Categories: Ongoing Novel

நிலவே என்னிடம் நெருங்காதே – 11/15

நிலவு 11

சர்வமகியின் நினைவிலேயே உழன்றவன், தன்னை மீட்கும் பொருட்டு விஸ்கியைக் குடித்தவாறு தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். அங்கே போய்க்கொண்டிருந்த செய்தியைக் கேட்டதும், போதை முழுவதும் இறங்கக் கோபமும், எரிச்சலும் போட்டிப்போட அந்தச் செய்தியை வெறித்துப் பார்த்தான்.

பிரேக்கிங் நியூஸ் என்று போய்க்கொண்டிருந்தது செய்தி.

கனடாவின் சட்டத்தரணியாக வேலைபார்த்துவந்த ரட்ணபாலன் ஜெயபாலன், இனம் தெரியாத நபர்களால், கடுமையாகத் தாக்கப்பட்டு அகால மரணமடைந்துள்ளார். அவருடைய இறப்புக்குக் காரணமானவர்களைக் காவல்துறை வலைவீசித் தேடிவருகிறது… இதோ இந்தக் கொலையை விசாரித்துவரும், டிடெக்டிவ் ஃபெர்னான்டோவிடம் விசாரித்தபோது,

“மிஸ்டர் ரட்ணபாலன் ஜெயபாலனைக் கொன்றவர்கள் எதற்காகக் கொலைசெய்தார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக, பலர் சேர்ந்துதான் இந்தக் கொலையைச் செய்திருக்கவேண்டும். இதுவரை பார்த்த கொலைகளில், இந்தக் கொலையே அதி பயங்கரமாக இருக்கிறது. கிட்டத்தட்ட அவருடைய உடலில் பதின்நான்கு இடத்தில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இது பெரிய வாகனம் ஒன்று அவர் மேல் ஏறினால் கூட, இத்தனை எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்காது. அவருடைய இரண்டு கண்களையும் யாரோ தம் கரத்தால், வெறிகொண்டு குத்திக் குருடாக்கியிருக்கிறார்கள்… அது மட்டுமல்லாமல், அவருடைய ஆண் உறுப்பு பலத்த சேதமடைந்திருக்கிறது. வெளிப்புறம் மட்டுமில்லாமல், உள் உறுப்புகளும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இக் கொலையைச் செய்தவர்கள் இறந்துபோன ரட்ணபாலன் ஜெயபாலன் மீது பெரும் ஆக்ரோஷத்தில் இருந்திருக்வேண்டும். இல்லையென்றால் இத்தனை கொடுமையாக அவரைக் கொன்றிருக்க முடியாது.

“மிகக் கொடுமையாகக் கொலைசெய்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறீர்கள். இந்தக் கொலையைச் செய்தவர்கள் ஒரு வேளை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?”

“இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்… அதை விசாரணையில்தான் கண்டுபிடிக்கமுடியும்…”

“யார் என்று அறிவதற்கு எதாவது துப்பு கிடைத்திருக்கிறதா?”

“அதுதான் நம் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அத்தனை தடயங்களும், கவனமாக, அழிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக, இந்தக் கொலையைச் செய்தவர்கள், தப்பும் வழி தெரிந்த ஒருவராகவே இருக்கவேண்டும். அதையும் விரைவில் கண்டுபிடிப்போம்…”

“எத்தனை பேர் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

“தெரியவில்லை. பரிசோதித்ததில் மூன்று நான்கு விதமாக தாக்கப்பட்டிருக்கிறார். அதனால் குறைந்தது, மூன்றுபேராவது தாக்கியிருக்கலாம் என்பது எம் குனிப்பு… ஆனால் அதை உறுதியாகக் கூறமுடியாது…”

“எதற்காக இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

“இல்லை… ஆனால், ரட்ணபாலன ஜெயபாலன் பெண்கள் விடயத்தில் பல தவறுகள் செய்தது தெரியவந்திருக்கிறது. இனி அந்தக் கண்ணோட்டத்தில்தான் விசாரிக்கவேண்டும். யாராவது பாதிக்கப்பட்டவர்கள் இப்படிச் செய்தார்களா என்கிற கோணத்தில் எங்கள் அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறோம்… நிச்சயமாக மிக விரைவில் அந்தக் கொலையாளியைப் பிடித்துவிடுவோம்…” என்று மேலும் அந்த டிடெக்டிவ் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்க,

“கிழிப்பாய்…” என்ற அநேகாதமன் உதட்டில், ஏளனப் புன்னகை மலர்ந்தது. “சே… அதற்குள் இறந்துவிட்டானே… உயிரோடு வைத்து இன்னும் சித்திரவதை செய்திருக்கவேண்டும்…” என்று தனக்குள் முணுமுணுத்தான் அநேகாத்மன்.

மீண்டும் சர்வமகி அந்தக் கயவனிடம் சிக்கிக்கொண்டது நினைவில் வந்தது.

இனியும் ஒரு முறை அவள் இப்படி ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்வதை அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அதேநேரம் அவள் தந்தையையும் அவனால் மன்னிக்கமுடியவில்லை.

அவனுடைய தந்தையின் மரணத்திற்குக் காரணமானவனையும், அவன் குடும்பத்தையும் எப்படி மன்னித்து விடமுடியும்? தாயின் மரணத்திற்குப் பிறகு, அவரல்லவா அவனுக்குத் தாயுமானவராக இருந்தார். அவனிடம் அவர் பொழிந்த அன்பின் அளவுக்கு விலையேது. தவிர அவாக்கென்றிருந்த ஒரே ஒரு உறவும் அவர் மட்டும்தானே. இப்போது அதுவும் இல்லையென்றாகிவிட்டதே. அதற்குக் காரணம் யார் அந்த வாசுதேவன்தானே…

தந்தையின் நினைவு துக்கப்பந்தாக அவன் தொண்டையை அடைத்தது. தனக்கென்று இருந்த ஒரே உறவான தந்தையைக் கொன்ற அந்த வாசுதேவனை ஒருவழி பண்ணுவதற்குக் கூட, அவன் திட்டம் தீட்டியிருந்தான். ஆனால், என்று சர்வமகி அவனைத் தேடி வந்தாளோ, அன்றிலிருந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.

அதே நேரம், அந்த வாசுதேவனை சும்மா விட்டுவிடவும் அவனால் முடியவில்லை. தன் தந்தையைக் கொன்றவர், அதற்குரிய பதிலைக் கூறியேயாகவேண்டும் என்கிற வன்மம் மட்டும் அவனிடமிருந்து விலகவில்லை. அதே நேரம், சர்வமகியின் கலங்கிய முகமும் அவனை அலைக்கழித்தது.

சோர்வுடன், தன் தலையை பின்புறமாக சோஃபாவில் சரித்தவன், ஒரு முடிவுக்கும் வரமுடியாதவனாகத் தன் விழிகளை அழுந்த மூடினான். தலை வேறு உள்ளே ஏறிய விஸ்கியால் ஒரு நிலையில் இல்லாது தடுமாறியது

ஒரு கரத்தால், நெற்றிப்பொட்டை அழுத்திக்கொடுக்க, மூடிய இமைகளுக்குள் நிழலான மெல்லிய படலம் போன்ற உருவம் தெரிய விழிகளைத் திறந்தான்.

சர்வமகிதான். சோர்வுடன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அந்த நிலையிலும், அவனுடைய விழிகள் அவசரமாகத் தொலைக்காட்சியில் நிலைத்தது.

இப்போது செய்தியில் வேறு செய்தி போய்க்கொண்டிருந்தாலும், பிரேக்கிங் நியூஸ் என்று கீழே ரட்ணபாலனின் செய்தி ஓடிக்கொண்டிருக்க, சர்வமகி அதைக் கவனிக்கும் முன்பே, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு நிமிர்ந்தான்.

“ஹாய்…. யு ஓக்கே?” என்றான்.

அவள் “ம்…” என்று தலையாட்டியவள், குளிர்வதுபோலக் கரங்களை மார்புக்குக் குறுக்காக் கட்டிக்கொண்டாள்.

மீண்டும் காயம்பட்ட அவள் முகம் அவனை உறுத்தியது. கூடவே, மார்புக்குக் குறுக்காக அவள் கரங்களைக் கட்டியதால், சற்று ஏறிய டீ சேர்ட்டும் தோளிலிருந்த வழிந்த டீசேர்ட்டினால் தெரிந்த அவள் பளிங்கு தோள்களும், தொடைகளும், அவனைச் சற்றுத் தடுமாற வைக்க,

“எதற்கு எழுந்துவந்தாய் சர்வமகி… போய்… ஓய்வெடு…” என்றான் தன் தடுமாற்றத்தை மறைக்க முயன்றவனாக.

“இ.. இல்லை நான் போகவேண்டும். என்னுடைய சகோதரர்கள் என்னைக் காணவில்லை என்று பயந்துபோவார்கள்…” என்றாள் அவள் மென்மையாக.

“இந்த நிலையிலா… நோ வே… அதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்… போ மகி… போய் ரெஸ்ட் எடு…” என்றான் அவன் அழுத்தமாக.

“என்னைக் காணவில்லை என்று அவர்கள் பயந்துபோவார்கள் ஆத்மன்… ஐ ஹாவ் டு கோ…” என்று தன் நிலையைப் புரியவைக்க அவள் முயன்றாள். மீண்டும் அந்த ஆத்மனில் ஒரு நொடி உடைந்தவன், தன்னை மீட்டுக் கொள்ளக் கழுத்தின் பின்புறத்தை வருடிக் கொடுத்தவனாக,

“யு டோன்ட் நீட் டு வொரி மகி… அதற்குரிய ஏற்பாடுகளை நான் ஏற்கெனவே செய்துவிட்டேன். என்னுடைய நண்பர் ஒருவரை உன் சகோதரர்களுக்குத் துணையாக இருக்குமாறு அனுப்பி வைத்திருக்கிறேன்… சோ… அவர்களை எண்ணி நீ வருந்தத் தேவையில்லை…” என்றான் அவன் அறிவிப்பதுபோல.

அவளோ அவனைக் கூறியதைக் கேட்டதுபோலவே தெரியவில்லை.

“இ… இல்லை… நான்… நான் வீட்டிற்குப் போகவேண்டும்…” என்றவளை உற்றுப் பார்த்தான் அநேகாத்மன். அவள் முகத்தில் தெரிந்த பரிதவிப்பு, அவனுக்கு எதையோ உரைப்பதுபோலத் தெரிய, அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது.

“ஏன்… நானும் அந்த கயவனைப் போல உன் மீது பாய்ந்துவிடுவேன் என்று நினைத்தாயா? அந்தளவுக்கு நான் சாக்கடை என்றா நினைத்தாய்?” என்றான் அவன் குரல் இறுக.

அவள் இருக்கும் நிலையில் இப்போது யாரையுமே நம்பும் நிலையில் இல்லை. அந்த அளவுக்கு அவள் மனம் இறுகிப்போயிருந்தது. எத்தனை பெரிய ஆபத்திலிருந்து அவள் தப்பிவிட்டாள். இனி இந்த ஜென்மத்தில் எந்த ஒரு ஆணையும் சந்தேகமில்லாமல் பார்க்க முடியுமா? சும்மா பார்த்தாலே உடல் கூசிப்போகுமே.

ஒரு முறை அநேகாத்மனை ஏறிட்டுப் பார்த்தாள். அழுத்தமான முகமும், கோபத்தால் இறுகிப்போயிருந்த உதடுகளும், எரிச்சலைக் காட்டிய கூரிய விழிகளும், அவன் தப்பானவன் அல்ல என்று எடுத்துக் காட்டினதான். ஆனாலும், சூடுகண்ட பூனையாக மனம் சுருண்டது.

இருந்தும் அநேகாத்மனை ஏனோ தவறாக அந்த ரண்டபாலனுடன் ஒப்பிட அவளால் முடியவில்லை. அவன் மட்டும் தக்க தருணத்தில் வராமல் விட்டிருந்தால்! நினைக்கும் போதே உடல் உதறியது.

“போ சர்வமகி… நீ இப்போது இருக்கும் நிலையில் உன்னால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியாது. போய் ரெஸ்ட் எடு. நீ சரியாகும்வரை உன் சகோதரர்கள் என் பொறுப்பு.” என்று அவன் கூற, அவள் மேலும் தயங்கினாள்.

ஒரு கணம் யோசித்தவன், சோஃபாவை விட்டு எழுந்தான். தன் கரத்திலிருந்த விஸ்கி பாட்டிலை, அருகிலிருந்த டீ டேபிலில் வைத்துவிட்டு, அவளருகே நெருங்கினான்.

அச்சத்துடன் இரண்டடி பின்னோக்கி வைத்தவளை அவன் பொருட்படுத்தாது, அவளுடைய வலது கரத்தை மென்மையாகப் பற்றி “கம் வித் மி…” என்றவாறு எங்கோ இழுத்துச் சென்றான்.

சர்வமகி தடுமாறியவாறு அவனுடன் செல்ல, அவளை ஒரு கண்ணாடியின் முன்னால் நிறுத்தினான்.

“அங்கே பார்…” என்றான் கண்ணாடியைச் சுட்டிக்காட்டி.

நிமிர்ந்து பார்த்தாள் சர்வமகி. அங்கே தெரிந்த தன் விம்பத்தைப் பார்த்ததும் அதிர்ந்தாள். இது தான்தானா என்கிற சந்தேகம் கூட அவளுக்கு எழுந்தது.

கன்னங்கள் இரண்டிலும், அடிபட்டதன் அடையாளமாக, ஐந்து விரல்கள் பதிந்திருந்தன. நடுங்கும் கரங்களால் தன் கன்னத்தை வருடிக்கொடுத்தாள் சர்வமகி. வருடிய கரங்களின் மணிக்கட்டிலும், மேல் கையிலும் அழுந்தப் பற்றிய கண்டல்களின் அடையாளங்கள். இரண்டு கரங்களையும், குறுக்காகத் தோள்களில் வைத்து காயங்களை வருடிக்கொடுத்தாள். விழிகளோ வேதனையில் நனையத் தொடங்கின. உதடோ, அடிபட்டதில் கிழிந்து இரத்தம் கண்டியிருந்தது. அதனையும் வருடிக்கொடுத்தாள். உடல் வலியைவிட, மனவலி அதிகமாக இருக்க, விரல்கள் மீண்டும் நடுங்கத் தொடங்கின.

வேகமாக சர்வமகியை பின்புறமாக நெருங்கியவன், தோளிலிருந்து வழிந்த டீசேரட்டை இழுத்து சரியாக்கியவாறு, அவள் தோள்களைப் பற்றி,

“இப்போது எதற்கு இந்த அழுகை… உன்னை இந்தக் கண்ணாடி முன்னால் இழுத்து வந்ததற்குக் காரணம், இத்தனை காயத்துடன் உன் சகோதரர்களுக்கு முன்னால் போய் நின்றால், அவர்கள் பயப்படமாட்டார்களா?” என்றான் சற்றுக் கனிவாய்.

அவளோ, கண்ணாடியினூடாக அநேகாத்மனை விழி விரித்துப் பார்க்கப் பிடிவாதமாக அந்த விழிகளின் அழகில் விழாது தன்னைக் காத்துக்கொண்டவனாக, அவள் தோள்களிலிருந்து தன் கரங்களை விலக்கி,

“வேண்டுமானால் தொலைப்பேசியில் பேசிப்பார்க்கிறாயா…?” என்றதும், அவள் முகத்தில் தெரிந்து மறைந்த மலர்ச்சி, அவள் விருப்பைக் கூற, மறு பேச்சுப் பேசாமல் தன் கைப்பேசியிலிருந்து அவள் வீட்டிற்கு டயல் பண்ணியவாறு,

“கம் சிட் டவுன் ஃபெர்ஸ்ட்…” என்றவாறு அவளை மீண்டும் முன்னறைக்கு அழைத்துவந்தான். அவளை ஜன்னலுக்கு அருகேயிருந்த சோஃபாவில் அமர்த்திவிட்டு, கைப்பேசியை அவளிடம் நீட்டினான்.

