அவரை வேகமாகப் பரிசோதித்த அபராசிதன், கடகடவென்ற என்ன செய்யவேண்டும் என்று தாதிக்கு உத்தரவு பிறப்பித்தவாறு உடனடி சிகிச்சையை வழங்க, விஜயராகவனின் மூச்சு சீராகத் தொடங்கியது.
நிம்மதியாகத் திரும்பிய அபராசிதன், அங்கே முகம் வெளிற, நடப்பதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த திகழ்வஞ்சியைக் கண்டதும் என்ன நினைத்தானோ, அவளருகே வந்தான்.
தன்னையும் மீறி, அவளைத் தன் தோளாடு அணைத்தவன்,
“ஹே… அவருக்கு ஒன்றுமில்லை. நீண்ட நேரமாகப் பிராணவாயு போகும் குழாய் கழன்றிருக்கிறது. அதனால் போதிய பிராணவாயு இல்லாமல் திணறல் வந்திருக்கிறது. அவ்வளவு தான்… மற்றும்படி ஒன்றுமில்லை..!” என்றவன் இன்னும் அவள் தெளியாதிருப்பதைக் கண்டதும், அவளை அழைத்துச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்த்தினான்.
அங்கிருந்த மேசையிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து, அதன் மூடியைத் திறந்து அவளிடம் நீட்ட, நடுங்கும் கரங்களால் வாங்கிக் கொண்டவள், கடகடவென்று அதைக் குடித்த பிறகு தான் அவளுடைய பதட்டம் ஓரளவு தணிந்தது.
“யு ஓக்கே நவ்?” அவன் கேட்க, ஆம் என்று தலையை ஆட்டியவளின் விழிகள் என்னவோ விஜயராகவனிடம்தான்.
ஒரு நிமிடத்தல் என்னமாய் பயம் காட்டிவிட்டார்.
“அப்… சா… சாருக்கு ஒன்றுமில்லை…” நம்பாக் கலக்கத்துடன் கேட்க,
“இல்லை…” என்று அவன் உறுதியாகச் சொன்ன பிறகுதான் சீராக மூச்சுவிட்டாள் திகழ்வஞ்சி.
“ஆனால் ஏன் மயங்கிக் கிடக்கிறார்?” என்றவளின் குரலில் தெரிந்த கலக்கத்தை உணர்ந்தவனாக,
“மயக்கம் இல்லை. இப்போது போட்ட மருந்து அவரை உறக்க நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. என்னாச்சு… பிராணவாயு குழாய்க் கழன்றிருப்பது கூடத் தெரியாமல் அப்படி என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது?” அவனுடைய குரலிலிருந்த கோபத்தைக் கண்டு அதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் தலை குனிந்தாள் திகழ்வஞ்சி.
“உன்னைத்தான் கேட்கிறேன் அப்படி என்ன பேசிக்கொண்டீர்கள்..?”
“அது… அது வந்து… அவர்… உங்களைப் பற்றி…” உமிழ் நீர் விழுங்கியவாறு அவனைப் பார்த்தவள்,
“உங்களைத் திருமணம் செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டார்…” என்றாள் திக்கித் திணறி.
பரிதவிப்பும், கலக்கமுமாக அங்கும் இங்கும் அசைந்த விழிகளைக் கண்ணிமைக்காமல் பார்த்தவன்,
“எதற்காக அவர் உன்னிடம் இது பற்றி பேச வேண்டும்?” கேட்டவனின் விழிகளில் கூர்மை.
“இல்லை… அது வந்து… என்னைப் பற்றி விசாரித்தார்… பிறகு ஆராவின் நன்மைக்காகத் திருமணம் செய்யச் சொன்னார்…” அவனுடைய விழிகளைப் பார்க்கும் சக்தியில்லாமல் தலையைக் குனிந்து கொண்டு சொல்ல, இவனோ திரும்பி அங்கு நின்றிருந்த தாதியைப் பார்த்தான்.
அவர் விஜயராகவனுக்கு இதர உதவிகள் செய்துகொண்டிருந்தாலும், அவருடைய காதுகள் இவர்கள் பக்கமாக இருப்பதை உணர்ந்தவனாக, அவளுடைய கரத்தைப் பற்றியவன்,
“என் கூட வா…” என்றவாறு அழைத்துச் செல்ல, மறுக்காமல் அவன் பின்னே சென்றாள் திகழ்வஞ்சி.
அவளை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு வந்தவன், அவளுடைய கரத்தை விட்டுவிட்டு, போட்டிருந்த வெள்ளை அங்கியைக் கழற்றிக் கதிரையின் மீது பக்குவமாக வைத்துவிட்டுத், திரும்பி மேசையின் மீது சாய்ந்து நின்று, ஒற்றைக் காலுக்கு மேல் மறுகாலைப் பதித்து,
“இப்போது சொல் நீ என்ன முடிவு எடுத்திருக்கிறாய்?” என்றான் கூர்மையாக. மீண்டும் கலக்கத்தோடு அவனைப் பார்த்தவள்,
“தெரியவில்லை. இந்தத் திருமணம் எந்தளவு சரியாக வரும் என்று தெரியவில்லை. ஏன் என்றால் என்னுடைய கடந்தகாலம்…”
“அது எப்படியாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் திகழ்…” அவன் வேகமாகச் சொல்ல, இவளோ புரியாமல் அவனைப் பார்த்தாள்.
“ஐ மீன்… உன்னுடைய இறந்தகாலம் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அது முடிந்து போன ஒன்று. நீ நினைத்தாலும் கூட அதை மாற்ற முடியாது. ஆனால் எதிர்காலம்? இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதுதான் உன்னுடைய எதிர்காலம்…” என்றவன் அவளை நோக்கிச் சென்று அவளுடைய கரங்களைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவனை முட்டும் அளவுக்கு நெருங்கி நின்றவள் ஒரு வித கலக்கத்தோடு அவனை அண்ணாந்து பார்த்தாள். அவனுடைய கூரிய விழிகள் இப்போது அவளுடைய கலக்கம் நிறைந்த விழிகளைக் கவ்விப் பிடித்துக் கொள்ள, ஆச்சரியத்தில் அவளுடைய விழிகள் மேலும் விரிந்தன.
