையில், அறையின் நடுவில் வந்து நின்றான் வெற்றி வேந்தன். கொடை நாட்டின் மன்னரைப் பார்த்து,
“ எனது உடன் பிறந்தவளை பெண் கேட்ட தங்களின் கோரிக்கைக்குத் தந்தையார் சம்மதம் தெரிவித்து விட்டார் வேந்தே! தங்களின் விருப்பப் படியே.. இன்று மாலைப் பொழுதில் திருமண நிச்சயம் மற்றும் மணவோலை எழுதும் நிகழ்வை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து இருக்கிறோம்.” என்றவன் தனது பார்வையை இளவரசியின் மீது வைத்து,
“அந்த நிகழ்வோடு எனது திருமணத்திற்கான பெண் கேட்பும்.. நிச்சயமும் கூட செய்ய உள்ளோம்.. எனது தந்தை வழி அத்தையாரின் புதல்வி, கார்குழலியோடு எனது மணவாழ்வை இணைப்பது என்பது என் குடும்பத்தினரின் ஆவல்.. அதற்கு நானும் சம்மதம் கூறுவது.. என்று முடிவு செய்துவிட்டேன்.” எனவும்..
மருதத்தின் மன்னரும் இளவரசியின் பாட்டனாரான முல்லைவன வேந்தரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எந்த உணர்வும் காட்டாமல், சிறிதும் அதிர்வின்றி, விழிகளைக் கூட தன்புறம் திருப்பாமல், அமைதியான முகத்துடனிருந்த இளவரசியைப் பார்த்த வெற்றிவேந்தன், அவளின் மனதில் தனக்கான இடம், தன்னுடனான திருமணத்தின் மதிப்பு அவ்வளவுதான் என்று புரிந்து கொண்டவனின் மனதில் வருத்தத்திற்கு பதிலாக வன்மமே தோன்றியது.
அதை மறைத்தவனாய் கம்பீரமாய் தலை உயர்த்தி, “அனைவரும் எம் இல்லப் பெரு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று.. என் சார்பாகவும்… மருதத்தின் மாசேனை நாயகர் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்..” என்றவன் மன்னரை நோக்கி கரம் குவிக்க..
திகைப்பிலிருந்து மீளாதவராய் எழுந்து அவனருகில் சென்றவர், ஆசி கூறுவது போல தலையில் கரம் வைத்து, “வெற்றி வேந்தா… உனது முடிவை உனது தந்தை அறிவாரா.. என்னிடம் இது பற்றி ஏதும் சொல்லவில்லையே.. நாம் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்த… மருத இளவரசியுடனான திருமணம்… பற்றி…”
என சிறு வருத்தம் தொனிக்கும் குரலில் சொல்வதை இடையிட்டு..
முறுவலுடன் வெற்றி வேந்தன், “ மன்னரே! தந்தையார் அதைக் கூற தயங்கியதால் தான், நான் சொல்லும் நிலை ஏற்பட்டது. இம்முடிவு இளவரசியாருக்கும் பெரு மகிழ்வைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.. வருந்த வேண்டாம்.. அரசே..” என சொல்லியவாறு சந்திராம்பிகையை பார்க்கவும், குழப்பத்துடன் இருவரையும் பார்த்தார் மருதத்தின் மன்னர்.
பெருமூச்சினை அடக்கியவனாய் வெற்றி வேந்தன் தன் மன்னனை வணங்கியவாறு, “விழாவிற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க விரைந்து செல்ல வேண்டும்.. விடை பெறுகிறேன்.. வேந்தே!” என்றவன், அனைவரையும் பார்த்து கரம் குவித்து விட்டு திரும்ப… சிம்ம வர்மனின் முகத்தில் ஒரு கைநொடிப்பொழுது நிலை கொண்ட அவனின் பார்வையில் என்ன இருந்ததோ.. சிம்மனின் கண்கள் கூர்மையுற்று ஒற்றைப் புருவம் நெற்றியில் ஏறியது.
