Categories: Ongoing Novel

தொலைந்த எனை மீட்க வா…!- 38

(38)

ஆடிப்போனாள் திகழ்வஞ்சி. ஓடிச்சென்று அவனிடமிருந்து பறிக்கவும் முடியாமல், அவன் அதைப் பார்த்துவிடக் கூடாதே என்கிற நடுக்கத்தோடு முகம் வெளிற நின்றிருக்க, அவளுடைய அந்த முக மாற்றத்தையும், உடல் மாற்றத்தையும் கண்டு அந்தப் புகைப்படத்தில் ஏதோ இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட அபராசிதன் மெதுவாக அதைத் திருப்பிப் பார்த்தான்.

ஒரு பெண்ணின் பழைய காலத்துப் புகைப் படம். கிட்டத்தட்ட திகழ்வஞ்சியைப் போல இருந்தார் அந்தப் பெண். பார்க்கும்போதே அவளுடைய தாயாகத்தான் இருக்கவேண்டும் என்பது புரிந்தது அவனுக்கு.

இதற்கேன் இத்தனை பதட்டப்படுகிறாள், புருவங்கள் சுருங்க அவளைப் பார்த்தவனின் விழிகள், அந்தப் புகைப்படத்தைத் திருப்பிக் காட்டி,

“இது யார்?” என்றான்.

“அ…அம்மா…” அவளுடைய குரல் ஏகத்திற்கும் நடுங்க, இப்போது அவனுடைய விழிகள் அவளுடைய கரங்களிலிருந்த அடுத்தப் படங்களிலும் நிலைத்தன.

அதில் ஏதோ இருக்கிறது என்று அவனுடைய உள்ளுணர்வு சொல்ல,

“அந்தப் படங்களையும் கொடு வல்லபை…” அவன் சொல்ல, ஒரு முறை துள்ளி அடங்கினாள் திகழ்வஞ்சி. அவசரமாக மறுத்தவள்,

“இ.. இல்லை… அது… அது நானும், வஞ்சியும் எடுத்துக் கொண்ட படங்கள்…” என்றவளுக்குச் சட்டென்ற தொண்டை வறண்டு போனது. வியர்த்துக் கொட்ட மயக்கம் வருவது போலத் தோன்றியது. ஆனால் அவனோ ஏளனமாக அவளைப் பார்த்து விட்டு,

“இனியும் நீ சொல்வதை நம்புவேன் என்று நினைத்தாயா?” கேட்டவன், மெதுவாக அவளை நெருங்க, அவளோ புகைப்படம் இருந்த கரத்தைப் பின்னால் எடுத்துச்சென்றவாறு பின்னால் நகர்ந்தாள்.

அவளுடைய பதட்டமும், நடுக்கமும், நிச்சயமாக அவள் கரத்திலிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அவனுக்குத் தோன்ற மேலும் அவளை நோக்கி முன்னேறினான்.

இவள் பின்னேற, அவன் முன்னேறினான். கடைசியில் சுவரோடு அவள் மோதி நிற்க, கரத்தை நீட்டியவன்,

“அதைக் கொடு திகழ்வஞ்சி… ஐ மீன் வல்லபை…” என்றான் அழுத்தமாக. அவளோ கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க மறுப்பாகத் தலையசைத்து,

“பிளீஸ்…” என்றாள் திக்கித் திணறி.

அவள் நின்றிருந்த கோலமே அந்தப் புகைப் படத்தில் இன்னொரு பெரிய அணுகுண்டு இருப்பதைப் புரிந்துகொண்டவனாக, அதற்கு மேல் அவளிடம் கேட்காமல் அவளை நோக்கிக் குனிந்தவன், அவளுக்குப் பின்னாலிருந்த கரத்தைப் பற்றி முன்னால் கொண்டுவர,

“பிளீஸ்… டோன்ட்…” என்றாள் திகழ்வல்லபை கெஞ்சலாக. முன்னால் எடுத்துவந்த கரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அந்தப் புகைப்படத்தை மறுகரத்தால் வாங்கியவன், அச்சத்திலும், பரிதவிப்பிலும் கண்ணீரைக் கொட்டிய விழிகளை அழுத்தமாகப் பார்த்து விட்டுத் தன் கவனத்தைப் புகைப்படத்தில் செலுத்த, திகழ்வஞ்சி சில்லிட்ட உடம்போடு அவனையே பார்த்திருந்தாள். இதயமோ காதுகளில் வந்து துடித்தது.

இத்தோடு, அவளுடைய மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம் பறிபோகப் போவதை உணர்ந்து கொண்டவளாக, சுவரின் தொப் என்று சாய, அபராசிதனோ தன் கரத்திலிருந்த புகைப்படத்தைத் தூக்கிப் பார்த்தான்.