அவனுக்கு அவர்களின் வீட்டு இலக்கம் எப்படித் தெரியும்? யோசனையுடன் சோஃபாவில் அமர்ந்தவாறே, அவனுடைய தொலைப்பேசியை வாங்கிக் காதில் பொருத்தினாள்.

“ஹலோ… யார் பேசுவது…” என்று மறு பக்கமிருந்து தேவகியின் குரல் கேட்டது.

“நா… நான் அக்கா பேசுகிறேன் தேவகி…” என்றதும்,

“ஹாய் அக்கா… நீ போன வேலை முடிந்ததா? நீ அனுப்பிய வசந்தி நல்ல பெண்மணி. நம்முடன் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவருக்குக் கீழ் அறையை ஒதுக்கிக் கொடுத்தோம். உன்னுடைய வேலை எப்போது முடியும்? எப்போது வீட்டிற்கு வருவாய்? இங்கே அபிதன்தான் உன்னைக் காணவில்லை என்று சிணுங்கிக் கொண்டிருந்தான்… நேற்று மாலை போனவள்… திடீர் என்று வசந்தி என்ற ஒரு பெண் வந்து நின்றதும் பயந்துபோனோம்… பிறகு தான் அப்பாவின் அலுவலாகப் போயிருப்பாயோ என்று சமாதானப் படுத்திக்கொண்டோம். இன்றைக்காவது வருவாயா அக்கா? அல்லது நாளைக்குத்தான் வருவாயா?” என்றாள் தேவகி.

சர்வமகிக்கு ஏனோ தொண்டையைக் கரித்தது. “நேற்று மாலையா? அப்படியானால்…” யோசனையுடன் ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். சூரியன் மறைந்துகொண்டிருந்தது.

கிட்டத்தட்ட இருபது மணிநேரங்களுக்கும் மேலாக மயங்கியிருக்கிறாள்.

“ஹலோ… அக்கா… அங்கேதானே இருக்கிறாய்?” என்றாள் தேவகி.

“ய… யா… தம்பி எங்கே தேவகி?” என்றாள் இதயம் கசங்க.

“இங்கே பக்கத்தில்தான் இருக்கிறான். பொறு கொடுக்கிறேன்…” என்றவள் தொலைப்பேசியை அபிதனிடம் நீட்டினாள் போலும், மறு பக்கம் சற்று அமைதியாக இருந்தது.

“அக்கா… எங்கேக்கா இருக்கிறாய்? ஏன் நேற்று முழுவதும் வரவில்லை… நாங்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தோம்… எனக்கு ஹோம் வேர்க் செய்யவேண்டும்…” என்று சிணுங்கினான் தம்பி.

தொண்டையைக் கரிக்கச் சிரமப்பட்டுத் தன் குரலைச் சமப்படுத்தியவள்,

“கண்ணா… அக்கா… விரைவாக வந்துவிடுவேனடா… கொஞ்சம் வேலை… அதுதான்… வீட்டிற்கு வரமுடியாமல் போய்விட்டது… ஏதாவது சந்தேகமிருந்தால் சின்னக்காவிடம் கேளடா…” என்றாள் கனிவுடன்.

“யாருமே சொல்லித் தருகிறார்கள் இல்லையக்கா… அப்படியே சொல்லித்தந்தாலும், இந்த தேவகியும், மாதவியும் தலையில் குட்டுகிறார்கள்… நீ வாக்கா… இந்தத் தடியன் பிரதாப் புத்தகத்தைக் கொண்டு சென்றால் ஓடிவிடுகிறான்…” என்றான் தம்பி குறையுடன்.

“ப்ளீஸ்டா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்… அக்கா சீக்கிரம் வந்துவிடுவேன்… என் தங்கமில்லையா?” என்று அவள் குழைந்தவாறு கேட்க, மறு புறம் அமைதியானது.

“ஹலோ…” என்றாள் சர்வமகி பதட்டமாக. மறு புறம் மாதவி வந்தாள். தொடர்ந்து பிரதாப் பேசினான்.

அனைவருக்கும் நல்ல பிள்ளைகளாக இருங்கள் என்று புத்திமதி கூறிவிட்டு, அலைபேசியை அணைத்தாள் சர்வமகி.

அவள் தன் சகோதரர்களுடன் பேசுவதையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அநேகாத்மன்.

தன் சகோதரர்களுடனேயே இத்தனை அன்பாகவும், இத்தனை ஆசையாகவும் பேசுகிறாளே… இவளுடைய சொந்தக் குழந்தையிடம் இதை விட அன்பாக அல்லவா நடந்துகொள்வாள்.

அவனுடைய மனக் கண்ணில் சர்வமகி ஒரு குழந்தையைத் தாய்மை பொங்கத் தூக்கி வைத்திருக்கும் கோலம் வந்து போனது. அந்தக் குழந்தையின் முகத்தில் தன் சாயலைக் கண்டவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

அவனுக்கு என்னவாகிவிட்டது? தன் தந்தையின் சாவுக்குக் காரணமானவனின் மகள் வயிற்றில் அவன் குழந்தை வளர்வதா? நோ… நெவர்… அவனுக்கு அவள் மீது ஒரு பற்றிருப்பது உண்மைதான். அதற்காக, கண்ட மேனிக்குக் கற்பனை செய்ய முடியுமா? அதுவும் அவளை, சீச் சீ… ஒருக்காலும் நடக்காது… நடக்கவும் கூடாது…

அவனையும் மீறி அவள் உருவத்தையும், உள்ளத்தையும் அவன் ரசிக்கத் தொடங்கியதை ஒரு கையாலாகாத் தனத்துடன் உணர்ந்துகொண்டான் அநேகாத்மன்.

நிலவு 12

இரவு பன்னிரண்டு மணிவரை உடல் வலியினாலும், மன வலியினாலும், தூங்காமல் படுக்கையில் கிடந்தாள் சர்வமகி. அவள் மனக்கண்ணோட்டத்தில், அநேகாத்மனே நிறைந்திருந்தான்.

அவள் எதிரியின் மகள் என்று தெரிந்தும், அவளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்தானே. அதற்குக் கைமாறாக என்ன செய்யப்போகிறாள். அதே நேரம், தன் தந்தைக்குத் தண்டனை வாங்கித்தருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும், அவன் வீட்டில் தங்கியிருக்கவும் அவளால் முடியவில்லை.

எப்படியாவது விடிவதற்குள்காகக் கிளம்பிவிடவேண்டும் என்று எண்ணியவாறு, மெதுவாகக் கண்ணயரத் தொடங்கினாள் சர்வமகி.

திடீர் என்று அவளுடைய தந்தை வாசுதேவன் கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, பல காவலர்களால் இழுத்து வரப்பட, இவள் கலவரத்துடன் தன் தந்தையை நோக்கி ஓட முயன்றாள். ஓடியவளைத் தடுத்து நிறுத்தினான் அநேகாத்மன்…

“லீவ் மீ… ஐ ஹாவ் டு கோ… அப்பா…” என்று இவள் கதற முயன்றாள். ஏனோ குரல் வரவில்லை. இழுத்து வரப்பட்ட தந்தை, இவள் முன்னால் நிறுத்திவைக்கப்பட, கலங்கிய விழிகளுடன்,

“கண்ணம்மா… நான் போய்வருகிறேன்… தம்பி தங்கையை பார்த்துக்கொள்…” என்றார்.

“நோ… நோப்பா… நீங்கள் எங்கும் பொகமுடியாது… நான் போக விடமாட்டேன்…” என்றவாறு அவருடைய கரத்தைப் பற்ற முயல, இப்போது அந்த சங்கிலி, அவள் கரத்தில் கட்டப்பட்டிருந்தது.

அதிர்ச்சியுடன், அந்த சங்கிலியை அவள் கழற்ற முயல,

“உன்னால் முடியாது…” என்றவாறு நெருங்கினான் அந்த ரட்ணபாலன். திடீர் என்று அவள் முகத்திற்கு நேராக ரட்ணபாலனின் முகம் நெருங்கிக்கொண்டிருக்க, அவன் முகத்தைத் தள்ளுவதற்காகக் கரங்களைத் தூக்கமுயன்றாள் சர்வமகி. அவளுடைய இரு கரங்களும் சங்கிலியால் பிணைத்திருந்ததால், கையை சிறிதும் அசைக்கமுடியிவில்லை. துடித்துப் பதைத்து, அவனிடமிருந்து விலகமுயன்றாள் அவள். அவனுடைய கால்களோ, அவளுடைய கால்களைப் பின்னிப் பிணைந்து அழுத்திக்கொள்ள, இவள் பதறினாள். அவனோ விகாரச் சிரிப்புடன், அவள் அணிந்திருந்த ஆடைகளைக் களைய முயல, இவள் தடுத்தவாறே,

“நோ… நோ… லீவ் மீ… ப்ளீஸ்… லீவ் மீ… லெட் மி கோ… ஆத்மன்… ஹெல்ப் மீ… ப்ளீஸ்… லெட் மி கோ… ஆத்மன்… எங்கே இருக்கிறீர்கள்…” என்று இவள் பெரும் குரல் எடுத்து அலற,

விருந்தினர் அறையில், ஆழ்ந்த உறக்கத்தலிருந்த அநேகாத்மனுக்கு, எங்கோ ஒரு பெண் அலறும் சத்தம் கேட்கப் படுக்கையை விட்டுத் துள்ளி எழுந்தான். உன்னிப்பாக அந்த அழுகுரல் எங்கேயிருந்து வருகிறது என்று அவதானிக்க, அவனுடைய அறையிலிருந்துதான் வருகிறது என்பதை உணர்ந்ததும், கதிரையில் விட்டெறிந்த டி சேர்ட்டைப் போட்டுக்கொண்டே, மின்னல் வேகத்தில் தன் அறையை நோக்கி ஓடினான்.

இருட்டாக இருந்த அறைக்கு மின்விளக்கைப் போட்டு வெளிச்சமாக்கிக் கட்டிலைப் பார்த்தான்.

அங்கே சர்வமகி, இரண்டு கரங்களையும் ஆட்டி எதிடமிருந்தோ தப்புவதுபோலத் துடித்துக்கொண்டிருக்க, பதறிக்கொண்டு அவளருகே விரைந்தான். அலறித் துடித்த உடலிலிருந்து அவள் ஏதோ தீய கனவு காண்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன், வேகமாக அவளருகே அமர்ந்தவாறு,

“மகி… லுக் அட் மி… மகி… வேக்கப்… இட்ஸ் ஜெஸ்ட் எ ட்ரீம்…”  என்று  அவளுடைய கன்னத்தைத் தட்டியவாறு அழைத்துப் பார்த்தான். அவனுடைய குரல், எங்கோ தொலைவில் கேட்கத் தன் கரங்களைத் தூக்கி, அவனைப் பற்ற முயன்றவாறு,

“ஆத்மன்… சேவ் மி… என்னைக் காப்பாற்றுங்கள்… ப்ளீஸ்…” என்று இவள் மேலும் அழத் தொடங்க,

“மகிம்மா… இதோ பார்… ஆத்மன்தான்… விழித்துக்கொள்… மகி… வேக்கப்…” என்றவாறு அவள் கன்னத்தைத் தட்டி உலுக்கினான்.

கனவாhல் விளைந்த பயத்தால், அவளுடைய உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருக்க, அதனைத் துடைப்பதற்காகத் துவாய் எடுக்கலாம் என்று அவன் எழ முயல, வெற்றுக் காற்றில் அலைந்த அவள் கரங்கள், வேகமாக அவன் டீ ஷேர்ட்டை இறுகப் பற்றிக்கொண்டது.

“சேவ் மீ… சேவ் மீ…” என்று திரும்பத் திரும்பச் சொல்ல, அவளை விட்டு விலகும் எண்ணத்தைக் கைவிட்டவனாக, மீண்டும், அவளருகே அமர்ந்தவன், ஆறாக வழிந்த வியர்வையைத் தன் கரத்தாலேயே துடைக்க முயன்றான்.

நெற்றி, கன்னம், கழுத்து என்று துடைத்தவன், அந்த வியர்வையைத் துடைப்பதற்குத் தன் கரம் போதாது என்பதைப் புரிந்துகொண்டவனாக அவள் பற்றியிருந்த, தன் டீ சேர்ட்டை வேகமாகக் கழற்றி, அதனைக் கொண்டு, அவள் முகம் கழுத்து, மார்பு எனத் துடைத்து விட்டவாறே,

“மகி… வேக்கப்… இட்ஸ் ஜெஸ்ட் எ ட்ரீம்… கண்ணைத் திற…” என்று கூறிக்கொண்டிருந்தான். இது எதையும் உணராது அவள் கனவை விட்டு வெளியேற முடியாது தவித்துக்கொண்டிருக்க, இவனோ இவளைத் தேற்ற முயன்ற தோற்றுக்கொண்டிருந்தான்.

திடீர் என்று சர்வமகியிடமிருந்து மூச்சு வெளிவராது தடைப்பட அவள் திணறினாள். கனவை நெஜம் என்று நம்பியவள், இரண்டுக்கும் வேறுபாடு புரியாது, மூச்சுவிட மறந்திருந்தாள் சர்வமகி.. உடனே அவள் நிலையைப் புரிந்துகொண்டவன்,

“மகி… உனக்கொன்றுமில்லை… இது வெறும் கனவு… யு ஆர் சேஃப்… “ என்று அவளுடைய தோள்களைப் பற்றிக் குலுக்கினான். அவளிடமிருந்து எந்த மாற்றமும் வராமல், மேலும் உடல் துடிக்க,

“மகி… மகி… டேக் எ ப்ரீத் டாமிட்…” என்றவன், பதட்டத்தில், அவளுடைய வாயைத் திறக்க முயன்றான். என்னதான் வாயைத் திறந்தும், அவளால், மூச்செடுக்க முடியவில்லை.

“நோ… நோ… டோன்ட் டூ திஸ் டு மி… டேக் எ ப்ரீத்… அன்ட் வேக்கப் மகி…” என்று பதறியவன், இனியும் அவளை விளிப்படைய வைக்கமுடியாது என்று புரிந்தவனாக, இறுதி முயற்சியாக, அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

மறு கணம், “ஹா…” என்கிற ஓசையுடன் சர்வமகி பெரிய மூச்சொன்றை எடுத்தவாறு விழிகளைத் திறந்தாள்.

அவள் நிலையை உணர்ந்தவன், அதற்கு மேலும் தாங்கமுடியாதவனாக, அவளை இழுத்துத் தன்ளோடு இறுக அணைத்துக்கொண்டான்.

“ஏன்டி… ஏன் இப்படி செய்கிறாய்… என்னையே உன்னை அடிக்கவைத்துவிட்டாயே…” என்றவன்,

இப்போது நடுங்குவது அவன் முறையாயிற்று… அவனுடைய முகம், அவளுடைய கழுத்து வளைவில் புதைய, வலக்கரம், அவளுடைய முதுகையும், இடக்கரம், அவளுடைய பின்புறக் கழுத்தையும் இறுகப் பற்றியிருந்தது.

விட்டிருந்தால், அவளைத் தனக்குள்ளேயே புதைத்துக்கொள்பவன் போலத் நெருக்கியிருந்தான் அநேகாத்மன்.

எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ, மீண்டும், அவளுடைய வியர்வை, இவனுடைய வெற்று மார்பில், படிய, கூடவே, அவள் சீரான மூச்சு எடுத்ததால், ஏறியிறங்கிய மார்பின் அசைவிலிருந்து மெதுவாக சுயநினைவுக்கு வந்தான், அநேகாத்மன்.