இவனால் மட்டும் எப்படி அத்தனை சுலபத்தில் இவளுடைய கண்களுக்குள் தன் கண்களைச் செலுத்தி கதை பேச முடிகிறது. ஒரு வேளை குற்றமில்லாத நெஞ்சு என்பதால் அவளுடைய விழிகளுக்குள் நுழைந்து பேச முடிகிறதோ. இவள் குற்றம் செய்தவளாயிற்றே. இவன் போலத் திடகாத்திரமாக அவன் விழிகள் பார்த்துப் பேச முடியவில்லையே.
தவிப்போடு தன் விழிகளைத் தரைநோக்கிக் கவிழ்க்க,
“இப்போது எதற்கு விழிகளைச் சாய்க்கிறாய் திகழ்…? என்னைப் பார்…” என்றான் அழுத்தம் திருத்தமாக. மெதுவாக விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“ஆராவுக்கு நல்ல தாய் மட்டுமில்லை. தந்தையும் தேவை திகழ். கூடவே உனக்கும் நல்ல எதிர்காலம் வேண்டும். அந்த எதிர்காலத்தை என்னால் கொடுக்க முடியும்…”
“ஆனால் நான்…”
“நான் இன்னும் முடிக்கவில்லை…” அழுத்தமாகச் சொன்னவன் சற்று நேரம் எதையோ யோசித்தான். சரியான வார்த்தைகளைத் தேர்ந்து எடுத்தான் போல. பின் அவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“நீ நிறைய தப்பு செய்திருக்கிறாய்… ஆனால் அந்தத் தவறுக்குப் பின்னால் உன் குடும்பச் சூழ்நிலையும் காரணம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது… தாய் தந்தை இல்லாது நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்… நீ நடந்து கொண்டதற்குப் பின்னால் இருக்கிற தேடலையும், ஏக்கத்தையும் என்னால் உணர முடிகிறது. இதில் நீ செய்தது சரி என்று சொல்ல வரவில்லை. இப்போது கூட இதயம் முழுக்க நீ செய்த காரியத்தை நினைத்து கசப்பு வரத்தான் செய்கிறது. வெறுப்பு பேரலையாக எழுகிறது. அதையும் மீறி, அந்தச் சின்னப் பெண்ணுக்காக மனம் வருந்தவும் செய்கிறேன். இங்கே பார்… இதே நிலை ஆராவுக்கு வேண்டாம். நீ தவறு செய்தது போல நம் ஆரா செய்ய வேண்டாம். எப்படியாக இருந்தாலும் இன்னும் ஒரு சில வருடங்களில் நீ இன்னொருத்தனை மணந்து தானே ஆகவேண்டும். இல்லை என்றாலும், உடல் தேவைக்காக என் அண்ணன் போல இன்னொருத்தனை நீ தேடிப் போவாய்தானே… அப்படிப் போகிற போது என் ஆராவுக்கு அது பாதிப்பாக அமையாதா…? உன்னை நேசிப்பதாகச் சொல்லி வருபவர்கள், ஆராவை தங்கள் சொந்தப் பிள்ளையாகப் பார்த்துக் கொள்வார்கள் என்று என்ன நிச்சயம்? அவனைக் கொடுமை செய்தால்?” சொல்லிக்கொண்டு வந்தவனின் முகம் சட்டென்ற இறுகிப் போனது. அவன் அந்த நிகழ்வைக் கற்பனையில் கண்டான் போல. விழிகளை அழுந்த மூடித் திறந்து,
“என்னால்… அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை திகழ்… என் அண்ணாவின் உதிரம் அந்தளவு கொடுமையை எல்லாம் அனுபவிக்க வேண்டாம். அதுதான் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள். ஒன்று ஆராவுக்கு நல்ல தந்தையாக நான் கிடைப்பேன். அடுத்து எப்படிப் பார்த்தாலும் நானும் ஒருத்தியைத் திருமணம் முடித்துத்தானே ஆகவேண்டும். அது நீயாக இருந்துவிட்டுப் போ…” என்று அவன் சொல்ல, அவனை நிமிர்ந்த பார்த்தவள்,
“சரி… உங்களைத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்… நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?”
“புரியவில்லை?”
“இல்லை… நாம் இருவரும்…” அவள் சொல்ல முடியாமல் திணற, அவளை ஒரு மாதிரிப் பார்த்தான் அபராசிதன்.
“அடிக்கடி நீ திகழ்வஞ்சிதானா என்று சந்தேகப் பட வைக்கிறாய்…” என்றான் கூர்மையாக. இவள் புரியாமல் பார்க்க,
“திகழாக இருந்தால் இந்த மறைமுகப் பேச்சு இருக்காது… நீ படுக்கையைப் பகிர்வதைப் பற்றித் தானே பேசுகிறாய்…?” அவன் கேட்க அவளோ முகம் சிவக்கத் தலையைக் குனிந்து கொண்டு ஆம் என்றாள்.