முதலிலிருந்தது, அவளும், அவளுடைய சகோதரியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம். அவன் அமலனின் கைப்பேசியில் பார்த்த அதே பெண்ணும், இவளுமாக ஒருவரின் தோளில் ஒருவர் கரங்களைப் போட்டவாறு புன்னகைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். இருவரிடமும் ஒரு சில மாற்றங்கள் இருந்தாலும், ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய வகையில்தான் இருந்தார்கள். அதுவும் திகழ்வஞ்சி தன் முகத்தில் பூசியிருக்கும் முகப்பூச்சை முற்றாக நீக்கியிருந்தால் எழுபது வீதம் திகழ்வல்லபை போலவே இருப்பாள். அதனால்தான் அவனும் சுலபமாக ஏமாந்தான். வெறுப்போடு அவளைப் பார்த்துவிட்டு அந்தப் புகைப்படத்தைச் சுண்டி எறிந்தவன் இப்போது மற்றைய புகைப்படத்தில் தன் கவனத்தைச் செலுத்தினான்.

பார்த்தவனின் முகம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. இடுங்கிய விழிகளில் மெல்ல மெல்ல அதிர்ச்சி பிறந்து பின் கோபமுமாக மாறிப் பின் சீற்றமாக உருவெடுக்க, நிமிர்ந்து திகழ்வஞ்சியைப் பார்த்தான்.

அவனுக்கு மட்டும் சக்தியிருந்தால், நிச்சயமாக அந்தப் பார்வையால் அவளை எரித்துச் சாம்பலாக்கி இருப்பான்.

“நீ… நீ… அத்தானின்…?” என்றவனுக்கு வார்த்தைகள் வர மறுத்தது. இப்போது புரியாதது புரிந்தது.

எதற்காக இவளை மணக்கச் சொல்லி அவர் யோசனை சொன்னார் என்றும் புரிந்தது. விஜயராகவனுக்கு ஏற்கெனவே இவள் தன் மகள் என்று தெரிந்திருக்கிறது. இவளுக்கும் அது தெரிந்திருக்கிறது. அதுதான் அன்று அவரைக் கண்டதும் அதிர்ச்சியிலிருந்தாள். இவன்தான் முட்டாள் போல அவள் மீதிருந்த ஈர்ப்பிலும், ஆராவை சொந்தமாக்க வேண்டும் என்கிற வேகத்திலும் மறுக்காமல் சம்மதித்தான்.

மறுநாள் இவளைச் சந்திக்கத்தான் அவனுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் அழுத்தம் தாங்க முடியாமல், மாரடைப்பு வந்திருக்கிறது. அது தெரியாமல்… சே… நினைக்க நினைக்க உடல் முழுவதும் திகுதிகு என்று எரியத் தொடங்கியது.

அவனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. யாரைத் தன் வாழ்க்கையில் பார்க்கக் கூடாது என்று நினைத்தானோ, யாருடைய குடும்பத்திற்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் தொடர்பு இருக்கக் கூடாது என்று எண்ணியிருந்தானோ, எவர் குடும்பத்தின் பெயரைக் கூடக் காதில் கேட்கக் கூடாது என்று நினைத்தானோ, அதே குடும்பத்தைச் சேர்ந்தவளோடுதான் அமலன் தொடர்பு வைத்திருக்கிறான். அவனோ திருமணம் முடித்திருக்கிறான்.

அதை நினைத்துப் பார்த்தவனுக்குத் தன்னுடைய விதியை நினைத்தது சிரிக்கத் தோன்றியது. அடுத்த கணம் தன்னை மறந்து கட கடவென்று சிரிக்கத் தொடங்கியும் விட்டான் அபராசிதன்.

அதைக் கண்ட திகழ்வஞ்சிக்கு அச்சத்தில் காதுகள் அடைத்தன. அந்த நிலையில் பனிக் அட்டாக் வந்துவிடுமோ என்று பயந்தவளாக உடல் நடுங்க அவனைப் பார்த்தாள். இப்படி சீற்றத்தோடு சிரிக்கும் அவனிடம் என்ன சமாதானம் சொல்ல முடியும்? எதையென்று பேச முடியும்? இனி எல்லாம் முடிந்தது. அத்தனையும் தொலைந்தது. இனி ஆரா அவளுக்கு இல்லை. அவள் வாழ்க்கை இத்தோடு அஸ்தமனமாகிவிட்டது. கடவுளே… இனி என்ன செய்யப்போகிறாள்? புரியாத தவிப்போடு அவனை ஏறிட, அவனோ தன் முட்டாள்தனத்தையும், தான் ஏமாற்றப்பட்டதையும் நினைத்து வெறுப்போடு சிரித்துக்கொண்டிருந்தான்.

“ஹ… ஹ… ஹ… ஐ கான்ட் பிலீவ் திஸ்… XXXXX XXXXX XXXX பிலீவ் திஸ். இது எப்படிச் சாத்தியம் வல்லபை ஐ மீன்… உன்னுடைய பழைய பெயர் என்ன? ஆ… அங்கவை… சங்கவை ஹா ஹா ஹா… ஓ மை காட்… நான் அந்தளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் இல்லையா?” என்றவன் மீண்டும் சிரிக்க, பதில்சொல்ல முடியாத கையாலாகாத் தனத்தோடு, உடல் நடுங்க சுவரோடு ஒட்டியவாறு ஒருவித மந்த நிலையில் அமர்ந்திருந்தாள் திகழ்வஞ்சி.