அவளை மெதுவாக விலக்கியவன். அவளுடைய முகத்தைத் தன் கரத்தில் பற்றி,

“யு ஓக்கே…?” என்றான் மென்மையாக. அவளோ,

“அந்த ரட்ணபாலன்… என்னை…” என்றவளுடைய உதடுகள் பிதுங்க,

“ஷ்… இட்ஸ் ஓக்கே…” என்றவன், அப்படிய அவளைத் தன் கரங்ககளில் ஏந்தியவாறு படுக்கையை விட்டு எழுந்தான்.

அவளுக்கு இன்னும் தான் கண்டது, கனவா இல்லை நனவா என்று புரியாது கலங்கியிருந்ததால், அநேகாத்மனின் செயலை அவள் சிறிதும் உள்வாங்கவில்லை. கூடவே, அவனுடைய அருகாமை அவளுக்குப் பலத்த பாதுகாப்பைக் கொடுத்ததோ, அவனுடைய மார்பில் தனது முகத்தை வாகாகச் சாய்த்தவளின் வலது உள்ளங்கை, அவனுடைய அடர்ந்த முடிகொண்ட மார்பில் பதிந்தது.

அப்படியே அவளைத் தூக்கியவாறு, சமையல் அறைக்கு எடுத்து வந்தவன், அங்கிருந்த கதிரையில் அவளை மெதுவாக இருத்தினான்.

இப்போது ஓரளவுக்கு சர்வமகி சுயநினைவுக்கு வந்திருந்தாலும், அந்தக் கொடிய கனவிலிருந்து அவளால் வெளி வரமுடியவில்லை.

அவளுடைய நிலையைப் புரிந்துகொண்ட அநேகாத்மன், ஸ்டவ்வில் பானை வைத்து, ஃப்ரிஜிலிருந்த பாலை அதில் ஊற்றிச் காய்ச்சினான். அது நன்கு பொங்கிவர, அதில் மெடிக்கல் கபிநெட்டிலிருந்து ஒரு தூக்கமாத்திரையை கலந்து, குடிக்கும் அளவுக்கு அந்தப் பாலை ஆற்றி, அதை ஒரு கப்பில் ஊற்றி, அவளருகே கொண்டு வந்து நீட்டினான்.

மறுக்காமல் அதை வாங்கியவளின் கரங்கள் நடுங்க, அவளுக்கு அருகே இன்னொரு இருக்கையைப் போட்டவன், அந்தப் பாலை அவளுக்குப் பருக்கிவிட்டான்.

முழுவதுமாக குடிக்கும் வரை, அவளுக்கு உதவியவன்,

“இப்போ எப்படியிருக்கு…” என்றான் அவள் முகத்தில் விழுந்த முடிக்கற்றைகளை, காதோரமாக ஒதுக்கிவிட்டவாறு.

இப்போது பயம் ஓரளவு நீங்கியிருந்தாலும், அந்தக் கனவின் தாக்கத்தினால், முற்றுமுழுதாக வெளிவரமுடியவில்லை.

அதே நேரம், அவளுடைய மேல் உதட்டில், மீசையெனக் கோடாகக் குடித்திருந்த பால் பதிந்திருக்க, தன் பிறங்கையால், துடைத்துவிட்டவனின் விரல்கள், அவள் மென்மையான உதட்டையும் வருடிச் செல்ல, அந்த வருடலில், உடல் சிலிர்க்க, அந்த மென்மையில் கரைந்தவனாக ஒரு கணம் தன் விழிகளை மூடினான் அநேகாத்மன்.

மேலும், மேலும் அவ் மெல்லிய இதழ்களில், கரம்கொண்டு கவிபாடத் துடித்த மனதைப் பெரும் சிரமப்பட்டு அடக்கியவன், தன் கரத்தை நீக்கி, விழிகளைத் திறந்தான்.

அதே நேரம், அநேகாத்மனின் மெல்லிய வருடலில் ஒரு கணம் திகைத்தவள், அதிர்வுடன் அவனை விழித்துப் பார்க்க, அவனோ, தன் கண்களைப் பிடிவாதமாக, அவள் விழிகளுடன் கலக்காது, எங்கோ பார்த்துவிட்டுப், பின் திரும்பி சர்வமகியைப் பார்த்தவாறு,

“ஏதாவது சொல்லப்போகிறாயா?” என்றான் அநேகாத்மன் குரலில் தெரிந்த தடுமாற்றத்தை மறைத்தவாறு.

அநேகாத்மனின் கேள்வியால், தன்னிலை பெற்றவளுக்கு, அந்தக் கனவை நினைக்கும்போதே உடம்பு உதறியது.

“அந்த ரட்ணபாலன்… என் கரங்களை சங்கிலியால் பிணைத்து, என்னோடு… என்னோடு…| அதற்கு மேல் கூற முடியாதவளாக, மீண்டும் நடுங்க, வேகமாக அவளை நெருங்கித் தன் கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், அவள் தோள்களில் தன் கரங்களைப் பதித்து,

“மகி… லுக்.. லிசின் டு மி… ஹிஸ் சப்டர் வோஸ் ஓவர். டூ யு ஹியர் மி… அவனால் இனி உன்னை நெருங்க முடியாது… எப்போதுமே நெருங்க முடியாது… அவன் நிழல் கூட உன் மீது படாது… ஐ ப்ராமிஸ் யு…” என்று அவள் மனதில் பதியவைக்க முயன்றவன், அவள் நாடியைப் பற்றி, அவள் முகத்தை நிமிர்த்தினான்.

“மகிம்மா… பிலீவ் மீ… இனி அவனால் உன்னை நெருங்க முடியாது… எப்போதும்?” என்றான் அவன் அழுத்தமாக.

“உண்மையாகவா?” என்றாள் இன்னும் சந்தேகம் மாறாதவளாக.

“நான் ஒரு போதும் தவறான வாக்கு கொடுத்ததும் இல்லை, தவறான சத்தியம் செய்ததும் இல்லை… அதனால் நீ என்னை முழுதாக நம்பலாம் சர்வமகி…” என்றான் அவன் சற்று அழுத்தமாக.

இப்போது அவளுடைய விழிகள் தூக்கத்தில் சொருகுவதற்குத் தயாராக, தன் இருக்கையை விட்டு எழுந்த அநேகாத்மன்,

“ஓக்கே… கம்… டைம் டு ஸ்லீப்…” என்றவன், மீண்டும் அவளைக் கரங்களில் ஏந்தி, அவனுடைய படுக்கையறைக்குக் கொண்டு வந்தான். அவனுடைய வலிமையான, பலம் மிக்க கரங்களுக்குள், குழந்தையெனப் பாந்தமாக ஒடுங்கியவள், நன்றாக உறக்கத்தின் வசத்த்தில் சிக்கியிருக்க, மெதுவாக அவளைப் படுக்கையில் கிடத்தியவன் தூங்கிக்கொண்டிருந்தவளையே தன்னை மறந்து கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

நேரத்தைப் பார்த்தான். நேரம் ஒரு மணி என்றது கடிகாரம். நாளைக்கு அவனுக்கு முக்கிய கேஸ் ஒன்று இருந்ததால், சீக்கிரமாக எழுந்திருக்கவேண்டிய கட்டாயம்.

உடல் வேறு தூக்கத்திற்காக கெஞ்ச, மெல்லிய கொட்டாவி ஒன்றை கையிடுக்கில் வெளியிட்டவன், அவளுக்கு மேலாகப் போர்வையைப் போர்த்திவிட்டு, மின்விளக்கை அணைத்துவிட்டு, அறையிலிருந்து வெளியே வந்தான்.

கவனமாக அறையை மூடாது, சற்றுத் திறந்து வைத்தவன், அருகேயிருந் விருந்தினர் அறைக்குள் நுழைந்து படுக்கையில் தொப் என்று விழுந்தான்.

சிறிது நேரம் சர்வமகியையும், அவள் கனவையும் அதனால் அவள் பட்ட அவஸ்தையையும் நினைததவாறே விழிகளை மூடியவன், பின்பு அப்படியே உறங்கியும்போனான்.

என்னதான் தூக்க மாத்திரை போட்டிருந்தாலும், ஆழ்மனதிலிருந்த வேதனை, சர்வமகியை நீண்ட நேரம் தூங்கவிடவில்லை. அதன் காரணமாக மறு நாள் சூரியன் எழும்புவதற்கு முன்பாகவே அவளுக்கு விழிப்பு வந்திருந்தது.

மசமசத்த நினைவில், முன்னிரவு நடந்தவை, அனைத்தும் கனவுபோலவே தோன்ற, எது நிஜம் எது கனவு என்று தெரியாமல் குழம்பியவள், மெதுவாக படுக்கையை விட்டு எழுந்தாள்.

குளியலறைக்குள் நுழைந்து தன் அத்தியாவசிய தேவையைப் பூர்த்திசெய்தவள், தன் முகத்தைக் குளிர் நீர் கொண்டு நன்கு அடித்துக் கழுவ, இப்போது, ஓரளவு தெளிவு பிறந்திருந்தது.

இனிக் கிளம்பவேண்டியதுதான், என்று முடிவெடுத்தவளுக்கு, இத்தனை உதவி செய்தவனிடம் சொல்லாமல் கிளம்ப முடியாதுதான். இருந்தாலும், ஏதோ பரிதாபத்திற்காக அவளை அழைத்து வந்து உதவி செய்தவனை மேலும் சிரமப்படுத்த அவளுக்கு மனமில்லை.

மேலும், தன் தந்தையைக் கொலைகாரன் என்று நினைக்கும் ஒருவன் வீட்டிலும் சுகமாகத் தங்கியிருக்க அவளால் முடியவில்லை.

என்னதான், அவன் அவள் மீது இரக்கப்பட்டாலும், அந்த இரக்கம் மனிதாபிமானத்தால் வந்த இரக்கம்தானே. இல்லாவிட்டால், தன் தந்தையைக் கொல்லக் காரணமானவன் என்று நினைக்கும் ஒருவரின் மகளுக்கு இத்தனை உதவி செய்ய மனம் வராதே.

அவனுடைய நிலையில் அவளை இரு தினங்கள் தங்கியிருந்து செல்வதற்கு அனுமதித்ததே பெரிய காரியம். விருந்தினரை உபசரிப்பது போல உபசரித்தவனுக்கு மென் மேலும் சிரமம் கொடுக்க முடியுமா?

உடனேயே கிளம்பிவிட்டாள் சர்வமகி.

கிளம்பும் போது அந்த அறையில் கிடைத்த ஒரு வெற்றுத்தாளில் எதையோ கிறுக்கினாள். அதைப் பத்திரமாகப் பறந்துவிடாதவாறு மேசை விளக்கின் கீழே செருக எண்ணியவள், தன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒன்றரைப் பவுன் சங்கிலியைக் கழறினாள். அவளிடம் தற்போது பெறுமதிமிக பொருள் இருக்கிறது என்றால் அது இந்த நகை மட்டுமே. பிள்ளையார் டாலருடன் இருந்த சங்கிலியைக் காகிதம் பறக்காதவாறு அதன் மீது வைத்தாள். பெரும் நிம்மதியுடன் ஐந்து மணி அடிப்பதற்குள்ளாகத் தன் வீடுநோக்கிக் கிளம்பிவிட்டாள் சர்வமகி.

புறப்பட்டவளுக்கு, அப்பொதூன் அவள் அணிந்திருந்த ஆடையின் நிலை புரிந்தது. அப்படியே போகமுடியாதே… என்ன செய்யலாம் என்று எண்ணியவளாக, அவனுடைய கபேர்டைத் திறந்தாள். முதலில் அவள் கண்களுக்குப் பட்டதே, அவனுடைய நீண்ட கோர்ட்தான். நிச்சயமாக அவளுடைய கணுக்கால் வரையும் அது நீண்டிருக்கும். நிம்தியுடன் அதைக் கரங்களில் எடுத்துப் போட்டுக்கொண்டாள்.

அநேகாத்மனின் வாசைன அதிலும் இருந்ததோ. சற்று மூச்சை இழுத்து சுவாசிக்க, அவளையும் அறியாது, அச்சம் கரைந்துபோக, அருகேயிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். அந்தக் கோர்ட்டுக்குள் முற்றுமுழுதாக அவள் புதைந்துபோயிருந்தாள். கிட்டத்தட்ட மூன்றுபேர் சர்வசாதாரணமாக அதற்குள் புகுந்துகொள்ளலாம்.

அவளுக்குத் தன் உருவத்தைப் பார்க்கும்போது, அந்த நிலையிலும் நகைப்பு வந்தது. கத்தரித்தோட்டத்து வெருளி கூட, இத்தனை பெரிய கோர்ட் போட்டிருக்குமா தெரியாது. மேல்லிய நகைப்புடன், அந்தக் கோர்ட்டைத் தன்னைச் சுற்றி இறுக்கிப் பிடித்தவாறு, அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் சர்வமகி.

நிலவு 13

விருந்தினர் அறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அநேகாத்மனின் செவியில் கைத்தொலைபேசியின் கிண்கிணி ஓசை விழச் சிரமப்பட்டுத் தன் விழிகளைத் திறந்தான். மீண்டும் விழிகள் சோர்வில் மூட, அவன் உறக்கத்தை மீண்டும் குலைப்பதுபோலக் கைத் தொலைப்பேசி சிணுங்கியது.

“டாமிட்…” என்று முணுமுணுத்தவன், கை நீட்டித் தொலைபேசியை எடுத்துக் காதில் பொருத்தினான்.

“ஹலோ சார்… வசந்தி பேசுகிறேன்…” என்று மறு புறமிருந்து குரல் வர, வேகமாகப் படுக்கையைவிட்டு எழுந்தான் அநேகாத்மன்.

“என்ன வசந்தி? எனிதிங் ரோங்? அங்கே ஏதாவது பிரச்சனையா என்றான் படபடப்புடன்.

“நோ… நோ சார்… நான் வீட்டிற்குப் போகப்போகிறேன்… உங்களுக்கு நன்றிசொல்லத்தான் கால் பண்ணினேன்…” என்றாள் வசந்தி.

“வட்… வீட்டுக்குப் போகப்போகிறாயா? அப்படியானால் சர்வமகியின் சகோதரர்களுடன் யார் தங்குவது?” என்றான் சற்றுக் கோபத்துடன்.

“அது தான் சர்வமகியே வந்துவிட்டார்களே சார்… பிறகு நான் எதற்கு அங்கே தங்குவான்?” என்றாள் வசந்தி புரியாமல்.

“வட்…” என்றவன் வேகமாகப் படுக்கையைவிட்டு எழுந்தான். கடகடவென்று அவனுடைய அறைக் கதவைத் திறந்து பார்த்தான். அறை வெறுமையாக இருந்தது. ஏனோ மனம் துணுக்குற்றது.

“ஓ… ஓக்கே வசந்தி… தாங்ஸ்… உனக்குரிய பணத்தைக் கொடுத்து அனுப்பிவிடுகிறேன்…” என்றவனுக்கு  அந்த அறையைப் போலவே அவன் மனமும் வெறுமையானது போன்ற உணர்வில் தவித்துப்போனான். எரிச்சலுடன்,

“டாமிட்…” என்றவாறு, கரத்திலிருந்த கைபேசியை மடித்து அருகேயுள்ள மேசையியில் விட்டெறிய, அது சுழன்று சென்று, மேசைவிளக்கில் முட்டி நின்றது. அது முட்டி நின்ற இடத்திற்கு அருகே மடித்துவைக்கப்பட்டிருந்த ஒரு பேப்பர் கண்ணை உறுத்த, வேகமாக அதனருகே சென்றான். அந்தக் காகிதத்தின் மேல் மின்னிக்கொண்டிருந்த தங்க நகையை வியப்புடன் கரங்களில் எடுத்துப் பார்த்தான். புருவம் சுருங்க அதைக் கைக்குள் போட்டுப் பொத்திக் கொண்டவன் மறு கரத்தால் கடிதத்தை எடுத்துப் பிரித்தான்.

