Mon. Jun 2nd, 2025

தாமரையின் ‘உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்’ 10-13

அனுமதி 10

*****************

 

இன்று…

 

             காலை வெயில், தன் வேகத்தை அதிகரித்து இருக்கும் நேரம், மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்க, ஆயுதங்களை இடையில் மறைத்து வைத்திருந்த தனியார் பாதுகாப்பு ஆட்கள் இருவர்.. ஜெயவர்மன் வந்த இரு சக்கர வாகனத்தில் முன் செல்ல, ஈஸ்வர் கட்டுமான நிறுவன ஆட்கள் ஐவர் இருந்த மஹேந்திரா ஜீப் வாகனம் பாதுகாப்பாய் பின் தொடர, வீட்டு தொகுப்பு சுற்றுச் சுவர் வாயிலின், இரும்புக் கதவு தாண்டி உள்ளே நுழைந்தன பிரகதீஸ்வர், ஈஸ்வரபிரபு குடும்பத்தினரை சுமந்திருந்த வாகனங்கள்.

 

காரை விட்டு இறங்கிய மதி வதனா ஆசையுடன் அல்லி மலர்க் கொத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்க, தங்கள் வண்டியில் இருந்து இறங்கி ஓடி வந்த விக்னேஸ்வரன் அதைக் கண்டு, “அத்தை எனக்கு லில்லி ஃப்ளார்..” எனவும் சற்று மனம் சுணங்கினாலும் சிறுவனை ஏமாற்ற மனமின்றி பூக்களை அவனிடம் நீட்டினாள். 

 

 அப்போது அருகில் நின்று கொண்டிருந்த ஈஸ்வர் நிறுவன ஆட்களில் ஒருவரான வாகன ஓட்டி மணி, “விக்கி தம்பி உங்க கார்ல.. பின்னால உங்களுக்கு பூ இருக்கு பாருங்க..” எனவும், 

 

மதிவதனா அவரிடம் திரும்பி, “ நீங்க தான் பூ பறிச்சீங்களா மணி அண்ணே…?” என சிறிதாகிய குரலில் கேட்க..

 

 அவர், “ஆமா பாப்பா.!” எனவும், முகம் வாட, “இதையும் நீயே வச்சுக்கோ விக்கி!” என்று அவனிடம் கொடுத்தாள்.

 

“பாப்பா! அது உங்களுக்கு தான். நீங்க பூசாடில வச்சுப்பீங்கன்னு யோசிச்சோ என்னவோ… ஜெய் அய்யா.. பூ வாடாம இருக்க.. இத மாதிரி.. கவர்ல போட்டு.. தானே கட்டி வச்சார்.!” எனவும் அகமும் முகமும் மலர, நீட்டிய கையை மடக்கி மலர் கொத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். கண்கள் ராணியம்மா வீட்டு பக்கம் பாய்ந்தது. 

 

முகம் குழைய, “அவர் வந்த வண்டி இவுங்க எடுத்துட்டு வந்துட்டாங்க.. அவர் எப்படி வருவார்?”

 

“ அந்த ஆட்களை எல்லாம் போலீஸ்ல ஒப்படைக்கணுமின்னு சொன்னாரு பாப்பா.. அந்த லூசுப் பயலை ஆஸ்பத்திரிக்கு போய் காட்டிட்டு போலீஸ்ல ஒப்படைக்கணும்னு பேசிக்கிட்டாக… உங்க பேரு வெளிய வரக் கூடாதுன்னு வேற மாதிரி செய்யணும்னு நம்ம சிவேஷ் அய்யாவும் அவரும் பேசிக்கிட்டாக… வர நேரம் ஆகுமின்னு நினைக்குறேன்..” எனவும், மதிவதனாவின் விழிகள் சோர்வுற, சரி என்பது போல தலை அசைத்தவளாய் தங்களின் வீடு நோக்கி சென்றாள்.

 

        சிவேஷ் வாள் இருந்த மரப் பெட்டியையும் பிரகதீஸ்வரர் சேலை, தாலி இருந்த பிரம்புக் கூடையையும் எடுத்து கொண்டு செல்ல, ஈஸ்வர பிரபு, மாலைகள், பழங்கள் இருந்த பிரசாதப் பைகளை எடுத்துக் கொண்டவராய் அவர்களுடன் சென்றார். அனைவரும் சிவபிரகாசத்தின் வீட்டிற்குள் நுழைய.. நடந்தவற்றை சொன்னால் பெரியவர் அதிர்ந்து விடக் கூடும் என்பதால் எதையும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்த படியால், நேராக பூஜை அறைக்கு சென்றனர்.

 

பூஜை அறையில் சென்று மீண்டும் பொருட்களை பெட்டியில் சிவேஷ் எடுத்து வைக்க, கதவை திறந்து விட்டு, பின்னோடு வந்த சிவப்ரகாசம் இவ்வளவு விரைவில் இவர்கள் திரும்பியதை எதிர்பாராமல், எல்லோர் முகத்தையும் பார்த்து விட்டு.. தீபம் ஏற்றி சேலை, தாலி, வாள் அனைத்தையும் சுற்றிக் காட்டியவர்.. மலர்களை மற்றும் வாசனைத் திரவியங்களைத் தூவி வழிபட்டு விட்டு பெட்டியை மூடச் செய்து சிவ லிங்கத்தை மேலே ஏற்றி வைத்தார்.

 

     வெளியே வந்து, வெளிச்சத்தில் சிவேஷின் கைகளை பார்த்தவர், அவனின் கையில் காயம் ஏதும் இல்லாததைக் கண்டு, அதிர்வுடன், “வாளுக்கு ரத்த காணிக்கை கொடுக்கலையா…?” எனக் கேட்கவும், அனைவரும் சற்று திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

   பெரிய மகனான பிரகதீஸ்வரர், “பூஜை நல்ல படியா முடிச்சாச்சுப்பா… இனி ரத்த காணிக்கை.. கொடுக்க வேண்டாம்..ம்னு..” என்றவர், எச்சில் விழுங்கி, “அங்கே பூசாரி அருள் வந்து சொன்னார் அப்பா…” எனவும்..

 

 எல்லோர் முகங்களையும் மாறி மாறி பார்த்த பெரியவர், “இல்லை… என்னவோ நடந்துருக்கு… மரியாதையா சொல்லுங்க.. மதிக்குட்டி எங்க? மதி…. மதி மா…” என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அவர் பேத்தியை அழைக்கவும்… அனைவரும் திகைத்து விழிப்பதைக் கண்டு அவர் தேகம் நடுங்கத் தொடங்கியது. 

 

அவரின் பயத்தைப் புரிந்து கொண்ட ஈஸ்வர பிரபு, “அப்பா பதட்டப்படாதீங்க..” என்றவாறு அருகில் செல்ல,

 

“இல்ல… மதிய நான் பார்க்கணும்.. அவ எங்கே?” என்று பதற ஆரம்பித்தார்.

 

சிவேஷ் வேகமாக சென்று அவர் கைகளை பற்றி அமர வைத்து, “சித்தப்பா நீங்க போய் மதிய கூட்டிட்டு வாங்க..” எனவும்.. ஈஸ்வர பிரபு வேகமாக அங்கிருந்து சென்றார்.

 

சிவேஷ் தன் தந்தையிடம் கண்களால் அனுமதி வேண்டியவனாய்.. மெதுவாக அங்கு நடந்ததை சுருக்கமாக தாத்தா சிவபிரகாசத்திடம் கூற, கேட்ட அவர், நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருப்பதைப் பார்த்து பயந்த மீனாட்சி அம்மாள், “அத்தான்… தைரியமா இருங்க.. அதான் குமார் சொல்றான்ல ஒன்னும் இல்லனு நீங்க பதட்டப்பட்டு உடம்பைக் கெடுக்காதீங்க..” என்றவரின் விழிகளில் கலக்கம்.

 

      ஈஸ்வரபிரபு மதியுடன் வரவும், “மதிக்குட்டி வந்துட்டியடா…?” என்று உணர்ச்சி வசப்பட்டவரின் முதிய விழிகளில் இருந்து நிறைந்து இருந்த கண்ணீரைக் கண்டதும்.. 

 

மதி ஓடி வந்து அவரின் கைகளைப் பற்றி, “தாத்தா.. எனக்கு ஒன்னுமில்ல தாத்தா…” என்றவாறு அவரை அவரின் நாற்காலியில் அமர வைத்து கரம் பற்றிக் கொண்டாள்.. 

 

அவளின் தலை மீது கை வைத்து சிறிது நேரம் கண் மூடி இருந்தவர்.. விழிகளைத் திறந்து சிவேஷைப் பார்த்து, “குமாரா… உன் ஸ்நேகிதன்… அவன் எங்கப்பா?? அவன் இருந்ததால தான் நம்ம குடும்பமே இன்னிக்கு இவ்ளோ பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சுருக்கு. அவனைப் பார்க்கணும்..”

 

“அவன் கமிஷனரப் பார்த்துட்டு அப்படியே ஊருக்கு கிளம்புறதா சொன்னான் தாத்தா.”

எனவும், சட்டென்று நிமிர்ந்து தமையனைப் பார்த்தாள் மதிவதனா.

 

“காலை சுத்துன பாம்பு கடிக்காம விடாதுன்னு சொல்லுவாங்க.. இந்த அழகு மலை அப்படி பட்டவன்.. அதிகாரம் வேற அவன் கைல… அவனையும் சாக்கிறதையா இருக்க சொல்லணும்.. குமரா…” என கவலையுடன் பெரியவர் சொல்ல…

 

 

சிவேஷ், “அவன் இருந்துப்பான் தாத்தா. திங்கள் கிழமை வந்துருவான்… இப்போ அவசரமா கேரளாவுல இருக்குற அவன் சொந்த ஊருக்கு கிளம்பிட்டு இருப்பான்..”

 

“ ஓ…” என்று தலை அசைத்தவர், மதியின் கைகளைக் கண்களில் வைத்து, “ நம்ம குல தெய்வத்தோட வாள் என் மதியம்மா கைல, நினைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்க்குது.. தேவ சன்னதில வச்சு வாக்கு மாதிரி அந்த பையன் சொல்லிட்டான். இனி இந்த ரத்த காணிக்கை வழக்கம் வேண்டாம். நம்ம குலதெய்வம், அந்த நீசப் பய ரத்தத்தை இந்த வாளுக்கு கொடுத்து இதை முடிச்சு வச்சுட்டானு தோணுது.. நாம.. இனி தான் ரொம்ப கவனமா இருக்கனும்… மதி இனி காலேஜுக்குப் போக வேணாம்..” எனவும்,

 

 மதிவதனா மிகவும் அதிர்ந்து, கண்களை விரித்து,

“தாத்தா…! இன்னும் பதினஞ்சு நாள்ல காலேஜே முடிஞ்சுரும் செமெஸ்டர் எக்ஸாம்ஸ் முடிஞ்சுட்டா அப்புறம் அவ்ளோ தான். அவன் லூசு மாதிரி ஏதோ செய்தான்னு முடியுற நிலைல இருக்கிற.. என் படிப்பை எல்லாம் விட முடியாது..” என தலையை மறுப்பாய் அசைத்தவாறு செல்லக் குரலில் கூறவும்,

 

சிறிது நேரம் முன்பு அந்த ரௌடியை வாள் நுனியில், அசையவொட்டாமல் நிற்க வைத்திருந்தவளா இவள்.. என்பது போல் ஆச்சர்யமாக பார்த்த சிவேஷ் முறுவலித்தவாறு, “தாத்தா..! மதி படிப்பை ஏன் நிறுத்தனும்? ஜெய் பாதுகாப்புக்கு செக்யூரிட்டி சிஸ்டம்ஸ்ல இருந்து ஆட்கள் வர வச்சுருக்கான். அவுங்கள நம்ம வீட்டுப் பாதுகாப்புக்கு வச்சுப்போம்.. கொஞ்ச நாள் தானே.. நானே கொண்டு போய் விட்டு கூட்டிட்டு வரேன். இன்னும் பதினஞ்சு நாள் தான் படிப்பு… அப்புறம் ராணிம்மா வீட்டு மாடில தான் ஆபீஸ்.. நம்ம சைட்ல தான் ப்ரொஜெக்ட் வொர்க் பண்ணப் போறா. நா பார்த்துப்பேன்.” என,

 

“அது… அந்த ப்ராஜக்ட் வேலை.. எவ்ளோ நாள் பார்க்கணும்..” எனக் கேட்க..

 

“நாலு மாசம்..”

 

“சரி… நாம ஏற்கனவே பேசி வச்சுருந்த மாதிரி மதிக்குட்டிக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் நிச்சயம் பண்ணிடலாம்.. வெளி நாட்டு மாப்பிள்ளைனா கூட சரிதான்…” எனவும் அதிர்ந்தவளைக் கண்டு, மெதுவாக தலை கோதிக் கொடுத்தார் சிவப்பிரகாசம்.

 

“என்னடா.. தாத்தா இப்படி சொல்றேனேன்னு நினைக்காதே ராசாத்தி… உனக்கும் கல்யாண வயசு வந்துருச்சு… ஒரு நல்ல பையன் கைல புடிச்சு கொடுத்து உன் வாரிசையும் பார்த்துட்டேன்னா, என் ஜென்மம் கடத்தேறிரும்..”

 

“ தாத்தா… இது வரை நான் தான் என் டிப்பார்ட்மெண்டுல ஃபர்ஸ்ட் மார்க். அநேகமா யூனிவர்சிடி கோல்டு மெடல் கிடைக்கும்னு என் HOD சொன்னாங்க. அப்புறமா…. நான் வெளி நாட்டில் போய் ME படிக்கணும்னு நினைச்சா நீங்க வெளி நாட்டுக்கு கல்யாணம் பண்ணி அனுப்பப் பார்க்குறீங்க.” என்றவாறு மூக்கைச் சுருக்கி, ஒரு முறை உறிஞ்ச…

 

“ரெண்டுமே நடக்குற மாதிரி மாப்பிள்ளை பார்த்துட்டா.. மதிக் குட்டிக்கு சம்மதம் தானே..” என்றதும்..

 

‘ ரெண்டு நாள் முன்னே கேட்டுருந்தா… ஒருவேளை சரின்னு சொல்லிருப்பேனோ!!! இப்போ முடியலையே தாத்தா…’ என்று மனதில் நினைத்தவள், அமைதியாய் புன்னகைத்தாள்.

 

“சரிடா நீ போய் ஓய்வெடு..” எனவும் வெளியே வந்தவள், சற்று நேரம் நின்று சுற்றிலும் பார்த்து விட்டு, நேராக ராணிம்மா வீட்டை நோக்கி நடந்தாள்.

 

  காவலுக்கு நின்று கொண்டிருந்த கருப்பு உடை ஆட்களிடம் ஜெயவர்மனின் வரவை விசாரித்தவள், சற்று முன்பு தான் வந்ததை அறிந்து, மாடிக்குச் செல்லும் பக்க வழியாக சென்று படிகளில் ஏறினாள்.

 

கட்டிலின் மீது சிறு பெட்டியை வைத்து குனிந்து மூடிக் கொண்டிருந்தவன், ஒரு நொடி அப்படியே நின்றான். ஒருமுறை வாயிலைப் பார்த்தவன், தலையை உலுக்கிக் கொண்டு, சார்ஜரில் இருந்த அலை பேசியை எடுத்துக் கொண்டு திரும்ப, அவனின் உள்ளுணர்வு உணர்த்தியது போல், அறையின் வெளியே கதவருகே நின்ற வதனாவை பார்த்து, சிறு அதிர்ச்சி தோன்ற, அவளையே பார்த்தவாறு நின்றவன், பின் சுதாரித்து அலை பேசியை, தன் இடுப்பில் இருந்த அதற்கான பைக்குள் வைத்துவிட்டு வேலட்டை எடுத்து சரி பார்த்தான்.

 

தன்னை பார்த்தும், வா என்று சொல்லாததால் உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று குழம்பியவள், தொண்டையை செருமி, “உள்ளே வரலாமா.!!” எனவும், மனம் அதிர, தலையை மட்டும் அசைத்தவன், தன் வேலையில் கவனமானான்..

 

அருகில் வந்தவள், “உங்க கிட்ட…” என்று இரு விரலை அவன் முன் நீட்டியதும், புரியாமல் பார்த்தவன், சம்பங்கி மலர் போல வெளுத்து நீண்டு இருந்த வெண்பஞ்சு விரல்களை உற்றுப் பார்த்தான்.  

 

“ஒரு சாரி.. ரெண்டு தாங்க்ஸ்…” எனவும்… 

 

உணர்ச்சியற்ற பார்வையை அவள் மேல் செலுத்தி விட்டு, ஏதோ எடுப்பவன் போல் வார்ட்ரோபைத் திறந்தவனின் உதடுகள் அவளின் சிறு பிள்ளைச் செய்கையில், ரகசியப் புன்னகை புரிந்தன.

 

கையில் கிடைத்த இரு உடைகளை எடுத்தவன், திரும்பிய போது, திரும்பவும் உணர்ச்சி துடைத்த முகம். அதே கவனம் போல கொண்டு வந்து பெட்டிக்குள் அடுக்கியவன், ஒன்றும் சொல்லாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தைக் கண்டு, வாய்க்குள் ஏதோ முனங்கியவள்,

 

“என்ன எதுக்குன்னு ஏதாவது கேட்டாத்தான்.. என்னவாம்..” என்று சத்தமாக சொன்னவள்.. இடுப்பில் கை வைத்து,

 

“உங்களை மல்லுவுட் மாக்கான்.. ரிஷ்யஸ்ருங்கர்.. அப்படின்னு எல்லாம் திட்டுனேன்.. மனசுக்குள்ள.. அண்ணேட்ட… அதுக்கு ஒரு சாரி..” எனவும்,

 

 ‘அடி… திமிர்தன்னே…’ என்று எண்ணியவனின்.. கட்டுப்படுத்தப்பட்ட புன்னகையில் உதட்டோரம் துடிக்க… 

 

அவனின் அருகில் நெருங்கியவள்.. அவன் கண்களை ஆழ்ந்து நோக்கி… விளையாட்டை விடுத்து, “ எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் நீங்க பண்ண எல்லாத்துக்கும் ஒரு தாங்க்ஸ்… அப்புறம் அந்த அல்லி பூ.. அதுக்காக ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்…” என்று மென்மையாக கூறவும், 

 

சட்டென்று பார்வையை விலக்கியவன், “அது விக்கிக்காக.. அவன் ஸ்கூலுக்கு கொண்டு போகணும்னு கேட்டதுக்காக..!” என்றவன் திரும்பி பெட்டியை மூடி வைத்து, வெளியே செல்ல முற்பட, 

 

அவனின் பாதையில் நின்றவளாய், “ம்ம்ம்..” என்று இழுத்தவள், புன்னகையோடு, “அப்புறம் ஏன் ரெண்டா பிரிச்சு ரெண்டு கார்ல வச்சீங்க!!” என்றவள்.. அவனை இன்னமும் நெருங்கி, “ஊரே.. மதின்னு கூப்பிடும் போது நீங்க மட்டும் என்ன… ஸ்பெஷலா வதனானு சொல்லுறீங்க…” எனவும், 

 

விலகாமல் அவளைக் கூர்ந்து பார்த்தவன் விழிகளில் ஒரு புரியாத பாவனை… தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து கூலர்ஸை எடுத்து அணிந்தவன் நகர முற்பட, அவன் முன் கை நீட்டியவள், “இன்னும் ஒன்னு சொல்லனும்…” என,

 

  நிதானமாய் தன் இடது கையால் அவள் கரத்தை கீழே இறக்கியவன்,

 

“ஃப்ளைட்க்கு சமயமாச்சு…” என்றவாறு அவளைத் தாண்டி நடந்தான்.

 

*************************

 

அன்று…

 

 

 

         இளவரசியின் பேச்சில்.. சொன்ன வார்த்தையில் வெகுண்ட கொடை நாட்டின் இளவரசன் இராஜ ஜெய சிம்மவர்மன் எழுந்த வேகத்தில் அருகில் வைக்கப் பட்டிருந்த கருப்பஞ்சாறு இருந்த பொற்குவளை சாய்ந்து.. கீழே விழுந்து ஒலியெழுப்ப, மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த அனைவரும், சட்டென்று அமைதியாகி திரும்பிப் பார்த்தனர்..

