அனுமதி 18
இன்று…
தனது அலுவலில் கவனம் செலுத்த முடியாமல் மனம் அங்கும் இங்கும் அலை பாய.. தனது இருக்கை விட்டு எழுந்தான் இராஜா ஜெயவர்மன்.. தன் மனம் தான் அவள் வசப்பட்டு துடிக்கிறது என்றால்… அவளும் தன்னை விரும்புவதை அவனால் நம்பக் கூட முடியவில்லை.
‘சிறு பெண்… தன்னை விட குறைந்தது பத்து ஆண்டுகள் இளையவள் ஆக இருப்பாளாக இருக்கும். பார்த்த நாள் முதல் முறைத்துக் கொண்டு இருந்தவள், என்றிலிருந்து, கண்களில் வழியும் நேசத்துடன் விழுங்கி விடுவது போல் பார்க்க ஆரம்பித்தாள்..!’ என்று யோசித்தான்.
‘அது இருக்கட்டும்.. நான் ஏன் இப்படி ஆனேன்?! அவளைப் பார்த்த முதல் நாளிலிருந்து, என் மனம் தறி கெட்டு அவள் அருகே ஓடுகிறது. இது வரை இருந்த விலக்கங்கள்… வெறுப்புக்கள் எல்லாம் அவளிடம் மட்டும் விருப்பங்களா மாறுதே… இது வேண்டாம் என்று புத்தி சொல்ல, உணர்வு கேட்க மாட்டேன் என்கிறதே..
அழகி தான்.. பேரழகி தான். ஆனால், அவன் காணாத பெண்களா! அழகிலும் அந்தஸ்த்திலும் அறிவிலும் சிறந்த எத்தனையோ பெண்கள்.. படிக்கும் போதும்.. வேலை செய்த போதும், இப்போதும் கூட.. அவனின்
அழகினாலோ.. திறமை கண்டோ.. மயங்கி அருகில் வந்தவர்களை எள்ளல் பார்வையில் எட்டி நிறுத்துபவன். உதாசீனத்திலேயே.. ஓட விட்டு விடுபவன். இவள்.. மதிவதனா… இவளிடம் எதுவும் நடக்கவில்லை… அவளை நினைத்தாலே வது.. என் வது.. என்று ஒரு உரிமையுணர்வு… ஏன்… அவள் வாசல் படியில் கால் வைத்ததும்.. மனதில் அதிர்வு தொடங்கி விடுகிறதே. அவளுக்கு ஒன்று என்றால் உயிர் வரை துடிக்கிறதே.. இது என்ன உணர்வு..!? இப்போதும் அவளை நினைத்தால்…’ கண்களை மூடிக்கொண்டான்.
ஏனோ மனதினுள் மிகவும் குதூகலமாக இருப்பது போல் தோன்றியது. ‘ஒருவேளை.. அவள் ஏதும் சந்தோஷமாக இருக்கிறாளோ…’ என்று தோன்ற… சிறு சிரிப்பு தோன்றி விட்டது.
“ஜெயவர்மா… உனக்கு ப்ராந்து தான் பிடிச்சிருக்கு.” என்று வாய் விட்டே சொன்னவன்.. தன்னை அடக்கி, வேலையை பார்க்க தலைப்பட்டான்..
மின்னஞ்சலை திறக்க, ஆதித் வர்மன் மீட்டிங் போட்டது, அங்கு பேசிய விவரங்கள் அவனுக்கு வந்து சேர்ந்து இருந்தன. ஆழ்ந்து படித்த ஜெயவர்மன் யோசனையில் ஆழ்ந்தான். அவன்.. இதை சும்மா விட மாட்டான்.. ஏற்கனவே ஆடுவான்.. இப்போது.. எந்த வழியில் வேண்டுமானாலும் பாயலாம்.
தனது ஃபேக்டரி மற்றும் குடவுண்ஸ் க்கு அழைத்து மிக கவனமாக இருக்கும் படி சொன்னவன், தாயின் பாதுகாவலர்களுக்கு அழைத்து நிலவரம் கேட்டுக் கொண்டான். கீழே காவலில் நின்றவர்களுக்கும் அழைத்து கவனப்படுத்தினான்.. எனினும் மனம் ஏனோ நிலைப் படவில்லை.
அப்போது கதவு தடார் என்று தள்ளப் பட, நிமிர்ந்து பார்த்தவன் உள்ளே, சிவேஷ் நுழைந்த வேகம் கண்டு சட்டென்று எழுந்தான்.
“என்னடா..? என்னாச்சு?” என்றவாறு அவனின் அருகில் செல்ல, “ஜெய்.. கல்யாணத்துக்கு எல்லோரும் சரின்னு சொல்லிட்டாங்கடா…” என்றவன் நண்பனை இறுக அணைத்துக் கொள்ள, அவனின் பிடியில் திணறியவன், முனங்கும் குரலில், “உனக்குத்தான் கல்யாணம் ஆகி செரிய குட்டி ஒன்னும் இருக்கானே…” எனவும் விலகியவன், செல்லமாய் நண்பனின் வயிற்றில் குத்தினான்.
“அவ்ச்..” என்ற தன் நண்பனின் குரலில், குனிந்து, அவனின் முகத்தைப் பார்த்த பிறகு தான் நினைவு வந்தவனாய், “ஹையோ… சாரி… முதுகு புண்ணுல அமுக்கிட்டேனா… வலிக்குதா.. சாரி.”
“அது எல்லாம் ஒன்னும் இல்ல, சரியாகிடுச்சு… இப்போ நீ கட்டிப் பிடிச்சதுல, லேசா இருந்த சுளுக்கு கூட சரியா போச்சுனு நினைக்கிறேன்..” என்றவன், சிரித்தவாறே விலகி தன் சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
“ம்.. என்ன கல்யாணம்? யாருக்கு?” என்று தன் முன்னால் இருந்த ஃபைலின் மேல் கவனம் செலுத்தியவாறு கேட்க, சிவேஷ் மலர்ச்சியுடன் இரு கைகளையும் விரித்து நீட்டி, “உனக்கும் மதிக்கும் டா…” எனவும், திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
முகம் இறுகி குழப்பத்தைப் பூசிக் கொள்ள, கண்களில், ‘ஏன்..?’ என்பது போன்ற பாவம்..
அவனின் முகத்தையே பார்க்காதவனாய் சிவேஷ் தன் மகிழ்ச்சியில் மிதந்தவனாய், “சித்தப்பா சம்மதிப்பார் னு கனவுல கூட நினைக்கலை. அவரா கூப்பிட்டு, தாத்தா வீட்டுல வச்சு கேட்டார். மதிய உன் ஃப்ரென்ட் ஜெய்க்கே கொடுத்துறலாமா…ன்னு. எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலை… தலையத் தலைய ஆட்டுனேன்… உங்க சம்பிரதாயம் எல்லாம் எப்படின்னு கேட்டார். நம்ம பழக்க வழக்கம் மத்தவங்க பழக்க வழக்கங்களோட ஒத்து வராதுன்னு எப்பவும் பேசுற தாத்தா கூட அமைதியா சந்தோஷமா பார்த்துட்டு இருந்தார் னா பார்த்துக்கோயேன்….” என்றவன் திரும்பி பார்த்து, “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்றவன், ஜெயவர்மனின் முகத்தில் தெரிந்த இறுக்கம் கண்டு பேச்சை நிறுத்தினான்.
“என்ன ஜெய்…?”
“ஏற்கனவே நாம இது பத்தி பேசிட்டோம் ஷிவ்… இது சரி வராது.” எனவும்… கோபம் வந்தது சிவேஷிற்கு..
“அப்போ அவனுக்கு, அந்த ஆதித்க்கு பயந்து நீ கல்யாணமே பண்ணிக்காம இருக்க போறியா…” என்றவனின் கோபத்தை அலட்சியம் செய்தவன், ஃபைலில் கையெழுத்து இட்டு மூடி வைத்தான்.
நிமிர்ந்து, “பயமா..!” என்றவனின் இதழ்களில் விரக்தியாய் சிரிப்பு.
“எனக்கு விவாஹம், பிரேமம் இதிலெல்லாம் எப்பவும் ஆர்வம் இருந்தது கிடையாது. மே பீ.. எங்க அம்மா அப்பாவை பார்த்து பார்த்து…” என்றவன் கண்களை எங்கோ நிலைக்க வைத்து, “என் சின்ன வயசுலையே நான் பார்த்தது கேட்டது.. எல்லாம் அப்படி ஆக்கிருச்சு னு நினைக்கிறேன். ஆனா, இது வேற. ஆதித் ஏற்கனவே உங்க குடும்பத்து மேல கண் வச்சுட்டு இருக்கான். அவன் ஏற்கனவே, என் அப்பாவின் இரண்டாவது மனைவி, அவங்க பெண்ணை கொன்னான்.. எனக்கு நிச்சயித்த பெண்ணை, என் பின்னால சுத்தி வந்த பெண்ணுங்களை கொன்னதா என்கிட்டையே சொல்றான். இந்த நிலையில்… என்னால.. வதனா.. அவளுக்கு..” கண்களை இறுக மூடியவனின் இதயத்தில் சுள்ளென ஒரு வலி…. “முடியாது… என்னால முடியாது.. அவ நூறு வருஷம் மகாராணி மாதிரி வாழ வேண்டியவ…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது,
அலை பேசியின் மணியோசை கவனத்தை திருப்ப, எடுத்துப் பார்த்தவன் முகத்தில், கவனமும் கோபமும்.. விடு விடுவென்று கிளம்பியவன் தன் வார்ட்ரோப் அருகில் சென்று தனது சிறிய கைத் துப்பாக்கியை எடுத்து, “சீக்கிரம் வாடா..” என்று சொல்லியவாறு வெளியே பாய, அவனின் நடவடிக்கைகளில் அதிர்ந்தாலும் வேகமாக பின் தொடர்ந்தான் சிவேஷ்..
மட மடவென படிகளில் இறங்கி வந்தவன், படிக் கூட்டை விட்டு வெளி வருகையில், தரையில் நிழலில் தெரிந்த அசைவைக் கண்டு சுதாரித்து பின்னே நகர, அங்கே கையில் பெரிய கட்டையுடன் அடிக்க தயாராக இருந்தவனைக் கண்டு.. சட்டென்று குனிந்து முன்னேறிய ஜெயவர்மனின் கண்களில் வெறியேறியது.
அவனை நோக்கி துப்பாக்கியை நீட்டிய மற்றொருவனையும் கண்டு, வேகமாய், சட்டென்று முன்னே பாய்ந்து, சுழன்று குழப்பியவன், கை விரல்களை ஒன்றிணைத்து கராத்தே வெட்டுக்களை கழுத்தில் ஆழமாக இறங்கியதும் நிலை தடுமாறி வீழ்ந்தான் அவன்.
அவனின் துப்பாக்கியை காலால் தள்ளி, அங்கே நின்று கொண்டு இருந்த வண்டிக்கு அடியில் எத்தித் தள்ளியவன்… கட்டையை ஓங்கி கொண்டு வந்தவனின் இடுப்பில், காலை உயர்த்தி, ஓங்கி ஒரு உதை விட்டான். அடித்த அடியில் முதுகு எலும்பே முறியுமோ என்பது போல் வளைந்தவாறு வீழ்ந்தான் அவன்.
அங்கே இருந்த அவனின் மெய்க்காவலர்களும் இதே போல் தாக்க வந்தவர்களை மடக்கி பிடித்து தம் கட்டுக்குள் கொண்டு வர.. ஜெயவர்மனின் கவனம் மதிவதனாவின் வீட்டு பகுதி நோக்கி பாய்ந்தது. அங்கே காவலுக்கு இருந்தவர்களும் இதே போல் போராடிக் கொண்டு இருப்பது தெரிந்தது. இரு புதிய ஸ்கேர்ப்பியோ வாகனங்கள் நிற்க, அதில் வந்த ஆட்கள் தான் தாக்கி கொண்டு இருக்கிறார்கள் என்று ஊகித்தவன், “சிவேஷ்.. நீ உன் வீட்டுக்கு போ. வதனா வீடு.. உன் வீடு தான் திறந்து இருக்கு..” என்றவன் மதிவதனாவின் வீட்டை நோக்கி ஓடினான்.
ஏதோ தகராறு நடப்பதை ஊகித்து, சாலையில் நடந்து கொண்டிருந்த இரண்டு, மூன்று பேர் அங்கே வேகமாக வர… கட்டை, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் அடியாட்கள் தோரணையில் இருப்பவர்களை பார்த்து சற்றே பின் வாங்கி அருகில் இருந்த மக்களை அழைக்கவும், காவல் துறைக்கு தகவல் சொல்லவும் விழைந்தனர்.
மதிவதனாவின் வீட்டிற்குள் நுழைந்த போது இருவர் ஆனந்தியை அழுத்தி பிடித்தவாறு இருப்பதையும், இருவர் மதிவதனாவை பிடித்து இழுத்துக் கொண்டு இருப்பதையும் கண்டதும், மொத்த புலன்களும் கூர்மையடைய தன் கைத் துப்பாக்கியை எடுத்தான் ஜெயவர்மன்.
அப்போது அவனின் பின்னாலேயே யாரோ வரும் அரவம் கேட்டு திரும்ப, ஓடி வந்த ஒருவனின் கையிலிருந்த கட்டையின் குறி, தன் கையை நோக்கி இருப்பதை உணர்ந்து விலக முயல, கட்டையானது ஜெயவர்மனின் நெற்றியை லேசாக தொட்டு சென்றது. அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தன் துப்பாக்கியால் ,அவனின் கால்களுக்கு மிக அருகில் சுட்டவன், அவன் பதறி குதித்து நிலை தடுமாறிய நேரத்தைப் பயன்படுத்தி, துப்பாக்கி பிடித்திருந்த கரத்தைக் கொண்டு அவனின் தோளில் தாக்கினான். அவன் அடி தாங்காமல் கட்டையை கீழே போட்டதும் இடது கை கொண்டு அவனின் தாடையில் குத்த, பொறி கலங்கி, வாயில் இருந்து இரத்தம் கொட்ட, தரையில் விழுந்தான் அவன்.
மதிவதனாவை பற்றிக் கொண்டு இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியை திருப்பியவன், கடின முகத்துடன், “ காலுக்கு கீழ எல்லாம் சுட மாட்டேன், ஒரே புல்லட்.. கபாலம் சிதறிடும்.. கையை எடு..” என உறுமவும், அவளையும் ஆனந்தியையும் விட்டு விட்டு… நால்வரும்.. அவனை நோக்கி அடியெடுத்து வைத்து மெதுவாக வந்தனர்.
அவர்கள் கையில் ஆயுதம் இல்லாததை உறுதி படுத்திக் கொண்டவன், சட்டென்று கைத் துப்பாக்கியை இடையில் சொருகி விட்டு.. அவன் கற்ற களரிபயட்டு வித்தையைக் கொண்டு சுழன்று சுழன்று தாக்கத் துவங்கினான்.
தன்னவர்களை காப்பாற்ற வீறு கொண்டு தாக்குவதற்கும், காசுக்காக வந்து மூர்க்கத்துடன் தாக்குவதற்கும், வித்தியாசம் இருக்கிறது தானே… சிறிது நேரத்தில் அனைவரும் சுருண்டு விழ மதிவதனாவை பற்றி இருந்த கரங்கள் நான்கும் வர்மத்தால் செயலிழக்கப் பட்டு உடலோடு ஒட்டிக் கிடந்தன.
இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்து பார்த்த போது எங்கும்
சாமான்கள் இறைந்து கிடக்க, புதிய ஆட்கள் அனைவரும் பாதுகாவலர்களால் கை கால்கள் கட்டப் பட்டு இருந்தனர். தெரு மக்களும் சூழ்ந்து கொண்டு உதவிக்கு வந்து இருந்தனர்.
பெரியவர் சிவப்ரகாசம், அவரின் வீட்டில் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து இருக்க பாதுகாவலர்கள் இருவர் அருகில் நின்று கொண்டு அவரை நீர் அருந்த வைத்துக் கொண்டு இருந்தனர். கலங்கிய விழிகளுடன் அருகில் அமர்ந்து இருந்தார் மீனாட்சி அம்மாள்.
ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்து இருந்தவர், தன் வீட்டிற்கு முன் நடந்து கொண்டு இருந்த கைகலப்புகளைக் கண்ட அதிர்வில் நெஞ்சை பிடித்துக் கொண்டு அலற, பாதுகாவலர்கள் இருவர் அருகில் சென்று இருந்தனர். அவரை அமைதிப்படுத்த முயன்றும் இயலாமல் தவித்த நேரத்தில் ஜெயவர்மன்.. ஆனந்தி, மதிவதனாவுடன் அங்கே வர,
கண்களில் நீருடன்.. மதிவதனாவைக் கண்ட பெரியவர், கையசைத்து அருகில் அழைக்க.. ஓடிய அவள் அவரின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தாள். “குமரன்… எங்கே..? “என தழதழத்த குரலில் ஈனஸ்வரத்தில் கேட்கவும் அவள் எழப் போக, ஜெயவர்மன், “நான் கூட்டிட்டு வரேன்…” என்று சொல்லிய நொடியில், வேகமாக உள்ளே வந்தனர் சிவேஷ், பிரகதீஸ்வரர் குடும்பத்தினர். அவர்களைப் பார்த்த பிறகு தான் ஜெயவர்மனின் மூச்சே சீர்பட்டது. விரைந்து சென்று தன் நண்பனின் தோளை அணைத்து நின்றவனை.. மாலாவும் உஷாவும் மனம் நெகிழப் பார்த்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சற்று நேரத்தில் பிரகதீஸ்வரர் மற்றும் ஈஸ்வர பிரபுவும் அங்கே வந்து விட… பதினைந்து நிமிட நேரத்திற்குள் களேபரமாகி கிடந்த தங்களது வீடுகளைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
பாதுகாப்பு தலைவரான அச்சுதன் முன்னே வந்து ஜெயவர்மனிடம் , “சார், காலைல இருந்தே அசாதாரண சூழல் இருந்தது. அதனாலே ரொம்பவே எச்சரிக்கையாகத் தான் இருந்தோம். சட்டுனு இருபது பேர் வந்து இறங்கிட்டாங்க. அவங்க எய்ம் நீங்களும் மேடமும் தான்…” எனவும் ஜெயவர்மன் யோசித்தான்.
“இவுங்களை அனுப்பியது யாருன்னு கேளுங்க..”
“யாருன்னு அவங்களுக்கு தெரியலை சர். கூலிப் படை.. யாரோ ஏவி விட்ருக்காங்க… மேடமை ஒரு இடத்துக்கு கொண்டு வர சொல்லிருக்காங்க..” எனவும் கனன்றது ஜெயவர்மனின் முகம்.
“அவனுங்க போன் எடுத்து…” என்றவன் இறுகிய தொண்டையை சரி செய்து, “வதனாவை அங்கே கொண்டுட்டு வர மாதிரி பேச சொல்லுங்க. அதே இடத்துக்கு நான் போறேன்..” என்றவன் கிளம்ப,
அவனை தடுத்த அச்சுதன், “அதுக்கு ஏன் சார் நீங்க..!! இன்னும் அரை மணி நேரத்துல அந்த வேலை செய்ய ஏவின ஆளோட நாங்க.. இங்கே இருக்கிறோம்..” என்று விட்டு, சிவேஷைப் பார்த்து,
“மிச்சம் இருந்தவர்களை, போலீஸ் வசம் ஒப்படைச்சுறலாம். ஒரு காம்பளைன்ட்டும் ரிஜிஸ்டர் பண்ண வேண்டும்.” என்று சொன்னதும் சிவேஷ் தலையசைக்க, அச்சுதன், அந்த கூலிப் படையை சேர்ந்தவர்களின் தலைவனை ஏற்றிக் கொண்டு அவர்களின் வாகனத்தில் ஏறினார்.
அப்போது சுராஜ் ஜெயவர்மனின் அலை பேசியை எடுத்ததுக் கொண்டு அங்கே வந்து, “சர், ரொம்ப நேரமா அடிச்சுட்டே இருக்கு..” எனவும்,
அவன் அதனைக் கைகளில் வாங்கிய நொடியில் மீண்டும் ஒலிக்க.. திரையில் ஒளிர்ந்த தன் மேலாளர் வர்க்கீஸின் பெயரைப் பார்த்து அழைப்பை இணைத்து காதில் வைத்தவன்.. அவர் சொன்னதை அதிகம் குறுக்கிடாமல் கேட்டு விட்டு, அழைப்பை துண்டித்து சுராஜைப் பார்த்து, “நான் உடனே ட்ருவேன்ட்ரம் கிளம்பனும். ஃப்ளைட் ஆர் ட்ரைன்.. டிக்கெட் புக் பண்ணு. காலைல நான் அங்கே இருக்னும்.” என்று விட்டு, வீட்டிற்குள் திரும்பிய ஜெயவர்மனின் விழிகள்.. பெரியவர் சிவப்பிரகாசத்தின் காலடியில் இருந்த வதனாவின் மேல் சென்று நிலைத்தன.
அவளும் அப்போது அவனையே பார்த்துக் கொண்டு இருக்க, மனதில் சொல்ல முடியா அழுத்தமும் கழிவிரக்கமும் தாக்க, கண்களை நிமிர்த்தி பெரியவரைப் பார்த்தான். அவரோ கையசைத்து அவனை அருகில் அழைத்து…
தளர்ந்த குரலில்… “தம்பி, கிளம்புறீங்களா..? என் பேத்திய இப்போவே கல்யாணம் பண்ணி இங்கே இருந்து கூட்டிட்டு போயிடுறீங்களா?” என மெலிந்த குரலில் கேட்கவும்.. அதிர்ந்தனர் அனைவரும்..
அதிகபட்ச அதிர்ச்சி அடைந்த ஜெயவர்மன், அவர் அருகில் சென்று அமர்ந்து, சிறிது தயங்கி, பின், “மன்னிக்கனும்.. இப்போ நான் கல்யாணம் பண்ற சூழ்நிலையில் இல்ல.. என்னைக் கல்யாணம் பண்ணா வதுக்கு ஆபத்து அதிகமா தான் ஆகும்.. ”
எனவும், எல்லோரும் புரியாமல் பார்க்க, ஜெயவர்மன் சிறு குரலில் தன் குடும்பத்தைப் பற்றியும் தான் தினம் தினம் சந்திக்கும் சவால்களை பற்றியும் கூறத் தொடங்கினான்.
“நான் எங்க அப்பாக்கு மூன்றாவது மனைவியோட பையன். முதல் மனைவியின் மகனின் பையன் தான்.. இன்னைக்கு நடந்ததுக்கு காரணமா இருக்கலாம். அவனின் தேவை ஒரு கையெழுத்து. அது இந்த ஜென்மத்தில் நான் போடப் போறது இல்லை. அதனால் அவன் இதெல்லாம் பண்றான். நான் வதுவ.. மதிவதனாவை விரும்புறதா நினைக்குறான். எனக்கு விவாஹம் கழிஞ்சு வாரிசு வந்துட்டா, அவனால் சில பரம்பரை சொத்துக்களை திரும்ப அடைய முடியாதுன்னு இப்படி எல்லாம் பண்றான். அதுனால இந்த… கல்யாணம் வேணாம்..” என்றவன் யாரையும் பார்க்காமல் எழ முயல, அவனின் கை பெரியவரின் கரங்களில் சிக்குண்டு இருந்தது.
“உங்களுக்கு… என் பேத்திய பிடிச்சுருக்கு தானே..” எனவும் திடுக்கிட்டு நிமிர்ந்தவனின் பார்வை மதிவதனா மீது நிலைக்க, அவளின் விழிகளில் மிளிர்ந்த தனக்கான காதலையும், இதழ்களின் ஓரத்தில் இருந்த முறுவலையும் கண்டவன் உறைந்தான்… மனதில் ஏதோ ஒரு குரல் ஒலிக்க, பெருமூச்சுடன் ஆமோதிப்பாய் தலையை அசைத்தான்.
அடுத்தது.. மெலிதாக எனினும் தீர்மானமாக ஒலித்தது பெரியவரின் குரல்.
“இதுவரை அவளைக் காப்பாத்துன நீங்க இனிமேலும் காப்பத்துவீங்க.. உங்க கிட்ட தான் அவ பாதுகாப்பா இருப்பா…
குமரா… நம்ம குல தெய்வத்தின் தாலிய பெட்டில இருந்து எடு… மீனா… புது மஞ்சள் கயிற்றை கொடுத்து குமரன் பொண்டாட்டிய அதுல கோர்க்க சொல்லு. இப்போவே நல்ல நேரம் தான்..” எனவும்,
திகைத்து விழித்தான் இராஜா ஜெயவர்மன்.
**********************
அன்று…
தனது கருப்பு அழனின் மீதேறி வந்து கொண்டு இருந்த வீரசேனன், கோட்டை மதிற்சுவரின் பின் மறைந்து கொண்டிருந்த கதிரவனைப் பார்த்து, எப்போதும் சந்திக்கும் வேளையை விட இரு நாழிகைப் பொழுது அதிகமாகிவிட்டதை உணர்ந்து, தனது புரவியை வேகமாக செலுத்தினான்.