சிரித்து முடித்தவனின் முகம் அப்படியே கடுமையாக மாறிப்போக, இப்போது கசப்பு அப்பட்டமாக வழிந்தது அவனிடத்தே.

“சே… உன்னையா மணந்தேன்?” என்றான் அருவெறுப்போடு. இதற்கு என்ன பதிலைச் சொல்வாள். அவள், சொல்லத்தான் ஏதாவது இருக்கிறதா? ஆனால் இவள் இங்கே வரும் வரைக்கும், விஜயராகவனுக்கும் இவனுக்கும் உள்ள தொடர்பே என்னவென்று தெரியாதே. அதை அவனுக்குப் புரியவைக்கும் நோக்கோடு,

“அபராசிதன் நான் சொல்வதை…” அவள் முடிக்கவில்லை, பக்கத்து மேசையிலிருந்த பூஞ்சாடி தரையில் விழுந்து நொருங்கியது. அது கொடுத்த சத்தத்தில் அதிர்ந்து போனாள் திகழ்வல்லபை. வாயடைத்துப் போனவளாக அவனைப் பார்க்க, அவனோ அவளைக் கொல்லும் வெறியுடன் பார்த்து நின்றான்.

“வேண்டாம்… நீ எதுவும் பேசவேண்டாம்… நான் எதையும் கேட்கவேண்டாம்… எத்தனை பெரிய ஏமாற்று…” என்றவனுக்குத் தன் கோபத்தை அடக்குவதே பெரிய சவாலாக இருந்தது.

அவனுக்கு வந்த ஆத்திரத்தில் அத்தனையையும் போட்டு உடைக்கவேண்டும் போலத் தோன்றியது. ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகளா? சத்தியமாக அவனுக்கு அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்றுகூடத் தெரியவில்லை. அவளை வெறுப்புடன் பார்த்தவன்,

“ஒரு மாதம், நாம் திருமணம் முடித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஒரே வீட்டிலிருந்திருக்கிறோம். ஒரே படுக்கையைப் பகிர்ந்திருக்கிறோம். இத்தனை நாட்களும் ஒரு நாள் கூடவா நீ யார் என்கிற உண்மையைச் சொல்லவேண்டும் என்று தோன்ற வில்லை?” கேட்டவனை வலியோடு பார்த்தாள் திகழ்வஞ்சி.

“உ… உண்மை தெரிந்தால், ஆராவை என்னிடமிருந்து பிரித்துவிடுவீர்களோ என்று… ப.. பயந்தேன்… நான் உங்கள் அத்தானின் மகள் என்று தெரிந்தால், வெறுத்து… வெறுத்து ஒதுக்கி விடுவீர்களோ என்று நினைத்து…” அதற்கு மேல் சொல்ல முடியாமல், தொண்டைக் குழிக்குள் விக்க, அபராசிதன் ஆழமாக ஒரு மூச்சை எடுத்து விட்டான். அவளை இகழ்ச்சியும் வெறுப்பும் ஒன்றிணையப் பார்த்து,

“எதை மன்னித்தாலும், நீ செய்த ஆள் மாறாட்டத்தையும், நம்பிக்கை துரோகத்தையும் என்னால் மன்னிக்க முடியாது…” என்றவன் அவளுடைய முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல், அறைக் கதவு வரை சென்றவன் நின்று, அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல்,

“இனி உன் முகத்தைப் பார்க்கவே நான் விரும்பவில்லை. உனக்கு அரை மணி நேரம் தருகிறேன், அதற்குள் உனக்குரிய பொருட்களை மட்டும் மூட்டையைக் கட்டி எடுத்துக்கொண்டு இந்த வீட்டைவிட்டுப் போய் விடு…” என்றவனிடம் என்ன சொல்லி சமாதானப் படுத்த முடியும்? சமாதானப் படுத்தும் வகையிலா அங்கே சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. ஆனால் ஆராவமுதன்? துடித்தவள்,

“அபராசிதன்… உங்கள் கோபம் நியாயமானது… எனக்குப் புரிகிறது… ஆனால் கொஞ்சம் என் இடத்திலிருந்து பாருங்களேன்…” அவள் கெஞ்சலாகக் கேட்க, அவனோ அவளை வெறுப்புடன் பார்த்தான்.

“உன்னிடத்தில் இருந்து யோசிப்பதா?” ஏளனமாகச் சிரித்தவன்,

“உனக்கும் உன் சகோதரிக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை திகழ்வல்லபை. அவள் என் அண்ணாவை ஏமாற்றினாள் என்றால், நீ என்னை ஏமாற்றியிருக்கிறாய். இங்கே ஏமாற்றுக்கு இடமேயில்லை… போய்விடு…” அவன் உறுதியாகச் சொல்லத் தவிப்போடு அவனைப் பார்ததாள் திகழ்வஞ்சி.