“அதை நேரடியாகக் கேட்பதுதானே… இங்கே பார்… என்னைப் பொறுத்தவரையில் திருமணம் என்றால் எல்லாம் சேர்ந்ததுதான். புரிகிறதா? எல்லாம் சேர்த்துத்தான்! திருமணம் முடித்த பின்பும் மனைவியைத் தள்ளிவைத்துவிட்டு விரகதாபத்தில் தவிக்க நான் ஒன்றும் ஆசையற்றவன் கிடையாது. ஒத்துக் கொள்கிறேன். காதல் அது எதுவும் நமக்கிடையில் இல்லைதான். இருக்கப்போவதும் இல்லை… ஆனால் ஒன்றாகப் படுக்கையைப் பகிரக் காதல் எதுவும் தேவையில்லையே… பணத்துக்காக ஆராவை வயிற்றில் சுமந்த உனக்கு இதை நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை…” அவன் சொல்ல அடிபட்ட பார்வையாக அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
அவன் திரும்பத் திரும்ப, பணத்துக்காகப் படுக்கையைப் பகிர்ந்தாய் என்று அழுத்திச் சொல்லும்போது, இதயத்தில் பேரலையாக வலி எழவே செய்தது. ஆனால் அவன் சொல்வதில் பொய்யில்லையே. முகம் இறுகி நிற்க, அவனோ நடந்து சென்று தன் வெண்ணிற அங்கியை எடுத்து அணிந்து கொண்டு,
“யோசி… யோசித்து உன் முடிவைச் சொல்…” என்றதும்,
“ஒரு வேளை நான் மறுத்தால்?”
“மறுக்க மாட்டாய். உண்மையாகவே நீ ஆரா மீது அன்பு வைத்திருந்தால், என்னை மணக்க மறுக்கமாட்டாய்…” உறுதியாகச் சொன்னவன், தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்து,
“வாடகை வண்டியை வரவழைக்கிறேன், வீட்டிற்குப் போ… இன்று என்னால் வீட்டிற்கு வர முடியாது…” சொன்னவன் அங்கிருந்து விலகிச் சென்றுவிட, சோர்வோடு இருக்கையில் அமர்ந்து விட்டாள் திகழ்வஞ்சி.
அவளுடைய வாழ்க்கை அவளுடைய கரங்களிலேயே இல்லாதது போலத் தோன்றியது அவளுக்கு. அது சரி எப்போதுதான் அவளுடைய கையில் இருந்திருக்கிறது. விரக்தியாகச் சிரித்தவளுக்கோ, இன்னும் ஒரு முடிவுக்கு வர முடிந்திருக்கவில்லை.
மனதில் ஆயிரம் குழப்பங்கள். தவிப்புகள். அதை எல்லாம் தாண்டி அவளுடைய ஆழ்மனது அந்தத் திருமணத்தை விரும்புவதை நினைத்து அதிர்ந்து போனாள் திகழ்வஞ்சி.
இவள் இந்தத் திருமணத்தில் இருக்கிற பிரச்சனைகளைப் பற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்திருக்கையில், உள் மனதோ, அதை ஏற்கத் தயாராகிவிட்டதே. அதுவும் மகிழ்ச்சியாக! இது எப்படிச் சாத்தியம்? குழம்பிப் போனாள் திகழ்வஞ்சி.
மேலும் இரண்டு நாட்கள் கடந்து சென்றன. இதற்குள் விஜயராகவன் மருத்துவமனையிலிருந்து தன் வீட்டுக்குச் சென்றுவிட்டிருந்தார். ஆனால் அபராசிதன்தான், வீட்டிற்கு வர முடியாமல், மருத்துவ மனையில் அதிக நேரத்தைச் செலவிடவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தான்.
அன்று, ஞாயிற்றுக் கிழமை என்பதால், அபராசிதனுக்கு ஓய்வு நாள். எழுந்ததே பத்து மணிக்குப் பிறகுதான். இன்டர்கம்மில் கமலாவிடம் தேநீருக்கு சொல்லிவிட்டுக் கழிவறை சென்றுவிட்டு வெளியே வந்தபோது அவனுக்குத் தேநீர் தயாராக இருந்தது.
அதையும் எடுத்துக்கொண்டு, கணினியின் முன்னால் வந்தமர்ந்தவன், அன்றைய மருத்துவ அறிக்கைகளையும் செய்திகளையும் பார்த்தவாறே தேநீரைக் குடித்துக் கொண்டிருக்கும் போது வெளியே கீச்சு மூச்சு என்று சத்தம் கேட்டது. தன் வேலையை நிறுத்திவிட்டு ஜன்னலுக்கூடாக எட்டிப் பார்க்க, அங்கே குளிருக்குத் தோதாகத் திகழ்வஞ்சியும், ஆராமுதனும் கம்பளியாடைகளை அணிந்தவாறு பூந்தோட்டத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இலையுதிர் காலம் என்பதால், எக்கச்சக்கமாக உதிர்ந்திருந்த மேப்பிள் இலைகளை ஒன்றாகக் குவித்து, அதில் குழந்தையை விளையாட விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் திகழ்வஞ்சி.
யாராவது அவளைப் பார்த்தால் பணத்துக்காக எதையும் செய்வாள் என்று சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள். அந்தளவு உண்மை இருந்தது அவளுடைய புன்னகை சிந்தும் முகத்தில். அதே நேரம் குவிக்கப்பட்ட இலைக் குன்றின் மீது விழுந்து புரண்ட ஆராவமுதன், அதில் ஒரு இலையை எடுத்து வாய்க்குள் வைக்கப் போக,
“நோ… ஆரா…” என்று கடிந்தவாறு அதைப் பறித்து எறியப் போக, குழந்தையோ இன்னொன்றை எடுத்து வாய்க்குள் வைக்கப் போனது. அதைக் கண்டு சிரித்தவள், தானும் அந்த இலைக் குவியலுக்குள் விழுந்து குழந்தையைத் தூக்கித் தன் மார்பில் போட்டு இறுக அணைத்துச் சுழன்று அவன் கூட விளையாட, குழந்தையோ அன்னை முகம் பார்த்துச் சிரித்துக் குதுகலித்தது.
அந்தக் காட்சியைக் கண்ட அபராசிதனின் இறுக்கம் காணாமல் போக, முகம் புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டது.
அவர்களோடு தானும் ஒருத்தனாக இருக்க வேண்டும் என்கிற பேரார்வம் எழ, உடனே அங்கிருந்த கம்பளி ஆடை ஒன்றை இழுத்து எடுத்து அணிந்தவாறு, வீட்டிற்கு வெளியே வந்தான்.
இன்னும் ஆராவமுதனை அணைத்தவாறு அந்த இலைக் குவியலில் உருண்டு புரண்டு கொண்டிருந்தாள் திகழ்வஞ்சி. அதைக் கண்டதும் மேலும் புன்னகை மலர, அவர்களை நெருங்கினான் அபராசிதன்.
காலசைவு சத்தம் கேட்டு மகனை அணைத்தவாறே திரும்பிப் பார்த்தாள் அவள்.
கீழே ஒரு பைஜாமா. மேலே சுவட்டரோடு நின்றிருந்தவனைக் கண்டவள், எழுந்து கொள்ள முயல, உடனே அவளிடமிருந்து ஆராவமுதனைத் தன் கரத்தில் எடுத்துக் கொண்டவன் அவளை நோக்கித் தன் கரத்தை நீட்ட, ஒரு கணம் தயங்கியவள், பின் மறுக்காது நீட்டிய அவனுடைய கரத்தில் தன் கரத்தைப் பதிக்க, அவளை ஒரு இழுவையில் எழ வைத்த நேரம், எழுந்தவளின் கால் சமநிலை தவறி மடிந்து கொண்டது.
சட்டென்று தன்னைச் சமப்படுத்த முயல்வதற்குள் அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்த கையாலேயே அவளுடைய இடை பற்றி அவள் விழாது தடுத்துக்கொண்ட அபராசிதன்,
“யு ஓக்கே…?” என்றான் மென்மையாக.
ஏனோ அந்த மென்மை அவளுடைய உள்ளத்தை உருக வைக்க, ஆம் என்று தலையை ஆட்டியவள், அவனிடமிருந்து விலகி, ஆராவமுதனைத் தூக்கத் தன் கரத்தை நீட்டினாள். கொடுக்க மறுத்தவன்,
“இல்லை… அவன் இன்னும் கொஞ்சம் விளையாடட்டும்…” என்றவன் குழந்தையை இறக்கி விட, அவனோ குதுகலமாக அங்கிருந்து ஓடத் தொடங்கினான். அதை ரசித்துப் பார்த்துச் சிரித்தவன்,
“இவன் அதிகம் துருதுரு என்று இருக்கிறான்…” என்றான் தன்னை மறந்து.
“ம்… நடக்கத் தொடங்கிய பிறகு அவனுடைய சேட்டை அதிகமாகத்தான் இருக்கிறது…” என்று அன்னையாகப் பெருமையுடன் சொல்ல,
“ம்… நானும் அப்படித்தான் என்று அக்கா சொல்லிக் கேட்டிருக்கிறேன்…” என்றவன் அங்கிருந்த மர இருக்கையைக் காட்டி,
“உட்கார் அவன் விளையாடட்டும்…” என்று சொல்ல, மறுக்காமல் அவன் காட்டிய இருக்கையில் இவள் அமர்ந்து கொள்ள, பக்கத்து இருக்கையில் அவனும் அமர்ந்து கொண்டான்.
இருவரும் சற்று நேரம் எதுவும் பேசாமல் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் திரும்பி அவளைப் பார்த்தவன்,
“நம் திருமணத்தை வரும் வெள்ளியன்று நடத்தலாம் என்று நினைக்கிறேன்.” அவன் சொல்ல, அவனை அதிர்வோடு பார்த்தாள் திகழ்வஞ்சி.
“நான்… நான் இன்னும் சம்மதம் சொல்ல வில்லையே…” திணற,
“மறுப்பும் சொல்லவில்லையே…” என்றான் அடுத்து. அவளோ என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் விழிக்க,
“சரி… இப்போது சொல்.. இந்த திருமணத்திற்குச் சம்மதமா இல்லையா…?” அவன் நேரடியாகக் கேட்கத் திணறினாள் அவள்.
இந்த இரண்டு நாட்களும் அந்தப் போராட்டத்தில் தானே இருந்தாள். ஒரு பக்க மனது சம்மதம் என்கிறது. மறு பக்க மனது சாதக பாதகங்களை யோசித்துத் திண்டாடுகிறது. ஒரு பக்கம் அவன் அருகே இருந்தால் உள்ளம் குதுகலிக்கிறது, மலர்கிறது, சிலிர்க்கிறது. அவன் வீட்டில் இல்லை என்றால் தவிக்கிறது. கலங்குகிறது. அவனைத் தேடி ஓடுகிறது.
இன்னொரு மனதோ அஞ்சுகிறது. குற்ற உணர்ச்சியில் கலங்கி நிற்கிறது. தவறு செய்தது போல குன்றிப் போகிறது. இதில் எந்த மனது சொல்வதை அவள் ஏற்றுக் கொள்வாள்? அவள் பதில் சொல்ல முடி£யமல் தலையைக் குனிந்து கொள்ள,
“திகழ்…!” என்றான் அவன்.
“ம்…” கலக்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க,
“என்னுடைய கண்களைப் பார்த்து உண்மையைச் சொல், உனக்கு என்னை மணந்து கொள்ளச் சம்மதமா இல்லையா…?” அவன் கேட்க, அவன் சொன்னது போல அவனுடைய விழிகளை ஏறிடத்தான் செய்தாள். அதற்கு மேல் மொத்தமாய் எல்லாம் மறந்து போனது அவளுக்கு.
அவன் என்ன கேட்டான், அவள் என்ன சொல்லவேண்டும், எதுவுமே அவளுடைய புத்திக்கு உறைக்கவில்லை. அந்த விழிகளையே காலம் முழுக்கப் பார்த்திருப்பது என்றாலும், அவளுக்குச் சம்மதம்தான். ஆனால் அதற்காக மணக்க முடியுமா என்ன?