பின் பனிக்காலம் என்பதால் வேகமாக கதிரவன் இறங்கினாலும் முகில்கள் அற்ற வானத்தால் வெளிச்சம் எங்கும் பரவிக் கிடக்க நீராழி ஆறு கால் மண்டபத்தை அடைந்தவன் அங்கே வசந்த மாலையைக் காணாமல் திகைத்து, மெதுவாக புரவியை விட்டு இறங்கினான்.
மண்டபத்தின் அருகில் சென்றவன், வழக்கம் போல் தூணில் சாய்ந்து அமர்ந்து, மாலை மயங்கும் நேரத்தின் குளுமையான வாவிக் கரையோர தென்றலை அனுபவித்தவனாய் ஆழ மூச்செடுத்து கண்களை மூடிக் கொண்டவனின் கருத்து என்னவோ.. மிகவும் விழிப்புடன் இருந்தது. மிக மெல்லிய வளையோசையுடன், கரம் ஒன்று தன் இடையின் இடப் புறம் வருவதை உணர்ந்தவன், கண்களை மூடியவாறே, சட்டென்று பற்றி.. இழுத்து, மடியில் சாய்க்க, விழி மூடி கிடந்தாள் வசந்தமாலை.
வீரசேனன் அவளின் அழகு முகத்தையே விரிந்த முறுவலுடன் பார்த்தவாறு இருக்க, மெதுவாக கண் மலர்த்திப் பார்த்தவள், வெட்கத்துடன் எழ முற்பட, மற்றோரு கையை இடையின் புறம் செலுத்தி நகர விடாது செய்தவன், கால்களை மடக்கி உயர்த்த, அவளின் மலர் முகமானது, அவனின் மார்புக்கு அருகில் வந்தது.
அவன் தந்த நெருக்கம் கண்டு விதிர்த்தவளின் கண்கள் தாமே மீண்டும் மூடி கொள்ள, முகமோ, குழைந்து சிவந்து, சுனையில் மலர்ந்து இருந்த செவ்வல்லி மலர்களுடன் போட்டிக்கு செல்வதை உணர்ந்தவனின் முறுவல் சிரிப்பாக விரிய… வெட்கத்தில் துடித்த சிவந்த அதரங்களின் துடிப்பை தன் இரு விரல்களால் அடக்க முற்பட்டவனை அதன் மென்மை கவர்ந்து இழுக்க, அதை சோதிக்க முற்பட்டு, குனிந்த.. தலைவனின் நிலை புரியாமல் அவனின் வேகத்தை தடை செய்தது அவனின் தோளில் வந்து அமர்ந்த மரகதப் புறா.
படபடத்த சிறகொலி கேட்டு அவ்வளவு நேரம் இருந்த மயக்கம் கலைய விழிகளை திறந்தாள் வசந்த மாலை. தன் தோளில் படபடத்தவாறு இருந்த புறாவை உணர்ந்து தன் வலக்கையை தூக்கி அதனை பற்றியவன், மெதுவாய் முன்புறம் கொண்டு வந்து அதன் காலில் இருந்த சிறு உலோக உருளையின் மூடியை திறந்து, அதற்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மிக சிறிய துணியை எடுத்தவன், புறாவினை அருகில் இறக்கி விட்டு பல காதம் பறந்து வந்த அதனின் களைப்பு புரிந்து மெல்ல வருடினான்.
பின் அந்த செய்தித் துணியை பிரிக்க, அதில் வரையப்பட்டிருந்த சித்திர எழுத்துக்களை கண்டு, குதூகலம் குமிழியிட தன் அருகில் நிமிர்ந்து அமர்ந்து இருந்தவளை இழுத்து மார்புடன் அணைத்துக் கொண்டான்.
அவனின் குதூகலம் கண்டு அவள் விழிக்க, உற்சாகக் குரலில், “இளவல் சேனையுடன் கொடையின் இளவரசர் யுத்தத்தில் பங்கேற்க வருகிறாராம். இன்னும் இரு கிழமைகளில் மருதநாட்டின் எல்லைக்கு வந்துவிடுவேன்.. எனத் தகவல் அனுப்பி இருக்கிறார்..” என்றவன் எதையோ யோசித்தவனாய் அமைதி ஆனான்.
அவனின் அணைப்பில் சிக்கி கிடந்தவள் அவனின் அமைதியை உணர்ந்து மெதுவாக விலகி, அவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.
“என்ன யோசனை ?..” என,
“ இளவல் சேனை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.. எனில் கொடை நாட்டு சேனை வராதா..!! இந்த சூழ்நிலையை பயன்படுத்தி களவத்தின் ஆதிக்கத்தை மொத்தமாய் அடக்கி விடலாமே. ஏன் அதை செய்யவில்லை மன்னர் அவர்கள்!?” என்று வாய் விட்டே சொல்ல..
சிரித்தவள்,
“களவம் அடங்கத்தான் போகிறது.. மருதத்தின் சேனையே பெரிதுதான்.. அதுவும் சந்திராம்பிகை தலைமை ஏற்கிறாள் என்றதும் வீரர்களின் உற்சாகம் அதிகமாகிவிட்டது.” என்றவள் குரலை தணித்து, “சந்திரா நாளை ஆனை மலைக்கு செல்கிறாளாம். மலைக்குடி வில் வீரர்களை படையில் இணைத்து அவர்களின் ஆதரவு பெற… நானும் கூட வருகிறேன் என்றதற்கு என்னை கேலி செய்து வர விடாமல் செய்து விட்டாள். நான் கிளம்பிவிட்டால்… சேனைப் பயிற்சியாளரின் ஊக்கம் குறைந்து விடுமாம். இதை மன்னர் பெருமான் முன்பு சொல்லி என்னை தலை நிமிர ஒட்டாது செய்து விட்டாள்….” எனவும்…
வீர வேழ சேனன் முறுவலுடன், “ தேவியார் சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்..” என்றவன், சிறு வியப்புடன், “இன்று மாலை பயிற்சிக்கு வந்த போது கூட இந்த ஆனை மலைப் பயணம் பற்றி சொல்லவில்லையே அவர்கள்… நாளை முதல் கொடை நாட்டு ஆயுதங்கள் வைத்து பயிற்சி வேறு எடுக்க போவதாக கூறினார்களே..”
என்றதும்,
அவனை சிரிப்புடன் பார்த்து, “சந்திரா எதையும் சொல்லி செய்பவள் அல்ல. பெரும்பாலும்.. திட்டங்களை அவள் செயல்படுத்தும் போது தான் தெரியும். அவளின் மனதினை ஓரளவு புரிந்து கொண்டவள் நானென்று எண்ணியிருந்தேன்.. எனக்கே இப்போதெல்லாம் அவள் என்ன நினைக்கிறாள் என்று அறிய முடியவில்லை. ஆயுதப் பயிற்சி தானே.. சொன்னால் சொன்னபடி வந்து விடுவாள்…” என்றாள்.
“ கொடை நாட்டின் இளவல்.. ஆனைமலை கணவாய்களின் வழியாகத் தான் படைகளை அழைத்து வருவாராய் இருக்கும். நானும் ஆனை மலை நோக்கி சென்று அவரை அழைத்து வரவா..” எனவும்…
சட்டென்று எழுந்தாள், “நண்பரை வரவேற்க அவ்வளவு ஆர்வமா..! நீங்கள் சென்று விட்டால் இங்கு படைகளுக்கு பயிற்சி யார் கொடுப்பது..” என ஊடலுடன் கூற.. அவளின், தன்னை பிரிய இயலா மனம், புரிந்தாலும் விளையாட்டாய்,
“படைகளுக்கு பயிற்சியை விட உனக்கு காதல் பயிற்சி கொடுக்கும் முன் எனக்கு கடினமாக இருக்கிறது!! இப்படியா வெடுக்கென்று எழுவது.” என்றான் நகைப்புடன்..
“பின்னே நண்பரை கண்டதும் அனைத்தும் மறந்து அவர் பின்னொடு ஓட வேண்டும் என்கிறீர்களே.. உங்களுக்கு தான் காதல் பயிற்சி மிகவும் தேவை படுகிறது..”
என்றவளின் அருகில் சென்றவன் கொடுத்த..எடுத்த.. காதல் பயிற்சி கண்டு கறுப்பு அழகன் சுனை நீரை அருந்தும் சாக்கில் திரும்பிக் கொண்டான்.
**********************
அனுமதி 19
இன்று…
பெரியவர் சிவப்ரகாசம் அவ்வாறு சொன்னதும்… எல்லோரும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டாலும், அதில் மகிழ்ச்சியும் சம்மதமுமே தெரிந்தது.
அப்போது பாதுகாப்புத் தலைவர் அச்சுதனிடமிருந்து அழைப்பு வர எடுத்து கொண்டு வெளியே சென்று பேசிய ஜெயவர்மனின் முகத்தில் சினம் கொண்ட சிம்மத்தின் சீற்றம்.. ஆழ்ந்த மூச்செடுத்து நிலைப்படுத்திக் கொண்டவன், சில கட்டளைகளை மெதுவான குரலில் இட்டு விட்டு, நிமிர்ந்து பார்க்க, சிவேஷ் நின்று கொண்டு இருந்தான்.
அவனும் அவனைத்தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
“யாருடா?” எனவும், மறுப்பாய் தலையசைத்தவன்,
“ நான் தீர்க்க வேண்டிய கணக்கு விடுடா..” எனவும் சற்று நேரம் அவனைக் கூர்ந்த சிவேஷ், இனி அவன் ஏதும் சொல்ல மாட்டான் என உணர்ந்து, கைக் கடிகாரத்தில் மணியைப் பார்த்து, “இன்னும் ஒரு மணி நேரத்தில் நாம மீனாக்ஷி அம்மன் கோவில்ல இருந்தா போதும். எல்லாம் அரேஞ் பண்ணியாச்சு. வா.. கிளம்பலாம்…” எனவும்..
குழப்பமும் தயக்கமுமான குரலில்,
“என்னடா.. இப்பவா.. இப்படியேவா..” எனவும்,
“ஏன்..? இன்னும்.. யாராவது வந்து உன்னை… தாங்கித் தடுக்கனுமா.!” எனக் கூறி விட்டு உள்ளே எட்டிப் பார்க்க,
“டேய்……” எனும் அவனின் குரலில்… திரும்பிய சிவேஷ் சிரிப்புடன், “இது எல்லாம் பெரிய விஷயமா… நீ குளிச்சு ரெடி ஆகு..” என்று அவனின் வீட்டை நோக்கித் திருப்பியவன்… சற்று நேரத்தில் பட்டு வேஷ்டி, சட்டையை கொண்டு வந்து, அவனின் அறைக் கதவை தட்டினான்.
அடுத்த சில மணித் துளிகளில் சிவப்பிரகாசம் குடும்பத்தினர், சுந்தரம், ராணி தம்பதி மற்றும் ஜெயவர்மனின் உதவியாளன் சுராஜ் அனைவரும் மதுரை மீனாக்ஷி அம்மனின் சந்நிதியில் கர்ப்பக்ரஹத்தின் முன் நின்று கொண்டிருந்தனர். எளிமையான.. ஆயினும் அழகான பட்டாடைகளில் நின்று கொண்டிருந்த அவர்கள் முகத்தில் சிறு பதட்டம் இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை.
மணமகனுக்கே உரித்தான புதிய பட்டு வேஷ்டி, சட்டையில் ஆணழகனாக வந்து நின்ற ஜெயவர்மனின் அருகே, சிவப்பு பட்டுடுத்தி, சிறிய நகைகள் பூட்டி, மலர்ந்த புன்னகையுடன்.. அலங்காரம் ஏதும் இன்றியே கண்ணை பறிக்கும் அழகுடன் மதிவதனா வந்து நின்றாள்.
பட்டாச்சாரியார் திருமண மந்திரங்கள் ஓதி, தம்பாள தட்டில் அம்மனின் மாலை, கிளியும் வைத்து, சொக்க நாதரின் மாலைக்கு நடுவில் தாலி வைக்கப் பட்டிருந்த இன்னொரு தட்டையும் எடுத்து வந்து சிவேஷின் கைகளில் கொடுக்க, முதலில் மாலையை எடுத்து ஜெயவர்மனின் கழுத்தில் அணிவித்தவன், தனது பாட்டி மீனாட்சி அம்மாளை வைத்து மதிவதனாவிற்கு மாலை போட வைத்தான்.
தாழம்பூ குங்குமம் வைத்து ஆசீர்வாதம் செய்யப் பட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட குல தெய்வத்தின் தாலியை எடுத்து தாத்தாவின் கையில் கொடுக்க.. அவரும் மீனாட்சி அம்மையாரும் இணைந்து அதை ஜெயவர்மன் கையில் கொடுக்கவும்.. வாங்குவதற்கு நீட்டியவன் கைகளில் ஒரு நடுக்கம் பரவியது.
தாலியை வாங்கியவன் எதிரே பார்க்க, வெட்கம் சிறிதும் இன்றி அவனை கண் நிறைய பார்த்தவாறு… ‘வந்து விட்டேன் உனைச் சேர.. உன் உயிராய்.. உறவாய்.. இனி எல்லாமும் நானே..’ என உணர்த்துபவள் போல.. அழகான புன்னகையுடன் நின்றாள் அவனின்.. வது..
அவளின் கண்களை… அதில் வழிந்த காதலை.. கண்டதும், அவனின் உயிர் வரை தித்திக்க, இது வரை இருந்த தயக்கங்கள், பகலவன் கண்ட பனியென மாயமாக.. மனமோ சொல்லவியலா மகிழ்வில் நிறைய… தாலியை கழுத்தில் வைத்து இரண்டு முடிச்சுக்கள் இட்டான். அவளின் பின்னால் நின்று கொண்டிருந்த மாலா முகம் கொள்ளாப் புன்னகையுடன் மூன்றாவது முடிச்சை இட்டாள்.
குனிந்த பார்வையில் மதிவதனாவின் மார்பைத் தொட்டு நின்ற தாலியை பார்த்த ஜெயவர்மன்.. அதிர்ந்தான்… அவர்களின் அரச குடும்பத் தாலி போன்று, அதே வடிவமைப்பில், அவனது அன்னையின் கழுத்தில் இருந்த மாங்கல்யம் போலவே இருந்த அதன் முக அமைப்பை கண்டவனின் உள்ளம், உடல் அனைத்தும் ஆட்டம் கண்டன.
எப்படி இது!!! என்று யோசிக்கக் கூட முடியாமல் ஏதேதோ எண்ணங்களில் நினைவு அடுக்குகள் புரண்டு சுழலுவதை உணர்ந்தவனிற்கு, உடல் எடையற்றதாகி மிதக்கும் உணர்வு. தன்னை சமாளித்துக் கொண்டு நிமிர…
சிவேஷ் விரிந்த சிரிப்புடன் அவனின் வலிய கரம் பற்றி தன் சகோதரியின் மலரணைய மென் கரத்தை இணைத்து மகிழ்வுடன் பார்க்க, மீனாக்ஷி அம்மையை சுந்தரேஸ்வரருடன் கரம் கோர்த்து சேர்த்து வைத்த அழகரின் பூரிப்பு அவனின் முகத்தில்.
பட்டாச்சாரியார், “பொண்ணு மாப்பிள்ளை சந்நிதியை வலம் வந்துருங்கோ..” எனவும் சிவேஷ், ஜெயவர்மனின் இடது கையை பற்றியவாறு முன்னே நடக்க, ஜெயவர்மன் அவனை தொடர, வலக்கையை அவனிடமும் இடக்கையை தன் பிரியத்திற்குரிய மாலா
அண்ணியின் கையில் கொடுத்தவளாய் நடந்தாள், மதிவதனா.
கோவிலில் திருமணம் தொடர்பான பூஜை, திருமணப்பதிவு அனைத்தையும் முடித்து அனைவரும் திரும்பி வீட்டிற்கு வர, மறுவீடு புகுதலிற்கு தங்களது வீட்டிற்குள் அழைத்து சென்ற ராணியம்மா பாலும் பழமும் கொடுத்தார்கள்.
தன் பிள்ளைகள், பேரன்களுக்கு செய்ய இயலாததை பேரன் பேத்தி போல் எண்ணுவதாக சொல்லி ஜெயவர்மனிற்கும் மதிவதனாவிற்கும் செய்ய விரும்புவதாக அந்த முதிய தம்பதியினர் கூறவும், நெகிழ்வுடன் கூடிய மகிழ்வுடன் சம்மதித்தனர்,
சிவப்பிரகாசம் குடும்பத்தினர். இந்த செய்முறைகள் அனைத்தையும் வியப்புடன் பார்த்தாலும், அமைதியாக உடன்பட்டான் இராஜா ஜெயவர்மன்.
அப்போது அங்கே வந்த சுராஜ், “சர், இன்று இரவு பதினோரு மணிக்கு ட்ரைன், காலை சிக்ஸ்க்கு ஃப்ளைட்.. எது புக் பண்ண?” என்றதும்.. சற்று யோசித்தவன், “ட்ரைன்….” எனவும், “சர்… ஸேஃப்டி…” என இழுக்கவும்..
“ நான் ஏர்லி மார்னிங் அங்கே இருக்கணும்.. அதுக்கு ஃப்ளைட் டைமிங் செட் ஆகாது. மினிஸ்டர்ட்ட சொல்லி ரெயில்வே போலிஸ் ப்ரோடக்ஷன் வாங்கிக்கலாம்.. அச்சுதன் செக்யூரிட்டிஸ் நாலு பேருக்கு எங்களுக்கு அடுத்த கேபின் புக் பண்ணிரு..” என்றவனின் முகம் கடுமையை தத்தெடுக்க,
“ம்.. அதுக்கு முன்னாடி ஒரு முக்ய ஜோலி இருக்கு…” என்றவன் தனது பீஎம்டபுள்யூ வாகனத்தை நோக்கி ஈரெட்டு வைத்து நகர்ந்து விட்டு, நினைவு வந்தவனாய் திரும்பி உள்ளே சென்று, எல்லோரிடமும் பொதுவாக, “நைட் லெவன்கு ட்ரைன்.” என்றவன் மதிவதனாவைப் பார்த்து, “உனக்கு தேவைப் படறது எடுத்து வச்சு ரெடியா இரு…” என்றவன், சற்று தயங்கி, “ வெளியே போய்ட்டு வந்துடுறேன்..” என்று விட்டு, யாரும் ஏதும் பேசும் முன்பு சட்டென்று வெளியேறி தனது வாகனத்தில் ஏறி, அச்சுதன் சொன்ன இடத்திற்கு விரைந்தான்.
பாதுகாப்பு ஆட்கள் சூழ்ந்து நிற்க ஹாலில் இருந்த சோபாவில் கடுப்புடன் அமர்ந்து இருந்தான் திருமலை. எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டும் சிக்கி விட்டோமே என்ற கடுப்புடன், வாங்கிய சில பல அடிகளில் உடல் வலியோடு
பல மணி நேரமாக அசைய முடியாமல் அமர வைக்கப் பட்டிருந்த எரிச்சலும் சேர்ந்து இருந்தவன், மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்த ஜெயவர்மனைக் கண்டு மிரண்டு எழுந்தான்.
உள்ளே நுழைந்த வேகத்தில் அவனின் முகத்தில் ஒன்றரை டன் வெயிட்டில் பளார் என்று அறை விழுந்ததும், பொறி கலங்கி சோபாவில் இருந்து கீழே சாய்ந்தவனின் நெஞ்சுச் சட்டையை பற்றித் தூக்கியவன்,
“இன்னொரு முறை உன்னை நேரில் கண்டால் சவட்டிக் களையும்னு சொல்லிருந்தும், நான் இருக்கிற இடத்துக்கு வர, என் வது மேல.. என்ட நண்பன் குடும்பத்தின் மேல கை வைக்க எவ்ளோ தைரியம் உனக்கு…?” என இறுகிய குரலில் கேட்டதும்,
அவ்வளவு நேரம் லேசான பயத்துடன் இருந்தவனை,
‘எண்ட வது..’ எனும் வார்த்தைகள் சீண்ட,
ரத்தத்தில் ஊறியிருந்த ஆசையும் திமிரும் முறைத்து பார்க்க வைத்தது…
திருமலையின் முகம் நெருங்கி, கண்களை ஆழ நோக்கித் தீயாய் விழித்தவன், “என்னடா பார்க்குற..? பெண்ணைத் தூக்கி வந்து நாசம் செய்விக்க உனக்கு பிளான் போட்டு கொடுத்து.. ஆளும் ஒருத்தன் அனுப்பிச்சான்னு.. பேடி போல நீயும் ஒளிஞ்சுட்டே காரியம் சாதிச்சிடலாம்னு நினைச்சியோ? இன்று இருந்து வதனா…. எண்ட பார்யாள்.. அவளை தொடக் கூட வேணாம்.. தொடனும் நினைச்சாலே.. கிடைக்கிற அடி பலம்மா… எந்திரிக்க முடியாத அளவு இருக்கும்னு அவன் கிட்டயும் சொல்லனும்… ஓஹ்.. அதுக்கெல்லாம் உனக்கு சமயமில்ல… உன்னோட நிலை நோக்கி அவனுக்கே மனசிலாகும்…”
என்றவன் வெப்ப மூச்சுடன்
திரும்பி அச்சுதனைப் பார்த்து, “இவனை போலீசில் ஹாண்ட் ஓவர் பண்ணிருங்க. மால் வேலைல குழப்பம் பண்ணது… பணம் கேட்டு தகராறு பண்ணது.. ஆள் கடத்தல்… கொலை முயற்சினு என்னென்ன கேஸுண்டோ… எல்லா கேஸையும் அவன் மேல.. அவனண்ட அச்சன் மேலயும் சேர்த்துப் போட்டு.. அரசியல்.. ஆட்டம்.. வாழ்க்கை…
எல்லாத்த்த்த்த்துக்கும்…
முற்றுப் புள்ளி வச்சுரலாம்..”
என்றவன் திரும்பி நடக்க..
‘எல்லாத்த்த்த்த்துக்கும்..’ என்ற சொல்லின் அர்த்தம் விளங்கியவராய், திரும்பி திரு மலையை பார்க்க, குலை நடுங்கி நின்ற அவனின் தோற்றத்திலேயே அவனுக்கும் அது புரிந்து விட்டது என்று நமுட்டு முறுவலுடன் அவனை இறுகப் பற்றினார்… அச்சுதன்.
*******************
மதுரை புனலூர் பாஸஞ்சர். ஏசி முதல் வகுப்பு. கூபே என்று சொல்லப் படும் இருவரை மட்டுமே அனுமதிக்கும் படுக்கை வசதியுடைய பெட்டியில் அமர்ந்து.. கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த, தான் பிறந்த நகரை பார்த்தவாறு இருந்தாள் மதிவதனா..
இரவு நேரம் என்பதால் யாரும் ரயில் நிலையம் வர வேண்டாம் என்று ஜெயவர்மன் சொல்லி விட்டதால், எல்லோரிடமும் வீட்டிலேயே பிரியா விடை பெற்று வந்தாகி விட்டது. ‘நல்லவேளை.. விக்கி தூங்கி விட்டான். இல்லாவிட்டால் அவனை விட்டுக் கிளம்புவது பெரும் பாடாய் இருந்திருக்கும்..’ என்று பலவாறு எண்ணியவள்.. கதவு தாழிடப்படும் ஒலி கேட்டு திரும்ப, காக்கி நிற காட்டன் பேக்கீஸ் பேண்ட், செங்கல் நிற பூமா டீ சர்ட் என எளிய உடையிலும் தெறிக்கும் கம்பீர அழகுடன் வந்து அமர்ந்தான் ஜெயவர்மன்.
தனது சிறு பெட்டியை, எடுத்துத் திறந்து லேப்டாப் வெளியில் எடுத்தவன், அவளின் பார்வை உணர்ந்து, ஒளிரும் திரையில் கடவுச் சொல்லை உள்ளிட்டவாறே,
“தூக்கம் வரலை..?” எனக் கேட்க,
அவனையே பார்த்தவாறு இருந்தவள், தன் இதழ் ஓரச் சிரிப்புடன் அமைதியைத் தொடர..
பதில் வராததை உணர்ந்து கேள்வியாய் நிமிர்ந்து பார்த்தவன், அவளின் அமைதியான முகம் கண்டு ‘என்ன..’ என்பதாய் புருவம் உயர்த்தினான்.
சிறு கேலி முறுவலுடன்,
“என்கிட்டயா கேட்டீங்க..? !நான் லேப்டாப் கிட்டையோனு நினைச்சேன்..”
எனவும்,
புருவம் வளைய, பொங்கிய சிரிப்பினை அடக்கியதில்
உதட்டோரம் துடிக்க, லேப்டாப்பை அவளுக்கு அருகில் இருந்த சிறு ஸ்டாண்ட் போன்ற அமைப்பில் வைத்தவன், சார்ஜர் ப்ளக் ஐ சொருகி ஆன் செய்தான்.