வெற்றி வேந்தனின் பேச்சுடன், பார்வையையும் தொடக்கத்தில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்தவனின் கண்கள்.. அடுத்து அவனின் கண்கள் இளவரசியை நாடிச் செல்வதையும்.. பாட்டனாரின் கரம் பற்றி ஏதோ கூறிக் கொண்டு இருந்தவளைக் வருடி நகர்ந்த விழிகளில் இருந்த உணர்வு.. இதழ்களில் வருவித்து ஒட்ட வைத்திருந்த முறுவல்.. அனைத்தையும் கூர்ந்து கவனித்தவனின் உள்மனதில் சிலீரென்ற உணர்வு..
வெற்றி வேந்தன் விடை பெற்றுக் கிளம்பியதும் அவ்விடம் முழுவதும், ஒரு அசாதாரண அமைதி சூழ, அனைவரும் வருத்தமிக தங்களின் வேந்தனைப் பார்க்க, முதியவரான கொண்டல் வண்ணன் திரும்பி மன்னைரைப் பார்த்து தன் கணீரென்ற குரலில்,
“எனில் மாப்பிள்ளை.. தாங்கள்… கொடை நாட்டின் இளவலுடனான பெண் கேட்பை மறு பரிசீலனை செய்தால் என்ன?” எனவும்..
அதிகம் அதிர்ந்தது சிம்மனா.. சந்திராம்பிகையா..
சட்டென்று எழுந்த சந்திராம்பிகை, “மன்னிக்கவும் பாட்டனாரே.. ஏற்கனவே இளவல் அவர்களின் திருமணங்கள்.. கொடை நாட்டின் வேந்தர் அவர்களால் நிச்சயிக்கப் பட்டு விட்டது.. ஒருவனுக்கு ஒருத்தி எனும் என் நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை எனும் போது.. இப்பேச்சு கொடை நாடு, மருதநாடு இடையே தேவையற்ற மன வருத்தத்தை உருவாக்கும்.. இப்பேச்சைத் தொடராமல் இருப்பது நல்லது…” என்றவளின் பார்வை கொடை நாட்டின் வேந்தர் குலோத்துங்க நன்மாறனிடம் பாய, மன்னிப்பை வேண்டுவது போல் கனிந்த முகம், மீண்டும் கம்பீரமாய் நிமிர்ந்தது.
பாட்டனாரின் கரம் பற்றி, “என் திருமணத்திற்கு இப்போதென்ன அவசரம்!? பகை முடித்து களவத்தின் கொட்டமடக்கிய பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று தானே திட்டம்… எனது மனம் நாடும் ஒருவருடன் தான் எனது வாழ்வு இணைய வேண்டும். என் நாட்டின் நலனும்… மக்களின் வாழ்வும் சிறக்க எண்ணும் அரசனே .. எனது வாழ்வின் தலைவனாகவும் இருப்பான்.. அதற்கு திருமணம் கூட…” என்றவள் சட்டென்று நிறுத்தி, “அதாவது.. அவரையே மனதால்.. மணாளனாக வரித்து விடுவேன். கவலை வேண்டாம் பாட்டனாரே..” என்றதும் பெரியவர் திகைத்துப் பார்த்தார்.
தனது பெயர்த்தியின் பேச்சில் ஏதோ உட்பொருள் இருப்தாக அவருக்குப் பட்டது.. ஒரு ஓரைப்பொழுதில் அனைத்தும் தலைகீழாக கவிழ்ந்து மாறி விட்டதாக அவருக்கு குழப்பம் எழுந்தது.