 

அவனின் மறுபுறம் அமர்ந்திருந்த அமைச்சர், மன்னர் இருவரும் எழுந்து நின்று, “அமருங்கள் இளவரசே!! சினம் வேண்டாம்…” எனக் கூற,

 

அமைச்சர் ஆலவாய்ப் பெருமொழியார் பதற்றம் வெளிக்காட்டாத குரலில்,

“இளவரசியார், தம் மனக் கருத்தைக் கூறினார்கள் இளவலே!! தமக்கான திருமண ஏற்பாட்டை நாட்டின் பாதுகாப்பிற்கான உடன்படிக்கையோடு தொடர்பு படுத்த வேண்டாம் என்பது அவர்களின் எண்ணம். தாங்கள் தவறாக எண்ண வேண்டாம்!” என்று அமைதிப் படுத்த முயல,

 

    “கொடை நாட்டின் இளவரசனை மணப்பது, என்பது களப்பலியா… என்னவொரு கடுமையான வார்த்தை… இதை விட ஒரு ஆண் மகனை சீண்டும் சொல், வேறு இருக்க இயலாது..” என சீறும் மூச்சுடன் கூறி நகர முற்பட்டவனை கையின் மேற்புறம் பற்றி தடுத்து நிறுத்தினார், மருத மன்னர் பெருவளத்தான்.

 

“நாம் கலந்து பேசுவோம் இளவலே!! விருந்து மண்டபத்தில் விவாதிக்கும் பொருளல்ல இது… தாங்கள்.. நம் இரு நாடுகளின் நட்பை மதித்து சற்றே அமைதி கொண்டு அமருங்கள்…” எனவும்,

 

கோப மூச்சுக்களினால் உயர்ந்து எழுந்த தோள்களை, விம்மித் தணிந்த மார்பை அடக்க இயலாமல், நேர் கொண்ட பார்வையாய் அவரைப் பார்த்தவனின் இறுகிய அதரங்களில் இருந்து தெறித்து விழுந்தது… ஒற்றைச் சொல்.  

 

“மன்னிக்கவும்..” அவ்வார்த்தையில் இருந்த பணிவு.. குரலில் நிச்சயம் இல்லை. சொன்னவன்.. மடமடவென வெளியே நடந்து இருந்தான்.

 

அனைவரும் அவனின் வேகம் கண்டு அதிர்ந்து நோக்க, இளவரசனின் கோபம் பற்றிக் கேள்விப் பட்டிருந்த அங்கிருந்த அனைவரின் மனதிலும்… ஒரே கேள்வி..

 

‘பகை சூழும் வேளையில்.. கொடை நாட்டு இளவரசனின் கோபம்.. என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ???’

 

***********************

 

வசந்த மாலையின் மாளிகை…

 

    மருதபுரியின் மன்னர் பெருவளத்தானின் மாளிகைக்கு சற்றும் குறைவு இல்லாதது மா சேனைத் தலைவரான மருத நாயகத்தின் மாளிகை. வளத்திலும் வீரத்திலும் கூட அவரின் முன்னோர்கள் குறைந்தவர்கள் அல்லர்.

 

      மருத புரியிலிருந்து ஒரு காதம் தொலைவில் வைகை ஆற்றின் கரையை ஒட்டிய இருபது வேலி நிலமானது, போரில் வெல்லத் துணை புரிந்ததற்கு மருதநாட்டு அரசின் பரிசாகத் கிடைத்தது. பின்னாட்களில்…

“சமர் வென்றான்” எனும் பெயரில் ஒரு ஊராகவே அது ஆக்கப்பட்டு அதன் தலைவர்களாக…  

“குறு நில வேளாளர்கள்” என்று அழைக்கப் பட்டனர், அவரின் முன்னோர்கள்…

 

    நிலத்தில் பொன் விளைவிக்கும் வேளாளர்கள் என்றாலும் குறையாத 

வீரத்தின் காரணமாக சேனை உருவாக்கம் மற்றும் போர் பயிற்றுவித்தலிலும் மருத நாட்டிற்கு துணை புரிந்து வந்தனர்… அதன் பொருட்டு மருதபுரி கோட்டைக்கு வந்தவர் தாம் மருத நாயகத்தின் தந்தையார்.

 

 எனவே சிறு வயதிலேயே பெருவளத்தான் நன்மாறனிற்கும் மருதநாயகருக்கும் ஏற்பட்ட நட்பானது மிகவும் இறுக்கமானது.. மருதபுரியின் பல போர்களில் மன்னருக்கு தோள் கொடுத்து, அவரின் பொருட்டு உடலெங்கும் விழுப்புண்களைப் பெற்றவர் அவர்.. வெற்றி வாகை சூட இருவரின் வீரமும் மதி நுட்பமும் இணைந்து செயல்பட்டதே காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள்.

 

இப்போது அவர்களின் நட்பானது உறவாக மலரப் போவதான சூழல் நிலவுகின்ற இவ்வேளையில் அரசரின் அன்பான அழைப்பை ஏற்று மருதநாயகமும் வெற்றிவேந்தனும் தயாராகிக் கொண்டிருந்தனர்.. விருந்தின் முடிவில் இளவரசியாருடன் கலந்து உரையாட வேண்டும் என்ற குறிப்புணர்த்துதலும் அரசரின் வழியே வந்திருந்த காரணத்தால் வெற்றி வேந்தன் மிகுந்த மகிழ்வுடன், அலங்கரித்துக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்,

 

 வீதியில் காளை மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி கிணிங் கிணிங் என்று ஒலிக்க அவர்களின் மாளிகையின் முன் வந்து நின்றது அலங்கார வண்டி… அதில் இருந்து இறங்கிய அக்கையாரையும் அவரின் கணவரையும் கண்டு வியந்து வரவேற்க விரைந்தார் மருதநாயகம்.

 

      மருதபுரியில் இருந்து மேற்கே இரு காதத் தொலைவில் உள்ள சோழவென்றான் எனும் வளம் படைத்த ஊரில் உலகளந்தான் எனும் பெரு நிலக்கிழரை மணந்து பெண் மகவு பெற்று பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார் மருத நாயகத்தின் அக்கையார் அங்கயற் கண்ணியார்.

 

மிகவும் பாசத்துக்கு உரிய அக்கையாரின் வரவில் அரண்மனை விருந்து கூட பின்னுக்கு சென்றுவிட்டது மருத நாயகத்திற்கு…

“என்னே பெருமகிழ்வு ஊட்டும் வரவு… அக்கையாரின் வருகை நாளை கொடியேற்றத்தின் முன்பு இருக்கும் என்று எண்ணியிருந்தேன்.. பிறந்த நாட்டையும் வீட்டையும் பெருமை படுத்த முன்தினமே வந்தது மிக்க மகிழ்ச்சி..” என்றவாறு அன்புடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

 

“அனைவரும் நலம் தானே தம்பி!!” என்றவர்.. “எங்கே என் மருமகள்..?” எனவும்,

 

   தந்தையாரின் வரவேற்பு ஒலியிலேயே வந்தவர்களை உணர்ந்தவளாய் கைகளில் பழச்சாறு குவளைகள் எடுத்து வந்த வசந்த மாலை, “வாருங்கள் மாமா. வாருங்கள் அத்தை..” என்று வரவேற்பை  

உரைத்தவாறே வந்து அவர்களின் கையில் அதனைக் கொடுத்தவள், அத்தையாரின் அருகில் அமர்ந்தாள். உடல் நலம், தொழில் நலம் போன்ற உபசரிப்பு பேச்சு வார்த்தைகள் முந்ததும் மகிழ்வுடன் வந்த நோக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தார் அங்கயற் கண்ணி.

 

“தம்பி, வளரும் பிறையின் போதே நல்ல விஷயங்களை பேசவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. எனவே இன்றே வந்து விட்டோம்” என்றவரின் முன்னேற்பாடுகளைக் கண்டு வசந்த மாலை வெற்றி வேந்தன் ஒருவரையொருவர் பார்த்துக்க கொண்டனர்.

 

“ தம்பி… எனது மகள் பூப்படைந்து இரு ஆண்டுகள் கழித்து விட்டன. ஏறு போல் மாமன் மகனிருக்க ஏன் அயலானுக்கு மணம் செய்து கொடுக்க வேண்டும் என்று உன் மைத்துனர் எண்ணுகிறார்… ஒரு வீட்டில் பருவ வயதில் பெண் இருக்கையில் திருமணம் அவளுக்கு முதலில் பேசுவதே முறை, என்பதாலும் இவரின் தமையனாரின் மகனிற்கு நமது வசந்த மாலையை மணம் செய்விக்க அவர்களின் வீட்டில் விரும்புவதாலும் அவற்றைப் பற்றி கலந்து பேச நாங்கள் இப்போது வந்துள்ளோம்..”

எனவும், 

 

மின்னாமல் முழங்கால் அடுத்தடுத்தது வந்து விழுந்த இடிகளைக் கண்டும் கேட்டும் வசந்த மாலையும் வெற்றி வேந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரின் அதிர்ச்சியும் சமமாகவே இருந்தது…

 

*****************

 

விருந்து மண்டபத்தை விட்டுச் சினத்துடன் வெளியேறிய சிம்மவர்மன்.. வேக நடையில் வந்த வழி திரும்பி… அரண்மனையின் வாயிலை நோக்கி செல்லும் போது ஒரு வாயிலில் இருந்து சட்டென்று வெளிப்பட்ட உருவத்தின் மீது கிட்டத்தட்ட மோதுப் பட போய் சமாளித்து… சற்று நகர்ந்து இரு முழ தூரம் தள்ளிச் சென்றவன், மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்டு, ‘என்ன?..’ என்பது போல நிமிர்ந்து பார்த்தான்.

 

“சில விளக்கங்கள் அளிக்கவே தேடி வந்தேன் இளவலே!! கோபம் விடுத்து சற்று உரையாடலாமா!?”என நட்பான முறுவலுடன் கேட்கவும்…

 

 கொதித்துக் கொண்டிருந்தவனின் சீற்றம் அடங்கினாலும் சினம் மட்டுப்படவில்லை என்பதை அவனின் முகத்தில் ஜொலித்த கனலில் உணர்ந்தவளாய் இளவரசி சந்திர வதனாம்பிகை,

“எனது வார்த்தை உங்களை வெகுண்டு எழ வைத்து விட்டது.. அது… உங்களின் ஆண்மைக்கு இழுக்கு என்று எண்ணுகிறீர்கள்.. அதே போல் இவ்வாறான திருமண உடன்படிக்கை என்னைப் பொறுத்த வரை பெண்மைக்கு செய்யும் அவமரியாதை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுகள் உடைய ஒருவள் இதை இவ்வாறாக உணர்வாள் என்று எண்ணிப் பாருங்கள் இளவரசே… எனினும்… எனது வார்த்தை உங்களை சினம் கொள்ள வைத்ததிற்கு வருந்துகிறேன்.” என்றதும்..

 

 சட்டென்று திரும்பிப் பார்த்தவன், அவளின் அமைதியிலும் கம்பீரத்திலும் கவரப் பெற்றவனாய் அவளின் முகம் பார்த்து நின்றவன், தன் சிம்மக் குரலில்,

“நாட்டை எதிரிகள் வளைக்க முயலுகிறார்கள் எனும் போது, இம்மாதிரி உடன்படிக்கை, திருமணம் தனியொரு நிகழ்வாக இல்லாமல் நாட்டின் நலன் தொடர்புடையதாக மாறிவிடுகிறது.. அப்போது உணர்வுகள் மறந்து போகின்றன இளவரசி.. அந்நிலையிலும் மனதிற்கு… கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களின் எண்ணத்தை மதிக்கிறேன்.. புரிந்து கொள்ள முயலுகிறேன் தேவி..” என சற்றுத் தன்மையாகவே உரைக்கவும்,

 

 இளவரசி சந்திர வதனாம்பிகை சிறு முறுவலுடன்,

“ மருத நாடு… கொடை நாட்டின் நட்பை என்றும் விரும்புகிறது இளவலே!” என்றாள்.

 

தெய்வீக புன்னகையும், மலரின் மென்மையாய் முகிழ்த்த வார்த்தைகளும் சிம்மவர்மனின் கொந்தளித்த மனதை நிலைபடுத்த.. 

 

சந்திரனின் குளுமையாய் தன்னை ஆற்றுப்படுத்தும் மதி வதனத்தில் அவனையும் அறியாமல் அவன் விழிகள் மையமிட.. கடின இதழ்களோ அவன் அனுமதியின்றியே அசைந்தன.. 

 

“கொடை நாடும் உங்களின் நட்பை மதிக்கிறது இளவரசி..” என்றவனின் முகத்திலும் சினம் தணிந்து சிறு முறுவல். 

 

சில கண்ணிமைப் பொழுதுகள் அமைதியில் கழிய.. அதை கலைத்தவனாய்,

“விடை பெற்றுக் கொள்கிறேன் தேவி..” எனவும்..

 

மென்மையாக வந்தது இளவரசியின் குரல்,

“ சினம் தணிந்து விட்டதெனில், விழாக் காலம் முழுவதும் இருந்து சிறப்பிக்கலாமே… இளவலே!” என சொல்லிக் கொண்டு இருக்கும் போது.. தனது அமைச்சருடன் வேகமாக அங்கு வந்தார் மன்னர் பெருவளத்தான் நன்மாறன்.

 

 பின்னொடு வீரசேனனும் அவசரமாக வருவதைக் கண்ட சிம்மவர்மன் சிறு முறுவலை அவனின் புறம் செலுத்தி நண்பனின் பதற்றத்தைத் தணித்தவனாக,

“நாளையே பயணப்பட வேண்டும் தேவி. சில முக்கியமான அலுவல்கள் உள்ளன…” எனவும்,

 

வீர சேனனை ஒரு பார்வை பார்த்தவள், “எனில் தங்களின் நண்பரும் இளவல் சேனை நாயகருமான வீர சேனரை சில காலம் மருத நாட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்.” எனவும்.. வியப்புடன் அனைவரும் இளவரசியைப் பார்த்தனர்.

 

“வேழனை தாங்கள் முதலிலேயே அறிவீர்களா..!” என வியந்த குரலில் சிம்மவர்மன் வினவ,

 

 

 

“ அவர் தம்மை நாடோடி என்றே அறிமுகப் படுத்திக் கொண்டார்.. ஆயினும் அவரின் வீரமும், வில் மற்றும் வேல் திறமும்.. கவனிக்க வைத்தன.. அவரின் தோரணை ஏற்படுத்திய வியப்பை, ஐயத்தை, அவரின் மார்பின் சிம்ம பச்சையும், நேற்று கோவிலில் உங்களைக் கண்டதும் அவரின் உடல் மொழியும் தெளிவு படுத்தி விட்டது..” எனவும், வீரசேனனும் சிம்மவர்மனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

 

“காதலையும் நட்பையும் அது வயப்பட்டவர்களின் நயன மொழியும்.. உடல் மொழியும் அறிவித்து விடும்.. பல போர் களங்களில் இணைந்து வெற்றி வாகை சூடிய உங்கள் இருவரின் நட்பையும் வீரத்தையும் தரணி அறியுமே..” என்றவளின் முகத்தில் அழகிய புன்னகை..

 

அவளின் வார்த்தையாடல்களில் சிம்மவர்மனின் இதழ்களிலும் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

 

“மருதநாடு வீரர்களுக்கு வாள், வேல் பயிற்சி அளவிற்கு.. வில் பயிற்சியும் கொடுக்க… அவரின் வழிகாட்டல் இருந்தால் நலமாக இருக்கும் என்பது என் எண்ணம். அதற்கு.. அவர் மருதத்தில் தங்க.. உங்களின் அனுமதி வேண்டும்…”

 

“எனது நண்பன்.. இளவல் சேனையின் நாயகன் எனினும் அங்கு கட்டுப்பட்டவன் அல்லன். மேலும்… இது பற்றி அவன் தான் முடிவு எடுக்க வேண்டும்” எனவும்.. 

 

சிம்மனை ஒரு முறை பார்த்த வீரசேனன், இளவரசியிடம் திரும்பி,“எனக்கு.. யோசிக்க சில நாழிகைப் பொழுதுகள் தேவைப் படுகிறன தேவியாரே.” என பதிலளித்தான். 

 

தன் நண்பனின் மனதில் ஓடுவதை அறிந்தவனாய் புன்னகைத்து.. மன்னரை நோக்கித் திரும்பி, “ விடைபெறுகிறேன் வேந்தரே..” என்று இளவரசன் இராஜ ஜெய சிம்மவர்மன் கரம் குவிக்கவும்…

 

கோபத்திற்கும் வேகத்திற்கு பெயர் பெற்றவனான இளவரசன் முகத்தில் முறுவலைக் கண்டு, இருநாட்டுப் பூசலை சில கணங்களில் முடிவிற்கு கொணர்ந்த தங்களின் இளவரசியாரின் செயல் திறனில் மகிழ்ந்த அமைச்சர் பெருமான் நிம்மதி பெருமூச்சு விட, விடை பெற்றுச் செல்லும் அவனையே பார்த்தவாறு இருந்தனர் நால்வரும்…

 

அரண்மனைக்கு வந்திருந்த விருந்தினர்களை கவனிக்க அரசர் முன் செல்ல.. வீர சேனனின் முகத்தில் தெரிந்த ஆழ்ந்த யோசனையைக் கண்டவள், சற்று நிதானித்து அவனின் முகம் பார்க்க… அரசர் அங்கிருந்து நகர்ந்து சென்றதை உறுதி படுத்திக் கொண்டவனாய்,

 

 

“நாக ஜெயந்தன் இப்போது மருதபுரிக்குள் இருக்கிறான் தேவி..” எனவும்..

 

  இளவரசி சந்திர வதனாம்பிகையின் முகம் சிந்தனை வயப்பட, சில இமைப் பொழுதுகள் கடக்கும் முன் மலர்ந்த முறுவலுடன் சொன்னாள்…

 

“நல்லது….”

 

****************************

 

அனுமதி 11

****************

 

 

இன்று…

 

‘ கடவுளின் தேசம்’ என்று அதன் இயற்கை அழகை வியந்து ரசிக்கப் பட்டவர்களால் செல்லமாக அழைக்கப்படும் கேரளாவின், தலை நகரான திருவனந்தபுரத்தில் விமானத்தில் வந்து இறங்கியவன்… தனது வழக்கமான வேக நடையுடன் வெளி வந்து தனித்துவமான பாதுகாப்புக்களும் அதிவேகமும் கொண்டதாக, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.

 

அதை வர்க்கலாவில் இருந்து ஓட்டி வந்து, காத்து நின்ற தனது நம்பிக்கைக்கு உரிய மேலாளர் ஆன வர்கீஸ் இடம் தனது கைப் பெட்டியை கொடுத்தவன், ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான். எப்பொழுதும் போல அவனுக்கான வாகனத்தை அவனே எடுத்தவன்… மாநகரின் சாலை நெரிசல்களை தன் செலுத்தும் திறனால் சில நிமிடங்களில் கடந்து , மாநகரத்தின் எல்லையைத் தாண்டியதும் வாகனத்தின் வேகம் காட்டும் முள் நூற்றிப் பத்தைத் தொடுவதைக் கண்ட வர்கீஸ் அவசரமாக இருக்கைப் பட்டியை(சீட் பெல்ட்) அணிந்து கொண்டார்..

 

(அவர்களின் உரையாடல் மலையாளத்தில்.. நமக்கு புரிய வேண்டி தமிழில்.. சரிதன்னே!!!)

 

வாகனம் வேகமாக இருந்தாலும் பேச்சு மிக நிதானமாய் வந்தது..

 

“நேத்து RJV ரிசோர்ட்ஸ்ல என்ன தகராறு? ”

 

“அது சர், குடிச்சுட்டு ரெண்டு க்ரூப் ஆட்கள் சண்டை போட்டுகிட்டாங்க.”

 

“ம்ம்ம்ம்… அப்புறம் ஏன் போலீஸ் ஸ்டேஷன் விட்டு வெளியே போகும்போது ரெண்டு க்ரூப்பும் ஒரே வண்டியில ஏறி போனாங்க?” எனவும் அதிர்ந்து திரும்பி பார்த்தார், இது அவருக்கு தெரியாத தகவல் என்பதால்..

