Categories: Ongoing Novel

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 6/7

(6)

 

சூரிய வெளிச்சம் அந்த அறைக்குள் நுழைந்து, விழி மூடிக் கிடந்தவளின் காயப்பட்ட உடலின் மீது சற்றுக் கடுமையாகத் தாக்க, மெதுவாகத் தன் விழிகளை அசைத்து விழித்துப் பார்த்தாள் மிளிர்ம்ருதை. உடல் எல்லாம் பிய்த்துப் போட்டதுபோல வலித்தது. ஆங்காங்கே ஏற்பட்டிருந்த காயங்கள் விண் விண் என்று தெறித்தன. சிரமப் பட்டு உட்கார முயன்றவளின் கவனத்தைச் சற்றுத் தள்ளியிருந்தவன் கவர்ந்தான்.

அருகேயிருந்த கதிரையில் காலுக்கு மேல் காலைப் போட்டவாறு, கதிரையின் மேற்சட்டத்தில் தன் இடக்கரத்தைப் பதித்து, சாய்வாக அமர்ந்து இடது தொடையின் மீது வீற்றிருந்த சப்பாத்தணிந்திருந்த பாதத்தின் மீது தாளம் போட்டவாறு அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

மீண்டும் முன் தினம் நடந்த கொடூரம் நினைவுக்கு வர, உடல் எல்லாம் கூசிச் சிலிர்க்க, அவனை வெறித்துப் பார்த்தாள். அவனோ எவ்வித அலட்டலும் இல்லாது அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் எள்ளளவிற்கும் குற்றம் செய்ததற்கான அறிகுறிகள் இருக்கவில்லை. மாறாக அதே திமிர், அதே கடினம் அதே அலட்சியம்.

அவனைப் பார்க்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. பார்க்கக் கூடாத அசிங்கத்தைப் பார்த்தவள் போல, தலையைத் திருப்பிக் கொண்டவளுக்கு அப்போதுதான் தன் நிலை உறைத்தது.

முன்னிரவு அணிந்திருந்த துவாய் எங்கோ விழுந்திருந்தது. கண்ணிமைக்கும் நொடியில் முழங்கால்களை மடித்துக் கால்களை அணைத்தவாறு தன் கரங்களைப் போட்டு முடிந்தவரைக்கும் அவன் பார்வையிலிருந்து தன் பெண்மையை மறைத்துக் கொண்டவளுக்கு அவமானமும் வேதனையும் அழுகையும் பொங்கிக்கொண்டு வந்தன. ஆனாலும் அவன் முன்னால் அழப் பிடிக்கவில்லை. பொங்கிய கண்ணீரையும் மீறி அவனை வெறித்துப் பார்ப்பதையும் அவள் தளர்த்தவில்லை.

அவனோ, அவளுடைய நிமர்வைக் கண்டு மெல்லியதாகத் தலையை ஆட்டி புன்னகை ஒன்றைச் சிந்தியவன், தன் காலைக் கீழிறக்கி, தொடைகளின் மீது இரு முழங்கைகளையும் பதித்து, சற்று முன்னால் குனிந்து

“வெல்… ஹெள ஆர் யு நவ்…” என்றான்.

அவனை வெறுப்புடன் பார்த்தவளுக்கு, அவன் முகத்திலேயே காறித் துப்பவேண்டும் போல வெறி எழுந்தது.

எப்படிப் பட்ட மனிதன் இவன். கட்டிய மனைவியாக இருந்தாலும், அனுமதியின்றித் தொடக்கூடாது. ஆனால் இவன்… சே… தொட்டுத் தாலி கட்டியவளையே… அசிங்கப்படுத்தியது மட்டுமல்லாது, அவள் உணர்ச்சிகளைக் கொன்றுவிட்டு, எதுவுமே நடக்காதது போல, அவளிடமே எப்படி இருக்கிறது என்று கேட்கிறானே… இவனெல்லாம் மனிதனா… சீ… மிருகம்…’ என்று ஆவேசத்துடன் எண்ணியவளுக்கு, இவனையா கண்ட உடன் விரும்பினோம் என்கிற எண்ணமும் அவளைக் கூனிக் குறுக வைத்தது.

எதற்காக இப்படி நடந்தன்? அதை அறிந்தே ஆகவேண்டும் என்கிற வேகம் எழ,

“ஏன்… ஏன் இப்படிச் செய்தீர்கள்… எதற்காக…?” என்று கேட்டபோது, என்னதான் முயன்றும் குரல் நடுங்குவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவனோ, அவளை ஒரு கணம் அழப் பார்த்துவிட்டு,

“உனக்கு இப்போது எழுதக் கூடிய சக்தி இருக்கிறதா…?” என்றான் அலட்சியமாக.

அவள் என்ன கேட்கிறாள், அவன் என்ன சொல்கிறான்? ஆத்திரத்துடன் எதையோ கூற வர, ஒரு வித வேகத்துடன் தன்னுடைய கரத்தை நீட்டித் தடுத்தவன்,

“நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலைக் கூறினால் போதும் மிளிர்ம்ருதை… உன்னால் இப்போது எழுத முடியுமா?” என்றான் அதிகாரமாக.

கசப்புடன் அவனைப் பார்த்தாள். அந்தக் கேள்விக்குப் பதில் கூறப் பிடிக்கவில்லை.

அவனோ எவ்வித அலட்டலும் இல்லாமல் எழுந்து சென்று அங்கிருந்த கபேர்ட்டைத் திறந்து, அதிலிருந்து ஒரு பெரிய துவாய் ஒன்றை எடுத்து அவளை நோக்கி வீச, அது அவள் வெற்றுத் தோளின் மீது விழுந்தது.

அதைப் பற்றியவாறு அவனைத் திரும்பிப் பார்க்க, கபேர்டைப் பூட்டியவாறு,

“கோ.. கெட் ரெடி…” என்றதும், இவன் கட்டளைக்குப் பணிவதா? என்கிற வீறாப்பும் எழுந்தது. கூடவே அவன் முன்னால் இப்படி இருக்கவும் அசிங்கமாக இருந்தது.

