Categories: Ongoing Novel

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3

(3)

 

தன்னவனைக் கண்ட அதிர்ச்சியில் பேச நா எழாது தன் நீண்ட விழிகளை மேலும் விரித்தவாறு அவனைப் பார்க்க, அவளுடைய அதிர்ந்த பார்வையைக் கண்ட அபயவிதுலனுக்குப் புன்னகை மேலும் விரிந்தது.

அந்த நகைப்பினூடே அவளைப் பார்த்து, தன் வலக்கரத்தை மேலே தூக்கி, சுட்டுவிரலால் இலகுவாகத் தன் நெற்றியைத் தொட்டெடுத்து,

“ஹாய்…” என்றான். அப்போதுதான் தன்னை மறந்து அவனைப் பார்த்துக்கொண்டிருப்பது புரிய, அளவில்லா நாணத்தில் வதனம் சிவக்கக் கூடவே எழுந்த பெரும் சங்கடத்தில் நெளிந்தவளாக,

“ஹ… ஹாய்…” என்றாள். ஏனோ அவளுக்குக் காற்றுதான் வந்தது.

மிளிர்ம்ருதைக்குத் தன்னை எண்ணியே பெரும் வியப்பாக இருந்தது.

அவனைப் பார்க்க வேண்டும். அவனுடன் பேச வேண்டும். அவனைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்…’ என்று எண்ணிய எண்ணமெல்லாம் காற்றோடு கரைந்து போக, அந்த மங்கிய ஒளியிலும், கூர்மையாக அவளையே ஊடுருவிய அவன் விழிகளின் சங்கமத்தில், தன்னை மறந்து திளைத்துப் போனவளாக அவனையே இமைக்காது பார்த்துக்கொண்டிருக்கிறாளே… அவளைப் பற்றி அவன் என்னதான் நினைப்பான்.

கூடவே அவனுடைய அருகாமையும், அவன் மூச்சுக்காற்று படரும் இடத்தில் தானும் அமர்ந்திருக்கிறோம் என்கிற ஒருவித சிலிர்ப்பும், அந்த ஆண்மை நிறைந்த கரங்களின் வருடலில் உடல் வெம்மையிலும் உருகிக் குழைந்துபோகத் தயாராகியிருந்த அந்த நேரத்தில் தேவகியும், வனிதாவும் வாங்கவேண்டியவற்றை வாங்கிக்கொண்டு அவர்களின் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

தன்னுடைய இருக்கையில் ஒரு வாட்ட சாட்டமான கம்பீரமான ஒரு ஆண் இருப்பதைக் கண்டதும், முதலில் குழம்பிய தேவகி, பின் சற்றுக் கோபமாக,

“ஹலோ மிஸ்டர்..! யார் நீங்கள்…? இது என்னுடைய இடம்..!. மரியாதையாக எழுந்து வேறு இடத்திற்குச் செல்லுங்கள்… ஒரு பெண் தனிமையில் இருக்கக் கூடாதே… உடனே கடலை போட வந்துவிடுவீர்கள்… எழும்புங்கள் சார்…!” என்றாள் எரிச்சலை மறைக்காத குரலில்.

தேவகி புதிதாக அபயவிதுலனைக் கண்டதும், தன் போக்கிற்குப் பேசத் தொடங்க, மிளிர்ம்ருதைக்கு முதலில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதிர்ந்து தெளித்தவள், தன்னவனின் விழிகளில் தெரிந்த ஒரு வித சூட்டைக் கண்டு, அவனுடைய மனநிலையை உடனே புரிந்துகொண்டவளாக,

“ஏய்… தே… தேவகி… ப்ளீஸ்டி… சத்தம் போடாதே…!” என்று சங்கடத்துடன் தட்டுத்தடுமாறிக் கூறத்தான், தேவகிக்கு ‘பல்ப்’ எரிந்தது. சந்தேகத்துடன் மிளிர்ம்ருதையை உற்றுப் பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தன.

முகம் முழுவதும் நாணத்தால் சிவந்திருக்க, துடித்த உதடுகளை அடக்கும் வழி தெரியாமல், நெளிந்துகொண்டிருந்த தன் தோழியின் நிலைப் புரிந்துகொண்டவளுக்குக் கண்கள் மின்னின். திகைப்புடன், சற்றுக் குனிந்து அந்தப் புதியவனை ஏறிட்டாள்.

“ஏய்… தேவகி…! யாரடி நமது குழுவில்…, நமக்கே தெரியாமல் ஒரு ஆண்மகன்… பார்க்க செமையாத்தான் இருக்கிறான்… பேசாமல், நான் வச்சுக்கவா…?” என்று தேவகியின் காதில் வனிதா குசுகுசுக்க, சிரமப்பட்டுத் தன் முகம் மாறாமல் காத்த தேவகி, தன் சப்பாத்துக் குதியால், தன் தோழியின் காலின் மீது பதித்து நசுக்கினாள்.

“ஏய்….!” என்று வலிபொறுக்க முடியாது வனிதா அலற முன்பே அவளைத் திரும்பிப் பார்த்து,

“சார் யார் என்று தெரியவில்லையா… வனி…! நன்றாகப் பார்…! உற்றுப் பார்…!” என்று கண்களால் தலைகுனிந்திருந்த மிளிர்ம்ருதையைச் சுட்டிக் காட்டியவாறு கூறிவிட்டுத் திரும்பி தன் தோழியிடம்,

“சார்தான் உன்னுடைய வருங்காலக் காவலரா…? நாம் இத்தனை பேரும் உன் கூடத்தானே இருக்கிறோம்… அது எப்படிடீ… நமக்கும் தெரியாமலே தகவல் கொடுத்து வரவழைத்தாய்…?” என்று வியந்தவாறு கேட்க அவளைப் பதட்டத்துடன் பார்த்த மிளிர்ம்ருதை,

“ஹே… எனக்கொன்றும்… தெரியாது… சத்தியமாகத் தெரியாது… நான் தகவல் கொடுக்கவில்லை… அவராகத்தான்… அவருக்கு யார் சொன்னார்கள் என்றும் தெரியாது…” என்று பதற, தன் இடையில் கரம் வைத்த தேவகி,

“அடேங்கப்பா…! ஒன்றும் தெரியாத பாப்பா… உள்ளே போய்ப் போட்டாளாம் தாழ்ப்பா…! சரி சரி நம்பிவிட்டேன் மிளிர்… நண்பிகளே…! இப்போது நாம் இங்கே அதிகப்படி… வாருங்கள்… வேறு இருக்கைக்குச் செல்லலாம்…” என்று கூறிவிட்டுத் வனிதாவின் கரத்திலிருந்த பாப்கார்னைப் பறித்து, மிளிர்ம்ருதையிடம் கொடுத்துவிட்டு,

“அளந்து போடுமா கடலையை.. சீ பாப்கார்னை…!” என்று விட்டுத் திரும்பி அபயவிதுலனைப் பார்த்தாள்.

“சாரி சார்…! நீங்கள் யார் என்று தெரியாமல்…” என்று விளக்கப்படுத்த முயன்றாள். உடனே தன் விழிகளை ஒரு கணம் மூடித் திறந்த அபயவிதுலன்,

“இட் இஸ் ஓக்கே தேவகி…! உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தாலும், இதைத்தான் செய்திருப்பேனோ என்னவோ…. சோ டேக் இட் ஈசி…!” என்று இதமாகக் கூற, அனைவரும் அவனுடைய குரலில் வாயடைத்துப் போயினர்.

“அடேங்கப்பா…! இது என்ன குரலா…! ஒரு ஆண்மகனின் குரல் எப்படி இருக்கவேண்டும் என்பதை அவனுடைய குரலை வைத்துத்தான் அறிந்துகொள்ள வேண்டும். அத்தனை ஆழமும், ஆதிக்கமும் இருந்தன அந்தக் குரலில். பேசியது என்னவோ சொற்ப வார்த்தைகளே. ஆனால் அந்தக் குரலை யாருமே மறக்க முடியாத அளவுக்கு ஆழமாக மனதில் பதிந்துவிட்டிருந்தது. அந்தக் கணமே, எல்லோருக்கும் அவனை நன்கு பிடித்துப் போனது.

“நன்றி சார்…!!” என்ற தேவகி, திரும்பி மிளிர்ம்ருதையைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு, இன்னும் மூன்று நாட்களின் மணமக்களாகப் போகிறவர்களைத் தனிமையில் விட்டுவிட்டு நண்பர்களை அழைத்துக்கொண்டு வேறு இடம் நோக்கிச் சென்றாள்.

தோழிகள் மறைந்ததும், மீண்டும் தனக்கு மிக மிக அருகே அமர்ந்திருந்தவனை ஆவலுடன் பார்த்தாள் மிளிர்ம்ருதை.

என்று படத்தைப் பார்த்தாளோ, அந்தக் கணமே, இதயத்திற்குள் தாவிக் குதித்தவனை, கண் முன்னால் கண்டதும், அவளால் சிறிதும் நம்பமுடியவில்லை. ஒருவேளை கனவு ஏதாவது காண்கிறோமோ என்கிற ஐயம் வேறு எழுந்தது. தன்னையும் மறந்து தன் கரத்தில் கிள்ளிப் பார்த்தாள். வலித்தது.

‘அடி ஆத்தி… நிஜமாகவே அவன் அருகே அமர்ந்திருக்கிறானா…?’ என்று எண்ணியவாறு அவன் முகத்தை நோக்க, அந்தக் கணம் அவனுடைய முகத்தில் ஒருகணம் தெரிந்த கடுமை சட்டென்று மாயமாக மறைந்து சென்றது. நல்லவேளை அவன் மேல் இருந்த மயக்கத்தில் அதை அவள் கவனிக்கவில்லை.

மிளிர்ம்ருதைக்கோ அவனோடு என்ன பேசுவது, ஏது பேசுவது என்று புரியவில்லை. அதனால் மடியில் தாங்கியிருந்த தன் கரங்களைப் பார்த்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தாள். போதாததற்கு ஆளுமை நிறைந்த அந்த ஆண்மகனுடைய அருகாமை, அவளுக்குப் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

ஏனோ இந்தக் கணமே, என்னோடு வருகிறாயா என்று கேட்டால், எதைப்பற்றியும் சிந்திக்காது, அவன் கரங்களைப் பற்றி மகிழ்ச்சியுடனேயே சென்றிருப்பாள். அந்த அளவுக்கு அவன் மீது மயக்கத்திலிருந்தாள்.

அவனோ சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அவளுடைய இருக்கையின் கைப்பிடி மீது தன் வலக்கரத்தைப் போட்டு நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டவன், அவள் புறமாகத் தன் தலையைத் திருப்பிச் சற்றுக் குனிந்து,

“வெல்… நீ என்னைப் பார்க்க ஆசைப்படுவதாக உன்னுடைய அப்பா கூறினார்…” என்றவன், மீண்டும் நிமிர்ந்து வாகாக இருக்கையில் சரிந்து, தன் கவனத்தைத் திரைக்குச் செலுத்தத் தொடங்கினான்.

இவளுக்கோ தன் தந்தையை நினைக்க உருகியது. தன் விருப்பை மதித்து, அவனை வரவழைத்திருக்கிறாரே… இப்படி ஒரு தந்தை கிடைக்கக் கொடுத்தல்லவா வைத்திருக்கவேண்டும். மனம் முழுவதும் கனிந்து போனது மிளிர்ம்ருதைக்கு.

சாய்ந்தமர்ந்திருந்தவனுக்குப் பொறுமை சற்றுக் குறைவோ? தன் நீளக் கால்களை நீட்ட முயன்றவன், முன்புற இருக்கை தடுக்க, சின்னச் சலிப்புடன், வலக்காலை மடித்துத் தொடைக்கு மேலே போட்டுக்கொண்டு அவள் புறமாகத் திரும்பியவன்,

“என்னிடம் ஏதாவது சொல்ல இருக்கிறதா மிருதை…” என்றான் தன் கரகரத்த குரலில்.

மிளிர்ம்ருதைக்கு, அவன் கேட்டது எதுவுமே காதில் விழவில்லை. அவள்தான், அவனுடைய இந்த அருகாமையினால் பாழாய்ப் போன உள்ளம் தடதடக்க, அவனுடைய நெருக்கமாகத் திரண்ட, பரந்து விரிந்த மார்பில் தன் தலையைச் சாய்க்கவேண்டும் என்று எழுந்த அந்த வேகத்தை அடக்குவதற்குப் பெரிதும் பாடுபட்டுக்கொண்டிருந்தாளே… இந்த லட்சணத்தில் அவன் சொல்வதை எப்படி உள்வாங்குவது. அவளுடைய விரிந்த விழிகளைக் கண்டு மெல்லியதாகப் புன்னகைத்தவன்,

“என்ன… அப்படிப் பார்க்கிறாய்… என் முகத்தில் என் கேள்விக்கான பதில் எழுதி இருக்கிறதா என்ன?” என்று சற்றுக் கிண்டலாகக் கேட்க, இவளோ மேலும் சிவந்து போனாள்.

“அது… அது வந்து… நான்…” என்று தடுமாறியவளைக் கண்டு, முகம் கனிய, அது வரை அவளுடைய இருக்கையின் மேற்புறத்தில் போட்டிருந்த தன் கரத்தை விலக்கிய அபயவிதுலன், தன் கரம் கொண்டு அவளுடைய இடது கரத்தை அழுந்த பற்றி அழுத்திக் கொடுத்தான்.

அந்தக் கணம், அந்த முதல் தொடுகையில் தன் மூச்செடுப்பதையும் மறந்தாள் அக்காரிகை. அவளையும் அறியாது அவளுடைய உள்ளத்தில் அண்ட சராசரங்களும் தங்கள் இயக்கத்தை நிறுத்திக்கொண்டன. வானுக்கும் மண்ணுக்குமான தொடர்புகள் அறுந்து போயின. அந்தப் பூலோகத்தில் அவனும் அவளுமாய்… தெவிட்டாத மகிழ்வில் அவனுக்காய் அவளும், அவளுக்காய் அவனுமாகப் புதுக் காவியம் கண்டுகொண்டாள்.

அவனோ பற்றியிருந்த கரத்தை சற்றும் விட்டுவிடாது, விரல்களுக்கூடாகத் தன் விரல்களைச் செலுத்தி அழுத்திக் கொடுக்க, ஐந்து விரல்களும் பத்து விரல்களாகி, பின் பெருவிரலால் காமன் கதை பேசத் தொடங்கினான்.

சற்று கூடுதல் வெம்மையான அவனுடைய கரம். சற்றுக் குளிர்ந்து போன அவளுடைய கரத்தினூடாக… விரல்களினூடாகச் சமரசம் பேசி, அம் மெல்லிய வெண் கரத்திற்குத் தன் முத்தத்தால் சூட்டைப் பகிர்ந்தளித்துக்கொண்டிருந்த நேரம், இது நாள் வரையும் காதல் என்றால் என்ன, காமம் என்றால் என்ன என்பதன் பள்ளிப் பாடம் கூட அறியாத அந்தத் தையளவளுக்கு அவனுடைய பலம் பொருந்திய அழுத்தமான பெரிய விரல்கள், ஆரம்பப் பாடத்தைச் சொல்லிக்கொடுக்க முயன்ற அந்தத் தருணம், தலை முதல் கணுக்கால் வரையும் சிலிர்த்துப்போனது. அந்த ஒற்றை ஸ்பரிசத்தில், அவனின்றி அவளில்லை என்பதையும், அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதையும் ஆணித்தரமாகப் புரிந்துகொண்டாள்.

