Mon. Jun 2nd, 2025

தாமரையின் ‘ உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்’ 7-9

அனுமதி 7

 

 

இன்று…

 

உறங்கா நகரத்தின் புலர்ந்தும் புலராத காலைப் பொழுது… கோவில் நகரம் என்ற பெயருக்கேற்ப தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு சிறு கோவில்கள். ஐந்தரை மணிக்கே அபிஷேகம், ஆராதனை என்று நடந்து கொண்டிருக்க, தேனீக்கள் என மக்கள் சுறுசுறுப்புடன் நகர்ந்து கொண்டிருந்தனர்.

 

சிவேஷ், தன் பணியாட்களின் உதவியுடன் பூஜைக்கு தேவையான பொருள்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தான். பழங்கள் கூடை கூடையாக வண்டியில் ஏற்றப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த விக்கி, “அது ஏன்… இது… எதற்கு… சாமி நேர்ல வந்து சாப்பிடுவாரா… கோவில்ல நமக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பாரா…” என குழந்தைகளுக்கே உரிய பல கேள்விகளை கேட்டவாறு இருக்க, பதில் சொன்னவாறு பொருட்கள் அடுக்கப்படுவதை மேற்பார்வையிட்டும், சரி படுத்திக் கொண்டும் இருந்தான் சிவேஷ்வர குமார்.

 

தாத்தா சிவப்பிரகாசம் இருக்கும் வீட்டுக் கதவு திறக்கப் படுவதைக் கண்டு அங்கு வேகமாக சென்றவன், அவர் கொடுத்த புதுப் பட்டுப் புடவை, பூச்சரங்கள், மதுரைக்கு உரித்தான மரிக்கொழுந்து, தாழம்பூ சேர்த்துக் கட்டப் பட்டிருந்த மாலைகள் போன்றவற்றைக் கையில் வாங்கியவன், தனி தனி பை, கூடைகளில் வைத்து தன் வெண்ணிற ஃபார்ச்சூனர் வண்டியில் அவற்றை ஏற்றினான்.

 

பிறகு திரும்ப தாத்தாவின் வீட்டிற்குள் சென்றவன், அவரின் சொல்படி பூஜை அறைக்கு சென்று, மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருந்த மரப்பெட்டியின் மீது இருந்த சிவலிங்கத்தை, தொட்டு கும்பிட்டு, அதை நகர்த்தி எடுத்து, அருகே இருந்த மேடை மீது வைத்தவன், மூடியைத் திறக்க, அதற்குள் கறுப்பு நிறத்தில், கனத்த மற்றுமொரு மரப் பெட்டி இருந்தது.

 

சற்றே சிரமத்துடன் அதை வெளியே எடுத்தவன், தாத்தா கொடுத்த சாவி கொண்டு அதன் பூட்டைத் திறக்க, குப்பென்று காய்ந்த மலர்களின் வாசனையும், மெல்லிய சந்தன வாசனையும் புறப்பட்டது. அதனுள் இருந்த பொருள்களை பார்த்தவனின் உடலில் ஏனோ ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது..

 

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய தோற்றம் கொண்ட வீரவாள் பார்வையில் புலப்பட, கீழே மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட காசுகளுடன் கூடிய தாலி ஒன்றும், அதனடியில் மஞ்சளா பச்சையா சிவப்பா என வரையறுக்க முடியாத நிறத்தில் இருந்த மடிக்கப் பட்ட புடவையும் கண்ணில் பட்டது. இப்பொருள்களை சிவேஷ் இப்போது தான் கண்களால் பார்க்கிறான்…

 

வருடா வருடம் கோவிலுக்கு செல்லும்போது இந்த பொருள்கள் வெளி வருவது அவனுக்குத் தெரியும்.. அவனுடைய தந்தையார் தான் எடுத்து வைப்பார்… அந்த சமயம் தாத்தா யாரையும் உள்ளே அனுமதித்தது இல்லை. இன்று அவன் தான் வர வேண்டும் என்று தாத்தா சொன்னதால் ஆச்சர்யத்துடன் வந்தவனிற்கு இந்த வேலை தரப்பட்டதும் சிறு அதிர்ச்சி.

 

அந்த பெட்டிக்கு தினமும் பக்தி சிரத்தையோடு வழிபாடு நடப்பதை அவன் அறிவான். தினமும் வழிபாடு நடைபெற்றாலும், பெட்டி திறக்க படுவது இல்லை. அதிலுள்ள பொருள்கள் வெளியே எடுக்கப் படுவது வருடம் ஒரு முறை மட்டுமே..

 

ஏனோ அவற்றை தொடவே முடியாதவாறு கைகள் நடுங்க ஆரம்பிக்க, “தாத்தா இதையெல்லாம் எடுத்து கொடுக்குறீங்களா…” என்றான் அருகில் நின்ற சிவப்ரகாசத்தைப் பார்த்து… “இளைய தலைமுறை மட்டுமே கையில் எடுக்க வேண்டும் என்கிறது.. வழி வழியா பின்பத்துற நியதி குமாரா..” என்றவர்.. அவனை கூர்ந்து பார்க்க..

 

உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு ஓட, மயிர் கால்கள் குத்திட்டுக் கொள்ள, வாளை சற்று ஒதுக்கி வைத்து, புடவையை தாலியோடு சேர்த்துக் கையில் எடுத்தவன், தாத்தா தயாராக வைத்திருந்த பிரம்புப் பெட்டியில் கைகள் நடுங்க வைத்தான். வாளையும் வெளியே எடுத்து அதற்கான மரப் பெட்டியில் வைத்தவன், மேனி நடுங்கவும், வியர்த்து கொட்டவும் ஆரம்பித்தது.

 

அதற்குள் தீபத் தட்டோடு தயாராக இருந்த சிவப்பிரகாசம் தீப ஆராதனை செய்யவும், சற்றே தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனாக, மூச்செடுத்துக் கொண்டு, வாள் அடங்கிய மரப்பெட்டியையும், புடைவை வைத்த பிரம்புப் பெட்டியையும் எடுத்து சென்று, பூஜைப் பொருள்கள் வைத்து இருந்த தனது வண்டியின் பின் இருக்கையில் கவனத்துடன் வைத்தான்.

 

ஈஸ்வர பிரபு குடும்பத்தினர் ஒரு வண்டியிலும், பிரகதீஸ்வர் குடும்பத்தினர் ஒரு வண்டியிலும் ஏற, சிவேஸ்வரின் கண்கள் ராணியம்மா வீட்டின் புறம் திரும்பி பார்க்க, அங்கே சாம்பல் வண்ண ஜீன்ஸ் பாண்ட், வெள்ளை நிற முழுக்கை சட்டை அணிந்து.. அதை முழங்கை வரை மடித்து விட்டுக் கொண்டே வேகமாக படிகளில் இறங்கி வந்த ஜெயவர்மனை கண்டதும், அவ்வளவு நேரம் நடுங்கி கொண்டிருந்த சிவேஷின் மனது நிலைப்பட்ட உணர்வு.

 

பெருமூச்சை வெளியேற்றியவனாய், தன் நண்பனைப் பார்த்து புன்னகை செய்ய, முகத்தில் கடுமையை அணிந்து இருந்த ஜெயவர்மன், பேண்ட் பாக்கெட்டில் சொருகி வைத்து இருந்த ஃபாஸ்ட்ராக் குளிர்க் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டவாறு வேகமாக வந்து, அங்கே வாகன நிறுத்துமிடத்தில், தன் உதவியாளனுக்கு எனக் கொணர்ந்து நிறுத்தியிருந்த புதிய ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனத்தின் அருகில் சென்றவன், அதில் ஏறி அமர்ந்து அதனைக் கிளப்பினான்.

 

அப்படியே அதை செலுத்தியவாறு, ஈஸ்வர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பணியாளர் கள் ஏறி இருந்த மஹிந்திரா ஜீப் நின்று கொண்டிருந்த இடம் நோக்கி, தன்னை திரும்பியும் பார்க்காமல் அவன் செல்வதைக் கண்ட சிவேஸ்வர் வேகமாய் அவனருகில் சென்றான்.

 

“என் கூட கார்ல வாடா….” என அவனை நகரவிடாமல், ஹேண்டில் பாரைப் பற்றித் தடுத்தவாறு மெல்லிய குரலில் சொல்ல,

 

“ செக்யூரிட்டீஸ் வரும் வரை நான் அங்கனே உன் கூட இருப்பேன். நான் வர்க்கலா கிளம்பனும்.. அவசிய ஜோலி வந்துருச்சு.. நிண்ட அம்மாவான் வெறிச்சு பார்க்கிறார். நீ வண்டிய எடு. நேரமாகுது..” எனவும் தான் திரும்பி பார்த்தான்…

 

தனது சிறிய தந்தை, ஜெயவர்மனை பார்த்தவாறு, சற்றே கோபத்துடன் அமர்ந்து இருப்பதை… இத்தனைக்கும் ஜெயவர்மன் தலை திருப்பிக் கூட அவர் இருந்த புறம் பார்க்கவில்லை..

 

தன் தந்தை பிரகதீஸ்வரரிடம் நண்பன் வரப் போவதை சொல்லி இருந்தவன், சிறிய தந்தையிடம் சொல்லவில்லை. கூட்டு குடும்பத்தில் இது மாதிரி சிறு சிறு உரசல்கள் நேர்வது பழக்கப்பட்டவனாய், நெற்றியை தடவிக்கொண்டவன், தணிந்த குரலில், “சாரி ஜெய், நான் தான் சொல்லி வைக்க மறந்துட்டேன்..” என..

 

நண்பனுக்காக தன் இறுக்கத்தை மறைத்து, “ஹே! பதினோரு மணிக்கு ஃப்ளைட்.. அதுக்காக தான் முக்கியமா இந்த வண்டில வரேன்.. நீ ஒன்னும் டென்ஷன் ஆகாதே.. போய் உன் காரை கிளப்பு. நேரம் ஆகுது.. எல்லோரும் வெயிட் பண்றாங்க..” எனவும் வற்புறுத்த வழியின்றி நண்பனின் முகத்தை லேசான வருத்தத்துடன் பார்த்த சிவேஸ்வர், தனது வாகனத்தில் ஏறி கிளப்பி, நின்று கொண்டிருந்த ஜெயவர்மனின் அருகில் வந்து நிறுத்தி,

 

“அண்ணா நகரில் இருந்து கொடிக்குளம் பதிமூன்று கிலோமீட்டர்.. போக இருபது நிமிடங்கள் ஆகலாம். கூடவே வாடா..” என்று சொல்லி விட்டு முன் செல்ல, அடுத்து பிரகதீஸ்வரர், உஷா ராணி, மாலா, விக்கி இருந்த வாகனம் செல்ல, அவர்களைத் தொடர்ந்தது மதிவதனா ஏறியிருந்த வாகனம்.

 

அதற்கும் பின்னே ஜெயவர்மன் இரு சக்கர வாகனத்தில் வர.. அவனைத் தொடர்ந்தது, பாதுகாப்புக்காக வந்திருந்த பணியாட்கள் இருந்த வாகனம்.

 

இவர்களின் நகர்வை கண்காணித்தவாறு இருந்த ஒருவன் தன் அலைபேசி எடுத்து தகவல் அனுப்பினான். தன் தலைவனுக்கு..

 

முன்னே செல்லும் வண்டிகளின் தூசி படாத தூரத்தில் தொடர்ந்து கொண்டிருந்த ஜெயவர்மனை, ரியர்வியூ மிர்ரர் வழியாக பார்த்த மதிவதனாவின் கண்கள் அவனின் முகம் விட்டு விலக மறுத்தன.. ஷேவ் செய்யாத முகத்தில், லேசான தாடியுடன் இருந்தது அவனின் கம்பீரத்தை அதிகரிக்கவே செய்திருந்தது, காற்றின் வேகத்தில் சிலும்பிய முன்னுச்சி முடியின் அலையாட்டம் கண்டு முன்தினம், அவன் தன் காலைப் பற்றிய போது தடுமாறி பற்றியிருந்த போது, கையில் பட்டதை நினைவுறுத்த, அவளின் உள்ளங்கை குறுகுறுக்க ஆரம்பிக்க, அவஸ்தையுடன் தலை கவிழ்ந்தவள், சில நொடிகளிலேயே மீண்டும் அவனின் முகம் பருகும் ஆவலுடன் நிமிர்ந்து, கண்ணாடியை பார்த்தவாறே வந்தாள்.

 

அவனின் முகத்தை அவளுக்குக் காட்டும் கண்ணாடியானது, அவளின் முகத்தையும் அவனுக்கு காட்டிக் கொண்டிருக்கும் என்ற இயற்பியல் விதியை மறந்து போனாள், வேதியல் தாக்கத்திற்கு உட்பட்டு இருந்த, மதிவதனா…

 

 

கொடிக்குளம்..

 

ஆனைமலையின் அடிவாரத்தில் இருக்கும் சிற்றூர். ஆனை மலையை ஒட்டினாற் போன்று, மிகப்பெரிய நீர்த்தடாகம்.. எவ்வளவு வெயில் காய்ந்தாலும்.. பஞ்சம் வந்தாலும் அந்த குளத்திலும் அதன் அருகில் இருக்கும் கேணியிலும் தண்ணீர் வற்றியதே இல்லை.

 

அதிலிருந்து சில நூறடி தொலைவில், சிறுமேடையில் மலைச்சாமி என அழைக்கப்படும் வினாயகர் வீற்றிருந்தார். இங்கு நந்தி காவலில் நிற்கும் ஆனை முகத்தோன் சிறப்பு வாய்ந்தவராகிறார். பொதுவாக மூஞ்சூறு எனும் எலியை வாகனமாக கொண்ட வினாயகர், இங்கு மட்டும் தான், தன் தகப்பனின் வாகனத்தை அருகில் வைத்துள்ளார்.

 

சிவேஸ்வர் குடும்பத்தினர் அனைவரும் இறங்கி மலைச்சாமியின் பீடம் நோக்கி செல்ல, தனது வாகனத்தை நிறுத்திவிட்டு… யானை ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில, வழு வழுவென்று இருக்கும் வித்தியாசமான மலைத் தொடரை பார்வையிட்ட ஜெயவர்மனின் மனதில் எப்போதோ இங்கு வந்திருப்பது போன்ற உணர்வு. மதுரை மாநகரத்திற்கே தன் வாழ்நாளில் இப்போது தான் முதல் முறையாக வந்திருப்பதை நினைவு படுத்திக் கொண்டவன், இங்கு வந்ததில் இருந்து, தன் மனம் தன் வசத்திலேயே இல்லை என்று உணர்ந்தவனாய், பெருமூச்சு விட்டு தன்னை நிலைப்படுத்தத் தலைப்பட்டான்..

 

மலைச்சாமியை வணங்க அனைவரும் செல்ல, அந்த மலையையே உற்று பார்த்தவாறு நின்றான் இராஜா ஜெயவர்மன்.