எதுவும் பேசாது, அமர்ந்த வாக்கிலேயே அந்தப் பெரிய துவாயால் தன் உடலைச் சுற்றிக் கட்டியவளுக்கு, கை கால்கள் அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி எங்கோ போனது. நெருப்பில் குளித்து எழுந்தால் இப்படித்தான் வலிக்குமோ?

எழுந்தவள் தரையில் வீசியெறிந்த தன் ஆடைகளைச் சேகரித்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைய, இவனோ கைமுட்டிகள் இறுக, தள்ளாடியவாறு சென்றவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

குளியலறைக்குள் நுழைந்தவன், தன் கரத்திலிருந்த ஆடைகளை ஓரமாக வைத்துவிட்டு மனதில் பிடிவாதத்தைச் சேகரித்து, முகத்தைக் கழுவிச் சோர்வைப் போக்க முயன்றாள்.

ஆழ் கடலில் மூழ்கி எழுந்தாலும் அந்தச் சோர்வும் வலியும் போய்விடும் போல் தெரியவில்லை. நேற்று காலை வரை உள்ளம் முழுவதும் இனிமையான காதலைப் பரப்பிக்கொண்டிருந்தவன், இப்போது நினைக்கையிலே அருவெறுப்பைப் பரப்புகிறானே. இந்த ஒரு நாளே இப்படி இருக்கிறதே. மனைவி என்கிற உறவுடன் இவனுடன் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்.

இப்படிப் புனிதமான கன்னிமையைத் தொலைக்கத்தானா இத்தனை நாளும் பெண்மையைக் காப்பாற்றி வந்தாள். ஏன்? ஏன் என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கிறது. நான் யாருக்கும் எந்தப் பாவமும் செய்யவில்லையே.

அழவேண்டும் போல் இருந்தது. எதற்காக அழவேண்டும் என்கின்ற வீறாப்பும் வந்தது. மறு முறை வலிக்க வலிக்கக் குளித்து விட்டு, எடுத்து வந்த ஆடையை அணிந்து வெளியே வந்தாள்.

அவன் அதே இடத்தில்தான் அமர்ந்திருந்தான்.

அவனுடைய கையில் ஒரு இரண்டு மூன்று காகிதங்கள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. இவளைக் கண்டதும், எழுந்தவன், அவற்றைக் கட்டிலில் விசிறி அடித்து,

“இதில் உன்னுடைய கையெழுத்துத் தேவை…” என்றான்.

எதுவும் சொல்லப் பிடிக்காதவளாகக் கட்டிலை நெருங்கிகயவள், குனிந்து அவற்றை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்துபோனாள்.

அவளால் சுலபமாக மூச்செடுக்க முடியவில்லை. நம்ப மாட்டாதவளாக, அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு கணம் அவனுடைய விழிகளுடன் இவளுடைய விழிகள் கலந்தன. அவன் விழிகளைக் கண்டவள் திகைத்துப் போனாள்..

இந்தப் பார்வை… இந்தப் பார்வை தப்பு செய்தவனின் பார்வையில்லையே… ஒரு பெண்ணைக் குதறி எடுத்துவிட்டோம் என்கிற எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாது, ஏதோ சாதனைச் செய்து, நிம்மதி கொண்டவன் போல அல்லவா அவளைப் பார்க்கிறான். தவறு செய்தவனுக்கு நிச்சயமாக இத்தனை தெளிவான பார்வை இருக்காதே… இவனுக்கெப்படி இருக்கிறது… அத்தனை கல்நெஞ்சனா இவன்…

அவள் அதிர்ந்து நின்ற வேளையில், மேலும் நெருங்கியவன், தன்னுடைய பொன்னிறப் பேனாவை அவள் முன்னால் நீட்ட, அவளோ அந்தப் பேனாவையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள். பின் அபயவிதுலனை ஏறிட்டு,

“ஏன்… எதற்காக இப்படியெல்லாம்…” என்று அவள் முடிப்பதற்குள்ளாகத் தன் கரத்தை நீட்டி அவள் பேச்சைத் தடுத்தவன், மெதுவாக நகைத்தான். பின்

“உன்னுடைய கேள்விகளுக்குப் பதில் கூற, உன் தந்தை வருவார் மிளிர்ம்ருதை… அவரை இங்கே வரச் சொல்லி அழைத்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிடங்களில் இங்கே இருப்பார்… அதன் பிறகு உன்னுடைய கேள்விகளுக்குப் பதில் தானாகக் கிடைக்கும்… அதற்கு முன் அந்த விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்தைப் போடு.“ என்றதும் இவளுக்குச் சீற்றம் வந்தது.

அவனுடன் வாழ முடியாது என்று நினைத்தாள்தான். அவன் அருகே நெருங்கக் கூடாது என்று சபதமிட்டாள் தான்.. ஆனால் விவாகரத்து… இதை அவள் எதிர்பார்க்கவில்லையே… அவனோடு வாழ முடியாது… உண்மை… அவன் முகத்திலே விழிக்கக் கூடாது. அதுவும் உண்மை… ஆனால்… சட்ட ரீதியான பிரிவை அவள் யோசிக்கவே இல்லையே.

என்னதான் அவன் மீது வெறுப்பு இருந்தாலும் சட்டென்று அவனைப் போல, ‘இந்தா பெற்றுக்கொள்’ என்று கூறிவிட்டுச் செல்ல அவளால் முடியவில்லை…

தீ சுட்டாற் போல, அந்தக் காகிதங்களை மீண்டும் கட்டிலில் எறிந்தவளுக்கு வெறி வந்தது.

“நோ… நான் மாட்டேன்! என்ன விளையாடுகிறீர்களா? நேற்று காலை திருமணம், இன்று விவாகரத்தா… என்ன திருமணம் என்பது, உங்களுக்கு விடுதியில் உண்ணும் உணவு என்று நினைத்தீர்களா? ஆயிரம் காலத்துப் பயிர் விதுலன்… தவிர, நீங்கள் செய்த கொடுமைக்குப் பதில் தெரியாது.. இதில் கையெழுத்துப் போட முடியாது… நிச்சயமாக முடியாது… ஒரு பெண்ணின் வாழ்வை அழித்துவிட்டு அத்தனை சந்தோஷமாக நீங்கள் இருந்து விட முடியாது…” என்று அவள் கத்த, அதைக் கேட்ட அயபயவிதுலன், கடகட என்று நகைக்கத் தொடங்கினான்.