“பெற்ற தாயையும், உற்ற சுற்றத்தையும் தெரியாதவர்கள் போல நடந்து கொல்லும் இந்த உலகத்தில், எதிரியின் மகள் என்று தெரிந்தும் உதவிக்கரம் நீட்டிய உங்கள் நல்ல எண்ணத்திற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேனோ தெரியாது. இப்போது நான் உங்கள் எதிரியின் மகளாக வெளியேறுகிறேன். காலம் என் தந்தைக்கு நல்ல தீர்ப்பைக் கூறும். என் தந்தை குற்றமற்றவர் என்பதை நிரூபித்த பின்பு உங்கள் முன்னால் நல்ல தோழியாக வருவேன்.

பி.கு. நீங்கள் செய்த உதவிக்கு விலைமதிப்பு என்பது கிடையாதுதான். இருந்தாலும் எனக்காக நீங்கள் செலவு செய்வதை நான் விரும்பவில்லை. என்னால் இப்போதைக்கு இது மட்டும்தான் தர முடிகிறது. ஏற்றுக் கொள்ளுங்கள்.

சர்வமகி

அந்தக் கடிதத்தையே வெறித்துப் பார்த்தவன், கோபம் கொண்டவனாக அதைக் கசக்கிக் கரங்களில் பொத்தினான்.

“ஹொ டெயர் யு…” என்று சினந்தவனின் விழிகளுக்கு அவன் படுக்கை தென்பட்டது. முதன் முதலாக அவன் அறையில் ஒரு பெண்… எத்தனையோ பெண்களுடன் அவனுக்குப் பழக்கம் இருந்தாலும், ஒரு போதும் அவர்களை அவன் வீட்டிற்குள் அனுமதித்ததில்லை. அவர்களுடைய வரவும், சேவையும் வீட்டிற்கு வெளியே மட்டுமே. ஆனால் சர்வமகியை மட்டும் அவன் எப்படி வீட்டிற்குள் அனுமதித்தான் என்பது அவனுக்கு விடையில்லாக் கேள்வியே.

அவன் படுக்கை, ஒழுங்காக விரிக்கப்பட்டிருந்தாலும், அதில் அங்கும் இங்குமாக மெல்லிய இரத்தக்கறை. முன்தினம் நடந்தவை படமாக மனக்கண்ணில் ஓட, தன்னையும் மறந்து அந்த இரத்தக் கறையை வருடிக்கொடுத்தவன், பின் எதிலிருந்தோ தப்புபவன் போன்று, அந்தப் படுக்கை விரிப்பை இழுத்து எடுத்துத் தூற எறிந்தான்…

“டாமிட்… டாமிட்… டாமிட்… ஏன்… ஏன் அப்படிச் செய்தாள்… அவனிடம் நேருக்கு நேர் சொல்லிவிட்டுப் போகக் கூடவா அவளால் முடியவில்லை?” என்று எண்ணியவன், கோபம் அடங்காதவனாக அந்தப் படுக்கையிலேயே விழுந்தான்.

அந்தப் படுக்கையில் அவளுடைய வாசனை மிச்சமிருந்தது. கையிலிருந்த தங்கச் சங்கிலியைத் தூக்கி உற்றுப் பார்த்தான்.

அவளுடைய உருவம் மனக்கண்ணில் வந்தது. சடார் என்று எழுந்தமர்ந்தான்.

‘எப்படிப் போயிருப்பாள்… அந்த அரைகுறை ஆடையுடன்… எத்தனை பேர் அவளைப் பார்த்திருப்பார்கள்… அவளுடைய வழுவழுத்த கால்களும், பட்டையொத்த தோள்களும்…’ ’ நினைக்கும்போதே, உடல் பற்றியெரிந்தது.

“சோ வட்… யார் எப்படிப் பார்த்தால் எனக்கென்ன. ஆஃப்டரோல் அவள் என் எதிரியின் மகள்… அவளைப் பற்றி நான் எதற்குக் கவலைப்படவேண்டும்?’ என்று தனக்குள் எண்ணியவன், அவளுக்காக இரக்கப்பட்ட மனத்தைச் சபித்தவாறே அந்தச் சங்கிலியைத் தூக்கி வீசினான். அது பறந்து சென்று தரையில் விழுந்தது.

அது போலவே, அவளுடைய எண்ணங்களையும் அவன் தூக்கி வீசினான். இல்லை இல்லை வீசியதாக நினைத்தான்.

யாருக்கு வேண்டும் அவளுடைய நகை. நான் என்ன பணத்துக்கு வழியில்லாமலா இருக்கிறேன்…’ என்று சினந்தவன் ஆழ்ந்த மூச்சை எடுத்து, தன்னை சமப்படுத்த முயன்றான். இப்படியே இருந்தால், செய்யவேண்டிய வேலைகளை யார் பார்ப்பது. புரிந்துகொண்டவனாகக் கட்டிலை விட்டு எழுந்தான். கபேர்டில் இருந்து துவாயை இழுத்து எடுத்தவனுக்கு, வெறுமையான ஹங்கர் கண்ணில் பட, வியப்புடன் அதை எடுத்துப் பார்த்தான்.

அவனுடைய கோர்ட்டைத் தாங்கியிருந்த ஹங்கர். அதிலிருந்த கோர்ட்டிற்கு என்னவாயிற்று. உடனே அதற்கான காரணத்தையும் யூகித்துக்கொண்டான் அநேகாத்மன். ஏனோ கோபத்திற்குப் பதில் பெரும் நிம்மதியே தோன்றியது. அது வரை எரிச்சலில் தத்தளித்திருந்த அவன் மனம் சற்று அமைதியடைந்தது.

‘நல்லவேளை… அவள் அந்த அரைகுறை ஆடையுடன் அப்படியே போகவில்லை.’ என்று எண்ணியவன் நிம்தியாகத், தன் குளியலறைக்குள் நுழைந்தான்.

ஷவரைத் திறந்துவிட்டு, அதன் கீழ் நின்றான். மீண்டும் அவளின் நினைவு அவனை ஆக்கிரமித்தது. முன்னிரவு அவள் கண்ட கனவும், அதனால் அவள் பட்ட அவஸ்தையும், மனக்கண்ணில் வந்து போனது.

சுவரில் தன் இரு கரங்களையும் பதித்து ஊசியெனக் குத்திய குளிர் நீரில் தன் முகத்தைப் பதித்தான். அவள் நினைவுகளும் சேர்ந்து அவளை ஊசியாகக் குத்த, அந்த நீர் அவனைக் கழுவியதுபோலவே, அவளுடைய நினைவுகளையும் கழுவிச்செல்லாதா என்று ஏங்கினான். என்ன ஏங்கி என்ன பயன்….? மனம் மீண்டும் முடிந்துபோனது என்று எண்ணிய முற்றுப்புள்ளியைக் கமாவாக்கிவிட்டு, இவனைப் பார்த்துச் சிரித்தது.

“ஆத்மன்… யு ஆர் வேஸ்ட்… டோட்டலி வேஸ்ட்….” என்று தன்னையே சபித்தவாறு, குளித்து விட்டு வெளியே வந்தான்.

இன்று அவன் முக்கியமாக ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக வாதாடுவதற்கு கோர்ட்டிற்குப் போகவேண்டியிருந்தது. அவன் இப்போதிருக்கும் மனநிலையில் எங்கும் போகாமல் வீட்டிலேயே தங்கிவிடவேண்டும் என்று எரிச்சல் தோன்றியது. ஆனால் அவனால் அப்படிச் செய்யமுடியாதே. அவனையே நம்பியிருக்கும் அந்தப் பிரதிவாதியை அம்போ என்று கைவிட முடியாதே.

தன் லப்டப்பையும், ஒரு சில ஃபைல்களையும் எடுத்துவிட்டுக் கிளம்பியவனின் காலில் எதுவோ தட்டுப்பட, குனிந்து பார்த்தான். அவன் எறிந்த சங்கிலி. ஏதோ தப்பு செய்தவன் போலக் குனிந்து அதைக் கரங்களில் எடுத்து உற்றுப் பார்த்தான். சற்று மெல்லிய சங்கிலிதான். அதில் எஸ் என்னும் எழுத்தில் வெள்ளைக் கற்கள் பொறித்த பிள்ளையாரின் உருவத்துடனான பென்டன் தொங்கிக்கொண்டிருந்தது.

மீண்டும் அதைக் கரத்தில் அடக்கியவன், அதைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு தன் கார் நோக்கிச் சென்றான்.

நிலவு 14

இரண்டு கிழமைகளுக்குப் பிறகு, அன்றுதான் சர்வமகியின் தந்தைக்குத் தீர்ப்புக் கூறும் நாள். இறந்து போனது, உலகம் போற்றும், ஒரு பெரிய தொழில் அதிபர் என்பதாலும், அவரின் மகனே அவருக்காக வாதாடப்போவதாலும், அனைத்துப் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அந்தக் கொலைவழக்கைப் பற்றியே செய்திகளைத் தாங்கிவந்தன.

எல்லா பத்திரிகைகளும், சர்வமகியின் தந்தைதான் கொலையாளி என்பது போலப் பிரசுரித்திருக்க, குடும்ப அங்கத்தவர்கள் அனைவரின் முகங்களும் வாடின.

யாரிடம் போய் முட்டிக் கூற முடியும்? அப்படியே கூறினாலும் நம்பவா போகிறார்கள். ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாதே… பெரும் வேதனையுடன் நீதிமன்றத்திற்குக் கிளம்பினாள் சர்வமகி.

எப்படியோ சர்வமகி நடராஜனின் உதவியுடன், ஒரு சட்டத்தரணியைப் பிடித்திருந்தாள். அந்தாளுக்கு வழமைக்கு அதிகமாகவே பணம் கொட்டவேண்டியிருந்தது. ஆரம்பத்தில் அநேகாத்மன் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், அவர் தயங்கத்தான் செய்தார்.

எப்படியோ, அவள் அதிகமாகக் கொடுப்பதாகக் கூற, சம்மதித்துவிட்டார்.

ஆனாலும் அவள் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவளுக்குத் தந்தையை எப்படியாவது வெளியே கொண்டுவரவேண்டும். அதற்கு விலையாக எதைக் கொடுக்கவும் தயாராக இருந்தாள்.

தேவகியும், மாதவியும் அவளுடன் நீதிமன்றத்திற்கு வருவதாகக் கிளம்ப, உடனே அதற்கு மறுத்துவிட்டாள் சர்வமகி.  அவர்கள் வருவதால் ஏதாவது மாறப்போகிறதா என்ன? இல்லையே… தற்போது தந்தை இருக்கும் நிலையைக் கண்டால் அவர்களால் நிச்சயமாகத் தாங்கமுடியாது. அவர்களின் வேதனை அதிகரிக்குமே தவிர, இம்மியும் குறைந்துவிடப்பொவதில்லை. அதைவிட, தான் ஒருத்தியே சமாளிப்பது சிறந்தது என்பதால், தனியாகவே புறப்பட்டுவிட்டாள்.

சர்வமகிக்கு, ஓரளவு, இந்தக் வழக்கில் ஜெயித்துவிடுவோம் என்கிற நம்பிக்கையிருந்தது. தந்தை கொலைசெய்யவில்லை என்பதை எந்த அளவுக்கு உறுதியாக நம்பினாளோ, அந்த அளவு உறுதியாகத் தன் தந்தை வெளியே வந்துவிடுவார் என்றும் அவள் நம்பினாள்.

என்னதான் தைரியமாக இருக்க முயன்றாலும், நீதிமன்றத்திற்குள் நுழையும்போதே சர்வமகியின் சர்வமும் நடுங்கத் தொடங்கியது. கால் பின்ன, உள்ளே நுழைந்தவள் கிடைத்த இருக்கையில் அமர்ந்தாள்.

மெது மெதுவாக ஒவ்வொருவராக உள்ளே வரத் தொடங்கினர். உள்ளம் நிறைந்த அச்சத்துடன், அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயமும் சேர, சர்வமகி விறைத்துப்போய் நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதனால் உள்ளே யார் யார் வந்தார்கள் என்பதை அவள் கவனிக்கவில்லை.

திடீர் என்று அங்கே கூடியிருந்தவர்களிடம் ஒரு பரபரப்புத் தெரிய, சர்வமகி நிமிர்ந்தாள்.

அங்கே கூடியிருந்தவர்களைக் கண்டதும் ஒரு நிமிடம் மருண்டவள், தொலைவில் தந்தையை இரு காவல்துறை அதிகாரிகள் அழைத்துவருவதைக் கண்டதும், தொண்டை அடைக்கத் தன் தந்தையைப் பார்த்தாள்.

வாசுதேவன் மிகவும் மெலிந்திருந்தார். ஆனாலும் கோர்ட் சூட்டுடன் மழிக்கப்பட்ட தாடியுடனும் பார்க்கும்போது ஒரு குற்றவாளியைப் போலவே தெரியவில்லை.

நேராக நடந்த வாசுதேவனின் விழிகள் நாலாபுறமும் ஆவலுடன் சுழன்றன. அங்கே தன் மகளைக் கண்டதும், அவர் விழிகள் மகிழ்ச்சியில் மின்னின. அவளருகே வந்ததும் சற்றுத் தயங்கி நின்றார்.

கலங்கிய தன் மகளுக்கு ஆறுதல் கூறவேண்டும்போல உள்ளம் பரபரத்தது. ஆனால் அது முடியாதே. தவிர, இவள்தான் என் மகள் என்று எல்லோருக்கும் தண்டோரா போட்டுச் சொல்லவேண்டியிருக்குமே. அவர் கொலை செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் அது நிரூபிக்கும் வரை சந்தேகப்பார்வை அவர் மீது நிச்சயமாக இருக்குமே. அந்தச் சந்தேகம் தன் மகளின் மீதும் விழவேண்டுமா?

வேதனையில் முகம் சுருங்க, அதை மகளுக்குக் காட்டாது, தன் விழிகளை மூடித் திறந்து அவளை அமைதிப் படுத்த முயன்றார். அவர் விழியசைவைப் புரிந்து கொண்ட மகளோ, மெல்லிய புன்னகையைச் சிந்த, அதில் திருப்திப் பட்டவராகத் தன் இடத்திற்குச் சென்று அமர்ந்தார்.

மீண்டும் பரபரப்பு அங்கிருந்தவர்களிடமிருந்து வர, சர்வமகி திரும்பிப் பார்த்தாள்.

அவன்தான் அநேகாத்மன், தன்னுடைய கம்பீர நடை குறையாமல், அங்கிருந்தவர்கள் அனைவரையும் சின்னதாக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தான்.

வந்துகொண்டிருந்தவன், ஒரு ஓரமாக அமர்ந்திருந்த சர்வமகியைக் கண்டதும், அவனுடைய வேகம் சற்றுத் தடைப்பட்டது. தன் கூரிய விழிகளால், அவளை எரித்தவன் பின் அலட்சியமாகத் தன் இருக்கையில் வந்தமர்ந்தான்.

அமர்ந்தவனின் விழிகள் சர்வமகியை விடுத்து, அவள் தந்தை வாசுதேவனுக்குச் சாதமாக வாதாட வந்திருந்த சட்டத்தரணியை நோக்கின.

அவனுடைய விழிகளில் தெரிந்த கூர்மையையும், அந்தக் கூர்மையிலிருந்து  சுடர்விட்டுத் தெரிந்த பிரகாசமும், கூடவே இதழோரத்தில் தெரிந்த நக்கல் சிரிப்பையும் கண்ட எதிர்க்கட்சி சட்டத்தரணிக்கு ஏனோ உடல் வியர்த்தது.

