வைத்தியர் பேசிவிட்டுப் போன பின், இரண்டு நாட்கள் கழித்துத்தான் அதகனாரகன் விழிகளைத் திறந்தான். அவன் விழித்துவிட்டான் என்கிற செய்தியை தாதிவந்து சொன்னபோது, இவள் மட்டும்தான் விருந்தினர் அறையில் தனித்திருந்தாள்.
தன்னவன் விழித்துவிட்டான் என்பதை அறிந்ததும், அத்தனை களைப்பும் வலியும் பறந்து போக, ஒட்டமும் நடையுமாக அவனுடைய அறையை நோக்கிச் சென்றாள் மீநன்னயா.
அங்கே எதற்கு விழிகளைத் திறந்தோம் என்று கூறப் புரியாமல் முகட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அதகனாகரன். அவனுடைய உடலிலிருந்து ஒரு சில குழாய்களைத்தான் நீக்கியிருந்தார்கள். ஆனாலும் உடலை மறைக்கும் அளவுக்குக் குழாய்கள் இருக்க, இவளோ அழுகையும் புன்னகையும் போட்டிபோட அவனை நெருங்கி,
“அதகன்…” என்றாள் குரல் கம்ம. அவனோ அவளை எந்த உணர்ச்சியும் அற்றுப் பார்க்க, இவளோ,
“அதகனாகரன்… அதகனாகரன்… நீங்கள் விழித்துவிட்டீர்கள்… நீங்கள் விழித்துவிட்டீர்கள் அதகனாகரன் இதோ பாருங்கள்… நான்.. நான் வந்துவிட்டேன். நான் ஒரு மடச்சி… உங்கள் அன்பைப் புரிந்து கொள்ளாமல், சாரி… ரியலி ரியலி சாரி… இதோ பாருங்கள்… இனி நீங்கள் வேண்டிக் கேட்டாலும் உங்களுக்கு விவாகரத்துக் கிடையாது… இதோ நம் குழந்தை…” என்றவள் அவனுடைய கரத்தை எடுத்துத் தன் வயிற்றில் வைத்து,
“நம் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முழுவதும் இனி உங்களுக்குத்தான் சரியா… இனி என் ஆயுசு முழுவதும் நீங்கள் என் கூடத்தான்… நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறது அல்லவா…” என்று அவனுக்குக் கேட்கும் விதமாகச் சொன்னவள், அதன் பின் தாங்க முடியாதவளாக, அவனை நோக்கிக் குனிந்து, அவனுடைய, முகம், கரங்கள், மார்பு என்று கிடைத்த இடங்களில் தன் உதடுகளைப் பொருத்தி, இறுதியாக அவன் உதட்டிலே, தன் உதடுகளைப் பதிந்து விலகி, ஏக்கத்துடன், அவனைப் பார்த்து,
“பயந்துவிட்டேன் தெரியுமா… மிக மிகப் பயந்துவிட்டேன்… எங்கே உங்களைத் தொலைத்துவிடுவேனோ என்று…” என்றவளை அவன் உணர்ச்சி அற்றவனாகவே பார்த்துக்கொண்டிருந்தான்.
அதகனாகரன் விழித்ததை இட்டு அந்த வீடே கொண்டாடியது. மாதவி தன் கணவனை அணைத்து விம்மியே விட்டார். அவரும் அவள் மீதிருந்த கொபம் மறைந்து அணைத்து ஆறுதல் படுத்த அத்தனை பேருக்கும் உலகம் தம் வசமானது போலானது.
இறுதியாக வைத்தியர் சொன்னதுதான் நடந்தது. அதகனாகரன் அத்தனை பேரையும் குழப்பத்துடன் பார்த்தான். மீநன்னயாவை அவன் அறிந்துகொள்ளவேயில்லை. தன் மருமக்களைக் கூட அவனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது தடுமாறினான். நிறைய நினைவுகள் அவனுக்கு மறந்துபோயிருந்தன. புதிய செய்திகளைக் கிரகிக்கவும் அவனுக்குத் தடுமாற்றமாக இருந்தது. ஆனாலும் அத்தனை பேரும் அதை மகிழ்ச்சியுடனேயே ஏற்றுக்கொண்டார்கள். இதில் அழுது கரைய என்ன இருக்கிறது. அவர்களுக்கு அவன் உயிரோடு வேண்டும். மீண்டு வந்துவிட்டான். அதே போல அவனுடைய நினைவுகளும் மெல்ல மெல்லத் திரும்பும் என்கிற முழு நம்பிக்கையுடன், அதகனாகரனை வீட்டிற்கு அழைத்து வந்தனர் அனைவரும்.