“போ என்றால்… நான்… நான் மட்டும் எப்படிப் போவேன்…? ஆரா.. அவனை விட்டு என்னால்…” அவள் முடிக்கவில்லை, கடும் சீற்றத்தோடு திரும்பி அவளைப் பார்த்தான்.

அவனுடைய அந்த சீற்றத்தைக் கண்டு நடுங்கித்தான் போனாள் திகழ்வல்லபை. அவனோ ஒரு விநாடி அவளை அழுத்தமாகப் பார்த்தான். கசங்கிய முகமோ, தவித்த விழிகளோ, துடித்த உடலோ எதுவும் அவனுடைய கண்களுக்குப் புலப்படவில்லை.

அங்கே அதுவரை காலமும் அவனைக் கவர்ந்திழுத்த அந்த அழகிய ஓவியம், சிதைந்தது போல உணர்ந்தவன், வெறுப்போடு அவளைப் பார்த்து,

“ஆரா இனி என் மகன்… அவன் என் பொறுப்பு…” சொன்னவனிடம் மறுப்பாகத் தலையசைத்தாள் திகழ்வஞ்சி.

“நோ… ஆராவை விட்டு என்னால் போக முடியாது… அவன் என் மகன்…” என்றாள் திகழ்வல்லபை கதறலாக. அதைக் கேட்டு இகழ்ச்சியாகச் சிரித்தவன்,

“உன்னுடைய மகனா? நாட் எனி மோர்…” என்றவனை கண்களில் கண்ணீர் பொங்கப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“பிளீஸ் டோன்ட் டு திஸ் டு மி… அவன் இல்லாமல்… என்னால்…” அவள் முடிக்க முடியாமல் திணற, இப்போது தன் உயரத்திற்கு ஏற்ப நிமிர்ந்து நின்றவன்,

“அது உன்னுடைய பிரச்சனை…” என்றான் அலட்சியமாக. அதைக் கேட்டுத் துடித்தவள்,

“நான் திகழ்வஞ்சி இல்லை என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும் அபராசிதன். ஊர் உலகத்திற்கு நான் இன்னும் வஞ்சி தான். ஆராவமுதன் என் மகன். எனக்கு மட்டும் சொந்தமானவன்… அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது..” சொன்னவளைக் கிண்டலாகப் பார்த்தான் அபராசிதன்.

“நீ இந்தளவு முட்டாளாக இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை திகழ்வல்லபை. சின்னதாக ஒரு மரபணு சோதனை போதும் நீ யார் என்று இந்த உலகத்திற்குக் காட்ட…” என்றவன் இப்போது அவள் பக்கமாகத் திரும்பி நின்றான்.

“இதோ பார்… எனக்கு உன் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்கவில்லை. நீ திகழ்வஞ்சியாகக் கெட்டவளாக இருந்தபோது உன் மீது எனக்கிருந்த ஈர்ப்பு, நீ திகழ்வல்லபை என்று தெரிந்த பின்பு, சுத்தமாகக் காணாமல் போயிற்று. இப்போது உன்னைப் பார்க்கிற போது, நீ ஏமாற்றுக்காரி என்பதுதான் கண்முன்னால் வந்து நிற்கிறது… மரியாதையாகப் போய்விடு…” அவன் அடக்கி வைத்த ஆத்திரத்துடன் சொல்ல மறுப்பாகத் தலையை அசைத்தாள் திகழ்வஞ்சி.

“நோ… நான் மாட்டேன் அபராசிதன். முன்பு எப்படியோ. நான் இப்போது உங்கள் மனைவி.. எனக்கும் இந்த வீட்டில் உரிமை இருக்கிறது… அராவின் மீதும் இருக்கிறது…” விம்மியவளைத் தலை சரித்துப் பார்த்தான் அபராசிதன்.

“ரியலி…?” என்றவன் சிரித்தான். சாரி வல்லபை… எப்போது நீ ஆள்மாறாட்டம் செய்தாயோ, அந்த விநாடியே நம்முடைய திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது. நீ திகழ்வஞ்சியாகத்தான் என்னை மணந்தாய். இப்போது நீ திகழ்வல்லபையாக இருக்கிறாய். அப்படியிருக்கிறபோது நம்முடைய திருமணம் எப்படி செல்லுபடியாகும்? நான் தாலி கட்டியது கூட திகழ்வஞ்சிக்குத்தான். உனக்கில்லை…” என்றவன் என்ன நினைத்தானோ திரும்பி அறைக்குள் வந்தான். அங்கிருந்த மேசையின் இழுப்பறையில் இருந்த காசோலை அடங்கிய புத்தகத்தை வெளியே எடுத்து, அதில் எதையோ கிறுக்கி அவளுடைய முகத்தில் விட்டெறிய, அதுவோ சுழன்று சென்று அவளுடைய கன்னத்தில் பட்டுத் தரையில் விழுந்தது.