 

அனைவரும் வழிபட்டு விட்டுத் திரும்பி வர, அதிலிருந்து சிறிது உள்ளடங்கி இருந்த கனிச் சாமியை வழிபட ஆண்கள் மட்டுமே செல்ல வேண்டும். பழங்கள் மட்டுமே படையலிட்டு வேண்டும்.. என்று சொல்லிய சிவேஷ், தன் நண்பனின் பக்தி ஆர்வத்தைப்(!) பற்றி தெரிந்தவனாய், அவனை அங்கேயே விட்டு விட்டு, மூவரை காவலாக நண்பன் அருகில் நிறுத்திவிட்டு, தன் தந்தை, சிறிய தந்தையுடன்… பணியாட்கள் பழகூடைகளை சுமந்து வர கனிச் சாமி பீடம் நோக்கிச் சென்றான்.

 

அந்த சன்னதி சென்றால் வர கால் மணி நேரம் ஆகும் என்று தெரிந்த பெண்கள் அனைவரும் சுற்றிப் பார்த்து விட்டு… அருகில் இருந்த வயல்களில் கதிர் முற்றி நின்ற நெற்பயிர்கள், காலைக் காற்றில் தலையசைத்து நிற்கும் அழகினை கண்டு அனைவரும் காலார நடந்து செல்ல விழைய, மலையை பார்த்து தனை மறந்து சில நிமிடங்கள் நின்று கொண்டு இருந்த ஜெயவர்மன், திரும்பி பார்த்த போது மதிவதனா.. அந்த பெண்களுடன் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான்…

 

**************************

 

 

அன்று…

 

வனத்திற்கு வேந்தனான சிங்கத்தின் பிடரி முடிபோல், தலை முடி அடர்ந்து தோள் வரை வழிந்து நிற்க, மகுடம் தரிக்காத குறையை, அம்முடியழகே தீர்த்து வைப்பதாய், சிலிர்த்து சிலும்பி நின்றது.

 

இடையில் தரித்திருந்த பட்டாடை, பாதம் வரை புரள… காதுகள், கழுத்து, கைகள் மற்றும் தோள்களில் தரித்திருந்த நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன் ஆபரணங்கள் அவனின் கம்பீரத்திற்கு வலுசேர்த்து நின்றன.

 

கரங்கள் கூம்பி நின்றாலும் உடல் மொழியிலோ, பார்வையிலோ அந்த பணிவு கொஞ்சமும் இல்லாதத்தைக் கண்ட பெருவளத்தானின் கண்கள் அவனின் முகத்திலே நிலைத்து நிற்க, கரங்கள் விருந்தினனை வரவேற்கும் விதமாய்க் குவிந்தன.

 

தனக்கு மாலையிட்ட அரச வேழத்தின் துதிக்கையை, ஒரு புன்னைகையுடன் தடவியவன், ஒரு எள்ளல் புன்முறுவல் சிந்தியவாறு, மாலையை கழற்றிக் கரங்களில் எடுத்துக் கொண்டு இளவரசி சந்திர வதனாம்பிகையை நெருங்கினான்.

 

அவனின் வேகத்தை கண்டவர் மலைத்து நிற்க, பெருவளத்தான் அருகில் நின்று கொண்டிருந்த வீரசேனன் முன்னே நகர தலைப்பட, சட்டென்று ஒரு நொடி, ஜெயசிம்மனின் விழி வீச்சு அவனை வெட்டி, நகரவொட்டாமல் செய்து விட்டு, திரும்பி சந்திராம்பிகை நோக்கிப் பாய்ந்தது.

 

இளவரசியின் அருகே சென்று நின்றவன், மாலையை உயர்த்தி விரித்து பிடிக்க, இதய வடிவில் ஆகியிருந்த அதன் வழியே தெரிந்த மதி முகத்தை கண்டவனின் கண்களில் ஏளன மின்னல்.

“இளவரசிக்கு என்று தொடுக்கப்பட்ட மாலை, என் கரம் சேர்ந்து விட்டதே… அதை தங்களிடம் சேர்ப்பதே நலம்….” எனக் கூறியவாறு அவளையே பார்க்க,

 

இளவரசியின் புன்னகை சிறிதும் வாடவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இமை முடி கூட அசையவில்லை என்பதை கண்ணுற்ற ஜெயசிம்மனின் கண்கள் இடுங்கின.

 

அவனின் கூற்று கேட்டு அங்கு சூழ்ந்து இருந்தோர் திகைக்க,

சற்று பதறியவாறு இடையிட்டார் அருகில் நின்று கொண்டிருந்த கோவிலின் ஓதுவார், “கொடை நாட்டின் இளவலே! பெண்ணுக்கு மாலையிடுவது என்பது மணவாளனுக்கு மட்டுமே தரப்படும் உரிமை. மருத நாட்டின் மரபு அது…” என பணிவான குரலில் அறிவுறுத்த முயல,

 

“அப்படியா..!” என்று அவர் புறம் திரும்பி அறியாதவன் போல் கேட்டவன்,

 

“அப்படி என்றால், இந்த… மாலை…” என்று சொல்லியவாறே இளவரசியை பார்த்தவன், “தங்கள் இளவரசியாரின் வெண்சங்குக் கழுத்தில் இடும் உரிமை எனக்கு இல்லை… என்கிறீர்கள்… ஒரு ராஜ யானைக்கு உள்ள பாக்கியம் கூட ராஜ குமாரன் யான் பெறவில்லை.” என்றவனின் விதண்டாவாதத்திற்கு பதில் கூற இயலாமல் திகைத்து… அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

அப்போது கான மயிலின் அகவல் போல் கம்பீரமாக உரத்து ஒலித்தது இளவரசி சந்திரவதனாம்பிகையின் குரல்,

“சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டி… பார்க்கும் இடமெல்லாம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் தோள் வலிமையும் வாள் வலிமையும் கொண்ட, கொடை நாட்டின் இளவரசருக்கு, பாக்கியத்தில் என்ன குறைவு இருக்கப் போகிறது! ஆயினும்.. மரபு என்று ஒன்று உள்ளதல்லவா… மருத நாட்டின் அழைப்பை ஏற்று, இந்திர விழாவிற்கு வந்தமைக்கு வந்தனங்கள்… விழாக்காலம் முழுவதும் இருந்து சிறப்பிக்க வேண்டும் என்று மருதபுரி மன்னர் பெருவளத்தான் நன்மாறன் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்றவள் ஓதுவார்களைப் பார்த்து, “அடுத்து தெற்கு வாசலில் இருக்கும் கோட்டைக் காவல் தேவியின் கோவிலுக்குத் தானே செல்ல வேண்டும்..” என்றவள்,

 

“பயணக் களைப்பு இல்லையென்றால் தாங்களும் அவ் வழிபாட்டில் கலந்து கொள்ளலாமே..” என்று கேட்டாள்.

 

தன்னிடம் அவள் நேரிடையாகப் பேசுவாள் என்று எதிர்பாராத சிம்மவர்மன், அவளின் அழைப்பை மறுக்க இயலாமல்… மாலையைத் தன் இடக்கையில் மடித்து வைத்தவனாய், அவளின் முகத்தில் நிலைத்த பார்வையுடன்… சம்மதமாய் தலை அசைக்கவும், “அனைவரும் செல்லலாம்…” என்று சந்திராம்பிகை ஆணையிட்டாள்.

 

அவளின் ஆணை ஒலி கேட்டதும்.. மங்கள வாத்தியங்கள் முழங்கத் தொடங்க, அங்கே காத்து நின்ற பாணர்கள் தம் யாழை எடுத்து இசைத்தவாறே, பாடல்கள் பாடியவாறு முன் செல்ல, அதனோடு இசைந்து ஒலித்த தாள வாத்தியங்கள், அப்பாடலுக்கு செறிவு கூட்ட, அதனை ரசித்தவாறே அனைவரும் தேவியின் கோவிலை நோக்கிச் சென்றனர்.

 

சில விநாடி நேரத்தில் சூழ்நிலையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த இளவரசியின் ஆளுமையை எண்ணி வியந்த வீரசேனனின் முகத்தில் ஏனோ ஒரு புன்னகை வந்து அமர, இளவரசியை நோக்கி ஒருமுறை பார்த்தவன், கொடை நாட்டு இளவரசனின் முகத்தைப் பார்க்க விழைய, அந்த நேரத்தில்… அவனும் வீர சேனனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

கல் போன்ற அவனின் கடினமான முகத்தில் எதனையும் அனுமானிக்க முடியவில்லை என்றாலும், அவனின் விழிகளில் தெரிந்த சேதியைப் படித்தவனாய், தன் இமைகளை ஒரு முறை மூடித் திறந்தான் வீர சேனன்.

 

வழிபாட்டிற்குப் பிறகு, காலை விருந்து, அரசு சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருக்க, ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்த தற்காலிகப் பந்தல்களில் விருந்தினராக வந்திருந்த மருதநாடு மக்களுக்கு உணவு வழங்கப் பட்டுக் கொண்டு இருந்தது.

 

அரசவையின் தலையாய உறுப்பினர்களுக்கும், சிறப்பு அரசு விருந்தினருக்கும் தனியே அரண்மனையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விருந்து முடிந்ததும் , இளவரசியை அவளின் அறைக்கு அழைத்து சென்ற வசந்த மாலை, அவளின் தோள் காயத்திற்கு மருந்திட்டு, ஓய்வு எடுக்கச் சொல்லி வற்புறுத்தி, பஞ்சணையும் பட்டுவிரிப்பும் சரி செய்து கொடுத்துப் படுக்கச் செய்தாள்.

 

இளவரசியின் அறை விட்டு வெளியேறி, தன் இல்லம் செல்ல அரண்மனை நந்தவனத்தின் வழியாக சென்ற போது, பருத்து அடர்ந்து இருந்த மகிழம்பூ மரத்தின் பின்னிருந்த உருவம் ஒன்று, அவளை அழுத்தமாகப் பற்றி, அருகில் இருந்த மல்லிகை மற்றும் முல்லைக் கொடிகளின் பந்தலுக்குள் மறைவாக இழுத்துச் சென்றது.

 

அனிச்சையாக தன்னை பற்றி இருந்த உருவத்தை தாக்கக் கை ஓங்கி இருந்த அவளின் முயற்சியைத் தடுத்து, வாழைத் தண்டென இருந்த இரு கரங்களையும் இறுகப் பற்றி மரத்தில் சாய்த்த உருவத்தின் முகம் கண்டதும்… அவளின் எதிர்ப்பு குறைந்து, முகத்தில் நாணமும், செல்லக் கோபமும் குடி கொண்டன.பற்றியிருந்த முரட்டுக் கரங்களில் இருந்து மெதுவாக தன் கைகளை உருவிக் கொண்டவள் அருகிருந்த பன்னீர்ப்பூ மரத்தின் புறம் திரும்பி முகத்தை பதித்துக் கொள்ள,

 

“அந்த மரம் பெறும் சுகத்தை உன் காதலனுக்கு அளிப்பதில் உனக்கு என்ன வருத்தம் வசந்தமே..!”, என்று சிரிப்புடன் உரைத்தவனாய் அவளின் இடையைச் சுற்றி கைகளைச் செலுத்தி அணைத்தவன்… அவளின் கூந்தலின் வாசனை முகர்த்தவாறு, இளம் மூங்கில் தோள்களில் முகம் பதித்துக் கொண்டான்.

 

அவனின் இந்த திடீர் செய்கையால், மொத்த உடலும் இன்ப வசப்பட்டு விறைக்க… தாங்க இயலாதவளாய், முதுகால் அவனின் வலிய தேகத்தை இடித்துத் தள்ளி நகர்த்தியவள், அவனை விட்டு சற்றே நகர்ந்து சென்று, ஆழ மூச்செடுத்து தன்னை நிலை படுத்தியவளாய், “என்ன இது விளையாட்டு வீரரே…” எனவும்,

“மணாளனைப் பெயரிட்டு அழைப்பது மருதநாடு வழக்கமோ..” என குரலில் நகைப்பு துலங்க கேட்க.. கீழ் உதடுகளை முத்துப் பற்களால் பற்றிக் கொண்டவளின் முகமானது வெட்கத்தில் சிவக்க, சூரியனைக் கண்ட அல்லியாய், தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.

 

“என் உள்ளம் கவர்ந்தவளை தரிசிக்க இரு மலைகள், நான்கு குன்றுகள், மூன்று ஆறுகள் தாண்டி வந்தால், என்னவளுக்கு.. என் முகம் பார்க்கக் கூடத் தோன்ற மாட்டேன் என்கிறது..!” என கம்பீரக் குரலை குழைய வைத்துக் குறைப்பட.. மெதுவாக நிமிர்ந்தவள்…

சிறு குரலில், “தாங்கள் செய்த செயல் அப்படி..” சொல்லவும்,

 

அவனோ பெருமூச்சுடன், “பின்னே… என்ன செய்ய சொல்கிறாய்? உன்னைப் பார்த்து ஆறு திங்கள்கள் ஆகிவிட்டன. கண்ணால் பற்றி.. பல நாழிகைகள் கடந்து விட்டன. ஒரே ஒரு வாய் வார்த்தைக்கு பஞ்சமாகி போனது உனக்கு…” , என இரக்கம் வரவழைக்கும் குரலில் சொல்ல…

 

சத்தமின்றி நகைத்து,

“ஆஹஹஹா… இளவரசிக்கு மருந்திடும் நேரத்தில், விரல் பற்றியது, கால் விரலால் அழுந்தி என் மேல் பாதம் வருடியது.. எல்லாம் எந்த கணக்கில் வருமோ… இரவு முழுவதும் கண்களால் பற்றியவாறே வந்தவர், ஒரு வார்த்தை கூடப் பேச விழையாமல், ‘கிளம்புகிறேன்..’ என்றீர்களே… அப்போது எங்கு சென்றிருந்தது இந்த ஆர்வம்…”

என்றவளின் இதழ்கள் செல்லமாய் சுழித்துக் கொள்ள, தன் வலக்கையின் இரு விரல்களால், அவளின் கீழ் உதட்டைப் பற்றினான் அவளின் அன்பன்..

 

“ம்ம்..” என்றவாறு அவனின் கரங்களை அவள் தட்டி விட்டதும், “ஏன் கோபம்!! என் வசந்தமே… உன்னை காணத் தான் வந்தேன். நீ என்னவென்றால் உன் தோழியுடன் ஊர்வலம் கிளம்பிவிட்டாய்.. பின்னோடு வந்தவனை, உன்னோடு பிணைத்து விட்டாய்.. உன் தோழிக்கு உதவச் சொல்லி கண்களால் கெஞ்சல் வேறு…

இளவரசியின் கட்டளையை மீற முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, உன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசத்தான் இங்கே தங்க சம்மதித்தேன்….

 

அதனால் இப்போது என் அலுவலில் ஏற்பட்ட குளறுபடியை நீ அறிவாயா..” என்று உரைத்தவன் யோசனையில் புருவங்கள் நெறிய, “இப்போது நான் நினைத்தால் கூட இங்கிருந்து கிளம்ப முடியாது போல…” என்றவன்…

அவள் கேள்வியாய் நோக்கவும், “அந்த அளவு உன் அருகாமை என்ன கட்டி வைக்கிறது அழகே….” என்று சொல்லியவாறு அவளின் புறமாக நெருங்கி அணைக்க,

 

“இது அரண்மனை நந்தவனம்.. நாம் சந்தித்து மகிழும் அலங்காரநல்லூர் சோலையல்ல… யாரேனும் சேடிப்பெண்கள் ,காவலர்கள் திடுமென்று வந்துவிடக் கூடும்…”

 

“அப்படி என்றால் நான் இப்படியே விடை பெற்று என் அலுவலைப் பார்க்க கிளம்பட்டுமா…” என முறுக்கிக் கொண்டு திரும்பி நிற்க,

 

மெதுவாக அருகில் சென்று, அவனின் வலக்கரத்தைப் பற்றியவள், கொஞ்சும் குரலில், “இன்னும் சில நாட்கள் இருக்கலாமே..”