வீட்டிற்கு வந்த போது முதலில் அது யார் வீடு எந்த இடம் என்றெல்லாம் குழம்பினான். நிறையத் தடுமாறினான். எப்படியோ சமாளித்துத் தடுமாறி நின்றவனை அழைத்துக்கொண்டு அவனுடைய அறையில் விட, ஏதோ புதிதாகப் பார்ப்பதுபோலத் தன் அறையைப் பார்த்தான் அதகனாகரன்.
பின் திரும்பி,
“இதுதான் என் வீடா?” என்றான் குழப்பமாய்…” மறுப்பாகத் தலையை ஆட்டிவிட்டு,
“இல்லை ஆகரன்… இது உங்கள் அக்காவின் வீடு…” என்று கூற,
“ஓ…” என்றவன்,
“ஏன் நான் அக்காவின் வீட்டில் இருக்கிறேன்… எனக்கென்று வீடில்லையா…?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்க,
“இருக்கே… இங்கேயிருந்து ஒன்றரை மணி நேரத் தூரத்தில் உங்களுக்கு ஒரு வீடு இருக்கிறதே…” என்றவளிடம் திரும்பி,
“நான் என் வீட்டிற்குப் போகவேண்டும்…” என்றான் அடுத்து. இவளோ மறுப்பாகத் தலையசைத்து,
“இல்லை ஆகரன்… நீங்கள் கொஞ்சம் நலப்பட்டதும், உங்கள் வீட்டிற்குப் போகலாம்…” என்று இதமாக மறுக்க,
“எங்கே என் கார் சாவி…” என்றான் அடுத்து. இவளோ பதறியவளாக,
“இப்போது எதற்கு வாகத்தின் திறப்பு…” என்றவளிடம்,
“நான் என் வீட்டிற்குப் போகவேண்டும்…” என்றான் அழுத்தமாய். இவளோ, சற்றுக் கலங்கியவளாக,
“உங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று தெரியுமா?” என்று இவள் கேட்க, இவன் குழம்பிப்போய் அவளைப் பார்த்தான்.
“என் வீடு.. என் வீடு எங்கே இருக்கிறது?” என்றான் அவளிடமே. அதைக் கேட்டு இவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. இது வரை அவனுடைய வீட்டிற்கு அவள் போனதே கிடையாதே. அது எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. இவள் தடுமாளியவாறு,
“எனக்கும் தெரியாது…” என்று கூற சந்தேகமாக அவனைப் பார்த்தான் அதகனாகரன்.
“உனக்கும் தெரியாதா… நீ உண்மையாகவே என் மனைவிதானா…?” என்றான் அடுத்து. இவளோ கலங்கியவாறு ஆம் என்று தலையை அசைக்க,
“அப்படியானால் என் வீடு உனக்கு எப்படித் தெரியாமல் போனது?” என்றான் மறு கேள்வியாக.
என்னவென்று சொல்வாள். சொன்னால்தான் புரிந்துகொள்வானா. தவிப்புடன் அவனைப் பார்த்து,
“அது ஏன் என்று பிறகு சொல்கிறேன் அதகன்…” என்றவளை வெறித்தவன்,
“ஏன் இப்போது சொல்வதற்கு என்ன?” என்றான் அடுத்து.
“சொல்வதற்கு முதல் உங்கள் மனமும் உடலும் திடமாக இருக்கவேண்டாமா…?” என்றவளை உதடுகள் பிதுக்கிப் பார்த்தவன்,
“ஏன்… இப்போது எனக்கென்ன… நன்றாகத்தான் இருக்கிறேன்…” என்றான் அலட்சியமாக.
“நன்றாகத்தான் இருக்கிறீர்கள்… ஆனால் சில கசப்பான சம்பவங்களை ஜீரணிக்கும் அளவு திடமாக இருக்கிறீர்களா என்றுதான் தெரியவில்லை… இதோ பாருங்கள்…” என்று அவள் முடிக்கவில்லை, அவனோ திடீர் என்று அறையை விட்டு வெளியேற, இவளோ பதறியவாறு,
“அதகன்… என்ன இது… நில்லுங்கள்…” என்றவாறு அவனைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்க, சத்தம் கேட்டு ஜெயராமன் தன் அலுவலக அறையிலிருந்து வெளியே வந்தார்.
பெரிய வயிற்றோடு பதறியவாறு படிகளில் இறங்கிய தன் மகளைக் கண்டு,
“என்னம்மா… என்ன பிரச்சனை?” என்று விரைந்து அவளிடம் செல்ல, தன் தந்தையைப் பார்த்துவிட்டுக் கணவனின் பின்னால் ஓடியவாறு,
“இல்லைப்பா… அவர், தன் வீட்டிற்குப் போகவேண்டுமாம்… சொன்னால் கேட்கவில்லை… புறப்பட்டு விட்டார்… இத்தனைக்கும் வீடு எங்கே என்று கூடத் தெரியாது…” என்றதும், ஜெயராம் வாசல் நோக்கிச் சென்றவனை நோக்கிப் பாய்ந்து அவன் கரத்தைப் பற்றி,
“ஆகரன்… என்ன இது… உன் உடல் நிலை சரியில்லை… தயவு செய்து சொல்வதைக் கேள்… கொஞ்சம் சரியானதும் போகலாம்…” என்றவரை வெறித்தவன்,
“இது என் வீடில்ல… நான் என் வீட்டிற்குப் போகவேண்டும்…” என்றான் அதிலேயே.
“சரிப்பா எனக்குப் புரிகிறது… நீ அங்கே தனியாக எப்படி இருப்பாய்…” என்று அவர் முடிக்கவில்லை,
“நான் ஏன் தனியாக இருக்கவேண்டும்… இவள் என் மனைவிதானே…” என்றான் அடுத்து.
“அவள் மனைவிதான்… ஆனால்…” என்று இழுக்க, தன் தம்பிக்குச் சத்தாகச் சமைத்துக்கொண்டிருந்த மாதவியும் வெளியே சத்தம் கேட்டுத் தன் கரங்களைத் துடைத்தவாறு வர, ஜெயராமன் அதகனாகரனின் கரங்களைப் பற்றியவாறு எதையோ பேசிக்கொண்டிருந்தார். அதைக் கண்டு குழம்பியவராக,
“ஜெய்… என்ன பிரச்சனை…” என்று கேட்க, அதகனாகரனின் கரங்களை விடாமலே தன் மனைவியைப் பார்த்துச் செய்தியைக் கூற. அடிபட்டவராகத் தன் தம்பியை வலியுடன் பார்த்த மாதவி,
“ஏன்டா… இது உன் வீடில்லையா…” என்றாள் முகம் கசங்க. இவனோ, தன் அக்கா என்று அறிமுகமானவளை வெறித்துப் பார்த்துவிட்டு, ஜெயராமை ஏறிட்டு
“தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்… நீங்கள் எல்லோரும் எனக்கு முக்கியமானவர்கள் என்று புரிகிறது… ஆனால் என்னால் உணர முடியவில்லை. இந்த இடம் எல்லாமே எனக்குப் புதிதாகத் தோன்றுகிறது… தவிர அன்னிய இடம் போலத் தோன்றுகிறது… எனக்குத் தெரியும்… பிரச்சனை என்னிடம் தான் என்று… ஆனால் இந்தச் சூழ்நிலையில் என்னால் நிச்சயமாகப் பழைய நினைவுகளை மீட்டெடுக்க முடியாது… தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்… எனக்கு எல்லாமே வெறுமையாக இருக்கிறது… என்னால் எதையும் சிந்திக்க முடியவில்லை… குறைந்தது எனக்குப் புரிந்த இடத்திலிருந்துகொள்கிறேனே… மறுக்காதீர்கள்… என் வீடு எங்கே இருக்கிறது… எனக்கு அங்கே போகவேண்டும்…” என்று அவன் உறுதியாகக் கூற, அதற்கு மேல் யாராலும் அவனுடைய நியாயமான வேண்டுதலை மறுக்க முடியவில்லை.