மீண்டும் காசோலையை அதன் இடத்தில் வைத்துவிட்டுப் பேனாவின் மூடியைப் போட்டவாறு,

“பிளாங் செக்… நேற்று எனக்குச் சுகம் கொடுத்ததற்காகவும், ஐ மீன், உன் கன்னித் தன்மையை எனக்காகத் தாரைவார்த்துக் கொடுத்ததற்காகவும், ஆராவை இத்தனை நாட்கள் நன்றாகப் பார்த்துக் கொண்டதற்குமாக எவ்வளவு வேண்டுமோ அதை இதில் நிரப்பி எடுத்துக் கொள்.” என்றவன், பேனாவை மேசையில் எறிந்துவிட்டு விலக முன் நின்று அவளை வெறுப்போடு பார்த்து,

“ஆ… முக்கியமான விஷயம், அப்பா என்று என் அத்தானின் நிழலைக் கூட நீ நெருங்கக் கூடாது. அவர் பக்கமாக நீ திரும்புகிறாய் என்று தெரிந்தது… அதற்குப் பிறகு வேறு அபராசிதனை நீ பார்ப்பாய்…” என்றவன், தன் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான்.

“உனக்குக் கெடுத்த அரைமணி நேரத்தில் பத்து நிமிடங்கள் கழிந்து விட்டன… நான் போய்விட்டுத் திரும்புவதற்குள், உன்னுடைய நினைவாகச் சிறு துரும்பு கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது… அதையும் மீறி நீ இங்கே இருக்க முயன்றால், காவல்துறையை அழைக்கக் கொஞ்சம் கூடத் தயங்கமாட்டேன்… சோ… லீவ், ஓர் ஐ சுவேர்… யு வில் ரீக்ரட் இட் (Leave or I swear you will regret it). என்றவன் அவளுடைய முகத்தைக் கூடப் பார்க்காமல் வெளியேறிவிட, இவளோ விக்கித்துப் போய் நின்றிருந்தாள்.

எத்தனை சுலபமாகச் சொல்லிவிட்டான். அவள் எதற்காக எல்லாம் பயந்தாளோ, அத்தனையும் கண் முன்னால் அரங்கேறிக் கொண்டிருக்க, பேசக் கூடச் சக்தி அற்றவளாக அப்படியே மடங்கித் தரையில் சரிந்தாள் திகழ்வல்லபை.

அவளுக்குக் கண்ணீருக்குப் பதில், இரத்தம் தான் கசிந்தது. ‘அவன் பேசிவிட்டா போனான்… இல்லையே… கொதிக்கும் தாரைத் தலையில் அல்லவா ஊற்றிவிட்டுப் போகிறான். இவனால் இப்படிப் பேச எப்படி முடிந்தது? நினைக்கும் போதே உடலெல்லாம் அசிங்கம் பட்டது போலக் கூசிப்போயிற்று. தரையில் விழுந்த காசோலையோ அவளுடைய வலியை மேலும் அதிகரிக்கச் செய்யக் குனிந்து அதை எடுத்துப் பார்த்தாள். நெஞ்சமோ இரண்டாகப் பிளந்தது போல அவளுக்கு வலித்தது.

அவளுடைய கன்னித்தன்மைக்க அவன் விலை பேசிவிட்டுச் சென்றது அவளை உறுத்தவில்லை. வயிற்றில் சுமந்து பெற்றதாக நினைத்து இத்தனை நாட்களும் பொத்திப் பாதுகாத்து வளர்த்த அவளுடைய தாய்மைக்கல்லவா விலை பேசி விட்டுச் செல்கிறான். அந்தத் தாய்மைக்கு விலை ஏது? அந்த உலகத்தை விற்றுப் பெறும் பணம் கூட அதற்கு ஈடாகாதே… எத்தனை சுலபமாக அந்தக் காசோலையை விட்டு எறிந்து விட்டுப் போகிறான்? அதை நினைக்கும் போதே உடல் குலுங்கியது அவளுக்கு.

இத்தனை அவமானத்தோடு அந்த வீட்டில் இருக்க வேண்டுமா? இல்லை… இனி ஒரு வினாடிதன்னும் அங்கே இருக்கக்கூடாது. இவனுக்கு என்னதான் தன் நிலையை விளக்க எண்ணினாலும், நிச்சயமாக அவன் அதைப் புரிந்துகொள்ளப் போவதில்லை. அதையும் மீறித் தன்மானத்தை விலைபேசும் அவன் வீட்டில் இருப்பதற்கு, உயிரைக் கூட மாய்த்துக் கொள்ளலாம்.