 

“பவுன்செர்ஸ் வச்சு செக் பண்ணி தானே எல்லோரும் உள்ளே போறாங்க.. அப்புறம் எப்படி அவங்க கிட்ட ஆயுதம் வந்தது?” எனவும் திரு திருவென விழித்தார்.

 

பின்னே… ரிசார்ட் தலைமை மானேஜர் ஆன அவர் எவ்வளவோ கவனமாக இருந்தும்.. இவ்வாறு நடந்ததையும்.. போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்த, அவருக்கே தெரியாத இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி அவனின் காதில் சென்று அடைந்தது? என்று விழித்துக் கொண்டிருந்தவர், அவனன்றி ஒரு அணுவும் அசையாது போல்.. இவனுக்கு தெரியாமல் எதுவும் இங்கு , அவனிடத்தில் நடக்காது என்று எண்ணித் தேற்றிக் கொண்டார்.

 

“ஒர்கேர்ஸ் பயோ டேட்டா எல்லாம் உடனே செக் பண்ணனும்… எந்த ஊர்ல இருந்து வந்தாங்க.? இதுக்கு முன்னாடி.. எங்க ஒர்க் பண்ணாங்க? எல்லாம் செக் பண்ணுங்க.

 

யாரோடது எல்லாம் சந்தேகத்துக்கு இடமா இருக்கோ, அவங்களோட இடத்துக்கு எல்லாம் வேற நம்பிக்கையான ஆள் உடனே தேர்ந்தெடுத்து போடுங்க..” என, வேகமான வாகனத்தைப் போலவே.. ஆணைகளும் தீர்க்கமாக வந்து விழுந்தன.

 

“சரி சார்..” என்றவர் சற்றுத் தயங்கி எச்சில் கூட்டி விழுங்கி, “இராணியம்மா உங்களை சாப்பிட வீட்டுக்கு வர சொன்னாங்க…” என்று சொல்லி விட்டு அவனின் முகத்தைப் பயத்துடன் பார்க்க… அவனிடம் இருந்து பதில் இல்லை. ‘அவர் சொன்னாரா.. அவன் அதைக் கேட்டானா..’ என்று அவருக்கு குழப்பம் தோன்றுமளவு.. எந்த மாற்றமும் தெரியாத தன் முதலாளியின் முகம் கண்டு புரிந்தவராய்.. அவர் வாயை இறுக மூடிக கொண்டார்.

 

 

ஐம்பத்து மூன்று கிலோ மீட்டரை நாற்பது நிமிடங்களில் கடந்தவன் வர்க்கலாவில் நுழைந்து கடற்கரையை ஒட்டிய, ‘RJV RESORTS’ என பொன்னிற எழுத்துக்கள் ஒளிர்ந்து மிளிர்ந்த, தனக்கு சொந்தமான நான்கு நட்சத்திரத் தகுதி பெற்றிருந்த உயர் தர பயணியர் விடுதியை அடைந்தான்.

 

வர்க்கலா…

 

‘கேரளாவின் கோவா’ என சொல்லப்படும் அழகிய கடற்கரை நகரம். அலையும் மலையும் ஒரே இடத்தில் எனக் கவிதை பாட வைக்க கூடிய வித்தியாசமான புவியியல் அமைப்பு கொண்ட, மிக அழகிய கடற்கரை. இந்த மாதிரியாக மலையும் கடலும் அடுத்தடுத்து இருக்கும் அமைப்பிற்கு ‘வர்க்கலா’ என்றே பெயரிட்டு விட்டார்களாம் புவியியலாளர்கள்.

“க்ளிஃப் பீச்” என்று அங்கே இருக்கும் மக்களால் சொல்லப் படுகிறது.

 

சுற்றுலா தான் இங்கே முக்கிய தொழில்… அதை வைத்து கேரள பண்பாட்டை பிரதிபலிக்கும் பொருள்களின் விற்பனை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நடனங்கள் நிகழ்த்தப்படும் கலை அரங்குகள் என வர்க்கலாவில் எல்லா தொழில்களும் சுற்றுலா பயணியரை நம்பியே..

 

ஜெயவர்மன் தன் தந்தையின் இறப்பிற்கு பின்.. தன் தாயாரின் பெயரில் இடம் வாங்கி இந்த விடுதியை கட்டினான். அதன் உள்ளேயே பெரிய சுற்றுச் சுவரும் தோட்டமும் சூழ இருந்த ஒரு மிகப் பெரிய மாளிகையையும் கட்டி.. ஒரு மகாராணிக்கு தேவையான அனைத்து வசதிகளும் பாதுகாப்பும் செய்து கொடுத்து.. தன் தாயாரைக் குடி வைத்து இருந்தாலும், அவன் தங்குவது என்னவோ ரிசார்ட்ஸ் அருகில்.. அவனுக்கென தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்த உயர் தர சூய்ட் இல் தான்.

 

நேராக அங்கே சென்று காரை நிறுத்தியவன், தொழில் முறைக்காக பயன்படுத்தப் படும் வரவேற்பு அறை கடந்து, அலுவலக அறைக்குள் நுழைந்து அமர்ந்தவன்.. கேரளாவில் அவன் நடத்திக் கொண்டிருக்கும் தொழில்கள் தொடர்புடைய கணக்குகளை பார்க்கத் தொடங்கினான்.

 

இரண்டு மணி நேரமாக கணிப் பொறியில் வேலை செய்து கொண்டே இருந்தவன், கண்களுக்கு ஓய்வு கொடுக்க எழுந்து, அந்த அறையை அடுத்து இருந்த சிட்டவுட்டை அடைந்து அங்கு பாதுகாப்புக்காக பொருத்தப் பட்டிருந்த தடித்த கண்ணாடி சாளரத்தின் ஒளி தடுப்புத் திரையை நீக்க,

 

வெள்ளை வானின் பின்னணியில் நீல பச்சையாய் விரிந்து நின்றது அரபிக் கடல். பார்த்தவனின் கண்களில் குளுமை பரவ, சற்று குனிந்த பார்வையில் சாளரத்தில் இருந்து சில அடிகள் தூரத்தில் இருந்த செயற்கைச் சிறு குளமும், அதில் மலர்ந்து நின்ற அல்லி மலர்களும் பட, உதடுகளில் ரசனைப் புன்முறுவல் மலர்ந்தது.

 

‘ஒன்னு சொல்லணும்னு சொன்னாளே… சில நொடிகள் நின்று இருந்தால் என்ன சொல்லி இருப்பாளோ!!! தைரியம் தான்… மிடுக்கி… அழகி…’ என மனம் துள்ள, ‘அவளை பார்த்து முழுதாக ஒரு நாள் தான் ஆகியிருக்கிறது… ஏன் பல நாள் பழகியதாய் தோன்றுகிறது… அதே நேரத்தில் அவளை நெருங்கவும் விடாமல் ஏதோ தடுக்கிறதே.. அவள் நெருங்கினால் மனம், உடல் இரண்டும் துடிக்கிறன.. பெண்களைப் பார்த்தாலே தோன்றும் விலகல் அவளிடம் மட்டும் இல்லையே… இன்னமும் நெருங்க மாட்டாளா என்று ஏங்குகிறதே.. இது என்ன உணர்வு..

 

ப்பா… என்னமா முறைக்குறா… முறைக்கும் அந்த கண்களை…’ என்று எண்ணங்கள் போகும் திசை கண்டு, இதயம் திடுக்கிட, இடது கையால் நெஞ்சை அழுத்திக் கொண்டவன், கண்களை இறுக மூடிக் கொண்டான்.

 

முறைக்கும் விழிகளும், சில மணி நேரத்திற்கு முன்பு புன்னகையுடன் நெருங்கிய போது, விரிந்து மலர்ந்த சிவந்த மெல்லிய இதழ்களும், அதனுள் மிளிர்ந்த முத்துப் பற்களும்… அவனின் மூடிய கண்களுக்குள் மின்னி மின்னி மறைய, பெருமூச்சு விட்டவன், கண்களைத் திறந்து… தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களை நிலைப்படுத்தி… வேகமாக அறைக்குள் வந்தான். முனைந்து தன் கவனத்தை வேலைக்குள் திருப்பியவன்.. தன் உதவியாளனை அழைத்து ஆர்ஜேவீ

கன்ஸ்ரட்ரக்ஷனின் திருவனந்தபுரம் புதிய ப்ரொஜெக்ட் ஃபைலை எடுத்து வரச் சொன்னான்..

 

கோப்புக்களில் அவனின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு இருந்த அவனின் மேலாளர் வர்கீஸ், மணி மூன்றைத் தாண்டுவதை பார்த்து, “சர், இன்னும் நீங்க சாப்பிடலை….” சற்று தயங்கி, “அம்மா நீங்க வந்ததிலிருந்து கூப்பிட்டுட்டே இருக்காங்க.. .உங்க போன்… நீங்க எடுக்கலையாம்…”

 

“இங்கே ரெஸ்டாரண்ட்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வர சொல்லுங்க.. வேலை நிறைய இருக்கு..” என்றான் கோப்புக்களில் கவனம் பதித்தவனாய்.

 

“நீங்க வருவீங்கன்னு அவுங்களும் சாப்பிடாம இருக்கறாங்க…”

 

என்றதும் சிறு வேக மூச்சுடன், “ ஒர்க்கர்ஸ் பயோ டேட்டா செக் பண்ண சொன்னேனே.. முடிச்சாச்சா… சந்தேகப் படுறவுங்களை இப்போவே வேலை விட்டு அனுப்பிச்சுருங்க.. ஏதும் தகராறு பண்ணா… நம்ம செக்யூரிட்டி ஸிஸ்டம்ஸ் டீம் அண்ட் வொர்க்கர்ஸ் லீடர் உதவி கேட்டுக்கோங்க..” என்றவன், மேஜையில் இருந்த அலை பேசியை எடுத்துக் கொண்டு தன் அன்னை இருக்கும் மாளிகை நோக்கிச் சென்றான்.

 

தனது தனிப்பட்ட தங்குமிடத்தில் இருந்து.. நடக்கும் தொலைவில் இருந்த தாயார் இருக்கும் மாளிகை நோக்கிச் சென்றவன், வரவேற்பு அறையில், ஃபோகஸ் மின் விளக்கு பொருத்தப் பட்டு ஏழடி உயரத்தில் கம்பீரமாய் இருந்த மஹாராஜா இராஜசேகர வர்மன் மகத்திருநாள் படத்தைக் கண்டு வழக்கம் போல் கசப்பும் எரிச்சலும் பெருக.. விடு விடுவென்று நகர்ந்து உள்ளே சென்றான். வரவேற்பறை தாண்டி இருந்த பெரிய கூடத்தில், சோஃபாவில் அமர்ந்திருந்த அவனின் தாயார் காஞ்சனை தேவி மகனைக் கண்டதும் முகம் மலர எழுந்து வந்தார். பார்வைக்கு ஜெயவர்மனின் அக்கா போல மிக இளமையாக தெரிந்தவரின் முகம், சிறிய கருப்பு பொட்டினால் சந்தன நிறம் இன்னமும் கூடித் தெரிய, வெளிறிய நிறத்தில் அணிந்திருந்த மெல்லிய பட்டு ஆடை அவரின் அழகை குறைத்துக் காட்ட முயன்று தோற்றுப் போனது.

 

அவரை உற்று நோக்கியவன், “ஏன் இவ்ளோ நேரம் சாப்பிடாம இருக்கீங்க? எனக்கு வேலை அதிகம். அங்கேயே சாப்பிட்டு இருப்பேன். இங்கே அங்கேன்னு அலையறதுல அரை மணி நேரம் வீண். ”

 

“நீ இங்கே வந்து மூணு மாசம் ஆச்சு மகனே.. எவ்ளோ நாள் தான் இப்படி இருப்ப… என்ன செய்தா நீ இந்த அம்மாவை மன்னிப்ப..?” என,

 

நிதானமாக ஏறிட்டுப் பார்த்தவன், “மன்னிப்பா..! அதெல்லாம் இப்போ ஏன் பேசறீங்க… அதெல்லாம் முப்பது வருஷம் முன்னே யோசிச்சுருக்க வேண்டியது… ஏன் இரண்டு வருடத்திற்கு முன்பு கூட அது பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையே.. ” என்றவன், முகம் இறுகியது.

 

“ எனக்குனு ஒரு வாழ்வமைச்சு துபைல இருந்தேன். என் போக்கில இருக்க விடாம இங்க வர வச்சு… என்னை வேட்டை நாயா… வெறிப் புலியா ஓட விடுறீங்க.. இதெல்லாம் பற்றிப் பேசக் கூடாதுன்னு தானே நான் இங்கே வரது இல்ல… ஏன் டார்ச்சர் பண்றீங்க?” என அடக்கிய குரலில் அழுத்தமாய் உரைக்கவும், அவரின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது..

 

அதைக் கண்டவனின் கோபம் கூடியதேயன்றி குறையவில்லை. “ப்ப்ச்..” என்று மொழிந்தவன்.. நேராக சாப்பிடும் அறைக்கு சென்றான். அங்கே ஓரத்தில் நின்று கொண்டிருந்த காஞ்சனையின் தங்கை பார்வதி பயந்த விழிகளோடு அருகில் வந்து தட்டை எடுத்து வைக்க முற்பட.. தடுத்தவன் தானே எடுத்து வைத்துக் கொண்டான். பின்னேயே வந்த காஞ்சனை, சாதம் வைத்து அவனுக்கு பிடித்த மீன் கறியை பரிமாற, அமைதியாக சாப்பிட்டான்.

 

சாப்பிட்டு முடிக்க காத்து இருந்த காஞ்சனை, “ ஒரு நல்ல பொண்ணு ஜாதகம் வந்திருக்கு..” என்றதும் நிமிர்ந்து வெறித்த அவன் பார்வை கண்டு, பரிதாபமாய் பார்த்தார் காஞ்சனை.

 

“நம்ம ஹிஸ்டரி, சொத்து அளவு… எல்லாம் சொல்லியாச்சா…” எனவும்,

 

எச்சில் விழுங்கியவாறு, தலை கவிழ்ந்து, “அது தெரிஞ்சுருக்கும் ஆனா.. உன் படிப்பு.. தொழில்.. உன்னை பத்தி கேள்விப்பட்டு, விரும்பி.. அவங்க தான் வராங்க..”

 

“அப்போ அந்த பொண்ணுக்கு ஆயுசுக் கெட்டியா… தைரியமான பொண்ணா.. உயிர் மேல ஆசை இல்லையான்னு.. எல்லாம்.. நல்லா விசாரிச்சுடீங்களா… திடீர்னு என்னை போட்டு தள்ளிட்டா…” என கூறிக் கொண்டே செல்லவும்,

 

 

அதிர்ந்து அவன் வாயைப் பொத்தி கலங்கிய குரலில், “ஏன் மோனே இப்படி பேசுற…” என்றார்,

 

இடக் கரத்தால் விலக்கியவன்,

“பின்னே…. உங்க காதல் கணவரோட முதல் மனைவி வாரிசு… வாரிசோட வாரிசு இவங்க கூட நாம போராடுறது பத்தாதுன்னு…” இடைமறித்து,

 

“இப்படி எவ்ளோ நாள்… அதுக்கு பயந்து..” என்றவரை இடைமறித்தவன்,

 

“பயமா… எனக்கா…” ஏதோ சொல்ல வந்து பின் அடக்கி, “எப்போவோ போகப் போற ஒரு உயிர்… என்னால ஏன் அவசரமா போகணும் னு… ஒரு நல்ல எண்ணம்… எனக்கு கல்யாணத்திலே விருப்பமும் இல்ல… இந்த வேலையெல்லாம் வேணாம். நிறுத்துங்க.” என்றவனின் அலைபேசி அதிர்ந்தது.

 

‘Unknown no calling…’ என்று வந்ததை யோசனையாகப் பார்த்தவன்.. வெறித்தவாறு இருக்க… அழைப்பு துண்டிக்கப்பட்டு, வாட்ஸ் அப்பில் செய்தி வந்ததிற்கு அறிகுறியாக ஒருமுறை அதிர்ந்தது. எடுத்து திறந்த போது அதில் படம்..

 

மதிவதனா.. அல்லி மலர்க் கொத்தைக் கையில் தாங்கி நின்று கொண்டிருந்தாள்.

 

அதை பார்த்ததும் ஜெயவர்மனின் இதயம் சட்டென்று அழுத்தப் பட்டது போல் அதிர்வாய் உணர்ந்தான்.

 

இப்போது திரும்பவும் ‘அந்நோன் நம்பர் காலிங்…’ என்று வரவும்… ஆழ மூச்செடுத்து நிதானப் படுத்திக் கொண்டு எடுத்தான்… முகம் கோபத்தில் தகித்தது…

 

எதிர்பார்த்தது போலவே, மிக அழுத்தமாய் ஒலித்த அந்த குரல், கேட்டாலே அவனுக்குக் கொலை வெறியூட்டும் குரல்..

 

“என்ன ஜே.. வீ…. மதுரைக்கு மால் கட்ட போயிருக்கன்னு பார்த்தா.. அல்லி பூ பறிச்சு கொடுக்குற.. அரசியல்வாதிய பகைக்குற… என்ன இதெல்லாம்…”

 

“……………….”

 

“உன்னை ஒன் சைடா காதலிச்ச தன்வீர்… உங்கம்மா உனக்கு நிச்சயிக்க முயற்சி பண்ணுன அனுபமா… என்ன ஆனாங்கனு பார்த்ததுக்கு அப்புறமுமா…. நீ பயமில்லாம இருக்குற?” எனவும், ஜெயவர்மனின் புருவம் நெறி பட்டது…

 

“ஓ….. நீ பயந்தாலும் வெளிய காட்ட மாட்டியே… நாலு தொழில் தொடங்கி.. நடத்திட்டா எங்களை விட பெரிய ஆளா… நீ…. விலகி ஓடனும்… நான் சொன்ன மாதிரி கையெழுத்து போட்டுட்டு ஓடனும்.. இல்ல.. கேரளாவை விட்டு… இந்தியாவை விட்டு… இல்லல்ல உலகத்த விட்டே அனுப்பிச்சிருவேன்…” எனவும்,

 

கேலி புன்னகை ஜெயவர்மனின் முகத்தில்… மெல்லிய எகத்தாளக் குரல் சீண்டலான சிரிப்புடன் சொன்னது, “சிரிப்பியே… அது அப்படியே உறைஞ்சு போய் நிக்கும்…. நிக்க வைப்பேன்.” அழைப்பு பட்டென்று துண்டிக்கப்பட… யோசித்தவன், உடனே சிவேஷிற்கு அழைத்தான்…

 

“என்ன ஜெய்…?”

 

“வீட்ல தானே இருக்க?”

 

“மதி காலேஜ் வாசல்ல…”

 

“ இன்னைக்கு எங்கேயும் போக வேணாம்னு சொன்னேனே…”

 

“இல்லடா… மதி ப்ராஜக்ட் அப்ரூவல் லட்டரை இன்னிக்கு காலேஜ்ல கொடுக்கனும், ஹாஃப்டே அட்டெண்டன்ஸ் போடப்போறேன்னு சொன்னா… நா விட்டுட்டு நம்ம சைட் போனேன்.. இப்ப கூப்பிட வந்துருக்கேன்.” என்றவன் திரும்பிப் பார்க்க,

 

கல்லூரி விட்டு வெளிவந்த மதிவதனா, சிவேஷைப் பார்த்து விட்டு சாலை ஓரமாகவே நடந்து வந்து கொண்டிருக்க, அவளில் இருந்து இரு நூறடி தொலைவில் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது ஒரு லாரி…

 

 

***********************

 

 

அன்று…

 

 

 

பகலெல்லாம் வெண்ணிற தேகத்துடன் வில் ஏந்தி, போர்.. போர்.. என தன் கதிர்ச் சரங்களை பூமியை நோக்கி அனுப்பி சுற்றித் திரிந்த வெய்யோன், மாலை நெருங்கியதும், போரினால் விழுப்புண் பெற்று சிவந்து செங்கதிரோனாக மாறி, வெற்றிப் பெருமிதத்தோடு,

ஓய்வெடுக்க… தன் படைக் குடியிருப்பு திரும்புவது போல மேல்திசையில் இறங்கினான்..