வேறு வழியில்லாமல் அதகனாகரனையும் அழைத்துக்கொண்டு அவனுடைய வீட்டிற்குப் பயணமானது ஜெயராம் குடும்பம். கிளம்பும்போதே மீநன்னயா தன் பொருட்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவனைத் தனியாக அங்கே விட்டுவிட்டு இவள் மட்டும் இங்கே நிம்மதியாக எப்படி இருப்பது. அதை விட அவனோடு சேர்ந்து இருப்பதுதானே முறை. இனி அவள் விரும்பும்போது அதைத் தடுக்க அல்லது மறுக்க ஜெயராமனுக்கும் மாதவிக்கும் எந்த உரிமையுமில்லையே.
எப்படியோ ஒன்றரை மணி நேரப் பயணத்தின் பின், மாலை ஆறு மணியளவில் அந்தப் பிரமாண்டமான நவநாகரீக வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது ஜெயராமின் வாகனம். மீநன்னயா அவனுடைய வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பது இதுதான் முதன் முறை. அவளுக்குத்தான் இங்கே வர வாய்ப்பே கிடைக்கவில்லையே. தன்னை மறந்து வியப்புடன் அந்த வீட்டைப் பார்த்தவாறு உள்ளே நுழைய, எங்குப் பார்த்தாலும் நவநாகரீகத்தின் செழுமை அதிகமாகவே பொங்கிக் கிடந்தது அந்த வீட்டில்.
அதுவும் கீழ்த் தளத்திலிருந்து மேல் தளத்திற்குப் போவதற்கே மின்தூக்கி அமைக்கப்பட்டிருந்தது. எந்தத் திசையில் போனால், எந்தப் பக்கமாக வருவோம் என்பதை அறிவதற்கே இரண்டு நாள் தேவைப்படும் போல அப்படிப் பெரிதாக இருந்தது உட்புற அமைப்பு.
அதகனாகரன் தன் வீட்டிற்கு வந்ததும் அவனிடத்தே பெரும் மாற்றம். அதுவரையிருந்த இறுக்கம் தளர்ந்தவனாய், அந்த இடம் நன்கு பழக்கமானது என்பது போலச் சுத்தவரப் பார்த்தான். அடுத்து மேற்தளத்திற்குப் போகும் அந்த அகன்ற படிகளில் ஏறியவன் கடகடவென்று மேலே செல்லத் தொடங்க, அத்தனை பேரும் அவனைப் பின்தொடர்ந்தனர்.
சரியாக முக்கிய படுக்கையறையை நெருங்கிக் கதவைத் திறக்க, அங்கே ஆளுயரத்தில் மீநன்னயாவினதும், அவனுடையதுமான படம் ஒன்று விரிந்தது. அவனுக்குப் பின்னால் வந்த மீநன்னயா அந்தப் படத்தைக் கண்டு வாயடைத்துத்தான் போனாள்.
எப்போது இந்தப் படத்தைக் கொண்டு வந்து வைத்தான் புரியாத குழப்பத்துடன் அந்தப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்த அதகனாகரனை வெறிக்க, அவனோ திரும்பி மீநன்னயாவைப் பார்த்தான்.
“அப்போ நீ என் மனைவி என்பது உண்மைதானா…” என்றான் முணுமுணுப்பது போல. அதைக் கேட்டதும் ஒரு பக்கம் கோபம் வந்தாலும், இன்னொரு பக்கம் பரிதாபம் எழவே செய்தது. கூடவே அவள் அவனை வெறுத்து ஒதுக்கிய நேரத்தில் கூட அவர்களுடைய திருமணப் படத்தை அங்கே மாட்டி வைத்திருக்கிறானே… அதை நினைத்துக் காதல் பொங்கவும் செய்தது. அந்தப் படமே சொல்கிறதே அவனுடைய காதலின் அளவை.
சற்று நேரம் அந்தப் படத்தையே பார்த்தவன் பின் திரும்பி,
“நான் சற்று உறங்கட்டுமா… தலை வலிக்கிறது…” என்று ஆசிரியரிடம் கேட்கும் மாணவன் போல அவளிடம் கேட்க, உடனே தன் எண்ணங்களை ஒரு பக்கமாகப் போட்டுவிட்டு அவனுடைய படுக்கை எங்கே என்று பார்த்தாள். அவனுடைய அறையே மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதி குளிர்காயத் தோதாகக் கணப்படுப்போடு தொலைக்காட்சியும் சேர்ந்த பகுதி. இன்னொரு பகுதி படுக்கையறை. மற்றைய பகுதி குளியலறையோடு சேர்ந்த ஆடை மாற்றும் பகுதி. அம்மாடி ஒருவனுக்கு இத்தனை பெரிய அறை தேவையா என்ன? என்று அந்த நேரத்திலும் அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ஆனாலும் தன் சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு,
“படுக்கலாம்… அதற்கு முதல் மருத்துவமனையிலிருந்து வந்திருக்கிறீர்கள்… குளிக்க வேண்டாமா…” என்றவள் இதோ ஒரு நிமிடம்” என்று விட்டுத் தட்டுத் தடுமாறி அவனுடைய ஆடை மாற்றும் அறையைக் கண்டு, அங்கிருந்து பிஜாமா, மற்றும் தூவயை எடுத்துக்கொண்டு மீண்டும் அவனை நோக்கி வந்தவள், அவனுடைய கரத்தைப் பற்றி,
“வாருங்கள்… குளிக்கலாம்…” என்று விட்டு அழைத்துச் சென்றாள். மறுக்காமலே அவளோடு குளியலறை சென்றான் அதகனாகரன்.
இன்னும் முழுதாகச் சரியாகவில்லை என்பதால், ஆடைகளைக் களைய அவன் சற்றுச் சிரமப்பட்டான். உடனே உதவிக்கு வந்தாள் மீநன்னயா.
அவனுடைய மேலாடையின் பொத்தான்களைக் கழற்றி மேல் சட்டையை மெதுவாகக் கழற்றி எடுக்க, அவன் உடல் முழுவதும் கண்டியும் சிவந்தும் கிடந்ததோடு, பார்க்கும் இடங்கள் எல்லாம் பழைய தழும்புகளும் புதிய தழும்புகளுமாக நிறைந்திருந்தன. அவளையும் மீறிக் கண்களில் கண்ணீர் பொங்க, சிரமப்பட்டு அதை அடக்கியவளாக, அவனுடைய பான்டை கழற்றவும் உதவிவிட்டு, நின்று குளிக்கும் இடத்தை நோக்கி அழைத்துச் செல்ல முயல, அவளைத் தடுத்தவனாக,
“இல்லை… நான் குளிக்கிறேன்… நீ… போய் உட்கார்…” என்றான். இவளோ மறுத்து,
“இல்லை… தனியாக நீங்கள் குளிக்க மாட்டீர்கள்… காயங்களில் அதிகம் படாமல் குளிக்கவேண்டுமே…” என்று மறுக்க,
“என்னால் முடியும் நன்னயா… நீ போ…” என்று அவளை அனுப்ப, அதற்கு மேல் வாதம் செய்யாமல், தோளில் தொங்கிக்கொண்டிருந்த துவாயையும் பிஜாமாவையும் அங்கேயே வைத்துவிட்டு வெளியேறினாள்.