“ஹா ஹா ஹா… என்ன சொன்னாய்… ஆயிரங்காலத்துப் பயிரா… எது… திருமணமா… ஹா… ஹா… ஹா…. அதுவும் விக்னேஷ்வருடைய மகளின் வாயிலிருந்து… ஹா ஹா ஹா… சாரிம்மா! என்னால் முடியவில்லை… சாரி…” ஒருவாறு தன் சிரிப்பை அடக்கி,

“மிரு… மிளிர்ம்ருதை…! எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இப்படிச் சிரித்திருக்கிறேன் தெரியுமா?” என்றவாறு, மீண்டும் அவள் முன்னால் தன் பேனாவை நீட்டி,“இந்த சிரிப்பு அடங்குவதற்குள்ளாகக் கையெழுத்தைப் போட்டுவிடு…” என்றான்.

முகம் என்னவோ சிரித்தவாறுதான் இருந்தது. ஆனால் அந்தக் குரல்… அவளையும் மீறி ஒரு வித குளிரைப் பரப்பவே செய்தது. ஆனாலும் அவனுக்குப் பணிந்து போக அவளால் முடியவில்லை. மறுப்பாகத் தலையை ஆட்டியவள்,

“முடியாது…! நான் இதில் கையெழுத்துப் போட மாட்டேன். எனக்கு ஒரு பதில் தெரியாமல் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போடவே மாட்டேன், மாட்டேன்… மாட்டேன்…” என்று சீறியவள் குனிந்து கட்டிலில் விசிறியடித்த காகிதங்களைக் கசக்கியவாறு பொறுக்கி, அவன் முகத்தை நோக்கி விசிறி அடிக்க, அவை பறந்து சென்று அவனுடைய முகத்தில் பட்டுத் தரையில் விழுந்தன.

அப்படியிருந்தும் கோபம் மட்டுப்பட மறுத்தது. வேகமாக அவனருகே வந்தவள் அவனுடைய சட்டைக் காலரைத் தன் கரங்களால் பற்றி, அவனைத் தன்னை நோக்கி இழுக்க முயல, அந்த ராச்சஷனோ, சற்றும் அசைந்து கொடுத்தானில்லை.

அவளுடைய ஆவேசத்திற்கும் கோபத்திற்கும் உடல் ஒத்துழைத்தால் அல்லவோ! எல்லையில்லா ஆத்திரத்திலும், வலியிலும், அது பாட்டுக்கு நடுங்கத் தொடங்கியது. கால்கள் தரையில் நிற்கமாட்டோம், நடுங்கியே ஆவோம் என்று அடம்பிடிக்கத் தொடங்க, அவனைப் பற்றிய பலத்திலேயே நிமிர்ந்து நின்றவாறு மீண்டும் அவனுடைய கண்களைத் தவிப்போடு பார்க்கத் தொடங்கினாள்.

என்ன நினைத்தானோ… அவளுடைய நடுங்கும் உடலை அவன் உணர்ந்து கொண்டானோ. சரியும் கால்களைப் புரிந்துகொண்டானோ. தன் கட்டுப்பாட்டையும் மீறி, அவளுடைய இடையைச் சுற்றிப் பின் முதுகில் தன் கரத்தைப் பதித்து அவளை நிலைத்து நிற்கச் செய்தான். இருந்த கோபத்தில் மிளிர்ம்ருதை இதை உணரவில்லை. காரணம் அவன் விழிகளில் தெரிந்த உறுதி.

“ஏன்… ஏன் இப்படிச் செய்தீர்கள். நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்…! அன்றைய விதுலனுக்கும் இன்றைய விதுலனுக்கும் சம்பந்தமே இல்லையே…” என்று தவிப்புடன் கேட்டவள் அதற்கு மேலும் நிற்க சக்தியில்லாதவளாகத் தன்னைச் சமாளிக்க முடியாதவளாக அவன் மார்பிலேயே தன் நெற்றியைப் பதிக்க, அது வரை, இலகுத் தன்மையோடிருந்தவனின் உடல் இறுகி, அதில் மெல்லிய நடுக்கம் ஓடியது.

“வலிக்கிறது விதுலன்…! உடல் மட்டுமல்ல… உள்ளம், உயிர் எல்லாமே வலிக்கிறது…! உங்களை நம்பினேன்… உங்களை விரும்பினேன்… உயிருக்கும் மேலாக விரும்பினேன்… ஆனால்…” என்று மெல்லிய நடுங்கும் குரலில் கூறியவள், தன் தலையை நிமிர்த்தி, அவளையும் மீறிப் பொங்கிய கண்ணீரைத் துடைக்க சக்தியற்றவளாக, அவனைப் பார்த்து,

“விதுலன்… நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று நினைத்தேனே…! எல்லாம் பொய்தானா?” என்றவளின் உடல் அழுகையில் மேலும் குலுங்கியது.

அவளால் இன்னும் எதையும் நம்ப முடியவில்லை. மனதார அவனை நேசித்தவளாயிற்றே… சட்டென்று ஒன்றுமில்லையென்று எப்படிக் கைவிட முடியும்.

அவளுடைய அருகாமையில் ஒரு கணம் விறைத்து நின்றவன் தான் செய்துகொண்டிருக்கும் காரியம் புரிய, ஏதோ அசிங்கத்தைத் தொட்டவன் போல, வேகமாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்து விலக்கி நிறுத்தினான்.

அவளுடைய உடல் நிற்க முடியாமல் தள்ளாட, அவளைப் பற்றிச் சென்று அங்கிருந்த படுக்கையில் அமர்த்திவிட்டு, இவன் விலக, அந்த நிலையிலும் அவனுடைய கரத்தைப் பற்றிச் சோர்வுற்ற கண்களால், அவனை நிமிர்ந்து பார்த்து,

“ஏன்…” என்றாள் அதே ஏக்கக் குரலில்.