அவசரமாகத் தன் பான்ட் பாக்கட்டில் வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து, முகத்தையும், கழுத்தையும் துடைக்க, கிண்டலாக அவரைப் பார்த்து நகைத்துவிட்டு, மீண்டும் சர்வமகியிடம் தன் விழிகளைச் செலுத்தினான்.

அவளுடைய சற்று மெலிந்த உடலும், சோர்ந்த முகமும், எதிர்பார்ப்பு நிறைந்த விழிகளும், அவன் உள்ளத்தைத் தடம்புரளச் செய்ய, தன் மீதே கோபம் கொண்டவனாகத் தன் முகத்தைத் திருப்பி, எங்கோ பார்த்தான் அநேகாத்மன்.

தன்னிடம் சொல்லாமல் அவள் கிளம்பியது இன்னும் அவனை உறுத்திக்கொண்டிருந்தது. சர்வமகிக்கு ஏனோ அவனுடைய கோபம் இருந்த நம்பிக்கையையும் இழக்கச் செய்தது.

சற்றுப் பொறுத்து நீதிபதி வர அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

அவர் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தனர்.

உடனேயே வழக்கு தாமதமின்றித் தொடங்கிவிட்டது. வாசுதேவன் கொலைசெய்யவில்லை என்பதை அவருக்காக அழைத்துவரப்பட்ட வழக்கறிஞர் வாதாடினார். பல்வேறு விதமாக, வாசுதேவன் கொலையைச் செய்யவில்லை என்று வாதாடிய சட்டத்தரணி, இறுதியாக முக்கிய சாட்சியங்களாக,

“பாய்னட் நம்பர் 1 – குற்றம் சாட்டப்பட்ட வாசுதேவன் காலம்சென்ற வெங்கடேஷைத் துப்பாக்கியால் கொன்றதாகச் சாட்சியங்கள் கூறுகிறது. ஆனால் காலம் சென்ற வெங்கடேஷின் கட்டடத்திற்குள் இலகுவாக யாராலும் நுழையமுடியாது. உள்ளே செல்வதாக இருந்தால், பாதுகாப்புப் பரிசோதனைகள் செய்தபின்பே உள்ளே செல்லமுடியும். அப்படியிருக்கையில், உள்ளே சென்ற வெங்கடேஷைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவருடைய துப்பாக்கியை  ஏன் பாதுகாவலர்கள் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் ஆயுதம் கண்டறி கருவி மூலம், வாசுதேவனை முற்று முழுதாகப் பரிசோதித்துவிட்டுத்தானே உள்ளே விட்டார்கள். அப்போது இல்லாத துப்பாக்கி, எப்படி, வாசுதேவன் காலம்சென்ற வெங்கடேஷின் அறைக்குள் நுழைந்தபோது வந்தது.

பாய்ன்ட் நம்பர் 2 – கிட்டத்தட்ட அரை மணி நேரமாக இருவருமே பேசியிருக்கிறார்கள். அந்த அரை மணி நேரத்தில் இருவருக்கும் இடையில் எந்த வாக்குவாதமும் நிகழவில்லை. அதற்கு ஆதாரம் இடையில் தேநீர் எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வந்த செக்ரட்டரி…

பாய்ன்ட் நம்பர் 3 – வாசுதேவனுக்கும், காலம்சென்ற வெங்கடேஷ{க்கும், இது வரை எந்த முன்விரோதமோ, பகையோ இருந்ததில்லை. ஆக, வெங்கடேஷைக் கொல்வதற்கான காரணம், வாசுதேவனுக்கு இல்லை.

பாய்ன்ட் நம்பர் 4- திரு வாசுதேவனின் வாழ்வில் இது வரை எந்தக் கறுப்புப் புள்ளியும் விழுந்ததில்லை. அவர் மிக நல்ல மனிதர் என்பதை அவருடன் பழகும் நண்பர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். அந்த அடிப்படையில், காலம்சென்ற வெங்கடேஷைக் கொல்லும் அளவுக்கு அவரிடம் தைரியமோ, திடமோ நிச்சயமாக இருந்திருக்காது.

ஆகவே கனம் நீதிபதியவர்களே, இவற்றை அடிப்படையாக வைத்து, வாசுதேவன் நிரபராதி என்று கூறி அவரை விடுவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தட்ஸ் ஆல் என்றார் அந்த சட்டத்தரணி ரோபர்ட்.

அடுத்து அநேகாத்மன் எழுந்தான். ஒரு நிமிடம் ஏனோ தடுமாறினான். அவன் கண் முன்னால் கலங்கிய விழிகளுடன் நின்று கெஞ்சிக்கேட்ட சர்வமகி வந்து போனாள். ஏனோ அவளுக்கு எதிராக வாதாடுவதை நினைக்கும் போது, வலித்தது.

ஆனாலும் தந்தையின் கொலைக்குக் காரணமான குற்றவாளி தப்பிப்பதையும் அவன் விரும்பவில்லை. ஒரு நிமிடம் அழுந்த மூடிய விழிகளில் சர்வமகியா, தந்தையா என்கிற தராசு நிறுத்தப்பட, தந்தையின் பாசமே தராசில் கீழிறங்க, பிடிவாதமாக சர்வமகியின் நினைவுகளை ஒதுக்கிவிட்டு முன்னால் வந்தான்.

முதலில் எனக்குரிய நேரத்தைக் கொடுத்ததற்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன்…” என்று தலை வணங்கியவன், உடனேயே விஷயத்திற்கு வந்தான்.

“மிஸ்டர் வாசுதேவன் எப்படிக் கொலை செய்தார், அவர் சென்றபோது ஏன் ஆயுதங்கள் எடுத்துச் செல்லவில்லை, அவர் என் தந்… மன்னிக்கவேண்டும், லேட் வெங்கடேஷ{டன் எந்தப் பகையும் இருக்கவில்லை, அதனால் அவர் கொலை செய்ய வாய்ப்பில்லை என்கின்ற விவாதங்களுக்கு விவாதத்திற்கு நான் வருவதற்கு முன்பு, எதற்காக மிஸ்டர் வாசுதேவன், இறந்துபோன மிஸ்டர் வெங்கடேஷைக் கொலைசெய்யவேண்டும். அதற்குரிய உந்துதல்கள் என்ன? என்பதைக் கூற நான் ஆசைப்படுகிறேன்.

மிஸ்டர் வெங்கடேஷின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுத் தன் நிறுவனத்தை இழுத்து மூடிய பலருள் மிஸ்டர் வாசுதேவனும் ஒருவர். அவரின் பொறுப்பில் ஐந்து பிள்ளைகள் இருப்பதால், அவருடைய அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தன் வியாபாரம் கவிழ்ந்துவிட்டதாலும், தன் குடும்பத்தின் பொருளாதார நிலை தாழ்த்தப்பட்டதாலும்,  ஆத்திரம் அடைந்த மிஸ்டர் வாசுதேவன், காலம்சென்ற வெங்கடேஷைப் பழி வாங்க நினைத்திருக்கிறார். அதற்காக டிஎன் என்கிற பொய்யான நிறுவனத்தின் பெயரைக் கூறி, உள்ளே நுழைந்திருக்கிறார்.

உண்மையில், திரு வாசுதேவன் கூறுகின்ற டிஎன் என்கிற நிறுவனமே கனடாவில் இல்லை. ஏன் உலகளவில் கூட இல்லை. ஆக, அந்த டிஎன் என்கிற நிறுவனம் அவரால் பொய்யாக ஜோடிக்கப்பட்ட ஒரு நிறுவனமே.

இதைக் கேட்டதும், வாசுதேவன் அதிர்ந்துபோனார். இல்லை இல்லை என்று பலம் கொண்ட மட்டும் கத்தவேண்டும்போல் வேகம் எழுந்தது. ஆனால் கத்தி என்ன பயன்? அவரை இந்த நீதிமன்றம் நிரபராதி என்று விடவா போகிறது? வருத்தத்துடன் தன் மகளைப் பார்க்க, அவளோ, கன்னத்தில் கண்ணீர் வழிவது கூடத் தெரியாமல், அநேகாத்மனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அநேகாத்மன், மிஸ்டர் வாசுதேவன் உள்ளே நுழையும் போது அவரிடம் எந்த ஆயுதங்களும் இருக்கவில்லை. அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. எதை வைத்து அவர்தான் சுட்டார் என்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று எதிர்க்கேள்வியை எதிர்த்தரப்பு சட்டத்தரணி கேட்க, அவரைப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்த அநேகாத்மன், நீதிபதியைப் பார்த்து,

“உன்மை அவர் உள்ளே நுழையும் போது, துப்பாக்கி எடுத்துச் செல்லவில்லை… அவர் கொண்டு சென்ற கைப்பெட்டியிலும் துப்பாக்கி இருக்கவில்லை. ஆனால் எப்படிச் சுட்டார்? இதற்குப் பதில் இதுதான்” என்றவன் ஒரு ஒளித்தட்டை நீட்டினான்.

“இதைப் போட்டுப் பார்க்க அனுமதி வேண்டும்.” என்று கேட்டதும், உடனேயே அது திரையில் போடப்பட்டது

‘அதில் வாசுதேவனைப் பரிசோதனைக்கு உட்படுத்திய படம் திரையில் தெரிந்தது. நீதிபதி யோசனையுடன் அநேகாத்மனைப் பார்த்தார்.

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்…?” என்றார் நீதிபதி புரியாமல்.

உடனே அநேகாத்மன் திரும்பவும் மீளோட்டினான். யாராலும் எதுவும் கண்டு பிடிக்கமுடியவில்லை.

“பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அந்த சாதனத்தை உற்றுப் பாருங்கள்… உண்மை தெரியும்…” என்றான் மர்மப் புன்னகையுடன்.

உடனே மீண்டும் மீளோட்டம் செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனை செய்யப்படும் சாதனம், வாசுதேவனின் மீது ஒவ்வொரு இடமாகக் காட்டப்பட்டது. இடைக்கு வந்ததும் அதில் எரிந்துகொண்டிருந்த பச்சை விளக்கு காணாமல் போனது. அதே போலப் பின்புறம் திருப்பியபோது, எரிந்துகொண்டிருந்த பச்சை விளக்கு இடை வரை வந்ததும், காணாமல் போனது.

“பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்த சாதனத்தில் பச்சை விளக்கு எரிகிறது. யாராவது ஏதாவது எனாமல் பதித்திருந்தால், அது சிவப்பாக மாறிச் சத்தம் எழுப்பும். மிஸ்டர் வாசுதேவன் அணிந்திருந்த இடைவாரில் எனாமல் பதியப்பட்டிருக்கிறது. இருந்தும், அந்த சாதனத்தில் விளக்கு சிவப்பாக மாறிக் கத்தவில்லை. மாறாக, அணைந்திருக்கிறது. மீண்டும் பின் புறம் பரிசோதிக்கும் போது, அதேபோல எரிந்த பச்சை விளக்கு, இடைக்கு வந்ததும் அணைந்திருக்கிறது. சோ… இவருடன் எடுத்துச் செல்லப்பட்ட ஆயுதம், கண்டுகொள்ளாமலே விடப்பட்டிருக்கிறது. அதற்கு அந்த பாதுகாவலரையும்   உடந்தை. அவனை விசாரித்தபோது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மிஸ்டர் வாசுதேவன் பல ஆயிரம் டாலர்கள் லஞ்சம் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்… அது ஏற்கெனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு விட்டது.

சரி அப்படியே மிஸ்டர் வாசுதேவன் துப்பாக்கி எடுத்துச் செல்லவில்லை என்றாலும், இன்னொரு பக்கமாகவும் துப்பாக்கி கிடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது…

என்றவன் இன்னொரு காணொளியைப் போட்டுக் காட்டினான். காட்டியபோது, அந்த வெள்ளை ஆடை அணிந்திருந்தவனின் பின்புறம்தான் தெரிந்தது. அவன் வாசுதேவனிடம் கை நீட்டிக் குலுக்கிவிட்டுச் செல்வது காணொளியில் தெரிந்தது.

“லுக் அட் ஹிம். இந்த மனிதன் வேண்டும் என்றே காணொளியிற்கு முகம் காட்டாமல் நிற்கிறான். எந்த காணொளியிலும் இவனுடைய முகம் தென்படவில்லை. அவன் மிஸ்டர் வாசுதேவனிடம் கை குலுக்கும் போது துப்பாக்கி கைமாறியிருக்கலாம்.”

“அடுத்து லேட் வெங்கடேஷின் மார்பைத் துளைத்த குண்டு அது ஏறிய விதமும், அது துளைத்த முறையையும் பார்க்கும்போது, துப்பாக்கியால் சுட்டவன் கட்டாயமாக இடத்துக்கைப்பழக்கம் உள்ளவனாக இருக்கவேண்டும். ஏனென்றால் சுட்டபோது ஏறிய குண்டு வலதுபக்கமாகச் சாய்ந்தவாறு ஏறியிருக்கிறது. சோ… அது இடது கையால் சுட்டால் மட்டும்தான் சாத்தியம். மிஸ்டர் வாசுதேவன் இடதுகைப் பழக்கம் உடையவர் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது…

ஆக… மிஸ்டர் வெங்கடேஷனைக் கொலை செய்தது, மிஸ்டர் வாசுதேவன்தான் என்று நான் உறுதியாகக் கூறுவேன்…” என்று கூறியவன் இருக்கையில் வந்தமர்ந்தான்.

தொடர்ந்து எதிர் விவாதங்கள், குறுக்குக் கேள்விகள்.

முடிவு மிஸ்டர் வெங்கடேஷனைக் கொலை செய்தது மிஸ்டர் வாசுதேவனே என்று தீர்ப்பானது. அவருக்குரிய தண்டனைக்கான தீர்ப்பை அடுத்த அறு மாதத்தில் வழங்கப்படும் அதுவரை அவரைக் காவலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிட்டது.

வாதங்களையும், பிரதிவாதங்களையும், கேட்டுக்கொண்டிருந்தவள், இறுதியாகத் தந்தைக்குத் தீர்ப்பு வழங்கிய பின், எதுவும் பேசத் தோன்றாமல் சிலைபோல இருக்கையில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

இனி என்ன செய்யப் போகிறாள்? மேல் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு பண்ணுவதா? அப்படி மேல்முறையீடு பண்ண அவள் பணத்திற்கு எங்கே போவாள்? இருக்கிற வீட்டையும் வைத்து எடுத்த கடனை அடைத்தாலும் விற்ற பணம் அதற்குப் போதாது. அடுத்து என்ன செய்வது? எதுவுமே புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் சர்வமகி.

அடுத்த வழக்கிற்கு மக்கள் வரத் தொடங்க, சர்வமகி மெதுவாகச் சுயநினைவு பெற்று எழுந்தாள்.

முதலில் எந்தப் பக்கம் போவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

மலங்க மலங்க விழித்தவள் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள். அவளுக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

அருகேயிருந்த இருக்கையில் பொத் என்று அமர்ந்தவள், கரங்களால் முகத்தை மூடிக்கொண்டாள்.

“கரங்களால் முகத்தை மூடினால் உலகமே இருண்டு போய்விடும் என்று நினைக்கிறாயா சர்வமகி?” என்று ஒரு குரல் கேட்க, அந்தக் குரலுக்குரியவனை அடையாளம் கண்டுகொண்டவளாக, நிமிர்ந்து பார்த்தாள்.

அவளுடைய விழிகளில் தெரிந்த வெறுமையை லட்சியம் செய்யாதவனாக அவள் அருகே அமர்ந்துகொண்டான் அநேகாத்மன்.