 

மருதபுரி கோட்டையின் தெற்கு வாசலின் கோட்டைக் காவல் தேவி கோவில் அருகில் இருந்த அழகிய நீர் சுனைக் குளத்தின் கரையில் ஆறு கால் மண்டபத்தில்

அமர்ந்து இருந்தான் வீரசேனன். சுனையைச் சுற்றி அடர்ந்து இருந்த மரங்களில் கூடு கட்டி, புகலடைந்து இருந்த பல வகைப் புள்ளினங்கள்.. தம் வீடு திரும்பி இருந்த காரணத்தால் எழுப்பிய உற்சாகக் கூச்சல்கள் கூட அவனை திசை திருப்ப இயலவில்லை.

 

அவனின் கருப்பழகன்(புரவி) கூட, தன் தலைவனின் யோசனையை கலைக்க விரும்பாதவனாய் சத்தமின்றி அங்கே குளக்கரையில் இருந்த புற்களை மேய்ந்து கொண்டு இனிய சுனை நீரை பருகி, பின் ஒரு மரத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

இளவரசியின் தீரம் பற்றி அறிந்து இருந்து காரணத்தால், நாக ஜெயந்தன் உள்ளே நுழைந்ததைக் கேட்டு அதிர்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை…

ஆயினும் அவள் மகிழ்ச்சி அடைந்ததைக் கண்டு வியந்தே போனான்..

 

இளவரசி சந்திராம்பிகையின் உள்ளக் கிடக்கையை அறிய இயலாதவனாய், சற்று நேரம் வாளாவிருந்தவன், சற்று கவனமாக இருக்குமாறு சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டு விட்டான்..

 

இளவல் ஜெய சிம்மவர்மனும் மருதநாட்டுடனான நட்புறவு பற்றிய ஆலோசனையில் மூழ்கி இருக்கக் கூடும் என்று அனுமானித்து, அவனைத் தொந்தரவு செய்யாமல் தன் மாளிகை சென்றுவிட்டவன், வசந்த மாலை சொன்ன நேரத்திற்கு முன்பே வந்துவிட்டான்.

 

அப்போது குதிரையின் குளம்பொலி கேட்க, பழுப்பும் வெண்மையும் கலந்த நிறத்தில் இருந்த குதிரையில், வந்து இறங்கினாள் வசந்த மாலை.

 

வசந்தமே பெண் உருக்கொண்டு வந்தார் போல பல்வேறு மலர்களை சேர்த்துக் கட்டிய மாலையினைப் போன்ற அழகிய தோற்றத்தில்… விழாவிற்காகவோ, அல்லது மனம் கவர்ந்தவனை சந்திக்கப் போகிறோம் என்ற ஆர்வத்தினாலோ, அழகிய பட்டாடை புனைந்து, பொன் ஆபரணங்கள் தரித்து, கூந்தலில் மருதபுரியின் மல்லிகையும், மரிக்கொழுந்து, மருவு சேர்த்து தொடுத்த சரம் தொற்றியிருக்க, நீண்டு இடை வரை தொங்கிய சடையில் தாழம்பூவின் மடல்களை சேர்த்துப் பின்னியிருந்தாள்.

 

அவ்வளவு நேரம் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்த அத்துணை யோசனைகளையும் பின்னுக்குத் தள்ளி அவளின் அழகு ஒன்றே கண்களையும் கருத்தையும் நிறைக்க, முகம் மலர பார்த்துக் கொண்டிருந்தவன், அருகில் நெருங்கி வந்த போது அவளின் முகத்தில் தெரிந்த சிறு கவலையையும் வாட்டத்தைக் கண்டு துணுக்குற்றான்…

 

அவனைக் கண்டதும் சற்று மலர்ந்த முகத்தை பார்த்தவன், வரவேற்பாய் முறுவலித்து, தன்னை நோக்கி நீண்ட அவளின் கரங்களை பற்றிக் கொண்டான்.

 

எதிலிருந்தோ தப்புபவள் போல வேகமாக நெருங்கியவள்.. தன் மனம் கவர்ந்தவனின் மார்பில் முகம் பதித்து இறுக அணைத்ததும், வீரசேனன் வியப்புற்றான்.

 

தானாக நெருங்கினால் , பதறி விலகும் மெல்லியலாள், இன்று தானே அணைக்கிறாள் என்றால், என்று யோசித்தவன், சற்று நேரம் அணைப்பிலேயே வைத்திருந்து பின் மெதுவாக, அவளின் முகவாயை இடக்கரத்தால் பற்றி நிமிர்த்தி அவளின் முக உணர்வுகளை படிக்க தலைப்பட்டான்.

 

நிமிர்ந்தவளின் முகத்தில் வருத்தமும் ஆற்றாமையும் குவிந்து இருப்பது கண்டு, “என்ன மாலா..?” என்று மென்மையாக வினவினான்.

 

“இன்று என் அத்தையார் வந்து இருந்தார்கள். என்னை அவர்களின் கணவரின் மூத்தார் மகனிற்கு பெண்கேட்க..” என்றதும்,

 

விளையாட்டுக் குரலில் “அழகியாய் இருப்பதன் ஆபத்துக்களில் ஒன்று. காண்பவர் எல்லோரும் கவர்ந்து செல்லவே எண்ணுவர்… நீ ‘பொன் மலர் நாற்றமுடைத்து..’ என்று வியந்து போற்றுதல் போல.. அழகும்.. குணமும் இணைந்த பூவை.. கேட்கத் தானே செய்வர்…” எனவும்,

 

“ம்ம்…போதும் என் பெருமை. தந்தையார் மறுத்து விட்டார்..” எனவும்

 

குதூகலம் மிக.. “மிக நல்ல செய்தி.. பிறகு ஏன், முகத்தில் வாட்டம்!!”

 

“ அத்தையார் அவர்கள், என் அண்ணனிற்கு பெண் தருவதாகவும் ஆவலுடன் வந்திருந்தார்கள்…”

 

“ம்ம்ம்ம்…”

 

“அப்போது தான் தந்தையார் சொல்கிறார்கள்… இளவரசியை என் தமையனுக்கு மணம் செய்து வைக்கும் முனைப்பில் மன்னர் இருப்பதாக.” என்றதைக் கேட்டு, வீரசேனன் உள்ளம் அதிர்ந்தது… “இருவரும் காதலிக்கிறார்களா என்ன..?” என மெதுவாக வினவினான்.

 

“நிலவை அடைய விண்மீன் ஆசைப்படலாம்.. குளத்தில் தெரியும் நிலவின் பிம்பம், தன் அருகில் வந்துவிட்டதாக எண்ணி, நீரில் வாழும் மீன் அதை அடைய ஆசைப் படலாமா? போன திங்கள் வரை கார்குழலி என் காதலி என்றவன், இப்போது சந்திராம்பிகை என் உயிர், ஆவி, காதல் என்றெல்லாம் பிதற்றுகிறான்.. அவனின் காதலை… எங்ஙனம் சொல்ல!!” என சலிப்பாய் உரைக்க..

 

 

“இளவரசியார் அவனை விரும்புகிறார்களோ..! என்று கேட்டேன்..” என்றதும்,

 

சினம் கொண்டு அவனின் தோளில் தட்டியவள்,

“சந்திராவிற்கு தன் நாடு, நாட்டு மக்கள் மீது மட்டுமே காதல்… இது வரை எந்த ஆண் மகனையும், கண்டு அவளின் நயனங்கள் மலர்ந்ததோ, மயங்கியதோ கிடையாது.. தெரியுமா?! ” என்றாள் பெருமை வழியும் குரலில்..

 

“ஹா.. ஹா.. அவர்கள் என்ன நம்மை போன்றா..? நாட்டைக் கட்டி ஆளுபவர்கள்… எண்ணத்தை, மனதை வெளி காட்டிக் கொள்ள மாட்டார்கள்.. மாலா.” எனவும்..

 

அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“என் சந்திராவை நான் அறிவேன்…” என்ற குரலில் அவ்வளவு கர்வம்.. அன்பு..

 

புன்முறுவலுடன் அவளின் கன்னம் பற்றி..

அவளின் கண்களில் தன் கண்களை கலக்க வைத்தவன், “எனில்… உன் தமையனை இளவரசி மணக்கக் கூடாது என்று எண்ணுகிறாய்.. போலும்.”

 

“என் தமையன் என்பதால் தான், அவனின் வீரம், குணம்.. அனைத்தும் நான் அறிவேன். வீரத்தில் பழுது இல்லை. ஆனால் குணம்..” என்று முகம் சுருக்கினாள்.

 

“உன் உயிர் தோழி தானே… அவர்களிடம் சொல்லி அதை நிறுத்தி விடு..”

 

வருந்தும் குரலில், “சொன்னால், நாட்டுக்கு நலமென்றால் அப்படியே ஆகட்டும் என்கிறார்கள் இளவரசியார்…” எனவும்,

 

“இதே இளவரசியார்.. நாட்டுக்கு நலமென்று தெளிவித்த பின்னும் கொடை நாட்டின் இளவலை மணக்க இயலாது என்று விட்டார்களே..” என்றான் வியப்புற்று…

 

“அதுவும் இதுவும் ஒன்றா.. கொடை நாட்டின் இளவல் தன் பள்ளியறை பாவைகளில் ஒன்றாக வைக்க அல்லவா மணம் புரியக் கேட்டார்!!” எனவும்,

 

கேட்ட வீர சேனனின் முகம் கடினமுற்றது.. “அவரும் நாட்டின் பாதுகாப்பிற்காக.. மூன்று நாடுகள் இணைவிற்காக தான் பெண் கேட்டார். பெண்ணாசையால் அல்ல..” எனவும்..

 

இவ்வளவு நேரம் இலகுவாக இருந்த அவனின் குரல், கடினமுற்றதை எண்ணி வியப்புடன் பார்த்தாள் வசந்த மாலை.

“கொடை நாட்டின் அரசு தகவல்களை தாங்கள் முற்றிலும் அறிந்தவர் போல் சொல்கிறீர்களே.. தாங்கள் கொடை நாட்டை சேர்ந்தவரா..? என்னிடம் வேணாடு வீரன் என்று தானே சொன்னீர்கள்..!”

 

“நான் பிறப்பால் வேணத்தை சேர்ந்தவன். எனது தந்தையார் யானைப் படை உருவாக்கத்தில் சிறந்தவர். சிறுவயதில் தாயை இழந்து விட்டேன். இளமைப் பிராயத்தில் தந்தையும் இழந்து விட்டேன். தொழில் புரிந்தது.. கொடை நாட்டின் இளவல் சேனையில்..” எனவும்..

 

திடுக்கிட்டுப் பார்த்தாள் வசந்த மாலை,

“இன்னும் என்னென்ன என்னிடம் மறைத்து இருக்கிறீர்கள்!!! ” கேட்டாள்.

 

அதில் கோபம் இன்றி ஊடல் தலை தூக்கி நிற்பதை அறிந்தவன்…

குறுநகையுடன், “நீ.. இதுவரை.. என்னைப் பற்றி கேட்டதே இல்லையே!! ” எனவும்,

 

வெட்கத்துடன் முகம் கவிழ்ந்தவள், “கேட்காமலே மனதை கொள்ளையடித்தவர் நீங்கள்.. அலங்கார நல்லூரில் அடங்காத காளையை அடக்கி, வீரத்தால் என்னுள் புகுந்தவர். அனைத்தும் அறிந்து.. கொள்வது.. காதல் இலக்கணம் அல்லவே…” எனவும்,

 

மங்கையின் மொழிகளினால்.. மலர்ந்து கனிந்த வீரசேனனின் முகம், தழைந்து.. தன்னுள் நிறைந்தவளின் இதழ்கள் நாடி வர, அவற்றின் தாகத்தை விருப்பமாகவே தணித்தவள், அவன் முன்னேறத் தலைப்படுவது கண்டு, நெஞ்சில் கரம் வைத்து விலக்கித் தள்ளி, சிணுங்கலுடன்,

 

“கொஞ்சம் இடம் கொடுத்தால்…. முழுவதும் எடுத்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள்..” எனக் குறை கூற..

 

“ பின்.. எவ்வளவு நாட்கள், தேன் சுமந்த மலரை பார்த்துக் கொண்டே இருப்பது..?” பெருமூச்சு விட்டு, “அது தான் உன் தந்தை… உன் அத்தை கொணர்ந்த மணமகனை வேண்டாமென்று மறுத்து விட்டாரே… நான் பெண்கேட்டு வரவா வசந்தமே?”

 

“தாங்களா..! இப்போதா..! முதலில் இளவரசியின் திருமணம் பற்றி ஒரு முடிவு வரட்டும்.” எனவும்,

 

சிரிப்புடன், “பிறகு உன் தந்தை அரச சம்பந்தம் செய்தவராகி, ‘யாரேனும் இளவரசனுக்கு தான் உனை மணம் செய்து கொடுப்பேன்’, என்று சொல்லிவிடப் போகிறார்.” என்றான்.

 

முகம் சுளித்து,“என் தந்தை என் மனதிற்கு மாறாக எதுவும் செய்யமாட்டார்..” என உறுதியுடன் வசந்த மாலை கூற,

 

“பிறகு ஏன் விலகிச் செல்கிறாய் மாலா?” என்றவாறு கரம் பற்ற விழைந்ததும்,

 

பிடி கொடாமல் பின்னால் நகர்ந்து, குறும்பாய் சிரித்தவள்,

“ராஜ பாட்டையில் செல்வது விடுத்து குறுக்கு வழியில் புக முயன்றால் ஆபத்து.. ”

 

“எனக்கா….”

 

“இல்லை…. எனக்கு…” என்றவள்… நகைத்தவாறு விலகி ஓடி தன் புரவியில் ஏறினாள்.

 

புரவியேறும் அவளின் லாவகத்தைக் கண்டு மகிழ்ந்தவனாய் புன்முறுவலுடன் நின்றான் வீர வேழ சேனன்.

 

 

மாலையின் எற்பாடு பொழுது (இரண்டு முதல் ஆறு மணி வரை) முடிந்து நான்காம் சிறுபொழுது (மாலை ஆறு மணி) ஆரம்பித்ததன் அறிகுறியாக பறவைகள் ஒலி அடங்கியதையும் பகலவன் மறைந்ததையும் கண்ணுற்றவன், தானும் தன் புரவியேறி அவளைப் பின் தொடர்ந்தான்.

 

அரண்மனை வீதி அடைந்ததும் வசந்த மாலை விடைபெற்று தன் மாளிகை நோக்கி செல்ல, சிம்மவர்மன் இருந்த மளிகை நோக்கி சென்றான் வீரசேனன்.

 

நாக ஜெயந்தன் மருதபுரிக்குள் நுழைந்ததையும், அதை பற்றிக் கூறிய போது இளவரசியின் மறுமொழியையும் உரைத்ததும், சிம்மவர்மனின் முகத்தில் ஏதோ அறிந்து கொண்ட புன்னகை.

 

புரவிப் படை நாயகன் வெற்றி வேந்தனுடன் திருமணம் பற்றி மன்னர் யோசனையில் இருப்பதாக தெரிவித்ததும், அந்தப் புன்னகை சற்றே மாற்றுக் குறைந்து, “இது மருதபுரி மன்னர் மற்றும் இளவரசியின் விருப்பம் பொறுத்தது.. நம்மோடு பாதுகாப்பில் இணைகிறேன் என்றுவிட்டார்களே. எதிர்கால அரசன், அரசி அதை புரிந்து கொண்டால் நலம்…” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

 

“இளவரசி என்னை சில திங்கள்கள் தங்க சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்களே… தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?” தயக்கத்துடன் கேட்க,

 

 

“இருநாட்டு நட்புறவு பலப்படும்… அப்படியே ஆகட்டும்.” என்றவன் சிரித்து, “உன் திருமணத்தையும் முடித்து விட்டு இருந்தால் காதலும் கனிந்து, வாரிசும் வந்துவிடும்..” எனவும்,

 

 

“ வளநாடு, வேணாடு இளவரசிகளுடனான உங்களின் திருமணம் வைகாசியில் தானே… அதன் பிறகு வரும் நல்ல நாள் அன்று… வைத்து விட வேண்டியது தான்…” என வீரசேனன் மொழிய, புன்னகையுடன் தலை அசைத்தான் சிம்மவர்மன்.

 

“காலையில் இந்திர விழா துவங்குகிறது இளவரசே!!”

 

“ம்.. ம்.. கொடியேற்றம் முடிந்ததும் நான் கொடை நாட்டுக்கு கிளம்புறேன்..”

 

“சரி, ஓய்வெடுங்கள் இளவரசே..” என்றவன் விடை பெற்றுச் சென்றான்.

 

இரவுக்கான உணவாக, பழங்களும், பக்குவம் செய்யப்பட்ட காய்களும், மாளிகை தேடி வந்து சேர, பசியாறிய இராஜ ஜெய சிம்மவர்மன், விருந்தினர் மாளிகையில் நிலவு முற்றத்தில் நடக்க, மறுநாள் முழுநிலவு தினம் என்பதால், வெண்ணிலவின் தண்ணொளியில் நனைந்த மருதபுரி கோட்டையின் அழகை பார்த்து ரசித்தவன், அங்கிருந்து ஒன்றரை காத தொலைவில் இருந்த அரண்மனை தெரிவதைக் கண்டு உற்று பார்த்தவன் விழிகளில், அரண்மனை ஒட்டிய உயர்ந்த கடம்ப மரத்தில் இலைகளின் அசைவு வேறுபாடாய்ப் புலப்பட, இன்னும் கூர்ந்து நோக்குகையில், அதில் ஒரு சிறுவன் வில்லுடன் மறைந்து நிற்பது புலப்பட , அவன் நிற்பது நல்லதுகல்ல என் உள்ளுணர்வு உணர்த்த , சுற்றி யாரேனும் வீரர்கள் தென்படுகின்றனரா என்று அவசரமாக நோக்கினான்.

 

அப்போது இளவரசி அந்த மரத்திற்கு அரைக் காத தூரத்தில் இருந்த உப்பரிகைக்கு வருவது கண்டு அதிர்ந்தவன்.. திரும்பி மரத்தை பார்க்க.. அந்த சிறுவனின் வில்லில் பூட்டப்பட்ட அம்பு அவளை நோக்கி குறி பார்க்கப்படுவது கண்டு பதைத்து… வேகமாக இறங்கி ஓடினான்.. இராஜ ஜெய சிம்மவர்மன்.

 

 

*********************

 

அனுமதி 12

****************

 

 

இன்று…

 

 

 

மதிவதனா தனது அண்ணனின் வாகனத்தை பார்த்து விட்டு, சற்று வேகமாக நடந்து வர, அவளை விட்டு இருநூறு அடி தொலைவில், நகர எல்லைக்குள் தடை செய்யப்பட்ட அதிக வேகத்தில் வந்து கொண்டிருந்தது ஒரு லாரி…

 

திரும்பி பார்த்த சிவேஷ் திடுக்கிட்டு, “மதி…… இந்த பக்கமா போஓஓஓ…” என்று அலறியவன், கைகளால் சைகை செய்து அவளை சாலை விட்டு நகர சொல்லியவாறு அவளை நோக்கி ஓட, ஒரு வினாடி திகைத்து, பின் சட்டென்று துள்ளி இடது புறமாக நகர்ந்தவள் குதித்த வேகத்தில் சரிந்து விழப் போனவள் சமாளித்து, லாரியின் பேரொலி கேட்டு காதுகளை பொத்தியவாறு, குனிந்து கொண்டாள்.