ஏனோ அந்தக் குரலில் அபயவிதுலன் ஆடித்தான் போனான். இதுவரை இளகாதவனின் இதயம், முதன் முறையாகச் சற்றுத் தடுமாறத் தொடங்க, உடனேயே தன்னைச் சுதாரித்துக்கொண்டவன், வெடுக்கென்று தன் கரத்தை உதறி விலகி,

“அதுதான் சொன்னேனே… உன்னுடைய தந்தையிடம் அந்தப் பதிலைக் கேட்டுத் தெரிந்துகொள் என்று…” என்று அவன் முடிக்கவில்லை அவனுடைய அறைக் கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது.

அதைக் கேட்டதும், இவனுடைய உடல் மேலும் இறுக, மூச்சுக்காற்று சீற்றத்துடன் வெளி வந்தது.

“யெஸ்… கமின்…” என்றான் அழுத்தமான குரலில்.

வந்தது விக்னேஷ்வரன் தான். முகத்தில் பெரும் மலர்ச்சியுடன் உள்ளே நுழைந்தவர், அங்கே படுக்கையில் தன் மகள் அமர்ந்திருக்கும் கோலம் கண்டு அந்த மகிழ்ச்சி வடிந்து போகப் பதறித் துடித்தவராக,

“கண்ணம்மா…! என்னாச்சு…” என்றவாறு தன் மகளை நோக்கிப் பாய்ந்தார்.

அது வரை உள்ளே வந்தவர் யாரோ என்று கூசிச் சிலிர்த்து விழிகளைத் தரையில் பதித்திருந்தவள், தன் தந்தையின் குரலைக் கேட்டதும், விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

தந்தைதான். இதுவரை காலமும் தூசு கூடப் படவிடாமல் உள்ளங்கைகளில் தாங்கிப் பொத்திப் பொத்தி வளர்த்தவர்… இப்போது இந்த நிலையைக் கண்டால் எப்படித் துடித்துப்போவார்…

அவரைக் கண்டதும் அதுவரையிருந்த சோர்வு மாயமாக மறைந்து போக, பசுவைக் கண்ட கன்று போலப் பாய்ந்து ஓடிச் சென்று அவரை இறுக அணைத்து மார்பில் முகத்தைப் பதித்துக் கதறத்தொடங்கினாள் மிளிர்ம்ருதை.

பதற்றமும், பயமும் போட்டிப்போட தன் மகளின் தலையை வருடிக் கொடுத்த விக்னேஷ்வர்,

“ஒன்றுமில்லை கண்ணம்மா… ஒன்றுமேயில்லை… அதுதான் அப்பா வந்துவிட்டேன் அல்லவா… இதோ… நிமிர்ந்து பார்… என்னடா ஆச்சு…” என்று தன் மகளின் வலியை மீறிய வலியுடன் இவர் கேட்க,

“அ… அப்பா… எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர்… இவர் ஏதேதோ சொல்கிறார்… என்னவென்று கேளுங்களப்பா…” என்றாள் மிளிர்ம்ருதை கேவலும் விக்கலுமாக.

மார்பில் பதிந்திருந்த மகளின் முகத்தைப் பற்றித் தூக்கிப் பார்த்த விக்னேஷ்வர், ஆடிப்போனார்.

முகம் முழுக்க அழுந்த பற்றியதால் ஏற்பட்டிருந்த கண்டல் அடையாளங்களும், இதழ்களின் ஓரத்தில் கசிந்து காய்ந்துபோயிருந்த இரத்தமும், கழுத்திலே தெரிந்த காயங்களும் அவளுக்கு என்ன நடந்தது என்பதைப் பறைசாற்றத் துடித்துப்போனார்.

பூங்கொடிபோன்ற தன் மகளுக்கா இந்த நிலைமை? எண்ணிப்பார்க்க முடியாத கோபத்தில், சற்றுத் தள்ளி நின்றிருந்தவனை வெறித்துப் பார்த்து

“எ… என்ன மாப்பிள்ளை இதெல்லாம்?” என்றார் கோபத்தைச் சற்றும் மறைக்காத குரலில்.

அவனோ இன்னும் கம்பீரமாக நிமிர்ந்து நின்று, மார்புக்குக் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டி, இரண்டு கால்களையும் சற்று அகட்டி வைத்து, விக்னேஷ்வரனை வெறித்துப் பார்த்தவாறே,

“புரியவில்லை… ரேப்பிங்…” என்றான் அலட்சியமாக.

“மாப்பிள்ளை…” என்று விக்னேஷ்வரன் எல்லையில்லா கோபத்துடன் கர்ஜிக்க,

“ஷ்… எதற்கு இந்தச் சத்தம்… இங்கே நாங்கள் மட்டும்தானே இருக்கிறோம்…” என்று கண்டிப்பது போலக் கூறியவன், பின் தன் கரங்களை மார்பிலிருந்து விலக்கி, பான்ட் பாக்கட்டில் வைத்தவாறே,

“வெல்… உலகத்திலேயே கட்டிய மனைவியை கற்பழித்த இரண்டாவது ஆண்மகன் நானாகத்தான் இருக்கும்… இல்லையா மிஸ்டர் விக்னேஷ்வரன்…” என்றதும் விக்னேஷ்வரன் அதிர்ச்சியுடன் அபயவிதுலனை ஏறிட்டார்.

அவருக்கு என்ன சொல்வதென்று எதுவுமே புரியவில்லை. குழப்பமும், பயமும் போட்டிப்போட, என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறியவர், எப்படியோ சமாளித்து,

“மா… மாப்பிள்ளை… நீங்கள்…-”

“டோன்ட் பி ஷாக்? உண்மையைத்தான் சொன்னேன் மிஸ்டர் விக்னேஷ்வரன்…! சரித்திரம் திரும்புகிறது பார்த்தீர்களா…” என்றவனின் குரலில், கடுகளவும் மரியாதையோ, இல்லை இளக்கமோ இருக்கவில்லை. மாறாகப் பெரும் அலட்சியமும், ஏளனமும், நக்கலும் நையாண்டியுமே கலந்திருந்தன. அப்படியே சற்று நேரம் நின்றிருந்த விக்னேஷ்வரனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. தன்னை மறந்து,

“நீ… நீ யார்…?” என்றார் எதையோ புரிந்துகொண்டவராக.

“ம்… குட்… உடனேயே புரிந்துகொண்டு விட்டீர்களே… யெஸ்… நீங்கள் நினைப்பது சரிதான்… ஐ ஆம் அபயன்… இந்தப் பெயர் நினைவிருக்கிறதா மிஸ்டர் விக்னேஷ்வரன்…” என்று அவன் கேட்க இவர் உடல் மெல்லியதாக உதறத் தொடங்கியது.

“அ… அபயன்…” என்று தடுமாற,

“யெஸ்… அபயன்… அப்போது வெறும் குடிசையில் வாழ்ந்த அதே அபயன்… இப்போது… த மல்ட்டி மில்லியனர் அபயவிதுலன்…” என்று ஏளனத்துடன் சொன்னவன் சற்றுத் தலையைச் சரித்து,

“இன்னும் புரியவேண்டுமானால்…” என்றவாறு அவரைச் சற்று நெருங்கி,“காந்திமதியின் தம்பி” என்று கூறியவாறு ராட்சசனாக நிமிர்ந்து நிற்க, விக்னேஷ்வரனின் உடலிலிருந்து இரத்தம் வடிந்து முகம் வெளிறி, உடல் சற்றுத் தள்ளாடியது.

 

(7)

 

அபயனா… அந்தப் பதினொரு வயதில் பார்த்த அபயனா இவன்… இதை அவர் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

எப்படி… எப்படிச் சாத்தியம்… எப்படியெல்லாம் விசாரித்தார்… ஒரு இடத்தில் கூட அவர் சுதாரிக்கும் வகையில் அவனைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையே… அப்படியிருக்கையில்… எங்கே சறுக்கினார்?

மிளிர்ம்ருதைக்கோ எதுவும் புரியவில்லை… அவளுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோன்று இருந்தது. எந்தப் பக்கம் எப்படிப் போவது என்று கூட அவளுக்குப் புரியவில்லை.

அவன் காந்திமதி என்றதும், தந்தையின் முகம் ஏன் வெளுறவேண்டும்? குழப்பத்துடன், தந்தையையும், அபயவிதுலனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“அப்பா… யாரப்பா அந்தக் காந்திமதி… இவர் என்ன சொல்கிறார்…” என்றாள் பெரும் குழப்பத்துடன்.

அவனோ அலட்சியமாக அவளைப் பார்த்துவிட்டுப் பின் விக்னேஷ்வரனை ஏறிட்டு,

“வெல்… மிஸ்டர் விக்னேஷ்வரன்…! ஐ டோன்ட் ஹாவ் டைம் ஃபோர் திஸ் ட்ராமா… சோ… உங்கள் மகளை இதில் கையெழுத்துப் போட சொன்னீர்கள் என்றால் நான் என் பாதையைப் பார்த்துக்கொண்டு போவேன்…” என்றான் அவன் சற்றும் இரக்கமின்றி.

இவரோ இன்னும் நம்ப முடியாதவரா,“எப்படி… உங்களைப் பற்றி வி… விசாரித்தேனே…” என்று இவர் தடுமாற, குலுங்கிச் சிரித்த அபயவிதுலன்,

“பதினொரு வயதில் உங்க…. உன்னைப் பழிவாங்க முடிவு செய்த எனக்கு இத்தனை வருடங்களில் அதற்கேற்றது போலக் காய்களை நகர்த்த முடியாதா என்ன? சும்மா இருந்திருப்பேன் என்று நினைத்தீர்களா மிஸ்டர் விக்னேஷ்வரன்…?” என்று அவன் எகதாளமாகக் கேட்க, உடைந்து போனார் அவர்.

மிளிர்ம்ருதைக்கு இருந்த குழப்பத்தில் தன் பிரச்சனை மறந்துபோனது. தன் தந்தையின் கரத்தை இறுகப் பற்றியவாறு,

“அப்பா..ஸ என்னப்பா நடக்கிறது?” என்று தவித்தவளை அங்கிருந்த யாருமே கவனிப்பதாக இல்லை.

சற்று நேரம் அமைதியாக இருந்த விக்னேஷ்வரன், சற்றும் இளகாது கல்லைப்போல நின்றிருந்தவனைப் பரிதாபமாக ஏறிட்டுப்பார்த்து,

“தம்பி… நான்… நான் செய்த தவறுக்கு என்னுடைய மகளைத் தண்டிப்பது நியாயமில்லை… எனக்கு எந்தத் தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்… தாங்கிக் கொள்கிறேன்… ஆனால் என் மகளை… ப்ளீஸ் மாப்பிள்ளை…” என்று கலங்கிய குரலில் கேட்ட தந்தையை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மிளிர்ம்ருதை.

அவளால் அவள் காதுகளையே நம்ப முடியவில்லை. அவளுடைய தந்தையா கெஞ்சுகிறார்? அவளுடைய தந்தையா மன்னிப்பு வேண்டுகிறார்…- வெள்ளை ஆடையில் சிறிது அழுக்குப் பட்டாலும் பிடிக்காத தந்தையா மன்னிப்புக் கேட்கிறார்…? இவனிடம் மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு அவள் தந்தை அப்படியென்ன மாபெரும் தவறு செய்தார்? அதுவும் அவளைச் சக்கையாகப் பிழிந்து தூர எறிந்துவிட்டு, விவாகரத்துக் கோரும் அவனிடம் கெஞ்சுகிறாரே…! அவளால்  இதை சற்றும் நம்பமுடியவில்லை. எங்கோ ஏதோ பெரும் தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் நன்கு புரிய,

“அ… அப்பா..! எ… என்னப்பா சொல்கிறீர்கள்… மன்னிப்பு… அதுவும் இவனிடம் போய்…” என்று கலங்க,

“கொஞ்ச நேரம் சும்மா இரும்மா… நான்தான் பேசுகிறேன் அல்லவா…” என்று சற்றுக் கடுமையாகக் கூறியவர்,

“மாப்பிள்ளை…! தயவு செய்து நான் சொல்வதை…” என்று கூறிக்கொண்டு வந்தவர், அவன் விழிகளில் தெரிந்த பளபளப்பையும், உதடுகளில் தெரிந்த நகைப்பையும், கூடவே அவன் முகத்தில் தெரிந்த மலர்ச்சியையும் கண்டு தன் பேச்சை அப்படியே நிறுத்திக்கொண்டார்.

சந்தோஷப்படுகிறான்… தன் வலியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான்… அன்று அவர் செய்த தப்புக்கு இன்று தண்டனை கொடுக்கிறான்… வினை விதைத்து விட்டார்… இன்று அறுக்கும் காலம் நெருங்கி விட்டது… ஆனால்… செய்த தவறுக்குத் தண்டனை அனுபவிப்பது என் மகளாயிற்றே… ஐயோ…! அவள் தவிப்பைப் பார்க்கவா நான் இன்னும் உயிரோடிருக்கிறேன்…’ என்று கலங்கியவர்,

“தம்பி… எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் தம்பி… அவசரப்பட்டு…” என்று அவர் மேலும் இறங்கி வர, இவனுடைய முகமோ மேலும் கடினமானது.

“மிஸ்டர் விக்னேஷ்வரன்… இதோ இப்போது… நீங்கள் கலங்கி நிற்பது போலத்தானே அன்று உங்களிடம்…” என்றவன், அந்த நினைவே பிடிக்காதவன் போன்று தன் விழிகளை இறுக மூடித் தன் உதடுகளைக் கடித்து அப்படியே நின்றவன், பின் தன் தலையைக் குலுக்கி,

“வேண்டாம்… அதைப் பற்றிப் பேசி இனிப் பயனில்லை… எனக்கு உங்கள் மகளின் கையெழுத்து வேண்டும்… உங்கள் மகளைப் போட சொல்லுங்கள்… இல்லை என்றால்…” என்று விக்னேஷ்வரனை உறுத்துப் பார்த்தவன்,

“உங்களைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் அதாரங்களுடன் எல்லாச் செய்தித் தாள்களிலும் போடுவேன். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டர்கிராம்…. எல்லாச் சமூக வலைத் தளங்களிலும் போட்டு நாறடிப்பேன்… ஸ்ரீலங்கன் த கிரேட் பிஸ்னஸ் மான் மிஸ்டர் விக்னேஷ்வரின் கருமை நிறைந்த பக்கத்தை இந்த உலகமே கண்டு எள்ளி நகையாடும். அதன் பிறகு கப்பலில் போகும் மானத்தை நீந்திப்போயும் மீட்டெடுக்க முடியாது… நீங்கள் மட்டுமல்ல, உங்களுக்கு மகளாகப் பிறந்த குற்றத்திற்கு” என்றவன் மிளிர்ம்ருதையை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் தன் தோள்களைக் குலுக்கியவன்,“சொல்வதைச் சொல்லிவிட்டேன்… இனி முடிவு உங்கள் கைகளில்…” என்றவனை வெறித்துப் பார்த்தார் விக்னேஷ்வரன்.

அவருக்குத் தலையே சுற்றிக்கொண்டு வந்தது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்களே. அதுதானா இது. கடவுளே… அவருடைய மகளின் வாழ்க்கை அழிய அவரே காரணமாகிவிட்டாரே…’ தாங்க முடியா வலியில் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.

அதன் பின்பு தன் அன்பு மகளை ஏறிட்டுப் பார்த்தார். அழுந்த விழிகளை மூடித் திறந்தவர்,

“அம்மா… நீ இந்தத் தம்பி கூறுவது போலக் கையெழுத்துப் போட்டுக் கொடம்மா…” என்றதும் தந்தையிடமிருந்து பிரிந்து நின்றாள் மிளிர்ம்ருதை.

“அ… அப்பா… என்னப்பா… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்…?” என்றாள் அதிர்ச்சியுடன். வார்த்தைகள் வெளி வர முடியாது திணறின.

அவளுடைய முகத்தைத் தன் கரங்களில் ஏந்தியவர்,“மகளே… உன்னுடைய காலில் விழுந்தால்தான் நீ கையெழுத்துப் போடுவாய் என்றால், நான் இப்போது விழத் தயாராக இருக்கிறேன்…” என்று அவர் கலக்கத்துடன் கூற பெரும் அதிர்வுடன் ஒரடி பின்னால் சென்று நின்றாள் மிளிர்ம்ருதை.

விக்னேஷ்வரனiயும் அபயவிதுலனையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. எல்லாமே மந்தமானது போன்ற உணர்வில் தவித்துப் போனாள்… அவளுக்கென்று யாருமே இல்லை என்கிற தவிப்பில் கதிகலங்கிப் போனாள். நேற்று வரை சிறகடித்துப் பறந்த சிட்டுக் குருவி அவள். இன்று, கவன் கல்லால் வீசப்பட்டுச் சிறகுகள் உடைந்த பறவையாய் தரையில் துடித்துக்கொண்டிருக்கிறாள். இதற்கு யார் பதில் கூறப் போகிறார்கள்? தாங்க முடியா வலியுடன், அவளுடைய விழிகள் அபயவிதுலனையே வெறித்துப் பார்த்தன.

உன்னிடமா என் மனதைப் பறிக் கொடுத்தேன். இதற்காகத்தானா… சே…’ என்று எண்ணியவள் விறு விறு என்று சென்று கட்டிலில் போடப்பட்டிருந்த தாள்களில் எதையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டுவிட்டு விலகினாள். அதில் வெற்றுத் தாள்களும் இருந்ததைக் கவனிக்கத் தவறினாள்.

அத்தாள்களைக் கரங்களில் எடுத்தவனுடைய முகத்தில் குரூரப் புன்னகை தவழ்ந்தது.

“குட்… நௌ… நீங்கள் இருவரும் வெளியே போகலாம்… என்னுடைய எதிர்காலத்தில் உங்கள் இருவரின் முகங்களையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காமலிருக்கக் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்…” என்று அவன் வாசலைக் கை காட்ட, அவனை ஒருகணம் உற்றுப் பார்த்தாள் மிளிர்மிருதை.

அவனை வெறித்தவாறே, அவன் விழிகளுடன் தன் விழிகளைக் கலக்க முயன்றாள். இப்போதாவது அந்த விழிகளில் தவிப்பும், ஏதாவது குற்ற உணர்ச்சியும் தெரிகிறதா என்று பார்த்தாள்.

அந்தக் கூரிய இரு விழிகளும், தயங்காமல் அவளுடைய விழிகளை அழுத்தத்துடன் ஏறிட்டுப் பார்த்தனவேயன்றி, அதில் வேறு எந்த உணர்ச்சிகளும் தெரியவில்லை. அந்தப் பார்வை எந்தத் தவறும் செய்யாதவனின் கூரிய பார்வை. சில விநாடிகள் அவன் விழிகளை மாறி மாறிப் பார்த்தள், பின் தன் தலையைக் குலுக்கி,

“உங்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை என்பது எனக்குத் தெரியாது. நான் இது வரை எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்திருக்கிறது. ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன் மிஸ்டர் அபயவிதுலன். என்றாவது ஒரு நாள்… நீங்கள் இதற்குப் பதில் சொல்ல வேண்டி வரும். அந்த நாள் அதிகத் தொலைவில் இருக்காது. அப்போது இந்த மாபாதகத்தை நினைத்து நீங்கள் துடிப்பீர்கள்… இறைவன் இருப்பது உன்மையானால்… அவன் உங்களைத் துடிக்க வைப்பான்…” என்று கூற, அதைக் கேட்ட விக்னேஷ்வரன் ஆடிப்போனார்.

இதையேதானே அன்று அவளும் சொன்னாள்… ஆனால் இவர்தான் அதை அலட்சியம் செய்து சிரித்து விட்டு வந்தார்… கலக்கத்துடன் திரும்பி அபயவிதுலனைப் பார்க்க, அவனோ அதே ஏளனத்துடன், தன் ஒற்றைப் புருவத்தை மேலேற்றி மெல்லியதாகப் புன்னகத்துத் தன் மகிழ்ச்சியைக் கூற, மேலும் உடைந்து போனார் விக்னேஷ்வரன்.

மிளிர்மிருதை தன் முன்னால் நின்றவனைப் பார்க்கப் பிடிக்காமல், தந்தையினருகே வந்து,

“போகலாமப்பா…” என்றாள் இறுக்கமாக.

பதில் பேசாது, விக்னேஷ்வர், மிளிர்ம்ருதையையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

அவர்கள் அறையை விட்டுச் செல்லும் வரை சிலையாக நின்றிருந்தவனின் முகத்தில் முதன் முதலாக மெல்லிய வலி படர்ந்தது. தன் கரத்திலிருந்த அந்தக் காகிதங்களைத் தூக்கிப் பார்த்தவனுக்கு எல்லையில்லா வேதனை அவனை ஆக்கிரமித்தது.

மீள முடியா வலியென்று இதைத்தான் சொல்வார்களோ… விரக்தியுடன், அதைத் தூக்கி அங்கிருந்த கட்டிலில் விசிறி அடித்துவிட்டு, குளியலறைக்குள் புகுந்தவனால் அதற்கு மேல் தாள முடியவில்லை. ஏனோ நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.

யாரோ கழுத்தை நெருப்பது போன்ற உணர்வில், அணிந்திருந்த ஷேர்ட்டின் கழுத்துப் புர இரு பட்டன்களைக் கழற்றி விட்டவனுக்கு அப்போதும் தவிப்புக் கூடியதின்றிச் சற்றும் குறையவில்லை.

ஆக்ரோஷத்தோடு, தன் மேல் சட்டையைக் கழற்றி எறிந்து விட்டுத் தாள முடியா வலியுடன் திரும்பி நின்று தன் தலையைப் பின்னுக்குச் சரித்தவனின் மூச்சு வேகமாக வெளியேறியது. கூடவே, அவனுடைய முதுகின் விம்பம் அங்கிருந்த கண்ணாடியில் பட்டுத் தெறித்தது.

அது என்ன? முதுகு முழுவதும் ரணமாய், புதிதாய் பிறந்த தீக்காயங்கள் அசிங்கமாய்க் காட்சி கொடுக்க, அவை சிவந்து போய் நீர் கோர்த்து பல இடங்களில் வெடித்து நீர் வடிந்து சிவப்பும் பச்சையும் இளஞ்சிவப்புமாய்க் கலந்து உள்தோல்… அகோரமாய் அருவருப்பாய் வெளியே தெரிந்தது. போதாதற்கு மார்பிலும் அங்கும் இங்குமாய்க் கொப்பளங்கள். ஆனால் அவனோ அந்தக் காயத்தைச் சற்றும் கருத்தில் கொண்டானில்லை.

அது கொடுத்த ரணம் வலி எரிச்சல் கூட அவனுக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. அதை விடப் பல மடங்கு அதிகமாக அவன் உள்ளம் எரிந்துகொண்டிருந்ததே.

பான்ட் பெல்டின் மீது தன் இரு பெரும் விரல்களைச் சொருவி அங்கும் இங்கும் சற்று நேரம் நடந்தான். அப்படியிருந்தும் அந்தத் தவிப்பும் வலியும் கூடியதேயன்றி சற்றும் குறைவதாயில்லை.

மீண்டும் ஒரு முறை சென்று தீப்படுக்கையில் படுக்க வேண்டும் என்கிற வேகமும் வெறியும் எழுந்தது. அவை கொடுக்கும் நரக வலியை அனுபவிக்க வேண்டும் போல உள்ளம் கதறியது. போதவில்லை… அவனே அவனுக்காய்க் கொடுத்துக்கொண்ட தண்டனை போதவில்லை…

வலியுடன் நின்றவாறு விழிகளை இறுக மூடியவனுக்குக், கண்கள் இரண்டும் எரிந்துகொண்டு வந்தன. விழிகளை இறுக மூடித் திறந்துவிட்டு நிமிர்ந்தபோது அங்கிருந்த கைகழுவும் தொட்டியின் மீது பதிக்கப்டப்டிருந்த கண்ணாடியில் இப்போது முகத்தின் பிம்பம் தெரிந்தது.

ஒரு வித வேகத்துடன் தொட்டியருகே சென்றவன், தன் முகத்தையே அந்தக் கண்ணாடியில் பார்க்க, அவனையும் மீறிய அருவெறுப்பில் அவனுடைய முகம் கசங்கியது.

உடலில் தெரிந்த தீக்காயங்களை விட, அவனுடைய முகம் அகோரமாகக் காட்சியழிக்க, அதற்கு மேல் அவனால் அவனையே அடக்க முடியவில்லை.