சற்று நேரம் இருவருமே அமைதியாக இருந்தனர். பின் என்ன நினைத்தானோ, நிமிர்ந்து, எங்கோ வெறித்துப் பார்த்தவாறு,

“உன் தந்தை செய்த தவற்றுக்கு உனக்குத் தண்டனை தர நான் விரும்பவில்லை சர்வமகி…” என்றான் அவன் அமைதியாக. அதைக் கேட்டதும், விழிகள் கலங்க,

“என் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை மிஸ்டர் அநேகாத்மன்.” என்றாள் சர்வமகி அழுத்தமாக.

இதைக் கேட்டதும், இவனுக்குக் கோபம் பொங்கி எழுந்தது. அது சர்வமகி, ஆத்மன் என்னும் அழைப்பை விடுத்து, அநேகாத்மன் என்று அழைத்ததாலா, இல்லை இன்னும் தந்தையைக் கண்மூடித்தனமாக நம்புகிறாளே என்கிற எரிச்சலா தெரியவில்லை.

“ஆர் யு மாட்? டூ யு ஹாவ் எனி சென்ஸ்? இத்தனை ஆதாரங்களைக் காட்டியும் நீ உன் தந்தையை நம்புகிறாயா? அந்த இடத்தில் உன் தந்தையைத் தவிர வேறு யாருமே என் தந்தையைக் கொன்றிருக்க முடியாது… சர்வமகி…” என்றான் அவன் எரிச்சலும், கோபமுமாக.

“இல்லை… நிச்சயமாக அது என் தந்தையாக இருக்க முடியாது… அவருக்கு… அவருக்கு சும்மாவே யாருடனும் கடுமையாகப் பேசத் தெரியாது ஆநேகாத்மன்… அவர் நிச்சயமாகத் துப்பாக்கி…” என்றவளுக்கு திடீர் என்று நினைவு வந்தவளாக, அநேகாத்மனைப் பார்த்தாள்.

“அந்த… அந்தத் துப்பாக்கி எங்கே… அதை… அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லையே.. அந்தத் துப்பாக்கியில் என் தந்தையின் கைரேகை இருந்ததா?” என்று பரபரப்புடன் கேட்டாள் சர்வமகி. அவளை இரக்கமாகப் பார்த்தவன்,

“அதை ஏற்கெனவே என் தந்தையைக் கொலைசெய்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதில் உன் தந்தையின் கைரேகையோ, வேறு யாருடைய கைரேகையோ… இருக்கவில்லை…” என்றான் அவன்.

“என் தந்தையின் கைரேகை இல்லை என்றால், எதை வைத்து என் தந்தைதான் கொன்றார் என்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்றாள் சர்வமகி படபடப்பாக.

“உன் தந்தையின் கைரேகை இருக்கவில்லைதான்… ஆனால்….” என்று சற்றுத் தயங்கி இழுத்தவன், “உன் தந்தை இடது கைப் பழக்கம் கொண்டவர் சர்வமகி… அப்பாவைச் சுட்டவனும் இடதுகைப் பழக்கமுள்ளவனாகத்தான் இருக்கவேண்டும்…” என்றதும் அவளுடைய முகம் சோர்ந்தது. மறுப்பாகத் தலையாட்டியவள்,

“என் தந்தையைப் பற்றி எனக்குத் தெரியும்… அவர் இந்தக் கொலையைச் செய்திருக்கமாட்டார்…” என்றவளை விசித்திரமாகப் பார்த்தான் அவன்.

தந்தை கொலை செய்ததற்கு உண்டான அத்தனை ஆதாரங்கள் இருந்தாலும் அதையெல்லாம் லட்சியம் செய்யாமல், தன் தந்தை கொலைசெய்யவில்லை என்று நிற்கும் இந்தப் பெண்ணை எந்த நிலையில் நிறுத்தி யோசிப்பது?

அவனுக்கு சர்வமகியை எண்ணி வியக்காமல் இருக்கவே முடியவில்லை.

ஏன், அவள் தந்தைக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்தவன் அவன், அப்படியிருந்தும், அவள் முகத்தில் அவனைக் கண்டதும் எந்த வெறுப்பும் தோன்றவில்லையே. மாறாகக் கலக்கம் மட்டும்தானே தெரிந்தது. இதே இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால், அவனை வெறுத்து, சத்தம் போட்டு, பெரும் பிரச்சனையையே கிளப்பியிரப்பார்களே. முதன் முதலாக சர்வமகியை சிறு மதிப்புடன் ஏறிட்டான் அநேகாத்மன்.

“ஏன் சர்வமகி… உனக்கு என் மீது கோபம் வரவில்லையா? உன் தந்தை சிறைக்குப் போகக் காணமானவன் நான் என்கிற எரிச்சல் தோன்றவில்லையா?” என்றான் ஏதோ ஒன்றை அறியும் ஆவலுடன்.

அவனை உற்றுப் பார்த்தவள் மறுப்பாகத் தலையாட்டினாள்.

“எப்படி சர்வமகி… நான்… உனக்குத் தீமை செய்திருக்கிறேனே…” என்றான் படபடப்புடன். தந்தையை எண்ணியதும் கண்ணீர் கண்களில் எட்டிப் பார்க்க,

“உங்கள் தந்தை இறந்ததற்குக் காரணம் என் தந்தை என்பது உங்கள் வாதம் அநேகாத்மன். உங்களைப் பொறுத்தவரைக்கும் அது உண்மையும் கூட. சொல்லப்போனால் என்னுடைய இழப்பை விட உங்களுடைய இழப்பு அதிகமானது… நீங்கள் உங்கள் தந்தையையே இழந்திருக்கிறீர்கள்… ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்ட ஒருவர் இப்போது உயிரோடு இல்லை… அதற்கு யார் காரணமோ எனக்குத் தெரியாது… உங்கள் இடத்திலிருந்து யோசித்தால் உங்கள் வேதனை எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது… நீங்கள் என்பதால் அமைதி காக்கிறீர்கள்… ஒரு வேளை நான் உங்கள் இடத்திலிருந்திருந்தால்…” என்றவள் அவனை உற்றுப் பார்த்தாள்.

“எனக்கு உங்கள் மீது கோபத்திற்குப் பதில், வேதனைதான் தோன்றுகிறது. என் தந்தைக்குத் தண்டனைதான் கிடைத்திருக்கிறது… ஆனால் நீங்கள்… விரும்பினாலும் உங்கள் தந்தையைப் பார்க்க முடியாதே…” என்று வருத்தத்துடன் கூறியவளை ஒரு வித உணர்வோடு உற்றுப் பார்த்தான் அநேகாத்மன்.

அவனுக்கு இதயத்தில் எங்கோ பட் என்று ஏதோ மலர்ந்ததுபோன்று இருந்தது. ஒரு போதும் தோன்றாத உணர்வு. இவள் மட்டும் மனைவியானால்… வாழ்க்கையில் துன்பம் என்பது ஒரு போதும் அண்டாதே… இவளைப் போன்றவள்தானே அவனுடைய சாம்ராஜ்யத்திற்கு ராணியாக வர முடியும்?’ என்று எண்ணியவன் ஒரு திடுக்கிடலுடன் சுய நினைவுக்கு வந்தான்.

அவனா அப்படி எண்ணினான்? அவனுடைய தந்தை இறப்பதற்குக் காரணமான ஒருவனின் மகளை அவனுடைய மனைவி என்கிற ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பதா? நோ… நெவர்… அவனுடைய மனைவியாகும் தகுதி இந்த சர்வமகிக்குக் கிடையாது… நோ… நோ…’ என்று முணுமுணுத்தவன், எரிச்சலுடன் எழுந்தான்.

அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது. கொஞ்சம் இளகிப் பேசினால் இப்படியா யோசிப்பது… சே… சே… இங்கே இருந்து அவளுடன் பேசியது அவனுடைய தவறு… ’ என்று எண்ணியவன் தன் தொண்டையைச் செருமித் தன்னைச் சமாதானப் படுத்தியவனாக,

“ஐ… ஐ நீட் டு கோ…” என்று முணுமுணுத்தவாறு, ஒரு தலையசைப்புடன் விலகத் தொடங்கினான்.

நிலவு – 15

அநேகாத்மன் அவளிடமிருந்து விடைபெறவும், சர்வமகியின் கைத்தொலைப்பேசி சிணுங்கவும் நேரம் சரியாக இருக்க, சர்வமகி சோர்வுடன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.

வீட்டிலிருந்துதான் அழைத்திருந்தார்கள். அவளுக்கு உள்ளம் கசங்கியது.

அவர்களிடம் எப்படி அப்பாவைப் பற்றிக் கூறுவது? கீழ் உதடு நடுங்காத வகையில் பல்லால் கடித்துத் தன் உணர்வை வெளிக்காட்டாதிருக்க முயன்று தோற்றாள்.

சிரமப்பட்டுத் தன் வேதனை வெளியில் தெரியாதிருக்கத் தன்னை சமப்படுத்தியவள், கைப்பேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தாள்.

“சொ… சொல்லு தேவகி…” என்றாள் சர்வமகி.

“அ… அக்கா… நீ எங்கே இருக்கிறாய்?” என்றாள் தேவகி பதட்டத்துடன்.

“இ… இங்கே  நீதிமன்றத்தின் அருகாமையில் … ஏன் தேவகி… ஏ… ஏதாவது பிரச்சனையா?” என்றாள் சர்வமகி பதட்டமாக.

போய்க்கொண்டிருந்தவனின் காதில் பிரச்சனை என்கிற சொல் விழ, ஏதோ பிரேக் போட்டதுபோல சட் என்று நின்றான் அநேகாத்மன்.

ஏனோ சர்வமகியை அப்படியே விட்டுவிட்டுப் போக மனம் வரவில்லை. திரும்பி நின்று என்ன நடக்கிறது என்று பார்த்தான்.

மறு புறம் என்ன சொன்னதோ, சர்வமகியின் முகம் இரத்தப் பசையின்றி வெளிறியது. இருக்கையிலிருந்து எழுந்தவள் சிரமப்பட்டுத் தன்னை நிதானப்படுத்த முயன்று முடியாமல் தள்ளாடினாள்.

அவள் தள்ளாட்டத்தைக் கண்ட அநேகாத்மன், இரண்டு எட்டில் அவளை நெருங்கி, கீழே விழ இருந்தவளைப் பற்றி இழுத்துத் தன் இறுகிய அணைப்பில் நிறுத்தி விழாமல் தாங்கிக்கொண்டான். அவள் நடுங்கிய கரங்களிலிருந்து, இதோ விழப்போகிறேன் என்றிருந்த கைத்தொலைப்பேசியை வாங்கித் தன் காதில் வைத்தான்.

“யெஸ் தேவகி… வட் இஸ் இட்?” என்கிற அழுத்தமான ஆழமான குரல் தேவகியின் காதில் விழ, ஒன்றும் புரியாமல் விழித்தாள் தேவகி.

“யா… யார் சார் நீங்கள்… அக்கா… அக்கா எங்கே…” என்றாள் தேவகி பதட்டமாக.

“உன்னுடைய அக்கா இப்போது பேசும் நிலையில் இல்லை… எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறு…” என்றான் அவன் அதிகாரமாக.

அந்தக் குரலுக்கு எதிர்த்து விவாதிக்க முடியாமல்,

“அ… அப்பாவை… அழைத்துக் கொண்டு போனபோது, திடீர் என்று மார்பைப் பிடித்தவாறு சரிந்துவிட்டாராம்… அவரை ஸ்காபரோ ஜென்ரல் ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்களாம்…” என்றாள் நடுங்கும் குரலில்.

அவளைச் சமாதானப் படுத்தி, “டோன்ட் வொரி… டேக் கெயர் ஒஃப் யுவர் ஸிப்ளிங்ஸ்… என்ன பிரச்சனை என்பதை நானும், உன் அக்காவும் பார்த்துக்கொள்கிறோம்…” என்று கட்டளையாகக் கூறியவன், அவளுடைய அலைபேசியை தன் பான்ட் பாக்கட்டில் போட்டவாறு, கைவளைவில் நடுங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்தான்.

“ஷ்… எல்லாம் சரியாகிவிடும்… உன்னைத் திடப்படுத்திக்கொள்…” என்று அவளுக்குப் புரியும் விதமாக அழுத்திச் சொன்னவன் அவளை அழைத்துத் தன் காரடிக்கு வந்தான்.

மெதுவாகச் சுயநினைவு பெற்ற சர்வமகி அவனிடமிருந்து வேகமாகத் தன்னை விடுவித்தாள்.

“நா… நான் போகவேண்டும்…” என்றாள் நடுங்கும் குரலை வெளிக்காட்டாதிருக்க முயன்றவாறு.

“நான் அழைத்துப் போகிறேன் சர்வமகி… காரில் ஏறு…”

“இ… இல்லை வேண்டாம்… என்னுடைய கார்… இங்கேதான் இருக்கிறது… நான் போய்க்கொள்வேன்…” என்றவள் திரும்பினாள்.

வேகமாக அவளை இழுத்துத் தன் முன்னால் நிறுத்தியவன்,

“எது? இன்றோ நாளையோ என்று தன் இயக்கத்தை நிறுத்தக் காத்திருக்கும் அந்த டொயாட்டா கம்ரியா? அதை விட நீ நடந்தே போகலாம்… தவிர இந்த நிலையில் உன்னால் தனியாக ட்ரைவ் பண்ண முடியாது… அதற்கு நான் விடவும் மாட்டேன்…. நீ என்னுடன் வா…” என்றான் முடிவாக.

“நோ… வேண்டாம்… நான்… என்னால் முடியும்… என்னை விடுங்கள்…” என்றவள் அவனுடைய இரும்புப் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க முயன்று தோற்றாள்.

“சொன்னால் கேட்கமாட்டாய்? நீ இருக்கும் மனநிலையில் உன்னால் ட்ரைவ் பண்ண முடியாது. அதற்கு நான் சம்மதிக்கவும் மாட்டேன். இருக்கிற வேதனை போதாது என்று நீயும் அடிபட்டு உன் சகோதரர்களுக்குத் தீராத துன்பத்தைக் கொடுக்கப் போகிறாயா?” என்றவன், அவள் அனுமதியையும் பெறாது தன் கார் இருக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்றான்.

அவள் யோசனையாகத் தன் கார் இருந்த திசையைப் பார்க்க,

“பயப்படாதே… லாக் பண்ணாமல் வைத்திருந்தால் கூட, உன்னுடைய காரை யாரும் தொட மாட்டார்கள்…” என்று அவன் கூறியவாறு, காரின் முன் கதவைத் திறக்க, அப்போதும் அவள் கலக்கத்துடனேயே அநேகாத்மனைப் பார்த்தாள்.

“நேரம் போகிறது சர்வமகி… கெட் இன் மை கார்” என்றதும், அவனைக் குழப்பத்துடனேயே பார்த்தாள். பொதுவாகவே விட்டுக் கொடுத்துப் போபவள்தான். தேவையற்ற விவாதத்தைத் தவிர்ப்பவள்தான். ஆனால் ஏனோ அநேகாத்மனுடன் செல்ல மனம் ஒப்பாததால்,

“நா… நான்…” என்று அவள் கலக்கத்துடன் எதையோ சொல்லத் தொடங்க, அதற்கு மேல் அவளைப் பேச விடாது தன் ஒற்றை விரலை அவள் உதட்டில் பதித்தான் அநேகாத்மன்,

“ஷ்… இட்ஸ் இனஃப்… எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம்… இப்போது உன் தந்தையைப் பார்க்கப் போவதுதான் முக்கியம்… காரில் ஏறு…” என்றான் கனிவுடன்.