 

சிவேஷ் அவளை நோக்கி ஓட, பேரொலியுடன் நெருங்கிய லாரி சரியாக அவளுக்கு ஒரு சாண் இடைவெளி விட்டு கடந்து வேகமாக வந்து, சிவேஷைத் தாண்டி, அங்கிருந்து சில அடிகள் தூரத்தில் நின்று கொண்டிருந்த, சிவேஷின் வாகனத்தின் மீது மோதப் போவது போல் சென்று.. பின் விலகி, வாகனத்தின் வலதுபுற பின் நோக்கி பார்க்கும் கண்ணாடி மீது மோதி, உடைத்துக் கடந்து சென்றது. சுற்றி நடந்து கொண்டிருந்தவர்கள், வாகன ஓட்டிகள் எல்லோரும் அதிர்ச்சியுடன் அதனை பார்த்து உறைந்து நிற்க, கண்டு கொள்ளாமல் விரைந்து சொல்லும் வாகனங்கள் அவற்றின் வழியே செல்ல,

 

சிவேஷ் மோத வந்த வாகனத்தின் பதிவு எண்ணைப் பார்க்க முயன்று, மனதிற்குள் அதனை குறித்து வைத்துக் கொண்டான்.

 

கீழே அமர்ந்து இருந்த மதிவதனா, மெதுவாக தலை உயர்த்தி பார்த்து, பின் சுற்றிலும் பார்த்தவாறு எழுந்தவள், வேகமாக ஓடி வந்து அண்ணனின் அருகே வந்து அவனை கட்டிக் கொண்டாள்.

 

மறு முனையில் இருந்த ஜெயவர்மனின் முகம், உச்சகட்ட பதட்டத்தில் இறுகி, நாசியும் உதடுகளும் துடிக்க கண்கள், லேசாய் கலங்கினவோ..!

 

சிவேஸ்வர் அலறும் ஒலியும் வாகனத்தின் பேரிரைச்சலும் கேட்க, உள்ளம் பதற,

 

“ஷிவ்… ஹலோ… ஹலோ…” என்று அழுத்தமாய் அழைத்தவன், பதில் ஏதும் இல்லாமல் புரியாத ஒலிகள் கேட்க ஒன்றும் செய்ய இயலாதவனாய், இறுகி நின்றான். அப்போது அழைப்பு துண்டிக்கப்பட்டு விட, திரும்ப அழைக்க முயற்சித்தான்.

 

மகனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த காஞ்சனா தேவி, அருகே வந்து கலக்கத்துடன் பார்க்க, சட்டென்று தன் முகபாவம் துடைத்தவன், அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான். இது வரை எதற்கும் அஞ்சாத பதறாத அவனின் மனம் ஏதோ உணர்வில் துடிக்க, உடல் நடுங்கினாலும்,

 

உள்ளத்தின் ஓரத்தில், ஒரு குரல், ‘ஒன்றும் இல்லை.. ஒன்றும் ஆகாது..’ என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்க, தலையை பற்றிக் கொண்டு அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

 

சிவேஷ், தங்கை வந்து அணைத்துக் கொண்டதும் அவளை வேகமாக வாகனத்தில் ஏற்றியவன், அலை பேசியை டாஷ் போர்டில் வைக்க அவனின் விரல் பட்டு, ஜெயவர்மனின் அழைப்பு துண்டிக்கப் பட்டு இருந்தது கண்டு, இப்போது திரும்ப அழைக்க வேண்டாம் என்று முடிவு செய்து, வேகமாக வண்டியை கிளப்பி லாரி சென்ற திசை நோக்கி, செலுத்தத் தொடங்கினான். ஏதேனும் போக்குவரத்து சிக்னலில் அந்த லாரி மாட்டினால் பிடித்து விடலாம் என்று வேகமாக அவன் ஓட்ட, ஜெயவர்மனிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

 

காரின் டேஷ் போர்டில் இருந்த அலை பேசி ஒளிர்வதைக் கண்ட மதிவதனா, எடுத்து பார்க்க, ஜெயவர்மனின் பெயரை பார்த்து, “அண்ணே உங்க ஃப்ரன்ட். ” என,

 

“நீயே எடுத்து ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு கொஞ்சம் விவரமா சொல்லிடு.” என்றவனின் கண்கள் தனக்கு முன்னால் இருந்த சாலையில் லாரியை தேடியபடி இருந்தன.

 

தயக்கத்துடன் அலை பேசியை எடுத்தவள், “ஹலோ…” எனவும் எந்த சத்தமும் இல்லை.. அவள் திரும்ப சற்றே உரத்து, “ஹலோ ஹலோ…” எனவும்..

 

 

அழுத்தமான குரல் லேசாக கரகரத்து.. பெருமூச்சுடன் வந்தது, “வதனா… வதூ…” என்ற குரலில் அவ்வளவு தவிப்பு.. “ஷிவ் எங்கே.. அங்கே.. உனக்கு .. ஒன்னும் பிரச்சனை இல்லை தானே..” எனவும்.. அவனின் குரலில் தன் பெயரின் சுருக்கமான அழைப்பில் திகைத்தவள், அதில் தொனித்த தவிப்பில், மனம் முற்றிலும் புரள, தன் அண்ணனை திரும்பிப் பார்த்தவள், பின் மெதுவான குரலில் லாரி மோத வந்ததை சொல்லி ஷிவ் வாகனம் ஒட்டிக் கொண்டிருப்பதை சொல்ல..

 

தாடை இறுக, “ஷிவ் கிட்ட போனைக் கொடு… வண்டிய ஓரமா நிறுத்த சொல்லு…” என அழுத்தமாக சொல்ல..

 

அவள் அவ்வாறே செய்ததும், தொடர்பில் வந்த நண்பனிடம் மீண்டும் கேட்டு நலம் விசாரித்துக் கொண்டவன்,

“ நியர் பை பொலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்லைன்ட் ரிஜிஸ்டர் பண்ணிட்டு மதுரை கமிஷனர்ட்ட பேசு… அவர் சொன்னா… அவுங்களே செக் போஸ்ட்ல மடக்கிருவாங்க.. இப்போ என்ன… பின்னாடியே போய் அதைப் பிடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கியா.?”

என்றான் சற்றே கோபமான குரலில்..

 

“இல்லை ஜெய்.. இங்கே வண்டியூர் சிக்னல்ல பிடிச்சுரலாம்னு தான் வேகமா வந்தேன்… ம்ப்ச்…. தப்பிச்சுடானுங்க..

 

இங்கே ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. அதுல காம்ப்லைன்ட் கொடுத்துறலாம்.. இங்க இருந்து நாலு ரோடு பிரியுது.. ஏதாவது ஒரு செக்போஸ்ட்ல மாட்டிப்பாங்க..” என்றவன் வேகத்துடன்..

 

“இந்த திருமலைய மிரட்டுன மாதிரி… அழகுமலையும் சேர்த்து ரெண்டு போட்டு… பிடிச்சு உள்ள தள்ளிருக்கணும்.. எவ்ளோ திமிர்…” எனவும் சிறிது அமைதியான ஜெய் சொன்னான், “ஷிவ்… இது அழகுமலை, திருமலை வேலை இல்ல…”

என்றவன் சற்றே நிறுத்தி பின் தெளிவாய் அழுத்தமாய் சொன்னான்..

 

“இது… ஆதித் வர்மன் பண்ணது.” எனவும்.. திகைத்து சிவேஸ்வர் கேட்டான்,

 

“யாருடா அவன்..?”

 

**************************

 

திருவனந்தபுரத்தில்…

 

துறைமுகத்தின் அருகே மிக உயரமான பதினைந்து அடுக்குகள் உயரக் கட்டிடம்.. வானம் தொட்டு நின்று கொண்டிருந்தது.

 

‘ரவீந்தரா டவர்ஸ்…’ சுற்றிலும் வாகனம் நிறுத்துமிடம், தோட்டம், புல்வெளி மிக அழகாக வடிவமைக்கப் பட்டு இருக்க,

 

அதன் வாயில் முகப்பில் பல பெயர் பலகைகள் தொங்கி கொண்டு இருந்தன. ரவீந்தரா எக்ஸ்போர்ட்ஸ், ஆதித் கார்மெண்ட்ஸ் என, ‘ரவீந்தர், ஆதித்’ என்ற பெயர்களில் பல தொழில்களின் பெயர் பலகைகள் தொங்கிக் கொண்டு இருந்தன..

 

 

 

இரண்டாவது தளத்தின் இராஜா ஆதித் வர்மன் JMD என்று பொறிக்கப் பட்ட பெயர்ப் பலகை இருந்த கதவைத் திறந்து வேகமாக உள்ளே நுழைந்தார் பின் ஐம்பதுகளில் இருந்த இராஜா இரவீந்திர வர்மன்.

 

கையில் இருந்த அலைபேசியை பார்த்து சிரித்தவாறு அழைப்பை துண்டித்தவன், உள்ளே நுழைந்த தன் தந்தையை தலை சாய்த்து, இடது புருவம் மட்டும் தூக்கிப் பார்த்தான் ஆதித் வர்மன்.

 

“ஆதித், உனக்கு எத்தனை தடவை சொல்றது, அவனை சும்மா சீண்டாதேன்னு… எதுக்கு வர்க்கலால பஃப்ல தகராறு பண்ண ஆள அனுப்பிருக்குற.. திருவனந்தபுரத்தில் அவன் கட்டுற ஷாப்பிங் காம்ப்லெக்ஸ்ல நம்ம ஆளுங்க ஐந்து பேரை வேலை பார்க்க அனுப்பிருக்க. இன்னும்…” என்றவரை இடை வெட்டி,

 

“இன்னும்.. இப்போ… இப்போ கூட தமிழ்நாட்டு மதுரைல அவன் ஃப்ரன்ட் தங்கச்சியை அடிச்சு தூக்க சொன்னேன்… ஜஸ்ட் மிஸ்.. தப்பிச்சுட்டா… ஆனா அவனுக்கு பயம் வந்திருக்கும். அது போதும்…” என்று வசீகரமாக சிரிக்கவும் அதிர்ந்தார் ரவீந்திரன்.

 

“நமக்கு பார்க்க ஆயிரம் வேலை இருக்கு. உன்னை நம்பி ஏழு தொழில் இருக்கு. அதை விட்டுட்டு உனக்கு ஏன் இந்த வேலை? அவனை பயமுறுத்தற… அவனோட சம்பந்தமுள்ள யாரையாவது அழிக்குறதுன்னு தேவையில்லாத வேலை.. அவன் நம்ம வம்புக்கே வரதில்ல.. அவன் வழில நீ போய் அவனை சீண்டிட்டே இருக்குற. இது நல்லதில்லை..” என்றார் கோபமாய்.

 

“இப்படி நீங்க கண்டும் காணாம விட்டதால் தான் அவன் கேரளவுக்கே திரும்ப வந்து… இப்போ நம்ம இடத்துலயே நமக்கு எதிரா கன்ஸ்டரக்ஷன்ஸ் ஆரம்பிச்சு வேலை எடுத்து செஞ்சுட்டு இருக்குறான்.” என்றான் சிரிப்புடன்.

 

“நாம் பண்றது கோடி ரூபா ப்ராஜெக்ட். அவன் பண்றது லட்சங்களில் வருமானம் வரக்கூடியது. அவனை ஏன் போட்டியா நினைக்குற.?”

 

“அவன் எனக்கு போட்டியா!!? ஹா… ஹஹ்ஹா.. எதிரி… அழிக்கப் பட வேண்டிய எதிரி. இருந்த இடம் தெரியாம அழிக்கணும். எப்பவோ அழிச்சுருக்கணும் நீங்க… அதை… செய்யாததால்… அவன் இப்போ மரமா வளர்ந்துட்டான்…” என்றவனின் முறுவல் காணாமல் போயிருந்தது. ஆழ்ந்து ஒலித்த குரலில்… முகத்தில் எஃகின் வலிமை.. இறுகல்…

 

“சின்ன வயசுலயே அம்மாவை இழந்த உன்னை , என் அம்மாகிட்ட வளர்க்க கொடுத்தேன். என் அம்மா.. உன் பாட்டி ராணி கௌரியம்மா இதுதான் சொல்லி கொடுத்து வளர்த்துருக்காங்களா… ஒருத்தனை ஜெயிக்க… நேரா நின்னு மோதனும்.. நீ ஏன் இப்படி குறுக்கு வழிகள் தேர்ந்து எடுக்குற? எனக்கு பிடிக்கலை.”

 

“அவனும் குறுக்கு வழில இராஜா இராஜசேகர வர்மன் மகத்திருநாள் பரம்பரைக்குள்ள வந்தவன் தானே. அவனை குறுக்கு வழில தான் ஜெயிச்சு ஒன்னும் இல்லாம பண்ணனும்..” என்றவனின் குரலில் எள்ளல்.

 

“ஆதித் வேணாம். இது தேவை இல்லாத விபரீதத்துல போய் முடியும். ஏற்கனவே நீ நிறைய பண்ணிட்டே.. அதுல நீ தப்பிச்சதே பெரிய விஷயம்.” முயன்று வரவழைத்த பொறுமையாக குரலில் தொடர்ந்து..

 

“ உன் அப்பாவா சொல்றேன். கொஞ்சம் கேளு. உன் தொழில்களை கருத்தா பாரு. அவன் எப்படி போனா உனக்கென்ன..” என்றவரை வெறித்துப் பார்த்தவன்,

 

“டாட்.. அவன் இங்க இருக்க கூடாது. அவனுக்குன்னு எதுவுமே இருக்க கூடாது. அவன் ஓடனும். கேரளாவை விட்டு.. இந்தியாவை விட்டு.. ” என்றவனின் முகத்தில் கொடூரம் கலந்த மர்மப் புன்னகை…

 

*************************

 

“யாருடா அவன்..?” என்ற சிவேஷிவரின் கேள்விக்கு, சற்று நேரம் அமைதியாய் இருந்த ஜெயவர்மன்,

 

“நீ காம்ப்ளைன்ட் பண்ணிட்டு, வீட்டுக்கு போய்ட்டு கூப்பிடு. அப்போ சொல்றேன். நான் கமிஷ்னர்ட்ட பேசுறேன் உடனே…” என்றவன் அழைப்பைத் துண்டித்து இருந்தான்.

 

சிவேஷ் அவன் சொன்னது போல அருகிருந்த காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் செய்தவன், வீட்டில் ஏதும் சொல்ல வேண்டாம் என்று மதிவதனாவிடம் சொல்லிவிட்டு அவளை இறக்கி விட்டு, தன் வீட்டை அடைந்தவன், நண்பனிற்கு அழைத்தான்.

 

“சொல்லுடா. யாரு அவன் ஏன் மதிய குறி வைத்து இருக்கான்..?”

 

சில நொடிகள் அமைதியாக இருந்தவன்,

“ உன்கிட்ட நான் சொல்லிருக்கேன், என் அம்மா இராஜாவோட மூன்றாவது மனைவி.

அவன்.. ஆதித்.. எண்ட அச்சன் இராஜா இராஜசேகர வர்மனோட பேரன். முதல் மனைவி கௌரியம்மாவோட ஒரே பையனான இராஜா ரவீந்தர வர்மனின் பையன் தான் இராஜா ஆதித் வர்மன். பிறந்தவுடன் அவன் அம்மா இறந்துட்டாங்க. அவுங்க பாட்டி தான் அவனை வளர்த்தார்கள். அவரின் தொடர்பான மற்ற குடும்பங்கள் மேல கோபத்தோடு வளர்ந்தான்.

ராஜ பரம்பரையின் ஒரே வாரிசு, சொத்துக்களை காப்பாற்ற வேண்டியவன் அவன்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காங்க.. படிச்சுட்டு இருக்கும் போதே தொழில்கள்ல நுழைஞ்சுட்டான். அவன் கைக்கு கொஞ்சம் அதிகாரம் வந்தவுடனே அவன் செஞ்ச முதல் காரியம்…”

சற்று தயங்கி, “என் அச்சனின் இரண்டாவது மனைவியையும் அவுங்க வாரிசான பொண்ணையும் விபத்துக்குற பேர்ல கொலை பண்ணது…” சில நொடிகள் அமைதி காத்தவன், மீண்டும் சொன்னான்,

 

“அவனை பற்றி புரிஞ்சுகிட்டவரு.. உயில் எல்லாத்தையும் மாத்தி எழுதிட்டு, சில கண்டிஷன்ஸ் வச்சு, அவர் இறந்த பிறகு தன் தொழில்களையும், சில பரம்பரை சொத்துக்களையும் என் அம்மாக்கு வர மாதிரி பண்ணதும் அவனுக்கு வெறியை உண்டாக்கிருச்சு… எங்க மேல ஆத்திரம்… என்னை ஏதும் செய்ய முடியாத, இயலாமை… அதை இந்த மாதிரி எல்லாம் வெளிக் காட்டுவான்… என்னை.. என் தொழிலை இடைஞ்சல் பண்றது.. அவனுக்கு ஒரு விதமான பொழுது போக்கு..”

 

பெருமூச்சு விட்டு, “ ஏனோ உன் குடும்பத்து மேல அவன் பார்வை விழுந்துருச்சு.. கொஞ்சம் இல்ல. ஷிவ்…. ரொம்பவே கவனமா இரு….. நான்… இப்போ அங்கே வராம இருந்தாதான் உங்களுக்கு நல்லது…” என்றதும் அதிர்ந்து,

 

“அது எப்படிடா… பிளான் மட்டும் தான் போட்ருக்கோம். மால் கட்டுறது சாதாரணம் இல்ல.. இன்னும் எவ்ளோ வேலை இருக்கு…”

 

“எல்லாம் நீ பார்த்துப்ப… உன்னால முடியும். அதை விட முக்கியம்.. நீ.. உன் குடும்பம்.. அதுக்கு நான் தள்ளி இருக்குறது நல்லது. நான் சென்னைல இருந்து என் அசிஸ்டண்ட் சூரஜை வரச்சொல்லிருக்கேன். அவன் கூட.. எக்ஸ்பீரியன்ஸ்ட் சூப்பர்வைசர்ஸ் மூணு பேரும் கூட்டிட்டு வர சொல்லிருக்கேன். அவன் பார்த்துப்பான். நான் வரவேண்டிய தேவை இருக்காது. நாம் ஏற்கனவே அப்படித்தானே பிளான் பண்ணிருந்தோம். நீ…..”

சிறிது தயங்கி, “உன் சகோதரிக்கு சீக்கிரம் கல்யாண ஏற்பாடு பண்ணு. எல்லாம் சரியாகிடும்.” எனவும்…

 

சிவேஷிற்கு நண்பனின் குரலில் ஏதோ உறுத்த அமைதியானான்.

 

***********************

 

 

 

 

 

 

அன்று….

 

மருத புரியின் இளவரசியை நோக்கி அந்த சிறுவன் குறி பார்ப்பதைக் கண்டு அதிர்ந்த கொடை நாட்டின் இளவரசன் இராஜ ஜெய சிம்மவர்மன் இறங்கி… விரைவாய் ஓடி… அரண்மனை வீதியை துரிதமாகக் கடந்தான். பார்வையை அந்த சிறுவன் மீது வைத்தவாறு ஓடியவன், அவனின் கை அசைவில் அடுத்த நொடி அம்பு பாய்ந்து விடும் என்று கண்டு…

 

தன் இடையில் எப்போதும் வைத்திருக்கும் ‘பொன்புனை திகிரி’ எனும் இரும்பு

உலோகத்தால் ஆன முள் முனை கொண்ட சக்கரம் போன்ற ஆயுதத்தை எடுத்து வீசி எறிய, சக்கரம் போல் சுழன்று பறந்த அவ்வாயுதம்.. அச்சிறுவன் நின்று கொண்டிருந்த மரக் கிளையை தாக்கி முறிக்க, அம்பானது குறி தவறி இளவரசியின் தலைக்கு மேல் நோக்கி சென்று… அங்கே இருந்த மாடத்தில் பட்டு, இளவரசியின் காலடியில் வந்து விழுந்தது..

 

கூர்மையான அம்பு நுனியில் நாகம் போன்ற அமைப்பில் இருக்க, அதன் வாயில் கூர்மையான முள் போன்ற அமைப்பு இருந்ததைக் கண்டவள், அதன் மேல் ஒரு துணி சுற்றப்பட்டு இருப்பதை யோசனையுடன் பார்த்தாள், கிளை முறியும் ஓசை கேட்டு எட்டி பார்த்தவள், அதிலிருந்து ஒரு சிறுவன் எழுந்து ஓட முயற்சிப்பதையும், அவனை, சிறு கோழிக் குஞ்சை பற்றி பிடிப்பது போல, ஆறரையடி உயரத்தில், வலிமை மிகுந்த ஆடவன் ஒருவன் பற்றியிருப்பதையும் கண்டவள், அம்பில் சுற்றப்பட்டு இருந்த துணியை ஆராய, அதில் இருந்த சித்திரங்களைக் கண்டு, யோசனையில் ஆழ்ந்தாள்.

 

அத்துணியை இடையில் சொருகி பத்திரப் படுத்தியவள், வேகமாக வெளியே சென்றாள்.

 

சிம்மவர்மன் அந்தச் சிறுவனை பற்றி, நிலவின் ஒளி மற்றும் அரண்மனை சுவற்றில் பொருத்தப் பட்டிருந்த தீப்பந்தங்களில் இருந்து வந்த ஒளியில் அவனின் முகத்தை உற்றுப் பார்த்ததும், அவன் சிறுவன் அல்ல குள்ளன், குறைந்தது இருபது வயதிருக்கும் என்று புரிந்து கொண்டான். அவனை பற்றியிருந்த பிடியிலேயே, அவன் மிகவும் உடல் வலுவானவன் என்பதையும், தன்னைத் தாக்க முயன்றதில், அவனுக்கு தாக்குவதிலும் தற்காத்துக் கொள்வதிலும் பயிற்சி உண்டு என்று அறிந்து கொண்டான். அவனின் கைகளை மடக்கி முதுகுப்புறமாய் சேர்த்து பிடித்தவன்,

 

“யாரடா நீ!!? ஏன் இளவரசியை தாக்க முயன்றாய்…?”

எனக் கேட்க, அவனின் கடுமையான முறைப்பில் சினம் எழ, கை ஓங்கிய வேகத்தில், குள்ளன் நடு நடுங்கி நிற்க,

 

“தாக்காதீர்கள். ” என்றவாறே விரைந்து வந்தாள் இளவரசி.

 

கோப மூச்சுக்களை அனல் போல் வெளியிட்டவன், “பகைவர்க்கு அருளுவது மருத நாட்டுப் பழக்கமாக இருக்கலாம்… பூண்டோடு அழிப்பது தான் கொடை நாட்டு வழக்கம்.” என்றவாறு அவனின் கையை முறுக்க… அதில் இருந்து எலும்பு திருப்பப் படுவது கண்டு இளவரசி விரைந்து நெருங்கி, ஜெயசிம்மனின் கரத்தை பற்றி விலக்கத் தலைப்பட்டாள்.

 

“அவன் பகையிடம் இருந்து வந்தாலும் தகவல் அறிவிப்பாளனாகவே வந்துள்ளான். அவனைத் தாக்குவது நமது மரபன்று.” எனவும் நெறித்த புருவங்களுடனான விழிகளை அவள் புறம் திருப்பினான்.

 

அவள் கரத்திலிருந்த அம்பைக் கண்டு சினம் தலைக்கேற, “நாகச்சரம்…. ஒரு துளி நஞ்சு இருந்தாலும் ஐந்து இமைப்பொழுதுகளில் இறைவனடியை அடைந்து விட வேண்டியது தான்..” , என்றவன் திரும்பி குள்ளனைப் பார்த்த பார்வையில் அவன் உயிர் தொண்டைக்குள் வந்து நின்று துடிக்க, எச்சில் விழுங்கியவனின் பார்வை இளவலின் மீது அச்சமின்றி நிலைத்தது.

 

இளவரசி, ” இல்லை.. அவன் என் மேல் எய்யவில்லை. இந்த செய்தியை என்னிடம் சேர்க்கவே வந்துள்ளான். அவனை விட்டு விடுங்கள் இளவரசே..” எனவும்… மனமின்றி அவன் மேல் இருந்த கையை லேசாய் விலக்கியதும்.. அவன் ஓடிய வேகம் கண்டு இருவரும் அதிர்ந்து பார்த்தனர்.

 

திரும்பிய ஜெயசிம்மன் இளவரசி தன்னை நெருங்கி நிற்பதையும், அவளின் செங்காந்தள் மலர் போன்ற விரல்கள், அவனின் முழங்கையைப் பற்றி இருப்பதையும் உணர்ந்து குனிந்து பார்க்க, அவனின் பார்வையில் தான்.. அதை உணர்ந்தவளாய், தன் விரல்களை விலக்கியவள், இருகரங்களையும் கோர்த்துக் கொண்டு வீதியின் புறமாக பார்வையை திருப்பினாள்.

 

சடுதியில் தனை நிலைப்படுத்திக் கொண்டு, கம்பீரத்தை கை கொள்ளும் அவளின் தன்மை, ஜெயசிம்மனின் கடின முகத்தில் வியப்புடன் கூடிய ரசிப்பை தோற்றுவிக்க, தீப்பந்தங்களின் மஞ்சள் ஒளியினில் மின்னிய விழிகள், ஈரமாய் ஈர்த்த இதழ்களுடன் வெண்ணிற ஆடையில் இரவில் மலர்ந்த மௌவல் மலரென மெல்லிய நறுமணம் கமழ நிற்பவளைக் கண்டவனின் இதயப் பகுதியில் ஏதோ புரண்ட உணர்வு.. கண்ணிமைப் பொழுதில் தனை நிலை படுத்தி கேட்டான்,

 

“யார் அவன்? உங்கள் உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிடுவதாக எண்ணவில்லை என்றால் சொல்லுங்கள்…” என்ற குரலில் சொல்லியே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது.

 

“ ஆனைமலை குடியை சேர்ந்தவன் அவன். கிளர்ச்சியின் ஊற்றுக் கண்ணை காட்டி செல்கிறான். சரி செய்ய வழியிருப்பதாக தகவல் கூறியிருக்கிறான்.. அதற்கு நான்…” என்று ஏதோ சொல்ல வந்தவள் ஒரு கை நொடிப் பொழுது நிறுத்தி,

 

“மருத நாட்டு அரசின் நீதி மேலாண்மையில் நம்பிக்கை வைத்து சில வேண்டுகோள்கள் தந்துள்ளான். இளவரசே… ஆலோசித்து செயல்படுத்த வேண்டும்..” என்றவள் அவனின் கூர்ந்த விழிகளில் தன் பார்வையை நிறுத்தி, “எனை காக்க விளைந்த உங்களின் வேகத்திற்கும் விவேகத்திற்கும் நன்றி இளவரசே… யாமப் பொழுது தொடங்கிவிட்டது போலும்.. ஓய்வெடுங்கள்.. விடியற் காலையில், நல்ல வேளையில் இந்திர விழா கொடியேற்றம்… மருதபுரிக் கோட்டை நடுவில் இருக்கும் சதுக்கத்தில் நடைபெறும். அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் இருக்கும் இளவரசே… இருந்து சிறப்பிக்க வேண்டும்..” எனவும்,

 

சிம்மவர்மன் தலையசைத்து, “கொடியேற்றம் வரை மட்டுமே இருக்க இயலும். கொடை நாட்டின் சார்பாக இளவல் சேனை நாயகன் தான் இங்கேயே இருக்கிறாரே.. கொடி ஏற்றம் முடிந்ததும் நான் செல்ல வேண்டும்.. தேவி..” என,

 

சலனமற்ற முகத்துடன் ஏறிட்டவள், தலையசைத்து ஆமோதித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து அரண்மனை நோக்கி நடந்தாள்..

 

நிலவின் ஒளியில், புகை போன்ற மென்மையான துகில் காற்றில் அசைய, இடை அசைய, தோளில் இருந்து தொங்கிய துணியை இடக் கையை மடித்து பிடித்து, அதில் அருவிபோல் வழிய செய்தவளாய், மென்னடையிலும் கம்பீரம் மிளிர நடப்பது கண்டு, மருதபுரி கோட்டை உள்ளே கோவில் கொண்டிருக்கும் தேவி, நகர் வலம் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த.. இமைக்கவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் இராஜ ஜெய சிம்மவர்மன்.

 

***************

 

சித்திரை திங்களின் முழுநிலவு தினத்தன்று தொடங்கும் இந்திர விழாவிற்காக விடிவெள்ளி முளைத்த வைகறை பொழுதிலேயே நகரம் தயாராக ஆரம்பித்தது..

 

நீர் தெளித்து, கோலம் இட்டு, தெருக்களையும், வீடுகளையும், ஆலயங்களையும் அழகு படுத்தியவர்கள், தாமும் தம்மை சுத்தம் செய்து , அழகிய ஆடைகள், மலர்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்கரித்துக் கொண்டனர்.

 

 

மக்கள் அனைவரும் சதுக்கம் எனப்படும் நகரின் மையத்தில் இருந்த பெரிய சதுரமான நிலத் திடலில் ஒன்று கூடினர்.

 

மருத நாட்டின் அரசர், இளவரசி, அரசவை உறுப்பினர்கள், அரசு விருந்தினர் போன்றோர் விழா மேடைப் பந்தலில் அமர்ந்து இருக்க.. மெய்க்காவல் படையினர் அவர்களை சூழ்ந்து இருக்க, காவல் வீரர்கள் மக்கள் கூட்டதை ஒழுங்குபடுத்தினர்.

 

இந்திரனின் பெருமைகளை பாணர்கள் பாட, பாணிணியர் யாழ், சிறு பறை இசைக்க, விறலியர் எனப்படும் ஆடல் மகளிர் அந்த இசைக்கேற்ப தாளத்திற்கேற்ப அபிநயித்து ஆடினார்.

 

அது முடிந்ததும் வள்ளுவன் பறையறைந்து, இருபதியெட்டு நாள் கொண்டாட்டம் ஆன இந்திரவிழா இனிதே தொடங்குவதை அறிவிக்க,

 

கோட்டை மேலே இருந்த அனைத்து முரசுகளும், மங்கல ஒலியாக அதிர செய்யப்பட,

குழல், தூம்பு, கொட்டு, சங்கம் போன்ற இசைக்கருவிகள் ஒலிக்க..

இந்திரனின் ஆயுதம் ஆகிய மின்னல் வரையப்பட்ட மஞ்சள் வண்ணக் கொடி ஏற்றப்பட்டது..

அதன் பின்பு கலை நிகழ்ச்சிகள் துவங்கின.

 

அனைவரின் கவனமும் வழிபாட்டில், நிகழ்ச்சிகளில், இருக்க ஒருவனின் கவனம் மட்டும் இளவரசியின் மீதே இருந்தது.

 

இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிய பாடல்களும் நடனங்களை அனைவரும் கண்ணுற்று இருந்த வேளையில், தந்தையான மன்னர் பெருவளத்தானிடம் ஏதோ சொன்னவள், இரு சேடிகளும், காவல் வீரர்கள் பின்தொடர கிளம்புவதை இரு கண்கள் குதூகலத்துடனும், இரு கண்கள் யோசனையாகவும் பார்த்தன.

 

சற்று நேரத்தில் கோட்டையின் மேற்கு வாசலின் வழியாக வெண்புரவி ஒன்று வெளியேறி, கடம்பவனக் காட்டிற்குள் செல்ல, சில கணப்பொழுதுகள் பயணம் செய்த புரவியானது, வனத்தின் நடுவில் தென்பட்ட கடம்பன் ஆலயத்தின் முன் சென்று நின்றது.

 

சற்று தொலைவில் குதிரை கனைக்கும் ஒலி கேட்க, வெண்புரவி அதை நோக்கி செலுத்தப்பட்டது. பழுப்புப் புரவியில், கண்கள் மின்ன அமர்ந்திருந்த நாக ஜெயந்தனை கண்டதும் நின்ற வெண்புரவியின் மீது ஆணினிற்கான உடைகளை தரித்து.. தலைப் பாகை அணிந்து.. அறிந்தவர்களால் கூட.. சட்டென்று அடையாளம் காணவியலாதவாறு உருமாறியிருந்த சந்திரவதனாம்பிகை , முகம் இறுக,

 

“சொல்… நீ சொன்ன விதம், யாரும் அறியாதவாறு தனியே வந்திருக்கிறேன். யார் நாகவல்லி..? அவருக்கும் மருதபுரி மன்னருக்கும் என்ன தொடர்பு…?” என்று கேட்க,

 

அவனின் கண்களிலோ வெறி மின்னியது, “என்ன தொடர்பு!?ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு. ஆசைக்கும் அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பு. நீதிக்கும் அநீதிக்கும் உள்ள தொடர்பு.” , என்று குமுறலான குரலில் சொல்லியவாறு செல்ல, கை உயர்த்தியவள்,

 

“சுற்றி வளைக்காமல்.. புரியும் படியாக சொல்லு..” எனவும்,

 

“அந்த நீதி கெட்ட மாறன், காட்டில் சிறுத்தையை வேட்டையாட வந்து, மானை வேட்டையாடி விட்டான். அவனால் அவள் கர்ப்பம் தாங்கி நின்ற போது ஆட்களை அனுப்பி கொலை செய்தான்.” எனவும், அதிர்ந்தாள் சந்திராம்பிகை..

 

“என் தந்தையா! இருக்காது! நீதிக்கு புறம்பான காரியத்தை ஒருபோதும் என் தந்தை செய்திருக்க மாட்டார். இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?”

 

“ஆதாரம்..! இதோ பார், மருதபுரி அரசின் சின்னம் பொறிக்க பெற்ற அரையணி ( இடுப்பில் அணியும் ஆபரணம்) மற்றும் உயிருள்ள சாட்சிகளாக மலை மருத்துவச்சி, கொலையை கண்ணால் கண்ட மலைகுடிகள் இருக்கின்றனர். வந்து விசாரணைக்கு உட்படுத்தி அறிந்து கொள்…” எனவும்,

 

சில கணங்கள் அதிர்ந்து நின்றாள் இளவரசி. பின் விழி மூடித் திறந்து தன்னை சமன் செய்து,

 

 

“தவறு செய்தவர் தந்தையே ஆயினும், மன்னனே ஆயினும், நீதி ஒன்று தான்.” என்று அழுத்தமான குரலில் உரக்க சொன்னவள், தலை நிமிர்த்தி,

“எனினும் மக்கள் மன்றத்தில் தெளிவான விசாரணை நடக்க வேண்டியதை, தனியே காட்டுக்குள் சொல்லி என்ன நியாயம் வேண்டுகிறாய்?” என அவனை உற்று நோக்கியவாறு கேட்க.. அவனின் முகம் மின்னியது.

 

“உனக்கு போட்டியாக வந்து விடக்கூடாது என்பதற்காகவும், உயர்குடியில் பிறக்காததாலும் தான்.. என் உடன்பிறந்தவளுக்கும் அவளின் வயிற்று சிசுவிற்கும் அந்த நிலை.. எனவே கண்ணுக்கு கண்.. பல்லுக்கு பல்..

அவள் பிறந்த குடியை சேர்ந்த என்னை நீ மணக்க வேண்டும். என்.. நம் குழந்தை நாளைய அரசனாக வேண்டும்..” எனவும்,

 

முகத்தில் கடும் சீற்றம் எழ அவனை உறுத்துப் பார்த்தாள் இளவரசி சந்திர வதனாம்பிகை…

 

 

**************************

 

 

அனுமதி 13

 

 

இன்று…

 

               “உன் சகோதரிக்கு கல்யாண ஏற்பாடு பண்ணு எல்லாம் சரியாகிடும்.” என்றவனின் குரலில் இருந்தது என்ன!? நண்பனின் குரலிலேயே அவன் மனம் விளங்கிக் கொள்ளும் சிவேஷுக்கு ஏதோ உறுத்த… அமைதியாகினான்.

 

 

இணைப்பைத் துண்டித்து விட்டு அலை பேசியால் நெற்றியில் மெதுவாக தட்டிய ஜெயவர்மனின் முகத்தில் வலி.. நெஞ்சின் ஓரம் ஊசியால் குத்தியது போன்ற வலி.. 

 

 

கண்களை மூடி இருந்தவன், தோளில் மென்மையான விரல்கள் பற்றுவது உணர்ந்து, கண் திறந்து பார்த்தான். கவலையுடன் அவனைப் பார்த்தவாறு நின்றார் அவனின் அன்னை, காஞ்சனா.

 

“என்ன ஆச்சு? உன் முகத்துல இந்த பாவனை நான் பார்த்ததே இல்லையே மோனே..” என்றவர் தயங்கி, “பேரன் ஏதாவது பெரிய நஷ்டம் ஏற்படுத்திட்டானா..?” எனவும், 

 

ஜெயவர்மனின் இதழோரம் ஏளனமாக வளைய, “ இதை மட்டும் அவன் கேக்கணும்… பேசுன வாய், கேட்ட காது, ஏதும் இல்லாம பண்ணிடுவான்.” என்றவன் குரலில் கடினம் ஏற, “ இந்த மாதிரி பேசினா உங்களுக்கு தான் அவமானம் கிடைக்கும்… எப்போ புரிஞ்சுக்க போறீங்க, மாற போறீங்க?” என்றவனின் முகத்தில் சிவப்பேறியது.

 

சற்று நேரம் தலைகுனிந்து அமைதியாக இருந்தவர், விரக்தி புன்னகையுடன், “உண்மை சொன்னா… அவமானமா! எவ்வளவோ கடந்து விட்டேன்…” என்றவர் பெருமூச்சு விட்டு, “மஹாராஜா உன் பேர்ல எழுதி வச்ச சொத்துக்கள் உன் பேர்ல ரிஜிஸ்டர் பண்ணனும்னு ரெண்டு வருஷமா லாயர் சொல்லிட்டு இருக்கார்.. கொல்லம் வர சொன்னாராமே இன்று..” என்று சொல்லியவர் அறிவார் அவனின் மறுமொழி என்னவென்று.. ஆயினும் இந்தக் கேள்விகளை அவர் நிறுத்துவதில்லை.

        

    நிமிர்ந்து அவரின் முகத்தை உற்று பார்த்தான் ஜெயவர்மன், பின் பார்வையை சுவர் பக்கமாய் திருப்பியவன், “ரெண்டு வருஷமா சொல்லியும் போகலைனா. நா செய்யமாட்டேன்.. எனக்கு அந்த விஷயம் பிடிக்கலைன்னு… அர்த்தம்னு.. உங்களுக்கு புரியலையா? புரியாத மாதிரி நடிக்கிறீங்களா? ” எனவும், 

 

மன்றாடும் குரலில்,

“ மோனே.. உனக்கு பிடிக்கலைனாலும் அதெல்லாம் செஞ்சு தான் ஆகணும்.. அது அவர் உனக்காக கொடுத்தது..” என்றவரை, ஒரு கோப மூச்சுடன் இடையிட்டான்,

 

“அது மட்டுமா கொடுத்துருக்கார்… இல்லீகல் சைல்ட் னு பேரும் சேர்த்து கொடுத்துருக்கார்.. எனக்கு பராமரிப்புக்கு இந்த சொத்துக்கள் னு சொல்லி கொடுத்துருக்கார்…” என்றவன் முகத்தில் கசந்த முறுவல், “பராமரிக்கற வயசுலையோ, நிலைலயோ நான் இல்லை…

நல்லது செய்றேன்னு.. உலகத்தின் பார்வைல இன்னும் நம்மை.. என்னை.. இறங்க வச்சுட்டார்.”

 

 

இதை கேட்ட காஞ்சனா தேவியின் முகம், வேதனை வயப்பட்டாலும் , கலங்காமல் மகனின் முகம் நோக்கினார்.

 

 

“அது… உலகம் ஆயிரம் பேசும்.. சட்டத்துக்கு.. உணர்வுகள் பத்தி அக்கறை இல்லை மோனே… அவர் மகன் நீ… ஒரு அப்பாவா அவர் செய்யவேண்டியத எப்பவும் சரியா செஞ்சுருக்கார்… அந்த சொத்துக்கள் உனக்காகவே, உன் வளமான வாழ்க்கைக்காகவே அவர் தந்தது..” என்றதும்,

 

 அழுத்தமான குரலில்,

“எனக்கு… ஏதும் வேண்டாம். அதும்… அவர்ட்ட இருந்து வர்ற வளம் ஏதும்…”

 

 

“படிக்கும் போதும் இதே பிடிவாதம் பண்ணின… உன் மேல் படிப்பெல்லாம் கூட.. நீயே.. உன் வருமானத்தை வச்சு பண்ணிக்கிட்டேன்னு அவருக்கு எவ்ளோ வருத்தம் தெரியுமா… சரி.. அதெல்லாம் பேசுனா உனக்கு பிடிக்காது.

 

இதெல்லாம் சொத்து.. தொழில்னு சொல்றது விட.. அதுல கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வேலை பார்த்துட்டு இருக்காங்க. அதை நினை. அவுங்க குடும்பங்களை நினை. முன்பு மஹாராஜாவை நம்பினவங்க.. இப்போ.. நம்மைத் தானே நம்பி இருக்காங்க.” எனவும்,

 

 விட்டேற்றியான குரலில்,

“அதற்குத் தான் சரியான ஆளுங்கள மானேஜ்மெண்ட் காக, உங்களுக்கு தேர்ந்தெடுத்து கொடுத்துருக்கேன். அவங்க உதவியோடு நீங்க பார்த்துட்டு தானே இருக்கீங்க..”

 

 

 

“என்னால சரியா பார்க்க முடிலை. எவ்ளோ நாள் மத்தவங்கள நம்ப முடியும்? இதெல்லாம் நீ பார்க்கணும்னு தான் ராஜாவோட விருப்பம், என் வேண்டுகோள்.. விருப்பம்… கூட.” எனவும், முகம் கடினமுற,

“அது எப்பவும் நடக்க போறது இல்ல..” என்றவன், வேகமாக சொன்னான்,

 

“இந்த ரிசார்ட் நான் துபைல சம்பாதிச்சதுல கட்டுனது.. என் தொழில்கள் எல்லாமே நான் கஷ்டப்பட்டு உருவாக்குனது. அது போதும் எனக்கு.. உங்களுக்கும் தான்… உங்களை.. என்னை பார்த்துக்க என்னால முடியும்.. அவர் தந்த சொத்து ஏதும் வேணாம்.. என் பேச்சை மதிக்கிறீங்க தானே? ”

 

“மோனே… உன் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தான் முப்பத்திரண்டு வருஷமா அவரோட வாழ்ந்த கிளிமனூர் அரண்மனை விட்டு வந்தேன்..

 

 நீ.. அவரோட உருவம், ரத்தம் கலந்து இருக்கிற.. நீயே.. எனக்கு.. அவர் தந்த சொத்து தானே மோனே!” எனவும் ஜெயவர்மனின் உடல் இரும்பாய் இறுகி.. முகம் செந்தணலாய் ஜொலிக்க சட்டென்று எழுந்தான். 

 

தானும் அவனுடனேயே எழுந்தவராய், “கோபம் வேண்டாம் மகனே.. அதுதான் உண்மை… உலகம்.. சட்டம்.. ஆயிரம் சொன்னாலும்.. நான் அவரின் அன்பு மனைவி. நீ அவரின் ஆசைக்கு உரிய மகன் ங்குறது…” என வேகமாய் சொல்லி சென்றதை, போதும் என்பதாய், கையை உயர்த்தி நிறுத்தியவன்,

 

“நான் நாளைக்கு ராத்திரி சென்னை போகணும்… நான் கிளம்புறேன்.” என்றவன் வாயில் புறமாய் நகர,

மெதுவாய்,

“ ஜெய்… அந்த பொண்ணு வீட்ல இன்னைக்கு உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க.” திரும்பி மறுப்பாய், தலையசைத்தான். அவனின் கடினப் பார்வையில் காஞ்சனையின் இதழ்கள் இறுக மூடிக் கொண்டன. 

 

 அழுத்தமாய் வந்து விழுந்தன பாறையின் உறுதியான வார்த்தைகள். 

 “ இந்த பொண்ணு, கல்யாணம், சொத்து, கையெழுத்து.. இதெல்லாத்துக்கும் ஒரு பெரிய ஃபுல் ஸ்டாப் வைங்க.. என்றுமே… எப்பவுமே நடக்காத… விஷயங்கள். ”

என்றவன் சட்டென்று வெளியேறினான்.

 

 

செல்லும் அவனின் முதுகை நெஞ்சம் கனக்க பார்த்துக் கொண்டிருந்தார் காஞ்சனை தேவி…

 

 

*****************

 

திருவனந்தபுரம்…

 

 

இராஜா இரவீந்திர வர்மன், ஆதித் வர்மன் அரண்மனை.

 

       இரண்டு ஏக்கர் நிலப் பரப்பில் அமைக்கப் பட்ட பல நூற்றாண்டுகள் கடந்த மாளிகை. பழம் பெருமை காக்கப்பட்டு இருந்தாலும் அதில் புதுமையும் கலந்து அழகும் உறுதியும் சேர்க்கப்பட்டு இருந்தது. மிக அழகிய தோட்டம் சூழ, நடுவே கேரளா பாணி கட்டிட அமைப்பில் கம்பீரமாய் நின்றது. மண் ஓடுகளின் சிவந்த வண்ணமும், சுவர்களின் பால் சங்கினை ஒத்த வெண்மை நிறமும் அம்மாளிகையின் பழமை அழகை கூட்டுவதாய்.. 

 

பின் இரவு நேரம் எனினும் ஆங்காங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த அதிக ஒளி பாய்ச்சும் விளக்குகள், அவ்விடத்தை பகல் போல் உணர வைத்துக் கொண்டிருந்தன. அரண்மனையின் முதல் கட்டக் காவலான நெடிது உயர்ந்த மதில் சுவற்றின் இருபதடி உயர இரும்பு கதவு திறக்கப்பட,

 

 

அடர் சாக்லேட் நிற ஆஸ்டன் மார்ட்டின் வேண்டஜ் வாகனத்தை சீருடை அணிந்த ஓட்டுநர் செலுத்த, வந்து இறங்கிய இராஜா ஆதித் வர்மன்.. தனது நிதானமான நடையுடன் மாளிகையின் உள்ளே நுழைந்தான்.

 

மிகப் பெரிய வரவேற்பு அறையை மிக நுணுக்கமான வேலைப் பாடுகள் நிறைந்த தேக்கு மர இருக்கைகள், நீள் அமர்வு இருக்கைகள், திவான் என சொல்லப்படும் இருக்கைகள் 

உயர் ரக பஞ்சு மெத்தைகள், குஷன்கள் பொருத்தமான உறைகளுடன் மிடுக்காய் மிளிர்ந்தன.

 

 

 கண்ணாடி மற்றும் கிரானைட் கல்லை மேற்புறமாக வைத்துப் பளபளத்த மேஜைகள் உயர்ரக பூங்கொத்துக்கள் வைக்கப்பட்ட ஜாடிகளால் அழகு படுத்தப்பட்டு இருந்தன. சுவரெங்கிலும் பழங்கால மற்றும் தற்கால ஓவியங்கள், மின் விளக்குகளால் சிறப்பிக்கப்பட்டு, ஒளிர்ந்து அழகிற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தன.

 

 

         ஒரே நேரத்தில் இருபது பேர் அமருமாறு வடிவமைக்கப்பட்டிருந்த மேஜையில், ஒன்றரை வயதான சிறுவன் இராஜா பிரபஞ்ச வர்மன், தன் தாதியின் அருகில் இருந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருக்க , அவனுக்கு அடுத்து இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த அவனின் அன்னையான இராணி நிரஞ்சனா தேவி, தனது மடி கணிப்பொறியில் தனது நிறுவன ஆடைகள் வடிவமைப்பில் மூழ்கி இருந்தாள்.

 

 

தொழில் நிமித்தமான சந்திப்பில் இரவு உணவை முடித்துவிட்டு தாமதமாக வீடு திரும்பிய ஆதித் வர்மன், தன் இடக்கையை திருப்பி மணியைப் பார்த்தான். தனைக் கண்டு எழுந்து நின்ற தாதியைப் பார்த்து,

 

“இவ்ளோ நேரமாவா சாப்பிடாமல் இருந்தான்..?”

என உறுமும் குரலில் கேட்கவும், தாதி மிரண்ட குரலில், “இளவரசர் தூங்கிட்டார். இப்போது தான் விழித்து எழுந்தார்.” எனவும்,

 

  அவனின் மிரட்டும் பார்வை கண்டு, நிரஞ்சனா,அவளைக்

காக்க முயன்றவளாய், “நான் தான் தூங்கும் போது எழுப்ப வேண்டாம்னு சொன்னேன்…” என, திரும்பி பார்த்தவன், பார்வையில் உடலில் நடுக்கம் தோன்ற தன் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

 

 

மகனைப் பார்த்தவன், “குட்டி இராஜா பிரபஞ்ச வர்மன்!!! டைம் க்கு எல்லாம் செய்ய வேண்டாமா.?” என லேசான சிரிப்புடன் கேட்க, சிறு குழந்தை அவன் என்ன சொல்கிறான் என்றே புரியாமல் விழித்து பார்த்து, “ப்பா….” என்று மட்டும் சொல்ல, திரும்பி மனைவியைப் பார்த்து கடினக் குரலில்,

“ இராஜா என்பவன் உருவாகிறான்.. னு சொல்றதைவிட உருவாக்கப்படுகிறான்… வளர்க்கப்படுகிறான்.. 

 

அது எப்படின்னு உனக்கு தெரியலைனா… என் பாட்டியிடம் கற்றுக்கொள்.” என கண்டிக்கும் தொனியில் கூறவும், நிரஞ்சனாவின் முகம் சுருங்கியது.

 

அப்போது அவனின் குரல் கேட்டுத் தன் அறையிலிருந்து வெளியே வந்த அவனின் தந்தையான இராஜா ரவீந்திரவர்மன், “எப்படி? உன்னை வளர்த்தது போலவா!” என வெறுமையான குரலில் நிதானமாக கேட்க,

 

திரும்பிய அவனின் சில்லிட வைக்கும் மிரட்டல் பார்வையில், அவசரமாக

குழந்தை பிரபஞ்ச வர்மனை அவனின் அறைக்கு கூட்டிக்கொண்டு சென்றார் பணிப்பெண். 

 

தந்தையை கீழ்க்கண்ணால் நோக்கியவன், “அதில் சந்தேகம் என்ன!” எனவும்,

 

கோபமான குரலில்

“நமக்கு வேலைகள் ஆயிரம் இருக்க… அடுத்தவரை அழிப்பது பற்றிய நினைவில் எந்நேரமும் இருப்பது… ஒரு ராஜாவின் செயலா? அது நல்லதாக எனக்கு தெரியலை..” எனவும்,

 

“ஏற்கனவே சொல்லிட்டேன்… டாட்.. எதிரியை அழிப்பது மட்டுமல்ல, உருவாக விடாமல் தடுப்பதும் ராஜ தந்திரம் தான்.” என்றவன், நகர முற்பட,

 

“நம் பரம்பரை சொத்து… அவனுக்காக உன் தாத்தா உருவாக்கிக் கொடுத்த தொழில்கள் … எதையும் அவன் இப்போ வரை தொடலை. அவன் உன் வழிக்கே வரலை. அவனை சீண்டி.. வர வச்சிறாதே…” என்றவரை பொருள் விளங்காத ஒரு பார்வை பார்த்தவன், ஒரு ஏளன புன்னகை சிந்தி விட்டு தன் அறைக்கு செல்லும் மாடி படிக்கட்டில் நிதான நடையுடன் ஏறினான்.

 

தன் அறைக்குள் சென்றவனின் பின்னோடு சென்ற நிரஞ்சனா.. அவன் கழுத்து டை யை தளர்த்துவது கண்டு, மெதுவாக நெருங்கி அவனுக்கு உதவினாள்.

 

 ஏதேதோ கேட்க எண்ணியவள், அவனின் சலனமற்ற முகம் கண்டு, அவனின் குணம் புரிநந்தவளாய் அவனின் கோட்டை கழற்றி எடுத்துக் கொண்டு நகர முற்பட, முடியாமல் சிறைப்பட்டு நின்றாள்.

 

   கேட்க வந்த செய்தி மறந்து போக, அவனின் பிடிக்குள் இம்மன நிலையில் சிக்கினால் அடையும் துன்பம் நினைவு வர, லேசாக திமிறியபடி, “பேக்டரில ஒர்க் நடக்குது. டிசைன்ஸ் அப்ரூவல் பண்ணி அனுப்பிட்டு வந்துருறேன்.” என,

 

அவளின் முயற்சிகளை தடுத்தபடி, தகப்பனின் பேச்சு தந்த கடுமையும் சேர மிக வன்மையாகவே தன் தேவையை நிறைவேற்றிக் கொண்டவன், “எனக்கான உரிமையை நான் என்றும் விட்டுக் கொடுப்பதில்லை. எனக்கு சொந்தமானதை எடுக்க நான் யார் அனுமதியும் கேட்டுட்டு இருக்க மாட்டேன்னு தெரிஞ்சும், உன்னை நீயே காயப்படுத்திக்கிற…” என்றவாறு, சட்டென்று விலகி திரும்பி படுத்தவனை நீர்த் திரையிட்ட விழிகளுடன் பார்த்தாள் ராணி என்ற பெயரில் இருக்கும் நிரஞ்சனா தேவி…

 

 

******************************

 

மதுரை..

 

தன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான் சிவேஷ்.

 

 

     அவனின் மகன் விக்னேஸ்வரை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மதிவதனா, “அண்ணி…” என்றவாறு வர

புன்னகையுடன் எதிர் கொண்டாள், சிவேஸ்வரின் மனைவி மாலா. 

 

 “நானும் விக்கியும் பருப்பு சாதம் சாப்பிட்டோமா… விக்கி ட்ரஸ்ல சாதமாகிடுச்சு.. திட்டாம மாத்திவிடுங்க.. விக்கி.. ட்ரஸ் மாத்திட்டு வா. நாம திரும்பி விளையாட போலாம்..” என்றவள், சிவேஷ் அருகில் சென்று அமர்ந்து தொலைக்காட்சித் திரையை பார்த்தாள்.

 

   ஏதோ YAI’18 அவார்ட்ஸ் என்ற நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்க, “என்ன சேனல் அண்ணே இது! எந்த லோகோ வும் இல்ல?!” என்றவளிடம் சிரித்தவாறே,

 

“யூ ட்யூப் ல கனெக்ட் பண்ணிருக்கேன் மதிக்குட்டி. Youth achievers of india award function.” எனவும்,

 

உதட்டை பிதுக்கி, “ம்ம்ம்” என்றவாறு பார்த்தவள்

 

“புது அண்டராய்டு மாடல் டிவி வாங்கி… இதை தான் பார்க்குறீங்களா!” என்றவள்,

 

“காலேஜ் முடிஞ்சு ரெண்டு நாள் ஆச்சு. ஆபீசில் கார்பெண்டர் வேலையும் முடிஞ்சுருச்சு போல. எப்போ என் ப்ராஜெக்ட் வேலை ஆரம்பிக்கிறது? போர் அடிக்குது..” என்று சொல்லிக்கொண்டு இருந்தவளை கை அமர்த்தி தடுத்தவனின் கவனம் டீவி யில் இருப்பது கண்டு தானும் திரையை நோக்கினாள்.

 

   நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் ஆங்கிலத்தில், “கட்டுமானத்

துறையில் புதிய தொழில் நுட்பங்களை நுழைத்து சாதனைகள் பல படைத்து வரும் கேரளாவை சேர்ந்த இளம் தொழிலதிபர் இராஜா ஜெய வர்மன் அவர்களுக்கு Young Achiever of India, in technology for social good category விருது வழங்கப்படுகிறது.”

 என அறிவிக்கவும்.. வட்ட வடிவில் ஃபோகஸ் ஒளியானது முன் வரிசையில் அமர்ந்திருந்த ஜெயவர்மனை நோக்கி பாய, சிறு முறுவலுடன் எழுந்தவன், பலத்த கரகோஷம் ஒலிக்க, ஃபோகஸ் ஒளி பின் தொடர, தனது வேக நடையுடன் கம்பீரமாக மேடையேறினான். 

 

ஆழ்ந்த சாம்பல் வண்ண பிளேஸர்ஸ், வெண்ணிற சட்டை அணிந்து, உள்ளே ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் டை அணிந்து ஆறரை அடி உயரத்தில் கம்பீரமாய் நின்றவனின் மீது மின்னல் வெட்டுக்களாய் பிளாஷ் மின்ன, சிறு முறுவலுடன் நின்றவனைக் கண்டு பெருமிதமும் மகிழ்ச்சியும் மின்ன ஏதோ சொல்ல வாயை திறந்தவாறு திரும்பிப் பார்த்த சிவேஷ்,

 

அவனின் பெருமிதத்திற்கும் குதூகலத்திற்கும் சற்றும் குறையாத மகிழ்ச்சி பொங்க, கண்களின் சிரிப்பில் நட்சத்திரங்கள் மின்ன இருந்த தங்கை முகம் பார்த்து, வியந்து, பின் புரிந்து கொண்டவனாய், உள்நோக்கி திரும்பியவன், “மாலா… அம்மா இங்கே வாங்க..” எனவும், வீட்டிலிருந்த அனைவரும் என்னவோ ஏதோவென்று ஓடி வந்தனர்.

 

நிகழ்ச்சி அறிவிப்பாளர்,

“எக்கோ க்ரீன் டவுன் என்ற பெயரில், இந்த காலகட்டத்திற்கு தேவையான சூரிய மின்சக்தி தயாரித்தல், பயன்படுத்திய தண்ணீரை மறு சுழற்சி செய்தல், மழை நீரை துளியும் வீணாக்காமல் சேமித்தல், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கட்டுமானம் அமைத்தல், வீடுகளின் குப்பைகளை எரி சக்தியாகவும், உரமாகவும் மாற்றுதல்… இன்னும்

பல விஷயங்களை நீங்கள் பயன்படுத்தி குடியிருப்புகள் உருவாக்கி கொடுத்துக் கொண்டு வருகிறீர்கள். இரண்டு வருடங்களாக அது மிக நல்ல முறையில் இயங்கி, இப்போ இன்னும் நிறைய நகரங்கள்ல, ஏன் வெளிநாடுகளில் கூட அது மாதிரி அமைப்பா எடுக்கப்பட்டு உங்களுக்கு பெரிய புகழ் வாங்கி கொடுத்துக் கொண்டு இருக்கிறது.. இப்போது இந்த அவார்ட் மூலமாக உங்களுக்கு பெருமைன்னு சொல்வது விட, உங்களால் இந்த அவார்டுக்கே பெருமைன்னு சொல்ற அளவு ஒரு இந்தியனா நீங்க சாதிச்சுருக்கீங்க… வாழ்த்துக்கள் இராஜா ஜெயவர்மன்…” எனவும் உதடு பிரியாத முறுவலுடன், தலை அசைத்து அதை ஏற்றுக் கொண்டவனை நோக்கி வந்தார் உள்துறை அமைச்சர். அவரின் கையால் விருது வழங்கப்பட, மீண்டும் கரவொலிகள் எழுந்தன.

 

       அடுத்து அவனின் கையில் ஒலி வாங்கி கொடுக்கப்பட, “மிகப் பெரிய சாதனை செய்துருக்கீங்க..”

எனவும்,

 

 வழக்கமான அரைப் புன்முறுவலுடன், “இது பலரோட கூட்டு முயற்சி. பலரின் கண்டுபிடிப்புக்கள் மற்றும் சாதனைகளை நான் ஒருங்கிணைத்து, ஒரே வடிவமா கொடுத்துருக்கேன். அவ்வளவுதான்… துபைல நான் வேலை செய்த பொழுது அங்கே இருக்கும் கட்டமைப்புக்களைக் கூர்ந்து கவனித்து, அதுல ப்ளஸ், மைனஸ் ஆராய்ந்து, சரியான வடிவம் கொண்டு வந்தோம். இன்னமும் பல விஷயங்களை எக்கோ க்ரீன் குடியிருப்புகளில் சேர்ப்பதில் பரிசோதனைகள் செய்துட்டு இருக்கோம்..” என்று நிறுத்தவும்,

 

“ஓகே.. தொழில் பற்றி சொல்லிட்டீங்க.. குடும்பம் பற்றி… ஆர் யூ மேரிட்?” எனவும், 

 

“யெஸ்…” என்றான்.

 

அவனின் அந்த பதிலில் தன்னையும் அறியாமல்

மதிவதனா சட்டென்று எழ, சிவேஷ் அவள் முகத்தைப் பார்த்தவாறே ஒலி அளவைக் கூட்டினான்.