 

“இருந்து என்ன செய்வது? உன் தந்தையாரிடம் சென்று உன்னை மணமுடிக்க கேட்கலாம் என்றால்… உன் இளவரசியின் திருமணம் நிச்சயம் ஆகும் வரை அது பற்றி எண்ணக்கூட கூடாது என்று விட்டாய்… அருகில் வந்தாலே விதிர்த்து விலகுகிறாய்..” என்றவன்… ஏதோ சொல்ல எண்ணி… பின் அமைதியானான்.

 

“கோபம் வேண்டாம் அன்பரே… கோட்டையின் தெற்கு வாசலின் தேவி கோயில் அருகே நீர் சுனை ஒன்று உள்ளது. அதன் அருகில் ஆறு கால் மண்டபம் உள்ளது. இன்று மாலை சூரியன் மேல் திசையில் மறையும் நேரத்தில் அங்கே சந்திப்போம்..” என்றவள் அவனின் கையை பற்றி கன்னத்தில் வைத்துக் கொண்டு, வீர முகம் நோக்கிப் புன்னகைத்தாள். புன்னகையில் மயங்கிவன்.. கண்கள் கனிய, சரி என்பதாய் தலை அசைத்து விட்டு விடை பெற்றுக் கிளம்பினான்.

 

தான் தங்கி இருந்த விருந்தினர் மாளிகை நோக்கிச் சென்றவன்… வழியில் அரசர்களுக்கான விருந்தினர் மாளிகையைக் கண்டு… சில நொடிகள் யோசித்து… சுற்றிலும் கவனமாக நோக்கி விட்டு, உள் நுழைய… அம்மாளிகையின் முன் அறையிலேயே அவன் கண்டது, சிம்மம் போல நடை பயின்று கொண்டிருந்த இராஜ ஜெய சிம்ம வர்மனை…

 

உள்ளே நுழைந்தவனை நிமிர்ந்து பார்த்தவன் விழிகளில் தீட்சண்யம், முகத்தில் கோபக் கனல். கர்ஜனையாய் ஒலித்தது ஜெய சிம்மனின் குரல்…

 

“வாரும்… கொடை நாட்டின், இளவல் படையின் சேனைநாயகன், வீர வேழசேனரே!!! நலமா?”

******************

அனுமதி 8

 

 

இன்று…

 

 

மதிவதனா அவள் குடும்பத்துப் பெண்களுடன் இல்லை எனவும் திடுக்கிட்ட ஜெயவர்மன், தன் அருகில் நின்றவனிடம்,

 

“வதனா எங்கே?” என்று கேட்டதும், ஒரு நொடி விழித்த அவன்,

 

“மதி பாப்பா.. விக்கித் தம்பிய தூக்கிட்டு தடாகத்துப் பக்கமா போச்சு..” என்றான் அவன்.

 

அதை கேட்டு வேகமாக தடாகம் இருக்கும் பாறைத் திட்டை அடைந்தவன், சற்றே பதட்டத்துடன் எட்டிப் பார்க்க, விக்கியை கரையில் சற்று தள்ளி நிறுத்திவிட்டு, தடாகத்தில் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அல்லி மலர்களில் ஒன்றைக் கொய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள் மதிவதனா.

 

அவள் கைக்கும் மலருக்கும் குறைந்தது ஒரு அடி தூரம் இருக்க… குனிந்த நிலையில் சிறு குச்சி கொண்டு தட்டியும் எட்டியும் பறிக்க முயற்சி செய்யும் அவளின் நிலை கண்டு அதிர்ந்து வேகமாக அருகில் சென்றவன், ”என்ன செய்துட்டு இருக்குன்னு?” என்று பதற்றத்துடன் கூறவும்,

 

திடுமென உரத்து ஒலித்த குரலில் பதைத்து, நிலை தடுமாறி அவள் தடாகத்துப் பக்கமாக சரிவது கண்டு, சட்டென்று தன் இடக்கையை அவளின் இடையை சுற்றி, அழுந்தப் பற்றி, தன் புறமாக இழுத்தான்.

 

 

இழுத்த வேகத்தில் அவனின் மீது மோதி நின்றவள், சில வினாடிகளில் சமாளித்து தன் வயிற்றில் அழுந்தியிருந்த அவனின் கரத்தை விலக்கி விட்டு… ஒரு அடி தள்ளி நின்று அவனை கோப விழிகளினால் முறைத்து,

 

“ஏன் இப்படி காது கிட்ட வந்து கத்துனீங்க..? அதுல தான் பயந்து நான் விழத் தெரிஞ்சேன்.” என்று கத்த,

 

அவளை உறுத்து பார்த்தவன்,

“கையை நீட்டியும்.. அதுல இருந்து ஒரு அடி தூரத்துல இருக்குன்ன மலரை பறிக்க பார்த்த உன் அறிவை… செறிய குட்டிய.. தண்ணி பக்கத்துல வச்சுட்டு, நீ உள்ளே விழுந்துட்டா… அவன் என்ன செய்வான்? கொடிகளில கை கால் சிக்கிட்டு உன்னால நீந்த கூட முடியாதுன்னு.. தெரியாது?” என்றவன்.. வேகமாக சென்று விக்கியை தன் கைகளில் தூக்கி கொண்டு, “ மேல ஏறு..” என்று அதட்டலாய் சொல்லியவாறு மேலே ஏறினான்.

 

 

“அதான் என்னை விட உயரமா இருக்கீங்க தானே… கையும் நீளமாத் தானே இருக்கு.. இவ்ளோ தூரம் வந்துட்டீங்கள்ள.. ஒரு பூ பறிச்சுக் கொடுத்தா என்னவாம்…” என்று இடுப்பில் கை வைத்தவாறு உரக்க சொன்னவள்.. அவன் மதிக்காமல் மேலே ஏறி சென்று விட்டதைக் கண்டு “க்கும்… பேச்சு மட்டும் காது வரை கிழியும்..” என்று முணுமுணுத்தவாறு மேலே ஏறினாள்.

 

வயல் உலாவை முடித்து விட்டு வந்திருந்த பெண்கள் மற்றும் காவலுக்கு நின்ற ஆட்கள் அனைவரும் மேலேறி வந்த இவர்களை வெறித்துப் பார்க்க, ஜெயவர்மனின் முகம் கடினப்பட்டு இறுகியது.

 

சிவேஷின் மனைவி மாலாவின் அருகில் சென்று விக்கியை அவள் கைகளில் கொடுத்தவன், சற்றே எரிச்சலுடன் கைக் கடிகாரத்தைப் பார்க்க, மணி ஏழை நெருங்கி கொண்டிருந்தது.

 

“ப்ப்ச்… “ என்று மொழிந்தவாறு, ஜீப்பின் சீட்டில் சென்று அமர்ந்தான்.

 

“எங்கேடி போன..” என்று கேட்ட தாயார் ஆனந்தியிடம்,

 

“விக்கி ஃப்ளார்ஸ் நேம்ஸ்ல அல்லி பூ பத்தி படிக்கறான்ல.. அதான் அது காட்ட… குளத்துக்கு கூட்டிட்டு போனேன்.”

 

“அத்தை.. லில்லி ஃப்ளார்ஸ் வேணும் எனக்கு..” என்று விக்கி கேட்க, “அதான் பறிக்க முடியலையே..” என்று சொல்லி விட்டு ஜெயவர்மனைப் பார்த்து முறைத்தாள்.

 

“குளத்துக்கிட்ட போனீயா..?” என்று ஆனந்தி கோபமாக கேட்டார்.

 

“அந்த குளம் ரொம்ப ஆழம்டி.. விழுந்தா தூக்கக் கூட முடியாது… முந்தி காலத்துல பாண்டிய நாட்டு ராஜ குமாரிய ஒரு மலைக் கள்ளன் தூக்கிட்டு போக ட்ரை பண்ணினானாம்… இந்த மலை மேல தேரை ஓட்டிட்டு போன போது அவுங்களை தொடர்ந்து வந்த சேர நாட்டு ராஜகுமாரன் அந்த பெண்ணை காப்பாத்த முயற்சி செய்த போது தேர் தடுமாறினதுல திரும்பி மலைல இருந்து இந்தக் குளத்துல விழுந்துருச்சாம்..

 

முழுக்க தங்கத்தால் செய்த அந்த தேரை எடுக்க பல காலம் எவ்வளவோ முயற்சி பண்ணாங்களாம்.. நீரை இறைக்க இறைக்க ஊறிக்கிட்டே இருந்ததால் அந்த தேரை மீட்கவே முடியலையாம்.. இப்பவும் அந்த தேர் அந்த குளத்துக்குள்ள இருக்குங்குறது.. இங்குள்ள நம்பிக்கை… இது இங்கத்திய மக்கள் சொல்ற செவி வழிக் கதை… ” என்றவர்,

 

மலையை சுட்டிக் காட்டி..அதில் நான்கு கோடுகள் இருப்பதைக் காட்டியவர், “அது தான் அந்த தேர் விழுந்தபோது சக்கரம் உரசின அடையாளம்.” எனவும் விழி விரித்துக் கதை கேட்ட விக்கியும் மதிவதனாவும் ஆச்சரியமாக அந்தக் கோடுகளைப் பார்க்க,

 

“ஒரு தேர் முங்குற அளவு ஆழம். தாமரை, அல்லித் தண்டுக் கொடிகள் வேற உள்ள நிறைய இருக்கும் விழுந்தா காலை சுத்தி இழுத்துரும்.. யாரும் அந்த குளத்துல இறங்க மாட்டாங்க..” எனவும் திகிலுடன் திரும்பி ஜெயவர்மனைப் பார்த்தாள்.

 

அவனின் பார்வையோ மலையின் மீது நிலை பெற்று இருந்தது…

 

 

*************

 

 

 

அதே நேரத்தில் அழகு மலையின் பெரிய மாளிகையில் தன்னுடைய அறையில் உல்லாசமாக விசிலடித்தவாறு தலையை வாரிக் கொண்டிருந்தான் திருமலை. கண்ணாடியில் உற்று பார்த்து தன் அடர்ந்த மீசையையும் வாரிக் கொண்டவன்,

 

“நடக்க போறது கல்யாணமோ… சாந்தி முஹூர்த்தமோ.. தெரியலையே… எதுக்கும் தயாரா இருப்போம்.” என்றவன் குதூகலத்துடன் சிரித்தவாறு வாசனை திரவியத்தை தன் மீது பீச்சி அடித்துக் கொண்டான்.

 

தன் அறையில் இருந்து வெளியே வந்தவன், அங்கே வரவேற்பறையில் அமர்ந்து செய்தித் தாளை பார்த்துக்க கொண்டிருந்த அழகுமலையின் அருகில் சென்று, “ நான் கிளம்புறேன் நைனா..” எனவும், நிமிர்ந்து பார்த்தவர் புன்னைகைத்து, தலை அசைத்து அருகில் நின்று கொண்டிருந்தவனைக் காட்டி,

 

“இவன் சொல்றதக் கேளு… அப்புறமா போகலாம்..” எனவும்.. அங்கே நின்றிந்தவனை நிமிர்ந்து பார்த்தான்.

 

“அண்ணே! கேரளாவுல இருந்து தகவல் வந்துருச்சு… நேத்து நாம பார்த்தவன் ராஜ வம்சமாம். அங்கே வர்க்களாங்குற ஊர்ல நாலு தொழில். பத்தாததுக்கு.. இவனும் பெரிய பில்டிங் கட்டுற கம்பெனிக ஆரம்பிச்சு… அதுலயும் நல்ல சம்பாத்தியம் போல…

அப்புறம் அண்ணே.. அவன் கிட்ட சாக்கிறதையா இருக்க சொன்னாரு.. அவன் குடும்ப தகராறில.. அவன் பங்காளிங்கள ஒத்தையாளா எதுத்து நின்னு.. ஓட விடுறானாம்… அவன போட்டுத் தள்ள இப்பவும் அவன் பங்காளிங்க, ரெடியா இருக்கங்களாம்..

இப்போ நாம விசாரிச்சதும், இவன போட்டு தள்ள ஆஃபரான்னு தான் அந்த ஆள் முதல்ல கேட்டான். இவன் எல்லாருக்கும் தண்ணி காட்டுறவனாம். கவனமின்னு சொன்னாங்க அண்ணே..” எனவும்,

 

நாக்கை மடித்துப் பற்களைக் கடித்தவன்,

“என்னடா தண்ணி காட்டுறவன்… நம்மள பத்தி தெரியுமில்ல… மதி விஷயத்துல அவன் குறுக்கால வந்தா… வ*****.. ஒரே வெட்டு. அடிச்சு சாச்சு வைகை ஆத்து மணலுக்குள்ள பொதச்சு தள்ளிட்டு போய்ட்டே இருப்பேன்.” என்று உறுமியவாறு ஆட்காட்டி விரலால் முறுக்கு மீசையை மேலேற்றிக் கொண்டவனின் கண்களில்.. வெறி.. இரை கண்ட புலியின் வெறி…

 

அழகு மலை, “நீ எச்சா ஆளுங்கள கூட்டிட்டு போ… பொருளுங்க சத்தமில்லாம வேலை செய்யுறதா இருக்கட்டும். அவனை முடிச்சுட்டு… அவன் பங்காளிங்க கிட்ட கூட துட்டு தேத்தலாம் போலவே..

ஹா.. ஹா…” என்று சிரித்தவரின் முகத்தில் குள்ள நரியின் குதூகலம்.

 

 

 

*********************

 

 

ஜீப்பின் சீட்டில் சாய்ந்து அமர்ந்து இருந்ததவன், அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

 

கனி சாமி பூஜை முடித்து வந்த சிவேஷ், நண்பனை நோக்கி வேகமாக வந்து… சுளித்த புருவங்களுடன் இறுகி இருந்த ஜெயவர்மனின் முகத்தைக் கண்டு, “என்ன என்ன ஆச்சு!!” என,

 

“ஒன்னுமில்ல..” என்றவன் சற்றே சுதாரித்தவனாய் ஜீப்பை விட்டு இறங்கினான்.

 

நண்பனின் முகத்தை பார்த்துக் கொண்டே, “பூஜை சாமான்களை எடுத்துக்கிட்டு கிளம்புவோம். மலை மேல பதினைஞ்சு நிமிஷம் நடக்கணும். மலைக்குடி பூசாரி தயாரா இருக்கார்.” எனவும்

 

“இங்கே உன் ஆள் ஒருத்தரை இருக்க வை ஷிவ். யாராவது வந்தா.. உடனே உனக்கு இன்ஃபார்ம் பண்ண சொல்லு. இன்னும் கொஞ்ச நேரத்துல என் செக்யூரிட்டீஸ் வந்துருவாங்க..” என்றவன்..

யோசனையாக, ”பூஜை முடிய இன்னும் எவ்ளோ நேரம் எடுக்கும்?” எனக் கேட்க,

 

“இன்னும் இரண்டு மணி நேரத்தில் இங்கே இருந்து கிளம்பிரலாம்டா…”

 

“கோவிலுக்கு வர மலைப் பக்கமா ஏதும் வழி இருக்கா?” எனவும்..

