Categories: Ongoing Novel

தொலைந்த எனை மீட்க வா…!- இறுதி அதிகாரம்

(41)

“எப்படி இருக்கிறாய்?” அழுத்தமான குரல் வர, அவனை நிமிர்ந்த பார்க்கும் சக்தியற்றுத் தலையை மட்டும் ஆட்டி,

“இ… இருக்கிறேன்…” ஐயோ ஏன் குரல் இப்படிக் கமறுகிறது. ஏன் தொண்டை அடைக்கிறது. கண்ணீர் வேறு முட்டி நிற்கிறதே… உதடுகள் வேறு நடுங்கி, நான் அழப்போகிறேன் என்று அவனுக்குக் காட்ட முயல்கிறதே. அவள் தவித்து நிற்கையில் அபராசிதனின் விழிகள் அங்கும் இங்கும் அசையாது, பசைபோட்டு ஒட்டியது போல அவளிடம்தான் நிலைத்திருந்தன.

பசித்தவனுக்குப் புசிக்கக் கிடைத்த உணவாகத் தலை முதல் கால்வரை ஆராய்ந்தவனின் நெஞ்சிலும் பெருவலி. உடல் மெலிந்து, வாடி வதங்கி, ஏனோ தானோ என்று இருக்கும் அவள் நிலை கண்டு நெஞ்சம் தவித்துப், போனான்.

சொல்லப்போனால் அவளுடைய இந்த நிலைக்கு அவனும்தானே காரணம். ஒரு பெருமூச்சு எடுத்து விட்டவன்,

“உள்ளே சென்று பேசலாமா? இல்லை இப்படி வாசலில் நின்று பேசலாமா? எது உனக்கு வசதி?” அவன் கேட்க, பதட்டத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள். அவனுடைய கூரிய விழிகளின் வீரியம் தாங்க முடியாமல், சட்டென்று விலகி நின்று,

“சா… சாரி…” என்றாள் திக்கித் திணறி.

அவனோ அதுவே அழைப்பு என்பது போல உள்ளே வந்தவன், புருவங்கள் சுருங்க அந்த முன்னறையை ஏறிட்டான். ஏன் நல்லவிதமாக ஒரு இருக்கை வாங்கிப் போடக் கூடாதா? நிமிர்ந்து அவளைப் பார்க்க அதுவரை அவனைத்தான் அவளும் பார்த்திருந்திருக்கிறாள் போல, அவன் திரும்பியதும் மீண்டும் சட்டென்று தன் தலையைக் குனிந்துகொள்ள,

“குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்றான் அபராசிதன். உடனே உள்ளே சென்று ஒரு குவளை தண்ணீர் எடுத்து வர, அவன் நீளிருக்கையில் சாய்வாக அமர்ந்திருந்தான்.

அவனுக்கு முன்பாகச் சாயம் போயிருநத் தேநீர் மேசையில் குவளையை வைத்தவள், மீண்டும் ஒதுங்கி நின்று கொள்ள, அவள் வைத்துட்டுப் போன தண்ணீர் குவளையை எடுத்து ஒரு மிடறு விழுங்கினான் அபராசிதன். திரும்பவும் அதை மேசையில் வைத்துவிட்டு அவளை ஏறிட்டு,

“உட்கார்…” என்றான்.

“இ…இல்லை… நிற்கிறேன்..” அவள் திக்கித் திணறச் சற்று நேரம் அமைதி காத்தான் அபராசிதன். அவனுக்கும் எங்கிருந்து தொடங்குவது எப்படி முடிப்பது என்று தெரியவில்லை. ஆனாலும் ஒன்றில் தொடங்கி முடிக்கத்தானே வேண்டும். நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்,

“ஐ மிஸ் யு…” என்றான்.

அதிர்ந்து போனாள் திகழ்வல்லபை. இப்போது என்ன சொன்னான்? மிஸ் யு என்றுதானே சொன்னான். இல்லை என்றால் அவளுக்குத் தவறாகக் கேட்டுவிட்டதா? எதிர்பார்ப்பும் தவிப்புமாக அவனைப் பார்த்தவள்,

“சா… சாரி… சரியாகக் கேட்கவில்லை…” என்றவளுக்கு கன்னத்தின் ஈரம் புரியப் பதட்டத்தோடு அதைத் துடைத்துக் கொண்டாள். இப்போது எதற்குக் கன்னத்தில் இப்படிக் கண்ணீர் ஊற்றுகிறது… நான் ஏன் அழுகிறேன்…? தன்னையே திட்டியவாறு நின்றிருந்தவளை இப்போது மென் புன்னகையுடன் பார்த்து

“ஐ மிஸ் யு…” என்றதும்தான் தாமதம், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அவள் விசும்பத் தொடங்க, அதற்கு மேல் தூர நிற்கும் சக்தியற்றவனாக எழுந்தவன் ஒரே எட்டில் அவளை நெருங்கி அவளை இழுத்துத் தன் மார்பில் போட்டுக் கொள்ள, மறு கணம் உடும்புப் பிடியாக அவனைத் தன் மெல்லிய கரங்களால் வளைத்துப் பிடித்து இறுக அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்துக் கதறிவிட்டாள் திகழ்வல்லபை.

“சாரி… சாரி… சாரி… சாரி…” எத்தனை சாரி சொன்னாள் என்று அவளுக்கும் தெரியாது, அவனும் கணக்கிடவில்லை. மார்பில் விழுந்தவளைத் தனக்குள் புதைத்துவிடுபவன் போலத் தன் பெரிய கரங்களால் மொத்தமாக அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டவனுக்கும், அவனையும் மீறி ஒரு இரு துளி கண்ணீர் விழிகளில் தொங்கி நின்று பின் விழுந்து அவளுடைய தலையில் கொட்டியது.

கண்ணீருக்கு இத்தனை பெரிய சக்தி இருக்கிறதா என்ன? ஒரு கணத்தில் அனைத்தையும் சரியாக்கிவிட்டதே. தன்னை மறந்து அவளுடைய தலை உச்சியில் அழுத்தமாக உதடுகளைப் பதித்தவன், கரங்களால் அவள் தேகம் எங்கும் வருடிக் கொடுத்து அவளை ஆசுவாசப் படுத்த முயல, அத்தனை நாளும் நெஞ்சை அரித்த வேதனையையும் வலியையும் ஒட்டுமொத்தமாகக் கொட்டி விடுபவள் போல விம்மி வெடித்து விட்டாள் திகழ்வல்லபை.