இவனோ, வலியை அடக்க முயன்றவனாகப் பற்களைக் கடித்தவாறு தண்ணீரைத் திறந்து அதன் கீழ் நிற்க, மீநன்னயாவோ வெளியே வந்து, அவனுடைய கிங் சைச் படுக்கையில் விரித்திருந்த போர்வையை இழுத்து எடுத்துவிட்டு, தட்டுத் தடுமாறி படுக்கை விரிப்புகள் உள்ள இடத்தைக் கண்டுபிடித்து, புதிய விரிப்புகளை மாற்றித் தலையணையைச் சரியாக்கிக்கொண்டிருக்கும் போதே அதகனாகரன் ஈரத்தோடு பிஜாமாவை அணிந்தவாறு வெளியே வந்தான். அதைக் கண்டு கோபம் கொண்டவளாக,
“தலையைத் துவட்டவில்லையா…” என்று கேட்க, அவன் கரங்களைத் தூக்கச் சிரமப்படுவதைக் கண்டுகொண்டாள்.
வேகமாக அவனை நெருங்கி, அவன் கரத்தைப் பற்றி இழுத்து வந்து படுக்கையில் அமர்த்திவிட்டு, தோளில் தொங்கிக்கொண்டிருந்த துவாயை இழுத்து எடுத்து மெதுவாக அவனுடைய தலையைத் துவட்டத் தொடங்க, அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது போல. விழிகளை மூடி அதை இரசித்தவனுக்கு உதடுகளில் மெல்லிய புன்னகை ஒன்று அரும்பியது.
தலையைத் துவட்டி முடித்ததும், விரல்களாலேயே தலைமுடியை கோதிவிட்டு,
“இப்போது படுத்துத் தூங்குங்கள்…” என்றதும், இப்போது அவனுடைய கரங்கள் அவளுடைய குழந்தையைச் சுமந்த வயிற்றின் மீது பதிந்திருந்தன.
இவளோ திகைப்புடன் அவனைப் பார்க்க,
“ஐ நீட் டு ஃபீல் த பேபி…” என்றான் குழந்தை போல. இப்போது உதடுகளில் புன்னகை மலர,
“நீங்கள் நினைத்த நேரத்தில் அது அசைய நான் ரிமோல்ட் கன்ட்ரோலா வைத்திருக்கிறேன்… அது அசையும் நேரம்தான் அசையும்…” என்றாள் மெல்லியதாகச் சிரித்தவாறு. இவனுடைய முகம் சுண்டிப்போக, அவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“இனி எப்போது அசையும்…” என்றான் அடுத்து.
“தெரியவில்லையே…” என்றவள் சற்று நேரம் அவன் விருப்பத்திற்கு அப்படியே விட்டு வைத்தாள். குழந்தை அசையவில்லை என்றதும் வாடிய முகத்துடன் கரங்களை இழுத்தெடுக்க, அந்த வாடிய முகத்தைக் காணச் சகிக்காதவளாக அவனை இழுத்து மார்போடு அணைத்தவள், அவனுடைய ஈரக் கூந்தலில் உதடுகளைப் பொருத்திவிட்டு,
“தூங்குங்கள் அதகன்…” என்றுவிட்டு விலக, அவனோ சடார் என்று அவளுடைய கரத்தைப் பற்றினான் . இவளோ திகைப்போடு அவனைத் திரும்பிப் பார்க்க,
“நீ தூங்கவில்லை…” என்றான் அடுத்து. இவளோ தடுமாறியவாறு,
“இல்லை அதகன்… மதியம் தூங்கினால், இரவு தூக்கம் வராது…” என்று விட்டுத் தன் கரத்தை விடுவிக்க முயல, அவளுடைய பருத்த வயிற்றைப் பார்த்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்து,
“இந்த நேரத்தில் தூக்கம் உனக்கும் தேவை… வா… வந்து படு…” என்று தனக்கு அருகே தட்டிக் காட்டினான். இவளோ உமிழ் நீரைக் கூட்டி விழுங்கி,
“இல்லை அதகன்… அம்மாவும் அப்பாவும் கீழே நிற்கிறார்களே… அவர்களைப் போய்ப் பார்க்கவேண்டும் அல்லவா…” என்றவாறு திரும்ப,