 

“மலைக்கு அந்த பக்கத்திலிருந்தும் வர முடியும். அது ரொம்ப சுத்து வழி. காட்டுக்குள்ள புகுந்து வரணும். அங்கே மலைக்குடிகள் கிராமம் இருக்கு அது தாண்டி வரணும்.”

 

ஜெயவர்மன், “நீ முன்னே போ… நடுவில.. உன் பேமிலி… பின்னாடி ஓர்க்கேர்ஸ் கூட நான் வரேன்.” என,

 

இவர்கள் பேசுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த தன் குடும்பத்தினரை சங்கடமாக பார்த்து விட்டு, ஜெயவர்மனிடம் குனிந்து, “ஏண்டா இவ்ளோ அலப்பறை பண்ற?” என மெதுவாகக் கேட்டவனை ஆழ்ந்து பார்த்தான்.

 

அழுத்தம் மிகுந்த குரலில், “பொண்ணு மேலயும் ப்ரோபேர்ட்டீஸ் மேலயும் ஆசை வச்சவன்.. என்ன வேணா பண்ணுவான். நீ போ… நான் பின்னாடியே வரேன்.” என்றவன் சொன்னது பெரியவரான பிரகதீஸ்வருக்கும் சரியாகப் பட,

 

“அந்த தம்பி நம்ம நல்லதுக்கு தானே சொல்றான்.. அப்படியே செய்வோம்.” எனவும் அனைவரும் அமைதியாக மலை மீது ஏறும் வழி தொடங்கும் இடம் நோக்கிச் சென்றனர்.

 

சிவேஷ்வர் பிரம்புப் பெட்டியை எடுத்து தன் தந்தை கையில் கொடுக்க, அவர் அதை மதிவதனாவின் கையில் கொடுத்தார். சற்று கனமாக இருந்ததால் வாள் இருந்த பெட்டியை தான் எடுத்துக் கொண்டான்.

 

மேலே ஏறி சிறிது தூரம் தாண்டியதும், வழியில் சிறு சிலையென இருந்த வனக்காளி அம்மனின் முன் எலுமிச்சைப் பழங்களை அறுத்து, அவளின் காலடியில் பிழிந்து விட்டு, அந்த எலுமிச்சைத் தோலிலேயே விளக்கேற்றி வைத்தார் பிரகதீஸ்வரர் மனைவியும் சிவேஷ்வரின் தாயாருமான உஷாராணி.

 

பிறகு சிறிது தூரம் ஏறியதும், அடர்ந்த மரங்களுக்குள் மறைவாய் இருந்த… ஒரு பெரிய குடைவு போல் தென்பட்ட குகைக்குள் இருந்த, குலதெய்வக் கோவிலை அடைந்தனர்.

 

பாதுகாப்பிற்கு வந்தவர்கள் குகை வாசலுக்கு முன்னே இருந்த இடத்தில் நின்று கொள்ள பிரகதீஸ்வர், ஈஸ்வரபிரபு குடும்பத்தினர் உள்ளே நுழைந்தனர்.

 

கோவில் என்றால் மண்டபம்.. சன்னிதி என்றெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட மூன்றாயிரம் சதுர அடி இருந்த இடத்தில் நடுவில்… ஒரு பீடத்தில் சிறிய அம்மனின் சிலை. ஒருபுறம் வித்தியாசமான அமைப்பில் திரிசூலமும் மறுபுறம் நாலடி உயரக் கம்பத்தின் மீது பழங்கால உடுக்கை போல தோற்றத்தில் ஆனால் சற்றே பெரிதான ஒரு தாள வைத்தியம் தொங்கிக் கொண்டு இருந்தது.

 

சிரித்துக் கொண்டிருந்த அம்மனின் அழகிய முகத்திலே இருந்த கண்களில் அவ்வளவு காருண்யம்.. இதழ்கள் சிரிப்பது போல மலர்ந்து நின்றாலும் அதில் வீரம் தொனித்தது.

 

ஒருகாலை மடித்து ஒரு காலை, தரையில் இருந்த சீறிப் படமெடுத்தாடும் பாம்பின் தலை மீது வைத்திருந்தாள்.. வலக்கை சின்முத்திரை காட்டி நிற்க இடக்கை அபயஹஸ்தம் காட்டி நின்றது.

 

இளம் வயதினரான மதி, மாலா, விக்கி ஆர்வத்துடன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தனர். மதி எப்போதோ சிறு வயதில் வந்தது. எனவே எல்லாமே புதிதாகத் தெரிய அவளும் ஆர்வத்துடன் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

பெரியவர்கள் அனைவரும் ஆங்காங்கு இருந்த பாறை திண்டுகளில் அமர பெண்கள் தரையில் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்தனர்.

 

 

அங்கே ஏற்கனவே மலைகுடியை சேர்ந்தவரான பூசாரி மற்றும் அருகிருந்த மலை கிராமத்துப் பெண்கள் சிலரும் இருந்தனர். அழகாக சுத்தம் செய்யப்பட்ட குகையும், அரிசி மாவுக் கோலங்களும் அவர்கள் கைங்கர்யம் என்று அறிந்த உஷாராணி அவர்களை பார்த்து நட்பாய் புன்னகைத்து நலம் விசாரித்துப் பேசினார்.

 

காவலுக்கு வந்திருந்த

வேலையாட்கள் பூஜை பொருள்களை கொண்டு வந்து வைத்து விட்டு வெளியே சென்று நின்று கொண்டனர்.

 

அம்மனின் பீடத்தில் இருந்த சிறு மேஜையின் மேல் பிரம்பு பெட்டியும், வாள் இருந்த மரப் பெட்டியும் வைக்கப்பட்டது.

 

மலைக்குடி பெண்கள் பீடத்தை சுற்றி துணி கட்டுவித்து அம்மனுக்கு அபிஷேகம் செய்துவித்து, சிவேஷ் குடும்பத்தினர் எடுத்து வந்த புடவை சாற்றி மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய… உஷாராணியும் ஆனந்தியும் உதவினார்கள். மாலாவும் மதிவதனாவும் விக்கியின் கேள்விகளுக்கு பதில் சொன்னவாறு தாமும் அரட்டையில் ஆழ்ந்து இருந்தனர்.

 

சிவேஷ் சென்று ஜெயவர்மனை உள்ளே அழைக்க வர மறுத்த ஜெயவர்மனிடம், “ உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்டுறேன் னு சொன்னேன்ல.. வா” என்று உள்ளே இழுத்து சென்றான்.

 

அம்மனின் பீடத்தைக் கண்டு சில நொடிகள் அவன் தயங்கி நிற்க, அவனின் கை பற்றி இழுத்து இன்னமும் சற்று உள்ளே தள்ளி.. சற்று உள்ளடங்கி இருந்த இடத்தில் பழங்காலத்து வேல்கள், மணியுடன் கூடிய ஈட்டிகள் நட்டு வைக்கப்பட்டு இருக்க நடுவில் நடுகல் என சொல்லப்படும், நட்டு வைத்தக் கல்லின் மீது இருந்த ஒரு புடைப்பு சிற்பத்தைக் காட்டினான் சிவேஷ்..

 

“இவர் முகத்தை பார்த்தியா… என் முகத்தை போலவே இல்லை…” எனவும்.. ஜெயவர்மனுக்கு உற்று உற்று பார்த்தும் முகமே புலப்படவில்லை. ஆனாலும் ஆமாம் என்பது போல் தலை அசைத்துக் கொண்டான்.

 

“இதைப் பாரேன்.” என்று காட்ட பக்கச் சுவற்றில் எண்பது சதவீதம் அழிந்த நிலையில் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஓவியம் இருந்தது… அதில் ஒரு பெண்ணரசியின் உருவமும், மகுடம், இடைவாள் தரித்த மன்னவன் உருவமும் இருப்பதைக் கண்டு உற்று நோக்கியவன் மின்சாரம் தாக்கியவன் போல் அதிர்ந்தான்.

 

பெண்ணின் உருவத்தில் ஒரு கண்ணும் அதரமும் மட்டும் புலப்பட.. அழிந்தும் அழியா நிலையில் இருந்த ஆணின் உருவத்தில் ஒருபக்க முகம் மட்டும்… தெரிந்தது.

 

 

பேச்சற்று நின்ற இராஜா ஜெயவர்மனின் காதுக்கருகில்

சிவேஷின் குரல் ஒலித்தது, “அது உன் முகம் போலவே இருக்குல்ல…”

 

 

**********************

 

 

அன்று…

 

“வாரும்… கொடை நாட்டின் இளவல் சேனை நாயகன் வீர வேழசேனரே! நலமா..?” என்று ஒலித்த குரலில், அடக்கப்பட்ட எள்ளலும் கோபமும் இருப்பதை உணர்ந்த வீரசேனன் உதித்த முறுவலுடன், தன் வலக்கை விரல்களை மடக்கிச் சேர்த்து இடது மார்பில் வைத்து, தலை வணங்கி சொன்னான்…

 

“கொடை நாட்டின் இளவலும், நாற்படைக்கும் நாயகனும் ஆன இளவரசர் இராஜ ஜெய சிம்மவர்மருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.” எனவும் முன்னேறி வந்த சிம்மவர்மன், வீரசேனனின் தோளில் ஓங்கி அடித்தான்,

 

“இந்த விளையாட்டிற்கு ஒன்றும் குறைவு இல்லை. இதோ வருகிறேன் என்று சொல்லிச் சென்றவன், திடுமென்று செய்தி அனுப்புகிறாய். ‘ மருதநாட்டு அரசு விருந்தாளியாக இருக்கிறேன். இரண்டொரு நாட்களில் வருகிறேன்.’ என்று.. என்னவென்று பொருள் கொள்வது..? மருதநாடு பற்றி ஆராயச் சென்றவனிடமிருந்து இப்படி ஒரு தகவல் வந்தால்!!!” எனவும்…

 

சிறுமுறுவல் பூத்தவனாய், வீர வேழசேனன்,

“எனது வாள் மற்றும் தோள் வலிமை பற்றி.. அவ்வளவு ஐயமா இளவலே!!”

 

” உன்னை.. ஒரு இடத்தில் அதிகாரத்தால் கட்டி வைக்க… உனது வில்லையும் வாளையும் வெல்ல… தரணியில் யாருமில்லை என்பது யான் அறிந்தது தான். எனினும் மருதநாட்டினரின் நட்பு, மரியாதை பற்றி அறிந்ததால் வந்த ஐயம். ஆமாம்… மருதநாட்டின் எல்லைப் பகுதிகளில் தானே பாதுகாப்பு, மற்றும் படைபலம் பற்றி ஆராயச் செல்கிறேன் என்றாய், கோட்டைக்குள் எதற்கு வந்தாய்? அதுவும் நமது நாட்டுடன் நட்பு, உறவு எதுவும்… வேண்டாம் என்று மறுத்தவர்களுடன்…!” என்றான் சினத்துடன்…

 

 

“இளவரசே! இவற்றையெல்லாம் ஆராயத்தானே என்னை அனுப்பினீர்கள்… எனக்கென்னவோ… அந்த நிகழ்வில் ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது என்று தோன்றுகிறது.”என்றான் தன் முகவாயைத் தடவியவாறு..

 

 

“வேழா! மருதநாடு மற்றும் கொடை நாட்டின் வடக்கில் உள்ள களவ நாடு வேந்தன், முத்து வடுக நாதன் கை ஓங்கி வருகிறது. ஆனை மலைக் குடிகளும் அரசிற்கு எதிராக செயல்படுவது போல் தெரிகிறது. தெற்கிலும் கிழக்கிலும் கடல்வழி அச்சுறுத்தல்கள் வேறு உள்ளன. இந்நிலையில் அருகில் வலிமையாய் உள்ள நமது உறவை விலக்கித் தள்ளிவிட்டு, தனித்து இயங்குவது என்பது மருத நாட்டின் நிலைப்பாடாக இருக்கிறது.

 

நாம் உள்நாட்டுப் பூசல்களை அடக்க… படைகளை அனுப்பி உதவுகிறோம் என்றோம். அவசியமில்லை என்று பதில். அது போகட்டும்.. திருமண உறவு கொள்ள விழைகிறோம் என்று நாசூக்காக கேட்டதற்கு… எப்படி ஒரு நறுக்குத் தெரித்தாற் போன்ற பதில்..!!! ” என்றவனின் முகம் சிவந்தது.

 

“நமது நட்பையும் ஏற்கவில்லை. உறவையும் ஏற்கவில்லை. இதைத் திமிர் என்று கொள்ளவா.. அலட்சியம் என்று கொள்ளவா.. ”

 

“இளவலே! கோபம் வேண்டாம். மருதநாட்டில் ஆட்சியும் பாதுகாப்பும் சிறப்பாகவே இருக்கிறன. காவல் படையும் பலம் பொருந்தியதாக உள்ளது. அதனால் உதவியை.. மறுத்திருக்கலாம்.. எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் அன்பும் நம்பிக்கையும் மருதநாட்டின் அரச குடும்பத்தின் மேல் உள்ளது. அதுவும் இளவரசியின் மேல் அவர்களின் அன்பு அளப்பரியது.. ”

 

“அதுதான் வேழா! வியப்பாக இருக்கிறது.. ஒரு சிறு பெண் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்கிறாள். அவள் பேசும் வார்த்தைக்கு மறு வார்த்தையே கிடையாது போலும்.”

 

“இளவரசே! இளவரசியார் மருத நாடு அரசருக்கு நிகராக மக்களின் அன்பை, காவல் வீரர்கள் மற்றும்… ஊர் தலைவர்களின் மதிப்பைப் கூட பெற்றுள்ளார்கள். நான் பார்த்த வரை, அவர்கள், வீரத்திலோ, விவேகத்திலோ, அன்பிலோ சளைத்தவர்கள் அல்லர்.

மக்களுக்கு ஒரு துன்பம் நேர்வதைக் கண்டால் தானே முன்னின்று அதைக் களைய நினைக்கிறார்கள். அவர்களின் வாள் திறமை மற்றும் போர்த் திறமை கண்டு நான் வியந்தே போனேன்.” என்ற வீரசேனனின் குரலில் இருந்த பரவசம் கண்டு, முகம் சுருங்கி, பொறாமை வழியும் குரலில்,

 

“ஏதேது… விட்டால் கொடை நாட்டின் சேனை நாயகன் பொறுப்பை விட்டு விட்டு இங்கே இளவரசியின் மெய்க் காவல் படையில் சேர்ந்து கொள்வாய் போலவே…” எனவும்…

 

முறுவலுடன் சிம்மவர்மனை நிமிர்ந்து பார்த்தான் வீர வேழ சேனன்.

“சேர்ந்திருப்பேன். இளவரசன் ஜெய சிம்மவர்மன் என் தலைவனாக.. தோழனாக இல்லாது இருந்தால்..