இளவரசி அங்கிருந்தவரை நோக்கி.. அறிவிப்பாய் உயர்ந்த குரலில், “மருதத்தின் நலத்தினையே என்றும் மனதில் நிறுத்தியிருக்கும் நமது மாசேனை நாயகரின் இல்லத் திருமண நிகழ்வு. இரு நல்நிகழ்வுகள் ஒரே சமயத்தில்.. இந்திர விழா நிறைவு நாள் கொண்டாட்டங்களை விட பெரிய அளவில்.. அரச விழாவாக இது நடைபெற வேண்டும்.. எனது ஆசானும், நம் அனைவரின் பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரியவரான வீரவேழசேனரின் வாழ்வோடு.. எனது தாய்க்கு நிகரான அன்புத் தோழியின் வாழ்வு இணையும் பெருவிழா.. எனது மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.. எனவே அனைவரும் அவற்றில் இணைந்து கொண்டாடுவோம்.. தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம்.. மீண்டும் சொல்கிறேன். எனது வாழ்வு மருதத்துடன் இணைந்தது. உயிரும் என் மக்களோடு கலந்தது.. உங்களின் நலனே.. என் நலன் மற்றும்.. மகிழ்ச்சி… நான் மிக்க மகிழ்வோடு இருக்கிறேன். விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள் பெருமொழியாரே!” என அமைச்சரைப் பார்த்து சொல்லவும்.. அனைவரும் எழுந்து தமக்குள் பேசியவாறே கலைந்து சென்றனர்.
புன்னகையுடன் எழுந்த கொடை நாட்டின் வேந்தர், தன் தந்தையுடன் பேசிக் கொண்டு இருந்த சந்திராம்பிகையையே விழி நகர்த்தாமல் பார்த்துக் கொண்டு இருந்த தன் குமாரனின் அருகில் சென்று தோளில் கை வைத்தார். அவனின் பார்வை நிமிர,
“மருதநாட்டின் இளவரசிக்கு தெரிகிறது.. என் வாக்கு காப்பாற்றப்பட வேண்டும் என்று.. அவளின் கொள்கை மற்றும் இலக்கையும் அவள் அழகாக அறிவித்து விட்டாள். இதற்கு மேல் அவளை வற்புறுத்துவது அழகன்று.. உன் மனதைத் திருப்பி, நம் நாட்டின் நலனில் நிலைப்படுத்து குமாரா…” என்று விட்டு வீரசேனனைக் கண்டு,
“உனக்காகத் தான் வந்தேன் வேழா! இவ்வருகையால், மருத இளவரசியின் உயர்வும், இங்குள்ளவர்களின் நற்பண்பும் புரிந்து கொள்ள முடிந்தது நன்மையே.. களவத்திற்கு எதிரான போரில் கலந்து கொள்ள… கொடை நாட்டின் படையும் தயார் நிலையில் இருக்கும். மாலை விழாவில் சந்திப்போம்..” என்றவர் மருத்ததின் மன்னரிடம் விடை பெறச் செல்ல.. அவரைப் பின்பற்றிய பதுமன் தேவியின் முகமோ ஏமாற்றம் சுமந்து இருந்தது.
சிம்மனின் அருகிருந்த வீரசேனன் ஆறுதலான மெல்லிய குரலில், “இளவரசியாரின் மனதில் உங்களுக்கென்று தனி.. உயர்வான இடம் இருக்கிறது.. இளவலே… காதல்.. எதனையும் மாற்றும்.. சரி செய்து விடும்.. அவர்களின் மனதை அவரே உணர சிறிது காலம் ஆகலாம்.. அப்போது கொள்கைகள் கூட மாறிப் போகலாம்.. சற்று பொறுமை தான் தங்களுக்குத் தேவை.” எனவும்,
அவ்வளவு நேரம் வாயை மறைத்து இருந்த விரல்ளை சிம்ம வர்மன் விலக்கவும்.. மலர்ந்த சிரிப்புடன் இருந்த இளவலின் முகம் கண்டு இன்பத் திகைப்பில் ஆழ்ந்தான் வீர சேனன்.
இருக்கை விட்டுஎழுந்த சிம்ம வர்மன், வீர வேழசேனனின் தோள்களில் தட்டி, “ வேழா.. எங்களைப் பற்றிய கவலை விடுத்து.. வாழ்வின் பெருவிழாவின் மகிழ்வை அனுபவி. இளவரசியினை நான் பார்த்துக் கொள்கிறேன்.” எனவும், அதிர்ந்து..
“என்ன..!!” என..