“ஓ… நான் அதை மறந்து விட்டேன்… இரு நானும் வருகிறேன்…” என்று படுக்கையை விட்டு இறங்க முயன்றவனைத் தடுத்து,
“ப்ச்.. நீங்கள் முதலில் படுத்து உறங்குகங்கள்… அம்மாவும் அப்பாவும் எங்கும் ஓட மாட்டார்கள்…” என்று அதட்டிவிட்டு அவனுடைய தோள்களைப் பற்றிப் படுக்கையில் தள்ளிவிட்டு, விழுந்தவனின் தலையைப் பற்றி மெதுவாகத் தூக்கித் தலையணையைச் சரியாக்கிவிட்டு மீண்டும் பக்குவமாகத் தலையை வைத்தவள்,
“சரி தூங்குங்கள்…” என்று விட்டு விலக முயல, மீண்டும் அவளுடைய கரத்தைப் பற்றியவன்,
“நன்னயா…” என்றான் மென்மையாக. இவளோ என்ன என்பது போலப் பார்க்க,
“பிடித்திருக்கிறது…” என்றான் ஒற்றைச் சொல்லாக. இவள் புரியாமல் பார்க்க,
“நீ… இப்படி என் அருகே இருப்பது… என்னைக் குழந்தையாக நடத்துவது… எனக்காய் பார்த்துப் பார்த்துச் செய்வது… எல்லாமே பிடித்திருக்கிறது…” என்றவாறு தன் கரத்திலிருந்த அவளுடைய தளிர் கரத்தை இழுத்துத் தன் உதடுகளில் பொருத்தி எடுத்துவிட்டு,
“என்னவோ தெரியவில்லை… நீ பக்கத்தில் இருக்கும் போது நன்றாக இருக்கிறது. மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது… ஐ திங்க் ஐ லவ் யு மாட்லி…” என்றான் எதையோ உணர்ந்தவன் போல. அதைக் கேட்டதும் இவளுடைய முகமும் வாடிப்போயிற்று.
ஆமாம்… அந்தப் பைத்தியக்காரத்தனமான காதலில்தானே இந்த விபத்தை வரமாகப் பெற்று வந்தான். சிரமப்பட்டுத் தன் முகபாவனையை மாற்றியவள்,
“தூங்குங்கள் அதகன்….” என்றுவிட்டு விடை பெற, மெல்லியதாகப் புன்னகைத்தவன் அடுத்த கணம் தன் விழிகளை மூடிக்கொள்ள அவனையும் மீறி உறக்கம் தழுவிக் கொண்டது.
இவள் கீழே வந்தபோது மாதவி யாரோ ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாள். கீழே வந்த மீநன்னயாவைக் கண்டு புன்னகைத்த மாதவி,
“கதரின்… இவள் மீநன்னயா… இந்த வீட்டுப் புது முதலாளி… உங்கள் அதகனாகரனின் மனைவி…” என்று விட்டுத் திரும்பி மீநன்னயாவைப் பார்த்து,
“மீனா… இவர்கள் கதரின்… இந்த வீட்டை இவர்கள்தான் பராமரிக்கிறார்கள். அதிகமான நாட்கள் அதகனாகரன் இங்கே இருக்க மாட்டான். இவர்கள்தான் வந்து வீட்டைச் சுத்தமாக்கிவிட்டுப் போவார்கள்.” என்று கூற, கதரினைப் பார்த்து அழகாய் புன்னகைத்து,
“ஹாய்…” என்றாள் மீநன்னயா. கதரினும் பதிலுக்குப் புன்னகைத்து,
“ஹாய்… கிலாட் டு மீட் யு…” என்று விட்டுத் தன் கடமையைச் செய்ய உள்ளே போக, மாதவியோ மீநன்னயாவைப் பார்த்து,
“வாம்மா… உனக்கு இந்த வீட்டைச் சுற்றிக் காட்டுகிறேன்…” என்று விட்டுச் ஒவ்வொரு இடமாகக் காட்டிவர, இவளும் ஆர்வத்துடனேயே பார்த்துக்கொண்டு வந்தாள். அதுவும் சமையலறை அவளுக்குப் பெரிதும் பிடித்துப் போனது, அத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் மிக வசதியாகவும் இருந்தது. எல்லாவற்றையும் சுற்றிக் காட்டியபின், மாதவியும் ஜெயராமும் புறப்படத் தயாராக மீநன்னயாதான் கலங்கிப் போனாள்.