இப்போதும் எனைப் பொருட்டே… இங்கு என் நிலை பற்றி கலங்கியே.. தங்களுக்கு பிடிக்காத இந்த கோட்டைக்குள் நுழைந்தீர்கள் என்று நான் அறிவேன்.” என பெருமிதமும் தோழமையும் வழியும் குரலில் கூறியவன் தொடர்ந்து,

 

“ சற்றுப் பொறுங்கள்… இளவரசிக்கு, மன்னருக்கு நாம் புரியவைப்போம் இளவலே… மருத நாட்டினை சூழ்ந்து வரும் அபாயங்களை…. நம்முடன் நட்பாக இருப்பது, தங்களுடன் இணைவது, அவர்களுக்கு நன்மையே தரும் என்பதை.. புரிய வைப்போம்.”என்றவன்,

 

தொடர்ந்து முன்தினம் வேளாளர்கள் கிராமத்தில் நடந்த மலைக் கொள்ளையர்கள் தாக்குதல் பற்றியும்… அவர்களை சந்திராம்பிகை எதிர் கொண்ட தீரத்தையும் விவரித்தான்.

கொள்ளையர் தலைவன் சூளுரைத்தது பற்றியும்.. அம்மக்களின் அன்பையும், தனக்கு காயம் பட்ட நிலையிலும்.. அந்த சூழ்நிலையிலும் அடுத்து கிராமத்தை சீர் செய்வது பற்றிய அவளின் யோசனைகளையும் பாதுகாப்பிற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளையும் கூறினான்.

 

கேட்க கேட்க இளவரசன் முகத்தில் எரிச்சலும் சிடுசிடுப்பும் குறைந்து, யோசனை குடி கொள்ள ஆரம்பித்தது.

 

“இவ்வளவும் அறிந்தவள், மதி நுட்பம் கொண்டவள்… ஏன்! சூழ்ந்து வரும் எதிரிகளை புரிந்து கொள்ள மறுக்கிறாள்..கொடை நாட்டினோடு இணைவது மருத நாடு பாதுகாப்பிற்கும் நன்மை தான் பயக்கும் என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்..” என்றான்.. முகவாயைத் தடவியவாறு..

 

“அதற்கு ஏதேனும் காரணம் இருக்கக் கூடும் இளவரசே.. அவர்கள் எதையும் ஆராய்ந்து சீர் செய்யும் நிர்வாகத் திறமை உடையவர்கள்… கணப்பொழுதில் முடிவெடுப்பவர்கள்… அதே நேரம் ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள்… சற்று பொறுமையாக இருந்து, அவர்கள் மனக் கிடக்கை அறிவது.. இரு நாட்டிற்கும் நலம் பயக்கும். அதனாலேயே நான் தங்களுக்கு அவ்வாறு செய்தி அனுப்பினேன். காவல் தலைவர் வேங்கையருக்கும் ஐயம் எழாதவாறு, தாங்களும், புரிந்து கொள்ளுமாறு.. நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். இவ்வளவு விரைவாக.. என்பதை எதிர்பார்க்கவில்லை. எல்லாம் நன்மைக்கே. இன்னும் சிறிது நாட்கள் நான் நாடோடியாகவே இங்கே அறியப்பட்டால் சரியாக இருக்கும்..” எனவும் வேகமாக,

 

“எதற்கு!!! உன் மனம் கவர்ந்தவளோடு இடையூறின்றி காதலில் திளைத்து மகிழ்வதற்கா!!”

என்று நகையோடும் குரலில் கேட்டதும் வீரசேனனின் முகம் சற்றே குழைந்தது. அவனின் வீர முகத்தில் வந்த குழைவான புன்னகையைக் கண்டு, சிம்ம வர்மனின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

 

“ம்ம்ம் பெண்ணைப் பற்றி பேசியதும் வேழம்(யானை) கூட வெட்கப்படும் என்பதை இப்போது தான் பார்க்கின்றேன்.” என்ற சிம்மவர்மன், அவனின் தாடையில் செல்லமாக குத்தி, “ஆயினும் வேழா, இது கூட ஒரு வகையில் அழகாக தான் இருக்கிறது…” என,

 

“கேலி வேண்டாம் இளவலே! நான் நாடோடியாகவே இருக்கிறேன் என்று சொன்னது, சற்றும் கட்டுப்பாடு இன்றி மருதபுரியை சுற்றிவரலாம் என்ற எண்ணத்தில்…”

 

“நானும் அதையே தான் சொன்னேன் வேழா!!!” என்று கேலியைத் தொடரவும்,

 

அமைதியான வீரசேனன் பேச்சை மாற்றி இளவரசனின் கவனம் திருப்பும் நோக்கில், “தங்களுக்கு மருத நாட்டு மன்னருடன் எதுவும் சந்திப்பு இருக்கிறதா இன்று?” என்று கேட்க,

 

“ மதிய விருந்து உணவு அவருடன் தான். அழைப்பு வந்திருக்கிறது. அது வெறும் விருந்திற்காக மட்டுமல்ல என்று தோன்றுகிறது..”

 

‘இளவரசியாரும் வந்தால் நலமாக இருக்கும்’ என்று எண்ணிய வீரசேனன்.. சிம்மவர்மனை நிமிர்ந்து பார்க்க அவனும் ஏதோ யோசனையாக இருப்பதைக் கண்டு, மெதுவாக

 

“வேகம் போர்க்களத்தில் மட்டுமே நல்லது இளவலே.. நிதானமே.. பேச்சு வார்த்தைகளில் பலனளிக்கும் என்பது தங்கள் அறியாதது அல்ல!!!” என் அறிவுறுத்த முயன்றதும்,

ஆமென்பதாய் தலை அசைத்தான் கொடை நாட்டு இளவல் சிம்மவர்மன்..

 

“யார் அந்த நாக ஜெயந்தன்..!? மலைக் கொள்ளையனான அவனுக்கும் மருத நாட்டின் மன்னனுக்கும் என்ன சம்பந்தம்…”

 

************************

 

 

இதே கேள்வியை வேறு வார்த்தைகளில் தன் முன்னே அமர்ந்திருந்த மருத நாட்டின் மாசேனைத் தலைவர் மருத நாயகத்திடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.. இளவரசி சந்திர வதனாம்பிகை.

 

“யார் அந்த நாக ஜெயந்தன்?? அவனின் சகோதரியின் பெயரால் வஞ்சம் தீர்க்க போவதாக அவன் கூறினான்.

 

தந்தையார் பெயரை சொல்லுகையில்.. ஏன் அவ்வளவு வன்மம் அவன் குரலில்.. மலைக் குடி மகளான நாக வல்லி என்று சொல்லப்பட்ட அவருக்கும் தந்தையாருக்கும் என்ன தொடர்பு???” என்று கேள்விகளால் திணறடிக்க..

 

போர்க்களத்தில் அம்புகள் மழை போல் பொழிய பெற்று தாக்க வந்தாலும் அசராத கலங்காத வீரரான மருத நாயகம் இந்த கேள்விக் கணைகளை எதிர் கொள்ள இயலாமல் திகைத்து தடுமாறினார்.

 

நேற்று நடந்த தாக்குதல் வெறும் கொள்ளையர் தாக்குதல் என்று எண்ணியிருந்தவருக்கு… அப்படி அல்லவென்று உறுதி படுத்துவது போல பேசும் இளவரசியின் நிதானமான கேள்விகள்… அவரின் நிதானத்தை குலைப்பதாய் இருக்க… என்ன கூறுவதென்றே புரியாமல் அமைதியானார்.

 

“அரை குறையாய் தெரிந்ததை… ஊகமாக உள்ளதை என்னவென்று கூறுவேன் அம்மா…”என்று கேட்க,

 

“இதனை நான் நேரடியாக மன்னரிடம் கேட்க முடியாமல் என்று இல்லை… அந்த ஜெயந்தன் சொன்னதில் இருந்த உட்பொருள்… அவரிடம் நேராகக் கேட்பதை தடை செய்கிறது.

 

ஒரு மகள் தந்தையிடம் கேட்க இயலாதது போல் தோன்றுகிறது. அவர் துன்புற்று விடுவாரோ என்று எண்ண வைக்கிறது… ஆயினும் இதைக் காரணமாகக் கொண்டு நம் குடிகள் துன்புறுத்தப் படுவதோ… நாட்டின் அமைதி, நலம் குலைவு படுவது ஏற்க இயலாது. மலைக் குடிகள் யாரோ ஒருவன் பேச்சைக் கேட்டு கொள்ளையில் ஈடுபடமாட்டார்கள்… அவர்களின் மன மாற்றத்திற்கு அழுத்தமான காரணம் இருக்க வேண்டும். அங்கே கிளர்ச்சி நடக்கிறது என்றும் உங்களுக்கு பல திங்கள்களுக்கு முன்பே தகவல் அனுப்பப் பட்டு இருந்திருக்கிறது.. ஆயினும் அதனை அடக்க நீங்கள் ஏதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லையே..?!!” என்றாள் அழுத்தமும் அமைதியுமான குரலில்.

 

 

அதிலிருந்த அழுத்தம் மருதநாயகரை வெலவெலக்கச் செய்ய, “சென்ற திங்களின் போது வெற்றி வேந்தன் தலைமையில் சிறு புரவி படை அனுப்பினேன் அம்மா… மலைக் குடிகளும் அவர்களுக்கு உதவி செய்வதால் அவர்களை நெருங்க இயலவில்லை..” எனவும் வெகுண்டு,

“இம்மாதிரியான பதில்கள்… குடிகளுக்கு மருதபுரி அரசின் மீதான நம்பிக்கையை அழித்துவிடும் மாசேனை நாயகரே.. மக்களின் நம்பிக்கையை அன்பை இழந்து விட்டால் அந்த அரசு, கெடுப்பாரே இல்லாவிடினும் , கெட்டு மறைந்து விடும்.. என்பது தாங்கள் அறியாதது அல்ல..

அந்த கிளர்ச்சிக்காரர்களை ஒன்றிணைக்கும் சக்தி எது என்பதை அறிய வேண்டும். நமது பக்கம் தவறு இருந்தால் சீர் செய்ய முயல வேண்டும். அதற்கு எதையும் விலையாக கொடுக்கலாம்.” என்றவள்.. அவரின் கண்கள் பார்த்து,

“எதையும்…. கொடுக்கலாம்…தவறு நாம் இழைத்ததாக இருந்தால்… அல்லாது… நியாயம் நம் பக்கம் என்றால் நாகத்தை நகங்களால் பற்றி தன் கால்களாலேயே நசுக்கி உணவாகக் கொள்ளும் வல்லூறாக மாறி அவர்களை அழித்து ஒழிக்க வேண்டும்… மருதநாடு இறையாண்மை காக்கப் பட வேண்டும்…”,என்றாள் வேகமேறிய மூச்சுக்களுடன்…

“வடக்கில் களவ நாட்டு வேந்தன் படை கொண்டு வளைக்க எண்ணினால் மேற்கே கொடை நாட்டு வேந்தர் மணமாலை கொண்டு வளைக்க எண்ணுகிறார்… நாலாபுறமும் சூழும் பகையை நம் விரைவான செயல்களின் மூலமாகவே தடுத்து நிறுத்தி, நாட்டைக் காக்க இயலும். செய்வீர்கள் என நம்புகிறேன். மன்னருடன் பேசி ஆவண செய்யுங்கள்.” என்று ஆணை தெறிக்கும் குரலில் கூறினாள் இளவரசி சந்திர வதனாம்பிகை…

*********************

அனுமதி 9

 

 

இன்று…

 

மனதின் அதிர்வை தன் மென் புன்னகையால் மறைத்தவனாய் திரும்பிய ஜெயவர்மன், “அப்படி நினைச்சுட்டே நோக்கினா… அப்படித்தான் தோணும்… விட்டா நான் தான் அது… ன்னுடுவ போல…” என்று கேலி பேசியவாறு திரும்ப,

 

அப்போது அங்கு வந்த மலைக் குடியை சேர்ந்த பூசாரி,

“அவுங்க ஒரு காலத்துல… மதுரைய ஆண்ட ராணியம்மாவும்… அவுகளை உயிரா நினைச்ச… ராசாவும்.. இந்த குகைல இருக்கற அம்மன் தான் இதுல இருக்குற ராணியம்மா… இந்த நடுகல்லுல… இருக்குற… இவர ‘குதுரை வீரன்’னு சொல்லுவாங்க. இவுகளுக்கு காவல்… அவரு…” சிவேஷைக் காட்டி, “ நம்ம அய்யாவுக வமிசம். ” எனவும் சிவேஷும் ஜெயவர்மனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“அந்த ராஜாக்கு சிலை இல்ல… இவருக்கு சிலை வச்சு வழிபாடு பண்றாங்க.. ஆச்சரியமா இருக்கு..” என ஜெயவர்மன் சொல்ல..

 

“இவுக எல்லோரும் மக்களை காக்க போராடி உசுறு விட்டவுக… அதான் காவல் தெய்வங்களா வழிபாடு பண்ணுறோம்.” என்றவாறு தன் வேலையை செய்ய ஆரம்பித்தார்.

 

ஏற்கனவே நீராட்டு முடித்து வைத்திருந்த படியால்.. சிவேஷ் குடும்பத்தினர் கொண்டு வந்திருந்த பட்டுக் கரை வைத்த துணியை குதிரை வீரனுக்கு சாற்றி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்தார். அங்கேயிருந்த… கல்லால் செய்யப்பட்டிருந்த விளக்கை ஏற்றிவிட்டு, பன்னீரை தெளித்துவிட்டு, மணக்கும் பத்திகளை ஏற்றி வைத்தார்… அங்கிருந்த வேல் மற்றும் ஈட்டிகளின் மீது சந்தனமும் குங்குமத்தையும் தெளித்தார்.

 

அங்கே அம்மனுக்கும் அதற்குள் அலங்காரம் முடித்திருக்க, அங்கே சென்ற பூசாரி, வாசனைப் பத்திகளை ஏற்றி வைத்து விட்டு.. கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாள வாத்தியத்தை எடுத்து விட்டு அம்மனை நோக்கி ஒருமுறை வணங்கியவர், அந்த வாத்தியத்தை இடக்கையில் தாங்கி… வலக்கையால் அடிக்க ஆரம்பித்தார்.

அமைதியான அந்த மலைக் குகையில் தாள வாத்தியமானது.. அதிர்வை உண்டாக்கி.. அனைவரையும்… உறைய வைத்தது.

 

அனைவரும் பயபக்தியோடு கைக் குவித்து நிற்க, வெளியே செல்ல விழைந்த ஜெயவர்மன், அந்த பூசாரி கனத்த குரலில் பாட ஆரம்பித்ததும், நகர இயலாமல் ஏதோ ஒன்று அவன் கால்களை தடை செய்ய அப்படியே நின்றான்.

 

தாள வாத்தியம் திடும்.. திடும்.. என்று அதிர… ராகத்தோடு அதனுடன் இணைந்தது பாடல்…

 

“மருதை நாட்டின் அரசி.. இவ

மங்கலம் காத்த அரசி…

 

மருதை நாட்டின் அரசி.. இவ

மக்கள காத்த அரசி….”

 

கண்களை மூடியவாறு அவர் பாட.. அங்கே இருந்த மலைக் குடி பெண்கள், அவர் பாட பாட… தாம் திருப்பி பாடிய படி அம்மன் பீடத்தை, கும்மி கொட்டிய படி சுற்றி வந்தனர்…

 

“மணக்கும் மல்லிப்பூ போல

வாசமிக்க பெண்ணரசி…

 

பாக்கதானே பூவு அம்மா..

பாயும் போது வேங்க…

 

நாடு காக்க பொறந்த இவ..