தன் நிலை கெட்டிருந்தவளை அவன் சற்றும் கவனத்தில் கொண்டானில்லை. தன் பெரிய பலம் பொருந்திய கரங்களில் பின்னிப் பிணைந்திருந்த அவளுடைய மென்மையான கரத்தைத் தூக்கி அந்தத் திரை வெளிச்சத்தில் சற்று நேரம் வெறித்துப் பார்த்தான்.

அவனுடைய ஒற்றைப் பிடியில் அப்படியே காணாமல் அடங்கிவிடும் பச்சை நரம்புகள் ஓடிய வெண்மையும் சிவப்பும் கலந்த பட்டையொத்த மென்கரம் அது. அவனுடைய கம்பீரமான மானிறக் கரத்திற்கு மிகப் பொருத்தமாக, பலம் பொருந்திய பாறையின் மீது பூத்த இளஞ்சிவப்பு மலரென வீற்றிருந்தது அத்தளிர் கரம்.

அக் கரத்தின் அழகில் மெய்மறந்து போனவனாகத் தன் விரல்களின் சிறையில் சிக்கியிருந்த கரத்தை விடுவித்துப் பெரும் பொக்கிஷத்தை ஏந்துவது போலத் தன் கரத்தில் ஏந்தியவன், பெருவிரலால் கைத்தலத்தை வருடிக் கொடுக்க, இவன் உடலிலும் மெல்லிய நடுக்கம். தொட்டாலே கண்டிவிடும் போன்ற வழுவழு தோல்கள். எப்போதுமே அக் கரத்தைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டும் என்றெழுந்த ஒரு வித உணர்வில் அதிர்ந்துபோனான் அபயவிதுலன்.

சற்று நேரம் அக் கரத்தையே வெறித்துப் பார்த்து வருடிக் கொடுத்தவன், அவசரமாகத் தன் மனதில் எழுந்த அந்த உணர்வை அருகேயிருந்தவள் உணராது உதறித் தள்ளிவிட்டு அவள் கரத்தைப் பக்குவமாகப் பற்றியவாறே, இடக் கரத்தைப் பான்ட் பாக்கட்டிற்குள் நுழைத்து அங்கிருந்த ஒரு சிறிய வெல்வட் பெட்டியை வெளியே எடுத்துப் பெரும் விரலால் திறந்தான்.

அங்கே, அந்த வெளிச்சத்திலும் ஒளியை அள்ளித் தெறித்த மாசற்ற வைரம் பதித்த தங்க மோதிரம். அதைக் கண்டு, தன்னை மறந்து பிரமித்தவளாக, அந்த மோதிரத்தையும், அவனையும் மாறி மாறிப் பார்த்தாள் மிளிர்ம்ருதை.

அவளும் வசதியானவள்தான்… ஆனால் அந்த வைரம்… அதைப் பார்க்கும்போதே அதன் பெறுமதி எத்தகையதாக இருக்கும் என்பது தெரிய, அவளையும் அறியாது இறுகிய பிடியிலிருந்த தன் கரத்தை விடுவிக்க முயன்றாள். அதனை உடனே புரிந்துகொண்டவனாக ஒரு இளகிய புன்னகை ஒன்றைச் சிந்தியவாறு அவள் கரத்தை அழுந்த பற்றி, அவளை ஏறிட்டுப் பார்த்து,

“திஸ் இஸ் ஃபோர் யு… மை டியர்… ஓன்லி ஃபோர் யு… என் வாழ்வினை மிளிரச் செய்யக் காலடி எடுத்துவைக்கும் இந்த மிருதைக்கு, என் அன்புப் பரிசு…” என்றவாறு அவளுடைய அதிர்ச்சியையும் பொருட்படுத்தாது, தன் போக்கில் அந்த மோதிரத்தை எடுத்து, அவளுடைய இடக் கரத்தின் மோதிர விரலில் மெதுவாகப் போட்டுவிட, அது கச்சிதமாக அளவெடுத்துச் செய்ததுபோல அவளுடைய மோதிர விரலில் எந்தச் சிக்கலும் இல்லாது குடிபுகுந்தது.

அவளுடைய விரலையும் அதற்குப் பொருத்தமாகக் குடியேறிய மோதிரத்தையும் கண்டவனின் விழிகளில் ஒரு வித கனிவு வந்து குடிபுகுந்தது. பெருவிரலால் அந்த மோதிரத்தை வருடிக் கொடுத்தவன், நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்து,

“இந்த வைரத்திற்கு… இந்த வைரம்…” என்றான் பட்டை ஒத்த மென் குரலில்.

மிளிர்ம்ருதைக்கு நம்பவே முடியவில்லை. அதுவரை சாதாரணமாக இருந்த அவளுடைய வெண் கரம், இப்போது பெரும் பொழிவுடன் பிரகாசித்துக்கொண்டிருப்பதை ஒரு வித ஆச்சரியத்துடன் பார்த்தாள். அது அவன் போட்ட மோதிரத்தாலா, இல்லை அவன் பற்றிப் போட்டதாலா என்று தெரியவில்லை. ஆனாலும் அழகு கூடியது என்பது மட்டும் உண்மை.

அவனோ, அம் மென் கரத்தினைத் தூக்கித் தன் உதடுகள் நோக்கி இழுத்து அதில் அழுத்தமாகத் தன் ஈர உதடுகள் முழுவதும் பதியும் விதமாக முத்தம் பதித்துவிட்டு விடுவிக்க, செங்கொழுந்தாகிப்போனாள் அத் தேவமகள்.

முதன் முதலாக ஒரு ஆண்மகனின் உதட்டுத் தொடுகையில் உடல் சிலிர்த்துப் போனாள். அவள் ஒன்றும் கட்டுப்பெட்டியல்ல… அவளுக்கும் ஆண் நண்பர்கள் உண்டு. ஆனாலும் அவர்களை ஒரு எல்லைக் கோட்டிற்குள்ளேயே வைத்திருப்பாள். கை குலுக்குவது, தட்டிக்கொடுப்பது… அவ்வளவே.

ஆனால் இது… யாரிடமும் அறியாத உணர்விது. புரியாத புதிர் இது. தெரியாத வழியிது. அவன் தொட்ட உடன் உடல் குழைகிறதே… இது எப்படிச் சாத்தியம். இப்போதுதான் அவனை நேராக முதன் முதலாகப் பார்க்கிறாள். ஆனாலும், அவன் என்னவன் என்கிற உணர்வு அவளை முற்று முழுதாக ஆட்கொள்கிறதே. இதோ முத்தமிட்டு விலகிவிட்டான்தான்… ஆனால் இன்னும் அவனுடைய உதடுகளின் ஈரம் இன்னும் என்னைச் சுகமாகத் தீண்டிக்கொண்டிருக்கின்றனவே… இது என்ன விந்தை வெறும் முத்தத்தில் பெண்மையைக் கரையச்செய்ய முடியுமா என்ன?

உள்ளம் படபடக்க, அவனுடைய உதட்டின் வருடுகையில் தன்னிலை கெட்டு, செழித்த செவ்விதழ்களைக் கடித்தவாறு தலைகுனிந்துகொண்டிருந்தவளை இமைக்காது பார்த்தான் அவன்.

அவனையும் மீறி, அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி இதயம் தாளம் தப்பித் துடிக்கலாயிற்று…

அந்த முகம், பிறை நுதலில் வில்லெனப் போர்தொடுக்கும் இமைகளுக்கு மத்தியில், சிறிய கருஞ்சாந்துப் பொட்டு. அதன் கீழ் மெல்லிய கூரான நாசி. சிவந்த அந்த உதடுகள், கனவைத் தேக்கியிருந்த அந்த விழிகள்… அதைப் பார்க்கும் போது, ஏதேதோ ஒரு வித உணர்வில் ஆட்பட்டவனாகத் தன் கரத்திலிருந்த அவளுடைய மெல்லிய கரத்தைப் பார்த்தான்.

என்ன நினைத்தானோ, அவசரமாக அக் கரத்தை விடுவித்துவிட்டுத் தன் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு குனிந்திருந்த அவள் முகத்தை ஏறிட்டான். தலை தாழ்ந்தே இருந்தது. அவனையும் மீறி அம்மலர் முகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற ஒரு வித வெறி எழத் மார்பில் கட்டியிருந்த கரங்களை விலக்கி, அவள் புறமாகத் திரும்பி அமர்ந்து, அவள் நாடியை தன் இடது கரத்தால் பற்றி நிமிர்ந்த வதனம் நிமிர்ந்ததன்றி, விழிகள் தாழ்ந்தே இருந்தன.

அவள் தாழ்ந்த விழிகளை மாறி மாறிப் பார்த்தவனுக்கு அப்போதே அந்த விழிகளைப் பார்க்கவேண்டும் என்கிற வேகத்தில்,

“ஹே… லுக் அட் மை ஐஸ்…” என்றான் போதையுடன். மெதுவாகத் தன் விழிகளை மலர்த்த, அவனுடைய இரு கூரிய விழிகளும் வண்டாகி மாறி மாறி அவள் விழிகளைக் கண்டு அதில் கவி பாடித் தேனெடுக்க முயன்றன. அடர்ந்த வில்போன்ற நீண்ட இமைகளுக்குக் கீழ், நீண்ட பெரிய நயனங்களில் காதல் என்னும் தேனுக்குப் பதிலாக நாணம் என்னும் மகரந்தத்தின் கொந்தளிப்பு. நாணம் இருந்தால் காதலும் இருக்கத்தானே வேண்டும். கள்ளுண்ட வண்டானான் அவன். அதே மயக்கத்தில் சற்று விழிகளைக் கீழிறக்கிப் பொட்டாய் மூக்குத்தியணிந்த அந்தக் கூரிய நாசியை அளவிட்டான். என்ன நினைத்தானோ, தன் சுட்டு விரலால் அம்மூக்குத்தியை மெதுவாகத் தொட்டுப் பார்க்க, அவனையும் மீறி உடலில் ஒரு வித சிலிர்ப்பு. அதில் தன் உதடுகளைப் பொருத்தும் வேகத்தில் அவளை நோக்கிக் குனிந்தவன், என்ன நினைத்தானோ, உதடுகளின் திசையை மாற்றி அவள் காதுகளுக்கு அருகாமை சென்று,“இட்ஸ் பியூட்டிஃபுள்… ஐ லவ் இட்” என்றான்.

அவன் பேசும் போது அசைந்த உதடுகள், அவன் காதுகளையும் வர்ணம் தீட்ட, இவள் உடலில் ஏற்பட்ட மெல்லிய அதிர்வில், உடல் முழுவதும் புல்லரிக்க, அதற்கு மேல் முடியாதவளான அவனுடைய அழுத்தமான உதடுகளுக்கும், தன் காதுகளுக்குமிடையே தன் வலக்கரத்தைப் பதித்து, ஒரு வித நடுக்கத்துடன்,

“ப்ளீஸ்…” என்றாள் தடுமாற்றத்துடன். தன் உதடுகளுக்கும், அவளுடைய காதுக்கும் இடையில் திரையிட்ட கரத்தைத் தன் இடக்கரத்தால் பற்றிக் கீழிறக்கியவன்,

“ப்ளீஸ்… ஃபோர் வட்…” என்றான் இன்னும் தன் விழிகளை அவள் முகத்திலிருந்து விலக்காமலே.

“எ… எல்லோரும் பார்க்கிறார்கள்… விதுலா…” என்றதும், அவளுடைய அந்த விதுலா என்கிற அழைப்பில், சர்வமும் உருகிப்போனான் அபயவிதுலன். இதுவரை அன்னியர் யாரும் அவனை அப்படி அழைத்ததில்லை. எல்லோருக்கும் அவன் அபயன். இல்லையென்றால் அபயவிதுலன்.

“ஓ… மை ஏஞ்சல்…” என்றவன்,“மற்றவர்கள் பார்த்தால் என்ன… அவர்களுக்காகவா நாம் வாழ்கிறோம்… இல்லையே…” என்று இவன் மெல்லிய புன்னகையுடன் கேட்க, ஏனோ இவளுடைய உதடுகள் மீண்டும் முல்லைப் பற்களுக்குள் சிறைப்பட்டுக் கொண்டன.

அளவிடமுடியா வெட்கம் ஆட்கொள்ளும் போது, அப்படி உதடுகளைச் சிறைப்படுத்திக் கொள்வது அவளுடைய வழக்கம் என்பதை அவன் உடனே புரிந்துகொண்டான். ஆனாலும் உடலின் சூடு சற்றும் குறையவில்லை என்பதைப் பற்றியிருந்த கரத்தினூடாகப் புரிந்துகொண்டவனுக்கு மெல்லிய நகைப்பு ஏற்பட்டது.

“ஹே… நீ இப்படி வெட்கப் படும்போது, உன்னை அப்படியே…” அவள் முடிக்கவில்லை, மேலும் வெட்கத்தில் இவள் உடல் சூடேற, அதைக் கண்டு ரசித்தவனுக்குத்தான் தன்னை அடக்க முடிந்திருக்கவில்லை.

வேட்கையுடன், அவனுடைய கவனம், முல்லைப் பற்களுக்குள் சிறைப்பட்டிருந்த செழித்த செவ்விய இதழ்களில் சென்றது. ஒரு வேகத்துடன் அவ் இதழ்களைத் தன் பெருவிரலால் விடுவித்து, அவ் இதழ் அழகில் கவரப்பட்டவனாக, அது வரையப்பட்டிருக்கிறதா? இல்லை செதுக்கப்பட்டிருக்கிறதா? என்று சந்தேகம் கொண்டவன் போலத் தன் பெரு விரலால், கீழ் உதட்டை வருடிக் கொடுத்தவனுக்கு, தொண்டையில் ஒரு வித அவஸ்தையின் அசைவு. அவ் இதழ்களைச் சுவைத்தால் தேன் போலக் கரையுமா? இல்லை கனிபோல் சுவைக்குமா? என்று அறியும் ஆவல் கொண்டவனாய், அவ் உதடுகளைத் தன் உதடுகளுக்குள் ஆயுள் கைதியாக்கும் வேகத்துடன், குனிய,

“சார்…! என்ன சார்…! திரையை மறைத்தால் எப்படிப் படம் பார்ப்பது…” என்று பின்னால் அமர்ந்திருந்த பார்வையாளர் கடுகடுக்க, அப்போதுதான் இருவருக்குமே சுயு உணர்வு வந்தது.

தான் நிற்கும் நிலை அப்போதுதான், உரைக்க, பதற்றத்துடன் நிமிர்ந்து அமர்ந்துகொண்ட மளிர்ம்ருதைக்கு ஏனோ உடல் வெடவெடத்தது.

‘என்ன காரியம் செய்ய இருந்தாள்… ஒரு கணத்தில் தன்னிலை கெட வைத்துவிட்டானே… அம்மாடியோவ்… அதுவும் பொது இடத்தில்…’ நினைக்கும் போதே குப்பென்று வியர்த்தது. கூடவே, அட பூஜை வேளை கரடியாக அந்த இனிய உணர்வைக் கலைத்து விட்டார்களே…’ என்கிற ஒரு வித ஏமாற்றமும் எழத்தான் செய்தது.

அதே நேரம்,“ஒட்டகச்சிவிங்கி போல வளர்ந்துவிட்டு, இப்படி மறைத்தால் என்ன செய்வது… சும்மாவே திரை தெரிய மாட்டேன் என்கிறது… இதில்… இப்படிப் பனைமரத்தை நடுவில் வைத்தால்…” என்று பின்னாலிருந்தவர் தன் இயலாமையைப் புறுபுறுப்பாக வெளிப்படுத்த, அதைக் கேட்ட மிளிர்ம்ருதை, தன்னை மறந்து ‘க்ளுக்’ என்று நகைத்தாள்.

இவன் சிரிக்காவிட்டாலும், விழிகளில் மெல்லிய நகைப்பு இருக்கவே செய்தது. ஆனால் விழிகள் மட்டும், சூரியனைத் தேடும் தாமரையாக மலர்ந்திருந்த அந்த முகத்தை விட்டு விலகவேயில்லை. கூடவே வேறு யோசனைகளும் வர, இப்போது உதடு கடிக்கும் முறை அவனானது. சற்று நேரம் அப்படியே இருந்தவன், அவள் நெற்றியில் விழுந்து புரண்ட முடிக் கற்றைகளை ஒதுக்கிவிட்டவாறு,

“சாரி ஹணி… உன்னைப் பார்த்த நாளிலிருந்து… நான் நானாகவே இல்லை. உன்னைப் பார்க்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப் பட்டேன். பட்… உன்னைப் பார்த்தால் என்னைக் கட்டுப்படுத்துவது எனக்குச் சிரமமாக இருக்கும். இப்போது கூடப் பார்… எனது கரங்கள் என் கட்டுப்பாட்டில் இருக்கவே மாட்டேன் என்கின்றன…” என்றவனின் கரங்கள் இப்போது அவளுடைய கழுத்து வளைவில் தஞ்சம் புகுந்து பிடரியிலிருந்த பூனை முடிகளை வருடிக் கொடுக்க இவளுக்கு இன்ப உணர்வில் மயக்கமே வரும் போலிருந்தது.

“அதனால்தான் உன்னைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். இதனால் என் மீது உனக்கு எந்தக் கோபமும் இல்லை அல்லவா?” என்றவாறு அவளுடைய கன்னத்தில் பதித்து, பெருவிரலால் வருடிக் கொடுத்து, அவளுடைய விழிகளுக்குள் தன்னுடைய விழிகளைக் கலந்தவாறு கேட்க, மிளிர்ம்ருதைக்கு அந்த விழிகளை மீறிப் பேச முடியவில்லை.

வாயைத் திறந்தால், வெறும் காற்றுதான் வந்தது. தன் குரலின் மீது திடமான நம்பிக்கையில்லாததால், தன் தலையை மறுப்பாக அங்கும் இங்கும் ஆட்ட, தன் கரத்தை அவளிடமிருந்து பிரித்தெடுக்கப் பிரியப்படாதவனாக, மீண்டும். அவள் கழுத்திடுக்கில் தன் கரத்தைப் பதித்து, அங்கே ஓடிய பச்சை நரம்பை ரசனையுடன் பெருவிரலால் வருடிக் கொடுத்தவாறு,

“தாங்க்ஸ் பேபி… ஐ ஆம் சோ ஹப்பி…” என்றுவிட்டு, அவளுடைய கழுத்தை மெல்லியதாக அழுத்திவிட்டு,“இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்… இது தியட்டர் என்பதையும் நான் மறந்துவிடுவேன். சோ… நான் கிளம்புகிறேன்…” என்றவன் சற்றுத் தாமதித்தான். பின் தன்னவளைப் பார்த்து,

“நம்முடைய மணநாளுக்காக ஆவலுடன் காத்திருப்பேன்… என் வாழ்வின் மிக முக்கியமான நாள் அது… என்று என்னவளாகிறாயோ, அன்றுதான் நான் முழுமை பெற்றவனாவேன்…” என்றவன் மேலும் குனிந்து, அவள் நெற்றியில் தன் உதடுகளைப் பொருத்தி எடுத்து,

“எத்தனை மணிக்குக் கிளம்புகிறீர்கள்?” என்றான் யோசனையாக.

அதுவரை மலரென விரிந்திருந்த அவளுடைய முகம், அவன் செல்லப்போகிறான் என்பதைப் புரிந்துகொண்டதும், வாடிக் கூம்பிப் போனது.

‘செல்லப் போகிறானா? இனி வெள்ளிக்கிழமை வரையும் அவனைப் பார்க்க முடியாதா?’ பெரும் ஏமாற்றத்தில் கண்கள் கலங்க நின்றவள், அவனுடைய கேள்வியில் சுய நினைவு பெற்று,

“எட்டரைக்குத்தான் படம் முடியும்… வி… விதுலா…” என்றாள் சோர்ந்த குரலில். சற்று நேரம் அமைதி காத்தவன்,

“டோன்ட் டேக் சோ லாங்… மிருதா… படம் முடிந்ததும் வீட்டிற்குப் போய்விடவேண்டும்… புரிந்ததா?” என்று சற்றுக் கடுமையாகக் கூற, அந்தக் கடுமை கூடத் தன் மீதிருந்த அக்கறையால் என்பது புரிய, பெரிதும் மகிழ்ந்துபோனாள் அந்தப் பேதை.

அவள் சம்மதம் என்பது போலத் தலையை ஆட்ட,

“குட்…” என்றவாறு அந்த அரங்கத்தையே சிறிதாக்கியவாறு எழுந்தவன்

“டே கேர்… மிருதா… எப்போது வெள்ளிக் கிழமை வரும் என்று ஆவலாகக் காத்திருப்பேன்… வெய்ட் ஃபோர் மி…” என்றவன் மெதுவாக அவளுடைய கன்னத்தில் தட்டிவிட்டு விடை பெற, விழிகள் நிறைந்த காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அவளுக்குப் பெருமை பிடிபடவில்லை. எவ்வளவு காதலிருந்தால் அவன் இப்படிக் கூறுவான். அது மட்டுமா…! அவனுடைய கண்ணியம் வேறு நெஞ்சைத் தொட்டது. திருமணம் முடிக்கப் போகிற பெண்ணாக இருந்தாலும், அவன் அத்துமீறாமல் நாகரீகமாக நடந்துகொண்டது நெஞ்சைத் தொட்டது.

இப்படி ஒரு கணவன் கிடைக்க முற்பிறப்பில் ஏதோ தவம் செய்திருக்க வெண்டும் என்பது மட்டும் நன்கு புரிந்தது. தன் கரத்தில் புதிதாக ஏறியிருந்த அந்த மோதிரத்தைத் தூக்கிப் பார்த்தாள். காதலின் அடையாளம். அவனுடைய முதல் பரிசு. மறக்க முடியா, விலக்க முடியா விலைமதிப்பற்ற பரிசு.. விரல்களால் அவ் மோதிரத்தை வருடியவளுக்கு, ஏனோ அவனைத் தீண்டிய உணர்வு. வாடிய முகம் மீண்டும் மலர்ந்து போக,

தன்னை மறந்து விரல்களைச் சுருட்டி, ஒரு கரத்தோடு மறு கரம் பிணைத்துத் தன் மார்போடு இறுக அணைத்துக்கொண்டவளுக்கு, முன்னால் ஓடிக்கொண்டிருந்த திரைப்படம் சற்றும் மனதில் பதியவில்லை.

எல்லோருமே படத்திலிருந்த நகைச்சுவைக் காட்சியைக் கண்டு விழுந்து விழுந்து சிரிக்க மிளிர்ம்ருதை மட்டும், அவனுடைய முத்தத்தால் குறுகுறுத்த கரங்களையும், அவனுடைய தொடுகையால் மலர்ந்த கன்னங்களையும் கழுத்தையும் தடவிக்கொண்டிருந்தாள்.

 

 

What’s your Reaction?
+1
13
+1
5
+1
0
+1
0
+1
1
+1
0
Vijayamalar

View Comments

Recent Posts

தொலைந்த எனை மீட்க வா…!- 36/37

36) அன்று இரவு திகழ்வஞ்சி சாப்பிட்டுவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டுப் படுக்கை அறைக்கு வந்தபோது, அபராசிதன் ஆராவமுதனை…

15 hours ago

தொலைந்த எனை மீட்க வா…!- 35

(35) இதோ ஒரு மாதம் மின்னாமல் முழங்காமல் கடந்து சென்றுவிட்டிருந்தது. இந்த ஒரு மாதமும் எப்படிக் கடந்து சென்றது என்று…

3 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 1/2

(1)   “அ... அப்பா... என்னப்பா சொல்கிறீர்கள்? திருமணமா? அதுவும் எனக்கா?” என்று அதிர்ச்சி விலகாமல் தன்னுடைய பெரிய நீண்ட…

4 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 34

(34) இதோ திருமண நாள் எதிர்பார்ப்பின்றியே விடிந்தது. ஆயிரம் முறையாக அவள் செய்வது சரியா தவறா என்று குழம்பிப் போயிருந்தவள்…

5 days ago

தாமரையின் ‘உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்’ இறுதி அத்தியாயங்கள்

அனுமதி 28 ************   அன்று…   அமைச்சர்களுடன் விழா ஏற்பாடுகள் பற்றி பேசி முடித்த இளவரசி சந்திர வதனாம்பிகை,…

6 days ago

தாமரையின் ‘ உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்’ 23-27

அனுமதி 23 ****************   அன்று…            படைக் குடிலை அடைந்த கொடை நாட்டின்…

6 days ago