“ம்.. கிளம்பு.. சற்று நேரத்தில் உன் மாளிகை வருகிறேன். வந்து விளக்கமாக கூறுகிறேன்…” எனவும்..
நண்பனைப் பற்றி அறிந்தவனாய் சிறு அச்சத்துடன் அவனின் பாரர்வை செல்லும் இடம் அறிந்து, இளவரசியை திரும்பிப் பார்த்தான்.
“தங்களின் வேகம்…” என ஆரம்பித்தவனை கையசைவில் தடுத்து நிறுத்திய சிம்மன்,
“நன்மையில் தான் முடியும். எழுந்து புறப்படு வேழா..” என்றவன்.. தான் புறப்பட ஏதும் ஆயத்தமாகாதது உணர்ந்த வீர சேனன்,
தலையசைத்து, “இருநாட்டு உறவு..” என இழுக்க..
“ஒரு கேடும் வராது..” என்றவன், “நீ கிளம்பு.. நான் இப்போதே அவளிடம் ஒன்று தெளிவு படுத்த வேண்டும்..” என…
நண்பனை ஆழ்ந்து பார்த்த வீர வேழசேனன், மிகுந்த தயக்கத்துடனேயே எழுந்து.. வெளி செல்லும் வழி நோக்கி நடந்தான்.
**************************
இன்று…
திருவனந்தபுரத்திற்கு வரும் வழியில் இருந்த காரியவட்டம் எனும் ஊரின் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலின் சிறப்பு கவனிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணி கௌரிம்மாவின் அறைக்குள் நுழைந்தான் இராஜா ஆதித் வர்மன்..
கௌரிம்மா மருந்துகளின் உதவியால் துயிலில் ஆழ்ந்து இருக்க, அருகில் இருக்க வேண்டிய நிரஞ்சனாவைக் காணாது சுற்று முற்றும் நோக்கினான். பின்எழுபதுகளில் இருந்தாலும்… மயக்கத்தில் இருந்தாலும்… கம்பீரம் குறையாத, தன்னை வளர்த்த பாட்டி.. தொழில் முதல் வாழ்வின் நெறி வரை அனைத்தும் கற்பித்த தனது ‘காட் மதர்’ரின் அருகில் சென்றவன் அமைதியாக பார்த்தவாறு நின்றான்.
இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்தோ தெரியாமலோ தான் காலையில் இரு முறை தன்னை கோவிலுக்கு வருமாறு அழைத்தார் போலும்.. என்று எண்ணியவன், மனதில் பகையை வெல்லப் போகிறோம் என்றிருக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு மனதில் நெருடலாய்.
அட்டங்கால் சர்க்கராதேவி கோவில் இராணி கௌரிம்மாவின் முன்னோர்களால் கட்டப்பற்றது.. இன்று நடந்த அறுவடைப் பொருட்கள் சமர்ப்பிப்பு பூரம் திருநாளில் இராஜ குடும்பத்தினருக்கு இராஜ மரியாதை வழங்கப்படுவது ஒவ்வொரு வருடமும் நிகழ்வது.. அந்த மரியாதை ஏற்க எப்போதும் இரவீந்திரர் குடும்ப சகிதம் அங்கு இருக்கவேண்டும் என்பது கௌரிம்மாவின் கட்டளையாக இருக்கும். அவனையும் தந்தையையும் இம்முறை வர சொல்லி பலநாட்கள முன்பே கவனப் படுத்தியிருந்தார்.
தந்தை இராஜா ரவீந்திர வர்மனின் எக்ஸ்போர்டஸ் சிங்கபூருக்கு ஏற்றுமதி செய்யும் விவகாரத்தில் சில நாட்களாக தொடர்ந்து இவர்களின் கன்ஸைன்மென்ட்ஸ் பற்றி புகார்கள் வந்த வண்ணமாக இருந்தன. நேரில் சென்றால் தான் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று அவசரமாக் கிளம்பி நேற்று தான் சிங்கப்பூர் போயிருந்தார்.
பரம்பரையாக செய்துவரும் நிகழ்வுகளை… இராஜ மரியாதையை ஏற்கும் நிகழ்ச்சிகளை.. எப்போதும் கௌரிம்மா விட்டுக் கொடுக்கவே மாட்டார். இன்று இந்த ஆர்ஜேவியை பொறிக்குள் மாட்ட வைக்கும் வேலை மற்றும் அதிகாலையில் ஒரு அயல்நாட்டுக் கம்பெனியினுடனான வீடியோ கான்ஃபரன்ஸ் இருந்ததன் காரணமாக அவன் அட்டங்கால் செல்லவில்லை.
முக்கிய வியாபாரம் காரணமாகத் தான் வர இயலவில்லை என்று கூறியதும், பேரனுக்கு பதிலாக அவனின் மகன் பிரபஞ்ச வர்மனுக்கு மரியாதை செய்துவிக்க அழைத்துச் செல்லப் போவதாகக் கூறிய போதும் அரை மனதாகவே கிளம்பிச் சென்றார்.
இப்போது.. யாரை அழிக்க நினைத்து.. துடித்துக் கொண்டிருக்கிறாரோ…
அவனே இவர்களைக் காக்குமாறு நேர்ந்தது தெரிந்தால்.. என்று எண்ணியவன் சிந்தனையை.. திறக்கப்பட்ட கதவு கலைக்க… தலையை திருப்பிப் பார்த்தான்.
துயிலில் ஆழ்ந்திருந்த மகனைத் தூக்கியவாறு உள்ளே வந்தாள் நிரஞ்சனா..
“எங்கே போயிருந்த..? உன் நம்பரும் கிடைக்கல..”
“ப்ரபுக்கு லைட்டா ஃபீவர்.. வாமிட் வேற பண்ணிட்டான். அதான் அங்கே சைல்டு ஸ்பெஷல் வார்ட்ல டாக்டர்ட்ட காட்டிட்டு நர்ஸ் கிட்ட க்ளீன் பண்ண உதவி கேட்டு , பாடி டெம்பரேச்சர் கன்ட்ரோல் பண்ண ஸ்பாஞ்ச் பாத் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.” என்றவளின் குரலில் ஆயாசம்.
“போன வாரமும் ஒரு நாள் ஃபீவர் இருந்தது. அதை அந்த டாக்டர்ட்ட சொன்னதும்.. ஐந்து வயது வரை இப்படி இருப்பது சகஜம் தான்.. எதற்கும் ப்ளட் டெஸ்ட் எடுங்கனு சொன்னாங்க..” எனவும்..
“இங்கே வேணாம். நம்ம அரண்மனை டாக்டர்ட்ட ஒரு முறை கேட்டுட்டு பார்த்துக்கலாம். எப்போ பாட்டிக்கு மயக்கம் தெளியும்?என்ன ப்ராப்ளம்? டாக்டர் என்ன சொன்னார்? என்ன காரணம்..? ” என கேள்விகளை அடுக்க,
காரணம் எனவும் அந்நிகழ்வு தந்த அதிர்வில் குரல் உள்ளே செல்ல, “யானை வந்து பானெட்டை அடித்து நொறுக்கிதும் பயந்துட்டாங்க பாட்டிமா.. கதவு வேற லாக்காகிடுச்சு. வெளியே வர முடியலை….” சற்று நிறுத்தி,
“ஜெயவர்மனின் மனைவி தான் தைரியமா வந்து உதவி செஞ்சாங்க. அப்புறம் அவரோட செக்யூரிட்டீஸ் வந்து ட்ரைவர வெளியே எடுத்தாங்க. அந்த பதட்டத்தில பாட்டிக்கு பீபீ அதிகமா ஆகி மயங்கிட்டாங்க. மயக்கம் தெளிவிச்சு அவங்க வழக்கமான மாத்திரை கொடுத்தாச்சு அப்போவே.. அப்புறமும் ட்ரௌஸியா இருக்கு.. தலை வலிக்குதுன்னு சொன்னதால.. கார்ல பாதுகாப்புக்கு எங்க கூடவே வந்த ஜெயவர்மனின் செக்கியூரிட்டி இந்த ஹாஸ்பிடல்ல பார்த்திறலாம்னு சொன்னார். உடனே அட்மிட் பண்ணி இன்ஜெக்ஷன் போட்டாங்க.. ட்ரீட்மெண்ட் கொடுத்துருக்காங்க.. இன்னும் ஒரு மணி நேரத்தில் பீபீ நார்மலானதும் வீட்டுக்கு போயிடலாம்..
அவர், ஜெயவர்மன் மட்டும் அந்நேரம் வந்து யானைய அடக்கலைனா… பெரிய ப்ரச்சனை ஆகியிருக்கும். அடுத்து அவர் மனைவியும் கூட.. கார் கண்ணாடி.. லாக்.. எல்லாம் ஜாம் ஆகி இருந்துச்சு. தைரியமா யானைய தாண்டி வந்து பூட்டை ஏதேதோ பண்ணி கதவைத் திறந்திட்டாங்க.. நம்ம ப்ரபு கூட அவங்க கை நீட்டியதும் அவங்க கிட்டே போயிட்டான். அவுங்க இரண்டு பேர் மட்டும் இல்லைனா பாட்டி…” என சொல்லியவாறே செல்ல..
கை நீட்டினான் ஆதித் வர்மன்.. போதும் என்பது போல்… ஒரு விரலை வாயில் வைத்து உறுத்து விழித்தவனின் முகம் கண்டு நிரஞ்சனாவின் முகம் இறுகியது..
“என் பாட்டி இரும்பு மனுஷி. முப்பது வருஷமா தன் ராஜாங்கத்தைக் கட்டிக் காப்பாற்றினவுங்க.. இதுல இருந்தும் அவுங்க தைரியமா வெளிய வருவாங்க. போதும் எதிரியின் புகழ் பாடினது…” என்றவனின் குரலில் அவ்வளவு நிதானம்.
‘உதவி செய்ததைக் கூட உதாசீனப்படுத்தும்.. என்ன இராஜாங்கம்.. இராஜ வம்சமோ..’ என்ற எண்ணம் ஓட வெறுப்புடன் தலை திருப்பியவளைக் கண்டு கொள்ளாமல் பாட்டி அருகில் சென்று அமர்ந்தான் ஆதித் வர்மன்..
‘ ஜெயவர்மா.. நீயும் இராஜ வம்சமா… காதலியை கை பிடித்து விட்டாயிற்று என்ற ஆணவத்தில்… பரம்பரை சொத்துக்களில் நகைகளில் பங்கு கேட்கப் போகிறாயா.. என் வக்கீலிடம் பதில் பேசுமளவு துணிவு?! காரணம் உன்னோட தொழில்கள்.. வெற்றிகள்..அதனை ஒன்றுமில்லாமல் செய்கிறேன். மனைவியாய் வந்த காதலி.. அவளையும்..’ என்று எண்ணியவனின் முகம்… சுனாமி உள்ளடக்கிய பூகம்பம் வந்த ஆழ்கடலாய்… அமைதியாய்..
*********************
இரண்டு மணி நேரம் வேகமாக ஓடியிருக்க, மதிய உணவு முடிந்து மீட்டிங்கிற்கு மதிவதனாவை அழைத்து செல்ல வேண்டுமே என்று நினைத்தவாறே எழுந்தான் ஜெயவர்மன்.
வர்கீஸிடமும் உதவியாளன் விதார்த்திடமும் வேலைகளை ஒழுங்கு படுத்திக் கொடுத்து, ஒரு வாரமாக நின்று போயிருந்த பல வேலைகளை சரி பார்த்து.. என நேரம் ஓடியதே தெரியவில்லை. தனியாக என்ன செய்கிறாளோ என்று எண்ணியவன், அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டிய ஃபைலை எடுத்துக் கொண்டு, வேகமாக தனது வீடாக வைத்திருந்த பகுதியின் கதவைத் திறந்தான்.
ஒரு பெரிய வரவேற்பறை, சமையலறையுடன் இணைந்த சாப்பிடும் அறை, பெரிய படுக்கையறை, சிறு பெட்டக அறை என்று அதை வடிவமைத்து இருந்தான்.