அதற்கு மேல் சர்வமகி யோசிக்கவில்லை. அதுவும் அவனின் கனிந்த குரலைத் தட்ட அவளால் முடியவில்லை. அதற்கு மேல் தர்க்கம் புரியாமல் கலக்கம் மாறாமலே, அவனுடைய காரில் ஏறி அமர்ந்தாள். உடனேயே கார் ஜென்ரல் ஹாஸ்பிடலுக்குப் தாமதிக்காமல் பறந்தது.

இருபது நிமிடங்களில் இருவரும் மருத்துவமனையை வந்தடைந்தனர்.

அச்சத்துடன் இறுகிப்போயிருந்தவளைச் சிரமப்பட வைக்காமல் அவனே சென்று விவரமறிந்து அவளை அழைத்துச் சென்றான்.

அதற்கிடையில் அவனுக்குக் கைப்பேசியில் ஏதோ ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் வர, அதற்குப் பதில் போட்டவாறே அநேகாத்மனும் நடந்துகொண்டிருந்தான்.

தந்தையின் நினைவிலேயே உழன்றுகொண்டு வந்தவள், அங்கிருந்த கதிரையைக் கவனிக்கவில்லை. அந்தக் கதிரையில் காலிடறி முன்பக்கமாக விழப்போக,

“மகி… பாத்து…” என்றவாறு அவசரமாகத் தன் இடக்கரம் நீட்டி, அவள் விழாதவாறு காத்த அநேகாத்மன், தன் உள்ளங்கை உணர்ந்த மென்மையில் திகைத்து, தன் கரம் பதிந்த இடத்தைப் பார்த்தான்.

சற்று மேலேறிய மேலாடைக்கும், கணுக்கால் வரை நீண்டிருந் பாவாடைக்கும் இடைப்பட்ட, வெற்று வயிற்றில் அவனுடைய உள்ளங்கை முழுவதுமாகப் பதிந்திருந்தது.

அநேகாதமன் தன் கரம் பதிந்திருந்த இடத்திலிருந்து தன் கரத்தை விலக்கும் எண்ணமேயில்லாமல், விறைத்துப்போய், அந்த மென்மையின் இனிமையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத்தொடங்கினான்.

உடனேயே அந்த மேலாடையை முழுதாக விலத்தி, மலரை ஒத்த அந்த வயிற்றையும்,  உடுக்கையை ஒத்த அந்த இடையையும், ஒரு ஆரோக்கியமான ஆணுக்குரிய வேட்கையுடன் வருடிக்கொடுக்கவும், விழிகளால் இரசிக்கவும் மனம் பரபரத்தது.

என்னதான் முயன்றும், அவனால் அந்த உணர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது தவறு, இதற்குரிய சூழ்நிலை இதுவல்ல என்று ஒருபுறம் அவனுடைய மனம் அவனை இடித்துரைத்தாலும், அவனால் அமைதியாக இருக்கமுடியவில்லை.

இதுவரை எந்த உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தாது, தன் இஷ்டத்திற்கு வாழ்ந்துவந்தவனுக்கு, முதன் முறையாக, உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாகவே இருந்தது. அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி, அவனுடைய பெருவிரல், அவளுடைய வயிற்றுப்பகுதியை மெதுவாக வருடிக்கொடுக்க, சொல்லமுடியாத அந்த புதுவித உணர்வில், மயங்கி மூழ்கத்தொடங்கிய அந்தக் கணத்தில்,

தான் விழப்போகிறோம் என்கிற எச்சரிக்கை உணர்வில், தனக்கு அருகேயிருந்த பிடிகோலாக அநேகாத்மனின் சட்டைக் காலரை இறுகப் பற்றிய சர்வமகி அநேகாத்மனின் நிலையைச் சிறிதும் புரிந்துகொள்ளாதவளாகத் தன்னை நிலைப்படுத்தி, எழ முயல, தன் நினைவு பெற்ற அநேகாத்மன், தன்மீதே எரிச்சல் கொண்டவனாகத் தன் கரத்தை வேகமாக விலக்கிக் கொண்டான்.

“யு ஓக்கே…?” என்றான் அவனும் முழுதாகத் தன்னை மீட்டவனாக.

“ஆம்” என்று அவள் தலையசைத்தாலும், அந்த விழிகளில் தெரிந்த மெல்லிய வலியை, உடனே அவன் கண்டுகொண்டான்.

அவள் தோள்களைப் பற்றி, அருகேயிருந்த இருக்கையில் அமர்த்தியவன், அவள் முன்பு முழந்தாளிட்டு அமர்ந்து, அவளுடைய நீண்ட பாவாடையைச் சற்று விலக்கி, பாதத்தைப் பரிசோதித்தான்.

அவன் சந்தேகப்பட்டது சரியே. வேகமாகக் கதிரையில் இடித்ததில், அவளுடைய பெருவிரல் நகத்தின் முன்புறம் சற்றுக் கிழிந்து அதிலிருந்து இரத்தம் வரத்தொடங்கியிருந்தது.

“டாமிட்… பார்த்து வரக்கூடாது… இங்கே பார் என்ன செய்துவைத்திருக்கிறாய் என்று…” கோபத்துடன் கேட்டவன், வலிக்காமல், அவள் அணிந்திருந்த சான்டல்சைக் கழற்றி ஒரு ஓரமாக வைத்தான்.

சர்வமகிக்கோ, தன் தந்தையைப் பார்க்கவேண்டும் என்கிற கவலை.

“இல்லை… எனக்கொன்றுமில்லை ஆத்மன்… நான் அப்பாவைப் பார்க்கவேண்டும்… ப்ளீஸ்…” என்றாள் தன் பாதத்தை அவன் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றவளாக.

“ஸ்டாப் இட் மகி…” என்று சற்றுக் கடுமையாகக் கூறியவன், அவள் பாதத்தைத் தூக்கித் தன் வலது தொடையின் மீது வைத்தான். அவனுடைய விரல்களோ, அவள் வலியைப் போக்கும்விதமாக,  அவளுடைய சிறிய பாதத்தை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தன.

சர்வமகிக்கோ, தன் தந்தையின் கவலை ஒருபக்கமிருக்க, அவனுடைய செயலால் பெரும் சங்கடத்திற்கு உட்பட்டாள்.

“ஆத்மன்… ப்ளீஸ்… ஐ ஆம் ரியலி ஓக்கே… இது சின்ன காயம்தான்…” என்றாள் அவள் அவன் பிடியிலிருந்து தன் பாதத்தை விலக்க முயன்றவளாக.

“எது சின்னக்காயம்… இங்கே பார்… இரத்தம் வருகிறது…” என்று மெல்லிய பதட்டத்துடன் கூறியவன், சற்றுத் தள்ளி நின்றிருந்த அவனுடைய பாதுகாவலனைப் பார்த்து, விரல் அசைத்து, விழிகளாலேயே கட்டளை பிறப்பிக்க, அடுத்த ஒரு நிமிடத்தில், தாதி ஒருவர் அவர்கள் முன்னால் பிரசன்னமானார்.

“டோன்ட் வொரி… சின்னக் காயம்தான்… சரியாகிவிடும்…” என்று கூறிவிட்டுக் காலுக்குக் கட்டைப் போட்டுவிட்டு அவர் விலக, அநேகாத்மன், மீண்டும் அவளுக்கு சான்டில்சை அணிவிக்கப் போக,

“இல்லை… நான் போடுகிறேன்…. என்னால் முடியும்…” என்ற அவள் குரலை அவன் சிறிதும் செவிமடுத்தான் இல்லை.

அவன் பாட்டுக்கு, அவளுடைய காலணியைக் காயத்தில் படாதவாறு, மென்மையாக அணிவித்தபோதுதான் அவனுக்குத் தான் செய்துகொண்டிருக்கும் மடத்தனம் புரிந்தது.

“வட் டிட் ஐ டூ…? வட் த ஹெல் ஐ ஆம் ட்ரைங் டு டூ..?” என்று தன்னைத் தானே எரிச்சலுடன் திட்டியவன், வேகமாக எழுந்து நின்றான். தன் இயலாமையின் மீதே ஆத்திரம் கொண்டவனாக, தன் தலைமுடியைத் தன் கரத்தால், அழுந்தக் கோதிவிட்டவன், விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல, தன் தடுமாற்றத்தை அவள் காணாமல் மறைத்தான்,

“நேரமாகிவிட்டது… வா…” என்றவாறு, முன்னால் வேகமாக நடக்க, சர்வமகியோ, அவனுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், சற்று நொண்டியவாறே, அவனைப் பின்தொடர்ந்தாள்.

சர்வமகி அவனுடைய வேறுபாட்டைச் சிறிதும் உணர்ந்தாள் இல்லை. அவளுடைய சிந்தனை முழுவதும் தந்தையே நிறைத்திருந்தார்.

‘அப்பா உங்களுக்கு ஒன்றுமாகாது… நிச்சயமாக நீங்கள் நலம்பெற்று வந்துவிடுவீர்கள்…’ என்று மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது.

என்னதான் மனதைத் திடப்படுத்தி வைத்திருந்தாலும், ஐசியு வில் உடல் முழுவதும் குழாய் மாட்டப்பட்டிருக்க, சுயநினைவற்றிருந்த தந்தையைக் கண்டதும், அவள் உடலிலிருந்து முழு சக்தியும் வடிந்ததுபோல உணர்ந்தாள் சர்வமகி.

பாதுகாப்புக் கருதி, ஒருவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்றதால் கண்ணாடி வழியாகத்தான் பார்க்க முடிந்தது.

தந்தையின் நிலையைப் பார்த்ததும், சர்வமகி பெரிதும் பயந்துபோனாள். அவரும் தாயைப்போல அவர்களை விட்டுவிட்டுப் போய்விடுவாரோ… என்ற அச்சம் பெரிய பந்தாகத் தொண்டையை அடைக்க, சர்வமகிக்கு மூச்சு விடுவதே சிரமமாகப் போய்விட்டது.

அருகேயிருந்த இருக்கையில் தொப் என்று அமர்ந்தவளுக்கு, பின்னுக்கு வரும் எதிர்காலம் பூதாகரமாகத் தாக்கியது. விறைத்துப்போய் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவள் நிலையைக் கண்டதும், சற்றைக்கு முன் இருந்த ஒவ்வாமை மாயமாக மறைந்து போக, அவளுக்கு அருகே அமர்ந்தான். கலங்கியிருந்தவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.

இது அவனுக்கு புதுசு. இளவயதிலேயே தாயைப் பறிகொடுத்ததாலோ என்னவோ, எந்தப் பெண்ணின் உணர்வுகளையும் அவன் இதுவரை புரிந்துகொண்டதில்லை. யாருடனும் அவன் இதுவரை ஒட்டி உறவாடிப் பேசியதுமில்லை. தன் தேவை பூர்த்தியானதும், தூசியைத் தட்டுவதுபோலத் தன் கைகளைத் தட்டிவிட்டுக் கழற்றிவிடும் ரகம் அவன்.

எந்தப் பெண்ணின் சோகமும் அவனுடைய இறுகிய உள்ளத்தைத் தளர்த்த முயன்றதில்லை. எத்தனையோ பெண்கள் காரியம் சாதிப்பதற்காகவே, அவன் முன்னால் கண்ணீர் சிந்தியிருக்கின்றனர். அப்போதெல்லாம், அவர்களை ஒரு அருவெறுப்போடு பார்த்து ஒதுக்கி வைத்திருக்கிறானே தவிர, அவர்களின் அருகே கூட அவன் நெருங்கிச் சென்றதில்லை.

இன்னும் சொல்லப்போனால், அவனுடன் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெண்கள் பெரும் இக்கட்டில் சிக்கியிருந்த போதெல்லாம், அலட்சியமாக விலகிச் சென்றவனுக்கு, ஏனோ சர்வமகியின் கலங்கிய முகத்தைப் பார்த்ததும், அவர்களிடம் காட்டிய ஒதுக்கத்தை அவள் மீது காட்ட முடியவில்லை. அவள் கலங்கினால், இவன் இரத்த அழுத்தம் அவன் கட்டுப்பாட்டையும் மீறி எகிறியது. இவள் தவித்தாள், இவன் சர்வமும் அடங்கிப்போகிறது… இவள் பதறினாள், இவன் ஆவியும் சேர்ந்து பதறுகிறது. இவள் துடித்தாள், இவன் உயிரே துடித்தது. அது ஏன்? அவனுக்குப் புரியவில்லை.

தந்தையின் நிலையை எண்ணித் தவித்துத் துடிப்பவளின் முகத்தைத் தன் மார்பில் பதித்து, ‘நான் இருக்கிறேன்…’ என்று சொல்லவேண்டும்போல, உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்த ஒரு உணர்வு திகு திகுவென்று தோன்றி உடல் முழுதும் பரவியது.

இனியும் முடியாது என்பதுபோல,  “மகி…” என்கின்ற மென்மையான அழைப்புடன் அவளை நெருங்கிய வேளை, திடீரென்று இரண்டு மூன்று வைத்தியர்கள் ஐசியுவிற்குள் நுழைந்தார்கள்.

அது வரை, தன் நிலையில் கலங்கியிருந்த சர்வமகி திடுக்கிட்டுத் தன் சுயத்திற்கு வந்தாள்.

எதற்காகத் தன் தந்தையின் அறைக்குள் இத்தனை வைத்தியர்கள் அவசரமாக நுழைகின்றனர் என்பது புரியாமல், இருக்கையை விட்டு எழுந்தாள்.

அவளுடன் கூட, அநேகாத்மனும் எழுந்தான்.

அச்சத்துடன் அநேகாத்மனைப் பார்த்தவள்,

“எத… எதற்காக அவர்கள்… உள்ளே போகிறார்கள்… என் அப்பாக்கு ஒன்றுமாகியிருக்காது அல்வா…” என்று தவிப்புடன் கேட்க, அதற்கு மேலும் பொறுக்க முடியாதவனாக அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.

“நோ… உன் அப்பாக்கு ஒன்றுமாகாது… ப்ளீஸ்… கன்ரோல் யுவர் செல்ஃப்…” என்று அவளுக்க ஆறுதல் படுத்தினாலும், அவனும் உள்ளுக்குள் சற்றுக் கலங்கித்தான் போனான்.

போன வைத்தியர்களின் வேகமும், அவர்களின் பதட்டமும், வரவிருக்கும் துன்பத்தை அவனுக்கு முன்கூட்டியே எடுத்துக்காட்டியதோ,

“டாமிட்…” என்று முணுமுணுத்தவன், குனிந்து சர்வமகியைப் பார்த்தான்.

அவளோ, அவனுடைய சட்டைக்காலரை இறுகப் பற்றியவாறு, விழிகளை மூடிக் கடவுளிடம் எதையோ வேண்டிக்கொண்டிருந்தாள்.

அவள் தந்தைக்கு ஏதாவது ஒன்று நடந்தால், நிச்சயமாக அவளால் தாங்க முடியாது என்பதை உணர்ந்தவனாக, அவளைச் சமாதானப் படுத்த முயன்றான்.

அவனுடைய விழிகள் மட்டும், கண்ணாடித்தடுப்பின் பின்னே நடப்பனவற்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

கவனமாக சர்வமகி, மறு பக்கம் திரும்பாதவாறு, தன் பெரிய கரத்தை அவள் தலையில் வைத்துத் தன் மார்போடு, இறுக அழுத்திக்கொண்டிருந்தான்.

மறுபக்கம் அந்த வைத்தியர்கள். வாசுதேவனுக்கு என்னென்னவோ செய்தார்கள். செயற்கை சுவாசம் கொடுத்தார்கள், மானிடரைக் கவனமாக ஆராய்ந்தனர். வாசுதேவனிடம் என்னவோ கேட்டனர், இப்படியே கொஞ்சநேரம் உள்ள பெரும் அமர்க்களம் நடந்துகொண்டிருக்க, இதை எதையும் சர்வமகி கவனிக்காதவாறு அநேகாத்மன் கவனமாகப் பார்த்துக்கொண்டான். அவளுடைய தலையில் அழுத்தியிருந்த அவன் வலக்கரம் மட்டும் சிறிதும் விலகவில்லை.