ஆத்திரத்தோடு விழிகளை அழுந்த துடைத்தவள், சட்டென்ற எழுந்தாள். தன் கரத்திலிருந்த காசோலையை மேசையில் வைத்தவள், விரைந்து சென்று அங்கிருந்த பெட்டியை எடுத்துக் கட்டிலில் போட்டுவிட்டுத் தன்னுடைய ஆடைகளை அந்தப் பெட்டியில் அடுக்கிவிட்டுக் கையோடு ஆராவமுதனின் உடைகளையும் அடுக்கத் தொடங்க, அப்போதுதான் தான் என்ன செய்கிறோம் என்பதே அவளுக்குப் புரிந்தது.

இப்போது எதற்கு ஆராவின் உடையை அவளுடைய பெட்டியில் போடுகிறாள். இனித்தான் அவளுக்கும் ஆராவுக்கும் எந்தத் தொடர்பும் உரிமையும் இருக்கப் போவதில்லையே. அதை நினைத்தவளுக்கு அதற்கு மேல் தாக்குப்பிடிக்கும் சக்தியில்லாதவளாகக் குழந்தையின் உடையை மார்போடு அணைத்து விம்மிக் கதறிவிட்டாள் திகழ்வஞ்சி.

எதையும் இழப்பாள். ஆனால் குழந்தையை எப்படி இழப்பாள்?

அன்று உயிரைக் கையில் பிடித்துவைத்தவாறு, இவளைப் பார்த்துக் கண்கள் பணிக்கத் திகழ்வஞ்சி சொன்னது நினைவுக்கு வந்தது.

“வல்லபை… எனக்கு ஒரு சத்தியம் செய்வாயா…?” திக்கித் திணறிய தங்கையை நெஞ்சு முட்ட வலியோடு பார்த்தாள் திகழ்வல்லபை.

“என்… குழந்தை… அவனை… நீதான் வளர்க்க வேண்டும்… பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வெண்டும்… சத்தியம் செய் வல்லபை…” சொல்லத் துடித்துப்போனாள் அவள்.

“வஞ்சிமா… பிளீஸ்.. இப்படியெல்லாம் பேசாதே.. உனக்கு எதுவும் ஆகாது..” சொன்ன திகழ்வல்லபையை மங்கிய புன்னகையுடன் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“பிளீஸ் வல்லபை… இந்தச் சமாதானம் வேண்டாம்… சத்தியம் செய்… நானும் நீயும் பாசத்துக்கு ஏங்கியது போல என் பிள்ளை ஏங்க வேண்டாம்… அவன் என்னைப் போல வளரவும் வேண்டாம்… அவனுக்குத் தகுதியான தாய் நீதான்… அவன் உன் குழந்தையாகவே நினைத்து வளர் வல்லபை…” என்றவள் திரும்பவும் தன் கரத்தை நீட்டி,

“சத்தியம் செய் வல்லபை…” என்றாள் திக்கித் திணறி. அந்த நிலையில் கேட்கும் தங்கையிடம் எப்படி மறுப்பாள். அவளுடைய கரத்தில் தன் கரத்தைப் பதித்துத் தலையை ஆட்ட, நிம்மதிப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள் திகழ்வஞ்சி.

“உனக்கு இதுவரை நான் எந்தப் பரிசும் கொடுத்ததில்லை மனவலியைத் தவிர… இப்போது முதன் முறையாக என் குழந்தையையே உனக்குப் பரிசாகக் கொடுக்கிறேன். பத்திரமாகப் பார்த்துக் கொள் வல்லபை…” என்றவள் ஏனோ அழுதாள்.

“வஞ்சிமா…” துடித்தவளாக அவளுடைய கண்ணீரைத் துடைக்க, வருத்தப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள் வஞ்சி.

“கர்மா இஸ் பூமராங்…” என்றாள் திணறலாக. பின் வல்லபையை ஏறிட்டுப் பார்த்து,

“நான் நிறையத் தவறு செய்திருக்கிறேன் வல்லபை. மன்னிக்க முடியாத தவறு… அதுதான் கடவுள் என் வாழ்க்கையைப் பாதியில் எடுத்துக் கொள்கிறாரோ தெரியவில்லை…” என்றவள் ஒரு பெருமூச்சு விட்டு,

“உனக்கும் நிறையத் தொல்லை கொடுத்து விட்டேன்… முடிந்தால் என்னை மன்னித்து விடு… குழந்தைக்கு எக்காலத்திலும் நான்தான் அம்மா என்று தெரியவேண்டாம். அவனுக்குத் தன் தாய் மிகக் கேவலமான பிறவி என்று தெரிந்தால், பின்னாளில் தாங்க மாட்டான்… அவனை உன் குழந்தையாகவே வளர்த்துக் கொள் வல்லபை…” என்றவள், விழிகளை மூடி எதை எதையோ யோசித்தாள்.

“வல்லபை… என் வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறது. உனக்கு நிறையச் செலவு இருக்கும். அதை எடுத்துக் கொள். பாதுகாப்புப் பெட்டகத்தில் நகைகள் இருக்கிறது. அ.. அமலன் வாங்கிக் கொடுத்தது. குழந்தையின் எதிர்காலத்திற்கு அதைப் பயன்படுத்திக் கொள்…” என்றவள் எதையோ நினைத்து சிரித்தாள்.