திரும்பி நேராகப் பார்த்து, “சரி… வது… தூக்கம் வரலையா.. காலைல இருந்து ரெஸ்ட்டே இல்லை. லெவன் தர்ட்டி ஆச்சு. நீ அப்பர் பெர்த்ல படுத்துக்கோ… ஏறிடுவியா..?” என்று கேட்டான்.. தன்மையாக..
“அதே பதினொன்றரை தானே உங்களுக்கும் நீங்க படுக்கலை..?”
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..” என்றவன், மெதுவாக அவளை ஏறிட்டுப் பார்த்தவன் புருவங்கள் குழப்பத்தில் சுளித்துக் கொண்டன..
அவளின் பூ போன்ற முகத்தையும்.. தன் முகத்தில் நிலைத்த அவளின் பார்வையும் கண்டு ஏதோ குழப்ப, “வது… நான் தனியாவே இருந்து பழகியவன்.. அதும் பெண்கள்ட்ட எப்படி பேசனும்னு கூட தெரியாது.. கொஞ்சம் காலம் ஆகும்… நின்ட பார்வையப் படிக்கறதுக்கு.. எதுவானாலும் வாயத் திறந்து சொல்லிட்டா பெட்டர்…” எனவும்,
மெலிதாக சிரித்தவள், பெர்த்தைக் காட்டி, “இதுல ஏணி மாதிரி கூட இல்லை.. எப்படி ஏற..” என்றவள், குறும்பு புன்னகையுடன், “பயமில்லாம என் பக்கத்தில் வந்தீங்கன்னா, உங்களைப் பிடித்து இது மேல ஏறிடலாம்..” என்றதும்…
இதழ்கள் முறுவலில் விரிய, அருகில் வந்தவன் சட்டென்று குனிந்து அவளின் மேல் கால்களின் பகுதியை சேர்ந்துப் பற்றி.. தூக்கி, மெதுவாய் உயர்த்தி… பெர்த்தில் அமர வைத்தான்.
அவன் திடீரென்று தூக்கியதும் தடுமாறி, வேகமாக அவனின் தோள்களைப் பற்றி இருந்தவள், அமர வைத்த பிறகும், பற்றியவாறே முன்னால் சாய்ந்து குனிந்து இருக்க.. நகரப் போனவன், அவள் கைகள் விலகாமல் பற்றி இருப்பதை உணர்ந்து அப்படியே நின்றான்.
இருவரின் இதயங்களும் தங்களின் துடிப்பை அதிகரித்து இருக்க, தன்னை நோக்கி நின்ற அவனின் விழிகளை ஆழ்ந்து பார்த்தவள், அவனின் பார்வையில் வந்த கிறக்கத்தையும் மென்மையும் கண்டு தனைத் தொலைத்தவளாய், பார்த்துக் கொண்டே இருக்க,
தன் இரு கைகளை உயர்த்தி கன்னம் பற்றி சற்றே கீழே இழுத்தவன், பிறை நுதலில் தன் முதல் முத்திரையை பதித்தான்… கண்மூடி ரசித்து அவள் அதை ஏற்றுக் கொள்ள, விழித்தெழும் உணர்வுகளை அடக்கி, மெதுவாகவே அவளை பற்றியிருந்த கைகளை விலக்கியவன், மென்மையான குரலில்,
“தூங்கு.. நாளைக்கு நமக்கு நிறைய வேலை இருக்கு..” என்றதும், சிறு சிரிப்புடன் அவளும் தன் கைகளை விலக்கிக் கொண்டாள்..
தன் கைச்சிறையினின்று அவனை விடுவித்தவள், சரிந்து படுத்ததும், அவளின் காலடியில் வைக்கப்பட்டு இருந்த கம்பளி மற்றும் போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தியவன்.. நகர முற்பட,
”வரு…” என ஒலித்த விளிப்பில், ஆனந்தத் திகைப்புடன் அவள் முகம் பார்க்க, “குட் நைட்…” என்று விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.
அவளின் முகத்தையே சிலநொடிகள் பார்த்து நின்றவன்… முகத்தில் மிகுந்த இரசனையுடன் வந்து அமர்ந்து கொண்டது ஒரு புன்னகை..
“ குட் நைட்..வது.” என மென்மையாய் உச்சரித்தவன்,
சிறுமுறுவலுடன் தனது லேப்டாப் ஐ நோக்கிப் போனான்.
***************************
அன்று…
சோலையூர்… மருத நாட்டின் மேற்குப் பகுதியில் நீண்டு இருக்கும் ஆனை மலைத் தொடரின் அடிவாரத்தில் இருக்கும் சிற்றூர். மேல் திசைக் காவலரான வேங்கையர் வசிக்கும் இடம்..
அதிகாலைப்பொழுது.. வேங்கையரின் பயிற்சி திடல் பரபரப்பாய் இருந்தது. இளவரசி சந்திர வதனாம்பிகையின் வருகை பற்றி மருத புரியிலிருந்து ஏற்கனவே தகவல் வந்திருந்த காரணத்தால் ராஜபாட்டையில் ஒரு பார்வை வைத்தவாறே, தனது காவல் வீரர்களின் அணி வகுப்பை, அவர்களில் பயிற்சியை மேற்பார்வையிட்டவாறு இருந்தார்.
கொடை நாட்டின் இளவல் வேறு தகவல் அனுப்பி இருந்தார். இன்று இளவல் படையோடு மருதத்தின் எல்லைக்குள் நுழைய போவதாக.. அவரையும் தகுந்த மரியாதை செய்து வரவேற்க வேண்டும். விருந்தளித்து உபசரிக்க வேண்டும்.. என்ற பதட்டம் அடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
சோலையூர் வீரர்கள் வேல் கம்பு வீச்சில், சிலம்பம் சுழற்றுவதிலும் பெயர் பெற்றவர்கள். வீர விளையாட்டான மற்போர், (ஆயுதங்கள் ஏதும் இன்றி கை கால்களே ஆயுதமாக.. நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் போர்) செய்வதிலும் திறமைசாலிகள்.. எனவே அதற்கான ஆசான்கள் அவர்களை நெறிப்படுத்தி உரமேற்றும் வழிமுறைகளில் கவனம் வைத்து, கொண்டு செலுத்துவதை கண்காணித்தவாறு இருந்தார்.
அப்போது புரவிகளின் குளம்பொலி கேட்க, வேகமாக திரும்பி பார்த்த போது… இரு வெண்புரவிகள் பூட்டிய, மருத நாட்டின் கொடி பறக்கும் பொன் தேரை செலுத்தியவாறு, மெய்க்காவலர் படையினர் இருபது பேர் புரவிகளில் தனது தேரின் இருபுறமும், பின்னாலும் காவலாய் தொடர.. வந்தாள் இளவரசி சந்திர வதனாம்பிகை..
வேகமாக வந்த குதிரைகளை கடிவாளத்தை இழுத்து அடக்க, முன்னிரு கால்களையும் தூக்கி அவை கனைக்க, தேரின் நிலை மாறுவது கண்டு பதறி ஓடினார் வேங்கையன். ஆனால் சற்றும் கலக்கமுமின்றி சமாளித்து
கடிவாளக் கயிற்றை சுழற்றி திருப்பி இழுத்து குதிரைகளை சமாதானப்படுத்தி அவற்றை நிலை படுத்தவும், அவை நடனமிடுவது போல் கால்களை அடித்து, சற்று நேரத்தில் நேராக நின்றன..
குதிரைகளின் இச்செய்கை இளவரசியின் விளையாட்டா… வீரமா.. என்று புரியாமல் திகைத்தவர், மெய்க்காவல் படையினரின் அமைதி கண்டு சரிதான்.. இது இளவரசியாரின் வழக்கம் போலும்.. என்று ஆசுவாசம் அடைந்தார். அவரை கண்டு முகமதியானது மகிழ்வுடன் ஜொலிக்க கண்களில் அன்புடன் இறங்கி வந்தாள் இளவரசி சந்திராம்பிகை.
அவளின் கண்ணசைவில் தட்டுக்களிலும் கூடைகளிலும், அரச வெகுமதிகள் வேங்கையரின் முன்பு வந்து வைக்கப் பட்டன.
“இதெல்லாம் எதற்கு குழந்தாய்..?” என கேட்கவும்..
“மருதத்தின் மிக சிறந்த வீரருக்கு.. மருத புரியின் மரியாதை…” என்றவள் திரும்பி.. சுற்றிலும் திடலைப் பார்த்தவள் திருப்தியாய் புன்னகைத்தாள்..
“பயிற்சி சிறப்பாக நடக்கிறது வேங்கையரே… இங்கு சோலையூரைச் சுற்றி இருக்கும் ஊர்களில் உள்ள வீரர்கள் அனைவரும் பயிற்சி எடுகின்றனரா.?” எனவும்.
“இது சோலையூர் மட்டும் இளவரசி..” எனவும் திரும்பி முகம் சுருக்கிச் செல்லச் சிரிப்புடன் பார்க்க…
அவளின் செல்லக் கோபம் புரிந்தவராய்.. சிரிப்புடன், “உங்கள் கம்பீரத்தில் அந்த வார்த்தை தானே வந்து விடுகிறது குழந்தாய். என் செய்வேன்! ”என்றவர், தன் கவனத்தை படை பற்றிய பேச்சில் திருப்பி,
“இன்னமும் என் காவல் பொறுப்பில் உள்ள அனைத்து ஊரர்களிலும் இருந்து வீரர்கள்… ஆங்காங்கே என் முன்னணி வீரர்கள் மூலம் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாளை அனைவரையும் இங்கு ஒன்றிணைத்து, மூன்று நாட்கள் கடின பயிற்சி மேற்கொள்ள வைத்து , உடலை உறுதி படுத்தும் வழி முறைகள் செய்விக்க வைத்து மருதபுரி கோட்டை நோக்கி அணி வகுக்க செய்து விடுவேன். குறைந்தது இரண்டாயிரம் வீரர்கள் வந்து விடுவார்கள் குழந்தாய்..”
எனவும்,
மகிழ்வுடன், “அருமை அருமை….” என்றாள் சந்திராம்பிகை. “உடலை உறுதிப் படுத்தும் வழி முறைகள் என்றால்..?” என்ற அவளின் ஆர்வமான கேள்விக்கு விடையாக,
“போருக்கு வெகுதூரம் பயணப்பட வேண்டுமே குழந்தாய்.. போரில் காயம் ஏதும் பட்டால், எலும்பு முறிவு ஏற்பட்டால் விரைந்து குணப்பட ஏதுவாக பல மூலிகைகள் உள்ளன.. அவற்றை சோலையூரின் மருத்துவர்கள் ஆனைமலை மற்றும் மருதம் முழுவதும் தேடி, ஆய்ந்து பதப்படுத்தி குளிகைகளாகவும், வடிநீராகவும் தயாரித்துள்ளனர்.. அவற்றை வீரர்களுக்கு முற்காப்பு மருந்துகளாக வழங்குவேன்…” எனவும்,
“அற்புதம்..” என்று இளவரசி மகிழும் வேளையில், தூரத்தில் பறையொலியும் கூவலொலியும் (மனிதர்கள் சங்கேதமாக கத்துவது) கேட்க..
ஆச்சரியம் அடைந்த வேங்கையர், “இளவல் படை வந்துவிட்டதா..!! அதற்குள்ளாகவா..!”என சொல்லியவாறு நகரவும், புரியாமல் பார்த்தாள் சந்திராம்பிகை.
“இளவலா… கொடை நாடு இளவல் இராஜ ஜெயசிம்ம வர்மரா?” என்றவாறே அவருடன் நகர,
“ஆம் குழந்தாய். நேற்று இரவு தகவல் வந்தது. மருதபுரிக்கு அரசருக்கும் கூட தகவல் அனுப்பியிருப்பாரே..!” எனவும்..
“நான் மிகவும் அதிகாலையில், வைகறைப் பொழுதின் ஆரம்பத்தில் கிளம்பியதால் தந்தையாரை பார்க்கவில்லை.. வேங்கையரே..” என்றவள்,
அவர், “இன்னமும் அரை நாழிகையில் படைகளுடன் சோலையூர் வந்துவிடுவார்… நான் சென்று வரவேற்கிறேன் அம்மா…” எனவும்,
“ ஏன் நான் வரக்கூடாதா..?” என்று புன்முறுவலுடன் கேட்டாள்..
“பயணப்பட்டு வந்திருக்கிறீர்களே.. சற்று நேரம் ஓய்வெடுத்த பிறகு கூட சந்திக்கலாம் குழந்தாய்… அவர் யானைப் படையுடன் வருவதாக தகவல். எனவே சிறு குன்றினை ஒட்டி இருக்கும் சுனை அருகேதான் படைக்குடி அமைத்து ஓய்வெடுக்கச் செய்ய வேண்டும்..”
“அப்படியே ஆகட்டும்.. ஆயினும் இங்கேயே இருந்து கொண்டு, நான் வரவேற்க வரவில்லை என்றால் மரியாதையான செயல் அல்ல. எனவே நானும் வருகிறேன்..” என்றவள் தனது தேரின் மீதேறி, புரவியில் முன் செல்லும் வேங்கையரைப் பின் தொடர்ந்தாள். வேங்கையரின் கண் அசைவில் பூரண கும்பம் மற்றும் ஆரத்தி ஏந்திய பெண்களும் ஓட்டமும் நடையுமாய் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
கணவாய் பகுதி நெருங்கும் போதே தூரத்தில் படைகளின் ஆரவாரம் கேட்க ஆரம்பித்தது. வேங்கையர் ஒரு சிறு பாறைத்திட்டின் மீது ஏறி நிற்கவும், தன் தேர் விட்டு இறங்கிய இளவரசியும் அவர் அருகில் சென்று நின்றாள்.
மிகவும் பெரியதாகவும் கம்பீரமாகவும் இருந்த தலைமை வேழத்தின் மீது, அலங்கரிக்கப் பட்ட அம்பாரியில் அமர்ந்து, சுற்றிலும் பார்த்தவாறு வந்த இளவலின் பார்வை, பாறைத்திட்டின் மீது பட்டதும் அங்கேயே நிலைத்தது..
கனவோ நனவோ என்ற எண்ணம் தோன்ற உற்று கவனித்தவனின் கடின இதழ்களில் அவனழைக்காமலே வியப்புடன் கூடிய மகிழ்ச்சி முறுவல் வந்து அமர்ந்தது..
அவனின் கை உயர்விலும் சிறு குரல் கட்டளையிலும், முன்னேறி வந்து கொண்டிருந்த படையானது அப்படியே நிற்க.. அவன் அமர்ந்திருந்த வேழம் மட்டும் நகர்ந்து வந்து, பாறைத்திட்டை அடைந்ததும் அம்பாரியினின்று வெளி வந்தவனின் ஆணையில் அங்கேயே நின்றது. யானையின் கழுத்தருகே வந்தவன் அங்கே கட்டியிருந்த கயிற்றைப் பற்றி இறங்க, அந்த புத்திசாலி யானை, தன் முன்னங்காலைத் தூக்கி அவனுக்கு படி போலாக்கியதும் அதில் நின்று.. பின் குதித்து இறங்கினான் இளவல்.
இறங்கிய அவனின் கம்பீரத்துடன் கூடிய அழகில் அங்கிருந்த மகளிர் மட்டுமல்ல, வேங்கையரே அசந்து கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.
இளவரசியின் முகத்திலோ சிறு முறுவல் மட்டுமே.. வரவேற்கும் விதமாக கரம் குவித்தவள்.. அவனையே.. பார்த்தவாறு இருக்க, பெண்களின் ஆரத்தியையும் பூரண கும்ப மரியாதையையும் பெற்றுக் கொண்டவனை நோக்கி வணங்கியவாறு சென்றார் வேங்கையர்..
அவரின் குவித்த கரங்களை விலக்கியவன்.. அவரை மார்புற இறுகத் தழுவி தன் அன்பை வெளிப்படுத்தியவன், தன் படையை நோக்கி கையசைக்க, வீரர்கள் இருவர் முன்னே வந்தனர். அவர்கள் ஏந்தி வந்த பெட்டியில் இருந்த, கொடை நாட்டின் சிறப்பான யானைத் தந்தங்களை வேங்கையருக்கு தன் கரங்களால் பரிசளித்தான்.
வேங்கையர்,
“ தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி இளவலே.. தங்களுக்காக மருதத்தின் சார்பில் விருந்து தயாராகிக் கொண்டு இருக்கிறது..” எனவும் சிரித்தவன்,
“ பெரும் படைக்கு விருந்து தயாரித்தல் கடினமான பணி காவலரே.. மருதத்தின் விருந்தை நான் புசிக்கிறேன்..” என்றவனின் பார்வை இளவரசியின் மீது படிந்து மீண்டும் வேங்கையரிடம் திரும்ப, “கொடை நாட்டின் சமையல் குழுவினர் படைகளை கவனித்துக் கொள்வர்.. சிரமம் வேண்டாம்…” என்று விட்டு இளவரசின் புறம் பார்வை திருப்பியவன், “நலமா தேவி…?” என வினவினான்.
இனிய முறுவலுடன் ஆமோதிப்பாய் தலையசைத்தவள், “நலம் நாடும் அண்டை நாட்டினர் இருக்கையில் மருதத்தில் என்ன குறைவு!? மிக்க நலம் இளவரசே…” என்றதும்,
அவளின் விழிகளுக்குள் ஆழ்ந்து நோக்கியவன், “நான் உங்களின் நலம் கேட்டேன் தேவி..” எனவும்,
அவனின் பார்வையைத் தாங்கியவள், முறுவல் குன்றாமல் , “நலம் இளவரசே..” என்றாள்.
மிக மெல்லிதாய் வெளிப்பட்ட பெரு மூச்சுடன் வேங்கையர் நோக்கி திரும்பியவன்,
“சில நாட்கள் இங்கேயே தங்கலாம் என்று நினைக்கிறேன்.. காவல் தலைவரே. ” என்றவன் நிறுத்தி,
“ கொடை நாட்டின் இளவல் சேனை மருதபுரிக்கு செல்ல தேவை இருக்காது. சாளுவத்தை நோக்கி செல்ல இருப்பதால், இடையில் உறையலூரில் படைகுடில் அமைத்து நிற்கலாம் என்று இருக்கிறேன். போர்த்திட்டம் மாறினால் கூட விரைந்து நகர ஏதுவாக இருக்கும்..” என்றான் ஏதோ யோசனையோடு..
அவனின் முகத்தில் பார்வை பதித்து இருந்தவள் வியப்புடன், “இப்போதைய எங்களது போர்த் திட்டத்தில் ஏதும் குறையிருக்கிறதா இளவலே?! ” எனவும்,
நிமிர்ந்தவன், “இல்லை தேவி… போருக்கான வியூகங்கள் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைகள் பொறுத்து மாற்றுவது தான் வெற்றிக்கு வழி வகுக்கும். மொத்த படையையும் சாளுவம் நோக்கி குவிப்பது சரியான செயல் திட்டம் அன்று..” எனவும்,
தொடர்ந்த இளவரசியின் அமைதி, யோசிப்பதை குறிக்க, வேங்கையரைப் பார்த்தவன், “யானைகள் நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கின்றன.. அருகில் ஆறு, ஏரி உள்ள வனப்பகுதியில் அவற்றை ஓய்வெடுக்க செய்ய வேண்டும். குதிரைகளுக்கு சுனை, குளம் இருந்தால் கூட போதும்” எனவும்..
“இருக்கிறது இளவலே, அங்கே தான் விருந்தும் தயாராகிறது. வாருங்கள் செல்லலாம். ”எனவும், திரும்பி இளவரசியை நோக்கியவன், “விடைபெற்று கொள்கிறேன் தேவி…” என்றான். தலையசைத்து கரம் குவித்தவளின் கவனம் எங்கோ இருக்கிறது.. என்று உணர்ந்தவனாய், சிறு வேக மூச்சுடன் தனது யானையை நோக்கி சென்றான்.
வேங்கையரை நோக்கித் திரும்பிய சந்திராம்பிகை, “நான் மலைகுடியினரின் ஊருக்குள் சென்று அவர்களின் தலைவரை சந்திக்க போகிறேன் வேங்கையரே. மெய்க்காவல் வீரர்களில் சிலரை மட்டும் அழைத்து செல்கிறேன்.
இங்கே இளவலை கவனிப்பதில் கொடை நாட்டு படையினை கவனிப்பதில், மற்றவர்கள் இருக்கட்டும். நமது உபசரிப்பில் எந்த குறைவும் நேர்ந்து விடக்கூடாது.” எனவும்,
“சரிதான் குழந்தாய்.. ஆனால்…” என்று தயங்கியவர், “இப்போது கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம், கொட்டம் குறைந்து விட்டதாகத் தான் எண்ணுகிறேன். இருப்பினும்.. நானும் உங்களுடன் உடன் வந்தால் நலமென்று தோன்றுகிறது..” எனவும்,
“ நமது நாட்டுக் குடி மக்களை சந்திக்க செல்கையில் எனக்கு என்ன நலக்குறைவு வந்துவிடப் போகிறது வேங்கையரே…” என்றவள், அவரின் கவலையான முகம் கண்டு, “அஞ்ச வேண்டாம். சிறும்பொழுது (நான்கு மணி நேரம்) நேரத்தில் திரும்பி வந்து விடுவேன்..” என்று விட்டு, தன் தேரில் ஏறினாள்.
அவளின் கண் அசைவில் வந்த கட்டளையில், நால்வர் மட்டும் அவளை பின்தொடர.. மற்றவர் அங்கேயே நின்றனர்.
தன் படையினரை நோக்கி கட்டளையிட்டு நெறிப்படுத்தி விட்டு திரும்பிய சிம்மவர்மனின் பார்வையில் இளவரசியின் தேரின் வேகம் பட, யோசனையில் சுருங்கின அவனின் விழிகள்.
இப்போது படையினரை ஓய்வெடுக்க செய்வது, உணவு அருந்த வைப்பது போன்ற வேலைகள் முன்னிற்க, வேங்கையர் செல்லும் வழியில் திருப்பினான் தனது வேழத்தை…
ஒரு பெரிய வேழம் படுத்து இருப்பது போன்ற குன்றையும் அதன் அடி வாரத்தில் இருந்த மிகப் பெரிய.. தாமரை மற்றும் அல்லி மலர்களால் நிறைந்து இருந்த தடாகத்தையும் கண்ட கொடை நாட்டு வீரர்களின் கண்கள் ரசனையில் விரிந்தன…
***********
ஆனை மலைக் குடியினரின், தலைமை வாழிடம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது சந்திராம்பிகையின் தேர். அதை விட விரைவாக இருந்தது அவளின் எண்ணங்கள்.. அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் மெய்க்காவலர் திணறியபடி பின் தொடர்ந்தனர். தேரில் செல்வதால் சிறு குன்றை சுற்றிச் செல்ல வேண்டியது இருந்தது. ஒரு யோசனைத் தொலைவை சில ஓரைப் பொழுதுகளில் கடந்தவள், மலைக் குடியினரின் ஊரை அடைந்த போது, அங்கே திருவிழா நடப்பது போன்று அலங்காரங்கள் தென்பட, மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டு இருந்தனர்.
திக்விஜயம் செய்த இளவரசியைப் கண்டு மகிழ்ந்து அனைவரும் தரையில் வீழ்ந்து வணங்கவும், சட்டென்று தேரை நிறுத்தியவள் இறங்கிக் கீழே வந்தாள்.
“என்ன கூட்டமாக செல்கிறீர்கள்..! ஏதும் விழா வா..?” எனவும்
மலைக்குடியை சேர்ந்த இளம்பெண் ஒருத்தி நாணி கூனிய படி, இரு கைகளையும் பணிவாக கட்டிக் கொண்டு முன் வந்து, “ஆம் அம்மா. இன்று குறிஞ்சம்மாவை தாழிக்குள் இடும் விழா.” எனவும், புரியாமல் பார்த்தாள் இளவரசி.
அப்போது ஒரு முதிய பெண் முன் வந்து, “குறிஞ்சம்மா… எங்கள் குலத்தின் மூத்தகுடியினள். மருத்துவச்சி. ஆறு முறை குறிஞ்சி பூ பூத்ததை பார்த்தவள். சில திங்கள்களாக அசைவின்றி போய் விட்டதால்.. தாழியில் இட முடிவு செய்தார் தலைவர். ஆறு குறிஞ்சி பார்த்து ஆயிரம் பிறை கண்டவர்களை தாழியில் இட்டு மந்திரங்கள் சொல்லி மண்ணிற்குள் புதைத்தால் மலை வளமாகும் என்பது எம் குடி ஐதீகம்.. அதை மிகப் பெரும் விழாவாக செய்வோம் தேவி..” எனவும்,
“ தாழியில் இடுதல் என்றால், அவர்கள் இறந்து விட்டார்களா..?” என்று கேட்டவளின் ஐயத்தை அதிகரிக்கும் வகையில், அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாய் நிற்கவும், “தங்களின் தலைவரை சந்திக்க வேண்டும்…” என்றாள் சந்திராம்பிகை.
சற்றுத் தொலைவில் தெரிந்த ஒரு குடிசையை கைகாட்டி, “அதுதான் குறிஞ்சம்மாவின் குடிசை.. தலைவரும் அங்கே தான் இருப்பார்.. அங்கே நடக்கும் சாங்கியங்களை அவர் தான் செய்துவிப்பார்..” எனவும்,
அவர்கள் காட்டிய குடிசை நோக்கி அவள் விரைந்து நடந்ததும்.. அனைவரும் நின்று.. ஒதுங்கி அவள் செல்ல வழி விட்டனர். குடிசை சுற்றி மக்கள் குழுமி இருக்க, உள்ளே எண்பது அகவையையை நெருங்கும் தோற்றத்தில், சுருங்கிய தேகத்துடன் இருந்த முதியவள் படுக்க வைக்கப் பட்டிருந்தாள். அவளின் உடலானது புதிய துணி, காட்டு மலர்கள் கொண்டு அலங்கரிக்க பட்டிருந்தது.
இளவரசிக்கு இது எல்லாமே புதியதாக தோன்ற வியப்புடன் பார்த்தவாறே உள்ளே நுழைந்தாள். அப்போது அவள் வரும் சத்தத்திலேயே முதியவள் விழித்து பார்க்க எதற்கும் அஞ்சாத இளவரசியின் உள்ளம் குலுங்கியது..
‘உயிரோடு இருப்பவர்களையா தாழிக்குள் இட்டுப் புதைக்கப் போகிறார்கள்..!!’ என்று எண்ணியவாறே அவரின் அருகில் நெருங்க, அங்கே இருந்த பெரியவர், அவளை கண்டு வியந்து, நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்.
அவர்தான் தலைவர் என்று புரிந்து கொண்டவள், “உயிரோடு இருப்பவர்களையா இவ்வாறு புதைக்க போகிறீர்கள்.. இது பாவமில்லையா..?” எனவும்,
அனைவரும் குலவையொலி எழுப்ப.. தலைவர் வாயின் மேல் கையை வைத்தவாறு.. “இவ்வாறு செய்வது ஆனை மலைக் குல வழக்கம் இளவரசி. இப்படி செய்யாவிடில், மலை வளம், நாடு வளம் அனைத்தும் குன்றி விடும்.” எனவும், வேதனையோடு முதியவளைப் பார்த்தாள்.
அவளின் முகத்தையே பார்த்திருந்த முதியவளின் கண்களின் இமை அசைவில் அவர்களை நெருங்கி சென்றாள் இளவரசி. குறிஞ்சம்மாவின் உடல் முழுதும் அசைவு அற்று இருக்க கண்கள் மட்டும் தீட்சண்யமாய் மின்னின.
“வருந்த வேண்டாம் தேவி.. நான் அடங்கும் நாள் வந்து விட்டது. நான் தான் இதையெல்லாம் ஏற்பாடு செய்யச் சொன்னேன். இனி மலைத் தெய்வமாய் என்னை எண்ணி, நடுகல் வைத்து வணங்குவார்கள்.. நான் என் மக்களை உடனிருந்து காப்பேன்.” என, மெலிந்து என்றாலும் தீர்க்கமாய் ஒலித்த அவளின் குரல் கேட்டு கூடி நின்ற அனைவரும் கன்னத்தில் தட்டிக் கொண்டனர்.
பார்வையை இளவரசியின் முகத்தில் நிலைக்கப் பதித்த அந்த முதியவள், “மன்னர் பெருமான் நன்மாறனின் ஒரே குலகொழுந்து தானே நீ..” எனவும்,
வியப்புடன் ஆமென்று தலையை அசைத்த இளவரசி.. படுக்கை அருகில் சென்று மண்டியிட்டு அமர… கண்களை ஒரு முறை மூடி திறந்தவள், “என்னைத் தேடித் தானே இங்கு வந்தாய்?!” என கேட்டதும் திடுக்கிட்டாள்.. சந்திர வதனாம்பிகை…
*****************
அனுமதி 20
இன்று…
விடிகாலை பொழுதில் வழக்கம் போல விழிப்பு தட்டி விட, கண்கள் திறந்தவனின் முன் சதிராடின.. மெல்லிய வெள்ளிக் கொலுசுகள் அணிந்து இருந்த வெண்பஞ்சுப் பாதங்கள்… கீழே இறங்கும் முயற்சியில் இருந்த அவற்றைக் கண்டவனின், தன்னை மீறிய உந்துதலில் கை உயர்ந்து அவற்றில் ஒன்றைப் பற்றித் தாங்க, தன் போக்கில் இறங்கிக் கொண்டு இருந்தவள், முதலில் அதை உணரவில்லை. இன்னொரு பாதத்தை ஜெயவர்மன் படுத்து இருந்த பெர்த்தில் வைத்தவள், ஒரு நொடி அசைவற்றுப் போய், பின் சட்டென்று பற்றிய கையிலிருந்து உருவ முற்பட, “ ஷ்.. வது.. கவனமாயிட்டு இறங்கு.. விழுந்துறாதே.” என்றவன், சிறு பறவைக் குஞ்சுகளைப் பற்றும் லாவகத்துடன் பிடித்திருந்த பிடியை விலக்கவும் பெர்த்தின் இரு பக்க கம்பிகளை பற்றியவாறு இருந்தவள்.. குதித்து.. இரு கைகளையும் தட்டி விட்டு, இடுப்பில் கை வைத்து நின்று அவனைப் பார்த்தாள்.
கண்கள் சுருங்க அவளைப் பார்த்தவன்,
“கால்ல ஸ்ப்ரைன் இருந்தது.. ஞாபகம் இருக்கா?” என்று கேட்க,
முகவாயை உயர்த்தி அவனைக் கீழ்க்கண்ணால் பார்த்தவள்,
“இல்லாதது.. சரியா போனது.. எல்லாம் ஏன் ஞாபகம் வச்சுருக்கனும்.. வேண்டுதலா.. என்ன..?” என ஒரு தீவிரமான முக பாவனையுடன் அவள் திருப்பி கேட்கவும்..
அவளைப் பார்த்தவாறே போர்வை விலக்கி எழுந்தவனின் அடக்கப்பட்ட புன்னகையை கண்களில் பளிச்சிட்ட மின்னலின் மூலம் இப்போது கண்டு கொண்டவள்,
‘எவ்ளோ நாள் இப்படியே ரிஷ்யஸ்ருங்கரா ஆக்ட் பண்ணிட்டு இருக்க போற வரு.. பார்க்காம பார்க்கிறதும் சிரிக்காம சிரிக்கிறதும்.. உன் அலப்பறை… ஷப்பா..’ என்று எண்ணியவாறே, கதவைத் திறக்க, வாசலில் துப்பாக்கியுடன் நின்ற ரயில்வே போலீஸைக் கண்டு திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, “சன்ரைஸ் பார்க்கலாம்னு எழுந்தேன். எந்த ஜன்னல் வழியா பார்த்தாலும் தெரியலை..” என,
போர்வையை மடித்து வைத்தவன், உட்கார வசதியாய் அந்த பெர்த்தை சரி செய்தவாறே,
“ ட்ரைன் இப்போ வெஸ்ட் காட்ஸ் மௌண்டன்ஸ் இடையில போயிட்டு இருக்கு.. சன்ரைஸ் தெரியாது. குறச்சு சமயம்.. கழிச்சு தெரியலாம்..”
“எவ்ளோ நேரம் ஆகும் உங்க ஊருக்கு போக.?”
“இன்னும் ஒன் ஹவர்ல திருவனந்தபுரம் ஜங்ஷன், அடுத்து கார்ல கிளிமனூர் போறோம்..”
“கிளிமனூர் ஆ… உங்க ஊர்…? வர்க்கலான்னு தானே அண்ணே சொன்னாங்க!!.”
எனவும்..
பெர்த்தின் நடுவில் அமர்ந்து அவளையே பார்த்தவன், “வர்க்கலா ஞான் உருவாக்கின தொழில்கள், ரிசார்ட்ஸ் இருக்கும் இடம். கிளிமனூர் பேலஸ், அம்மை அச்சன் சேர்ந்து வாழ்ந்த இடம். அங்கே அவுட்டர்ல கன்ஸ்ட்ரக்ஷன் மெடீரியல்ஸ் மேனுஃபேக்சரிங் யூனிட் ஒன்னு இருக்கு. அதுல ஒரு முக்கியமான ஜோலி இருக்கு. அதான் அங்கே போறோம்.” என்றவன் தனது லேப்டாப் எடுத்துத் திறக்க,
“ஓ… சரி.” என்றவள் அவனைத் தாண்டி சென்று அவனருகில் அமர்ந்து கண்ணாடி ஜன்னலின் வழியே தெரிந்த.. கடவுளின் தேசத்தின் பசுமை மிகுந்த மலை அழகைப் பார்க்கத் துவங்க,
இளம்காலைப் பொழுதின் ஆரஞ்சு ஒளியில் தங்கமென மின்னும் அவள் முகத்தை சில நொடிகள் பார்த்தவனின் கவனத்தை தன்னை நோக்கி இழுத்தது அவனின் அலைபேசி..
மேலாளரான வர்கீஸின் பெயரைப் பார்த்ததும் காதில் ப்ளூடூத்தைப் பொருத்தி இணைப்பை கொடுத்தவன், “ம்.. அவ்விடே மெஷின் பார்ட்…” எனப் பேசத் தொடங்க, அவனின் குரலில் திரும்பியவள், அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
பேசி முடித்தவன் அவள் புறம் திரும்பி அவளைப் பார்க்கவும், “என்ன ப்ரச்சனை?” என கேட்டாள்.
ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்தவன் அவன் முகம் விட்டு நகராத அவளின் கூர்ந்த பார்வையில்,
“ நேத்து என்னை உடனே மதுரை விட்டு கிளப்பனும்னு ப்ளான் போட்டோ என்னவோ, ஆதித் வர்மன், ஃபாக்டரில இருந்த ஒரு ஜெர்மன் இம்போர்ட்டட் மெஷினின் முக்கியமான பார்ட் ஜாம் ஆக்க வச்சுட்டான்.. செய்த வொர்கர ட்ரேஸ் அவுட் பண்ணி பிடிச்சு வச்சுருக்காங்க… அதோட ஸ்பேர்.. என் ஸேஃப் ரூம்ல இருக்கு. ஃபிக்ஸ் பண்ண நான் போகனும்.. அதுதான் வர்கீஸ்… என் மேனேஜர் பேசினார்… அண்ட்…” கண்ணை இறுக மூடித் திறந்து,
“வது.. என்ட அச்சன்.. அப்பா…. இராஜா இராஜ சேகர வர்மன் உயில் படி எழுதுன சொத்துக்கள் எதுவும் அம்மைக்கும் எனக்கும் சேரக் கூடாதுன்னு நேற்று கேஸ் ஃபைல் பண்ணிருக்கான் ஆதித்… பரம்பரை சொத்துக்கள இல்லீகல் மனைவி, பையனுக்கு கொடுக்க இராஜாவுக்கே அதிகாரம் இல்லைனு கோட் பண்ணிருக்கானாம்… நீ இன்னும் சில விஷயங்கள் தெரிஞ்சுக்கனும்… அவன்… ஏற்கெனவே இராஜாவோட.. இரண்டாவது மனைவி , பெண்ணை சொத்து அவங்களுக்கு போகக் கூடாதுன்னு.. கொலை பண்ணினவன்.
எனக்கோ அம்மைக்கோ ஏதாவது ஆனா சொத்துக்கள் கவர்ன்மெண்ட்க்கு போயிடும்னு இராஜா உயில்ல இருக்கு… எனக்கு கல்யாணம்.. வாரிசு இல்லாமல் பண்ணிட்டா அத கைப்பற்றிடலாம்னு இவ்ளோ நாள் ஏதேதோ பண்ணிட்டு இருந்திருக்கான்.. கொலைகள் உட்பட..
தொழில்ல டிஃபன்ஸ் கேம் ஆடிட்டு இருந்த நான், அஃபன்ஸ் கேமாடத் தொடங்கி ரொம்ப நாளாச்சுது.. அதை அவனுக்கு இப்போ தான்.. புரிஞ்சு இருக்குது.. இனி அவன் வேகம் அதிகமாகும்னு.. நான் கவனமாகும் நேரத்தில.. என் வாழ்க்கைகுள்ள நீ வந்துட்ட.. வது… ” என்றவன்,
சிறு மூச்சுடன், “இரண்டு ராஜாக்கள் ஆடுற சதுரங்க விளையாட்டுல இப்போ பணயமா நீ. ” என்றவனின் குரலில் தொனித்த வருத்தம் புரிந்து நிமிர்ந்து பார்த்தவள், அவனின் கையை இறுகப் பற்றினாள்.
“உங்களுக்கு சுமையா நான் இருக்க மாட்டேன் வரு… உங்க துணையா… இணையாத் தான் நானிருப்பேன்… என்னை நினைச்சு கவலைப் படாதீங்க..” என்றவளைப் பார்த்தவனின் கண்களில் ஆச்சரியம்..
விளையாட்டுப் பெண்ணாய் அறிமுகமானவள், அகன்ற கண்களில் கோபம், வீரம், காதல் காட்டியவள்… இன்று தெரிவது கருணை… உறுதி…. துணிச்சல்… நானே… உன் காதலின் தனிப்பெரும் துணை… எனும் செய்தி.. பார்த்துக் கொண்டே இருந்தவன் மனதில்.. மலர்ந்து கிடந்த ஏதோ ஒன்று.. இப்போது மணம் பரப்பத் தொடங்கிய உணர்வு… புதிது புதிதாய் ஆசைகள் கிளர்ந்தன. இது வரை தோன்றாத உணர்வுகள்..
தன்னைப் பற்றியிருந்த கையை உயர்த்தி அவளின் புறங்கையில் தன் இதழொற்ற… அதை மலர்ந்த புன்னகையுடன் ரசிக்கும் அவளைப் பார்த்தவனின்.. இது நாள் வரையிலான விலக்கங்கள் எல்லாம் விருப்பங்களாய் மாற.. தன் மனம் நுழைந்து, அழுத்தமாய் அமர்ந்து கொண்ட பெண்ணவளை இழுத்து தன் அணைப்பில் அடக்கியிருந்தான்.
“ டுஷ்ஷ்ஷ்..” எனும் பெரும் ஒலியுடன் இரயிலானது தனது ஓட்டத்தை நிறுத்தியிருந்தது. மென்மையாய் பற்றியவனின் வன்மையாய் இறுகிய அணைப்பில் கண் மூடி லயித்து, வெம்மை பரவ இருந்தவர்கள், கதவு தட்டும் ஒலி கேட்டு நிகழ் காலம் நினைவு வர, மெதுவாக விலகினர்.
திருவனந்தபுரம் ஜங்ஷனை அடைந்து இருந்தால்.. நின்று சில நிமிடங்கள் ஆன பின்பும் ஜெயவர்மன் வெளியே வராததைக் கண்டு, அடுத்த கேபினில் பயணித்து வந்திருந்த அவர்களின் பாதுகாவலர் கதவை தயக்கத்துடன் தட்டியிருந்தார்.
“ யெஸ்.. வரேன்..” என்று குரல் கொடுத்தவன், தன்னவளின் உச்சியில் இதழ் பதித்து விட்டு, “போலாம்.. ஸ்டேஷன் வந்துருச்சு.” என்றவன் மனமின்றி விலகி, கதவைத் திறந்து வெளியே வர… ப்ளாட்ஃபாரத்தில் வர்கீஸ் வழக்கம் போல காத்துக் கொண்டு இருந்தார்.
ஜெயவர்மனையும் பின்னே வந்த மதிவதனாவையும் கண்டவர், மலர்ந்த சிரிப்புடன் மதிவதனாவிடம், “வரணும் ராணி வரணும்..” என்றவாறு பூங்கொத்தை நீட்டினார்.
மதிவதனா கேள்வியாய் ஜெயவர்மனைப் பார்க்க, “வர்கீஸ்… நம் மானேஜர்…” என அவன் சொன்னதும, முறுவலுடன் பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள்.
பாதுகாவலர்கள் வந்து சூழ்ந்து கொள்ள, இருவரும் வெளியே வர, வர்கீஸ் கார் சாவியுடன் இரு சிறு பெட்டிகளையும் ஜெயவர்மனிடம் கொடுத்தார்.
“மகாராணி, இந்த ஆடைகள் மாற்றிட்டு வர சொன்னாங்க.. அரண்மனையில வரவேற்பு ஏற்பாடுகள் பண்ணியாச்சு..” என..
“வரவேற்பு.. வர்க்கலால தானே ஏற்பாடு பண்ண சொன்னேன்..” என ஜெயவர்மன் அமைதியாக கேட்கவும், உள்ளூற உதறியதை மறைத்தவாறு, “இது இராணிக்கு தரவேண்டிய சம்பிரதாய வரவேற்பு. அரண்மனையில் வச்சு கொடுக்கனும்னு மகாராணி விருப்பம்..” எனவும், ஜெயவர்மனின் சற்றே முகம் கடினப்பட்டாலும்.. சரி என்று பாவனை தோன்ற வர்கீஸ் மனதில் ஆசுவாசம்… நேற்றிலிருந்து அவர் மனம் நடுங்கியது அவருக்கு தான் தெரியும்.
ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தவருக்கு, தன் ப்ரியத்திற்கு உரிய முதலாளியின் முகத்தில் இருக்கும் இளக்கமும், இரயிலில் இருந்து இறங்கிய போது கண்ட சிறு புன்னகையும், சிறு வயதிலிருந்தே அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு இதுவரை காணாத அதிசயங்களாய்… கருத்தில் பட்டு மகிழ்வை உண்டாக்கியது.
நிமிர்ந்த ஜெயவர்மனின் கண்களில் இரயில் நிலைய வாயிலில் ‘இராஜா ஜெயவர்மன் இராணி மதிவதனா தேவி வரவேற்பு’ என்று எழுதப்பட்ட.. அவர்களின் டிஜிட்டல் துல்லிய படங்களுடன் கூடிய பெரிய ஃப்ளக்ஸ் பேனர் கண்ணில் பட.. திருப்தியுடன் புன்னகைத்து தனது வாகனம் அருகே சென்றான்.
திருவனந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்த நட்சத்திர விடுதிக்கு செலுத்தியவன், முதலில் அவளை தயாராக சொல்லி விட்டு, தனது அலுவல்களை முடித்தான். அறைக்குள் சென்று குளித்து தயாராகி, ஆஃப் வொயிட் எனப்படும் தந்த வர்ண ஷர்ட், அடர் நீல பேண்ட் அணிந்து, அதே நிற ப்ளேசரை கையில் எடுத்துக்கொண்டு தயாராகி வர,
அவனின் அன்னை அனுப்பியிருந்த மயில் கழுத்து நிறம் எனப்படும் அடர் நீலமும் பச்சையும் கலந்த நிற பட்டுப் புடவை , ஆன்டிக் ஜ்வெல்லரி எனப்படும் தீட்டப்படாத பச்சை மற்றும் சிவப்புக் கற்கள் பதித்த பெரிய நகை ஒன்றை கழுத்தில் அணிந்து, விரிந்த கூந்தலை கண்ணாடியில் பார்த்து அழகாக வாரி தயாராகிக் கொண்டிருந்தவளைக் கண்டு விழிகள் விரிய பார்த்தவனின் இதழ்கள், ”அடிபொலி..” என உச்சரிக்க, இரத்தம் சூடாவது போன்ற உணர்வில் தடுமாறி நின்றான். திரும்பி அவனைப் பார்த்தவள், ‘நல்லாயிருக்கா?!’ எனும் பாவனையில் தன்னையே ஒருமுறை பார்த்து பின் அவனைப் பார்க்க..
காதல் முன்னே தள்ள… காத்து நிற்கும் வேலைகள் நினைவில் வந்து பின்னிழுக்க..
“போலாமா..” என்றவாறு வாயில் புறமாய் திரும்பியவன்… “வரு …” எனும் அழைப்பில்… அப்படியே நின்றான்.
குறும்புக்குரலில், “நீங்களும் தான்.. கண்ணுலயே சூப்பர்னு சொன்னா காணாது… வாயிலும் சொல்லனும்..” எனவும்… அடுத்த நொடியில்… வாயினாலும் அவன் சொன்னது.. பெண்ணவளின் காதுகள் அல்லாது இதழ்கள் தாம் கேட்டுக் கொண்டு இருந்தன…
பாராட்ட பாராட்ட தீரவில்லை அவனுக்கு.. கேட்க கேட்க தாளவில்லை அவளுக்கு.. முதல் அனுபவம்… இருவருக்கும்.. மெல்லியலாளின் மூச்செடுக்க இயலா நிலை கண்டு, அவன் தான் பரிதாபப் பட்டு விலக வேண்டியிருந்தது.
அவள் தன்னிலை அடைவது வரை மார்பில் தாங்கி நின்றவன்… “போவோமா..” என மென்மையாகக் கேட்க, சிவந்து கிடந்த முகத்தை தாழ்த்தி, தலையசைத்து சம்மதம் சொன்னாள்.. அவனின் வது.
வழியெங்கும் இராஜா ஜெயவர்மன் பரணித்திருநாள், இராணி மதிவதனா தேவி வரவேற்பு பதாகைகள்.. ஜெயவர்மனின் வாகனத்தை முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடர, கிளிமனூர் அரண்மனையை அடைந்த போது, செண்டை மேளங்கள் அதிரத் தொடங்க, வாண வேடிக்கைகள் திருவிழாக் கோலம் காட்டி நின்றன. அத்தப்பூ எனப்படும் பூக்களை கொண்டு அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த கண்கவர் கோலமும், ஏற்றிய பெரிய, பெரிய குத்து விளக்குகளும், வாயிலை அலங்கரித்த வாழை, தென்னம்பாளை, பாக்கு, கமுகு பாளைகளும் மணமக்களை வரவேற்று நின்றன. கேரள முறையில் உடையணிந்த பெண்கள் ஆரத்தி தட்டுகளுடன் நின்று கொண்டிருந்தனர்.
வாயிலில் காத்து நின்ற பெரிய தொழில அதிபர்களையும், தொழில் முறை நண்பர்கள் மற்றும், அவர்களின் குடும்பத்தினர் கண்டு… தான் அனுப்பிய அறிவிப்பு மின்னஞ்சல் மற்றும் எஸ் எம் எஸ், வாட்ஸ்அப் தகவலுக்கு அவர்கள் தந்த மரியாதை கண்டு மகிழ்ந்து அதிசயித்தவனாய் மனைவியுடன் இறங்க, அனைவரையும் கண்டு கரம்குவித்தனர் இருவரும். தனது தாயார் இராணி காஞ்சனை தேவியை ஜெயவர்மன் அறிமுகம் செய்ததும், மதிவதனா பாதம் பணிய முற்பட கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் தடுத்த அவர், அவளை அணைத்துக் கொண்டார். கேரள மணப்பெண், கணவன் வீடு வரும் பொழுது, ஏற்றப்பட்ட குத்து விளக்கை எடுத்து வருவது வழக்கம் என ஜெயவர்மனின் சித்தி பார்வதி சொல்லி விளக்கை கொடுக்க, கணவனுடன் இணைந்து வலது பாதம் முன் வைத்து அரண்மனையின் உள் வந்தாள் மதி வதனா.
பூஜைக்கென அழைத்துச் செல்லப்பட்ட அரண்மனை உள்ளேயே இருந்த கோவிலில் விளக்கேற்றினாள். வணங்கி விட்டு நிமிர்ந்து உற்றுப் பார்க்க, அந்த அம்மனின் சிலை அமைப்பு தங்களது குலதெய்வத்தின் அமைப்பு போலவே இருப்பதாக மதிவதனாவிற்கு தோன்ற, ஆச்சரியம் மிக உற்றுப் பார்த்தவள்.. கணவனை திரும்பிப் பார்க்க, அவன் கவனம் எங்கோ இருப்பது கண்டு, தன் மாமியார் புறம் திரும்பியவள்,
“இந்த அம்மன்.. பேரு..” என இழுக்க,
காஞ்சனை சிறுமுறுவலுடன், “ பாண்டிமாதேவி ..னு இராஜா சொல்லிருக்காங்க..” என்றார்.
அப்போது ஜெயவர்மன்,
“வது ஒரு ரிஷப்ஷன் அரேஞ்ச் பண்ணிருக்கு.. முடிச்சுட்டு நான் ஃபேக்டரி போகவேண்டும்.. போலமா..” என்றவன் நடக்க ஆரம்பிக்க, அவனின் பின்னே சென்றாள் மதிவதனா.