 

தெளிவாய் நிதானமாய் ஒலித்தது ஜெயவர்மனின் குரல், “ஐ மேரிட் மை ப்ரொஃபஷன்…”

 

 சிறு மூச்செடுத்து 

திரும்பியவள் சிவேஷ் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது கண்டு திடுக்கிட்டு, விழிகளைத் தாழ்த்தி அமர்ந்து கொண்டவள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏதோ வாழ்த்துவதையும், ஜெயவர்மன் தலையசைத்து விட்டு, விருதுடன் தன் இருக்கைக்கு திரும்புவதையும் பார்த்தவள்,

 

விக்னேஸ்வர் உடை மாற்றி வருவது கண்டு சுதாரித்து, “விக்கி, வா போகலாம்..” என்றவாறு அங்கிருந்து நழுவ.. அவளையே பார்த்தவாறு இருந்தான் சிவேஷ்வர்.

 

 

************************* 

 

அன்று…

 

                 கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் எனும் நியாய போர்வைக்குள் தன் பொருந்தா காமத்தை மறைத்துக் கொண்டு, நாவு நீட்டி தன் இரையை புசிக்க நினைக்கும் நாகமாய், நாவை சப்புக் கொட்டி, கண்கள் மின்ன சொன்னவனை, பெரும் சீற்றத்துடன் பார்த்தாள் இளவரசி சந்திரவதனாம்பிகை.

 

“இதுவா நீதி கேட்கும் வழி? குற்றமா, தவறா? என்ன நடந்தது என்று நிரூபிக்காமலே, அவசரமாக உன் ஆசையை நிறைவேற்றப் பார்க்கிறாய்… யாரிடம் பேசுகிறோம் என்ற அச்சம் கூட சிறிதும் இன்றி..” என அழுத்தமான குரலில் மொழியவும்…

 

    “தவறு செய்தவன் இந்நாட்டின் மன்னன், உன் தகப்பன். நான் ஏன் அச்சப்பட வேண்டும்..! நான் பாதிக்கப்பட்டவன்… காக்க வேண்டியவனே கள்வனாய் மாறியதையும், கர்ப்பிணி என்றும் பாராமல் உயிர் காவு வாங்கியதையும் நான் ஆதாரங்களோடு சொல்வேன்.

 

பசுவிற்கு நீதி வழங்க தன் மகனை தேர்க்காலில் இட்ட குடி என்று பெருமை பேசும் மன்னர் குடியில் வந்தவள் தானே நீ..

 

 மக்களால் வருங்கால அரசி என்றும், நீதி காக்கும் நாயகி என்றும் மதிக்கப்படும் நீ… உன் தந்தைக்கு என்ன தண்டனை வழங்குவாய்?” என உரக்கக் கேட்க, 

 

அவனை உறுத்துப் பார்த்தவள், கம்பீரமாய்,

 “நீதியின் முன் மன்னன் குடிமக்கள் அனைவரும் சமமே. குற்றம் நிரூபிக்கப்பட்டால், தக்க தண்டனை நானே வழங்குவேன். நாளை அரசவைக்கு வா.. மறைந்து ஒளிந்து வராமல்.. நேரடியாக ஆதாரங்கள், சாட்சிகளோடு..” என்றவள், பேச்சு முடிந்தது, என்பது போல் குதிரையை நோக்கித் திரும்ப,

 

“மயிலே மயிலே என்றால்… இறகைக் கையில் வந்து தந்து விடுமா என்ன? எனக்கான நீதியை நானே எடுத்துக் கொள்கிறேன்.” என்றவாறு நெருங்கியவனை, தடுத்து நிறுத்தியது, மின்னல் விரைவில் சுழன்று திரும்பிய சந்திராம்பிகையின் வாள்.

 

அவள் நினைத்து இருந்தால் ஒரு கைநொடிப் பொழுதில், திமிராய்ப் பேசும் நாக ஜெயந்தனை வெட்டித் தள்ளி இருக்கலாம். ஆயினும் அவனின் உடலில் காயம் செய்யாமல், மார்பை மட்டும் வலுவாய் குறி வைத்து, அவளை நெருங்க முயன்றவனை எட்டி நிறுத்த செய்து கூர்மையாய் நின்றது.. அந்த நீதிக்கு கட்டுப்பட்ட வாள்.

 

சலசல வென்று ஒலி கேட்க, அவ்வளவு நேரம் மரங்களுக்குப் பின்னே.. மற்றும் புதர்களில் மறைந்து இருந்த நாக ஜெயந்தனின் கூட்டான ஆட்கள் வெளி வந்தனர், கையில் ஈட்டி, வேல், வாள் போன்ற ஆயுதங்களோடு…

 

    சுற்றிலும் பார்த்தவள், திரும்பி, அவனின் முகத்தை, ஏளனம் வழிய பார்த்து சிரித்து, “ஹும்… என்னைத் தனியாக வரச் சொல்லி விட்டு நீ படைத் துணையோடு வந்திருக்கிறாயே… பெரிய வீரன் தான்..” என நகைத்து அனைவரையும் தன் கூரிய விழிகளால் ஒரு முறை சுற்றி நோட்டமிட்டாள்.

 

 பின் கடினமுற்ற குரலில், “எச்சரிக்கிறேன்… ஒரு அடி நகர்ந்தாலும் அனைவரும் இறைவனடி சேர்ந்து விடுவீர்கள்…” என்றவளின் விழிகளில் தெரிந்த சீற்றமும் வீரமும் கண்டு அனைவரும் மிரண்டாலும், ஒருவன் மட்டும் அச்சம் தவிர்த்து வேலுடன் பாய, அவனை நோக்கி வாளை திருப்பியவளை நோக்கி பாய்ந்து வந்தது ஒரு அம்பு சரம்.

 

 

 மின்னலின் விரைவுடன் அதனைக் கண்ணுற்று

தன் வாளினால் அந்த அம்பினை வெட்டியவளின் விரைந்து சுழன்ற வாள் வீச்சில் வேலுடன் வந்தவனின், வேல் கம்பு வெட்டப்பட்டு அடுத்த வெட்டு, அவனின் கழுத்தில் ஆழமாய் இறங்கியது. இரத்தம் கொட்ட அவன் கீழே விழ,

 

“ஹூய்…” என்று அனைவரும் கூச்சலிட, அதை சமிஞ்கையாக கொண்டு மரங்களில், கிளைகளில் மறைந்து இருந்த இன்னும் பலர் குதித்து இறங்கி, இளவரசியை சுற்றி வளைக்க முயல, சுழலும் அவளின் வாள் வீச்சில், அருகில் கூட நெருங்க இயலாமல் திணறிய கூட்டம் வஞ்சகம் கை கொண்டு…

 

சீறும் சிங்கத்தை சிறை பிடிக்க எண்ணும் செந்நாய்க் கூட்டமாய், சுற்றி வளைத்து அவளை நெருங்க முயல, குதிரைகள் கனைக்கும் ஒலி கேட்டது…

 

  எங்கிருந்து!! என்று அனுமானிக்கும் முன், நெருங்கி வந்த, தடதடவென்ற சக்கரங்களின் ஒலியிலும், பல குதிரைகளின் குளம்பொலியிலும் திகைத்து அனைவரும் திரும்பி பார்த்தனர்.

 

வெண்புரவிகள் பூட்டப் பெற்ற பொன் தேரை செலுத்தியவாறு வந்து நிறுத்தியவன், அதே வேகத்தில் கடிவாளக் கயிற்றை விட்டு விட்டு, தாவி குதித்து இறங்கினான்..

 

 கொடை நாட்டின் இளவரசன் இராஜ ஜெய சிம்ம வர்மன்….

 

ஆயுதங்கள் ஏதும் எடுக்காமல் கடினப் பார்வையுடன்.. அதற்கு நேர்மாறாய், முரட்டு இதழ்களில் மென் திமிர்ச் சிரிப்பினை ஏந்தியவாறு இறங்கியவனை பார்த்து, வியந்த சந்திராம்பிகையின் கண்களில் ஒரு இமைப் பொழுது மின்னல் வந்து செல்ல, அழகிய இதழ்களில் சிறு புன்னகை வந்ததே தெரியாமல் வந்து மறைந்தது.

 

      அனைவரும் திடீரென தோன்றிய, அவனின் முகத்தில் தெறித்த வீரத்திலும், ஏறு போன்ற நடையிலும், உருண்டு திரண்டு நின்ற கரங்களின் தசைக் கோளங்கள் மற்றும் படர்ந்து விரிந்த மார்பு காட்டிய உடலின் திண்மையும் கண்டு உறைந்து நிற்க, வாளுடன் பாய்ந்தான் நாக ஜெயந்தன்,

கொடை நாட்டின் இளவரசனின் அடையாளம், பலம் அறிந்தவனாய்..

 

 

 கடுப்புடன், வாளுடன்

பாய்ந்து அருகில் வந்தவனின் முகத்தில் விழிகளை பதித்தவாறு, சட்டென்று லேசாய் விலகிப் போக்கு காட்டி, அவனைத் தாண்டி சென்றவன், சுழன்று திரும்ப, அவன் இரண்டு கைகளிலும் இரு உலோக வட்டைகள் இருந்தன.

 

உலோகப் பட்டை ஒன்று வட்டமாக சுற்றி வைக்கப்பட்டது போல இருந்த அவை அவனின் கைகள் அசைவில் சாட்டைகள் போல நீண்டு தொங்கின. அவற்றை அவனின் கரங்கள் வாள் போல் பற்றி சுழற்றியதில், நாக ஜெயந்தனின் வாள் சுற்றி இழுக்கப்பட்டு எங்கோ பறக்க, அடுத்த இடது கை சுழற்றலில், அவனின் உடலில் இருந்த சதையானது கெல்லி எடுக்கப்பட்டது போல் பிய்த்துக் கொண்டு வந்தது.

 

வலியில் அவன் கத்துவதைக் கண்டு அனைவரும், மிரண்டாலும், தங்கள் தலைவனைக் காக்க வேண்டி, சுற்றி வளைத்திருந்த இளவரசியை விட்டு விட்டு.. வேலுடன் அவனை நோக்கி விரைந்து வந்தனர்.

 

 

அருகில் சென்றால் தானே பிரச்சனை.. என்று தூரத்தில் இருந்தே வேலை எறியவும், தாக்கவும் முற்பட, இரு கைகளால் ஜெயசிம்மன் அந்த உருமி எனப்படும் சுருள்வாள் ஆயுதங்களை சுழற்றிய வேகத்தில், அவனை நெருங்கவும் இயலாமல் அனைத்து வேல்களும் வெட்டப்பட்டு திருப்பப் பட்டு அவர்கள் மேலேயே வந்து விழுந்து காயமடைய செய்தன.

 

அறுபது அணுப்பொழுதில் (5 நிமிடங்கள்), மத யானை புகுந்த வாழைத் தோட்டம் போல் அவ்விடம் சமர்க்களமாகி, ரத்தக் களரியான உடல்களால் நிறைந்து கிடந்தது. நிலமானது.. குருதியால் சிவந்து இருந்தது.

 

செந்நாய்க் கூட்டத்தின் ரத்தத்தில் நனைந்து இருந்த தன் சுருள் வாள்களை உதறியவன், ஒருவிதமாக அசைக்க அவை சுருண்டு மீண்டும் வட்ட வடிவை அடைந்து நின்றன.

 

 அவற்றை தன் இடைத் துணியில் சொருகியவன், நிமிர்ந்து பார்க்க, புன்னகையுடன் இருந்த சந்திராம்பிகை தென்பட்டாள்..

 

 

  விழுந்து முனகிக் கொண்டு கிடந்தவர்களுக்குள் விழிகளை திருப்பி கூர்ந்து தேடியவன், நாக ஜெயந்தனைக் கண்டு அருகில் சென்றான்.

 

          “நாட்டின் இளவரசியை தொட முயன்றவனுக்கு கொடை நாட்டின் சட்டப்படி மரணம் தான் தண்டனை.” என்றவன், குப்புறப்படுத்து இருந்தவனின் கைப் பற்றி திருப்பி விட்டு,  

 

இளவரசியின் முகம் பார்த்து, “மருதநாட்டு சட்டம் வேறோ.. என்ன!” என்றவன், பற்றியிருந்த பிடியை திருப்பிய வேகத்தில், நாக ஜெயந்தனின் கை முறிக்கப்பட, அவனின் அலறல்… காட்டின் மரங்களில் இருந்த பறவைகளை மிரட்டிக் காத தூரம் ஓட வைத்தது.

 

 

இடையில் தொங்கிக்கொண்டு இருந்த வாளை உருவியவன், அவனின் மார்பில் பாய்ச்ச முயல, “சற்றுப் பொறுங்கள்…” என நிறுத்தியது இளவரசியின் குரல். ‘இன்னும் என்ன?’ என்பது போல் எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தான் ஜெயசிம்மன்.

 

 

“இப்போது இவனைக் கொன்றுவிட்டால், ‘நீதி கேட்டு சென்றவனை கொன்று விட்டார்கள்..’ என்று மலைக்குடிகள் எண்ணுவார்கள். இவர்களை சிறையில் அடைத்து, விசாரணைக்கு உட்படுத்திவிட்டு…” என சொல்லிக் கொண்டிருந்தவளை இடை மறித்து,

 

 

“அப்புறமாக கொலைத் தண்டனை வழங்குவீர்களா!!?” என உறுமியவன், கோபம் மிக வீசிய வீச்சில் வாளின் நுனி, நாகஜெயந்தனின் இடக்கண்ணில் பட்டு ரத்தம் வழிந்தது. உயிர் போகும் வலியில் அவனிடமிருந்து கிளம்பிய அலறலில் கூட ஜெயசிம்மனின் மனம் குளிர மறுக்க, “ஹும்ம்….” என்று உறுமியவன், வாளை உறைக்குள் சொருகி விட்டு விரைந்து நடந்து, தேரில் ஏறினான்.

 

 

பெருமூச்சுக்கள் விட்டு சற்று நிதானப் படுத்தியவன், திரும்பி பார்க்க, அவனையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்த சந்திராம்பிகையைக் கண்டு, அவனின் சீற்றம் சற்று மட்டுப் பட்டது. அவளின் கண்களின் பாவனையில், கருணையில் அவனின் உள்ளத்தில் ஏதோ உணர்வு.

 

 

‘இவளின் பார்வைக்கு ஏதோ சக்தி இருக்கிறது… எதற்கும் அடங்கா என் கோபம்.. சூரியனைக் கண்ட பனியாய் உருகிவிடுகிறதே இவள் பார்வையில்..’ என்று எண்ணியவன், ‘இது என்ன உணர்வோ..’ என்று தலை அசைத்து பெரு மூச்சு விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், சுற்றிலும் பார்க்க, அங்கே நடந்த போரில், இளவரசி வந்த குதிரை, எங்கே சென்று மறைந்தது என்று தேடினான். கண்களுக்குப் புலப்படாததால்.. 

நடந்த போர்க் களேபரத்தில் ஓடியிருக்கலாம் என்று அனுமானித்தவன், சிறுவேக மூச்சுடன் சந்திராம்பிகையின் புறம் திரும்பி, “வந்தீர்களானால், உங்களை அரண்மனையில் சேர்த்துவிட்டு என் வழியே போவேன்..” என,

 

அப்போது தான் தான் நிற்கும் நிலை உணர்ந்து சுற்றிலும் பார்த்தவளிற்கு அவனின் அழைப்பின் காரணம் புரிய, மெதுவாக நடந்து வந்து, தேரினில் ஏறினாள்.

 

   சில அணுப்பொழுதுகள் அமைதியில் கழிய, பிடிவாதமாக பாதையில் விழிகளை பதித்து மரங்களை பார்த்துக் கொண்டு நின்றவளைக் கண்டு சிம்மனின் உதடுகளில் சிறுமுறுவல் தோன்ற, “செய்த உதவிக்கு நன்றி எதிர்பார்க்கவில்லை.. ஆயினும்.. ஒரு நன்றிப் பார்வை கூட கிடையாதா!! இது தான் மருத நாட்டுப் பழக்கம் போலும்..” என குறை கூறும் குரலில் பேச, எதிர் பார்த்தது போலவே, அவளின் பார்வை அவன் புறம் திரும்பியது. 

 

சிறு முறுவலுடன், “சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே… நீங்கள் இவ்வளவு சிரமபட்டிருக்க தேவையில்லை… நானே சமாளித்திருப்பேன்…” எனவும்,

 

 கடகடவென்று நகைத்தவன், பாதையில் கவனம் வைத்து தேரை செலுத்தியவாறு, “மருதநாடு ராஜகுமாரியின் வீரத்தின் விளையாட்டை சற்று நேரம் ஒதுக்கி இருந்து வேடிக்கை பார்க்கலாம் என்று எண்ணித் தான் தொடர்ந்து வந்தும்.. மறைந்து இருந்தேன். எனினும்.. பொறுமையே போய்விட்டது.. நீங்கள் போரிட்ட வேகமும், அந்த குள்ளநரிக் கூட்டத்தினரின் குயுக்திகளும் கண்டு…” என்றவன் லேசாக திரும்பி, “கள்வனை நம்பி தனியே வரலாமா தேவி? தன்னம்பிக்கை அளவுக்கு விஞ்சினால் வேறு பெயர் பெற்றுவிடுகிறது..” என்றான் கடினக் குரலில்..

 

அவளின் அமைதி கண்டு உற்றுப் பார்க்க, அவளின் விழி சொல்லும் மொழி புரியாதவனாய் இருந்தாலும், அந்த பார்வை, உள்ளம் வரை ஊடுருவுவதை உணர்ந்து, சட்டென்று பார்வையை அவன் தான் விலக்கி திரும்பிக் கொண்டான்.. 

 

 

  கிடைத்த அரிய சமயத்தில் தம் இருவரது நாட்டின் நிலைகளை, அவளிடம் விளக்க வேண்டிய அவசியம் உணர்ந்து, “ களபத்தின் மன்னன் முத்துவடுகநாதன், ஆயிரம் நாகஜெயந்தனுக்கு சமம்… தனியே மோதுவது பேராபத்தில் முடியும் தேவி. அவனின் முதல் குறி மருதநாடு என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்…” என மெதுவாகவே உரைக்க,

 

“……….” அமைதியையே பதிலாக்கினாள் மருதநாட்டின் இளவரசி. அவளின் அமைதி அவனை குற்றம் சாட்டுவதாய் தோன்ற.. ஏனோ அவனும் அதற்கு மேல் பேசாமல் தேரை விரைந்து செலுத்தினான். 

 

மருதபுரி கோட்டையின் நுழைவு வாயில் தென்பட்டதும், பாதையில் கவனம் வைத்தவாறே, “கொடைநாட்டின் உடன்படிக்கையை மறு பரிசீலனை செயயலாமே தேவி…” என,

 

“நட்புடன் தோள் கொடுக்க உங்களைப் போன்ற அண்டை நாடுகள் இருக்கையில் நீங்கள் அஞ்சுவதற்கு அவசியமில்லை இளவரசே..” என்றவளின் குரல் மாற்றம் கண்டு திடுக்கிட்டு திரும்பியவன், அவளின் பார்வையில் தெரிந்த மாற்றம் கண்டு நெஞ்சம் ஏனோ துவண்டது.

 

 

சென்ற வேகத்தில் திரும்பிய கொடை நாட்டின் இளவரசனின் தேரில் தமது இளவரசியைக் கண்டு கோட்டைக்காவல் வீரர்கள் வேகமாக வாயிலைத் திறக்க.. வேகமாக நுழைந்து அரண்மனை வாயிலை எட்டியது இளவரசன் இராஜ ஜெயசிம்மனின் தேர்.

 

     அமைதியாய் இறங்கிய இளவரசி, கரம் குவித்து,

“நன்றி இளவரசே… அனைத்திற்கும்..” என,

 

உணர்வும் முறுவலும் தொலைத்த அந்த பாவனையில், குழம்பிய ஜெய சிம்மவர்மன், தலை அசைக்கவும் தோன்றாதவனாய், அவளின் முகத்தை உற்றுப் பார்த்து விட்டு, தேரை வெளியே செல்லும் வழியில் திருப்பினான்.

 

*********************

 

 

 

 

What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!