“நான் பேராசையில் இதை எல்லாம் சேர்த்தேன். பணத்துக்காக அமலனைக் கைக்குள் போட நினைத்தேன்… கடைசியில் ஒன்றைக் கூடப் போட்டு அனுபவிக்க முடியவில்லை… அடிக்கடி சந்திரா அத்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன்… பேராசை பெரும் நஷ்டம் என்று. அது இதுதானோ?” என்று விரக்தியாகக் கூறியவள், அடுத்த ஒரு சிலமணி நேரத்தில் தன் கடைசி மூச்சை விட்டிருந்தாள்.

துடித்துப் போனாள் திகழ்வல்லபை. அவளுக்கு இருந்த ஒரே ஒரு உறவு, அவளுடைய சகோதரிதான். இப்போது அவளும் இல்லை என்றதும், அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கடைசியாக அவளுடைய குழந்தையை இவள் கரத்தில் கொடுத்த போது, அந்தக் கணம் முடிவெடுத்தாள், குழந்தைக்குத் தான் மெய் தாயாக மாறுவதென்று.

மாறினாள். குழந்தைக்காகத் தன் பெயர், இடம் அனைத்தையும் மாற்றினாள். திகழ்வல்லபையைக் கொன்று திகழ்வஞ்சியாக மாறினாள். ஆனால், இன்று அதுவே அவளுக்கு எமனாக வந்து நிற்கிறதே. அதுவே அவளையும் குழந்தையையும் பிரிக்கிறதே. அன்று தன் தங்கைக்குச் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத் தனத்தை எண்ணி வெறுத்தவளாக, அழுது கரைந்தாள் திகழ்வஞ்சி.

இனி உரிமையாக இது என் குழந்தை என்று சொல்ல முடியுமா? என் குழந்தையைக் கொடு என்று போராட முடியுமா? இல்லையே. அவள் ஆள்மாறாட்டம் செய்தவள் என்கிற ஒரு காரணம் போதுமே அவனிடமிருந்து இவளைத் தூரத் தள்ளி வைக்க.

அவளுக்காக யார் இருக்கிறார்கள். அவள் பக்கத்து நியாயத்தைப் புரிந்து அவளுக்காகப் போராட எவர் வருவார்கள். இனி என்ன செய்யப் போகிறாள்… யாரிடம் உதவி கேட்கப் போகிறாள்? வேதனையோடு எண்ணியவளின் மனக் கண்ணில் விஜயராகவன் வந்து நின்றார்.

உடனே கண்ணீரைத் துடைத்தவள், அரக்கப் பரக்க எழுந்து தன் கைப்பேசியை எடுத்து விஜயராகவனின் இலக்கங்களை அழுத்திவிட்டுப் பச்சைப் பொத்தானை அழுத்தும் போது, ஒரு விநாடி தயங்கி நின்றாள் திகழ்வஞ்சி.

அவராலும் என்னதான் செய்ய முடியும்? அவருடைய நிலையே பரிதாபமாக இருக்கும் போது, இவளுக்கு உதவி செய்ய அவரால் முடியுமா? வேண்டாம், ஏற்கெனவே அவளுடைய தாயும், அவர்களின் உறவினர்களும் அவருடைய வாழ்க்கையில் விளையாடியது போதும். இவள் வேறு அவருக்கு வலியைக் கொடுக்க வேண்டாம். அவராவது நிம்மதியாக இருக்கட்டும். முடிவு செய்தவள், கைப்பேசியை அணைத்து விட்டு அதையே வெறித்துப் பார்த்தாள். அது கூட திகழ்வஞ்சியுடையது. அமலன் வாங்கிக் கொடுத்தது. அது கூட அவளுக்கு உரியதில்லை. விரக்தியாகச் சிரித்தவள், அதை எடுத்துச் சென்று மேசையில் வைத்திருந்த காசோலைக்கு மேல் வைத்தாள்.

திரும்பத் தன் பெட்டியின் அருகே வந்தவள், ஏற்கெனவே அதற்குள் இருந்த அழகான வேலைப் பாடு கொண்ட பெட்டகம் ஒன்றை வெளியே எடுத்தாள். அந்தப் பெட்டகத்தை ஒரே ஒரு முறைதான் திறந்து பார்த்திருந்தாள். அது அமலன் திகழ்வஞ்சிக்கு வாங்கிக் கொடுத்த நகைகள். அதன் பெறுமதி என்ன என்றுகூட இவளுக்குத் தெரியாது. ஆனால் திகழ்வஞ்சி சொன்ன ஒரே காரணத்திற்காக, ஆராவுக்குத் தேவைப்படும் என்பதால் பத்திரமாக வைத்திருந்தாள். அதனோடு சேர்த்து அந்தப் பெட்டியிலிருந்த ஒரு கோப்பையும் வெளியே எடுத்தாள்.