பதில் சொல்லாமல் தன்னையே பார்த்து இருப்பவளைக் கண்டு, புருவங்கள் சுருங்கப் பார்த்தவன், அவளுடைய முகத்திற்கு முன்னால் சொடக்குப் போடத் திடுக்கிட்டு விழி தட்டி அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
இப்போது இங்கே என்ன நடந்தது? குழம்பியவளுக்கு அப்போதுதான் அவனுடைய விழிகளைக் கண்டதும் அதில் தான் தொலைந்து போனதும் புரிந்தது.
“என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அப்படியே பார்த்து நின்றால் என்ன அர்த்தம்…?” அவன் கேட்க, உதடுகள் கடித்தவாறு தலை குனிந்தாள் திகழ்வஞ்சி.
“அது… அது வந்து… நான்…”
“ஆம் இல்லை… இதைச் சொல்ல எதற்கு இத்தனை தயக்கம்…?” அவன் கேட்க, ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்து விட்டவள்,
“சம்.. சம்மதிக்கிறேன்…” என்றாள் திக்கித் திணறி. அதைக் கேட்டவனின் உடல் இறுக்கம் சட்டென்று தளர,
“அப்படி என்றால் நான் சொன்னது போல வெள்ளி திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்…” என்றான். ஒருவித படபடப்போடு அவனைப் பார்த்து,
“இத்தனை விரைவாகவா?” என்றாள் தயக்கமாக.
“ம்… காலம் தாழ்த்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம் திருமணம் முடிந்த கையோடு ஆராவை என் சொந்தக் குழந்தையாகத் தத்தெடுக்கப் போகிறேன்…” அவன் சொல்ல,
“எதற்கு இத்தனை அவசரம்…? கொஞ்சம் நிதானமாக யோசித்து..” அவள் முடிக்கவில்லை, அவளை அழுத்தமாகப் பார்த்தான் அபராசிதன்.
“நிதானமாக யோசிக்க எதுவுமில்லை திகழ்… முடிவு செய்தபிறகு யோசிப்பதில் எந்தப் பயனும் இல்லை…” அவன் சொல்ல சற்று நேரம் அமைதியாக இருந்தாள் திகழ்வஞ்சி.
“என்ன சத்தத்தைக் காணோம்?” கேட்டவனை ஏறெடுத்துப் பார்த்தவள்,
“திருமணம் என்பது அர்ப்பணிப்பு. உறுதி. நாம் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் நன்கு தெரியாமல்… புரிந்துகொள்ளாமல் சட்டென்று முடிவெடுப்பது சரியா?” தயக்கமாகக் கேட்டவளை அழுத்தமாகப் பார்த்தான் அபராசிதன்.
“உன்னைப் பற்றி அறிய என்ன இருக்கிறது? அதுதான் எல்லாம் தெரியுமே. என்னைப் பற்றிச் சொல்வதாக இருந்தால், திறந்த புத்தகம்தான் நான்…” சொல்லத் தயக்கமாக அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“உங்களுக்கு… காதலி என்று…” அவள் முடிக்க முடியாமல் திணற, அவனோ சாய்வாக அமர்ந்து காலுக்கு மேல் காலைப் போட்டவாறு அவளைப் பார்த்தான்.
“காதலி என்று யாரும் இருந்ததில்லை. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, ஒரு பெண்ணைக் கிட்டத்தட்ட காதலிக்கும் அளவுக்கு எல்லை தாண்டிய நட்பிலிருந்தேன். ஒரே விடுதியில் ஒன்றாகத்தான் இருந்தோம். ஆனால் அவள் என்னோடு மட்டுமில்லை, என் நண்பனுக்கும் காதலியாக இருந்தாள் என்பது பிறகுதான் தெரிந்தது. அதற்குப் பிறகு பெண்களின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது. வேறு பெண்களைத் தேடவும் தோன்றவில்லை. யாரும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகத் தெரியவில்லை. ஒரு முறை நம்பிக்கை போனால் அதை மீளப் பெறுவது சிரமமாயிற்றே.” என்றவன் அவளை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தான்.
“இப்போது இதை ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தால் சுத்தமாகப் பிடிக்காது. நான் எதுவாக இருந்தாலும் மறைக்காமல் நேரடியாகச் சொல்லிவிடுவேன். அது சரியோ தவறோ மறைத்துப் பழக்கமில்லை. அதையேதான் மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பேன். நம் திருமணத்திற்குப் பிறகு நீயும் அப்படி இருப்பாய் என்று நம்புகிறேன்…” அவன் சொல்ல, முகம் கசங்கினாள் திகழ்வஞ்சி.
இவளுடைய ஆரம்ப வாழ்க்கையே பொய்யில் தொடங்குகிறதே. இதில் என்னவென்று உண்மையைக் கூறுவது. கூறினால், இந்த வீட்டில் அவளுக்கு இடம் கிடைக்குமா?
“நானும் உங்கள் அண்ணனை ஏமாற்றியவள் தானே…? அப்படி இருக்கிறபோது, என்னைத் திருமணம் முடிக்கிறேன் என்கிறீர்களே? அது எப்படி?” கேட்டவளைப் புன்னகையின்றிப் பார்த்தான் அபராசிதன்.