அரண்மனையின் உள்ளேயே இருந்த சிறு மைதானத்தில் சிறிய மேடை ஒன்று அமைக்கப்பட்டு, உயர்ரக ஆர்கிட், ஃபெர்ன்,டேலியா கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்க, கம்பீரமான அரியாசனம் போன்ற இருவர் அமரும் இருக்கைகள் இடப்பட்டு இருந்தன. மேடை ஏறியவன், தன் மனைவியை அறிமுகம் செய்துவித்து வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினான்.
விருந்து ஏற்பாடுகள் அருமையாக செய்து வைக்கப் பட்டு இருக்க, வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவரும் விருந்துண்ண அழைத்து செல்லப்பட்டனர்.. அரை மணி நேரத்தில் அனைவரும் வாழ்த்தி விட்டு கிளம்ப ஆரம்பிக்க, ஜெயவர்மன் தன் உதவியாளனான விதார்த்திடம்.. அங்கேயே இருந்து மற்ற அலுவல்களை கவனித்து பார்த்துக் கொள்ளுமாறு பணித்தவன், தன் அன்னையிடம் மதிவதனாவை பார்த்துக் கொள்ளுமாறு இருமுறை சொல்ல, அவனின் பார்வையில் இருந்த அழுத்தம் கூறும் தகவல் புரிந்தவராய், அவளருகில் சென்று, “வா மோளே நாம உள்ளே போகலாம்..” என சொல்லவும், திரும்பி தன்னைப் பார்த்தவளிடம், “ஃபேக்டரி பக்கத்தில் தான். போய்ட்டு மதியம் வந்துருவேன். ரெஸ்ட் எடு…” என்றவன் வாயில் நோக்கி சென்றான்.
எதிரே வந்த மேலாளர் வர்கீஸ்.. ஆதித் வர்மனின் மூத்த வழக்குரைஞர் அவனை பார்க்க வந்து இருப்பதாக தகவல் சொல்லவும்… ஜெயவர்மனின் முகம் இறுகியது.
********************
அன்று…
“என்னைத் தேடி தானே வந்தாய்…!!” எனும் முதியவளின் கேள்வியில் சந்திராம்பிகை திடுக்கிட்டாலும், “நான் எனது தந்தையான, மருதநாட்டின் மன்னன் பெருவளத்தான் நன்மாறன், பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு வேட்டைக்காக வந்த போது, சிறுத்தை தாக்கி நினைவற்று இருந்த நிலையில் மருத்துவம் செய்து உயிர் காத்த, ஆனை மலை மருத்துவச்சியை தேடி வந்தேன் அம்மா.. அது தாங்கள் தான் என்றால்.. ஆம் அம்மா…” என,
முதியவளின் கண்கள் ஒளிர்ந்தன.
“கேட்க வந்ததை கேள்.. மருதபுரியின் மாணிக்கமே…”
“ நீங்கள் தான் என் தந்தையின் தவறிற்கு சாட்சி என்று மலைக் குடியை சேர்ந்த நாக ஜெயந்தன் கூறினான்.. என் தந்தை தவறிழைத்தவரா..? சொல்லுங்கள் தாயே…”
“ தவறா..! மன்னரா!! அப்படியா சொன்னான்..! அவன் ஒரு ஆத்திரக்காரன்.. புத்தியும் மட்டு…” என்றாள் கணீரென்று…
“ நாகவல்லி தான் என் தந்தையின் உயிரைக் காத்தாரா..? உயிர் காத்தவருக்கா… அறியாமல் தீங்கிழைத்து விட்டார்… அவர்…?” என சந்திராம்பிகை கேட்கவும்,
முதியவளின் கண்கள் ஒருமுறை மூடித் திறந்தன..
மெல்லிய என்றாலும் அழுத்தமான தெளிவான குரலில், “தேவி… பதறாதே. மருத நாட்டின் செங்கோல் வளைந்து விடக் கூடாது. நீதி பிறழ்ந்து விடக் கூடாது.. எனும் உன் தவிப்பு புரிகிறது. என் அறிவிற்கு எட்டிய வரையில் மருதத்தின் மன்னர் மாசற்றவர்…” எனவும் சந்திராம்பிகையின் வதனம் மலர்ந்தது.
முதியவள் கண்களை மூடியவாறு பேச்சைத் தொடர்ந்தாள். “ ஒரு மாமாங்கம் (பன்னிரெண்டு வருடங்கள்) முன்பு… ஒரு கார்காலத்தின்.. மாலை மயங்கும் வேளையில்.. மன்னரை புலிப்பள்ளத்தில் சிறுத்தை தாக்கிய காயங்களுடன் பார்த்த நாகவல்லி, அவர் மருதத்தின் தலைவன் என்று அறியாமல் காப்பாற்ற விழைந்து இருக்கிறாள்.
தன் உடன் வந்திருந்த கார்கோடகனின் உதவியுடன் மேலேற்ற முயற்சி செய்து, இருள் சூழத் துவங்கியதால், இரவு நேரம் வேட்டைக்கு வரும் விலங்குகளால் மூவருக்கும் ஆபத்து நேரலாம் என்று அஞ்சி.. நரிக்கரட்டில் சிறு குகைக்குள் அவரை வைத்து விட்டு.. தன்னிடமிருந்த மூலிகைகள் வைத்து மருத்துவம் செய்தவள், அவர் நினைவின்றி இருப்பதையும், உடலின் சூடு அதிகரிப்பதையும் கண்டு அஞ்சி, கார்கோடகனை என்னிடம் அனுப்பினாள்.
நான் பிள்ளைப் பேற்று வலியில் துடித்துக் கொண்டிருந்த மலைக்குடி பெண்ணின் வயிற்றில் நிலைமாறிக் கிடந்த குழந்தையை வெளிக்கொணரும் முயற்சியில் இருந்ததால் உடனடியாக உடன் செல்ல இயலாமல், கார்கோடகனிடம் மருந்துகளை மட்டும் கொடுத்து அனுபபினேன்..
நான் அங்கே செல்ல மறுநாள் ஆகிவிட்டது. சோதித்துப் பார்த்த போது அவர் விழித்த நிலையில் இருந்தார் எனினும் தலையில் அடிபட்டதில் தான் யார் என்பதை அறியாதவராய் மட்டுமல்ல, பேசக் கூட அறியாதவராய் இருந்தார். நாகவல்லியின் முகமும் ஏனோ கலங்கி இறுகி இருந்தது. அவரை தன் குடிசைக்கு கூட்டி செல்ல வேண்டும் என்றவளை நான் தான் தடுத்தேன்.
யாரென்று அறியாதவரை கிராமத்திற்குள் அழைத்து வரக் கூடாது. இது இங்கு எம் கிராம மக்களின் கட்டுப்பாடு.. எனவே தகுந்த மருத்துவம் செய்வித்து, அங்கேயே விட்டு விட்டு வா என்ற போது நாகவல்லி மறுத்துவிட்டாள்.
அதன் பிறகு பதினைந்து, இருபது நாட்கள் கழித்து மீண்டும் எனைத் தேடி வந்தாள் நாகவல்லி.. அந்த வீரருக்கு மீண்டும் அடிபட்டு விட்டது எனவும், மலைக்கோண அருவிக் குகைக்குள் அவரை வைத்திருப்பதாகவும் சொன்னாள்.. மலையேறும் போது பற்றுதலுக்காக நாகவல்லியின் கை பற்றிய போது இரு நாடிகள் துடித்ததைக் கண்டு கொண்டேன்..
மணமாகாத அவளை அதட்டி கேட்ட போது அதற்கு காரணம், நான் மருத்துவம் செய்த வீரன் என்று.. அவள் சொன்ன போது அதிர்ந்து விட்டேன். அவர் இருந்த உடல் நிலையில் மன நிலையில் அது இயலாத செயல்.. உணர வைக்க முயன்ற போது தான் நாகவல்லியின் மூலம் நான் அறிந்து கொண்டேன்.. அவர் மருதத்தின் மன்னர் பிரானென்று.. கண்டவுடன் காதல் வயப்பட்டவள், கருத்திழந்து இருந்த நிலையில் பெண்மையை பறி கொடுத்ததாக சொன்னாள்.. நான் சொல்வதை அவள் கேட்கக் கூட விரும்பவில்லை..
பிறகு இரண்டொரு நாட்களில் முல்லை வன வேந்தன் வந்து மன்னரை மீட்டு அழைத்து சென்ற போது, தன் ஆசை நிறைவேறாத அதிர்வில் உயிரையும் மாய்த்துக் கொண்டாள்.. எனக் கேள்வியுற்றேன்.
அந்த அவசரக்காரியின் இளையவன் எப்படி இருப்பான்.!! அதோடு ஆத்திரமும் இணைந்து, அவன் தீயவழி செல்வது மட்டுமல்லாது எம்மக்களையும் கெடுக்கிறான்…” என வருந்த..
அவரின் நெற்றி தொட்டவள், “அனைவரும் என் மக்கள் அம்மா.. கவலைப் படாதீர்கள்.. இனி இம்மக்கள் வாழ்விற்கும் உயர்விற்கும் நான் பொறுப்பு…” என,
மகிழ்ந்த குறிஞ்சம்மாவின் விழிகள் கங்குகள் போல ஒளிர்ந்தன..
“ எம்குலம் காக்க வந்த தேவியம்மா நீ.. நாக ஜெயந்தன் சொல் கேட்டு போனவர்கள், என் அடங்கு விழாவில், என் சொல் கேட்டு வந்து இணைவார்கள். என் இறுதி மூச்சு கொண்டு அவர்களை கட்டிப் போடுவேன். மனம் மாற்றுவேன்.. மருதத்தின் நலன் காக்க உன்னுடன் இணைவார்கள். மருதம் பகை முடித்து… வெல்லும் தேவி..” என்றவள், அவளைக் கூர்ந்து பார்த்து,
“நீ தெய்வம்… ஆவாய்..” என்றவளின் விழிகள் நிலைத்து உறைந்தன.
அசைவற்ற விழிகள் கண்டு அதிர்ந்த இளவரசி, “அம்மா.. அம்மா….” என அழைத்து விட்டு…. கலங்கிய கண்களை துடைத்து எழுந்தவள், அவரின் பாதம் பணிய, கூடி நின்ற மக்கள், அக்காட்சி கண்டு கண்ணீர் பொங்கக் குலவையிட்டனர்.
மலைக் குடியினரின் குறிஞ்சிப் பறையானது அதிவேகத்தில் முழங்க, பல்வேறு கருவிகளின் இசைகளினால் அவ்விடம் நிறையத் தொடங்கியது.. குறிஞ்சம்மாவின் தாழியிடுதல் கொண்டாட்டமானது, இறப்பு போல் அல்லாது அவரின் ஆசைப்படி திருவிழா போல் செய்யப் படுவதைப் பார்த்தவாறு வெளியே வந்த இளவரசி சந்திராம்பிகை
மனதில் அலையடித்த உணர்வுகள், கேள்விகள்.. பதில்கள்.. ஊகங்கள்… என பலவாறாக சிந்தித்தவாறு தன் ரதத்தில் ஏறிய இளவரசியின் கரங்கள் குதிரைகளை சோலையூர் செல்லும் வழியில் திருப்பின..
மெய்காவலரும் இளவரசியின் சிந்தனையைக் கலைக்காது அமைதியாய் பின் தொடர்ந்தனர்.. மலை கிராமத்தை தாண்டி சில காத தொலைவு கடந்ததும் குதிரைகளின் குளம்படி ஓசைகள் குறைவதை உணர்ந்து திரும்பிப் பார்க்க, செலுத்தும் வீரர்கள் அம்புகளால் தாக்கப்பட்டு மயங்கியிருக்க, செலுத்த ஆளில்லாத காரணத்தால் அவை வேகம் குறைந்து மெதுவாக ஓடி வந்து கொண்டு இருந்தன.
அவளை நோக்கியும், குதிரைகளை குறி வைத்தும் அம்புகள் வருவதைக் கண்டவள், வேகமாக செலுத்த தலைப்பட, மலைப் பாதையில் திடுமெனத் தோன்றினான், பலம் குறைந்தவனாய், வயதானவனாய், காட்சியளித்த ஒருவன்.
அவனின் மீது குதிரைகள் பாய இருந்த கை நொடிப் பொழுதில், கடிவாளக் கயிற்றை சந்திராம்பிகை இழுத்து அவனை ரதத்தின் சக்கரங்களில் அரைபடாமல் தப்புவித்தாள்..
‘யாரிவன், பாயும் தேர் முன் வந்து நிற்கும் அறிவாளி?!’ என்று உற்று நோக்கியதில் வேளாளர் கிராமத்தில் அவள் மீது நஞ்சு தோய்த்த கத்தி எறிந்து கொல்ல முயன்றவன் என்பது புரிபட, அவன் கண்களில் மின்னிய வெறி கண்டு ஆச்சரியமாகப் பார்த்தாள்..
“யார் நீ? நாகஜெயந்தன் அனுப்பிய ஆளா?” எனக் கேட்க..
“நாகஜெயந்தனை, மருதத்தின் எதிரியாக உருவாக்கியவன்.” எனத் திமிராய் உரைத்தான்..அவன்.
பார்வை தீர்க்கமடைய நின்ற சந்திராம்பிகை, அவனே பேசட்டும் என்பது போல் ரதத்திலேயே நின்றவாறு பார்த்து இருக்க,
“நான் கார்கோடகன்.” என அறிவிக்கவும் ஆச்சரியம் அடைந்தாள் இளவரசி.
“நீங்கள் தானே.. என் தந்தையை புலிப் பள்ளத்தில் இருந்து மீட்டு மருத்துவச்சியிடம் மருந்து வாங்கி வந்து அவரின் உயிரைக் காத்தவர்….” என சட்டென்று மாற்றிய மரியாதைப் பன்மையும் நன்றியுணர்வுமாய் ஒலித்த அவளின் கேள்வியில், கார்கோடகனின் முகம் விகாரமாய் மாறியது.
“ஆம்.. நானே என் வாழ்விற்கு அழிவு தேடிக் கொண்டு விட்டேன். அந்த நேரம்..” என்றவன், வெறுப்புக் குரலில் தொடர்ந்தான்.
“அதை செய்ததால் தான், அந்த மாறன் என் நாகவல்லி மனதிற்குள் புகுந்து விட்டான்.. அவளை சொந்தமாக்க பல வருடங்களாக ஏங்கி நான் காத்திருக்க, பார்த்தவுடன் அவளின் ஆசை அவன் புறம் திரும்பிவிட்டது..” என்றவன், குரலில் வெறுப்பு, ஆத்திரம்.. அத்துடன் கோணலான சிரிப்பும் இருக்க,
“அவன் மீதான அவளின் பார்வை மாற்றம் கண்டு, அவனை காத்து குகையில் வைத்திருந்த போது, குகைக்குள் மூட்டிய நெருப்புக் கணப்பில்.. மயங்க வைக்கும் புகையை வெளிப்படுத்தும் செடியை பயன்படுத்தி, இருவரையும் நினைவிழக்கச் செய்து அவளை, அவளின் அழகு உடலை ஆண்டு முடித்தால், அதையும் அவன் தான் செய்தான் என்று சொல்லுமளவு ஆசை அவளுக்கு…அந்த மாறனின் மேல்..” என்றவனின் மொழி கேட்டு அருவருப்பில் சுருங்கிய இளவரசியின் முகம் அடுத்த நொடி கனலேறிச் சிவந்தது.
“ஒரு பெண்ணை அனுமதியின்றி , திருட்டுத்தனமாக களவாடிவிட்டு உத்தமன் போல் பேசுகிறாயா..?” என்றாள் கர்ஜிக்கும் குரலில்..
தன் சிறு கண்களை இன்னமும் இடுக்கிப் பார்த்தவன், “அது அவளை அடைய நான் கண்ட வழி… ஆனால் அவள் இவ்வாறு எண்ணுவது தெரிந்ததும், அந்த மட்டி மாறனை கொல்ல முயன்ற போது என் நச்சுக் கத்தியிலிருந்து அவனைக் காத்தவள்.. அம்முயற்சியில் தன்னுயிரை விட்டு விட்டாள்.. என் ஆசை, என் குழந்தை அழிந்ததிற்கு காரணம்.. உன் தந்தை.. அவன் தான்..” என்று பற்களைக் கடித்து ஆங்காரமாய் பார்க்க,
“அவர் மீது என்ன தவறு..!” என நிதானமாகவே கேட்டாள் இளவரசி.
அவனோ பித்தனைப் போல வெறித்து, அவளை நோக்கி, “அவன் தான்.. என் நாகவல்லி எனக்கு கிடைக்காமல் போனதிற்கு காரணம்… எனவே தான் மருதபுரிக்குள் நுழைந்து அவனை பல முறை கொல்ல முயன்று முடியாமல்… அதையிதை சொல்லி ஏமாற்றி நாகஜெயந்தனை, மலைக்குடி இளையவர்களை அவனுக்கு எதிராக மாற்றினேன். அவன் உயிராய் வாழ்வாய் நினைக்கும் உன்னைக் கொன்றால் தான் எனது பழி நிறைவேறும்.” என்றவன்..
தனக்குப் பின்னால் கேட்ட குதிரையின் குளம்படி ஓசையில், அவசரமாய் வலக்கையில் விஷக்கத்தியை எடுத்து எறியப் போக,
அவனின் மணிக்கட்டை கத்தியோடு சேர்த்து துண்டித்து சென்றது சுழன்று வந்த பொன்புனைத் திகிரி…
அதே நொடியில் அவனின் மார்பைத் துளையிட்டு இருந்து சந்திராம்பிகையின் கை வேல்… எதிரில் குதிரையில் வந்த இளவரசன் இராஜ ஜெயசிம்ம வர்மனைக் கண்டவள், வியக்கக் கூட முடியவில்லை..
திடீரென கனைத்து முன்னங்கால்களை உயர்த்தித் திமிறிய குதிரைகளின் அசைவில் தடுமாறியவள், கடிவாள கயிறு பற்றி கட்டுப்படுத்த முயல, அவளின் ஆணைகளுக்கு அடங்காதவையாய் சீற்றத்துடன் ஆனனமலைக் குன்றில் ஏறும் பாதையில் தறிகெட்டு ஓடத் தொடங்கின அவை…
காவு கொண்ட நாகமாய் கார்கோடகன், தன் இடக்கையில் இருந்த விஷப் பொடியை சந்திராம்பிகையின் தேர்க் குதிரைகளின் முகம் நோக்கி எறிந்து விட்டு தான் வீழ்ந்திருந்தான்.
அப்பொடியானது வெறியூட்டக்கூடியது.. அது பட்ட குதிரைகள், மதம் பிடித்த யானைகள் போல் வேகமாகி, எதிரில் வந்த இளவரசனை மோதுவது போல் செல்ல, இளவரசன் குதிரையை அவசரமாக நகர்த்தி தப்பினான்…
கைநொடிப்பொழுதில் அவனைத் தாண்டி வேகமாக ரதம் செல்வதையும், இளவரசியின் ஆணைகளுக்கு குதிரைகள் கட்டுப்பட மறுப்பதையும் உணர்ந்து கொண்டவன், வேகமாக குதிரையைத் திருப்பி, பின் தொடர்ந்து ஓட்டினான்..
ஒரு குதிரை மட்டுமே செல்லக்கூடிய வழியில் கட்டுப்பாடின்றி பாயும் ரதம் செல்லும் வேகம் கண்டு அவனின் உயிர் உச்சந்தலைக்கு ஏறித் தவிக்க, இதயமானது தாறுமாறாகத் துடித்தது…
அவனின் கண்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, தேரானது நிலை தடுமாறி குன்றின் பக்கவாட்டில் சரிந்து… வீழ்ந்தது…
“வதனாஆஆஆ……” என்று அலறியவன்… குதிரையோடு ரதத்தின் பின்னேயே பாய்ந்து இருந்தான்…
*******************
அனுமதி 21
***************
பரபரப்பும் கனமும் நிறைந்த
‘அன்று..’ பகுதி இனி முதலில் வரும்..
************************
அன்று…
தறிகெட்டு ஓடிய குதிரைகளின் இழுவையில் சென்ற தேரானது கரடு முரடான பாறைப் பாதையில் நிலை தடுமாறி மலையின் சரிவில் உரசியவாறு வீழ…
கடிவாளக் கயிற்றை இறுகப் பற்றியிருந்த இளவரசி சந்திர வதனாம்பிகை… தேரானது மலையின் செங்குத்தான சரிவில் இருந்த சிறு மரங்களின் மீது தட்டி… முறித்து.. சற்று தாமதித்துத் தடுமாறிய நேரத்தில் தன்னை நிலைப் படுத்திக் கொண்டு, கண்ணிமைக்கும் பொழுதில் பக்கவாட்டில் குதித்திருந்தாள்.. கைக்குக் கிடைத்த சிறு கிளையை பற்றிக் கொண்டு தொங்கிய நிலையில் தான் சிம்மன் அவளைப் பார்த்தது..
குதிரையை விரட்டியவாறு வந்து கொண்டிருந்த சிம்மன், அவளின் ஊசலாட்ட நிலை கண்டு அதிர்ந்து, பின்னோடு பாய்ந்து இருந்தான்.. “வதனாஆஆஆ….” என்று அலறியவாறு…
பாய்ந்த வேகத்தில் கையில் இருந்த வேல் கொண்டு அவள் தொங்கிக் கொண்டு இருந்த சிறு மரத்தின் வேர்கள் பற்றியிருந்த பாறை இடுக்கில் ஆழச் சொருகியவன்… அதன் பிடிமானத்தில்.. அம்மரத்தின் கிளை மீது நின்று கொண்டவன், தன் மேல் துணியை இளவரசி நோக்கி வீச… நிமிர்ந்து பார்த்தவள் அத்துணியை ஒரு கையால் பற்றிக் கொண்டு சுற்றிக் கொள்ள.. ஒற்றைக் கையில் மேல் நோக்கி இழுக்கத் தொடங்கிய பொழுதில்…
கீழே ஏறத்தாழ நான்கு கயிறு (ஐந்நூறு அடிகள்) தூரத்தில் இருந்த தடாகத்தில் இளவரசியின் பொன் தேரானது வீழ்ந்து, மூழ்கத் தொடங்கி இருந்தது… அதனோடு பிணைக்கப்பட்டு இருந்த குதிரைகள் விடுபட முயற்சித்து தத்தளித்தன.
தேர் வீழ்ந்த ஓசை கேட்டும், அக்காட்சியைக் கண்டும்… அத்தடாகத்தை சுற்றி இருந்த கொடை நாட்டின் படை வீரர்கள் விரைந்து ஓடி வந்து மேலே பார்த்த போது.. ஒற்றை வேலின் பலத்தில் தனைத் தாங்கியவாறு நின்று, மருதத்தின் இளவரசியை காக்க முயன்று கொண்டிருந்த
தங்களின் இளவரசனைக் கண்டு அதிர்ந்து, ஆஹார ஒலியெழுப்பினர்.
நீரில் தத்தளித்த குதிரைகளை காப்பாற்றும் முயற்சியில் சில திடமான வீரர்கள் இறங்கினர். மற்றும் பல வீரர்கள் தங்கள் புரவிகளின் மீதேறி குன்றின் உச்சிக்கு செல்லும் பாதையில் விரைந்தோடினர்.
ஒற்றைக் கை பலத்தில் இளவரசியை மேல் நோக்கி இழுத்தவனின் பளுவைக் குறைக்கும் பொருட்டு இளவரசியும் முயன்று பற்றி மேலே ஏற… சிம்மனின் வேகமான இழுவையில்… அவன் கால் பதித்து நின்றிருந்த கிளையின் மேல் வந்தவள்… சட்டென்று கால்களை புரவியேற்ற லாவகத்துடன் தூக்கிப் போட்டு, கிளையில் அமர்ந்து இருந்தாள்.. பின் தலை உயர்த்திப் பார்க்க.. அங்கிருந்து நான்கு ஆள் உயரத்தில் இருந்த மலையின் மேல் சமதளத்தை எவ்வாறு அடைவது..! என்ற யோசனையில்… இன்னமும் ஆபத்து நீங்கவில்லை என்று உணர்ந்தவளாய்… என்ன செய்வது என்பது போன்ற பார்வை பார்க்க.. அவளை நோக்கி தன் கரத்தை நீட்டினான்… சிம்மவர்மன். சிறிது தயங்கியவள் அவனின் கரம் பற்ற… அவன் இழுத்த இழுப்பில் கண்ணிமைப் பொழுதில் அவனின் மார்பில் தஞ்சமடைந்து இருந்தாள்.
ஒரு கையால் வேலையும்.. மறு கையில் வேல் விழியாளின் இடையைப் பற்றி இருந்தவன்.. நின்றது சில கை நொடிப் பொழுதுகளாக இருந்திருக்கலாம். அவளைக் காக்கும் முனைப்பில் முரசு போல் அடித்த அவனின் மார்பின் துடிக்கும் ஓசையைக் கட்டுப்படுத்துபவள் போன்று… தன் மூச்சுக் காற்றால் திடப்படுத்துபவளாய் அங்கேயே முகம் பதித்து விழி மூடி நின்றாள்.. சந்திர வதனாம்பிகை.
சிம்மனின் நிதானப்பட்ட உள்ளம்… அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த நேரத்தில், அருகில் காட்டுக் கொடிகளால் இறுகச் சேர்த்து உருவாக்கப்பட்ட கயிறு வந்து விழ.. யார் மேலிருந்து போடுகிறார்கள் என்ற யோசனை தோன்ற.. பற்றி இழுத்துப் பார்த்தான்.
அதன் உறுதி கண்டு த்ருப்தி அடைந்தாலும், “யாரது…” என குரல் கொடுக்க..
“மலைக்குடியினர்.. ஐயா..” என மேலிருந்து பதில் வந்தது.
“வதனா..!” என்றழைத்தவன்,
“இந்த கயிறைப் பற்றி.. மேலே ஏறிப் போ.” என.. அவளோ சிறிதும் அசைவின்றி இருக்க, அவளின் உறைந்த நிலை கண்டு அஞ்சியவன், வளைத்திருந்த அவளின் இடையை சற்று இறுக்கி.. அசைக்க.. தன் உணர்வடைந்த இளவரசி சந்திரவதனாம்பிகை முகம் நிமிர்ந்ததும் தான் அவனின் இதயத் துடிப்பு சீர்பட்டது. மலர்ந்து தனை நோக்கிய அவளின் அகன்ற விழிகளை ஆழ நோக்கியவன், “ மேலே ஏறு என்றேன்..” எனவும்,
மெதுவாக அவனை விட்டு விலகியவள் கொடிகளால் ஆன கயிற்றினை வலுவாகப் பற்றி கவனமாக மேலே ஏறினாள். அவள் சற்று மேலே ஏறி அவனின் பார்வையிலிருந்து மறைந்ததும்.. தானும் அந்த கொடிகளைப் பற்றி சரசரவென மேலே ஏறினான்.. இளவரசன் இராஜ ஜெய சிம்ம வர்மன்.
மலையின் உச்சியில் மலைக் குடி இளைஞர்கள் நிற்பதையும், அவர்கள் தான் காட்டுக் கொடிகளைப் பிணைத்து வீசியிருக்கிறார்கள்.. என்று புரிந்து கொண்ட இளவரசி அவர்களை நன்றியோடு பார்க்க.. அவர்களோ தலை குனிந்து கொண்டனர்.
பின்னேயே சிம்மனும் ஏறி வந்து நிற்கவும் அவனின் முகத்தை திரும்பிப் பார்த்தவள், அவனின் கண்கள் தன்னை உச்சி முதல் பாதம் வரை பரிசோதனை செய்வது கண்டு.. சிறு முறுவல் தோன்றினாலும், அவனின் பார்வையினால், புதிதாய் தோன்றிய ஓர் உணர்வில் முகம் சூடாவதை உணர்ந்து திரும்ப, அவளின் முன் மண்டியிட்டனர் மலைக்குடி இளைஞர்கள்.
“இளவரசி! நாங்கள் தான் உங்களின் மெய்க் காவலர்கள் மீது, மறைந்து நின்று அம்பு எய்தோம். கார்கோடகனின் சொல்படி அவ்வாறெல்லாம் செய்தோம். எங்கள் இனப் பெண்ணின் மரணத்திற்கு நீதி கிடைக்க என்று கிளர்ச்சியாளர்களாக மாறினோம்…
சில வருடங்களாகவே.. அரசரிடம் இருந்து எந்த கவனமும் உதவியும் எங்களின் மக்களுக்குக் கிடைக்காததது.. எங்களை அம் மன நிலைக்குத் தள்ளி இருந்தது.. மன்னிக்கவும் இளவரசி.. கார்கோடகனின் வாக்குமூலத்தை மறைந்து நின்று கொண்டிருந்த, நாங்களும் கேட்டோம்.. உண்மை உணர்ந்தோம்.. எங்களின் பிழைகளுக்கும் குற்றங்களுக்கும்.. நீங்கள் எப்படி தண்டிக்க நினைத்தாலும் அதனை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்.” என்று சொல்லி, நிலத்தில் நெற்றி பட வீழ்ந்து வணங்க…
சந்திராம்பிகையோ மெலிந்த என்றாலும் மிக்க அழுத்தமான குரலில்,
“எழுந்திருங்கள்.. உங்களின் வீரத்தை, கோபத்தை இனி மருதத்தின் நலம் காக்கவே பயன்படுத்த வேண்டும். இப்பொழுதில் இருந்து உங்கள் கூட்டத்தினர் அனைவரும் மருதநாட்டின் விற்படையின் வீரர்களாக நியமிக்கப் படுகிறீர்கள். இது தான் உங்களுக்கான தண்டனை..” எனவும்..
“அது எங்களின் நற்பேறு இளவரசி.. அவ்வாறே செய்கிறோம்.” என்று சொல்லி வலக்கையை முஷ்டியாக குவித்து நெஞ்சில் வைத்து தலை வணங்க… அவர்களையே புருவங்கள் சுளிக்கப் பார்த்துக் கொண்டு இருந்த சிம்மன் முகத்தில் புன்னகையின் சாயல் கூட இல்லை.
அனைவரையும் கண்களாலேயே வெட்டி விடுவது போல் பார்த்தவன், பல புரவிகள் வரும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்க்க.. அவனின் வீரர்களும் இளவரசியின் மெய்க் காவலர்களும் பதைப்புடன் வருவது கண்டு திரும்பி இளவரசியைப் பார்த்தான்.
இளவரசியும் அப்போது அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.. அவன் பார்வை பட்டதும் தன் பார்வையை விலக்கிக் கொண்டவள்.. நினைவு வந்தவளாய் மலைக் குடியினர் நோக்கி.. “நாகஜெயந்தன்…?” என்று கேட்க..
அவர்களில் ஒருவன்.. இளவரசனை பயத்துடன் பார்த்து, “ கொம்பு துணை கொண்டு நடக்கிறான்.. ஒரு கண்ணும்.. ஒரு கையும் செயல் படவில்லை. இங்கே தான் மலைக் குகையில் இருக்கிறான்.” எனவும்,
தன் வீரர்களைப் பார்த்து, “அவனைக் கைது செய்து வேங்கையர் வசம் ஒப்புவித்து.. சிறையில் அடைக்க சொல்லுங்கள்.. அதற்கு முன்..” திரும்பி மலைக் குடியினரை நோக்கி, “உங்களில் ஒருவர் நடந்த உண்மையை, மருத மன்னர் குற்றமற்றவர் என்பதை அவனிடம் ஆதாரத்துடன் சொல்லுங்கள்.. அவன் வாழ்நாள் முழுவதும் மருத கோட்டையின் சிறையில் இருக்கட்டும்..” எனவும்,
இளவரசன் ஜெய சிம்மவர்மனோ கோபம் மிக, “ஏன்!! அரண்மனை விருந்தினனாக.. தங்க வைக்க வேண்டியது தானே..! இளவரசியை தொட நினைத்து… மருதத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்களை உருவாக்கியவனின் கழுத்தை சீவுவதை விடுத்து வாழ்நாள் சிறை வாசமா.. இது தண்டனையா..? சலுகையா..!” என உறுமலாய் கேட்க,
அவனைத் திரும்பிப் பார்த்தவள், “என் தந்தை உயிரைக் காத்தவளின்.. உடன் பிறந்தவனிற்கு நான் காட்டும் சலுகை தான்..” என்றாள் திடமான குரலில்…
கோப மூச்சுக்களுடன் தன் நாட்டைச் சேர்ந்த குதிரை வீரன் அருகில் சிம்மன் செல்ல… அவன் சட்டென்று இறங்கி, பணிந்து விலகி நின்றான். வேகமாக தாவி ஏறி குதிரையை திருப்ப செலுத்த முற்பட்டவன்… இளவரசியின் கூரிய விழிகள் தன்னை துளைப்பது உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.
பெருமூச்சுடன் குதிரையை அவளருகில் செலுத்திச் சென்று, “விடை பெறுகிறேன் தேவி. ” எனவும், தயக்கமின்றி அவனின் விழிகளைக் கூர்ந்தவள், கை நொடிப் பொழுதில் முடிவெடுத்தவளாய்,
“என்னை வேங்கையரிடம் விட்டு விட்டு செல்லுங்கள் இளவலே! ” என..
அவளின் தோரணையும், விழிகள் பேசும் மொழியும் புரியாமல் வியப்பாக பார்த்தவன், தன் இடக் கரத்தை அவளை நோக்கி நீட்ட… தன் வலக் கையால் அவனின் கரம் பற்றியவள், அவனின் பாதத்தின் மீது தனது பஞ்சனைய பாதத்தை வைத்து ஏறி…. அவனின் முன்புறமாக அமர்ந்து கொண்டாள்… இளவரசி சந்திர வதனாம்பிகை..
**************
இன்று…
ஆதித் வர்மனின் வக்கீல் வந்திருப்பதாக மேலாளர் வர்கீஸ் சொன்னதும், இராஜா ஜெயவர்மன் முகம் இறுக,
“ எங்கே? ”
“ வெயிட்டிங் ரூம்ல.. ”
“ நான் கலெக்ட் பண்ணி, நம்ம லாயர்ட்ட கொடுக்க சொன்ன டாக்குமெண்ட்ஸ் அனுப்பிச்சாச்சா?”
“ நேத்தே அனுப்பியாச்சு.. இராஜா..” எனவும்… புதிதான அவரின் அழைப்பில், வினோதமாகப் பார்த்தவன்,
“ அதோட காப்பி.. வர்க்கலால இருக்கா?”
“ஒரு ஸாஃப்ட் காப்பி உங்க பர்சனல் மெயில் ஐடிலயும் இருக்கும்.” எனவும்,
மெச்சுதலாக அவரைப் பார்த்தவன்,
“குட்.” என்று விட்டு, “ நீங்க மெஷின் பார்ட் வண்டில ஏற்றி வச்சு ரெடியா இருங்க. நான் அவரைப் பார்த்துட்டு.. பத்து நிமிஷத்தில வரேன்.” என்று விட்டு வரவேற்பு அறை நோக்கி நகர்ந்தான்.
தனது கூலர்ஸ் எடுத்து அணிந்தவன், மிக நிதானமாய், நிமிர்வும் கம்பீரமும் கூடிய நடையில் அறைக்குள் நுழைய.. காத்திருந்த வக்கீல் எழுந்து நின்றார்.
“உக்காருங்க.” என்றவன்.. தான் சென்று அமரவில்லை.
அமர்ந்தால் தான் தெரியுமா ஆளுமை!!!
அவன் நடந்து திரும்பி அலுவலக மேஜையில் சாய்ந்து, இரு கைகளை மார்பின் குறுக்கே கட்டி நின்ற தோரணையே… சொல்ல வந்ததை சொல்லி விட்டு கிளம்பு… என சொல்லாமல் சொல்ல,
அவனையே கூர்ந்தவாறு இருந்த, முன் ஐம்பதுகளில் இருந்த வக்கீல்,
‘கம்பீரத்தில் அப்படியே இராஜா இராஜசேகரர் தான்.’ என்று மனதிற்குள் சிலாகித்துக்
கொண்டாலும், வெளியே அதைக் காட்டாமல், செறுமிக் கொண்டு நிமிர்ந்து.. உரத்த குரலில் நீதிமன்றத்தில் பேசுவது போல்,
“ எனது கட்சிக்காரர், இராஜா ஆதித் வர்மன், இராஜா ராஜசேகர வர்மனின் சட்டப்படியான வாரிசு வழி பேரன் என்ற முறையில் அவருக்கு தான் இந்த அரண்மனை முதலான பரம்பரை சொத்துக்கள் மீது முதல் உரிமை.. அதை… “ என சொல்லியவர்,
கூலர்ஸ்குள் இருந்து கூறிட்ட விழிகளால், லேசாய் வயிறு தடதடப்பது உணர்ந்து, தொடர துணிவு வேண்டியவராய் செறுமி, அவனின் முகம் காணாமல் சற்றே பார்வையை விலக்கி, “முறையற்ற வாரிசான உங்களுக்கு கொடுக்க, அவருக்கு அதிகாரம் இல்லை.. எனவே.. சட்டரீதியான.. நடவடிக்கை… எடுக்க…” என்றவர் வாயின் அசைவு, மார்பின் குறுக்கே இருந்த கரங்களை விலக்கி, கூலர்ஸை கழற்றி விட்டு பார்த்த அவனின் பள பளத்த விழிகளின் பாவனையில் நின்றே போனது.
ஜெயவர்மன்.. தலை நிமிர்ந்து.. அழுத்தமான குரலில்,
“உங்களுக்கு… என் லாயர்ட்ட இருந்து இதற்கு பதில் வந்திருக்குமே… ஆனாலும் வந்திருக்கீங்க. விழா சமயம் வந்து எல்லோர் முன்பும் இதை சொல்லச் சொல்லியிருந்தாரா… உங்க கட்சிக்காரர்… ஹும்..
நோட்டீஸ் அனுப்பினா.. அடுத்து… கோர்ட்ல சந்திக்கறது தானே நடைமுறை.. அவருக்கு அது தெரியாம இருக்கலாம். ஆனா… வயதில்.. அனுபவத்தில் பெரியவரான உங்களுக்கு தெரிஞ்சுருக்குமே?” என்றவனின் நிதானமான பேச்சில் விழுந்த அடிகளில் அவர் முகம் கருக்க.. ஜெயவர்மனின் முகமோ அதே உணர்வு துடைத்த நிலையில்.
“வொன் மோர்.. இந்த வீடு பரம்பரை பரம்பரையா மாறி மாறி என்னிடம் வரலை…
எனது தகப்பனார் இராஜா இராஜசேகர வர்மன்… தனது ஒன்று விட்ட தமையனிடம் இருந்து.. தன் சுய சம்பாத்தியத்தின்.. பல லட்சங்களைக் கொடுத்து… ஐ மீன்… விலை கொடுத்து, அவரின் ரத்த சம்பந்தமுள்ள மகனான இராஜா ஜெயவர்மன்,
பெயரில் வாங்கியது. அது எப்படி பரம்பரை சொத்தாகும்?”
எனவும்,
வக்கீலின் முகம் இருள, “ஹாங்… இல்லை. உயில் படிதான்.. இது உங்களை சேர்ந்திருக்கு..”
“லாயர் ஸர்! உங்க க்ளையண்ட்ட நேற்று என் லாயர் அனுப்பிய பட்டா, ஈ.சீ. டாக்குமெண்ட்ஸ், உயில் காப்பி எடுத்து தெளிவா படிக்க சொல்லுங்க.. இது ராஜாவின் சுய சம்பாத்யம் பிரிவுல வரும். இதை யார் பேரிலும் எழுத அவருக்கு உரிமை இருக்கு…”
“ பரம்பரை நகைகள்…?” என ஆரம்பித்தவரைக் கூர்ந்து, “ அதற்கும்.. என்னால் உரிமை கோர முடியும்… அது மட்டுமல்ல… பரம்பரை பரம்பரையாக இருக்கும் சொத்துக்கள்… தொழில்களிலும் எனக்கு உரிமை உண்டு… ஒரு சீனியர் லாயர் உங்களுக்கும் அது தெரிஞ்சிருக்குமே…” எனவும்,
‘அடி மடிலயே கை வைக்கிறானே..’ என்று பதறி அவர் பார்க்க, அதே நிதானமாய் விழுந்தன வார்த்தைகள், “ நீதி எல்லோருக்கும் பொதுவானது. இப்போ வந்த லா ஆக்ட் சேஞ்ச் படி ராணி காஞ்சனா தேவிக்கும்.. இராஜ சேகர வர்மன்… சொத்துக்களில் உரிமை கோர முடியும்.. எல்லாமே இன்று உங்களுக்கு அனுப்பிய நோட்டீஸ்ல இருக்கு. அதற்கு பதில்.. என் லாயர்க்கு அனுப்புங்க. ” என்றவனின் பாவனையில் அவர் சட்டென்று எழ,
“இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.. கல்யாண விருந்து சாப்பிட்டு போங்களேன்.” எனக் கூறியவன்… தர்மசங்கடமான அவரின் நிலை கண்டு, இதழ்கள் வளைய… கூலர்ஸ் அணிந்தவன் நிமிர்ந்து பார்த்த போது,
‘நல்ல பிள்ளைக்கு அழகு சொல்லாமல் செல்வது…’ எனும் மொழிக்கு ஏற்ப அவர் கிளம்பி வெளியே செல்வதைக் கண்டான்.
‘ஆதித்வர்மன்.. என்ன நோக்கத்துடன் அனுப்பினான்? அனைவரின் முன்பு அம்மாவை.. என்னை அவமானப் படுத்தவா.. வேறு ஏதும் காரணமா? நகைகளா..! என்ன நகைகள்..? சீனியர் லாயரைப் போய் மூக்கு உடைபட என்றே அனுப்பியிருக்கிறானே!’ என யோசித்தவன், கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்து, தொழிற்சாலையில் அனைவரும் காத்திருப்பார்கள் என்று நினைவு தோன்ற, வேக நடையுடன் வெளியேறி தன் வாகனத்தை அடைந்தான்.
மதி வதனாவை அழைத்துச் சென்ற காஞ்சனையோ மிகுந்த மலர்வுடன் அரண்மனையை சுற்றிக் காட்ட, அவளுக்கு அவர் பேசிய மலையாளம் புரியவில்லை என்றாலும் ஆர்வத்துடன் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டாள். அவரும், அவளின் முக பாவனைகளை வைத்து அனுமானித்து.. பல நேரங்களில் ஆங்கிலம் கலந்து பேசி அவளுக்குப் புரிய வைக்க முயன்றார்.
ஒரு அறையைக் காட்டி, “இது ஜெயவர்மனின் அறை. ஆனால் அவன் வந்து தங்கியதே இல்லை.” எனவும் ஆச்சர்யமாகப் பார்த்தாள் மதிவதனா.
அவரின் முகத்தில் தெரிந்த வருத்தம் கண்டு அதிகம் கேள்வி கேட்கத் தோன்றாமல்.. ஆறுதலாக அவரின் கைகளை மட்டும் பற்றிக் கொண்டாள்.
“ என் மீது தான் தவறு. அந்த வயதில் காதல் கண்ணை மறைத்தது.” என்று தனது வாழ்வைப் பற்றி ஒளிவு மறைவின்றி சொல்லத் தொடங்கினார்.
இராஜாவின் கொல்லம் கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் தொழிற்சாலையில் செகரட்டரியாக வேலை செய்ய வந்து.. இராஜா ஏற்கனவே திருமணமாகி இருந்தவர் என்று தெரிய வந்த போதிலும்.. அவரின் மேல் தோன்றிய ஈர்ப்பு.. அவர் இரு மனைவியரைப் பிரிந்து வாழ்கிறேன் என்றதும்.. அவரைப் பற்றி நன்கு அறிந்தே.. அந்த பத்தொன்பது வயதில்.. இளமை தந்த திமிரில்.. ஆசையில் அவரின் மேல் காதலை வளர்த்துக் கொண்டு.. அவருடன் தன் வாழ்வை பிணைத்துக் கொண்டார்.
அந்த நேரத்தில் விதவைத் தாயாரின் அறிவுரைகள், சுற்றியிருந்தவர்களின் ஏளனப் பார்வைகள் ஏதும் புத்தியில் ஏறவில்லை. கோவிலில் மஹாராஜா கட்டிய அரச குடும்பத்துத் தாலியை ஏற்றுக் கொண்ட போதும், மனதில் எந்த உறுத்தலும் இல்லை. மூத்த மனைவியிடம் இன்னமும் அவர் விவாக விலக்கு கோரவில்லை.. இரண்டாம் மனைவியுடன் கருத்து வேறுபாடு.. இதெல்லாம் இராஜசேகர வர்மன் பிசிறற்ற குரலில் சொல்லிய போது கூட அவை கருத்தில் ஏறவில்லை.
தங்களின் திருமணத்திற்கான அங்கீகாரம்.. சமுதாயம் ஏதும் பெரிதாக தோன்றவில்லை. இராஜாவின் காதல், காட்டிய அன்பு இவற்றையெல்லாம் பெரிதாக எண்ணச் செய்யவும் இல்லை… என்றால் அதுவும் மிகையில்லை. அவரின் மனதிற்கும் வாழ்விற்கும் மகாராணி என்றால் அது காஞ்சனா மட்டுமே.. அப்படித்தான் அவர் நடவடிக்கைகள் இருந்தன. அவரின் பணியாளர்களும் தொழில்களின் மேலாளர்களும் கூட அவ்வாறே காஞ்சனைக்கு மிகுந்த மதிப்பு கொடுக்குமாறு செய்தார்.
ஒரே வருடத்தில் ஜெயவர்மன் பிறந்து, இளவரசன் போல சிறப்பாய் வளர்ந்து வர.. காஞ்சனையின் உலகம் இராஜா இராஜசேகரன் மட்டுமே என்று ஆகிப் போனார். இந்த அரண்மனை ஜெயவர்மனின் பெயரில் வாங்கிய போது தான் முதல் மனைவி இராணி கௌரியம்மாவின் கோபத்தை, ருத்ர ரூபத்தை சந்திக்க நேர்ந்தது.
கொல்லம் அலுவலகத்திற்கு நேரில் வந்தவர், கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டு பேசிய போது கூட.. தன் தவறை, தப்பை எண்ணி காஞ்சனா தழைந்து போக… விரைந்து வந்த இராஜா இராஜ சேகரனோ… அதற்கு மேல் பேச கௌரியம்மாவை அனுமதிக்கவில்லை.. காஞ்சனையின் நிலை தாழவும் விடவில்லை.
கௌரியம்மாவிடம் கடுமையாக எச்சரிக்கும் குரலில்… “இராணி என்ற பெயரும், சொத்துக்களும் போய் விடும்.” என்றதும் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் அங்கிருந்து விலகிச் சென்ற அவர்.. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்… தன் கோபம் மற்றும் ஆத்திரத்தை கணவரிடமோ.. காஞ்சனையிடமோ வெளி காட்டத் தயங்கவே இல்லை.
ஒருமுறை ஜெயவர்மன் பிறந்த நாளை முன்னிட்டு.. தான் இருந்த கோட்டயம் கோவிலுக்கு காஞ்சனாவை வரவழைத்தார் இராஜசேகரன். சிறப்பு வழிபாடுகளுக்காக
கர்ப்பக்கிரகத்தின் முன் மூவருமாக நின்று கொண்டு இருக்கும் போது, கௌரியம்மா தன் மகன் ரவீந்திரனுடன் தற்செயலாக அங்கு வர.. தன்னைத் தள்ளி வைத்த கணவன் இன்னொருத்தியுடனும் அவளுடன் கூடிப் பெற்ற மகனுடனும் நின்று இராஜ மரியாதை செய்விப்பதைக் கண்டவரின் ஆத்திரம் கரை கடந்தது.
கோபத்தில் தகாத வார்த்தைகளால் அங்கேயிருந்த அனைவரையும் திட்டியவர்… பயத்தில் தந்தையின் கால்களைக் கட்டி நின்ற சிறுவனை கோபத்துடன் பிரித்து எடுத்து… தள்ளிய வேகத்தில் கோவிலின் கல் தூணில் நெற்றி முட்டி ரத்தம் கொட்ட மயங்கி விட்டான்.. சிறுவன் ஜெயவர்மன்.
அப்போது கோபத்தில் இராஜா எடுத்த பல முடிவுகள்.. அவரை நிரந்தரமாக வெட்டி நிறுத்தியது.. சொத்துக்களை மட்டும் கொடுத்து சொந்தத்தை விலக்கிக் கொண்டது, கௌரியம்மாவின் கோபத்தை அதிகரிக்க .. இராஜாவுக்கும் அவரின் இதர குடும்பங்களுக்கும்.. அவர் ருத்ரகௌரி ஆகிப் போனார்.
இராஜா, அதன் பின் தன் வாழ்வை முற்றிலுமாக காஞ்சனையுடன் பிணைத்துக் கொண்டு விட.. அடிபட்ட ஒன்பது வயது ஜெயவர்மனோ.. ஒரு வாரம் காய்ச்சலில் இருந்து மீண்டு எழுந்த பின்.. முற்றிலும் தாயை தந்தையை ஒதுக்க ஆரம்பித்து விட்டான்.
ஏற்கனவே ஏழு வயதில் இருந்தே விடுதியில் தங்கி வைக்கப்பட்டு படித்துக் கொண்டிருந்த அவன்.. அடுத்து குடும்பம், வீடு என்பதையே மறந்தவன் போல்.. தானுண்டு தன் படிப்பு உண்டு என்று இருக்க ஆரம்பித்தான். ஒரு கால கட்டத்தில் தந்தையிடமிருந்து எதையும் வாங்கிக் கொள்ளவும் மறுக்க, இராஜா இராஜசேகரன் மனதில் மிகுந்த அடி வாங்கினார். அவர் ஒழுக்கம் தவறியவர் தான். எனினும் தறி கெட்டு அலைபவர் கிடையாது. அதுவும் தான் பெற்ற மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.