நல்ல மனசுக்காரி…

 

வளமை மிக்க ராசன் பெத்த

ராசாத்தி எங்க அம்மா…

 

குடிக் கெடுத்த நாகத்தின்

கொலமறுத்த தேவி…

 

சூழ நின்ன பகையை எல்லாம்

சொழட்டியடிச்ச ராணி…

 

மக்க உசுரு காக்க அவ

ஒத்த உசுரு தந்தா…

 

வாழ வைக்கும் சாமி இவ

குலம் காக்கும் சாமி..

 

மண்ணா போன உலகத்தில

பொன்னா நிக்கும் சாமி….

 

மருதை நாட்டின் அரசி.. இவ

மங்கலம் காத்த அரசி…

 

மருதை நாட்டின் அரசி இவ

மக்களை காத்த அரசி..”

 

பாட பாட அவரின் உடல் சன்னதம் வந்தது போல் ஆடத் தொடங்க… கும்மி கொட்டியபடி பெண்கள் வேகமாக சுற்றி வந்தனர்…

 

கடைசி வரிகளை அவர் திரும்பத் திரும்ப பாடிய படி வேகமாக தாள வாத்தியத்தை அடிக்க… பெண்கள்.. கும்மி கொட்டுவதை நிறுத்தி விட்டு ஒரு இடத்தில் குழுமி நின்று மங்களக் குலவை ஒலி எழுப்பியதும்… விக்கி பயந்து கண்களை மூடிக் கொண்டு தன் தாயின் கழுத்தைக் கட்டிக் கொள்ள.. அங்கிருந்த அனைவரும்… மேனி சிலிர்த்தவராய் கண் மூடி நிற்க, ஜெயவர்மனின் மூடியிருந்த கண்களில் இருந்து நீர் துளிர்த்து வெளிவந்தது….

 

சட்டென்று திறந்த விழிகள் மதிவதனாவை தேட, அவள் கண்கள் மூடியபடி , கைக்குவித்தவாறே சரிவது கண்டு விரைந்து சென்று இருகைகளால் வளைத்துப் பற்ற முயல, ஓடி வந்த வேகத்தில், அவனும் தடுமாறி சரிந்து கீழே விழப் போனாலும் சமாளித்து அமர்ந்தான். மதிவதனா சரிந்த திசையில் ஒரு பெரும் பாறை இருக்க, அடிபட்டு விடாதவாறு, காக்க.. தன்னை நோக்கி இழுத்தவன் அவளைத் தன் மார்போடு அணைத்து சாய்ந்து ஒரு கையை ஊன்றி சமாளிக்க முயல, மார்பில் இருந்தவள் வழுக்கி மடியில் கிடந்தாள்…

 

அவனின் காலடி ஓசையும் சொத்தென்று அமர்ந்த ஒலியும், இப்போது அமைதியாகிவிட்டிருந்த குகையில் பேரொலியாய் ஒலிக்க அனைவரும் கண்களை திறந்து பார்த்தனர். அதில் அவர்கள் இருவரும் விழுவதையும்… அவளை காக்க அவனின் முயற்சியைக் கண்டவர்கள், பதறி அலறியவாறு அருகில் வந்தனர்.

 

மதிவதனாவை மடியில் தாங்கியவாறு அமர்ந்திருந்த ஜெயவர்மனை அனைவரும் சூழ்ந்து கொள்ள,

“ஒன்னுமில்லா…” என்று உரைத்தவனாய், கைகளில் இருந்த அவளை உலுக்கியவன், அவள் விழிகள் திறக்காததைக் கண்டு, நிமிர்ந்து அவளின் அன்னை ஆனந்தியைப் பார்த்து, “வெள்ளம்… தண்ணி எடுத்துட்டு வாங்க…” எனவும் அவரும் தண்ணீர் பாட்டிலை எடுத்தது வந்து அவள் முகத்தில் தெளித்தார். அவள் அசைவின்றி இருக்கவும்,

 

 

“வேன்டிலேஷன் இல்லாம மயங்கிட்டா போல…” என்று சொல்லி அவள் முகத்தை பார்த்தவன், அப்போது தான்… தான் இருக்கும் நிலை உணர்ந்தவனாய், அவளைத் தன் மடியை விட்டு மேலே தூக்கியவனாய், தன் நண்பனை நிமிர்ந்து பார்த்து, “வெளிய தூக்கிட்டு போறியா…?” என..

 

சிவேஷ் வந்து தன் தங்கையை தூக்க முயல, கண்களை மெதுவாக திறந்தாள் மதிவதனா… அவள் கண்களை திறந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவன், “குடிக்க ஏதாவது கொடுங்க.. வெளிய கூட்டிட்டு போங்க..” என்றான்.

 

பெண்கள் அவளை எழும்பச் செய்து தாங்கி கொள்ள, மெதுவாக எழுந்தவனின் நடை தடுமாறுவது கண்டு, சிவேஷ் பதட்டத்துடன், “பிடிக்குறேன்னு நீ.. கீழ விழுந்திட்டியா.? அடி பட்டுருச்சா?” என்றவாறு அவனை மேலும் கீழும் பார்க்க, சிவேஷின் தோளில் கை ஊன்றி சமாளித்தவன், “ஒன்னுமில்லடா… நீ கத்தாதே.” என்று விட்டு, கால்களை உதறிக் கொண்டு, தன்னுடையில் இருந்த தூசியை தட்டி விட்டு, தலையை அழுந்த கோதியவாறு பீடத்தில் இருந்த அம்மனை வெறித்து பார்த்தான். அவன் பார்வையில் இருந்த பாவம் தான் என்ன!!

 

அப்போது பூசாரியின் குரல் ஒலித்தது, “ பெண்கள் எல்லாரும் வெளிய போகலாம்… அய்யா இங்க வரணும்…” எனவும் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வெளியேறி குகை வாசலுக்கு சென்றனர். மாலாவின் கண்களில் கலக்கம் தோன்ற தன் கணவனை பார்த்தாள். கண்களால் தைரியம் சொன்னவன், “வெளிய காத்தோட்டமா இருக்குற இடத்துக்கு மதிய கூட்டிட்டு போய் உக்கார வை.. குடிக்க ஏதாவது கொடு…” எனவும் சரியென்று தலை அசைத்தவள் மதியை தாங்கியவாறு அழைத்து சென்றாள்.

 

இந்தக் களேபரத்தில் அமைதி நிலைக்கு (silent mode) மாற்றப் பட்டு இருந்த சிவேஷின் அலை பேசி சில நொடிகள் அதிர்ந்து அடங்கியது, அவனின் உணர்வுக்குப் புலப்படவில்லை..

 

கும்பிட்டவாறு நின்று கொண்டிருந்த பூசாரியின் முன்பு சிவேஷ் சென்று நிற்கவும், “வலதுகையை நீட்டுங்க சாமி…” என்றவர், சிறு மடக்கு கத்தியை எடுத்தார்.

 

சிவேஷின் தந்தை பிரகதீஸ்வரர் பீடத்தின் மீது இருந்த வாள் இருந்த பெட்டியை திறந்து வாளை உறையிலிருந்த எடுத்து வெளி வைக்க, ஈஸ்வரபிரபு பஞ்சு மற்றும் மருந்துகளுடன் தயாராக நிற்பது கண்டு அதிர்ந்த ஜெயவர்மன், “என்ன செய்ய போறீங்க..” என்றவாறு வேகமாக தன் நண்பனின் அருகில் சென்று அவன் கரங்களை பிடித்துக் கொண்டான்.

 

“ஒன்றுமில்லை டா… அந்த வாள் வெளிய எடுத்து ரத்த காணிக்கை கொடுக்கணும்..

இது பல தலைமுறையா எங்க வீட்டுல செய்யுறது… நீயும் அங்கே போடா.. ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு எல்லோரையும் கூட்டிட்டு உள்ளே வரலாம்..”

 

“முடியாது…” என்றவன் எல்லோரையும் கோபம் மிகப் பார்த்தான்.

அம்மனின் சிலையை உற்று பார்த்தவன்..

“காக்க வந்த சாமின்னு தானே பாடுனீங்க இவுங்கள.. எந்த சாமியும் உயிரையோ ரத்ததையோ கேக்காது..” எனவும்,

 

பூசாரி, “இது இந்த அம்மனுக்கு இல்ல தம்பி. இந்த அம்மாவோட ரத்தம் தன் எல்லைக்குள்ள சிந்திருச்சு….ன்னு ஆக்ரோஷம் அடைஞ்ச வனக்காளி அம்மனுக்கு… கொடுக்குற காணிக்கை.. அவளக் குளிர பண்ண… சாந்தி பண்ண… வருஷா வருஷம் ஐயா வீட்டுக்காரங்க ரத்தம் காணிக்கையாக கொடுக்கறாங்க.. இது.. தலைமுறை தலைமுறையா நடக்குது.. அய்யாவோட பாட்டன் பூட்டனுக்கும் முன்னாடி ஆரம்பிச்சது… திடீர்னு நிறுத்தவெல்லாம் கூடாது. வனக்காளி கோபத்துக்கு பதில் சொல்ல முடியாது…” எனவும்,

 

சினம் மிக ஜெயவர்மன், “ அவுங்களும் காக்கிற தெய்வம் தானே… அம்மை தானே.. யாரேனும் அம்மை.. தன் பிள்ளைக ரத்தத்தை கேப்பாங்களா..?” என உரக்கக் கேட்கவும்,

 

 

 

பூசாரி என்னவென்று சொல்ல இயலாமல் விழிக்க,

பிரகதீஸ்வர், “இது வழி வழியா செய்யுறது தம்பி. நிறுத்தக் கூடாது..” என்றவரைத் திரும்பிப் பார்த்தவனின் கண்களில் தவிப்பு..

 

“வழி வழியா செய்யுறது னு தப்பையே திரும்ப செய்யத் தேவையில்லையே…” என்றவன் தொடர்ந்து…

 

“மிருகங்களை பலி கொடுக்க கூடாதுன்னு ரூல் போட்டுருக்காங்க… இங்க மனுஷ ரத்தம்… பிளீஸ்.. மாத்துங்க இதெல்லாம்…” எனக் கூற..

 

வெளியே நிறைய பேர் தடதடவென்று நடக்கும் சத்தமும், பெண்கள் அதிர்ந்து கத்தும் ஒலியும் கேட்க, அனைவரின் பார்வைகளும் வாசலை நோக்கி பாய,

 

ஏதோ புரிபட, “ஷிட்” என்றவாறு வேகமாக நகர முயன்ற ஜெயவர்மனின் கண்கள்…

 

மதிவதனாவின் கைகளை பற்றி இழுத்தவாறு உள்ளே நுழைந்த திருமலையைக் கண்டு சிவப்பேறி, அவர்கள் மீது நிலைக்க… தாடை இறுகி, பற்கள் கடிப்பட்டன..

 

திருமலையைக் கண்டு அதிர்ந்த சிவேஷ் வேகமாக முன்னே செல்ல முற்பட,” டேய் மச்சான்.. உன் குடும்பம் மொத்தமும் இப்போ என் ஆளுங்க அருவா கன்ட்ரோல்ல இருக்காங்க.. நீ துள்ளுனா உன் புள்ளைய… வனகாளிக்கு பலி கொடுத்துருவங்க.. பார்த்து பதனமா நடந்துக்கோ…” என்றவனின் குரலில் அவ்வளவு எகத்தாளம், திமிர்..

 

சுற்றிச் சுழன்ற பார்வையில் முகம் இறுக அவனை பார்த்துக் கொண்டிருந்த ஜெயவர்மன் பட, நக்கலாக சிரித்தவன்..

 

“அட… நீயும் இங்க தான் இருக்கியா?? ஒரு கல்லுல ரெண்டு மூணு மாங்கா.. தேத்திரலாம் போலவே…

 

டேய்..!! மலையாள ஹீரோ மாதிரி சாப்ட் ஆ பேசி சைலண்ட்டா ஃபீல் பண்ணிக்கிட்டு ஓரமா நிக்கணும்.. அதை விட்டு தெலுங்கு ஹீரோ மாதிரி ஆக்ஷன் காட்ட நினைச்ச… வ****** கொண்டே புடுவேன்…” என்று சலம்பியவன், ஜெயவர்மன் இதழ்களில் தோன்றிய முறுவலைக் கண்டு.. அதன் பொருள் புரியாமல் யோசிக்க, மதிவதனா…

 

“விடுடா விடுடா” என்று கத்தியவாறு கைகளை உருவ முயற்சிக்கவும் அவள் புறம் திரும்பி, “ அட மதிசெல்லோம்… விடுறதுக்கா.. மதுரைய விட்டு இம்பூட்டு ஆளுங்களை பொருளுங்களோட கூட்டிட்டு வந்திருக்கேன்…. உன் குல சாமி கோவில்ல உனக்கு தாலியை கட்டி உன் குடும்பத்தாருங்க முன்னாடி நீ எம் பொண்டாட்டின்னு அறிவிக்க தான்.. இவ்ளோ காலைல கிளம்பி வந்திருக்கேன்..” என ஆசையும் திமிரும் வழிய சொல்ல..

 

ஈஸ்வர பிரபு, “திருமலை… விருப்பமில்லாத பொண்ணு கழுத்துல கட்டாயத் தாலி கட்டுறது… ஆளுங்களோட வந்து மிரட்டுறது.. இதெல்லாம் சரி இல்லை… நாங்க யாருன்னு தெரியாம மோதுற….”

 

“யோவ் மாமா….. யாருய்யா நீ..?? சொல்லு தெரிஞ்சுக்குறேன்… இந்த மருதைக்கே கிங்கு என் நைனா.. வீடு தேடி வந்து பேசின என் நைனாவை மதிக்காத ஆளு தானே நீ… உன்னையெல்லாம் வச்சு… செஞ்சுருக்கணும்.. என் நைனா எலெக்ஷன் முடியட்டுமினு சொன்னதால தப்பிச்ச நீ… உன் பொண்ணை… தாலி கட்டிக் குடும்பம் நடத்துறேன்.. அப்புறமும்.. அவளுக்கு விருப்பமில்லைனா நானே கொண்டாந்து உம்ம வீட்டுல விட்டுருறேன்..” என நக்கலாக உரைக்கவும்,

 

அதிர்ச்சியாக அவனைப் பார்த்த ஈஸ்வரபிரபு.. துடிக்கும் மகளைக் கண்டு.. ஆக்ரோஷத்துடன் முன்னே வர, “யோவ் மாமா… இப்பவும் அவசரப்படுற பாத்தியா.. நீங்க யாராவது ஒரு அடி நகர்ந்தாலும், அங்கே உன் வீட்டு பொம்பளைக, உங்க குடும்பத்து வாரிசு எல்லோரையும் போட்டு தள்ள ஆளுங்க ரெடியா இருக்காங்க..” என சுட்டி காட்ட, ஐந்து பேர் ஆயுதங்களுடன் ஆனந்தி, உஷாராணி, விக்கியை வைத்திருந்த மாலா, அனைவரையும் உள்ளே தள்ளிக் கொண்டு வந்தனர்..

 

அக்காட்சியைக் கண்டதும்.. அவர் இறுகி நிற்பதைப் பார்த்து சிரித்து, “ஆ….. அது… புத்திசாலித்தனம்..” என்றவன்… இடது கையால் மதியைப் பற்றி அவளை அம்மனின் பீடத்தின் அருகே தள்ளி விட்டு… தன் சட்டைப் பையில் வைத்து இருந்த தாலியை வெளியில் எடுத்தான்.