“வை… வை… வை…” என்று சீறியவாறு அசுரத்தனமாக மூச்சு பெரும் ஓசையுடன் வெளிவர, ஓங்காரமாகக் கத்தியவாறு ஓங்கித் தன் ஆத்திரம் குறையும் வரை, அந்தக் கண்ணாடியைத் தன் வலக்கரத்தால் அடி அடி என்று அடித்து உடைத்தான். கண்ணாடி உடைந்து அவனுடைய கரத்தைக் கிழித்து இரத்தத்தை வரப்பண்ணியதே தவிர, அவனுடைய வேகமும், சீற்றமும் ஆகங்காரமும் எள்ளளவும் குறையவில்லை.

இப்போது உடைந்து விழுந்த கண்ணாடிகள் தவிர, எஞ்சியிருந்த கண்ணாடிகளில், அவனுடைய முகம் உடைந்ததுபோலப் பிம்பத்தைக் காட்ட, ஓரளவு மனம் சமாதானப் பட்டவனாகத் தன் கரத்தை விலக்கினான்.

ஆறாக ஓடிய இரத்தத்தை அவன் சிறிதும் கணக்கில் எடுப்பதாகயில்லை. கைகழுவும் தொட்டியில், தன் இரு கரங்களையும் பதித்துச் சற்றுக் குனிந்து நின்று ஆழமாக மூச்செடுத்து விட முயன்றான். ஆனாலும் தவிப்பு சற்றும் குறையவில்லை.

உடல் முழுவதும் கண்டலுடன், ஆங்காங்கே காயங்கள் இரத்தம் பூசியிருக்க, அதித வலியால் இதழ் கடித்து, புருவங்கள் சுருங்க, அவனுடைய, அசுரத்தனத்தைத் தாங்க முடியாது தவித்துத் துடித்து நடுங்கிய உடல், மீண்டும் மீண்டும் அவன் மனக்கண்ணில் வந்து நின்று மேலும் அவன் முகத்தைக் கசங்கச் செய்தது.

அந்த மெல்லிய மேனியின் மென்மையும் அவனை நிலையிழக்கச் செய்தது.

அவள் பட்ட வலியை விடவா அவன் ஏற்றுக்கொண்ட இந்தத் தீக்காயங்கள் கொடுத்துவிடப் போகின்றன. ஏரிந்த முதுகை வருடுவதற்காகத் தன் கரத்தைக் கொண்டு சென்றவன், பின் அவசரமாகக் கீழிறக்கிக் கொண்டான். வலிக்கட்டும். நன்றாக வலிக்கட்டும்… அதுதானே அவனுக்கும் வேண்டியது.

மார்பில் காயத்தைத் தாங்கினால், தன்னையும் மீறிக் காயங்களுக்கு மருந்திட்டுவிடுவோமோ என்று அஞ்சித்தானே முதுகில் ஏற்றுக்கொண்டான். நன்றாக வலிக்கட்டும். வலிக்கும் போது, மருந்திட முடியாமல் துடிக்க வேண்டும்… ஒவ்வொரு முறையும் அந்தகக் காயங்கள் கொடுக்கும் வலியிலும், குடைச்சலிலும், அவள் பட்ட வேதனையின் துடிப்பை ஓரளவாவது உணர்ந்து கொள்ளும் ஆத்ம திருப்தி அவனுக்கு.

கரத்தில் வலி எடுக்கத் தூக்கிப் பார்த்தான். இரத்தம் அது பாட்டிற்கு வழிந்து கொண்டிருக்க, எந்த வித உணர்ச்சியுமில்லாது இரத்தம் ஓடிய தன் கரத்தைப் பார்த்தான். அவனையும் மீறி, மீண்டும் காயப்படுத்திய அந்தத் தளிருடல் நினைவுக்கு வந்தது. அதையும் மீறி அன்னையானவளின் உருவமும் மனக்கண்ணில் வர, பெரும் வலியுடன் குளிக்கும் தொட்டிக்குள் இறங்கியவன், குளிர் நீரைத் திறந்துவிட்டு அதன் கீழ் நின்றான்.

அவன் மேனியில் விழுந்த குளிர் நீர், அத் தீக்காயத்தின் எரிச்சலையும், வலியையும், சற்றும் குறைக்கவில்லை. மாறாகத் தாங்கமுடியா வலியைக் கொடுக்கவே செய்தது. கூடவே மனதில் எழுந்த காயங்களை அவனால் சற்றும் விலக்கமுடியவில்லை. விலக்கக் கூடிய வலிகளா அவை?

 

 

What’s your Reaction?
+1
6
+1
1
+1
0
+1
0
+1
10
+1
2
Vijayamalar

View Comments

Recent Posts

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 8/9

(8)   மிளிர்ம்ருதையும், விக்னேஷ்வரனும் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. இருவரும் பல்வேறு பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் சிக்கியிருந்ததால்,…

1 day ago

தொலைந்த எனை மீட்க வா…!- இறுதி அதிகாரம்

(41) “எப்படி இருக்கிறாய்?” அழுத்தமான குரல் வர, அவனை நிமிர்ந்த பார்க்கும் சக்தியற்றுத் தலையை மட்டும் ஆட்டி, “இ... இருக்கிறேன்...”…

2 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 39/40

(39) இரண்டு மாதங்களுக்குப் பிறகு, “ஷ்... விக்டோரியா... டோன்ட் க்ரை... மை லிட்டில் பேபி பம்கின்...” என்று கீழே விழுந்து…

4 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 5

(5)   விழிகளை மூடியவாறு இருந்தவள் அதே கனவு கலையாதவளாகத் தன் விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன்தான் வந்துகொண்டிருந்தான். அந்த…

5 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 38

(38) ஆடிப்போனாள் திகழ்வஞ்சி. ஓடிச்சென்று அவனிடமிருந்து பறிக்கவும் முடியாமல், அவன் அதைப் பார்த்துவிடக் கூடாதே என்கிற நடுக்கத்தோடு முகம் வெளிற…

6 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 4

(4)   எல்லா நாட்களும் ஒரே நாள்தான். ஆனால் திருமண நாள் என்பது… அது ஒவ்வொரு இளம் பெண்களின் வாழ்விலும்…

1 week ago