அவளால் அந்தப் பெரிய வீட்டில் அதகனாகரனை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனாலும் அவர்களை அங்கே மறித்து வைக்க முடியாதே. பூங்கோதை, புகழேந்திக்குப் பள்ளிக்கூடம். ஜெயராமனுக்கு வேலை. இவன் ஒருவனுக்காக அவர்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்படைவது எந்த விதத்தில் நியாயம்.
அதனால், அதகனாகரனின் தூக்கம் விட்டெழுந்த பின் அவனிடம் சொல்லிக்கொண்டே புறப்படலாம் என்று காத்திருந்தவர்கள், அவன் உறக்கம் கலைய நீண்ட நேரம் எடுக்க, அதற்கு மேல் காத்திருக்க முடியாமல், இவளிடம் மட்டும் விடைபெற்று மாதவியும் ஜெயராமும் கிளம்பிவிட்டிருந்தனர்.
மீநன்யாவும் ஓரமாக வைத்திருந்த தன் பெட்டியை எடுத்துக்கொண்டு மடிகளில் ஏறி அதகனாகரனின் அறைக்கு முன்பாக வந்து நின்றாள்.
இப்போது எங்கே தங்குவது என்கிற குழப்பம் தோன்றியது. அன்று லன்டனில் அவனோடு ஒரே அறையைப் பகிர்ந்துகொண்ட பின்னாடி கடந்த ஏழு எட்டு மாதங்களாக அவனோடு தனித்திருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில் உரிமையாக அவனுடைய அறைக்குச் சென்று தன் பொருட்களை வைக்கவும் அவளால் முடியவில்லை. அதனால் எங்கே சென்று தங்குவது என்று புரியாமல் குழம்பியவளாக, அங்கும் இங்கும் பார்த்தவள், ஏதோ ஒரு அறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அவனுக்குப் பக்கத்திலிருந்த அறையைத் தேர்ந்து அங்கே பெட்டியை வைத்துவிட்டுக் கட்டிலில் சரிந்தவளுக்கு யாரோ உடலிலிருந்த சத்து முழுதாக உறிஞ்சி எடுத்த உணர்வில் பெரிதும் சோர்ந்து போனாள். கூடவே இறுகிய வயிற்றை வருடிக் கொடுத்தவாறு,
“ஹாய் பேபி… மிகவும் சோர்வாக இருக்கிறது… சமத்துப் பிள்ளையாய் நீங்கள் உறங்குவீர்களாம்… நானும் உங்கள் கூடவே உறங்குவேனாம் சரியா…” என்று விட்டு விழிகளை மூட மறு கணம் உலகம் மறைந்து போனது அவளுக்கு.
36) அன்று இரவு திகழ்வஞ்சி சாப்பிட்டுவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டுப் படுக்கை அறைக்கு வந்தபோது, அபராசிதன் ஆராவமுதனை…
(3) தன்னவனைக் கண்ட அதிர்ச்சியில் பேச நா எழாது தன் நீண்ட விழிகளை மேலும் விரித்தவாறு அவனைப் பார்க்க,…
(35) இதோ ஒரு மாதம் மின்னாமல் முழங்காமல் கடந்து சென்றுவிட்டிருந்தது. இந்த ஒரு மாதமும் எப்படிக் கடந்து சென்றது என்று…
(1) “அ... அப்பா... என்னப்பா சொல்கிறீர்கள்? திருமணமா? அதுவும் எனக்கா?” என்று அதிர்ச்சி விலகாமல் தன்னுடைய பெரிய நீண்ட…
(34) இதோ திருமண நாள் எதிர்பார்ப்பின்றியே விடிந்தது. ஆயிரம் முறையாக அவள் செய்வது சரியா தவறா என்று குழம்பிப் போயிருந்தவள்…
அனுமதி 28 ************ அன்று… அமைச்சர்களுடன் விழா ஏற்பாடுகள் பற்றி பேசி முடித்த இளவரசி சந்திர வதனாம்பிகை,…
View Comments
Nice epi
Thank you so much