Categories: Ongoing Novel

தகிக்கும் தீயே குளிர்காயவா 19/20

(19)

 

எப்போதும் இப்படி அதிர்ச்சியில் செயலற்று அவன் இருந்ததில்லை. வாழ்வின் முதன் முதலாக, அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது புரியாமல் மலங்க மலங்க விழித்தவாறு நின்றது, சொற்ப நிமிடங்களே. அடுத்துச் செய்யவேண்டியது நினைவுக்கு வரத் தன் தலையைக் குலுக்கி, எதிலிருந்தோ தன்னை மீட்டவனாக,

 

“நோ… நோ… நோ… அர்ப்பணா… ப்ளீஸ்… டோன்ட் டூ திஸ் டு மி…” என்று முணுமுணுத்தவாறு, அது வரை அவளின் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையைக் கழற்றித் தூரப் போட்டான். அவள் அணிந்திருந்த ஜாக்கட்டை யோசிக்காமல் பின்புறமாகப் பிய்த்து இழுத்தான்.

 

தன் காதை, அவளுடைய மார்பிலும், மூக்கிலும் பதித்துப் பார்த்தான். எந்த சலனமும் இல்லை.

 

“ப்ளீஸ்… ப்ளீஸ்… வேக்கப்… வேக்கப் டாமிட்….” என்று தன்னை மறந்து கத்தியவன், அவளுடைய தலையைப் பின்புறமாகச் சரித்து வைத்து, இப்போதும் அவளிடமிருந்து ஏதாவது காற்று வருகிறதா என்று கவனித்துப் பார்த்தான். மெல்லிய சலனம்கூட இல்லை. மேலும் பதற,

 

தன் இடக்கரத்தின் மீது வலக்கரத்தை வைத்துப் பிணைத்து, சிவார்ப்பணாவின் மார்புக் குழியின் மையத்தில் உள்ளங்கை குதியை வைத்து, இரண்டு அங்குல ஆழத்தில் மேலும் கீழுமாக அதுவும் வேகமாக அழுத்தத் தொடங்கினான். பின் அவளுடைய மூக்கைப் பொத்தி, வாயோடு வாய் வைத்து தன் உடல் பொருள் ஆவி, அனைத்தையும் ஒன்று கூட்டி மூச்சாக அவளுக்குச் செலுத்த முயன்றான். அவள் துயில் கலையவேயில்லை

 

மீண்டும் மார்பை அழுத்தத் தொடங்கியவாறு,

 

“அர்ப்பணா… லிசின் டு மி… யு ஹாவ் டு வேக்கப்… டூ யு ஹியர் மீ… யூ ஹாவ் டு வேக்கப்… இல்லை என்றால் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது… வேக்கப் அர்ப்பணா…” என்று கூறியவன், மீண்டும் தன் மூச்சுக் காற்றை அவளுக்குக் கொடுத்தான்.

 

எந்தப் பயனும் இருக்கவில்லை. மீண்டும் அழுத்தினான். அழுத்தும் போதே, “யு ஸ்டுபிட் வுமன்… வேக்கப்… நீ இப்போது எழுந்து கொள்ளவில்லை என்றால், ஐ வில் கில் யு… கெட் அப்…” என்றவாறு மீண்டும் மார்பை அழுத்தத் தொடங்கினான்.

 

“வன்… டூ… த்ரீ… வேக்கப்… டாமிட்…” என்று செயற்கை சுவாசம் கொடுத்தவனுக்கு, எந்த நேரமும் பொலிஸ் வரலாம் என்கிற பதட்டமும் தொற்றிக்கொண்டது. அவர்கள் இங்கே வருவதற்கு முதல், எப்படியாவது அவள் எழுந்துவிட வேண்டும்… அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற நேரம் வெறும் முப்பது நிமிடங்களே… என்ன செய்யப்போகிறான்…

 

“ப்ளீஸ்… பேபி… நமக்கு நேரமில்லை… இங்கிருந்து கிளம்பவேண்டும்… எழுந்துகொள்…” என்றவாறு

 

மீண்டும் அவசரமாக அவளுடைய வாயைப் பலமாகத் திறந்து செயற்கையாகப் பிராணவாயுவைக் கொடுத்தவன், விலகும் போது, தன்னையும் மீறி, அவளுடைய உதடுகளைத் தன் உதடுகளால் அழுந்த முத்தமிட்டு விலகி மீண்டும், அவளுடைய இதயத்திற்கு வேலை கொடுத்தான்.

 

இப்படி நான்காம் சுற்று, ஐந்தாம் சுற்று… ஆறாம் சுற்று என்று போனதேயன்றி, அவளிடம் எந்த மாற்றமும் இருக்கவேயில்லை. நிலைமை தன்னையும் மீறிக் கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள அவன் தயாராகவே இல்லை.

 

அவனையும் அறியாமல் அவனுடைய உள்ளமும், உடலம் ஒருங்கே நடுங்கின. எக்காரணத்தைக் கொண்டும் அவளை இழக்க அவன் தயாராக இல்லை. எதைச் செய்து வேண்டுமானாலும், அவளுடைய சுவாசத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்கிற வெறி மட்டும் அவனை விட்டுப் போகவேயில்லை.

 

“ஓ… காட்… கமோன் அர்ப்பணா… ஐ நீட் யூ… வேக் அப்….” என்றவாறு மீண்டும் அவளுடைய மார்பை அழுத்தினான்.

 

“கமோன் சிவார்ப்பணா… எழுந்திரு…” என்றவன் மீண்டும் தன் சுவாசம் கொடுத்தான். அவளை இழந்து விடப் போகிறோம் என்பது புரிந்தது. அவனையும் அறியாமல் அவனுடைய கண்கள் கலங்கின… அந்த நிலையில் என்ன யோசிக்கிறோம், என்ன செய்கிறோம், என்ன பிதற்றுகிறோம் என்கிற எதையும் புரிந்துகொள்ளும் நிலையில் அவன் இருக்கவில்லை. அவனுக்கு, வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவள் எழுந்துகொள்ள வேண்டும்.

 

“அர்ப்பணா…. ப்ளீஸ்… எழுந்திரு… ஐ நீட் யு… யு ஹாவ் டு வேக் அப்…” என்று குரல் உடையக் கோரியவன், மீண்டும் அவளுடைய இதயத்தைச் செயல்படுத்த வைக்க முயன்றான். தன் கோபம் அனைத்தையும் ஒன்றிணைத்து, அவள் உயிர் கொள்வதற்குத் தன் உயிரைக் கொடுப்பதுபோல சுவாசம் கொடுத்தான்…

 

அந்த நேரம், அவனையும் அறியாது, வாழ்வின் முதன் முதலாக, வழிந்த அவனுடைய கண்ணீர்… துளிகள் அவள் நெற்றியில் விழுந்து தெறித்தன.

 

இன்னும் காலம் கடந்துவிட்து என்பதை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. கூடவே அந்த சூழ்நிலையைத் தாங்கும் சக்தி தனக்கில்லை என்பது புரிய, முடியாது என்கின்ற நிலை வர, அநபாயதீரன் சோர்ந்தான். தாமதமாக வந்துவிட்டோமோ என்கிற அச்சத்தில் அவளை வெறித்தான்.

 

இயலாமையுடன் அருகேயிருந்த சுவரில் சாய்ந்தமர்ந்தவன், இரு முழங்கால்களையும் மடித்துத் தன் கரங்களால் அவற்றை அணைத்துத் தன் தலையை அவற்றிற்கிடையில் பதித்தவனுக்கு உலகமே வெறுமையாகிவிட்ட உணர்வில் எதுவும் தோன்றாமல் அப்படியே இருந்தான்.

 

‘இவ்வளவும்தானா வாழ்க்கை? ஜெஸ்ட் லைக் தட்? எல்லாம் முடிந்து விட்டதா? என்னை மீறி எதுவும் நடந்ததில்லையே… முதன் முதலாக, தன்னைச் சலனப்படுத்தியவளைக் காக்க முடியாத வெறும் சாதாரண மனிதனாக, கையறு நிலையில் இருக்கிறேனே… எனக்கெதற்குப் பெயர், பதவி, படிப்பு, பட்டங்கள் எல்லாம்… எனக்கானவளைக் காக்க முடியாத நான் எப்படி…’ என்று எண்ணியவன், தலையை நிமிர்த்தாமலே கோபம் அனைத்தையும் திரட்டித் தரையில் ஓங்கிப் பலமுறை குத்தினான். அப்படிக் குத்தியும் அவனுடைய ஆத்திரம் மட்டுப்பட மறுத்தது.

 

மெதுவாகத் தன் தலையை நிமிர்த்தியபோதுதான் தெரிந்தது, அவனுடைய விழிகள் இரண்டும் சிவந்து, கண்களில் கண்ணீர் வழிந்து, பார்ப்பதற்கே படு பயங்கரமாக இருந்தான். இது வரை அழுதிராதவன், இது வரை அழுகை என்றால் என்ன என்பதே தெரியாதவன், மனக் குழப்பம் என்றால் எது என்று புரியாதவன், யாருக்காகவும் இரங்காதவன், கரையாதவன் முதன் முதலாக, சலனப்பட்டு துன்பப்பட்டு, துயரப்பட்டு, தன்நிலை கெட்டு, தன்னை மறந்து, ஒரு பெண்ணுக்காகக் கலங்கி நின்றான். மீண்டும் அவனுடைய பார்வை சிவார்ப்பணாவை வெறித்தது.

 

“டாமிட்… ஐ கில்யு… ஐ கில் யு…” என்று கத்தியவன் தாங்கமுடியாத வலியில் தன் தலையைப் பற்றிக் கொண்டான். அவனால் அவளைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

 

இத்தனை காலமாக, மனதளவில் எந்தப் பெண்ணையும் அவன் அருகே நெருங்கவிட்டதில்லை. யாரும் அவனை நெருங்கியதும் இல்லை. முதன் முதலாக, அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறித் தன்னைத் தொலைக்கத் தயாரான இடம், சிவார்ப்பணா.

 

“என்று அவளை முதன் முதலாகக் கண்டானோ, அன்றே அவன் இதயத்தில் அவள் மேல் சலனங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. விழிகள் முழுவதும் துடிப்புப் பொங்க, முகம் மலர்ச்சியில் மலர, உதடுகளில் குறும்பு தாண்டவமாட, நின்றவளின் உருவம் மனக்கண்ணில் வந்து வந்து போனது. மனதில் ஏற்பட்ட சலனத்தைத் துடைத்து எறிய அவன் பட்ட கடினம், அவனுக்குத்தான் தெரியும். அவளுடைய நினைவை அழிக்க முடியாமல், அந்த நினைவிலிருந்து தப்பியோட முடியாமல், அவனுக்கான கடமையிலிருந்து வழுவ முடியாமல் அவன் அடைந்த சித்திரவதை யாரும் அறியாத ஒன்று.

 

ஆனால் என்று அவளைச் சுற்றிப் பெரும் ஆபத்து சிலந்தி வலையாகச் சுற்றப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டானோ, அந்தக் கணத்திலிருந்து அவளைத் தன் கண்காணிப்பில் வைத்திருக்க முடிவுசெய்தான். ஆனால் அவளோ, எதுவும் தெரியாமல், இப்படி, வந்து… அதற்கு மேல் சிந்திக்க முடியாதவனாக, அவளை வெறித்தான். இவள் பிழைப்பாளா…

 

இவளை எப்படி இழப்பது… இவளை இழக்க என்னால் முடியுமா?

 

“நோ… அர்ப்பணா….” என்று முனங்கியவன், அப்போதுதான் கவனித்தான்.

 

அவளுடைய சுண்டுவிரலில் மெல்லிய அசைவு. இது வரை கசங்கியிருந்த அவனுடைய முகத்தில் மெல்லிய பிரகாசம். அது வரை சுருங்கியிரந்த அவனுடைய முகத்தில் அந்த சுருக்கங்கள் நீங்கப் பதறிக்கொண்டு மீண்டும் அவளருகே வந்தான்.

 

“அர்ப்பணா… டூ யு ஹியர் மீ… அர்ப்பணா… வேக்கப்… அர்ப்பணா… யு ஆர் சேஃப் நவ்… கெட் அப்…” என்றவாறு மீண்டும் அவளுடைய மார்பை மிக மிக வேகமாக ஆழமாக அழுத்தத் தொடங்கினான்.

 

“அர்ப்பணா… வேக்கப்… ப்ளீஸ் வேக்கப்…. யாருக்காகவும் நான் இப்படி அடிபணிந்து கெஞ்சியது கிடையாது… முதன் முறையாக உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன்… விழித்துவிடு… ப்ளீஸ்… வேக்கப்… கமோன் அர்ப்பணா… எழுந்திரு… கமோன்…. உனக்கு நான் கூறுவது கேட்கிறது இல்லையா?” என்று இரஞ்ச,

 

அவன் வேண்டியது, அவளுக்குக் கேட்டதோ, அந்த நேரம் திடீர் என்று சிவார்ப்பணா பெரும் இருமலுடன் பெரிய மூச்சொன்றை எடுத்து விட, அவசரமாக அநபாயதீரன் அவளை நோக்கிக் குனிந்தான்.

 

முகம் முழுவதும் மலர, நிம்மதிப் பெருமூச்சு விட, அவசரமாக அவளுக்கருகாமையில் அமர்ந்தவன் அவளை இழுத்துத் தன் மார்பில் போட்டு இறுக அணைத்து, அவளுடைய தலையை வருடிக் கொடுத்தவனுக்கு இன்றும் நடுக்கம் நின்றபாடில்லை.

 

“ஈசி ஹனி… ஈசி… எவ்ரி திங் இஸ் ஓகே…” என்றவன், அவளை நிதானப் படுத்தியவாறு அவளுடைய உச்சந்தலையில் தன் உதட்டைப் பொருத்தி நீண்ட நேரம் அங்கேயே தன்னைத் தொலைத்திருந்தான். அவனுடைய விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தாலும், முகம் மலர்ச்சியில் விரிந்தது.

 

சிவார்ப்பணாவின் கண்கள் சிவந்தன. அவள் ஒழுங்காக மூச்செடுப்பதற்கு நீண்ட நேரம் தேவைப் பட்டது.

 

அவளைத் தன் நெஞ்சோடு மேலும் இறுக அணைத்துக் கொண்டவன், அவளுடைய மார்பையும், முதுகையும் வருடி, அவளை ஆசுவாசப் படுத்த முயன்றாள். அவனுடைய தலை, அவளுடைய உச்சந்தலையில் பதிந்து,

 

“யு ஓக்கே பேபி… யு ஆர் சேஃப்… டூ யு ஹியர் மி…” என்று அவளுக்குப் புரியும் விதமாக மெல்லிய குரலில் குழந்தையிடம் கேட்பது போலக் கேட்க, அவள் சிரமப்பட்டு ஆம் என்று தலையை ஆட்ட, பெரும் மகிழ்வில், மீண்டும் அவளுடைய உச்சந்தலையில் தன் உதட்டைப் பொருத்தி விலக்கியவன், தன் கை வளைவில் அவளைத் தாங்கி, முகம் நோக்கி,

 

“இனிமேல் என்னுடைய அனுமதியில்லாமல் நீ எங்கும் போகக் கூடாது… புரிந்ததா?” என்று அவன் கேட்க, அதற்கும் அவள் ஆம் என்று தலையை அசைத்தாள்.

 

“இன்றிலிருந்து நீ என்னைப் பிரியக் கூடாது…” என்று அவன் கறாராகக் கூற, அதற்கும் ஆம் என்பது போலத் தலையை ஆட்ட, இவனுடைய உதட்டில் மெல்லிய நகைப்புத் தோன்றி மறைந்தது.

 

“அப்படியே என் வீட்டு வேலைகள், துனி துவைப்பது, சமைப்பது, வீட்டைச் சுத்தமாக வைப்பது, கூடவே என்னைக் கவனிப்பது, என் தேவைகளைப் பூர்த்தி செய்வது அனைத்தையும் நீதான் செய்யவேண்டும்…” என்று கூறியவனின் உதடுகள், குறிஞ்சி மலர் மலர்வது போல, மெல்லிய குறும்புப் புன்னகை ஒன்றைச் சிந்த, அதை உணராமலே, அவள் ஆம் என்று தலையை ஆட்டிய பின்புதான் அவன் என்ன சொன்னான் என்பது புரிந்தது.

 

சினத்துடன் முறைத்தவாறு நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனுடைய உதட்டில் மலர்ந்த குறும்புப் புன்னகையைக் கண்டதும், மேலும் கோபம் பெருக்கெடுக்க,

 

“கொ… கொண்…று… விடு…வேன்…” என்று சிரமப்பட்டுத் தன் சுண்டுவிரலை அவன் முன்பாக நீட்டிக் காட்டியவளுக்கு மேலும் மயக்கம் அவளை ஆட்கொள்ள முயன்றது.

 

“காத்திருக்கிறேன் கண்ணம்மா” என்று நகைப்புடன் கூறியவனின் முன்னால் நடுங்கியிருந்த அந்த சிவந்த உதடுகள் அவன் பொறுமையை மேலும் குலைக்க, அவள் தன்னை மீட்டெடுப்பதற்கு முன்பாகவே, தன் உதடுகளால் அவள் உதடுகளை அழுத்தமாக சிறைபிடித்திருந்தான்.

 

அவளும் தன் நிலை கெட்டுத் தன்னை மறந்து, அவனுடைய அணைப்பில் சிக்கிக் கிடந்தாள்.  எத்தனை நேரம் அப்படியே கிடந்தார்களோ, எங்கோ ஒரு செல் போனின் சத்தம் அவன் காதில் விழ அவள் உதடுகளிலிருந்து தன் உதடுகளைப் பிரித்து எடுக்கப் பிரியப்படாதவனாகவே,  சிரமப்பட்டுப் பிரித்துத் திரும்பிப் பார்த்தான்.

 

அது அந்த கறுப்பனின் கைபேசி என்பது புரிந்தது. அதுவரை அவனை ஆக்கிரமித்திருந்த இனிமையான உணர்வு மாயமாக மறைந்து போக, முகம் முழுவதும் அகோரமாக மாற, விழிகள் கொவ்வைப்படங்களாகச் சிவக்க, சிவார்ப்பணாவைக் கைவிடாமல் இறுக அணைத்தவாறு எட்டி, அந்த கைபேசியை எடுத்து, உயிர்ப்பித்து காதில் பொருத்தியவனின் முகம் வெஞ்சினத்தால், இறுகிக் கறுத்துப் போனது. ஆனால் கரங்கள் மட்டும் அவளை வருடிக்கொடுத்ததை நிறுத்தவேயில்லை.

 

மறு முணை பேசுவதைக் கேட்டவனின் உதட்டில் தோன்றிய மெல்லிய புன்னகையை எதிரிகள் பார்த்திருந்தால், நிச்சயமாக அவர்களின் வயிற்றில் புலியைக் கரைத்திருக்கும். கோபமும், அலட்சியமும், அதனுடன் சேர்ந்த வஞ்சகமும், கடுமையும் என அனைத்தும் ஒன்றாகக் கலந்து வெளிக்காட்டியிருந்தது அந்தப் புன்னகை. பின், மறுபக்கம் எதையோ கூறி முடிக்க முன் குறுக்கிட்டவன்,

 

“லுக்… லிசின் டு மி கெயர்ஃபுளி. நீ தொடக்கூடாத ஒன்றைத் தொட்டுவிட்டாய்… நீ யார்… எங்கேயிருக்கிறாய்… உன்னுடைய நண்பர்கள்… யார், எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால்… ஒன்று மட்டும் நிச்சயம்… நீ பயங்கரமான காட்டுத்தீ மீது கைவைத்துவிட்டாய்… இந்தக் கணத்திலிருந்து… இந்த விநாடியிலிருந்து… உங்களது நாட்களை எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் தேடுவேன்… கண்டு பிடிப்பேன்… கொல்லுவேன்… உனக்குக் கடவுள் நம்பிக்கையிருந்தால், எப்போதும் என்னைச் சந்திக்கக் கூடாதென்று வேண்டிக்கொள்…” என்று ஆங்கிலத்தில் அழுத்தம் திருத்தமாக, கூறியவன், தன் அகோரச் சினம் கலையாமலே சுவரை நோக்கி, அந்த செல்லை, எறிய, அது உடைந்து துகள் துகளாகின.

 

அதே நேரம் எங்கிருந்தோ பொலிசின் வாகனச் சத்தம் கேட்க, அநபாயதீரன் உஷாரானான். குனிந்து சிவார்ப்பணாவைப் பார்த்தான்.

 

மூச்சு ஒழுங்காக வந்திருந்தாலும் அவள் விழிகள் மீண்டும் மூடியிருந்தன. இன்னும் அவள் தன்நிலைக்கு வரவில்லை. உடல் வேறு அவளுக்கு நடுங்கிக்கொண்டிருக்க, வேகமாகத் தன்னுடைய தடித்த மேலங்கியை கழற்றி அவள் மீது போர்த்தினான். அவளைத் தரையில் கிடத்திவிட்டு, எழுந்தான்.

 

சற்றுத் தொலைவில் ஒரு பை கீழே விழுந்திருக்க. அதை எடுத்துப் பார்த்தான். சிவார்ப்பணாவின் ஆடைகள்தான். வேகமாக அதைத் தன் தோளில் மாட்டினான். தரையிலிருந்த தன் துப்பாக்கியை எடுத்துத் தன் ரேகையை நன்றாகத் துடைத்து, அதை விழுந்துகிடந்தவன் கரத்தில் வைத்தான். எதிரியின் கரத்திலிருந்த துப்பாக்கியை எடுத்துச் சென்று மற்றவனின் கரத்தில் வைத்தான். அந்த எதிரிகளின் கரங்களை அங்கும் இங்கும் அசைத்து வேகமாக எதையோ செய்தான். இப்போது பார்ப்பதற்கு ஒரு காங் ஃபைட் போல இருந்தது. பார்க்கும் போது, ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டது போலத்தான் தோன்றும். திருப்திப் பட்டவனாக, சிவார்ப்பணாவின் அருகே வந்தான்.

 

அவளைக் குழந்தை போலத், தன் கரங்களில், ஏந்தியவன், அப்போதுதான் அவளுடைய வலது கரத்திலிருந்து இரத்தம் வழிவதையும், அது தரையில் சிந்தியிருப்பதையும் கண்டான். அதைத் துடைக்க நேரமில்லை. எப்படியாவது பொலிஸ் வருவதற்குள்ளாகத் தப்ப வேண்டும்.

 

தாமதிக்காமல், வேகமாகப் படிகளிலிருந்து இறங்கத் தொடங்கினான் அநபாயதீரன்.

 

(20)

 

அநபாயதீரனுக்கு சிவார்பப்ணாவைப் பார்க்கப் பார்க்கத் தாள முடியவில்லை. தன் கரத்தில் கிடந்தவளை, பின் இருக்கையில் பக்குவமாகக் கிடத்தியவன், தோளிலிருந்த பையைக் கழற்றி, வாகனத்தின் முன்னிருக்கையில் எறிந்துவிட்டு, காரைப் படுவேகமாகக் கிளப்பினான்.

 

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடத்தில் தன் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்தவன், அவனுக்குரிய பிரத்தியேகத் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு, சிவார்ப்பணாவின் பையை போட்டுக்கொண்டு சிவார்ப்பணாவின் அருகே வந்தான். மீண்டும் சுய நினைவு இழந்திருந்தவளை மாலையெனக் கரங்களில் ஏந்தியவாறு வந்த எலிவேட்டருக்குள் நுழைந்தான். அவளைக் கரத்தில் வைத்தவாறே 19ஆம் மாடியை அடைந்தான்.

 

அவளைத் தூக்கித் தோளில் போட்டவன், பான்ட் பாக்கட்டிலிருந்து, திறப்பை எடுத்துக் கதவைத் திறந்து, அவளை உள்ளே எடுத்துச் சென்று இரண்டாம் அறைக்குள் இருந்த இரட்டைக் கட்டிலில் மெதுவாகக் கிடத்தினான்.

 

தன்னையும் மறந்து அவளுடைய தலையை வருடிக் கொடுத்தவன், எழுந்து சென்று மின்விளக்கைப் போட்டு, குளியலறைக்குள் நுழைந்தான். விரைந்து சென்ற தன் கரங்களை நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டு, மருத்துவ கையுறைகளை அணிந்து, அங்கிருந்த கபினெட்டை நோக்கிச் சென்றான்.

 

அதைத் திறந்து தனக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு, அறைக்குள் நுழைந்தவன், அவளருகேயிருந்த மேசையில் போட்டுவிட்டுக் கத்தரிக்கோலை எடுத்து அவளுடைய மேலாடையை வெட்டி, எடுத்தான்.

 

தோள் புறத்திலிருந்த காயத்தைப் பரிசோதித்துப் பார்த்தான்.  நல்லவேளை காயம் ஆழமில்லை. மேற்புறமாக சிராய்த்துக்கொண்டு சென்றிருந்தது தோட்டா. அதனால் தோல் வளன்றிருந்தது. எப்படியும் ஐந்து தையல்களாவது போட வேண்டும். அந்தக் காயத்தின் மீது சுத்தமான தடித்த துணியை வைத்து அழுத்தியவன், அவளைக் குப்புறப் படுக்கவைத்துத் தலைக் காயத்தைப் பார்த்தான். அதிக ஆழமில்லை. ஆனாலும் அதற்கும் தையல் தேவைப்பட்டது. இன்னும் இரத்தம் வேறு வடிந்துகொண்டிருந்தது.

அதைப் பார்க்கப் பார்க்க அநபாயதீரனின் முஷ்டி இறுகிக்கொண்டு வந்தது. எப்படியாவது எதிரியை விரைவில் கண்டுபிடிக்கவேண்டும் என்கிற வெறியும் வந்தது.

 

பஞ்சினால் இரத்தத்தை ஒற்றி எடுத்தவன், அதைச் சுற்றியிருந்த முடிக்கற்றைகளை ஒட்ட வெட்டி எறிந்தான். இப்போது காயம் நன்றாகத் தெரிந்தது. சுத்தமாக்குவதற்கு வேண்டிய உபகரணங்கள் கொண்டு துடைத்து எடுத்தவன், தேர்ந்த மருத்துவன் போலத் தையலிட்டான். தலையைச் சுற்றிக் கட்டுப் போட்டவன், அதே போலத் தோள்களையும் நன்றாகக் கழுவித் துடைத்துத் தையலிட்டுக் கட்டுப் போட்டான்.

 

திருப்திப்பட்டவனாக வெளியே சென்றவன், தன் அறைக்குள் நுழைந்து, குளித்துவிட்டு, வேறு ஆடையணிந்து வெளியே வந்தவனின் கரத்தில் ஒரு டீஷேர்ட் வீற்றிருந்தது. சிவார்ப்பணாவின் அறைக்குள் நுழைந்தவன், டீஷேர்ட்டை அவளுக்கு அணிவித்து விட்டு, அவளுக்கு அருகே கதிரையை இழுத்து, அவளைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டான்.

 

அவளைப் பார்க்கப் பார்க்க எதிரிகளின் மீதான கோப வெறி அதிகரிக்கத் தொடங்கியது. எத்தகைய நிலையில் வைத்து அவளைப் பார்த்தான். நினைக்கும் போதே இவன் உள்ளம் குலுங்கித் துடித்தது.

 

அவளுடைய வலது கரத்தைத் தன் இடது கரத்தால் பற்றித் தூக்கித் தன் உதட்டில் பொருத்தியவன், அவளுடைய முகத்தில் மறைந்திருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டான். அவனையும் மீறி விரல்கள் அவளுடைய முகத்தில் நர்த்தனம் ஆடின.

 

மெதுவாக நெற்றி, மூக்கு, இதழ்கள், கழுத்து, மார்பு வயிறு என வருடிக் கொடுத்து, இன்னும் அவள் தன் கையில் உயிரோடு இருக்கிறாள் என்பதை, உறுதி செய்ய முயன்றுகொண்டிருந்தன.

 

இழந்திருப்பான்… முழுதாக இழந்திருப்பான்… நினைக்கும் போதே அவனுடைய விழிகளில் மெல்லிய நீர்ப் படலம். அதைக் கூட உணராதவனாகத் தன் தன் வலக் கரம் கொண்டு அவளுடைய கன்னத்தை வருடிக் கொடுத்தவன், காயப்பட்ட அவள் உதட்டின் ஓரத்தைப் பெரும் விரலால் தடவியவாறு,

 

“ஐ ப்ராமிஸ் யூ கண்ணம்மா… அவர்கள் யாராக இருந்தாலும், ஐல் ஹன்ட் தெம்… அன்ட் கில் தெம்… உன்னை இந்த நிலைமைக்குத் தள்ளியவர்கள் எனக்குப் பதில்சொல்லியே ஆக வேண்டும் அன்டில் ஐ ஆம் நாட் கோயிங் டு ஸ்லீப்… என்றவனின் மூச்சுக் காற்று உஷ்ணமாக வெளி வர, விழிகளோ மேலும் சிவக்க, அவனுடைய கூரிய நாசியோ அதீத கோபத்தில் மெல்லியதாகத் துடிக்க, கன்னங்களின் மேற்புறம் சிறிதாக நடுங்கின.

 

நல்லவேளை அவனுடைய அந்தக் கோலத்தை சிவார்ப்பணா பார்க்கவில்லை. பார்த்திருந்தால், நிச்சயமாக மீண்டும் ஒரு முறை மயங்கி விழுந்திருப்பாள்.

 

அவன் எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ… அவனுடைய கைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தவன், அவசரமாக சிவார்ப்பணாவைப் பார்த்துவிட்டு, அந்த அறையின் வெளிச்சத்தை முற்று முழுதாக அணைத்துவிட்டு, வெளியே வந்து, அந்த கைபேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்தான்.

 

“அநபாயதீரன் ஹியர்…” என்றான் இவன் மெல்லிய குரலில் ஆனால் பெரும் அழுத்தமாக.

 

“வட் த ஹெல் ஆர் யு டூயிங்… கேர்னல்… உனக்குக் கொடுத்த டாஸ்க் என்ன… நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்…” என்று மறுபக்கமிருந்து ஒரு கர்ஜனைக் குரல் வர, இவன் அமைதியாக இருந்தான்.

 

“எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்… பிரிகேடியர் ஜென்ரல்” என்றான் இவன் உடல் இறுகக் குரலில் அழுத்தத்தைத் தேக்கி.

 

“மை ஃபுட்… உன்னிடம் இந்த வேலையைத் தந்து ஆறு மாதங்களுக்கும் மேலாகின்றன. இந்த ஆறு மாதங்களில் இன்னும் என்னென்ன நடந்திருக்கலாம்… இன்னும் உன்னிடமிருந்து எந்த சாதமான பதிலும் கிடைக்கவில்லை… எத்தகைய முக்கியமான பிரச்சனையில் நாம் சிக்கியிருக்கிறோம் என்று உனக்குத் தெரியுமல்லவா… சொன்ன வேலையை முடிக்காமல் என்ன செய்து கிழித்துக்கொண்டிருக்கிறாய்… தந்த வேலையை விட்டு விட்டு ஒரு பெண்ணிற்குப் பின்னால் அலைகிறாய் நீ… வெட்கமாக இல்லை” என்று மறுபக்கம் அதட்ட, இவன் கொஞ்ச நேரம் பல்லைக் கடித்தவாறு அமைதியாக இருந்தான். பின், நடந்தவாறே, ஜன்னலருகே வந்தவன், இருண்டிருந்த வெளியை வெறித்தவாறு,

 

“ஏற்கெனவே எனக்குத் தெரிந்தவற்றை மேஜர் ஜெனரலுக்கு அனுப்பிவிட்டேன், பிஜென்…  அதிலிருந்து குற்றவாளியை ஓரளவு நாம் நெருங்கிவிட்டோம் என்பதை எம்ஜென் உங்களுக்குக் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்…” என்று இவன் அதே விறைப்பு சிறிதும் குறையாமல் கூற,

 

“உனக்கு மேலிருக்கும் அதிகாரி நான்… நீ என்னிடம்தான் முதலில் தெரிவித்திருக்கவேண்டும்…” என்று அவர் அதிகாரமாகக் கூற,

 

“மன்னிக்கவேண்டும் பிஜென்… எனக்கு இந்தப் பணியைக் கொடுத்தது எம்ஜென். கொடுக்கும் போது, எதுவாக இருந்தாலும், தன்னிடம் மட்டுமே தகவல்களைக் கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அவருடைய கட்டளையை என்னால் மீற முடியாது. எதுவாக இருந்தாலும், எம்ஜென்னிடம் கேளுங்கள்…” என்றான் இவன் பொறுமையற்ற மூச்சுடன். கூடவே, வாணத்தில் கண்களைச் சிமிட்டும் விண்மீன்களின் மீது அவன் கவனம் சென்றாலும், தனக்கு நேர் மேலதிகாரி கூறுவதையும் இவன் கேட்கத் தவறவில்லை.

 

“ஹூ இஸ் ஷீ… அவளுக்காக நீ எதற்கு ரிஸ்க் எடுக்கிறாய்?” என்று அடுத்து கடுமையான குரல்  வெளியே வந்தது.

 

“தட் இஸ் மை பேர்சனல் பிஜென்… ”

 

“நம்முடைய தொழிலுக்குத் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடமில்லை என்பது உனக்குத் தெரியும் அல்லவா?” என்ற மறுபக்கம் கடுமையாகக் கூற, இவனுடைய உடல் இறுகியது.

 

“ஐ நோ… அவர்களுக்கும், என்னுடைய பணிக்கும் ஒரு வகையில் சம்பந்தம் இருக்கிறது. அதனால் அவளைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எனக்கிருக்கிறது…”

 

“என்ன சம்பந்தம்…” என்றவரின் குரலில் இறுக்கம் இருந்தாலும், அவரையும் மீறிய பரபரப்புத் தெரிய. இவனுடைய உதடுகள் ஏளனத்துடன் வளைந்தன.

 

“ஐ கான்ட் டெல் யு பிஜென்…” என்றான் இவன் அலட்சியமாக.

 

“ஐ ஆம் யுவர் சீனியர் ஆஃபீசர் கேர்னல். நான் கேள்வி கேட்டால் நீ சொல்லியே ஆகவேண்டும்…” என்றார் அவர் பெரும் கோபமாக. தன் பான்ட் பாக்கட்டில் ஒற்றைக் கரத்தை விட்டவாறு காலகட்டி நின்றவனின் முகத்தில் ஏளனம் அப்பட்டமாகத் தெரிய,

 

“நோ பிஜென்… எனக்குக் கொடுக்கப்பட்ட பணி‍யை முழுதாக நிறைவேற்றிக் கொடுப்பதும் அது சார்ந்த அறிக்கையை எம்ஜென் இடம் ஒப்படைப்பது மட்டும்தான் என்னுடைய வேலை. இன்னும் நிறைவு செய்யவில்லை. நிறைவு செய்ததும் மேஜர் ஜெனரலுக்கு என்னுடைய தனிப்பட்ட அறிக்கையைக் கையளிக்கிறேன்… வேண்டுமானால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று உறுதியாகக் கூறியவனிடம்,

 

“நீ என்னை அவமரியாதை செய்கிறாய்… இது உனக்கு நல்லதில்லை… கேர்னல்…” என்றார் பிஜென்.

 

“எனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செய்கிறேன் பிஜென்… நான் பதில் கொடுக்கவேண்டியது எம்ஜென்னிடம் தவிர வேறு யாருக்கும் இல்லை…”

 

“இதனால் உனக்கு வர இருக்கும் பதவி உயர்வுக்கு ஆபத்து வரலாம்… கேர்னல்…” என்றவரின் குரலில் அதீத சீற்றம் தெரிய, பான்ட் பாக்கட்டிலிருந்த கரத்தை எடுக்காமலே, இடக்கால் சற்று மடிந்திருக்குமாறு, மறு சுவரோடு சாய்ந்து நின்று, ஜன்னல் புறம் தன் கவனத்தைச் செலுத்தியவாறு இவன் மெல்லியதாக நகைத்தான்.

 

“பிஜென்… பதினேழு வயதில் ரோயல் கனடியன் எயர் ஃபோர்சில் (Royal Canadian Air Force) சேர்ந்தேன்… இப்போது எனக்கு வயது இருபத்து ஒன்பது. இந்தப் பன்னிரண்டு வருடத்தில் நான் செய்த சேவைக்கு கேர்னல் பதவி அதுவும் இருபத்தெட்டு வயதில் கிடைத்தது. இந்த வயதில் யாரும் இத்தகைய பதவியை எட்டியது கிடையாது. இந்தப் பெருமை, நானாகத் தேடி வந்ததில்லை பிஜென்… தானாக என்னைத் தேடி வந்தது. நான் என்னுடைய திறமையை மட்டும்தான் நம்புபவன்… எனக்கு மேலதிகாரிகளை வால் பிடித்துத்தான், உயர் பதவிகளை எட்டவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இதனால் என் பதவிக்கு ஆபத்து நேரும் என்றாலும் எனக்கு வருத்தமில்லை… முடிந்தால், என்னைப் பதவியிலிருந்து விலக்கிப் பாருங்கள் பிஜென்…” என்று இவன் இறுக்கமாகக் கூடவே மெல்லிய கிண்டலுடன் கூற, மறு பக்கம் பெரும் அமைதி நிலவியது.

 

உண்மைதான், ரோயல் கனடிய விமானப்படை… பல வெற்றிகளைச் சாதித்திருக்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் அநபாயதீரனே. அதனால்தானோ என்னவோ, அதிகத் திமிரும், அதிகாரமும் அவனிடம் கொட்டிக் கிடந்தது. யாருக்கும் அடங்காதவன்.

 

அது மட்டுமல்ல, அவன் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை முடித்தவன். இந்த வயதிலேயே பெரிய பெரிய அதிகாரிகளுக்கு, விமானப்படை சார்ந்த நுணுக்கங்களைப்  பற்றி பாடம் நடத்துபவன். அவன் சுண்டினால், போதும்… அதை நிறைவேற்றப் பல அதிகாரிகள் இருக்கிறார்கள். அவனுடைய பதவி மட்டும் கேர்னலாக இருக்கலாம். உண்மையில் அவன் ஜெனரலுக்கு நிகரானவன். சொல்லப்போனால், இவன் அவருடைய செல்லப்பிள்ளை என்று கூடக் கூறலாம்.

 

சில வேளைகளில், முக்கிய முடிவு எடுப்பதற்கு, நிச்சயமாக அநபாயதீரன் தேவைப்படுவான். அது மட்டுமல்ல அவனைப் போன்ற வீரன் இது வரை ரோயல் கனடியன் விமானப்படையில் சேர்ந்ததும் கிடையாது. சேரப் போவதும் இல்லை. யாரை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கும் விமானப்படை… அநபாயதீரனை மட்டும் இழக்கத் தயாராகாது. அது அவருக்கு நன்கு தெரியும். அப்படிப் பட்டவனுடன், மோதி மரியாதையைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. இருந்தாலும், அவனுக்கு மேல் அதிகாரி தான் என்கிற மமதை அவரை விடுவதாயில்லை.

 

“உனக்கு மேல் அதிகாரியாக இருக்கும் என்னை அவமரியாதை செய்வது நம்முடைய சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டது…” என்றார் இவர் கடித்த பற்களுக்கிடையே.

 

“ஐ நோ பிஜென்… நான் உங்களை அவமரியாதை செய்யவில்லை. உண்மையை நீங்கள் உணரவேண்டுமே என்கிற பொறுப்பில் பேசுகிறேன்…” என்றவனின் கவனம், சற்றுத் தொலைவிலிருந்து டெனிஸ் பந்தின் மீது நிலைத்தது. நடந்து சென்று அதைக் கரத்தில் எடுத்தவன், அதை எறிந்து பிடித்தவாறு, பிஜென் சொல்வதை அவதானிக்கத் தொடங்கினான்.

 

“இப்போது நீ என்னதான்  சொல்ல வருகிறாய்? நீ செய்யும் செயல்களைப் பற்றி என்னிடம் கலந்தாலோசிக்க முடியாது என்கிறாயா?” என்றார் அவர் பெரும் எரிச்சலுடன்.

 

“நான் மேஜர் ஜெனரலுக்கு மட்டுமே பதில்சொல்லவேண்டியவன், ப்ரிகேடியர் ஜெனரல். இந்த பணியை அவர்தான் என் கையில் கொடுத்தார். நான் செய்யும் ஒவ்வொரு செயலும், மிகவும் ரகசியமானதாக இருக்கவேண்டும் என்பது மேஜர் ஜெனரலின் கட்டலை. அதை என்னால் மீற முடியாது. அவர் குறிப்பிட்டது போல, அனைத்து செய்திகளும் உடனுக்குடன் அவருக்குத் தெரியப்படுத்திக்கொண்டு இருக்கிறேன்… உங்களுக்கு எது வேண்டுமாக இருந்தாலும், நேரடியாக மேஜர் ஜெனரலையே கேளுங்கள் அவர் கூறுவார்…” என்று இவன் அழுத்தமாகக் கூற,

 

“இது உனக்கு நல்லதல்ல கேர்னல்… இதற்கான விழைவுகளை நீ பின்பு சந்திப்பாய்…” என்றவரின் குரலில் அதீத வெறுப்புத் தெரிய,

 

“வெல்கம் பிஜென்… உங்களுக்கு விருப்பம் என்றால், நம்முடைய மேஜர் ஜெனரலுடன் பேசி, எனக்குக் கொடுத்த வேலையை வேறு யாரிடமும் கொடுக்கச் சொல்லுங்கள். சந்தோஷமாக நான் விலகிக் கொள்கிறேன். அதோடு, இந்த வைல்ட் ஃபயர்… எதற்கும் எப்போதும், யாருக்கும் பயந்ததில்லை, பதில் சொன்னதில்லை, சொல்லப் போவதும் இல்லை…” என்றவன் இறுதியாகத் தன் கரத்திலிருந்த பந்தை ஓங்கி எறிய, அது சுவரில் அடிபட்டுப் பாய்ந்து மறுசுவரிலிருந்த முக்கிய மின்விளக்கு விசையில் பட்டு விழ, அந்த இடமே விளக்கணைந்து இருளில் மூழ்கியது.

 

“ப்ச்…” என்று சலித்தவன், தன் கைபேசியை அணைத்து, அருகேயிருந்த மேசையில் விட்டெறிந்துவிட்டு, மின் விளக்கின் தொலை இயக்கியை அருகேயிருந்த டீ டேபிளில் தேடினான்.

 

ஒருவாறு அது கரத்திற்குத் தட்டுப்பட, அதை எடுத்து, மீண்டும் மின்விளக்கை உயிர்ப்பிக்க முயல, மறுபடியும் அவனுடைய கைபேசி சிணுங்கத் தொடங்கியது. அழுத்தாமலே எட்டிப் பார்த்தான்.

 

அதில் வந்த பெயரைக் கண்டதும், இவனுடைய உடல் விறைத்தது. தானாக தொலை இயக்கியைத் தன் பான்ட் பாக்கட்டில் போட்டவன், தன்னையும் மறந்து நிமிர்ந்து நின்றான். கைபேசியை ஸ்பீக்கரில் போட்டு அதை மேசையில் வைத்தவன், இரண்டு கால்களையும் அகட்டி நின்று, பின்புறமாகக் கரங்களைக் கட்டியவாறு,

 

“கேர்னல் அநபாயதீரன். கோட் நம்பர் XXXXXXXX” என்று அவன் கர்ஜனையாகச் சொல்ல,

 

“வட்ஸ் கோய்ங் ஆன் ஃபயர்… பிஜென் உன்னைப் பற்றிப் புகார் சொல்கிறாரே” என்றவரின் குரலில் எந்தக் கோபமும் இருக்கவில்லை. பதிலுக்குச் சற்றுப் பெருமையே குரலில் தெரிய,

 

“யெஸ் எம்ஜென்… அவர் என்னிடம் விபரம் கேட்டார்… மறுத்துவிட்டேன்…” என்றான் அவன் தலையை நிமிர்த்தி.

 

“ஓ… நீ யாரோ ஒரு பெண்ணின் பின்னால் சுற்றுவதால்தான், தாமதம் ஆகிறது என்று குறைபடுகிறானே…” என்றார் அவர் சந்தேகமாக.

 

“நோ எம்ஜென்… நான் எந்தப் பெண்ணின் பின்னாலும் சுற்றவில்லை.” என்றான் இவன் அழுத்தமாக.

 

“அப்படியானால் இப்போது உன் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பெண்ணிற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்…?” என்றார் அவர் அழுத்தமாக. கொஞ்ச நேரம் அமைதி காத்தவனுக்குத் தன் கோபத்தை அடக்குவதே பெரும் பாடாக இருந்தது.

 

“எம்ஜென் என்னை வேவு பார்க்கிறீர்களா?” என்றான் இவன் கடுமையாக.

 

“கேர்னல்… உன்னை வேவுபார்க்க வேண்டியதன் அவசியம் எனக்கில்லை என்பது உனக்குத் தெரியும். அதே வேளை உன்னுடைய பாதுகாப்பும் எனக்கு முக்கியம். உன்னுடைய நண்பர்கள் உன்னைப் பற்றி எனக்கு அடிக்கடி தகவல்கள் கொடுக்கிறார்கள்…” என்றதும் இவன் பல்லைக் கடித்தான். யார் சொல்லியிருப்பார்கள் என்பது அவனுக்குப் புரிந்தது.

 

“இப்போது என் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்ணும், இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப் பட்டிருக்கிறாள்… அதனால் அவளை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். இதைத் தவிர வேறு எதுவும் கிடையாது. …” என்றான் அவன்.

 

“டூ யு லவ் ஹர்…” என்றார் அடுத்த கேள்வியாக. ஒரு கணம் அமைதி காத்தவன்,

 

“ஐ டோன்ட் நோ எம்ஜென்… பட் ஐ லைக் ஹேர்…” என்றதும் மறுபக்கம் எம்ஜென் நகைக்கும் ஒலி கேட்டது.

 

“மை பாய்… கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கிறது போல் இருக்கிறதே… இது வரை பல பெண்களுடன் நீ பழகியிருக்கிறாய்… ஒரு முறையும் நீ இப்படி யாரோடும் இணைப்புடன் இருந்ததில்லை. முதன் முறையாக நீ ஒரு பெண்ணுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்கிறாய்… வியப்பாக இருக்கிறது…” என்று கூற,

 

“மேஜர் ஜெனரல்… நீங்கள் எனக்குத் தந்த பணி முடியும் வரை, என்னால் வேறு எதையும் சிந்திக்க முடியாது. சொல்லப்போனால், அர்ப்பணா… ஐ மீன் சிவார்ப்பணா, இந்தப் பணியின் ஓர் அங்கம் மட்டுமே. அவள் பாதுகாப்பாக இருந்தால்தான் என்னால், முழுதாக இந்தப் பணியை நிறைவேற்ற முடியும்… அதைத் தவிர என்னால் வேறு எதையும் சிந்திக்க முடியாது… உங்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும் என்று நினைக்கிறேன்…” என்று இவன் கூறினாலும், அவனையும் மீறி அவள் ஆபத்திலிருந்தபோது, இவன் துடித்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து உறுத்தியது.

 

“ஐ நோ யு மை சன்… எனிவே… எந்த அளவில் இருக்கிறது…” என்று அவன் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

 

“இது வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எம்ஜென்… ரகுவிடமிருந்து எடுத்த ஆவணங்களை வைத்து, ஏவுகணையைத் தற்காலிகமாக இயங்காத வகையில், கோர்டை உடைத்து மாற்ற முடிந்தது. ஷார்ப் நோர்ஸ் இன்னும் உயிருடன்தான் இருக்கிறது. அதன் இயக்கத்தை நிறுத்தவேண்டுமானால் ஒரிஜினல் மதர் கோர்ட் வேண்டும். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இறங்கியிருக்கிறேன். விரைவில் அதையும் கண்டு பிடித்து விடுவேன். கண்டு பிடித்ததும், தாமதமின்றி உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்…”

 

“இதற்கும் அந்தப் பெண்ணுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?”

 

“தெரியவில்லை… ஆனால் அவள் அறியாமலே, எதிரிகளின் வலையில் சிக்க வைக்கப் பட்டிருக்கிறாள் என்பது மட்டும் எனக்குப் புரிகிறது. ரகு, அவளுக்குக் கொடுத்த பென்டன் கீ போல, வேறு ஏதாவது அவளுக்குக் கொடுத்திருக்கிறானா என்பதை அறியவேண்டும். அதைப் பக்குவமாகத்தான் அவளிடம் கேட்டறியவேண்டும்… அதற்கிடையில் அவளைக் கொல்வதற்காகவும் தாக்குவதற்காகவும், கடத்துவதற்காகவும் பல குழுக்கள் அவளைச் சுற்றித் திரிகிறார்கள். சோ… அவளிடம் எதுவோ இருக்கிறது. அது என்ன என்பதைக் கண்டறிந்தால், வேலை சுலபமாகப் போய்விடும்…. இப்போதைக்கு அவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றுவதே, எனது முக்கிய கடமையாக இருக்கிறது. அதனால்தான் காலதாமதமாகின்றது”

 

“அவளைக் கடத்துவதற்கு ஒரு கூட்டம் திரிவது நியாயம்… ஏன் என்றால் அவளிடம் அந்த ஏவுகணையை இயக்கும் முக்கிய தகவல்கள் இருக்கலாம்… ஆனால் அவளை எதற்குக் கொல்ல ஆட்கள் பின்னால் செல்லவேண்டும்?” என்று எம் ஜென் யோசிக்க,

 

“சிம்பிள்… இந்த ஏவுகணையை எந்தப் பாதாளக் குழு செயல்படுத்த நினைக்கிறதோ, அந்தப் பாதாளக்குழுவுக்குரிய எதிரிகள்தான் அவளைக் கொல்லவும் திட்டமிட்டிருக்கவேண்டும். அதைக் கண்டுபிடிப்பது சுலபம்…” என்று உறுதியுடன் கூற,

 

“சோ அவளைச் சுற்றி எதிரிகள் திரிகிறார்கள் என்றால், ஏதோ ஒன்று அவளிடம் இருக்கிறது… ஒரு வேளை தனக்கு எதுவும் தெரியாது என்பது போல, உன்னிடம் நாடகம் ஆடுகிறாளா” என்று எம்ஜென் கேட்க, இவன் உடல் இறுகியது.

 

“ஐ டோன்ட் திங் சோ எம்ஜென்… அவளுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. சொல்லப்போனால், அவளுடைய கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தது திறப்பு என்பது பயன்படுத்தும் வரை அவளுக்குத் தெரியாது. அது போலவே, அவளுக்குத் தெரியாதவை பல, அவளிடம் கொடுக்கப்பட்டிருக்கலாம்…” என்றான் அநபாயதீரன் அழுத்தமாக.

 

“எதற்காக அவளுக்குத் தெரியாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது…?” என்று அடுத்த சந்தேகத்தைக் கேட்க.

 

“உன்மையைச் சொல்லவேண்டுமானால், இவள், விபரம் தெரியாத அப்பாவிக் கூட்டாளிகள் (Innocent accomplice). அவளுக்கே தான் ஒரு குற்றவாளி என்பது தெரியாது. திட்டமிட்டு, தவறு செய்யாதவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பயன்படுத்தி, தேவை முடிந்ததும் அவர்களைக் கொல்வது, இல்லை அப்படியே கைகழுவி விடுவது போல இவளைப் பயன்படுத்திவிட்டு இவளுக்குத் தெரியாமலே இவளைக் கொல்லலாம். இல்லை கைகழுவலாம்… சில குற்றவாளிகள் இப்படிப் பிடிபட்டவர்களே எம்ஜென். தவிர… இதுவரை இவள் யார் என்பது தெரியாமல்தான் இருந்தது. இப்போதுதான் இவளுடைய பின்புலம் எதிரிகளுக்கும் தெரிந்திருக்கிறது…” என்றதும், மறு பக்கம் அமைதி காக்கப்பட்டது.

 

“ஆர் யு ஷூர்?”

 

“யெஸ் எம்ஜென்…”

 

“ஓக்கே தென்… விரைவாக மதர் கோர்டைக் கண்டுபிடிக்க முயற்சிசெய் ஃபயர்… நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் காலம் மிக சொற்பமே.

 

“ஐ விட் டூ மை பெஸ்ட் எம்ஜென். என்றதும் கைபேசி அணைக்கப்பட்டது. இவன் கொஞ்ச நேரம் சுவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். தன்னையும் மறந்து அவனுடைய வலக்கரம், தலைமுடியைக் களைந்து பின் கோதியது.

 

சிவார்ப்பணாவைத் துறத்தும் பயங்கரத்திலிருந்து அவளை எப்படியாவது எந்த சேதாரமுமின்றி வெளியேற்றவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவனை வியாபிக்க, எப்படி என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, சிவார்ப்பணாவின் அறைக் கதவு மெதுவாகத் திறந்து அதிலிருந்து அவள் வெளியே வருவது அந்த இருட்டிலும் தெளிவாக அவனுக்குத் தெரிந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 17

17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…

6 hours ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

1 day ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

1 week ago