எத்தனை நேரமாக அழுதாளோ. இப்போது விசும்பலில் உடல் குலுங்கி நிற்க மெதுவாக அவளைத் தன்னிடமிருந்து பிரிக்க முயன்றான் அபராசிதன். அவளோ மறுப்பாக மேலும் அவனிடம் ஒட்டி நிற்க முயல,

“ஷ்… இங்கே பார் வல்லபை…” என்றான் மென்மையாக. அவளுக்கு இன்னும் அவனைப் பார்க்கும் தைரியம் இருக்கவில்லை. எதற்காக அவள் மறுக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவனாக,

“ப்ச்… என்னை நிமிர்ந்து பார்மா…” சென்னவன் அதுவரை அவளை அணைத்திருந்த கரங்களை விடுவித்து, மேலே கொண்டு வந்தவன், ஒற்றைக் கரத்தை அவளுக்கும், தன் மார்புக்கும் இடையே நுழைத்து, கோந்து போல ஒட்டிக் கிடந்த அவள் முகத்தைப் பிரித்துப் பின் இரு கரங்களாலும் அவளுடைய கன்னத்தைத் தாங்கித் தன்னை நோக்கி நிமிர்த்தியவன், தன் விழிகளை அவளிடம் நிலைக்கச் செய்ய, அவளோ சட்டென்று தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

மீண்டும் இரு துளி கண்ணீர் கன்னத்தில் வடிவதைக் கண்டு கோபம் கொண்டவனாகக் குனிந்தவன், இதமாய் தன் உதடுகளால் அந்தக் கண்ணீரைத் துடைத்து எடுக்க, அவன் உதடுகள் தொட்டு விலகியதும் மெதுவாக விழிகளைத் திறந்தாள் திகழ்வல்லபை

இரண்டு பெருவிரல்களாலும் கன்னத்தை மெதுவாக வருடிக் கொடுத்த அபராசிதனின் விழிகள் இப்போது காதலாய் அவளுடைய நீண்ட விழிகளை அள்ளி எடுத்துப் பருக முயன்றன. அந்த விழிகள் சொன்ன செய்தியில் நம்ப முடியாத அதிசயத்தைக் கண்டவளாக மேலும் விழிகளை விரித்திருக்க, இப்போது பற்கள் தெரிய அழகிய புன்னகை ஒன்றைச் சிந்தியவன், சட்டென்று அவளைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டான்.

அவளோ அது கூட உறைக்காது அவனுடைய விழிகளைத்தான் பார்த்துக் கிடந்தாள்.

அவள் ஏதாவது இனிய கனவு காண்கிறாளா என்ன? இதுநாள் வரை இந்தளவு மகிழ்ச்சியாக அவள் இருந்ததில்லையே. இது என்ன மயிர்க்கால்கள் அனைத்தும் சிலிர்த்து எழுந்து நிற்கின்றனவே..? நம்ப முடியாத ஆச்சரியத்தோடு, ஆண்மை பொருந்திய அவனுடைய விழிகளையே பார்த்து நிற்க, தன்னையே இமைக்காது பார்த்து இருக்கும் அந்த நீண்ட கயல் விழிகளில் எச்சில் பட முத்தமிட்டவன், நடந்து சென்று அங்கிருந்த நீளிருக்கையில் அவளை மடியில் வைத்தவாறு அமர்ந்தான் அபராசிதன்.

அவன் அமர்ந்த பின்னும் அவள் தன் பார்வையை விலக்கினாளில்லை.

“என்ன… அப்படிப் பார்க்கிறாய்?” அவன் கேட்க,

“நிஜமாகவே நீங்கள் என்னைத் தேடி வந்து இருக்கிறீர்களா? நான் கனவு ஏதும் காண்கிறேனா…” அவள் கேட்கும் போதே குரல் கமறிப் போனது அவளுக்கு.

“இது கனவு அல்ல என்று உனக்கு நிரூபிக்கவா?” என்றவன், சட்டென்று குனிந்து அவளுடைய உதடுகளைத் தன் உதடுகளால் சிறைப்படுத்தி, இது கனவல்ல நிஜம் என்று அவளுக்குப் புரிய வைக்க, இவளோ விழிகளை மூடி அந்த இன்பத் தண்டனையைச் சுகமாக அனுபவித்து நின்றாள்.

இதற்காக எந்தளவு ஏங்கினாள். கடந்த இரண்டு மாதங்களாக, இந்த முத்தத்திற்காக எந்தளவு தவித்தாள். மீண்டும் கண்களில் கண்ணீர் குளம் கட்டி வழிய, வழிந்த கண்ணீரோ, தன் எஜமாணியம்மாவின் உதடுகளைச் சிறைபிடித்து வைத்திருக்கும் அந்த ஆண்மகனின் வீர உதடுகளை விரட்டிவிடும் நோக்கில் உருண்டு வந்து அவனுடைய உதடுகளுக்குள் புகுந்து அவனை விலக்க முயல, அதுவரை அவளுடைய உதடுகளில் அறுசுவை உண்டி உண்டுகொண்டிருந்தவன், சற்று உப்புக் கரிக்க, மெதுவாக அவளுடைய உதடுகளுக்கு விடுதலை கொடுத்து அவள் முகம் நோக்கினான்.

கலங்கிய விழிகளைக் கண்டு, வருந்திவனாக, அவளுடைய கன்னத்தைத் துடைத்து விட்டவன், தன் முத்தத்தில் சிவந்து நடுங்கிய உதடுகளைப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவாறு, ஆசையும் ஏக்கமுமாக அவளைப் பார்த்தான்.

அவனும் அவளைப் பிரிந்த இந்த இரண்டு மாதத்தில், கொஞ்சம் கூட நிம்மதியாக இருக்க வில்லையே. இராப்பகல் என்றில்லாமல் சதா அவளுடைய நினைவில்தானே தவித்திருந்தான். அந்தத் தவிப்பை விழிகளில் தேக்கி அவளைப் பார்க்க, அந்த ஆண்மை நிறைந்த விழிகளில் தெரிந்த தவிப்பையும், காதலையும் அதன் கூடத் தெரிந்த காமத்தையும் கண்டு சிலிர்த்துப் போனாள்.

அப்படியென்றால், அவள் எந்தளவுக்கு அவனின்றி உருகித் துடித்தாளோ, அந்தளவு அவனும் உருகித் துடித்திருக்கிறான் என்றுதானே அர்த்தம்.

தன்னை மறந்து “அபரன்…” என்று அவள் அழைக்க, தன் பெயரைச் சுருக்கிச் சொன்ன அந்த உதடுகளுக்குத் திரும்பவும் மென்மையாக முத்தப் பரிசைக் கொடுத்து விலகியவன், பெரும் தவிப்பில் சிவந்து கிடந்த அவளுடைய கன்னத்தைப் புறங்கையால் வருடிக் கொடுத்தவாறே,

“நானும் உன்னிடம் மன்னிப்புக் கேட்கத்தான் வந்தேன் வல்லபை. உன்னை வார்த்தைகளால் நோகடிக்கச் செய்திருக்கிறேன். உன்னை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியும் இருக்கிறேன்… அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் நிதானம் இழந்து…” என்றவன் முடிக்க முடியாமல் திணற, சட்டென்று அவனுடைய வாயில் தன் பிஞ்சுக் கரத்தை வைத்து மறுப்பாகத் தலையசைத்தாள் திகழ்வல்லபை.

“தயவு செய்து எந்த மன்னிப்பும் கேட்காதீர்கள்… தவறு என்னுடையதுதான்… நான் வஞ்சியல்ல, வல்லபை என்பதை உங்களுக்கு முன்னமே சொல்லியிருக்க வேண்டும். ஆனால் தெரிந்தால் ஆராவைப் பிரித்து எடுத்துச் சென்று விடுவீர்களோ என்கிற பயத்தில்தான், உங்களிடம் சொல்லவில்லை…” அவள் சொல்லி முடிக்க முதல், தன் சுட்டுவிரலை அவளுடைய உதட்டில் பதித்து அவள் பேச்சைத் தடுத்தான் அபராசிதன்.

“நீ சொல்லாதது நல்லது வல்லபை…” என்றான் அவன் மென்மையாய். அதைக் கேட்டு விழிகள் விரித்துப் பார்க்க,

“ஒரு வேளை தெரிந்திருந்தால், நீ எனக்குச் சொந்தமாகக் கிடைத்திருக்க மாட்டாய். ஆராவை மட்டும் என் கூட அழைத்துச் சென்றிருப்பேன்…” என்றவன், அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்தான்.

“நீ திகழ்வஞ்சி அல்ல என்று நான் கண்டு கொண்ட அந்தத் தருணம்…” என்றவன், அன்று அவளுக்கும் தனக்கும் நடந்த இன்பப்போரை நினைத்துப் பார்த்தான் போல. முகம் மலர்ந்து விரிந்தது. அதை வெளிக்காட்டும் முகமாக, அவளுடைய கன்னத்தை மெதுவாகக் கிள்ளி விடுவித்து,

“உனக்கு ஒரு உண்மை சொல்லவா?” என்றான் கிசுகிசுப்பாக. அவளோ அவனுடைய அந்தச் செயலில் உடல் சிலிர்க்க உள்ளம் உருக, என்ன என்பது போலப் பார்க்க, கிள்ளிய அவளுடைய கன்னத்தை மென்மையாக வருடிக் கொடுத்தவாறு,

“நான் உன்னை முதல் முதலாகச் சந்தித்தது நினைவில் இருக்கா?” என்றான் அவளிடமிருந்து தன் விழிகளை விலக்காமல்.

எப்படி மறப்பாள் அந்த நாளை? அன்றுதானே வாழ்வில் முதன் முறையாகப் பாதுகாப்பு என்றால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட திருநாள்..

அந்த நினைவில், ஆம் என்று தலையை அசைக்க,

“அன்று நீ கடைக்குள் நுழைய முதல் நான் வெளியேதான் நின்றிருந்தேன். திடீர் என்று இதமான ஒரு வாசனை என் நாசியைத் துளைத்துச் சென்றது. கவரப்பட்டுத் திரும்பிப் பார்த்தேன். நீ மாஸ்க் அணிந்தவாறு அந்தக் கடைக்குள் போய்க்கொண்டிருந்தாய். என்னைப் பார்த்து புன்னகைத்துக் காலை வணக்கம் சொன்னாய். அப்போது எனக்குத் தெரிந்தது உன் விழிகள் மட்டும்தான். அந்த விழிகள்… அவை…” என்றவன் அவளுடைய விழிகளை அள்ளி எடுத்து குடிப்பது போலப் பார்த்தான்.

“அந்த விழிகள், என்னை உன் பின்னாடியே வரவழைத்து விட்டன. ஆனால் அங்கே என் கண்முன்னால் ஒருத்தன் உன்னை முத்தமிட முயன்றுகொண்டிருந்தான். வாழ்க்கையில் முதன் முறையாகப் பொறாமை என்றால் என்ன என்பதைச் சுவைத்தேன் தெரியுமா…” அவன் சொல்ல நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் திகழ்வல்லபை.

“அன்றேவா?” நம்ப முடியாமல் பார்க்க, மெல்லியதாகச் சிரித்தான் அபராசிதன்.

“ம்… அன்றே நீ எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாய். ஆனால் நீதான் திகழ்வஞ்சியாக இருப்பாய் என்று சத்தியமாக நினைத்திருக்க வில்லை. உன்னைத் திகழ்வஞ்சியாகப் பார்த்த போது நான் பட்ட ஏமாற்றம்…! வல்லபை..! அதை எப்படி வார்த்தைகளால் உனக்குச் சொல்வது என்று தெரியவில்லை… சொல்லப்போனால் என் அண்ணா மீதே எனக்கு ஆத்திரம் வந்தது. எனக்குச் சொந்தமான ஒன்றை யாரோ உரிமை கொண்டாடியது போலக் கோபம் வந்தது…” தவிப்புடன் சொன்னவன், பின் முகம் கசங்க நின்றான்.

அன்று கிறிஸ்டீன் உன்னைக் கத்தியால் குத்தினானே… அந்த நாள்… உனக்கு எப்படி விபரிப்பது என்று தெரியவில்லை. உள்ளே… என் ஆன்மாவுக்குள் எதுவோ நொறுங்கிப் போனது போல இருந்தது தெரியுமா?” என்றவன் அவள் கன்னத்தை வருடிய கரத்தைத் தூக்கிக் காட்டி, இந்தக் கைகள் நடுங்கின என்று சொன்னால் நீ நம்புவாயா? நான் ஒரு வைத்தியன். உன்னைப் போல நிறைய நோயாளர்களைப் பார்த்தவன். எவருக்கும் இதுவரை இந்தளவு பதட்டப்பட்டதில்லை. அதுவும் உனக்கு சிகிச்சை கொடுத்த வைத்தியர் வந்து, உனக்கு ஒன்றுமில்ல, கத்தி இதயத்தைத் தொடவில்லை என்று சொல்லும் வரைக்கும், எனக்குள்ளே பெரும் தவிப்பு. அது ஏன் என்று கேட்டால் சத்தியமாக என்னிடம் பதிலில்லை…” என்றவன் அந்தப் பழைய நினைவில் முகம் இறுக நின்றான். இவளோ அவன் கூறுவதை நம்ப முடியாதவளாக வியந்து போய் கேட்டிருந்தாள்.

அதற்குப் பிறகு உன்னை இங்கேயே விட்டுச் செல்ல முடியும் போல எனக்குத் தோன்றவில்லை. முதலில் ஆராவை அழைத்துச் செல்வதாக இருந்தால் நீயும் வருவதாகச் சொன்ன போது, எனக்கு கோபம்தான் வந்தது. அண்ணாவின் சொத்துக்காகத்தான் ஆராவோடு ஒட்டி வருகிறாய் என்று நினைத்தேன். ஆனால், பிறகு உனக்கு அந்த விபத்து நடந்த பிறகு, நீயாகவே ஆராவை அழைத்துப் போ என்று சொன்னபோது கூட, உன்னை என்னால் விட்டுப் போக முடியவில்லை. இத்தனைக்கும் உன் மீது எனக்கு அதீத வெறுப்பு, கோபம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதையும் தாண்டி, உனக்கு அந்த கிறிஸ்டீனாலோ, இல்லை அவன் நண்பர்களாலோ ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சித்தான் என் கூட அழைத்து வந்தேன் என்பதை இந்த இரண்டு மாதங்களின் தனிமை எனக்கு உணர்த்தியது…” என்றவன் ஒரு முறை அவளை இறுக அணைத்து விடுவித்தான்.

“அத்தான் ஆராவுக்காக உன்னைத் திருமணம் செய்யச் சொன்னபோது, முதலில் கோபம் வந்தது நிஜம். ஆனால் பிடித்திருந்தது. ஏதோ வசியம் போட்டு அண்ணாவை மயக்கியது போல என்னையும் மயக்குகிறாய் என்று நினைத்து விலகியிருக்கத்தான் முயன்றேன். ஆனால், என்னால் முடியவில்லை. மீள முடியாத புதை குழிக்குள் விழுந்தவன் போல உன்னுடைய அழகில், குணத்தில், உன்னுடைய அருகாமையில், விழுந்து போனேன்… எவ்வளவுதான் உன்னை விட்டுத் தள்ளிப் போக முயன்றும்… என்னால்… அது முடியவேயில்லை. உன் வாசனையை நுகர்ந்தாலே போதும், பித்தம் தலைக்கேறும். இதற்காகவே என்னை வெறுத்திருக்கிறேன் தெரியுமா?

திருமணம் முடிந்த பின்தான் சித்திரவதையே எனக்கு ஆரம்பித்தது. உன்னைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தொட முடியாமல் நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே… அதை எப்படி வார்த்தைகளால் சொல்வேன். காட்… ஆனாலும் சிரமப்பட்டு அமலனை மனதில் இருத்தித் தள்ளி இருக்கத்தான் முயன்றேன்.

ஆனால் மாநாடு போயிருந்த போது, உன்னைப் பார்க்காமல் சுத்தமாக எனக்கு முடிந்திருக்க வில்லை. உன்னைத் தொடாவிட்டாலும், நீ என் கூட இருப்பதே பெரும் திருப்தியாக இருக்கும். அங்கே அது இல்லாமல்… வல்லபை.. எனக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. திருமணம் முடித்த பின்பு நான் தாமதமாக வீட்டிற்கு வருவேன். அப்போது நீ உறங்கிப்போயிருப்பாய். நான் படுக்கையில் விழும் போது உன் முகத்தைப் பார்த்தவாறுதான் உறங்கிப் போவேன். எழும் போதும் உன் முக தரிசனம் எனக்குக் கிடைக்கும். அப்போது பெரும் நிறைவாக இருக்கும்… இதுதான் சரி என்று தோன்றும். இத்தனை வருட காலங்களாக நான் இழந்த ஏதோ ஒன்று கண்ணுக்கு முன்னாடி இருப்பது போல அந்தளவு திருப்தியாக இருக்கும்… நான்… என்ன சொல்கிறேன் என்று உனக்குப் புரிகிறதுதானே வல்லபை…” என்று அவன் அவளிடமே கேட்க, அவளோ அவன் சொல்வதை வியப்பு மேலிடக் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

“நீ அண்ணாவின் காதலியாக இருந்தது எல்லாம் கடந்தகாலம். நீ எப்படிப்பட்டவளாக இருந்தாலும், இப்போது நீ பழைய திகழ்வஞ்சியில்லை என்று நம்பினேன். ஆராவுக்காக நீ உன்னையே மாற்றிக்கொண்ட புதிய திகழ்வஞ்சி என்று நினைத்தேன். உன்னுடைய பழைய காலத்தை மறந்து உன் கூட வாழலாம் என்கிற மன நிலையில்தான் திரும்பி வந்தேன். அன்று இரவு என் கைக்குள் வந்து விழுந்தாய் பார்…” என்றவன் அன்றைய நினைவில் சற்று நேரம் அமைதியாக இருந்தான். அந்த நினைவு அந்தளவு திருப்தியைக் கொடுத்தது போல, மெல்லிய புன்னகை ஒன்றும் அவன் உதடுகளில் மலர்ந்தது.

“அன்று நீ எந்த ஆணுடையதும் கைபடாத மலர் என்பதைக் கண்டு கொண்ட நொடி…” என்றவன் விழிகளை மூடி அந்தத் தருணத்தை உணர்ந்து ரசித்தான் போல, அவனுடைய முகத்தில் பெருமை, பூரிப்பு, திருப்தி, கர்வம் என்று பல உணர்வுகள் வந்து மாயமாகிப் போகப் பின் தன் விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தான்.

அந்த நொடி, ஐ ஃபீல் ஐ ஆம் பிளஸ்ட்… நீ எனக்கு மட்டுமே சொந்தம் என்கிற ஆத்ம திருப்தி. நீ என் அண்ணாவின் காதலியல்ல என்கிற மகிழ்ச்சி. இன்னும் என்ன என்னவோ… ஆனால் அனைத்தும் முடிந்து சுகம் கலைந்த பின்புதான், எந்தளவுக்கு நீ என்னை முட்டாளாக்கியிருக்கிறாய் என்பதே புரிந்தது. என்னை ஏமாற்றுவது அத்தனை சுலபமாகிப் போயிற்றா என்கிற ஆத்திரம். மறுநாள் நீ விழித்த பின்பும் நீ யார் என்று கேட்டபோதாவது உண்மையைச் சொல்லியிருக்கலாம். அப்போது கூட என்னை முட்டாள் என்று நினைத்துத் திரும்பவும் அந்தப் பல்லவியைப் பாட, என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உனக்கு அறிமுகமான ஆண் நான் மட்டும்தான் என்கிற பெருமையையும் தாண்டி, நீ என்னை ஏமாற்றினாய் என்பதுதான் என்னைப் பெரிதாகத் தாக்கியது. ஆனால் அப்போது உன் மீது கோபம் இருந்ததே தவிர, உன்னை வீட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை…” அவன் சொல்ல, அவளுக்குப் புரிந்து போனது.

அவன் அத்தனை கோபப்பட்டு அவளை வெளியே போ என்றதற்குக் காரணம், விஜய ராகவன். அதையே ஊர்ஜிதப்படுத்தும் வகையில்,

“என் கோபத்தின் எல்லையைத் தாண்ட வைத்தது, என் அத்தான்தான் உன் அப்பா என்கிற காரணம். அதை அறிந்த போது என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை…” என்றவன் அவளை வெளியே போ என்று சொன்ன அந்த நொடியை வெறுத்தவனாக முகம் கறுக்க அமர்ந்திருந்தான்.

ஆனால் அவனுடைய கரங்களோ அவளுடைய உடலைத் தழுவியும் வருடியும் கொடுக்க, அவளோ அவன் வலியை உணர்ந்து கொண்டவளாக அவன் முகம் நோக்கி எழுந்து அவனுடைய நெற்றியில் தன் உதடுகளைப் பொருத்தி எடுக்க, முகம் கசங்க அவளைப் பார்த்து,

“சாரிமா… நான் என் கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்பாட்டோடு வைத்திருக்க வேண்டும். எது நடந்திருந்தாலும், உன்னை வெளியே போ என்று சொல்லியிருக்கக் கூடாது… இத்தனைக்கும் நீ திகழ்வஞ்சியல்ல என்று தெரிந்த பின்னும், நான் நிதானித்திருக்க வேண்டும்” என்று பெரும் வேதனையுடன் சொல்ல, திகழ்வல்லபையோ, அவனுடைய உதடுகளைத் தன் பெருவிரலால் வருடிக் கொடுத்து,

“இட்ஸ் ஓக்கே அபரன்… உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை… தவறு செய்தவள் நான்தான். நீங்கள் இத்தனை வருந்துவதற்கு அவசியமே இல்லை. வஞ்சியின் பெயரால் ஆள்மாறாட்டம் செய்தது மிகப் பெரும் குற்றம். ஆனால் எனக்கும் வேறு வழி தெரியவில்லை. வஞ்சியாக இருந்தால் மட்டும்தான் ஆரா என் பிள்ளையாக என் கூட இருப்பான் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் நான் வஞ்சியாக மாறினேன்…” அவள் சொல்ல, உடனே குறுக்கே பேசினான் அபராசிதன்.

“நீ விளக்கம் சொல்ல வேண்டியதில்லை வல்லபை. என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. கூடப்பிறந்தவளுக்குக் கொடுத்த சத்தியத்திற்காக, அவளுடைய குழந்தைக்காக, உன் சுக துக்கங்களைத் துறந்து, அவனுக்கு உண்மையான தாயாக மாறினாய் பார்… உன் குணம் யாருக்கும் வராது வல்லபை. இதுவே இன்னொருத்தராக இருந்திருந்தால் குழந்தையை எங்காவது அநாதை மடத்தில் எடுத்துச் சென்று விட்டிருப்பார்கள். ஆனால் நீ…” என்றவன் குனிந்து அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு, “நீ தேவதை வல்லபை…” என்றான் மனதார உணர்ந்து,

“அத்தான் விஷயத்தில் கூட உன் தவறு எதுவும் இல்லை. பெரியவர்கள் செய்த தவறுக்கு உன்னைத் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம். அக்கா இதை என்னிடம் சொன்னபோதுதான், உன் பக்கத்து வலியையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. யார் மீதோ இருக்கும் கோபத்தை உன்மீது காட்டி என்ன பயன்? அந்த நேரத்தில் இரண்டு அதிர்ச்சிகளும் ஒன்றாக என்னைத் தாக்கியபோது கொஞ்சம் என் சுயம் தவறிவிட்டேன். அதற்காக உன்னை வீட்டைவிட்டுப் போகச் சொல்லியிருக்கக் கூடாது. சாரிமா… அதற்காக என்னை மன்னித்து விடு…”

அவன் சொல்ல, சட்டென்று எழுந்தவள், தானாகவே அவனுயைட உதடுகளில் தன் உதடுகளைப் பதிக்க, ஆவேசமானான் அபராசிதன். அதுவரையிருந்த அழுத்தம், வலி, வேதனை, கசப்பு அனைத்தும் ஒட்டுமொத்தமாகக் கரைந்து அழிந்து போக, இருவருமே தம்மை மறந்து அணைத்தவாறு ஒருவரில் ஒருவர் தொலைத்ததைத் தேடும் பெறும் முயற்சியில் இறக்கியிருந்தனர்.

நீண்ட நேர முத்தத்தின் பின் மெதுவாக அவளை விடுவிக்க, இப்போது வெட்கத்தில் அவளுடைய முகம் சிவந்துவிட்டிருந்தது. அதை ஆசையோடு பார்த்தவன்,

“ரியலி ஐ மிஸ் யு வல்லபை… உன்னை, அந்த இரவை, உன் முத்தத்தை… என் அணைப்பில் குழைந்து உருகிய அந்த உடலை… ஐ மிஸ் தெம் ஆல்… இந்த இரண்டு மாதங்களாக நீ இல்லாமல்… காட்… ஐ ஆம் இன் ஹெல்… நரகம் என்றால் எப்படி இருக்கும் என்று இத்தனை நாட்களிலில் நன்றாகவே உணர்ந்து கொண்டேன். எனக்குப் படுக்கையில் தூங்கவே பிடிக்கவில்லை தெரியுமா… இந்த இரண்டு மாதங்களும் நீ படுக்கையில் இல்லாமல்… உன் வாசனையை நுகராமல், உன் ஆடையின் சலசலப்பு சத்தம் கேட்காமல்… ஆராவுடன் பொங்கிச் சிரித்துக் குதுகலிக்கும் உன் பூமுகம் பாராமல்… எனக்கு… பைத்தியமே பிடித்துவிடும் போலானது தெரியுமா” சொன்னவன், அந்த நினைவில் முகம் கசங்கி நிற்க, அவனைத் தன்னோடு இறுக அணைத்து அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள் அவன் வல்லபை.

அதை விழிகளை மூடி அனுபவித்தவன், பின் விழிகளைத் திறந்து தன் நெற்றியில் உதடுகளைப் பதித்திருந்தவளின் கன்னங்களைப் பற்றித் தன் உதடுகள் நோக்கி இழுத்து அவளுடைய நாடியில் தொடங்கி உதடுகளில் நிறுத்தி, நாசியில் உரசிப் பின் அவளுடைய நெற்றியில் அழுந்த முத்தமிட்டுப் பின் அவளைத் தன் கைவளைவில் இழுத்து வைத்துக் கொண்டு, எலும்புகள் நொறுங்கும் வகையில் அணைக்க, அந்த வலியை சுகமாக அனுபவித்துக் கிறங்கி நின்றவள், அவனை நிமிர்ந்து பார்த்து,

“இத்தனை தவித்தவர், என்னைத் தேடிவர இரண்டு மாதம் சென்றதாக்கும்?” என்றாள் குறையோடு. குனிந்து அவளுடைய மேல் நெற்றியில் உதடுகளைப் பதித்து எடுத்தவன்,

“கொஞ்சம் வீம்புதான். நீ பொய்காரியாகி விட்டாய் என்கிற கோபம். இனி உன்னைப் பார்ப்பதில்லை என்கிற சபதத்தில்தான் இருந்தேன். ஆனால் நாள் போகப் போக, சத்தியமாக என்னால் முடியவில்லை. மருத்துவமனையில் என்னால் ஒரு நிலையில் வேலை பார்க்க முடியவில்லை. முடிந்த வரை என்னை அடக்கத்தான் முயன்றேன். ஏதோ மூச்சடைப்பது போல இருந்தது. விட்டால் நானே எனக்கு சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப் படுவேன் போல ஆனது. கடைசியாக நீ இல்லாமல் முடியாது என்பதை உணர்ந்து வருவதற்குள் இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. சாரிமா… உன் மகன் ஆரா உன்னைத் தேடித் தவித்தானோ இல்லையோ, நான் தவித்தேன் வல்லபை…” அவன் கெஞ்சலும் கொஞ்சலுமாகச் சொல்ல, அழகாய் தன் முத்துப் பற்களைக் காட்டிச் சிரித்தாள் திகழ்வல்லபை.

பின் அவனை நிமிர்ந்து பார்த்து,

“புரிகிறது அபரன்… நானும் இந்த இரண்டு மாதங்களாக… பைத்தியம் போல ஆகிவிட்டேன் தெரியுமா…” அவ்ள சொல்ல வருத்தத்தோடு அவளைப் பார்த்தான் அபராசிதன்.

“இதை நீ சொல்லவேண்டுமா?” என்றவன் அவளை அணைத்துக் காட்டி, உன்னைப் பழைய எடைக்குக் கொண்டு வர, பல மாதங்கள் முயற்சி செய்யவேண்டும் பொலவே…” என்றான் புன்னகையும் குறும்புமாக. அதைக் கேட்டு முகம் சிவந்து அவன் மார்பில் முகம் புதைத்தவள், காதலோடு அவன் கழுத்தைக் கட்டி,

“அபரன்… அன்று என்னை முதன் முறையாக நீங்கள் சந்தித்தபோது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகச் சொன்னீர்களே. அதே போல, அன்று கிறிஸ்டீனிடம் இருந்து என்னைக் காப்பாற்றியபோது, தரையில் கிடந்த என்னை இழுத்து எடுத்தீர்களே. அப்போது உங்கள் மார்பில் சாய்ந்தேனே… அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. ஏன் தெரியுமா? என் வாழ்க்கையில் முதன் முறையாகப் பாதுகாப்பு என்றால் என்ன என்பதை உணர்ந்தேன். சின்ன வயதிலிருந்து நமக்காக யாருமே இருக்கவில்லையா… நீங்கள் அன்று என்னைக் காத்து அணைத்த போது…” என்றவள் அந்த நாளை நினைவு கூர்ந்து ரசித்தாள்.

“அந்த உணர்வை… எப்படி உங்களுக்கு விபரிப்பேன்…” என்றாள் மென் குரலில். பின் வேதனையில் முகம் கசங்க, தன் வாழ்வில் நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னாள் திகழ்வல்லபை.

அதை அவளுடைய தலையை வருடியும், அணைத்தும், தட்டிக் கொடுத்தும் கேட்டுக் கொண்டிருக்க,

“அபரன் வஞ்சி செய்தது தவறுதான். ஆனால் அவளுடைய செயலுக்குப் பின்னால் இருந்தது ஏக்கம் மட்டும்தான். வஞ்சிக்கு அப்பா என்றால் மிகவும் பிடிக்கும். திடீர் என்று அவர் வராது போனதும் உடைந்து போனது அவள்தான். அம்மா வேறு எப்போதும் அப்பாவைப் பற்றித் தப்பாகவே பேசுவார்களா நமக்கு அவர் மீது வெறுப்பு இருந்தாலும் கூட, தந்தை பாசம் கிடைக்காமல் நிறையவே உடைந்து போனோம். வஞ்சி அதை உங்கள் அண்ணாவிடம் தேடியிருக்கிறாள் போல. அதனால்தான் அத்தனை வயது வித்தியாசம் இருந்தும் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவர் பின்னே சுற்றியிருக்கிறாள். ஒப்புக் கொள்கிறேன், அவள் உங்கள் அண்ணாவைப் பயன்படுத்திக் கொண்டாள்தான். ஆனால், அதையும் தாண்டி அவளுக்குள் இருந்த அந்தக் குழந்தைத்தனமான ஏக்கமும் அவள் தவறு செய்யக் காரணமாயிற்று…” என்றாள் தன் சகோதரிக்கு ஆதரவாக. அதைக் கேட்டு சிரித்தவன்,

“புரிகிறது வல்லபை… இது ஒரு விதமான உளவியல் சார்ந்த பிரச்சனை… என்னால் புரிந்து கொள்ள முடிகிறது… உன் சகோதரிக்கு அமலன் பொருளாதார, அறிவு மற்றும் உடல் சார்ந்த வழியில் பாதுகாப்பானவனாக இருந்திருக்கிறான். அதனால்தான் அமலனைத் தேர்ந்து எடுத்திருக்கிறாள்” சொன்னவனை நன்றியோடு பார்த்தவள்,

“அப்போதுதான் நீங்கள் வந்தீர்கள்… அதுவும் எனக்கு ஒரு அரணாக… நடுக்கடலில் தனியாகத் தத்தளித்துக் கிடந்த எனக்குத் திடீர் என்று ஒரு துடுப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் நீங்கள் எனக்குக் கிடைத்தீர்கள். ஆரம்பத்தில் உங்களோடு வரும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. அன்று நீங்கள் வர முதல் கிறிஸ்டீன் என்னை அழைத்தான். அவன் அழைத்ததும் பயந்து போனேன். எனக்கும், ஆராவுக்கும் பாதுகாப்பான இடம் தேவையாக இருந்தது. அப்போதைக்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு நீங்கள்தான். அதற்குப் பிறகு உங்களை நான் திருமணம் முடிக்கச் சம்மதித்ததற்குப் பின்னால் இருந்த காரணம் ஆராதான். ஒரு வேளை ஆரா என் மகனில்லை என்பது உங்களுக்குத் தெரிய வந்தால், உங்களின் மனைவியாக இருக்கும் பட்சத்தில், ஆராவை என்னிடமிருந்து பிரிக்க முடியாது என்று நினைத்தேன்.” என்றவள், கடைசியாக அவள் எதற்காகப் பயந்தாளோ அதுதானே நடந்தது என்று நினைத்து வேதனைப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள்.

“ஹே… சாரி… மா…” அவன் சொல்ல, இப்போது வலி மறைந்து சிரித்தவள், தோள்களை குலுக்கி பளிச்சென்று சிரித்தவள்,

“எது எப்படியாக இருந்தாலும், நான் நினைத்ததுதானே நடந்திருக்கிறது. திரும்ப ஆரா எனக்குக் கிடைத்து விட்டானே.” என்றவள் அவன் மார்பில் சாய்ந்து,

“நீங்கள் மாநாடு போனீர்களே. அப்போதுதான் எந்தளவுக்கு நானும் உங்களை விரும்புகிறேன் என்பதே எனக்கும் புரிந்தது…” என்று அவன் சொல்ல அபராசிதனின் விழிகள் அதைக் கேட்டு மின்னின.

“வல்லபை…! அப்படியென்றால்.. நீயும் என்னை…?” அவன் முடிக்க முடியாமல் திணற,

“அன்று இரவு… நானாகத்தான் என்னை உங்களிடம் கொடுத்தேன். ஏன் என்றால்… நானும் உங்களை விரும்புகிறேன்… முழு மனதாக, உளமார, உயிர் வரை உருக நானும் உங்களை காதலிக்கிறேன்…” என்று அவள் முடிக்கவில்லை அபராசிதனின் கடிய உதடுகள் ஆவேசத்தோடு திகழ்வல்லபையின் அழகிய உதடுகளை அள்ளி எடுத்துக் கொண்டன.

அவளும் மறுக்கவில்லை, அவன் எடுக்க இவள் தயக்கமின்றிக் கொடுக்க, அதுவரை காதல் பித்தில் திளைத்திருந்தவர்கள், காமத்தின் கதவைத் தட்டத் தொடங்கிய நேரம் அபராசிதனின் கைப்பேசி அடித்தது.

அடச் சே, பூஜைவேளை கரடியாக யார் இந்த நேரம். பற்களைக் கடித்தவன், அந்தக் கைப்பேசியின் அழைப்பை விட, முத்த சுகம் முக்கியமாகப் படத் திரும்பவும் அவளுடைய உதடுகளை நோக்கிப் பயணித்த நேரம், திரும்ப அவன் கைப்பேசி அடித்தது.

வாய்க்குள் அழைக்கும் நபரைத் திட்டியவாறு எடுத்துப் பார்க்க, அழைத்திருந்தது விஜயராகவன். உடனே கைப்பேசிய உயிர்ப்பித்து,

“அத்தான்…” என்றான் கோபமும் மதிப்புமாக.

“பேசி முடிச்சாச்சா… நாங்கள் இனி வரலாமா…” கேட்ட விஜயராகவனின் குரலில் மெல்லிய பதட்டம் தொற்றியிருக்க, அந்தப் பயத்திற்கான காரணத்தைப் புரிந்து கொண்டான் அபராசிதன்.

ஆராவை வைத்துக் கொண்டு அவர்கள் நிச்சயமாகக் குளிரில் நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. எங்காவது புது வருடத்தை வரவேற்க வேடிக்கை விளையாட்டுக்கள் என்று விழாக்கள் நடக்கும். அங்கே குழந்தையை விளையாட விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த உறுதியில்,

“இன்னும் முடியவில்லை அத்தான்… பிளீஸ்… எங்காவது ஒரு கடையில் போய் நேரத்தைப் போக்காட்டுங்கள்… இன்னும் ஒரு மணி நேரத்திற்குத் தொந்தரவு செய்யாதீர்கள்…” என்று அவன் கைப்பேசியை அணைக்க, விஜயராகவனோ கோபமாகத் தன் கைப்பேசியைப் பார்த்தார்.

ஆராவமுதனைத் தன் கரங்களில் ஏந்தியிருந்த ஈஷ்வரி,

“என்னவாம் ராகவ்… அங்கே எல்லாம்… நன்றாகத்தானே…?” மெல்லிய பதட்டத்தோடு கேட்க, அதைக் கண்டு அழகாய் புன்னகைத்தார் விஜயராகவன்.

“ம்… எங்காவது பக்கத்தில் விடுதி இருக்கிறதா பார்… இன்று இரவு அங்கே தங்கலாம்…”

“ஏன்? எதற்கு?” சகோதரியாகப் பதற, கிண்டலாகப் புன்னகை ஒன்றைச் சிந்திய விஜயராகவன்,

“வேறு எதற்கு? எனக்கு பேத்தியையும், உனக்கு மருமகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றால், அவர்களுக்குத் தனிமை கொடுக்க வேண்டும் இல்லையா…” அவர் கிண்டலாகச் சொல்ல, ஈஷ்வரியின் முகம் மலர்ந்து சிரித்தது.

“நிஜமாகவே எல்லாம் சரியாகிவிட்டதா…” மலர்ச்சியுடன் கேட்க.

“அபராசிதனைப் பற்றி என்ன நினைத்தாய்? அவன் நான் வளர்த்த பிள்ளையாக்கும்…” மார்பைத் தட்டிக்கொடுத்தவர், “அவர்களுக்கு பேஏஏஏச நிறைய இருக்கும். குறுக்கே நாம் எதற்கு… அது தான் இன்று இரவு எங்காவது விடுதியில் தங்கி விட்டுக் காலை வரலாம் வா…” என்றுவிட்டுக் கைப்பேசியில் அபராசிதனுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, கைப்பேசியில் விடுதி எங்கே இருக்கிறது என்று ஆராயத் தொடங்க,

“முதலில் ஈவாவுக்கு இந்த நல்ல செய்தியைச் சொல்லிவிடுங்கள். பாவம் கவலையில் இருப்பாள்… ஈவா இருந்ததால்தான் வல்லபை எங்கே இருக்கிறாள் என்று நமக்குத் தெரிந்தது…” என்று ஈஷ்வரி சொல்ல, உடனே ஈவாகை அழைத்துப் பேசத் தொடங்கினார் விஜயராகவன்.

அதே நேரம், இங்கே அடுத்த அடியை வைக்க ஆயத்தமாகியிருந்தான் அபராசிதன்.

அந்த நேரம் கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்திருப்பதற்கான அறிகுறி தெரிய. எரிச்சலோடு எடுத்துப் பார்த்தான். அவனுடைய அத்தான்தான் அனுப்பியிருந்தார்.