வரவேற்பறையில் அவளைக் காணாமல் படுக்கை அறைக் கதவைத் திறக்க.. அங்கே எப்போதும் வெறுமையாக, ஏர்ஃப்ரெஷ்னர் போன்ற கெமிக்கல்களின் மணம் வீசும் அறையில் புதிதாய் ஒரு நறுமணம்.. அவனவளின் மணம்.. கண்கள் மூடி , மூச்சை ஆழ உள்ளிழுத்தவன், படுக்கை அறை ஒட்டிய சிட் அவுட்டில், இடுப்புயரத்தில் இருந்த கம்பியைப் பற்றி நின்று கொண்டிருந்த பெண்ணழகைக் கண்டதும், உள்ளம் துள்ள.. ஃபைலை சிறு மேஜையில் வைத்து விட்டு அவளை அரவமின்றி நெருங்கினான்.
தோட்டத்தின் அல்லி மலர்க் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த வெண்ணிறப் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் வருவதை உணர்ந்தாற் போல, சட்டென்று அவன் புறமாய் திரும்பி, பளிச்சென்று சிரிப்புடன் பார்க்க, தன் மனச் சோர்வையெல்லாம் விரட்டியடிக்கும் அழகுச் சிரிப்பை விட்டு கண்களை நகர்த்தாமல், “ தூங்கிட்டு இருப்பன்னு நினைச்சேன்.. போர் அடிச்சதா.. டிவி, டிவிடிஸ் இருக்கே…” எனவும்,
“ அது சரி.. அதுக்கா இங்கே கூட்டிட்டு வந்தீங்க..” எனவும்..
சிரிப்பை அடக்கி,
“ஓ.. முக்ய ஜோலிகள் நிறைய இருக்குல்ல உனக்கு.. வா சாப்பிட்டு.. தெம்பாயிட்டு அதனைச் செய்யலாம்..” என்றவனின் விழிகளில் தெரிந்த குறும்பைக் கண்டவள்,
சளைக்காமல், தலை நிமிர்த்தி, “ ஆமா ஆமா… அதுதான் ரொம்ப முக்கியம்..” என்றவள், சிட் அவுட் விட்டு உள்ளே வந்தாள்.
அவனின் இடக் கையை தன் இரு கரங்களால் வளைத்து கட்டிக் கொண்டு, தோளில் சாய்ந்து, “எனக்கு அந்தக் குட்டிப் பையனை பார்த்ததும், விக்கி நினைவு வந்துருச்சு.. காலைல உங்க கூட கார்ல கிளம்பினதுக்கு எவ்ளோ கேள்வி கேட்டான்..” என்றவளை, முறுவலுடன் அவன் பார்த்திருக்க,
“ இனி இங்கே தான் இருப்பியா.. மதுரைக்கு வர மாட்டியா.. என் கூட யார் விளாடுவா? அப்படின்னு எல்லாம் சொன்னவன்.. என் காதுக்குள்ள.. ரகசியமா… இந்த மாமா உன்னை முறைச்சுட்டே இருக்காரு…. அவர் கூட தனியா போகாதேன்னு சொன்னது தான் ஹைலைட்…” என்று சொன்னவள், அவன் தோளில் முகம் புதைத்து நகைக்க..
ஜெயவர்மனின் முறுவல் விரிய, வலக் கையால் அவளின் பின் கழுத்தின் அடியைப் பற்றியவன்.. கட்டை விரலால் முகத்தை நிமிர்த்தி, அவளின் பேராழிக் கண்களை ஆழப் பார்த்து,
“ எனக்கு இப்படி ஒரு குட்டி வில்லனா… அவனுக்கு என் மேலென்னவொரு அபிப்பிராயம்.. அவனண்ட அத்தைய, முறைக்கல.. ரசிக்கிறேன்னு அடுத்து அவனப் பார்க்கும் போது எப்படியாவது புரிய வச்சுடுறேன்.” என்றவன், குனிந்து அவளின் நெற்றியில் செல்லமாய் முட்டி விட்டு, “இப்போ சாப்பிட போலாம்.. வா..” என்றவன் அதே நிலையிலேயே தோள் சாய்த்து நடத்தி சென்றவன், உணவு மேஜை நாற்காலியில் அவளை அமர்த்தியிருந்தான்..