எதற்கும் அஞ்சாத கலங்காத அவரையே, தன் ஒதுக்கத்தினாலேயே தண்டித்தான் ஜெயவர்மன். ஊருக்கே மகாராஜாவாக படியளப்பவரின் மகன், படிப்பிற்கு கூட அவரின் பணத்தைத் தொட மறுத்தான். அம்மை, அச்சன் விளிப்புகள் எப்போது நின்றன என்பதை திடுக்கிடலுடன் இராஜசேகர வர்மன் ஆராய்ந்த போது.. தோளுக்கு மிஞ்சியிருந்த மகன் தொலை தூரம் போயிருந்தான்.
பதின்வயதின் தொடக்கத்தில் பள்ளியில் யாரோ காஞ்சனையைப் பற்றி கேவலமாகச் சொல்லி.., அவனின் பிறப்பையே தவறாக பேசிய போது சினம் கொண்டவன், கை நீட்டி அடித்து இருக்க, பள்ளி நிர்வாகம் அதை இராஜ சேகரனின் கவனத்திற்கு கொண்டு வந்தது.
பார்க்கச் சென்ற பெற்றவரின் முகம் பார்க்காமலே, கேரளாவில் படிப்பினைத் தொடர முடியாது என அழுத்தமாக சொன்னவன், அவர்களின் நிழல் கூட வராத தொலை தூரத்திற்கு செல்லப் போவதாக தமிழ்நாடு கிளம்பிய போது, காஞ்சனை நிறுத்த வழியற்றவர் ஆகியிருந்தார்.
எப்போதும் கணவனையே ஒட்டி சார்ந்து, காதல் வாழ்விற்காக பிள்ளையைத் தள்ளி நிறுத்தும் காஞ்சனையிடம், ஜெயவர்மனிற்கு இயற்கையாய் இருக்கும் தாயன்பு கூட இல்லாமல் போயிருந்தது..
காதல் என்ற பெயரில் கண் மூடியவாறு, முறையற்ற திருமணக் குழியில் வீழ்ந்து.. தன்னையும் சமூகத்தின் முன் அவமான சின்னமாக நிற்க வைத்து விட்டார்.. என்று அன்னை காஞ்சனை மேல் தான் அதிக கோபம்.
பெற்ற பிள்ளையை விட கணவனின் பின்னே இருப்பதையே காஞ்சனை பெரிதாக நினைப்பதாக, ஒரு முறை குற்றம் சாட்டியவன், கிளிமனூர் வருவதையே நிறுத்தி விட்டான். அவனின் கோபத்திற்கு பயந்தும்.. மகாராஜாவின் உடல் நிலை பயணம் செய்ய அனுமதிக்காததால், அடிக்கடி அவனை சென்று பார்க்க இயலா இவரின் நிலைப்பாடும், அவனுக்கான அன்பு மறுப்பாகவே அவன் கூறிய போது.. குற்றம் சாட்டிய போது, பதில் கூற முகமோ மொழியோ இல்லாமல் தான் போனது காஞ்சனைக்கு..
உண்மை தானே.. எப்போதும் மகாராஜாவை முதலாவதாக நினைத்தே வாழ்ந்து இருந்தார். அவர் தன் இரு குடும்பங்களை விலக்கி தன் காதலுக்கு பெருமை சேர்த்ததாக மகிழ்ந்து இருந்தவர், தன் ஒரே மகனுக்குத் தாயாய் கடமை செய்யத் தவறி இருந்தார். காதலியாய் மனைவியாய் வென்றவர், தாயாய் மோசமாக தோற்றுப் போயிருந்தார்.
இதை சொல்லிய போது காஞ்சனையின் கண்களில் நீர்..
மகாராஜாவின் இறப்பிற்குப் பின், அவனை தன் அருகில் வைத்துக் கொள்ள விழைந்த போது, அவரின் கணவரின் சொத்துக்களை காவல் காக்கவே தன்னை அழைப்பதாக உணர்ந்தவனாய் முகம் இறுக, அவரின் கண்ணீருக்கு கெஞ்சல்களுக்கு கட்டுப்பட்டு துபையினை விட்டு வந்தாலும், மனதால் இன்னமும் விலகிப் போய்விட்டான்.
கேரளா வந்ததிலிருந்து அவனை எழ விடாமல் செய்ய, ஆதித் வர்மன் செய்யும் அனைத்து வேலைகளையும் பொறுத்து.. போராடி என ஒரு போர் வீரனாக மாறியிருந்தவன் இளக்கம், அன்பு, உறக்கம் என்பதையே முற்றும் தொலைத்தவனாகிப் போனான். அவனின் வாழ்வை மீண்டும் நிம்மதியில்லாமல் தான் ஆக்கி விட்டதாக அவர் வருந்த,
கேட்டுக் கொண்டிருந்த மதி வதனாவிற்கோ உள்ளம் கனத்து.. கணவனை எண்ணி நெகிழ்ந்து நின்றது…
கணவனின் பற்றற்ற தன்மை.. எதற்கும் அலட்டாத நடவடிக்கைகள்.. யாரையும் சாராத, ஒட்டாத குணம் அனைத்திற்கும் காரணம் புரிய ஆரம்பித்தது.
வெளியே தோற்றம் தான் அப்படி. அவனைப் போல் அன்பு செய்ய யாராலும் முடியாது என்றே தோன்றியது. அவனின் அன்பை பெற முடியாத அவனின் அன்னையை எண்ணிப் பரிதாபமாக இருந்தது.
தன் அண்ணனிடம் காட்டும் நட்பு.. அன்பு.. தன் மீது.. காட்டும் உயிர்க் காதல்… உயிரையும் தரத் துணியும்… அவனின் நேசம்… என்று எண்ணியவளுக்கு… தன்னவனை எண்ணி உள்ளம் விம்ம… அவனை உடனே பார்க்க வேண்டும் போல தோன்றிய அக்கணத்தில்.. அவளின் அலைபேசி ஒலித்தது.
அவனே தான். “வது…” எனும் ஒற்றை அழைப்பில் எவ்வளவு மென்மை… ஏற்கனவே இருந்த… உணர்வின் பெருக்கில், “ம்..” என்று மட்டும் அவள் சொல்ல…
“இங்கனே மஷினில் டேமேஜ் ஆகியிருந்த பார்ட் கழற்றியாச்சு.. புதுசு மாட்டி.. ரன்வேயில்.. இருந்த டேமேஜஸ் சரி பார்த்து.. ஓட வைத்து சோதிச்சு முடிக்க இராவாகிடும். நீ சாப்பிட்டு ஓய்வெடு… ” எனவும் இடைமறித்து..
“நீங்க சாப்பிடல…..” எனவும் அவளின் குரலின் மென்மையில் சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “இங்கே வர்கீஸ் ஏற்பாடு பண்ணிடுவார். இப்போ சாப்பிட்டுருவேன். நீ சாப்பிடு.. வச்சுறவா..” என்றவன்…
அவளிடமிருந்து பதில் வராத அமைதியில் குழம்பி, “வதூ…” என அழைக்க..
“சீக்கிரம் வேலை முடிச்சுட்டு வாங்க..” என மிக மெலிதாய் ஒலித்த குரலில்.. இது வரை அவன் கேட்டிராத அறிந்திறாத குழைவு…
ஏனோ அக்குரல் அவன் உயிர் வரை சென்று வருட, ஆழ்ந்த மூச்செடுத்து விட்டவன்…
“ம்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.
“ஜெய் மோனா…” என்று கேட்ட காஞ்சனாவிடம்,
“ஆமா அத்தை சாப்பிட.. ம் ம் ஊனு கழிக்க வரல னு சொன்னாங்க. நம்மை சாப்பிடச் சொன்னாங்க. ” எனவும்,
ஆச்சரியமாக பார்த்தவர், ‘எப்பவும் அப்படிதான்.. சாப்பிட வரமாட்டான். ஆனா… அதை ஃபோன் பண்ணி சொல்வது தான் ஆச்சரியம்.. என்ட மோனா இது! மனைவியிடமாவது அன்பை, அக்கறையை வெளிப் படுத்துறானே..’ என்று எண்ணியவர்.. மனதில் மகிழ்ச்சி..
அதே மலர்வுடன், “இன்னும் ஒரே ஒரு இடம்.. மட்டும்.. மதிவதனே.” என்று அவளின் கை பற்றி, இராஜா இருந்த வரை தங்களின் தனியறையாக இருந்த அறைக்கு கூட்டிச் சென்றார்.
தன் இடையில் செருகி இருந்த திறவுகோல் கொண்டு, அறைக் கதவைத் திறந்தவர் அவள் உள்ளே நுழைந்ததும் கதவை தாளிட்டார். மிகப் பெரியதாய் அழகாய் இருந்த அறையின் ஒரு புறச் சுவற்றில் அலங்காரமாய் மாட்டப் பட்டு இருந்த ஒரு கேடயம் மற்றும் இரு வாள்களை எடுக்க.. அது மாட்டியிருந்த ஆணியானது.. ஒரு விசை (லிவர்..சிறு கியர்) போன்ற அமைப்பில்… இருப்பதைக் கண்டு மதிவதனா வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது.. காஞ்சனா அதை பலமாக கீழே இழுக்க அருகில் இருந்த அலமாரி நகர்ந்து தெரிந்த சுவரில்… இருந்த சிறு துளையில் காஞ்சனா தன் கழுத்தில் வயிறு வரை நீண்டு இருந்த பொன் சங்கிலியின் டாலரை எடுத்து, நீண்டு வித்தியாசமான வடிவில் இருந்த அதன் ஒரு பகுதியை, நுழைத்து திருப்ப.. க்ளிக் எனும் ஓசையுடன் அது திறந்து கொண்டது..
பதினைந்து அடி நீளம்.. ஆறடி அகல அளவில் சிறு பொக்கிஷ அறை போன்று இருட்டாக தோற்றமளித்த அதனுள் அவளையும் கூட்டிச் சென்றார். வெளியிலிருந்து வெளிச்சமோ காற்றோ வர ஜன்னல் ஏதும் இல்லை எனினும்.. அந்த அறை லேசான சந்தன வாசனையுடன் இருந்தது. அங்கேயிருந்த விளக்கினை ஒளிர விட்டதும், அச்சிறு அறையானது பழங்கால பொருட்கள் அழகுற இருக்கும் ம்யூசியம் போல தோற்றமளித்தது. சுவர்கள் எங்கும் ஓவியங்கள், வித விதமான தங்க வெள்ளிப் பொருட்கள் நிறைந்த அலமாரி.
அறையின் ஓரத்தில் ஒரு பழங்கால மரப்பெட்டி மற்றும் இரும்புப் பெட்டி இருக்க…அங்கே மறைவாக இருந்த சிறு அலங்கார அமைப்பினுள் இருந்த திறவுகோல்களை எடுத்து மதிவதனாவின் கைகளில் தந்தவர்.. தன் கழுத்தில் இருந்த பொன் சங்கிலியையும் கழற்றி அவளின் கழுத்தில் போட்டார்.
“இதில்.. இராஜா எனக்கு கொடுத்த நகைகள் மற்றும் சில பரம்பரை நகைகளும் இருக்கு.. நான் இவற்றை பெரும்பாலும் அணிந்ததில்லை. மஹாராஜா எனக்கு கொடுத்தவற்றை.. அவர் இருக்கும் போது அணிந்திருக்கிறேன்.. அவரின் ஆசைக்காக.. இனி இவை உனக்கு தான் சொந்தம்..” எனவும் திகைத்து விழித்தவளின் பார்வையில் பட்டது காஞ்சனையின் தலைக்குப் நேர் பின்னே சுவரில் இருந்த பல ஓவியங்களில் ஒன்று…
பல நூறு ஆண்டுகள் கடந்தது என வண்ணங்களின் சேர்க்கை சொல்ல.. மதிவதனாவை அதிர்விற்கு உள்ளாக்கின… அதிலிருந்த முகங்கள்….
கிட்டத்தட்ட… ஜெயவர்மன் மற்றும் அவளின் முகங்களை ஒத்தவையாக..
அனுமதி 22
***************
அன்று…
தன் மேல் பாதத்தின் மீது அழுந்திய மாவிலைப் பாத ஒற்றுதலில் கண் மூடி இருந்த இளவரசன் இராஜ ஜெய சிம்ம வர்மன்… மார்பில் வந்து மோதிய மலர்க் கூட்டங்களால் மூச்சடைக்க கண் திறந்தான்.
சற்று நேரம் முன்பு வரை அவனின் பிடிக்குள் அவள் இருந்த போது தோன்றாத ஏதோ உணர்வுகள், இப்போது உடலெங்கும் சிலிர்ப்பாய் துள்ளலாய் ஓடுவதை உணர்ந்தவன்.. அவ்வுணர்வினை இனம் காண முற்பட்டான். மெல்லிய முறுவலொன்று மந்தகாச நிலையடைந்து கடின இதழ்களை மென்மையாக்க, ஏதோ தோன்ற தன் வலிய கரத்தில் சிக்குண்டு கிடந்த… மெல்லியதானாலும் வலுவாய் இருந்த கரத்தை மெதுவாகத் திருப்பி விரித்துப் பார்த்தான்.
மரக் கிளையின் பிசிறுகள் குத்தி இருப்பதையும், கொடிகளைப் பற்றி ஏறியதில் வாள் பிடித்து காய்ப்பு ஏறியிருந்த தோல் வழன்று இரத்தம் வெளியேறி காய்ந்து இருப்பதும் கண்டு… திடுக்கிட்டான்.
‘ஓ… கடிவாளம் பற்றி செலுத்த இயலாததால் தான் தன்னுடன் ஏறினாளா…’ என்று நினைத்தவனுக்கு தன் மனம் சற்று முன் விண்ணை முட்டிப் பறந்தது எண்ணியதும், மந்தகாசப் புன்னகை எள்ளல் புன்னகையாக மாறிப் போனது.
ஏதோ உணர்வால் அடைத்து இருந்த குரல்வளையைச் செறுமி சீர் செய்து,
“ காயமாக இருக்கிறதே வதனா.. மருந்திட்டு கட்டுப் போடவா..” என்றவன், அவள் பதிலுக்குக் காத்திராமல், தன் இடைப் பகுதியை தொட்டுப் பார்க்க, சற்று முன் நடந்த போராட்டத்தில் அவன் மூலிகைகள் வைத்திருந்த முடிச்சு, இடம் பெயர்ந்து இருக்க.. அவளின் மேல் அதிகம் உரசாமல் பின்னோக்கி நகர்ந்து, கீழே இறங்கியவன்.. இடையை இறுக்கி இருந்த துணிக்குள் தேடி.. மருந்தை எடுத்து அவளின் காயங்களில் இட்டு, தன் மேல் துணியை கிழித்துக் கட்டினான்.
சந்திராம்பிகையின் இரு கரங்களிலும் அவ்வாறு செய்தவன், “இனி தாங்கள், தனியாகவே புரவி ஓட்டிச் செல்லலாம்..” என மரத்த குரலில் கூறவும்,
இளவரசியின் இதழ்களில்… அழகானதொரு முறுவல்.. வியந்த முகத்துடன்,
“இந்த காயத்திற்கு அஞ்சியா உங்கள் குதிரையில் ஏறினேன் என்று எண்ணினீர்கள்!!” என்றவள், பெருமூச்சு விட்டு, “உங்களிடம் சற்று பேச வேண்டும்.” எனவும்
“எதைப் பற்றி..?” எனத் தன் கூர்மையான விழிகளை அவளின் ஆழமான நயனங்களோடு கலக்கச் செய்து வினவ..
“படைக் குடில் உறையூரில் அமைப்பது பற்றி…” என்றவள் சற்று நிறுத்தி.. மிக மெல்லிய குரலில், “தங்களின்… என் மீதான.. அன்பைப் பற்றி..” என ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லவும்,
உணர்வற்ற பார்வையால் அவளின் ஒளிரும் முகத்தை அளந்தவனிற்கு.. அவளின் கண்களின் மின்னலிற்கும்.. இதழ்களின் துடிப்பிற்கும் என்ன பொருள் கொள்வதென்று புரியவில்லை.
அவளின் முகம் கூர்ந்தவாறே.. “நாம் சோலையூர் அடைந்த பின்பு கூட பேசலாம் தேவி.” எனவும்..
“இல்லை.. இளவரசே. அங்கே.. வேங்கையர் இருப்பார். அவர் முன்னே இவற்றைப் பேச முடியாது.” எனவும்,
சுற்றிலும் பார்த்தவன் மேலும் தாமதிக்காமல் அதே புரவியில் ஏறினான். மயங்கிய மருத நாட்டுப் பாதுகாவலர்களையும் அவர்களின் குதிரைகளையும் கைப்பற்றிக் கொண்டு வருமாறு தன் வீரர்களிடம் ஆணையிட்டவன்… நாக ஜெயந்தனைக் கைது செய்யச் சென்ற பாதுகாவலர்கள் வந்த பின், அவனையும், முன்னாள் கிளர்ச்சியாளர்களையும் கவனமாகக் கொண்டு வருமாறு சொல்லி சிலரை நிறுத்தினான்.
மிச்சமிருந்த வீரர்களைக் கொண்டு தானிருந்த குதிரையை சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி விட்டு, தன் வீரர்களை குறிப்பாய் பார்த்தவன், புரவியை மெதுவாக செலுத்தினான்.
அவனின் பார்வை சொன்ன தகவல் புரிந்த அவனின் மெய்க்காவல் வீரர்கள் ஒரு கயிறு (கிட்டத்தட்ட ஐம்பது அடி) தொலைவில் தொடர்ந்து வந்தனர்.
சில கை நொடிப் பொழுதுகள் அமைதியில் கழிய.. இளவரசி பேசத் தொடங்கினாள்.
“இன்னும் ஒரு கிழமைப் பொழுதில் படைகள் புறப்பட வேண்டும். நீங்கள் சொல்வது போல் மொத்த படையும் உறையலூரில் குவித்து விட்டால், சாளுவ கோட்டையை எங்கனம் களவத் தாக்குதலில் இருந்து காப்பது இளவரசே?”
“அது அப்படி அல்ல. அது நம் வேலையும் அல்ல தேவி.. சாளுவத்தை காப்பதை விட மருதத்தின் எல்லைக்குள் முத்து வடுக நாதன் நுழையவிடாமல் தடுப்பது தான் அவசியம். நம் கவனத்தை சாளுவம் நோக்கித் திருப்பி விட்டு மருதத்திற்குள் நுழைவது கூட முத்துவடுகனின் திட்டமாக இருக்கலாம்..”
“சரி தான் இளவரசே… அதற்குத் தான் மாசேனைநாயகரும் தந்தையாரும் வட எல்லைப் பாதுகாப்பில் இருப்பார்களே… அதே சமயம், கோட்டைக் காவலிற்கு இரண்டாயிரம் வீரர்களை நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்திருக்கிறேன்.”
எனவும்,
சில கை நொடிப் பொழுதுகள் அமைதி காத்தான் இளவல். “அது நன்று தேவி.. அக்கோட்டையினுள் காவல் தலைமை கொண்டு தாங்கள் இருந்தால் சால நன்று ” எனவும்..
வியப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள் இளவரசி.. “எனில் சாளுவ கோட்டை போரில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்கிறீர்களா?”
“அது அப்படி பொருள் கொள்ளாதீர்கள் தேவி. மருதக் கோட்டையின் பலமும், மருதத்தின் வருங்காலமுமான தங்களின் பாதுகாப்பு முக்கியம் என்கிறேன்…”
“போரில் கலந்து கொள்வது.. ஏற்கனவே முடிவானது இளவரசே…” என்றாள் தன்மையாகவே…
ஆனை மலைக் குன்றை விட்டு இறங்கிக் கொண்டு இருந்த புரவியை செலுத்தியவாறு இருந்த, இளவலிடமிருந்து அதற்கு பதில் ஏதும் வரவில்லை.
சில நேரங்களில், மௌனம்.. சம்மதமின்மைக்கு அறிகுறியும் கூட.. என்று அறிந்தவளான சந்திராம்பிகையும் அதற்கு மேல் பேசவில்லை.
பாதை வேறு செங்குத்தாக இறங்கத் தொடங்க, அவனின் கவனம் பாதையில் இருப்பதை உணர்ந்து அமைதி காத்தவள்.. சரிவில் இறங்கும் நிலையில், இருவரின் உடல்கள் உரச நேர்வது கண்டு, குதிரையின் சேணத்தை இறுகப் பற்றிக் கொண்டு முன் நகர முற்பட, இளவலின் இடக்கரமானது.. அவளின் இடையை வளைத்து இறுக்கி.. பின்னுக்கு இழுத்து.. தன்னுடலோடு சேர்த்தது.
அவனின் செய்கையில் விதிர்த்தவள், திரும்பி அவனின் முகம் பார்க்க, “பாதை புலப்படவில்லை.. தேவி..” என்றான் பாதையில் கவனமாய்.
தன்னை இது வரை உணரா உணர்வில் ஆழ்த்தும்.. அக்கரத்தை, குளிர்மையை உடலின் மற்ற இடங்களிலும், வெம்மையை தொட்ட இடங்களிலும் தந்து கொண்டிருந்த.. தனது இடையை வளைத்திருந்த முரட்டுக் கரத்தை விலக்க முயன்றவளாய்..
“எனைக் காக்க தங்கள் உயிரையும் துச்சமாக எண்ணி செயல்பட்ட உங்கள் அன்பை.. வீரத்தைக் கண்டு…” என மெல்லிய குரலில் சொல்லியவாறே கரம் விலக்கும் முயற்சியில் இருந்தவளை, இடை வெட்டியது அழுத்தமான சிம்மவர்மனின் குரல்.
“இதில் வியப்பிற்கோ நன்றி நவிலலுக்கோ அவசியம் இல்லை வதனா… இது தான் என் மனம்.. உனக்காக எதையும் செய்ய துணிவது..” என்றவனின் கரம், அவளின் இடை விட்டு இம்மியும் நகரவில்லை.
“ஒருவனுக்கு ஒருத்தி எனும் என் எண்ணத்தில் மாற்றம் இல்லை எனும் போது.. உங்களின் துணிவு.. மனம்.. சொல்ல விழைவதை கேட்க இயலா நிலை இளவலே!!
இது… நடக்காது.. நீங்கள்.. நிலை மாறினால் அது அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.. வேணாடு, வளநாடு பகை ஏற்க நேரும்.. அது இப்போதைய சூழலில் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.. இளவரசே…” என விளக்க முயல..
சீறலாய் மூச்சை வெளியிட்டவன், குதிரையின் வேகத்தை அதிகப் படுத்தி, அவளின் காதுகளின் அருகே இதழ்களை வைத்துச் சொன்னான்,
“ஒருவனுக்கு.. ஒருத்தி..!! எங்கே உன் மனதைக் கேட்டு சொல்.. உனக்கான ஒருவன் அந்த வெற்றி வேந்தனா? ஹூம்…
நாட்டிற்காக திருமணம் கூடாது என்று சொன்ன நீயும்.. அதே தவறை செய்ய விழைகிறாய் வதனா… உள்ளத்து உணர்வுகளுக்கிடையில் நாடு, அரசியலைக் கொண்டு வராதே…” என்றான் கடினமான குரலில்.
“என் உள்ளம், உணர்வுகள், உடல், செயல் எல்லாமே மருதமும் மக்களின் நலமுமே இளவரசே.” என அதே உறுதியான குரலில் சொன்னவளுக்கு பதிலாக,
“உன்னையே…. உன் உள்ளமே அறியாமல்.. உணராமல் கூறுகிறாய் வதனா.. உணரும் நேரம் காலம் கடக்காதிருக்க வேண்டும்…” என்றவன் குரலில், தெளிவாய் தெரிந்தது தவிப்பு..
குன்றை விட்டு இறங்கிய குதிரையானது, சமதளத்தை அடைந்திருக்க.. மெதுவாக இடை நெருக்கியிருந்த தன் இடக் கரத்தை விலக்கியவன்.. கடிவாளத்தைப் பற்றி.. புரவியை விரைந்து செலுத்தினான் தன் படைக் குடில் இருக்கும் இடம் நோக்கி…
********************
இன்று…
சுவரில் இருந்த பழங்கால ஓவியத்தில் இருந்த முகங்களின் சாயல் கண்டு அதிர்ந்து அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மதிவதனாவைக் கண்ட காஞ்சனை..
“இந்த ஓவியத்தில் உள்ளவர்கள் எல்லோரும் மஹாராஜவின் முன்னோர்கள்.” எனவும்..
“அத்தை இவர்….” என்று அவருக்குப் பின்னே சுட்டிக் காட்டி கேட்க, திரும்பிப் பார்த்தவர்,
“அவர் பேர் தெரியலை.. ஆனா இவர் தான் இந்த அரண்மனை கட்டியவர்.. என்று மஹாராஜா சொன்னார்.”