 

கோணல் புன்னகையுடன், தங்கச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட தாலியை விரித்துப் பிடித்தவன், “மூணு முடிச்சு போடுறதுக்கெல்லாம் பொறுமை இல்ல.” என்று சொல்லியவாறு அவளின் அருகில் நெருங்க..

 

தள்ளி விட்ட வேகத்தில் பீடமருகே சென்று.. அம்மேடையைப் பற்றியவாறு

அசையாது நின்று கொண்டிருந்த மதிவதனா… அவன் அருகில் நெருங்கியதும் சட்டென்று வலக்கையை உயர்த்தி தாலியைப் பற்றி அதே கையால் அவனின் முகத்தில் தாக்கினாள்.

 

அவளின் விரல்கள் அவன் கண்களைக் குறி வைத்து இருந்தது. சற்று தடுமாறியவன் ஆத்திரம் மிக, “யாருட்டடி விளையாட்டு காமிக்குற…” என முகத்தை நகர்த்தி தப்பியவன் சுதாரித்து திரும்பி விழித்துப் பார்க்க,

 

எதிரே மதிவதனா, வாளுடன் நின்று கொண்டிருந்தாள்.

‘விஷ்க்.. விஷ்க்..’ என்று ஒலி கேட்க திருமலையின் முன் உடலில் பெருக்கல் குறி போல் ஆடை கிழிந்து லேசாக ரத்தம் வெளி வர ஆரம்பிக்க, அடுத்த சுழற்றலில்,

வாளின் நுனி, திருமலையின் கழுத்தைத் தொட்டுக்கொண்டு இருக்க, அழுத்தத்தில் திருமலையின் ரத்தம் வெளி வந்து வாளை நனைக்கத் தொடங்கி இருந்தது. அப்போது ‘க்ளிக் க்ளிக்’ என ஒலி கேட்க, தலையில் ஏதோ உலோகம் அழுத்தும் உணர்வில் லேசாக கண்களை திருப்பிப் பார்க்க,

 

அங்கே முறுவலுடன் நின்று கொண்டிருந்தான் ராஜா ஜெயவர்மன்..

 

அவனின் சிறிய ரக துப்பாக்கி, திருமலையின் தலையில் அழுந்தி இருக்க, “சைலேண்டா பீல் பண்ணி தான் சைலேன்சர் பொறுத்துன கன் வச்சு குறி பார்த்துட்டு இருக்கேன்.. உன் ஆளுங்களையும் சத்தமேயில்லாம வெப்பேன்ஸ் எல்லாத்தையும் போட்டுட்டு சிவேஷ் குடும்பத்தை விட்டு தள்ளி நிக்க சொல்லு.. தப்பா ஒரு அசைவு இருந்தாலும் …” என்றவன்… திருமலையின் ஆள் ஒருவன் விக்கியை வைத்திருந்த மாலா அருகில் செல்வதை ஓரப் பார்வையில் கண்டு.. சட்டென்று ஒரு தோட்டாவை அவனை நோக்கி செலுத்த, இடுப்பில் அதனை வாங்கிக் கொண்டு, அலறியவன் இரத்தம் வரும் இடத்தில் கை வைத்தவாறு கீழே விழுந்து துடித்தான்.

 

“துப்பாக்கி சுடுறது எனக்கு புதுசு இல்லன்னு அறிஞ்சா!! நவ் ஆல்… வெப்பன்ஸ்.. டௌன்.. கொண்டு போய் அந்த குதுரவீரன் கிட்ட போய் போடுங்க…” என்று கர்ஜிக்கவும் தன் தலைவனின் உயிர் காக்க தங்களிடம் இருந்த அருவாள், துப்பாக்கி முதலான ஆயுதங்களை அங்கே கொண்டு போட்டனர். சிவேஷ் அவர்களைத் தொடர்ந்து சென்று கண்காணித்து… அனைவரையும் குகைச் சுவற்றை ஒட்டி நிறுத்தி வைத்தான். பெண்கள் அனைவரும் நகர்ந்து தங்கள் கணவர் அருகில் செல்ல.. மதிவதனாவின் வாள், திருமலையை அசையவும் விடாது நிறுத்தி வைத்திருந்தது.

 

அப்போது தடதடவென்று கைகளில் நவீன ரக துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்தனர் கருப்பு உடை அணிந்து இருந்த, ஜெயவர்மனால் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டிருந்த, தனியார் பாதுகாப்பு நிறுவன ஆட்கள். சிறை பிடிக்கப்பட்டிருந்த சிவேஷ் நிறுவன ஆட்களும் விடுவிக்கப் பட, திருமலை ஆட்கள் எல்லோரையும் கைகளைக் கட்டச் செய்த

 

ஜெயவர்மன், பாதுகாப்பு ஆட்களின் தலைவர் போல் இருந்தவரைப் பார்த்து, “எல்லோரையும் உங்க கன்ட்ரோல்ல வச்சுக்கோங்க அச்சுதன். நான் சென்னை கமிஷ்னர்ட்ட கேட்டுட்டு என்ன பண்ணலாம்னு சொல்றேன்..” என்றவன்,

 

 

 

திருமலை நோக்கி திரும்பி,

“இனி உன் பார்வை மட்டுமில்ல, நினைப்பு கூட வதனா பக்கம் திரும்ப கூடாது. திரும்பினா.. நாங்க ஒன்னும் பண்ண வேண்டாம். அவளே உன்ன சவட்டிக் களைஞ்சுடுவான்னு உனக்கு இப்போ தெரிஞ்சுருக்கும்.. பின்னே…. இனி நீ வைக்குற ஒரு ஒரு அடியும் என் கண்காணிப்புக்கு கீழ தான் இருக்கும்… அமைதியா உன் வேலை பார்த்துட்டு இருந்தின்னா பிரச்சனை இல்லை… ஏதேனும் பிரச்சனை பண்ண நினைச்சேன்னா.. அன்னிக்கே உனக்கு… உன் நைனா எல்லோருக்கும் அஸ்தமனம் தான்..” என..

 

தன் கண்களை உறுத்துப் பார்த்து எச்சரிக்கை விடுத்தவனை.. நிமிர்ந்து

வெறித்த திருமலை, தன் பற்களால் உதடுகளைக் கடித்து கோப மூச்சுக்களை வெளியிட்டு சுற்றி பல துப்பாக்கிகள் தன்னை குறி வைத்திருப்பதைக் கண்டு, ஆக்ரோஷத்தை அடக்கியவனாய், மதியையும் ஜெயவர்மனையும் மாறி மாறிப் பார்த்தான்.

 

“சிவேஷ்..! உன் சகோதரி கைல இருக்குற வாளை வாங்கு… காளி பகவதி அம்மைக்கு இன்னிக்கு தான் சரியான ரத்தம்.. காணிக்கைக்கு போயிருக்கு… இனி இந்த சம்பிரதாயங்கள் வேணாம்… என்ன பூசாரி??” எனவும் பூசாரி மிரண்டு தலை அசைக்க, சிவேஷின் அப்பாவும் சித்தப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். திருமலையை அச்சுதன் தன் கைத்துப்பாக்கி முனையில், பாதுகாப்பில் எடுத்துக் கொள்ள, தன் சிறு துப்பாக்கியை முதுகுப் புறம் சொருகியவாறே… ஜெயவர்மன்,

 

“பூஜை முடிஞ்சதுல்ல… கிளம்பலாம்… ” எனவும்,

 

மிரண்டு நின்றிருந்த மலைகுடி மக்களிடம் விடை பெற்று அனைவரும் கிளம்பினர்

 

தங்களின் வாகனத்தை அடைந்து ஏறப்போகையில், காரின்

இருக்கையில்.. நெகிழிப் பையில் நீரூற்றி, தண்டுகள் நீரில் மூழ்க வைக்கப்பட்டு, இறுக கட்டப்பட்டு இருக்க, வாடாமல் இருக்க இலையால் சுற்றப்பட்டு இருந்த, அல்லி மலர்களை கண்டு மதிவதனாவின் நிலவு முகம் மலர்ந்தது.

 

**********************

 

அன்று….

 

“நாக ஜெயந்தன் யார்? அவனின் உடன் பிறந்தவளிற்கும் மருத நாடு மன்னருக்கும் என்ன சம்பந்தம்?” என்று சிம்மவர்மன் கேட்க, புன்னகை மலர்ந்தது வீரசேனன் முகத்தில்..

 

“இந்த ஆராய்ச்சி நமக்கேன் இளவலே?”

 

“மருதபுரி மன்னர் பற்றி அறிவது நமக்கு தேவை இல்லாதது. ஆயினும் அது இந்த நாட்டு மக்களிடையே கிளர்ச்சி தோன்றுவதற்கு காரணமாய் இருக்கிறதே.. ஏன் என்று ஆராய வேண்டுமே வேழா.. உள் நாட்டில் மக்களிடையே ஒற்றுமை இல்லை, என்றால் வெளிப் பகையை எப்படி எதிர் கொள்வார்கள்!”

 

“இளவரசே! எனக்கென்னவோ… இதைப் பற்றுக் கோலாகக் கொண்டு அந்த ஜெயந்தன், இளவரசியை கைப்பற்றவும், அரசில் குழப்பம் ஏற்படுத்தி, நெருப்பு மூட்டி, குளிர் காயவும் விழைவது போல் தெரிகிறது… தேவையில்லாத உள்நாட்டுக் குழப்பம் உருவாக்குகிறான்.. இளவரசியாரை அவன் பார்த்த பார்வையில், என்ன ஒரு காம வெறி!! என் வாளினால் அவ்விழிகளைக் கெல்லி எறிய வேண்டும் போல ஆத்திரம் வந்தது…” எனவும், வீரசேனன் இயல்பு மாறி, ஆத்திரம் கொண்டு பேசுவது வியப்பை அளிக்க, இன்னமும் சீண்டுபவனாய்,

 

“நாடாளும் மன்னனையே மதியாத மன்னரின் மகளிற்கு மலைக் கள்ளன் இணையா!! ம்ஹும்ம்… சரி தான்.” எனவும், வீரசேனனின் முகம் கறுத்தது.

 

“தாங்கள் ஓய்வு எடுங்கள் இளவரசே.. நான் செல்ல உத்தரவு தாருங்கள்…” என்றவாறு வாசல் நோக்கி திரும்ப, அவனின் தோள் பற்றி நிறுத்தியவன்,

 

“கோபத்திலாவது, சிறுவயதில் என்னை அதட்டி அழைப்பாயே ‘சிம்மா..…’ என்று, அது போல அழைக்க மாட்டாயா என்று தான் சீண்டினேன்… சரி.. சரி.. உன் மனம் கவர்ந்த இளவரசியை இனி குறைவாக ஒரு வார்த்தை பேசவில்லை. சற்று நில் வேழா..” எனவும்,

 

ஆழ்ந்த மூச்செடுத்து திரும்பியவன், “மனம் கவர்ந்தவர்கள்… ஆம்.. சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டேன்… முகம் நினைவில் இல்லை.. எனது தாயினைப் பற்றி நினைக்கும் போது… கொடை நாட்டில் கோவில் கொண்டுள்ள தேவி ராஜ ராஜேஸ்வரியின் முகம் தான் தோன்றும். இனி மருதநாடு இளவரசியின் முகம் தான் தோன்றும் போல… அந்த அளவு மனம் கவர்ந்து விட்டார்கள்..” என்றவன், திகைத்து நின்ற சிம்மவர்மனைப் பார்த்து முறுவலித்து, “ஓய்வெடுங்கள் இளவரசே… மாலையில் சந்திப்போம்..” என நகர முற்பட, பேச்சிழந்தவனாய் தலை அசைத்தான் இராஜ ஜெய சிம்மவர்மன்.

 

சிம்மவர்மன் தங்கி இருந்த மாளிகையை விட்டு வெளியே வந்த வீரசேனன், அங்கிருந்த காவல் வீரர்கள், தன்னை உற்று கவனிப்பதைக் கண்டு கொள்ளாதவனாய், தான் தங்கியிருந்த மாளிகை நோக்கி நடந்தான். அங்கே காவலுக்கு இருந்த வீரர்களிடம் வீரசேனனிற்கு தகவலோடு, புதிய ஆடைகளும் இருந்தன. மதிய விருந்திற்கு அரண்மனைக்கு வருமாறு இளவரசியிடம் இருந்து

அழைப்பும் வந்து இருந்தது.

 

முன் தின இரவு தன் குதிரையை, மருத நாட்டின் புரவிப்படை தலைவனும், வசந்தமாலையின் தமையனுமான வெற்றி வேந்தனிடம் ஒப்படைத்து நினைவில் வர, காவல் வீரர்களிடம், தன் குதிரையை எடுத்து வர இயலுமா என்று கேட்க, அவர்களும் அவ்வாறே செய்வதாகக் கூறி, அவன் கேட்டுக் கொண்ட படி செய்தனர்.

 

தலைவனைக் கண்ட உற்சாகத்தில் அவனின் கருப்புப் புரவி, முன்னிரு கால்களை உயர்த்தி, கனைத்து மகிழ்ச்சியை வெளிக்காட்ட, கண்கள் மலர அதன் அருகில் சென்றவன், “ என்னடா!! அழகா!!! அரசவிருந்து உனக்கும் கிடைத்தது போலும். மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறாயே..” என்று கூறியவாறு, அதன் கழுத்தை அணைத்து வருடியபடி சொல்ல, தலையை மேலும் கீழும் அசைத்து, தன் மகிழ்ச்சியை தெரிவித்தது அந்த அன்பான விலங்கு.

 

“வருகிறாயா..!! மருதபுரியை சுற்றிப் பார்த்து விட்டு வருவோம்..” எனக் கேட்க,

புரிந்தாற்போல தலையசைத்து, தன் ஆமோதிப்பை தெரிவித்தது, அந்த அழகன் புரவி.

 

“மருதபுரியின் உள்ளே சென்று வர அனுமதி உண்டுதானே..” எனக் காவலரிடம் வினவவும், “தாங்கள்… அரச விருந்தினர், உங்களுக்கு இல்லாத அனுமதியா..!! சென்று உச்சிப் பொழுதிற்கு முன் வந்து விடுங்கள். விருந்திற்கு செல்ல வேண்டுமே.” எனக் கூறினார் அந்த கடமை தவறாத காவலர்.

 

புரவியில் ஏறி அமர்ந்தவன், புரிந்து கொண்டவனாய் தலை அசைத்து விடைபெற்று, தன் கணுக்காலால் லேசாக அழுத்தியதும், துள்ளிக் கிளம்பியது புரவி..

 

மருதபுரி…

 

அழகிய மாநகரம். என்ன கம்பீரம்.. என்று வியந்தவாறே, தங்கள் மாளிகை இருந்த வீதியைக் கடந்தவன்,

 

அரண்மனை சுற்றி இருந்த, மாட மாளிகைகள் இருந்த வீதி வழி சென்றான். இதில் ஒன்றில் தான் தன் மனம் கவர்ந்தவள் இருப்பாள் என்று எண்ணியவாறே, சுற்றிப் பார்த்தவாறு சென்றான்… வாய்ப்பு இருந்தால் மதிய விருந்திலேயே அவளை சந்திக்கலாம் என்று எண்ணியவன், மனம் உற்சாகம் அடைய,

 

அரசு வீதியைத் தாண்டி, அங்காடிகள் இருக்கும் வீதியை அடைந்தான். ஒரு நகரின் வளத்தை கடை வீதிகளே அறிவிக்கின்றன. வீதி முழுவதும் அங்காடிகள். ஆடை, ஆபரணங்கள், உண்ணும் பொருள்கள், பழங்கள், காய்கறிகள் என பல பொருள்களும் ஒவ்வொரு இடத்திலும் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.