திகழ்வல்லபையைத் தன் கைவளைவில் அணைத்துப் பிடித்தவாறு என்ன செய்தி என்று பார்த்தான்.

“இன்று விடுதியில் தங்கிக் கொள்கிறோம். நாளை வருகிறோம். என் மகள் பத்திரம்.” என்கிற செய்தியைக் கண்டதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. தன் நிலை புரிந்து அவர்கள் நாகரிகமாக நடந்து கொள்வது மனத்திற்கு இதத்தைக் கொடுக்க, கைப்பேசியை தேநீர் மேசையில் வைத்தவன், மறு கணம் அவளை ஏந்தியவாறு இருக்கையை விட்டு எழுந்தான்.

இவள் வியந்து பார்க்க,

“உன் படுக்கையறை எது?” என்றான் அவசரமாக.

“ஏன்… எதற்கு?” அவள் திகைக்க,

“இது என்ன கேள்வி? அன்று விட்டதை இன்று தொடரத்தான்?” அவன் அவன் சொல்ல, முகம் வெட்கத்தில் சிவந்தாலும்,

“அப்பா, ஆரா, அம்மா வந்துவிடுவார்கள் அபரன்…” என்றாள் வெட்கம் மாறாமல்.

“ம்கூம்… அவர்கள் வரமாட்டார்கள்…” என்றவன் அவளை ஏந்திச் சென்று அங்கிருந்த கதவைத் திறக்க, அவளுடைய படுக்கையறை அவனை இருகரம் நீட்டி வரவேற்றது.

அவளைப் படுக்கையில் கிட்டத்தட்ட எறிந்தவன், அதே வேகத்தில் அவள் மீது பாய்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது என்று முற்றுப்புள்ளி வைத்த இன்ப வாழ்க்கைக்கு காற்புள்ளி போட்டு புதிதாக ஆரம்பித்து முற்றுப் புள்ளியின்றி தொடர்கதையாக்கி, கடைசியில் சற்று இளைப்பாறும் நோக்கில், அவளை இழுத்துத் தன் கைவளைவில் வைத்து அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு,

“ஹப்பி நியூ இயர் மை சோல்…” என்றான் காதல் வழிந்து ஓட. அவனுடைய புதுவருட வாழ்த்தைக் கேட்டு மகிழ்ந்து தித்தித்தவள்,

“ஹப்பி நியு இயர் மை லைஃப்…” என்றாள் அவனுடைய தாடையில் முத்தமிட்டவாறு.

திரும்ப அழகிய முத்தத்தின் சங்கமம்.

“வல்லபை…” என்றான் கிசுகிசுப்பாக.

“ம்…”

“நாம் நம் வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கலாமா?” என்றான் அவளை ஆவலாகப் பார்த்தவாறு.

“ஏன்… இந்த வாழ்க்கைக்கு என்ன?” கண்களில் காதல் கசிந்துருக அவனைப் பார்த்தவாறே கேட்க,

“எனக்கு இந்த மாசற்றத் திகழ்வல்லபைதான் வேண்டும். அந்தத் திகழ்வஞ்சி வேண்டாம். அவளுடைய அதிகாரத்தை இங்கேயே இந்த இடத்திலேயே முடித்துவிடலாம்.

திரும்பவும் திருமணம் செய்யலாம். ஆரா இந்த வல்லபையின் மகனாக இருக்கட்டும். என் மகனாக வாழட்டும். அவனுக்கு நிறையத் தங்கை தம்பிகளைப் பெற்றுக் கொடுக்கலாம். புதிதாக அழகான நிறைவான வாழ்க்கையை வாழலாம். நீ இழந்த அனைத்தையும் அள்ளிக் கொடுக்கிறேன்… திகட்டத் திகட்டக் கொடுக்கிறேன்… உனக்காக வாழ்கிறேன். விதியின் சதியில் தொலைந்த உன்னை மீட்டெடுத்து வாழ்கிறேன்… என்ன சொல்கிறாய்…?” அவன் கேட்க, இப்போது எழுந்து அவன் மார்பில் முழுதாகச் சரிந்து அவனை இறுக அணைத்து அவனுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து

“எப்போது நம் திருமணம்?” என்றாள் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில்.

“நாளைக்கே… விடிந்ததும்…” என்றவன், விஜயராகவனையும், ஈஷ்வரியையும், ஆராவையும் தற்காலிகமாக மறந்துவிட்டு அவளை அள்ளி எடுத்து,

“என் ஊனும் நீ… உயிரும் நீ… என் சகலமும் நீ…” என்றவாறு அவளை வாரி அணைத்துத் தன்னுள் புதைத்து விட்டத்தைத் தொடர, அவளோ, சுகமாக அவனுக்குள் அடங்கி மதிமயங்கி அவன் தேடலுக்கு வழிவிட்டுக் கொடுத்து இன்புற, அவனோ கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பக்தனாய் அவளுள் மூழ்கித் தொலைந்து போனான்.

காதல் காட்டாற்று வெள்ளமாய் அவர்கள் இருவரையுமே அணைத்துக்கொள்ள, சுகமாய் நொடிகள் நகரத் தொடங்கின.

 

முற்றும்.

 

 

What’s your Reaction?
+1
83
+1
18
+1
12
+1
2
+1
1
+1
0
Vijayamalar

View Comments

Recent Posts

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 8/9

(8)   மிளிர்ம்ருதையும், விக்னேஷ்வரனும் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. இருவரும் பல்வேறு பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் சிக்கியிருந்ததால்,…

1 day ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 6/7

(6)   சூரிய வெளிச்சம் அந்த அறைக்குள் நுழைந்து, விழி மூடிக் கிடந்தவளின் காயப்பட்ட உடலின் மீது சற்றுக் கடுமையாகத்…

3 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 39/40

(39) இரண்டு மாதங்களுக்குப் பிறகு, “ஷ்... விக்டோரியா... டோன்ட் க்ரை... மை லிட்டில் பேபி பம்கின்...” என்று கீழே விழுந்து…

4 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 5

(5)   விழிகளை மூடியவாறு இருந்தவள் அதே கனவு கலையாதவளாகத் தன் விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன்தான் வந்துகொண்டிருந்தான். அந்த…

5 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 38

(38) ஆடிப்போனாள் திகழ்வஞ்சி. ஓடிச்சென்று அவனிடமிருந்து பறிக்கவும் முடியாமல், அவன் அதைப் பார்த்துவிடக் கூடாதே என்கிற நடுக்கத்தோடு முகம் வெளிற…

6 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 4

(4)   எல்லா நாட்களும் ஒரே நாள்தான். ஆனால் திருமண நாள் என்பது… அது ஒவ்வொரு இளம் பெண்களின் வாழ்விலும்…

1 week ago