அது ஆராவின் மருத்துவ அறிக்கை, மற்றும் திகழ்வஞ்சியின் பணத்தை அவன் பெயருக்கு மாற்றிய ஆவணங்களும் இருந்தன. அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அந்தக் காசோலையின் மீது வைத்தாள். கையோடு கழுத்தில் கனம் தெரிய, அவன் கட்டிய தாலியையும் கழற்றி அதனோடு வைத்தாள்.

அதுதான் இனி அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று தெரிந்தாயிற்றே. இனி அதைக் கழுத்தில் அணிந்து என்ன ஆகப்போகிறது. விரக்தியாக நினைத்தவள், கடைசியாகத் தன் மகிழ்ச்சி அனைத்தையும் அந்த அறையில் புதைத்து விட்டுத், துக்கத்தை மட்டும் அள்ளி நெஞ்சோடு அணைத்தவாறு தன் பெட்டியை மூடியவள், அதற்கு மேல் அங்கிருக்காது கடகடவென்று வெளியேறத் தொடங்க, ஆராவமுதனின் கீச் கீச் சத்தம் அவளுடைய செவிகளில் வந்து விழுந்தது.

அதைக் கேட்டதும் தடை போட்டவளாக நின்றாள் திகழ்வஞ்சி. கண்ணீரோடு சத்தம் வந்த திசைக்குத் திரும்பிப் பார்த்தாள். ஓடிப்போய் அவனை அள்ளி எடுத்து மார்போடு அணைத்து அவனை விட்டுப் போக மாட்டேன் என்று சத்தியாகிரகம் செய்யும் வெறி வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டாள்.

அவளுடைய வாழ்க்கைதான் இப்படி இருக்கிறது. அவனாவது மகிழ்ச்சியாக வாழட்டும். அவளிடம் இருந்து அவன் என்ன மகிழ்ச்சியைக் கண்டான். எதுவுமில்லையே. இங்கேதான் உயிரைக் கொடுத்துப் பார்த்துக் கொள்ள. அத்தை, மாமா, சித்தப்பா என்று ஒரு குடும்பம் இருக்கிறதே. இவளுடைய தேவை இனி அவனுக்கு இல்லை… விரக்தியாக நினைத்தவள், நகர மறுத்த கால்களை அசைத்து, குழந்தையின் சத்தத்தில் குழைந்து உருக முயன்ற இதயத்தைக் கல்லாக்கி உயிரை அங்கே தொலைத்து விட்டு வெறும் கூடாக அங்கிருந்து வெளியேறினாள் திகழ்வல்லபை.

 

What’s your Reaction?
+1
59
+1
6
+1
2
+1
0
+1
51
+1
5
Vijayamalar

View Comments

  • அருமையான பதிவு 😍😍😍😍
    😱😱😱😱😱😱😱😱
    அடப்பாவி பயலே என்றாளை வெளியே போக சொல்லிட்டியே டா😡😡😡😡😡😡😡😡😡😤😤😤😤😤😤😤😤😤
    கொரங்கு கையில பூமாலை கிடைச்சா இப்படிதான் பிச்சுப் போடும்.😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬

    • நன்றி தங்கமே நன்றி. ஆமா தெரியாமதான் கேக்கறேன், அவ செஞ்சது மட்டும் சரியா. உண்மைய முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல. அதனால வந்த சிக்கல்.

Recent Posts

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 8/9

(8)   மிளிர்ம்ருதையும், விக்னேஷ்வரனும் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. இருவரும் பல்வேறு பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் சிக்கியிருந்ததால்,…

1 day ago

தொலைந்த எனை மீட்க வா…!- இறுதி அதிகாரம்

(41) “எப்படி இருக்கிறாய்?” அழுத்தமான குரல் வர, அவனை நிமிர்ந்த பார்க்கும் சக்தியற்றுத் தலையை மட்டும் ஆட்டி, “இ... இருக்கிறேன்...”…

2 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 6/7

(6)   சூரிய வெளிச்சம் அந்த அறைக்குள் நுழைந்து, விழி மூடிக் கிடந்தவளின் காயப்பட்ட உடலின் மீது சற்றுக் கடுமையாகத்…

3 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 39/40

(39) இரண்டு மாதங்களுக்குப் பிறகு, “ஷ்... விக்டோரியா... டோன்ட் க்ரை... மை லிட்டில் பேபி பம்கின்...” என்று கீழே விழுந்து…

5 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 5

(5)   விழிகளை மூடியவாறு இருந்தவள் அதே கனவு கலையாதவளாகத் தன் விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன்தான் வந்துகொண்டிருந்தான். அந்த…

5 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 4

(4)   எல்லா நாட்களும் ஒரே நாள்தான். ஆனால் திருமண நாள் என்பது… அது ஒவ்வொரு இளம் பெண்களின் வாழ்விலும்…

1 week ago