அவளோ அவனைப் பிடித்து இழுத்து இன்னொரு நாற்காலியில் அமர்த்தியவள், எழுந்து தட்டுக்களை எடுத்து வைத்து, அழகான பேக்கிங்கில் இருந்த உணவை பிரித்து இருவருக்கும் பறிமாறியவாறே…
“ ம்.. இவ்ளோ நாள் கண்டுக்காம இருந்தவரு…. திடீர்னு முழுங்கறது போல பார்த்துட்டே இருந்தா.. அதான் அவனுக்கு சந்தேகம் வந்துருச்சு..” என..
“ கண்டுக்காம… நானா…” என்றவன் சிறு சிரிப்புடன் தலையசைத்து, சாப்பிடத் தொடங்கினான்.
“ ஆமா.. பார்க்காம.. நீங்க பார்க்குறது… வெளியே தெரியாத மாதிரி வாய்க்குள்ளயே சிரிக்கிறது.. எனக்கு மட்டும் தானே தெரியும்..” என்றவள், அவனருகில் அமர்ந்து உண்ணத் தொடங்க,
மறுமொழி சொல்லாது நிமிர்ந்து, அவளைப் பார்த்தவன், சிரித்தவாறே சாப்பிட்டான்.
கைகழுவி வந்து அருகில் அமர்ந்ததவளின், முன் சில முத்திரைத்தாள்களை வைத்தவன், தன் பேனாவை எடுத்து நீட்ட, அவளின் செல்ல முறைப்பைக் கண்டு , உதடு குவித்து.. கண்களால் கெஞ்சி, “கையெழுத்து போடு.. வது..” எனவும்,
பேனாவைக் கீழே வைத்தவள்.. “எனக்கு பறக்குறதெல்லாம் வேணாம்..” என்றவள் அவனின் வயிற்றுப் பகுதி சட்டையைப் பற்றி இழுக்க…
ஆவலுடனே குனிந்து.. அவள் கேட்டதிற்கும் அதிகமாகக் கொடுத்தவனின் ஆசையை… அவள் நிறைவேற்றினாள். கையெழுத்திட்ட கரம் பற்றி புறங்கையில் முத்தமிட்டவன், “ஜேஎம்டி ஆஃப் ஆர்ஜேவி கம்பெனிஸ் மதிவதனா தேவி, ஜெயவர்மனை நோக்கிட்டே… லவ் பண்ணிட்டே இருந்தா போதும்.. இதே போல லஞ்சம் வாங்கிட்டு.. கையெழுத்து மட்டும் போட்டாக் கூட போதும். இது என்ட வதுவ என் பக்கத்திலேயே வச்சுக்க ஞான் கண்ட ஒரு வழி…” எனவும்.
ஓ… என்று குவிந்த இதழ்களை மீண்டும் சிறை செய்தவன் நெற்றியில் இதழொற்றி , “மீட்டிங்க்கு நேரமாச்சு.. ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெடியாகு… நான் கொஞ்ச நேரத்தில வரேன்.” என்றவன் விலக மனமற்றவன் போல் வயிற்றோடு அவள் முகத்தை அழுத்தி இறுக்கி விட்டு… மீண்டும் ஒரு அவசர இதழொற்றலை அவளின் உச்சந்தலைக்கு வழங்கி விட்டு.. வெளியேறினான்.
சென்றவனின் பார்வை தனது அலுவலக அறையில் இருந்த ஃபேக்ஸ் மிஷன் மீது செல்ல, அதில் படபடத்துக் கொண்டிருந்த தாளை, வேகமாக சென்று எடுத்துப் பார்த்தவனிற்கு.. வெற்றிப் புன்முறுவல் உதட்டில் வந்து அமர்ந்தது…
*********************
தொடரும்…