“நீயும் திறந்த புத்தகம்தான். நீ தப்பு செய்தாலும் அதை வெளிப்படையாகவே ஒளிவு மறைவு இன்றிச் செய்தாய். உண்மையை சொல்லவேண்டும் என்றால், நல்லவனாக இருப்பவன் தப்பானவனாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் கெட்டவன் நல்லவனாக மாறுவது அசாத்தியம். அப்படி மாறிவிட்டால் கடைசிவரை பழைய வாழ்க்கையைத் தேடிப் போகமாட்டான். உன்னையும் அப்படித்தான் பார்க்கிறேன். நீ என்ன தவறு செய்திருந்தாலும், ஆராவுக்காக உன்னை மாற்றிக் கொண்டாய்… ஒருத்தர் தவறு செய்துவிட்டு, அதை மாற்றிச் சரியான வழியில் பயணிப்பது என்பது சுலபமில்லை… அப்படித் தன்னைத் திருத்தும் போது ஏற்படும் குற்ற உணர்வு எந்தளவுக்கு மனதைப் பாதிக்கும் என்பதை அறியாதவனும் நானில்லை. எப்போது நீ பெற்ற குழந்தைக்காக உன்னை முற்று முழுதாக மாற்றிக்கொண்டாயோ, அப்போதே நீ புதியவளாகப் பிறந்துவிட்டாய்… இப்போது எனக்கு நீ சரியானவளாகத் தோன்றுகிறாய். எனக்கு இந்தப் புதிய திகழ்வஞ்சி பிடித்திருக்கிறது. உன்மீது எனக்கு வெறுப்பும் கோபமும் இருந்தாலும், குழந்தைக்காக யாரிடமும் கையேந்தாமல், சுயமாய் நிமிர்ந்து நிற்பது உன் மீதான என் அபிப்பிராயங்களை மாற்றுகிறது. ஒரு வேளை நீ பழைய திமிரோடும் அலட்சியத்தோடும் இருந்திருந்தால், இன்று நீ இங்கே என் முன்னால் இப்படி அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மாட்டாய்.” அவன் சொல்ல அவனை ஒரு மாதிரிப் பார்த்தவள்,
“ஏ… ஏன்… என்ன செய்திருப்பீர்கள்?” என்றாள் அழுத்தமாக.
“உனக்குப் பணத்தைக் கொடுத்து ஆராவை என் கூட அழைத்து வந்திருப்பேன். நீயும் மறுத்திருக்க மாட்டாய். பணம் தருகிறேன் என்று சொன்ன போது, மறுத்தாய் பார், அப்போதே யோசித்தேன் நீ பழைய திகழ்வஞ்சி அல்ல என்று..” என்றவனுக்கு அவளை முதன் முறையாக கண்டதும், அவளால் ஈர்க்கப்பட்டதும், இரும்பிழுத்தக் காந்தமாக அவள் பின்னால் சென்றதும் வேளை கெட்ட நேரத்தில் நினைவில் வந்தது. கூடவே ஈர்க்கப்பட்ட அந்தப் பெண்தான், அமலனின் காதலி என்று தெரிந்தபோது பட்ட அதிர்ச்சியும் நினைவுக்கு வர, முகம் சட்டென்று இறுகிப்போனது. இதோ இப்போது நினைத்தாலும் அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க முடிவதில்லையே.
அவனையே பார்த்திருந்தவள்,
“ஆனால் உங்கள் அக்காவுக்கு என்னைப் பிடிக்கவில்லையே…” என்றாள் முணுமுணுப்பாக.
“பிடிக்கும் வகையான காரியங்களை நீ செய்ய வில்லையே…” அவன் சொல்ல, பதில் சொல்ல முடியாது உதடுகளைக் கடித்தவாறு தலை கவிழ்ந்தாள் திகழ்வஞ்சி.
“அக்கா எனக்கு அம்மா போல. ஆனால் அமலனுக்கு அவர்கள் நல்ல ஒரு தோழி. சொல்லப்போனால் அவர்களின் வலது கையே அமலன்தான். அக்காவும் அமலனும் இந்தளவு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கக் காரணமே அவர்களின் ஒற்றுமையும், விடா முயற்சியும்தான். இன்று நான் எந்தக் கடனும் இல்லாமல் மருத்துவம் படித்து வெளியேறியிருக்கிறேன் என்றால், ஆதற்கு முழுமுதற் காரணம் அக்காவும், அண்ணாவும் தான். எங்களால் அத்தனை சுலபத்தில் அமலனின் வாழ்க்கையில் நடந்த கசப்பான நினைவுகளை, அவனுடைய மரணத்தை மறக்க முடியாது…” என்றவன், திரும்பி ஆராவைப் பார்த்தான். பார்த்தவாறே போகிற போக்கில் தன் சகோதரியைப் பற்றியும் கூறத் தொடங்கினான்.
“அவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டது போல நாங்கள் யாரும் படவில்லை. காதலுக்காகவே தன் வாழ்க்கையையே தொலைக்க இருந்தவர்கள் எங்களுக்காகத் தன்னை மீட்டும் கொண்டார்கள்…” என்றவன் பழைய நினைவில் முகம் கசங்க நின்றான்.
“அத்தானுக்கு என் அக்கா இரண்டாவது மனைவி. ஆனால் முதல் காதலி…” அவன் சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்தாள் திகழ்வஞ்சி.
“என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அக்கா அத்தானைக் காதலித்தார்கள். உயிருக்கு உயிராக. ஆனால் அந்தக் காதல் கைகூடாத அளவுக்கு நிறைய எதிர்ப்புகள். ஒரு நாள் இரவு கோவிலில் மணக்கோலத்தில், அத்தான் வருவார் என்று காத்திருந்தார்கள். அவர் வரவில்லை என்றதும் அக்கா அழுத அழுகை. இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. அதற்குப் பிறகு அவர்கள் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்யக் கூடத் துணிந்தார்கள்” அவன் எங்கோ வெறித்தவாறு சொல்ல அதிர்ந்துபோனாள் திகழ்வஞ்சி.
“அபராசிதன்…?”