இது எதையும் சர்வமகி கருத்தில் கொள்ளவில்லை. அவளுடைய முழு வேண்டுதலும்,  அவளுடைய தந்தை முழுதாக அவள் முன்னால் எழுந்து வரவேண்டும் என்பதே. ஏனோ அவன் அணைப்பு, அவளுக்குரிய ஆறுதலைக் கூறாமல் கூற, அந்த அணைப்பிலிருந்து விலக விரும்பாதவளாகவே. அவனுடன் ஒன்றிப்போய் நின்றிருந்தாள்.

எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தார்களோ தெரியவில்லை, சற்று நேரத்திற்குள் அந்த அறைக் கதவு திறந்தது. தன் வேர்வையைத் துடைத்துக்கொண்டே வெளியே வந்த வைத்தியர், எதையோ கூற முயல, அநேகாத்மன் அவரைப் பார்த்த பார்வையில், கப் என்று தன் வாயை மூடிக்கொண்டார் வைத்தியர்.

“இவள்… உள்ளே போய் அவளுடைய தந்தையைப் பார்க்கலாமா?” என்றான்

அவரும் “ஆம்” என்று வேதனையுடன் கூற, மெதுவாக சர்வமகியை அழைத்து உள்ளே சென்றான்” அவள் தந்தைக்கருகே இருந்த இருக்கையில் அவளை அமர்த்தியவன்,

“மகி… கொஞ்சநேரம் உன் அப்பாவோடு உட்கார்ந்திரு… இதோ இப்போது வந்துவிடுகிறேன்…” என்றவன், தன் தந்தையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மகியைத் தனியே விட்டுப் போகவும் விரும்பாதவனாக, அவள் கரத்தைப் பற்றி அழுத்த, அவள் மெதுவாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“நீ… தனியாக இருப்பாய் அல்லவா?” என்றான் சிறு தடுமாற்றத்துடன்.

அவள் ஆம் என்று தலையசைக்க, தன்னையும் மறந்து அவள் தலையை வருடிக் கொடுத்தவன், அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

அந்த வைத்தியர் வெளியே அவனுக்காக் காத்திருக்க,

“யெஸ் டாக்டர்… அவர்… அவர் பிழைப்பாரா?” என்றான் இறுகிய குரலில்

அதற்குப் பதிலாக அவர் மெதுவாக உதட்டைப் பிதுக்கிவிட்டு,

“சாரி மிஸ்டர் அநேகாத்மன்… எங்களால் முடிந்த வரை முயன்றுவிட்டோம். பட்… அவருடைய பள்ஸ் குறைந்துகொண்டு போய்விட்டது. இதயத் துடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக…” என்று அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே,

“இன்னும் எவ்வளவு நேரம்…” என்றான் நேரடியாக.

“சூன்…” என்று அவர் பதில் கூற,

அதற்கு மேலும் பேசி நேரத்தை விரயமாக்காமல், வாசுதேவனின் அறைக்குள் நுழைந்தான்.

சர்வமகி தன் தந்தையின் கரத்தைப் பற்றியவாறே, அவர் முகத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“மகி…” என்றான் மென்மையாக.

தந்தையையே விழிகள் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு முதலில் அநேகாத்மன் அழைப்பது கேட்கவில்லை. மீண்டும் அவன் சுருதி கூட்டி அழைக்கத் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் சர்வமகி.

அநேகாத்மனின் விழிகளுடன் தன் விழிகளைக் கலந்தவள் அந்த வழிகளில் எதைக் கண்டாளோ, அவள் தலை மறுப்பாக அங்கும் இங்கும் அசைய, உதடுகளோ, “நோ…” என்று முணுமுணுத்தன.  அவனோ தன் விழிகளை ஒரு கணம் மூடித் திறக்க, இவள் உடல் சோர்ந்து தள்ளாடியது.

அவள் தள்ளாட்டத்தைப் புரிந்துகொண்டவனாக, அவள் தோள்களில் கரம் வைத்து அழுத்திக் கொடுக்க, கொஞ்சநேரம் அவர்களுக்கிடையில் பேச்சே இருக்கவில்லை.

உடல் முழுவதும் குழாய் செருகியிருக்கப் படுத்திருந்த தந்தையைத் திரும்பிப் பார்த்தாள். அவர் நிலையைக் காணும்போது, தாங்கமுடியாத் துயரத்தில் உணர்வும் உயிரும் தவிக்க,

தந்தையின் கரத்தைத் தன் கரத்தில் ஏந்தியவள், மெதுவாக அந்தக் கரத்தை வருடிக் கொடுத்து,  தன் இதழில் பொருத்தியவள்,

“அப்பா…” என்றாள்.

அந்தக் குரலில் அநேகாத்மன் கூடத் துடித்துப்போனான். அந்த ஒரு அழைப்பில், உயிர் முழுவதையும் தேக்கி வைத்திருக்கமுடியுமா? அவளால் முடிந்திருந்தது.

அதற்கு மேல், அவள் வேதனையைப் பார்க்கப் பிடிக்காதவனாகத் தன் கரத்தை, அவள் தோள்களில் இருந்து விலக்கியவன், சற்றுத் தள்ளி நின்று, மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு, ஜன்னலுக்கு அப்பால் வெறுமையாகத் தெரிந்த உலகத்தை வெறித்துப் பார்க்கத்தொடங்கினான் அவன்.

சர்வமகியின் வலியைப் பார்ப்பதை விட, அது எவ்வளவோ பரவாயில்லை என்பதைப்போலிருந்தது அவன் தோற்றம். அழுந்த மூடிய அவன் உதடுகளும், இறுகிப்போயிருந்த அவன் உடலும், மூடியிருந்த இறுகிய முஷ்டிகளும் அந்த சூழ்நிலையை அவன் அறவே வெறுக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

அதே நேரம், மகளின் தொடுகையை உணர்ந்த வாசுதேவன் மெதுவாக விழிகளை மலர்த்தினார்.

“அ… அப்பா…” என்றாள் குரல் கம்ம.

வாசுதேவன் சிரிக்க முயன்று தோற்றவராக மகளை வேதனையுடன் பார்த்தார்.

“சர்வமகி… நான்… நான் இந்தக் கொலையை…” அவர் முடிக்கவில்லை, அவருடைய வாயில் தன் கரத்தை வைத்து தலையை மறுப்பாக ஆட்டினாள்.

“எனக்குத் தெரியும்பா… நீங்கள் நிச்சயமாக இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும்… அந்தக் கடவுளே நீங்கள்தான் கொலை செய்தவர் என்று சொன்னாலும், நான் நம்பமாட்டேன். எனக்கு என் தந்தையைப் பற்றித் தெரியும்… நீங்கள் வருந்தாதீர்கள்… மேல் நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு பண்ணி உங்களை வெளியே கொண்டுவருவேன்… அது வரைக்கும் நான் ஓயமாட்டேன்…” என்று வேகமாகச் சொன்னவளை வருத்தத்துடன் பார்த்தார் தந்தை.

“எப்படிம்மா… எல்லாவற்றிற்கும் பணம் வேண்டுமே கண்ணம்மா…” என்றார் தந்தை இயலாமையுடன்.

“விக்கலாம்பா… எல்லாவற்றையும் விக்கலாம்…” என்றவளை விரக்தியுடன் பார்த்தார் வாசுதேவன். தன்னுடைய நிலை புரியாமல் பேசும் மகளை வருத்தத்துடன் நோக்கினார் அவர்.

“கண்ணம்மா…” என்றார் ஏக்கத்துடன். தந்தையைப் பார்த்தவளுக்கு உடல் நடுங்கியது. தந்தையின் இறுதி நிமிடம் நெருங்கிவிட்டதை உணர்ந்தவளாக,

“ப்ளீஸ்பா… எங்களுக்கு நீங்களாவது வேண்டும்பா… எங்களை விட்டுப் போய்விடாதீர்கள்… ப்ளீஸ்…” என்று துடித்தவளை இரக்கமாகப் பார்த்தார் தந்தை.

“உன்… உன் சகோதரர்களை… நீ…”

“அவர்களைப் பற்றி யோசிக்காதீர்கள்… நான்… நான் அவர்களுக்கு அக்கா மட்டுமல்ல… அவர்களுக்கு நல்ல தாயாய்… தந்தையாய் இருப்பேனப்பா…” என்றாள் வேகமாக.

“உன்னுடைய வாழ்க்கை… அதை… அவர்களுக்காக இழக்கப் போகிறாயா கண்ணம்மா.”

“என்னுடைய வாழ்க்கை எல்லாமே என் சகோதரர்கள் தான்பா… அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் எனக்கு முக்கியம். அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள்… அவர்களை நான் பார்த்துக்கொள்வேன். அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருவது என் பொறுப்பு…” என்றவளை மறுப்பாகப் பார்த்தார் வாசுதேவன்.

“இல்லையம்மா… உன்னைப் பலிகடாவாக வைத்துத்தான் உன் சகோதரர்களைப் பார்க்க வேண்டும் என்றால்… அதற்கு நான் சம்மதிக்கமாட்டேன். நீ… நீ… ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்… அப்போதுதான் என்னால்…” என்று அவர் திணற,

அதற்கு மேல், அந்தக் காட்சியைப் பார்க்கப் பிடிக்காதவனாக, அது வரை அவர்கள் பேசுவதையே கைக்கட்டிக் கேட்டுக்கொண்டிருந்த அநேகாத்மன் விரைந்து சர்வமகியை நெருங்கினான். அவள் தோள்களில் தன் கரத்தைப் பதித்து, அவள் புறமாக நன்கு குனிந்தான்.

அவனுடைய முகம் அவளுக்கு மிகவும் அருகாமையில் நெருங்க, அந்த நிலையிலும், சர்வமகி சற்றுத் தடுமாறினாள்.

தடுமாற்றத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க, அவளுடைய நாசி அவனுடைய கன்னத்தை மெதுவாக உரசிச் செல்ல, அவளுக்கு எப்படியோ, முதன் முறையாக உள்ளத்தாலும், உடலாலும் சிலிர்த்துப்போனான் அநேகாத்மன்.

ஒரு மெல்லிய தீண்டல்தான்… அதுவும் அவளுடைய நாசியின் சீண்டல், அது இத்தனை பெரிய சிலிர்ப்பைக் கொடுக்குமா? கொடுத்ததே, நம்பமுடியாத திகைப்புடன், அவளை உற்றுப் பார்த்தான்.

அந்த வேதனையிலும், விரிந்து மலர்ந்த அவள் விழிகளிலே ஈர்க்கப்பட்டான். உள்ளமும் உடலும் அதிர, மேலும் நெருங்கினால், சூழ்நிலை மீறித் தவறாக ஏதாவது செய்துவிடுவோமோ என்று அஞ்சியவனாகத் தன் தலையை விலக்கியவன், அதே நிலையில் நின்றவாறே வாசுதேவனைத் திரும்பிப் பார்த்தான்,

“ஐ ஆம் அநேகாத்மன்… இங்கே லாயரா இருக்கிறேன்… நான்… மிஸ்டர் வெ… மிஸ்டர் வெற்றியின் மகன்” என்றதும், சர்வமகி திகைப்புடன் அவனை அண்ணாந்து பார்த்தவருக்கு தனக்கு எதிராக அவன் வாதாடியது நினைவுக்கு வர, அவர் முகம் சோர்ந்தது. அதைக் கண்டு, அதற்கான காரணத்தையும் புரிந்துகொண்ட அநேகாத்மன்,

“அது என் தொழில்… அதிலிருந்து நான் பின்வாங்க முடியாதல்லவா… அதுவும் இவள் உங்கள் மகள் என்பது நீதி மன்றத்தில் பார்க்கும் வரை எனக்குத் தெரியாது…” என்று சட்டத்தரணிக்கே உரித்தான பொய்யுடன், மிக லாவகமாக அவன் கூற, அவனுக்கென்னவோ… இவள் உடல் விறைத்து.

எந்தத் தடங்களுமின்றி எப்படிப் பொய் சொல்கிறான்… என்று எண்ணியவள் எதையோ சொல்லத் தன் வாயை எடுக்கத் தன் கரத்தால், அவள் தோள்களை அழுத்திக் கொடுத்து எச்சரிக்கை செய்தவன், அவள் தோள்களிலிருந்த கரத்தை விலக்காமலே நிமிர்ந்து நின்றவாறு, தன் வழிகளை மூடித் திறந்து, அவளைத் திடப்படுத்தினான்.

பின் திரும்பி வாசுதேவனைப் பார்த்தவாறு, சர்வமகியின் தோள்களை வருடிக்கொடுத்தான்.

வாசுதேவனின் பார்வை, தன் மகளின் தோள்களில் உரிமையுடன் வருடிக்கொடுத்த, அந்தக்  கரங்களிலேயே நிலைத்திருந்தது. அவருடைய உதட்டில் மெல்லிய புன்னகையும், விழிகளிலே நிம்மதியும் பிறக்க, ஆவலுடன், அநேகாத்மனை ஏறிட்டார்.

அவனுக்கு வேண்டியதும் அதுதானே.

“அங்கிள்… உங்களைப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியும்… மகி சொல்லியிருக்கிறாள். நீங்கள் எதற்கும் வருந்தவேண்டியதில்லை. நீங்கள், உங்கள் பிள்ளைகளை எப்படிப் பார்த்துக்கொள்வீர்களோ… அதே போல உங்கள் பிள்ளைகளை நானும், மகியும் சேர்ந்து பார்த்துக்கொள்வோம்… எதையும் எண்ணி மனத்தைக் குழப்பாமல் தூங்குங்கள்…” என்று அவன் புன்னகையுடன் கூற வாசுதேவனின் விழிகள் மகிழ்ச்சியால் மின்னின.

அவருடைய விழிகள், சர்வமகியின் தோளில் சுற்றியிருந்த அவன் கரங்களையும், அந்தக் கரங்கள் அவளுடைய தோள்களை அழுத்திய விதத்தையும் பார்த்தவர் பெரும் நிம்மதியுடன், சர்வமகியை ஏறிட்டு,

விழிகளாலே, தன் மகளுக்கு வாழ்த்தைக் கூறியவர், “இ… இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது…” என்றவர் ஒரு கணம் தன் விழிகளை மூடி அமைதி காத்தார். அந்த முகத்தில் ஆழ்ந்த அமைதி நிறைத்துக்கொண்டது.

“அ… அப்பா…” என்று அச்சத்துடன் சர்வமகி அழைக்க, மெதுவாக விழிகளைத் திறந்தவர்,  திரும்பி அநேகாத்மனை ஏறிட்டார்.

“தம்பி… இ… இவள் என் மகள் அல்ல… என் தாய்… என் குலம்… என் உயிர்…” என்றவர் தன் கரத்திலிருந்த சர்வமகியின் கரத்தை அழுத்திக் கொடுத்தவர், “என் மகளை… என் செல்வத்தை…” என்றவாறு அநேகாத்மனை ஆவலுடன் பார்க்க,

“நான் பார்த்துக்கொள்வேன்… ஒரு பொக்கிஷமாக…” என்றான் உள்ளம் உணர்ந்த உண்மையுடன். அவன் என்ன சொல்கிறான் என்பதை சர்வமகி உணர்வதற்குள்ளாக, வாசுதேவனின் உடல் உதறத் தொடங்கியது. உடனேயே அநேகாத்மன் அருகேயிருந்த பெல்லை அழுத்தினான்.

What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

22 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago