நெடுங்கேணியில் ஏற்பட்ட கலவரத்தால், ஈழத்தின் பல தமிழ் இடங்களில் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்ததால், இலங்கைச் சுற்றுலாவை சில நாட்கள் தள்ளிவைக்க வேண்டிய நிலை. கூடவே, முல்லைத்தீவுக்கும் போக முடியாது பாதைகள் அடைக்கப்பட்டதால், சர்வாகமனின் திட்டமும் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், திரும்பத் திருகோணமலைக்குச் செல்ல இருந்த சந்திரபாபு குடும்பம், குலவேந்தர் கேட்டுக்கொண்டதற்கமைய, இரண்டு நாட்கள் அங்கேயே தங்குவதற்கு ஒப்புக்கொள்ள. ராஜேஷ_க்கும், ரஞ்சனிக்கும் பெரும் மகிழ்ச்சியாகிப் போனது.
அந்த இரண்டு நாட்களில் எப்படியாவது, நிரந்தரியைத் தன் வசப்படுத்திவிடவேண்டும் என்கிற உறுதியில், ராஜேஷ_ம், அப்பாடா இரண்டு நாட்களுக்குள் சர்வாகமனின் மனதைப் பிடித்து அந்த நிரந்தரியை, அங்கிருந்து விரட்டவேண்டும் என்று ரஞ்சனியும் பெரும் யோசனையிலிருந்தனர்.
கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திவிடவேண்டும் என்கிற எண்ணத்தில் ஒருவர் மாறி ஒருவராகத் தீயாக வேலை செய்யத் தொடங்கினர்.
இந்த நேரத்தில், நிரந்தரியை நெருங்க விடாமல் எப்போதும் ரஞ்சனி, சர்வாகமனின் அருகிலேயே நின்றுகொண்டதால், அவனால் நிரந்தரியிடம் தனித்துப் பேசும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
நிரந்தரிக்கு ஒரு பக்கம், ரஞ்சனி சர்வாகமனுடன் நெருங்கியிருப்பது பெரும் வலியைக் கொடுத்தாலும், அவனுடைய நன்மையைக் கருதி ஒதுங்கியே இருக்கத் தொடங்கினாள்.
சர்வாகமனுக்கோ, ரஞ்சனியின் அருகாமை பெரும் தலையிடியைக் கொடுத்தது. என்னடா ஒரு ஐந்து நிமிடங்கள் கூடத் தன்னவளோடு, நேரம் செலவிடமுடியவில்லையே என்று வருந்தியவனுக்கு அவளின் உபயத்தால் கடைசிவரை நிரந்தரியுடன் தனித்திருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை.
அன்று சர்வாகமன் முல்லைத்தீவுக்கு செல்வது பற்றி பேசுவதற்காக, வவுனியா எம்பியை சந்திக்க சர்வாகமனையும், பிரகாஷையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தார் குலவேந்தர். தாமரையும், தன் நண்பர்களைச் சந்திக்கச் சென்றிருந்தாள்.
பெரியவர்களுடன் பேசிக்கொண்டிருந்த ராஜேஷ், நிரந்தரி ஏதோ வேலையாகப் பின் பக்கம் செல்வதைக் கண்டான். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் எப்போது வருமோ என்று எண்ணியவனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போக, அனைவரிடமும், ஏதோ ஒரு போக்குக் காட்டிவிட்டு, நிரந்தரி, சென்ற திசையை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.
அதே நேரம், சர்வாகமன் இல்லாததால், ரஞ்சனி, தோட்டத்திலிருந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாள். தன் தமையன், திருட்டுத் தனமாக எங்கோ நழுவிச் செல்வது புரிய, யோசனையுடன் தன் புத்தகத்தை மடித்து வைத்துவிட்டு அவன் எங்கே போகிறான் என்று பார்க்க, தொலைவில் நிரந்தரி போய்க்கொண்டிருப்பது தெரிந்தது.
ஏதோ புரிய, தன் தமையனைப் பின் தொடர்ந்தாள் ரஞ்சனி.
நிரந்தரி கழுவிய பாத்திரங்களை எடுத்து வருவதற்காகக் கிணற்றடிக்குச் சென்றுகொண்டிருக்க, தன் பின்னால் யாரோ வருவது போன்ற உணர்வில், பதறியவாறு திரும்பிப் பார்க்க, அங்கே இளித்துக்கொண்டு ராஜேஷ் நின்றிருந்தான்.
அவசரமாக யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தவளுக்குத் தோல்விதான் மிஞ்சியது.
தன்னைக் காக்கும் பெண் புலியாக அவள் சிலிர்த்து நிற்க, அவளுடைய நிலையைப் புரிந்துகொண்ட ராஜேஷ்… கேலியாக நகைத்தவாறு,
“பலநாள் கனவு இப்போதுதான் நிறைவேறப் போகிறது… யு லுக் அமேசிங்… முன்பைவிட இப்போது… உன் உடலின் எழில் கூறியே இருக்கிறது” என்றவாறு அவளை நெருங்கி இழுத்துத் தன்னோடு அணைக்க முயல, நிரந்தரியோ, பெரும் ஆவேசத்துடன், அவன் கன்னத்தை நோக்கி அறைந்து விட்டிருந்தாள்.
“என்னையா அடித்தாய்…” என்றவாறு அவளை இழுத்து மேலும் அணைத்து அவளை நோக்கிக் குனியத் தொடங்க, விருந்து கிடைத்த மகிழ்ச்சியில், ரஞ்சனி தன் கைப்பேசியில் அக் காட்சிகளைப் படமாக எடுக்கத் தொடங்கினாள்.
அதே நேரம், ஆவேசத்துடன் ராஜேஷைத் தள்ளிவிட்ட நிரந்தரி, அவனைத் தாக்க ஏதாவது கைக்குக் கிடைக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்க்க, அந்த நேரம், “அண்ணா… இங்கே என்ன செய்கிறாய்?” என்று அதட்டியவாறு முன்னே வந்தாள் ரஞ்சனி.
கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்கிற நிலையில், தன் தங்கையைப் பரிதாபமாகப் பார்த்த ராஜேஷ_க்குத் தெரியவில்லை, சற்றுத் தமாதித்திருந்தாலும், அவன் நிலைதான் பரிதாபமாக இருந்திருக்கும் என்று.
“ஹீ… ஹீ… ஒன்றுமில்லை ரஞ்சனி… அவர்களிடம்… தண்ணீர் கேட்டுக்கொண்டிருந்தேன்…” என்று சமாளிக்க,
“தண்ணீர் கேட்டாயா? அப்படித் தெரியவில்லையே…” என்று இழுத்தவளிடம், எனப்படி உண்மையைக் கூற முடியும். என்ன கூறுவது என்று தெரியாமல், தடுமாற,
“வெட்கமாக இல்லை… யாரைத் தொடுவது என்கிற விவஸ்தையில்லை… உன் விரல் படும் பெண்களுக்கென்று தகுதி தராதரம் இருக்கவேண்டும்… நீ என்னவென்றால்…” என்று துப்பாத குறையாக நிரந்தரியைப் பார்த்துக் கூறியவள், அன்று அவள் அறைந்த தன் கன்னத்தை வருடிக் கொடுத்தவாறு,
“ரெடி டு பே பக்…” என்று கூறிவிட்டு, விறுவிறு என்று வீட்டிற்குள் நுழைந்தாள்.
ஆவேசத்துடன் நுழைந்தவள்,
“இந்த வீட்டில் என்ன நடக்கிறது… என்ன நடக்கிறது என்று கேட்கிறேன்…” என்று கத்தினாள்.
அவளுடைய கோபத்தைப் புரியாமல் பார்த்த பெரியவர்கள்,
“என்னம்மா ஆச்சு?” என்று வினாவினார் மரகதம்.