“ம்… அன்று முழுக்க அத்தான் வருவார் என்று காத்திருந்தவர்கள். அவர் வரவில்லை என்றதும் இடுப்பில் கல்லைக் கட்டி கிணற்றின் மீது ஏறியே விட்டாள். நான்தான் அதைக் கண்டேன். அப்போது எனக்கு வயது எட்டு இருக்கும். அக்கா கிணற்றில் அவசரமாக ஏறுவதைக் கண்டதும் பயந்து விட்டேன். அதைக் கண்டு நான் கத்திய கத்தில்தான் அக்கா சுயத்திற்கே வந்தாள். அப்போதுதான் அவளுக்கே தான் செய்ய இருந்த முட்டாள்தனம் புரிந்தது போல. உடனே கீழே இறங்கி இடையில் கட்டிய கல்லைக் கழற்றி எறிந்துவிட்டு ஓடிவந்து என்னை அணைத்து ஓ என்று அழுதாள்…” என்றவனின் முகம் இறுகிப்போயிருந்தது. பின் அவளைப் பார்த்து,
“இது அத்தானுக்குக் கூடத் தெரியாது. ஏன் அமலனுக்குக் கூடத் தெரியாது. அக்கா சொல்ல வேண்டாம் என்றாள். நானும் சொல்லவில்லை. அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து எங்கள் வீட்டுக் கதவு பலமாகத் தட்டுப்பட, போய்த் திறந்தது அக்காதான். அடுத்த விநாடியே எங்களுக்கு அருகே சுருண்டு வந்து விழுந்தாள். ஒரு பெரியவர், கதவைத் திறந்ததும் அக்காவை ஓங்கி அறைந்துவிட்டார். அந்த அடி தாங்காமல்தான் அக்கா எங்களுக்குப் பக்கத்தில் வந்து விழுந்தாள். தொடர்ந்து நான்கைந்து பேர் குபு குபு என்று உள்ளே வந்தார்கள். அக்காவையும் அண்ணாவையும் எட்டி உதைத்தார்கள். என்னை எல்லாம் தூக்கி எறிந்தார்கள் தெரியுமா…” என்றவன் குனிந்து தன் பின் பிடரி மயிரை விலக்கிக் காட்டினான். அங்கே இரண்டு அங்குலத்திற்கு ஒரு தழும்பு இருக்க அதைச் சுட்டிக் காட்டியவன். இந்தத் தழும்பு அன்று அவர்கள் என்னைத் தூக்கி எறிந்த போது சுவரில் மாட்டியிருந்த ஆணி கிழித்து வந்த காயம். ஆறு தையல் போட்டார்கள்…” என்றவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
“சுனாமியாக உள்ளே வந்தார்கள். அக்காவுக்கு அடிபடாத இடமே இல்லை. பிறகுதான் தெரிந்தது அவர்தான் அத்தானின் உறவினர்கள் என்று. அவர்கள் ஏற்கெனவே ஊரைவிட்டுப் போகச் சொல்லி அக்காவை மிரட்டியிருந்தார்கள். அக்கா போகவில்லை என்றதால்தான் வந்து தாக்கி இருக்கிறார்கள்.
அவர்கள் சொன்னது ஒன்றே ஒன்றுதான். ஊரை விட்டுப் போ என்பது. அதற்கு மேல் அவர்களோடு போராட எங்களுக்குச் சக்தி இருக்கவில்லை. அங்கே இருக்கவேண்டாம் என்று கொழும்பு வந்தோம். யாரையும் தெரியாது. உதவி செய்யவும் ஆளில்லை. கிடைத்த இடத்திலிருந்தோம். என்னுடைய படிப்புக் கெட்டுவிடக் கூடாது என்று என்னைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வாழ்க்கைச் செலவைப் பார்க்கவேண்டும் என்று அக்காவும் அண்ணாவும் உணவகத்தில் பாத்திரம் தேய்த்துக் கழுவினார்கள்… இத்தனைக்கும் அக்கா பல்கலைக் கழகம் வரை சென்று படித்தவள். அமலனும் பல்கலைக் கழகத்தில் அப்போதுதான் அடி எடுத்து வைத்திருந்தான். அந்த காலகட்டத்தில் இருவருக்குமே தகுந்த வேலை கிடைக்கவில்லை.” என்றவன் வலி நிறைந்த சிரிப்பொன்றை உதித்தான்.
“நான்கு வருடங்கள் எப்படியோ போச்சு… திடீர் என்று அத்தான் வந்தார். எனக்கு ஆரம்பத்தில் அவரைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரை வெறுத்து ஒதுக்கினேன். ஆனால், அவர் மீதும் தப்பில்லை என்று பிறகுதான் புரிந்து கொண்டேன். என் அக்காவுக்காக அவரை ஏற்றுக் கொண்டேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அக்கா அத்தானைத் தவிர வேறு யாரையும் மணந்திருக்க மாட்டாள். அத்தான் திரும்பி வராமல் இருந்திருந்தால், அக்கா இன்னும் திருமணம் ஆகாமல்தான் இருந்திருப்பார்கள். எது எப்படியோ, அதுவரை நரகத்திலிருந்த எங்கள் வாழ்க்கையில் அத்தான் வந்த பிறகுதான் நிம்மதி வந்தது…” என்று அவன் கூற, இவளோ ஈஷ்வரியின் நிலை உணர்ந்து கண்ணீர் வடித்தாள்.
எத்தனை பெரிய தவறு அப்பாவின் உறவினர்கள் செய்தது. காதலித்தது ஒரு குற்றமா? நடந்த உண்மை எதுவும் தெரியாமல், எத்தனை சுலபத்தில் அப்பாவையும், ஈஷ்வரியையும் வெறுத்து ஒதுக்கினோம். கழிவிரக்கம் கொண்டாள் திகழ்வஞ்சி.
“அதற்குப் பிறகு அப்பாவின் உறவினர்கள் அவரைத் தேடி வரவில்லையா?” மிச்சத்தை அறியும் ஆவலோடு கேட்டாள் திகழ்வஞ்சி.