“அவர் முகம்.. உங்க மகன் முகம் போலவே இருக்கு.” எனவும், மூக்கினின்று நழுவி முன்னே வந்திருந்த கண்ணாடியை சரியாக அணிந்து உற்று நோக்கியவர்…
“ஆமா.. ஜெய் மோனோட சாயல் இருக்கு… அவனைப் பார்த்தவர்கள் இராஜ வம்சக் களைன்னு சொல்வாங்க. இதை யாருமே நோக்கல போல. நான் இந்த அறைக்குள் வருவதே எப்போதாவது தான் மதி. அதும் இப்போ பத்து வருடங்களா வரவேயில்லை. அதனால் தான் கவனிக்கவில்லை… “ என்றார் ஆச்சரியமாய்…
பின்னர் அந்த மன்னனின் அருகில் இருந்த அரசி உருவத்தை, மிக அருகில் சென்று கண்ணாடியைச் சரி செய்தவாறே உற்று நோக்கியவர், “அந்த அல்லி மலர் கையில வச்சுட்டு இருக்குன்ன ராணி கூட எங்கோ பார்த்த முகம்…” என்றவர் திரும்பி மதி வதனாவைப் பார்த்து… “உன்னைப் போலவே இருக்கு.. மதி ” என வியந்த குரலில் சொல்ல.. மதி வதனாவிற்கு ஏதோ கனவில் இருப்பது போன்ற உணர்வு. கண்களை சிமிட்டி தேய்த்துக் கொண்டு அந்த ஓவியத்தை பார்த்தவாறே இருக்க..
மதிவதனாவின் அலைபேசி ஒளிர்ந்து யாரோ அழைப்பதாய் அதிரத் தொடங்கியது. அதில் சிவேஷின் எண்ணைக் கண்டு மகிழ்வுடன் இணைப்பு கொடுக்க பச்சையை நிரடிக் காதில் வைத்தாள்.
பேசியது அன்னை ஆனந்தி.. திருவனந்தபுரம் தாண்டி சிவேஷ், குடும்பத்தினருடன் வந்து கொண்டிருப்பதாகக் கூறியவர்.. இன்னும் சற்று நேரத்தில் கிளிமனூர் வந்து விடுவதாகக் கூறினார். அதே போல அடுத்த அரை மணி நேரத்தில் உள்ளே நுழைந்தது சிவேஷின் வெண்ணிற வெர்னா வாகனம்.
முன்னேயும் பின்னேயும் பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடர, வந்திருந்த சீர் வரிசை சாமான்கள் ஏற்றிய பெரிய சரக்கு வாகனத்தில் இருந்து இறங்கினார் மதிவதனாவின் தந்தை ஈஸ்வர பிரபு.
அரண்மனை வாயிலில் நின்ற மகாராணி காஞ்சனா தேவியையும்.. அவர் அருகில் ராணியின் பொலிவுடன் ஆடை அலங்காரங்களுடனும்… மகிழ்வால் ஜொலிக்கும் முகத்துடனும் நின்ற தங்கள் வீட்டுப் பெண்ணையும் கண்ட அனைவரின் மனமும் குளிர்ந்தது.
அவசரமாய் திருமணம் செய்து அனுப்பியாகிவிட்டது.. சென்ற இடத்தில் எப்படி இருக்கிறாளோ எனும் பெற்றவருக்கே உரித்தான பதைப்பில் இருந்த ஆனந்திக்கு மகளின் முகமே… அவளின் அக மகிழ்ச்சியை சொல்ல.. நிறைவுடன் இறங்கி வந்தார்.
காஞ்சனா தேவியும் அவரின் தங்கையான பார்வதியும் இராஜ குல வழக்கப்படி பூரணகும்பம் சகிதம் சம்பந்தி வீட்டார் அனைவரையும் வரவேற்க, காஞ்சனையின் ஒரு பார்வையில், ஜெயவர்மனின் உதவியாளன் ஆட்களுடன் வந்து பொருட்கள் இறக்க உதவிக்கு சென்றான்.
தன் பிரியமான அத்தையை காலையிலிருந்து கேட்டுக் கொண்டே இருந்த விக்கி.. எனும் விக்னேஷ்வர் மாலாவிடமிருந்து இறங்கி ஓடி வந்து மதியின் காலைக் கட்டிக் கொண்டான். கண்கள் மலர அவனை அள்ளி எடுத்துக் கொண்ட மதி அவனின் பட்டுக் கன்னங்களில் முத்தமிட்டாள். அதனை காஞ்சனையும் பார்வதியும் சிரிப்புடன் ரசித்தனர்.
வரும் வழியெங்கும் பார்த்த மருமகன், மகளின் அழகிய படம் மற்றும் பெயர்கள் தாங்கிய பதாகைகளும், இங்கு இருந்த வரவேற்பு ஏற்பாடுகளும்.. திருமணத்தை ஜெயவர்மனும் அவன் குடும்பமும் ஏற்றுக் கொண்ட பாங்கை உரக்க சொல்ல, ஆனந்தியும் ஈஸ்வரபிரபுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் மகிழ்ச்சியை பறிமாறிக் கொண்டனர்.
சிவேஷும் மாலாவும் மதியின் அருகில் வர, சிவேஷின் கைகள் தாமே உயர்ந்து… மதிவதனாவின் தலை வருடியது. அவனின் கண்கள் நண்பனைத் தேடுவது கண்டு சிரித்தவள்,
“ ஃபேக்டரி போயிருக்காங்க… முக்கியமான வேலையாம்..” எனவும்,
‘ஓ.. அதான் தன் அழைப்பை எடுக்கவில்லை போல..’ என்று எண்ணியவனை காஞ்சனையின் அழைப்பு திரும்பச் செய்ய, “எல்லோரும் சாப்பிட வாங்க..” எனும் அவரின் உபசரிப்பை ஏற்று அனைவரும் உள்ளே சென்றனர்.
“பெரிப்பா பெரிம்மா வரலையாண்ணே…” என்று கேட்டவாறே மதிவதனா அவர்களுடன் நடக்க..
“எல்லோரும் சட்டுனு கிளம்ப முடியாதே டா குட்டி… தாத்தா பாட்டி உடல் நிலை.. பாதுகாப்பு பார்க்கனும்..” எனவும் தலையசைத்து ஆமோதித்தாள்.
“அடுத்த வாரம் ஜெய்க்கு தோதுப்படும் ஒரு நாள் பார்த்து ரிஷப்ஷன் வைக்கனுமாம்.. அந்த வேலைகள் பார்த்துட்டு இருக்காங்க பெரியவுங்க எல்லாரும்..” என்றான் சிவேஷ்வர்…
இவ்வாறு பேசியவாறே உணவருந்தும் அறையை அடைந்து இருந்தனர் அனைவரும். கேரளாவின் சிறப்பு உணவுகளின் அணிவகுப்பு கண்டு மலைத்தவர்கள், ஒரு வழியாக உணவருந்தி முடிக்க சிவேஷிற்கு அழைப்பு வந்து விட்டது ஜெயவர்மனிடமிருந்து..
“கிளம்பும்போது ஒரு தகவல் அனுப்ப மாட்டாயா டா?” என்று கடிந்த ஜெயவர்மனை சிரித்து சமாளித்தவன், “எப்போ வருவ..?” என்று மட்டும் கேட்க, அவனோ, “இரவாகிடும்..” எனவும் அமைதியானான்.
அவனின் அமைதியை புரிந்து கொண்டவனாய், இன்னும் சிறிது நேரத்தில் கார் அங்கு இருக்கும்.. எனவும், தானிருக்கும் இடத்திற்கு கிளம்பி வருமாறு அழைக்கவும் தயங்கிவாறு மதிக்கு சீர்பொருட்கள் எடுத்து வந்ததை சொன்னான்.
“இதெல்லாம் என்ன ஃபார்மாலிட்டி…” என்று மெல்லிய குரலில் கடிந்தவனை, “ஷ்… இதெல்லாம் சித்தி சித்தப்பா ஆசையா செய்றது.. தடை சொன்னா அவங்க மனசு கஷ்டப்படும்… அதனால் தான் உன்னிடம் சொல்லாமலே செய்தோம்.. ஏற்கனவே…. உன் லெவல்க்கு செய்றோமோ.. என்னவோன்னு சித்தி ஒரே புலம்பல்…”எனவும்,
சில நொடிகள் அமைதியாக கழிய அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதோ என சந்தேகமாய் அலைபேசியை எடுத்துப் பார்த்தான் சிவேஷ்.
கரகரப்பாக ஒலித்தது ஜெயவர்மனின் குரல், “என்ன பெரிய லெவல்… அவங்க எனக்கு செய்து இருப்பது… கொடுத்து இருப்பது என் உயிரை.. வாழ்வைன்னு அவுங்களுக்கு தெரியலை…” எனவும் இப்போது திகைத்து… நெகிழ்ந்து நிற்பது சிவேஷின் முறையாகி விட்டது.
“சரி, நீ கிளம்பி வா.. உன் கொச்சச்சனையும் கூட்டிட்டு வா..” என அழைப்பைத் துண்டித்திருந்தான் ஜெயவர்மன்.
அதே போல ஜெயவர்மனின் தொழிற்சாலையின் ஒரு பிரிவு என சொல்லப்பட்ட இடத்திற்கு சென்று விட்டு சில மணி நேரங்களில் திரும்பி வந்த ஈஸ்வர பிரபுவிற்கு தன் மருமகனின் உயரமும், உழைப்பும் கண்டு பிரமிப்பே வந்து விட்டது… அதுவும் இரண்டு ஆண்டுகளில் முழுக்க முழுக்க தன் முயற்சியால் சாதித்தவன் என சிவேஷ் மூலம் அறிந்தவருக்கு மரியாதையும் கூட பல மடங்கு அதிகரித்து இருந்தது.
சிவேஷும் ஜெயவர்மனும் திரும்பி வரும்போது, மாலை மயங்கி இரவு தொடங்கும் நேரம் வந்து விட்டது. முன் பனிக்காலம் என்பதால் விரைவிலே இருட்டி விட, அரண்மனை உள்ளே நுழைந்தவனின் கண்கள் தன்னவளைத் தேட, அவளின் தரிசனம் கிடைக்காமல் ஏமாற்றமாய் உணர்ந்தான்.
பணி முடிந்து வந்ததும் ஒரு முறை குளிப்பது அவனின் வழக்கம். அதற்காக தன் அறைக்குச் செல்ல இருந்தவனை தடுத்த காஞ்சனை.. புதிய பட்டு வேஷ்டி, சட்டை கொடுத்து குளித்து விட்டு, அணிந்து வருமாறு சொல்ல கேள்வியாய் பார்த்தவன், புருவங்கள் முடிச்சிட கையில் பெற்றுக் கொண்டு நகர, பின்னோடு வந்த சிவேஷ் வேறு அறைக்கு அழைத்து செல்லவும்… அறைக்குள் நுழைந்து… கட்டிலில் உடையைப் போட்டவன்… திரும்பி நண்பனை முறைத்தான்.
“என்னடா வேலை பண்றீங்க எல்லாரும்..” என உறும…
சிவேஷ் இலகு குரலில்.. “எல்லாம் கல்யாணம் பண்ணவுடன் எல்லோருக்கும் நடக்குறது தான்… ஓவரா பண்ணாம போய் குளிச்சுட்டு, புதுசப் போட்டுட்டு வா..” எனவும்..
ஏனோ கோபம் வந்தது ஜெயவர்மனுக்கு.. “இதெல்லாம் பர்சனல்.. இதை எல்லோரும்.. சேர்ந்து ஏதோ விழா மாதிரி பண்றது… கஷ்டம்டா..” என்று மார்பின் குறுக்கே இடக்கையை வைத்து, வலக்கை விரல்களை நெற்றியில் வைத்து தடவ..
“சரி.. சரி.. வெட்கப் படாதே.” எனவும்,
நிமிர்ந்து அவன் முறைத்த முறைப்பில், ‘ஆஹா… இவன் ஆடுவான்னு தெரிஞ்சுதான்.. காஞ்சனா அத்தை நம்மை மாட்டி விட்டாங்களா.. டேய்.. அவனவன் கல்யாணம் பண்ணாமயே டேட்டிங்.. மேட்டிங்னு போறானுங்க.. நீ ஏன்டா படுத்துற… இதுக்கே இப்படின்னா.…’ என்பது போல பரிதாபமாக பார்க்க..
“என்னடா….” என்று அதட்டினான் ஜெயவர்மன்.
“ஒன்னுமில்லை….” என்றவன் மனதிற்குள், ‘ஓவர் விரட்டலாவில்ல இருக்கு. உனக்கு.. அவ வந்தா தான் சரி வரும்…’ என்று எண்ணியவாறு நகரப் போனவனை நிறுத்தியது ஜெயவர்மனின் குரல்.
“பரிதாப முகம் வச்சுட்டு.. சீன் ஓட்டாதே… குளிச்சுட்டு வரேன்.” என்றவாறு துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் போனான். சற்று நேரத்தில் அவன் திரும்பி வந்த போது அறையில் சிவேஷ் இல்லை.
முழுக்கை ஷர்ட்டின் கஃப் பட்டன் போடாமல் முழங்கைக்கு கீழ் வரை மடக்கியவாறே வந்தவன், மட மடவென வெளி வந்து சாப்பிடும் அறைக்கு வந்தான். அங்கும் அவனின் அன்னை மட்டும் அமர்ந்திருக்க,
“மற்ற எல்லோரும் சாப்டாச்சா? சிவேஷ் எங்கே..?”
“எல்லோருக்கும் பயணக் களைப்பு. சாப்பிட்டு தூங்க போயிட்டாங்க..” எனவும்..
“வதூ….”
“அவளும் சாப்பிட்டுட்டா…” எனவும்,
‘இதென்ன கண்ணாமூச்சி விளையாட்டு’ என்று ஆச்சரியமாகப் பார்த்து விட்டு, வேகமாக சாப்பிட்டவன்.. தன் அறை நோக்கிப் போனான்.
கதவைத் தொட்டதும் திறந்து கொள்ள, உள்ளே நுழைந்தவனுக்கு, கும்மென வீசிய மலர்களின் நறுமணம்.. ஒரு நொடி திகைப்பை ஏற்படுத்த விளக்கை ஒளிரச் செய்தவன்.. அசந்து போனான்..
வாயிலில் இருந்து படுக்கை வரை மலர்க் கம்பளம் விரித்தது போல் இருக்க.. பெரிய கட்டிலை சுற்றி திரை போல நெருங்கத் தொடுக்கப்பட்ட மல்லிகை மலர்ச் சரங்கள்.. இடையிடையே சிவப்பாய் ஒளிர்ந்த சிறு ரோஜாக்கள் வேறு.. மல்லிகைச் சரமானது தரை தொடும் இடத்தில், தாமரை மலர்கள் குஞ்சம் போல இணைக்கப்பட்டு அசைந்தாடிக் கொண்டு இருந்தன.
மஞ்சம்… மலர் மஞ்சமாக மாறியிருந்தது.. பலவித மலர்களின் பரப்பில்.. எங்கு பார்த்தாலும் மலர் விரிப்புக்கள், சுவர்களில் கூட மலர்க் கொத்துக்கள். ஏதேதோ பெயர் தெரியாத மலர்கள்.. நிறமும் மணமுமாய்.. வித விதமாய்.. அச்சூழலும் வாசனையும் ஏதோ மயக்கத்தில் தள்ளுவது போல உணர்ந்தவன்… பக்கக் கதவைத் திறந்து, அறையை ஒட்டிய உப்பரிகைக்கு சென்றான்.
வீட்டின் ஹால் அளவு நீளமான இடம்.. இடுப்பளவு சுற்றுச் சுவருடன்.. அதில் வரவேற்பு விழாவை முன்னிட்டு சிறு மின்விளக்குகள் தொங்க விடப்பட்டு இருந்ததால், கசிந்த சிறு வெளிச்சத்தில் மிக அழகாய் இருந்தது.
மேகங்கள் அற்ற நிலவின் கிரணங்கள் வேறு அவ்விடத்திற்கு தனி அழகைத் தர முயல… கைப்பிடி சுவற்றைப் பிடித்து நின்றவன், விழிகளை மூடி ஆழ மூச்செடுத்துக் கொண்டான். பனிக் காற்றோடு இணைந்து வந்த தென்றலானது உடலின் சூடைத் தணிப்பதாய்.. திணறிய மூச்சை நிலைப் படுத்துவதாய்..
சில வினாடிகள் கழித்து மெதுவாய் இமை உயர்த்தி, நிமிர்ந்து பார்க்க, இருள் வானில் வட்ட நிலா ஒளி வீசிக் கொண்டு இருந்தது. உற்றுப் பார்க்க பார்க்க அந்நிலவில் இரு அல்லி இதழ்கள் போல் நீள்விழிகளும், தேன்மலை முகடு போன்ற நாசியும், தேர்ந்த சிற்பி செதுக்கியது போன்ற மெல்லிதழ்களும் புலப்பட… பார்த்தவாறே நின்றான்.
இதே போல் பல ஆண்டுகள்.. பல நூற்றாண்டுகளாக இங்கேயே நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை தோன்ற, தலையை குலுக்கியவன்.. கண்களை தேய்த்து விட்டுக் கொண்டான். அப்போது மெல்லிய சலங்கைகளின் ஒலி பின்னால் கேட்க, திரும்பியவன், எதிர் நின்ற பெண்ணழகை கண்டு.. அசைவற்றுப் போனான்.
நிலவில் தெரிந்த கண்கள், அதே கூர்மையுடன் அவனின் விழிகளைப் பார்த்திருக்க, மெல்லிய மென்மையான இதழ்களோ, அவனுக்கான புன்னகையை அணிந்து மலர்ந்து இருந்தன.
முத்தின் நிறத்தில் இருந்த பட்டாடையில் இருந்த சரிகைகள் அவ்வுடையை தங்கமோ வெள்ளியோ சேர்த்து நெய்திருப்பது போன்ற தோற்றத்தைத் தர… விரிந்த கூந்தலில் இருந்த மல்லிகைச் சரம், இடை வரை நீண்டு முன் வந்து, அவளின் புன்னகையில் மிளிர்ந்த முத்துக்களுடன் போட்டிக்கு நின்றது..
அணிந்திருந்த பச்சைப் பட்டு ரவிக்கை அவளின் நிறத்தை பால் போல் ஒளிரச்செய்ய, கழுத்திலும்… காதிலும் இருந்த ஒற்றைப் பொன்னாபரணங்கள், பொன்னொளி பாய்ச்சி, அவளை மின்னல் கீற்றுப் போல் மின்ன வைத்தன.
ஒரு கையை மார்பின் குறுக்கே கட்டி, மறு கையால் வாய் புதைத்து நின்றவன், அப்படியே அசையாமல் நிற்பது கண்டு.. “ஏன் இங்கே நிற்கிறீங்க.. குளிரலை..” என்றவாறு இயல்பாய் அவன் அருகில் வந்தாள்.. மதிவதனா.
பதிலின்றி இரசனை பார்வையுடன் நின்றவனின் அருகில் வந்த அவள், மீண்டும், “உங்களைத்தானே.. குளிரலை..” எனவும்..
“இல்லை..” என்றவன் கைப்பிடி சுவற்றில் சாய்ந்து அவளையே பார்த்தவாறு இருக்க.. உள்ளே திரும்பி பார்த்தவள், சங்கடத்துடன், “அலங்காரம் பண்ண வேண்டாம்னு சொன்னேன்.. கேட்டாத்தானே.. ஏதோ சம்பிரதாயமாம்.. ஐந்து வகைப் பூக்கள்… அப்புறம் சீசனில்லாத காலத்துலயும் பூத்து கிடந்த மதுரை மல்லி, பத்தாததுக்கு இங்கே உள்ள ஏதேதோ பூ எல்லாத்தையும், வாங்கி வர சொல்லி, ஊரிலிருந்தே கூட்டி வந்த ஆள் வச்சு அலங்காரம் பண்ண வச்சாங்க..” சற்று தயங்கி, “உங்களுக்கு பிடிக்கலையோ.. அது.. எல்லாம் எடுத்து இங்கே வெளியே கொண்டு போட்டுறவா..” என்றவள் அறை நோக்கித் திரும்ப முற்பட,
அவளின் கை பற்றி நிறுத்தியிருந்தான் ஜெயவர்மன். “எனக்கு… அந்த வாசனை மூச்சடைக்கிற மாதிரி இருந்தது.. அதான் இங்கே வந்தேன்.. இருக்கட்டும்.. அது விலக்கினா.. பெரியவங்க மனசு சங்கடப்படும்.. ஏசி ஆஃப் பண்ணிட்டு, சாளரமெல்லாம் திறந்து வச்சுட்டா.. கொஞ்ச நேரத்தில் சரியாகிடும்..” எனவும்,
சிறு முறுவலுடன் அறைக்குள் சென்றவள், அவன் சொன்னது போல் அவள் செய்ய, அவனும் உதவினான். உப்பரிகைக்கு செல்லும் கதவையும் திறந்தே வைக்க, வெளியில் இருந்து வந்த பனிக் காற்றானது , மொத்த மலர்களின் மணத்தையும் அறைக்குள் சுழலச் செய்தது.
சுற்றிப் பார்த்தவன், மஞ்சத்தின் அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கோலத்தைப் பார்த்து, “இது என்ன அத்தப்பூ.. கமலம், லில்லி.. அது கூட.. பச்சைக்கலர்ல இலையெல்லாம் வச்சுருக்காங்க..” என
“அது மனோரஞ்சிதம் பூ.. மரிக்கொழுந்துதான் இலை..” என்றவள் சிறு வெட்கப் புன்னகையோடு, “மாம்பூ, அசோகாப்பூ இப்போ சீசன் இல்லை. ஆனாலும் தேடிப் பிடிச்சு கொண்டு வந்து வச்சிருக்காங்க பாருங்க..” எனவும்,
மென்முறுவலோடு கட்டிலில் அமர்ந்து, பூக்கோலத்தைப் பார்த்தவன், “என்ன மாம்பூ.. அசோகா பூவா? எதுக்கு..!”
“அது… காதல் கடவுளோட ஐந்து மலர் பாணங்களாம்.. தாமரை, அல்லி, முல்லை, மாம்பூ… ம்.. அசோகம் பூ…” எனவும்,
அவனின் பார்வை மாறியது.. கரகரத்த குரலில், “அது எல்லாம் தனியா வைக்கனுமா என்ன… அதெல்லாம் தான் உன்கிட்டேயே இருக்கே..” என்றவன், சாய்ந்து, ஒருக்களித்து படுத்துக் கொண்டான்.
மல்லிகையும் முல்லையும் ரோஜா இதழ்களும் கலந்து இருந்த மஞ்சத்தில், அனந்த சயனனாக கிடந்தவனின் கண்கள், வண்டுகளாய் அவனின் மதிவதனாவின் முகத்தாமரையில் மொய்க்க, வெட்கத்தில் மலர்ந்த அவளின் முறுவலில் முல்லை அரும்புகள் எட்டிப் பார்த்தன. குளிர்ந்து கிடந்த, அவளின் அல்லி மலர்க் கரம் பற்றி இழுத்து தன் அருகே அமர வைத்தவன்,
“வது…” என்று மிக மென்மையாய் அழைத்தவனின் குரலின் ஈர்ப்பில் அவள் நிமிர்ந்து பார்க்க, அவளின் கண்களை பார்த்து, “விவாஹம், ப்ரேமம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இருந்தது இல்லை… ஆனா… நீ.. உனக்கான என் உயிர் துடிப்பு… நிஜம்.. இந்த ஷணம் என் சந்தோஷம்.. நிஜம்.. ஜென்ம ஜென்மமாய் காத்து நின்று…. கேட்டு நின்ற.. வரம் கை சேர்ந்தது போல இருக்கற இந்த நிறைவு நிஜம்.. ”எனவும்,
மதிவதனா சிறு முறுவலுடன்,
“வரத்தைக் கை சேர்க்க மட்டும் தான் செய்வீங்களா.. உங்க வாழ்வோடு சேர்க்க மாட்டீங்களா.. வரு?” எனவும்..
ஒரு நொடி திகைத்தவன், அடுத்த நொடி.. தன் வரத்தை தன் மார்பில் ஏந்தியிருந்தான்…
**************************
விற்படை, வேற்படை தாக்குதலிலேயே
வீழ்ந்து கிடக்கிறேனடி – நான்
மன்மத மலர் பாணங்கள் கொண்டு
தாக்குவதும் ஏனோ – பெண்ணே..
தாமரை….
அசோகம்…
நீலோற்பலம்…
மாம்பூ…
முல்லை…
இத்தனையும் சரங்களா..
அத்துணையும்.. அங்கங்களா…
வதனியின் வ்யூகத்தில்
வன்மையாய் சிறைப் பட்டேன் – நான்..
மீளாக் காதலில் மாளவும் சம்மதம்..
என்னுயிர் தொட அனுமதி..
உனக்கு மட்டுமே – பெண்ணே..
— இராஜா ஜெய(சிம்ம)வர்மன்.
தொடரும்….