 

 

மக்கள் பண்டமாற்று முறையிலும், மருதபுரிக்கென இருந்த நாணயங்கள் கொடுத்தும் தமக்கு தேவையான பொருள்களை வாங்குவதையும் விற்பதையும் கண்டு, அவற்றையெல்லாம் கவனித்தும் கவனியாதவாறு கடந்து சென்றான்.

 

 

அடுத்து நகரமக்கள் இருக்கும் பகுதி வந்ததும், அங்கிருந்த வீடுகளின் அழகு கண்டு வியந்தான். ஒரு பெரிய சிவாலயம் அருகில் குளத்துடன் இருக்க… அதைச் சுற்றி இருந்த தெருக்களில் சிறிதும் பெரிதுமாய் வீடுகள்.

 

ஒரு அடுக்கு மட்டுமன்றி இரு அடுக்கு வீடுகள் கூட இருந்தன. எங்கு நோக்கினும் வளமை, பசுமை. மக்கள் மறுநாள் இந்திர விழா ஆரம்பிக்கப் போவதை முன்னிட்டு, தம் தம் வீடுகளுக்கு, சுண்ணம், காவி முதலான பாறைகளின் பொடியை கரைத்து, வர்ணமடித்துக் கொண்டு இருந்தனர்… பெண்கள் கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து தம் வாசலை அழகூட்டினர்.

 

நகரே திரு விழாவிற்கு தயாராகிக் கொண்டு இருக்க , கோட்டையின் வெளிப்புறத்தில் இருந்தும் மருதநாட்டின் குடிமக்கள் உள்ளே வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்கான சத்திரங்கள், சாவடிகள் கோட்டையின் உட்புறம் அங்கங்கே தென்பட, அவற்றில் மக்கள் மகிழ்வுடனும் நட்புடனும் கூடி அமர்ந்து, பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவன், ஒரு நாட்டு மக்களின் நட்புணர்வு, நடக்கும் முறை இவை நாட்டின் வளம், அந்நாட்டு அரசின் நலம் பொறுத்தே இருக்கும் என்று எண்ணினான்.

 

ஆங்காங்கே தென்பட்ட வாவிகளும்(சிறு குளங்கள்), சோலைகளும் கண்ணையும் கருத்தையும் கவர, இந்த வேனிற்கால ஆரம்பத்திலும் அவை நிறைந்து நிற்பதைக் கண்டு, வியந்தவனாய், அருகில் சென்று ரசிக்க எண்ணி ஒரு வாவி அருகே தன் புரவியை செலுத்தி கீழே இறங்கினான்.

 

தன் கருப்பு அழகனிற்கு நடந்த களைப்பு தீர… நீர் பருகச்செய்தவன், தானும் தாகத்தைத் தீர்த்துக் கொண்டவனாய், சுற்றிலும் பார்க்க, அங்கேயிருந்து கோட்டையின் ஒரு வாசல் தெரிந்தது. வானத்தை உற்றுப் பார்த்து காய்ந்து கொண்டிருந்த வெய்யோனின் நிலை வைத்து, திசையை அறிந்தவனாய், இது மருதபுரி கோட்டையின் மேற்கு நுழைவு வாயில் என்று புரிந்து கொண்டான்.

 

மற்ற வாசல்களை விட, இதில் ஆள்களின் நடமாட்டமும் காளை மாடுகளால் இழுக்கப்பட்டு வரும் வண்டிகளின் வரத்தும் அதிகமாய் இருப்பதைக் கண்டு யோசித்தவாறு, சோதனை சாவடி வீரர்கள், ஒவ்வொருவரையும் சோதனையிட்டே அனுப்புவதை பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

அப்போது பழுப்பு நிறப் புரவியில், முகத்தை துணியால் பாதி மறைத்தவாறு அமர்ந்திருந்த ஒரு ஆண் மகன், சிறுவனை முன்னால் வைத்தவாறு வாயில் தாண்டி உள்ளே நுழைவதைக் கண்டு, ஏதோ உறுத்த, நன்கு உற்றுப் பார்த்தான். அவர்களை சோதனையிட்ட காவலர்கள், கோட்டை உள்நுழைவு வரியாக அவர்கள் செலுத்திய குடுவை வாங்கி வைப்பதைக் கண்டவன், குடுவையை நீட்டியவன் கையில் ,மதிய வெயிலில் மின்னிய நாகப் பாம்புப் பச்சையைக் கண்டு துணுக்குற்று, தொலைவில் இருந்த அந்த இடத்திற்கு உடனே செல்ல விரும்பியவனாய் வேகமாக சென்று, நீர் அருந்திக் கொண்டிருந்த, தன் கருப்பு அழகனை பற்றி இழுத்து வந்து ஏறி… நேராய் பார்க்கும் முன் அந்த பழுப்பு புரவி நின்று இருந்ததின் சுவடே இல்லாமல் இருக்க அதிர்ந்தான்.

 

வேகமாக சென்று கோட்டை வாசலை அடைந்து, “இப்போது சென்ற குதிரை வீரன் யாரப்பா? எங்கு செல்கிறான்?” என்று வினவ..

 

“ஆனை மலை காட்டினைச் சேர்ந்த மலைகுடி வேடுவனாம்… விழாவிற்கு வந்திருக்கிறான் போலும். சத்திரம் பக்கம் செல்வானாய் இருக்கும்… காட்டுப் பயல் எனபது சரியாக… எவ்வளவு வேகமாக புரவியை செலுத்துகிறான்!!!” என்று வியந்தவாறு தன் வேலையில் கவனமாக, வேகமாக தன் புரவியை திருப்பி விரைந்த இவனின் வேகம் கண்டு மலைத்து வியந்து நோக்கினான் கோட்டை வாசல் காவலன்.

 

வில்லினின்று புறப்பட்ட அம்பு போல கடுகி ஓடியும், பழுப்புப் புரவியைக் காணவியலாமல், சத்திரம் அடைந்து தேடியவன், அங்கும் பழுப்புப் புரவியையோ நாகப் பச்சை குத்திய மனிதனைக் காணக் கிடைக்காமல், வேகப்பட்ட மூச்சுக்களுடன் நாலாபுறமும் நோக்கினான் வீரசேனன்.. ஏனோ அவனின் மனம் பதட்டம் அடைந்தது…

 

அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தவனாய் தான் இருக்கு விருந்தினர் மாளிகைப் பக்கமாய், தன் புரவியைத் திருப்பினான்.

 

 

***********

 

மருத நாடு அரசர் பெருவளத்தான் நன்மாறனின் அரண்மனை… விருந்து மண்டபம்.

 

அரசின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்… அவரின் குடும்பத்தினர், சேனைத் தலைவர்கள், மருதநாடு அருகில் இருந்த சிறு நாடுகளின் தலைவர்களும், மருத நாட்டின் ஊர்த் தலைவர்களும், காவல் தலையாரிகளும் வந்து குழுமத் தொடங்க, அரண்மனை வேலையாட்கள் அனைவரையும் மரியாதையுடன் வரவேற்று அவர்களுக்கான இருக்கையிலும், விரிப்புகளிலும் அமர்த்தினர்.

 

சற்று நேரத்தில் மன்னன் பெருவளத்தான் நன்மாறன் வந்ததும் அனைவரும் எழுந்து நிற்க, அனைவரையும் வணங்கிய அரசனின் அருகில் வந்து நின்று கரங்களைக் குவித்தாள் இளவரசி சந்திர வதனாம்பிகை..

 

விருந்திற்காக பட்டு ஆடைகளையும், எளிமையான ஆபரணங்களும் அணிந்து இருந்ததிலேயே, அழகும் கம்பீரமும் மிளிரும் தங்கள் இளவரசியை கண்ட மருத நாட்டினர் அனைவரும் பெருமையில் பூரித்து பார்த்தவாறு இருக்க, மற்ற நாட்டவரோ வியந்து பார்த்தவாறு இருந்தனர்.

 

அனைவரும் அமரப் போன வேளையில், அறை வாயிலில் அரவம் கேட்க…

இளவரசனுக்கு உரிய சின்னங்களைத் தரித்தவனாய், பட்டாடைகள், ஆண்களுக்கு உரித்தான அணிகலன்கள் அணிந்து, நான்கு மருத நாட்டுக் காவலர்கள், கொடை நாட்டு பரிசாக பழங்களையும் பொன் ஆபரணங்களையும் சுமந்து வர, அரசனின் நிமிர்வுடன், வீர ஒளி வீசும் முகத்துடன், இளவரசு மகுடம் தரித்து வந்தவனைக் கண்டு அனைவரும், மூச்சுவிடவும் மறந்து வெறித்துப் பார்த்தனர்.

 

மருத நாட்டின் அருகில் இருக்கும் மிகப் பெரிய நாட்டின் இளவரசன் என்பதால் உயரிய இருக்கை அளிக்க முன் வந்த பணியாளனைத் தடுத்தவனாய், தான் கொண்டு வந்திருந்த பரிசில் தட்டுக்களில் ஆபரணங்கள் இருந்த தட்டைக் கையில் வாங்கி மன்னரிடம் கொடுக்க அருகில் சென்றவன், அதனை அவர் வாங்கி தன் மகளின் கரங்களில் கொடுத்ததும், சிரிப்புடன் மன்னரின் அருகில் போடப்பட்டிருந்த இருக்கையிலேயே அமர்ந்தான்.

 

அனைவர் பற்றியும் தலைமை அமைச்சரான ஆலவாய் பெருமொழியார் அறிமுகம் செய்து வைக்க அனைவரும் ஒரு முறை தம் முகமன் கூறி வணக்கம் செய்தனர்.

இந்திர விழாவிற்கான மருத அரசின் விருந்து தொடங்கியது. மருதநாட்டின் விளைச்லான

பல விதமான காய்களும் பக்குவப் படுத்தப்பட்டு, சமைக்கப்பட்ட தானியங்களுடன் பரிமாறப்பட பழங்களும், தேனில் இடப்பட்ட பழத்துண்டுகளும், கருப்பஞ்சாறும் கூட பரிமாறப்பட்டது.

 

மன்னர் பெருவளத்தான் உடன் பேசியவாறே உண்ட ஜெயசிம்மனின் பார்வை அவ்வப்போது, சந்தரம்பிகையின் மீது படிய, அதனை அறியாதவள் போல், உண்டு கொண்டிருந்த அவளைப் பார்த்தவன், தன்னிடம் மட்டும் தான் இந்த பாராமுகம், மற்றபடி அனைத்து விருந்தினரையும் கண்களாலேயே, மகிழ்ச்சியைக் காட்டி வரவேற்கும் விதமாய் புன்னகையையும் வழங்கிக் கொண்டு தான் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு, முன்பு போல் இப்போது ஏனோ கோபம் வரவில்லை. அந்த பாராமுகத்தையும் ரசித்தவனாய், மன்னரிடம் களவநாட்டு முத்துவடுகநாதன் பற்றியும், போரில் அவன் புரியும் தந்திரங்கள் பற்றியும் கூறிக் கொண்டு இருந்தான்.

 

அப்போது அவசரமாய் உள்ளே நுழைந்தான் வீரசேனன். பதற்றத்துடன் அனைவரையும் ஒரு முறை சுற்றி பார்த்தவன், விருந்து முடியும் நிலையில் இருப்பதைக் கண்டு, கூச்சமடைந்து, திரும்ப முயற்சிக்க தடுத்து நிறுத்தியது, இளவரசியின் குரல்..

 

“வாருங்கள் வீரசேனரே..!” என்றவள், பணியாளர் ஒருவரை, பெயரிட்டு அழைத்து, “அவரை இருக்கையில் அமர்த்தி உணவருந்த வை..” என்று பணிக்க,

 

ஜெயசிம்மனின் அடிமனதில், லேசாக கனல் மூண்டது. தன்னை விலக்கி வைப்பவள் தன் நண்பனுக்கு அளிக்கும் சிறப்பு கவனிப்பால் உருவான பொறாமை இது என்று உணர்ந்தவன், இளவரசியின் ஒதுக்கம் இனியும் தொடர்வது நல்லதல்ல என்று உணர்ந்தவனாய்,

 

இளவரசியைப் பார்த்தவாறே,

“ மன்னரே… முத்து வடுகநாதனை நாம் பார்த்துக்க கொள்ளலாம். தங்களின் குமாரத்தியாரை எனது மனைவி ஆக, கொடை நாட்டின் எதிர்கால அரசியாக ஆக்க விழைந்து என் தந்தை அனுப்பிய பெண் கேட்பு உடன்படிக்கையில், தங்களுக்கு ஏன் சம்மதமில்லை??” எனக் கேட்க,

 

இடையிட்டாள் இளவரசி சந்திர வதனாம்பிகை, “அப்படி ஒரு உடன்படிக்கை ஓலை, கொடை நாட்டின் தெற்கில் உள்ள வேணாடு மற்றும் வடக்கில் உள்ள வளநாட்டிற்கும் கூட அனுப்பப் பட்டு, அவர்களிடம் இருந்து சம்மத ஓலை கூட வந்துவிட்டது போலவே. பின் ஏன்..? இந்த ஒற்றை நாட்டைப் பற்றிக் கவலை கொள்கிறீர்கள் இளவரசே..!” எனவும்,

 

அவளின் குரலில் ஏறியிருந்த அழுத்தத்தின் காரணம் புரியாமல் பார்த்தான் ஜெய சிம்மவர்மன். பின் உதட்டோரம் எள்ளல் புன்னகை தொனிக்க,

“கவலையா… அது.. எனக்கில்லை இளவரசி. இது மருதநாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது… களவத்தின் அச்சுறுத்தல் அண்டையில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தான் எனினும் முதல் பாதிப்பு மருதத்திற்கு தான். அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றே இந்த உடன்படிக்கைகள்.

 

அரசியல் காரணங்களுக்காகவும், நாட்டின் பாதுகாப்பிற்கும் இவ்வாறான திருமணங்கள்.. உடன்படிக்கைகள் நிகழ்த்தப்படுவது இயல்புதானே… அதில் என்ன குறை கண்டுவிட்டீர்கள் தேவி!!” என நிதானமாய் கேட்க…

 

மெதுவாக தன் விழிகளை சிம்மவர்மனின் பக்கமாகத் திருப்பியவள், ஆழ்ந்து நோக்கியவாறு, “திருமணங்கள் இரு மனங்களின் இணைவாக இருக்க வேண்டும்.. இளவரசியை களபலி கொடுத்து தான் காத்தாக வேண்டும் என்ற நிலையில் மருத நாடும் இல்லை.. என் நாட்டின் வீரம் மடிந்துவிடவும் இல்லை…” என்று அமைதியான குரலில் கூறவும்,

 

களபலி என்ற வார்த்தையில் வெகுண்டவனாய், சட்டென்று எழுந்து நின்றான் ராஜா ஜெய சிம்மவர்மன்….

 

 

***********************

 

தொடரும்!!

 

What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!