“ம்… வந்தார்கள். அந்த மஞ்சுளா அம்மாவோடு சேர்ந்து வாழச் சொல்லிக் கேட்டார்கள். ஆனால் அத்தான் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இதில் அக்காவும், குழந்தைகளுக்காகவாவது அத்தானை அந்த அம்மா கூட சேர்ந்து வாழச் சொல்லி சொன்னார் தான். ஆனால் அத்தான் மறுத்துவிட்டார். ஒட்டாது என்று தெரிந்த பின் வற்புறுத்தி எந்தப் பயனும் இல்லை என்றுவிட்டார் அத்தான். ஆனால் அத்தானுக்கு அவர் குழந்தைகள் மீது அதீத பாசம் இருந்தது. அந்தக் குழந்தைகளைப் பார்க்க பல முறை முயன்றிருக்கிறார். ஆனால் அந்தம்மா அதற்கு அனுமதிக்கவில்ல. ஒரு கட்டத்தில் அந்த முயற்சியைக் கைவிட்டு ஒதுங்கிக் கொண்டாராம்.
“அ… அவரின் குழந்தைகள் பற்றி ஏதாவது தெரியுமா” கேட்டபோதே இவளுடைய நெஞ்சம் தடத்தது. ஏனோ அவர்களைப் பற்றி இவன் எந்தளவு தெரிந்து வைத்திருக்கிறான் என்பதை அறியும் அவல் இப்படிக் கேட்க வைத்துவிட, அவனோ,
“ம்கூம்… பெரிதாகத் தெரியாது. அவர்களை நான் பார்த்தது கூட இல்லை. இனியும் பார்க்கப் போவதில்லை. பெயர் கூடச் சரியாக நினைவில் இல்லை. ஏதோ அங்கவி… சங்… சங்க…” என்று எப்போதோ கேட்ட பெயர்களை நினைவுகூற முயன்றவனாக நெற்றியை வருட,
“அங்கவை சங்கவை…” என்றாள் இவள் பட் என்று. குழப்பமாக அவளைப் பார்த்தவன்,
“உனக்கு எப்படித் தெரியும்?” என்றான் கூர்மையாக. பதறிப் போனாள் திகழ்வஞ்சி. ஐயோ! ஆர்வக் கோளாற்றில் வாயை விட்டுவிட்டோமே. உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள்,
“இல்லை… நீங்கள் அங்கவி… சங்… என்று இழுத்தீர்களா? அது சங்ககாலத்தில் அங்கவை சங்கவை என்று இரண்டு சகோதரிகள் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்… ஒரு வேளை அந்தப் பெயராக இருக்குமோ என்று…” அவள் மென்று விழுங்க, வியந்து சிரித்தான் அபராசிதன்.
“ம்… அங்கவை சங்கவை என்றுதான் நினைக்கிறேன்“
இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று?”
“தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசைப்பட வில்லை… இதையெல்லாம் நான் ஏன் உனக்குச் சொல்கிறேன் என்றால்… திருமணம் செய்வதாக முடிவான பின்பு எதையும் உன்னிடமிருந்து மறைக்க விரும்பவில்லை…” அவன் சொல்ல கலங்கிப் போனாள் திகழ்வஞ்சி. கூடவே அவளும் எந்த ஒளிவு மறைவும் இன்றித் தன்னிடம் அனைத்தையும் சொல்லவேண்டும் என்று அவன் ஆசைப்படுவதும் புரிந்தது. ஆனால் எப்படிச் சொல்வாள்?
அவர்கள் வெறுத்து ஒதுக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது தெரிந்தால் என்னாகும்? நிச்சயமாகத் துரத்தப்படுவாள்.
துரத்தப்பட்டால் ஆரவின் நிலை? அவனை இவளிடம் கொடுக்கச் சம்மதிப்பார்களா? ஆப்பில் அகப்பட்ட குரங்கின் நிலையாத் தவித்துப் போனாள் திகழ்வஞ்சி.
36) அன்று இரவு திகழ்வஞ்சி சாப்பிட்டுவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டுப் படுக்கை அறைக்கு வந்தபோது, அபராசிதன் ஆராவமுதனை…
(3) தன்னவனைக் கண்ட அதிர்ச்சியில் பேச நா எழாது தன் நீண்ட விழிகளை மேலும் விரித்தவாறு அவனைப் பார்க்க,…
(35) இதோ ஒரு மாதம் மின்னாமல் முழங்காமல் கடந்து சென்றுவிட்டிருந்தது. இந்த ஒரு மாதமும் எப்படிக் கடந்து சென்றது என்று…
(1) “அ... அப்பா... என்னப்பா சொல்கிறீர்கள்? திருமணமா? அதுவும் எனக்கா?” என்று அதிர்ச்சி விலகாமல் தன்னுடைய பெரிய நீண்ட…
(34) இதோ திருமண நாள் எதிர்பார்ப்பின்றியே விடிந்தது. ஆயிரம் முறையாக அவள் செய்வது சரியா தவறா என்று குழம்பிப் போயிருந்தவள்…
அனுமதி 28 ************ அன்று… அமைச்சர்களுடன் விழா ஏற்பாடுகள் பற்றி பேசி முடித்த இளவரசி சந்திர வதனாம்பிகை,…
View Comments
அருமையான பதிவு 😍😍😍😍.
ஓ ஓஹோ இவுனுக்கும் ராகவோட இறந்த காலம் தெரிஞ்சிருக்கு.
ஆனா நம்மாளு எப்படி சொல்லுவா? இந்த உண்மையை? ராகவ் தான் அறிமுகம் செய்து வைக்கனும்.
அதேதான். சொன்னாலும் அவன் ஏத்துப்பானா என்கிற பிரச்சனையும் இருக்கில்ல.
Wow awesome
நன்றி நன்றி