“இன்னும் என்ன ஆகவில்லை… சே… என் வாயால் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது…” என்று சினக்க,
“என்னம்மா… என்னவாகிவிட்டது? யாராவது தப்பாக ஏதாவது சொன்னார்களா?” என்று வள்ளியம்மை கேட்க.
“சொன்னார்களா? என்று சீறிய ரஞ்சனி, மரகதத்தைப் பார்த்து,
“உன் மகன் வருவான் அவனிடம் கேள்..” என்றாள் அலட்சியமாக. அப்போது தயங்கித் தய்கி உள்ளே வந்த ராஜேஷைப் பார்த்து,
“என்னடா நடந்தது? எதற்காக ரஞ்சனி இத்தனை ஆவேசப் படுகிறாள்?” என்று சந்திரபாபு கேட்க,
“அது ஒன்றுமில்லைம்மா… இவள் சும்மா… இல்லாததையும்…” என்று கூறி முடிக்கவில்லை,
“இல்லாததா… இல்லாததா?” என்று சீறியவள், தன் கைப்பேசியை எடுத்து, அதிலிருந்த படத்தைத் திருப்பிக் காட்டி,
“பாருங்கள் அத்தை… உங்கள் வீட்டு மருமகளின் லட்சணத்தை… தனியாக நின்றிருந்த என் அண்ணனின் அணைப்பில், சே… இதற்கு மேல் என்னால்…” என்று அவள் அருவெறுத்தவாறு கூற, ராஜேஷ் கூட அதிர்ந்து போனான். அவன் எதையோ சொல்ல வர, தன் தங்கையின் பார்வை, வேறு கதை கூற, உடனே தன் வாயை மூடிக்கொண்டான் ராஜேஷ்.
அந்தப் படத்தைப் பார்த்த வள்ளியம்மைக்கு உடல் தீப்பற்றி எரிந்தது. அதற்கு மேல் பொறுக்க முடியாதவராக,
“நிரந்தரி…. ஏய் நிரந்தரி… வாடி இங்கே… “ என்று ஆவேசமாகக் கத்த, ஒரு வித திருப்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தன, அந்த மனித உருவிலிருந்த மிருகங்கள்.
நிரந்தரியின், தளிர் உடல் அச்சத்தில் நடுங்கப் பதறியவாறு உள்ளே வர,
“ஏய் தாலியறுத்து மூலியாய் நிற்கும் உனக்கு மாப்பிள்ளை கேட்குதோ… கட்டில் சுகத்திற்காக வார போர ஆம்பளைகளை அழைக்கிறாயே… உனக்கு வெட்கமாக இல்லை… என்ன தைரியம் இருந்தால்… நீ எங்கள் வீட்டுப் பிள்ளையிடம் போய்? “ என்று ஆவேசமாகக் கத்த, நிரந்தரி துடித்துப் போனாள்.
நிரந்தரி மறுப்பாக எதையோ கூற வர,
“அடேங்கப்பா… நடிப்புக்கு யார் யாருக்கோ பரிசு கொடுக்கிறார்களே… முதல் பரிசு உனக்குத்தானடியம்மா… என்னமா நடிக்கிறாய்… உன் அப்பன் ஆத்தாவைக் கொன்று, என் மகனைக் கொன்றும் உன் வெறி அடங்கவில்லையா… என் அண்ணன் மகனையும் காவு கேட்கிறாயா?” என்று வள்ளியம்மை சீறியவாறு நிரந்தரியை நெருங்கி, அவளுடைய முடியைப் பற்றி இழுத்துச் சென்று வாசலில் தள்ளிவிட, அப்போதுதான், தமது வேலைகளை முடித்துக்கொண்டு, உள்ளே வந்த குலவேந்தரின் வண்டியின் முன்னால் வந்து விழுந்தாள் நிரந்தரி.
(1) 1995 ஆம் ஆண்டு “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?” இதைச்…
16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…
15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…
(38) மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…
14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…
விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…